1
அந்த சாம்பல் நிற கோட்டுக்கு பொருத்தமான கருப்பு நிற டையை சரி செய்தவாறு இரண்டு இரண்டு படிகளாக தன் உயர்தர ஷூவின் சத்தம் மேலிட, வேகமாக இறங்கினான் கார்த்திகேயன் சந்திரன். அப்படி இறங்கியவனின் கால்களின் வளர்த்தியை கொண்டு யூகித்தால், நிச்சயம் ஆறடிக்கு குறையாமல் இருப்பான். கைகளில் அன்றைய புதிய டிசைனில் வந்த ரோலக்ஸ் வாட்ச் மின்னியது. ரொம்பவும் குட்டையாக இல்லாமல் கச்சிதமாய் வெட்டப்பட்ட முடிக்கற்றைகள் அவன் படியிறங்கும் தாளத்திற்கேற்ப ஆட்டம் ஆடின. கையில் ஒரு கூலிங்கிளாஸ், அவன் அதை சுழற்றிக்கொண்டே வந்த ஸ்டைலை நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உயர்ந்து வளர்ந்தவன் தோள்கள் பரந்துவிரிந்தன. முகத்தில் அப்படி ஒரு பணக்காரக் களை மாநிறத்துக்கும் ஒரு படி மேல் அவன் நிறம். தமிழனுக்கே உரிய மீசை இருக்கும் இடம் முழுமையாய் சவரம் செய்யப்பட்டு மழமழவென்றிருந்தது. அடர்த்தியான புருவம், கூர்மையான கண்கள், ஏதோ ஒரு ஆங்கில பாப் பாடலை முணுமுணுத்த உதடுகள் இப்படி எல்லாம் அவனுக்கு செதுக்கினாற் போலவே இருந்தது. வயது ...அவன் தோற்றத்தை பார்த்தால் நிச்சயம் இருபத்திமூன்று அல்லது இருபத்திநான்கு என்று தான் கூற வேண்டும். ஆனால் உண்மையில் அவனது வயது இருபத்தி எட்டு முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. ஒரு ஃபாரின் செண்டின் மனம் கமகமக்க டைனிங் டேபிளை அடைந்தான்.
அங்கே அவனுக்காக முன்னமே வந்து காத்திருந்தார் திருமதி உஷா சந்திரன். அவரை பார்த்ததும், "குட்மார்னிங் மாம்" என்றவன் தானும் ஒரு சேரில் அமர்ந்து தட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.
வேலைக்காரி தன் போக்கில் சிற்றுண்டியை பரிமாறினாள்.
"இந்த "மாம்", "கீம்" எல்லாம் அமெரிக்காவிலேயே விடுவதற்கென்ன? எத்தனை முறை கூறினாலும் உன் மண்டைக்குள் ஏற மாட்டேன் என்கிறது" என்று தன் கவலையை எண்ணிக்கை வைத்துக் கொள்ள முடியாத முறையாக கூறினார் உஷா.
லேசாக சிரித்தவன். "கேட்டுப் புளித்து விட்டது. அத்தோடு என் மண்டைக்குள் ஒன்றும் ஏறாமல் தான் எம்.டெக். இன் சாப்ட்வேர் படித்தேனாக்கும். அதுவும் அமெரிக்க யூனிவர்சிடியில் டிஸ்டிங்ஷன்" காலரை தூக்கி விட்டான்.
"இந்த பீற்றலுக்கு ஒன்றும் குறைவில்லை, அம்மா என்று கூப்பிட்டால் என்ன குறைந்துவிடுமாம்" விடாமல் கேட்டார்.
"அது சரி, குறைந்தாலும் பாதகமில்லை. அப்படி ஒன்றும் குள்ளன் ஆகி விடமாட்டேன்" குறும்பாய் சிரித்தவனை பார்த்து உஷாவும் சிரித்துவிட்டார்.
"சரியான கில்லாடி நீ எப்படி எது பேசினாலும் உன் வழிக்கு இழுத்து விடுவாய். அதில் உனக்கு நிகர் நீதான், என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன். நீ சாப்பிடு உனக்கு பிடித்த இடியாப்பம்”
இடியாப்பத்தை ஆசையாக எடுத்து அருகில் இருந்த தேங்காய் துருவலையும் நாட்டு சர்க்கரையையும் தேவைக்கேற்ப அதனோடு கலந்து வாயினுள் வைக்கையில் அவன் முகம் பிரகாசித்தது..
"இத்தனை ருசியான இடியாப்பத்தை செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் மாம்" அவரை பின்பற்றி அப்படியே கூறியவன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.
