Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold மதுரதுளசி

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
டீசர் 1


அவள் தான்..! அது அவளே தான். ஒரு நொடி தன்னை அவள் உற்று பார்த்தது போல் தோன்றியது மதுரனுக்கு.


துளசி..! அவனையறியாமல் அவன் உதடு முனுமுனுக்க அவளை நோக்கி வேகமாகச் சென்றான். அந்த திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து அவளை நோக்கிச் செல்லும் முன் அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.


எங்கே போனாள். சுற்றும் முற்றும் தேடினான். அவள் நின்றிருந்த அந்த கடையில் "அண்ணா இப்ப பச்சகலர் புடவை கட்டின பொண்ணு இங்க இருந்தாங்களே.. அவங்க எங்க...?" என விசாரிக்க அவர் பதில் அளிக்காமல் போகவே மீண்டும் மீண்டாம் அதையே கேட்டபடி சுற்றிலும் பார்வையை சுழற்ற


"ஏ தம்பி நோம்பி நேரத்துல எத்தனையோ பேரு வருவாங்க.. வேவாரத்தை பாக்காம அவங்க எங்கேன்னா பார்த்துட்டு இருப்பேன்.." என வியாபரநேரத்தில் தொந்தரவு செய்யும் அவனிடம் சலித்துக் கொண்டார்.


'அது துளசியே தான். என் துளசியேதான். எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை கூட்டத்திலும் உன்னை அடையாளம் காண முடியாமல் போகுமா துளசி. எங்கே போன...? என்னை நீ பார்த்தை நான் பார்த்தேனே... என்னைப் பார்த்தும் ஏன் துளிசி போன...' என அரற்றியபடியே கண்களும், கால்களும் அந்த திருவிழா கூட்டத்தில் அவளை தேடிக் களைத்தது. கடந்த பத்து ஆண்டுகளாய் அவன் மனதை துளைக்கும் கேள்வி அன்றும் துளைத்து எடுத்து அவனை உறங்கவிடாமல் செய்தது.


ஏன் துளசி என்னை விட்டு போன... என மறுகியபடியே அவளின் நினைவுகளோடு உரையாடிக் கொண்டிரூந்தான் மதுரன்.


**********************


"ச்சீ கையைவிடு.." என்றபடியே பளாரென அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது அவள் கரம்.


சட்டென அவன் காதுகள் அடைத்து உலகமே நிசப்தமானது போல் இருந்தது அவனுக்கு. கன்னத்தை பிடித்தபடி ஒரு நொடி தள்ளாடி நின்றவனை "தமிழ்.." என்றபடி ஓடி வந்து தாங்கி நின்றான் ரகுபதி.


"ஏய்..." என ரகுபதி முஷ்டியை இறுக்க அவனை அடக்கியபடி


ஏன் துளசி நான் உன்னை தொடக்கூடாதா.. என ஏக்கமாக கேட்டவனிடம்


"யார் நீ.." என்றாள் அவள் உக்கிரகாளியாய் மாறி. கனல் வீசிடும் வார்த்தைகளால் அவனைக் கேட்டது அவள் தான் என நம்பமுடியவில்லை அவனால்.


"துளசி... என்னையா யார்ன்னு கேட்கற.." அவன் உடல் இறுகியது.


"உன்னைத் தான் கேட்கிறேன். யார் நீ.." என அதை உக்கிரத்தோடு மீண்டும் அவள் நாக்கு அமிலத்தை துப்பியது.


அவன் முகம் கறுத்து, உடல் இறுகி அவளையே பார்த்திருக்க அவனைத் துளியும் கவனிக்காது, அங்கு அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கூட தெரியாதது போல் முகத்தில் அதே உக்கிரம் தாண்டவமாட, அதே நேரம் தன்னியல்பாய் அவள் பணிகளை பரபரப்பாய் தொடர்ந்து கொண்டிருப்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
மதுரதுளசி



அத்தியாயம் - 1


இரவின்

இருளுளை

கிழித்துக்கொண்டு

நுழைந்தது அந்த

பெருமழையின்

பேரிரைச்சல். அந்த வீட்டுக் கூரையின் மீது பெருங்கற்களை வாரி இரைப்பதைப் போன்றதொரு சப்தம் மதுரனின் தூக்கத்தை எப்போதோ விரட்டியிருந்தது. அந்த நள்ளிரவிலும் அவனது நினைவில் , இப்படி இடி இடித்து பெய்யும் மழைக்கு பயந்து நடுங்கிப் போவாளே,இப்பொழுது என்ன செய்வாள், அவள் தந்தை அவளுக்கு துணையிருப்பாரோ.... இல்லை அம்மாவென்று அவள் தாயின் அருகில் கோழிகுஞ்சாய் தஞ்சமடைந்திருப்பாளோ. இடி சத்தம் கேட்டா அர்ஜூனா, அர்ஜூனா சொல்லு துளசி பயமா இருக்காது என பால்யத்தில் மதுரன் சொன்னதும்,மதுரா பயமாருக்குடா.. மதுரா.. மதுரா.. என கைகளை இறுகப் பற்றி அவன் தோள்மீது முகத்தைப் புதைத்து அருகே அணைத்து கிடந்தது நினைவில் நிழலாடியது. அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது. இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியாது. ஆனால் அவளது நினைவுகள் மட்டும் அவனை நீங்காது நிழலாய் தொடர்கிறது.


என்னை விட்டு எங்கே போன துளசி. என்கிட்ட சொல்லாம ஏன் போன...? காற்றோடு நித்தமும் அவன் கேட்கும் கேள்வி இது.



மதுரனின் முழு பெயர் தமிழ்மதுரன். தமிழாசிரியர் மாணிக்கவாசகர், மனோன்மணி தம்பதியின் அருமை புதல்வன். உடன் பிறந்த தங்கை வெண்பா. பள்ளி இறுதி ஆண்டு வரை தன் சொந்த மண்ணான கோபிசெட்டிபாளையத்தின் ஒரு கிராமத்தில் படித்தவன். தந்தையின் கனவை தனது லட்சியமாய் சுமந்து நன்றாக படித்து மருத்துவக் கல்வியை கோவை அரசுகல்லூரியில் முடித்தான். நல்லவேளை அப்பொழுது நீட் தேர்வு நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. இல்லையெனில் நம் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்தவம் என்பது எட்டாக்கனி ஆனது போலே மதுரனுக்கும் நேர்ந்திருக்கும்.


மருத்துவப்படிப்பை முடித்தவன், சிறப்பு மருத்துவராக எலும்பு மூட்டு மருத்துவம் (Orthopaedic) பட்டம் பெற்றான்.


என்னதான் அவன் படிப்பு, கல்லூரி, மருத்துவம் என முழுக்க முழுக்க மருத்துவத்துறையில் அவன் கவனத்தை செலுத்தினாலும் அவன் ஒவ்வொரு அணுவும் தன்னைப் போலவே துளசியும் மருத்துவக் கனவுகளோடு படித்தவள் தானே... அவளும் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்திருப்பாளா என்ற ஆவலில் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் அவளை தேடிக்கொண்டிருந்தான்.


மதுரன் நான்காம் வகுப்பு படிக்கும் போது துளசி ஒன்றாம் வகுப்பு சேர்ந்தாள் அன்று முதல் மாணிக்கவாசகர் வாத்தியாரின் செல்ல மாணவி அவள்.


மாணிக்கவாசகர் அந்த கிராமப்புற மாணவர்களுக்கு என மாலையில் சிறப்பு டியூஷன் வகுப்பை எடுப்பார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என முனைவார். தன்வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் அனைத்து மாணவர்களையும் தன் டியூஷன் வகுப்பிற்கு வர சொல்லி பாடம் நடத்துவார்.


கல்வி ஒன்றே அடுத்த தலைமுறையையும், சமுதாயத்தையும் முன்னேற்றும் என்பது அவர் அறிந்த பால பாடம் அனுபவ பாடமும் கூட. அவரின் டியூஷன் வகுப்பிற்கு அந்த ஊர் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாத சுற்று வட்டாரத்திலிருந்து பல கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இவரிடம் டியூஷனுக்கு வருவார்கள் .




வள்ளுவனுக்கேற்ற வாசுகியாய் மனோன்மணி அம்மாளும் தனக்கு தெரிந்தவற்றை ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார். அப்படித்தான் துளசியை மதுரன் வீட்டிற்கு டியூஷன் கொண்டு வந்து விட்டார் துளசியின் தாய் பவானி.


வெண்பாவும், துளசியும் ஒரே வகுப்பு தான் என்றாலும் வெண்பாவைவிட துளசி ஒரு வருடம் மூத்தவள். துளசியை தாமதமாகவே பள்ளியில் சேர்த்தனர் பவானி, சின்னச்சாமி தம்பதியினர். அவளுக்கு அடுத்தடுத்து பிறந்த மூன்று பிள்ளைகளை வளர்க்க துளசியையும், அவளுக்கு மூத்தவளான ராதாவையும் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததை கண்டு மாணிக்கவாசகமே அவர்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்தார்.


பள்ளியிலும் சரி டியூசன் வகுப்பிலும் சரி ராதா, துளசி, வெண்பா மூவரும் ஒட்டிக்கொண்டே திரிவார்கள். தங்கைகளை பார்த்துக்கொள்ளவென ராதா பள்ளிவிட்டு நேரே வீடு செல்ல.. துளசி நேராக வெண்பாவோடும், மதுரனோடும் மனோன்மணியைத் தேடி வந்துவிடுவாள். மனோன்மணிக்கும் மாநிறத்தோடு, பளிச்சென்ற கண்களுடனும், குண்டு கன்னங்களுடனும், எப்பொழுதும் பச்சரிசி பல் காட்டி சிரித்தபடி வளைய வரும் துளசியை மிகவும் பிடிக்கும். வெண்பாவின் ஆடை அணிகலன்களை துளசிக்கும் உடுத்தி அழகு பார்ப்பாள். எல்லாவற்றையும் துளசியோடு பங்கு போடும் வெண்பா அண்ணனை மட்டும் விட்டுத் தரமாட்டாள். ஆரம்பத்தில் துளசி மதுரனை அண்ணாவென அழைக்க அழுது ஆர்ப்பாட்டம் செய்யலானாள். எதற்கும் மசியவில்லை. அவன் என் அண்ணன் எனக்கு மட்டும் தான் அண்ணன் அவ அப்படி கூப்பிட கூடாது என ஒற்றைக்காலில் நிற்பாள்.


மதுரனே அதற்கு தீர்வாய் "நீ மதுரன்னே கூப்டுக்கோ துளசி... எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. எங்க வெண்பாக்குட்டிக்கு மட்டும் தான் நான் அண்ணன். இல்லடா தங்கமயிலே.." என அவளை தூக்கி கொஞ்ச சமாதானமானாள் வெண்பா. எப்போதும் மதுரனுக்கு வெண்பா செல்லம், தங்கம், குட்டி தான். அதுவும் என் தங்கமயிலே என அண்ணன் கூப்பிட்டுவிட்டால் அதற்குபின் அவன் மொழிக்கு மறுமொழி கிடையாது வெண்பாவிடம்.


ஆண்டுகள் செல்ல, செல்ல மாணிக்கவாசகரின் மூலம் அந்த கிராமத்தில் கல்வி கற்று அடுத்த தலைமுறை முன்னேற ஆரம்பித்தது. கல்வியினால் சமூகத்தை சீர்திருத்தலாம் என்று எண்ணிய மாணிக்கவாசகர் தன் வீட்டின் மூத்த தலைமுறையை ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆம் அவர் தாய் ராசம்மாள் அந்த காலத்து மனுஷி. சாதி, மதம் பார்க்காமல் எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்து படிப்பு சொல்லிக் கொடுக்கிறான் தன் மகன் என்று ஒரே காரணத்துக்காக தன் கணவனோடு தனியே பிரிந்து சென்றவர்.


தனியே என்றால் வேறு தெருவுகோ வேற ஊருக்கோ அல்ல.. மாணிக்கவாசகத்தின் வீடு அவர் ஆசிரியர் பணிக்கு வந்த பின் கட்டிய பழைய கையோடு வேய்ந்த எட்டுக்கட்டு வீடு. மாணிக்கவாசகரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் வீட்டின் முன் பெரிய களம் உண்டு. பெரிய திண்ணை வைத்த வீடு.



ஏற்கனவே தம் தாத்தா காலத்தில் கட்டிய வீட்டில் தான் மாணிக்கவாசகம், உடன் பிறந்த சகோதரி செல்லம்மா,பிறந்தது வளர்ந்தது எல்லாம் . மகன் ஊர் பிள்ளைகளை எல்லாம் வீட்டிற்குள் அனுமதிப்பது கண்டு பொறுக்காத ராசம்மா வசைப்பாட ஆரம்பித்தாள்.


"என்ன சாதியோ, என்ன சனமோ இப்படி எல்லாத்தையும் ஒன்னு மண்ணா புழங்க விட்டா நாங்க எப்படி அன்னந்தண்ணி உங்கறதுன்னு வேணாமா.." என உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். மாணிக்கவாசகம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.


"பெத்த தாயை விட ஊராம்புள்ளைங்க முக்கியமா போச்சா.. உனக்கு..." என்றபடி தங்கள் பழைய வீட்டிலே தனி குடித்தனம் சென்று விட்டார். பெருசுகள் இருவரும் அங்கே தான் ஜாகை. தப்பி தவறி கூட எந்த பிள்ளைகளும் அந்தப் பக்கமாய் கால் வைத்து விட முடியாது. அவ்வளவுதான், அவர்கள் குலம் கோத்திரத்தோடு சொல்லி வசைப்பட ஆரம்பித்து விடுவார் ராசம்மா.


தன் மாமியாரின் குணமறிந்த மனோன்மணி வரும் பிள்ளைகளிடம் முன்னமே எச்சரித்து விடுவார். கிழிக்கப்படாத லக்ஷ்மணன் கோடாய் இரண்டு வீட்டிற்கு இடையே கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு இருந்தது. அதை தாண்டி ராசம்மாவும் இங்கு வருவதில்லை மதுரனையும் வெண்பாவையும் தவிர வேறு யாரும் அந்த பக்கம் செல்ல முடியாது. மீறி சென்று விட்டால் ராசம்மாவின் ருத்ர தாண்டவத்தை ஒரு வாரம் வரை தாங்க வேண்டி இருக்கும்.


இது ஊர் அறிந்த செய்தி என்பதால் யாரும் தப்பி தவறி கூட அந்த பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.


மதுரனும், துளசியும் வெண்பாவும், ராதாவும் தங்கள் பால்யத்தை ஒன்றாக ஆனந்தமாய் கழித்தனர். ராதா எட்டாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்திக் கொள்ள துளசியும், மற்றவர்களுக்கும் பள்ளி படிப்பை தொடர்ந்தனர்.


என்னதான் மாணிக்கவாசகம் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் பெண்களுக்கு ஏனோ அது எட்டாக கனியாகவே இருந்தது பெரும்பாலும் வயது வந்ததும் அவர்களது கல்வி அத்தோடு முற்றுப்பெற்றது. என்ன செய்தும் அவரால் அதை மட்டும் மாற்றவே முடியவில்லை. ஒன்று இரண்டு பெண் பிள்ளைகள் 9 10 தாண்டினாலும் கல்லூரி வரை செல்லவில்லை. அதற்குள் அவர்களுக்கு கால் கட்டு போட்டு விடுவார்கள்.


ராதா பள்ளி படிப்பை நிறுத்தினாலும் துளசி தொடர்ந்தாள். துளசியுடன் அந்த வயதில் உள்ள பெண் பிள்ளைகள் எல்லாமே தங்களது கல்வியை தொடர்ந்தனர்.


துளசியும் வெண்பாவும் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுத மதுரன் தீவிரமாய் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினான்.


தேர்வு முடிந்த இரண்டாம் நாளில் அந்த ஊரின் பெரிய வீட்டு மகனோடு ராதா ஊரைவிட்டு ஓடி இருந்தாள். இன்றைய காலத்தில் கூட காதலித்தால் சேர்த்து வைக்க படித்தவர்களே யோசிக்கிறார்கள் எனும் போது சாதித் தீயில் ஊறி இன்னும் சாதி, மதம் பாரம்பரியம் கௌரவம் என தங்களை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி அவர்களும் வெளிய வராமல், யாரையும் உள்ளேயும் அனுமதிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழும் ஊர் அது. அப்படிப்பட்ட ஒரு ஊரின் தாழ்ந்த குடியாக கருதப்படும் ராதா பெரிய வீட்டு மகன் மணிகண்டனோடு ஊரைவிட்டு ஓடிவிட ஊரே ஒன்று திரண்டு துளசியின் தாய் தந்தையை கட்டி வைத்து அவர்கள் எங்கே என கேட்டு சித்திரவதை செய்தது.


அவர்கள் எத்தனை அழுதும், புரண்டும் கூட அவர்களை விடுவிக்கவில்லை அந்த ஊர் மக்கள். ஒரு கூட்டம் ஓடிப் போனவர்களை தேடிச் சென்று விட, மாணிக்கவாசகம் ஊரிடம் என்ன பேசியும்.. துளசியின் தாய் தந்தையை அவரால் விடுவிக்க இயலவில்லை.


அவர்கள் விடுவிக்கவில்லை எனில் தான் போலீசுக்கு போக நேரும் என்று அவர் ஒரு அரசு பணியாளனாய் மிரட்டியும் கூட அவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அவரும் அதை அறிவார். என்னதான் அவர் ஆசிரியராக அந்த சமூகத்தின் செல்லரித்துப் போன பழைய கட்டுப்பெட்டித்தனங்களை மாற்ற எண்ணினாலும், ஒட்டுமொத்த ஊரையும் எதிர்த்து தனி ஒருவரால் ஏதும் செய்ய இயலவில்லை. ஆனாலும் தன் கண் முன் குடும்பம் அழிந்து போவதை அவர் விரும்பவில்லை.


காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவென அவர் சென்று விட, திரும்பி வந்து பார்க்கும் பொழுது அந்த குடும்பம் அந்த ஊரிலேயே இல்லை.


