அத்தியாயம் - 2
விண்ணை எட்டும் உயரத்தில் காண்போரின் கண்ணை கவரும் வகையில் கலைநயத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்ட மாளிகை போன்ற அவ்வீட்டின் அழகை நிதானமாய் ரசிக்க இயலாதபடி வீட்டிற்குள் பெரிய போர்களமே நடைபெற்று கொண்டிருந்தது.
"என்னங்க சொன்னா கேளுங்க, இப்படிலாம் பண்ணாதீங்க எனக்கு ஒண்ணுமே வேணாம் என்னைய விடுங்க" என கெஞ்சியபடி நாற்பதைந்து வயதான பெண்மணி ஓடிக்கொண்டிருக்க,
அவரை துரத்தியபடியே சென்றவரோ, "அதேதான் லெட்சுமி நானும் சொல்றேன், வயசான காலத்துல எதுக்கு இப்படி ஓடுற ஒழுங்கா இரண்டு நிமிசம் நில்லு; திருடனுங்களையே சுலபமா பிடிக்கிற எனக்கு உன்னைய பிடிக்க எவ்ளோ நேரமாக போகுது ஒழுங்கா ஓடாம நில்லு செல்லம்" என கூறியபடியே அவரின் கணவரான சேகர் ஐ பி எஸ் துரத்தி கொண்டிருந்தார்.
"ஐ அம்மா மாட்டுனீயா, அப்பா நான் அம்மாவை பிடிச்சிட்டேன் நீங்க பொறுமையாவே வாங்க" என கூறியபடியே தனது தாயை துருவ் வழிமறித்து நிற்க,
அவரை எங்கும் நகர முடியாதபடி ரஞ்சித்தும் கிருஷும் சுற்றி வளைத்தனர்.
"ஹேய் ப்ளிஸ் விடுங்கப்பா, அம்மாவை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலையா; நீங்க பண்ற சேட்டையெல்லாம் மறைச்சு அப்பாகிட்டயிருந்து எத்தனை தடவை உங்களை காப்பாத்திருக்கேன் இப்போ பதிலுக்கு அம்மாவை காப்பாத்தக் கூடாதா" என முகத்தை சோகமாய் வைத்து கொண்டு வினவ,
"நோ பிக் மம்மி, இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் நாங்க பிக் டேடியோட கட்சி தான் அதுனால எங்க சப்போர்ட்டை எதிர்ப்பார்க்காதீங்க" என கூறிய கிருஷ் ரஞ்சித்திற்கு ஹைபை தத்தான்.
அதற்குள் அங்கு வந்த தந்தையை கண்ட மைந்தர்களோ தாயின் இரண்டு கைகளையும் கெட்டியாய் பிடித்துக்கொள்ள பின்னால் ஓடாதபடி ரஞ்சித்தும் வழிமறைத்து நின்றான்.
அதனை பயன்படுத்தி லெட்சுமியின் வாயை திறந்த சேகரோ வலுக்கட்டாயமாக இட்லியை ஊட்டிவிட,
அதனை வாங்கிய நொடி லெட்சுமியின் முகம் சோகத்தில் சுருங்கியது.
"அய்யோ ஏங்க இப்படி பண்றீங்க, உங்களோட நல்லதுக்காக தானே வார வாரம் வெள்ளிகிழமை கஷ்டபட்டு விரதமிருக்கேன்; ஆனா நீங்க என்னனா ஒவ்வொரு தடவையும் இப்படி ஏதாவது பண்ணி விரதத்தை கெடுத்திடுறீங்களே; இதுக்கு இந்த வாலுங்களும் துணையா இருக்குங்க ஏங்க நான் விரதமிருக்கிறது பூஜை பண்றதெல்லாம் உங்க நன்மைக்காக தானே அதைக்கூட புரிஞ்சிக்காம இப்படி பண்ணா என்னங்க அர்த்தம்" என கூறி சிணுங்கியவரை பார்த்து சிரித்த மகன்களை கோபமாய் முறைத்தபடியே முகத்தை திருப்பி கொண்டார்.
