பகுதி - 3
இனியனுடன் பொதுவான விசயங்களை பேசியவாறு நடந்திருந்த நிலவன் திடீரென்று, "தங்கச்சி எப்டி இருக்கு??" என்று மொட்டையாக கேட்க, "அகிலாக்கு என்ன தினமும் நல்லா தின்னுட்டு பெருத்து போய் தான் இருக்கா.." என்று எப்போதும் போல் வாய்துடுக்குடன் கூறிய இனியனை அடிக்க ஏதாவது கிடைக்கின்றதா?? என்று சுற்றி சுற்றி தேடினான் நிலவன்..
பதறிய இனியன், "டேய் டேய் இருடா.. என்னைய நம்பி ஒரு பொண்ணு இருக்கு" என்றிட, அவனை முறைத்தவாறு நிலவனும், "நானும் அந்த தங்கச்சியை தான் கேட்டேன்.." என்றதும், பல்லை காட்டி சமாளித்தவன் "நல்லா தான் இருக்கா.. ஆனா என்ன அவங்க வீட்டுல தான் மாப்ளை பார்க்கறேனு டார்சல் பண்றாங்களாமா?? தினமும் ஒரே புலம்பல்.." என்றான் அலுத்தவாறு..
"உம்மையும் ஒருத்தி காதலிக்கறா பாரு அதைய தான் என்னால இன்னும் நம்ப முடில.. வெரசா அவுக வூட்டுல பேச உமக்கு என்னடா??" - நிலவன்
"ப்ச் நிலவன் புரியாம பேசாத.. அகிலாவை வெச்சுக்கிட்டு நான் எப்படிடா கல்யாணம் பண்ண முடியும்" - இனியன்
"இதைய காதலிக்கறதுக்கு முன்னாலே யோசிச்சுருக்கனும்.. எம்புட்டு நாளுதான் அந்த புள்ள சமாளிக்கும்.." - நிலவன்
"அகிலாக்கு இன்னும் ஆறு மாசத்துல காலேஜ் முடியுது.. அதுக்குள்ள மாப்ளை பார்க்கலாம்னு தான் அப்பாவும் சொல்லிருக்காங்க.. அவளுக்கு பார்த்துட்டா போதும் அடுத்த நாளே நான் அவங்க வீட்டுல பேசிருவேன்.." - இனியன்
"எனக்கு இது சரியா படலடா.. ஒன்னு அவுககிட்ட மொதல்லயே உங்க காதலை சொல்லி சம்மதம் வாங்கிருக்கனும்.. இல்ல அவுக வூட்டுல மாப்ளை பாக்கறேனு சொன்னதுமாவது போய் பேசிருக்கனும்.. ரெண்டையும் பண்ணாம அகிலா கல்யாணம் முடிஞ்சதும் பேசறீனு சொல்றே? பெத்தவூக அவுக பொண்ணை என்ன நினைப்பாக??" - நிலவன்
"எனக்கு வேற வழி தெரிலடா.. அவ அழுகறதை நினைச்சு என்னால சாப்படவும் முடில தூங்கவும் முடில.. அங்க இருந்தா பைத்தியம் பிடிச்சுரும்னு தான் இங்க வந்தேன்.. நீயும் குத்தம் குறை கண்டுபிடிச்சு கடுப்பேத்தாதே.." என்று இனியன் ஏகப்போக சலித்து கொள்ள, "சரி வுடுடா வா அப்டியே நடந்துட்டு வந்தா சரியா போவும்.." என்று பேசியவாறு நடந்தனர்..
இனியனும் நிலவனும் ஒரே வயதுதான்.. பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள்.. நிலவன் படிப்பை நிறுத்தினாலும் இனியன் கல்லூரி படிப்பு வரை முடித்து விட்டு விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறான்.. கல்லூரியில் நண்பர்களாக பழகிய மகாவின் மேல் நாளடைவில் காதல் வயப்பட, அவர்களின் காதல் அழகாக தான் வளர்ந்திருந்தது..
இந்த ஒரு வருடமாக தான் மகா நச்சரித்து கொண்டிருக்கிறாள் வீட்டில் பேச சொல்லி.. இவன்தான் தங்கை இருப்பதால் இன்று வரை மறுத்து அவளுடன் போராடி கொண்டிருக்கிறான்.. இவர்களின் காதலையும் விதி பிரிக்குமா?? இல்ல சேர்க்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
வயல்வெளிகளை நோட்டமிட்டவாறு நடந்திருந்த இனியன், "ஆமா வெற்றி எங்க?? அவனை நா பாக்கவே இல்லையே??" என்று கேட்க, சிறிது நேரம் மௌனத்தை பதிலாக தந்த நிலவன், "சின்ன அத்தையை பாக்க போய்ருக்கான்.." என்றான் வயலில் விழிகளை பதித்தவாறு..
