5
திருமணம் நேர்த்தியாக நடந்து முடிந்தது. மதியச் சாப்பாடும் ஒரு வழியாக முடிந்தது. எல்லாம் முடிந்து புதுமணத் தம்பதிகளை பெண் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அப்பாடா என்றபோது மணி 4.00 ஒரு மணி நேரம் கண்ணயரலாம் என்று ஒரு ரூமினுள் சென்றாள் சிவரஞ்சனி. பின்னாலேயே வைதேகி வந்து விட்டாள்.
“சிவரஞ்சனி ஸ்ரீராம் உன்னைக் கூப்பிட்டான்”
“எதுக்காம்?”
“அதெல்லாம் தெரியாது. சீக்கிரம் போ வாசல்லதான் இருக்கான்”
“சரி, நீங்க போங்க”
வாசலை நோக்கி நடந்தாள். அங்கே தருண் பைக்கில் அமர்ந்திருந்தான், ஸ்ரீராம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னண்ணா?” அண்ணனைப் பார்த்து கேட்டாள்.
“ஒன்றுமில்லையம்மா, பொண்ணு வீட்டுலயும் நமக்கு பத்திரிக்கை வெச்சிருக்காங்க, நாளைக்கு அங்க போகணும் வெறுங்கையோட போக முடியுமா? அதான் ஒரு கிப்ட் வாங்கி பிரசென்ட் பண்ணலாம்னு”
“தாராளமா பண்ணு”
“எனக்கு இங்க நிறைய வேலையிருக்கு, நாளைக்கு காலைல மண்டபத்தை காலி பண்ணனும். சமையல்காரனுக்கு செட்டில் பண்ணனும், அத்தை மாமாவுக்கு கூடமாட ஹெல்ப் பண்ணனும்..தருண் இப்போ அந்தப் பக்கம் தான் ஒரு வேலையா போறான். நீயும் அவன் கூடவே போய், ஒரு நல்ல கிப்டா வாங்கிட்டு வந்துடும்மா” என்று ஐநூறு ரூபாய் தாளை அவள் கையில் வைத்தான்.
கிப்ட் வாங்க போவதா? அதுவும் இவனுடனா? குழம்பினாள்.
அண்ணன் சொல்லையும் தட்ட முடியவில்லை. அரை மனதுடன் வண்டியில் ஏறினாள். அவனை உரசாதவாறு இடைவெளி விட்டு அமர்ந்தாள், அது அவனுக்கு இன்னும் பிடித்தது.
ஸ்ரீராமைப் பார்த்து ஆயிரம் கோடி நன்றிகளை கண்களாலேயே கூறினான். பைக் ஒரு புகை மண்டலத்தை கக்கி விட்டு நகர்ந்தது. எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று இரு மனதும் துடித்தது.
“என்ன பேச்சையே காணோம்?”
“ரொம்ப டயர்டா இருக்கு”
“அப்ப வா சூடா டீ குடிக்கலாம்” இதுதான் சாக்கு என்று ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தினான்.
“எதிரெதிர் சீட்டில் இருவரும் டீயை ருசித்துக் கொண்டிருந்தனர்.
“எங்கப்பா சொன்னதை இன்னும் மனசுலயே போட்டு குழப்பிக்கிறியா?”
“இல்லை” ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்.
“ஏன் எங்கிட்ட சரியா பேச மாட்டேங்கிற, நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?”
“இல்லை”
“நான் நம்ப மாட்டேன் காலைக்கப்புறம் நீ எங்கிட்ட பேசவே இல்லை. என்ன ரீசன்னு எனக்கு தெரிஞ்சாகனும்”
“தெரிஞ்சே ஆகணுமா?”
“ஆமாம்”
“ஒண்ணுமில்லை” என்று கூறி கலகலவென சிரித்தாள். ஒன்றும் விளங்காமல் விழித்தான் தருண்.
“”நான் உங்க கூட பேசாமயிருந்தா, நீங்க எப்படி ரியாக்ட் பண்றீங்கன்னு பார்த்தேன். நான் நினைத்தை விட அதிகமாவே ரியாக்ட் பண்ணிட்டீங்க, அதனால உங்களுக்கு 100-க்கு 110 மார்க்” என்று கூறி கண்ணடித்துச் சிரித்தாள்.
“அடி” அவள் காதைப் பிடித்துத் திருகினாள்.
