மதுரதுளசி
அத்தியாயம் - 1
இரவின்
இருளுளை
கிழித்துக்கொண்டு
நுழைந்தது அந்த
பெருமழையின்
பேரிரைச்சல். அந்த வீட்டுக் கூரையின் மீது பெருங்கற்களை வாரி இரைப்பதைப் போன்றதொரு சப்தம் மதுரனின் தூக்கத்தை எப்போதோ விரட்டியிருந்தது. அந்த நள்ளிரவிலும் அவனது நினைவில் , இப்படி இடி இடித்து பெய்யும் மழைக்கு பயந்து நடுங்கிப் போவாளே,இப்பொழுது என்ன செய்வாள், அவள் தந்தை அவளுக்கு துணையிருப்பாரோ.... இல்லை அம்மாவென்று அவள் தாயின் அருகில் கோழிகுஞ்சாய் தஞ்சமடைந்திருப்பாளோ. இடி சத்தம் கேட்டா அர்ஜூனா, அர்ஜூனா சொல்லு துளசி பயமா இருக்காது என பால்யத்தில் மதுரன் சொன்னதும்,மதுரா பயமாருக்குடா.. மதுரா.. மதுரா.. என கைகளை இறுகப் பற்றி அவன் தோள்மீது முகத்தைப் புதைத்து அருகே அணைத்து கிடந்தது நினைவில் நிழலாடியது. அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது. இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியாது. ஆனால் அவளது நினைவுகள் மட்டும் அவனை நீங்காது நிழலாய் தொடர்கிறது.
என்னை விட்டு எங்கே போன துளசி. என்கிட்ட சொல்லாம ஏன் போன...? காற்றோடு நித்தமும் அவன் கேட்கும் கேள்வி இது.
மதுரனின் முழு பெயர் தமிழ்மதுரன். தமிழாசிரியர் மாணிக்கவாசகர், மனோன்மணி தம்பதியின் அருமை புதல்வன். உடன் பிறந்த தங்கை வெண்பா. பள்ளி இறுதி ஆண்டு வரை தன் சொந்த மண்ணான கோபிசெட்டிபாளையத்தின் ஒரு கிராமத்தில் படித்தவன். தந்தையின் கனவை தனது லட்சியமாய் சுமந்து நன்றாக படித்து மருத்துவக் கல்வியை கோவை அரசுகல்லூரியில் முடித்தான். நல்லவேளை அப்பொழுது நீட் தேர்வு நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. இல்லையெனில் நம் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்தவம் என்பது எட்டாக்கனி ஆனது போலே மதுரனுக்கும் நேர்ந்திருக்கும்.
மருத்துவப்படிப்பை முடித்தவன், சிறப்பு மருத்துவராக எலும்பு மூட்டு மருத்துவம் (Orthopaedic) பட்டம் பெற்றான்.
என்னதான் அவன் படிப்பு, கல்லூரி, மருத்துவம் என முழுக்க முழுக்க மருத்துவத்துறையில் அவன் கவனத்தை செலுத்தினாலும் அவன் ஒவ்வொரு அணுவும் தன்னைப் போலவே துளசியும் மருத்துவக் கனவுகளோடு படித்தவள் தானே... அவளும் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்திருப்பாளா என்ற ஆவலில் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் அவளை தேடிக்கொண்டிருந்தான்.
மதுரன் நான்காம் வகுப்பு படிக்கும் போது துளசி ஒன்றாம் வகுப்பு சேர்ந்தாள் அன்று முதல் மாணிக்கவாசகர் வாத்தியாரின் செல்ல மாணவி அவள்.
மாணிக்கவாசகர் அந்த கிராமப்புற மாணவர்களுக்கு என மாலையில் சிறப்பு டியூஷன் வகுப்பை எடுப்பார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என முனைவார். தன்வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் அனைத்து மாணவர்களையும் தன் டியூஷன் வகுப்பிற்கு வர சொல்லி பாடம் நடத்துவார்.
கல்வி ஒன்றே அடுத்த தலைமுறையையும், சமுதாயத்தையும் முன்னேற்றும் என்பது அவர் அறிந்த பால பாடம் அனுபவ பாடமும் கூட. அவரின் டியூஷன் வகுப்பிற்கு அந்த ஊர் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாத சுற்று வட்டாரத்திலிருந்து பல கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இவரிடம் டியூஷனுக்கு வருவார்கள் .
