4 - கூத்தகராதி
கிளி பேசுவதையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஹ்ம்மம்ம்ம்ம்’ என்று ஒரு பெரும் மூச்சை வெளியிட்டபடி “ரொம்ப புரட்சி பேசுற...” என்றான் மென் புன்னகையுடன்
இதைக் கேட்டவள் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி “புரட்சியா?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்.. புரட்சி தான்.. அதனால தான சாதின்ற சொல்லுக்கான மத்த மீனிங்ஸ்ச எங்கிட்ட இருந்த மறைச்ச..?..”
இதைக் கேட்டவள் “மறைச்சனா?” என்று கேட்டு மென்மையாகப் புன்னகைத்தாள்.
“இதுல நா மறைக்க என்ன இருக்கு? நாளைக்கு என் புள்ள வந்து ‘அம்மா சாதினா என்ன?’ன்னு கேட்டா நா உங்களுக்கு என்ன பதில சொன்னேனோ அதையே தான் சொல்லிருப்பேன்...” என்று அவள் முடிக்க
“அப்போ நா உனக்குப் பாக்க குழந்தையாட்டம் தெரியுறனா?” துடுக்காக் கேட்டான் புருவம் உயர்த்தி.
அக்கேள்வியில் உதட்டை சுழித்து நெளித்தவள் பதில் எதுவும் பேசாமல் எழ, “என்ன எதுக்கு எழுந்திருக்குற?” என்று கேட்டான் பரபரப்பாக
அவனை நிமிர்ந்து முறைத்தவள் “பின்னே இங்கயே ரா முழுக்க தங்க முடியுமா? பொழுது சாஞ்சுருச்சு வீட்டுக்குப் போகுற வழியப் பாருங்க” என்றுவிட்டு தளதளக்கும் முடி பின்னே பெண்டுலமாக அசைந்தாட நடந்துப் போனாள்.
அதைப் பார்த்தவன் தானும் எழுந்து அவள் கூடே செல்ல, திரும்பிப் பார்த்தவள் “ப்ச்... இப்போ என்னாத்துக்கு எம்பின்னாடி வாரீக? உங்களுக்கு வழி அந்தப்பக்கமுல இருக்கு” என்று மூக்கை விடைத்து புருவம் சுழித்து எரிச்சலும் படபடப்பும் கலந்து சொல்ல
அவனோ “நீ தெனமும் இங்க வருவியா?” என்று கேட்டான்.
யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று விழிகளைச் சுழற்றிக் கொண்டிருந்தவளுக்கு இதைக் கேட்டு கடுப்பு அதிகமானது.
எதுவும் பேசாமல் மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டவளைப் பார்த்த ரித்விக்கிற்கும் கூட சிறு எரிச்சல் துளிர்த்தது.
‘என்ன இவ எப்போ பாத்தாலும் பேசிகிட்டு இருக்கும்போது மரியாதையே தராம நடக்க ஆரம்பிச்சுடுறா?’ என்று நினைத்தவனுக்கு வேலன் இவனை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
இவனுக்கு முன்னே நடந்து போய்க் கொண்டிருந்த கிளியோ வேலனிடம் தானாக நின்று பேச, ரித்விக்கிற்கு ஏகக்கடுப்பு.
‘நா பேசப்பேச நிக்காமப் போறவ, தாம் பாட்டுக்கு வர்றவன நிக்கவச்சுப் பேசுறா பாரு’ என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கிளி இவனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்து வேலனிடம் எதுவோ சொல்வதும், கிளியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் வேலனும் இவனை பார்ப்பதும் தெரிய, தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன் வேக நடையுடன் அவர்களிருவரை நெருங்கினான்.
“சரிண்ணே அப்போ நா வாறே” ரித்விக் அருகே வந்தபொழுது இதை வேலனிடம் சொல்லிவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்துவிட்டாள் கிளி. இப்பொழுது ரித்விக்கின் முகத்தில் கடுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது.
“என்ன பத்திதான பேசுனிங்க?”