“ஆ” எல்லோரும் பார்க்கிறாங்க விடுங்க”
அவசரமாக காதை விட்டான். இருவரும் பைக்கில் ஏறி ஒரு நல்ல கிப்ட் கடையை நோக்கிச் சென்றனர்.
“வாவ்’ தாஜ்மஹாலை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன தருண்” வேறு பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தவள் கேட்டாள்.
“இங்கே வாயேன்” வந்தாள்.
‘இந்த தாஜ்மஹால் ரொம்ப அழகாயிருக்குல்ல, உலக அதிசயங்கள்ல ஒன்று ‘காதலின் சின்னம்’ உருகிக் கொண்டிருந்தான்.
சில்லறைகளை உதிர்த்தது போல் சிரித்தாள்.
“நான் சொன்னது ஜோக்கில்லையே உண்மைதானே” விழித்தான்.
“உண்மையாவே இருக்கலாம். ஆனா எனக்கு அதுல உடன்பாடில்லை”
“எதுல”
“நீங்க சொன்ன மூணு கருத்துல ரெண்டை நான் ஒத்துக்க மாட்டேன்”
“எதை?”
“நீங்க என்ன சொன்னீங்க?”
“ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னேன்”
“அதை ஒத்துக்கிறேன் தாஜ்மஹால் அழகுதான், அப்புறம் என்ன சொன்னீங்க?”
“அதிசயங்களில் ஒன்னுன்னு சொன்னேன்”
“அதிசயம்னு நீங்க எதை நினைக்கறீங்க?”
“நான் இதுல நினைக்க என்ன’ இருக்கு’. அதான் ஏழு அதிசயங்களை வரிசைப் படுத்தியிருக்காங்களே?”
“யாரோ வரிசைப்படுத்தியதையே நீங்களும் ஒத்துக்கணும்ங்கிற அவசியமில்லை. நீங்களாவும் சிந்திக்கலாமில்லையா?”
“சரி தப்புத்தான் நீயே சொல்லேன்”
“அதிசயம்கிறது என்னைப் பொறுத்தவரை மனிதனால் உருவாக்கப்பட்ட விஷயங்கள் அல்ல. மனிதனுக்குள்ளேயே இருக்கிற விஷயங்கள் தான்”
“எப்படி?”
“மனிதனோட ஆறு அறிவுகளும் ஆறு அதிசயங்கள் தான் ஏழாவ்து அதிசயம் என்ன தெரியுமா?”
“என்ன?”
“பிற மனிதர்களிடமும், உயிரினங்களிடமும் பாகுபாடில்லாத அன்பை காட்றதுதான்”
விக்கித்து போய் நின்றான்.எவ்வளவு தெளிவான கருத்து, ஆழ்ந்த அதிசயமான கருத்து.
“அப்புறம் என்ன சொன்னீங்க ஆங்.. காதலின் சின்னம் தானே” அவனைப் பார்த்தாள். அவன் ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான். அவள் தொடர்ந்தாள்.
“காதலின் சின்னம் கல்லறையா தருண்” தலையை சாய்த்து அவனை நோக்கினாள்,
“...”
“தாஜ்மஹால்ங்கிறது உண்மையில் மும்தாஜின் கல்லறைதானே?”
“....”
“காதலுக்கு சின்னம் எதுன்னு என்னைக் கேட்டா இதயம்னு சொல்லுவேன் காதலை சுமப்பது இதயம்தானே?”
“....”
“என்னாச்சு, தருண் பேச்சையே காணோம்”
“பேச்சே வரலை சிவரஞ்சனி”
“சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்”
“கிப்ட்”
“அதான் தாஜ்மஹாலை செலக்ட் பண்ணிட்டீங்களே ரொம்ப அழகாயிருக்கு, வாங்க பேக் பண்ணலாம்”
அவன் சாவி கொடுத்த பொம்மையாய் அவள் பின்னால் சென்றான்.கையில் விஸ்கி பாட்டில்களுடன் பேசிச் சிரித்தவாறு, சுரேஷின் நண்பர்களும், தருணின் நண்பர்களும் மாடியறையின் கதவை அடைந்தனர். இவர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டான் தருண். சிவரஞ்சனி என்ன செய்ய போகிறாள் என்பதை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தான். சற்று தூரம் இடைவெளிவிட்டே அவர்களை தொடர்ந்தான்.
