Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நானும் ஆன்டி ஹீரோ தான் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் ௦: (Prelude)

இன்றைய தினம் எப்பொழுது முடியும் என்று நிமிடத்திற்கு ஒரு முறை கைகடிகாரத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் கமலி.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அவள் அவள் வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து வரும் போதும் அவள் வாழ்வில் ஏதேனும் மாறிக்கொண்டு தான் இருந்தது. ஆனால், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது.

வாரஇறுதிகளை நெருங்கியதும் உள்ளுக்குள் தோன்றும் உற்சாகம்.


இன்றும் அதே உற்சாகத்தோடு, கடிகாரத்துக்குள் இருக்கும் இரண்டு முற்களும் ஒன்றுக்கொண்டு முறைத்துக்கொண்டு நேரெதிராக நூற்றெண்பது டிகிரி விலகி நின்று ஆறு மணி என்று காட்டும் நொடிக்காக காத்திருந்தாள் கமலி.


“இன்னும் ஒரு மணி நேரம் தான்! இன்னும் அரைமணிநேரம் தான்! இன்னும் கால் மணி நேரம் தான்!” என்று தனக்குள்ளாகவே உற்சாகித்துக்கொண்டிருந்தவளை அதிகம் காக்க வைக்காமல், மாலை ஆறு மணியும் விரைவாக வந்துவிட்டது.

ஆறு மணி ஆனதும் தான் தாமதம், இதற்கு மேல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று அலுவலகத்தை விட்டு கிளம்பினாள்.

“விடை கொடு சிஸ்டம்!
Log out செய்கிறேன்!

விடை கொடு ஆபிஸ்!

வாசல் தாண்டுகிறேன்!” என்று தானே எழுதிய நன்னாரே பாட்டின் புதிய ‘வாரயிறுதி வெர்ஷன்’-ஐ பாடிக்கொண்டு வெளியேறினாள் கமலி.

சென்னை நகரின் ஆறு மணி சாலை நெருசலில் அல்லோல்ப்பட்டு, தனக்கு பிடித்த இன்ஸ்டன்ட் நூடல்ஸ் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு அவள் வீட்டு வாசலை அடையும் போது மணி ஏழு.

கைப்பையில் இருந்த சாவியை எடுத்து, உள்ளே வந்தவள், “இந்த வீக்-எண்ட் நான் ஒரு ப்ரீ பர்ட்!” என்று சோபாவில் பொத்தென அமர்ந்தாள்.

தாய், தந்தை, தாத்தா என்று எந்நேரமும் பல குரல்கள் ஒலிக்கும் அந்த வீட்டில், இன்று அவள் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.

கூடவே, அவள் அலைபேசியும் ஒலித்தது. அழைத்திருந்தது அவள் அன்னை தான்.

அவள் அழைப்பை எடுத்ததுமே, “வீட்டுக்கு வந்துட்டல்ல. பத்தரமா இரு. வீட்டை பார்த்துக்கோ நான் திரும்ப வர எப்படியும் ஒரு வாரம் ஆகும். சமச்சி முடிச்சதும் ஒழுங்கா கேஸ் ஆப் பண்ணு. எல்லா இடத்திலும் லைட், பேன் எல்லாம் ஓடவிடாத. தண்ணி டேப் எல்லாம் மூடியிருக்கான்னு செக் பண்ணு. கதை எழுதறேன்ன்னு விட்டத்தை பார்த்துட்டே உக்கார்ந்துட்டு இருக்க” என்று மூச்சி விடாமல் அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்த தாய் பேசியதை கேட்டவளுக்கு, “ரேடியோல பேசறவங்க எல்லாம் தோத்துடுவாங்க போல” என்று நினைத்துக்கொண்டாள்.

“சரி. சரி. அதெல்லாம் நான் ஒழுங்கா வீட்டை பார்த்துக்கறேன். நானும் அப்போல இருந்து கேட்டுட்டு இருக்கிறேன்ல. ஸ்டேட்ஸ்ல சொந்தக்காரங்க யாரோ சீரியஸா இருக்காங்கன்னு தான் சொல்றீங்க. யாருன்னு சொல்ல மாட்றீங்க. எனக்கு தெரியாம யார் உங்களுக்கு சொந்தம்?” என்று கமலி கேட்க, “நான் அப்பறம் பேசறேன். டைம் ஆச்சு. செக்-இன் பண்ண போறோம்” என்று பதிலே சொல்லாமல் அழைப்பை துண்டித்தார் அவளின் தாய்.

“கடைசி வரைக்கும் ஸ்டேட்ஸ்ல இருக்க சொந்தக்காரங்க யாருன்னு சொல்லவே இல்லையே!” என்று நினைத்துக்கொண்டவள், அடுத்து வேறு எண்ணில் இருந்து அழைப்பு வர அதை மறந்துப்போனாள்.

அழைப்பு வந்த எண்ணை பார்த்தவள், “என்ன அதிசயமா இந்த அக்கா போன் பண்றாங்க!” என்று யோசித்துக்கொண்டு அழைப்பை ஏற்றவள், “ஹலோ! என்ன கவி. திடீர்னு போன் பண்ணிருக்கீங்க!” என்று கேட்க, “எதுக்கு பண்ணேனா! நானும் ஆன்டி-ஹீரோ நாவல் எழுத போறேன்னு சொல்லிட்டு போனவ தான். அதுக்கப்றம் ஆளையும் காணோம். கதையும் காணோம். அதான் உசுரோட தான் இருக்கியான்னு பார்க்க போன் பண்ணேன்” என்றாள் அவளின் தோழி பார்கவி.

“அது! அதுவந்து... சில தவிர்க்கமுடியாத காரணத்தால என்னால எழுத முடியல” என்று கமலி சொல்ல, “அப்படி என்னம்மா தவிர்க்க முடியாத காரணம்” என்றாள் பார்கவி.

“அது... அது வந்து... எனக்கு வேற வேலை இருந்துச்சு. கதை எழுதுறது என்ன எனக்கு முழுநேர வேலையா!” என்று கமலி சீரியஸாக பேச முயற்சித்தாலும், “ஆன்ட்டி-ஹீரோ கதை எழுத தெரியல. அதை மழுப்ப என்னென்ன சொல்றா பாருங்க” என்று அவள் சமாளிப்பதை கண்டுபிடித்துவிட்டாள் பார்கவி.

“நம் ராஜத்தந்திரங்கள் அனைத்தும் வீணானதே!” என்று நினைத்துக்கொண்ட கமலி, தனக்கு ஆன்டி-ஹீரோ கதை எழுத வராது என்பதை மட்டும் ஒத்துக்கொள்ள தயாராய் இல்லை.

“அப்போ! எனக்கு ஆன்டி-ஹீரோ கதை எழுத வராதுன்னு சொல்றீங்க. அப்படி தான!” என்று கமலி கேட்க, “ஆமாம். அப்டி தான்” என்றாள் பார்கவியும்.

“இதுக்காகவே! நீங்க இப்படி சொல்றதுக்காகவே நான் ஒரு ஆன்டி-ஹீரோ கதை எழுத தான் போறேன்” என்று கமலி சொல்ல, “நீ அதுக்கு சரி பட்டு வர மாட்ட ராசாத்தி. நீ எழுதற கதையெல்லாம் நான் பார்த்ததில்லையா என்ன? உன் ஹீரோ எல்லாம் தயிர்சாதம், சாம்பார்சாதம் மெட்டிரியல். உன்னால காரசாரமா ஆன்டி-ஹீரோ எல்லாம் எழுதவே முடியாது” என்றாள் பார்கவியும் உறுதியாக.

“நீங்க போன வைங்க. நான் கதை எழுதிட்டு அப்பறம் பேசிக்கறேன்” என்று அழைப்பை துண்டித்தவள் சிந்தை முழுதும், ‘ஆன்டி-ஹீரோ... ஆன்டி-ஹீரோ... ஆன்டி-ஹீரோ’ மட்டும் தான்.

“அது என்ன? என்னால எழுத முடியாத கதை? ஆன்டி-ஹீரோ எழுத ஏதாவது தனி தகுதி வேணுமா என்ன? நானும் எழுதி காட்டுவேன்” என்று உறுதிப்பூண்டவள், மடிக்கணினியை எடுத்துக்கொண்டு, ‘ஒரு தென்றல் புயாலாகி வருதே!’ என்று பாட்டை ஒலிக்கவிட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

“எழுதறேன்! எழுதி காட்றேன்” என்று தொடங்கிய வேகத்திலே பிரேக் போட்டு நின்றாள் கமலி.

“ஆன்டி-ஹீரோ, ஆன்டி-ஹீரோன்னு சொல்றாங்களே! அவன் எப்படி இருப்பான்!” என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு, பல ஆன்டி-ஹீரோ கதைகளில் ஹீரோவை சிங்கத்தோடு ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது.

“நம்பளும் சிங்கம் மாதிரி ஒரு ஹீரோவ இறக்குறோம். நானும் ஆன்டி-ஹீரோ ரைட்டர் தான்னு காட்டறோம்” என்று முடிவுசெய்த மறுநிமிடம் அவள் மூளைக்குள் வேறு ஒரு குரல் கேட்டது. “இதெல்லாம் தப்பு. அப்படி எழுதாத” என்று.

“என்ன டா இது! யாரோ மண்டைக்குள்ள சவுண்ட் போடறாங்க? ஒஹ்! இதுக்கு பேர் தான் மனசாட்சியா?” என்று கவனித்தாள்.

அவள் மூளைக்குள் ஒரு உருவம் அமர்ந்து கத்திக்கொண்டிருந்தது. மூளைக்குள் இருந்து பேசும் அந்த உருவத்தை அவளால் உணர முடிந்தது. அகக்கண்ணால் பார்க்க முடிந்தது. ‘யாரடா அது?’ என்று கமலி உற்றுப்பார்க்க, அந்த உருவம் தன்னுடைய சாயலிலேயே இருப்பதை கவனித்தாள்.

முக ஜாடையும், வெள்ளை நிற தோலும், குறிப்பாக நீல நிற கண்களும் தன்னை போலவே இருந்தது. ஆனால், தோள் சுருங்கி, தலை முடி வெளிர்த்து வயாதான தோற்றமாக இருந்தது.

“என்ன டா இது! நம்ப மனசாட்சி இவ்வளவு வயசாகி இருக்கு! ஆனா, இங்கிலீஷ்காரி மாதிரி இவ்வளவு ஸ்டைலா இருக்கு. இங்கிலீஷ்காரி மாதிரி என்ன! இங்கிலீஷ் காரியே தான்னு சொல்ற போல இருக்கு” என்று உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்.

பால் ரோஸ் நிறத்தில், வெள்ளை நிற பூக்கள் தெளித்து போல் ஒரு மெல்லிய கவுன். அதற்க்கு மேல் ஒரு டெனிம் ஜாக்கெட், கால்களில் பூட்ஸ், கண்களுக்கு கூலிங் க்ளாஸ், தலை மேல் ஒரு அழகான பூ வேலைப்பாடுகள் வைத்த கேப் என்று மேலிருந்து கீழ் வரை டிப்-டாப்பாக இருந்து உருவத்தை வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள் கமலி.



கால் மேல் கால் போட்டு, கமலியை பார்த்ததும், தலையில் இருந்து கேப்பை லேசாக நகர்த்தி அவளை ஓரக்கண்ணால் பார்த்தார் அந்த பட்டி. இங்கிலீஷ்கார பாட்டி.

“இந்த வயசுல ஸ்டைல பார்த்தியா!” என்று மனதுக்குள் திட்டிய கமலி, “என்ன நம்ப மனசாட்சிய நம்பலே திட்டுறோம்” என்று நாக்கை கடித்துக்கொண்டாள்.

“ஹே கமலி. ஹாய்! எப்படி இருக்க” என்று அந்த பாட்டி தமிழ் பேசியது தமிழ் வார்த்தைகளில் தான் பேசினாலும், தமிழ் போல் இல்லை. வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எழுத்துக்களை வகைக்கண்டு, ஒவ்வொரு வகை எழுத்தும் மார்பு, மூக்கு, கழுத்து என்று எந்தெந்த உறுப்பில் இருந்து பிறக்க வேண்டும் என்று எழுத்துக்களுக்கு பிறப்பிலக்கணம் கொண்டுள்ள மொழி அல்லவா தமிழ்.

ஆனால், அந்த பாட்டி பேசிய தமிழ் வார்த்தைகளுக்கும், மார்புக்கும் மூக்குக்கும் கழுத்துக்கும் தொடர்பே இல்லை. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி பழகியவரின் நாக்கில் இருந்து உதிர்த்த தமிழ் எழுத்துக்களும் நுனி நாக்கில் இருந்து பிறந்ததாகவே இருந்தது.

“என்ன டா இது! நம்ப மனசாட்சி தமிழையே இங்கிலீஷ் மாதிரி பேசுது! ஒருவேள. நம்ப வயசாகி இப்படி தான் இருப்போமோ! இருக்காதே! இந்த சிங்கார சென்னைல இருந்துகிட்டு இப்படி எல்லாம் தமிழ் பேச வாய்ப்பே இல்லையே!

ஒருவேள. இப்போ அம்மா, அப்பா தாத்தா எல்லாம் ஸ்டேட்ஸ் போய்ருக்காங்களே! அங்க எனக்கு அத்தை மாமா யாராவது இருப்பங்களோ! அவங்க பையனுக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு என்னையும் அமெரிக்கன் சிட்டிசன் ஆக்கிடுவாங்களோ! அதனால நான் வயசானதும் இங்க்லீஷ் பாட்டி ஆகிடுவனோ!” என்று கமலியின் கற்பனை குதிரை தரிக்கெட்டு ஓடியது.

“எப்படி இருக்க என்று கேட்டேன்” என்று அந்த பாட்டி மீண்டும் குரல் குடுக்க, “ஹான்! நல்லா இருக்கேன். ஆமா, நீ யாரு! என் மனசாட்சியா?” என்று கமலி கேட்க, சத்தமாக சிரித்தது அவள் தலைக்குள் இருந்த உருவம்.

“உனக்கு அப்படியா தோணுது?” என்று பாட்டி கேட்க, “ஆமாம்! நம்ப ரெண்டு பேரும் கொஞ்சம் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கோம். என்ன, என்னை விட கொஞ்சமே கொஞ்சம் வெள்ளையா இருக்க. பாஷை வேற மாதிரி இருக்க. ஸ்டைலா இருக்க. வயாசாகி போய் இருக்க.

நானும் உன் கலர்ல தான் இருப்பேன். இந்த சென்னை வெயில்ல தான் கருத்துட்டேன். இப்போ மட்டும் எனக்கு அமெரிக்கால செட்டில் ஆகுற வாய்ப்பு கிடைச்சிதுன்னு வையி. நான் அறுபது வயசுல உன்ன மாதிரி ஆகிடுவேன்.

அப்போ நீயும் நானும் ஒன்னு தான. அப்போ நீ என்னோட மனசாட்சியா தான் இருக்கணும். என்ன என் மனசாட்சி கொஞ்சம் கிழவி மாதிரி யோசிக்கும் போல. அதான், வயசாகி இருக்க” என்றாள் கமலி.

“நம்ப ரெண்டு பேர் உருவமும் அவ்வளவு மேட்சிங்கா?” என்று பாட்டி கேட்க, “ஆமாம். ஒன்னு போல தான் இருக்கு. சொல்லு. நீ ஏன் மனசாட்சி தான!” என்று கேட்ட கமலியின் வார்த்தைகளில் அவசரம். கண்களில் ஆர்வம்.

“உனக்கு அப்படி தோனுச்சுன்னா, அப்படியே வச்சிக்கோ!” என்றார் பாட்டி.

“சரி இப்போ எதுக்கு வந்த?” என்று கமலி கேட்க, “நான் வரும் முன் என்ன சொல்லிட்டு இருந்த?” என்றார் பாட்டி.

“என்ன சொல்லிட்டு இருந்தேன்! கதை எழுத போறேன்னு சொல்லிடு இருந்தேன்!”

“என்ன கதை?”

“ஆன்டி-ஹீரோ கதை”

“ஹீரோ எப்படி இருக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்த?”

“சிங்கம் மாதிரி” என்று சொன்ன கமலியின் கண்களில் பெருமிதம், புளாங்கிதம்.

“கதைய யாரு எழுதறா?”

“நான் தான்! என்ன கேள்வி கேக்கற நீ!”

“அது இல்ல. கதை எழுதுறது சிங்கமா?”

“இல்ல மனுஷி”

“கதை படிக்கப் போறது யாரு?”

“மனுஷங்க!”

“கதை மாந்தர்கள் எல்லாம் யாரு?”

“மனுஷங்க தான்!”

“அப்பறம் எதுக்கு ஹீரோ மட்டும் சிங்கம் மாதிரி!” என்று பாட்டி கேட்க, “அது... அதுவந்து...!” என்று திணறினாள் கமலி.

பாட்டி கண்களில் கண்களில் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸை கழட்டி, “என்ன. சொல்லு” என்றார் புருவத்தை உயர்த்தி.

“என்ன பாட்டி கேள்வி கேக்கற நீ? இப்போ எல்லாம் சிங்கம், புலி மாதிரி ஹீரோ இருந்தா தான் கதையே படிக்க வராங்க. அதான் trend!” என்றாள் கமலி.

“மனுஷன் மனுஷன் மாதிரி தான் இருக்கணும். அப்படி இருந்தா தான் அவன் ஹீரோ!” என்று பாட்டி சொல்ல

“கரெக்ட் தான். மனுஷன் மனுஷன் மாதிரி இருந்தா ஹீரோ. சிங்கம் மாதிரி இருந்தா அவன் ஆன்டி-ஹீரோ!” என்று பதில் சொன்ன கமலி, “ஆன்டி-ஹீரோவுக்கும் ஹீரோவுக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்களை எழுதுக” என்ற ஐந்து மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத கூட தயாராக இருந்தாள்.

“அப்படி மனுஷன் சிங்கம் மாதிரி இருந்தா அவன் மனுஷனே இல்ல. அப்பறம் எப்படி அவன் ஹீரோவா இருப்பான்” என்று பாட்டி கேட்க, “ஐயோ! இந்த வயசான மனசாட்சியை வச்சிட்டு நிம்மதியா ஒரு கதை எழுத முடியுதா! இங்க பாரு பாட்டி. இந்த லாஜிக் கேள்வி எல்லாம் தூக்கி தூரம் போடு. நான் சிங்கம் மாதிரி ஒரு ஹீரோவ வச்சி ஆன்டி-ஹீரோ கதை எழுத தான் போறேன்” என்றாள் கமலி.

“அப்போ கண்டிப்பா எழுத தான் போறியா?” என்று பாட்டி கேட்க, “ஆமாம்! Yes! அவுனு! அதே!” என்று என்றாள் கமலி உறுதியாக.

“சரி. முடிவு எப்படி இருக்கும்?” என்று பாட்டி கேட்க, “அதெல்லாம் நான் முடிவு பண்ணிட்டு எழுதுறது இல்லை. என்னோட கதாபாத்திரங்களை தன் போக்கில் ஓடவிட்டு எப்படி அவங்க போக்குல தான் கதைய முடிப்பேன்” என்றாள் கமலி பெருமையாக.

“அப்படி செய்தா, கதை ஸ்டார்டிங் தான் நல்லா இருக்கும். பினிஷிங் சரியா இருக்காதே” என்று பாட்டி யோசிக்க, ‘ஐயோ. பாட்டி நம்பள டேமேஜ் பண்ணுதே’ என்று பல்லை கடித்துக்கொண்டு நின்றாள் கமலி.

சிறிது நேரம் யோசித்த பாட்டி, “சரி எழுது. ஆனா, ஒரு கண்டிஷன்” என்று சொல்ல. முதல் வரியில் சந்தோஷப்பட்ட கமலி, அடுத்த வரியில் ‘பாட்டி என்ன ட்விஸ்ட் வச்சிருக்கோ’ என்று படபடக்க தொடங்கிவிட்டாள்.