வள்ளுவனுக்கேற்ற வாசுகியாய் மனோன்மணி அம்மாளும் தனக்கு தெரிந்தவற்றை ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார். அப்படித்தான் துளசியை மதுரன் வீட்டிற்கு டியூஷன் கொண்டு வந்து விட்டார் துளசியின் தாய் பவானி.
வெண்பாவும், துளசியும் ஒரே வகுப்பு தான் என்றாலும் வெண்பாவைவிட துளசி ஒரு வருடம் மூத்தவள். துளசியை தாமதமாகவே பள்ளியில் சேர்த்தனர் பவானி, சின்னச்சாமி தம்பதியினர். அவளுக்கு அடுத்தடுத்து பிறந்த மூன்று பிள்ளைகளை வளர்க்க துளசியையும், அவளுக்கு மூத்தவளான ராதாவையும் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததை கண்டு மாணிக்கவாசகமே அவர்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்தார்.
பள்ளியிலும் சரி டியூசன் வகுப்பிலும் சரி ராதா, துளசி, வெண்பா மூவரும் ஒட்டிக்கொண்டே திரிவார்கள். தங்கைகளை பார்த்துக்கொள்ளவென ராதா பள்ளிவிட்டு நேரே வீடு செல்ல.. துளசி நேராக வெண்பாவோடும், மதுரனோடும் மனோன்மணியைத் தேடி வந்துவிடுவாள். மனோன்மணிக்கும் மாநிறத்தோடு, பளிச்சென்ற கண்களுடனும், குண்டு கன்னங்களுடனும், எப்பொழுதும் பச்சரிசி பல் காட்டி சிரித்தபடி வளைய வரும் துளசியை மிகவும் பிடிக்கும். வெண்பாவின் ஆடை அணிகலன்களை துளசிக்கும் உடுத்தி அழகு பார்ப்பாள். எல்லாவற்றையும் துளசியோடு பங்கு போடும் வெண்பா அண்ணனை மட்டும் விட்டுத் தரமாட்டாள். ஆரம்பத்தில் துளசி மதுரனை அண்ணாவென அழைக்க அழுது ஆர்ப்பாட்டம் செய்யலானாள். எதற்கும் மசியவில்லை. அவன் என் அண்ணன் எனக்கு மட்டும் தான் அண்ணன் அவ அப்படி கூப்பிட கூடாது என ஒற்றைக்காலில் நிற்பாள்.
மதுரனே அதற்கு தீர்வாய் "நீ மதுரன்னே கூப்டுக்கோ துளசி... எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. எங்க வெண்பாக்குட்டிக்கு மட்டும் தான் நான் அண்ணன். இல்லடா தங்கமயிலே.." என அவளை தூக்கி கொஞ்ச சமாதானமானாள் வெண்பா. எப்போதும் மதுரனுக்கு வெண்பா செல்லம், தங்கம், குட்டி தான். அதுவும் என் தங்கமயிலே என அண்ணன் கூப்பிட்டுவிட்டால் அதற்குபின் அவன் மொழிக்கு மறுமொழி கிடையாது வெண்பாவிடம்.
ஆண்டுகள் செல்ல, செல்ல மாணிக்கவாசகரின் மூலம் அந்த கிராமத்தில் கல்வி கற்று அடுத்த தலைமுறை முன்னேற ஆரம்பித்தது. கல்வியினால் சமூகத்தை சீர்திருத்தலாம் என்று எண்ணிய மாணிக்கவாசகர் தன் வீட்டின் மூத்த தலைமுறையை ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆம் அவர் தாய் ராசம்மாள் அந்த காலத்து மனுஷி. சாதி, மதம் பார்க்காமல் எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்து படிப்பு சொல்லிக் கொடுக்கிறான் தன் மகன் என்று ஒரே காரணத்துக்காக தன் கணவனோடு தனியே பிரிந்து சென்றவர்.
