"டியே பூரணி! தம்பிக்கு மாடி தோட்டம் பாக்கணுமாம் கூட்டிட்டு போய் காட்டிட்டு வா" பார்வதி குரல் வந்ததில்,
'வெள்ள வேட்டிக்கு என்ன அங்க குளிர் நிலவா காயுது. இந்நேரத்துக்கு மாடி தோட்டத்தை சுத்தி காட்ட' கொலை கடுப்பாக வந்தது பூரணிக்கு.
"தனியா பேசணும்னு சொல்ல கூட தைரியமில்லை. இவனெல்லாம் ஏன் பொண்ணு பார்க்க வரான். அதென்ன மாடிக்கு போனா தான் பேச்சு வருமா? ஏன் ரூம்ல நின்னு பேசினா ஆகாதாமா? பொண்ணு பார்க்க வர்ற நேரத்தை பாரு மொட்ட வெயில் மண்டைய பொளக்கற நேரத்துல.
இந்நேரத்துக்கு காத்து கருப்பு தான் வருமாம் கேள்விப்பட்டிருக்கேன்" அங்கே பார்வதியை ஆதவன் கலங்கடித்ததை அறியாமல், முணுமுணுத்த படியே அறையை விட்டு வெளியே வர,
"ம்ம்ம்! இந்த காத்து கருப்புக்கேத்த பூங்காத்து இங்கதான இருக்கு. அதான் பார்த்து பேசி, கையோட பாக்கெட்ல புடிச்சு போட்டுக்கிட்டு போகலாம்ணு வந்தேன். என்ன வரியா? போகலாமா?" திடீரென முதுகிற்கு பின்னால் கேட்ட குரலில் தூக்கி வாரி போட பூரணி திரும்ப, சுவற்றின் மீது சாய்ந்து கைகட்டி நின்று பார்த்திருந்தான் ஆதவன்.
"என்ன என் தைரியம் போதுமா? இல்லை பத்தலையா? இல்லை இன்னும் கொஞ்சம் காட்டட்டுமா? என்ன பூரணி பேச்சையே காணோம்? ஆளில்லாதப்ப தான் பேச்சு வருமோ?" அவள் முன் வந்து கண்ணோடு கண் பார்த்து சீண்ட,
"ஊப்ப் இப்படியா பயமுறுத்துவீங்க, என் வீட்டுக்குள்ளயே வந்து என்னையே பயமுறுத்த எவ்வளவு தைரியம் இருக்கணும் உங்களுக்கு" கண்களை விரித்து துடுக்காக பேசிய பூரணியின் பார்வை, அடுத்த நொடியே அவனை தாண்டி சென்று மீண்டு வந்தது.
அனிச்சையாக பூரணி உடல் மொழியை இறுகி, "வாங்க" சொல்லி முன்னே செல்ல, அவள் கவனம் பார்வதியிடம் சென்று வந்ததென்பது ஆதவன் கண்களில் இருந்து தப்பவில்லை. புருவங்களை சுருக்கினாலும், ஒன்றும் கேட்கவில்லை பின் சென்றான்.
மாடி படியில் முதலில் பூரணி ஏறவும், ஆதவன் பின்னோடு ஏற, இவர்களை நோட்டம் விடவெனவே பார்வதியும் வந்திருந்தார் போல. கொல்லைபுற வாசலில் நின்ற படி, தலையை மட்டும் வெளியே விட்டு எட்டி பார்ப்பதும், பிறகு இழுத்துகொள்வதுமாக இருக்க, அதை பார்த்து விட்டிருந்தான் ஆதவன்.
"உன்னோட அம்மாக்கு பூச்சி புடிச்சு சாப்டுற பழக்கம் ஏதாவது இருக்கா? தவள நாக்கை வெளிய நீட்ற மாதிரி தலையை மட்டும் வெளிய நீட்டி நீட்டி பாக்கறாங்க?" சொல்லிக்கொண்டே சிரித்தபடி ஆதவன் ஏற, எட்டி பார்த்த பூரணிக்கும் அவன் சொன்னதை வைத்து பார்க்க அப்படிதான் இருந்தது. சிரிப்பு வந்தது கவலைகள் மீறி.
"இங்கே பூச்சியா என்னை வெச்சு பாருங்க புரியும்." சொன்ன பூரணியின் சொல்லில் ஆதங்கம் மட்டுமே இருக்க "ஹோ அப்டி" புரிந்தது அவனுக்கும்.
