Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-3

அன்று

 

நிரஞ்சனி வேளையில் சேர்ந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. இந்த ஒருவாரம் முழுவதும் இன்ஸ்பெக்டர் பிரசன்னா நிரஞ்சனியை தொடர்ந்து அவளை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டான். அவள் கார்த்திகா மருத்துவமனையில் வேலை செய்கிறாள் என்பது வரை.

 

அன்று அவள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் அவள் முன் வந்தவன்…

 

“என்ன ரஞ்சி… இன்னிக்கு பஸ்ஸ விட்டுட்டியா…? வழக்கமா வர்ற பஸ்ல நீ வரல…” என்றான்.

 

அவன் அவளை திடீரென்று ‘ரஞ்சி’ என்று அழைத்தது ஆச்சர்யத்தை அளிக்க ‘ஒருவேளை நமக்கு சொந்தக்காரரா இருப்பாரோ…’ என்று நினைத்தவள் லேசாக புன்னகைத்து, “ஆமா…” என்றாள்.

 

அவ்வளவுதான்… அவள் என்னவோ அவனிடம் காதலை சொல்லிவிட்டது போல் அவன் மகிழ்ந்து போய் கனவில் மிதந்து கொண்டே  ஸ்டேஷனுக்கு போனான்.

 

அதே நாள் புகழ் மீண்டும் நிரஞ்சனியை பார்த்தான். மருத்துவமனை ‘கேன்டீனுக்கு’ சென்றவன் அங்கு நிரஞ்சனியை பார்த்த்தான். அவனுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது. அவனுக்கே அது ஆச்சிரியமாக இருந்தது.

 

அவன் எவ்வளவு முயன்றும் அவள் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் தவித்துப் போனான். அவள் அங்கு வேலை செய்யும் சீருடை அணிந்திருந்ததால் ‘அவள் அங்கு வேலை செய்கிறாள் ‘ என்பதை புரிந்து கொண்டவனுக்கு மனம் துள்ளியது. அவளுடைய சீருடை கலர் அவள் என்ன பிரிவில் வேலை செய்கிறாள் என்பதையும் காட்டிக் கொடுத்தது.

 

மத்திய உணவு நேரத்தில் அவளை கேன்டீனில் பார்ப்பதை அவன் வழக்கமாக்கிக் கொண்டான். அவன் மனதில் அவள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள். அவள் இல்லாமல் அவனுக்கு வாழ்வே இல்லை என்கிற நிலைக்கு அவன் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தான்.

 

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. இன்ஸ்பெக்டர் பிரசன்னா கொஞ்சம் கொஞ்சமாக நிரஞ்சனியை நெருங்கிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் பார்த்து புன்னகைப்பது. பஸ்ஸை அவள் விட்டுவிட்டு அடுத்த பேருந்தில் வந்தால் அதை பற்றி விசாரிப்பது என்று அவளிடம் சிநேகமாக நெருங்கிக் கொண்டிருந்தான்.

 

இந்த நிலையில் காதலர் தினம் வந்து அவனை அவளுக்கு காட்டிக் கொடுத்தது. காதலர் தினத்தன்று அவன் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தான். அதை பார்த்த நிரஞ்சனி அரண்டு  விட்டாள்.

 

“என்ன இது….” அவள் மலங்க விழித்துக் கொண்டு கேட்டாள்.

 

‘பேருந்து நிறுத்தத்தில் போலீஸ் யூனிபார்ம் போட்டுக்கிட்டு என்ன வேலை செய்றான்…’ என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

 

“உனக்கு தான் ரஞ்சி… இன்னிக்கு காதலர் தினம்… உனக்கு என்னோட காதல சொல்ல இதுதான் சரியான நாள். அதுதான் கிஃப்ட்… ” என்று சொல்லிவிட்டு அந்த பட்டுப்புடவை பெட்டியை அவளிடம் நீட்டி “ஐ லவ் யு…” என்றான்.