கதவைத் திறந்த நண்பர்கள் சிலையாய் உறைந்தனர். உள்ளே எல்லா வகையான சாமி படங்கள். சாம்பிராணி புகை, இடையில் ஊதுபத்தியும் தன் பங்கிற்கு புகையைக் கக்கிக் கொண்டிருந்தது. கற்பூரத் தட்டில் தகதகக்கும் கற்பூரத்துடன் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் அனைவரும் கையில் இருந்த பாட்டில்லை முதுகுப்புறமாக மறைந்தனர்.
“டேய் தருணோட ஆளு இங்க எங்கடா வந்தது?” அசோக் கணேசின் கதைக் கடித்தான்.
“தெரியலை டா, ஒரு வேளை தருணை பார்க்க வந்திருப்பாங்க”
“தருண் எங்க கூட வரலைங்க” சுதாரித்துக் கொண்டு பேசினான் கணேஷ்.
“நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்”
“என்ன விசேஷம்?”
“உங்க கைல என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“அது... அ... ஒன்னுமில்லையே?”
“எனக்குத் தெரியும். இப்ப நிதானத்துல இருக்கீங்க. டீசன்சி மெயின்டெயின் பண்றதுக்காக ஒளிச்சிட்டீங்க. நேத்து நிதானத்துல இல்லாம எந்த கோலத்துல கிடந்தீங்க தெரியுமா நினைக்கவே கூசுது”
“....”
“உங்களால எல்லாருக்கும் பிரச்சனை. ஏதோ எனக்கு, எங்க அண்ணனுக்கு தருணுக்கு மட்டும் தெரிஞ்சதால பரவாயில்லை. எல்லோருக்கும் தெரிஞ்சிருந்த என்னவாகியிருக்கும்”
“.....”
“நாம ஒரு வீட்டுக்கு விருந்தினரா போனால் அந்த வீட்டை கோவிலா மதிக்கனும். நீங்க குடிக்கிற பசங்கன்னு தெரிஞ்சா என் மாமா என்ன நினைப்பார் இவனுங்களோட பிரண்ட்சுங்க தண்ணி அடிக்கிறானுங்க. அப்படின்னா நம்ப பசங்களும் அடிப்பாங்க போல் இருக்கும்ன்னு தானே நினைப்பாரு”
“நீங்க நினைக்கிற மாதிரி தருணோ, சுரேஷோ தண்ணியடிக்க மாட்டாங்க” ஒருவழியாக கணேஷால் பேச முடிந்தது.
“அது எனக்கு நல்லாத் தெரியும். என் அத்தான்களைப் பத்தி எனக்கு தெரியாதா? நான் சொன்னது எங்க மாமா நினைப்பைபத்தி. அதான் பழமொழி சொல்லுதே ‘உன் நண்பனைக் காட்டு உன்னைச் சொல்கிறேன்னு”
“...”
“நீங்க கேக்கலாம் குடிக்கிறது எங்க இஷ்டம் நீ என்ன கேக்கிறதுன்னு உங்க இஷ்டம்தான். ஆனா உங்க வீட்ல இருக்கும் போது குடிச்சிட்டு தூங்குங்க கஷ்டமோ நஷ்டமோ அது நம்ம வீட்டோ ஆனா இங்க அப்படியில்லை. தெரிஞ்சா ஊரே நாறிடும் .உங்க பேர் கெட்டுப் போகாம பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு”
“....”
“இதுக்கு மேலேயும் நாங்க குடிச்சுத்தான் தீருவோம்னு சொன்னா எனக்கு ஆட்சேபனையில்லை. அப்படி வேணாம்னு நினைச்சீங்கன்னா, பாட்டிலை என் கிட்ட கொடுத்துட்டு , இந்த பாத்திரத்துல இருக்கிற பாலை ஒரு டம்ளர் குடிச்சுட்டு சாமி கும்பிட்டு படுங்க”
தங்கள் தவறை உணர்ந்த நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அவள் கையில் பாட்டிலை அடுக்கினர், சந்தோஷத்துடன் வெளியேறினாள். அப்போது இவ்வளவையும் கேட்டுக் கொண்டு வெளிப்புறமிருந்த தருண் உள்ளே வர யத்தனித்தான்.