தனியே என்றால் வேறு தெருவுகோ வேற ஊருக்கோ அல்ல.. மாணிக்கவாசகத்தின் வீடு அவர் ஆசிரியர் பணிக்கு வந்த பின் கட்டிய பழைய கையோடு வேய்ந்த எட்டுக்கட்டு வீடு. மாணிக்கவாசகரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் வீட்டின் முன் பெரிய களம் உண்டு. பெரிய திண்ணை வைத்த வீடு.
ஏற்கனவே தம் தாத்தா காலத்தில் கட்டிய வீட்டில் தான் மாணிக்கவாசகம், உடன் பிறந்த சகோதரி செல்லம்மா,பிறந்தது வளர்ந்தது எல்லாம் . மகன் ஊர் பிள்ளைகளை எல்லாம் வீட்டிற்குள் அனுமதிப்பது கண்டு பொறுக்காத ராசம்மா வசைப்பாட ஆரம்பித்தாள்.
"என்ன சாதியோ, என்ன சனமோ இப்படி எல்லாத்தையும் ஒன்னு மண்ணா புழங்க விட்டா நாங்க எப்படி அன்னந்தண்ணி உங்கறதுன்னு வேணாமா.." என உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். மாணிக்கவாசகம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
"பெத்த தாயை விட ஊராம்புள்ளைங்க முக்கியமா போச்சா.. உனக்கு..." என்றபடி தங்கள் பழைய வீட்டிலே தனி குடித்தனம் சென்று விட்டார். பெருசுகள் இருவரும் அங்கே தான் ஜாகை. தப்பி தவறி கூட எந்த பிள்ளைகளும் அந்தப் பக்கமாய் கால் வைத்து விட முடியாது. அவ்வளவுதான், அவர்கள் குலம் கோத்திரத்தோடு சொல்லி வசைப்பட ஆரம்பித்து விடுவார் ராசம்மா.
தன் மாமியாரின் குணமறிந்த மனோன்மணி வரும் பிள்ளைகளிடம் முன்னமே எச்சரித்து விடுவார். கிழிக்கப்படாத லக்ஷ்மணன் கோடாய் இரண்டு வீட்டிற்கு இடையே கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு இருந்தது. அதை தாண்டி ராசம்மாவும் இங்கு வருவதில்லை மதுரனையும் வெண்பாவையும் தவிர வேறு யாரும் அந்த பக்கம் செல்ல முடியாது. மீறி சென்று விட்டால் ராசம்மாவின் ருத்ர தாண்டவத்தை ஒரு வாரம் வரை தாங்க வேண்டி இருக்கும்.
இது ஊர் அறிந்த செய்தி என்பதால் யாரும் தப்பி தவறி கூட அந்த பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.
மதுரனும், துளசியும் வெண்பாவும், ராதாவும் தங்கள் பால்யத்தை ஒன்றாக ஆனந்தமாய் கழித்தனர். ராதா எட்டாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்திக் கொள்ள துளசியும், மற்றவர்களுக்கும் பள்ளி படிப்பை தொடர்ந்தனர்.
என்னதான் மாணிக்கவாசகம் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் பெண்களுக்கு ஏனோ அது எட்டாக கனியாகவே இருந்தது பெரும்பாலும் வயது வந்ததும் அவர்களது கல்வி அத்தோடு முற்றுப்பெற்றது. என்ன செய்தும் அவரால் அதை மட்டும் மாற்றவே முடியவில்லை. ஒன்று இரண்டு பெண் பிள்ளைகள் 9 10 தாண்டினாலும் கல்லூரி வரை செல்லவில்லை. அதற்குள் அவர்களுக்கு கால் கட்டு போட்டு விடுவார்கள்.
ராதா பள்ளி படிப்பை நிறுத்தினாலும் துளசி தொடர்ந்தாள். துளசியுடன் அந்த வயதில் உள்ள பெண் பிள்ளைகள் எல்லாமே தங்களது கல்வியை தொடர்ந்தனர்.
துளசியும் வெண்பாவும் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுத மதுரன் தீவிரமாய் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினான்.