நிலவனின் பதிலில் இனியனுக்கு மயக்கம் வராதது தான் குறை.. "டேய் புரிஞ்சுதான் அவன் அங்க போய்ருக்கானா?? வீட்டுல தெரிஞ்சா என்னவாகறதுடா??" என்று பதறி போய் கேட்க, "ப்ச் எமக்கும் வேற வழி தெரிலடா.." என்று சோர்ந்து போய் கூறிய நிலவனின் வார்த்தையில் ஏதோ இருப்பதை உணர்ந்த இனியன் இதற்கு மேல் அவனை வற்புறுத்த வேணாம் என்று அமைதியாகி விட்டான்..
பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்த வெற்றி நேராக தமையனை தேடி வர, அவனை கண்டதும், "இப்பதான் வந்தீயாடா? போய் குளிச்சுப்புட்டு சாப்புடு.." என்றிட, "அது இருக்கட்டும் அண்ணே.. சரோஜா அத்தையை பாக்க பாவமா இருந்துச்சு அண்ணே.. எமக்கு கூட அவுக கிட்ட போய் பேசலாம்னு இருந்துச்சு ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது அண்ணே.. நீயே வூட்டுல இதைய பத்தி தாத்தாகிட்ட பேசு அண்ணே.." என்றான் வருந்திய குரலில்..
"நானு பாத்துக்கறேன்டா.." என்று தமையனிடம் கூறியவனால் எப்படி தாத்தாவிடம் பேசுவது என்று எண்ணமே அவனை அலைக்கழிக்க, தாத்தாவை விட கமலம் அத்தை தான் இதை எப்படி எடுத்து கொள்வார் என்று நினைத்தபோது சிறுபதட்டம் அவனுள்ளும்..
வெற்றியை கண்டதும், "ஹே வெறி வெறி எப்ப வந்தே??" என்று சந்தோசத்தில் இசை அவனிடம் ஓடி வர, அவளை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த கவலை அனைத்தும் காற்றாக மறந்து, "இப்பதான் பசை.. வந்ததும் உன் மாமனை சைட் அடிச்சுட்டு வர்றேன்.. தம்பி ஊருக்கு போய்ருக்கானே அவன் சாப்பிட்டானா இல்லையானு கொஞ்சம் கூட வருத்தமில்லாம இப்படி தின்னு தின்னு ஒரு சுத்து சுத்துருக்கான்.. இது எல்லாம் என்னனு கேட்க மாட்டியோ??" என்றான் குறும்பு கலந்த புன்னகையுடன்..
இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் "அப்படியா?? அப்ப வா மாமாகிட்டயே கேட்போம்.." என்றழைக்க, "அய்யோ ஆத்தி அவன்கிட்ட அடி வாங்க எனக்கு தெம்பில்ல.. நான் ஓடிட்டேன்.." என்று நிற்காமல் சென்ற வெற்றியை பார்த்து புன்னகைத்தாள் இசை..
இசையை விட ஒரு வயது சிறியவன் தான் வெற்றி.. அவன் பிறந்த போது இசை ஒரு வயதில் இருக்க, அவனை அனைவரும் வெற்றி வெற்றி என்றழைப்பதை பார்த்து சிறிது பேச தொடங்கிய பின்பு இசையும் வெறி வெறி என்று அழைத்து கன்னங்குழி விழுக சிரித்தவாறு சிவநேசனின் பின்னால் வெக்கத்தில் மறைத்து கொள்வாள்..
வளர்ந்த பின்பும் வெற்றி இசையிடமே எந்நேரமும் வம்பிழுக்க, இசையும் அவனின் பெயரை வெறியாகவே மாற்றி விட, சிணுங்கிய வெற்றியும் இசையை பசையாக்கி விட்டான்.. இவர்கள் வளர வளர சண்டைகளும் குறும்புகளுமே சேர்ந்து வளர, சில நேரங்கள் இருவரின் சண்டைகளை தீர்த்து வைக்க நிலவன் வர வேண்டியதாக இருக்கும்.. எத்தனை சண்டைகள் இட்டாலும் இசைக்கு என்றுமே உற்றத்தோழன் வெற்றி தான்..
