அத்தியாயம் 7
அவள் எப்படி தன் வீடு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. வீட்டை அடைந்தவுடன் தயிரை தன் அண்ணியிடம் கொடுத்து விட்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளுக்கு ஓவென்று அழலாம் போல் இருந்தது. ஏன் என் மனம் இப்படி துடிக்கிறது? அவனுக்கு பெண் பார்த்தால் எனக்கென்ன வந்தது, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன்? நான் அவனை காதலிக்கிறேனா? அது தான் அவனை பார்த்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கிறதா? இது சரி வருமா? மனமே அடங்கு. என்னால் ஏணி வைத்தால் கூட அவன் உயர்வை அடைய முடியாது. இதை ஏன் என் மனம் ஏற்க மறுக்கிறது? நான் அவனை நினைப்பதே பெரிய தவறு. என் நிலை என்ன அவன் உயர்வு என்ன? கடவுளே என்ன இது சோதனை? என்று மௌனமாக அழுதாள். குளியலறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்வதி என்னடி? இவ்வளவு நேரம் குளிக்கிறே? எனக்கும் அலுவலகத்திற்கு நேரம் ஆகுது, நான் குளிக்க வேண்டாமடி என்று புலம்பிக் கொண்டே பாத்ரூமுக்கு குளிக்க சென்றாள். துர்கா அப்போதுதான் மணியை பார்த்தாள், மணி எட்டு ஆகியிருந்தது. முருகா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு! இன்னைக்கு காலை டிபன் சாப்பிட முடியாது, கொண்டு போய் அலுவலகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று நினத்தவளாக அன்று செய்த ரவா உப்புமாவை டப்பாவில் அடைத்து தொட்டுக்கொள்ள, கொஞ்சம் நாட்டு சர்க்கரையும் அதிலேயே வைத்து, மதிய உணவையும் ஒரு டப்பாவில் போட்டு இரண்டையும் எடுத்து வைத்தாள். ஐந்து நிமிடத்தில் தயாராகி, அண்ணியிடம் நான் ஆபீஸுக்கு போயிட்டு வரேன் அண்ணி என்று குரல் கொடுத்தாள். பார்வதி அப்போதுதான் குளித்து விட்டு வெளியே வர, என்னடி டிபன் சாப்பிடலையே? என்று விசாரித்தாள். இல்ல அண்ணி நேரம் ஆயிடுச்சு, சரியான நேரத்திற்கு போகலனா பஸ் போயிடும் என்று கூறிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தாள். பார்வதிக்கு அவள் டிபன் சாப்பிடாமல் போவது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாளே? நிறைய வேலை செய்கிறாள், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டாமா? நாளையில் இருந்து அவளை சாப்பிடாமல் அனுப்பக்கூடாது என்று மனதிற்குள் நினைத்தவாறே அவள் தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.
துர்காவிற்கு அன்று வேலையே ஓடவில்லை மனதில் பாரம் அழுத்தியது. அன்று மேனேஜர் சொல்வதை எல்லாம் இரண்டு முறை கேட்டு தெரிந்து கொண்டாள். அவரே,” என்னம்மா உடம்பு சரியில்லையா?எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாய்”, இன்னைக்கு என்ன உன் முகமே சரியில்லை என்று விசாரித்தாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்! பஸ்ஸில் நெரிசல் அதிகம் அதனால்தான் கொஞ்சம் அசதியா இருக்கு, என்று சொல்லி சமாளித்தாள். மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள். அங்கு வீற்றிருக்கும் ஆண்டவரை பார்க்கும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் பெருகியது. ஆண்டவா! என்னை இந்த இக்கட்டில் இருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மனதுருகி வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.