ஏதோ உறுத்தினாலும் அதனை புறம் தள்ளும்படி "இப்போ புரிஞ்சுதா" லேசான சிரிப்போடு கேட்டவளை பார்த்து அர்த்தம் பொதிய சிரித்தவன்,
"ஆனா நீ வெறும் பூச்சி இல்ல பூரணி, அழகான வண்ணத்துப்பூச்சி, உங்க அம்மா கவலை படுறதுல நியாயம் இருக்கத்தான் செய்யுது" என்றவன் "நீ இன்னும் நல்லாவே சிரிக்கலாம். உன் முகம் சிரிக்கும் போது வசீகரமா இருக்கு. என்னையும் வசியம் செய்யுது"
ஆதவன் ஏறுவதை நிறுத்தி நிமிர்ந்து பார்த்து ரசனையோடு சொல்ல, பெண்ணவள் என்ன நினைத்தாளோ, சிரிப்பு சுவிட்ச் போட்டாற்போல் நின்றுவிட்டதோடு, முகம் லேசாக வாடியும் விட்டது.
'இவனுமா' அய்யோவென்று தோன்றியிருக்க அவஸ்தையாக நின்றாள்.
அதை மிக சரியாக தவறாக எடை போட்டவன் "சில் பூரணி! நான் சாதாரணமா தான் சொன்னேன். இதுக்கு எதுக்கு டென்ஷன் வா போகலாம்" என்றதோடு நின்றானா அவன்?
எதிர்பாரா வண்ணம் சட்டென திரும்பியவன், "என்ன த்தே பூரணிகிட்ட எதாவது விஷயம் சொல்லணுமா" என்றும் கேட்டு விட்டான்.
'என்ன அத்தையா? இது என்ன புது கதை' பூரணி ஸ்தம்பிக்க, 'என்ன மறுபடியும் அத்தையா' ஒரு நொடி நெஞ்சை பிடித்தபடி அரண்டே போனார் பார்வதி.
பின்னே அதை சொல்லி மட்டையாக்கி தானே, பூரணியிடம் தனியாக பேச சம்மதம் வாங்கி இருந்தான்.
"பூரணியை பார்த்தது மட்டும் போதாது, எனக்கு பேசணும். உங்க முன்னாடினாலும் எனக்கு ஓகே தான். தனியானாலும் எனக்கு ஓகே தான். பூரணியை கேட்டு சொல்லுங்க" தோள் குலுக்கி சொல்ல,
யாருக்கும் ஒரு நொடி பேச்சே எழவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. இப்பிடி எல்லாம் முன் பின் அறிந்ததில்லை. நடந்து பார்த்ததில்லை.
வேண்டாமென்று சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ள கூடும் சாத்தியமும், சரியென்றால் அது பழக்கமில்லாத ஒன்றாகையால் தேவையில்லாத பேச்சுகள் எழும் சாத்தியமும் இருக்க, அம்மையப்பன் என்ன சொல்வதென்று விழிக்க, பார்வதி தான்..
"அதெப்டி கல்யாண பேச்சு ஒரு முடிவுக்கு வராமல் வயசு பொண்ண கூட தனியா பேச அனுப்ப முடியும்? எதுவாருந்தாலும் முடிவு செய்துட்டு பாத்துக்கலாம்" பார்வதி மறுப்பு தெரிவித்தாலும் ஆதவன் விடவில்லை.
"அதான! பொண்ண பெத்தவ சரியாதானே சொல்றா, தம்பி உங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. நீங்க சொன்னது உங்களுக்கே சரின்னு படுதா" சபையில் அமர்ந்திருந்த பூரணி வீட்டின் அக்கம் பக்கத்திலிருந்து வந்திருந்தவர்களில் ஒரு பெரியவர் கேட்க,
"பெருசு! இவ்வளவு பேசுறவன் இதை யோசிக்காமலா இருப்பேன். இதோ இங்க தான் இருக்கு என் தங்கச்சியும், வேணும்னா கேட்டுக்க அவ லவ் மேரேஜை எப்பிடி அரேஜ் மேரேஜா அய்யா மாத்தினேன்ன்னு கதை கதையா சொல்லும்"
"எது லவ்வா" வாயை பிளந்தவர் தான். மூடவும் இல்லை. அதன் பின் வாயை திறக்கவும் இல்லை. அப்படியே பார்வதி பக்கம் திரும்பியவன்,
"அட ரெண்டாவது மில்லினியமே பொறந்திருச்சு, இன்னும் பழைய பஞ்சாங்கம் போல பேசறீங்க. அனுப்ப சொல்றதே, நாங்க ரெண்டு பேரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர தான் அத்தை, அனுப்புங்க" ஒரே போடாய் போட்டு அவரையும் அரள வைத்திருந்தான்.
