'இவருக்கு எப்படி எனக்குப் பால் பிடிக்காதுன்னு தெரியும்' என்று மூளையை கசக்கிப் பிழிந்தபடியே இருந்த ஷ்ரதாவிற்கு சூரியனார் சைனிங் ஆப் செய்ததும் தெரியவில்லை. சந்திரனார் ஹாய்! ஹலோ! வெல்கம்! நான் உங்கள் அன்பு அம்புலி! என்று சொல்லி இரவு நிகழ்ச்சியை துவக்கியதும் தெரியவில்லை.
ஷ்ரதாவிற்கு பதினைந்து வயதாக இருந்தபோது தான் அவள் அண்ணன் அருண்மொழி, நான் கட்டினால் மதுபாலாவைத் தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்று வீசியின் அக்காவைத் திருமணம் செய்துகொண்டான்.
ஷ்ரதாவின் வீட்டிலிருந்த யாருக்குமே அப்போது அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை.
காரணம், வீசியின் வீட்டைக் காட்டிலும் ஷ்ரதாவின் வீடு ரொம்ப வசதி வாய்ந்ததாக இருந்ததே.
அந்த வன்மத்தை மனதில் வைத்து தான் முதல்நாள் திருமணமாகி வந்திருந்த தன் மருமகளை சொல் அம்புகளால் தாக்கி கூனிக்குறுகச் செய்தார் விஜயாதித்தன்.
அப்போது இருபது வயது இளங்காளையாக நின்றிருந்த வீசிக்கு அதனை கண்டு ரத்தம் கொதித்தது.
கோபத்தில், "அக்கா, வா நம்ம நம்ம வீட்டுக்குப் போவோம்.." என்று கத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.
அச்சத்தத்தில் தான் தானும் முதன்முறையாக அவனைப் பார்த்தாள் ஷ்ரதா.
"அக்கா, நம்ம எப்படி நம்ம குடும்பம் எப்படின்னு இவங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே?.. அப்புறம் ஏன் உன்னைக் குத்திக்காட்டி பேசுறாங்களாம்?.." என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தவனை "சும்மாயிரு வருண்!" என்று அதட்டினார் அபிராமி.
அவரிடம், "ம்மா, நம்ம ஒண்ணும் இவங்க வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வரல.. இவங்க தான் நம்ம வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வந்தாங்க.. அப்போ நம்ம வீட்டு சூழ்நிலை என்னன்னு இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் தானே?.. அப்புறம் ஏன் இப்படி பேசுறாங்க?.. ஒருவேளை இவங்க இப்படி தான் ஒவ்வொரு விஷயத்துலயும் இவங்களோட பணத்திமிரை காட்டுவாங்கன்னா, நாம நம்ம அக்காவை நம்மளோடவே கூட்டிட்டு போயிரலாம்மா" என்று உறுதியாய் நின்றான்.
பருவ மங்கையான ஷ்ரதாவிற்கு அவனது அந்த தமக்கை மீதான பாசமும், பிடிவாதமும், கூடவே கவர்ச்சியான முகத்தில் விழுந்தக் கன்னக்குழியும் ரொம்பவேப் பிடித்திருந்தது.
கிட்டத்தட்ட ஒரு கனவு நாயகன் போலவே அவள் கண்களுக்குத் தென்பட்டான் வீசி.
அன்று அபிராமி அவனை ஒருவாறு சமாளித்து அடக்கி விட்டார்.
ஆனால், அதன் பின்னான நாட்களில் எப்போதெல்லாம் அவன் தன் தமக்கையைக் காணச் சென்றானோ, அப்போதெல்லாம் தன் தமக்கைக்கான உரிமையையும் அவ்வீட்டில் நிலைநாட்டிவிட்டேச் சென்றான்.
அவன் வந்து போகும் சமயமெல்லாம் அவனை மறைவாக நின்று நோட்டமிடுவாள் ஷ்ரதா.
