3
“ப்ளீஸ் அங்கிள், இந்த ஒரே ஒரு தடவை ஆர்த்தியை எங்க கூட அனுப்பி வைங்க அங்கிள்” என்று ப்ரியாவும், வேதாவும் ஆர்த்தியின் தந்தை மணிகண்டனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
அவர்களை விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தவர், “அதை ஏன் மா எங்கிட்ட கேட்குறீங்க, ஆர்த்தி வந்தா கூட்டிட்டு போங்க” என்றார்.
“அங்கிள் உங்களுக்கு தெரியாதா அவளைப் பத்தி!எது கேட்டாலும் என் அப்பாவை கேட்கனும், அண்ணனை கேட்கனும்னு புராணம் பாடுறா. அதான் இங்க வந்தோம்” என்றாள் குறை கூறும் குரலில்.
அப்போது மணிகண்டனின் முகம் இன்பமாய் நிமிர்ந்தது, சிறு வயதிலிருந்தே ஆர்த்தி இப்படித்தான் எல்லாம் அப்பா மயம், அப்பா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வாள். அதற்கு அடுத்தபடி அவளுடைய அண்ணன் சந்துரு. அவன் அவளது ஆசானும் கூட அவளது படிப்பு, பழக்கவழக்கம், பேச்சு இப்படி எல்லாவற்றையும் நெறிபடுத்தியவன் அவனே.
எப்போதும் எதையும் அப்பாவிடமும், அண்ணனிடமும் கேட்டு கேட்டே பழகியவளால் அதனை எளிதில மாற்றிக் கொள்ள முடியவில்லை.
அப்படி அவர்களை ஆலோசிக்காமல் எதையாவது செய்தால் அவள் தப்பும் தவறுமாக வேறு செய்து வைப்பாள். அதனால் எதற்கு வம்பென்று எதுவானாலும் அப்பா, அண்ணனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் என்கிற பார்முலாவை வகுத்துக் கொண்டாள். அதில் என்ன சேதாரமனாலும் அவர்கள் தானே பொறுப்பு என்பது அவளது எண்ணம்.
இப்போது இந்த அவுட்டிங்கிற்கு அவளாக தன்னிசையாக முடிவெடுக்கலாம். ஆனால் பதினெட்டு வருடமாக உறைந்துவிட்ட பழக்கம் மாற மறுத்தது. அது மட்டுமில்லாமல் அப்படி மாற்றினால் அவர்களது மனம் கவலையுறுமே என்கின்ற வருத்தமும் அவளுக்கு இருந்தது. அதனால் அந்த பார்முலாவை இறுக பிடித்துகொண்டாள்.
மற்ற எல்லாவற்றிலும் அந்த பார்முலா வொர்க் அவுட் ஆனது ஆனால் காதலில்?...........
“அங்கிள் சீக்கிரம் சொல்லுங்க எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் பஸ்ஸ்டாப்ல வெயிட் பண்றாங்க” என்று ப்ரியா மணிகண்டனை அவசரப்படுத்தினாள்.
அவரோ உள்நோக்கி, “அம்மாடி ஆர்த்தி..... இங்க வாம்மா” என்றார்
அவளோ பவ்யமாக அப்பாவின் முன் வந்து நின்று “என்னப்பா கூப்பிட்டீங்களா” என்றாள்.
வேதாவோ, “அட! இது நம்ம ஆர்த்தியா?” என்கிற ரேஞ்சில் பார்த்து வைக்க,
அவர்கள் வீட்டிற்கு அவ்வப்போது வரும் ப்ரியாவோ இதெல்லாம் சகஜமப்பா என்பது போல் பார்க்க, “உன் பிரெண்ட்ஸ் எல்லாம் பீச்சுக்கு போறாங்கலாம், நீயும் போறியா?” என்று கேட்டார் மணிகண்டன்.