“என்ன ட்விஸ்ட்?” என்று அவள் கேட்க, “கதையில நீ உன்னையும் ஒரு கதாபாத்திரமா சேர்த்துக்கணும்” என்றார் பாட்டி.

“ஏதே! நான் கதாபாத்திரமா மாறனுமா? நான் ரைட்டர்!” என்று தன் சிரத்தின் மேல் கிரீடம் வைத்தது போல் கற்பனை செய்துக்கொண்டாள் கமலி.

“ரைட்டர்ன்னா என்ன? உன் இஷ்டதுக்கு சிங்கம் மாதிரி இருக்கவனை எல்லாம் ஹீரோவா போட்டுடுவ. உன் கதைல இருக்க மத்த கதாபாத்திரம் எல்லாம் அவன் கிட்ட கஷ்டப்படணும். அவனை உருவாக்கிட்டு நீ மட்டும் ஜாலியா சுத்துவியா. போ, நீயும் உள்ள போய் கஷ்டப்படு” என்று பாட்டி கமலியின் கன்னத்தில் பளீரென்று ஒன்று வைக்க, வாங்கிய அடியில் தலை மேல இருந்த கிரீடம் எல்லாம் காணாமல் போனது.

“என்ன பாட்டி அடிக்கற? நீ என் ஹீரோவ விட மோசமா இருப்ப போலேயே” என்று அழுதுக்கொண்டே நின்றாள் கமலி. “ஒரு ஆன்டி-ஹீரோ கதையை எழுதுறதுக்கு இந்த கமலி கெழவி கிட்ட எல்லாம் அடி வாங்க வேண்டி இருக்கு” என்று சூனா-பான மைண்ட் வாய்சில் தனக்குத்தானே பாவப்பட்டுக்கொண்டாள்.

“அழுது நடிக்காத. நான் சொன்னத செய். உன்னையும் கதையில் ஒரு கதாபாத்திரமா சேர்த்து கதையை யோசி” என்று பாட்டி சொல்ல,

“பண்றேன். பண்ணி தொலைக்கிறேன்” என்றாள் கமலி கண்ணத்தில் கை வைத்துக்கொண்டே.

பாட்டி சொன்னது போலவே தன்னையும் கதாப்பாத்திரமாக சேர்ந்து கதையை கற்பனை செய்யத் தொடங்கியவளின் மனதில் ஒரே உற்சாகம் தான்.


“நானும் ஆன்டி-ஹீரோ ரைட்டர் தான்டா!” என்று சொல்லி சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டாள்.



உங்கள் கருத்துக்களை இந்த link-யில் பகிர்ந்துக்கொள்ளுங்கள் friends!
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் - 1. 1

மதியம் மணி பன்னிரண்டு. நாற்பது டிகிரி உச்சி வெயில்.

மரங்களின் நெருக்கம் அதிகமில்லாத காடு அது. தரையில் புற்கள் செழித்து வளர ஏதுவாக, நெடிய மரங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி நின்று, சூரியக் கதிர்கள் தரையில் விழ வழிவகைச் செய்தன.

செழித்து வளர்ந்த புற்களை உண்டு கொழுகொழுவென வளர்ந்த மான்கள், காட்டெருமைகள் போன்ற விலங்குகள் அதிகம் இருந்தன, அந்த சவானா வகைப் புல்வெளியில்.
மான்கள், காட்டெருமைகள் போன்ற தாவரப் பட்சினிகளின் ஜனத்தொகை அதிகம் பெருகி, காட்டில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் தன் பசிக்கு இரையாக்குவதைத் தவிர்க்கவென, சில மாமிசவுண்ணிகளும் இருந்தன.

அந்த உச்சி வெயில் நேரத்தில், ஒரு மரத்தின் நிழலில் படுத்த வண்ணம் இருந்தது ஒரு ஆண் சிங்கம்.

சிங்கங்களை விட வேகமாக ஓடக்கூடியவைச் சிறுத்தைகள்.

சிங்கங்களை விட அதிக எடை உள்ளவைப் புலிகள்.
சிங்கங்களை விட தந்திரக்காரர்கள் நரிகள்.

ஆயினும், ‘ராஜாக்கள்’ சிங்கங்களே. அந்தப் பட்டத்தைப் பெற சிங்கங்கள், அதிவேகமாக ஓடவேண்டியதில்லை.

அதிக எடை உள்ளவையாக, உயரம் அதிகம் உள்ளவையாக இருத்தல் அவசியமில்லை.

தந்திரக்காரர்களாகத் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை.

அலட்டல் ஏதுமின்றி, மரத்தின் கீழ் அமைதியாகப் படுத்திருக்கும் அந்தத் தோரணைப் போதும். அதன் கழுத்தையும், தலையையும் சுற்றி, இயற்கையே சிங்கங்களுக்குச் சூட்டியக் கிரீடம் போலிருக்கும் அந்தப் பிடரி முடி போதும். சுற்று வட்டாரம் ஐந்து மைல்கள் வரை, அதிகாரமாய் ஒலிக்கும் அதன் கர்ஜனைப் போதும். ‘காட்டின் ராஜா!’ என்று பட்டம் பெற.

நேற்று தான் கொழுத்தக் காட்டெருமை ஒன்றை வேட்டையாடி, முழுக் குடும்பமும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் போதும் என்ற அளவுக்கு உண்டதால், இன்று வேட்டையாடும் வேலையின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

சிங்கங்கள் வேட்டையாடுவதையும், பிற மிருகங்களைக் கொல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கவில்லை. தன் வயிறு பசித்திராதவரை, அவை வேறு எந்த உயிரினத்தையும் துன்புறுத்துவதில்லை.
இந்தச் சிங்கக்குடும்பமும் அப்படியே. அடுத்த முறை பசிக்கும்வரை, இதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் மேயும் அந்தப் புள்ளிமான்களை அவைத் தொட்டும் பார்க்கப்போவதில்லை.

சிங்கக்குடும்பம்! ஆம், சிங்கங்கள் குடும்பமாக வாழ்பவை. ஒரு ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், சில சிங்கக்குட்டிகள் ஆகியவை அந்தக் குடும்பத்தில் அடக்கம்.

ஒரு ஆண் சிங்கம் என்பது மட்டுமல்லாமல் சில நேரம், இரண்டு அல்லது மூன்று ஆண் சிங்கங்கள் என்று கூட மாறக்கூடும். அப்படி இருப்பின், ஒரே குடும்பத்தில் வாழும் அந்த ஆண் சிங்கங்கள் நெருங்கிய உறவுகளாக, ஒரு தாய் வயிற்றில், ஒரே கர்ப்பத்தில் பிறந்து, ஒன்றாக வளர்ந்தவையாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு அந்தக் குடும்பத்தின் ஆட்சியின் கீழிருக்கும். வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கங்கள் அந்த நிலப்பரப்பில் நுழைய முடியாது. ஆண் சிங்கங்கள் நுழையவும் விடாது.

‘ஆஸ்கர்’ என்றழைக்கப்படும், இந்தச் சிங்கக்குடும்பத்தையும், அதற்குரிய நிலப்பரப்பையும், அப்படியான மூன்று சிங்கங்கள் கூட்டாட்சி செய்து வருகின்றன.
அஸ்லான், அரி, அப்பாஸ் என்று மூன்று சிங்கங்களுக்குள் மூத்தவன் அஸ்லான்.

இவை மூன்றும் தலைமைத் தாங்கும் அந்தக் குடும்பத்தில், ஐந்து வளர்ந்த பெண் சிங்கங்களும், மூன்று இளவயது பெண் சிங்கங்களும் இருந்தன. இளவயது ஆண் சிங்கம் ஒன்றும், இரண்டு ஒரு வயது குட்டிகளும் கூட அந்தக் குடும்பத்தின் அங்கம்.

மொத்தம் பதினான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆஸ்கர் சிங்கக்குடும்பம், இந்தச் சுற்றுவட்டாரத்தின் அதிக வலிமையானச் சிங்கக்குடும்பம். ஆயினும், அடுத்தச் சில நாட்களில் ஆஸ்கர் குடும்பம் பல இழப்புகளைச் சந்திக்கலாம்!

‘வலிமையானக் குடும்பம்’ என்றப் பெயர் மறைந்து, இந்தக் குடும்பம் குலைந்துப் போகலாம்.

ஒரு குடும்பத்திலிருக்கும் பெண் சிங்கங்கள் அனைத்தும், பெரும்பாலும் நெருங்கிய ரத்தச் சொந்தங்களாகவே இருக்கும். முழுவளர்ச்சிப் பெற்ற அந்த ஐந்து சிங்கங்களுக்குள் முதன்மையானவள் அம்ரா.
பிறந்து சில வாரங்களே ஆன, தன் இரண்டு குட்டிகளுக்குப் பால் புகட்டிக்கொண்டிருந்தவள், மரத்துக்கடியில் கம்பீரமாகப் படுத்திருக்கும் அஸ்லானைப் பார்த்தாள்.

அஸ்லானின் பார்வைக் குத்திட்டு நிற்கும் இடத்தைக் கவனித்தவள் அவனின் யோசனையையும் கணித்தாள்.

தன் மடியில் பால் குடித்துக்கொண்டிருக்கும் தன் இரண்டு குட்டிகளும் முழுதாகப் பசியாறும் வரை அமைதியாகவே இருந்தாள் அம்ரா.

‘மைலோ’ என்ற ஆண் சிங்கக்குட்டியும், ‘பாப்பி’ என்ற பெண் சிங்கக்குட்டியும். அந்தக் குடும்பத்தின் இளம் உறுப்பினர்கள். பசியாறிய இரண்டு குட்டிகளும் ஒன்றுக்கொன்று சீறிக்கொண்டும், கீறிக்கொண்டும் விளையாடத்தொடங்கின.
அம்ரா, மெதுவாக எழுந்துச் சென்று அஸ்லானின் அருகில் அமர்ந்தாள்.
அச்லானின் பார்வை யாரிடம் குத்திட்டு நின்றதோ, அவனையே கவலைத் தேய்ந்தக் கண்களுடன் பார்த்த அம்ரா, தன் முகவாயை வைத்து அஸ்லானின் முதுகில் தடவினாள். ஆயினும் அஸ்லான் தன் பார்வையை அவ்விடம் விட்டுத் திருப்பியப் பாடில்லை.
அஸ்லான் பார்வை நிலைத்திருக்கும் இடத்திலிருந்தது ‘லெனி’. அம்ராவின் மூத்த மகன். இந்தச் சிங்கக்குடும்பத்தின் ஒரே இளம் ஆண்சிங்கம்.
அவனின் செய்கைகள் நினைத்து, அந்தச் சிங்கக்குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கவலையென்றாலும், லெனியின் தாயான அம்ராவுக்கும், அந்தக் கூட்டத்தில் மூத்த ஆண் சிங்கமான அஸ்லானுக்கும் தான் அதீதக் கவலை.
அனைவரும் கவலைக் கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன செய்கிறான் லெனி? அவனின் செய்கைகள் எப்படியானவையாக இருக்கின்றன?

அவன் செய்கைகள் மற்ற சிங்கங்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டு இருந்தன. சிங்கத்தின் இயல்பான குணங்கள் அவனிடம் இல்லை.

ஆம், அவன் வேட்டையாடுவது இல்லை. மாமிசம் உண்பது இல்லை. ஏன், சிங்கங்களுக்குரிய மற்ற விலங்குகளை நடுங்கவைக்கும் கர்ஜனைக் கூட அவனிடம் இல்லை.

இதோ, இப்போதுகூட, இந்த சவானா புல்வெளியில், செழித்து வளர்ந்த புற்களைச் சுவைப் பார்த்துக்கொண்டிருக்கும் தன் நண்பன் குடும்பத்தோடு சேர்ந்து தானும் இலைகளையும், தழைகளையும் உண்டுக்கொண்டிருந்தான் லெனி.

அந்தப் புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் மான் குடும்பத்தில் ஒருவனான மெல்வின் என்ற மான் தான் லெனியின் நெருங்கிய நண்பன்.

மான் நண்பனோடு சேர்ந்து, மாமிசம் உண்ணுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பற்களைக் கொண்டிருக்கும் சிங்கமும் இலையும், தழையும் உண்கிறது என்றால், மனிதர்கள் அதை இயற்கையின் ஆச்சரியமாகப் பார்ப்பர்.
ஆனால், ஆஸ்கர் குடும்பத்திற்கும், அஸ்லானுக்கும், அரி, அப்பாஸுக்கும் அந்தக் காட்சி அருவருக்கத்தக்கதாய் இருந்தது.

தங்கள் ரத்தத்தில் உதித்த மகனா இவன் என்று எண்ணியெண்ணி நொந்துக்கொண்டனர் அந்த மூன்று சகோதரர்களும்.

லெனிக்கு இப்போது மூன்று வயது.

பொதுவாக மூன்று வயதில் ஆண் சிங்கங்கள், குடும்பத்தை விட்டு வெளியேறிவிடும்.
அப்படி வெளியேறவில்லை என்றாலும், அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் மூத்த ஆண் சிங்கங்கள், அடித்து விரட்டி இருக்கும். ஏனெனில், சிங்கங்கள் தானே ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவை.

அப்படி மூன்று வயதில் வெளியேறிய சிங்கங்கள், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நாடோடிகளாக அலைந்து, உடலில் வலுவேற்றிக்கொண்டு, ஐந்து அல்லது ஆறு வயதில், தன்னுடைய குடும்பத்திலோ, அல்லது வேறு சிங்கக்குடும்பத்திலோ இருக்கும் மூத்த ஆண் சிங்கத்தைச் சண்டையிட்டு வீழ்த்தி, அந்தக் குடும்பத்தின் தலைவனாகும்.

லெனிக்கு மூன்று வயதாகியும், அஸ்லானும் அவனின் சகோதரர்களும் லெனியை ஆஸ்கர் நிலத்தை விட்டு வெளியேற்றவில்லை.
அதற்குக் காரணம்? சாதுவாக இருக்கும் லெனி ஒருபோதும் ராஜாவாகப் போவதில்லை என்பதாகக் கூட இருக்கலாம்.

அஸ்லானின் பார்வைத் தன் மீது படருவதைக் கூட அறியாமல், மெல்வினுடன் விளையாடிக்கொண்டிருந்த லெனியைத் திரும்பிப் பார்க்க வைத்தது அம்ராவின் உறுமல் சத்தம்.
அம்ராவின் உறுமல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த லெனி, அஸ்லானின் கோவப்பார்வையை உணர்ந்து, தழைகள் மேய்வதை விட்டுவிட்டு, தன் குடும்பம் படுத்திருந்த அந்த மரத்தை நோக்கி வந்தான் லெனி!

லெனி!

உறுதியான சிங்கம் என்று அர்த்தம் அவன் பெயருக்கு.
ஆனால், அவன் குடும்பத்தையும், தந்தைகளையும் பொறுத்தவரை அவன் சிங்கமாக இருக்கவே தகுதியற்றவன்.

ஆஸ்கர் குடும்பத்தின் இழுக்கு அவன்.

குடும்பத்தின் மற்ற சிங்கங்களுக்குக் கேலிப்பொருள் அவன்.

ஆனால், அவனை வெகுவாக விரும்பும் இரண்டு உயிர்களும் அந்தக் குடும்பத்தில் உண்டு.

அவனின் தம்பியும், தங்கையும்.

மைலோவும், பாப்பியும்!

ரத்தம், வேட்டை, மாமிசம் போன்றவற்றின் வாசமறியாது, தாய் பால் மட்டும் அருந்திக்கொண்டிருக்கும் மைலோவுக்கும் பாப்பிக்கும் சிங்கத்தின் இலக்கணம், சிங்கத்தின் குணநலன் என்று எதுவும் இன்னும் தெரியவில்லை.

அதனாலேயே அவர்கள், லெனியை மாமிசம் உண்ணாதவனாக, வேட்டையாடாதவனாக, தங்கள் குடும்பத்தில் தப்பு வந்து பிறந்தவனாக அடையாளம் காணாமல், தங்களோடு மண்ணில் உருண்டுப் புரண்டு விளையாடி, பாசம் காட்டும் லெனியாக மட்டுமே அடையாளம் கண்டுக்கொண்டார்கள்.

ஒருவேளை ‘லெனி’ என்ற பெயருக்கான அர்த்தம் புரியும் வயதிலோ, அல்லது அந்தப் பெயருக்கும், சிங்கக்குடும்பத்திற்கும் அவன் ஏற்றவன் இல்லை என்று அவர்கள் உணரும் வயதிலோ லெனியை அவர்கள் வெறுக்கக்கூடும்.

சுயநலமும், ‘தான்’ என்ற எண்ணமும் சிங்கங்களின் இயல்பான குணநலன்களில் ஒன்று.
ஆனால், ‘இவர்கள் வளர்ந்ததும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர் போல் என்னை வெறுத்து ஒதுக்குவரோ!’ என்று யோசிக்காமல் அந்தச் சின்னக் குட்டிகள் மீது பாசத்தைப் பொழிந்தான் லெனி.

ஏனெனில், லெனி சிங்கங்களின் இயல்பான குணநலன்களைக் கொண்டிராதவன்.

ஏனெனில், லெனி பாசத்தைப் பொழிபவன்.

தன்னுடைய இந்தக் குணங்களால் அவன் எதிர்காலம் மட்டும் அல்லாது, இந்த ஆஸ்கர் குடும்பத்தின் எதிர்காலமே எப்படி எல்லாம் மாறப்போகிறது என்பதைப் பற்றிய சிந்தனைகள் கொஞ்சமும் இல்லாமல் மைலோவையும், பாப்பியையும் கொஞ்சிக்கொண்டிருந்தான் லெனி!


** ** ** ** ** **
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் 1.2:

பெரிய பங்களா போன்ற வீடு அது.

ஓங்கி உயர்ந்த மதில் சுவர்கள். அதற்கு இணையான உயரத்தில் நுழைவாயில் கதவுகள். அந்தக் கதவைத் திறக்கவே இருவர் வேண்டுமோ என்று எண்ணும் படியான நெடிய, பலமான கதவுகள்.

அந்தக் கதவைத் திறந்து உள்ளே சென்றோமானால், நம்மை வரவேற்பது பச்சைப் பசேலெனப் புட்தரைகளும், பூச்செடிகளும், மரங்களுமே. வீட்டின் வாசற்படியை அடைய அந்தப் புட்தரைகளுக்கு நடுவே ஒரு கருங்கல் பாதை இருந்தது.

அந்தத் தோட்டத்தின் அழகில் மயங்கி, இரண்டு நொடிகள் அங்கே நின்றோமானால், அந்த ரம்மியமானச் சூழலைக் கெடுக்கும்படியாகக் கேட்கும், நாய்கள் குறைக்கும் சத்தம்.

கமலியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தப் பாட்டி, அந்தத் தோட்டத்தைப் பார்த்து, “வாவ்” என்று வாயசைக்க அடுத்த நொடி “வவ்.. வவ்” என்று கேட்டது நாயின் சத்தம்.

“என்ன சத்தம்” என்று பாட்டி சுற்றி முற்றி பார்ப்பதற்குள் ஒரு நாய் பாட்டியின் தோள் உயரம் வரை எகிறியிருந்தது.

“அவுச்!” என்று பாட்டி பதறிக் கீழே விழுவதற்குள் அந்த நாய்களைப் பராமரிக்கவென இருந்த ஆட்கள் அந்த நாயைப் பிடித்து இழுத்துச் சென்றிருந்தனர்.

