வணக்கம்
உங்களுடைய நாவலை முதன்முதலாக வாசிக்கிறேன் சொன்னால் சிரிப்பீர்கள் "கெளதம் சித்தார்த்" இந்தப் பெயர்தான் இந்நாவலை என்னை வாசிக்கத்தூண்டியது.சாதரணமாகவே இருபெயரும் எனக்கு மிகப்பிடிக்கும் இந்த இரண்டு பெயரும் ஒருவருக்கு இருந்தால் என்னால் எப்படி வாசிக்காமல் இருக்க முடியும்.சரி வாசித்து பார்ப்போம் என்று அத்தியாயம் எட்டிலிருந்துதான் வாசிக்கத் தொடங்கினேன் தொடங்கிய பின் தோன்றியது இப்படிப்பட்ட எழுத்தாளர் இவ்வளவு நாளாய் என் கண்ணில் தட்டுப்படாமல் எங்கே இருந்தார் என்று.வாசித்தால் மீண்டும் ஒருதரம் வாசிக்கத் தோன்றும் அடுத்த பகுதி எப்போது என்று முகநூலை ஆராயத்தோன்றும் அப்படிப்பட்ட ஒரு நாவல் தான்" நீ அறியாயோ முகிலினமே" .பழிவெறி வென்றதா அல்லது காதல் அதனை வென்று தன் காதலை நிலை நிறுத்தியதா என்பதுதான் நாவல். புகழ்பெற்ற சதுரங்க வீரன் கெளதமிற்கும் மகப்பேறு மருத்துவர் சஞ்சனாவிற்கும் இடையிலான சந்திப்பு காதல் விலகல் தியாகம் என்பனவற்றுடன் காதல்வாழ்க்கையையும் அழகாக பதிவு செய்திருந்தார். நந்தாவால் இருவரும் விலகி இருந்தாலும் காலமும் காதலும் அவர்களை சேர்த்து வைத்துவிட்டது. அன்பான அம்மாவின் இழப்பிற்கு பழிவாங்கத்துடிக்கும் கெளதமை நான் சஞ்சனாவிற்காகத்தான் நந்தவை பழிவாங்குகின்றார் என்று நினைத்தேன் இது எதிர்பாராத திருப்பம். பின்பு பார்த்தால் விபத்து அதன் இழப்பு நந்தா கௌதமிற்கு கொடுத்திருக்கிறார். அதற்காகத்தான் இந்த பழிவாங்கும் படலம் என்று .அந்த பழிவெறியை அணைக்கக்கூடிய சக்தி சஞ்சனாவிற்கும் அவரது மகளுக்கு மட்டுமே இருக்கிறது அதனால்தான் தாத்தா உயிர் பலியை தடுப்பதற்காக தாலியை சஞ்சனாவிடம் முன்பே இதற்கு தேவை வரும் என்று ஞானத்தால் அறிந்து தாத்தா கொடுத்து வைத்திருக்கிறார். அதனை சஞ்சனா அழகாகப் பயன்படுத்தி தன் காதலால் கெளதமின் பழிவெறியை வெற்றுவேட்டாக மாற்றிக்கொண்டார். தாத்தாவின் ஞானத்தால் பெரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இங்கே இருவர் என் மனதை கொள்ளைகொண்டனர் காதலுக்கு கெளதம் , நட்புக்கு சுரேந்தர் இவர்கள் இருவருமே.இங்கே இயற்கையை கூட ஒரு கதாபாத்திரமாக அமைந்திருந்தது மிகச்சிறப்பாக இருந்தது.கௌதம் மனதோடு முகிலினத்துடன் உரையாடுவது அழகாக இருந்தது.தன் பொறாமையால் விபத்தாக இருந்தாலும் காப்பாற்றக்கூடிய நிலை இருந்தும் நந்தா காப்பாற்றாமல் போனதற்கு மனிதன் தண்டனை கொடுக்காவிட்டாலும் கூட இயற்கை தண்டித்து கௌதமிற்கு பரிகாரம் செய்துவிட்டது.வெளிப்பார்வைக்கு வில்லன்போல் நாயகன் இருந்தாலும் தன் அம்மாவின் இறப்பிற்கு காரணமானவனை கௌதம் பழிவாங்கும் போது என்னால் ஒருவீதம்கூட நந்தாவிற்கு ஆதரவு தரமுடியவில்லை.உங்களின் எழுத்தில் வக்கிரம் இல்லாத சொல்லாடல்களும் அதுவும் வாசகர்களை தக்கவைக்கும் நுட்பமான எழுத்துநடையும் ரசனைக்குரியதாகவே இருந்தது.அழகான விறுவிறுப்பான சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத நாவல்.நல்வாழ்த்துகள் நீங்கள் இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு.
அன்புடன்
தட்சாயணி