 

“சாரி…. நீங்க இது மாதிரி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல…. என்னை தொந்தரவு செய்யாதீங்க…” என்று சொல்லிவிட்டு அவனை திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

 

‘எதற்கு வம்பு’ என்று நினைத்து அன்றிலிருந்து அவள் அவன் கண்ணில் படுவதே இல்லை. அவள் எப்போதும் வரும் பஸ்ஸை மாற்றி மிக விரைவாக வந்து கொண்டிருந்தாள். அதே போல் மாலை பயந்து பயந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் சென்று கொண்டிருந்தாள். இப்படியே இரண்டு வாரம் சென்றது. மூன்றாவது வாரம் அவன் கண்டுபிடித்து விட்டான்.

 

முன்பு காலை பத்துமணிக்கு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தவள் இப்போது ஏழு மணிக்கெல்லாம் வந்துவிடுகிறாள். அதை கண்டுபிடித்தவன் மருத்துவமனைக்கே வந்துவிட்டான்.

 

காலை நேரம் மருத்துவமனையில் கூட்டம் இல்லை. வரவேற்ப்பில் ஒரு பெண் இருந்தாள். அந்த பெண் இரவு பணி செய்த பெண். பகல் வேலைக்கு வரும் பெண் ஒன்பது மணிக்கு தான் வருவாள். நிரஞ்சனியின் வேலை நேரம் பத்துமணிக்கு தான் ஆரம்பம். அதனால் அவள் வரவேற்ப்பில் இருந்த பெண்ணுக்கு உதவியாக வரவேற்ப்பில் நின்றாள். அவளுடைய கெட்ட நேரம் பிரசன்னாவின் கண்ணில் அவன் உள்ளே நுழைந்ததும் பட்டுவிட்டாள்.

 

வேகமாக வரவேற்ப்பை நெருங்கியவன் “என்ன ஆச்சு… ஏன் டைம் மாத்திட்ட…? இப்போதெல்லாம் நாம ரெகுலரா வர்ற பஸ்ல நீ வர்றதில்லையே…” என்று உரிமையாக கேட்டான்.

 

அவனுடைய கேள்வியில் திகைத்த நிரஞ்சனி, கொஞ்சம் தடுமாறிவிட்டாள்.

 

“எ.. என்ன…?” என்று திக்கி திணறினாள். அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு நிரஞ்சனிதான் தவறு செய்துவிட்டவள் போல் தோன்றினாள்.

 

“என்ன ரஞ்சி… என் மேல கோவம் என்றால் சொல்ல வேண்டியதுதானே… எதுக்கு இந்த கண்ணாமூச்சி…. என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியல… ” என்று உருகினான்.

 

“இதோ பாருங்க… நீங்க இது மாதிரி என்னுகிட்ட வம்பு பண்றது சரியில்ல… நான் எப்போ வேணுன்னாலும் வருவேன்… போவேன்… உங்களுக்கு என்ன…? என்னை இனி இங்க பார்க்க வராதிங்க ப்ளீஸ்…” என்றாள்.

 

“சரி நா இங்க வரல… நீ இனிமே நம்ப வர்ற பஸ்ல வா… எனக்கு அதுதான் டுயுட்டி டைம் ” என்றான்.

 

நிரஞ்சனிக்கு நன்றாக புரிந்தது. அவள் ஒரு மாய வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறாள். அந்த வலை நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டே இருக்கிறது. அதை அறுத்தெறிய தெரியாமல் திகைத்தாள்.

 

இன்று

 

நிரஞ்சனி தன்னுடைய சித்தி வீட்டிற்குள் நுழைந்த போது நீரஜாவின் கணவன் இராஜசேகர் வீட்டில் இல்லை. பெண்கள் பின்பக்கம் சமையலுக்கு போடப்பட்டிருந்த கொட்டகையிலும் சகலைகள் (அக்கா தங்கையின் கணவமார்கள்) இருவரும் வெளிப்புற தின்னையிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“வா ரஞ்சி… உங்க சித்தி அம்மா எல்ல(ம்) பின் பக்கம் கொட்டாயில இருக்காங்க போ…” என்றார் சித்தப்பா வேணு.