பரீட்சை முடிந்து அடுத்த நாளே தன் அத்தை செல்லம்மாவின் ஊர் திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பிய மதுரனும் வெண்பாவும் கண்டது துளசியின் எரிந்து போன குடிசையைத்தான்.


நிலைகுலைந்து போனான் மதுரன். எங்கே போனார்கள் என்னவாயிற்று என தந்தையிடம் கேட்டு அழுது அரற்றி ஓய்ந்து போனால் வெண்பா. அவருக்கும் தெரிந்தால் அல்லவா கூறுவார் அவருக்கே தெரியாத ஒன்றை என்னவென்று சொல்வார்.


ஒரு வாரம் கழித்து நடைபிணமாய் மணிகண்டன் அழைத்துவரப்பட்டான். ராதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது அந்த ஊரின் சிலரைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.

அவர்களும் பெரிய வீட்டு விசுவாசி என்பதால் விசயம் கடுகளவு கூட கசியவில்லை.


போலீசும் அந்த ஊரின் ஒர் அங்கமாகவே செய்பட மாணிக்கவாசகர்

தனி ஒருவராய் அந்த குடும்பத்தையும், ராதாவையும் தேடாத இடமில்லை. இன்றுவரை அவர்கள் யாரையும், யாரும் பார்க்கவில்லை எங்கே போனார்கள் என்ன ஆனார்கள். உயிருடன் தான் இருக்கிறார்களா என யாருக்கும் தெரியாமல் போனது.



"எங்கே இருக்க துளசி..? நிச்சயமா நீ உயிரோட தான் இருப்பேன்னு எனக்கு தெரியும்.எங்கேயடி மறைந்திருக்கிறாய்.." என அவன் மனம் உள்ளுக்குள் அழுது அரற்றியது.


காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில்,மனதில் தோன்றிய ஓர் மெல்லிய உணர்ச்சி அவனுக்குள்.ஆம்..காதல் மலர்ந்த ஒரே மாதத்தில் காதலியை தொலைத்து விட்ட காதலன் அவன்.
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
அத்தியாயம் -2


கோவை மாவட்டத்தில் கோணியம்மன் கோவில் திருவிழா களை கட்டியிருந்தது. எங்கு காணினும் மக்கள் வெள்ளம். ஊரே பூக்கோலம் பூண்டு, புத்தாடை உடுத்தி, உற்சாகத்தில் மிதந்தபடி வலம் வந்து கொண்டிருந்தனர். பக்தி பரவசத்தோடு அம்மனை தரிசிக்க ஒரு பெரும் கூட்டம் வரிசையில் காத்திருந்தது. தரிசித்த பரவசத்தில் கோயிலை விட்டு வெளியே வந்தபடி ஒரு கூட்டம். கோவிலில் உள்ள சிலைகள் அழகா இல்லை கோவிலை வலம்வரும் இந்த பெண்சிலைகள் அழகா என காண்பதற்கென்று ஒரு பெரும் கூட்டம்.


கோவை மாநகரை பொறுத்தவரை உள்ளூர் வாசிகளை விட வெளியூர் வாசிகளே அதிகமாக இருப்பர். தொழில் மாநகரமான கோவைக்கு தமிழ்நாட்டின் பல மூளை முடுக்குகளில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் குடிபெயர்ந்து வசித்து வந்தனர். பெற்றோரை விட்டு சொந்தபந்தங்களைப் பிரிந்து தன் தாய்மண்ணைவிட்டு இங்கு வந்து வேலை செய்து வாழும் இளைஞர், இளைஞிகள் அதிகம்.


அப்படி வந்த அத்தனை பேருக்கும் கோணியம்மன் திருவிழா ஒரு பெரும் கொடை. மகிழ்ச்சியோடு அத்தனையும் மறந்து தங்கள் நட்புகளோடு கைகோர்த்து சிரித்து மகிழ்ந்து வலம் வந்து கொண்டிருந்து அந்த பட்டாம்பூச்சி கூட்டங்கள்.


மதுரனும் அம்மனை தரிசிக்க வந்திருந்தான். கோவையின் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்திருந்தது. நாளை அவன் பணியில் சேர வேண்டும். தன் நண்பன் ரகுபதியும் அதே மருத்துவமனையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராய் பணியாற்ற அவனுடனேயே தங்கிக்கொள்வதென முடிவெடுத்து இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டான்.


அம்மா மனோன்மணியின் அன்பு கட்டளை , பணியில் சேர்வதற்கு முன் கோனியம்மனை தரிசித்து அவள் ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது. அதற்காகவே ரகுபதியோடு கோவிலுக்கு வந்திருந்தான்.


கல்லூரியில் படிக்கும் காலங்களில் அப்பொழுது அவர்கள் இங்கு வருவது வாடிக்கை தான் என்றாலும் இந்த திருவிழா கூட்டத்தில் இன்று வந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மதுரனுக்குள். அம்மனை மனமுருகி வேண்டி நின்றான். அவன் வேண்டுதல் எல்லாம் ஒன்றே ஒன்று தான் துளிசியை காணவேண்டும் என்பது.


இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை சோதிப்பதாய் உத்தேசம், கொஞ்சமேனும் என் மேல் இரக்கம் காட்ட கூடாதா? எங்கிருக்கிறாள் என் கண்மணி? என அம்மனை இறைஞ்சி நின்றான்.


எப்பொழுதும் கோயிலுக்கு வந்து தொழும் வேளைகளில் எல்லாம் ரகுபதி ஆச்சரியப்பட்டு தான் போவான். படிப்பு, மருத்துவம், வேலை என்று அத்தனையிலும் இவன் பார்க்கும் மதுரன் வேறு, ஆனால் கோயிலில் தெய்வத்தின் முன் மனம் உருகி நிற்கும் இந்த மதுரன் வேறு.. கண்கள் பனிக்க உள்ளம் உருகி அவன் வேண்டி நிற்கையில் இறைவா இவனுக்கு வேண்டியதை அருளேன் என ரகுபதியையும் வேண்ட வைக்கும்.


"அப்படி என்ன தான்டா வேண்டுவ..." என எப்போது கேட்டாலும் மதுரனிடம் இருந்து வரும் ஒரே பதில்


"என் உயிரை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுகிறேன்.." என்பான். அதற்கு மேல் அவன் எதுவுமே கூறியதில்லை. காதல் என்பது மட்டும் அவன் நண்பனுக்கு ஊர்ஜிதம். அதற்கு மேல் அவன் வற்புறுத்தவில்லை கோணியம்மனை மனதார வேண்டி விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தார்கள். மாலை மயங்கி இருள் கவிய தொடங்கியது. வெளியே வந்து அண்ணாந்து கோபுரத்தை நோக்கி வணங்கி விட்டு திரும்பியவனுக்கு அந்த அம்மனே வரமாக வந்தாளென ..... அது, அது துளசி தானே... அவள் அவனையே பார்ப்பதாகத் தோன்றியது. அவளே தான்... அது அவளே தான். அவன் இதயத்துடிப்பு உணர்ச்சி மிகுதியில் எகிற, மயக்கமுறும் நிலை அடையும் வேளையில் ,அருகில் இருந்த ரகுபதி அவனை தோளில் தட்டி என்னடா என கேட்கவும் ஒரு நிலைக்கு வந்தான்.அது அவள் தானே, அவளாகவே இருக்க வேண்டும் என அம்மனை வேண்டியபடி அவளை நோக்கி வேகமாக எட்டு வைத்தான்.


ஆம், அவள் என்னவள் தான் ,என் துளசி கிடைத்துவிட்டாள். பத்து வருட தவம். இதயம் படபடக்க, நடையில்

சிறுபிள்ளைகளின் துள்ளலுடன் பார்வையால் அவளை மனதில் நிறைத்துகொண்டே அவளை நோக்கி வேகமாக முன்னேறினான். கூட்டநெரிசலில் அது அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. அவளை நோக்கி முன்னேற சட்டென அவள் பின்னடைவது அவனுக்கு தெரிந்தது. ஒரு நொடி தன்னை அவள் உற்று பார்த்தது போல் தோன்றியது மதுரனுக்கு.


துளசி..! அவனையறியாமல் அவன் உதடு முனுமுனுக்க அவளை நோக்கி வேகமாகச் சென்றான். அந்த திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து அவளை நோக்கிச் செல்லும் முன் அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.


எங்கே போனாள். சுற்றும் முற்றும் தேடினான். அவள் நின்றிருந்த அந்த கடையில் "அண்ணா இப்ப பச்சகலர் புடவை கட்டின பொண்ணு இங்க இருந்தாங்களே.. அவங்க எங்க...?" என விசாரிக்க அவர் பதில் அளிக்காமல் போகவே மீண்டும் மீண்டும் அதையே கேட்டபடி சுற்றிலும் பார்வையை சுழற்ற


"ஏ தம்பி நோம்பி நேரத்துல எத்தனையோ பேரு வருவாங்க.. யாவாரத்தை பாக்காம அவங்க எங்கேன்னா பார்த்துட்டு இருப்பேன்.." என வியாபார நேரத்தில் தொந்தரவு செய்யும் அவனிடம் சலித்துக் கொண்டார்.


'அது துளசியே தான். என் துளசியேதான். எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை கூட்டத்திலும் உன்னை அடையாளம் காண முடியாமல் போகுமா துளசி. எங்கே போன...? என்னை நீ பார்த்ததை நான் பார்த்தேனே... என்னைப் பார்த்தும் ஏன் துளிசி போன...' என அரற்றியபடியே கண்கள் கலங்க வெறி பிடித்தவன் போல தேடி அலைந்தான் மதுரன். அவன் என்ன தேடுகிறான் என்று புரியாமல் அவனுடன் சேர்ந்து அலைந்தான் ரகுபதி. அவன் மதுரா, என்னடா, இருடா என்றபடி அவனை தொடர்ந்து கொண்டிருந்தான்.



மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அந்த சுற்று வட்டாரத்தில் ஒரு அங்குலம் விடாமல் துளசி.. துளசி.. என தேடியலைந்தவன் எங்கும் அவளை காணாது போகவே, "எங்கடி போன.." என வாய்விட்டு அரற்றிய படி மண்டியிட்டு கதறியவனை கண்டு பதறிப் போனான் ரகுபதி.


ஒரு படித்த இளைஞன், ஒரு மருத்துவன் நட்ட நடு வீதியில் ஒரு பெண் பெயரைச் சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுகிறான் எனின் நண்பனின் மனநிலை அவனுக்கு தெளிவாக புரிந்தது. அருகில் இருந்த கடையில் தண்ணீரை வாங்கி நண்பனுக்கு குடிக்க வைத்து எழுப்பி ஒரு ஓரமாய் கொண்டு வந்து அமர்த்தினான். தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்து விட்டான் மதுரன். அவன் கண்களில் இருந்து வடியும் கண்ணீர் நிற்கவே இல்லை. ரகுபதியும், எவ்வளவு நேரம்தான் அவன் அப்படி அழுவதை பார்த்துக் கொண்டே இருப்பான். எழுந்து சென்று இரண்டு கப்புகளில் காப்பியை வாங்கி வந்து அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு மதுரனின் தோள்களில் கை போட்டு தேற்றிய படியே "உன் துளசியை கண்டுபிடிச்சிடலாம்டா.. முதல்ல காப்பிய குடி என நண்பனை ஆறுதல் படுத்தினான் ரகுபதி. கண்களை துடைத்தபடி மெல்ல காப்பியை குடித்து முடித்தான் மதுரன். மணி இரவு பதினொன்றை தாண்டி இருக்க திருவிழா கூட்டம் கலைய தொடங்கி இருந்தது. எழுந்து காலிக் கப்புகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தன் கலைந்த தலையை சரி செய்தவாரே நடக்கத் தொடங்கினான் மதுரன்.


மீண்டும் கோயில் வாசல் வந்து நின்றபடி கோபுரத்தை நோக்கி கை உயர்த்தி வணங்கினான் 'என் துளசியை என் கண்ணுல காட்டிட்ட.. சீக்கிரம் அவளை கண்டுபிடிச்சிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..' என கண்களில் நீர் வழிய வணங்கிவிட்டு நண்பனோடு கிளம்பினான்.


வழி நெடுகிலும் ஒன்றுமே பேசாமல் மதுரன் அமர்ந்து வர ரகுபதி வண்டியை இயக்கினான். வழி நெடுக மதுரன் மௌனமாய் எதுவுமே பேசாமல் வந்தாலும், அவன் மனதுக்குள் துளசி துளசி துளசி என பேரிரைச்சல். ஒரு நொடி ஒரே ஒரு நொடி என்றாலும் கூட அவள் கண்களை நேருக்கு நேராய் கண்டது பொய்யில்லை அது உண்மைதானே. அவள் என் துளசியே தான். பின் ஏன் என்னை பார்க்காமல் மறைந்துவிட்டாள் என மீண்டும் அவன் மனம் கலங்க.. ரகுபதி வாகனத்தை மெதுவாகவே இயக்கியதால் மதுரனின் கண்ணீர் துளி வழிந்து அவன் மேல் படவும் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான். அமைதியாய் இறங்கி தன்னிலைக்கு வர முடியாமல் தவிக்கும் நண்பனை கண்டு கோபம் கொண்டான்.


"என்னதான்டா உன் பிரச்சனை சொல்லி தான் தொலையேன். என்னால உன்னை இப்படி பார்க்க முடியல டா..


"துளசிடா... என் துளசிடா.. பத்து வருசமாச்சுடா.. தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன்.‌இன்னைக்கு, இன்னைக்கு அவளை பார்த்தேன். ஆனா மறுபடியும் மாயமா மறைஞ்சிட்டாளேடா... என்னால தாங்கமுடியல ரகு... வாய் விட்டு அரற்றியவனை சமாதானம் செய்ய இயலாமல் அவனையே பார்த்திருந்தான்.


பத்து வருடங்களுக்கு முன் துளசி பட்டாம்பூச்சியாய் வளைய வந்த காலங்கள் கண்முன் தோன்றின.


அன்று ஊரில் அம்மனுக்கு காப்புகட்டி திருவிழா தொடங்கி இருந்தது. எப்பொழுதும் போல வெண்பாவுடன் சேர்த்து துளசிக்கும் மனோன்மணி புத்தாடை எடுத்து வைத்திருக்க புத்தம் புது மலராய் பாவாடை தாவணியில் அன்று தான் முதன் முதலாய் துளசியை கண்டான். பளிச்சென மின்னும் கண்களில் அன்று புதிதாய் ஓர் நாணம். அழகான இரட்டைபின்னலில் அடர் நீல நிற பாவடையில் ரோஜாநிற பட்டு சரிகை. அதே வண்ணத்தில் ரவிக்கை தாவணி அவளுக்கு பாந்தமாய் பொருந்திப் போக அத்தனை அழகாயிருந்தாள் அவள். அதே டிசைனில் பச்சை வண்ண பட்டில் அதே ரோஜா நிற ரவிக்கை தாவணி வெண்பாவுக்கு இருவருக்கும் தலைநிறைய பூவை சூட்டி நெட்டி முறித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார் மனோன்மணி.


"நாய குளிப்பாட்டி நடுவூட்ல கொண்டு வந்து கட்டுங்கடா... அது வாலயும் ஆட்டும் மூஞ்சயும் நக்கும்.." என ராசம்மாள் நொடித்துக் கொண்டு போக துளசியின் முகம் வாடியது கண்டு மதுரனின் மனம் வருந்தியது.


எல்லோரையும் சேர்த்து இழுத்துக் கொண்டு மனோன்மணி கோயிலுக்கு கிளம்ப திருவிழா கொண்டாட்டத்தில் ராசம்மாளின் கடுஞ்சொற்கள் காற்றோடு கரைந்துவிட்டிருந்தது.


வெண்பாவோடும், மதுரனோடும் வழக்கம் போல துளசி வர,

கண்ணாடி வளையல்கள் குலுங்க அந்த பாவாடை தாவணியில் வளைய வந்தது ,அத்தனை நாட்கள் இல்லாது மதுரனின் மனதினில் ஏதோ ஒரு வித இனம் புரியாத இன்ப அவஸ்த்தையை உண்டாக்கியது. அவளது துள்ளல் நடையும், சிரிப்பும் எல்லாமே அவன் சிறு வயது முதலே கண்டதுதான். ஆனால் இன்று எல்லாமே புதிதாகத் தோன்றியது அவனுக்கு.


"துளசி,நீ இத்தனை அழகா..." என கண்ணெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். முதன் முதலாய் காதல் என்னும் மெல்லிய உணர்வு அவனுக்குள் முளைக்கத் தொடங்கியது.
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
அத்தியாயம் - 3


துளசி கிராமத்து தேவதையின் எளிய சாயல். ஆம் அவளை அப்படித்தான் சொல்லவேண்டும். மனோன்மணிக்கு எப்பொழுதும் அப்படியே தோன்றும். "லட்சணமா இருக்கேடி கண்ணு.." என்றபடியே அழகாய் மை தீட்டி விடுவார்.

துளசி எப்பொழுதும் படிப்பில் படுசுட்டி. கற்பூரபுத்தி ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் பதியவைத்துக் கொள்வாள். மாணிக்கவாசகர் சொல்லிதருவதை எல்லாம் சட்டென பிடித்துக் கொண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றுவிடுவாள். எல்லோருக்கும் ஒன்றாய்த் தான் பாடம் நடத்துவார். ஆனால் துளசி எப்போதும் புரிந்து படிப்பதில் புத்திசாலி. படிப்பு ஒன்றே நம் தலையெழுத்தை மாற்றும் என்ற மாணிக்கவாசகரின் சொல்லை மந்திரமாய் கொண்டு படிக்கலானாள்.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற சொலவடை ஒன்று உண்டு. அது ஊரின் தாழ்ந்த குடியாக கருதபடும் வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுந்தும்.

"ஏலேய் துளசி... இந்தா போற போக்குல இந்த கேவூர அந்த மூனாவது தெரு கோமதி வூட்ல கொடுத்துட்டு போய்டு.."என்பாள் சம்பூரணம்.