இருவரும் மோதிக் கொண்டனர். கையில் இருந்த பாட்டில்கள் நழுவி கீழே விழுந்து உடைந்தன. இருவரும் ஒரே சமயத்தில் முட்டிக் கொண்டனர். தலையைத் தேய்த்தவாறு கீழே குத்துக் காலிட்டு அமர்ந்தாள். கண்ணாடி துண்டுகளை பொறுக்கினாள். தருண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கும் அவங்க எங்க தூங்கப் போறாங்க” உள்அர்த்தத்துடன் சொன்னான் அசோக். அர்த்தம் புரிந்தவள் வெட்கத்தில் எழுந்து ஓடினாள். அப்போது அவள் காலில் ஒரு கிளாஸ் துண்டு பட்டு ரத்தம் கசிந்தது. அதையும் பொருட்படுத்தாமல் துள்ளிக் குதித்து மறைந்துவிட்டாள். எல்லோருமாக சேர்ந்து தரையை சுத்தம் செய்தனர். ரத்தக் கறையைப் பார்த்தவன் இதயம் கசிந்தது.
புரண்டு புரண்டு படுத்தான் தருண் தூக்கம் விடாப்பிடியாய் வர மறுத்தது மெல்ல எழுந்தான் நண்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் ஒரு பேண்டேஜை தேடி எடுத்துக் கொண்டு கீழிறங்கினான். சிவரஞ்சனி தூங்கும் அறையைக் கண்டுபிடித்து எட்டிப் பார்த்தான். அங்கே அம்மாவும் சிவரஞ்சனியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
“ஒரு சின்ன கிளாஸ் குத்தினதுக்கு இவ்வளவு பெரிய கட்டு தேவையா அத்தை. எனக்கே பார்க்க பயமா இருக்கு”
“உனக்கு எல்லாமே விளையாட்டு தான். கிளாஸ் குத்தி செப்டிக் ஆயிட்டா?”
“வெளியிலேயே போயிட்டு வீடு வர்ற வரைக்கும் மனுஷனோட உயிருக்கு உத்திரவாதமில்லை. அதுல இந்த செப்டிக் ரொம்ப சின்ன விஷயம் அத்தை”
“ஆமா பாட்டி, கொஞ்சம் வாயை மூடு அங்க இங்கன்னு குதிக்க வேண்டியது. கண்டதைக் குத்திக்கிட்டு வரவேண்டியது. இன்னும் உனக்கு சீரியஸ்னஸ் கொஞ்சமும் வரலை, குழந்தையாவே இருக்க”
“அத்தை நாம வளர்ந்தாலும், நம்ம மனசை வளர விடக் கூடாது எப்பவும் ஜாலியா இருக்கணும். அதுதான் என்னோட ஆசை”
“சரி உனக்கு வரப்போற மாமியார் கொடுமைக்காரங்களா இருந்தா?”
சிரித்தவள், ”என்னதான் கொடுமைக்காரங்களா இருந்தாலும், ஒரு நல்ல விஷயமாவது அவங்ககிட்ட இருக்குமில்லையா. அதுவே போதும் நான் அட்ஜஸ்ட் பண்ணி போயிடுவேன். நாம என்னதான் கணக்கு போட்டாலும், மேல இருக்கிறவன் மனசு வெச்சாதான் என் விதிப்படிதான் எல்லாம் நடக்கும். நடக்கப் போறது மாறாது. அதை நினைச்சு இப்ப ஏன் கவலைப்படணும்”
“சரி, சரி நீ கவலைப்பட வேணாம பேசாம தூங்கு”
காமாட்சி வெளியே வருவதற்குள், தருண் வேகமாக மாடிப்படிகளில் தாவினான். இதைப் பார்த்துவிட்டாள் சிவரஞ்சனி.
அவனிடத்தில் சென்று படுத்துக் கொண்டான். என்னவிட அம்மாதான் அவளிடம் அதிக அன்பு வைத்திருக்கிறாள். அதனால் இந்த விஷயத்தில் அம்மாவை எளிதாக சரிக்கட்டி விடலாம். அப்பாதான்...