ஆதவன் அத்தை என்று விளித்ததில் மற்ற அனைத்தும் பின்னுக்கு போக, 'என்ன அத்தை யா' அதிர்ந்து போனது அவர் மட்டுமல்ல ஆதவனின் குடும்பமும் தான்.
ஆதவனின் தங்கை "அண்ணே நீ ஒரு பார்ம் ல தான் இருக்க போலயே, எல்லாரையும் ஓட வெக்கும் அந்தம்மாவையே நீ அரள வச்சிட்டியே" காதை கடித்தவள் சன்னமாக சிரிக்க,
"நீயும் உன் வீட்டுக்காரரும் அடிக்காத லூட்டியவா நான் அடிச்சிட்டேன். நானே பர்பார்ம் பண்ணது போதுமா இல்லையா ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிச்சிட்டு இருக்கேன் கெடுத்து விட்டுடாத தாயே" அவள் வாயை அடைத்தவன் அவன் அன்னையை மறந்தும் பார்த்தானில்லை.
பேசியது தன் மகன் தானா? வியப்பா?நிம்மதியா? பிரித்தரிய முடியா உணர்விலே வைத்திருந்தவன்,
"கட்டினா உங்க பொண்ணை தான் கட்டுவேன். நான் முடிவுக்கு வந்த பிறகு தான் கேக்குறேன் த்தை. இப்போ எனக்கு தேவையெல்லாம் பூரணியோட சம்மதம் மட்டும் தான்"
பூரணியிடம் பேச வேண்டியதை எல்லாம், பார்வதியிடம் சம்மதத்திற்காக பேசி ஒத்திகை பார்த்திருந்தான்.
பார்வதிக்கும், ஆர்ப்பரித்திருந்த ஏதோ ஒரு தவிப்பு ஆதவனின் பேச்சில் அடங்க தான் செய்தது. இருந்தாலும் தயங்க,
'மாமியார் அநியாயத்துக்கு டப் கொடுக்கறீங்களா? நீங்களே இத்தனை பாடு உங்க பொண்ணு என்ன பாடு படுத்த போறாளோ' நினைத்தவன் பார்வதியை சரியென்று சொல்லும் வரை விடவில்லை.
அந்த நினைப்பில் இப்பொது தன்னாலே பார்வதிக்கு பதட்டம் ஒட்டி கொள்ளவும்,
"இல்லை! ஒண்ணும் இல்ல! சும்மா! அது வந்து! பூரணி! நீங்க! பேச" என்று உளற,
"அத்தை உங்க பொண்ணை நான் ஒன்னும் கடிச்சு தின்னுற மாட்டேன். பயப்படாம போங்க. ஹால்ல உங்க சம்பந்தியோட பேசிட்டு இருங்க வந்திடுவோம்" என்றானே பார்ப்போம் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை பார்வதி.
விட்டால் போதுமென்று வீட்டினுள் ஓடிவிட, பூரணி நிலை தான் பரிதாபமாய் இருந்தது.
அவனின் விளிப்பும், பார்வதியின் விழிப்பும் பயப்பந்தை அதிகமாய் உருட்டியது. நினைத்ததை விட விஷயம் கடினமாயிருக்கும் போலவே வதைத்தது அவளுக்கு.
என்னவாகுமோ மறுகியவள், என்னவானாலும் சரிதான் முடிவிற்கு வந்திருந்தாள். எடுப்பது சுலபமாக தான் இருந்தது ஆனால் நடை முறை அவ்வளவு சுலபமாய் இல்லையே அதுவும் ஆதவனிடம்.
மாடி சென்றதிலிருந்து ஆதவன் கைப்பிடி சுவரில் அமர்ந்து கை கட்டி அமைதியாக பூரணியை எடை போட, அவள் எதையோ சொல்ல வருவதும் பின் மருகுவதுமாக இருந்தாள். அவனை சந்திக்காமல் அலைமோதும் விழிகளும், காற்றில் அசைந்தாடும் முடிகற்றையை ஒதுக்கி விடும் நடுங்கிய விரல்களும், சொல்லாமல் சொல்லியது ஆதவனுக்கு சகலத்தையும்.
இதற்கிடையே, நிமிடத்திற்கு ஒரு முறை யாரேனும் ஒருவர் வந்து டீ,பலகாரம் வைத்து, வேறு ஏதேனும் வேண்டுமாவெனவும் கேட்டு சென்றதோடு, சூழ்நிலையை கிரகித்தும் செல்ல, அவனுக்கு ஊர்ஜிதமே ஆனது.
