2- சின்ன சின்ன அன்பில்..
ராபின் வந்து கால் மணிநேரமாக அறையின் வெளியில் நின்று கத்தியும் பலனளிக்காமல் போக.. அங்கிருந்த நாற்காலியை இழுத்து கதவிற்கு நேராகப்போட்டு அமர்ந்துகொண்டான். அவனை மேலும் அரைமணி நேரம் காக்க வைத்து ஒருவழியாக தனது உடையை அணிந்துகொண்டு வெளியே வந்தாள் உவா..
" இன்னாமா குவா .. உனக்கு இந்த டிரஸ் போட்டுகுனு வாரத்துக்கு நாலு மணிநேரம் ஆவுமா ?? எனக்கு நிறைய வேலை இருக்கீது.. சீக்கிரம் வரலங்காட்டி அப்டியே உட்டுனு போயிருப்பேன்.. இந்த ராபினு யாருக்கும் வெயிட் பண்ண மாட்டான்... ஏதோ அம்மா சொன்னாங்கனு உனக்கு எல்லாம் காத்திருக்க வேண்டிருக்கீது... வா போலாம்.. உன்னை அங்க கொண்டுபோய் தள்ளிவுட்டுட்டு நான் சவாரி போவணும்.. பார்ட்டி நைட் எட்டு மணிக்கு... சரியா ? பீச்ல எவகூடவாச்சும் கடலை வறுத்துட்டு பத்து மணிக்கு வாரமா ராத்திரி சீக்கிரமா வூடு(வீடு) வந்து சேரு.. என்னா ??? ", என்று ராபின் அவளை பேசவிடாமல் இறைந்துகொண்டுடிருக்க .... அவளோ ..
" ஏண்டா மாடு மாதிரி கத்துற ??? குவான்னு எல்லாம் கூப்பிட்டீனா மூஞ்சிய கீய்ச்சிருவேன் பாத்துக்கோ... ஒழுங்கா என்னோட பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கோ... அவ்ளோதான் உனக்கு மரியாதை.. ", என்று ரூமிலிருந்து வெளியே வந்ததும் தனது முகமூடிக்குள்ளிருந்து தன்னால் முடிந்த மட்டும் உவா கத்திக்கொண்டிருக்க.... அதற்குள் " ஹே ............", என்று கத்திக்கொண்டு தன்னைநோக்கி ஓடிவரும் குழந்தைகளை தனது முகமூடியிலிருந்த இரண்டு சிறிய ஓட்டைகளின் வழி பார்த்தவளுக்குள் மகிழ்ச்சி பீறிட்டு எழுவதைப் போன்று உணர்ந்தாள்.
அங்கிருந்து வந்த ஒவ்வொரு குழந்தைகளும் அவளைக் கட்டித்தழுவி விளையாட.... இவளுக்கு ஒவ்வொரு முறை அவர்கள் அணைக்கும்பொழுதும் தன்னுள் மகிழ்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதைப் போன்றதொரு உணர்வில் கண்மூடி நின்றாள். முப்பது குழந்தைகள் கட்டித்தழுவ முற்பட்டதில் தலையிலிருந்த முகமூடி கழண்டு விழுந்தது மட்டுமின்றி அவளையே கீழே உருட்டிவிட்டிருந்தனர் குழந்தைகள்.
