3
3.1
மேனன் மட்டுமல்ல, தர்மாவும் தர்ஷினியும்கூடத் தன்யாவை வியப்பாய்ப் பார்த்தார்கள்.
"சார், நீங்க முதலில் யாமினியோட ஆவியைப் பற்றிப் பேசியபோது, அது குழந்தைகளோடு விளையாடினதாகச் சொன்னீங்க. அதே மாதிரியே சில ஃப்ரெண்ட்லியான நிகழ்வுகள் நடந்ததாகச் சொன்னீங்க. அப்புறம் நீங்க யாமினியைப் பார்த்ததாச் சொன்னபோதும் அவ வெறுமனே நடந்து போவதைத்தான் பார்த்திருக்கீங்க. வேறு யாருமே அவளைப் பார்க்கலை. ஸோ, ஒரு பானிக், ஒரு பீதி வந்து பலர் உங்க ரிசார்ட்டைக் காலிசெய்யற அளவுக்கு எதுவுமே நடக்கல. எந்தவிதமான அசம்பாவிதமும் உங்க ரிசார்ட்டில் ரிப்போர்ட் பண்ணப்படல.
"நீங்க பயந்து, பூஜைகளுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க. உங்க க்ளையண்ட்ஸ் இதைக் கேள்விப்படவோ, பயப்படவோ முகாந்திரமே இல்லை. உங்க ஹோட்டல் பேரர்கிட்ட யாமினி வந்து மிரட்டினப்போ யாரையோ பழிவாங்கப் போறதா சொல்லியிருக்கா. அப்படியிருந்தா அதை அவ இந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே பண்ணியிருக்கலாமே, எதற்காக அவ காத்திருக்கணும்?
"ஆக, யாமினியோட ஆவி என்ற காரெக்டரை நீங்களே ஏதோ காரணத்திற்காக க்ரியேட் பண்ணியிருக்கணும், அல்லது யாமினி பழிவாங்க நினைப்பது உங்களைத்தான்!"
ஒரு மௌனம்.
"இந்தக் கொரோனா காலத்தில் எல்லோருடைய பிஸினஸுமே பாதிக்கப்பட்டிருக்கு, உங்களுடையதைத் தவிர. அப்புறம் இந்த யாமினி மேட்டரால ஓரளவு குறைஞ்சிருந்தாலும், ஒரேடியா குறையறதுக்கு எல்லாம் சான்ஸ் இல்லை" என்றான் தர்மா, தன்யாவின் பேச்சைத் தொடர்ந்து சிந்தித்தவனாய்.
எல்லோரும் மேனன் பேசுவதற்காகக் காத்திருந்தார்கள்.
3.2
மேனன் பெருமூச்சுவிட்டார். "நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க? என்ன சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்களோ, அதையே சொல்லிட்டுப் போறேன், சொல்லுங்க" என்றார் வெறுப்பாய்.
"மேனன், கோபப்படுவதில் அர்த்தமேயில்லை. இருக்கற உண்மையை எங்ககிட்டத் தெளிவா சொல்லிட்டீங்கன்னா, நாங்க வேலை செய்யச் சௌகரியமா இருக்கும். இதோ பாருங்க, நாங்க உங்ககிட்டப் பணம் வாங்கி வேலை செய்யப் போறவங்க. எங்க நேரம் உங்களைப் பற்றிய உண்மைகளைத் துப்பறியறதில் வீணானா நம்ம ரெண்டு பேருக்குமே நஷ்டம். நாங்க போலீஸ் இல்லை, வீ ஆர் நாட் ஜட்ஜ்மெண்டல். அப்புறம் உங்க இஷ்டம்" என்றான் தர்மா சமாதானப்படுத்தும் குரலில்.
மேனன் அவர்கள் மூன்று பேரையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு "ஓகே. இந்த விவகாரத்தால் என் பிஸினஸ் பெரிதாகப் பாதிக்கப்படலைங்கறது உண்மைதான். ஆனால் அதைத்தவிர நான் சொன்னது எதுவுமே பொய்யில்லை" என்றார் மேனன்.
"வர்த்தகம் பாதிக்கப்பட்டதா சொன்னது எங்களைத் தேடி வந்ததற்காகப் புனைந்த காரணம், இல்லையா? அப்போ உண்மையான காரணத்தைச் சொல்லுங்க. வேறு ஏதாவது மறைச்சிருந்தா அதையும் சொல்லிடுங்க" என்றாள் தன்யா.
"வேறு ஏதாவதுன்னா?"
"மிஸ்டர் மேனன், ஆவி நடமாட்டம் ஒரு இடத்தில் இருந்ததுன்னா, அங்கே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கலாம். ஏன்னா, மனமுடைந்த, கோபமுடைய ஆத்மாக்கள்தான் ஆவியா வருவாங்க. நீங்க சொன்ன பேரர் நிகழ்வைத் தவிர வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்ததா?