அதனை கண்ட சேகரோ, "இங்க பாரு லெட்சுமி மா, நீ எனக்காக இரண்டு நிமிசம் மனசார வேண்டிகிட்டாலே போதும்; அதை விட்டுட்டு விரதம் வேண்டுதல்னு நீ உடம்பை வருத்திகிட்டேனா அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா; நான் இப்படி ராப்பகலா உழைச்சு சம்பாதிக்கிறதே நீங்க நல்லா இருக்கணும்னு தானே அதுபுரியாம நீ விரதம் வேண்டுதல்னு உடம்பை வருத்திக்குறது எந்த வகையில நியாயம்; பசங்களை திட்டாத அவனுங்களும் உன்மேல இருக்கிற பாசத்துல தான் இப்படி பண்ணுறாங்க; சரியா, அட என்ன லெட்சுமி மா இன்னமும் முகத்தை தூக்கி வைச்சிகிட்டா என்ன அர்த்தம் எங்க கொஞ்சம் சிரி பார்ப்போம்" என கூறியபடியே தனது மனைவியின் முகத்தை கையில் ஏந்தி கொஞ்ச துவங்க,
அதை பார்த்த ரஞ்சித்தோ, "அப்பா நாங்க இன்னும் கிளம்பல அதுக்குள்ள ரொமான்ஸை ஆரம்பிச்சிட்டீங்க நாங்க போனதுக்கு அப்புறமா பொறுமையா கொஞ்சிக்கோங்க" என கூறியபடி கிருஷ்ஷையும் துருவ்வையும் இழுத்துகொண்டு கீழே இறங்கினான்.
அப்பொழுது கிருஷோ, "பிக் டேடி, பிக் மம்மியோட விரதம் இன்னும் முழுசா கலையல ஒரு நாளு இட்லியை வாய்க்குள்ள தள்ளுனா தான் கலையும் அதுனால சீக்கிரமா வந்திருங்க" என கூறியடியே ஓட்டமெடுக்க,
அதனை ஆமோதித்த சேகரோ, "அவன் சொல்றதும் சரிதான்ல, அப்போ நாம சாப்பிட போலாமா" என கூறிய மறுநொடியே தனது மனைவியை இருகைகளாலும் தூக்கி கொள்ள,
அதில் பதறிய லெட்சுமியோ, "அய்யோ என்னங்க இது, பசங்க முன்னாடி இப்படியெல்லாம் பண்றீங்களே உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா; என்னைய இறக்கி விடுங்க ப்ளிஸ்" என கூறியபடி முகத்தை கோபமாய் வைத்து கெஞ்சினாலும் தனது கணவரின் செயலில் மனமெங்கும் மெல்லிய சாரலே வீசியது.
இதனையெல்லாம் கீழிருந்து பார்த்த ஒரு கண்களோ சந்தோஷத்திலும் வலியிலும் கலங்க,
"ஓ மை காட் ஜானு, எதுக்கு இப்போ உன் கண்ணு வேர்க்குது தூசி ஏதாவது விழுந்திருச்சா மா" என கூறிய கிருஷ் தனது அன்னையை நோக்கி வர,
அவனை அடித்த ஜானகியோ, "அதென்னடா பேர் சொல்லி கூப்பிடுற பழக்கம், அம்மானு கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவ; எப்போ பார்த்தாலும் ஜானு ஜானுனே கூப்பிடுற..." என கூறியபடி கண்ணை துடைத்து கொண்டு சிரித்தார்.
அதனை பார்த்த கிருஷோ தனது தாயை அணைத்தபடியே, "அட என்ன ஜானு, இந்த சின்ன விஷயத்துக்கு போய் திட்டுறீயே இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல பார்த்துக்கோ; எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு இது என்னோட உரிமை இதை நீ குறை சொல்லகூடாது" என கூறிய மகனின் அன்பில் இன்பமாய் கரைந்தவரோ அவனின் உச்சியில் முத்தமிட்டு அகம் மகிழ்ந்தார்.
"அண்ணா இந்த கொடுமையை கேட்க ஆளே இல்லையா; ஒருபக்கம் பத்து கழுதை வயசாகியும் இளம் காதல் ஜோடியா வலம் வர அம்மா அப்பா இன்னொரு பக்கம் எப்பயுமே பாசத்தை பிழியுற அம்மா பிள்ளை இவனுங்களுக்கு நடுவுல மாட்டிகிட்டு நாம தான்டா கஷ்டபடுறோம்" என கூறிய துருவோ வராத கண்ணீரை துடைத்துக் கொள்ள,
அதற்கு ரஞ்சித்தோ, "ஆமா டா தம்பி, அன்பு ஒன்று தான் அனாதை போலடா" என கூறியபடி துருவ்வை கட்டிக்கொள்ள;
அதனை கேட்டபடியே கீழிறங்கிய லெட்சுமியோ கணவனின் கைசிறையிலிருந்து விடுபட்டு மகன்களின் காதினை சிறையெடுக்க அவ்விடமே சிரிப்பொலியால் நிரம்பியது.