ஏய் இந்தாடி சின்னச்சாமி மவளே எங்க அவ்வளவு வெரசா போறவ.. பள்ளிகோடத்துக்கா.. ஆமா நீ படிச்சி என்னத்த கிழிக்கப் போற ... எப்படியும் உங்க ஆத்தா அப்பனோட சேர்ந்து அழுக்கத்தானே வெளுக்கப் போறவ.. கொஞ்சம் பொறு இந்தா இந்த சோத்து போசிய போற போக்குல மேட்டாங்காட்டால இருக்க அப்புச்சிட்ட குடுத்துட்டு போ..." என்று ஏவுவாள் இரண்டாவது தெரு ஞானாம்பா.

இந்தாடீ... போற போக்குல மணியாரு வூட்ல இந்த துணிய குடுத்துட்டு போ என கூறும் அம்மாவின் சொல்லை தட்டமுடியாமல் துணியை எடுத்துச் சென்றால் அங்கிருந்து அவ்வளவு சுலபத்தில் அவள் நகர்ந்துவிட முடியாதபடி அவள் மீது பணிச் சுமைகள் விழும். சும்மா போகும் கழுதைதானே கொஞ்சம் பொதியும் சுமக்கட்டுமே என்ற எண்ணம். எளியவரை ஏய்க்கும் மேல்தட்டு புத்தி. தன்னைவிட இளைத்தவரென்றால் என்ன வேண்டுமாலும் செய்துபார்க்கலாம் என்ற பொதுபுத்தி எல்லோரிடமும் மலிந்து கிடந்தது.

துளசி தன் குலத்தொழிலை என்றுமே தலைகுனிவாக எண்ணியதோ , சுணக்கம் காட்டியதோ இல்லை. ஆனால் ஊரில் உள்ள நண்டுசிண்டுகள் கூட மரியாதையில்லாமல் ஏவல் செய்யும் போது ஏன் என்ற கேள்வி அவளுள் தோன்றும். அதுவும் வயதில் மூத்த தன் அன்னை, தந்தையை அவளைவிட சிறியவர்கள் கூட பெயர் சொல்லி அழைத்து வேலை ஏவும் போது புரியாத வயதிலேயே அத்தனை ஆத்திரம் தோன்றும்.

"ஏம்பா எல்லாரும் தான் வேலை செய்யறாங்க ஆனா யாரையும் மரியாதை இல்லாம நடத்துறதில்ல. நம்மளை மட்டும் கேவலமா நெனக்கிறாங்க... ஆனா ஊருக்குன்னா மட்டும் உடனே கூப்டு வேலை வாங்கறாங்க..." என்று அறியாது கேட்டபோது

"அவுக ஏவல் சொல்ற சாதி நாம அந்த ஏவல செய்யுற சாதி சாமி..." என கூறிய போது அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் அவள் வளர, வளர இந்த சமூகத்தின் தீண்டாமைகளை நித்தம், நித்தம் அனுபவித்த போது அதை உணர்ந்தாள். மனிதனை மனிதன் அடிமையாக்கும் ஈனச்செயலுக்கு சாதி என்றொரு பெயர் உண்டென்று.

அத்தனைக்கும் மாற்றாய் கல்வி ஒன்றே இருக்கும் என மாணக்கவாசகரின் போதனை அவளை பதின்ம வயதிலேயே வைராக்கியமாய் படிக்க உதவியது. அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் மனோன்மணியும் மாணிக்கவாசகமும் மட்டுமே ஒரே ஆறுதல்.

தன் தாய் தந்தையின் வளர்ப்பினாலோ என்னவோ வெண்பாவும் மதுரனும் எப்பொழுதும் சாதி வேறுபாடு பார்த்ததே இல்லை அவர்களை பொருத்தவரை துளசியும் ராதாவும் மற்றவர்களும் எல்லோரும் ஒன்று என்று எண்ணம்.

சிறு வயது முதலே தன்னுடன் வளர்ந்ததாலேயே துளசியின் மீது மதுரனுக்கு எப்போதும் ஒரு பிரியம் உண்டு. அதுவும் அவளுக்கு 10 12 வயது இருக்கும் போது வெண்பாவை காப்பாற்றும் பொருட்டு ஒரு கருந்தேளை தன் கையால் அடித்து நசுக்கி இருந்தாள் துளசி. அதையும் மீறி தேள் துளசியை கடித்ததில் விஷம் பரவி இரண்டு நாட்களாக வலியில் துடித்ததை பார்க்க பார்க்க மதுரனால் தாங்க முடியவில்லை . தன் தங்கைக்கு வந்த ஆபத்தை ஏற்றுக் கொண்டு வலியில் துடித்த அவள் மீது இன்னும் அதிகம் பிரியமாகி போனது மதுரனுக்கு.

ஆனால் இது எதையுமே அவன் வெளிப்படையாக காட்டியதில்லை வழக்கம் போல படிப்பும் விளையாட்டுமாய் இருந்த அவர்கள் வாழ்வில் ,அவள் தாவணியிட்ட நாள் முதலாய் கூட்டுப் புழுவில் இருந்து வெளிவரும் பட்டாம்பூச்சியாக மாறி இருந்தது அவன் மனம்.

தன்னை மீறி தன் கண்கள் அவளைத் தொடர்வதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த இளம் பருவத்திற்கே உரிய பரபரப்பும், உற்சாகமும், குதூகலமும் அவன் மனதில். என்னவென்று புரியாத ஒரு உணர்வுடன் அவளைக் கண்டாலே மனதில் எழும் புத்துணர்வும் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுத்தது. பாடத்தில் வரும் தலைவன் தலைவி பற்றிய குறுந்தொகையும் அகநானூறும், புறநானூறும் அவனுக்கு இனிமையாய் இருந்தது.


கடந்த ஒரு மாத காலமாக அவன் துளசியை பார்க்காமல் ஒரு நாளும் நிறையாததை போல் உணர்ந்தான். இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென இப்போது ஏன் இந்த தவிப்பு என்ற அவன் கேள்விக்கு இதுதான் காதல் என்றவன் மனம் ஓங்கியுறைத்தது. இதெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் அந்த வயதில் அப்பொழுது தோன்றவே இல்லை.


தன் தங்கையின் சிநேகிதியாய் அவளோடு இருந்த பிரியம் எப்போது எந்த கணத்தில் தன் உள்ளம் கவர்ந்தவளானால் என்று மதுரனால் அறியமுடியவில்லை.
வெகுளியாய் வலம் வரும் துளசியின் பின்னே கன்றுகுட்டியாய் இவன் மனம் துள்ளி வந்தது. அவள் இருக்கும் நேரங்களில் எல்லாம் இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் போட்டி போட்டு பாடிக்கொண்டிருப்பார்கள்.

தங்கைக்காய் வளையல், பொட்டு, கம்மல் என வாங்கி வரலானான். அவளோடு சேர்த்து துளசிக்கும். தவறு தவறு, துளசிக்கு வாங்கி கொடுக்கும் சாக்கில் வெண்பாவுக்கும்.

ஆனால் இந்த மகிழ்ச்சி அத்தனையும் அந்த ஒரு இரவில் முடிவுக்கு வந்தது.


ராதாவும், மணிகண்டனும் ஊரைவிட்டு ஓடியதும், அதனால் துளசி குடும்பமே கண்காணாமல் போனதும் அதன் பின் அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் போனது மதுரனை மட்டுமல்ல மாணிக்கவாசகரையும் நிலைகுலையச் செய்திருந்தது.

அன்று முதல் மாணிக்கவாசகர் ஊருக்கு தெரியாமலும், மதுரன் தன் தந்தை கூட அறியாமலும் தேடிக்கொண்டு தானிருந்தனர். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

சிறு வயது முதல் தன்னோடு ஓடியாடி விளையாடிவள், தோழியாய் தன் வீட்டில் ஒருத்தியாய் வளைய வந்தவள், முதல் காதலை தனக்குள் விதைத்தவள் மாயமாய் மறைந்து போய்விட்டாள். அவள் அருகிலேயே இருந்திருந்தால் கூட அவள் மீது இவ்வளவு நேசம் உண்டாகி இருக்காதோ..‌ ஆனால் இந்த நெடிய பத்து வருடங்களில் அவள் மீதான நேசம் நாளுக்கு நாள் அதிகரித்ததே ஒழிய குறையவேயில்லை.

மதுரன் கூறியதை கேட்டு அதிசயித்து நின்றான் ரகு. சிறு வயதில் அனைவருக்குமே ஏற்படும் ஒரு முதல் காதலுக்காக ஒருவன் பத்து வருடங்கள் இப்படி தவம் போல் காத்திருக்க முடியுமா...? அதுவும் அவள் காதலித்தாளா என்பது கூட தெரியாமல். முதலில் அவளுக்கு காதல் என்றால் என்னவென்றே அறியாத வயதில்... இது எப்படி சாத்தியம் என்று தன் நண்பனிடம் வினவினான் ரகு.

ரகு.. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசி பழகி ஒன்னா கை கோர்த்து நடந்தா தான் காதலா... ஒருத்தரை பார்க்க வேணா.. பேச வேணா... பழகவேணா... ஆனா அவங்க நினைவுகளை மனசுக்குள்ள வெச்சிட்டு அவங்களோடவே ஒரு வாழ்க்கை வாழ்வோம் பாரு அதுவும் காதல் தான். அது நடக்குமா நடக்காதான்னு எல்லாம் தெரியாது. எதிர்காலத்துல பார்ப்போமா இல்லையான்னு கூட தெரியாது ஆனா நம்ம மனசுக்குள்ள எப்பவும் அவங்களுக்காக ஒரு வேண்டுதல் இருக்கும். அவங்களை நெனச்சாலே மனசுக்குள்ள ஒரு பூ பூக்கும். முகம் தானா புன்னகையை ஏந்தி நிற்கும். இறகு இல்லாமலே பறக்க ஆரம்பிப்போம். அவங்களுக்காக எதுவேணா செய்யலாம்னு ஒரு உறுதி வரும். அதுக்கு அவங்க கூட இருக்கனும்னு அவசியமில்ல.." என்ற நண்பனை வியப்போடு பார்த்தான்.

சற்று நேரம் அவனையே பார்த்திருந்தவன், " ஆமாடா மச்சான், நீ ஆர்த்தோபீடிக் தானே படிச்சே... சைக்காலஜில எதுவும் டாக்டரேட் பண்றியா என்ன", என அந்த இறுக்கமான சூழ்நிலையை சகஜமாக்க முயல...
துளசியின் நினைவுகளை அசைபோட்டு அவளை பற்றி பேசியதாலோ என்னவோ மதுரன் சற்றே தன்னிலைக்கு வந்திருந்தான்.

"டேய்..." என மதுரன் முறைக்க

"பின்ன என்னடா... பத்து வருசத்துல அவளுக்கு கல்யாணம் ஆகி புள்ளகுட்டி கூட பொறந்திருக்கலாம். அப்போ பார்த்த ஒருத்திய லவ் பண்றேன்னு சொன்னதில்லாம பூவே உனக்காக விஜய் மாதிரி
டயலாக்கெல்லாம் பேசிட்டு இருக்க..." என்றான்.


ஒரு வேளை ரகு கூறியது போல் அவளுக்கு திருமணம் நடந்திருக்குமா..? குழந்தைகள் பிறந்திருக்குமா...? ஆனால் சிலமணிநேரங்களுக்கு முன் பார்த்த அந்த தீர்க்கமான கண்கள் அவனுக்கு வேறு எதையோ உணர்த்துவது போலல்லவா இருந்தது. என்ன அது. நிச்சயமாக அந்த பார்வையில் காதலும் இல்லை, ஏக்கமும் இல்லை. நீண்ட நெடிய
காத்திருப்பிற்கு பின் ஒருவரை கண்ட பரபரப்போ பரிதவிப்போ கூட இல்லை. மாறாக அவளது பார்வையின் பொருள் என்ன..? குழம்பிப்போனான் மதுரன். மீண்டும் நண்பனின் முகம் மாறுவது கண்டு

"டேய் யப்பா ராசா... பசிக்குதுடா... வயிறு கிள்ளுது. காலைல டூட்டிக்கு போகனும். போன போக்குல ஏதாவது வயித்துக்கு போட்டு போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்கலாம் வர்றியா.." என கெஞ்ச

ஒருவாறாய் சமாதானமாகி வழியில் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.


பரபரப்பான காலை வேளையில் அந்த பிரபல மருத்துவமனையின் எலும்புமூட்டியல் சிறப்பு மருத்துவராக பணியில் அமர்ந்தான் மதுரன். மருத்துவமனையின் உள்ளே வந்துவிட்டால் அவன் ஒரு சிறந்த மருத்துவன். நோயாளிகளின் தன்மை அறிந்து அவர்களுக்கேற்றபடி அவர்கள் போக்கில் பேசி வைத்தியம் பார்ப்பதில் சமர்த்தன். காலை முதல் புறநோயாளிகளை பார்த்துவிட்டு பணியில் தன்னோடு மூத்த மருத்துவர் ஒருவர் உள்நோயாளிகள் பிரிவில் பார்வையிட செல்ல அவரோடு பேசியபடியே அவனும் உள்நோயாளிகள் பிரிவில் நுழைந்தான். மருத்துவர்களாய் தங்களுக்குள் விவாதித்தபடி உள்ளே நுழைந்தவர்களை

குட் ஆப்டர்நூன் டாக்டர் என்ற குரல் கலைத்தது.

அங்கே ஆகாய நீல நிற சீருடையும் தூக்கி போடபட்ட கொண்டையில் அதே நீல நிற சீருடை தொப்பியோடு அவள் நின்றிருந்தாள்.

அது துளசி. அவனுக்குள் லட்சோபலட்சம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன. அவளே தான். அது அவன் துளசியே தான். அவன் மனம் பரபரத்தது. அவள் கைகளை பிடித்துக்கொண்டு துளசி என கதறவேண்டும் போல மனம் துடித்தது. ஆனால் அங்கே உள்ள சூழல் அவனை சற்றே நிதானமாக்கியது. ஆனால் அவளோ அவனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஏன்..? அது துளசியே தான். அதில் அவனுக்கு எந்த ஐயமும் இல்லை. அவனோடு சேர்ந்து விளையாடி அவன் வீட்டில் செல்லபிள்ளையாய் வளர்ந்த அவள் முகம் அத்தனை எளிதில் அவனுக்கு மறந்துவிடக்கூடியதா...?

அதே முகம், அதே கண்கள், ஆனால் அந்த கண்களில் எந்தவித சலனமும் இல்லை. இன்னும் சற்றே கறுத்துவிட்டாளோ என்று தோன்றும் அளவிற்கு சற்றே கறுத்து மெலிந்திருந்தாள். இதயம் படபடக்க உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவளையே விழியெடுக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருக்க

குட் ஆஃப்டர்நூன் ஏஞ்சலின் என்றவாரே மூத்தமருத்துவர் நோயாளிகளை கவனித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அவருக்கான பதில்களை அமைதியாக கொடுத்தபடி உடன் நடந்தாள் ஏஞ்சலின்.

ஏஞ்சலின் ஆ .... இவள் என் துளசி ... என் துளசி எப்போது ஏஞ்சலின் ஆனாள். ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் மதுரன்.


தொடர்வார்கள்...
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
அத்தியாயம் - 4

ஏஞ்சலினா... நிச்சயமாய் இவள் ஏஞ்சலின் இல்லை. இவள் என் துளசி. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன அவள் முகம் எனக்கு மறந்துவிடுமா என்ன..? முகம் மறந்தால் கூட இந்த உணர்வு. அவளைக் கண்டது முதல் உள்ளமெல்லாம் சிலிர்த்து என்னுள் பூத்து நிற்கும் இந்த மகிழ்ச்சி இதெல்லாம் இன்னொரு பெண்ணை கண்டால் ஏற்படுமா என்ன..? இவள் நிச்சயமாக துளசியேதான் என எண்ணியபடி
அவள் பெயர்பட்டியை அவன் அவசரமாக நோக்க அதில் ஏஞ்சலின் ரோஸ் பி.எஸ்ஸி நர்ஸிங் என்று குறிப்பிட்டிருந்தது.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நடப்பவை எல்லாம் அவனுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனுக்கு ஒன்று மட்டும் உரைத்தது. அவள் இவன் புறம் திரும்பவேயில்லை. ஏதோ மூன்றாவது மனிதனை காண்பது போல் கூட அவள் தன்னை நடத்தவில்லை. தன்னியல்பாய் நோயாளிகளின் உடல்நிலை பற்றி எடுத்துரைத்து அதற்கு மருத்துவர் கூறும் மருந்துக்களைக் குறித்தபடி தன் பணியில் கருமமே கண்ணாயிருந்தாள்.

சில நிமிடங்களில் மதுரன் தன்னை இயல்புக்கு கொண்டுவந்தான். இது மருத்துவமனை. இங்கே தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை எப்படியும் துளசியை கண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி அவன் உள்ளம் முழுவதும் நிரம்பி வழிந்தது அவளை கண்களால் அளந்து கொண்டே மூத்த மருத்துவர் நோயாளிகளை பரிசோதித்து விட்டு அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துக் கொண்டிருந்தான். அந்த உட் நோயாளிகள் பிரிவு முழுவதும் பார்த்துவிட்டு தேவையான நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளையும் அறிவுரைகளையும் வழங்கிவிட்டு திரும்பும் போது அங்கிருக்கும் பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு மதுரனை அறிமுகம் செய்தார் மூத்த மருத்துவரான டாக்டர் கார்த்திக்.

சிஸ்டர்ஸ் இவர் தமிழ்மதுரன் ஆர்த்தோபீடிக். இன்னிலிருந்து இங்க ஒரு சார்ஜ் எடுத்து இருக்காரு. என்று அவனை அறிமுகம் செய்தவர்.

இவங்க ஏஞ்சலின் ரோஸ் இந்த டிபார்ட்மெண்ட் ஹெட்நர்ஸ். இங்க எது தேவைன்னாலும் எந்த சந்தேகம்னாலாம் ஏஞ்சலினை கேட்டுக்கலாம் டாக்டர். என சுருக்கமாய் தன் அறிமுகத்தை முடித்தார் டாக்டர். கார்த்திக்.