ஆர்வமாக தோழிகளை பார்த்தாலும், “உங்கள் விருப்பம்ப்பா” என்றன ஆர்த்தியின் உதடுகள். மணிகண்டன் ஆர்த்தியின் கண்களை படித்துவிட்டார்.
“இதுதான் ஃபைனல் இயர். பரீட்சை முடிஞ்சிட்டா ஆளுக்கொரு திசையா பறக்க போறீங்க, அப்புறம் சந்திக்க முடியுமோ? முடியாதோ?! ஒருதரம் தானே போ... போய் ஜாலியா என்ஜாய் பண்ணு” என்று கூறி தோழிகள் மூவர் வயிற்றிலும் பாலை வார்த்தார். அப்படியே ஒரே ஒரு முறைத்தான் என்று அடிக்கோடும் இட்டுவிட்டார்.
அதனை கண்டும் காணாமலும் இந்த முறை விட்டதே போதும் என்பது போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் ஈசிஆர் சாலை சைட் பீச்சில் நின்றனர்.
அன்று வார நாள் என்பதால் பீச்சில் அதிக கூட்டம் இல்லை, மொத்தமாக ஒரு பத்து பேர் இருந்திருந்தால் ஆச்சர்யம் தான்.
“ஏய் போனை கொடுடி” என்று ப்ரியாவிடமிருந்து பிடுங்காத குறையாக போனை பிடுங்கி தருணிற்கு அழைத்தாள்.
எதிர்முனையில் போனை எடுத்து காதுக்கு கொடுத்த தருண், “இதோ வந்துடேன் .ஃபைவ் மினிட்ஸ், நீ பீச்சுலேயிருந்து வெளிய வந்து மெயின் ரோட்ல நில்லு நான் வந்துடுவேன்.” என்று செல்லை அணைத்தான்.
ப்ரியாவிடம் போனை கொடுத்துவிட்டு “ஏய் ப்ரியா மூணே மணிநேரம் தான் ஓடி வந்துடுவேன் சரியா”என்று சந்தோஷத் துள்ளலுடன் மெயின் ரோட்டை நோக்கி ஓடினாள் ஆர்த்தி.
ஆறு மாதம் கழித்து தருணை சந்திக்க போகிறாள். அவன் வேலைக்கு சேர்ந்த பிறகு முதன்முறையாக அவனை பார்க்க போகிறாள். முன்பே அவன் ஸ்மார்ட்டாக இருப்பான். இப்போது வேலை கிடைத்த பூரிப்பில் மேலும் மெருகேறி எப்படியிருப்பான் என்ற கற்பனையில் தருணின் நினைவுகளோடு நடந்தவளின் அருகில் சடன்பிரேக் போட்டு கிரீச்.... என்ற அலறலுடன் நின்றது ஒரு கருப்பு நிற ஆடி கார்.
காரின் சத்தத்தில் தான் நிகழ்வுலகிற்கு வந்தாள் ஆர்த்தி. அப்போது தான் அவளுக்கு தான் நடுரோட்டில் நிற்கிறோம் என்பதே உறைத்தது.
ஒருவித பயத்துடனும், படபடப்புடனும் காரை ஓட்டி வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள். ஏனெனில் உள்ளே இருந்தவன் இவளை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வையை சந்திக்க பயந்தவள், “ச.... சாரி” என்றாள் சத்தமே எழாமல் கையை உயர்த்தி உதடுகளை பிரித்து.
அவளையே உறுத்து விழித்தவன் பின்னால் நின்ற காரின் ஹாரன் ஒலிக்கு செவி சாய்த்து தன் காரின் கியரில் கரம் பதித்தான். அதற்குள் ஆர்த்தியும் ரோட்டின் ஓரத்தில் வந்து நின்று கொண்டு, குனிந்த தலை நிமிராமல் கண்களை மட்டும் மெல்ல உயர்த்தி அவனை பார்த்தாள்.