அவள் வேண்டுதல் இறைவனை சென்று அடைந்ததோ என்னவோ மறுநாள் மாலை மூன்று மணிக்கு ஆபீஸ் போனில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. போனிற்கு parallel connection இருந்தது. ஆதலால் அவள் டேபிளில் இருந்தும் எடுக்கலாம். அவள் ஹலோ என்று கூறுகையிலேயே, மறுமுனையில் ஹலோ! துர்கா தானே, நான் சுஹேல் பேசுறேன், என்று குரல் கேட்கவே அவளின் அத்தனை செல்களும் சந்தோஷத்தில் துடித்தது . என்ன சுஹேல் இந்த நேரத்தில் அழைக்கிறாய்?, என்ன விஷயம் ? என்று கேட்க, சுஹேல், உன்னிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும், மாலை அலுவலகம் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாரன்ட் க்கு வருகிறாயா? நானும் விரைவாக வந்து விடுகிறேன். அங்கு பேசலாம் என்று கூறி போனை வைத்தான். துர்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம், எதற்காக கூப்பிடுகிறான்? ஒரு வேளை அவனுக்கு பார்த்த பெண் பற்றிய அபிப்ராயம் கேட்க விரும்புகிறானோ, ஆமாம்! அப்படித்தான் இருக்கும், என்று நினைக்கியிலேயே அவள் மனம் கசந்தது. மணி ஐந்தரை அடித்ததும் தன் பையை எடுத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட்யை நோக்கி விரைவாக சென்றாள்.
அங்கு ஏற்கனவே சுஹேல், இவளுக்காக காத்திருந்தான். இவளை பார்த்ததும், துர்கா இங்கு இருக்கிறேன், என்று கையால் சைகை செய்தான். அவன் இருக்கும் இடம் நோக்கி துர்கா சென்றதும், வா! துர்கா, உட்கார், என்று எதிர் இருக்கையை காட்டி அமரச் சொன்னான். அவள் அமர்ந்ததும் என்ன துர்கா சாப்பிடுற? டிபன் ஏதாவது ஆர்டர் பண்ணவா என்று கேட்டதும், அதெல்லாம் வேண்டாம் பழரசம் சொல்லுங்கள் என்று கூறவும் அவன் பேரரை அழைத்து இரண்டு ஆப்பிள் ஜூஸ் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் முகத்தில் சிறிது அசதி தெரிந்தாலும் முகம் அழகுடன் தான் இருந்தது. கொஞ்ச நேரம் மௌனமாகவே சென்றது. அவனே என்ன விஷயம் என்று சொல்லட்டும் என அவள் மௌனம் காத்தாள். ஜூஸ் வந்தவுடன் இருவரும் பருக தொடங்கினர்.
பருகிக் கொண்டே இருக்கும்போது சுஹேல் அவளிடத்தில் ஒரு கார்டை கொடுத்து அவளை படிக்கச் சொன்னான். கார்டின் முகப்பில் சிவப்பு வண்ண ரோஜாக்கள் மின்னின. உள்ளே திறந்து பார்த்தாள். அதில் என்னுயிர் துர்காவிற்கு என ஆரம்பித்து,
எனது உயிரில் கலந்து நீ என்னவளாகிவிட்டாய்
என்று நான் உனை பார்த்தேனோ
அன்றே எனை நான் இழந்தேன்
இன்று என் உயிர் உன்னிடத்தில்
என் உயிரை திருப்பி தருவாயா? அல்லது
என் உயிரை உன்னோடு சேர்ப்பாயா! அன்பே
பதில் உன்னிடத்தில்.