'ஆஹா! டேய்! பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டமில்ல போல டா, அவ அம்மா அப்பா மெரட்டலுக்கு பயந்து நிக்கிது கிளி, அதை சொல்ல முடியாம தான் தவிக்கிது போல' அவனுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தாலும், அவளின் அருகாமையில் குப்பேன்று இனம்புரியா உணர்வொன்று அவனை ஆட்கொண்டது.
உணர்வுகளுக்கு எவ்வளவு கடிவாளமிட்டும் முடியாமல் "ஊப்ப்ப்" ஒரு கையால் பின்னந்தலை கேசம் கோதி, இறுக பற்றி நின்றான்.
அப்போதும் முடியாமல், கிருதாவை உள்ளங்கையால் தடவிப் கொடுத்து, அப்படியே மீசைக்கு வந்து நீவி விட்டு கட்டுப்படுத்தி அவளை விழியகட்டாமல் பார்த்து நிற்க,
'இவளோட தான்டா உனக்கு வாழ்க்கை மிஸ் செய்திடாத டா' உள்ளே குரலில் சத்தம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமானது.
பின்னே! பரிபூரணி பெயருக்கேற்றார் போல் அழகிலும் பரிபூரணி தான். தைரிய லக்ஷ்மியையும், லக்ஷ்மி கடாட்சத்தையும் ஒருங்கே பெற்றவள். வயதை மீறிய வனப்பு தேகத்தில் தெரியும். என்னை பார் மயங்கி போவாய் சொல்லும்படியான முக வெட்டு. உயிரோட்டமுள்ள அகண்ட விழிகள். செதுக்கி வைத்த சிலை போல அவ்வளவு நேர்த்தியான அழகுடையவள்.
ஏற்கனவே ஒரு முறை தூரத்தில் பார்த்தே இவள் தைரியத்தில் கவரப்பட்டு பித்தேறி கிடந்தவன், இப்பொது இவ்வளவு அருகில் மொத்தமாய் தன்னை தொலைத்தே போனான்.
'உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா பூரணி' கேட்டு அவன் அவஸ்தைகள் மொத்தத்தையும் கொட்டி கவிழ்க்க அவன் ஆவி துடித்தது. அந்நேரம் அவன் சிந்தை கலைப்பது போல்,
"இங்க பாருங்க! நான் சொல்றதை கொஞ்சம் கோவப்படாம கேளுங்க ப்ளீஸ்" அவள் ஏதோ சொல்ல வர, அந்நேரம் சரியாக அவனது போன் சினுங்கியது.
சந்திரன் தான் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்று ஆதவன் "ஹலோ" சொல்ல,
"டேய் கடைல ஆள் விட்டுட்டு கிளம்ப லேட் ஆகிருச்சு டா. வந்துகிட்டே இருக்கேன். அட்ரஸ் மெஸேஜ் செய்து விடு" சந்திரன் சொல்ல அப்போது தான் அந்த எண்ணம் உதித்தது ஆதவனுக்கு.
கேட்டதை கிறகிப்பவன் போல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், பட்டென்று உஷ்ணம் கனல முகத்தை மாற்றினான்.
உடனே குரலை கடினமாக்கியவன் "ஹலோ! டேய் என்னது வேணாம் சொல்லணுமா" அமர்ந்திருந்த நிலையிலிருந்து வேகமாக குதித்து முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.
"டேய் நான் யாருன்னு தெரிஞ்சும் எவ்வளவு தைரியமிருந்தா இந்த வார்த்தையை சொல்லுவ, என்னை என்ன மாக்கான்னு நெனச்சியா? உன் இஷ்டத்துக்கு பேசினா நான் கேட்டுகிட்டு போக" இவன் பூரணி பேச வருவதை மனதில் வைத்து பேச, சந்திரனிற்கு ஒன்றுமே புரியவில்லை குழம்பியது.
"என்ன உளறுரான் இவன்! டேய்! டேய் மச்சா! சந்திரன் டா! உன்னை வேணாம் சொல்ல சொல்லல. அட்ரஸ் வேணும் சொல்றேன். கேக்குதா" அவன் வண்டியை ஓரம் நிறுத்தி கத்த,
"எல்லாம் நல்லாவே கேக்குது டா வெளக்கெண்ண, நான் முடிவெடுத்தா எடுத்தது தான். மாத்தினதா சரித்திரமே இல்லை. புரிஞ்சிதா? எனக்கு ஒரு விஷயம் வேணும்னா தான் நேர்லயே வருவேன். இடத்தை தரேன்னு வாக்கு கொடுத்துட்டு இப்போ நழுவ பாக்குறியா? விட மாட்டேன் டா உன்னை. எனக்கு அந்த இடத்தை குடுத்தா உன் உடம்புல உயிர் தங்கும். இல்லை உயிரை எடுத்துருவேன் யோசிச்சிக்க"
இவன் மேலும் பேச, பேச பூரணிக்கு இவன் பேசும் ஒவ்வொன்றிலும் தூக்கி வாரி போட்டது. இவள் சொல்ல வந்த அனைத்தும் மறந்து போக, நாவு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.