அப்பொழுது தனது அறையிலிருந்து வெளிவந்த நட்ராஜோ, "ச்சே என்ன இது, காலங்காத்தால ஒரே சத்தமா இருக்கு இதென்ன வீடா இல்ல மீன் மார்கெட்டா இவ்ளோ சத்தம் போட்டுட்டு இருக்கீங்க; மனிசனை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்க போல இதுக்கு மத்தியில நான் எப்படி சாப்பிடுறதோ, இந்தாடி எனக்கு சாப்பாடெல்லாம் ஒண்ணும் வேணாம் இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறதால நான் வர லேட்டாகும் எப்போ வருவீங்கனு போன் பண்ணி தொல்லை பண்ணாத" என கூறியபடி லேப்டாப் பேக்கை தூக்கி கொண்டு ஓடினார்.
அவரை துரத்தியபடியே ஓடிய ஜானகியோ, "என்னங்க கொஞ்சமாவது சாப்பிட்டு போங்க" என வாசல்வரை சென்றி கத்தியும் கேட்காமல் காரில் பறந்தவரை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்க,
அவரை சூழ்ந்த மூன்று மைந்தர்களும், "சித்தி, இப்போ எதுக்கு நீங்க தேவையில்லாம கவலைப்படுறீங்க; சித்தப்பா இப்படி பண்றதென்ன புதுசா அழாதீங்க சித்தி" என துருவ் சமாதானப்படுத்த,
"அந்த நட்டுக்கு நட்டு கழண்டு போச்சு ஜானு, அதனால தான் இப்படியெல்லாம் பண்றாரு; நீ அதைபத்தியெல்லாம் கவலைபடாத வா நம்ம போய் சாப்பிடலாம்" எனக் கூறியபடியே கிருஷ் தனது அன்னையை வீட்டிற்குள் அழைத்து செல்ல,
அங்கே லெட்சுமியோ ஜானகியை இருக்கையில் அமர வைத்து இட்லிகளை சட்னி சாம்பாருடன் பரிமாற அதனை எடுத்து தனதன்னைக்கு ஊட்டி விட துவங்கினான் கிருஷ்.
இவ்வாறு பாசத்திற்கும் சண்டைக்கும் பெயர் பெற்ற குடும்பம் தான் சேகர் ஐ பி எஸ்ஸின் குடும்பம்.
காதல் திருமணம் புரிந்த நட்ராஜிற்கு நாளடைவில் பிஸினஸ் மேல் ஈடுபாடு ஏற்பட குடும்பத்தை மறந்து லேலை லேலையென ஓடத் துவங்க,
கணவரின் செயலில் வேதனையடைந்த ஜானகிக்கு ஆறுதலாய் பிறந்த கிருஷ்; தனது தாய்க்கு இன்றளவும் துணையாய் இருக்கிறான்.
இவர்களை தங்களது பொறுப்பில் பார்த்துக்கொள்ளும் சேகரும் தம்பி பிள்ளையை தன் பிள்ளையாக எண்ணி வளர்க்க, கணவருக்கு துணையாய் தனது இரு மகன்களான ரஞ்சித் மற்றும் துருவ்வோடு சேர்த்து கிருஷையும் தனது மகன் போல எவ்வித வேறுபாடுமின்றி பாசத்தை பொழிந்து வளர்த்த லெட்சுமி; ஜானகிக்கு உடன்பிறவா சகோதரியாகவே மாறி அன்பினை பொழிகிறார்.
தாய் தந்தை காட்டும் பாசத்தை பார்த்து வளர்ந்த ரஞ்சித்தும் துருவ்வும் கிருஷிற்கு பாசமழையை பொழிய, ஒரே நாளில் பிறந்த ஒத்த வயதுடைய துருவ்வும் கிருஷும் எதிரும் புதிருமான சண்டைகளால் அன்பினை பரிமாற; இவர்களுக்கு ஒரு வயது மூத்தவனான ரஞ்சித்தோ பாசத்தினாலே தம்பிகளின் சேட்டைகளுக்கு துணையாய் இருந்து அன்பால் காக்கிறான்.
இவ்வாறு நட்ராஜின் அன்பினை தவிர பிறர் அன்பில் திளைத்து வாழும் ஜானகி, சேகர் லெட்சுமியின் காதலை பார்க்கும்போது மட்டும் தன் கணவனும் தன்னிடம் இவ்வாறு காதலை பொழிய மாட்டாரா என்ற ஏக்கத்துடனே விழியோரம் எட்டி பார்க்கும் கண்ணீரை சுமந்தபடி தனது வாழ்க்கையை கடத்துகிறார்.
"ஓகே மா, எங்களுக்கு காலேஜுக்கு டைமாச்சு நாங்க போயிட்டு வரோம்" என கூறியபடியே துருவ் தனது அன்னைக்கு ஒரு அன்பு முத்தத்தை பரிசளிக்க,
"சரி ஜானு, நானும் காலேஜுக்கு கிளம்புறேன் டாட்டா" என கூறிய கிருஷ் அன்னையை கட்டிகொண்டு முத்தமிட்டான்.