ஆவலுடன் உன் சுஹேல்
என்று கையெழுத்திடப்பட்டு இருந்தது. அதை பார்த்தவுடன் துர்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. கண்களில் நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த சுஹேல் அதிர்ந்து விட்டான். என்ன துர்கா நான் உன் மனதை காயப்படுத்தி விட்டேனா? உனக்கு என்னை பிடிக்கவில்லையா? என்று கண்களில் சோகம் ததும்பிய முகத்துடன் கேட்கவும், அவள் அவனது கையைப் பிடித்து அதில் தன் முகத்தைப் பதித்து மீண்டும் அழ தொடங்க, ஸுஹேலுக்கு மிகவும் சங்கடமாக தோன்றியது. அவளின் தலையை வருடிக் கொண்டே எதுனாலும் சொல்லு துர்கா தயவு செய்து அழாதே என்று சுஹேல் கூறியதும், துர்கா தன் அழுகையை நிறுத்திக் கொண்டு, சுகி உங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தமானவள் இல்லை. அழகிலும், படிப்பிலும் ,பணத்திலும் என்னால் உங்களுக்கு சமமாக வர முடியாது. என்னிடத்தில் என்ன இருக்கிறதென்று என்னை காதலிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை. இன்று காலையில் அனீஸ் ஒரு புகைப்படத்தை காட்டினாள். அந்த பெண் தான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவள். அவளை நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் தான் உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அவள் உங்கள் அப்பா, அம்மா பார்த்த பெண். உங்கள் மதமும் கூட ஆகவே உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை மணப்பது தான் உங்களுக்கும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் சந்தோஷம் கிடைக்கும் என்று அவள் கண்ணீருடன் கூறியதைக் கேட்ட சுஹேல், இறுகிய முகத்துடன் நான் அந்த பெண்ணையும் உன்னையும் ஒப்பிட சொல்லவில்லை. உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? இல்லையா என்று மட்டும் பதில் சொல். உன் மனதில் நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். அதை உறுதிப்படுத்த தான் கேட்கிறேன். தயவு செய்து துர்கா உண்மையை சொல்! என்று அவன் கெஞ்சிய பார்வையுடன் கூறவும், துர்காவிற்கு மனம் மிகவும் வருந்தியது. அவள், நம் இரு வீட்டாரின் சம்மதம் கண்டிப்பாக கிடைக்காது சுஹேல். என்னால் என் குடும்பத்தை விட்டு உங்களுடன் வர முடியாது. தாய் இல்லாத என்னை என் அப்பாவும் அண்ணனும் கண்ணும் கருத்துமாக வளர்த்திருக்காங்க, அவங்க மனச நோக வைச்சிட்டு என்னால உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது. நீங்களும் உங்கள் வீட்டுக்கு ஒரே பிள்ளை. உங்க பெற்றோருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அதனாலே இது ஒத்து வராது சுஹேல், என்று அவள் கூறியதும் சுஹேலின் முகம் கறுத்தது.நான் என்ன கேட்டா, நீ என்ன பதில் சொல்ற, நான் உன்னை விரும்புகிறேன், நீ என்னை விரும்புகிறாயா என்று தானே கேட்டேன், அதற்கு ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லு. அதை விட்டு விட்டு மற்றவை எல்லாம் பேசுகிறாய். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிக் கொண்டே இருக்கையிலேயே, அவள் மௌனமாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். என்ன துரி, இது தான் நீ எனக்கும் என் காதலுக்கும் கொடுக்கும் மரியாதையா? பதில் சொல்! என்றால் மௌனமாக போகிறாய் என்று சற்று உருக்கமாக கூறியதும் என்னை தயவு செய்து கட்டாய படுத்தாதீர்கள், என்று கூறியபடியே விரைந்து பஸ் நிலையம் நோக்கிச் சென்றாள். இதுக்கு மேல் இப்போது இவளிடம் பேசி உபயோகம் இல்லை என்று புரிந்து கொண்ட சுஹேல் அமைதியாய் அவளை போக வழி விட்டான். துர்காவின் மனமோ துக்கத்தில் விம்மியது. நான் விரும்பியவர் என்னை விரும்புகிறார் என்று தெரிந்தும் என்னால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கத்தில் கண்ணீர் கொட்டியது. எதிர்காலத்தை எண்ணி அவள் மனம் கலவரம் அடைந்தது.
சுஹேலுக்கோ அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை. அவள் என்னை விரும்புகிறாள். ஆனால் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறாள். அவள் மனதில் நான் இருக்கிறேன் என்ற எண்ணமே அவனுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவளின் மறுப்பு அவனை என்னவோ செய்தது. இவளை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தான்.