“அ..அது மச்சா... நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு... நீ உன்னோட பாரீன் ப்ரெண்ட்ஸ்கூட பேசுறேன்னு சொன்னதுனால தான் சிக்னல் இங்க நல்லா கெடைக்கும்னு சொன்னதோட நா வேற வேலையா போயிட்டேன்... ஆனா கிளி இங்க படிக்க வர்றான்னு எனக்கு தெரியல... தெரிஞ்சுருந்தா உன்னைய இங்க அனுப்பிருக்கவே மாட்டேன்.. அந்த புள்ள விலகி விலகிப் போறானா புரிஞ்சுக்கோ மச்சா... இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்குறத ஊரில் ஒருத்தன் பாத்துருந்தாலும் அது இந்நேரம் ஊரு முழுக்க பரவியிருக்கும்... தேவையில்லாத பிரச்சனை!” புரிய வைத்துவிடும் நோக்கோடு வேலன் சொல்ல.
புரியா பார்வைப் பார்த்தான் ரித்விக்.
இந்த ஒரு விஷயத்தை அவனால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
“நாங்க ரெண்டு பேரும் பேசிக்குறதுக்கும் ஊருக்கும் என்ன சம்பந்தம்?” புருவங்களை உயர்த்தியபடி பற்களைக் கடித்துக்கொண்டுக் கேட்டான் ரித்விக்.
அவனுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.
நண்பர்களாக இருக்கும் ஒரு பெண்ணும் பையனும் படிப்பிற்காக ஒன்றாக தங்குவதிலிருந்து லிவின் வரையிலுமே அவன் பார்த்திருக்கிறான்.
அப்படி ஒரு சூழ்நிலையோடு வளர்ந்தவனுக்கு இப்படி ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
‘எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விஷயம் ஏன் அடுத்தவுங்க கவனத்த ஈர்க்கனும்?’ இந்தக் கேள்வி நேற்றிலிருந்தே அவனைக் குடைந்துக் கொண்டே இருக்கின்றது.
வேலனிடம் கேட்டால் ‘இந்த ஊர் அப்டிதான்டா’ என்பான் என்று நினைத்தவன் “சரி வா... வீட்டுக்குப் போகலாம்” என்றுவிட்டு ரித்விக் கிளி போன வழியில் நடக்க ஆரம்பிக்க, “மச்சான் வழி இந்தப்பக்கம்” என்றான் வேலன்.
இருவரும் ஏதேதோ பேசியபடி வீட்டை நோக்கி நடை போட “ஆமா தீபாவும் நீயும் படிக்கும் போது ஒரே கிளாஸ்ன்னு சொன்ன... அப்பறம் ஏன் அவ உன்னைய அண்ணனு கூப்பிடுறா?” என்று கேட்டான் ரித்விக்.
இதைக் கேட்டவுடன் “அ..அது” என்று அசடு வழிந்தவன் “நா ஸ்கூல் ல கொஞ்ச வருசம் பெயிலா போயிட்டேன் மச்சா... அது நல்லா படிக்குற புள்ள... அதான்” என்று சொல்லி முழுப்பல்லையும் காட்ட, அவனது பாவனையில் உதடுகளை மடித்து சிரிப்பை உள்தள்ளியவன் வேறு பேச்சை எடுத்தான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்த பொழுது அங்கே வீட்டாட்கள் எல்லோரும் திண்ணையில் கூடியிருந்தனர்.
புது நபர்களும் சிலர் இருப்பது தெரிய, ரித்விக் அமைதியாக தனது தந்தையின் அருகில் போய் அமர்ந்துக்கொண்டான்.
அப்பொழுது இவனருகே வந்த அந்தச் சிறுவன் இவனின் இரு கன்னங்களையும் பிடித்து ரித்விக்கின் முகத்தை இந்த பக்கமும் அந்தப் பக்கமுமாக திருப்பி திருப்பிப் பார்த்துவிட்டு “ஹ்ம்ம் எம்மவேன்னு சொல்லிக்குற அளவுக்கு அழகாத்தான் இருக்கியான்” என்று சீரியசான குரலில் அறிவிக்க, ரித்விக்கைத் தவிர மற்ற எல்லோரும் குபீரென வெடித்துச் சிரித்தனர்.