நந்தினியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த இனியனை பார்த்ததும் "மச்சான்" என்று ஓடி வந்த வெற்றி அவனின் மடியிலே அமர்ந்து அணைத்து கொள்ள, "அடேய் பைத்தியமே! எந்திரிடா.." என்று அவனை தள்ளி விட்ட இனியன் பின்னால் நகர்ந்து கொண்டான்..
"என்ன மச்சான் எம்புட்டு பாசமா உன்னைய கட்டிபிடிச்சா இப்படி தள்ளி விடறே??" - வெற்றி
"இதுக்கு பேரு பாயாசமா?? கொன்றுவேன்.." - இனியன்
"அண்ணே இவன் வேற என்னத்துக்கோ அடி போடறான் பார்த்துக்கங்க.." - நந்தினி
இதை கேட்டதும் திருதிருவென விழித்த வெற்றி "அப்படி எல்லாம் எதுவுமே இல்ல அண்ணி.." என்றான் சமாளிப்பாக..
"பொறவு என்னத்துக்கு கொழுந்தனாரே இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கறீக??" - நந்தினி
"அதானே என்னத்துக்குடா அடி போடறே?? என்கிட்ட பத்து பைசா கூட இல்ல.." - இனியன்
"பத்து பைசா என்ன மச்சான் உமக்கு நானு பத்து லட்சம் கூட எழுதி தர்றேன்.." - வெற்றி
"சித்தப்பு மொதல்ல நா குடுத்த கணக்கை எழுதி குடுங்க.." என்று கவின் சொன்னதை கேட்டு மற்றவர்கள் பக்கென்று சிரிக்க, "அடேய் குள்ள கத்திரிக்கா ஒன்னைய இன்னும் குள்ளமாக்காம விட மாட்டேன்டா.." என்று அவனை பிடிக்க போக, கவினோ அவனுக்கு இடுப்பை ஆட்டி பலிப்பு காட்டி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்து ஓடினான்..
"ச்சை இந்த வூட்டுல ஒரு சின்ன புள்ள கூட நம்மளைய மதிக்க மாட்டிங்குது.. அம்புட்டும் வெசம் வெசம்.." என்று வறுத்தெடுத்த வெற்றி, "ஆமா மச்சான் வூட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.." என்று கேட்டதும், அவனை பார்த்த நந்தினி "இதைய எதுக்கு நீங்க கேட்கறீங்க.." என்றாள் சந்தேகத்துடன்..
"அண்ணி இது எல்லாம் டூமச்.." - வெற்றி
"நீ எதுக்குடா அவங்களைய கேட்கறே??" - இனியன்
"வூட்டுல இருக்கறவங்களைய கேட்காம பொறவு கொட்டகைல இருக்கற ஆடு, மாடைய கேட்க முடியும்.." - வெற்றி
"அதைய கேட்டா கூட காரணமிருக்கு.. வூட்டுல இருக்கறவங்களை என்ன காரணத்துக்கு கேட்கறீக??" - நந்தினி
"அய்யோ ராமா! உங்களைய எல்லாம் வெச்சுக்கிட்டு.. மாமா பையனாச்சேனு கேட்டா அதுக்கு இம்புட்டு கேள்வி கேட்கறீக? எல்லாம் என் நேரம்.." என்று கடுப்புடன் எழுந்த வெற்றியிடம், "அதுக்கு நீயு சாதாரணமா கேட்டுருக்கனும் கொழுந்தனாரே!! இத்தனை பெர்பாமன்ஸ் பண்ணனும்னு அவசியமில்ல.. பேசாம நேராவே அகிலா எப்டி இருக்கானு கேட்டுருக்கலாம்.." என்று நந்தினி கலாய்த்தவாறு சிரிக்க, "அய்யய்யோ கண்டு பிடிச்சுட்டாங்களே!!" என்று வெற்றி அகடு வழிந்து சிரிப்பை உதிர்த்தான்..
இதற்கு மேல் இங்கு நின்றால் தன் மானம் கப்பலேறி விடும் என்றுணர்ந்து "எமக்கு சலுப்பா இருக்கு தூங்க போறேன்.." என்றவன் அவர்கள் பதிலை எதிர்பாராமல் ஓடி விட, இருவரும் புன்னகைத்து கொண்டனர்..