அந்த நாயைப் போலவே இன்னும் நான்கு நாய்களைக் கண்ட பாட்டி, கமலியை முறைத்துவிட்டு, “வாட் த ஹெக் இஸ் திஸ்?இதுங்க வளர்ப்பு நாயா? வேட்டை நாயா?
உன் கற்பனை என்ன இவ்ளோ கொடூரமா இருக்கு” என்று கேட்க, முகத்தைச் சிலுப்பிக்கொண்ட கமலி, “தோட்டத்தோட அழகை ரசிச்சப்போ சுகமா இருந்துச்சோ!” என்றாள்.
“ம்கும்ம். உன் கற்பனைல இது மட்டும் தான் அழகா இருக்கும் போல. அது சரி, இது யார் வீடு?” என்று பாட்டி கேட்க, “என் ஹீரோ வீடு” என்றாள் கமலி பெருமையாக.

அந்தப் பதிலைக் கேட்டதும் ஏளனமாய் சிரித்த பாட்டி, “அவன் தான் சிங்கமாச்சே! அவன் வீட்டைக் காவல் காக்க எதுக்கு நாய்?” என்றார்.

பாட்டியை முறைத்த கமலி, “உனக்கு வயசாச்சே தவிர. அறிவுக் கொஞ்சமும் இல்ல. ஒருவேளை, நாளைக்கே என் ஹீரோ ஒரு பொண்ணைப் பார்க்கலாம். அந்தப் பொண்ணு கிட்ட லவ் ப்ரோபோஸ் பண்ணலாம். அந்தப் பொண்ணு அவனைப் பிடிக்கலன்னு சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பலாம். அந்தப் பொண்ணை என் ஹீரோ கடத்திட்டு வந்து இந்த வீட்ல வைக்கலாம்!
அப்போ அந்த ஹீரோயின் தப்பிச்சி ஓட பார்க்கலாம். அப்போ, அவ தப்பிச்சி ஓடாம பார்த்துக்க காவல் நாய் வேணாம்!” என்று அதற்கென நெடிய விளக்கமொன்றைக் கொடுத்தாள் கமலி.
“அப்போ! உன் ஹீரோவுக்கு ஒரு பொண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவைக்கத் துப்பு இல்ல அப்படித் தான!” என்று பாட்டி கேட்க, “என்னது? துப்புக் கிடையாதா? தப்பு பாட்டி.

நீ இன்னும் என் ஹீரோவ பார்க்கல. அதனால தான் இப்படியெல்லாம் பேசற. என் ஹீரோவ மட்டும் நீ பார்த்தன்னு வையி. இந்த வயசுலயும் உனக்கு அவன் மேல லவ்வு லவ்வா வரும்” என்று கமலி சொல்ல மீண்டும் பாட்டியிடமிருந்து கேவலமானப் பார்வை ஒன்றே பரிசாகக் கிடைத்தது.

பாட்டி அதற்குப் பதில் பேசும் முன்னே, அந்த அந்த வீட்டின் அடியாள் ஒருவர், “எதுக்கு வந்திருக்கீங்க? யார பார்க்கணும்” என்று கேட்க, “லெனின் நிரஞ்சன்” என்றாள் கமலி.

“ஓஹ்! சின்ன ஐயாவையா. அப்போ காலேஜ் விஷயமா தான் இருக்கும்” என்றவர் அதற்கு மேல் கேள்விகள் கேட்காமல் அவர்களை உள்ளே விட்டார்.

அங்கிருந்து வாசற்படியை அடைவதற்குள்ளேயே பத்துப் பதினைந்து அடியாட்களைக் கடந்தனர் பாட்டியும் கமலியும். அனைவரும் ஹெவிவெய்ட் சாம்பியன்கள் போன்ற உடலமைப்பில், கரடு முரடானத் தேகத்துடன், முறையாகப் பராமரிக்கப்படாதக் கேசத்துடன் இருந்தனர்.

அவர்களைக் கடந்து சென்றதும் கமலி, “பாத்தியா! எவ்ளோ டெரரான அடியாளுங்க. என் ஹீரோ எவ்ளோ பெரிய கை பாத்தியா!” என்று காலரை உயர்த்த, “சிங்கங்கள் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும். சிங்கத்துக்குத் காவல் நாயோ, அடியாளோ இருந்தா அது சிங்கத்துக்குத் தான் அசிங்கம்” என்று பாட்டி சொல்ல, ஏறிய காலர் தானாக இறங்கியது.

இருவரும் வீட்டுக்குள் நுழைய, அழகான, மென்மையான, அமைதியான ஒரு பெண் அவர்களை எதிர்க்கொண்டார்.
வயது ஐம்பதுக்கும் அறுபதுக்கும் நடுவில் இருக்கும் என்று பார்த்தாலே கணிக்க முடிந்தது. கமலியிடம் வந்தவர், “யாரைப் பார்க்கணும்?” என்று கேட்க, “லெனின் நிரஞ்சன்” என்றாள்.

“அவன் இப்போதான் கிளம்பிட்டு இருக்கான். கீழ வர பத்து நிமிஷம் ஆகும். வெய்ட் பண்ணுங்க” என்று அவர் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “இது யாரு?” என்றார் பாட்டி.

“இதுக் கூடவா தெரியல. ஹீரோ வீட்டுக்கு வந்திருக்கோம். அங்க இந்த வயசுல மான் மாதிரி அமைதியா ஒரு ஜீவன் வந்துட்டு போகுதுன்னா யாரா இருக்கும். நம்ப ஹீரோவுக்கு அம்மா தான் இவங்க” என்றாள் கமலி.

“ஹீரோ சிங்கம்ன்னா. அவங்க அம்மாவும் சிங்கம் மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சேன்” என்று பாட்டி புருவம் உயர்த்த, “அம்மா அப்படித் தான் இருக்கணுமா. அப்பா கூட அப்படி இருக்கலாம். அதனால கூட ஹீரோ சிங்கக்குட்டியா பிறந்திருக்கலாம்” என்றாள் கமலி திருதிரு முழியுடன்.

“அப்போ ஹீரோ, ஹீரோவோட அப்பா எல்லாம் சிங்கம், புலியா இருந்தாலும், ஹீரோவோட அம்மா, லவ்வர், பொண்டாட்டி எல்லாம் மானு, முயல்ன்னு இருந்து, அவங்கக் கிட்ட சிக்கித் தவிக்கணும்.
பெண் சிங்கமாவோ, புலியாவோ இருக்கக் கூடாது. அப்படித் தான” என்று பாட்டி கேட்க, “பாட்டி. ஆன்ட்டி-ஹீரோ ஸ்டோரி இலக்கணமே தெரியாம பேசற நீ. நீ கேக்கற லாஜிக் எல்லாம் பார்த்துக் கதை எழுதுனா, நான் ஆண்ட்டி-ஹீரோ எழுத முடியாது. பாட்டி-ஹீரோ தான் எழுத முடியும்” என்று பொரிந்தாள் கமலி.

‘ஐயோ! இந்த ஒத்த கதையை முடிக்கறதுக்குள்ள இந்தப் பாட்டி கிட்ட என்னென்ன கேள்வி வாங்கப்போறேனோ! அவ்வ்வ்வவ்!’ என்று உள்ளுக்குள் நொந்துக்கொண்டாள் கமலி.

அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, பூட்டிய அறையிலிருந்து “ஐயோ!” என்று அலறல் சத்தம் கேட்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த அறையின் கதவைத் திறந்துக்கொண்டு, கையில் ரத்தக்கறைப் படிந்தக் கத்தி ஒன்றை ஏந்தியக் கையோடு வெள்ளை வேட்டி சட்டைப் போட்ட ஒருவர் வெளியே வந்தார்.

வந்தவர், இரண்டு அடியாட்களை அழைத்து, “அவன் பாடியை டிஸ்போஸ் பண்ணுங்கடா” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அவரின் பார்வை இவர்கள் இருவரின் மேலும் விழ, கமலி நடுநடுங்கி எழுந்து நிற்க, பாட்டியோ கால் மேல் கால் போட்டு அமர்ந்த வண்ணம் இருந்தார்.
“பாட்டி. இவரு ஹீரோவோட அப்பா. ஊருல பெரிய கையி. பெரிய ரவுடி. எழுந்து நின்னு மரியாதைக் குடு” என்று கமலி பாட்டியின் காதில் கிசுகிசுக்க, “கொலைப் பண்றவன், கொள்ளை அடிக்கறவன் எல்லாம் பெரிய ஆளு கிடையாது. மரியாதையும் குடுக்க முடியாது. நெவர்” என்று பதிலளித்தார் பாட்டி.

“ஐயா. அது இந்தப் பாட்டிக்குக் கால் ஊனம். அதான் எழுந்து நிக்க முடியல” என்று கமலி சொல்ல, வேண்டுமென்ற எழுந்து நின்று நடந்துக் காட்டினார்.

‘ஐயோ! கெழவி என்னைச் சாவடிக்காம விடாது போலயே’ என்று கமலி நடுங்கும் நேரத்தில் சரியாக வந்தார் அந்தப் பெண்மணி. பாட்டியின் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், ‘மான்’. அந்தப் பாத்திரத்துக்கு கமலி வைத்திருந்தப் பெயர் பூங்கொடி.

“நிரஞ்சனைப் பார்க்க வந்திருக்காங்க” என்று அவர் கணவரிடம் சொல்ல, “ம்ம்ம்” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அந்தக் கூடத்திற்கு நடுவில், முதல் மாடிக்குச் செல்லும் படிகள் இருந்தன. அந்தப் படிகளிலிருந்து முதலில் கீழே வந்தது, ஒரு பதினைந்து வயது பையன்.
அவன் சீப்பைத் தூக்கிக்கொண்டு ஓடி வர, அவன் பின்னால், பாதித் தலைப் பின்னியும் பாதிப் பின்னாமலும் ஓடி வந்தாள் ஒரு பதினெட்டு வயது பெண்.

அந்தப் பெண் நேராக, தந்தையிடம் வந்து, “அப்பா! அவனைப் பாருங்க. என் சீப்பைத் தூக்கிட்டு ஓடி வந்துட்டான். குடுக்கச் சொல்லுங்கப்பா” என்று முறையிட, அந்தப் பையனோ தாயின் பின்னால் ஒளிந்துக்கொண்டு அவளைப் பழித்துக்கொண்டிருந்தான்.

அவள் தளிர்.

சிங்கமுத்து-பூங்கொடி இருவரின் ஒரே பெண். அவளிடம் வம்பு வளர்க்கும் சிறுவன், சந்தோஷ். அவர்களின் கடைசி மகன்.
பூங்கொடி ஒருவாறாக இருவரையும் சமாதானம் செய்து வைத்து தளிருக்கு தலைச் சீவி முடிக்க, உறுதியான காலடிச் சத்தம் கேட்டது.

சந்தன நிற முழுக்கால் சட்டை, அடர் நீல நிற முழுக்கைச் சட்டை, கருப்பு நிற ஷூ சகிதம், கையிலிருந்த விலையுயர்ந்தக் கைக்கடிகாரத்தை மாட்டிக்கொண்டே கீழே இறங்கிவர அனைவர் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

அவன் ‘லெனின் நிரஞ்சன்’.

கம்பீர நடை, சுற்றி இருப்பவர்களை ஆராயும் பார்வை, இறுக்கமான உடல்வாகு, அனைவரையும் கவனிக்கவைக்கும் குரல், முக்கியமாக வயிற்றில் படிக்கட்டு வெட்டி வைத்தது போன்ற சிக்ஸ் பேக் பாடி. சுந்தரன் தான். ஆயினும், ‘கொஞ்சமே கொஞ்சமாகச் சிரித்தால் அழகுக்கு அழகுச் சேர்த்தது போல் இருக்குமே’ என்ற எண்ணம் தோன்றி அவன் சிரிப்பானா என்று எதிர்பார்க்க வைக்கும் எழில் வதனம்.

அவன் வந்ததும் பாட்டியை இடித்த கமலி, “எப்புடி? ஆன்ட்டி-ஹீரோவா இருக்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கான்ல!” என்று கேட்க, “பாக்குறதுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கான். ஆனா, ஏன் சிரிக்கா மூஞ்சியா இருக்கான்? சிரிச்சா என்ன அழகா இருப்பான் தெரியுமா இவன்?” என்றார் பாட்டி.

“ஐயோ! எத்தனை தடவ உன்ன திட்டுறதுன்னு தெரியல. முதல்ல, ஆன்ட்டி-ஹீரோ இலக்கணம்ன்னு ஒரு புக்க எழுதி உன் கைல குடுக்கணும்.
சிரிச்சி கலகலன்னு இருந்தா அவனை ஆன்ட்டி-ஹீரோன்னு ஒத்துக்க மாட்டாங்க. ஆன்ட்டி-ஹீரோன்னா, அவன் சிரிச்சாலே எல்லாரும் பயப்படனும்” என்று கமலி சொல்ல, “ஏன்? அவ்ளோ கேவலமாவா இருக்கும்!” என்றார் பாட்டி வெள்ளந்தியாக.

“இல்ல. அவன் சிரிச்சா அதுல வில்லத்தனம் இருக்கணும். ‘ஐயோ. சிரிக்கறானே! அடுத்து என்ன பண்ணுவானோ’ன்னு யோசிக்கணும்” என்றாள் கமலி.

“அரக்கனா அவன்” என்று பாட்டி கேட்க, “இல்ல ஆன்ட்டி ஹீரோன்னு எத்தனை முறை சொல்றது” என்று அலுத்துக்கொண்டாள்.

அதற்குள் லெனின் நிரஞ்சன் கீழே இறங்கி வந்திருந்தான்.
நேராக தந்தையிடம் சென்றவன், அவரின் கையிலிருக்கும் கத்தியைப் பார்க்க, “மார்க்கெட் நடுவுல ஒருத்தனைப் போட்டோமே. அவனை நம்ப ஆளுங்க தான் போட்டாங்கன்னு எவிடன்ஸோட ஒரு போலிஸ்காரன் அரெஸ்ட் பண்றேன்னு வீட்டுக்குள்ளேயே வந்துட்டான். அவன் தான்” என்றார் சிங்கமுத்து.

“வயசாகிடுச்சு ப்பா உங்களுக்கு. எல்லாருக்கும் பயம் போய்டுச்சு உங்க மேல. போலீஸ் வீட்டுக்குள்ளயே வந்திருக்கான்” என்று அவரை ஆழமாகப் பார்த்தான் லெனின் நிரஞ்சன்.

“இதுக்குத் தான் சொன்னேன். எல்லாத்தையும் மொத்தமா என்கிட்ட குடுத்துடுங்க” என்று அவன் பார்க்க, “உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் லெனின். உனக்கு இந்தக் கைல ரத்தம் படியற வேலை எல்லாம் வேண்டாம். நம்ப காலேஜ் இருக்கு. அதைப் பார்த்துக்கோ. அதை மட்டும். இந்தக் கொலை, கட்டப்பஞ்சாயத்து எல்லாம் என்னோட முடியட்டும்” என்று சிங்கமுத்து சொல்ல, “முடியாது. எனக்கு எல்லாமும் வேணும். நீங்க இப்போ செஞ்சிட்டு இருக்க எல்லாமும் என் தலைமைக்குக் கீழ வரணும். நீங்க வேணாம்ன்னு சொன்னாலும். ஒரு நாள் வரும்” என்றவனை முறைத்தார் சிங்கமுத்து.
ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதவன், தாயைப் பரிமாறச் சொல்லி, காலை உணவை உண்ணத்தொடங்கினான்.
அதற்கு மேல் இங்கிருக்க விரும்பாமல், சிங்கமுத்து அவரின் அறைக்குள் நுழைந்தார்.

“நிரஞ்சா. அதான் அப்பா சொல்றாருல்ல. இந்த ரத்தம், கொலை எல்லாம் அவரோட போகட்டும்ப்பா. நீ நம்ப காலேஜ பார்த்துக்கோ. அதுல வர்ற காசு நமக்குத் தாராளமா போதும்” என்று பூங்கொடி சொல்ல, லெனின் நிரஞ்சன் “முடியாது” என்றதோடு சரி.
அதன் பிறகான ஐந்து நிமிடங்கள் அமைதியாகவே கடக்க, “நிரஞ்சன் அண்ணா” என்றாள் தளிர்.

“கால் மீ லெனி!” என்றான் அவன் தளிரை எரிக்கும் பார்வையுடன்.

அவன் பிறந்தபோது, ரஷிய புரட்சியாளர் லெனின் ஞாபகமாக, அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்ட ஆசைப்பட்டு அந்தப் பெயரை வைத்தார். “There are Decades Where Nothing Happen. There are Weeks Where Decades Happen” என்றவர் லெனின்.

தசாப்தங்களில் செய்து முடிக்க வேண்டியதை, வாரங்களில் செய்து முடிக்கும் வல்லமையோடு தன் மகன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்தப் பெயரை வைத்தார் சிங்கமுத்து. ஆனால், அவனோ இன்று, “வெள்ளைக் கையுறைகள் அணிந்து புரட்சி செய்ய முடியாது” என்று லெனினின் பொன்மொழி ஒன்றைக் கூறி, சிகப்புக் கையுறை அணிய துடித்துக்கொண்டிருக்கிறான்.

பூங்கொடியோ, எந்தக் குறையுமில்லாமல், அனைத்து மகிழ்ச்சிகளையும் பெற்று நிறைவான வாழ்வைத் தன் மகன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, ‘நிரஞ்சன்’ என்று சொல்ல, இரண்டு பெயர்களையும் சேர்த்து ‘லெனின் நிரஞ்சன்’ என்று வைத்தனர்.

தந்தை லெனின் என்றும், தாய் நிரஞ்சன் என்றும் அழைக்கும் போதும் அமைதியாக இருப்பவன், வேறு யாரும் அப்படி அழைத்தால் கோபத்தில் சீறுவான்.

மற்ற அனைவரும் அவனை, ‘லெனி’ என்று அழைப்பதையே விரும்புவான்.

“ஏன்டா. பாப்பா இப்போ நிரஞ்சன்னு கூப்ட்டா என்ன டா?” என்று பூங்கொடி கேட்க, “இல்ல ம்மா. என்னை லெனின்னு கூப்பிடறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்குத் தெரியுமா! லெனின்னா சிங்கம்ன்னு அர்த்தம். எனக்கு அந்தப் பேர் தான் பொருத்தம்ன்னு எனக்குத் தோணிக்கிட்டே இருக்கு” என்றான் அவன்.

‘லெனி’ என்று பெயரைக் கேட்டதும் பாட்டியின் முகத்தில் அதிர்ச்சி.


“லெனி... இந்தப் பேர் நீ வச்சதா?” என்று கமலியிடம் கேட்க, “ஆமாம்! செமையா இருக்குல்ல” என்று கேட்க “ம்ம்” என்ற பாட்டியின் முகத்தில் தோன்றிய வியப்பு மறைய சில நிமிடங்கள் எடுத்தது.

லெனின் நிரஞ்சன்!

லெனி!

சிங்கம் என்ற பெயரையும், ‘சிங்கம் போல்’ என்ற உவமையையும், ‘தலைமை’ பதவியையும் வெகுவாக விரும்புபவன்.

அதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவன்.


அவனின் இந்தக் குணம், அவனின் எதிர்க்காலத்தை மட்டுமில்லாமல், அவன் குடும்பத்தின் எதிர்க்காலத்தையே எப்படி மாற்றி அமைக்கப்போகிறது என்பதைப் பற்றித் துளியும் கவலையின்றி, தளிர் என்ன சொல்ல தன்னை அழைத்தாள் என்று வினவிக்கொண்டிருந்தான் லெனி.
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் – 2.1:

அம்ராவின் உறுமல் சத்தத்தை வைத்தே, ‘அஸ்லானின் கோபத்திற்கு ஆளாகாதே!’ என்று தாய் உச்சரிப்பதை உணர்ந்துக்கொண்டான் லெனி.