அவன் கைகளிலிருந்து தனது முகத்தை வெடுக்கென எடுத்துக் கொண்டவன் முகத்தை சுருக்கிக்கொண்டு “வாட்?” என்று கேட்க
“என்னா ரகுண்ணே நா இவருக்கு சித்தப்பன்னு நீ சொல்லிக் குடுக்கைலையா?” என்று அரை டிரவுசர் தோரணையாகக் கேட்க
ரித்விக் அதிர்ந்து தன் தகப்பனின் முகம் நோக்கினான்.
ரகு சிரிப்பை வாய்க்குள் மறைத்துவிட்டு “ஆமா ஆமா... பாத்துக்க ரித்விக் இதோ இவரு தான் உன் சித்தப்பா முத்துவேல்” என்று முத்துவேலான அரை டிரவுசரை சுட்டிக்காட்டி அவனுக்கு ஒத்து ஊத, அதைக் கேட்டு முகத்தைச் சுருக்கிய அரை டிரவுசர் “அண்ணே!” என்று பட்டென அதட்ட, பயம் போல் விழித்துப் பார்த்தார் ரகு.
“அந்தப் பேரு அம்மாப்பா வச்சது... எனக்கு நானே ஒரு பேர் வச்சிருக்கேன்...” என்று சொல்லி நிறுத்தியவன் ஒரு காலை ஊன்றி மற்ற காலை தரையோடு இழுத்து நின்று, கைகள் இரண்டையும் பின்னால் கொக்கிப்போட்டபடி கட்டி விண்ணைப் பார்த்து “இப்போ எம்பேரு... ஷாரூஊக்க்கான்.” என்று மிதப்பாக அறிவிக்க,
“ஹாஹாஹா” என்று உருண்டு புரண்டு கெக்கபெக்கவென சிரிக்க ஆரம்பித்தான் சிங்காரவேலன்.
மற்றவர்களும் சிரிப்பை அடக்குவதைக் கண்டு கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திய அரை டிரவுசர் “பாரு சிங்கார வேலா... எங்கக்காளுக்கு தான் நீ பொறந்துருக்க, மொறப்படி நா உனக்கு மாமான்... இப்படியெல்லாம் மரியாதை இல்லாம நடந்துக்கப்புடாது” என்று பொறுமையாக எடுத்துச் சொல்ல
“ஏலேய் பொடிப்பயலே! நல்லா அரையடி இருந்துகிட்டு நீ எனக்கு மாமனா?” என்று வேலன் சிரித்துக்கொண்டே வார,
உஷ்ண மூச்சுகளை வெளியிட்ட அரை டிரவுசர் “பாருக்கா... நீ சொல்லு... நா உந்தம்பி தான? அப்போ உன் பையனுக்கு நா மாமெ மொற தான ஆகுது” என்று சிணுங்க, இன்னுமே சிரித்துக் கொண்டிருந்த வேலன் “இப்..இப்போ எனக்கு ஒரு கடி ஜோக்கு தோனுது” என்று சிரிப்பின் ஊடே சொல்ல, சலித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரித்விக்.
“வேணா... நா பொல்லாதவன்” விரலை நீட்டி உஷ்ணத்தோடு அறிவித்தான் அரை டிரவுசர்.
“இருந்துட்டு போ.. நா என் மனசுல தோனுன கடிசோக்க சொல்லியே தீருவேன்” என்று அறிவித்த வேலன், அடுத்தவர்களை பேச விடாமல் தொடர்ந்தான்.
“ரெண்டுபேரு சண்ட போட்டுக்கிட்டு இருந்தப்போ அதுல ஒருத்தன் ஆக்ரோஷமா சொன்னானாம் ‘நா இந்த ஊர்லையே பொறந்து வளந்தவன்டாஆஆஆ’ன்னு அதுக்கு எதுத்தாப்புல இருக்கவேஞ் சொன்னானாம் ‘இந்த ஊருல பொறந்தேன்னு சொல்லு வளந்தேன்னு சொல்லாத’ன்னானாம் அவன மேலையும் கீழையும் பாத்தபடி” என்று சொல்லிவிட்டு வேலன் மேலும் சத்தமாக சிரிக்க, (இதுபோன்ற சோக்குகள் இன்றும் வழக்கத்தில் உள்ளதால் குறிப்பிட்டேன், வாசகர்ளுக்கு பரிந்துரைக்கமாட்டா!)