"ஹாய் ஏஞ்சலின்.." என்றவன் அந்த ஏஞ்சலின் என்ற பெயரை சறாறே அழுத்தமாய் உச்சரித்தானோ.

அவளும் பதிலுக்கு ஹாய் டாக்டர் என்றவள் மருந்துக்கு கூட சிரிக்கவில்லை என்பதை மனதில் குறித்துக்கொண்டான். மற்றவர்களையும் அறிமுகபடுத்திக்கொண்டு அவர்கள் கிளம்ப ஒரு நீண்ட பெருமூச்சோடு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஏஞ்சலின்.

அவள் அப்படி அமர்வதை அவளறியாமல் பார்த்துவிட்டே சென்றான் மதுரன். தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவன் மனம் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தது என் துளசி கிடைத்து விட்டாள். என் பொக்கிஷம் எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது. இத்தனை நாட்கள் இங்கே எங்கே என ஏங்கி தவித்து தேடிக் கொண்டிருந்தவள் இன்று கண்ணார கண்டு விட்டேன் என மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தாலும் ஏன் என்னை தெரிந்ததாய் அவள் காட்டிக் கொள்ளவில்லை துளசி எப்படி ஏஞ்சலின் ஆனால் பார்வையால் கூட தன்னை தெரிந்தது போல் அவள் காட்டிக் கொள்ளவில்லையே என்னவாக இருக்கும் என்னை மறந்து விட்டாயா பத்து வருடங்களை அவள் இல்லாமல் நான் தவித்த தவிப்பு ஒவ்வொரு கணமும் அவளைப் பற்றியே எண்ணி மறுகி கொண்டிருக்கிறேனே என்னை பற்றி ஒரு சிறு நினைவு கூடவா அவளுக்கு இல்லாமல் போயிருக்கும் வெண்பாவையும், என்னையும், அம்மாவையும், அப்பாவையும் அவ்வளவு சீக்கிரத்தில் அவள் மறந்து விட முடியுமா...? ஏன்...?எதனால்..? என்ன..? என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுள்.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன். துளசி கிடைச்சிட்டா... இனி எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். அவ எந்த பேர்ல இருந்தாலும் அவ என் துளசிதான். அதுல எந்த மாற்றமும் இல்லை என்று எண்ணியபடியே தன் நண்பனைத் தேடிச் சென்றான்.

மதிய உணவு இடைவெளிக்காய் அவனோடு கேன்டீன் சென்றவன் விசயத்தை விளக்க..

என்னடா சொல்ற இங்கயா... அதுவும் உன் டிபார்ட்மெண்ட்லயேவா... நல்லா பார்த்தியா அது துளசி தானா.. என சந்தேகத்தோடனேயே கேட்டான்.

"ஆமா டா அது துளசிதான். ஆனா..." என இழுத்தவன் அவள் பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட


சற்றே யோசித்த ரகுபதி நீ சொன்னதை வெச்சு பாக்கறப்ப அவ தன்னை யாரும் அடையாளம் தெரிஞ்ச்சிக்ககூடாதுன்னு கூட பேரை மாத்தி வெச்சிருக்கலாம்ல என்று கூற மதுரனுக்கும் அது சரியென்றேபட்டது.


"ஆனா அது உண்மைலயே துளசிதானா...." என மீண்டும் சந்தேகத்துடன் வினவினான் ரகு.

கோபத்தோடு தன்னை நிமிர்ந்து பார்த்தவனை சரி..சரி... இந்த காணமா போனவங்களை கண்டுபிடிக்கற மாதிரி, குடும்ப பாட்டு, குடும்ப மச்சம்னு ஏதாவது இருக்கா உன் துளசிக்கு என அவன் விளையாட்டாய் கிண்டலடிக்க

துள்ளி எழுந்தான் மதுரன் அவனையும் இழுத்துக்கொண்டு எலும்புமூட்டியல் வார்டு நோக்கி வரும்போதே ரகு துளசிக்கு வலது கையில் சுண்டுவிரலுக்கு அடுத்து குட்டியா ஒரு ஆறாம் விரல் உண்டு. வெண்பாவுக்கு அது ரொம்ப புடிக்கும். அவளோட இருக்கும் போது எப்பவும் அந்த குட்டிவிரலை பிடிச்சிட்டு விளையாடிட்டேதான் பேசுவா. என கண்களில் புதுவிதமான பரபரப்போடு வேகமாக நடையோடே நண்பனிடம் கூறினான்.


"ஹேய் நான் விளையாட்டா கேட்டேன்டா நீ நிஜம்மாலுமே அப்படி ஒரு அடையாளம் இருக்குன்னு சொல்ற..." என ஆச்சர்யத்தோடு அவனோடு உடன் நடந்தபடியே கூறினான்.

அவள் தன் துளசிதான் என்று
நண்பனின் சந்தேகமற நிருபிக்கவேண்டுமென்ற ஆவல் ஒருபுறமும், அவளுக்கு தன்னைத் தெரிவித்துவிடவேண்டாமென்ற தவிப்பு ஒருபுறமுமாய் வார்டை அணுகினான்‌.

உள்ளே நுழையும் போதே ஒரு நோயாளியின் அறையில் இருந்து அவள் வெளியே வருவதை அவன் பார்த்துவிட்டான்.


பரபரப்பாய் அருகில் வந்தவள் "எஸ் டாக்டர்..." என தன் சீருடையின் பாக்கெட்டினுள் தன் கைகையை நுழைத்தவாரே அவர்களை எதிர்கொண்டாள் ஏஞ்சலின்.

நீ.... நீங்க துளசி தானே... என்றான் சற்றே தவிப்புடன்.

துளசியா... நான் ஏஞ்சலின் டாக்டர் நீங்க வேற யாரோன்னு நெனச்சு என்ட்ட பேசறீங்க...என்றாள் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமலே.


அவன் உறுதியாய் அவள் முகத்தை பார்த்தவாறே இல்ல நீ துளசி தான். என் துளசியை எனக்கு தெரியாதா என்றவாறே அவள் கையை காட்டி அவளை ஊர்ஜிதபடுத்த எண்ணி அவள் கையைப் பற்ற..

சட்டென கையை பற்றியதும் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது. சுற்றிலும் பார்த்தாள். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுகிறாளாவேன மதுரன் எண்ணினான்.

கையை விடுவிக்க முயன்று தோற்றவாறே

"ப்ளீஸ் டாக்டர் விடுங்க.." என்றாள்.

"நோ... நீ என் துளசி தானே.. பின்னே ஏன் ஏஞ்சலின்னு ஏமாத்துற.." என கேள்வி எழுப்ப


அவள் முகம் கடுக்க தன் கையை உதறி "ச்சீ கையைவிடு.." என்றபடி விடுவித்தவள் கரம் பளாரென அவன் கன்னத்தை பதம் பார்த்தது .

சட்டென அவன் காதுகள் அடைத்து உலகமே நிசப்தமானது போல் இருந்தது அவனுக்கு. கன்னத்தை பிடித்தபடி ஒரு நொடி தள்ளாடி நின்றவனை "தமிழ்.." என்றபடி ஓடி வந்து தாங்கி நின்றான் ரகுபதி.

"ஏய்..." என ரகுபதி முஷ்டியை இறுக்க அவனை அடக்கியபடி

ஏன் துளசி நான் உன்னை தொடக்கூடாதா.. என ஏக்கமாக கேட்டவனிடம்

"யார் நீ.." என்றாள் அவள் உக்கிரகாளியாய் மாறி. கனல் வீசிடும் வார்த்தைகளால் அவனைக் கேட்டது அவள் தான் என நம்பமுடியவில்லை அவனால்.

"துளசி... என்னையா யார்ன்னு கேட்கற.." அவன் உடல் இறுகியது.

"உன்னைத் தான் கேட்கிறேன். யார் நீ.." என அதை உக்கிரத்தோடு மீண்டும் அவள் நாக்கு அமிலத்தை துப்பியது.

அவன் முகம் கறுத்து, உடல் இறுகி அவளையே பார்த்திருக்க அவனைத் துளியும் கவனிக்காது, அங்கு அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கூட தெரியாதது போல் முகத்தில் அதே உக்கிரம் தாண்டவமாட, அதே நேரம் தன்னியல்பாய் அவள் பணிகளை பரபரப்பாய் தொடர்ந்து கொண்டிருப்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அவன் கண்கள் அவளைவிட்ட நகரவேயில்லை. நடந்ததை எல்லாம் கண்ட ரகு அவன் பார்வை அவளை விட்டு நகராது இருப்பதை கண்டவன் நண்பன் தோள் தொட மதுரனோ அவளை ஏறிட்டு காட்டினான். மதுரனின் குறிப்பறிந்து அவன் ஏஞ்சலினை நோக்க வேலை செய்து கொண்டிருந்தவனின் கையில் அந்த ஆறாம் விரலைக் கண்டான்.

மதுரன் இன்னுமும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளோ அங்கே எதுவுமே நடக்கவில்லை.. தன்னருகே யாருமே இல்லை எனும் விதமாய் தன் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தாள்.

"துளசி.." என மீண்டும் அழைத்தவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள் ஏஞ்சலின். "டாக்டர்... ப்ளீஸ் உங்க ப்ரொபஷன்க்கு நான் மரியாதை தர்றேன். தயவு செய்து கிளம்புங்க... என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க.." என்றாள் அடக்கப்பட்ட சினத்தோடு.

"நீங்க ஏஞ்சலின்னா... உங்களுக்கு ஏன் என்னை பார்த்து இவ்வளவு கோபம்.." என்றவனை ஏறிட்டு பார்த்தவள்

"ஒரு பொண்ண கையபுடிச்சு இழுத்தா சிரிச்சிட்டே கூட வருவாங்களா டாக்டர்.." என்றாள் அதே கோபத்தோடு



"தமிழ்.. வா.." என அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றான் ரகுபதி.

"நிச்சயம் நீ துளசிதான்..." என்றான் உறுதியோடு

கையில் இருந்த பைலை கோபத்தோடு பட்டென்று வைத்தவாறே ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையை சத்தமில்லாமல் உதிர்த்தாள் ஏஞ்சலின்.

அதற்கு மேல் மதுரனை அங்கே நிற்கவிடவில்லை ரகுபதி. நேராக கேண்டீன் இழுத்து வந்தான். அவனை அமரச்செய்துவிட்டு இரண்டு காபியை ஆர்டர் கொடுத்து விட்டு நண்பனிடம் வந்தான்.

"சோ... இது துளசி தான்னு கன்பார்மா சொல்றியா... ?"


"ம்.. அவளே தான்... ஆனா என்னை ஏன்டா தெரியாத மாதிரி நடந்துக்கனும். நான் என்ன செய்தேன்..." அவளின் செயலுக்கு காரணம் தெரியாமல் புலம்பினான்.

"நிஜம்மாவே உன்னை அடையாளம் தெரியலயோ என்னவோ... இல்ல அவளை போல உருவ ஒற்றுமை இருக்க வேற யாரோவா கூட இருக்கலாம்ல... என்றவனை கோபத்தோடு நோக்கினான் மதுரன்.

கொஞ்சமாவது படிச்ச டாக்டர் மாதிரி பேசுடா... ஒரே மாதிரி சாயல் கூட இருக்கலாம். ஒரு மாதிரி ஆறாவது விரலுமா இருக்கும்..." என்றான் கோபம் குறையாமலேயே

"இப்பத்தான் நாம டாக்டர்ஸ்ஸூன்னு ஞாபகம் வருதா உனக்கு. அவ வேற யாரோவா இருந்தா கொஞ்ச நேரத்துல உன் சீட் கிழிஞ்சிடும் டாக்டர். தமிழ்மதுரன்.."


"ஏன்..." என்றான் புரியாமலேயே

"ஏனா... என்ன டாக்டர் ஒரு ஸ்டாப்ப கைய புடிச்சி இழுத்திருக்கீங்க... அவங்க மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைண்ட் செய்யமாட்டாங்களா..."

"ஓஓ... ஆமால்ல... ஆனா அவ கம்ப்ளைண்ட் செய்யமாட்டா பார்க்கறியா.." என சவால் விடும் தொணியில் கேட்டான் மதுரன்.


"ஓகே... அவ கம்ப்ளைன்ட் செய்தா அவ ஏஞ்சலின் நீ ஒத்துக்கறியா...."

"அவ துளசிதான்... நிச்சயமா அவ கம்ப்ளைண்ட் செய்யமாட்டா... வேணா பார்.. என்றான் உறுதியாக

"எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல மேனேஜ்மெண்ட்லேர்ந்து கூப்ட போறாங்க... உன் கூட வந்த பாவத்துக்கு உன்னோட சேர்ந்து எனக்கும் ஆப்பு வெக்க போற அது தான் நடக்கப் போகுது பாரு..." என்றான் முறைத்த மதுரனை கிண்டலாய் பார்த்தபடியே

உனக்கு அவளை பற்றி தெரியாதுடா... என்றபடியே அவளது நினைவுகளில் மூழ்கி போனான்.

தொடர்வார்கள்....‌
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
மதுர துளசி edited

அத்தியாயம் 5


நினைவுகள் தான் எத்தனை சுகமானது அதன் உள்ளே முற்றிலுமாய் மூழ்கி இன்பம் தேடுவதும் அதனுள்ளே தன்னைத் தொலைத்து துன்பத்தில் உழல்வதும் ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கை பொறுத்ததே. மகிழ்ந்திருக்கும் வேலைகளில் இன்பமான நினைவுகளை அசை போடுவதும், விரக்தியாய் இருக்கும் வேலைகளில் துயரமான நினைவுகளை எண்ணி துன்பப்படுவதும் தான் மனித மனங்களின் இயல்பு.



துளசியின் நினைவுகளில் மூழ்கிப் போய் இருந்தான் மதுரன். அவளது கள்ளம் இல்லா மனமும், குழந்தையாய் அவளுடன் துள்ளித் திரிந்த நாட்களும், தோழமையாய் விளையாடிய நினைவுகளும், முதல் காதலை அவன் உணர்ந்த இனிய தருணங்களையும் எண்ணி அவன் மனம் லேசாகியிருக்க மேசை மேலிருந்த அவன் அலைபேசி அந்த நினைவுகளை அந்தரத்தில் நிறுத்தி அவனை நடப்புக்கு கொண்டு வந்தது.


மருத்துவமனை மேனேஜ்மென்டில் இருந்து அவனுக்கு அழைப்பு வர அதை கண்ட இரு நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் . எடு என்பது போல ரகு சைகை செய்ய, அலைபேசியை எடுத்தான் மதுரன். மறுமுனையில் உடனடியாக தலைமை மருத்துவரை பார்க்க அவன் அறிவுறுத்தப்பட மதுரனால் அந்த செய்தியை நம்ப முடியவில்லை.


சரி என்று அவர்களுக்கு பதில் அளித்துவிட்டு அலைபேசியை வைத்தவன் "டீன மீட் பண்ண சொல்றாங்க." என்றான் ரகுவிடம்.


அப்போ ஏஞ்சலின் சாரி சாரி துளசி கம்ப்ளைன்ட் கொடுத்துட்டா அதானே. இப்போ உன்னால என் வேலையும் போகப்போகுது. ரைட் நடக்கிறது நடக்கட்டும் வா போவோம் என்று நண்பனின் தோள்தொட்டு எழுப்பினான் ரகு.



துளசி என்னை பற்றி புகார் கொடுத்திருப்பாளா ? அவனால் நம்பவே முடியவில்லை , இருக்காது நிச்சயமா இருக்காது பள்ளியிலும் வீட்டிலும் அவன் செய்த எத்தனையோ தவறுகளையும்

குறும்புகளையும் மறைப்பவள் ஆயிற்றே, அவள் எப்படி அவன் மீது புகார் அளித்திருக்க முடியும் குழம்பியபடியே தலைமை மருத்துவரின் அறையை நெருங்கினார்கள்.


நீ இங்கே இரு. என்னை மட்டும் தான் கூப்பிட்டு இருக்காங்க ,நான் போய் மீட் பண்ணிட்டு வரேன் என்றபடி தலைமை மருத்துவரின் அறை கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்


வெல்கம் மிஸ்டர் தமிழ் மதுரன். இன்னைக்கே ப்ராக்டீஸ ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போலிருக்கு. வெல்டன்... டாக்டர் கார்த்திகோட ஆர்த்தோ பிடிக் வார்டுக்கு ரவுண்ட்ஸ் போனதை சொன்னார். வி லைக் யுவர் டெடிகேஷன் .


"தேங்க்யூ டாக்டர். மை ப்ளசர்..." என்று வாய் கூறினாலும் துளசி புகார் கொடுக்கவில்லை என மனம் துள்ளியது.



டாக்டர், உங்களை ஆர்த்தோபீடிக் வார்ட்க்கு டூட்டி டாக்டரா அப்பாய்ண்ட் பண்ணிருக்கேன். இன்னைக்கே நீங்க சார்ஜ் எடுத்துக்கோங்க... எதாவது சீரியஸ் காம்பிளிகேஷன்ஸ் என்றால் சீனியர் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கோங்க , பெஸ்ட் ஆப் லக் Dr. மதுரன் என்று கூற அவனுக்கு கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என பின்னணி குரல் கேட்டது.


டெஃபனெட்லி சார் என்றான். மேலும் துறை சார்ந்து சில விசயங்களை அவரிடம் ஆலோசித்து விட்டு விடைபெற்றான்.


மனதுக்குள் மகிழ்ச்சி பூக்கள் பூக்க , அவள் என் துளசி என்னை ஒரு சங்கடத்தில் ஆழ்த்துவது என்பது அவளுக்கு எப்பொழுதுமே இயலாத காரியம் தான். புன்முறுவலுடன் வெளியே வந்தவனை பதட்டத்தோடு காத்திருந்த ரகு "என்னடா சீட்ட கிழிச்சசுட்டாங்ளா, வருத்ததோடு வருவேன்னு பார்த்தா சிரிச்சுக்கிட்டே வர்ற." என்றான் நடந்ததை தெரிந்து கொள்ளும் ஆவலோடு.