கால் என்னவோ அது போக்கில் நடக்க, மனம் என்னவோ சுஹேலை சுற்றியே வந்துக் கொண்டிருந்தது. வீட்டை அடைந்தவுடன் தான் துர்காவிற்கு தன் உணர்வு வந்தது. ஸுஹேலும் தன்னை நேசிக்கிறான் என்ற நினைப்பே நெஞ்சில் இனித்தாலும் இது எப்படி சாத்தியமாகும் என்ற நினைப்பே அவளுக்குள் ஓங்கி இருந்தது. சிறிது நேரத்தில் அனீஸ் அவள் வீட்டிற்கு வர என்ன துர்கா உடம்பு சரியில்லையா?காலையில் எங்க வீட்டில் இருந்து செல்லும்போதே உன் முகம் சரியில்லை. இப்போது கூட முகமெல்லாம் வீங்கி இருக்கு. என்னாச்சுடி? உனக்கு எங்கிட்ட யாவது சொல்லேன் என்று கேட்கவே “உன் இடத்தில் சொல்லாமல் வேறு யாரு கிட்ட டி என் வேதனையை சொல்ல முடியும் “ என்று சொன்ன துர்கா பார்வதி வருவதை பார்த்து அதற்கு இப்போது நேரம் தோது இல்ல, ஞாயிற்றுக்கிழமை மூன்று மணிக்கு நீயும் நானும் சந்திக்கலாம் அங்கே பேசலாம் என்று தாழ்ந்த குரலில் சொல்லவும் அனீசும் சரிடி , நான் என்னுடைய ஆடையை தைக்க கொடுத்து இருக்கிறேன். அதைப் போய் வாங்கி வருகிறேன் என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புறேன். நீயும் வந்துவிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அனீஸின் வீட்டில் தொலைபேசி மணி அடித்தது. பாத்திமா எடுத்து ஹலோ சொன்னவள் அண்ணா எப்படி இருக்கீக?, மதனி நல்லா இருங்காங்களா? என்று கேட்க மறுமுனையில் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? என்று நலம் விசாரித்து விட்டு நான் அனுப்பிய பொண்ணு போட்டோ வந்ததா? சுஹேல் என்னம்மா சொன்னான்? என்று கேட்க, பாத்திமாவும் நேத்தே வந்திச்சி அண்ணா! நான் சுஹேல் கிட்ட கொடுத்திட்டேன். அவன் ஒன்னுமே சொல்லலே. போட்டோவை பார்த்தனா, இல்லையா என கூட தெரியல. நான் அவன்கிட்ட போன் தரேன். அவனேய கேட்டுக்கோ, என்று கூறி சுஹேலை அழைத்து, உன் வாப்பா லைன்ல இருக்கார், பேசுப்பா! என்று கூறி நாசுக்காக சென்று விட்டாள். சுஹேல் போனை எடுத்ததும், அவர் அப்பா, முதல் கேள்வியே என்னடா பொண்ணு பிடிச்சிருக்கா? நிக்காஹ்வை முடிச்சிடலாமா? என்று கேட்டார். சுஹேலுக்கு எரிச்சலாய் வந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, என்னப்பா, பொண்ணு எப்படி பட்டவங்கன்னு தெரியல. நான் நேரில் கூட பார்க்கல. அதுக்குள்ள நிஹ்ஹா வச்சிக்கலாமான்னு கேட்டா என்ன அர்தம்பா, எனக்கு இப்போ நிஹ்ஹா வில விருப்பம் இல்ல. நான் லண்டன் சென்று, என்னுடைய மேல் படிப்பை முடிக்கணும். என்று கூறியதைக் கேட்டதும் அவர் அப்பா ஆச்சரியமுடன் என்னடா! நான் இரண்டு வார்த்தை கேட்டா ஒரு வார்த்தை கூட பேசமாட்டே, இப்போ இப்படி பேசறே, சரி ! நிஹ்ஹா இப்போ வேண்டாம். ஒரு உறுதியாவது பண்ணிக்கலாம். நீ படிச்சிட்டு திரும்பி வந்தவுடன் நிஹ்ஹா வச்சிக்கலாம் சரியா? என்று