இரவு உணவு முடிந்து அனைவரிடமும் பேசலாம் என்று நிலவன் காத்திருக்க, தாத்தாவும் சிவநேசனும் சரியில்லாததை பார்த்து அமைதியாக சென்று விட்டான்..
அன்று பௌர்ணமி நிலவு வானில் பிரகாசமாக மின்னி கொண்டிருக்க, திரைசீலையை விலக்கி அதனை ரசித்து கொண்டிருந்த இசையின் மனமோ நிலையில்லாமல் தவிர்த்தது.. ஒரு கையில் மருதுவின் புகைப்படமும் மறுகையில் நிலவனின் புகைப்படமும் இருக்க, இரண்டையும் மாறி மாறி பார்த்தவள் மீண்டும் நிலவை வெறிக்க தொடங்கினாள்..
"அப்பா ஏன்பா என்னைய விட்டு போனீங்க.. எனக்கும் உங்க கூட இருக்கனும்னு ஆசையா இருக்குபா.. எல்லாரும் அவங்க அப்பா கூட வர்றப்ப எனக்கும் அவ்ளோ ஆசையா இருக்கும்.. இவ்ளோ சீக்கிரம் எங்களைய விட்டுட்டு ஏன்பா போனீங்க.. இங்க எத்தனை பேரு இருந்தாலும் சில நேரம் மனசு உங்களைய தான் தேடுதுபா.. ரியலி மிஸ் யூ பா.. இப்ப எல்லாம் நிலவன் மாமாவும் என்னைய விட்டு விலகி போற மாதிரியே இருக்கு.. உங்க கூட வாழதான் எனக்கு குடுத்து வெக்கல.. நிலவன் மாமாவாவது என்கூடயே இருக்கனும்பா.." என்று மனதில் நினைத்தபோதே அவளின் விழிகளும் கண்ணீரை சிந்த, வெகுநேரம் கழித்தே உறக்கத்தை தழுவினாள் பெண்ணவள்..
காலையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவிடம் வந்த நிலவன், எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், "தாத்தா" என்று தயக்கத்துடன் அழைக்க, அவரும் "சொல்லு ராசா" என்றார் புன்னகையுடன்..
"ஒங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.." என்று சொல்லும்போதே மற்றவர்களும் வர, அனைவரின் முன்பு சொல்வது தான் சரியென்று எண்ணி, மூச்சை இழுத்து விட்டு அனைவரையும் பார்த்தான்..
"நா சொல்றதை முழுசா கேட்டுப்புட்டு பொறவு பேசுங்க.. சரோஜா அத்தை.." என்று நிலவன் தொடங்கும் முன்னே, "அவளை பத்தி பேச வேணாம்யா அவளை எப்பவோ தலை முழுகிட்டோமே.." என்று பாட்டி தடுக்க, "ப்ச் கெழவி என்னைய பேச வுடு.." என்றான் சலிப்புடன்..
"அவளை பத்தி பேசறதுனா எதுவும் சொல்லவே வேணாம்யா.. போய் பொழைப்பை பாரு.." - சிவநேசன்
"அப்பா நீங்களுமா??" - நிலவன்
"ஆமாயா.. அவ வூட்டுக்காரனால தான் என்ற அக்கா வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சுட்டு இம்புட்டு வருசம் விதவையா நிக்கறாக.. வேணாம்யா அவுக சாவகாசமே!!" - சிவநேசன்
"அய்யா ராசா நீ என்னத்த சொன்னாலும் நாங்க கேட்கறோம்.. இது மட்டும் வேணாம்யா.." - தாத்தா
"தாத்தா என்னைய முழுசா பேச வுடுங்க.. பொறவு ஏ சொல்லலனு எமக்கு குற்றவுணர்ச்சி வர கூடாது.. அதுக்காகவாவது நா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.." - நிலவன்
"தாத்தா மாமா தான் இம்புட்டு சொல்றாங்கல்ல?? என்னனு கேட்போமே!!" என்று இசையின் வார்த்தைக்கு யாரும் மறுபேச்சு பேசாமல் அமைதியாக நின்றனர்..