"இடியாப்பம் செய்வது பெரிய கம்ப சூத்திரம் பார், எதை புகழ்வது என்று வேண்டாம்?" அதட்டலாக கூறிவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தார்
"கம்ப சூத்திரம் தான். போன முறை மாமாவின் வீட்டில் இடியாப்பம் என்ற பெயரில் ஒன்றை போட்டார்களே கொழ கொழ வென்று ஒரே உப்பாக வாயில் வைக்க சகிக்கவில்லை. அதில் எனக்கு பிடிக்கும் என்று ஆசையாய் செய்தாளாம். அந்த ஹனி, வேறு வழியில்லாமல் தண்ணீரை குடித்து முழுங்க நான் பட்டப்பாடு அப்பாடா, இப்போது நினைத்தாலும் குமட்டுகிறது" என்றவன் வாந்தி எடுப்பது போல் நாக்கை வெளிப்புறம் நீட்டி செய்கை செய்தான்.
"தச் -- என்ன கார்த்தி இது ஆசையாக செய்து கொடுத்தததை இப்படியா விமர்சிப்பது? இது தான் நான் உனக்கு கற்றுக்கொடுத்த நாகரீகமா? தவறு கண்ணா, ஒருவர் ஆசையாக கொடுத்தால் அது கல்லாக இருந்தாலும் உண்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்" கோபமாய் முறைத்தார் உஷா.
"ஆசை......அவள் ஆசையை கூறுங்கள், எப்போது பார்த்தாலும் அத்தான், சொத்தான் என்று! சகிக்கவில்லை. அதிலும் தொடாமல் அவளால் பேசவே முடியாது. அங்கே போகும் போதெல்லாம் அவளை ஷாப்பிங் அழைத்து செல்லவேண்டும் அவளது "ஆசையாய் செய்தேன்” என்ற வார்த்தைக்கு முழு பொருள் கடையில் என் கிரெடிட் கார்டை தேய்க்கும் போதுதான் தெரியும். இருந்தாலும் அந்த கொழ கொழ இடியாப்பத்திற்கு ரேட் மிகவும் அதிகம் என்று கூறியவன் வாய்விட்டு சிரித்தான்.
எவ்வளவு அடக்கியும் முடியாமல் சிரித்து விட்டார் உஷா. இருப்பினும் தொடர்ந்து
"நீ பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தானே என்று அவள் சகஜமாக பழகியிருக்கலாம். ஏன் தொட்டு பேசுவது இப்போது தமிழகத்திலும் பரவித்தானே வருகிறது"
"அதற்காக மேலே விழுந்து இழைவதா? உங்களுடைய கண்டிப்பான வளர்ப்பினால் அப்படிப்பட்ட ஊரிலும் நான் நம் பண்பாட்டை காத்தேன். இவள் மட்டும் வேறு யாரிடமும் இதுபோல் நடந்திருந்தால் அவர் நிலை சொல்வதற்கில்லை" உதட்டை பிதுக்கினான்.
"எல்லோரிடமுமா அப்படி நடந்து கொள்வாள் நீ அவளின் அத்தை மகன் தானே முறைப்பையன் என்ற உரிமையில் இழையலாம்"
"ச்....சு......முறைப்பையன், முறைக்காத பையன் இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, அடுத்து உங்கள் பேச்சு கல்யாணத்திற்கு தான் தாவும். அதனால் நான் எஸ்கேப் ஆகிறேன், பாய் மாம், சியூ இன் த ஈவினிங்" என்று எழுந்தவன் வாஷ்பேசினில் கைகளை கழுவிக் கொண்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.
"சரியான வாலு எப்படி ஆரம்பித்தாலும் நழுவுகிறான். ம்.. .ஹும்... இவனுக்கென்று ஒருத்தி இனிமேலா பிறக்கபோகிறாள்" ஒரு பெருமூச்சுடன் உணவை தொடர்ந்தார் உஷா சந்திரன்.
அந்த வெள்ளை நிற ஆடி காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மிடுக்கான நடையுடன் தன் அலுவலகத்தினுள் நுழைந்தான் கார்த்திகேயன் சந்திரன், அது ஒரு மூன்றடுக்கு கட்டிடம் “சுந்தர் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்" என்ற ஆங்கில எழுத்து பெரிதாய் மின்னியது. பளபளக்கும் வெளிப்புறமும் முழு ஏசி செய்யப்பட்ட உள்புறமும், அதற்கேற்ற வேலைபாடுகளும், லைட் எபெக்ட்ஸ்சும், செயற்கை செடிகளும் பார்க்க, வளர்ந்து வரும் ஐடி நிறுவனத்தின் சாயலை கொண்டிருந்தது. பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் தொடக்கத்தில் இப்படி தான் இருந்திருக்கும் என்று அங்கு வந்து போகிறவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் நினைக்கக்கூடும். எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருந்தது.