கேட்கவே, சுஹேல் க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கு துர்காவை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும், அதுக்கப்புறம் தான் வாப்பாகிட்ட சொல்ல முடியும் என்று யோசித்து என்னாலே இப்போதைக்கு வாரணாசிக்கு வர முடியாது வாப்பா, இங்கு மருத்துவமனையில் நிறைய வேலை இருக்கு. அதனாலே இந்த பேச்சு இப்போதைக்கு வேண்டாம் வாப்பா என்று கூறியதும் மறுபக்கம் போனை படாரென்று வைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் அவர் கோபமாக இருக்கிறார் என்று சுஹேலுக்கு உணர்த்தியது. இவரை எப்படி சமாளிப்பது என்று திகைத்தவாறு குளியறைக்கு சென்றான். ரெடியாகி திரும்பி வந்து சாப்பிட உட்காரும்போது பாத்திமா ஆரம்பித்தாள். என்ன சுஹேல் பொண்ணு நல்லாத்தானே இருக்கு. உனக்கு சமமா படிச்சிருக்கு, அழகு இருக்கு, அந்தஸ்து இருக்கு, ஏன் சுஹேல் வேண்டாங்கிறே? என்று கேட்கவும் எனக்கு பிடிக்க வேண்டாமா மாமி? என்று கூறி அதற்கு மேல் பேச்சை தொடரா வண்ணம் எழுந்து கொண்டான். பாத்திமாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இவன் ஏன் நிஹ்ஹா வேண்டாம் என்கிறான், மருத்துவமனையில் வேற யாரையாவது விரும்புகிறானோ? என்று பலவாறு சிந்தித்தபடியே அனீசை சிற்றுண்டி உண்ண அழைத்தாள்.
அத்தியாயம் 8
அன்று ஞாயிற்றுக்கிழமை. துர்காவும் அனீசும் வெளியே சந்திப்பதாக கூறிய நாள். துர்கா அன்று சீக்கிரம் எழுந்து தன் வேலைகளை எல்லாம் விரைவாக முடிக்கலானாள். பார்வதி எழுந்து வந்து என்ன துர்கா? இன்னைக்கு அலுவலகம் விடுமுறை தானே, நிதானமாக எழுந்திருக்க வேண்டியதுதானே, இன்னைக்கு கூட ஏன் சீக்கிரம் எழுந்திக்கிறே? என்று கேட்க, இன்னைக்கு கொஞ்சம் வெளியே போகலாம்னு இருக்கேன் அண்ணி. எங்க அலுவலகத்தில் ஒருத்தருக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் வருது, அனைவரும் பணம் போட்டு அவருக்கு நல்ல பரிசு பொருளை வாங்கலாம்னு இருக்கோம். என்னிடத்தில் தான் அனைவரின் பணமும் இருக்கு. அதான் சீக்கிரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு கடைக்கு போகலாம்னு இருக்கேன். சரி ! எப்போ கிளம்பறே? என்று பார்வதி கேட்டாள். மூன்று மணிக்கு போறேன், அப்பதான் சீக்கிரம் வீட்டுக்கு திரும்ப முடியும் என்று கூறி முடித்தாள். வெளியே வெயில் ஜாஸ்தியா இருக்கு. “வெயில் தாழ போயிட்டு வாம்மா” என்று அக்கறையாய் கூறினாள். அவளுடைய அக்கறையை நினைத்து துர்கா மனதில் மகிழ்ந்தாள். சரி ! என்று தலையாட்டிவிட்டு தன் வேலைகளை வேகமாக முடித்தாள். மணி நான்கை நெருங்கவும் இப்போ போனா சரியா இருக்கும். வெயிலும் அவ்வளவாக இருக்காது என்று எண்ணியபடி தன் பையை எடுத்துக்கொண்டு அண்ணி நான் கடைக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு வேகமாக நடக்கலானாள்.