தனது பலவீனத்தில் கைவைத்துவிட்ட வேலனை உயிரோடு பாடைக்கட்டிவுடும் எண்ணத்தோடு முறைத்தான் அரை டிரவுசர்.
அவன் ஆறாம் வகுப்பு படித்தாலும் வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லை அவனிடம். ஆறேழு வயது பையனின் உயரம் தான். அதனால் தான் அவனது குட்டையான உயரத்தை சுட்டிக்கட்டி நகையாடுகிறான் வேலன் என்று தெரிந்தது “ஏலேய் இன்னைக்கு உன்னைய வெட்டி பொலி போடுறேனா இல்லையா பாரு” என்று புயலென உருமாறி வந்த அரை டிரவுசரையும் வேலைனையும் பிரித்தெடுக்க படாத பாடுபட்டுப் போயினர் மற்றவர்கள்.
கெனடாவில் இருந்து இங்கு வந்ததிலிருந்து நேர மாற்றம் காரணமாக தினமும் நன்றாக உறங்காமல் புரண்டுக்கொண்டிருந்த ரித்விக்கிற்கு இன்றுதான் தூக்கம் சிறுகசிறுக பிடிபட்டது.
இரவு தூங்கும் நேரமெல்லாம் தனது தந்தையின் சிரித்த முகத்தையே நெஞ்சில் புதைத்தபடி தூங்கிப் போன ரித்விக்கின் உதட்டின் ஓரத்தில் புன்னகை ஓரம் கட்டியே இருந்தது.
தினம் தினம் பல்கிப் பெருகும் கொரோனாவைப் பற்றியே இரவு பகலாக செய்தி தொலைக்காட்சிகள் எல்லாம் கொக்கரித்துக் கொண்டிருக்க, ‘கொரோனாவா? அப்டினா?; என்பது போல் தான் அவ்வூரில் மக்கள் எல்லோரும் அவரவர் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலையிலேயே சேவலின் “கொக்கரக்கோ கோ..ஓஓ” என்ற டீபால்ட் அலார்மில் கண்களை கசக்கிக் கொண்டு கைகளை சுழற்றி சோம்பல் முறைத்தபடி எழுந்து வாசலுக்கு வந்த ரித்விக்கின் மனதில் அதிகாலையின் ஆழ்ந்த வாசம் அலாதியாய் ஒரு ஆலாபனையை அரங்கேற்றியது.
அதை ஆழமாக உள் இழுத்து இரண்டொரு வினாடிகள் அனுபவித்தவன் கண்களை திறந்தபொழுது ஆதீஸ்வரி வாசல் தெளித்து கோலம் போடுவது தெரிய, தானாக ஒரு மென்னகை அவனது முகத்தில் வந்து உரசிச் சென்றது.
கோலம் போட்டுக் கொண்டிருந்தவர் இவனின் காலடி ஓசையில் நிமிர்ந்துப் பார்த்துவிட்டு “எழுந்துட்டியாய்யா... சமயக்கட்டுல காப்பி வச்சுருக்கேன்... பல்லகில்ல வெளக்கிட்டு போய் எடுத்துக் குடி போ” என்றார் அன்பிலும் அன்பு ஊறிப் போயிருந்த குரலில்.
ஏனோ அந்தப் பாசம் ஒழுகிய குரல் அவனது மனதில் தனி ஒரு இதத்தைப் பரப்பியது.
“நீங்க கோலம் போடுறதப் பாத்துட்டு போறேன்” என்றான் ரித்விக்.
ஆதீஸ்வரி ஏதேதோ பேசியபடியே கோலம் போட்டுக்கொண்டிருந்தாலும் அவனது கண்கள் இரண்டும் இலாவகமாக வளைந்துக் கொண்டிருக்கும் ஆதீஸ்வரியின் வலது கை விரல்களையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது.
கூர்மையை சூடியிருந்த அவனது கண்கள் ஆர்வமாய் விரிந்து அவற்றை உள்வாங்கிக் கொண்டிருந்தன.
இடையிடையே கேட்கும் மாடு கத்தும் சத்தமும், சேவல்களின் கூவலும், இருளிலேயே உதித்துவிட்ட சூரியன் போல் சுறுசுறுப்பாக சுற்றித் தெரியும் மக்களின் இயக்கங்களும் அவனுக்கு புது விதமான இதங்களை இதயத்தில் இசைத்துக் கொண்டிருந்தது.