அப்பொழுது அவனின் சட்டை காலரை பிடித்த துருவோ, "நீ இப்படி அன்புமழை பொழிஞ்சே காலேஜுக்கு லேட் பண்ணிடுவ; அதுனால ஒழுங்கா இப்பவே என்கூட கிளம்பி வா" என கூறி இழுத்துக்கொண்டு செல்ல,
அவனின் செயலில் அதிர்ந்த கிருஷோ, "டேய் அண்ணா, இவன்கிட்டயிருந்து என்னைய காப்பாத்துடா" என அண்ணனை துணைக்கு அழைக்க,
அதனை காதில் வாங்கிக் கொள்ளாதவாறே அங்கிருந்து நழுவியவனை கண்ட கிருஷோ,
"அடேய் அண்ணா, இப்படி என்ன காப்பாத்தாம ஓடுறீயே நீ நல்லா இருப்பீயா; டேய் டேய் தயவுசெஞ்சு என் சட்டையில இருந்து கையை எடுடா, நீ இப்படி இழுத்திட்டு போறதை என் தோழிங்க யாராவது பார்த்தா என் மானமே போயிடுமே; அய்யயோ டேய் துருவ் எதிர்வீட்டு பிரியா பார்க்குறா டா என்னைய கொஞ்சம் பீரியா விடுடா" என கூறி துருவின் கையிலிருந்து சட்டையை காப்பாற்றியவனோ,
அங்கிருந்து தப்பித்து ஓட அவனை துரத்திகொண்டே துருவ்வும் செல்ல இருவரின் சட்டையையும் ஒன்றாய் பிடித்து வண்டிக்குள் தள்ளிய ரஞ்சித்தோ காலேஜை நோக்கி வண்டியை கிளப்பினான்.
இதனையெல்லாம் பார்த்து சிரித்தபடியே வெளியில் வந்த சேகரோ, "சரிமா, அப்போ நானும் கிளம்புறேன் பார்த்து இருந்துக்கோங்க" என கூறியவரோ தனது மனைவியிடம் ஜானகியை காட்டி ஏதோ கண்களாலே உணர்த்த முயல,
அதனை புரிந்து கொண்ட அவரின் தர்மபத்தினியோ 'எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்கிறேன்' என கண்களாலே உணர்த்தியதில் திருப்தியானவரோ தனது ஜீப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
"அக்கா நீ இப்படி இருப்பனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, இப்படியா உங்களை சுத்தி நடக்கிற தவறை கூட கண்டுக்காம இருப்பீங்க"
"ஏண்டி, காய்கறி வாங்கிட்டு வந்தவளை ஏதோ முக்கியமான விஷயம்னு கூப்பிட்டிட்டு இப்போ என்னடி சம்மந்தமே இல்லாம உளறிட்டு இருக்க; எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு இல்லனா உன்னோட வேலையை பாரு வெட்டியா பேசி என் பொறுமையை சோதிக்காத" என தன்னிடம் வம்பிழுத்த பக்கத்து வீட்டுகாரியிடம் கோபமாய் பொரிந்தாள் சாந்தி.
இவரின் பெயரில் மட்டும் சாந்தி குடிகொண்டிருக்கும் ஆனால் பேச்சிலும் செயலிலும் அடாவடியே நிரந்தரமாய் சூழ்ந்திருக்கும்.
இதனாலேயே தெருவாசிகளிடம் சண்டைக்காரி என்ற பெயரோடு வலம் வருவார்
இப்பொழுது அவரிடமே சண்டையிழுக்க பக்கத்து வீட்டுகாரி முயற்சிக்கிறாள்.
"அக்கா, இப்போ எதுக்கு என்மேல கோபப்படுற; ஏதோ உன்மேல இருக்கிற அக்கறையில உன் புருசனோட அக்கா பொண்ணை பத்தி சில விஷயம் சொல்லலாம்னு பார்த்தேன்; அதுக்குள்ள இப்படி சொல்லிட்ட உனக்கு வேணாம்னா விடுக்கா நான் போய் என் வேலையை பார்க்குறேன்" என சரியாக தூண்டில் போட்டவளின் சூழ்ச்சி அறியாமல் வசமாய் சிக்க துணிந்தார் சாந்தி.