பின்னே! இரண்டு பேரை சேர்த்து பிசைந்து ஒட்டி வைத்தார் போல், அகண்ட கூடுதல் சதை இல்லாத கட்டுடல் தேகம். அதற்கேற்றவாரு அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம். சற்று நேரம் பார்த்தாலே எதிர் நிற்பவர்களை அளவெடுத்துவிடும் கூரிய கண்கள். அளவான மீசையை முறுக்கி விட்டிருந்தான்.
முகத்திற்கேற்ற குண்டு கன்னத்தை மறைக்கவெனவே, கிருதாவை பெரிதாக வைத்திருந்தான். பார்த்ததும் மரியாதை தரும் படியான வெள்ளை வெட்டி சட்டை உடை அணிந்து, பார்க்கவே சற்று கரடு முரடு ஆள் போலவே தோற்றம்.
இத்தனை அம்சங்களும் வாய்க்க பெற்ற ஆதவன், அளவிற்கு மீறி குரலை உயர்த்தி, மிரட்டி கண்கள் சிவக்க பேசினால் அவளும் தான் என்ன செய்வாள்? விட்டால் ஓடிவிடுவாள் போல் தான் நின்றிருந்தாள்.
சீண்டினால் தவிர்த்து,
தெரியாத யாரிடமும் அப்படி சட்டென்று நடந்துகொள்ள மாட்டாள் என்றாலும் அவளே சற்று அடாவடி ஆள் தான். அப்படியானவளே அவன் நடத்தையில் சற்று மிரண்டாள்.
கூடவே! சமீப நாட்களாகவே, இப்படியான அம்மையப்பன் பார்வதியின் குரல்களை கேட்டுக்கொண்டே இருந்ததின் பாதிப்பு அவளிடம் வெளிப்பட்டது.
'வெள்ள வேட்டி சரியான கோவக்காரனா இருக்கானே, எப்பிடி பேச? நான் பேசினாலும் இப்பிடித்தான் கோவப்படுவானோ? நெனச்ச போலவே அறைஞ்சிட்டா? ' மான சீகமாக கன்னம் பிடித்துக்கொண்டவளுக்கு பயமும் பிடிக்க ஆரம்பிக்க,
அந்த பக்கம், சந்திரன் விளக்கம் சொல்லிச் சொல்லி, பின் சலித்து நீ என்னவோ பேசிக்கொள் ரீதியில் அமர்ந்துவிட்டான்.
"என்னடா பேச்சையே காணோம். இவ்வளவு நேரம் பேசின இப்போ பேசு, பேசு டா! பேசுடாங்குறேன்" ஆதவன் இன்னமும் கத்த,
"பேசு! பேசு னா! என்னத்த டா பேச? என்னன்னு பேசினாலும் நீ உன் இஷ்டத்துக்கு தான் பேச போற, கத்தி கத்தி எனக்கு தொண்டை தண்ணியே வத்தி போச்சு. இவன் கூடவெல்லாம் சகவாசம் செய்ய வெக்கிறியே ஆண்டவா" சந்திரன் அந்த பக்கம் புலம்பினான்.
"அய்யோ! ப்ளீஸ்! கத்தாதீங்க, அம்மா வந்துட போறாங்க! ப்ளீஸ்! மெல்லமா பேசுங்க" இங்கே எப்படியோ சுதாரித்து பூரணி வாய் திறக்க,
"ஏய் என்ன" விரல் நீட்டி மிரட்டி கத்தினான்.
அதில் அவள் இரண்டடி பின்னுக்கு போக, "நான் என்னத்துக்கு மெல்ல பேசணும், என்ன நெனச்சீங்க என்னை எல்லாரும். ஆளாளுக்கு ஒன்னொன்னா சொல்வீங்க நான் தலையாட்டிட்டு போகணுமா? இங்க எல்லாம் என் இஷ்டம் தான். நான் நினைச்சது தான் நடக்கணும் புரிஞ்சிதா?" பூரணியிடம் வெடுக்கென்றவன்,
"டேய்! என்ன அமைதியாகிட்ட? எனக்கொரு முடிவ சொல்லாம உன்னை விட மாட்டேன்" போனிலும் கத்த,
"ஒரு அட்ரஸ் கேக்க போன் போட்டது குத்தமா டா! என் காது அவுஞ்சி போச்சே" சந்திரன் புலம்ப ஆதவனுக்கே சிரிப்பு தான்.