அதற்கு மேல் அங்கு நிற்காமல், தங்களுக்குள் சீறிக்கொண்டும், பிஞ்சு நகங்களால் மாற்றி மாற்றிக் கீறிக்கொண்டும் விளையாடிக்கொண்டிருந்த மைலோ மற்றும் பாப்பியிடம் சென்றவன், பாப்பியின் கழுத்தை வாயால் கவ்வித் தூக்கிக்கொண்டு சுற்ற, “நானும்! நானும்!” என்று லெனியின் பின்னால் சுற்றி வந்தான் மைலோ.

அவன் இவ்வாறாகக் குட்டிகளுடன் விளையாடுவதைக் கண்ட அஸ்லான், எழுந்து அவனை நோக்கி நடக்கலானார். அஸ்லான் வருவதைக்கண்டதுமே, வாயில் கவ்வியிருந்தப் பாப்பியை இறக்கிவிட்டு அஸ்லானையே பார்த்து நின்றான் லெனி.

அஸ்லானின் நோக்கம் புரிந்ததாலோ என்னவோ, அந்தக் குடும்பத்தின் வேறொரு பெண் சிங்கம் வந்து பாப்பியையும், மைலோவையும் அங்கிருந்துத் தூக்கிச் சென்றது.

மற்றவர்களுக்குப் புரிந்தாலும், லெனிக்கு அஸ்லான் என்ன செய்ய வருகிறார் என்பதைப் பற்றி எவ்விதக் கணிப்புமே இல்லை. இதுவரை, அஸ்லான் லெனியிடம் எதுவும் பேசியதில்லை. அவ்வப்போது அவனை முறைத்துப்பார்ப்பதும், வெறித்துப்பார்ப்பதும் உண்டு. அதுவும் தூரத்திலிருந்து.

இன்று தன்னை நோக்கி வரவும், ‘என்னவாக இருக்கும்!’ என்று யோசித்தாலும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால், யோசிப்பதை நிறுத்திவிட்டு, நின்ற இடத்திலேயே நின்று அஸ்லானின் பார்வையை நேராக எதிர்க்கொண்டான்.

அஸ்லான் இதை எதிர்பார்க்கவில்லை.

அஸ்லானைப் பொருத்தமட்டில், வேட்டையாடாத, கர்ஜிக்காத லெனி வலிமை இல்லாதவன். உடலில் வலிமை இல்லாததால் தான் வேட்டையாடுவதில்லை. மனவுறுதி இல்லாததால் தான், அவன் குரல் கர்ஜனையாக வெளியே கேட்பதை அவன் விரும்பவில்லை என்றே நினைத்தார்.

ஏனெனில், சிங்கங்களின் கர்ஜனை வெறும் சத்தம் மட்டுமல்ல. அவை சிங்கத்தின் சக்தி, ஆதிக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடு.

சிங்கங்களின் எதிரிகள் முதலில் எதிர்க்கொள்வது அதட்டலான ஆண் சிங்கத்தின் கர்ஜனையைத் தான்.

எதிரிகளைப் பயந்து ஓடவைப்பதும் அந்தக் கர்ஜனை தான். ‘நீ சண்டைக்கு வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது’ என்று எச்சரிப்பது அந்தக் கர்ஜனை.

‘ஜெயிக்க முடியும்’ என்று மனவுறுதி இல்லாததால் தான் லெனி கர்ஜிக்கவில்லை என்று நினைத்திருந்த அஸ்லானுக்கு, ‘அப்படியில்லை’ இன்று நிரூபித்தான் லெனி.

மனவுறுதி இல்லாத எந்த உயிரினமாக இருப்பினும், முழுதும் வளர்ந்த ஆண் சிங்கம், பிடரி முடி சிணுங்க, அடி மேல் அடிவைத்து தன்னை நோக்கி வருகையில், ஒரு அடியேனும் பின்னெடுத்து வைக்கும்.

ஆனால், அசராமல், நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தானே லெனி. அதுவும் அஸ்லானின் கண்களிலிருந்து அவன் பார்வையை அகற்றாமல்.

‘தன் மகன் மனவுறுதியற்றவன் இல்லை’ என்று ஏதோ பூரிப்புப் படர்ந்தது அஸ்லானுக்குள். அந்தப் பூரிப்பின் காரணமாக, எடுத்து வைத்த அடிகளின் வேகம் கூடியது. அத்தனை வேகமும், அவனின் உடலுறுதியையும் இன்றே சோதித்துப் பார்த்துவிட.

அதே ஆவலில், லெனியை நோக்கி ஓடிய அஸ்லான், அவரின் முன்னங்கால்களின் கூர்மையான நகங்களைக் கொண்டு லெனியின் உடல் பகுதியில் கீற, லெனி அப்பொழுதும் நகரவுமில்லை. வலியில் அலறவுமில்லை. எதுவும் நடவாதது போலவே நின்றிருந்தான்.

அவனின் முன்னங்கால்களில் ஓங்கி அடித்தார். அதற்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை. வேறு விலங்குகளாக இருந்திருந்தால், ஏன் அஸ்லான் அளவிற்கு வளர்ந்த வேறு ஆண் சிங்கமாக இருந்திருந்தால் கூட, அந்த அடியில் கால்களைப் பின்னே நகர்த்தியிருக்கும். ஆனால், இன்னும் முழு வளர்ச்சியடையாத, இளம் சிங்கமாக இருப்பினும், அந்த அடியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவன் உடலிலிருந்தது.

‘உடல் பலம்’. அது ‘ஆஸ்கர்’ குடும்பத்துச் சிங்கங்களுக்கு இயல்பாகவே அதிகம். அதனாலேயே தான், இதுவரை வேறு எந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கங்களும் ‘ஆஸ்கர்’ சிங்கங்களை வீழ்த்தி, அந்நிலத்திற்குத் தலைவன் ஆனதில்லை. ஒரு ‘ஆஸ்கர்’ சிங்கத்தை வீழ்த்தி, புதிதாகத் தலைமைக்கு வருவது, இன்னொரு ஆஸ்கர் சிங்கமாகத்தான் இருக்கும்.

அந்த உடல் வலிமை, லெனியிடமும் குறையாமல் இருப்பது அஸ்லானுக்கு உவகை என்றால், இன்னமும் கூட அவன் பாதங்கள் பின்னே நகராமல் இருப்பது ஆச்சரியம்.

சற்று முன் அவனை அருவருப்பு பார்வைப் பார்த்தவர், இந்த நொடி ஆச்சரியப்பார்வை வீசினார்.

இப்பொழுது, அவருக்கிருந்த ஒரே குறிக்கோள், லெனியைத் தன்னை அடிக்கவைத்துவிட வேண்டும்.

ஒரே ஒரு பதிலடி அவன் கொடுத்துவிட வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் அஸ்லான்.

முன்னங்கால்கள் கொண்டும், நகங்கள் கொண்டும் எத்தனைத் தாக்கியும் பயனில்லாமல், அடுத்தக் கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார் அஸ்லான்.

நான்கு அடிகள் பின்னே எடுத்து வைத்தவர், வேகமாக ஓடி வந்து, பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை உயர்த்தி, லெனியின் தலையைப் பிடித்து அவனைத் தரையில் சாய்த்தார்.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள லெனி, அஸ்லானின் தலையைப் பிடிக்கவுமில்லை. தன் பற்கள் கொண்டு அவரைக் கடிக்கவுமில்லை. சொல்லப்போனால், காரணமே இல்லாமல் தன்னைத் தாக்கும் அஸ்லானைப் பதிலுக்குத் தாக்க, அவன் எவ்வித முயற்சியும் எடுக்கவே இல்லை.

அஸ்லானின் தாக்குதலுக்கு அவன் வீழ்ந்துவிடவும் இல்லை. பயந்துவிடவும் இல்லை. தரையில் சாய்ந்த அடுத்த நொடி, தன் மீது அழுத்தம் கொடுத்து நின்ற அஸ்லானையும் மீறி எழுந்து நின்றான் லெனி.

அஸ்லானின் தாக்குதல் இன்னும் சில நிமிடங்கள் நீடித்திருந்தது. வாழ்வில் முதல் முறையாக, தான் யாரோடு சண்டையிடுகிறோமோ அவன் தன்னை எதிர்த்துச் சண்டையிடவில்லையே என்று வருத்தப்பட்டார் அஸ்லான்.

ஆம், அஸ்லான் தோற்றுப்போனார். லெனி அவரை எதிர்த்துச் சண்டையிடவே இல்லை என்பதால் தோற்றுப்போனார். லெனியிடமிருந்து ஒரே ஒரு கீறல், ஒரே ஒரு சீறல், ஒரே ஒரு அடி, குறைந்தது எச்சரிப்பாய் ஒரே ஒரு கர்ஜனைக் கூட வரவைக்க முடியாமல் தோற்றுப்போனார் அஸ்லான்.

அந்தத் தோல்வியோடு, இலவச இணைப்பாக இன்னொரு தோல்வியும் ஒட்டிக்கொண்டது. எதில் தோல்வி? லெனி மற்ற சிங்கங்கள் போல் அல்லாது, சாதுவாக சைவ உணவு உண்பவனாக இருப்பதற்குக் காரணம் கண்டுபிடிக்க முயற்சித்ததில்.

அதற்குக் குறிப்பிட்டக் காரணங்கள் எதுவுமில்லை என்று அஸ்லானுக்கு யார் புரியவைப்பது? லெனி இயற்கையின் அதிசயம். இயற்கையின் விந்தை என்று யார் சொல்வது.

தோல்வியில் தலைக்கவிழ்ந்து, அஸ்லான் தான் முன்பு படுத்திருந்த மரத்தடிக்குத் திரும்ப, கீழே விழுந்ததில் தன் மீது ஒட்டிய மண்ணையெல்லாம் உடலைக் குலுக்கி உதறினான் லெனி.

‘ஏன் தாக்குதல்? எதற்குத் தாக்குதல்?’ என்று புரியாமல் விழித்தான் லெனி.

அவனைப் பார்க்கப் பார்க்கக் கோவம் கோவமாக வந்தது அஸ்லானுக்கு.

சிங்கங்கள் தங்கள் மகன்களுக்குத் தலைமையை விட்டுக்கொடுக்காமல், குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களைக் குடும்பத்தை விட்டு வெளியேற்றும் விலங்குகள் தான். ஆனால், வலிமையானச் சந்ததிகளை உருவாக்கப் பேராவல் கொண்டவை. தன் ரத்தத்தில் உதித்த மகன்கள் தான் ஆள வேண்டும் என்று எண்ணுபவை.

சில நிமிடங்கள் அஸ்லானைப் பார்த்திருந்த லெனி, மீண்டும் மைலோ, பாப்பி இருவரும் இருந்த இடத்திற்குச் சென்று, அவர்களுடன் விளையாடத்தொடங்கினான்.

அதைப் பார்த்திருந்த அஸ்லான் மீண்டும் வேகமாக லெனியிடம் வந்தார். அவனைக் கூர்மையாகப் பார்த்து விட்டு, மைலோவையும், பாப்பியையும் ஒரே கவ்வில் அவரோடு தூக்கிச் சென்றார்.

லெனி மைலோவுடனும், பாப்பியுடனும் விளையாடுவது அவருக்குப் பிடிக்கவில்லை என்று லெனிக்குப் புரிந்தது. ஆனால், அதற்கான காரணம் புரியவில்லை.

அவன் அம்ராவைப் பார்க்க, காரணம் தெரிந்த அம்ரா அமைதியாக நின்றாள்.

மைலோவும், பாப்பியும் அவனோடு பழகினால், அவனைப் போலவே தாவரப் பட்சினியாக மாறிவிடுவரோ என்ற அஸ்லானின் பயம் தான் இந்தச் செயலுக்குக் காரணம் என்று நினைத்தார் அம்ரா.

ஆனால், அவனுடைய நடவடிக்கைகள் இயற்கைக்குப் புறம்பானவை என்பது இன்னமும் புரியாமலிருக்கும் லெனியிடம் இதை என்னவென்று சொல்வார் அம்ரா.

எப்பொழுதும் அஸ்லானின் எண்ணங்களைச் சரியாகக் கணிக்கும் அம்ராவின் கணிப்பு இந்த முறைத் தவறாக இருந்தது.

அஸ்லான், மைலோ பாப்பி இருவரையும் தூக்கிச் சென்றது, அவர்கள் லெனியுடன் பழகக்கூடாது என்பதற்காக அல்ல. மைலோ ஒருபோதும் லெனியைப் போல் மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தார் அஸ்லான். ஏனெனில், இந்த வயதிலேயே சீறலும் சீற்றமுமாக தான் இருந்தான் மைலோ.

அவர் தூக்கிவந்ததன் நோக்கம், இரண்டு குட்டிகள் மீதும் அதீதப் பாசம் கொண்ட லெனி, அவர்களைத் தன்னிடமிருந்துப் பிரித்துச்செல்ல வேண்டாம் என்று தன்னிடம் சண்டைப் பிடிப்பான் என்றெண்ணித் தான்.

ஆனால், அஸ்லானை மீண்டும் ஒரு முறைத் தோல்வியைக் கவ்வ வைத்தான் லெனி, அமைதியாக அவ்விடம்விட்டு அகன்று.

அங்கிருந்து நகர்ந்தவன் எண்ணமெல்லாம் மைலோ, பாப்பியைச் சுற்றியே இருந்தது.

அவர்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நகர்ந்தான்.

** ** ** ** ** **
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
2.2:

“எதுக்குக் கூப்ட்ட தளிர்” என்று லெனின் நிரஞ்சன் கேட்க, “அண்ணா. அது...” என்றுத் தயங்கினாள் தளிர்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “எனக்கு நேரம் அதிகம் இல்ல” என்றுச் சொல்ல, “அது வந்து. இன்னைக்கு எனக்கு முதல் நாள் காலேஜ். நீயும் டெய்லி காலைல காலேஜுக்குத் தான போற. நானும் உன் கூடவே வரவா!” என்றாள் தளிர்.

“எதுக்கு?” என்றான் அவன், அவளை ஆழமாகப் பார்த்து.

“எதுக்கா? டேய். இப்போ காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் உன் கைல தான் இருக்கு. அதனால, நீ தினமும் காலேஜ் போற தானே. அப்படியே அவளைக் கூட்டிட்டுப் போனா என்ன?” என்றார் பூங்கொடி.

“எனக்குக் கூட்டிட்டுப் போக இஷ்டமில்ல” என்றான் லெனின். கேட்டது தாய் என்பதால் இந்தப் பதில். வேறு யாரேனுமாக இருந்திருந்தால், பதிலளிக்காமல் எழுந்துச் சென்றிருப்பான்.

“என்ன டா இஷ்டம்? அவ உன் தங்கச்சி தான! நீ தான்...” என்று பூங்கொடி தொடங்கும்போதே, “அம்மா ஸ்டாப்” என்றான் லெனின் நிரஞ்சன்.

“ஒரே வயித்துல பிறந்த காரணத்துக்காக எல்லாம் அவங்க இஷ்டம் போல என்னால செய்ய முடியாதும்மா” என்றான்.

“என்னைப் பொறுத்தவரை தளிர், சந்தோஷ் யாரா இருந்தாலும். அவங்கள எனக்குப் போட்டியா தான் பார்ப்பேன்.

அப்பாவோட தொழில்ல எல்லாம் எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ, அதே அளவுக்கு அவங்களுக்கும் இருக்கே. அதைப் பங்கிட்டுக் குடுக்கறதுல எனக்கு இஷ்டமில்ல.

இந்தச் சொத்து, பணம் இதெல்லாம் பங்குப் போட்டுக்கறதுல எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல.

ஆனா, இந்தத் தொழில், தலைமை எல்லாம் என்கிட்டயே தான் இருக்கணும். ஒரு காட்டுக்கு ஒரு ராஜா. அது நானா தான் இருக்கணும்” என்று சொன்னவன் கண்களில் அத்தனை வெறி.

“நிரஞ்சா. சம்பந்தமே இல்லாம பேசற நீ. அவ சின்னப் பொண்ணு டா. அதுவும் உங்க அப்பா என்ன தொழில் பண்றாரு? கொலை தான! ரத்த வெறிப் புடிச்சத் தொழில். அதுல என்ன இவ உனக்குப் போட்டியா வந்தா நிக்கப் போறா?

அதுலயும் அவளுக்கு நீன்னா கொள்ளப் பிரியம் டா” என்றார் பூங்கொடி.

“ஆமாம். அவளுக்கு என் மேல ரொம்ப ஆசை. நீங்க சொல்ற மாதிரி அவ சின்னப் பொண்ணு. இந்தக் கொலைப் பண்ற தொழிலுக்கு எல்லாம் போட்டிக்கு வர்ற அளவுக்கு அவளுக்கு உடம்புல சக்தி இல்ல. வரவும் மாட்டா.

ஆனா, அவளுக்கு மனசுல உறுதி அதிகம். ரொம்ப அதிகம்.

அந்த உறுதியும், பாசமும் சேர்ந்து என்ன செய்யும் தெரியுமா?” என்றவன் தந்தையைப் பார்த்தான்.

“இதோ. இந்த மனுஷன். ரெண்டு வருஷம் முன்ன வர, வெட்டு குத்து எல்லாம் தான் இவருக்கு மூச்சா இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு இந்தத் தொழிலை விட என்னவெல்லாம் சாத்தியக்கூறு இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்காரு. அதுக்குக் காரணம் யாரு.

இதோ இவ தான்” என்று தளிரைக் கை காட்டினான்.

“டேய். இதுக்கும், நீ அவளைக் காலேஜ் கூட்டிட்டுப் போறதுக்கும் என்ன டா சம்பந்தம்?” என்றார் பூங்கொடி.

“என்ன சம்பந்தமா?

ஏன் மா. புகைப் பிடிச்சா நுரையீரல் வீணாப் போகும். தண்ணி அடிச்சா லிவர் வெந்துப் போகும்ன்னு உனக்குத் தெரியும் தான?

அப்பா தண்ணி அடிக்கும்போதும், சிகரெட் பிடிக்கும்போதும், நீயும் இதெல்லாம் நல்லதில்லைன்னு சொல்லியிருப்ப. ஆனா, எத்தனை தடவ? ஒரு மூணு தடவ? நாலு தடவ? அதுக்கப்புறம் அப்பா கேக்கலைன்னதும் சொல்றதை நிறுத்திட்ட.

ஆனா, இவளுக்கு அதெல்லாம் கெட்டதுன்னு தெரிஞ்ச வயசுல என்ன செஞ்சா தெரியுமா? ‘இது கெட்டது. இது தப்பு’ன்னு அப்பாகிட்ட சொன்னா. தினமும் சொன்னா. அவர் நிறுத்துற வரைக்கும். ஏன்னா, அவ உறுதியா நம்புனா, அவரை அந்தப் பழக்கத்திலிருந்து வெளியவர வைக்கத் தன்னால முடியும்ன்னு உறுதியா நம்பனா.

அந்த மனவுறுதி அவளை என்ன வேணும்னா செய்ய வைக்கும்.

அதே மனவுறுதியால தான். அப்பா கைல இருக்கக் கத்தியோட ஆயுசு குறைஞ்சிக்கிட்டே இருக்கு. இப்பவோ அப்பவோன்னு கீழ விழக் காத்துக்கிட்டு இருக்கு.

இவளை நான் தினமும் காலேஜுக்குப் கூட்டிட்டுப் போனா, அவ என் கூட இருக்க அந்தக் கொஞ்ச நேரம் போதும். அவ என் மனச கலைக்க.

என்னை வீக் ஆக்குற யாரையும் நான் கிட்ட சேக்குறதில்ல” என்றான் லெனின் நிரஞ்சன்.

“அவ சொல்றது உன் நல்லதுக்குத் தான!” என்று பூங்கொடி சொல்ல, “நல்லது கெட்டது. அதெல்லாம் நான் யோசிக்கறதில்ல. நான் ராஜாவா இருக்கணும். நான் சிங்க ராஜாவா இருக்கணும்” என்றவனை ஒரு ஓரமாக நின்று கமலியும், பாட்டியும் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.