தேர்வு முடிந்த இரண்டாம் நாளில் அந்த ஊரின் பெரிய வீட்டு மகனோடு ராதா ஊரைவிட்டு ஓடி இருந்தாள். இன்றைய காலத்தில் கூட காதலித்தால் சேர்த்து வைக்க படித்தவர்களே யோசிக்கிறார்கள் எனும் போது சாதித் தீயில் ஊறி இன்னும் சாதி, மதம் பாரம்பரியம் கௌரவம் என தங்களை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி அவர்களும் வெளிய வராமல், யாரையும் உள்ளேயும் அனுமதிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழும் ஊர் அது. அப்படிப்பட்ட ஒரு ஊரின் தாழ்ந்த குடியாக கருதப்படும் ராதா பெரிய வீட்டு மகன் மணிகண்டனோடு ஊரைவிட்டு ஓடிவிட ஊரே ஒன்று திரண்டு துளசியின் தாய் தந்தையை கட்டி வைத்து அவர்கள் எங்கே என கேட்டு சித்திரவதை செய்தது.
அவர்கள் எத்தனை அழுதும், புரண்டும் கூட அவர்களை விடுவிக்கவில்லை அந்த ஊர் மக்கள். ஒரு கூட்டம் ஓடிப் போனவர்களை தேடிச் சென்று விட, மாணிக்கவாசகம் ஊரிடம் என்ன பேசியும்.. துளசியின் தாய் தந்தையை அவரால் விடுவிக்க இயலவில்லை.
அவர்கள் விடுவிக்கவில்லை எனில் தான் போலீசுக்கு போக நேரும் என்று அவர் ஒரு அரசு பணியாளனாய் மிரட்டியும் கூட அவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அவரும் அதை அறிவார். என்னதான் அவர் ஆசிரியராக அந்த சமூகத்தின் செல்லரித்துப் போன பழைய கட்டுப்பெட்டித்தனங்களை மாற்ற எண்ணினாலும், ஒட்டுமொத்த ஊரையும் எதிர்த்து தனி ஒருவரால் ஏதும் செய்ய இயலவில்லை. ஆனாலும் தன் கண் முன் குடும்பம் அழிந்து போவதை அவர் விரும்பவில்லை.
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவென அவர் சென்று விட, திரும்பி வந்து பார்க்கும் பொழுது அந்த குடும்பம் அந்த ஊரிலேயே இல்லை.
பரீட்சை முடிந்து அடுத்த நாளே தன் அத்தை செல்லம்மாவின் ஊர் திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பிய மதுரனும் வெண்பாவும் கண்டது துளசியின் எரிந்து போன குடிசையைத்தான்.
நிலைகுலைந்து போனான் மதுரன். எங்கே போனார்கள் என்னவாயிற்று என தந்தையிடம் கேட்டு அழுது அரற்றி ஓய்ந்து போனால் வெண்பா. அவருக்கும் தெரிந்தால் அல்லவா கூறுவார் அவருக்கே தெரியாத ஒன்றை என்னவென்று சொல்வார்.
ஒரு வாரம் கழித்து நடைபிணமாய் மணிகண்டன் அழைத்துவரப்பட்டான். ராதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது அந்த ஊரின் சிலரைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.
அவர்களும் பெரிய வீட்டு விசுவாசி என்பதால் விசயம் கடுகளவு கூட கசியவில்லை.
போலீசும் அந்த ஊரின் ஒர் அங்கமாகவே செய்பட மாணிக்கவாசகர்
தனி ஒருவராய் அந்த குடும்பத்தையும், ராதாவையும் தேடாத இடமில்லை. இன்றுவரை அவர்கள் யாரையும், யாரும் பார்க்கவில்லை எங்கே போனார்கள் என்ன ஆனார்கள். உயிருடன் தான் இருக்கிறார்களா என யாருக்கும் தெரியாமல் போனது.
"எங்கே இருக்க துளசி..? நிச்சயமா நீ உயிரோட தான் இருப்பேன்னு எனக்கு தெரியும்.எங்கேயடி மறைந்திருக்கிறாய்.." என அவன் மனம் உள்ளுக்குள் அழுது அரற்றியது.
காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில்,மனதில் தோன்றிய ஓர் மெல்லிய உணர்ச்சி அவனுக்குள்.ஆம்..காதல் மலர்ந்த ஒரே மாதத்தில் காதலியை தொலைத்து விட்ட காதலன் அவன்.