நாட்கள் செல்லச்செல்ல அவன் மீதான அவளது ஈர்ப்பும் ஆர்வமும் அதிகமானது தானே தவிர, குறையவில்லை.
ஒரு கட்டத்தில் அவன் மீதான அந்த ஈர்ப்பு காதலாக பரிமாணம் எடுக்க, அவனை நேசிக்கத் தொடங்கிவிட்டாள் ஷ்ரதா.
ஆனால், அப்போது அதை அவனிடம் சொல்லத் துணியவில்லை அவள்.
இப்போது எப்படியோ அரும்பாடுபட்டு அவன் கரம் பற்றியிருக்க, அவன் என்னவோ பழசை நினைவு கூர்ந்து சுழற்றியடிக்கிறான்.
தற்போது தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் ஷ்ரதா.
"ஏன் இப்படி பண்றீங்கத்தான்?.. உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்த்தான்.. தப்பு பண்ணினது அப்பா தானே? என் மேல ஏன் கோபப்படுறீங்க?.." என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அவ்வறையின் கதவைத்தட்டி உள்ளே வந்த மதுபாலாவும், வேலைக்காரப் பெண்மணி சிட்டுவும் இரவு சடங்கிற்காக அவளை ஆயத்தப்படுத்த, தனக்குள்ளான சோகத்தை மறைத்துக்கொண்டே அவர்களுக்கு உடன்பட்டாள் ஷ்ரதா.
இரவில் தன் தமக்கையின் கைவண்ணத்தில் அப்சரஸாக மெருகேறி நின்றிருந்தவளை நெருங்கிய வீசி, "பிடிச்சிருக்கா?" என்றான்.
அவன் தன்னைத்தான் கேட்கிறான் என நினைத்துக்கொண்டு, 'ம்ம்' என்று தலையாட்டியவள், "முன்னாடியே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்த்தான்" என்றாள்.
அவளின் அப்பதிலில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்த வீசி, "நான் பிடிச்சிருக்கான்னு கேட்டது இந்த ரூமை.. என்னை இல்ல.. ஒருவேளை உனக்கு என்னை பிடிக்கலைனாலும் வேற வழியில்ல.. நீ என்கூட தான் வாழ்ந்தாகணும்.. மாத்த முடியாது.. சொல்லு! இங்கயிருக்கிற பொருட்களை எல்லாம் இதுக்கு முன்னாடி நீ எங்கயாவது பார்த்திருக்கியா?.." என்று தன் புருவங்களை ஏற்றி இறக்கினான்.
அவனை புலிக்கூண்டில் சிக்கிய மான் போல் மருண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.
பின், அவனே பதில் கூறிக் கொண்டான். "ம்ஹீம், பார்த்திருக்கவே முடியாது.. எல்லாம் உனக்காகவே ஃபாரின்ல இருந்து ஸ்பெஷலா இம்போர்ட் பண்ணினது.. உங்கப்பாவை பார்க்கும் போது சொல்லு என் பெட்ரூமே மியூசியம் மாதிரி இருக்கும்னு"
ஷ்ரதாவிற்கு அவன் தன் அப்பாவை பற்றின பேச்சை விடவே மாட்டானா என்றிருந்தது.
அவன் திடீரென உற்சாகமானவன் போல், "அட! இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்ல.. ம்ம்? நீ கூட அழகாத்தான் இருக்க.. இப்போ நான் என்னப் பண்ணனும் ஷ்ரதா?.." என்றான்.
ஷ்ரதா முந்தானையை திருகியவாறே அவனை பயந்தபடி பார்த்திருந்தாள்.
"சொல்லு? இப்போ நான் என்ன பண்ணனும்?.." மீண்டும் கிசுகிசுப்பாய் கேட்டவனைப் பார்த்து, இரண்டடி பின் வாங்கினாள் அவள்.