“சுயநலவாதி!”, பாட்டியின் இதழ்கள் முனுமுனுத்தது.

அடுத்த நொடி அதே வார்த்தையைச் சொன்னார் பூங்கொடி.

“சுயநலம் பிடிச்சவன்டா நீ. சின்னப் பொண்ணோட ஆசையை நிறைவேத்தாம ஏதேதோ காரணம் சொல்ற. ஆனா, அந்தக் காரணத்தில் எல்லாம் உன்னைப் பற்றிய யோசனை மட்டும் தான் இருக்கு” என்றார் பூங்கொடி.

“ஆமாம்!” என்றான் லெனின் நிரஞ்சன் சாதாரணமாக.

இதே முறையும் அதே வார்த்தையைச் சொன்னார் பாட்டி. ஆனால், கமலிக்குக் கேட்கும் வகையில்.

“யார சொல்ற பாட்டி?” என்றாள் அவள்.

“லெனின் நிரஞ்சனை. உன் ஹீரோவை” என்றார் பாட்டி.

“ஓஹ்! சுயநலவாதியா இருக்கறது தப்பில்லையே!” என்றாள் கமலி.

“சுயநலம் தப்பில்ல. சுயநலம், மனிதாபிமானம் இரண்டுக்கும் நடக்கும் போட்டியில் மனிதாபிமானம் ஜெயிக்கும் வரை சுயநலம் தப்பில்ல” என்றார் பாட்டி.

“அப்போ! என் ஹீரோ மனிதாபிமானம் இல்லாதவன்னு சொல்ல வரியா?” என்ற கமலியின் கேள்விக்கு, “எனக்குத் தெரியல. அதற்கான பதில் அவன் கிட்ட தான் இருக்கு. அவன் தான் சொல்லணும். இல்ல உணர்த்தணும்” என்றார் பாட்டி.

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு, லெனின் நிரஞ்சனின் பார்வை இவர்கள் மீது விழுந்தது.

அதைக் கவனித்த பூங்கொடி, “உன்னைப் பார்க்கணும்ன்னு தான் டா காத்திருக்காங்க” என்றார்.

அவன் அவர்களைப் பார்க்க, “நாங்க வந்து...” என்றுத் தொடங்கினாள் கமலி.

“அவன் கேள்வியே கேக்கல. நீ எதுக்குப் பதில் சொல்ற?” என்று பாட்டி இடிக்க, “ஆன்ட்டி-ஹீரோ தான அவன். அவன் வாயைத் தொறந்து எல்லாம் அதிகம் பேசமாட்டான். அவன் கண்ணால தான் கேள்விக் கேட்பான்” என்று கமலி பதில் சொன்னாள்.

“இவ்ளோ நேரம் ரெண்டு பக்கத்துக்கு வசனம் பேசுனான். இப்போ வந்து அதிகம் பேசமாட்டான்னு சொல்ற?” என்று பாட்டி கேட்க, “இப்படியெல்லாம் சொன்னா தான் இவன ஆன்ட்டி-ஹீரோன்னு ஒத்துப்பாங்க. சும்மா இரு பாட்டி” என்றாள் கமலி.

அதற்குள் லெனின் இவர்களுக்கு அருகில் வந்திருந்தான்.

“யார் நீங்க?” என்று அவன் கேட்க, அவன் காதுக்கருகில் சென்று, “நான் தான் இந்தக் கதையோட ரைட்டர். நீங்க எல்லாம் என் கதைக்குள்ள இருக்கீங்க” என்று விளக்கினாள் கமலி.

“ஓஹ்! நீ தான் இந்தக் கதையோட எழுத்தாளர்ன்னா! அப்போ, நான் நீ சொல்ற மாதிரி தான்......” என்று அவன் புருவம் உயர்த்த, “நோ நோ நோ நோ... அப்படியெல்லாம் இல்ல. நான் சொல்ற மாதிரி தான் நீ கேட்கணும்ன்னு அவசியமில்ல. நான் அப்படிப்பட்ட ரைட்டர் இல்ல லெனி. நீ உன் இஷ்டம் போல பண்ணு. நான் உன் போக்குலே கதை எழுதுவேன்” என்றாள் கமலி.

“நைஸ். ஆமா, நீ என்னன்னு கூப்ட்ட?” என்று லெனின் கேட்க, “லெனி!” என்றாள் கமலி கண்ணடித்து.

“ஐ லைக் யு” என்றவன் பாட்டியைப் பார்த்தான். “இது யாரு?” என்று அவன் கேட்க, “அதுவா! என்னோட மனசாட்சி” என்றாள் கமலி.

“உன் மனசாட்சி ஏன் இவ்ளோ வயசாகி இருக்கு?” என்று லெனின் கேட்க, “அந்தச் சோகத்தை ஏன் லெனி கேட்கற. வெள்ளிக்கிழமை காலைல எங்க அம்மா பூஜைப் பண்ணாங்களா, சரி நம்பப் பங்குக்கு ஏதாவது வேண்டுவோம்ன்னு ஒரு வேண்டுதல் வச்சேன்” என்று சொல்ல, “என்ன வேண்டுதல்?” என்று கேட்டான் லெனின்.

“எனக்கு வயசு கம்மியா இருந்தாலும் நானும் மெச்சூர்டா கதை எழுதணும். அதுக்கு எனக்குத் துணைப் புரி ஆண்டவான்னு வேண்டிக்கிட்டேன்.

அந்த வேண்டுதலைக் கேட்ட கடவுள் இப்படி ஒரு வயசான மனசாட்சியை எனக்குக் குடுத்துட்டார் போல” என்றாள் கமலி.

“ஓஹ்! ஸோ ஸேட்!” என்ற லெனின், “உனக்கு ஒரு ஃப்ரீ அட்வைஸ். இந்த மனசாட்சி ந்யுஸன்ஸ் எல்லாம் நம்மளோடவே ஒட்டிக்கிட்டு இருந்தா நம்ப நெனச்சதைச் செய்யவே முடியாது.

நான் என்னோட மனசாட்சி எல்லாம் எப்போவோ கொன்னுட்டேன். இப்போ என்னோட முடிவு எல்லாம் இங்கிருந்து மட்டும் தான் எடுப்பேன்” என்றான் தலையில் கை வைத்து.

“இதோ இங்க. இங்க, நிமிஷத்துக்கு எழுபத்திரெண்டு முறைத் துடிச்சி, என்னை உயிரோட வச்சிக்கற வேலை மட்டும் தான் நடக்குது. வேற எந்தப் பாரத்தையும் நான் இங்கக் குடுக்கறதில்ல” என்று சொல்லும் போது அவன் கை நெஞ்சின் மீதிருந்தது.

“எது? என்னைக் கொல்லச் சொல்றானா? டேய்! பீஸ்ட்(Beast). உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னைக் கொல்லச் சொல்லுவ!” என்று படபடப்பாகக் கேட்டார் பாட்டி.

“இங்க பாரு. இந்த மனசாட்சி எல்லாம் இதோ இப்படித் தான் கிய்யா முய்யான்னு சத்தம் போட்டுக்கிட்டே இருக்கும்.

ஓஹ்! என்னை நீ என்னன்னு சொன்ன? பீஸ்ட். அந்தப் பேர் கூட எனக்குப் பிடிச்சிருக்கு பியுட்டி” என்றான் லெனின்.

“ரொம்ப திமிர் உனக்கு. நீ வேணும்னா பாரு. இந்தக் கதையோட முடிவுல நீ செத்து தான் போவ” என்று பாட்டி சொல்ல, “ச்ச! ச்ச! அப்படியெல்லாம் நடக்கவிட மாட்டேன் லெனி. எனக்குக் கதைல வர்ற ஸைட் கேரக்டர கூடக் கொன்னு பழக்கமில்ல. நீ ஹீரோ உன்னைப் போய் கொல்வேனா” என்று வழிந்தாள் கமலி.

“ஐ லைக் யூ மோர்!” என்றான் லெனின் நிரஞ்சன் கமலியிடம்.

“என்ன சொன்ன? செத்துப்போவேனா? யார் தான் செத்துப்போக மாட்டா?

ஆனா, நான் சாகுறவரை எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்துட்டு சாவேன். மத்தவங்க என்னை மனுஷனா பாக்கறாங்களா? இல்ல பீஸ்ட்டா பாக்கறாங்களான்னு கவலை இல்லாம சாவேன்.

எனக்கு நான் ராஜாவா சாவேன்” என்று சொன்னவனை, ‘மரணம்’ என்ற வார்த்தை ஒருபோதும் அச்சுறுத்தப் போவதில்லை என்று உணர்ந்துக்கொண்டார் பாட்டி.

“இப்போ நான் போகணும். எனக்கு நேரமாச்சு” என்று லெனின் சொல்ல, “நானும் உன் கூடத் தான் வரணும். ஹீரோ இருக்க இடத்துல தான் எனக்கும் வேலை” என்று கமலியும் அவனுடன் நடக்க, பின்னால் சென்றார் பாட்டியும்.

வெளியே போகும் அண்ணனையே பார்த்துக்கொண்டு நின்றாள் தளிர்.

பெயருக்கு ஏற்றார் போல், அவள் மென்மையானவள். ஆனால், அழுது வடிபவள் அல்ல.

லெனின் சொன்னது போலவே அவள் உறுதியானவள். தேகம் உறுதியாய் இல்லாவிடில் என்ன? மனதின் திடம் போதாதா? நினைத்ததைச் சாதிக்க.

மனதில் உறுதியாகப் பதியவைத்துக்கொண்டாள் தளிர். ‘கால் மீ லெனி’ என்று உறுமிய இந்த அண்ணனை, அவள் ‘லெனி’ என்று ஒருபோதும் அழைக்கப்போவதில்லை என்று.

அழிக்க முடியாத அளவுக்குப் பதியவைத்துக்கொண்டாள். இன்று, ‘இவளை என்னோடு என் காரில் அழைத்துச் செல்லமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, வெளியேறும் இதே லெனின் நிரஞ்சனின் மகிழுந்தில் ஒரே ஒரு முறையேணும் பயணித்துவிடுவேன் என்று.

அந்த இல்லத்தை விட்டு வெளியே நடந்தவன் எண்ணமெல்லாம், ‘நான்... நான்.. நான்...’ என்ற வார்த்தையைச் சுற்றியே.

அவனையே பார்த்து நிற்கும் தளிரை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.

:: :: :: :: :: :: :: ::
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் – 3 :

அஸ்லான் லெனியைச் சோதனைக்கு உட்படுத்தி, அவன் உடல் பலத்தையும், மனப் பலத்தையும் உணர்ந்து, மைலோ பாப்பி இருவரையும் அவனிடமிருந்துப் பிரித்து ஒரு இரவு, ஒரு பகல் கடந்திருந்தது.

அதுவரை அஸ்லான் இரண்டு குட்டிகளையும் லெனியின் அருகில் விடவேயில்லை. லெனியும் அவரிடம் சண்டைக்கு நிற்கவில்லை.

இன்று இரவோடு, ஆஸ்கர் குடும்பத்துச் சிங்கங்கள் உணவு உட்கொண்டு முழுதாக இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. ஆஸ்கர் சிங்கங்களுக்கு மீண்டும் பசிக்கத் தொடங்கியிருந்தது.

இன்று இரவு சிங்கங்கள் வேட்டையாடுவது உறுதி. காட்டில் உள்ள ஏதோ ஒரு விலங்கு இந்தச் சிங்கங்களின் பாய்ச்சலில் வீழ்ந்து, பற்களில் சிக்கி, உயிர் துறக்கப்போவது உறுதி. அதைப்பார்க்கும் கண்களெல்லாம் சிங்கங்களுக்கும் பசிக்கும் என்ற உண்மையை மறந்து, அவர்களின் உணவுத் தப்பித்துவிட வேண்டும் என்றுப் பதறப்போவது உறுதி.

வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது. சிங்கங்கள் வேட்டைக்குப் புறப்படத் தொடங்கின.

வளர்ந்த பெண் சிங்கங்களும், இளம் பெண் சிங்கங்களும் புறப்பட்டன. ஆண்பாலோ, பெண்பாலோ. அனைத்துச் சிங்கங்களும் பிறந்து பதினெட்டு மாதங்களிலேயே தன் குடும்பத்தின் மற்றச் சிங்கங்கள் வேட்டையாடுவதைக் கவனிக்கத் தொடங்கிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக யாரும் அழைக்காமலேயே வேட்டையாடுதலில் ஈடுபடத் தொடங்கிவிடும்.

ஆனால், நம் ‘லெனி’ தான் வித்தியாசமானவனாயிற்றே. மற்றச் சிங்கங்கள் போல் இருந்திருந்தால் அவன் லெனி அல்லவே. மூன்று வயது ஆகியும் இன்னும் தன் தாய்மார்கள் வேட்டையாடுவதை வேடிக்கைப் பார்க்கக் கூட ஆர்வமில்லாமல் அமர்ந்திருப்பவன் தான் லெனி.

இன்றும் அதே போல், அம்ராவும் மற்றப் பெண் சிங்கங்களும், அஸ்லானும் அவரின் இரண்டு சகோதரர்களும் மைலோவையும் பாப்பியையும் தங்கள் இருப்பிடத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல, லெனி அங்கேயே இருந்தான்.

மற்ற அனைவரும் என்றால்? ஆண் சிங்கங்களுமா? அஸ்லானும் அவரின் சகோதரர்கள் கூடவா?

பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் உழைக்காமல் பெண் சிங்கங்களால் வேட்டையாடப்படும் உணவை நோகாமல் உண்டு உறங்கும் என்று தானே கேள்விப்பட்டிருப்போம்.

இதென்ன விந்தை? ஆண் சிங்கங்களும் வேட்டையாடச் செல்லுமா?

ஆம். ஆண் சிங்கங்கள் வேட்டையாடும்.

வேட்டையாடவேண்டிய விலங்கு அத்தனைப் பலமாக இருந்தால்!

அந்தப் பலத்தை வீழ்த்தப் பெண் சிங்கங்களின் பலம் போதவில்லை என்றால்!

இரையை வீழ்த்த ஆண் சிங்கத்தின் பலம் கட்டாயம் தேவை என்றால்!

ஆண் சிங்கங்கள் வேட்டையில் இறங்கும்.

‘ஆஸ்கர்’ குடும்பம் இப்போது பதினான்கு உறுப்பினர்களைக் கொண்டது. அந்தப் பதினான்கில் மைலோவும் பாப்பியும் மட்டும் சமீபத்தில் பிறந்த குட்டிகள். மாமிசம் உண்ணும் அளவிற்கு அவர்கள் இன்னும் வளரவில்லை என்பதால், மாமிசம் உண்ணும் வயதிலிருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கைப் பன்னிரெண்டு.

அந்த எண்ணிக்கையிலிருந்து லெனியை விளக்கிவிட்டால், பதினொன்று.

மொத்தம் பதினோறு சிங்கங்களின் வயிறுகள் நிறையும் அளவிற்கு இறைச்சி வேண்டுமே. அதற்கு ஒரு மானையோ, மயிலையோ வேட்டையாடினால் போதாதே. அரை வயிறுக் கூட நிரம்பாதே.

அனைவரின் வயிறுகளும் நிறைய வேண்டுமெனில், அதோ ஆங்காங்கு நீர்த்தேங்கியிருக்கும் பகுதிகளில் மேய்ந்துக்கொண்டிருக்கும் காட்டெருமைகளில் ஒன்றை வேட்டையாட வேண்டும்.

பெண் சிங்கங்கள் நுட்பமாக வேட்டையாடக்கூடியவை. வேகமாக ஓடக்கூடியவை. ஆனால், எடை அதிகமானக் காட்டெருமைகளை வீழ்த்தப் பெண் சிங்கங்களின் உடல் எடைப் போதுமானதல்ல. காட்டெருமைகளைத் துரத்திப் பிடித்துத் தாக்கி ஓரிடத்தில் நிற்க வைப்பது பெண் சிங்கங்கள் தான் என்றாலும், அதைத் தரையில் சாய்க்க ஆண் சிங்கத்தின் பலமும், உடல் எடையும் நிச்சயம் தேவை. அதே நேரம், உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் ஆண் சிங்கங்கள் வேகமாக ஓடமுடிவதில்லை.

வேட்டைத் தொழிலில், இருபால் சிங்கங்களுக்கும் தத்தம் பணிகள் உண்டு. ஆண் சிங்கங்கள், உட்கார்ந்து உண்பவையல்ல.

மைலோ, பாப்பி மட்டும் ஆஸ்கர் குடும்பத்தின் இருப்பிடத்திலேயே இருக்க, லெனியைத் தவிர, மற்றச் சிங்கங்கள் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாயிற்று.

மற்றச் சிங்கங்கள் கண்ணைவிட்டு மறைந்ததும், வேகமாக எழுந்த லெனி, வேறு திசையில் விரைவாக ஓடலானான்.

வேட்டைக்கும் தனக்கும் பல மைல் தூரம் என்று ஒதுங்கியிருக்கும் லெனி, இந்த இரவு நேரத்தில், மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் ஓடுவதெங்கே!

வேட்டையாடவா?

வேட்டையாடப்படுவதில் இருந்து காப்பாற்ற.

யாரை?

தன் மான்குட்டி நண்பனான மெல்வினை.

தன் குடும்பத்தினர் வேட்டைக்குக் கிளம்பும் ஒவ்வொரு முறையும், மெல்வினை எச்சரிப்பதும், அவன் ஆபத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வருவதும் லெனியின் வழக்கம்.

பின்னே! லெனியின் ஒற்றைத் தோழனல்லவா மெல்வின்.

தாவரங்கள் உண்ணும் லெனியைப் பார்த்தால் ஆஸ்கர் குடும்பத்துச் சிங்கங்களுக்கு வெறுப்பு. அதனால், லெனியின் நிலை, ‘தனிமை’.

தாவரங்கள் உண்பதால் மட்டும், ஒரு சிங்கத்தைத் தன் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமா மற்ற விலங்குகள்? இவனால் நமக்கு ஆபத்து இல்லை என்று நம்பிவிடுமா?

உருவத்தில் மாமிசவுண்ணியாகவும், உணவுப்பழக்கத்தில் தாவரப் பட்சினியாகவும் இருக்கும் லெனியைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு நண்பனாக ஏற்றுக்கொண்ட ஒரே உறவு மெல்வின் மட்டும் தான்.

அதனாலேயே மைலோவையும், பாப்பியையும் தனியே விட்டுவிட்டு நண்பனின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள ஓடினான் லெனி.

சிங்கக்குட்டிகள் இதுபோல் தனித்துவிடப்படுவது அபூர்வம் இல்லை. வழமை தான். மனிதர்கள் போல் பிறந்த குழந்தையைக் கைக்குள்ளும், கண்ணுக்குள்ளும் வைத்துப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு, சிங்கங்கள் தம் குட்டிகளைப் பார்த்துக்கொள்வதில்லை. கங்காருக்கள் போல் மடியிலேயே தூக்கிக்கொண்டு அலைவதில்லை.

சிங்கக்குட்டிகளுக்குப் பெற்றோரிடமிருந்துக் கிடைக்கும் அக்கறையும் கவனமும் (Parental Care) ரொம்பவும் குறைவு.

இதுபோல் பல இரவுகள் குட்டிச் சிங்கங்களைத் தனியே விட்டுவிட்டுத் தாய்மார்கள் வேட்டைக்குச் செல்வதுண்டு.

அவ்வேளைகளில் சிங்கங்களின் எதிரிகளிடம் மாட்டி, உயிர்துறக்கும் குட்டிகள் பல.