வெளிவராமல் விழுங்கியவன், பூரணியின் முகம் பார்த்தான். அதில் அவனுக்கு தேவையான பதில் கிடைத்தது.
இவ்வளவு போதுமென்ற எண்ணம் வர " அது அந்த பயம் இருக்கணும். என்னைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் வரணும் வாட்சப் செய்து விடுறேன். வந்து பத்திரத்தை குடுத்து கையெழுத்தை போட்டுட்டு காச வாங்கிட்டு போற வழியை பாரு " சந்திரனுக்கு அட்ரஸையும், மேற்கொண்டு சிலவற்றையும் தகவலாக அனுப்பி, மண்டையை காய வைத்து, ஒரு வழியாக போனை வைக்க, அங்கே ஒரு ஜீவன் என்ன நடந்ததேன்றே கிரகிக்க முடியாமல், போனை பார்த்திருக்க,
இங்கே கூர்மையாக பூரணியை பார்த்த ஆதவன் "ம்ம்ம்! என்ன நீ என்னமோ சொல்ல வந்தியே! என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு" அந்த குரலை மாற்றாமல் அப்படியே பூரணியிடமும் பேச,
"இல்லையில்லை ஒண்ணுமில்ல" பட்டென பதில் வந்தது அவளிடமிருந்து, பதட்டத்தை சுமந்து.
"ஒண்ணுமில்லையா" என்றவன் "ஒண்ணுமே இல்லையா" மீண்டும் மீண்டும் கேட்க,
"அய்யோ! நம்புங்க! நிஜமா தான் சொல்றேன். ஒண்ணுமே இல்லை" சொன்னவளிடம்,
"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. மேரேஜ்க்கு எனக்கு சம்மதம். உனக்கும் சம்மதம் தான, என்னை கல்யாணம் செய்துக்கோ என்ன" அவன் பட்டென சொல்லவும் "ஆங்" வென்று அதிர்ந்து போய் பார்த்தாள் பூரணி.
"என்ன முழிக்கற? இஷ்டமில்ல போல" வேட்டியை மடித்து கட்டியபடி அவன் கேட்ட விதமே 'எங்கே இஷ்டமில்லை சொல்லித்தான் பாரேன்' சவால் விட்டது.
'இப்படி எருது கட்டு காளை மாதிரி நின்னு கேட்டா நானும் தான் என்ன தான் செய்வேன்' இவள் திருதிருக்க,
"என்ன பதில் சொல்லு! என்னை புடிச்சிருக்குல்ல" அவன் நெருங்க வர,
"ம்ம்ம்! இஷ்.. இஷ்டம் தான். பிடிச்சிருக்கு. கல்யாணம் செய்துக்கறேன்" பூரணிக்கு சற்று முன் அவன் பேசிய பேச்செல்லாம் மனதில் ஓட, சம்மதமென அவள் தலை, நாலா பக்கமும் அவள் சம்மதமில்லாமலே ஆடியது.
"இஷ்டமில்லை சொல்லியிருக்கணும்? அப்போ தெரிஞ்சிருக்கும்" கிருதாவை உள்ளங்கையால் தடவி மீசையை நீவி முரட்டுத்தனமாக முறுக்கி, கண்களில் தெறித்த கனலோடு அவன் சொன்ன விதத்தில்,
'எப்பா டேய் ஊர் உலகத்துல இப்பிடி எவனும் பொண்ணையே மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கமாட்டான்' உள்ளே மனம் குரல் கொடுத்தது.
'நானே கெஞ்சி சொல்ற வார்த்தையை, மெரட்டுற போல பேசிட்டு இருக்கேன். நீ வேற' அடக்கியவனுக்கு அதில் சிரிப்பு வந்தாலும் வெளியே விரைப்பாக முறைத்து தான் நின்றிருந்தான் ஆதவன்.
இதற்காக வருந்தபோகிறோமென அறியாமல்!
ஒரு வழியாக இருவரும் மாடியிலிருந்து இறங்கி உள் வர, நடையை அவன் எட்டி போட்டு பார்வதியை கடக்க, அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவர் மகளை பார்த்ததும்,
"மேல என்னடி தம்பி சத்தம் போட்டுகிட்டு இருந்தாரு! என்ன சொல்லி தொலைச்ச அவருக்கு கோபம் வர அளவுக்கு" மகளை கடிந்தார். அவர் பதட்டம் அவருக்கு.