நிச்சயமாக அவனுக்கு அது ஒரு பொன்காலைப் பொழுது தான்.
காலையிலேயே குளித்து தனது டீ ஷர்ட்டையும், ட்ராக் பேன்ட்டையும் அணிந்தவன் ஷூவை மாட்டிக் கொண்டு ஜாக்கிங் என்ற பெயரில் ஊரை சுற்றிவர ஆரம்பித்தான்.
அப்பொழுது அன்று கிளி சிலம்பம் சுற்றிய இடம் வந்ததும் தானாக நின்றன அவனது கால்கள்.
நிறைய பேர் சிலம்பப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
சில நிமிடங்கள் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சியை சில உற்று நோக்கியன் அவ்விடத்தை நோக்கி அடிகளை எடுத்து வைத்து நடந்தான்.
பயிற்சி செய்து கொண்டிருந்த சிலர் இவனைப் பார்த்துவிட்டு சிலம்பம் சுற்றுவதை நிறுத்தியபடி தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
ஆட்களுக்கு மத்தியில் நின்றிருந்த ஒரு கட்டையான ஆள் “எலேய் சேகரு, கம்பு சுத்தாம என்னலே வேடிக்க?” என்று பொரிய, அவனது பார்வை தன் முதுகின் பக்கம் மையம் கொண்டிருப்பதைக் கண்டவர் ‘அப்புடி என்னத்த பாக்குறவன்?’ என்று நினைத்தபடி பின்னால் திரும்பிய நேரம் கூட்டத்தினுள் ஒருவனாக இவரை நெருங்கி வந்திருந்தான் ரித்விக்.
அவனைப் பார்த்து புருவம் சுருக்கியவரின் விழிகள் மேலும் கூர்மையாய் அவனது முகத்தை நோக்கிய நொடி,கடந்த காலம் மூளையில் மின்னல் போல் வெட்டிச் செல்ல, அவரது கண்கள் அதிர்ந்து அவனை நோக்கின.
இதையெல்லாம் கவனியாதவன் இவர்களை எப்படி அணுகுவது என்று தயக்கத்தோடு சுற்றி இருந்தவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க,
“என்னலே என்ன வேணு?” என்று அதட்டலான குரலில் கேட்டான் வீரசேகரன்.
“எனக்கும் சிலம்பம் டீச் பண்றிங்களா?” என்று கேட்டான் சிறு தயக்கம் நிறைந்த குரலில்.
இதைக் கேட்டு அந்தக் கட்டை மனிதர் அதிர்ந்து விழிக்க, மற்றவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
எல்லோரும் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதைக் கண்டு ‘எதாச்சும் தப்பா கேட்டுட்டோமா?’ என்று யோசித்தவன் “அ..அதாவது சிலம்பம் கத்து குடுக்குறிங்களா?” என்று கேட்டவனின் இரு புருவங்களையும் முழுதாக உயர்த்தாமல் அவற்றின் ஆரம்ப இடத்ததை இடத்தை மட்டும் மெலிதாக உயர்த்த, அவன் முகத்தில் வேறு ஒரு முகத்தைக் கண்ட அந்தக் கட்டை மனிதர் பட்டென முகத்தை திருப்பிக் கொண்டார்.
“முடியாது! கெளம்பு!” அதிகாரமாகச் சொன்னான் வீரசேகரன்.
புது மனிதர்கள் முன் கிடைத்த முகத்திலடித்தார் போன்ற பதிலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவமான உணர்வுடனும் சங்கடமும் சேர்ந்துக் கொள்ள
“நா..நா கரக்ட்டா பீஸ் குடுத்துருவேன்... எவளோனாலும் னோ இஸூஸ்” மீண்டும் சங்கடத்தோடும் படபடப்போடும் அவன் சொல்ல, முதுகு காட்டியபடி நின்றிருந்த அந்தக் கட்டை மனிதர் இதைக் கேட்டு கண்களை இறுக மூடினார்.
“நீ கோடி ரூவா குடுத்தாலும் உனக்கு இங்க பயிற்சி குடுக்க முடியாது.. ஒழுங்கா வந்த வழியே திரும்பிப் போயிடு” பட்டெனச் சொன்னான் வீரா.