அதனாலேயே, ஒரு வயதைத் தாண்டி உயிர்வாழும் சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

காடு கும்மிருட்டைத் தத்தெடுத்திருக்க, காடெங்கும் பூச்சிகளின் கீச்கீச் ஒலி நிறைந்திருந்தது. அந்த இருட்டிலும், மரத்தின் மேல் நின்றிருந்தவனின் கண்களுக்கு நடப்பவை அனைத்தும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

லெனி அங்கிருந்துச் செல்வதைப் பார்த்த அவ்விருவிழிகளின் பார்வைத் தனியே விடப்பட்ட மைலோ, பாப்பி மீது நிலைத்து நின்றது.

அப்பார்வையில் சிக்கிய மைலோவும், பாப்பியும் தப்புவரா?

அந்தக் கண்களுக்குரியவன் செய்யப்போகும் காரியம் ‘ஆஸ்கர்’ குடும்பத்தின் எதிர்காலத்தை எப்படி புரட்டிப்போடுமோ?

** ** ** ** ** **

வீட்டைவிட்டு வெளியேறிக் கப்பல் போன்ற மகிழுந்து ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் லெனின் நிரஞ்சன் ஏற, கமலியோடு பாட்டியும் பின் இருக்கையில் ஏறிக்கொண்டனர்.

வாயைப் பிளந்து மகிழுந்தைப் பார்த்தப் பாட்டி, “இது இம்போர்ட்டெட் கார் இல்ல!” என்று கேட்க “ஆமாம்” என்றாள் கமலி.

“இப்போல்லாம் எல்லா ஹீரோவும் இந்த மாதிரி விலையுயர்ந்த ஃபாரின் கார் தான் வச்சிருக்காங்க. என் ஹீரோ மட்டும் ஹோண்டா சிட்டி, ஸ்விஃப்ட்ன்னு வச்சிருந்தா நல்லாவா இருக்கும். அதான் கூகிள்ல தேடி ஒரு காஸ்ட்லி கார் ஒன்னைக் கண்டுபிடிச்சி, என் ஹீரோ அதை வச்சிருக்க மாதிரி கற்பனைப் பண்ணிட்டேன்” என்றாள் கமலி.

“அடிப்பாவி. இவ்ளோ விலைக் குடுத்து காரை வாங்கி வச்சிருக்கானே. இவனோட மாச வருமானம் எவ்ளோ? சொத்து மதிப்பு எவ்ளோ?” என்று பாட்டி கேட்க, “ஹான்... அது? மாச வருமானத்துக்கு ஒன்னுக்குப் பக்கத்துல ஒரு ஆறு, ஏழு சைஃபர் போட்டுக்கோ. சொத்து மதிப்புக்கு ஒரு பத்துப் பன்னெண்டு சைஃபர் போட்டுக்கோ” என்றாள் கமலி.

“அவ்ளோவா???” என்று பாட்டி அதிர, “என்ன நீ? இதுக்கே வாயைப் பொளக்கற? இதைவிட அதிகமா சொத்து வச்சிருக்க ஹீரோ எல்லாம் இருக்காங்க தெரியுமா?” என்று பதிலளித்தாள் கமலி.

“நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு சைஃபர் சேர்க்கறியே. இதுக்கெல்லாம் என்ன Source of Income? எப்படிச் சம்பாரிக்கறாங்க?” என்று பாட்டி கேட்க, “நீ மனசாட்சி தான. அப்புறம் ஏன் இன்கம் டேக்ஸ் ஆஃபிசர் மாதிரி பேசற?” என்று முறைத்தாள் கமலி.

“அது ஏன்? இப்படி வருமானம் பல சைஃபர்ல இருக்க மாதிரித் தான் ஹீரோ இருக்கனுமா? மிடில் க்ளாஸ் ஹீரோ எல்லாம் இருக்கக் கூடாதா?” என்று பாட்டி கேட்க, “இருக்கலாம். ஆனா, அந்த மாதிரி ஹீரோ எல்லாம் குடும்பக் கதைக்குத் தான் சரிப்பட்டு வருவான். ஆன்ட்டி-ஹீரோவா எல்லாம் போட முடியாது” என்றாள் கமலி யோசித்துவிட்டு.

“ஏன்?” என்று பாட்டி மெய்யாகவே புரியாமல் கேட்க, “என்ன பாட்டி கேக்கற நீ? இப்போ ஹீரோ போய் ஹீரோயின பார்ப்பான். அவ பிடிக்கலன்னு சொன்னா அவளைக் கடத்தனும். கடத்துற அடியாளுக்குப் பேமென்ட். அப்புறம் ஹீரோயின ஒரு பங்களால அடைச்சி வைக்கணும். பணக்காரன்னா அவனுக்கே சொந்தமா ஆள் நடமாட்டமில்லாத இடத்துல பங்களா இருக்கும். மிடில் க்ளாஸ் ஹீரோன்னா, அப்படி ஒரு பங்களா பார்த்து, வாடகைக்கு எடுத்து காசு குடுக்கணும். அங்க காவல் காக்குறவங்களுக்குப் பேமென்ட் வேற.

ஹீரோயினோட அப்பா அம்மா பொண்ணைக் காணோம்ன்னு கம்ப்ளைன் குடுப்பாங்களா இல்லையா!. அதைக் கண்டுக்காம இருக்க போலிஸை வேற கவனிக்கணும். கடத்துறதுக்கே இவ்ளோ செலவு.

கடத்திக் கல்யாணம் பண்ணி, ஹீரோயின் Pregnant ஆனப்புறம், இல்லைன்னா குழந்தைப் பிறந்ததுக்கு அப்புறம் ஹீரோ திருந்துவான்.

அப்போ எம்புட்டு செலவு இருக்கு. ஹீரோயினுக்கு டைமண்ட் நகை முதற்கொண்டு வாங்கி, உச்சி முதல் பாதம் வரை அலங்கரிக்கணும். கால்ல கொலுசு போட்டா கூட, அதுல கோஹினூரை மாட்டி விடணும்.

எந்திரன் படத்துல வர்ற சிட்டி ரோபோ சனாக்கு வாங்கி வச்ச மாதிரி, சிவாஜி ரஜினி ஸ்ரேயாவுக்கு வாங்கி வச்ச மாதிரி, ட்ரெஸ், நகை, குழந்தைக்குத் தேவையானதுன்னு எல்லாம் வாங்கி வீட்ல அடுக்கி வச்சு ஹீரோயினைச் சமாதானம் செய்யணும். மிடில் க்ளாஸ் ஹீரோவா இருந்தா கடன்ல மூழ்கி, EMI கட்டியே நொந்துட மாட்டான்?” என்று திடீரென படு லாஜிக்காகப் பேசினாள் கமலி.

“இவ்ளோ இருக்கா? அதெல்லாம் சரி. ஆனா, ஹீரோயினுக்குத் தான் கல்யாணத்துலயே இஷ்டமில்லையே. அப்புறம் எப்படி...! கர்ப்பம் கொழந்தை எல்லாம்?” என்று பாட்டி கேட்க, “அவளுக்கு இஷ்டமில்லைன்னா என்ன? அதான் ஹீரோவுக்கு இஷ்டமிருக்குல்ல...” என்றாள் கமலி.

“ஓஹ். அப்போ ஹீரோவுக்கு இஷ்டமிருக்கு. அதுக்காக எல்லாம் நடந்துடுமா?” – பாட்டி

“ஆமாம். நடக்கும்” – கமலி.

“எல்லாமா?” – பாட்டி

“ஆமாம். எல்லாம்!” – கமலி.

“அப்படி ஹீரோயினுக்கு இஷ்டமில்லாம நடந்தா அதுக்குப் பேரு...” என்று பாட்டி முடிக்கும் முன்னரே பாட்டியின் வாய் மீது கை வைத்துப் பொத்தியிருந்தாள் கமலி.

“அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. எதுக்குச் சொல்ற நீ?” என்று மிரட்டினாள் கமலி.

“சொல்லுவேன். இதெல்லாம் அநியாயம்” என்றார் பாட்டி.

“Everything is Fair in Love and War” என்றாள் கமலி.

“எது? ரேப்பா?” என்று பாட்டி கேட்க, “ஹீரோ பண்ணா அது பேர் ரேப் இல்ல பாட்டி. அது கொஞ்சம் ஓவர் லவ்வுல ஹீரோ கொஞ்சம் அப்டி இப்டி தான் நடந்துக்குவான்” என்று நியாயப்படுத்தப் படாதப்பாடுபட்டாள் கமலி.

“இதனால பாதிக்கப்படுறது அந்தப் பொண்ணு தான!” என்று பாட்டி வருத்தப்பட, “அதான் அவனே அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான்ல” என்றாள் கமலி.

“இதென்ன நியாயம்? திருடுனவன் பேர்லயே வீட்டை எழுதி வைக்கற மாதிரில இருக்கு. இந்தக் காலத்துல கிராமத்துப் பஞ்சாயத்துல கூட இப்படியெல்லாம் தீர்ப்புக் குடுக்க மாட்டாங்க!” என்று பாட்டி சொல்ல, “அட. என்ன பாட்டி உனக்கு நாட்டு நடப்பே தெரியல. இப்போயெல்லாம் சுப்ரீம் கோர்ட்ல கூட, ரேப் பண்ணவனைப் பார்த்து, இவனைக் கல்யாணம் பண்ணிக்கறியான்னு தான் கேக்கறாங்களாம்” என்றாள் கமலி.

“என்ன சொல்ற?” என்று பாட்டி அதிர, “நாம இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு. இன்னும் என்ன குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று லெனின் நிரஞ்சன் பின்னால் திரும்ப, “ஒன்னுமில்லையே” என்று ஒருசேரத் தலையாட்டினர் கமலியும், பாட்டியும்.

“ம்ம்ம்” என்றவன், மகிழுந்தின் பின்னோக்குக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, அதில் பத்து நிமிடங்களாய் தலையைச் சீவுவதும், கலைப்பதுமாக இருந்தான்.

“கார்ல கண்ணாடி எதுக்கு வச்சா. இவன் எதுக்குப் பயன்படுத்தறான் பாரு” என்று பாட்டி லெனினுக்குக் கேட்கும்படியே சொன்னார்.

“என் கார். என் கண்ணாடி. என் தலை. என் முடி” என்று அவன் சொல்லிய வார்த்தைகளைக் கேட்ட பாட்டிக்கு, ‘என்ன வேணும்னா பண்ணுவேன். உனக்கென்ன’ என்று அவன் சொல்லாமல் விழுங்கிய வார்த்தைகளும் சேர்ந்தே புரிந்தது.

‘அதான! எனக்கென்ன! ஆனா, இவன் என்ன பண்ணாலும் எனக்கு ஏன் இவ்ளோ இரிட்டேட் ஆகுது? எல்லாம் இவ குடுக்கற பில்ட்-அப்’பால தான்” என்று பாட்டி கமலியை முறைக்க, அவளோ பாட்டியைத் திரும்பியும் பார்க்காமல் லெனினை ரசித்துக்கொண்டே, தன் கற்பனைத் திறனை நினைத்துப் பிரமித்துக்கொண்டிருந்தாள்.

‘ஐயோ கமலி. நீ கற்பனைப் பண்ண ஹீரோ இவ்ளோ அழகா இருக்கானே! இந்தக் கதை ஹிட்டாகி ஒருவேள படமா எடுத்தா என்ன பண்றது? கோலிவுட், பாலிவுட், டோலிவுட்ன்னு எந்த வுட்லயும் இவன் அளவுக்கு எந்த ஹீரோவும் அழகா இல்லையே. ஹீரோவுக்கு நான் என்ன பண்ணுவேன்!’ என்று தன் கதைக்கு Cast & Crew தேர்வில் இறங்கிவிட்டவளை நடப்புக்கு அழைத்து வந்தது லெனினின் அழைப்பு.

“ஹேய் டெடி!” என்று லெனின் அழைக்க, “என்னையா?!” என்று திரும்பிப் பார்த்த கமலி, அவன் மகிழுந்தின் கதவைத் திறக்கக் கீழே இறங்கினாள்.

“ஆமாம். யூ லுக் லைக் டெடி பியர்” என்று லெனின் சொல்ல, அந்த வார்த்தைகளில் மயங்கிக் கிடந்த கமலியைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டார் பாட்டி.

‘பார்க்கக் கரடி மாதிரி இருக்கன்னு சொல்றான். அதுக்குப் போய் இப்படி ரியாக்ஷன் குடுக்கறா பாரு!’ என்று நினைத்துக்கொண்டார்.

“டெடி. இப்போ நம்ப காலேஜ் உள்ள போகப் போறோம். அங்க என் ஆளு இருப்பா. அவளைப் பார்க்கவேண்டியது இருக்கும். இந்தப் பாட்டி பியுட்டி கண்டிப்பா உள்ள வந்தே ஆகணுமா? இங்கேயே கழட்டி விட முடியாதா?” என்று லெனின் அவள் காதில் கேட்க, “எனக்கும் ஆசை தான் லெனி. ஆனா, அது மனசாட்சியாச்சே. அதைக் கழட்டிவிட வழியில்ல. என் கூடவே தான் வரும்” என்று பதிலளித்தாள் கமலி.

வேறு வழியில்லாமல் பாட்டியையும் மகிழுந்தை விட்டு கீழே இறக்கி மகிழுந்து நிறுத்துமிடத்திலிருந்து அந்தக் கல்லூரியின் மேலாண்மைக் கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

இவர்கள் இறங்கிய நேரம் தளிர் ஓட்டுநருடன் வேறொரு மகிழுந்தில் வந்திறங்க, அவளைத் திரும்பியும் பார்க்காமல் நடந்தான் லெனின்.

தளிர் லெனினையே பார்த்துக்கொண்டிருப்பதையும் லெனின் நிரஞ்சன் அவளைக் கண்டும் காணாமல் நடந்துச் செல்வதையும் அங்கிருந்த வேறொரு மகிழுந்தினுள் அமர்ந்திருந்தவனின் கண்கள் நோட்டமிட்டது.

லெனின் நிரஞ்சனைக் கண்காணிக்க வந்த அக்கண்களில் சிக்கினாள் தளிர்.

அந்தக் கண்களுக்குரியவனின் மூளை இப்போது சொல்லும் யோசனையை அவன் செயல்படுத்தினான் என்றால், அது தளிரையும், லெனின் நிரஞ்சனையும், அவர்கள் குடும்பத்தையும் எவ்வாறெல்லாம் பாதிக்குமோ?

 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் – 4 :



தன் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவர்களைப் பின்பற்றி, அவர்களின் குறி எருமைகள் மேல் தான் உள்ளது, தன் மான் நண்பனின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதை முடிவு செய்து கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினான் லெனி.

வந்தவன் முதலில் தேடியது மைலோவையும், பாப்பியையும் தான். புற்களுக்கு நடுவே, புதர்களுக்கு நடுவே என்று எங்குத் தேடியும் காணவில்லை.

இரு குட்டிகளும் வழக்கமாக அமரும் இடம், உறங்கும் இடம், உலாவும் இடம் என்று எங்குத் தேடியும் காணவில்லை.

லெனி தேடி ஓயவும், மற்ற சிங்கங்கள் வேட்டையாடி, உண்டு முடித்துத் திரும்பவும் சரியாக இருந்தது. அவர்கள் வந்ததும் லெனி அம்ராவிடம் சென்று முறையிட, அம்ரா தேடத்தொடங்கினார்.

அங்கும் இங்கும் தேடியவர், கர்ஜித்துத் தன் குட்டிகளை அழைக்க, பதிலில்லை. மற்றப் பெண் சிங்கங்கள் எதுவும் தேடுவதில் ஆர்வம் காட்டவில்லை. மற்ற இரண்டு ஆண் சிங்கங்களும் கண்டுக்கொள்ளாமல் இருக்க அஸ்லான் மட்டும் சத்தமாக ஒரு கர்ஜனையை வெளியிட்டார்.

ஒருவேளை மைலோவும், பாப்பியும் இங்கு இருந்தார்களானால், அந்தக் கர்ஜனையைக் கேட்டதும், பெற்றோர் தன்னை அழைப்பதை உணர்ந்து ஓடி வந்திருப்பர். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவர்கள் வரவில்லை.

எங்குச் சென்றிருக்கக்கூடும்? அவர்களாக எங்கும் சென்றிருக்கமாட்டார்கள். யாரோ தூக்கிச் சென்றிருக்க வேண்டும்.

யார் தூக்கிச் சென்றிருப்பார்கள்? லெனி யோசித்தான். அம்ராவும், அஸ்லானும் யோசிக்கவில்லை. அவர்களுக்குத் தெரியும். இரண்டு நாட்கள் முன்பு இரண்டு குட்டிகளையும், தூக்கிச் செல்ல முயற்சித்த சிறுத்தை ‘நமிர்’ தான் தூக்கிச்சென்றிருக்கக்கூடும்.

நமிர் இரண்டு நாட்கள் முன்பு, இதே போல் மற்றச் சிங்கங்கள் வேட்டைக்குச் சென்றிருந்த போது குட்டிகளைத் தூக்கிச் செல்ல முயற்சித்தான். ஆனால், அதற்குள் வேட்டைக்குச் சென்ற சிங்கங்கள் திரும்பி வந்துவிட்டதால் அதன் முயற்சி வீணானது.

தூக்கிச் செல்வதற்காக இரண்டு குட்டிகளையும் கவ்விய நேரம், அஸ்லானின் கண்ணில் பட்டுவிட்டான் நமிர். அதன் பின் உயிருக்குப் பயந்துத் தப்பித்து ஓடி ஒரு மரத்தின் மேலேறி நின்றது.

அன்று நமிர் அஸ்லானிடம் மாட்டாமல் உயிர் தப்பியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று. சிங்கங்களை விட சிறுத்தைகள் வேகமாக ஓடக்கூடியவை. இன்னொன்று. சிறுத்தைகள் நன்றாக மரம் ஏறக்கூடியவை.

ஒரு வளர்ந்த சிங்கத்துடன் சிறுத்தை எப்போதும் மோதிப்பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், வளர்ந்த சிங்கங்கள் பலம் பொருந்தியவை. ஆனால் குட்டிகள் தனியே சிக்கினால் சிறுத்தைகள் விடுவதில்லை.

‘இவர்கள் வளர்ந்து எதிர்காலத்தில் நம் உணவில் பங்குப்போடுவர்’ என்பது மட்டுமே சிங்கங்களின் குட்டிகளைப் பார்த்ததும் சிறுத்தைகளுக்குத் தோன்றுவது. அதனாலேயே, கண்ணில் பட்டால் அவர்களைக் கொன்றுவிடுவது.

நமிர் தான் குட்டிகளைத் தூக்கிச்சென்றிருக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு, அம்ரா ஒரு திசையில் அவர்களைத் தேடிச்செல்ல, லெனி அதற்கு எதிர்திசையில், அவர்களைத் தேடி நடக்கத்தொடங்கினான்.

அம்ராவையும், லெனியையும் தவிர, வேறு எந்தச் சிங்கங்களும் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஏனெனில், பிறந்து ஒரு வருடத்திற்குள் குட்டிகள் மற்ற விலங்குகளிடம் சிக்கி உயிர்துறப்பது வெகு இயல்பு.

மைலோ, பாப்பியைத் தேடும் பயணத்தில் லெனி விடிவதற்குள் அவர்களின் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் வந்திருந்தான்.

ஆஸ்கர் குடும்பத்திற்கென இருந்த நிலப்பரப்பை விட்டு வெளியே வந்திருந்தான். அஸ்லானின் கண்காணிப்புக்கு உட்பட்டு, அவரின் பாதுகாப்புக்கு கீழிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்திருந்தான்.

அங்கு அவன் கண்டது வல்லூறுகளைத் துரத்திவிட்டு, அவைகளின் உணவை உண்டுக்கொண்டிருந்த வேறு இரண்டு சிங்கங்களை. அவை, வீனஸ் மற்றும் சரபி.