"ஹான்! ஞாபகம் வந்திருச்சி.." என்றவாறே அவன் அவளை நெருங்க.. ஷ்ரதா அவனை பயந்து பார்த்தபடியே பின்னால் சென்று சுவற்றில் முட்டி நின்றாள்.
அவளை நெருங்கி அவள் தப்பிக்க முடியாதபடி அவளுக்கு தன் கைகளால் அணையிட்டவன், இதழ் நோக்கிக் குனிந்தான்.
ஷ்ரதா முகத்தைத் திருப்பிக்கொள்ள... நெருங்கியவனது கூரிய மூக்கு அவள் பட்டுக் கன்னத்துள் புதைந்தது.
தொடர்ந்து அவளது வாசனையை தன் நாசிக்குள் நிரப்பியவன், "பயமா இருக்கா ஷ்ரதா?" என்று காதோரம் முணுமுணுத்தான்.
நெஞ்சு விம்மி விரிய பெரிய பெரிய மூச்சுகளாய் விட்ட ஷ்ரதாவிற்கு வார்த்தையே வெளிவரவில்லை.
"ப்ளீஸ் ஷ்ரதா, இந்த பியூட்டி அண்ட் த பீஸ்ட் எஃபேக்ட் எல்லாம் கொடுக்காத.. என்னைப் பார்த்தா என்ன மிருகம் மாதிரியா இருக்கு?.."
"ப்ளீஸ்த்தான் தள்ளி நில்லுங்க.."
"ப்ச்! முன்னாடியே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?.. இந்த அத்தான் பொத்தான் எல்லாம் போடாதன்னு சொன்னேனா இல்லையா? இம்ம்?" என்று உறுமினான் அவன்.
அவள் தலை பயத்தில் ஆமென ஆடியது.
"ம்ம்ம்.. இனி மறக்கக்கூடாது.. நீ இப்போ எல்லாத்துக்கும் ரெடி தானே ஷ்ரதா?.." என்று கண்ணைச் சிமிட்டினான்.
ஷ்ரதா 'இல்லை' என்று தலையசைத்து முகத்தைத் திருப்பினாள்.
"என்கிட்ட இப்படி முகத்தைத் திருப்புறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ஷ்ரதா.." என்றபடியே, அவள் முகவாயைப் பிடித்து வலுக்கட்டாயமாய் தன்னை நோக்கித் திருப்பியவன், "என்ன ஷ்ரதா இன்னைக்கு நமக்கு முதலிரவு.. இந்த ரூமுக்குள்ள இது தான் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியும் தானே?.. அப்புறம் ஏன் இப்படி அழுது சீன் க்ரியேட் பண்ணிக்கிட்டு இருக்க?.. கமோன் ஷ்ரதா, வா நம்ம நம்மோட ஃபர்ஸ்ட்நைட்டை ஸ்டார்ட் பண்ணலாம்" என்று நகர மறுத்தவளை வம்படியாய் கட்டில் நோக்கி நடத்திச் சென்றான்.
பின், அவளை மெத்தையில் அமர்த்தி சிறிதுநேரம் தள்ளி நின்றபடியே அளவெடுத்தான். முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் ஷ்ரதா.
'உனக்கு இன்னைக்கான கோட்டாவை யூஸ் பண்ணியாச்சு ஷ்ரதா' என்று மனதிற்குள் சொன்னவன், அவளை நெருங்காமல் மெத்தையில் தள்ளிப்போய் படுத்துக்கொண்டான்.
அவனிடம் எந்த அனக்கமும் இல்லை எனவும் தன் முகத்திலிருந்து கைகளை கீழிறக்கிய ஷ்ரதா, தன் பக்கத்தில் கண்மூடி படுத்துக்கிடந்தவனை அதிசயமாய் பார்த்தாள்.
அவன் வதனம் ரொம்பவே ஈர்த்தது அவளை. முத்தமிடவும் தோன்றியது.