அப்பாவை நினைக்கும்போதே மனது நடுங்கியது. எப்படியாவது அப்பாவை சம்மதிக்க வைக்க வேண்டும். இப்படியாக எண்ணங்களை ஓட விட்டவன், நான் அவளைப் பார்த்து இப்போது 24 மணி நேரம் தான் ஆகிறது. அதற்குள் எப்படி என் மனதில் புகுந்தாள். திருமணம் வரை என்னை சிந்திக்க வைத்துவிட்டாளே. அத்தனைப் பெண்களை நான் காலேஜில் பார்த்திருக்கிறேன். எந்த பெண்ணிடமும் இல்லாத ஈர்ப்பு இவளிடம் மட்டும் எனக்கு ஏன் வரவேண்டும்? இவள் சிந்தனை சுறுசுறுப்பு குறும்பு கருத்து எல்லாமே என்னை நிலைகுலைய செய்கிறது ஒருவேளை கடவுள் என் பேருக்கு நேரே அவள் பெயரைத் தான் எழுதியிருப்பார் போலும். அப்படியிருந்தால் காற்றில் மிதப்பவன் நான்தான். பலவாரு சிந்தித்துக் கொண்டே உறங்கிப் போனான்.
6
“தருண் எழுந்திருங்க, தருண்,தருண்...” உலுக்கினாள் சிவரஞ்சனி.
படுக்கையிலேயே புரண்டான் தருண். கண்களை திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு திறந்தான், எதிரில் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள். கண்கள் விரிய அவள் உருவத்தை உள்வாங்கினான். கண்களின் எரிச்சலை தாங்க முடியவில்லை. கண்களையே தேய்த்தான்.
“என்ன கண் எரியுதா?”
“ஆமாம்”
“இந்தாங்க வெள்ளரிக்காய் கண்ல வெச்சிக்கங்க” வட்ட வடிவமாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காயை நீட்டினாள்.
வாங்கிக் கொண்ட தருண் சுற்றுமுற்றும் பார்த்தான்.
“உங்க பிரண்ட்ஸ் எல்லோரும் குளிச்சிட்டு வீட்டுக்கு சாப்பிட போயிட்டாங்க. இப்ப உங்களையும், என்னையும் தவிர மண்டபத்தில் யாரும் இல்லை. உங்களை எழுப்பி குளிச்சப்புறம் பொண்ணு வீட்டுக்கு வரச் சொன்னாங்க”
“அம்மா அப்பா அங்கயா இருக்காங்க?”
“ஆமாம் இன்னிக்கு அங்கதான் விருந்து, ம் சீக்கிரம் எழுந்திரிச்சு வீட்டுக்கு வாங்க. பிரண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க. அவங்களை வழியனுப்பிட்டு பொண்ணு வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாருங்க”
“ரொம்ப தேங்க்ஸ்...”
“இப்ப சம்பந்தமில்லாம தேங்க்ஸ் எதுக்கு?”
“பிரண்ட்ஸ்சுன்னு சொன்னப்புறம் ஞாபகம் வந்தது.. நேத்து உன்னால தான் அவங்களை கண்ட்ரோல் பண்ண முடிந்தது”
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வாங்க டயமாச்சு”
வெள்ளரிக்காய்யை வைத்ததாலோ என்னவோ, கண்ணெரிச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது. குளித்து விட்டு, காலை சிற்றுண்டி உண்டுவிட்டு, நண்பர்களை வழியனுப்பி வைத்தான். பெண் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
“நீ வரலையா சிவரஞ்சனி?”
“நானும் வர்றேன், ஆனா பொண்ணு வீட்டுக்கு இல்ல, போறவழியில் என்னை வீட்டுல டிராப் பண்ணிடுங்க”
“ஏன் வரலை?”
“அதான் அப்பா, அம்மா அண்ணா எல்லோரும் போயிருக்காங்களே....?”
“கிப்ட் வாங்கிட்டு நீ போகாம இருந்தா எப்படி?”
“கிப்ட் வாங்கினது என் அண்ணன்”
“யாராயிருந்தா என்ன நீயும் போயிருக்கலமில்ல. நீ வாங்கினாலும் ஒண்ணுதான் உன் அண்ணன் வாங்கினாலும் ஒண்ணுதான்”
பைக்கை வாசலுக்கு தள்ளி சைட் ஸ்டாண்ட் போட்டான்.
“எனக்கு கிப்ட் கொடுக்கிற பழக்கமேயில்ல”
பைக்கை ஸ்டார்ட் செய்யப் போனவன் திரும்பினான்.
“வாட்?”
“இதுக்கு ஏன் ஆச்சர்யப்படுறீங்க?’