இவள் பார்ப்பதை பார்த்தவன் வேகமாக தன் நெற்றிபொட்டில் தன் உள்ளங்கையால் அடித்துக் கொண்டான். அவனது மைன்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்தாள் ஆர்த்தி
“சரியான சாவுகிராக்கி”
“வீட்டுல சொல்லிட்டு வரலையா?”
“எங்கேயிருந்து தான் கிளம்பி வருதுங்களோ” என்று ஏகப்பட்ட சினிமா வசனம் ஒன்றோடு ஒன்று முட்டி மோத, “ச்சே... இவன் கார் டிரைவரை போல தெரியலையே பணக்கார கலை தெரியுதே.” அதனால் இப்படி யோசித்திருக்க மாட்டான், அவனுடைய ஸ்டேட்டஸிற்கு தகுந்தார் போல் ஏதாவது இங்கிலிஷில் திட்டியிருப்பான்.
“இடியட்”
“ஸ்டுபிட்” இப்படி ஏதாவது.. அவளது நினைவுகளை கலைப்பதற்கு அங்கே அவளருகில் தன் டூவீலரை நிறுத்தினான் தருண்.
தருணை பார்த்ததும் மற்றது எல்லாம் மறந்தே போனது. அவள் எதிர்பார்த்தது போலவே அவன் மெருகேறியிருந்தான். டிப்டாப்பாக பார்மலாக உடுத்தியிருந்தான் அவனை முழுமையாக தன் விழிகளுள் சிறை செய்ய முயன்றாள்.
இது எல்லாமே அவனுடைய ஹெல்மெட்டை கழட்ட அவன் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே முடிந்துவிட்டது. ஹெல்மெட்டை கழட்டியவனும் ஒருமுறை அவளை ஆசை தீர பார்த்தான்.
“எப்படி டி இருக்க?” என்றான் அன்பொழுக.
“அதான் பாக்குறியே, இப்படித்தான் இருக்கேன்”என்றாள் சிறு கோபத்துடன்.
“ஹலோ மேடம், நியாயப்படி நான் தான் மேடம் கோபப்படனும். ஆறு மாசமா உன்ன பாக்காம... எவ்வளவு அவஸ்த்தை தெரியுமா....? அப்புறம் எப்படியோ ப்ரியாகிட்ட பேசி இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சேன்” என்றான் அவளது கோபத்தின் நியாயம் புரியாமல்.
“நீயெல்லாம் ஒரு ஹீரோன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன் பாரு, என்னை சொல்லனும். இப்போ தான் இப்படி ஏதாவது செய்யனும்னு தோணுச்சா? ஆறு மாசம் ஆச்சா உன் மூளை வேலை செய்ய?”என்றாள் கோபத்தை இழுத்துபிடித்து.
“ஓ ஆமால்ல... சாரிடி.. இது எனக்கு முன்னமே தோணலை, அது மட்டுமில்லாம டிரெயினிங்ல பென்டெடுத்துட்டாங்க படிப்பு, படிப்பு, படிப்பு அசைன்மென்ட் செஞ்சே நான் அலுத்து போயிட்டேன் சாரிம்மா” என்றான் தன்னிலை விளக்கமாக.
அவன் கஷ்டப்பட்டான் என்பதை தாங்க முடியாமல் அவசரமாக பைக்கின் பின்னே ஏறியமர்ந்து, அவன் இடையை இறுகப் பற்றிக் கொண்டு அவனோடு ஒட்டி அமர்ந்தாள்.
“சரி கிளம்பு என்ன எங்க கூட்டிட்டு போறங்கிறதே பொறுத்து தான் என் கோபம் குறையுமா குறையாதான்னு தெரியும்” என்றாள் குறும்பான குரலில்.
அவளின் தொடுகையிலேயே முற்றிலும் கரைந்து உருகிக் கொண்டிருந்தவனுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.
ஓர் பூச்செண்டே அவன் முதுகில் சாய்ந்திருப்பது போல் உணர்ந்தான்.