'ஏன் அத்தான்? ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?' என்று மானசீகமாய் கேட்டுக்கொண்டிருந்தவளை, "ஒழுங்காப் படு.. இல்ல ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிருவேன்.." என்று மிரட்டியவன் திரும்பிப் படுத்துக்கொண்டான்.
வேகமாய் படுக்கையில் சாய்ந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
புது இடம் என்பதால் கொஞ்சம் திசை தெரியாமல் தடுமாறிப்போன தூக்கப்பறவை, சிறிது நேரத்திற்குப் பின்பே அடையாளம் கண்டு அவள் விழிக்கூட்டை வந்தடைந்தது.
மறுநாள் காலையில் சீக்கிரமே விழித்து விட்ட ஷ்ரதா, குளித்துக் கிளம்பி கீழே வந்தாள்.
வந்தவளை அபிராமி, "என்ன ஷ்ரதா?.. நேரமே எழுந்திரிச்சிட்ட?.. இப்போ வருண் ஜிம் போயிருப்பானே?" எனவும், "ஆமா அத்தை" என்றாள் அவள்.
எப்போதும் போல் வீட்டில் வேலைப்பார்க்கும் சிட்டுவிடம் அவனுக்கு காபியை கொடுத்தனுப்பினார் அபிராமி.
ஆனால், அவனோ, "ஷ்ரதா எங்கே? அவளை வரச்சொல்லு" என்று சிட்டுவை காபியுடன் திருப்பி அனுப்பி விட்டான்.
இதை கேள்விப்பட்ட அபிராமிக்கு ஒருபக்கம் அவர்கள் வாழ்க்கை துலங்கிவிட்டது என்று உவகையாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதென்ன காபியை திருப்பியனுப்பும் அளவிற்கு பிடிவாதம் அவனுக்கு என்று கோபம் வந்தது.
ஷ்ரதாவிடம் திரும்பி, "நீ போக வேண்டாம் ஷ்ரதா.. அவன் என்ன பண்றான்னு தான் நாமளும் பார்க்கலாமே.. சின்ன வயசுலயிருந்தே ரொம்ப வீம்புக்காரன் அவன்.. அப்படியே எங்க அப்பா மாதிரி.." என்றுவிட்டு ஹாலிலேயே அவளை உட்காரவைத்து செய்தித்தாள் பார்க்கச் சொன்னார்.
ஒரு மணி நேரத்திலேயே பிரகாஷ் சக்கரவர்த்தி, மதுபாலா என ஒவ்வொருவராய் ஹாலுக்கு வர, அனைவருக்கும் புன்னகை கலந்த தலையசைப்பையே சம்பிரதாயமாய் வழங்கி உபசரித்தாள் ஷ்ரதா.
வீசியின் தந்தை பிரகாஷ் சக்கரவர்த்தி செய்திச்சானலை இயக்கி 'தொடர்ந்து இணைந்திருங்கள்' என்று சொல்லும் வரை பார்த்தவர் பின், ஷ்ரதாவிடம் திரும்பி, "என்னம்மா மருமகளே! காபி சாப்பிட்டியா? உன் மாமியார் காபி சகிக்கிற மாதிரி இருந்ததா? இல்ல கசக்கிற மாதிரி இருந்ததா?.." என்று சிரித்துக்கொண்டே வினவவும், "ரொம்ப நல்லாயிருந்தது மாமா" என்று முறுவலித்தாள் அவள்.
பிரகாஷ் சக்கரவர்த்தி.. அவரின் முன்னோர்கள் அவருக்கென விட்டுவைத்துச் சென்றது இதோ அவரின் பெயரின் பின்னே படையெடுத்து வரும் இந்த சக்கரவர்த்தி எனும் குடும்பப்பெயரை மட்டும் தான்.
பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கடையில் கணக்கெழுதிக்கொண்டு மாதம் எட்டாயிரம் மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தவர், மகன் புண்ணியத்தில் தற்போது ஆவணிமூலவீதியில் ஒரு வெள்ளி நகைக்கடையையே வைத்து நிர்வகிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
அவர் அவளிடம் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்துவிட்டு நகைக்கடை செல்ல கிளம்பிய நேரத்தில் தனித்து விடப்பட்ட ஷ்ரதா, பாட்டுச் சானல்களையே மாற்றி மாற்றி வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
நேரம் ஆக ஆக உள்ளுக்குள் உதறலெடுத்தது அவளுக்கு. உள்ளங்கை வியர்த்து பயப்பந்து ஒன்று வேறு தொண்டைக்கும் வயிற்றுக்குமாய் உருண்டுக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் என்னாகுமோ என்ற கற்பனையிலேயே அவளை தவிக்கவிட்ட வீசி, ஒரு கையை தன் ராயல் ப்ளூ பேண்டிற்குள் விட்டபடியே மற்றொரு கையில் லேப்டாப் அடங்கிய பையுடன் கீழே வந்தான்.
வந்தவன் தன்னை அலங்க மலங்க பார்த்திருப்பவளின் அருகில் வந்து அமர்ந்து, காபி கொண்டு வந்து கொடுத்த தன் அன்னைக்கு கேட்கும்படியாகவே அவளிடம், "கூப்பிட்டா மேடம் வர மாட்டீங்களோ?" என்றான்.
"அது அத்தை தான்.." என்றவள் தயங்கும் வேளையில்,
"ஆமாடா, நான் தான் போகவேணாம்னு சொன்னேன்.. ஏன்டா காபியை திருப்பி அனுப்பின?.. உனக்கு என்ன அவ்ளோ வீம்பு?.." என்று காரமாய் வினவினார் அபிராமி.
சற்றுதூரத்தில் டைனிங் டேபிளில் இட்லியை சட்டினியில் தோய்த்துக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தவன், "தினம் அப்பாவுக்கு நீங்க தானே காபி தர்றீங்க?.. எனக்கு மட்டும் இவ கொடுக்கக்கூடாதா?" என்றான்.
"கொடுக்கலாம்.. கொடுக்க அவளே விருப்பப்பட்டா.." என்றார் அபிராமி.
"ஏன்? ஏன்? ஏன் அவ விருப்பப்படமாட்டா?.. ஷ்ரதா உனக்கு காபி கொண்டுவர விருப்பம் தானே?" என்று கேட்டவனின் தொனியில் ஆமென்று சொல்லு எனும் உத்தரவு புதைந்திருந்தது.
"எப்படி விருப்பம் இல்லாமப் போகும்?" என்று தானும் தன் பங்கிற்கு வீசியுடன் சேர்ந்துக்கொண்டாள் மதுபாலா.
அபிராமியை மண்ணை கவ்வச்செய்யும் விதமாய் விருப்பம் தான் என்று தலையாட்டினாள் ஷ்ரதா.
அதில் தன் அன்னையை வெற்றிக் களிப்புடன் பார்த்த வீசி, "ரொம்ப அவ விருப்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி நடிக்காதீங்கம்மா.. மொத அவக்கிட்டப் பேசி அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்கங்க.. பாருங்க அவளுக்கு மல்லிப்பூவே பிடிக்காது.. நீங்க கொடுத்தீங்களேன்னு ஒரு பண்டலையே தலையில தூக்கி வச்சிருக்கா.. மொத அதையெடுக்க சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிள் நோக்கிச் சென்றுவிட்டான்.
அவனுக்குப் பரிமாறுமாறு மதுபாலாவை ஏவிய அபிராமி ஷ்ரதாவை நெருங்கி, "உனக்கு மல்லிப்பூ பிடிக்காதா ஷ்ரதா?" என்று கேட்க, ஏற்கனவே அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்த ஷ்ரதா ஆமென தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்டினாள்.
காதல் கணம் கூடும்...