"ஆர்த்தோபிடிக் வார்ட் ல இனி நானும் ஒரு டூட்டி டாக்டர் மச்சி.." என்றான் குரலில் குதூகலத்தோடு



"அப்போ ஏஞ்சலின் உன் மேல கம்ப்ளைன்ட் செய்யலையா...? நான் கூட அவ கம்ப்ளைன்ட் செஞ்சு உன்னைய வேலைய விட்டு தூக்க தான் வர சொன்னாங்கன்னு நெனச்சேன், என்னடா இது? என்னடா நடக்குது இங்க.." என்று வடிவேலு பாணியில் கூற


மெல்லிதாக சிரித்தவன், அவனை தோளோடு தோளாக இறுக்கி

அணைத்துக் கொண்டே " அவ என் துளசி டா, நான் தான் சொன்னேன்ல அவ என்ன காட்டிக் கொடுக்க மாட்டான்னு. சின்ன வயசுல இருந்தே அவ அப்படி தாண்டா.. நான் ஏதாவது குறும்பு செஞ்சு மாட்டிக்கிட்டா கூட அது நான்தான் என்று யார்கிட்டயும் சொல்ல மாட்டா. அதனால தான் சொன்னேன் அவ என்னை நிச்சயம் காட்டிக் கொடுக்க மாட்டான்னு... இப்போ நம்பறியா அது என்னோட துளசி தானே.." என்று பெருமிதமாய் கேட்டான் மதுரன்.


நடந்து கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தவன் "சும்மாவே நீ ஆடுவ.. உனக்கு சலங்கை வேற கட்டி விட்டுட்டாங்க

. கேட்கவா வேணும். ஆனா அவ ஏன்டா துளசிங்கறதை மறைக்கணும்..." என கேள்வி எழுப்பினான்.


மகிழ்ச்சியில் சிறு புன்னகையோடு நடந்து கொண்டிருந்தவன் முகம் மாறி கடினமாகியது. "தன்னை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறாள் போல.." என்றவன் வருத்தத்துடன்.



"நான்தான் சொன்னேனே எங்க ஊர்ல நடந்த எல்லா விஷயத்தையும். அது அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடியதா... ஒரு குடும்பம் தன்னோட சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும் ஒரே ராத்திரில மொத்தமா எல்லாமே தலைகீழா மாறி போய் எதுவுமே இல்லாம அவங்க ஊர விட்டு போனாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. நிச்சயமா அவளோட செய்கையிலேயும், கோபத்திலும் நியாயம் இருக்கும்...ஆனால் அதை என்மேல் ஏன் காட்டனும் ?" என்று கூறினான்.


நண்பனின் தோளைத் தட்டிக் கொடுத்தவன் "எப்படியோ துளசியை காணோம்னு நீ தேடியது போய், இப்போ துளசி உன் கண்முன்னே இருக்கா. இனிமேல் என்ன பாத்துக்கலாம் டா.." என்று தைரியமூட்டினான் ரகு.


அதன் பின் அடுத்தடுத்து இருவரும் தங்கள் வேலைகளில் பரபரப்பாய் மூழ்கினர்.


அங்கே ஏஞ்சலின் நிலை கொள்ளாது தவித்துக் கொண்டிருந்தாள்.


அவளால் தன் வேலைகளில் முழுமையாய் கவனம் செலுத்த முடியவில்லை. நடந்த நிகழ்வுகளையே மனம் திரும்பத் திரும்ப கண் முன்னே கொண்டு வந்தது. 'அவசரப்பட்டு விட்டோமோ.. தான் அவ்வாறு நடந்து கொண்டது தவறோ..' என வருந்தினாள்


'அது எப்படி தவறாகும், அன்னிய ஆண் ஒருவன் கையைப் பிடித்தால் பேசாமல் சும்மா இருக்க முடியுமா..? அவனை அடித்தது தவறு இல்லை..' என்றவள் மனம் வாதிட்டுக் கொண்டிருந்தது. அவளது கோபம் அடங்கவேயில்லை.


கண்ணை மூடி தன்னை சமன்படுத்திக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள். 'எதற்கு அவன் அப்படி செய்யனும். ச்சே ... ஒழுங்கா நிம்மதியா வேலையை பார்க்கலாம் என்றால் இப்போ இது என்ன புது பிரச்சனை. இதற்கு மேல் இங்கே தொடர்ந்து வேலை செய்ய முடியுமா..?'


'வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை இங்கே இன்னும் ஆறு மாத கான்ட்ராக்ட் இருக்கிறது. அது முடியும் முன் வெளியே சென்று வேலை தேடுவது என்பது இயலாத காரியம். இந்த மருத்துவமனையின் ஒப்பந்தத்தை மீறி வேலையை இடையில் விட்டால் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் கிடைக்காது அதுவும் போக மொத்த சான்றிதழ்களும் மருத்துவமனையின் மேனேஜ்மெண்ட் இடம் இருக்கிறது. குறைந்தது மூன்று மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும்..' யோசிக்க யோசிக்க அயர்ந்து போனாள் ஏஞ்சலின்.


சட்டென்று அவளுக்கே உரிய இயல்பாய் 'நான் ஏன் வேலை விட்டு போகணும். இனி அவன் வரட்டும்... இன்னைக்கு ஒரு அரையோடு விட்டுட்டேன். இனி என் வம்புக்கு வந்தா இருக்கு அவனுக்கு..' என கறுவிக்கொண்டாள்.


'கஷ்டப்பட்டு படிச்சு ஒரு வேலையை வாங்கி அப்பாடா இனி நிம்மதியா உட்காரலாம்னு உட்கார்ந்தா... இவனுக்காக நான் ஏன் வேலையை விட்டு போகணும்..? முடியாது... நான் இங்கேயே இருப்பேன். அவனால என்ன செய்ய முடியுமோ செய்யட்டும் பாத்துக்கலாம்..' என்று வீம்பு செய்தது அவள் மனம். துணிந்து எழுந்தாள். அதன்பின் அவளுக்கு நிற்க நேரமில்லாமல் அவள் பணி அவளை இழுத்துக் கொண்டது.



மதுரன் தன் பணியை முடித்துவிட்டு கிளம்பும் போது மீண்டும் துளசியின் நினைவு வந்தது. தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன் 'அவளுக்கும் டூட்டி முடிந்திருக்கும்ல்ல... எப்படி அவளை பார்ப்பது..' என்று எண்ணியபடியே தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ரகுவைத் தேடிச் சென்றான்.


ரகுவை பார்ப்பதற்காக தன் குழந்தைகளோடு இன்னும் இரு பெற்றோர்கள் காத்திருக்க எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகிவிடும் என்பதை உணர்ந்தவன் வெளியே இருந்தபடியே ரகுவிற்கு அலைபேசியில் அழைத்தான்.


சில நொடிகளுக்கு பின் அலைபேசியை எடுத்த ரகு "சொல்லு தமிழ்.." என்றான்.


"மச்சி எனக்கு டூட்டி முடிஞ்சது. நான் கேண்டின்ல வெயிட் பண்றேன் நீ வா.." என்று கூற மறுமுனையில் "சரி" என்ற பதில் வந்தவுடன் அலைபேசியை வைத்தான்.


துளசியை பார்க்க வேண்டும் என்று அவன் மனம் பேராவல் கொண்டது. எப்படி பார்ப்பது என யோசித்தவன் எப்படியும் நாளை முதல் அந்த வார்டில் டியூட்டி டாக்டராக பணியில் இருக்கப் போகிறான் அதற்கு முன்னர் போய் பார்த்தால் என்ன என்று தோன்றவும் அவனது வார்டு நோக்கி சென்றான்.


இரவு நேர செவிலியர்களிடம் நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளையும், பணிகளையும் ஒப்படைத்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலின்.



ஏற்கனவே டாக்டர் தமிழ் மதுரன் பொறுப்பேற்கும் தகவல் ஏஞ்சலினிற்கு வந்துவிட சம்பிரதாயமாக "எஸ் டாக்டர்.." என முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் எதிர் கொண்டவள் சக செவிலியர்களிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.




தன்னை அறிமுகம் செய்து கொண்டவன்.

"ஓகே மிஸ். ஏஞ்சலின் எனி காம்பிளிகேஷன்ஸ் டுடே.." என்று வினவ பணி ரீதீயாக சில தகவல்களை அவனிடம் தெரிவித்து விட்டு தன் பணியை முடித்துக் கொண்டு கிளம்பினாள்.


அவனும் மற்ற செவிலியர்களிடம் "ஓகே கேரி ஆன்.." என்று கூறிவிட்டு கிளம்பினான்.


ஏஞ்சலின் முன்னே செல்ல இவன் அவளை ரசித்தபடி பின்னே சென்றான். லிஃப்ட் அருகே வந்து அவள் பட்டனை அழுத்துவிட்டு காத்திருக்க அவனும் லிஃப்ட்ற்காக வந்து நின்றான்.



அதுவரை சமாளித்தவளுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது என்னதான் மனதுக்குள் வீராப்பாக பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாலும் அவன் அவளை தொடர்வதாய் அவளுக்கு தோன்றியது.


லிப்டின் கதவு திறக்க இருவரும் உள்ளே நுழைந்தனர். மதுரன் அவளை விட்டு தன் விழிகளை நகர்த்தவே இல்லை. காலை முதல் இரவு வரை நோயாளிகளை கவனித்து தன் பணிகளை செய்து அவள் சோர்ந்து போய் இருப்பது தெரிந்தது.



என்னதான் அவள் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.


'என்னை தெரியாத மாதிரியா நடிக்கிற இருடி உன்னை என்ன செய்யறேன் பாரு..' என அவளை ரசித்தவாறே மனதிற்குள் சிரித்துக் கொண்டவன்.


மெதுவாக "மிஸ் ஏஞ்சலின் நீங்க இதே ஊரா, எந்த ஏரியால இருக்கீங்க..." என அவன் சகஜமாய் விசாரிக்க பதில் கூற முடியாமல் அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள் அவள்.



தொடர்வார்கள்...
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
மதுர துளசி -6


நினைவுகளுக்கும் நிஜங்களுக்குமான போராட்டம் தான் எத்தனை கொடுமையானது. சில நினைவுகள் சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் சிலருக்கு பெரும் துன்பத்தை கொடுக்கும். துன்பத்தைக் கொடுக்கும் நினைவுகளை யார் தான் விரும்புவார்கள். ஆனால் எத்தனை துன்பமான நினைவுகள் என்றாலும் அதில் சிலரின் நினைவுகள் எப்போதும் ஓர் மனதிற்கினிய உணர்வுகளையே கொடுக்கும்.


மதுரனுக்கு

துளசியின் பிரிவு துன்பமான ஒன்றுதான் அவளை கண்டுபிடித்து விட மாட்டோமா என்று பத்து ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த துன்பத்திலும் துளசியை நினைத்தால் அவன் உதடுகளில் லேசாய் புன்முறுவல் பூக்கும், மனதில் ஓர் இனிய உணர்வு தோன்றும். அப்படி இருப்பவன் அவளை அருகினில் கண்டு மனமுருகி நிற்பது ஆச்சரியம் இல்லை தான்.


ஏஞ்சலினுக்கோ

அத்தனை நேரம் அவளுக்குள் இருந்த தைரியம் எல்லாம் வடிந்துவிட்டார் போல் தோன்றியது.


எத்தனை இயல்பாய் இருக்க முயன்றாலும் அவன் அருகாமை அவளை பதட்டபடுத்தியது. அந்த சில நொடிகள் அவளுக்கு

பெருயுகமாய் தோன்றியது. தன்னை சமாளித்துக்கொண்டு "இங்க பக்கத்துல தான் சார்..." என்றாள்.


"சாரி ஏஞ்சலின்,நான் எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு நெனச்சு மதியம் உங்ககிட்ட பேசினேன். வெரி சாரி..." என்றான்.


சற்றே அவளுள் நிம்மதி பரவியதாய் அவனுக்கு தோன்றியது.


"இட்ஸ் ஓகே டாக்டர்.." என்றாள்.


லிஃப்ட் தரைத்தளம் வர இருவரும் வெளியேறினர். சரியாக அதே நேரம் ரகு தன் பணியை முடித்துக் கொண்டு வர இவர்கள் இருவரையும் ஒன்றாய் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் திகைத்தான்.மதுரன் சிரித்தவாறே "சீ யூ..ஏஞ்சலின்" என்றான் அவளிடம்.


அவளும் திகைத்தவாறே "சீ யூ சார்.." என புன்னகைக்க முயன்று தோற்றவள் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் செவிலியர்கள் உடைமாற்றும் அறை நோக்கி விரைந்தாள்.



இதை எல்லாம் கண்டு திகைத்து நின்ற ரகு


" ஏண்டா ,கேன்டீன்ல தானே வெய்ட் பண்றேன்ன.. அதுக்குள்ள என்னடா நடந்துச்சு..."


"அதுவா மச்சி என் செல்ல குட்டிய பாக்கனும்னு தோணுச்சா... அதான் போய் பார்த்து பேசிட்டு அவளோடவே வந்தேன்..." என்று மதுரன் கூற


"ரைட்றா.. ஆக , என்னை பீதிலயே வெக்கறதுன்னு முடிவு செய்துட்ட, அதானே .நடத்துறா.. நடத்து..." என்றவன்



"தெய்வமே அந்த புள்ள உன்னோட சேர்ந்து எனக்கும் ஆப்பு வெக்காம இருக்கனும்... நிறைய கனவுகளோடு இங்க ஜாயின் பண்ணி இருக்கேன் நீ லவ் பண்றேன்னு சொல்லி ஒட்டுமொத்தமா சோலிய முடிச்சுபுடாத ராசா.."


" வாடா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்" என்று அவனை அழைத்துக் கொண்டு மதுரன் வெளியே வர


"நீ எதை பார்க்கிறேன்னு தான் நல்லா தெரியுதே அதானே என் பயமே..." என்று ரகு கூறியதை கேட்டு கலகலவென நகைத்தான் மதுரன். இத்தனை வருடத்தில் அவன் சிரிப்பில் ஓர் உயிரோட்டம் இருப்பதை உணர்ந்தான் ரகு.



"ஆனா இந்த லவ்வு ஒரு மனுஷனை எப்படி மாத்திடுது பாரேன். என்றபடியே அவன் பார்க்கிங் சென்று பைக்கை எடுத்து வர

இவன் கண்கள் மருத்துவமனை வாயிலிலேயே நிலைத்திருந்தது. பைக்கை கொண்டு வந்து அருகில் நிறுத்தியவன் "என்ன டாக்டர் வர்றீங்களா இல்ல இங்கயே தவம் கிடக்க போறீங்களா.." என கேட்க


"கொஞ்சம் பொறு மச்சி.." என்றான் மதுரன்.



"டேய் அவ இங்கே தான்டா இருப்பா நாளைக்கு பாக்கலாம் டா... எனக்கு பசி வயித்த கிள்ளுது..." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் முகம் மலர்வதை கண்டு அவன் பார்வை சென்ற திசையை நோக்க அங்கே ஏஞ்சலின் தோள்பையுடன் வெளிர் மஞ்சள் நிற சுடிதாரில் மருத்துவமனையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள்.


சற்றே பரபரப்போடு அவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி வெளியறியதை இருவரும் கவனித்தனர்.

பைக்கில் பின்னே அமர்ந்தவன் "அவளுக்கு தெரியாம அவளை ஃபாலோ பண்ணு மச்சி.." என்றான்.


அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த ரகு ,"மச்சி வேலைய விட்டு மட்டும் தான் அனுப்புவேன்னு நெனச்சேன் ஆனா நீ என்னை ஜெயில் ரேஞ்சுக்கு அனுப்ப ப்ளான் போட்டுட்ட... என்றவாறே பைக்கை கிளப்பினான்.



மதுரனோ அவனை திரும்பி கூட பார்க்காமல் " கவலை படாதே மச்சி,கோயம்பத்தூர் ஜெயில் ல வெள்ளிக்கிழமையானா மட்டன் பிரியாணி போடுறாங்களாம்" என கூற ரகு திகைத்தான்.




ரகு வண்டியை அவள் சென்ற திசைக்கு எதிர் திசையில் செலுத்த "டேய் நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்யற" என மதுரன் கூச்சலிட்டான்.


"டேய் மூடிட்டு வா... அவளுக்கு தெரியாம தானே ஃபாலோ பண்ணணும் .. எப்படியும் களி திங்கறதுன்னு உறுதியாகிடுச்சு.. உன் லவ்வுக்கு உதவி செய்துட்டு போனதாக இருக்கட்டுமே..." என்றவன் அந்த பிரதான சாலையின் ஒரு குறுக்கு சாலை வழியே சென்று முடிவில் வந்த பிரதான சாலையை தொட்டு அங்கிருந்த பஸ் நிறுத்தத்தை தாண்டி இருந்த காப்பி கடை முன் நிறுத்தினான்.



தூரத்தே ஏஞ்சலின் நடந்து வருவது தெரிந்தது. பஸ் நிறுத்தம் வந்தும் அவள் வந்த திசையையே சற்றே பதட்டத்தோடு நோக்குவது தெரிந்தது.


"அண்ணா ரெண்டு காப்பி..." என்றவனை கண்டு மதுரன் முறைக்க.



*பஸ் வர எப்படியும் அஞ்சு நிமிஷம் ஆகும் அதுக்குள்ள காப்பிய குடிக்க விடுடா.. எப்படியும் இன்னைக்கும் நடுச்சாமத்துல தான் சாப்ட போறோம்னு நெனைக்கிறேன்..."


"எப்ப பாரு சோறு தானா.." என மதுரன் கேட்க


"நல்லாருக்குடா... நீ லவ் பண்றதுக்கு நான் வெரதம் இருக்கனுமா.. எனக்கென்ன வேண்டுதலா..." என்றவன் தயாரான காப்பியை எடுத்து மதுரனுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு பாட்டிலில் இருந்த பட்டர் பிஸ்கட் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினான்.


வேண்டாமென தலையாட்டியவன் பார்வை அவளை விட்டு சிறிதும் அகலவில்லை. அந்த பிரகாசமான மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில் அத்தனை சோர்விலும் அவள் அவனுக்கு தேவதையாய் தெரிந்தாள்.


