Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL பொன் வசந்தமே - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 

Arthi manu

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
6
Points
3
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

மிக்க நன்றி சகோதரி.
 

Arthi manu

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
6
Points
3
1.பொன் வசந்தமே



அது நடுத்தர மக்கள் வசிக்க கூடிய சராசரியான வீடு.என்றும் இல்லாத வகையில் இன்று அந்த வீடு ஐனத்திரளில் மூழ்கியிருந்தது.பவதாரிணி ஓர் மூலையில் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தாள்.தந்தை தமிழ்நேசனின் இறப்புச் செய்தி அவளை சிலையாக மாற்றி விட்டிருந்தது.

இந்த உலகில் அவளுக்கென்று இருந்த ஒரே உறவு.இன்னும் சிலர் இருக்கிறார்கள் தாம் ஆனால் பெயரளவில் மட்டும்.தமிழ்நேசன் ஒரு இலக்கியவாதி மட்டுமல்லாது சமூக போராளியும் கூட.அவர் பணத்தில் ஏழையாக வாழ்ந்திருந்தாலும் குணத்தில் ‌கோடீஸ்வரராக இருந்தவர்.தன்னை சூழ இருந்தோரின் சுக துக்கங்களில் பங்கு கொண்டிருந்தவர்.ஆதலால் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்வதற்காக அவ்ளோ பெரிய கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்தோர் தாரணியின் நிலை கண்டு தாங்களே தமிழ்நேசனின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.பணச்செலவிற்காக கூட அவளை தொந்தரவு செய்யவில்லை.ஆளுக்கு கொஞ்சம் போட்டு செலவுகளை பார்த்து கொண்டனர்.அதிலும் எதிர்வீட்டு சண்முகம் பெருமளவு செலவுகளை ஏற்றுக் கொண்டார்.அந்தளவு மற்றவர்களை அரவணைத்து வாழ்ந்தவர், தமிழ்நேசன்.

பெண்கள் சிலர் தாரிணி மேல் சாய்ந்து அழுதனர்.அப்போதும் அவளிடம் எதிரொலி இல்லை.பெரியோர் சிலர் அவளை மனதில் உள்ளதை கொட்டி அழும் படி வற்புறுத்தினர்.அவள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.சிலர் அவளுக்கு சித்தம் கலங்கி விட்டதோ என எண்ணி பயந்தனர்.ஆனால் அவள் எவ்வளவு திட சித்தம் உடையவள் என்பது பின்புதான் அனைவருக்கும் தெரிந்தது.


நிறைய பேர் பூமாலைகளுடன் வந்து போயினர்; அந்த ஊரின் முக்கிய பிரமுகர்கள் வந்தார்கள்; ஒப்புக்காக பேட்டிகள் தந்தனர்.தாரிணியின் மாமா சிவகுருநாதன் மற்றும் அத்தை ராஜேஸ்வரி கூட வந்திருந்தனர்; அவளுடன் பேச முயன்றார்கள்.ஆனால் அவள் யாரையும் உணரும் நிலையில் இல்லை.

சென்னை புறநகர் பகுதியில் ஒரு புதிய படத்திற்கான அன்றைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது; வெகு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது,அந்த படப்பிடிப்பு தளம்.காலையில் இருந்து மும்முரமாக ஒரு சண்டைக் காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.கதைக்காகவே பிரபல கதாநாயகி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாள்.
'என்னடா பண்றீங்க.நல்லா அவனோட தோள் ல்ல அடிங்க‌','என்ன மாஸ்டர் இது.இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி வேணும் மாஸ்டர்', ' ஹீரோ சார் பத்தலை ' , ' ஏன்மா உன் லவ்வர் அடி வாங்குறான்.நீ யாரோ மாதிரி நிக்கிற.ஐ வான்ட் மோர் ரியாக்ஷன்' என இப்படி ஏதாவது கத்தியபடி காட்சியளித்தான், இயக்குனர் சர்வேஸ்வரன். இயக்குநர் மற்றும் சண்டை மாஸ்டர் எதிர்பார்க்கும் திருப்தி கிடைப்பதற்காக பல டேக்குகள் போய் கொண்டிருந்தது.தயாரிப்பாளர் சர்வேஸ்வரன் ‌மேல் இருந்த நம்பிக்கையில் எதுவும் கேள்வி கேளாமல் அனைத்தையும் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.இந்நிலையில் உதவி இயக்குநர் ஒருவன் இயக்குநரிடம் ஒரு அவசர செய்தியை சொல்வதற்காக தவித்துகொண்டிருந்தான்.

சொல்லாமலும் இருக்க முடியாது.சொல்ல வேண்டிய விடயம் வேறு.ஆனால் வேலையோ தீவிரமாக போய் கொண்டிருக்கிறது.சும்மாவே இயக்குனர் சர்வேஸ்வரன் ஒரு சிடுமூஞ்சி.

நல்லவேளையாக சண்டை மாஸ்டர் 'கட்' சொன்னதால் அனைவரும் சற்று ஓய்வெடுக்க சென்றனர்; சரியான சமயம் என்றெண்ணியபடி சர்வேஸ்வரனின் அருகே சென்ற உதவி இயக்குநர் விடயத்தை அவனிடம் கூறினான்.காதில் விழுந்த வார்த்தைகளை அவனால் நம்ப கூட முடியவில்லை.கொஞ்ச நேரம் அசைவற்று கிடந்தவனை உலுக்கினார், சண்டை மாஸ்டர்.'பேக் அப்' என கத்திவிட்டு அவசரமாக கிளம்பினான், சர்வேஸ்வரன்.