 

சிறிது நேரத்தில் எல்லாருடைய நல விசாரிப்புகளும் முடியும் நேரம் சித்தப்பா வேணு நிரஞ்சனியை தனியாக அழைத்தார். அப்போது சித்தி குறுக்கிட்டு

 

“இருங்க அவ எதுவுமே இன்னும் சாப்பிடல… ஏதாவது சாப்பிடட்டும் அப்புறம் நீங்க கேட்கிறத கேட்கலாம்…” என்றார்.

 

“அதுக்கில்ல அல்லி… நா பேசுறத அவரு (இராஜசேகர்) வர்றதுக்கு முன்னாடி கேட்டுக்கிறேன்….” என்றார்.

 

அதற்குள் நிரஞ்சனி… “இதோ நான் வர்றேன் சித்தப்பா… நீங்க போங்க..” என்று சொன்னாள்.

 

அவர் கூடத்திற்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்துவிட… நிரஞ்சனியின் தந்தை அரசு வெளியே சென்றுவிட்டார்.  நீரஜாவும் சிவரஞ்சனியும் ஒரு அறையில் அமர்ந்து தங்களுடைய ஒரு வயது குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டு அடுத்து தங்கள் குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதே போல் தாய்மார்களும் இரவுக்கு தேவையான சமையல் வேலையை பார்த்துக் கொண்டே தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

நிரஞ்சனி சித்தப்பாவை தேடிவந்தாள்.

 

“என்னம்மா… அப்பா என்னென்னமோ சொல்றாரே…” என்றார்.

 

“………..”

 

நிரஞ்சனி எதுவும் பேசாமல் விழித்துக் கொண்டிருந்தாள். தாயிடம் தன்னுடைய காதல் விவகாரங்களை பேசவே கூச்சப்பட்டவள், வேறு வழியில்லாமல் சொல்லி ஓரளவு சம்மதமும் வாங்கிவிட்ட நிலையில் இந்த சித்தப்பாவுக்கு என்ன வந்தது….

 

‘இப்படி வெளிப்படையா கேட்டுவிட்டாரே… எப்படி பதில் சொல்வது….?’    என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த இராஜசேகர் நிரஞ்சனியின் முடியை கொத்தாக பிடித்துவிட்டான்.

 

அவ்வளவுதான் அங்கு நடந்ததை விவரிக்க முடியும். அதற்க்கு மேல் “ஐயோ… அம்மா…. அம்மா….”  “விடுங்க… விடுங்க மாப்ள… விடுங்க… ” “ஆ…. ஆ….” என்ற சத்தமும் ‘தட-புட’வென நாற்காலிகளும் மற்ற சாமான்களும் உருளும் சத்தமும் தான் கேட்டது.

 

அலறல் சத்தம் கேட்டு சிவரஞ்சனியும், நீரஜாவும் தங்களுடைய குழந்தைகளை தூக்கிக் கொண்டு அறையிலிருந்து வெளியே ஓடிவந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த ரகளையை பார்த்து குழந்தைகள் அலறினார்கள்.

 

சித்தப்பா வேணு, நிரஞ்சனி, இராஜசேகர் மூவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு பின்னிக் கொண்டிருந்தார்கள். நீரஜாவும் சிவரஞ்சனியும் ஒருகையில் குழந்தையை வைத்துக் கொண்டு நிரஞ்சனியை இராஜசேகரின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் கத்தினார்கள்.

 

“ஐயோ…. ரஞ்சி… ரஞ்சி…. ஏய்… விடு… விடு… விட்டுதொலை…” என்று பெண்கள் இருவரும் ஒரு கையால் அந்த ஆஜானுபாகுவான மனிதனை அடக்க முயன்று முடியாமல் கத்தினார்கள். மாமா… கணவன் என்ற மரியாதையெல்லாம் அப்போது அவர்களிடம் பறந்துவிட்டது. தங்களுடைய தங்கையை எப்படியாவது அந்த வெறி பிடித்த புலியிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டுமே என்று தவித்துக் கொடிருந்தார்கள்.