வெளிர் மஞ்சள் நிற சுடிதாரும் வெண்மை நிற ஷாலும் அவளுக்கு பாந்தமாய் பொறுந்தியது. நகத்தை கடித்தபடி அவள் சுற்றும் முற்றும் பார்த்தவாரே பேருந்தை எதிர் பார்த்து நிற்க, மக்கள் கூட்டத்தில் தன்னை மறைத்து நின்றான் மதுரன்.


'ஏன்டி இந்த கண்ணாமூச்சி. உன்னை காணாம இத்தனை வருசமா தேடி உன்னை பார்த்து அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியலையே.. என்கிட்ட ஏன்டி மறைக்கனும். நான் என்ன உன் எதிரியா...' என

வேதனையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.


சில நிமிடங்களில் பேருந்து வர அந்த கூட்ட நெரிசலில் அவள் ஏறுவது தெரிந்தது. ரகுவும் அவளை கவனித்துக் கொண்டிருந்ததால் பைக்கை கிளப்பி "ஏறு மச்சி..." என அவனை ஏற்றிக்கொண்டு பேருந்தை தொடர்ந்தான்.


அரைமணிநேர பேருந்து பயணத்திற்கு பின் ஏஞ்சலின் இறங்கினாள். அப்பொழுதும் அவள் பார்வை சுற்றிலும் நோட்டமிடுவதை கண்டனர் இருவரும்.


"மச்சி என்னடா நம்ம ஏரியாவுலயே இறங்கிருக்கா.." என ரகு கேட்க


"பாத்துட போறா... கொஞ்சம் ஓரமா போடா.." என்றான் மதுரன்.


"இந்த கோயமுத்தூரு டிராப்பிக்ல வாய்ப்பில்ல மச்சி.." என்றவாறே பைக்கை ஓரமாக சென்று நிறுத்திவிட்டு அவள் எந்த பக்கம் செல்கிறாள் என காத்திருந்தனர்.


அவள் சென்ற திசை பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் திகைத்து , "என்னடா நம்ம தெரு பக்கமா போறா.." என மீண்டும் தன் நண்பனை பார்த்து கேட்டான் ரகு.


"என்னை கேட்டா எனக்கு எப்படிடா தெரியும். போ போ அவளை ஃபாலோ பண்ணு... போடா.." என மதுரன் உசுப்ப



"ம்க்கூம்.. எப்படியும் நம்ம தெரு பக்கமா தான் போக போறா பொறுமையா போலாம்..."



"ஏன்டா இவ்வளவு நாளா இங்க இருந்து இருக்கா இது கூட தெரியாம நீ எப்படி இருந்த.." என நண்பனிடம் பல்லை கடித்து க்கொண்டு கேட்டான் மதுரன்.


"டேய் நீயே நேத்திக்குத்தான்டா எனக்கு காட்டின,என்னவோ பல வருஷமா எனக்கு அவளை தெரிஞ்சு... நான் உனக்கு காட்டாம மறைச்சு வச்சிருந்த மாதிரி இல்ல பேசுற... அது சரி லவ் பண்ணாவே லூசு ஆயிடுவாங்க போல இருக்கு இதுல டாக்டர் மட்டும் விதிவிலக்கா என்ன... ?"


அசடு வழிந்தபடி "ஆமால்ல.." என்ற மதுரனிடம்


"என்ன ஆமா இல்ல... ரெண்டு நாளா நீ ஒரு மார்க்கமா தான் டா இருக்க, ஒரு பொண்ணு நினைப்பு மனசுல வந்துட்டா பசங்க எப்படி மாறிடறாங்க பாரேன். ஆனா இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இத்தனை வருஷமா இருந்தியேடா, இப்ப எப்படிடா ஒரே நாள்ல இப்படி ஆயிட்ட, ரொம்ப வழியுது தொடச்சுக்கோ...." அங்க பாரு அவ நம் தெருவுக்குள்ள தான் நுழையுறா.." என்றவரே பைக்கை கிளப்பினான்.


ரகு அதே தெருவில் இருந்த ஒரு அப்பார்ட்மெண்டில் தான் தங்கியிருந்தான். மதுரன் கோவைக்கு வேலைக்கு வருவதாக கூறிய உடனே தன்னோடு அழைத்துக் கொண்டான்.


அந்தத் தெருவின் மையப் பகுதியில் ரகுவின் அப்பார்ட்மெண்ட் இருந்தது. ஏஞ்சலின் அதை தாண்டி சென்று கொண்டிருந்தாள். பேருந்தில் இருந்து இறங்கி தன்னை யாரும் பின்தொடர்கிறார்களா என கவனித்தவள், யாரும் தொடரவில்லை என நம்பிக்கை பெருமூச்சோடு தன் இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருந்தாள். மதுரனும் ரகுவும் பின் தொடர்வதை அவள் அறிந்திருக்கவில்லை.


ரகுவின் அப்பார்ட்மெண்ட் தாண்டி எதிர் திசையில் மூன்றாவது அப்பார்ட்மெண்டில் நுழைந்தாள் துளசி.


அவள் தலை மறைந்ததும் தங்கள் இடம் வந்தார்கள் இருவரும். "இங்கதான் இருக்கா போல டா, அந்த அபார்ட்மென்ட்ல நிறைய வேலைக்கு போற பொண்ணுங்க தங்கி இருக்காங்க .சோ ,அதுல ஒரு வீட்ல தான் உன்னோட துளசியும் இருக்கணும்.."



கோனியம்மனுக்கு மனதார நன்றி சொன்னான் மதுரன். முதல் நாள் சந்திக்க வைத்து, அடுத்த நாள் அவளை என் கண் முன் நிறுத்தி.. அவள் இருக்கும் இடம் வரை தனக்கு காட்டியதற்காய் நின்ற இடத்தில் இருந்தே வணங்கிக் கொண்டான்.


நண்பனின் செயல்கள் வியப்பாக இருந்தது ரகுவிற்கு. இத்தனை ஆண்டுகள் அவன் பார்த்த மதுரன் வேறு இந்த இரண்டு நாட்களாக அவன் பார்க்கும் மதுரன் வேறு. படிப்பிலும் பணியிலும் அத்தனை பொறுமையும், பொறுப்பும் மிக்க மதுரனா இது. அவன்தானா இது என்று ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு. தன் நண்பனின் காதலை புரிந்து கொண்டவன் "ஆங் இனிமே சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது..." என சினிமா பாணியில் கூறிவிட்டு பைக்கை பார்க்கிங்கிற்குள் விட்டான்.



காதல் தான் இந்த மனிதர்களை எத்தனை அழகாய் மாற்றி விடுகின்றது. மதுரனையும் துளசியின் மீதான அவன் காதல் அப்படித்தான் மாற்றிக் கொண்டிருந்தது. காதல்மயக்கத்துடன் அவள் சென்ற திசை நோக்கியே பார்த்திருந்தான்.


தொடர்வார்கள்...
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
மதுரதுளசி


அத்தியாயம் - 7


வாழ்க்கை தான் எத்தனை அழகானது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமான சுவாரசியங்களை உள்ளடக்கியது. மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையை தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருப்பதாய். ஆனால் அதன் போக்கில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நிகழ்வுகளும் எதிர்பாராது நாம் திட்டமிட்டபடியே எல்லாம் நடந்து விடுவதில்லை என்னதான் திட்டமிட்டு அதன்படி நம் வாழ்க்கையை செலுத்த வேண்டும் என்று நாம் முயற்சித்தாலும் பல நேரங்களில் அது போகிற போக்கில் தான் நாம் செல்ல வேண்டி இருக்கிறது.



அந்த காலைப் பொழுது மதுரனுக்கு அழகாய் புலர்ந்தது. வழக்கத்தைவிட உற்சாகமாக கண்விழித்தான். எப்பொழுதும் அதிகாலை எழும் வழக்கம் உள்ளவன் மதுரன். தன்னுடல் பேணுவதில் அக்கறை உள்ளவனும் கூட. அவன் எங்கே இருந்தாலும் அதிகாலை உடற்பயிற்சியை தவறவிடுவதேயில்லை. அன்றும் உடற்பயிற்சி செய்ய பால்கனி வந்தவன் அப்பொழுது தான் கவனித்தான்.

அங்கேயிருந்து பார்க்கும் பொழுது ஏஞ்சலின் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் நன்றாக தெரிந்தது. அவன் மனம் மேலும் உற்சாகமானது. உடல் தன்னியல்பாய் பல வருடங்களாய் பழக்கப்பட்ட உடற்பயிற்சியை செய்தாலும் மனம் முழுக்க துளசியைத் தேடியது.


மதுரன் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு அழகான அந்த காலை வேளையை ரசித்துக்கொண்டிருந்தான். அதிகாலை காற்று சில்லென்று அவன் மேனியை தழுவிச் சென்றது, மயிலிறகாய் அவன் மனதை வருடியது.



அவன் கண்கள் தானாய் துளசியை தேடியது. எதிர்ப்புறம் எந்தவொரு நடமாட்டமும் இல்லாமல் வெறுமையாய் காட்சியளித்தது. அப்படியே நின்றிருந்தவனுக்கு உள்ளிருந்து அவனது அலைபேசியின் ஒலி கேட்டது.



வழக்கம் போல் அம்மாவாக இருக்கும் என்று எண்ணியபடியே சென்று அலை பேசி கையில் எடுத்தவன் முகம் புன்முறுவல் பூத்தது. அம்மாவே தான் எடுத்து காதில் வைத்தவன் "சொல்லுங்கம்மா.." என்றான் உற்சாகமாக.


வழக்கத்திற்கும் மாறாக மகனின் குரலில் உற்சாகம் இருப்பதை தாய் உள்ளம் குறித்துக் கொண்டது. "என்ன கண்ணு எப்படி இருக்க..? ரகு நல்லா இருக்கானா..? வேலை எல்லாம் எப்படி போகுது..?" என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.


"நான் நல்லா இருக்கேன் மா... அவனுக்கு என்ன.. அவனும் நல்லா தான் இருக்கான். வேலையும் ரொம்பவே நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா.." என்றான் அதே உற்சாகம் ததும்ப.


"ராத்திரியே போன் செய்யலாம்னு பார்த்தேஞ் சாமி, ஆனால் வேலை முடிஞ்சு நீ எந்நேரம் வருவியோ தொந்தரவு பண்ண வேண்டாமுன்னு தான் சாமி பண்ணல.." என்றார்.


"நானே இனி தினம் வேலை முடிஞ்சு வரும்போது பண்றம்மா.. நேத்து முதல் நாள் அதனால கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. அப்பா எங்கேம்மா..?" என பேச்சை மாற்றினான். எங்கு வெளியில் சென்றாலும் இரவு உறங்கும் முன் அன்னையை அழைத்து பேசிவிட்டு உறங்குவது மதுரனுக்கு வழக்கமான ஒன்று. நேற்றைய தினம் அந்த வழக்கத்தை மறந்துவிட்டிருந்தான்.


இப்பொழுது அவன் அன்னை கூறியவுடன் தான் தன் தவறை உணர்ந்தான். மறுமுனையில் "அப்பா இங்கே தான் தங்கம் இருக்காங்க... பேசுறியா..?" என்று கூறிவிட்டு மாணிக்கவாசகத்திடம் அவர் அலைபேசியை கொடுப்பது தெரிந்தது.


வேலை, மருத்துவமனை இருப்பிடம் போன்ற வழக்கமான கேள்விகளை மாணிக்கவாசகம் கேட்க அவருக்கு பதில் உரைத்தபடியே 'துளசியை பார்த்ததை அப்பாவிடம் கூறலாமா..?' என அவன் மனதுக்குள் கேள்வி எழுந்தது.



'வேண்டாம் அவள் துளசி என அவள் வாயால் முதலில் ஒப்புக் கொள்ளட்டும், பிறகு பார்க்கலாம்..' என்று முடிவெடுத்தவன் தந்தையின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு "வெண்பா எங்கே பா.." என்றான்.


"இங்க தான் பா இருக்கா.. எப்போ போன கொடுப்பேன்னு பாத்துக்கிட்டே நின்னுட்டு இருக்கா.." என்றபடி வெண்பாவிடம் கை மாறியது அலைபேசி.


"என்ன அண்ணா ரெண்டு நாளா போனே காணோம். அவ்வளவு பிஸியா நீ... அங்க போனதையும் எங்கள மறந்துட்டியா..? ரெண்டு நாளா ஒரு போன் கூட பண்ணலையே...?" என அவன் தங்கை குறைபட்டுக் கொண்டாள்.


"குட்டிம்மா பேசிட்டே அப்படியே வெளியே வா.." என்ற மதுரனின் குரல் எதையோ உணர்த்த

மறுமுனையில்


"அப்படியான்னா இருண்ணா டவர் இல்ல போல... வெளியே வர்றேன்..." என்றபடியே வாசல் வந்தவள்


"சொல்லுண்ணா... என்னாச்சு ஏதும் பிரச்சனையா.." என கவலையோடு வினவினாள்.


"குட்டி நான் சொல்றத மட்டும் காதுல கேட்டுக்கோ... அந்த பக்கம் தப்பி தவறி கூட நீ ஒரு வார்த்தை பேசிட கூடாது. இந்த விஷயத்தை உன்கிட்ட இருந்து என்னால மறைக்க முடியாது." என்றவன் "நான் துளசியை பார்த்துட்டேன்டா.." என்றான்.


"ண்ணா...." மறுமுனையில் வெண்பா அதிந்ததை மதுரன் உணர்ந்தான்.


"ஆமாடா..." என்றவன் கோனியம்மன் கோவில் சென்றது முதல் நேற்று இரவு நடந்தது வரை ஒன்று விடாமல் வெண்பாவிடம் கூறி முடித்தான்.


மறுமுனையில் குரல் தழுதழுக்க "ஏன் ணா அவ அப்படி செஞ்சா... நல்லா பார்த்தியாண்ணா... அது அவதானா.." என்று சந்தேகத்தோடு கேட்டாள் வெண்பா.


"துளசியை எனக்கு அடையாளம் தெரியாதாடா..." என்ற அவனது குரலில் மறு வார்த்தை பேசவில்லை அவள்.


"குட்டிமா......"


"சொல்லுண்ணா..."


"நீ இங்க வரியாடா..." என்றான்.


"இதைத்தான் நான் கேட்கணும்னு நினைச்சேன். எனக்கு பாக்கணும்ண்ணா..." என்று வேண்டுமென்றே துளசி என்ற பெயரை தவிர்த்து கூறினாள்.



"ஏற்கனவே யூனிவர்சிட்டி வரணும்னு இருந்தேன்ணா.. இப்போ அதையே காரணமா சொல்லி கிளம்பி வரேன். ஆனா உன்கிட்ட பேசின உடனே கிளம்பினா சந்தேகப்படுவாங்களேண்ணா..." என்றாள்.


"யுனிவர்சிட்டி போகணும்னா அப்பா எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு உனக்கே தெரியும். வா பாத்துக்கலாம்.." என்றவனுக்கு


"சரி ண்ணா நான் உடனே கிளம்புறேன் ஹாஸ்பிடல் லொகேஷன் மட்டும் அனுப்பிவிடு. நான் நேரா அங்க வந்துடறேன். வெச்சிடவாண்ணா..." என்று கேட்டுவிட்டு வைத்துவிட,

எதிரில் முறைத்தவாறே ரகு நின்றான்.


"ஏண்டா விடிய விடிய தான் தூங்கவிடாம பண்ண காலையிலேயே அடுத்து என்ன பண்றதுன்னு பிளான் பண்ண ஆரம்பிச்சிட்ட... கொஞ்ச நேரமாச்சு நிம்மதியா இருக்க விடுறியாடா நீ... ராத்திரியெல்லாம் இதைத்தான் தூங்காம யோசிச்சயா... விடிஞ்சும் விடியாம அடுத்த ஏழரை கூட்ட பாக்குற பாத்தியா நீ..."


"ஏன்டா என் தங்கச்சி உனக்கு ஏழரையாடா... இரு அவ வரட்டும் சொல்றேன்..."


"அடேய் நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன். அந்த குட்டி பிசாசு கிட்ட சொன்னேனா இடம், பொருள், ஏவல் இல்லாம கழுவி ஊத்துவாடா... இங்க பாரு பேச்சு பேச்சா இருக்கணும். இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். அண்ணனாச்சு, தங்கச்சியாச்சு என்னமோ செஞ்சுக்கோங்க.. என்னை ஆள விடுங்க சாமி.." என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு பால்கனி செல்ல


"அந்த பயம் இருக்கட்டும்.." என்று சிரித்தபடி சமையல் அறைக்கு சென்று இன்டெக்ஷன் அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி வைத்தான் மதுரன்.


பால்கனி வந்த ரகு "டேய் மச்சா..." என்று கூச்சலிட


"என்னடா..." என பால் பாக்கெட்டை கத்தரியில் நறுக்கி அடுப்பில் இருந்த பாத்திரத்தில் ஊற்றியவாறே குரல் கொடுத்தான்.


"வாடா..." என அவன் அழுத்தமாக கூற


'ஒரு வேளை துளசியா...' என எண்ணியவாறே அடுப்பில் இருந்த பாலை அப்படிவிட்டுவிட்டு பால்கனி நோக்கி விரைந்தான்.


அவளேதான்... அந்த அபார்ட்மெண்டின் இரண்டாவது மாடியின் பால்கனியில் குளித்துவிட்டு தன் தலையை துவட்டிக் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். பிங்க் நிற டீசர்ட்டும் கருப்பு நிற முக்கால் பேண்டுமாய் அவள் கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க இங்கிருந்தே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் மதுரன்.


"உன் காட்டுல மழைதான் டா மச்சி...." என்றவாறே அன்றைய தினசரியில் ரகு மூழ்கிவிட, இவனோ அவன் காதலியை நோக்கி தவமிருக்க தொடங்கினான்.