அந்த அழகிய தருணத்தை ரசித்தபடியே அவனுடைய வண்டி மாயாஜால் காம்ப்ளக்ஸில் நுழைந்தது.
ஆர்த்தியின் கண்கள் விரிந்தன படமா?!!!!.....
அவளுக்கு படம் பார்க்க ரொம்ப பிடிக்கும் ஆனால் அவளுடைய அப்பா கூட்டிச் செல்லவே மாட்டார் வீட்டில் டிவியில் பார்ப்பதோடு சரி. முதல் முறையாக படம் பார்க்க போகிறாள். அதுவும் தருணுடன். அவளது இதயம் இன்பப் படபடப்பில் சிக்கித் தவித்தது.
டூவீலர் நிறுத்தத்தில் கீழே இறங்கி அவன் முன் வந்து நின்ற ஆர்த்தியின் முகத்தை பார்த்ததும் தருணின் மனம் துள்ளிக் குதித்தது. அவளுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது என்று மனதிற்குள்ளே விசிலடித்தான்.
அவளுக்கு பேசமுடியவில்லை, முதல்முறை தருணோடு வெளியே வந்திருக்கிறாள், யாரேனும் பார்த்து விடுவார்களோ என்கிற பயம் ஒரு பக்கமும், எல்லையில்லா மகிழ்ச்சி ஒரு பக்கமும் அவளை ஆட்டுவிக்க அவள் வாய் திறக்கவில்லை பேசாமல் அவனை பின் தொடர்ந்தாள்.
ஆர்த்திக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்றால் அவளுக்கு பிடித்த நடிகர் ஜெயம்ரவியின் படத்திற்கு தான் டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
“ஹேய்.... தருண்” என்று மகிழ்ச்சியில் அவன் கரம் பிடித்தவள். அவன் கண்களுள் தன்னை தொலைத்தாள்.
“ஹலோ... எக்ஸ்க்யூஸ் மீ” என்ற கடினமான குரலில் தான் தாங்கள் வழியிலேயே நிற்கிறோம் என்பது புரிய அவசரமாக விலகி நின்றனர். அவளின் முகம் கன்றி சிவந்துவிட்டது. ”ச்சே... என்ன நான் பொது இடத்தில் இப்படி வெட்கமேயில்லாமல் நடந்து கொண்டேனே” என்று மனதினுள் மருகினாள்.
அவன் என்ன நினைச்சிருப்பான் என்று கடைக்கண்களால் அவர்களை தாண்டி சென்ற உருவத்தை பார்த்தாள். அங்கே அதே கொலைவெறி பார்வை.
“அய்யோ இவனா? என்ன கொடுமையிது மறுபடியும் இவனா! கடவுளே அவன் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பான்?
ஒன்று நடுரோட்டில் ஓடிவந்து உயிரை எடுக்கிறது அல்லது நடுவழியில் ரொமான்ஸ் செய்து உயிரை எடுக்கிறது என்று ஏளனமாக அல்லவா நினைத்திருப்பான்.
அவளின் மனப்போராட்டத்தை பற்றி தெரியாத தருண் அவளின் கைப்பற்றி தியேட்டரினுள் நுழைந்தான்.
கும் இருட்டும், பெரிய திரையும்,திடும் திடும் என்று அலறும் டால்பி சவுண்டும் அந்த திரையில் தெரிந்த அவளுடைய பேவரைட் ஹீரோ ஜெயம்ரவியும் இது எல்லாவற்றையும் விட அவளுடைய தருணின் அருகாமை அவளுக்கு ஒரு புது உலகத்தை காட்டியது. அதில் அவளது மனப்போராட்டம் காணாமலே போனது. ( அப்படியே ஒரு கமண்ட் போட்டுட்டு போங்க ஃபிரண்ட்)
காதலென்பது...... தொடரும் ( next ud monday, Saturday Sunday leave )
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்
கார்குழலி