“இல்ல.. நா ஊருக்கு புது ஆளா இருக்கவும் யோசிக்கிறிங்களா? ரகுநந்தன் தெரியுமா.. இல்ல இல்ல... தவசி.. ஹா தவசி தேவர் தெரியுமா அவருதான் எங்க தாத்தா... நானும் இதே ஊர்க்காரன் தான்”
“முடியாதுனா முடியாது! அவளோ தான்” என்று அழுத்தமாகச் சொன்ன வீரசேகரன் பின்னால் திரும்பி “இங்க என்ன படமா காட்டுறாய்ங்க... வேலையப் பாருங்கடா வெண்ணைங்களா!” என்றபடி நகர்ந்துவிட
இதற்கு மேலும் எப்படி வினவுவது?என்று சங்கடத்தோடு தலை குனிந்த ரித்விக், நிமிர்ந்து யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் பின்னே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
நடக்க ஆரம்பித்தவிட்டவனை திரும்பிப் பார்த்த அந்தக் கட்டை மனிதரின் கண்கள் சிறிது கலங்கியிருந்தனவோ?
விடுவிடுவென வீட்டிற்கு வந்துவிட்டான் ரித்விக்.
ஏனோ எல்லோர் முன்பும் தான் அவமானப்படுத்தப்பட்டது போலொரு உணர்வு.
கோபம் வராமல் ‘ஏன் அப்படி பேசினார்கள்?’ என்ற கேள்வி தான் வந்து தொலைத்தது.
சுணங்கிப் போன முகத்துடன் வீட்டினுள் நுழைபவனைப் பார்த்த ரகுநந்தன், வேகமாக எழுந்து வந்து “என்ன ரித்விக்? ஏ ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்டார் தன் ஒரே மகனின் வாடிய முகத்தை காண சகிக்காமல்.
“டேட், எனக்கு சிலம்பம் கத்துக்கனும்” தந்தையின் முகம் பார்த்து அவன் உரைத்த செய்தியில் அதிர்ந்து விழித்தனர் ரகுநந்தனும், தவசியும்.
பல வருடங்களுக்கு முன்பு இதே விசயத்தை ரகு தவசியிடம் சொன்னதும் அதன்பின் நடந்த சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர, இருவரது மனநிலையும் கலங்கியது.
“எ..என்ன ரித்விக் திடீர்னு?” முகத்தை சாதாரணமாக வைக்க முயற்சித்தபடி கேட்டார் ரகுநந்தன்.
“நா டெய்லியும் ஜாக்கிங் போகுற வழியில சிலம்பம் கிளாஸ் நடந்துகிட்டு இருக்கு... நானும் ஜாயின் பண்ணிக்குறேன்னு போய் கேட்டேன்... பட்....” அவன் முகத்தை தொங்க போட, துடித்தது ரகுவின் மனது.
“பட்?”
“கத்துக்குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க”
“இ..இதுக்கு போய் டல்லாகலாமா ரித்விக்? சியர் அப்... அப்பா இந்த விசயத்த பாத்துக்குறேன்” என்று ரகுநந்தன் உறுதி அளிக்க, ஜொலிக்கும் கண்களோடு முகத்தை நிமிர்த்திய ரித்விக் “யூ ஆர் தி பெஸ்ட் டாடி” என்றபடி அவரைச் சென்று கட்டிக்கொண்டான்.
நடப்பவற்றை எல்லாம் தவசி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாலும் அவரது மனதினுள் ஏதோ ஒரு அபயாமணி ஒலிக்க ஆரம்பித்தது.
---------------------------
இன்றும் நேற்று கிளியை சந்தித்த அதே மலைக்குன்றுக்கு அதே நேரத்திற்கு சென்றான் ரித்விக்.
பாறையின் முன்பக்கம் அவளைக் காணாமல் போகவே, சுற்றி பின் பக்கம் சென்றான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு தான் அமர்ந்திருந்தாள் கிளி.
நேற்று போலவே இரு ரயில்கள் இடையே செல்லும் இடைவெளிவிட்டு அமர்ந்தான் ரித்விக்.
அவள் கவனிக்கவில்லை.
எதையோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.