எதிர்பட்டோரின் வணக்கங்களை ஏற்று படிகளில் ஏறி தன் அறைக்குள் சென்று அமர்ந்தான்.அவன் வருகைக்காக காத்திருந்தது போல் ஒரு பெண் அவசரமாக அறையினுள் நுழைந்தாள்.
"குட்மார்னிங் சார்"
"வெரி குட்மார்னிங் ரம்யா"
"இன்றைக்கு பத்துமணி அளவில் மலையப்பன் புரொவிஷனல் ஸ்டோருக்கு நாம் கொடுத்திருந்த சாப்ட்வேரில் ஏதோ பிரச்சனை என்று கூறியதன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களோடு மீட்டிங் இருக்கிறது. பிறகு லன்ச், அதற்கடுத்து நம் மணியின் பிறந்தநாள் அதை கொண்டாட ஒரு மணி நேரம், பிறகு நியு பேஷன் டிரஸ்சிங் கடைக்கு நாம் ஒரு புது சாப்ட்வேர் கொடுக்க போகிறோமே அது முடிந்துவிட்டது. ஃபைனல் லெவல் டெஸ்டிங் முடிந்துவிட்டது. அதை ஒரு முறை எப்போதும் போல் நீங்களும் டெஸ்ட் செய்துவிட்டால் லான்ச் செய்து விடலாம். அப்புறம் உங்கள் புத்தக பிரஸ் கட்டுமான பணியின் மேற்பார்வை இருக்கிறது. பிறகு ஹோம் ஸ்வீட் ஹோம் தான்" முடித்தவள் உதடு விரிய சிரித்தாள்.
அமைதியாக கேட்டவன் அவள் முடித்ததும்.
"தேங்க்யூ ரம்யா? பட் எப்படி பார்த்தாலும் ஆறு மணிக்குள் என்னை வீட்டுக்கு அனுப்பும்படி தான் செட்யூல் போடுகிறாய்! என்ன உன் பையன் அம்மா ஆறு மணிக்கு வராவிட்டால் ஹோம் வர்க் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறானா?" கேலியாய் கேட்டு சிரித்தான்.
அசடு வழிய சிரித்தவள் "அதெல்லாம் இல்லை சார் நான் சொல்வதால் மட்டும் நீங்கள் சீக்கிரம் போய்விடுவீர்களா என்ன? வேலை என்று இறங்கினால் வீட்டை மறந்து விடுகிறீர்கள் அதை நினைவுப்படுத்துவதும் உங்கள் பி.ஏவான என் கடமை அல்லவா?" விடாமல் பதில் கொடுத்தாள்.
லேசாக சிரித்தவன் "அதுவும் சரிதான். அந்த புரொவிஷனல் ஸ்டோர் சாப்ட்வேரில் என்ன பிரச்சனை அதன் குறிப்பு இருக்கிறதா?" என்றவனிடம் ஒரு ஃபைலை நீட்டினாள்.
"நேற்று மாலை தான் இந்த பிரச்சனை, உடனே மீட்டிங் போடவேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால் தான் வேறு வழி இல்லாமல் இன்று காலையிலேயே அப்பாயின்மென்ட்டு கொடுக்கும்படி ஆயிற்று"
"ம் .... தட்ஸ் ... ஓ.கே. கஸ்டமர் இஸ் ஃபர்ஸ்ட்" என்றவன் அதற்கு பிறகு ஃபைலில் மூழ்கினான்.
அந்த மீட்டிங் முடிந்து அவன் உணவருந்தும் பொழுது மணி இரண்டாகி விட்டிருந்தது. மனதில் நிம்மதி இருந்தது. எதிர்ப்பார்த்து பயந்தது போல் அந்த கோளாறு அவர்களது சாப்ட்வேரில் இல்லை. வாங்கியவர்கள் பிரச்சனை என்று கூறியது அவர்கள் முதலில் தேவை என்று குறிப்பிட்டிருந்த ரெக்வயர்மென்ட்சில் இல்லை. அவர்கள் புதிதாக ஒன்றை எதிர்ப்பார்த்து அது கிடைக்காத இடத்தில் தேடியதற்கு சமமாகி விட்டது. ஆகவே அவர்கள் மனம் நோகாமல் புரிய வைத்து இப்போது புதிதாக வேண்டும் என்பதை கேட்டு கூடிய விரைவில் செய்து கொடுப்பதாகவும் அதற்கு இவ்வளவு செலவாகும் எனவும் பேசி முடித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஒரு மணி நேரம் அதிகம் செலவாகி விட்டிருந்தது. உடனே அவர்கள் பேசியவற்றை ஒரு டாக்குமென்டாக டைப் செய்து இருசாராரும் அதில் கையெழுத்து போடும்படி செய்தாள் ரம்யா. அதில் இருவரும் ஒவ்வொரு நகலை எடுத்துக்கொண்டனர்.