"சுருக்கமா சொல்லணும்னா, இந்த யாமினி விஷயத்தில் நீங்க பர்சனலா சம்பந்தப்படறது, உங்களுக்குத் தெரிஞ்சது, நீங்க ஊகிக்கறது, நீங்க நினைக்கறது, நீங்க கேள்விப்பட்டது, உங்களுக்குத் தெரியாதது, இன்னும் எக்ஸட்ரா… எல்லாம் சொல்லுங்க" என்றாள் தன்யா.
மேனன் தன்னையறியாமல் புன்னகைத்தார். "பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்குப் போகக் கூடாதுன்னாரே உங்க பிரதர்? நீங்க அதைவிடப் பெரிசா கேட்கறீங்களே?"
"ஆக, உங்களுக்கு யாமினியைப் பற்றிப் பெரிய கதை ரேஞ்சுக்குத் தெரியும்? சொல்லிடுங்களேன் சார், ஏன் கடப்பாறையால நெம்ப வைக்கறீங்க?"
மேனன் மீண்டும் புன்னகைத்தார்.
"யாமினியைப் பர்சனலா எனக்குத் தெரியாது. ஆனாலும் அவ குடும்பத்தைத் தெரியும், அவ அப்பாவை நல்லா தெரியும். யாமினியை நான் சின்னக் குழந்தையா பார்த்தது, அவ்வளவுதான்.
"இந்தப் படிப்பிடிப்புக் குழு முதன்முதலில் ஹோட்டலில் இடம் கேட்டபோது, நானும் தர்மாவைப் போலத்தான், யாமினி யார், ஹீரோ யார்னு கேட்கும் நிலையில் இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன். யாமினி என் தோழரோட மகள்னு தெரிஞ்சபோது சந்தோஷப்பட்டேன்…"
"எப்படித் தெரிஞ்சது? யார் சொன்னாங்க உங்களுக்கு?"
"யாமினியே சொன்னா. படப்பிடிப்புக் குழு வந்து ஒரு வாரமிருக்கும். அவங்க கெஸ்ட்ஸ் என்பதற்குமேல் எனக்கு எந்தச் சிந்தனையும் இல்லை, அவர்களைப் பற்றி. ஒருநாள் காலையில் நான் ரிசார்ட்டுக்கு வந்தபோது, அவங்க எல்லோரும் லௌஞ்சில் கூடியிருந்தாங்க. என்னைப் பார்த்ததும் யாமினியே ஓடிவந்து 'சார், என்னை நினைப்பிருக்கா'ன்னு கேட்டா. முதலில் தெரியலை, அப்புறம் அவங்க அப்பாவைப் பற்றிச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன். சந்தோஷப்பட்டேன். வீட்டுக்கு இன்வைட் பண்ணினேன். படப்பிடிப்புக் குழுவோடு வந்திருக்கறதால இப்ப சாத்தியப்படாதுன்னும், கட்டாயம் ஒருநாள் வீட்டுக்கு வருவதாகவும் சொன்னா.
"அப்புறம் ஒருமுறை ஒரு இளைஞனோடு அவளைக் காரிடாரில் பார்த்தேன். அவன் பெயர் சக்தி சிவகுமார்ன்னும் அவள் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்னும் கோல்ட் ட்ரீ ப்ளாண்டேஷன் என்ற கம்பெனியோட ஓனர் என்றும் அறிமுகம் செய்து வெச்சா.
"சிறிது காலத்திற்கப்புறம் நண்பர்களோடு பேசிட்டிருந்தபோது, திவாலாகிட்ட சீட்டுக் கம்பெனிகள் பற்றிப் பேச்சு வந்தது. அப்போ ஒரு நண்பர் சீட்டுக் கம்பெனியா தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே, பல கம்பெனிகளும் இந்த மாதிரிப் பண்றாங்க என்று சொல்லிச் சில உதாரணங்களும் சொன்னார். அப்போ அவர் சொன்ன ஒரு வாக்கியத்தைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"'இந்த கோல்ட் ட்ரீ ப்ளாண்டேஷனையே எடுத்துக்குங்க, விவசாயத்தை முன்னிறுத்திய கம்பெனி. பலபேரிடம் பங்குகள் பெற்று கூட்டுறவு விவசாயம் பண்ணப் போறதா சொன்னாங்க. மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போ, இன்சால்வென்ஸி கொடுக்கற நிலையில் இருக்காங்க.' – இதுதான் அவர் சொன்னது. கேட்ட எனக்கு எப்படி இருக்கும்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. யாமினி என் நண்பரோட மகள், என் மகள் அல்லது சகோதரி மாதிரி. அந்தப் பெண் ஏமாந்து போறாளோன்னு பயம் வந்தது.