இரண்டு கைகால்கள் x வடிவத்தில் விரவிக்கிடக்க , மல்லாக்க விழுந்துகிடந்த அவளை சுற்றி படர்ந்திருந்த குழந்தைகளை விலக்கிவிட்டு ராபின் அவளருகில் சம்மணங்கால்போட்டு அமர்ந்து ஒரு பொய்யான கொட்டாவியை விட்டு சொடக்கிட்டு அவளைப் பார்க்க.. அவளோ தனது வாத்து போன்ற உடையால் எழுந்திரிக்க முடியாமல் அவள் கழுத்தை தூக்கி எழ முயற்சி செய்துகொண்டிருந்தாள். இவனோ ஹாயாக அமர்ந்திருந்தான். " டேய் ராபி.. ஒழுங்கா தூக்கிவிடுடா .. ", கத்திக்கொண்டே எழ முயற்சிசெய்யும் அவளைப் பார்க்க பார்க்க சிரிப்பு பொங்கி வந்தது.. "அடேய் புழு மண்டையா ஒழுங்கா என்னை தூக்கிவிடு.. டைம் ஆவுது.. பீச் போவணும். இப்போ மட்டும் என்னை எழுப்பிவிடலை அப்புறம் அவ்ளோதான் சொல்லிட்டேன்.. நைட் உன் பார்ட்டிக்கு மிக்கி கெட்டப் போட்டு அசத்தலாம்னு நினைச்சேன்.. நீயே என்னை மதிக்கலை.. போடா நான் நைட் வந்து சும்மா சாப்டுட்டு கெளம்பிருவேன்.. " என்று கத்த.. "அப்போகூட சோறு மட்டும் வந்து துண்ணுட்டு போவேன்னு சொல்ற பாத்துகின்னியா ( பார்த்தியா) அங்க நிக்குற குவா.. சரி பாக்குறதுக்கு ரொம்ப பாவமா இருக்க.. எழுந்திரு .." என்று தனது கையை நீட்ட அவனது கையை பிடித்து எழுந்தவள் தனது வாத்து உடையை சரி செய்துகொண்டு திடீரென அவனை கட்டிப்பிடித்து.. " என்ன இருந்தாலும் நீ என் நண்பேன்டா.. இப்போ சமத்தா என்னை பீச் கூட்டிட்டு போ.. அப்பறம் இன்னொன்னு சொல்லணும்.. போன புதன்கிழமை சாயுங்காலம் பீச்சுக்கு டெடி ( கரடி பொம்மை ) கெட்டப் போட்டுட்டு போனேன்.. ஓரு தாத்தா அவரோட வீட்டம்மா பத்தி ரொம்ப பீல் பண்ணி சொல்லிட்டு இருந்தாரு.. நானும் கேட்டுட்டு வீட்டுக்கு கிளம்ப நைட் ஒன்பது மணி ஆகிருச்சு.. அப்போ ஒரு குரூப் என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. அன்னைல இருந்து அவனுங்க டெய்லி வரானுங்க. என்னவோ பயமா இருக்கு.. இன்னைக்கு மட்டும் என்கூட இரு டா. ப்ளீஸ்.. ", என்று அவனிடம் பொய்யான ஒரு கதையை கூறி அவனை தன்னுடன் இந்த நாள் முழுக்க வைத்துக்கொள்ள அழகாக காய் நகர்த்தினாள் உவா. எதிர்பார்க்காமல் அவள் கட்டிப்பிடித்தவுடன் ஷாக் அடித்ததைப்போன்று உணர்ந்தவன் அவளது நண்பேன்டா என்ற வார்த்தையில் அந்த மாயையிலிருந்து வெளிவந்திருந்தான்.
" உன் மண்டையிலே இருக்க முகமூடியை கலட்டி உன்மூஞ்சியை அவனுங்ககிட்ட காட்டிருந்தீனா அவனுங்க உன்பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாம சூப்பர் புள்ளையபார்த்து அவனுங்க வேலையை பாப்பானுங்கல்ல.. ", என்று நக்கலாக கேட்டுவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பி நமட்டு சிரிப்பு சிரித்தான் ராபின்.
"டேய் கொரங்கு.. ரொம்ப பண்ணாத டா.. கூட வா.. நீ என்கூட வந்தினா உன்னை என்னோட ஆளுனு நினைச்சுட்டு தொந்தரவு பண்ண மாட்டானுங்க ..", என்று சொன்னதோடு அல்லாமல் அவனையும் இழுத்துக்கொண்டு குழந்தைகளுடன் சிறிதுநேரம் விளையாடிவிட்டு விடைபெற்றார்கள்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்து ஆளுமா டோலுமா பாடலை ராபின் ஒலிக்கவிட அதற்கு அமர்ந்தவாறே அப்படி இப்படி கையை ஆட்டிகொண்டு வந்தாள் உவா.. அந்த வாத்து கெட்டப்பில் அவள் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிகொண்டு வருவதை தனது கண்களால் ராபின் ரசித்துக்கொண்டு கடற்கரையை நோக்கி தனது ஆட்டோவை செலுத்தினான்.