"அடியே நில்லுடி, இப்போ என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி ஓடுற; சரி, அந்த அனாதை கழுதையை பத்தி ஏதோ சொல்லணும்னு சொன்னீயே என்ன விஷயம்" என வினவ,
"அது ஒண்ணுமில்லக்கா, நேத்து என் பையன் அவனோட பிரண்ட்டுக்கு பிறந்தநாள்னு கேக் வாங்க போனான்; அவனே நைட் பதினோரு மணிக்கு தான் போயிருக்கான் அந்த நேரத்துல அந்த கடையில உங்க வீட்டு பொண்ணு வேலை பார்த்துட்டு இருக்கா; சரி, அதைக்கூட விட்டிறலாம் ஆனா அங்க ஒரு பையன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வேற இருந்தாளாம்; இப்போ காலம் வேற கெட்டு போயிருக்கு அவ வேலை பார்க்குறேன்னு போய் எவனையாவது இழுத்துட்டு போயிட்டானா நாளைக்கு இந்த தெருவுல இருக்கிறவங்க உன் வீட்டு பொண்ணு இப்படி பண்ணிட்டானு உன்னை தான தப்பா பேசுவாங்க; ஏதோ எனக்கு தோணுறதை சொல்லிட்டேன் அக்கா அப்புறம் உன் இஷ்டம்" என கூற சாந்திக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
"ச்சே, அந்த அனாதை கழுதைக்கு இப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா; இராத்திரியும் வேலை இருக்குனு போனாலே என்னவா இருக்கும்னு யோசிச்சேன் இப்போதானே புரியுது; எப்பயும் வீட்டுக்கு தானே வருவா வந்ததும் கையை காலை உடைச்சு அடுப்புல போடுறேன்" என படபடப்பாய் பொறிய பக்கத்து வீட்டுகாரியின் நாரதர் வேலை சிறப்பாக நடந்தது.
அப்பொழுது அந்த நிகழ்வை கலைக்கும் வகையில் அங்கு ஒரு கைத்தட்டல் ஓசை கேட்க, சத்தம் வந்த திசை நோக்கி இருவரும் பார்வையை திருப்பினர்.
"சூப்பர் ஆண்ட்டி, என்னமா பேசுறீங்க நீங்க; என்னடா நேத்து உங்க பையனை நாளு அடி அடிச்சு அனுப்புனேனே அதுக்கு ஏதாவது கலாட்டா வருமேனு யோசிச்சேன்; அதை இப்படி பண்ணுவீங்கனு நினைச்சு கூட பார்க்கல நான் என்னோட வேலையை தான் பார்க்குறேன் ஆனா உங்க பையன் தான் கேக் வாங்க வரேன்னு கடையில கலாட்டா பண்ணான்; அதான் நாளு அடி போட்டேன் அதை என்னனு கேட்காம என்னைய பத்தி தப்பா பேசுறீங்களா உங்க வயசுக்கு மரியாதை தந்து சும்மா விடுறேன் அயோக்கிய பையனுக்கு வக்காளத்து வாங்காம ஒழுங்கா ஓடிருங்க" என தனது கண்ணிலேயே கணலை சுமந்தபடி இங்கு நடந்த நிகழ்வினை பார்த்த அதரா கோபமாய் மிரட்ட,
அதை கேட்டவரோ அங்கிருந்து வேகமாய் நழுவி கொண்டார்.
"அத்தை, உங்களுக்கும் ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிக்கிறேன்; என் அம்மா அப்பா தான் இறந்துட்டாங்க நீங்களும் மாமாவும் எனக்கான சொந்தங்களா இருக்கீங்க அப்படி இருக்கும்போது அனாதைனு ஏதாவது சொன்னீங்க நடக்குறதே வேற; இந்தாங்க என்னோட சம்பள காசு ஐயாயிரம் ரூபா இந்த காசு இனியும் வேணும்னா அமைதியா இருக்கிற வழியை பாருங்க" என மிரட்டியபடியே உள்ளே செல்ல அவளை திட்டியபடி சாந்தியும் வீட்டிற்குள் நுழைந்தார்.
இதனையெல்லாம் வேதனையோடு பார்த்தபடி காய்கறி கூடையோடு வீட்டிற்குள் வந்த கோபாலோ,
"தாரா மா, தாரா இங்க கொஞ்சம் வாயேன்" என அழைக்க மாமாவின் குரலுக்கு உடனே ஓடி வந்து விட்டாள் அதரா.
"மாமா, உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் தேவையில்லாம அலையாதீங்கனு ஏதாவது வாங்கணும்னா என்கிட்ட சொல்லிருக்கலாம்ல உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம்" என கேட்க,
"அட பரவால மா, இதுல என்ன இருக்கு அப்புறம் மா" என கூறி தனது குரலை தாழ்த்திவாறே,
"இந்தா மா, இதுல ஐயாயிரம் ரூபா இருக்கு உன் செலவுக்கு வைச்சிக்கோ" என குடுக்க,
அதனை பார்த்தவளோ, "அய்யோ மாமா இதெல்லாம் எதுக்கு..." என தயங்கினாள்.