அடுத்து பர்த்டே பார்ட்டி. கார்த்திக்கிற்கு ஒரு வழக்கம் உண்டு. அலுவலகத்தில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் ஒரு கேக் மற்றும் டீ காரம் காஃபி என்று கம்பெனி செலவிலேயே கொண்டாட்டம் நிச்சயம். இதனால் பாஸ் என்று ஒதுக்கம் குறையும் எம்.டி .என்றால் பார்க்கவே முடியாது என்ற நிலையில்லாமல் அவரும் நம்முள் ஒருவர் தான் என்று உணர்ந்து குறைநிறைகளை கலந்து பேச இந்த பார்ட்டி அவனுக்கு மிகவும் உதவும். கடைநிலை ஊழியர்களிடமும் அக்கறையாய் நலம் விசாரித்து உரிமையாய் தோள் தொட்டு தட்டிக் கொடுத்து பேசுவான். ஒரு முதலாளியின் திறன் அவர் எப்படி வேலை செய்கிறார் என்பது இல்லை. அவர் மற்றவர்களிடம். திறம்பட எப்படி வேலை வாங்குகிறார் என்பது தான் அதில் கார்த்தி மாஸ்டர் டிகிரி தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?.
அப்பாவின் குணம் அப்படியே கார்த்திக்கிற்கும். எப்படிப்பட்டவராக இருந்தாலும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கிவிடுவார். பின்னே? தாய் நாட்டிலிருந்து தன் நண்பனோடு கூட்டணி கொண்டு வெளிநாட்டில் திறம்பட தொழில் செய்தவராயிற்றே. அப்போதே உஷாவிற்கு
அமெரிக்கா வாசம் துளியும் பிடிக்கவில்லை தான், இருப்பினும் கணவர் அந்த தொழிலில் மிகுந்த ஈடுபாடு வைத்ததால் வேறுவழியின்றி பழகிக் கொண்டார். ஆனால் எது எப்படி இருந்தாலும் வருடம் இரண்டு மாதம் தமிழ்நாட்டில் தான். அத்தோடு வீட்டில் எப்போதும் தமிழ் தான் பேச வேண்டும் என்று உறுதியான சட்டம் எவ்வளவோ முயன்றும் அம்மா,அப்பாவை மட்டும் அவன் அழைப்பது மாம், டாட் என்று தான். சந்திரனும் அவனுக்குத் துணையாய் பல விஷயங்களில் உஷாவை எதிர்ப்பார். அதில் இந்த மாம், டாட்டும் அடக்கம். திசைமாறும் பருவமான டீனேஜில் உஷா கார்த்திகேயனை மிகவும் கவனமாக கவனித்தார். தமிழ்நாட்டில் இப்படி அப்படி என்று நிறைய கூறுவார்.
அது மட்டுமில்லாமல் இயற்கையிலேயே அவனுக்கும் ஏனோ அங்கே இருக்கும் கலாச்சாரம் பிடிக்கவில்லை தான். அது ரத்தத்தில் ஊறிய பண்பு போலும். "பெயரைக் கேட்டால் அட்ரசை கொடுக்கிறார்கள் என்ன பெண்கள் இவர்கள்“ வீட்டில் புலம்புவான்.
"எனக்கு தமிழ்நாடு பெண்ணை தான் மணக்க வேண்டும் என்ற ஆசை மாம். அங்கே பாருங்கள் அழகாக தாவணி கட்டி தலைநிறைய பூ வைத்து பார்த்தால் கும்பிட தோன்றும் உங்களை போலவே ஒரு பெண்ணை தேடி எடுத்து கொண்டு வந்து என் கழுத்தில் கட்டிவிடுங்கள்" அறியா பருவத்தில் உளறுவான்.
அவன் உளறுவதை கேட்கும் போதெல்லாம் நிம்மதியாய் இருக்கும் உஷாவிற்கு.
இப்படி நாட்கள் ஓடிக்கொண்டிருக்க திடீர் என்று தான் ஒரு நாள் இதயத்தை பிடித்துக் கொண்டு சரிந்த சந்திரன் பிறகு எழுவே இல்லை.
அப்போதே அமெரிக்கா வெறுத்துவிட்டது உஷாவிற்கு. கார்த்திகேயனின் எம்.டெக் முடிந்த கையுடன் சென்னைக்கு தன் அண்ணன் உதவியோடு குடிபெயர்ந்தார். அங்கே இவர்களின் பங்கை விற்றுவிட்டுதான் இங்கே கம்பெனியை நிறுவினார்கள். கார்த்திகேயனுக்கு அம்மாவின் முதுமையை தமிழ்நாட்டில் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் புரிந்து இருந்தது. அவர் உறவுகள் சூழ இருப்பதை அதிகம் விரும்புபவர். அதனால் அவனும் சந்தோஷமாக தமிழ்நாட்டில் செட்டிலாகி விட்டான்.