என்னடி விஷயம்? எனக்கு நீ தனியாக பேசணும் சொன்னதில் இருந்து ஒரே கலக்கமாக இருக்கு. சீக்கிரம் சொல்லுடி, என்றவுடன், உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன், ஆனா நீ என்னை தப்பாக நினைக்க கூடாது என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள் துர்கா. அப்படி தப்பா நினைக்கிற மாதிரி என்ன விஷயம் சொல்ல போற, அனீஸ், சுஹேல் என்னை காதலிக்கிராண்டி! என்று சொன்னதும் அனீஸின் முகத்தில் ஆச்சரியம் தென்பட்டது. “ என்னது அந்த வெள்ளை பூனைக்கு காதலிக்க கூட தெரியுமா?” என்று வாய் பிளக்க, உனக்கு எப்படி தெரியும்? என்று ஆர்வத்துடன் கேட்டாள் அனீஸ். இரண்டு நாட்களுக்கு முன்பு சுஹேல் எனக்கு போன் பண்ணி ரெஸ்டாரன்ட் க்கு வரச் சொன்னான். அங்கதான் தன் காதலை வெளிப்படுத்தினான். "அதனால்தான் மாமா அனுப்பிய பொண்ணோட புகைப்படத்தை பார்க்கவில்லையா?" அது மட்டுமல்ல, இப்போதைக்கு எனக்கு நிக்காஹ் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டான். அதைக் கேட்ட துர்காவின் மனதின் ஓரத்தில் சந்தோஷம் இருந்தாலும் இது எதில் கொண்டு போய் முடியுமோ? என்று பயமாகவே இருந்தது. "நீ என்னடி பதில் சொன்ன" என்று அனீஸ் கேட்டதும், இதெல்லாம் ஒத்து வராது! என்று கூறி வந்துட்டேன்டீ என்று தன் கண்ணீரை குனிந்தவாறே மறைக்க முயன்றாள். அனீஸ்,"உண்மையை சொல்லுடீ, உனக்கு சுஹலை பிடிச்சிருக்கா, நீயும் அவனை காதலிக்கிறாய் தானே?" என்று வினவ துர்கா மௌனமாக இருக்க, அப்போ உனக்கும்அவனை பிடிச்சியிருக்கு, ஆனா ஒத்து வராதுன்னு சொல்லிட்டு வந்துட்டே, சரிதானே என்று அவள் குடைந்து குடைந்து கேட்டகவும் துர்காவால் மறைக்க முடியவில்லை. கண்களில் நீர் ததும்ப என் குடும்பத்தை, என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. முக்கியமாக அவர் வேறு மதம், நான் வேறு மதம், இருவர் வீட்டிலேயும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அப்புறம் எப்படி எங்க காதல் கல்யாணத்தில் முடியும் என்று வேதனையுடன் கூறினாள். அதெல்லாம் சுஹேல் பார்த்துப்பான். உனக்கு விருப்பம் இருக்கா, இல்லையா மட்டும் சொல். "அதெல்லாம் சரி வராதுடி. இந்த பேச்சை இத்துடன் விட்டு விடுவோம். நீயும் வீட்டில் யார்கிட்டயும் சொல்லக்கூடாது. எனக்கு உன்னிடத்தில் பேசினால் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தான் சொன்னேன். தயவு செய்து யாரிடமும் சொல்லாதே, என்று மன்றாடிக் கேட்டகவும் அனீஸ் மனதிற்குள் கண்டிப்பாக சுஹேல் இடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று எண்ணியவளாக, யாரிடமும் சொல்லமாட்டேன் என்று கூறவும், துர்காவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