“இல்ல... என் பிரண்ட்ஸ் பர்த்டே வெட்டிங் டே இப்படி எல்லா விஷயத்துக்கும் கிப்ட் கொடுக்கிறது என் வழக்கம். நீ சுத்தமா இல்லைன்னதும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு”
“சரி ஆச்சர்யம் அப்புறம் இருக்கட்டும். பைக்கை எடுங்க லேட்டாகுது. போகும்போது பேசிக்கலாம்” என்றாள்.
துப்பட்டாவை சரி செய்தாள்.
அவன் வண்டியை எடுத்தான். பின்னால் ஏறியமர்ந்து கொண்டாள். வண்டி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“எவ்வளவு யோசிச்சாலும் புரியலை ரஞ்சனி” விரக்தியான குரலில் கேட்டான்.
“என்ன புரியலை தருண்”
“நீ கிப்ட் கொடுக்கும் பழக்கம் இல்லாததன் காரணம்?”
“ஓ.. அதுவா இதையா இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு வந்தீங்க? கேட்டிருந்தா அப்பவே சொல்லியிருப்பேன்”
“சரி, இப்ப சொல்லு”
“இது என்னோட அணுகுமுறைதான். அதுக்காக கிப்ட் கொடுக்கிறது தப்புன்னு நான் சொல்ல வரலை. கிப்ட் கொடுக்கிறது எதுக்கு தருண்?
“நம்ம அன்பை அவங்களுக்கு எடுத்துக் காட்ட”
“நம்ம அன்பை இந்த உயிரில்லாத பொருட்களால் விலை மதிப்பிட முடியுமா?”
“....”
“இல்லவேயில்லை, நம்ம அன்பை காட்ட எவ்வளவோ வழி இருக்கு. என் பிரண்ட்ஸுக்கு பிறந்த நாள் வந்தா முதல் ஆளா வாழ்த்துவேன், கோவிலுக்கு போய் அவளுக்காக வேண்டிப்பேன். கல்யாணம்னா, ஒரு வாரம் முந்தியே போய் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வேன். கடைசியில் நான் கிளம்புரப்ப, அவங்க அம்மா மன நிறைவோட நீயும் என் பொண்ணா பிறக்கலையேன்னு கண்ணு கலங்க சொல்வாங்க பாருங்க அந்த மன நிறைவை அவங்களுக்கு நான் தருவேன், அதுதான் நான் கொடுக்கிற கிப்ட்”
“......”
“நீங்களே சொல்லுங்க, கிப்ட் கொடுத்தா அதை பார்க்கும் போதுதான் நம்ம ஞாபகம் வரும். நான் சொல்றா மாதிரி செய்தா அவங்க மனசுல நாம எப்பவுமே இருப்போம்”
“......”
“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்” இப்போது தான் நினைவுக்கு வந்தான் தருண்.
“என்ன வருத்தம்?”
“சுரேஷ் அத்தான் கல்யாணத்துக்கு மட்டும் என்னால் ஒரு வரம் முந்தி வர முடியலையே?”
“அதனால என்ன இன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போ”
“அதுவும் முடியாத விஷயம்” கவலையாக சொன்னாள்..
“ஏன்?” அவன் குரலில் அதைவிட அதிகமான கவலை.
“எனக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குது. முந்தாநாள் ஒரு எக்ஸாம். அதை முடிச்சுட்டு வரத்தான் லேட்டாயிடுச்சு .நாளைக்கு ஒரு எக்ஸாம் இருக்கு. இதுவரை ஒன்னும் படிக்கலை. இப்ப போய்த்தான் படிக்கணும் அதான்”
“சரி, படிப்புத்தான் முக்கியம் எக்ஸாம் முடிஞ்சப்புறம் சாவகாசமா வீட்டுக்கு வாயேன்”
அவளை சமாதானப்படுத்த கூறிவிட்டானே ஒழிய அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல அவர்களுக்குள் உரையாடல் அத்து போனது.
தருணுக்கு குழப்பமான மனநிலை இவளிடம் எப்படி பேசினாலும் முடிவு குதர்க்கமாகவே தான் இருக்கிறது. தனக்கென்று நிறைய விதிமுறைகள் வகுத்திருக்கிறாள். அதன்படி நடக்கவும் செய்கிறாள். அவள் கூறுவது உலகத்தோடு ஒட்டா விட்டாலும் நியாயமானது. இவளுடன் பேசுவதும், இவள் செய்கையை பார்ப்பதும் விசித்திரமான அனுபவமாகவே இருக்கிறது.