"பூரணி ஒன்னும் சொல்லலை அத்தை, நான் தான் வேற ஒரு டென்ஷன் ல கொஞ்சம் போன்ல சத்தமா பேசிட்டேன். பூரணியை ஒன்னும் சொல்லாதீங்க" நின்று பொறுமையாக சொல்லி, அவர் மகளுக்காக அவரிடமே வக்காலத்து வாங்கி பார்வதி வாயை பிளக்க வைத்தவன்,
"இங்க நின்னு என்னடி பேச்சு வேண்டி இருக்கு, புள்ளைய உள்ள கூட்டிட்டு போ" ஆதவன் நிற்பதை பார்க்காது சொன்னபடி வந்த அம்மையப்பனை,
"அத்தையை திட்டாதீங்க மாமா, சும்மா பேசிட்டு இருந்தோம்" சொல்லி அவரையும் வாயை பிளக்க வைத்தான்.
"என்னடி " அவர் பார்வதியை பார்க்க "நீங்க பேசிட்டு வாங்க மாமா, எனக்கு உங்களோட பேச வேண்டியிருக்கு" சொல்லியவன் நகர்ந்துவிட்டான்.
"என்கிட்டயும் பூரணியை சப்போர்ட் செய்து பேசினாருங்க" பார்வதி பேந்த பேந்த விழிக்க,
'வெள்ள வேட்டி பெரிய ஆளு தான். அம்மாவையே வாயை மூட வெச்சுட்டான்' பூரணிக்கு அந்த ரணகளத்திலேயும் குதூகலமாகவே இருந்தது.
பின்னே அவ்வளவு பேசுவார் பார்வதி. அதில் அடுத்தவர் மனம் நோகும், நோகாது எதையும் பார்க்க மாட்டார். வார்த்தையில் சட்டென நெருப்பள்ளி வீசி விடுவார். சில நாட்களாக வார்த்தையில் வெந்து கொண்டிருந்தவளுக்கு, அவரையே ஆதவன் வியர்க்க வைப்பதை பார்க்க சந்தோஷமாகவே இருந்தது.
"சரி வா என்னன்னு பாப்போம்" சொன்ன அம்மையப்பன் "நீ உள்ள போ பேசிட்டு வரோம்" மகளிடம் சொல்லி இருவரும் சென்றுவிட பூரணிக்கு தான் கையறு நிலை.
ஆதவனிடம் தன் பாச்சா பலிக்காது புரிந்தது. அதற்காக இதற்கு ஒத்துகொள்ளவும் முடியவில்லை. அவள் ஆசைகளும் கனவுகளும் வேறு.
துளிர்த்த கண்ணீரை அடக்கி நிற்க "அக்கா! அழாத க்கா! அம்மா திட்ட போறாங்க" தங்கைகள் இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதியின் தலை மறைந்ததும்.
இவர்களை கூட தன்னிடமிருந்து பிரிக்கிறாரே அன்னை! அப்படி என்ன செய்துவிட்டேன் ஆதங்கம் முட்டியது.
"ஏம்மா தங்கச்சிங்கள என்கூட சேர விட மாட்ற" கோவப்பட்ட பூரணியிடம்,
"ஏன்? உன்கூட சேர்ந்து உன் புத்தி அதுங்களுக்கும் வரதுக்கா? உன்னைத்தான் விட்டுட்டேன் அதுங்களையாவது இறுக்க பிடிச்சுக்கறேன்" கரித்து கொட்டியவர்,
"இனிமே அக்கா சொக்கான்னு அவகிட்ட போய் நின்னீங்க! முதுகு தோலை உறுச்சி விட்ருவேன் புரிஞ்சுதா? போங்க போய் நீங்களாவது ஒழுங்கா இருங்க" தங்கைகளை தன் கண் முன்னே அன்னை பேசியது வந்து போனது.
"அக்கா அழல! நீங்க போங்க! அம்மா திட்ட போறாங்க" அனுப்பியவள் அறைக்குள் புக,
இங்கே பெண் பார்க்க வந்தவன் பூ வைத்து, மோதிரம் போட்டு, தட்டை மாற்றி நிச்சயித்து விட்டே செல்லலாம் போல தனத்திடம் சொல்லியிருந்தான்.
"என்னப்பா! திடீர்னு இப்டி சொன்னா எப்படி" தனம் ஆதவனின் அன்னை தயங்கினார்.
"ம்மா நான் என்ன செய்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் நம்புறீங்கல்ல! அப்போ இதையும் நம்புங்க!" ஆதவன் ஒரே போடாக போட,
"ம்மா அண்ணணுக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு போல! அதை தான் இப்படி சொல்லுது. எனக்கும் அவங்கள ரொம்ப பிடிச்சிருக்குமா. முடிச்சிடலாம்" அவனின் தங்கை அமுதாவும் சொல்ல,
"அதில்ல டி! ஜாதகம் பாக்கணும். பொருத்தம் பாக்கணும்! எவ்வளவோ இருக்கு டி " அப்போதும் தயங்கினார் தனம்.