துளசிக்கு சிறு வயதிலேயே இடைவரை நீண்ட கூந்தல். ஆனால் இப்பொழுது நடுமுதுகு வரை மட்டுமே இருக்க... 'ஏனோ அதை வெட்டி விட்டாள் போல.... ஆனால் இதுவும் அவளுக்கு அழகாயிருக்கிறது...' என்று ரசித்தான். பாவாடை தாவணியில் கண்டு காதல் கொண்ட மனம் இன்று முக்கால் பேன்டும், டி ஷர்ட்டிலும் பார்த்து பிரமித்து நின்றிருந்தது.


இன்னும் இரண்டு பெண்கள் துணியை உலர்த்த... துளசி உள்ளே செல்வது தெரிந்தது. மதுரனுக்கு மனம் முழுக்க பரவசம். எப்படியோ அவள் இருக்கும் இடமும் தெரிந்தாயிற்று என்று மகிழ்ச்சியில் நிலை கொள்ளாமல் அவன் உற்சாக துள்ளலிட


அதில் கவனம் களைந்த ரகு "போதுண்டா ஒரே நாளிலேயே ஓவரா ஆடாத அப்புறம் புட்டுக்க போகுது. அதுக்கும் என் உசுர தான் நீ வாங்குவ.." என்றவன் ஏதோ வாடை வர முகர்ந்து பார்த்து


"என்னடா கருகுன வாட வருது..." என்றதும்


"அய்யய்யோ பாலு.." என்ற படியே உள்ளே ஓடினான் மதுரன். பின்னாலேயே ரகுவும் வர அங்கே பால் பாத்திரம் தீய்ந்து கருகத் தொடங்கி சமையலறை முழுவதும் புகையாயிருந்தது. ஓடிச் சென்று உடனே அடுப்பை அணைத்து விட்டு தலையில் கை வைத்து நின்று விட்டான் ரகு.


"இருந்ததே அந்த ஒரு பால் பாத்திரம் தான் டா... டீயாச்சும் போட்டு குடிச்சிட்டு இருந்தேன் அதுக்கும் வெட்டு வச்சுட்டியா..." என பல்லை கடிக்க,


"வேணும்னா செஞ்சேன். நீ கூப்டேன்னு தான வந்தேன்.." ஒன்றும் தெரியாத அப்பாவி போல என்று நின்றான்.



தீய்ந்து போன பாத்திரத்தை கையில் எடுத்து திருப்பி திருப்பி பார்த்தவன் "இந்தா உன் லவ்வுக்கு என்னோட மொய்யி... உன் காதல் சின்னம். பத்திரமா எடுத்து வெச்சிக்கோ... என்றவன்


"என்னைக்கு வந்தியோ அன்னைலேர்ந்து ஒரு சோறு திங்க முடியுதா..? காப்பி குடிக்க முடியுதா..? அய்யய்யோ ஊருக்குள்ள அஞ்சாறு ப்ரெண்ட் வெச்சிருக்கவன்லா நல்லாத்தான் இருக்கான். இவன் ஒருத்தனை வெச்சிட்டு நான் படுற பாடு இருக்கே.."என சந்தானம் மாடுலேஷனில் சலித்துக் கொண்டான்.


"எப்ப பாரு சோறு... ப்பே போய் கெளம்பு.." என அவனை துரத்தினான் மதுரன்.


அவனை முறைத்துக் கொண்டே "சீக்கிரமா வந்து கெளம்பு.. மெஸ்ஸூல சாப்ட்டு ஹாஸ்பிடல் போகனும்..." என ரகு அப்பாவியாய் கூற மதுரனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்ததது.


"நீ ஏன் சிரிக்கமாட்ட என் பொலப்பு தான் சிரிப்பா சிரிக்க போவுது.." என்றபடியே குளியலறைக்குள் புகுந்தான் ரகு.


சிரித்தபடியே அவன் அடுப்பை பார்க்க தீய்ந்து கருகிய பால் பாத்திரம் அவனை பார்த்து பல் இளித்தது.


மெலிதாய் புன்னகை அரும்பு மலர்ந்தது அவனுக்கு. அவன் மனம் பத்து வருடங்கள் பின்நோக்கி சென்றது.


அன்று அவன் தாய் மனோன்மணி துளசியிடம் "இதை பார்த்து இறக்கி வை துளசி.." என்றுவிட்டு ஏதோ கை வேலையாக சமையலறை விட்டு வெளியே வர


கதை புத்தகத்தோடு சமையல் மேடையில் அமர்ந்து ஒய்யாரமாய் காலை ஆட்டிக்கொண்டு படித்துக் கொண்டிருந்தவள், "சரிம்மா...." என்றுவிட்டு புத்தகத்தில் மூழ்கிவிட பால் பொங்கி சுண்டி வற்றி பாத்திரம் தீய்ந்தது வாடை வெளியே வர,


"என்னடீ அங்க தீஞ்சு போச்சு.. வூட்டுல கருகற வாடை வர்றது கூட தெரியாம அப்படி என்னத்த தான் எங்கூட்டு மவராசி செய்யறாளோ‌ தெரியல.." என்ற ராசம்மாவின் ஏச்சில் மனோன்மணி உள்ளே ஓடி வர பாத்திரம் கருகி போயிருந்தது. பின்னேயே வந்த மதுரனும் வெண்பாவும் கண்டது



அது எதுவுமே தெரியாமல் சமையல் மேடையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டு நிலக்கடலையை உரித்து தின்றபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்த துளசியைத்தான்.


தொடர்வார்கள்...
 
Last edited:

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
மதுர துளசி அத்தியாயம் - 8



மருத்துவர்களும், செவிலியர்களும் பொதுவாய் தங்கள் பணிக்குள் நுழையும் வரை மட்டுமே அவர்களின் காதல், மனைவி, குழந்தை, கணவன், குடும்பம்‌ என்ற நினைவிருக்கும். மருத்துவமனைக்குள் நுழைந்து அவர்கள் பணியை துவங்கி விட்டபின் வேறு எதுவும் அவர்கள் எண்ணத்தில் இருப்பதில்லை. நோயாளிகளை கவனிப்பதும், அவர்களுக்கு பணிவிடை செய்வதும், மருத்துவம் பார்ப்பதில் மட்டுமே அவர்களின் முழு கவனமும் இருக்கும்.



ஏஞ்சலின் எப்பொழுதும் பணிக்கு வந்துவிட்டால் அதன்பின் இடியே விழுந்தாலும் கூட வேறு எந்த நினைவுகளும் அவளுக்கு தோன்றாது. தனது கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள். குடும்பம், வீடு என்ற எந்த நினைவும் வராது. வழக்கமாய் காலை எழுந்ததும் தன் வீட்டிற்கு அழைத்து பேசி விடுவாள். அதன் பின் அவசரம் என்று கூட அவளுக்கு எந்த அழைப்பும் வராது. அதனாலேயே அவள் அடிக்கடி கைபேசியை எடுத்துப் பார்க்கும் வழக்கமும் இல்லை.



இன்று காலை வழக்கம் போல அவள் வீட்டிற்கு தொடர்பு கொள்ள அவர்களது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எப்பொழுதாவது நடக்கும் ஒரு வாடிக்கை தான், சரி இரவு வந்து பேசிக் கொள்ளலாம் என்றெண்ணி பணிக்கு வந்து விட்டாள் ஏஞ்சலின்.


நோயாளிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று அவளது கைபேசி எப்பொழுதும் சைலன்ட் மோடிலேயே இருக்கும். வழக்கம் போல தன் பணியை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு யாரோ தன்னையே பார்ப்பது போன்றதொரு உணர்வு. ஒருவேளை அவனோ என எண்ணியவள் திரும்பி பார்த்தாள். சற்று தள்ளி ஒரு பெண் நின்றாள். நல்லவேளை அது அவனில்லை என்றதும் ஒரு பெருமூச்சோடு தன் பணியைத் தொடர்ந்தாள் ஏஞ்சலின்.



உணவு இடைவேளை நேரம் ஆகையால் தன் பணிகளை முடித்துக்கொண்டு ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்தாள்.

அந்த வார்டில் மொத்தம் நான்கு செவிலியர்கள். மற்ற மூவரும் உணவு இடைவேளைக்கு வெளியில் சென்றிருக்க, சில நொடிகள் அமர்ந்திருந்த ஏஞ்சலின் நோயாளிகளின் மருத்துவ கோப்புகளை எடுத்து அதில் குறிப்புகளை எழுதத் தொடங்கினாள்.


சில நிமிடங்கள் கோப்புகளில் எழுதிக் கொண்டிருந்தவள் ஏதோ ஒரு உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தாள். அப்பொழுது நின்று கொண்டிருந்த அதே பெண் சற்று அருகில் வந்து நின்றிருந்தாள். அவள் இவளையே பார்த்துக் கொண்டிருப்பதாய் ஏஞ்சலினுக்கு தோன்றியது. யாரிவள்...? என்று அவளை உற்று நோக்க அவளும் இவளேயே தான் பார்த்திருந்தாள். அவள் வெண்பா.



தன் அண்ணன் கூறியவுடன் வீட்டில் சொல்லிக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் பேருந்து ஏறிவிட்டாள் வெண்பா . மதுரன் அவளுக்கு மருத்துவமனையின் முகவரியை அனுப்பி இருக்க.. பேருந்து விட்டு இறங்கியவள் நேராக ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனையை வந்து அடைந்தாள். அவள் தன் அண்ணனை எல்லாம் சென்று பார்க்கவில்லை. மதுரன் எல்லாவற்றையும் கூறி இருந்ததால் அவன் குறிப்பிட்டிருந்த வார்டுக்கு வந்து ஏஞ்சலினை பார்த்துக் கொண்டிருந்தாள்.


அது துளசிதானா..? தன் சகோதரன் வேறு யாரையும் கண்டுவிட்டு துளசி என எண்ணிக்கொண்டு பேசுகிறானா என்ற சந்தேகம் வெண்பாவிற்கு இருந்தது. வேறு ஒரு பெண்ணை துளசி என்றெண்ணி தொந்தரவு செய்து விடக்கூடாது என்றே தூர நின்று கவனித்தாள் வெண்பா.


ஆனால் அது துளசி தான் என அவளுக்கு புரிந்து போனது. கண்களில் நீர் கோர்க்க தூர இருந்து அவளை பார்த்து கொண்டிருந்தவள் சற்றே அருகில் வந்து அவளை எட்டி விடும் தூரத்தே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். 'துளசி தான் ஆனால் ஏன் அண்ணனை யாரென்று கேட்டாள்..? ஒரு வேளை அவனை அடையாளம் தெரியவில்லையா...? என்னை தெரிகிறதா என்று பார்ப்போம்..' என எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள் சற்றே கூர்மையானாள் 'அவள் என்னைப் பார்த்து அதிர்கிறாள். அந்த அதிர்ச்சி அப்பட்டமாய் அவள் முகத்தில் தெரிகிறது. ஏன் அதிர்ச்சியடைய வேண்டும். அவளுக்கு நாங்கள் என்னை எதிரியா..? இப்பொழுதும் நடந்து முடிந்த அந்த சம்பவத்தை எண்ணி பயப்படுகிறாளா...? அதனால் தன்னை மறைத்துக்கொள்ள எண்ணுகிறாளா...?'



சட்டென்று தலையை கவிழ்ந்து ஏஞ்சலின் கோப்புகளில் எழுதுவது தெரிந்தது. 'ஓ அப்படின்னா என்னையும் தெரியாதது போல நடந்துக்க போற... அதானே.. சரி எத்தனை நாளைக்கு இப்படி நடக்க போறேன்னு நாங்களும் பார்க்கிறோம்..' என்றெண்ணியவள் அப்படியே அவள் அருகில் வந்தாள்.



"துளசி..." என்று ஏஞ்சலினை அழைத்தாள். அவள் நிமிரவே இல்லை தன் வேலையில் மிகக் கவனமாய் இருந்தாள்.


"துளசி நிஜமாவே நான் கூப்பிடறது கேட்கலையா..? இல்ல நான் யாருன்னு தெரியலையா..? என்று கேட்டவள் குரல் மிகக் கடுமையாயிருந்தது.



அப்பொழுதும் ஏஞ்சலின் நிமிர்ந்து பார்க்கவில்லை 'என்ன திமிர்..' என்று மனதிற்குள் எண்ணியவள் ஏஞ்சலின் முன் இருந்த மேஜை மீது கை வைத்து தட்டி "ஹலோ..." என சப்தமாக அழைத்தாள்.


அவளின் குரலுக்கு நிமிர்ந்த ஏஞ்சலின் "சொல்லுங்க எஸ்.." என்றாள் மிடுக்காக.



'அவள் கண்கள் கலங்கி சிவந்திருக்கின்றனவோ இவள் துளசி இல்லையென்றால் இவள் கண்கள் ஏன் கலங்க வேண்டும். 15 வருஷம் உன் கூடவே இருந்தவடி நான், நீ என்கிட்டையே உன்னை மறச்சுக்க பாக்கறியா..' என்று எண்ணியவள்.



"அப்போ நீ துளசி இல்ல அதானே... எங்க அண்ணன் கிட்ட சொன்ன பொய்ய என்கிட்டயும் கண்டினியூ பண்ண போறியா நீ..." என்றாள் அவள் முகத்திற்கு நேராக


சில நொடி மௌனத்திற்கு பிறகு "நீங்க யாரு..? என்ன வேணும்..? நேத்துல இருந்து ஆளாளுக்கு துளசி.. துளசின்னு வந்து என்னை தொந்தரவு பண்றீங்க.." என்றாள் அமைதியான குரலில்



"ரொம்ப சாமர்த்தியமா பேசுற டி.. ஆமா உனக்கு பேச சொல்லியா தரணும். ஆனா எங்களுக்கு ஒன்னு தான் புரியல.. நாங்க என்ன உன்னோட எதிரியா..? எதற்காக உன்னுடைய அடையாளத்தை எங்ககிட்டயே மறைக்கிற.. உன்னையும், உன் குடும்பத்தையும் இப்ப வர என்னோட அப்பாவும், அண்ணனும் தேடிகிட்டு இருக்காங்க. தினம் தினம் உன்ன எங்கேயாவது பார்த்திரமாட்டோமான்னு ஒவ்வொரு நாளும் துடிச்சிட்டு இருக்கேன் நானு. போற அத்தனை கோயிலையும் என் துளசி கண்ண என் கண்ணுல காட்டிடுன்னு எங்க அம்மா வேண்டிக்கிட்டே இருக்காங்க... இதெல்லாம் உனக்கு எங்க தெரியப்போகுது. "


"என் அண்ணன் துளசிய நான் பாத்துட்டேன்னு சொன்னதும் அடிச்சு புடிச்சு ஓடி வந்து நிக்கிறேன். ஆனா என்னை பார்த்தும் நீ யாரோ போல பதில் சொல்ற இல்ல.." என்றாள் ஆற்றாமையோடு வெண்பா.


நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டாள் ஏஞ்சலின் "இங்க பாருங்க நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. நீங்க சொல்ற ஆளும் யார் என்று எனக்கு தெரியாது. தயவு செய்து இங்கே இருந்து கிளம்புறீங்களா...? நேற்று அந்த டாக்டர் தான் அப்படி நடந்துகிட்டார்னா, இன்னைக்கு நீங்க இப்படி வந்து பேசுறது சரி இல்ல."


"இப்படி தொடர்ந்து எனக்கு தொந்தரவு கொடுத்தா நான் மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும். தயவு செய்து கிளம்புங்க.. இது ஹாஸ்பிடல் இங்க வந்து தேவையில்லாம பேசிட்டு என் வேலையை கொடுக்காதீங்க. உங்க அண்ணனுக்கும், உங்களுக்கும் வேற வேலை இருந்தா போய் பாருங்க.." என்று முகத்தில் அடித்தார் போல் பேசி முடித்தாள் ஏஞ்சலின்.



வெண்பாவிற்கு கோபம் உச்சிக்கு ஏறியது. ஆற்றாமையும், கோபமுமாய் வார்த்தைகள் தடுமாறியது "என்ன.... என்ன.. எங்க வேலையை பாக்குறதா, பத்து வருஷமா இதை தாண்டி வேலையா பார்க்கறான். பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சிட்டு இருக்கான். அவன் காலேஜ்ல படிக்க போன நாளை விட ஒவ்வொரு காலேஜா.. ஒவ்வொரு வீதியா உன்னை தேடி போன நாட்கள் தான் அதிகம். எங்கப்பா அதான் உன் குரு ஸ்கூலுக்கு போன நாட்களை தவிர மீதி எல்லா நாட்களிலும் ஒரு நாள் கூட எங்க அப்பா எங்க கூட இருந்ததில்லை. நீங்க எங்க போனீங்களோன்னு, உங்க குடும்பம் என்ன ஆச்சோன்னு ஒவ்வொரு லீவ் நாளிலும் உங்கள தேடி தான் அவரு ஊர் ஊரா திரிஞ்சிட்டு இருக்காரு. எங்க வேலைய பாக்க சொல்றியா.." கோபத்தில் கொந்தளித்தாள்.



வெண்பா பேசியது எதுவும் ஏஞ்சலின் காதில் விழுந்தது போல் தெரியவில்லை. அவள் தன் போக்கில் எழுந்து அலமாரியில் உள்ள மருந்துகளை துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.


வெண்பாவினால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. "ஹலோ இங்க ஒருத்தி நான் பேசிட்டு இருக்கேன். உன் காதுல விழுதா இல்லையா.." என்றாள் மிகவும் காட்டமாக


அவளை நோக்கி திரும்பிய ஏஞ்சலின் அழுத்தம் திருத்தமாக "இங்க பாருங்க மிஸ், நீங்க யாருன்னு தெரியாது உங்க அண்ணா யாருன்னு எனக்கு தெரியாது. நீங்க சொல்ற அந்த துளசி யாருன்னு எனக்கு தெரியாது‌ முதல்ல கிளம்புறீங்களா.. இல்லனா இப்பவே நான் மேனேஜ்மெண்ட் கிட்ட பேச வேண்டி இருக்கும். என்றாள் அதிகார தோரணையில்.