"அட என்னமா நீ, உன் அத்தையோட தொல்லை தாங்காம தான் உன்னோட தேவையை பூர்த்தி செய்யவாவது பார்ட் டைம்மா வேலைக்கு போன; ஆனா உன் அத்தை அதையும் விடாம உன் காசை வாங்கிட்டா உனக்குனு செலவுக்கு என்ன பண்ணுவ அதுக்காகவாவது இதை வைச்சிக்கோ மா" என கூறிய மாமனை கட்டிகொண்டாள் அதரா.
தனது சிறு வயதினிலே தாய் தந்தையை இழந்த அதராவை தன்னுடைய பொறுப்பில் ஏற்றுகொண்டவரோ, தன் மனைவியிடமிருந்து எழுப்பபட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி தனது மகளிற்கு செய்வதை போல அதராவின் தேவைகளையும் பூர்த்தி செய்து வளர்த்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைத்தவளோ தனது தேவையை தானே பூர்த்தி செய்ய பகுதி நேர வேலைக்கு செல்ல, அவளின் சந்தோஷத்தை விரும்பாத அத்தையோ அந்த பணத்தையும் பறித்து கொண்டிருக்கிறாள்.
இப்படியான தன் வாழ்க்கையை நினைத்து வருந்தாமல் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர போராடி கொண்டிருக்கிறாள் அதரா.
தனது மாமனிடம் சொல்லி கொண்டு அதரா கல்லூரிக்கு கிளம்ப,
"அடியே, காலேஜுக்கு போனோமா வீட்டுக்கு வந்தோமானு இரு; அதைவிட்டுட்டு எங்கயாவது ஊரு சுத்துன அவ்ளோதான் வீட்டுல நிறைய வேலை இருக்கு நான் சொல்றது கேட்குதாடி" என பக்கத்து வீட்டுகாரிக்கு கேட்பது போல சாந்தி கத்த,
அதனை கேட்ட தாராவோ, "இந்த அத்தையோட பெரும் தொல்லையா இருக்கே முதல்ல இவங்களை ஏதாவது பண்ணனும்..." என திட்டியபடி கல்லூரிக்கு பயணமானாள்.
'பளார்' என விழுந்த அடியின் ஓசை அந்த பாழடைந்த குடோன் முழுக்க எதிரொழிக்க, தனது கன்னத்தில் கையை தாங்கியபடி தரையில் வீழ்ந்து கிடந்தான் விசுவாசமான அடியாள்.
"முட்டாப்பயலே, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா; உன்னைய நம்பி ஒரு வேலையை குடுத்தா அதைக்கூட ஒழுங்கா பண்ணாம சொதப்பிட்டு வந்திருக்க; உன்னால நம்மாளுங்களும் மாட்டி நம்ம பொருளும் மாட்டிருக்கு வயசான கிழம் தானே இவனால நம்மல என்ன பண்ண முடியும்ற மிதப்புல இருக்கீயோ..." எனக் கூறிகொண்டு தனது ஆத்திரம் தீரும்வரை அவனை அடித்து மிதித்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரின் கரத்தை ஒரு கரம் பற்ற அதில் திரும்பி பார்த்தவரின் முன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
"என்ன அண்ணாச்சி, இந்த சின்ன விஷயத்துக்கு போய் இவ்ளோ டென்சனாகுறீங்களே; நீங்க எதை நினைச்சும் கவலைபடாதீங்க நான் நம்ம பாஸ்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் இனி எல்லாமே சரியாகிடும்" என கூற,
அதனை கேட்டு அதிர்ந்த அண்ணாச்சியோ, "அடப்பாவி செந்திலு, இப்போ எதுக்குடா நம்ம பாஸ்கிட்ட விஷயத்தை சொன்ன; இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து நான்தானே திட்டு வாங்கணும் எனக்குனே வருவீங்களா டா" என கத்த துவங்கினார்.
"அட சும்மா இருங்க அண்ணாச்சி, அப்படிலாம் ஒண்ணும் நடக்காது; இந்நேரம் எல்லாமே சரியாக ஆரம்பிச்சிருக்கும் பாருங்க" எனக் நம்பிக்கையளிக்க,
"அப்படியா" என ஆச்சர்யமாய் வினவினார் அண்ணாச்சி.
அதேசமயம் ஒரு காவல் நிலையத்திற்குள் ஒரு வக்கீல் தெனாவெட்டாக அமர்ந்து கொண்டிருக்க, அவரின் முன்னிருந்த இன்ஸ்பெக்டரோ குழம்பிய முகபாவத்தோடு வீற்றிருந்தார்.