**********
" ஹலோ.. நான் செண்பகம் பேசுறேங்க .. இன்னைக்கு நைட்டு இல்லத்தில் ஒரு விருந்து இருக்குங்க. அதுக்கு கண்டிப்பா நீங்களும் உங்க வீட்டம்மாவும் வந்தீங்கனா நல்லா இருக்கும். பட்டு பத்தி கொஞ்சம் பேசனுங்க. பயப்படாதீங்க.. அவ காதல் கல்யாணம் விஷயத்தில் நான் தலையிட மாட்டேங்க. அவளைப்பத்தி வேற ஒரு விஷயமா பேசணும். அதுக்காக தான் வர சொல்றேன். என்மேல ஏதாவது கோவமா இருந்தாலும் கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு வாங்க ", என்ற செண்பகம் அந்தப்பக்கமிருந்து வந்த பதிலில் மெலிதான புன்னகையுடன் அழைப்பை அணைத்து வைத்துவிட்டு இரவு உணவுக்கான ஏற்பாடை கவனிக்க சென்றார்.
அவளை பீச்சில் இறக்கிவிட்டவன் ஆட்டோவிலேயே நின்றுகொள்ளலாம் என்று எண்ணியிருக்க அவளோ இவனை விடாமல் அவளுடனே இழுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள். அந்த பீச்சிலிருந்த அனைத்து குழந்தைகளையும் அவளது பொம்மை உருவதைக் காட்டி சிரிக்கவைத்து அழகுபார்ப்பதே இவளது வேலை. இதைத்தான் வீட்டிற்கு தெறியாமல் செய்துகொண்டிருக்கிறாள். இதைக் கண்டுபிடித்தால் வீட்டில் விடமாட்டார்கள் என்று முடிவெடுத்தவள்.. செண்பகம் நடத்திவரும் இல்லத்தில் பிள்ளைகளுக்கு படமெடுக்க போகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு இங்கு சுத்திக்கொண்டிருக்கும் இவளைப்பற்றி வீட்டிலிருந்து மறைக்கிறோம் என்று செண்பகத்திற்கு ஏக கவலை.
அதிலும் ஒருவனைக் காதலிப்பதாக இவள் கூறியதிலிருந்து வீட்டில் அவ்வளவு ஒன்றாமல் இப்படி இருக்கிறாளே என்று கவலை அவரை அரித்துக்கொண்டிருந்தது. இன்று இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்துதான் உவாவின் அப்பாவையும் அம்மாவையும் இரவு நடக்கும் விருந்திற்கு அழைத்திருந்தார் செண்பகம்.
*****************************************************************************************************************************************************
இரவு ஏழு மணி..
சிதம்பரம் ..
" மனோஜ்.. எல்லாத்தையும் பேக் பண்ணி வெச்சுட்டீங்க தானே ?? நானே நார்வே ரீச் ஆகிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன். அதுவரைக்கும் என்னை தொல்லை செய்யாம இருங்க. யாரு என்ன கேட்டாலும் எனக்கு தெரியாது. இன்னும் என்கிட்ட பேசலைன்னு சமாளிங்க. உங்களுக்கு ஒரு புது சிம் ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதையே பயன்படுத்துங்க. அந்த போன் வீட்டிலே மட்டும்தான் இருக்கனும். அம்மாவை நான் தினமும் பார்க்கணும் அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு. மீதி பிசினஸ் சம்மந்தமா பாத்துக்க வேண்டியது எல்லாம் உங்க பொறுப்பு..", என்று படபடவென பொரிந்துகொண்டிருந்த சித்திக் இன்னும் குழந்தையாக இருக்கிறானோ என்ற சந்தேகம் தோன்றி நொடியில் மறைந்தது.
"சார்.. உங்ககிட்ட கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நான் இந்த ஆபீஸ்ல சேர்ந்து சரியா மூணுமாசம் கூட முடியலை. உங்களைவிட நாலுவருஷம் சின்னவன் நான். என்னை நம்பி இப்படிமாசத்துக்கு கோடி கணக்கிலே விற்பனை ஆகிற பிசினெஸ் பொறுப்பு நீங்க கொடுக்கிறதைப் பார்த்தா எனக்கு சுத்தமா புரியலை. இது ஏன்னு தெரிஞ்சிக்கலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும்.. ஏன்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும். அதுவும் இல்லாம நான் உங்களைவிட சின்ன பையன் சார். என்னை வாங்க போங்கன்னு நீங்க கூப்பிடுறது ரொம்ப சங்கடமா இருக்கு. ப்ளீஸ் சார். வா போ னு கூப்பிடுங்க.", என்று கேள்வியும் வேண்டுதலுமாக தன் முன் நிற்கும் சின்னவனைப் பார்த்து புன்னகைத்த சித்திக்.. " சில விஷயம் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.. பார்த்துதான் தெரிஞ்சிக்கணும்.. ஒரு நிமிஷம் என்றவன் அவனது டேபிளிலிருந்த லப்டோப்பில் எதையோ தேடி எடுத்து அதனை மனோஜ் பார்க்குமாறு திருப்பி வைத்தவன் பார்க்குமாறு கண்ஜாடை வேறு காட்டினான்.