வேறு ஏதோ மிருகம் வேட்டையாடி உண்டு மீதம் வைத்திருக்கும் உணவை உண்பதை வைத்தும், எந்தச் சிங்கக்குடும்பங்களின் கண்காணிப்புக்குக் கீழும் வராத நிலங்களில் சுற்றித் திரிவதை வைத்தும், அவை இரண்டும் நாடோடி சிங்கங்கள் என்று புரிந்துக்கொண்டான் லெனி.

நாடோடி சிங்கங்கள்.

மூன்று வயதானதும் குடும்பங்களை விட்டு வெளியே துரத்தப்படும் சிங்கங்கள் அவை. அவைகளில் சில ஐந்து அல்லது ஆறு வயதில் சிங்கக்குடும்பத்தின் தலைமை ஆண் சிங்கத்துடன் சண்டையிட்டு தலைமையைக் கைப்பற்றும்.

அப்படிக் கைப்பற்ற முடியாத சிங்கங்கள் காலம் முழுதும் நாடோடிகளாகவே கழிக்கும். தலைமைப் போட்டியில் தோற்று கூட்டத்தை விட்டு வெளியேறும் முதிர்ந்த சிங்கங்களும் தங்கள் இறுதிக்காலத்தை இப்படி நாடோடிகளாகவே கழிக்கும்.

இப்படி நாடோடிகளாகக் கழிக்கும் காலத்தில் இந்த ஆண் சிங்கங்கள் மற்ற விலங்குகளின் உணவைத் திருடி உண்பதும், மற்ற விலங்குகள் மீதம் வைத்த உணவை உண்பதும் வழக்கம் தான்.

வீனஸ் மற்றும் சரபியைப் பார்த்தால், அவர்களுக்கு லெனியை விட ஒன்றிரண்டு வயது தான் அதிகமாக இருப்பது போல் தெரிந்தது.

அந்நேரத்தில், அவ்விடத்தில் தனியாகச் சுற்றிய லெனியைப் பார்த்து வீனஸும், சரபியும் கூட அவன் நாடோடி சிங்கம் என்று தான் நினைத்தனர்.

நாடோடி சிங்கங்களுக்கு உணவுக் கிடைப்பது அரிது. லெனி தங்கள் உணவில் பங்குக்கு வந்துவிடுவானோ என்று வீனஸும் சரபியும் ஒருசேர கர்ஜிக்க, அந்த உணவு, கர்ஜனை இரண்டையுமே பொருட்படுத்தாமல் அவ்விடம் விட்டு அகன்று தன் வழியில் பயணப்பட்டான் லெனி.

அவன் கண்பார்வையை விட்டு அகலும் வரை, அவனையே பார்த்து எடைப்போட்ட வண்ணம் நின்றிருந்தனர் வீனஸும், சரபியும்.

லெனி கண்ணைவிட்டு அகன்றதும், மீண்டும் உணவில் கவனம் செலுத்தத்தொடங்கினர். ஆனால், ‘லெனி’ யார் என்றக் கேள்வி அவர்களுக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அதுவும் உணவைப் பார்த்த ஒரு ஏளனப் பார்வை. நிச்சயம் அவன் நாடோடி சிங்கமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நாடோடி சிங்கங்கள் சரியான உணவுக் கிட்டாமல் தவிப்பவை. லெனி நாடோடி சிங்கமாக இருந்திருந்தால், இந்நேரம் இவர்களுடன் சண்டையிட்டாவது அதை உண்ண முயற்சித்திருப்பான்.

ஆனால், லெனியின் உருவத்தை வைத்து கணித்தோமானால், அவனுக்கு மூன்று வயதுக்கு மேல் இருக்கும் என்றே தோன்றியது. அந்த வயதில் ஒரு ஆண் சிங்கம் குடும்பத்தோடு சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லையே. லெனியைப் பற்றி எதுவும் கணிக்க முடியவில்லை அவர்களால்.

அவன் கடந்துச் சென்றும் கூட ஏன் அவனைப் பற்றிய யோசனையைக் கலைக்க முடியவில்லை இவர்களால்? ஒருவேளை, அவனுடனான முக்கியமானச் சந்திப்பு எதிர்காலத்தில் நிகழவிருப்பதை அவர்களின் உள்ளுணர்வு இருவருக்கும் தெரிவிக்க முயற்சிக்கிறதோ என்னவோ!

ஆனால், லெனியோ இவர்களைப்பற்றி யோசிக்காமல் தன் தம்பி தங்கையைத் தேடி நடக்கலானான்.

இந்த நொடி, அவர்களைத் தவிர வேறு யாரைப்பற்றியும் யோசனை இல்லை அவனுக்கு.

அடுத்து அவன் யாரைச் சந்திக்கப்போகிறான்... அந்தச் சந்திப்பு அவன் வாழ்வை எப்படி திருப்பிப்போடப் போகிறது என்பதைப் பற்றியும் தான் எந்த யோசனையும் இல்லை அவனுக்கு.

** ** ** ** ** **

பல ஏக்கர் நிலங்களைத் தன்னுள் அடக்கியிருந்தக் கல்லூரி வளாகம் அது.

பொறியியலும், கலை அறிவியல் படிப்புகளும் ஒருசேர இருந்தக் கல்லுரி அது.

கொலை, கடத்தல் என சிங்கமுத்து சம்பாதித்த அத்தனைப் பணத்தையும் கொட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிய கல்லூரி அது.

ஆடம்பரமானக் கல்லூரி வளாகம். கொஞ்சம் அழகானதும் கூட. அந்த அழகும் ஆடம்பரமும் திரைப்படத்துறையினரை ஈர்க்க, அடிக்கடிப் படப்பிடிப்புகள் நடக்கும் கல்லூரியானது.

அடிக்கடிப் படங்களில் காட்டப்படுவதால், Upper Middle Class மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Upper Middle Class மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் அந்தக் கல்லூரியில் தகுதி உதவித்தொகையில் படிக்கும் சில ஏழை மாணவர்களும் உண்டு. Ragging தொல்லைகள் தாங்காமல் அவர்களுள் சிலர் மனவுளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு.

அந்தக் கல்லூரியின் மொத்தப் பொறுப்பையும் மூன்று வருடங்களுக்கு முன் லெனினின் கையில் கொடுத்துவிட்டார் சிங்கமுத்து.

பதின்ம வயதில் பெற்றோரை இழந்து, பிழைக்க வழியில்லாமல் சுற்றித் திரிந்தவர் கையில் யாரோ கத்தியைத் திணித்து ‘இதைப் பிடித்துக்கொண்டால் காசும் சோறும் கிடைக்கும்’ என்றுச் சொல்லவும், அதை விடாமல் பிடித்துக்கொண்ட சிங்கமுத்துவுக்கும் கடத்தலும், கொலையும் சோறு போடும் புண்ணியத்தொழில் ஆகிப்போனது.

பயமறியா வயதில் தொடங்கியதாலும், எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த யாருமில்லை என்பதாலும் பிடித்துக்கொண்ட கத்தியைக் கீழே விடுவதைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. திருமணமான புதிதில் சில முறை பூங்கொடி சொல்லிப்பார்த்துவிட்டு அதன்பின் இவர் இப்படித்தான் என்று விட்டுவிட்டார்.

சிறுவயதிலிருந்தே கொலையையும், ரத்தத்தையும் பார்த்து வளர்ந்த லெனினுக்கு அதெல்லாம் தவறே இல்லை என்று பதிந்துப்போனது. ஆயினும், அவனுக்கு இப்படிக் கொலை செய்துத் தான் பிழைக்க வேண்டும் என்று அவசியமாகி விடக்கூடாது என்று தான் அவனைப் பெரிய பள்ளி, கல்லூரி என்று சேர்த்து நன்கு படிக்க வைத்தது. அவன் படித்து முடிப்பதற்குள் கல்லூரி சாம்ராஜ்ஜியம் உருவாக்கி அவன் கையில் ஒப்படைத்திருந்தார் சிங்கமுத்து.

ஆனால், லெனினுக்கோ இதில் ஈடுபாடு இல்லை. கல்லூரியில் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், அவன் மனம் எதிர்பார்த்த வேறொன்று அவனுக்குக் கிடைக்கவில்லை.

பயம்.

அவன் தந்தையைப் பார்ப்போர் கண்ணில் தெரியும் பயம் இவனைப் பார்க்கையில் இருப்பதில்லை. மற்றவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும், நடுங்க வேண்டும் என்று நினைக்கும் அசுர குணம் அவனுக்கு இயல்பாகவே இருந்தது.

அதனாலேயே, சிங்கமுத்துவின் சட்டத்துக்குப் புறம்பான மற்றத் தொழில்களையும் கையில் எடுத்துக்கொள்ளத் துடித்துக்கொண்டிருந்தான்.

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத்துக்குள் நுழைந்தான் லெனின்.

அந்தக் கட்டிடத்தில் வகுப்புகள் எதுவும் இல்லை. அலுவலகப்பணிகளுக்கென இருந்த கட்டிடம் அது. அதோடு கலையரங்கம், மருத்துவ அறை ஆகியனவும் இருந்தது.

லெனினின் அறை இருந்ததும் அதே கட்டிடத்தில் தான். லெனின் அவனறைக்குள் நுழைய அவன் பின்னேயே சென்றனர் கமலியும் பாட்டியும்.

அவனுடைய நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, அவன் மேசையில் அவனுக்காக காத்திருந்தக் கோப்புகளைப் புரட்டத்தொடங்கினான் லெனின்.

“என்ன லெனி? வேலைப் பாக்குற?” என்று கமலி கேட்க, “வேலை இருக்கு கொஞ்சம்” என்றான் லெனி.

“ஐயையே! வேலை இருக்கா. நீ நம்ப நாவல் ஹீரோவா இருக்க எல்லாம் சரிப்பட்டு வர மாட்ட” என்றாள் கமலி.

“ஏன்? ஹீரோன்னா வேலைப் பார்க்கக் கூடாதா?” என்று லெனி கேட்க, “பின்ன? நீ வேலைப் பார்க்கறதை வேடிக்க பார்க்கவா எல்லாரும் நாவல் படிக்கறாங்க. இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா அவ்ளோ தான். இந்தக் கதை எழுதிட்டு நான் தலைல துண்ட போட்டுட்டு உக்கார வேண்டியது தான்” என்று சொல்லிச் சோகமானாள் கமலி.

கோப்புகளை மூடி வைத்தவன், “சரி சொல்லு. இப்போ நான் ஹீரோவா என்ன பண்ணனும்???” என்று கேட்க, “ஹீரோயின பார்க்கணும்” என்றாள் கமலி.

“சரி. வா பாப்போம்” என்று லெனி தன் இருக்கையை விட்டு எழும்ப, “எனக்குத் தெரியும் லெனி. நான் கேட்டா நீ செய்வன்னு. சரி சொல்லு. நீ யாரை ஹீரோயினா செலெக்ட் பண்ணியிருக்க?” என்று வினவினாள் கமலி.

“என்ன நீ அவனைக் கேட்கற? உனக்குத் தெரியாதா? உன் கதைல யார் ஹீரோயின்னு?” என்று பாட்டி கேட்க, “நான் தான் சொன்னேனே. நான் முன்னாடியே முடிவுப் பண்ணிட்டு எல்லாம் எழுதுறதில்ல. கதையோட போக்கிலேயே அப்படியே எழுதுறது தான். இப்போ என் ஹீரோ யாரை ஹீரோயினா செலெக்ட் பண்றானோ அவளை நானும் ஏத்துக்குவேன்” என்ற கமலி லெனியிடம் திரும்பினாள்.

“சொல்லு லெனி. யாரை லவ் பண்ணப் போற? இந்தக் காலேஜ்ல படிக்கற ஸ்டுடன்ட் யாராவதா? இல்ல இங்க வேலை செய்ற பொண்ணுங்களா? இல்ல இங்க வேலை செய்றவங்களோட பொண்ணுங்களா?” என்று கமலி கேட்க, “ஏன்? நீ சொல்ற மூணு கேட்டகரில தான் ஹீரோயின் இருக்கணுமா?” என்று கேட்டார் பாட்டி.

“அதான் பாட்டி சரியா வரும். இந்தக் கேட்டகரி பொண்ணுங்களா இருந்தா தான் ஆண்ட்டி-ஹீரோ கதைய கொண்டு போகச் சரியா இருக்கும்” என்று கமலி கேட்க, “எப்படிக் கொண்டு போவ? சொல்லு பாப்போம்” என்றார் பாட்டி.

“இப்போ அந்தப் பொண்ணு இவனுக்குக் கீழ வேலை செய்ற யாரோவோட பொண்ணா இருந்தான்னு வையேன். இவன் அவங்க அப்பா கிட்டப் போய் பொண்ண கட்டி வைன்னு கேட்பான். அவங்க அப்பா ‘உன்ன மாதிரி ரவுடி குடும்பத்துக்கு எல்லாம் பொண்ணைக் குடுக்க முடியாது’ன்னு சொல்லுவார். ‘அது எப்டி நீ எனக்கே பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்லலாம்’ன்னு இவனுக்குக் கோவம் வந்து, அந்தப் பொண்ணைக் கட்டாயக் கல்யாணம் பண்ணி, அந்தப் பொண்ணைக் கொடுமைப்படுத்தி, அப்படியே ஒரு ஆண்ட்டி-ஹீரோவா டெவலப் ஆகிடுவான்” என்று கமலி சொல்ல,

“அவன் அந்தப் பொண்ணைப் புடிச்சி தான கல்யாணம் பண்ணிக் குடுக்கக் கேட்டான். அப்புறம் ஏன் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணதும் கொடுமைப்பண்ணனும்?” என்று கேட்டார் பாட்டி.

“அவங்க அப்பா தான் இவனுக்குப் பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்லி அவமானப்படுத்திட்டார்ல. அவங்கக் குடும்பத்துல யார் என்ன தப்புப் பண்ணாலும், நாங்க ஹீரோயினைத் தான் கொடுமைப்படுத்துவோம். ஏன்னா, அவ தான் பூமித்தாய் மாதிரி பொறுத்துக்குவால்ல” என்றாள் கமலி.

“ஏன்ம்மா. ரவுடி குடும்பத்தை, ரவுடி குடும்பம்ன்னு சொன்னது ஒரு குத்தமாம்மா!

சரி. மத்த ரெண்டு கேட்டகரி?” என்று கேட்டார் பாட்டி.

“ஹான். ஒருவேள. அந்தப் பொண்ணு இங்க படிச்சிட்டு இருக்கு, இல்ல வேலை செஞ்சிட்டு இருக்குன்னு வையேன். இவன் தினந்தினம் அந்தப் பொண்ணைப் பார்த்து மீட் பண்ணி காதலிச்சு, அந்தப் பொண்ணு பிடிக்கலன்னு சொன்னதுக்கு அப்புறம் தொல்லைப் பண்ண ஏதுவா இருக்கும். அப்போ தான ஹீரோயின் இவனைத் தவிர்க்க வழியில்லாம தவிக்க முடியும். அப்போ தான் படிக்கறவங்களுக்கு ஹீரோயின் மேல அனுதாபம் வரும். அப்படியே ஹீரோ மேல கோவம் வரும். அப்படியே ஒரு ஆண்ட்டி-ஹீரோவா ஃபார்ம் ஆய்டுவான்” என்று கமலி சொல்ல பாட்டிக்குத் தலையே சுற்றியது.

“வேலை செய்யற இடத்துல நடக்கற Abuse-க்கு எல்லாம் எப்போடா காதல்ன்னு பேர் வச்சீங்க? Abuse பண்றவன் எல்லாம் எப்போடா ஹீரோவானான்” என்று புலம்பித் தள்ளினார் பாட்டி.

‘இந்தப் பாட்டி எப்போவும் இப்படித் தான் புலம்பிட்டு இருக்கும்’ என்று கண்டுக்கொள்ளாமல் விட்ட கமலி, லெனினிடம் திரும்பி, “நீ சொல்லு லெனி. மூணு கேட்டகரில ஹீரோயின் எந்தக் கேட்டகரி?” என்று கேட்டாள்.

“மூணும் இல்ல” என்று சொல்லி கமலி தலையில் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான் லெனி.

“என்ன சொல்ற லெனி? நான் சொல்ற மாதிரி இருந்தா தான கதைக்கு செட் ஆகும். சரி வேற யாருன்னு சொல்லு?” என்று கமலி கேட்க,

“என் அப்பாவோட தொழில் கூட்டாளியோட பொண்ணு அனிக்கா” என்றப் பதில் கமலியின் தலையில் பெரிய பாறாங்கல்லாய் வந்து விழுந்தது.

“எது! பிஸ்னெஸ் பார்ட்னரோட பொண்ணா. இல்ல இல்ல இது சரிப்பட்டு வராது” என்றாள் கமலி.

“ஏன்?” என்று லெனி கேட்க, “பிஸ்னெஸ் பார்ட்னர் பொண்ணு எல்லாம் டாம் & ஜெர்ரி ஜோடி கதைக்குத் தான் சரியா வரும். ஆண்ட்டி-ஹீரோவுக்கு செட் ஆகாது” என்றாள் கமலி.

“சரி. ஆள் எப்டி? ரொம்ப அமைதியா மென்மையா. அவ பேசுறது அவளுக்கே கேக்காத மாதிரி பேசுறவளா இருப்பாளா?” என்று கமலி கேட்க, “நீயே வந்து பார்த்துத் தெரிஞ்சிக்கோ” என்று கமலியை இழுத்துச் செல்ல, பாட்டியும் சென்றார்.

“இதான் அவ ரூம்” என்று லெனின் அனிக்காவின் அறை வாசலில் நின்று கமலியிடம் சொல்ல, அந்த அறையிலிருந்து “கெட் அவுட். ஐ செட் கெட் அவுட்” என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.


“இது!” என்று கமலி கேட்க, “நம்ப ஹீரோயின் வாய்ஸ் தான்” என்றான் லெனின்.
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
“இவ செட் ஆக மாட்டா லெனி. இவ செட்டே ஆக மாட்டா” என்று கமலி லெனினை அவ்விடம் விட்டு இழுத்துச் செல்லப் பார்க்க, “ஏன் செட் ஆக மாட்டா?” என்று கேட்டார் பாட்டி.

“பாட்டி. அவ வாய்ஸ் கேட்டியா. எவ்ளோ சத்தம். சரிப்பட்டு வர மாட்டா பாட்டி. நாளைக்கு நம்ப ஆண்ட்டி-ஹீரோ ஏதாவது கொடுமைப் படுத்தினா, போலிஸ், மாதர் சங்கத்தை எல்லாம் கூப்பிட இவளுக்கு ஃபோன் தேவையே இல்ல பாட்டி. கத்தியே கூப்ட்டுடுவா போல. நம்ப ஹீரோ ரோல் அப்புறம் மொக்கையாகிடும் பாட்டி” என்றாள் கமலி.

“வேற எப்படி இருக்கணும் ஹீரோயின்?” என்று பாட்டி கேட்க, “பார்க்க முயல்குட்டி மாதிரி இருக்கணும். ஓடுறது மான்குட்டி மாதிரி இருக்கணும். முக்கியமா வாய்ஸ் பூனைக்குட்டி மாதிரி இருக்கணும்” என்றாள் கமலி.

பாட்டியிடம் திரும்பிய லெனின், “நீ சொல்லு பாட்டி. பொண்ணு எப்டி. பார்க்க அழகா க்யூட்டா தான் இருப்பா. ஆனா, பார்வை தான் எப்போவும் திமிராவே இருக்கும். பேச்சும். வாய்ஸ்தான் கேட்டீங்கல்ல. போல்ட் வாய்ஸ். யாரும் அவ்ளோ சீக்கிரம் அவளை ஏமாற்ற முடியாது” என்று லெனின் சொல்ல, “சூப்பர். இவ தான் உனக்குச் சரியான ஜோடி” என்றார் பாட்டி.

“அப்படியா பாட்டி” என்று பாட்டியைப் பார்த்து இளித்த லெனின், “இல்ல. இல்ல. இவ சரிப்பட்டு வர மாட்டா” என்று சொன்ன கமலியை முறைத்தான்.