"ஓஹோ அப்படியா நான் யாருன்னு உனக்கு தெரியாது இல்ல.. என் அண்ணன் யாருன்னு உனக்கு தெரியாது இல்ல.." வெண்பாவின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. கோபத்திலும், ஆத்திரத்திலும் அவள் உதடுகள் துடித்தது.


"சரி டி.. நாங்க யாரோவா இருந்துட்டு போறோம். நீ நல்லா இருக்கே இல்ல. நீ இருக்க இல்ல. எங்களுக்கு அது போதும். உன்ன நாங்க பார்த்துட்டோம். நீ எங்க இருந்தாலும் நல்லா இரு. அது போதும் எங்களுக்கு..." என்றபடி அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் வெண்பா.



லிப்டுக்குள் நுழைந்தவளுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை. வெடித்து அழ வேண்டும் போன்று இருந்தது அவளுக்கு. கரகரவென்று வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கட்டுப்படுத்திய அழுகையோடு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்.


வெளியே வந்தவள் உதட்டை அழுந்த கடித்து அழுகையை மட்டுப்படுத்த முயன்றும் அவளால் முடியவில்லை‌‌. அவள் கண்கள் கண்ணீரை

உதிர்த்த படியே இருந்தது. வழிந்த கண்ணீரை ஷாலில் துடைத்தபடியே நிமிந்தவளுக்கு அவள் கண்ட காட்சி மேலும் கண்ணீரை வரவழைத்தது.


அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை தான் காண்பது நிஜம் தானா..? இது கனவல்லவே ..?என நன்றாக கண்களை துடைத்துக் கொண்டு பார்த்தாள் .


அது நிஜமே தான் கொஞ்சம் கூட பொய்யில்லை உடனே தன் சகோதரனை கைபேசியில் அழைத்தாள். சில நொடிகளுக்கு பின் கைபேசி எடுக்கப்பட "அண்ணா... அண்ணா.. உடனே வெளியே வர முடியுமா.." என தழுதழுத்தாள்.


"வந்துட்டியா எனக்கு வேலை முடிஞ்சுதுடா கொஞ்சம் வெயிட் பண்ணு.. இதோ வந்துடுறேன்..." என்று வைத்தவன், ரகுவுக்கு அழைக்க "கடைசி பேசண்ட் பாத்துட்டு இருக்கேன் டா நீ போ நான் வரேன், எங்க வெளியே வா.. ஓகே நான் வரேன்.." என்றபடி வைத்து விட்டான்.


'வெண்பாவோட குரல் சரி இல்லையே ஒருவேளை துளசிய பார்த்துட்டாளோ ஆனா வெளியே வர சொன்னாளே.. என்னவா இருக்கும்..' என்றபடி தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்தான்.


அங்கே கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி நின்று கொண்டிருந்த வெண்பாவை கண்டு பதறிப் போய் அருகே வந்தான்.


"குட்டிமா என்ன ஆச்சுடா.." என்று தோள் பற்றி திருப்ப அவனை திரும்பி கூட பாராது அந்த சாலையின் எதிர்பக்கத்தை நோக்கி கை காட்டினாள் வெண்பா.


"என்ன அங்கே.." என்று அவள் காட்டிய திசை நோக்கியவன் அதிர்ந்து போனான். அது அதிர்ச்சியா அல்லது ஆனந்தமா...?


தொடர்வார்கள்...
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
மதுர துளசி edited அத்தியாயம் - 9

மதுரனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. காண்பது கனவா..? நனவா..?

"வெண்பா அது..?" அவனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. எத்தனை வருடத் தேடல். 'இனி எப்படி மறுக்கப் போகிறாய் துளசி..' என்று அவன் மனம் துளசியை கேள்வி கேட்டது. வெண்பாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

அவளுக்குமே அதே மனநிலை தான். "ண்ணா என அழுகை வெடித்தது அவளுக்கு. அவள் கைப் பிடியை விடாமலேயே சாலையைக் கடந்து எதிர் திசை அடைந்து அங்கே வெள்ளை வேட்டி சட்டையில் நின்றிருந்த மனிதரை அணுகினான். அருகே சென்றவன் அவர் முன் நின்று அவரை பார்த்து "வெண்பா இது ...." என வார்த்தை வராமல் அவன் தடுமாற

"நீங்க துளசியோட அப்பா தானே..." என கண்களில் நீர் வழிய கேள்வி எழுப்பினாள் வெண்பா.


ஆம் அவர் துளசியின் தந்தை சின்னச்சாமி. அவர் யாரென்று தெரியாமல் விழிக்க
சட்டென அவர் கைகள் பற்றினான் மதுரன்.

ஒரு புதியவன் தன் கை பற்ற பதறிய அந்த மனிதர் "யாருப்பா என்னப்பா.." என அவர் பின்னடைய அவரை அடுத்து சற்று தள்ளி நின்ற இரண்டு பெண்கள் மிரட்சியுடன் அவரின் அருகே "ப்பா ..." என்று அலறலுடன் ஓடி வந்தனர்.

அவர்களின் பதட்டத்தை உணர்ந்த மதுரன் "பயப்படாதீங்க என்னை தெரியலையா.. நான் தான் மாணிக்கவாசகர் வாத்தியார் மகன் தமிழ் மதுரன்.. இவ வெண்பா..." என்றதும் அவரின் கைகள் தானாய் மதுரனின் கரங்களை இறுகப்பற்றிக் கொண்டது. கண்கள் கசிய "தம்பி..." என அவர் குரல் எழும்பாமல் தழுதழுக்க அவரைப் பற்றி ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் மதுரன்.

"எங்க இருந்தீங்க இத்தனை வருஷமா...? நானும் அப்பாவும் உங்கள தேடாத இடம் இல்ல. உங்களை இங்க பார்ப்பேன் னு நினைக்கவேயில்ல..." என்றவாறே அவரை விடுவித்து மகிழ்ச்சியில் வடிந்த கண்ணீரைத் துடைத்தான்.

வெண்பா அழுகை நிற்கவேயில்லை. "குட்டிம்மா விட்றா அதான் கெடச்சுட்டாங்களே." என அவன் தங்கையை பார்த்து போது தான் அவள் பார்வை நிலைத்திருந்த உருவத்தை பார்த்தான். அதிர்ச்சியில் உறைந்து போனான்.

கன்னத்தில் இருந்து மேலுதடு வரை ஒரு வெட்டுப்பட்ட தழும்பு கழுத்தின் பக்கவாட்டில் தோள் பகுதியில் ஒரு வெட்டு தழும்போடு உருக்குலைந்த தோற்றத்தில் ராதா. துளசியை விட நிறத்திலும் அழகிலும் ஒரு படி அதிகமானவள் ராதா. மதுரனோடு படித்த நண்பர்களே ராதாவின் கடைகண் பார்வை கிடைக்காதா என்று ஏங்குவதை அவனும் அறிந்ததே இருந்தான். அப்படி பட்டவளை முகத்தில் வெட்டுத்தழும்புடன் உடல் நலிந்து உருகுலைந்த நிலையில் காண்போம் என்று அவன் கனவிலும் நினைத்தான் இல்லை.

அவளை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை வெண்பா. ஆனால் ராதா உயிரோடு இருப்பாள் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. அவளை வெட்டி போட்டுவிட்டு தன்னை கூட்டி வந்துவிட்டதாய் மணிகண்டன் கொஞ்ச நாளாய் பித்துபிடித்தவன் போல புலம்பிக் கொண்டிருந்ததை மதுரனே கேட்டிருக்கிறான். எப்படியோ பிழைத்துவிட்டாள் என்று மகிழ்வதா இல்லை புத்தம் புது மலராய் இருந்தவள் இன்று உருக்குலைந்து காய்ந்த சருகாய் நிற்பதைக் கண்டு வருந்துவதா என்று புரியாமல் நின்றிருந்தான்.


அப்பொழுது தான் அந்த அமில வார்த்தைகள் அவன் காதுகளை மட்டுமல்ல அவன் இதயத்தையும் தீயாய் சுட்டது.


"போ.. போய் அந்த பெரிய வீட்டுல சொல்லி கொஞ்சநஞ்சம் ஒட்டிருக்க அவ உசிரையும் எடுத்துறச் சொல்லு... ராதா இன்னும் சாகல.. ஏன்டா அவளையும், அவ குடும்பத்தையும் உசிரோட விட்டீங்கன்னு போய் கேளு. ஒருத்தி போனா என்ன இன்னும் மூனு பொம்பள புள்ளைங்க இருங்காங்கல்லன்னு கேட்டானுங்களே அவனுங்ககிட்ட இங்க தா இருக்காங்கன்னு போய் சொல்லு... இதுக்கு தானே ... நீ துளசி தானே... நீ துளசி தானேன்னு இதுக்கு தானே தேடிட்டு இருந்த... போ போய் அவங்களை கூட்டிட்டு வந்து மொத்தமா எங்களை காவு கொடுத்துடு.. அப்போவாச்சும் நீங்கல்லாம் நிம்மதியா இருப்பீங்களா பார்க்கலாம்.." என்று ரௌத்திரத்தோடு நின்றாள் ஏஞ்சலின்.


'நானா... நான் உங்களை அவர்களுக்கு காட்டி கொடுப்பேனா... உங்களை நான் பலியிடுவேனா
... அவள் பேச பேச மதுரன் மனம் கூக்குரலிட்டது. அவன் காதுகளை அவனால் நம்பவே முடியவில்லை. துளசி இப்படி எல்லாம் பேசுவாயா. இத்தனை காலம் அவளையும், அவள் குடும்பத்தையும் தேடி அலைந்தது இவர்களுக்கு பலி கொடுக்க என்றா எண்ணிக் கொண்டிருக்கிறாள். அடக்க மாட்டாமல் "துளசி..." என குரல் நடுங்க அவன் அழைக்க

"ஆமாடா நான் துளசி தான் இப்ப என்னங்கற அதுக்கு. ஊரே அடிச்சு துரத்தி உசுருக்கு பயந்து பிள்ளைகளையாவது காப்பாத்தணுமேன்னு ஓடி ஒளிந்த சின்னச்சாமி தான்... காதலிச்சவன் எப்படியும் நம்மள கைவிட்டுட மாட்டான்னு குருட்டு நம்பிக்கையில் பெத்தவங்களையும்
கூடபொறந்தவங்களையும் தவிக்க விட்டு ஓடிப்போன அதே ராதா தான் இப்ப என்ன செய்யணும்ற... போ போய் உன் ஊர்காரங்களை வரச் சொல்லு..." என ஆங்காரமாய் நின்றாள் துளசி.


"ஏய் யாரை பார்த்துடி சொல்ற.. எங்கண்ணனையா... நீங்க போனதுல இருந்து இன்னைக்கு வரையிலும் உங்க யாருக்கும் எதுவும் ஆகியிருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்குற குடும்பம் டீ எங்களோடது. இன்னைக்கு வரையிலும் எங்க அண்ணனும், எங்க அப்பாவும் உங்களை தேடாத இடம் கிடையாது உன் சாயல்ல யாரையாவது பாத்துட்டா கூட அது நீயா இருக்கக் கூடாதுன்னு அவங்க ஊர் வரையிலும் போய் பாத்துட்டு வருவான் எங்க அண்ணன்.. அவனைப் பார்த்தா காட்டிக் கொடுக்கிறவன்னு சொல்ற..." என்று கோபத்தில் கொந்தளித்தாள் வெண்பா. தன் தமயனை காட்டிக் கொடுக்கிறவன் என்று கூறி விட்டாளே என்ற ஆதங்கம் வெண்பாவிற்கு.

எவ்வளவு துன்பப்பட்டு இருந்தால் இவள் இத்தனை ஆவேசத்தோடு பேசியிருப்பாள். இத்தனை ஆண்டுகால வாழ்க்கை போராட்டமே அவள் நேசமாய் பழகியவர்களை கூட சந்தேகிக்க செய்திருக்கிறது என்று அவன் உணர்ந்தான்.

"வெண்பா.." என்று ஒற்றை கையமர்த்தலில் தன் தங்கையை அடக்கிய மதுரன், சூழலை கருத்தில் கொண்டு

"துளசி இது ஹாஸ்பிடல் நாம இங்க நின்னு வாக்குவாதம் செஞ்சிட்டு இருந்தா அது மத்தவங்க கவனத்தை ஈர்க்கும். அது வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்.." என்றவன் சின்னசாமியின் கைகளை ஆதரவாய் பற்றி கொண்டு

"எப்பவும் நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன்ல நானும் ஒருத்தன். நிச்சயமா என்னால உங்களுக்கு கஷ்டமும் வராது. என்னை நீங்க முழுசா நம்பலாம். இங்க நின்னு பேச வேண்டாம். கேண்டீன் போலாமா என் கூட வருவீங்களா..." என்று அமைதியாக கேட்டான்.

சின்னசாமி அமைதியாக துளசியை ஏறிட்டு பார்க்க அவள் முகத்தில் ரௌத்திரம் தெறித்தது. இங்கு இந்த வாக்குவாதங்கள் நிகழும் போதே ரகு வந்து விட்டிருக்க மெதுவாய் அவன் துளசியிடம் "துளசி... சாரி ஏஞ்சலின் இங்கு நின்னு பேச வேண்டாம் மதுரன் சொன்னது ரைட். அவங்களும் எவ்வளவு நேரம் மரத்தடியில் நிற்பாங்க... நம்ம உள்ள போலாம். இங்கு எல்லாரும் கூட்டமா நிக்கிறது மேனேஜ்மென்ட் பார்த்தா ஏதாவது பிரச்சனையாகும்.." என்றபடியே

"வெண்பா நீ அவங்களை கூட்டிட்டு வா..." என்ற படியே துளசியின் தந்தையிடம் "வாங்கய்யா உள்ள போலாம் நான் தமிழ் மதுரனோட நண்பன் டாக்டர் ரகுபதி.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் கையோடு அவர்களை கேண்டீனுக்கு அழைத்துச் சென்று உபசரிக்கத் தொடங்கினான்.


துளசியால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சாதாரணமாய் இருக்க முடியாமல் ஒரு வித பதட்டத்தோடு அமர்ந்தாள்.

வெண்பா ராதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீரில் கரைய. ராதா உணர்வற்று அமர்ந்திருந்தாள். அவளை கண்ட ரகுவிற்கு ஏதோ செய்ய

"அலோ ... போதும் நிறுத்தும்மா... அவங்களை முதல்ல சாப்ட வை.. அதைவிட்டுட்டு அழுதுட்டு இருக்க... லூசு.." என திட்ட..

அவன் கூறியதை கேட்டவள் சுற்றும், முற்றும் பார்த்தபடி தன் கண்களைத் துடைத்துக்கொண்டே "சாப்பிடு ராதா.." என்று அவளுக்கு வேண்டியதை கவனித்தவள்,

"ஏய் இவ அல்லி யா.." என அருகில் இருந்தவளை அப்பொழுதான் உணர்ந்தாள்.

"நான் அருந்ததி... அல்லி திருச்சில ..." என்று ஏதோ கூற வர

"சும்மா சாப்பிட மாட்ட..." என தங்கையை அடக்கினாள் துளசி.

அத்தனை நிகழ்வுக்கு இடையேயும் மதுரனின் கண்கள் துளசியைவிட்டு விலகவில்லை. அவளின் பரிதவிப்பு... அடக்கப்பட்ட கோபம். யாரும் தங்களை கவனிக்கிறார்களா என பார்வையால் தேடும் பய உணர்வு என அத்தனையும் அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அதைவிட முக்கியமாக அவன் மீதான வெறுப்பு அவள் முகத்தில் அப்பட்டமாய் படித்திருப்பதை உணர்ந்தான். அவ்வப்போது அதே வெறுப்போடு அவள் பார்வை அவன் மீது படிந்து செல்வதை அவன் கவனித்தான்.

அவன் அமைதியாய் துளசியைக் கவனித்துக் கொண்டிருக்க சின்னசாமியிடம் பேசிக் கொண்டிருந்த ரகு "இங்க பாருங்க ஏஞ்சலின் நீங்க தமிழை நம்பலாம். உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் எங்களால எந்த ஆபத்தும் வராது. வேற யார் மூலமாவது வந்தா கூட உங்களுக்காக நாங்க இருக்கோம். நீங்க அநாவசியமா பயப்படாதீங்க.. நீங்க ஏன் மதுரனை கண்டு பயப்படுறீங்கன்னு எனக்கு புரியல..." என கேட்டான்.

துளசியை கேட்ட கேள்விக்கு சின்னசாமி பதிலளித்தார் "அந்த புள்ள பயப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்குதுங்க தம்பி.. இத்தனை வருஷமா எத்தனை ஊரு மாத்தி இருப்போம். எங்க ஊருகாரங்களுக்கு பயந்து பெத்த புள்ள உசுருக்கு போராடிட்டு கிடக்குதுன்னு தெரிஞ்சு கூட எங்களால போயி காப்பாத்த முடியாம இருக்கிற மத்த பிள்ளைகளை காப்பாத்துனா போதும்னு ஓடி ஒழிஞ்சி எத்தனை வீட்டை மாற்றி இருப்போம். பாவி மவ செஞ்ச அந்த ஒரு வேலையால தானே தம்பி..." என்றார் விரத்தியோடு.

அவர்களின் ஊரும் இந்தச் சமூகமும் எத்தனை தூரம் அவர்களை ஓட ஓட விரட்டி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக மூவரும் உணர்ந்தனர்.

"இனிமேல அப்படி ஒரு துன்பம் உங்களுக்கு வரவே வராது..." என்றான் மதுரன் உறுதியோடு. ஆனாலும் அவர்கள் நால்வரும் தங்கள் இயல்பில் இல்லை என்பதை அவர்கள் மன இறுக்கமும், பதட்டமும் தெளிவாக காட்டியது. அதிலும் துளசி கோபத்தின் உச்சத்தில் இருப்பதை நன்றாக உணர்ந்தனர்.

என்ன செய்து இவர்களின் துன்பத்தை தீர்ப்பது என்று அங்கிருந்த மற்ற மூவருக்கும் புரியவேயில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. இனி எப்பொழுதும் அவர்களுக்காய் உடன் நிற்க வேண்டும் என்பதே அது.

தொடர்வார்கள்...
 

Latest posts

New Threads

Top Bottom