“ங்க்ரும்” தொண்டையை சத்தமாக அவன் செரும, திரும்பிப் பார்க்காமலேயே யார் அது என்று கிளிக்கு புரிந்தது.
ஆனால் அவள் இவன் பக்கம் திரும்புவதாய் இல்லை.
“நானும் சிலம்பம் கத்துக்கப்போறேன்” நொடித்துக் கொள்வது போல் சொன்னான்.
ஆச்சரியத்தில் விரிந்த விழிகளோடு இவன் பக்கம் திரும்பினாள் கிளி. இதை எதிர்பார்த்திருந்தவனின் முகம் வெற்றிப் புன்னகையை சூடிக்கொண்டது.
அவன் பக்கம் திரும்பும் பொழுதே அவளது முகம் எதையோ நினைத்து பொழிவிழந்தது.
“யாருகிட்ட கத்துக்கப் போறீங்க?” கேள்வி பிறந்தது அவளிடம்.
“நீ அன்னைக்கு ஒரு மரத்துப் பக்கத்துல கம்பு சுத்துனில.. அங்க நிறைய பேர் இன்னைக்கு ப்ராக்டிஸ் பண்ணுறத பாத்தேன்... அவுங்ககிட்ட தான் போய் கேட்டேன்” என்று அவன் சொல்லும் பொழுதே, அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்று புரிந்துக்கொண்டவள்
“என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் பதட்டமாக.
அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன் “முடியாதுன்னுட்டாங்க.. உங்ககுடும்பத்துக்கும் எங்கக் குடும்பத்துக்கும் தான் பகைன்னு வேலன் சொன்னான்... ஆனா அவுங்கள்ளாம் ஏ இப்டி நடந்துக்குறாங்க... ஒருவேல ஊரு முழுக்க எங்கக் குடும்பத்துக்கு பகையா இருக்குமோ?” என்று தனது மனதில் இருப்பவற்றை பேசிக் கொண்டே போனவன் “என்னமோ போ... இந்த மாதிரி பைட்ஸ்ல-லாம் எனக்கு எந்த இண்டரஸ்ட்டும் இல்ல... லாக்டவ்ன் முடிஞ்சு எல்லாம் ப்ரீயானோன நா கெனடாவுக்கு பறந்துருவேன்” என்று கையை விமானம் போல் இயக்கிக் காண்பித்தான்.
கிளியோ ‘அப்போ சீக்கிரமா லாக்டவ்ன் முடியனும்’ என்று மனதினுள் வேண்டிக் கொண்டாள்.
ரித்விக்கோ “ஆனா அந்த ஷார்ட்டா இருந்த ஆளு, என்னைய பாத்தோன ஏன் முதுக காமிச்சு நின்னுட்டாருன்னு தான் இன்னும் எனக்கு புரியல... அவரு முஷ்டாச்ச(மீசைய) நீ பாத்துருக்கனுமே... ஹா... ஹா.. ஹா... வெரி ஃபன்னி” என்று சொல்லி ரித்விக் சிரிக்க,
அவனை முறைத்துப் பார்த்தவள் “அது எங்க அப்பா” என்றாள் பற்களைக் கடித்தபடி, அதில் சிரிப்பை சட்டென நிறுத்தியவன் விரிந்த விழிகளோடு அவளை திரும்பிப் பார்த்து “வாட்?” என அதிர்ந்து “ஓ.... உங்க அப்பா சிலம்பம் டீச்சரா? அவரு தான் அங்க நின்னு எல்லாருக்கும் சொல்லிக் குடுத்துட்டு இருந்தாரு” என்று சொல்ல
“எங்கப்பா கூத்துக்கட்டுறவரு... மாசியில இருந்து ஆவணி வரையும் தான் எங்க தொழில்ல வருமானம்... அதையும் இப்போ கொரோனா வந்து கெடுத்துருச்சு” என்று தகவலோடு தனது சொந்த ஆதங்கத்தையும் சேர்த்து பொருமினாள் கிளி.
“அப்டினா?” எப்பொழுதும் அவனிடம் பிறக்கும் கேள்வி இப்பொழுதும்.
இம்மாதிரியான கேள்விகள் வந்தாலே குஷியாகிவிடுவாள் கிளி. அவளுக்குத்தான் நீண்ட விளக்கம் கொடுக்க ரொம்பப் பிடிக்குமே...