"பக்கத்து ஊருல இருக்கற பரமு அத்தையை பாத்துருக்கான்.. அதுவும் ஆஸ்பத்திரில.. அத்தைக்கு ஒடம்பு சுகமில்லாம ஒரு வாரத்துக்கு மேல அங்கன தான் இருக்கறதா நர்ஸ் சொல்லிருக்காக.. என்னதான் அவுக நம்ம மேல கோவமா இருந்தாலும் பரமு என்கிட்ட நாலு நாளுக்கு முன்னாலே சொன்னான்.. அது நிசமா?? பொய்யானு தெரியாம பேச கூடாதுனு தான் வெற்றியை போய பாத்துட்டு வோ சொன்னேன்.." என்றதும் அனைவரின் பார்வையும் வெற்றியின் மேல் திரும்ப, "அய்யய்யோ இந்த முரட்டு பீஸூ நம்மளையும் போட்டு குடுத்துருச்சே!!" என்ற உள்ளுக்குள் நினைத்தவாறு தலையை குனிந்து கொண்டான்..
"பரமு சொன்னது அத்தைக்கு சுகமில்லனு தான்.. அங்கன போய் அவுகளைய பத்தி வெற்றி விசாரிச்சப்ப மாமா இறந்து ஆறெழு வருசமாகிருச்சுனும் பொட்டப்புள்ளயை வெச்சுக்கிட்டு தனியா இருக்கற பயத்துல அத்தைக்கு ப்ரஸ்ஸர் ஏறி மயங்கி விழுகறதுமா இருக்காக.. தனக்கு அப்பறம் தன் பொண்ணுக்கு யாருமில்லனு நினைச்சு நினைச்சு ஒடம்பை வருத்திக்கறாக.."
"நீங்க அத்தைக்காக பாக்க வேணாம் ஒங்க பேத்திக்காக பாருங்க.. அவுக பொண்ணுக்கு கண்ணாலம் பண்ற வரைக்கும் இங்கன இருக்கட்டும்.. அதுக்கு பொறவு எப்பவும் போல அவுக மெட்ராஸூக்கே போய்ரட்டும்.. எமக்கு கேட்டதுல இருந்து ராவுல தூக்கம் வர மாட்டிங்குது தாத்தா.. என்னதான் மாமா தப்பு பண்ணிருந்தாலும் அதுக்காக இவுகளைய தண்டிக்கறது தப்புனு தோணுது.." என்று நிலவன் பிரச்சனையை கூறி முடித்தும் யாரும் எதுவும் பேசாமல் நின்றிருந்தனர்..
அனைவரின் அமைதியையும் கலைத்த இசை, "தாத்தா நான் சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க.. மாமா சொல்றது எனக்கும் சரினு தோணுது தாத்தா.. மாமா பண்ணுன தப்புக்கு அத்தையும் உங்க பேத்தியும் என்ன பண்ணுவாங்க.. அவங்களைய இங்கயே வர சொல்லுங்க.. அதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நாங்க அதைய அப்பவே மறந்துட்டோம்.." என்றவள் தன் அன்னையை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தாள்..
"எப்பவோ நடந்து முடிச்சதை இன்னும் எம்புட்டு நாளுக்கு நெனைச்சுட்டு அவுகளைய தள்ளி வெக்கறது?? சரோஜாக்காக வேணாம் அவ மவளுக்காக இங்கனயே வர சொல்லுங்க அதுல எமக்கு சந்தோசம் தான்.." - கமலம்
"ஆமாபா நானு கூட இம்புட்டு நாளா அவுக நல்லாதான் இருக்காகனு நெனைச்சுப்புட்டு இருந்தேன்.. பொட்டபுள்ளயை வெச்சுக்கிட்டு நெருப்பை மடில கட்டிக்கிட்டு அழுகனுமே?? அவ மவளுக்கு கண்ணாலம் முடியற வரைக்கும் இங்கன இருக்கட்டும் அதுக்கு பொறவு வேற முடிவு எடுத்துக்கலாம்.." - சிவநேசன்
"அந்த பொசக்கெட்ட சிறுக்கி நம்மளைய மறந்துப்புட்டு இருக்காறப்புல நம்மளும் இனி இருக்க முடியுமா?? அவுளுக்கு பொறவு அவ மவளுக்கு ஆரும் வேணாமா?? அவுளுக்காக வர சொல்லல.. என்ற பேத்திக்காக வர சொல்றேன்.." - ராமாயி
"எமக்கும் இதுதான் சரினு தோணுதுங்க மாமா.. என்னதான் இருந்தாலும் சரோஜாவும் இந்த வூட்டு பொண்ணு தானே.." - ராசாத்தி
"ப்ளீஸ் தாத்தா சரினு சொல்லுங்க.. இப்ப வீம்பு பார்க்கற நேரமில்ல.. அவங்க அப்படி செஞ்சாங்கனு நம்மளும் அப்படி செய்யறது தான் தப்புனு நீங்க சொல்லி குடுத்துருக்கீங்க.. அந்த தப்பை நீங்களே செய்யலாமா?? முடிஞ்சதை பத்தியே நினைச்சு இனி நடக்க போறதை கெடுக்க வேணாமே.." என்று இசை அவரை வற்புறுத்த, எதுவும் பேசாமல் எழுந்த தாத்தாவும் அங்கிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டு விட்டு அனைவரையும் பார்த்தார்..