இருவரும் ஒரு நகை கடைக்குச் சென்றனர். அங்கு பரிசு பொருள் என்ன வாங்கலாம் என்று பார்த்துக் கொண்டே வந்தனர். வெள்ளி பொருட்கள் இருக்கும் திசையில் துர்காவின் கண்கள் சென்றது. அங்கு ஓர் இடத்தில் ஒரு பெரிய தட்டின் நடுவில் சின்னதாக மஹாலக்ஷ்மி சிலையும் இரு பக்கத்தில் குங்குமம் மஞ்சள் வைக்க இரு கிண்ணங்களும் அதற்கு அடுத்து ஊதுபத்தி சொருக இரு துவாரம் உடைய யானை போன்ற சிலையும் பார்க்க மிக அழகாக இருந்தது. துர்கா அதன் எடையும் விலையும் கேட்க, அது தான் கொண்டு வந்த பணத்திற்கு சரியாக இருந்ததால் துர்கா அதை வாங்கி கொண்டாள். அனீஸ் இடம் காட்ட அவளுக்கும் பிடித்துவிட அதுவே பரிசு பொருளாக வாங்கினாள். கடைக்காரர் பரிசு பொருளாக பேக் செய்து தரட்டுமா? என்று கேட்டார். துர்கா வேண்டாம் சார்! அப்படியே ஒரு கவர்ல போட்டு தாங்க, மறக்காம பில்லை அதோடு வைச்சிடுங்க. கடைக்காரரும் அதை அப்படியே செய்து கூடவே ஒரு துணி கைப்பையும் வைத்தார். அது பார்க்க அழகாக இருக்கவே அனீஸ், " துர்கா இது இலவசமாக தானே தராங்க. நான் எடுத்துகிறேண்டி," என்று கூறவும் துர்கா சிரித்துக் கொண்டே அந்தப் பையை அவளிடம் கொடுத்தாள். பிறகு இருவரும் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். மணி ஆறரை நெருங்கவும் துர்கா அனீஸிடம்," உங்க வீட்ல தேட மாட்டாங்களா ? நீ டெய்லர் கடைக்கு போறேன்னு தானே வந்தே, “ நீ வந்ததும் உம்மாவிற்கு டெய்லர் கடையில் இருந்த போனில் உன் கூட கடைக்கு போறதா சொல்லிட்டேன்.” அதனாலே உம்மா தேட மாட்டாங்க. என்று பதிலுரைத்தாள்.
சுஹேல் அன்றைக்கு சீக்கிரம் தன் பணிகளை முடிக்கவே அவன் வீட்டிற்கு கிளம்பலானான். வழியில் அவனுடன் வேலை பார்க்கும் மருத்துவர்," நான் கார்ல தான் போறேன், வா! சுஹேல், உன்னை ட்ராப் பண்றேன், என்று கேட்க, இல்லப்பா, நான் பைக் கொண்டு வந்திருக்கேன். அதிலேயே போயிடுவேன் என்று கூறவே அவனும் சரி என்று கூறி இருவரும் பார்கிங் இடத்திற்கு வந்தனர். அவன் கார் நிற்கும் இடம் செல்ல சுஹேல் பைக் நிற்கும் இடம் சென்று பார்த்த போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. "எப்படி பஞ்சர் ஆச்சு, வீட்டில் இருந்து வரும் போது நல்ல தான் ஓட்டிட்டு வந்தேன் என்று யோசிக்கையில் பின்பக்கமாக இருந்து ஹார்ன் ஒலி கேட்க, அவன் திருப்பினான். அங்கு அதே டாக்டர் காரை கிளப்பிக்கொண்டு அவன் பக்கம் வந்தார். என்னப்பா, "பைக் ரிப்பேரா?" என் காரில் ஏறு, "நீ இன்னைக்கு என் காரில் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று இருக்கிறது" என்று சிரித்தபடியே அவன் தன் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள கதவை திறந்து விட்டான், சுஹேல் அதில் ஏறவும் கார் கிளம்பியது.
சுஹேல் காரில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்த போது வழியில் துர்காவையும் அனீஸையும் பார்த்துவிட்டான். "இருவரும் இங்கே எங்கே?" என்று நினைத்து கொண்டே அந்த டாக்டரை பார்த்து, இங்கு டிராபிக் இல்லாத இடமா பார்த்து கொஞ்சம் நிறுத்து, "நா இறங்கிறேன்!" எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கு,"என்று அவசரமாக கூற, அவனும் காரை நிறுத்த சுஹேல் இறங்கிக் கொண்டு, ரொம்ப நன்றி ப்பா என்று கூறி அவனிடம் கழன்று, இருவரையும் நோக்கி சென்றான்.