அவன் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்தவள் “கூத்துனா.. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா... ம்ம்ம்.. தியேட்டர்ன்னு சொல்லுவாங்கள்ள... நடிகர்கள் எல்லாம் ஒரு ஸ்டோரிய அங்க லைவா ஆக்ட் பண்ணுவாங்களே அந்த மாதிரி...” என்று அவள் விளக்க
“ஆக்டர்னு சொல்லுறியா?” என்று கேட்டான்
“இல்ல.. இல்ல... ம்ம்ம்ம்... ஆர்டிஸ்ட்! எங்கப்பா பண்ணுறது ஃபோக் ஆர்ட்...” என்று சொல்ல
“ஓ...” “இந்த ரோமியோ ஜூலியட்... மாதிரி லிட்டரேச்சர் வொர்க்ஸ்ச ஆக்ட் பண்ணுவாங்களா?”
“இல்ல... ஃபோக் ஆர்ட்ஸ்ல நிறைய வகை இருக்கு... ஃபோக் ஆர்ட்ச நாட்டுப்புறக்கலைகள்ன்னு சொல்லுவாங்க... அப்டினா நம்ம நாட்டோட தனிப்பட்ட ஒழுக்கம், அரசர்கள், போர்கள், தொழில்கள், லைப் ஸ்டைல், கடவுள் இதப் பத்தியெல்லாம் பேசுறது... ம்ம்ம்.. நா ஸ்கூல் படிக்கும் போது தமிழ்ல முத்தமிழ்ன்னு ஒரு பாடம் வந்தது.. அதுபடி சொல்லனும்னா தமிழ இயல் இசை நாடகம்னு மூனா பிரிக்குறாங்க... இப்போ நம்ம சங்க இலக்கியங்கள் எல்லாம் நம்ம முன்னோர்களோட வாழ்க்கை முறைய பத்தி பேசுது இல்லையா... படிப்பறிவு இல்லாதவுங்களுக்கு அதையெல்லாம் படிக்கத் தெரியாது... சோ நாடகத்தமிழ் உள்ள வந்தது.. நாடகங்களும் மக்களோட வாழ்க்கை முறைய பத்தி தான் பேசுது... ஏன் நம்ம சிலப்பதிகாரத்துல கூட கொடுகொட்டி, பாண்டுரங்கம், அல்லிக்கூத்து, மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, குடக்கூத்து, பேடிக்கூத்து, மரக்கால்கூத்து, பாவைக் கூத்து, கடையக்கூத்துன்னு மொத்தம் மாதவியோட பதினொரு வகையான கூத்துக்கள பத்தி சொல்லுறாங்க...அது நடந்து பல நூறு ஆண்டுகள் கழிச்சும் இன்னமும் பாவைக் கூத்து, மரக்கால் கூத்துலாம் இருந்துகிட்டே தான் இருக்கு...”
“கூத்துக்கட்டுற போது வர்ற பாட்ட ‘தரு’ன்னு சொல்லுவாங்க... கூத்து ஆரம்பிக்கும் போது எல்லாரும் உள் நுழையற போது பாட்டு பாடிகிட்டே வருவாங்க... அது பேரு பிரவேச தரு... அதுக்கப்பறம் நடக்குற விவாத பாடல்கள சம்வாத தருன்னு சொல்லுவாங்க... ஏன் கூத்தநூல்ன்னு ஒரு புக்கே இருக்கு... அதுல நாடகம் எப்படி பிறந்ததுன்னு சொல்லுறாங்க” என்றவள் கடகடவென கூகிளில் அதைத் தட்டி எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்,
“மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஈட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக்கொப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே”
“கூடவே கூத்துக் கட்டும் போதெல்லாம் எவளோ கடுமையா விரதம் இருந்து பண்ணுவாங்க தெரியுமா?” என்று ஆச்சரியமாக சொல்லியபடி திரும்பி ரித்விக்கின் முகத்தைப் பார்க்க,
அவனோ இவளை ‘ஞே’வென பார்த்துக் கொண்டிருந்தான்.
(கூத்த நூல் பாடலின் பொருள் :
இறைவனது உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து கூத்தும், கூத்திலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் தோன்றின என்கிறது.)