"சார், இது உங்களுக்கே நியாயமா இருக்கா தங்கச்சிக்காக டப்பா நிறைய பஞ்சுமுட்டாய் வாங்கிட்டு போனவனை போதை மருந்து கடத்துனான்னு கைது பண்ணிருக்கீங்க; இது எந்த வகையில நியாயம்" என வினவ,
"சார், நாங்க பார்த்தப்போ இதுல போதை மருந்து இருந்துச்சு; அதுமட்டுமில்லாம இவனும் இதுக்கு முன்னாடி நிறைய தடவை போதை பொருள் கடத்தி அரெஸ்ட் ஆனவன் தான்; அதான் இப்பயும் அதேமாதிரி பண்ணானோனு யோசிச்சோம் ஆனா அதெப்படி பஞ்சுமுட்டாய்யா மாறிடுச்சு" என குழப்பமாய் நெற்றியை தடவிக் கொள்ள,
அதனை பார்த்த வக்கீலோ, "இன்ஸ்பெக்டர் சார், கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்னு சொல்லுவாங்க; அதுமாதிரி தான் ஒருகாலத்துல போதை மருந்து சப்ளை பண்ணவன் தான் ஆனா இப்போ தங்கச்சிக்காக திருந்தி மாறிருக்கான்; அப்படிபட்டவனை போய் தப்பா நினைச்சுட்டீங்களே" என தனது பேச்சு திறமையால் வக்கீல் பேசிக்கொண்டிருக்க,
இவர்களின் உரையாடலுக்கு காரணமானவனோ நடந்தவற்றை நம்ப முடியாமல் யோசித்து கொண்டிருந்தான்.
தனது கூட்டாளியுடன் கஸ்டமருக்கு தருவதற்காக போதை மருந்தை எடுத்துகொண்டு பைக்கில் விரைய,
அப்பொழுது அங்கு போலிஸ்காரர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிட அதில் கூட்டாளி தப்பித்து இவன் வசமாக மாட்டிக்கொண்டான்.
அப்பொழுது அவர்களின் அருகில் ஒரே காரில் பதிமூன்று பேர் சென்றதை காவலர்கள் விசாரித்து கொண்டிருந்தனர்.
"என்னப்பா நீங்க, பிரண்ட்டுக்கு சர்ப்பிரைஸ் குடுக்க போறதுன்னா இப்படியா இத்தனை பேரு ஓரே கார்ல போறது; இதுல உங்களுக்கு ஆச்சீடண்ட் ஆச்சுனா யாரு பொறுப்பு; ஒழுங்கா வேறொரு காரை வரவைச்சு அதுல பாதி பேர் போங்க இப்போ இப்படி பண்ணதுக்கு அபராதம் கட்டுங்க" எனக் கூற,
அக்கூட்டத்திலிருந்த ஒருவனோ தன்னிடமிருந்த தொகை மொத்ததையும் அபராதமாய் செலுத்த மற்றவர்களோ வேறொரு வாகனத்திற்கான ஏற்பாட்டினை செய்ய துவங்கினர்.
இதையெல்லாம் கவனித்தபடியே போலிஸிடமிருந்து தப்பிக்கும் வழியை பதட்டமாய் யோசித்து கொண்டிருக்க,
அப்பொழுது அங்கு திடீரென காரோட்டிகள் சிலர் போலிஸிடம் தகராறு செய்ய அவ்விடமே கலவரமானது.
அதனை பயன்படுத்தி தப்பித்துவிடலாமா என யோசிக்க துவங்கிய கணநேரத்திலே பதிமூன்று நபர்கள் கொண்ட நண்பர்கள் குழுவோ இந்த பிரச்சனையில் சிக்காதவாறு தாங்கள் ஏற்பாடு செய்த வண்டியில் ஏறுவதற்காக ஓட,
அந்த கூட்டத்திலிருந்த ஒரு கை மட்டும் போதை மருந்து கவரை எடுத்துக்கொண்டு வேறொரு கவரை அங்கு வைத்தபடி சென்றது.
தனது கண்ணிமைக்கும் நொடியில் நடந்த நிகழ்வில் ஏற்பட்ட அதிர்வலையில் இவன் நிற்க, போலிஸில் சிலரோ கலவரத்தை அடக்க; இன்னும் சிலரோ இவனை அங்கிருந்து வண்டியோடு இழுத்து செல்ல விரைந்தனர்.
இப்பொழுது இதனையெல்லாம் நினைத்தவனோ எச்சிலை விழுங்க,
இன்ஸ்பெக்டரும் சிறிது யோசனைக்கு பின்னர்,
"சரி சார், நாங்க தான் தவறுதலா அரெஸ்ட் பண்ணிட்டோம் போல; இதுல ஒரு கையெழுத்து போட சொல்லி கூட்டிட்டு போங்க" என எரிச்சலாய் உரைக்க,
அதனை கேட்டு இதழோரம் புன்னகையை ஏந்தியபடி ஸ்டைலாக எழுந்து நின்றவனோ, "சரி இனஸ்பெக்டர், இனியாவது குற்றவாளி யாரு நிரபராதி யாருனு பார்த்து அரெஸ்ட் பண்ணுங்க" என இலவச அறிவுரையை தந்தபடி அங்கிருந்து சென்றான்.