"ம்ம்ம்ம் வர சொல்லுங்க.." என்று மட்டும் கூறியவர் சென்று விட, இந்தளவுக்கு அவர் இறங்கி வந்ததே பெரிது என்று மற்ற அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
"அத்தை இதுல ஒங்களுக்கு எந்த சங்கடமும் இல்லயே.." என்று சிறு தயக்கத்துடன் நிலவன் வினவ, புன்னகைத்த கமலம், "அவ எமக்கும் தங்கச்சிதானு நா மறக்கல.." என்றார் சிறுதுளி நீருடன்..
இதை எதையும் கவனிக்காமல் இசை மட்டும் ஏதோ ஒரு யோசனையில் இருக்க, "இசை நீவு கெளம்பலயா??" என்று கேட்ட நிலவனின் குரலில் சட்டென்று நிகழ் காலத்திற்கு வந்தவள் "இன்னும் கொஞ்சம் நேரமிருக்கு மாமா" என்றிட, ஏனோ அவளிடம் எப்போதும் இருக்கும் துள்ளல் காணாமல் போயிருந்தது..
சிறிது நேரத்தில் கிளம்பி வந்த இசையிடம் "போலாமா??" என்று நிலவன் கேட்க, "இல்ல மாமா நான் இனியன் அண்ணா கூட போய்க்கறேன்.." என்றாள் மறுப்பாக..
"ஏ இசை என்ன ஆச்சு?? ஒடம்பு ஏதாவது சரியில்லயா??" - நிலவன்
"அது எல்லாம் எதுவுமில்ல மாமா.. அண்ணா தான் அங்க வர்றேனு நேத்தே சொன்னாங்க அதான்.. உங்களுக்கு வேலை இருக்குமல்ல?? நீங்க கிளம்புங்க.." - இசை
"எமக்கு என்ன வேலை கிடக்கு.. எப்பவும் ஒன்னைய நா தானே கொண்டு போய் வுடுவேன்.." - நிலவன்
"இன்னைக்கு தான் இனியன் அண்ணா இருக்காங்களே அதான்.." - இசை
"ஏ இசை நேத்து கூட்டிட்டு போக மாட்டேனு சொன்னதுக்கு கோவமா?? நா வெளையாட்டுக்கு தான் சொன்னேன்.. சரி நானே கூப்பிடறேன் வா போலாம்.." - நிலவன்
"அய்யோ மாமா அது எல்லாம் எதுவுமில்ல.. அதையை அப்பவே மறந்துட்டேன்.." - இசை
"பொறவு என்னதான்டி ஒன் பிரச்சனை??" - நிலவன்
"டேய் அவதான் என்கூட வர்றேனு சொல்றாளே போய் வேலைய பாரு.. நானும் என் தங்கச்சியை பத்ரமா தான் கூட்டிட்டு போவேன்.." என்ற இனியன், "வாடா போலாம்.." என்று இசையை அழைத்து கொண்டு செல்ல, நிலவனுக்கு குழப்பமாக இருந்தது இசைக்கு என்னவென்று புரியாமல்!!!
வண்டியை ஓரமாக நிறுத்திய இனியன் நேரடியாகவே, "இசை என்னடா ஆச்சு?? நீ காலைல இருந்தே சரியில்லனு எனக்கும் தெரியுது.. நிலவன் ஏதாவது சொன்னானா?? இல்ல வேற யாராவது ஏதாவது சொன்னாங்களா??" என்று கேட்டது தான் தாமதம் இவ்வளவு நேரம் கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் அவளையும் அறியாமல் வெளியில் வந்து விட, முகத்தை மூடி கொண்டு தேம்பி தேம்பி அழுக தொடங்கினாள் யாழிசை..
தித்திக்கும்..