“அவ ஏன் சரிப்பட்டு வர மாட்டா? உன் ஹீரோ சிங்கம் தான. அப்போ ஹீரோயின் அவனுக்குப் பொருத்தமா தான இருக்கணும். இப்படித் திமிரா பெண் சிங்கம் மாதிரி இருக்க பொண்ணை லவ் பண்ணா தான் உன் ஹீரோ சிங்கம்.

இந்த மான்குட்டி, முயல்குட்டி எல்லாம் சிங்கத்துக்கு இரையா இருக்கறது தான் சரி. இணையா இருக்க இல்ல” என்று கமலியிடம் பாட்டி சொல்ல, “ஆமாம் ஆமாம்” என்றான் லெனின்.

“இவன் என்ன இப்போ இந்த பாட்டிக்கு சப்போர்ட் பண்றான். இதுக்கு தான் இந்த ஆன்ட்டி-ஹீரோவை எல்லாம் நம்பவே கூடாது” என்று நினைத்தவள்,

“டேய். இப்போ இந்தப் பாட்டி சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டு. நாளைக்கு நீ ஏதாவது பண்ணா, இவ உன்ன கோர்ட் கேஸ்ன்னு இழுத்து நிக்க வைப்பா. பாத்துக்க” என்றாள் கமலி.

அந்த நேரம், அனிக்காவின் அறையிலிருந்து இரு ஆஜாகுபானுவாக ஆண்கள் வெளியேற, அவர்களைப் பார்த்து முறைத்தான் லெனின். பதிலுக்கு அவர்களும் முறைத்துக்கொண்டே சென்றனர்.

அவர்கள் சென்றதும், “அனிக்காவோட அண்ணனுங்க இவனுங்க” என்றான் லெனின் பாட்டியிடமும், கமலியிடமும்.

“அப்படியே அவங்கக் குடும்பக் கதையைக் கொஞ்சம் சொல்லிட வேண்டியது தான?” என்று பாட்டி கேட்க, “சொல்லலாமே?” என்று லெனியும் தொடங்க, “இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டவாறே அங்கு வந்து நின்றாள் அனிக்கா.

ஐந்தடி உயரம். ப்ளூ ஜீன்ஸும், கருப்பு நிற ஷார்ட் டாப்ஸ் அவளின் மாநிறத் தோளுக்கு அழகாகவே இருந்தது. தோள் தாண்டிக் கொஞ்சம் வளர்ந்திருந்த முடி, திருத்தமாக லேயர் கட் செய்யப்பட்டிருந்தது. கையில் வெள்ளி நிறப் பெரிய கைக்கடிகாரமும், காதோடு ஒட்டியக் குட்டி வளையமும் அணிந்திருந்தாள். நெற்றியில் ‘எங்கே’ என்று தேட வைக்கும் அளவிற்குக் குட்டியாய் ஒரு கருப்புப் பொட்டு.

அவளைப் பார்த்துப் பாட்டி, “வாவ். அழகா இருக்காளே!” என்று வாய் பிளக்க, “ஆமா. அழகா இருக்கா” என்று ஜொள்ளு விட்டான் லெனினும்.

ஆனால் கமலியோ, ‘ஆறு மொழம் சேலை எங்கடா? இடைவரை நீண்டிருக்கும் கூந்தல் எங்கடா? நெற்றியில் திருநீறு கீற்று எங்கடா? கையில் வளையல் எங்கடா? ஜல் ஜல் கொலுசு எங்கடா? காதுல ஜிமிக்கி கம்மல் எங்கடா?’ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள்.

“டேய் லெனி. என்ன டா இது ஹேர் கட்? ஜீன்ஸ்? அதுவும் ஷார்ட் டாப்ஸ். ஹீரோயின் எல்லாம் ஜீன்ஸ் போட்டாலும் குர்த்தி தான் டா போடணும். இப்படியெல்லாம் இருந்தா ஹீரோயின்னு ஒத்துக்க மாட்டாங்க டா. அதுவுமில்லாம, லிப்ஸ்டிக் வேற போட்டிருக்கா. லிப்ஸ்டிக் எல்லாம் தமிழ் கதைல வில்லிங்க ப்ராப்பர்ட்டி டா. ஹீரோயின்னா இயற்கையாவே ஆரஞ்சு சுளை போல, இல்லனா ரோசாப்பூ இதழ் போல உதடு இருக்கணும் டா” என்று சொல்ல, அதையெல்லாம் கேட்கும் நிலையில் லெனின் இருந்தால் தானே.

அப்போது தான் லெனினைப் பார்த்தவள், “ஐயோ. ஐயோ” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

“டேய் லெனி. நீ ஆண்ட்டி-ஹீரோடா. இப்படியெல்லாம் ஜொள்ளு விடக் கூடாது டா. ஹீரோயினைக் கூட டெரரா தான்டா பாக்கணும்” என்று புலம்பும் போது, கமலியின் இரத்த அழுத்தத்தைக் கணக்கிட்டிருந்தால் உச்சத்தில் இருந்திருக்கும்.

ஆனால், கமலியின் புலம்பலைக் காதில் வாங்காமல், ஹீரோயினை ஸைட் அடிப்பதில் குறியாக இருந்தான் லெனின்.

“டேய். ஆண்ட்டி-ஹீரோன்னா, ஹீரோயின தான் டா அடிக்கணும். இப்படி ஓப்பனா அவள ஸைட் அடிக்கக் கூடாது டா” என்று கமலி கதறுவதைப் பற்றி அவனுக்கு எந்த யோசனையும் இல்லை.

“சார். உங்களைப் பார்க்கப் போலீஸ் ஒருத்தர் வந்திருக்கார். உங்க ரூம்ல உக்கார வச்சிருக்கேன்” என்று அங்கு ஒரு ஊழியர் வந்து சொன்னதைக் கூட அவன் கவனிக்கவில்லை.

அந்தப் போலீஸால், அவன் வாழ்வு எப்படி மாறப்போகிறது என்பதைப் பற்றியும் தான் யோசனை இல்லை அவனுக்கு.

:: :: :: :: :: :: :: ::

 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் – 5:



லெனி, அந்த இரண்டு நாடோடி சிங்கங்களைக் கடந்து, நடந்துக்கொண்டிருந்தான்.

இந்தச் சவானா புல்வெளியில் இதுவரை அவன் கண்டிராத நிலங்களை இன்று அவன் கடந்துக்கொண்டிருந்தான்.

காணாத பல புதிய காட்சிகளையும், சில நீர்நிலைகளையும் கண்டிருந்தான்.

அப்படி அவன் இந்தப் பயணத்தில் புதிதாய் ஒன்று சேர்ந்துக்கொண்டது. இதுவரைப் பார்த்திராத ஜீவராசி ஒன்று.

மனிதன்.

காடுகளுக்கு நடுவே வாழும் லெனி, இதுவரை ஊர்களைப் பார்த்திடாத லெனி, இந்தப் பயணத்தில் பார்த்தது ஒரு மனிதனை.

அந்தப் புதிய காணாத அறியவகைக் காட்சிகள் பட்டியலில் சேர்ந்துக்கொண்டது, ஒரு மனுஷி அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சின்ன முயலைக் கொல்ல முயற்சிக்கும் காட்சி.

தூரத்தில் தெரிந்தாள் அவள்.

அவள் எமிலியா.

எமிலியா ரோஸ்.

அளவான உயரம். பால் வெள்ளை நிறம். தோளைத்தாண்டி முதுகில் படர்ந்திருக்கும் ப்ரவுன் நிற வழவழ கூந்தல். அடர்த்தியானக் கண்ணிமைகள் அழகான நீல நிற கண்மணிகளைப் பாதுகாத்துக்கொண்டிருந்தன.

அழுக்கான வெள்ளை நிற சட்டையும், தொளதொளவென நீல நிற ஜீன்ஸும், காலில் ஷூவும் அணிந்திருந்தவள் கையில் ஒரு குத்துக்கத்தி இருந்தது. கண்களில் அகோரப் பசி தெரிந்தது. அந்த முயலைத் தப்பவிடக்கூடாது என்ற தீவிரமும் இருந்தது.

சற்றுத் தொலைவில் மரத்துக்கடியில் ஒரு பையும் இருந்தது. அது அவளுடையதாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

அத்தனையும் கவனித்தபடி அவளை நெருங்கினான் லெனி. ஒரு புதருக்குள் மேய்ந்துக்கொண்டிருந்த முயலைக் குறிப் பார்த்திருந்த எமிலியாவின் பின்னால் நின்றிருந்தான் லெனி.

அப்படி ஒரு உயிரினத்தை முதல் முறையாகப் பார்ப்பவனாதலால் அவள் நிற்பது, நடப்பது, பார்ப்பது என அனைத்தும் விசித்திரமாக, அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தது லெனிக்கு.

தன் பின்னால் நிற்கும் லெனியை உணரும் நிலையில் இல்லை எமிலியா. அவள் முதுகில் படரும் லெனியின் வலுவான மூச்சுக்காற்றைக் கூட உணராமல் அந்த முயலைக் கொல்வதில் கவனமாக இருந்தாள்.

ஆனால், அத்தனையும் அடுத்த நொடி வீணானது.

இத்தனை நேரம் எமிலியாவைக் கவனிக்காமல் தன்னுடைய உணவின் மீது கவனமாக இருந்த முயல் ஏதோ சத்தம் கேட்டு நாலா பக்கமும் விழித்து விழித்துப் பார்த்து ஓடியே விட்டது.

‘இதோ கொன்றுவிடலாம்’ என்ற நிலையில் கொல்ல முடியாமல் போகவும், பெருத்த ஏமாற்றம் எமிலியாவுக்கு. அந்த ஏமாற்றத்தின் காரணமாக ‘ப்ச்!’ என்று தானாக அசைந்தது அவள் இதழ்கள். இயற்கையிலேயே ரோஜா வர்ணத்திலான இதழ்கள்.

‘ப்ச்!’ என்ற சத்தம் தான் அவள் இப்போது வெளியிட்டது. அதன்முன் அவள் சத்தமாக மூச்சும் விடவில்லையே.

வேறு எந்தச் சத்தம் கேட்டு அந்த முயல் ஓடியிருக்கும். ஒருவேளை, இரண்டு நாட்களாகப் பசித்திருக்கும் அவள் வயிறு கதறியச் சத்தமோ அது?

இல்லை. இல்லை. சத்தம் அவளிடமிருந்து வரவில்லை. அவளுக்குப் பின்னால் இருந்தல்லவா வந்தது. அதையே அவள் இப்பொழுது தான் உணர்ந்து, பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

திரும்பிப் பார்த்தவள், முகத்துக்கு நேரே இருந்தது லெனியின் முகம். சற்று முன் கேட்ட சத்தம், லெனியின் மூச்சுச் சத்தம்.

இதற்க்கு முன் எமிலியா சிங்கத்தைப் பார்த்ததெல்லாம் புகைப்படங்களிலும், உயிரியல் பூங்காவின் கூண்டுகளிலும் தான்.

முதன் முறையாகக் காட்டுக்குள் ஒரு சிங்கத்தைப் பார்க்கிறாள். அதுவும் இத்தனை நெருக்கமாக.

அவள் முகத்துக்கும், அந்தச் சிங்கத்தின் முகத்துக்கும் இருந்த இடைவேளை ரொம்பவும் குறைவு. அத்தனை நெருக்கத்தில் ஒரு சிங்கத்தை முதன் முறையாகப் பார்த்தவள் உடலில் நடுக்கம்.

‘ஐயோ சிங்கம். எத்தனை வேகமாக ஓட முடியுமோ அத்தனை வேகமாக ஓடிவிடு’ என்று அவளை ஓடச்சொல்லித் துரத்தியது அவள் மனம்.

ஆனால், அந்தப் பதட்டமான நேரத்திலும் எங்கெங்கோ படித்தச் செய்திகளையெல்லாம் அவளின் மூளைத் திரட்டி, யோசித்து, “ஓடாதே!” என்றது அவளை.

அவளும் மனதின் வார்த்தைகளில் மயங்காமல், மூளையின் பேச்சைக் கேட்டு ஓடாமல் அங்கேயே நின்றாள்.

அப்படி அவள் ஒரு சிங்கத்தை இத்தனை நெருக்கத்தில் கண்டும், ஓடாமல் நிற்கும் அளவிற்கு அவள் மூளை என்ன சொல்லியது என்றால், ‘ஒரு சிங்கத்திற்கு நாம் அதைப் பார்த்துப் பயந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால், நாம் அதைப் பார்த்துப் பயந்து ஓடினால், நம்மை விடாமல் துரத்தும்' என்பது தான்.

‘ஓடாமல் வேறு என்ன செய்வது?’ என்று எமிலியா யோசிக்க, அவள் மூளை அதற்கும் பதிலை எடுத்து வீசியதே.

ஒரு சிங்கத்திடமிருந்துத் தப்பிக்க வேண்டுமெனில், நாம் அதைப் பார்த்துப் பயப்படவில்லை என்று அது நம்பும்படி நடந்துக்கொள்ள வேண்டும். ஒரு அடியேனும் பின்னால் எடுத்து வைத்துவிடாமல், அதை நேராகப் பார்த்து நிற்க வேண்டும். அதோடு, நம்மைப் பெரிய உருவமாகக் காட்டிக்கொள்ள வேண்டும். அதற்காகக் கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, அதை மேலும் கீழுமாக விசுற வேண்டும். அச்செயல் நம்மைப் பெரிய உருவமாகக் காண்பிக்கும்.

இவர்கள் நம்மைப் பார்த்துப் பயப்படவில்லை என்று தெரிந்ததும் சிங்கங்கள் நம்மிடம் சண்டையிடும் எண்ணத்தையும், நம்மைத் துரத்தும் எண்ணத்தையும் கைவிட வாய்ப்புண்டு.

எமிலியா அவள் மூளைச் சொல்வதை அப்படியே செய்ய, அவளின் விசித்திரமானச் செய்கைகளை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தான் லெனி.

சில நிமிடங்கள் அப்படியே நின்று அவள் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்த லெனிக்கு, தான் எதற்காக இவ்விடம் வந்தோம் என்று நினைவு வர, அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்றதும் தான் சீராக மூச்சு விட முடிந்தது எமிலியாவுக்கு. அவன் அங்கிருந்துச் சென்றதும் அவ்விடம் விட்டு ஓடிவிட வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

ஆனால், வழித் தவறி இந்தக் காட்டுக்குள் வந்து சிக்கி இரண்டு நாட்கள் ஆனதல்லவா. இரண்டு நாட்களாகத் திரும்பவும் ஊருக்குள் செல்லும் வழியை முனைப்போடு தேடி அலைந்ததில், அவளுடைய கால்கள் வெகுவாகக் களைத்திருந்தது. இதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்து வைக்கவே முடியாது என்று அடம்பிடித்தது. இரண்டு நாட்களாக ஏதும் உண்ணாததால், அவள் வயிற்றில் சுரந்த அமிலம் வேறு அவள் வயிற்றிலிருந்த திசுக்களையே அரித்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில் வேறு எங்கும் செல்ல முடியாமல், அவள் பையை வைத்திருந்த மரத்தின் அடியிலேயே அமர்ந்துவிட்டாள் எமிலியா.

லெனி, எமிலியாவைச் சந்தித்த இடத்திலிருந்து இன்னும் கொஞ்ச தூரம் நடக்க, யாரோ அழும் குரல். ஒருவேளை தன் தங்கையின் குரலாக இருக்குமோ என்ற யோசனையில் குரல் கேட்ட திசையை நோக்கி நடந்தான் லெனி.

அங்கு அவன் பார்த்தது ‘நமிர்’ சிறுத்தையை. நமிருக்கு எதிரில் ஒரு குட்டி உருவம். தூரத்திலிருந்து பார்த்ததில், அது என்ன உருவம் என்று தெளிவாகத் தெரியவில்லை. அடர்த்தியாக வளர்ந்த புட்கள் அந்த உருவம் அவன் கண்ணில் படுவதிலிருந்து தடுத்தது. ஆனால், அது சிங்கக்குட்டி அல்ல என்பது மட்டும் தெரிந்தது.

அந்தச் சிறுத்தையிடம் சிக்கப்போகும் குட்டி, தன் தங்கையோ, தம்பியோ இல்லை என்று உறுதியானதுமே, வேறு திசையில் திரும்ப எத்தனித்த லெனியைத் தடுத்து நிறுத்தியது அழுகுரல்.

அந்த அழுகுரலைக் கேட்டவன் கால்கள் அங்கிருந்து நகர மறுக்க, அந்த உருவம் இருக்குமிடத்தை நெருங்கி அங்கு இருப்பது யார் தான் என்று பார்த்தான் லெனி.

அங்கிருந்தது ஒரு மனிதக் குட்டி. அந்தக் குட்டிக்குச் சற்றுத் தொலைவில் அதன் மீது பாயத் தயாராக இருந்தான் நமிர்.

அந்த மனிதக் குட்டி லெனியைக் கண்டு இன்னும் அழுக, அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி அவள் அருகில் நின்றான் லெனி.

அந்தக் குழந்தைக்கு அருகில் சிங்கத்தைக் கண்டு நமிர் ஒரு நொடி தயங்கினாலும், அந்தச் சிங்கம் இன்னும் சீரவோ, கர்ஜிக்கவோ இல்லையே.

கர்ஜனை தானே சிங்கம் எதிர்ப்பதையும், எச்சரிப்பதையும் உணர்த்துவது. லெனி தான் கர்ஜிக்கவில்லையே.

அதனால், லெனியின் இருப்பைக் கண்டுக்கொள்ளாமல், அந்தக் குழந்தை மீது பாயத் தயாரானான் நமிர்.

நமிர் நெருங்குவதையும், லெனி தன்னருகில் நிற்பதையும் பார்த்த அந்த மனிதக் குட்டி, “காப்பாத்து ப்ளீஸ்” என்றது லெனியின் பாதத்தை நீவியபடி.

கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயது இருக்கும் அந்தக் குழந்தைக்கு. உருவத்தை வைத்து, இது சிங்கம், இது சிறுத்தை என்று புரிந்துக்கொள்ள முடிந்த அந்தக் குழந்தைக்கு, சிறுத்தையைப் போல் சிங்கமும் மாமிசம் உண்ணும் மிருகம் தான் என்று தெரியும் தான்.

ஆயினும், நமிரின் கண்களில் தெரியாதக் கருணையும், இரக்கமும் லெனியின் கண்களில் கண்டுக்கொண்டதாலோ என்னவோ! சிறுத்தையிடமிருந்துக் காப்பாற்றச் சொல்லி சிங்கத்திடம் மன்றாடியது குழந்தை.

லெனியின் பாதத்தைப் பிஞ்சு கையால் நீவி, கலங்கியக் கண்களுடன் அவனை நோக்கிய அடுத்த நொடி, சிறுத்தையின் சீறல் சத்தம் கேட்டதாலோ, இல்லை காலையிலிருந்து வெயிலில் ஓய்வில்லாமல் ஓடித் திரிந்ததாலோ அக்குழந்தை மயங்கிச் சரிந்தது.

அதைக் கண்ட லெனியின் மனம் பதைப்பதைக்க, அந்தக் குழந்தையை நெருங்கி வரும் நமிரை அங்கேயே நிற்கும்படி எச்சரித்தான் லெனி.

எப்படி எச்சரித்தான்?

கர்ஜனை வழியாக.

ஆம். பிறந்து மூன்று வருடங்களில் ஒரு முறையேனும் கர்ஜிக்க முயற்சிக்காத லெனி, முதன் முறையாகக் கர்ஜித்தான்.

முன்னேறி வரும் சிறுத்தையை நிறுத்தி வைக்கும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தும் கர்ஜனை அது.

** ** ** ** ** **
 
Status
Not open for further replies.
Top Bottom