இங்கு அண்ணாச்சியை சமாளித்து கொண்டிருந்த செந்திலுடைய போன் அடிக்க,
அதை எடுத்து பேசியவனின் முகமோ பிரகாசமாய் ஒளிர்ந்தது.
"அண்ணாச்சி, நம்ம பொருள் கஸ்டருக்கு போய் சேர்ந்திருச்சு அவங்களும் முழு பணத்தையும் செட்டில் பண்ணிட்டாங்களாம்; அதுமட்டுமில்லாம இந்நேரம் நம்மாளுங்களை போலிஸே ரீலிஸ் பண்ணிருக்கும் இனி நீங்க எதைபத்தியும் கவலைபடாதீங்க; ஏய் யாருடா அங்க நம்ம அண்ணாச்சிக்கு கூல்லா ஜுஸ் கொண்டு வாங்கடா" என ஆடர் போட்டபடி,
"நீங்க ஜீஸ் குடிச்சு ரீலாக்ஸா இருங்க அண்ணாச்சி நான் இதோ வந்திடுறேன்" என கூறியபடி அங்கிருந்து நகர, அண்ணாச்சியும் தனது தலை தப்பித்தது என எண்ணியபடி அடியாட்களோடு கும்மாளமிட துவங்கினார்.
அப்பொழுது யாருமறியா வகையில் தனது போனை எடுத்துகொண்டு நகர்ந்த செந்திலோ யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
"பாஸ், நம்ம பொருள் பத்திரமா கஸ்டமருக்கு போயிருச்சாம் அவன் இப்போ ஏர்போர்ட்டூக்கு பிளைட் ஏற போயிருக்கானாம்; இப்போ என்ன பண்ண போறீங்க..." என வினவியவனிடம் மறுமுனையில் ஏதோ கூறப்பட,
அதனை கேட்டவனோ, "அதானே, என்கிட்ட எப்போ நீங்க முழுசா சொல்லிருக்கீங்க நீங்களே முடிச்சிட்டு சொல்லுங்க" என கூறி கொண்டு போனை அணைத்தான்.
அங்கு ஏர்போர்ட்டிலோ ஏர்போர்ட் அதிகாரிகள் ஒருவனை தீவிரமாய் பரிசோதிக்க, அதன் முடிவில் அதிகளவு போதை ஏற்றும் போதை மருந்தை கைபற்றினர்.
"சார், இது எப்படி என்கிட்ட வந்துச்சுனு எனக்கு தெரியாது என்னைய நம்புங்க" என கூறி நடித்தவனை நம்பாத அதிகாரிகளோ,
"அதையும் நாங்களே கண்டுபிடிக்குறோம்; இப்போ நாம போகலாமா" என இழுத்துகொண்டு சென்றனர்.
இங்கு காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய வக்கீலோ தன்னை யாரும் பார்க்காத மறைவிடத்திற்கு வந்து தான் காப்பாற்றியவனின் கன்னத்திலே பலமாய் அடித்தான்.
"இதான் உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்; இனி சொதப்புன உன்னோட தங்கச்சி அனாதையாகிடுவாளேனு யோசிக்காம ஜெயில்லயே கழி திண்ணுனு விட்டிருவோம் புரிஞ்சதா" என மிரட்ட,
"புரியுது ஸ்டீபன் அண்ணே, இனி இப்படியொரு தப்பு நடக்காது" என பயந்தவாறே கூறினான்.
அப்பொழுது ஸ்டீபனின் போனில் மெசேஸிற்கான நோட்டிபிகேஷன் வர,
அதனை பார்க்க இங்கு செந்திலுக்கும் போனில் நோட்டிபிகேஷன் வந்தது.
அந்த குறுஞ்செய்தியிலோ "
Plan success, நம்ம வேலை போதை பொருளை சரியா ஒப்படைக்கிறது தான்; அதை அவனுங்க பாதுக்காக்கலனா நாமளா பொறுப்பாக முடியும்..." என எழுதியிருக்க,
அதை படித்த இருவரின் இதழிலும் வெற்றி புன்னகை சூழ,
அவர்கள் இருவருமே வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் இருவரும் ஒன்றாக ஒரு விஷயத்தை கூறினர்.
"மாஸ்டர் மைண்ட் நீ வேற லெவல் போ..."
பீனிக்ஸ் உயிர்த்தெழும்
(வணக்கம் நண்பர்களே... கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிடுங்கள் நன்றி...)
Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments'
https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/