 

சத்தம் கேட்டு சமயலரையிலிருந்து ஓடிவந்த தாய்மார்கள் இருவரும் நடந்து கொண்டிருந்த கலவரத்தை பார்த்து திகைத்துவிட்டார்கள். உடனே நிலைமையின் தீவிரம் உணர்ந்து அல்லி நிரஞ்சனியை காப்பாற்ற முனைய தாமரை மருமகனிடம் நெருங்க தயங்கி அருமையாக வளர்த்த மகளின் நிலையை பார்த்து உயிரை உருக்கி கண்ணீராக வெளிவிட்டு துடித்துக் கொண்டிருந்தார்.

 

குழந்தைகளை தாமரையிடம் கொடுத்துவிட்டு பத்து நிமிட போராட்டத்திற்கு பின் நீரஜா, சிவரஞ்சனி, அல்லி, வேணு ஆகிய நால்வரும் நிரஞ்சனியை ராஜசேகரின் பிடியிலிருந்து விடிவித்து வேறு ஒரு அறையில் அடைத்துவிட்டு ‘அந்த அறைக்குள்ளும் இராஜசேகர் நுழைந்துவிட கூடாதே’  என்ற பதைப்புடன்  ஒரு பூட்டை எடுத்து வெளிப்புறமாக பூட்டிவிட்டார்கள்.

 

ராஜசேகரின் கோவம் அடங்கவில்லை… “மானத்த வாங்கிட்டா…. பாக்குறவனெல்லா(ம்) கேள்வி கேக்குறா(ன்)… இவள வெட்டி பொதச்சாதான் என்னோட ஆத்திரம் அடங்கும்….’ என்று ஒரு மணி நேரம் கத்தி தீர்த்துவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.

 

அவன் சென்றதுக்கு பின் நிரஞ்சனி அடைப்பட்டிருந்த அறையின் கதவை திறந்து பார்த்த சிவரஞ்சனிக்கு அதிர்ச்சி….

 

‘நிரஞ்சனி அழுதுகொண்டு சோர்ந்து கிடப்பாள்’ என்று எதிர்பார்த்த சிவரஞ்சனிக்கு, நிரஞ்சனி அங்கு தலைவிரிகோலமாக நெற்றியிலும் கன்னத்திலும் நகக்கீறலோடு விறைப்பாக காலி கோலத்தில் அமர்ந்திருந்தது வித்தியாசமாக இருந்தது.

 

“ஏய் ரஞ்சி… ஏண்டி இப்படி உக்காந்திருக்க… ” என்று கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்து அவளுக்கு தேவையானதை செய்தாள். முடியை கொண்டையிட்டு காயம் பட்டிருந்த இடங்களுக்கு மருந்திட்டாள். கை முகம் கழுத்து… என்று சரமாரியாக நகக் கீறல்கள்.

 

மருந்திட்ட சிவரஞ்சனி நிரஞ்சனியுடைய காயங்களை பார்த்து கண்ணீர்விட்டாள். ஆனால் காயம் பட்ட  நிரஞ்சனி பெண் புலியாக நிமிர்வாக அமர்ந்திருந்தாள்.

 

‘ஏன்… ஏன்… நான் என்ன தப்பு செய்தேன்… எதற்கு என்னை இப்படி அடித்தான்? என்னை அடிக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது….? இந்த அநியாயத்தை ஏன் ஒருவர் கூட தட்டிக் கேட்கவில்லை….? அம்மா… அப்பா… சித்தப்பா… சித்தி…. அக்கா… யாருமே அவனை ஒரு வார்த்தை கேட்கவில்லையே… எல்லோரும் அவனை சமாதானம் செய்தார்களே…. ஏன்….? ஏன்…?’ என்று அவளுக்குள் ஆயிரம் கேள்விகள்.

 

அவளுடைய அனைத்து கேள்விகளுக்கும் விரைவிலேயே விடை கிடைத்தது…….

 

 




5 Comments

You cannot copy content of this page