"மனப்பொருத்தம் நல்லாருந்தா போதாதாம்மா? உங்களுக்கு ஜாதகம் பொருந்தனும் அவ்ளோ தான? நான் பாத்துக்கறேன் விடுங்க! சந்திரனை மோதிரம், மத்த பூ பழம் எல்லாம் வாங்கிட்டு வர சொல்லிட்டேன். இன்னைக்கே நிச்சயம் செய்துக்கலாம்" ஒரேடியாக ஆதவன் பெற்றவளின் வாயை மூடியவன்,
"என்னம்மா என்ன சொல்றார் தம்பி" கேட்டு வந்த அம்மையப்பனிடமும்
"இன்னைக்கே நிச்சயம் செய்திடலாம்னு சொல்றாங்க அம்மா. நீங்க என்ன சொல்றீங்க மாமா" கேட்டு அவர் வாயை இரண்டாவது முறையாக பிளக்க வைத்தான்.
"என்னங்க! உடனேவா? எப்பிடிங்க " கேட்ட பார்வதியை அழுத்தமாக பார்த்தவன்,
"பின்ன நாங்க என்ன பிக்னிக்கா வந்திருக்கோம்? வந்து சும்மா போக?" அவரிடம் தொடங்கி,
"என்னங்க பொண்ணு பிடிச்சிருக்கு நிச்சயம் செய்றோம் சொல்றேன். என்னமோ அதிர்ச்சி ஆகறாங்க உங்க வீட்ல? இங்க தல நீங்க இல்லையோ " பார்வதியை உறைய வைத்து அம்மையப்பனை உரைக்க கேட்டான்.
அதில் ரோஷம் வர பெற்றவர் "கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்ட, போ போய் வந்திருக்கவங்களுக்கு பலகாரம் எடுத்துட்டு வா" மனைவியை கடிந்து அனுப்பியவர்
"அது ஒன்னுமில்லைங்க தம்பி! பொண்ணு பார்க்க மட்டும் தானே ன்னு சொந்தம் யாரையும் கூப்பிடல. அக்கம் பக்கம் சொன்னதோட முடிச்சிகிட்டோம். சொந்தம் மத்தியில நாளை பின்ன பேச்சு வரும் மூணு பொம்பள புள்ளைங்கள பெத்து வெச்சிருக்கமே, அவங்க அனுசரணை வேணுமே, அதான் யோசிக்கிறா போல " என்றார்.
"அதனால என்ன? நாங்களும் எங்களுக்குள்ள தானே வந்திருக்கோம். நமக்குள்ள நிச்சயம் முடிச்சிருவோம். அப்பறம் மேரேஜ் கிராண்டா வெச்சிடலாம் " அதற்கும் ஆதவன் தீர்வு சொல்ல,
"எப்பா! அம்மையப்பா! நீ என்ன இப்பிடி தயங்கற? தம்பி தான் தெளிவா சொல்லுதில்ல" பக்கத்துக்கு வீட்டு பெரியவர் ஆதவனுக்கு பரிந்துகொண்டு வந்தார்.
'வந்ததுலருந்து தொண தொணன்னு இருந்து, இப்போ தான் இந்த பெருசு நல்ல வார்த்தை பேசி இருக்கு' மனதில் நினைத்து ஆதவன் நல்பார்வை பார்த்து வைக்க, அந்த பெரியவர் சிரித்து வைத்தார்.
"என்னங்க கொஞ்சம் வறீங்களா" பார்வதி கணவரிடம் கிசுகிசுத்தவர், டீப்பாயில் பலகார தட்டை வைத்து நழுவ பார்க்க,
"பேசிட்டு இருங்க ஒரு நிமிஷம் இதோ வந்திடுறேன்" அம்மையப்பனும் மனைவி வால் பிடிக்க, இருவருக்குமே தன் மீது அதிருப்தி இருப்பது முகத்தில் தெரிந்தது.
அமர்ந்திருந்த வாக்கிலே நன்றாக நிமிர்ந்த ஆதவன் "நீங்க என்ன பேசினாலும் கவலை இல்லை. இன்னைக்கு நிச்சயம் நடந்தே தீரணும். இதை மனசுல வெச்சிகிட்டு போங்க ரெண்டு பேரும்" கடினமாக சொல்லி, அங்கிருந்த அனைவரையுமே ஒரு நொடி கதி கலங்க வைத்தான்.
குவியும்…