"இந்தமுறை யாமினியை நானே வலியச் சந்திச்சுப் பேசினேன்…"
"…எங்கே?" என்று இடைமறித்தாள் தன்யா.
"ஸாரி?"
"எங்கே வெச்சுச் சந்திச்சீங்க?"
"ரிசார்ட்டில்தான்… வந்து, என் ஸூட்டில்…"
"ஓகே" என்றாள் தன்யா இயல்பாய். "கண்டினியூ."
"சத்தியமா சொல்றேன். அந்தப் பெண்ணை வார்ன் பண்ணத்தான் சந்திக்க விரும்பினேன்" என்றார் மேனன், ஒரு தன்னிலை விளக்கம் தேவைப்பட்டவராக. "அவ கொஞ்சம் தயக்கமாதான் என்னை வந்து பார்த்ததுபோல் எனக்கே தோன்றியது. நான் பண்றது தப்போங்கற பயம் எனக்கு வந்தது… நான் ஒரு ஃபேமிலி மேன். இது மாதிரி நடிகைகளை எல்லாம் சந்திச்சுப் பேசி எனக்குப் பழக்கமேயில்லை…
"முதலில் என்ன நினைச்சிருந்தாலும் அப்புறம் யாமினி இயல்பாகிட்டா. என்னுடைய நோக்கத்தில் தவறில்லேன்னு புரிஞ்சுக்கிட்டதும் என்னிடம் நல்லா பேசினா. அவ அப்பா, அம்மா, தம்பி, அவ குடும்ப நிலை, அவ நடிக்க வந்ததோட பிண்ணணி, இப்படிப் பல விஷயம் ஒரு சகோதரனிடம் பகிர்ந்துக்கற மாதிரி என்னிடம் சொன்னா.
"அவளிடம் அந்த சக்தியோட கம்பெனி பற்றி சூசகமா சொன்னேன். அதை மட்டும் காதில் போட்டுக்க மறுத்துட்டா. புதுசா ஆரம்பிச்ச கம்பெனியில் ஆரம்பகாலப் பிரச்சனைகள் இருக்கும், போகப் போகச் சரியாய்டும்ன்னுட்டா. அப்புறம் பேசப் பேசத்தான் தெரிஞ்சது, இந்தக் கம்பெனி ஆரம்பிக்கவே அவதான் பணம் கொடுத்திருக்கான்னு தெரிஞ்சது."
"எத்தனையாவது சந்திப்பில் இதைச் சொன்னாங்க?" என்றாள் தர்ஷினி அவளுடைய வழக்கமான மெல்லிய குரலில்.
மேனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"ப்ளீஸ், என்னை ஒரு கேவலமானவனா சித்தரிக்காதீங்க. நான் அப்படிப்பட்டவன் இல்லே."
"தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. இந்த விஷயம் அவங்க சுலபமா பகிர்ந்துக்கறாங்களா, இல்லை ரகசியமா காக்க நினைக்கறாங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்" என்றாள் தர்ஷினி மென்மையாக.
"நல்லா சமாளிக்கறீங்க" என்றார் மேனன் எரிச்சலாய். "நீங்க சொன்னதை உண்மைன்னு நம்பிப் பதில் சொல்றேன். முதலில் அவ இந்த விஷயம் சொல்லல. இரண்டாவது அல்லது மூன்றாவது சந்திப்பா இருக்கலாம்."
"மேனன், இதற்கே சென்ஸிட்டிவ்வா கோபப்படறீங்க. அப்படியானா என்னுடைய அடுத்த கேள்வி உங்களை நிச்சயம் அதிகமாகக் கோபப்படுத்தும். நல்லா யோசிச்சு, தயவுசெய்து உண்மையைச் சொல்லுமாறு கேட்டுக்கறேன். யாமினிக்கு, சரியா சொல்லப் போனா யாமினியோட ஆவிக்கு, உங்கமேல கோபம் வர ஏதாவது காரணம் இருக்கா?" தன்யா அழுத்தமாகக் கேட்டாள்.
ஆச்சரியமாக, இந்தக் கேள்விக்கு மேனன் கோபப்படவில்லை. சற்று யோசித்தார். பிறகு "நான் யாமினிக்கு ஒரு நல்ல நண்பனா இருந்தேன். அவள் கண்மூடித்தனமா அந்த சக்தியை நம்பறதைக் கண்டிச்சேன். அவ்வளவுதான். ஆனா நல்ல யோசிச்சுப் பார்த்தா, ஒரு காரணம் வேணும்னா சொல்லலாம். அவ தற்கொலை செய்துக்கிட்ட அன்றைக்கு, அவளுக்கும் சக்திக்கும் சண்டை வருவதற்குக் காரணமே நான்தான்" என்றார்.
(தொடரும்)