அந்த ஒளிப்பதிவு அவர்களது ஆபீஸ் சி சி டி வி பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.அதில் அவர்கள் ஆபிசில் வேலை செய்யும் பெண்கள் இருவர் இரவு எட்டு மணிக்கு மேலாக வேலை செய்துகொண்டிருக்க அவர்கள் வேலை செய்து முடிக்கும்வரை அவர்களிடமிருந்து சிறிது இடைவெளிவிட்டு மனோஜ் நின்றுகொண்டிருப்பதைப் போன்றொரு காட்சி இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்த மனோஜ் குழப்பத்துடன் சித்திக்கை பார்க்க ..
"எந்த ஒரு பையன் தன் கூட வேலை செய்யுற பொண்ணுங்களை தன்னோட குடும்பத்து பொண்ணுங்களா நடத்துறானோ அவன் அடுத்தவங்க பொருளுக்கோ சொத்துக்கோ என்னைக்கும் ஆசைப்படமாட்டான் மனோஜ்.. ஒரு பார்வையிலே கண்ணியத்தையும் நேர்மையையும் கண்டுபிடிக்க முடியும்.. இது என் தாத்தா நான் ஒரு பொண்ணை எப்படி பார்க்கணும்னு சொல்லிக்கொடுத்தப்போ கத்துக்கிட்டது. அவங்களை பாதுகாக்க நீங்க நின்னுட்டு இருந்தப்போ உங்களோட கண் அசைவுகளை வைச்சு தான் அடுத்த நாளே உன்னை என்னோட மேனேஜர் ஆஹ் ப்ரொமோட் செஞ்சேன். அப்புறம் வாங்க போங்கன்னு கூப்பிட்டு பழகிருச்சு. அது எனக்கு சின்ன வயசுலே ஒரு டீச்சர் வந்தாங்க. பிரேமா அவங்க பெயர். அவங்க எங்களை மாதிரி குட்டி பசங்களையே வாங்க போங்கன்னு கூப்பிடுவாங்க. முதல்லே அவங்க மேல ஒரு ஈர்ப்பு .. அடுத்து அவங்க நம்மளுக்கு எவ்ளோ மரியாதை தராங்கனு ஒரு கர்வம். அது எனக்கும் எல்லாருகிட்டயும் கிடைக்கும்னு ஆசைப்பட்டேன். அதுனாலே நானும் அப்படியே எல்லாரையும் கூப்பிட்டு பழகினேன். அப்பப்போ உங்களை உன்னைனு கூப்பிடுற சூழ்நிலைகள் வரலாம். ஏனா, எந்த ஒரு தோழனையும் வாங்க போங்கன்னு கூப்பிட இந்த உலகத்துல யாராலையும் முடியாது இல்லையா ??", என்று கூறிவிட்டு சிரிக்கும் சித்திக் இவனுக்கு வினோதமாக தெரிந்தான். ஒரு வேலையாளை யாரும் இவ்ளோ நுட்பமா கவனிச்சதா கேள்வி பட்டதும் இல்லை. அந்த கண்ணியத்துக்காகவும் நேர்மையாகவும் அவனை தோழனாக ஏத்துக்குற முதலாளியையும் பார்த்தது இல்லை என்று மனதினூடே யோசித்துக்கொண்டிருக்க அதற்குள்ளாக சித்திக் அந்த வீட்டின் மிக முக்கியமான அறைக்குள் புகுந்திருந்தான்.
உள்ளே போகலாமா வேண்டாமா என்ற அலைப்புறுதலுடன் வெளியே நின்றிருந்தான் மனோஜ்.
.