எதிரே தன்னை நோக்கி வந்த தயாரிப்பாளரிடம் மட்டும் "சார் எமர்ஜென்சி.ஐ வில் டெல் யூ லேட்டர் " என்று மட்டும் கூறிவிட்டு சென்றான்.அவரின் பதிலுக்காக கூட அவன் நிற்கவில்லை.அவன் அனாவசியமாக பேக் அப் சொல்பவன் இல்லை என்பதால் அவரும் எதுவும் தவறாக கருதவில்லை.மாறாக சர்வேஸ்க்கு என்ன நெருக்கடியோ என வருந்தினார்.படுவேகத்தில் பைக்கை செலுத்தி விரைவாகவே தன் வர வேண்டிய இடத்திற்கு வந்தடைந்தான்.

பவதாரிணி திடுமென எழுந்தாள்.மாலைகளின் நடுவே தெரியும் தந்தையின் முகத்தை உற்று நோக்கினாள்; தூங்குவது போல் இருந்தது.நேற்று காலை போனில் பேசியவர் இன்று இல்லை என்பதை அவளால் நம்ப இயலவில்லை.தமிழ்நேசன் எப்போதும் அவளிடம் ஒன்று கூறுவார்;அதுவும் அவளின் தலையை கோதியபடியே.'மரணம் மனித உடலுக்கே.ஆன்மாவிற்கு இல்லையம்மா.நான் இறந்தாலும் உன்னுடன் இருப்பேன் கண்ணா'.அவரின் வார்த்தைகள் இப்போதும் அவளின் காதுகளில் அலைமோதியது. சூழ்நிலை மறந்து " எங்கப்பா சாகலை " என்று உரக்க கத்தினாள். அச்சமயம் சரியாக உள்ளே நுழைந்தான், சர்வேஸ்வரன்.கையில் இருந்த ரோஜா மாலையை தமிழ்நேசன் மீது போட்டான்.

அவன் சட்டையை பிடித்து " உன்னை யாருடா வரச்சொன்னது " என கேட்டாள், பவதாரிணி."மாமாக்கு நான் செய்ய வேண்டிய கடமை" என ஏதோ கூற வந்தவனை நோக்கி " போடா போ வெளிய போடா " என ஆங்காரத்துடன் கத்தினாள், பவதாரிணி.கூம்பிய முகத்துடன் கூனி குறுகி அங்கிருந்து வெளியேறினான், சர்வேஸ்வரன்.அவன் சென்ற சில நிமிடங்களில் அவனது தாய் ராஜேஸ்வரி மற்றும் சிவகுருநாதனும் கிளம்பினர்.

" என்னம்மா நீ.மகன் ஸ்தானத்துல அவன் தானே மா கொள்ளி போடணும் " என்று ஆதங்கத்துடன் கேட்டார், சண்முகம்.
" எங்கப்பாக்கு நான் தான் கொள்ளி போடுவேன்" என அழுத்தமான கூறியவளை கண்டு சண்முகம் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்." நான் பெண்ணாக பிறந்த ஒரே காரணத்துக்காக ஒரு பிள்ளையாக என் அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாம இருக்க போறதில்லை" எத்தனையோ பேர் எத்தனையோ சொல்லியும் அவள் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.தந்தையின் உடலோடு சுடுகாடு வரை சென்று தான் நினைத்ததை செய்தாள்‌."அப்பா நீங்க சாகலை அப்பா‌.என்கூடத்தான் இருக்கீங்க.உங்க பேரு நிலைக்கும் மாதிரி நான் சாதிப்பேன் அப்பா.உங்க கனவுகளையும் ஆசைகளையும் நான் நிறைவேத்துவேன்" என எரியும் தந்தையின் உடல் மீது சத்தியம் செய்தாள்,தாரிணி.யாருக்கும் பவதாரிணியின் செயல் பிடிக்காவிடினும் அவள் போக்கில் விட்டுவிட்டனர்.தந்தைக்கும் மகளுக்கும் இருந்த பிணைப்பை அறிந்தவர்கள் அல்லவா.தாயில்லா பெண்ணான தாரிணிக்கு தாயுமானவராக திகழ்ந்தவர், தமிழ்நேசன்.

எல்லாம் முடிந்ததும் பவதாரிணி நேராக வீட்டிற்கு செல்லாமல் கடற்கரைக்கு வந்தாள்.தந்தையும் மகளும் அடிக்கடி செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று.மனம் விட்டு பேச வேண்டிய நேரங்கள் மற்றும் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணங்களில் இங்கே வந்துவிடுவார்கள்;கடற்கரை காற்றில் நடந்தபடியே பேசி முடிப்பார்கள்.இப்போதும் இந்த சிலுசிலுவென்ற காற்று தந்தை உடன் இருப்பது போன்ற பிரமையை கொடுத்தது.இனி செய்ய வேண்டியவற்றை குறித்து தீர்க்கமான‌ முடிவுகளை எடுத்த பின்னர் சற்று ஆறுதலாக உணர்ந்தாள், பவதாரிணி.

மாலை முடிந்து இரவு வந்ததும் வீட்டிற்கு கிளம்பினாள், பவதாரிணி.அங்கே சென்று பார்த்தால் அந்த ராஸ்கல் ( அவளது பாஷையில்) வீட்டு வாசலில் டிராலி மற்றும் தோள் பை சகிதம் நின்று கொண்டிருந்தான்." எதுக்குடா இங்க வந்த" என கோபமாக கேட்டாள்,தாரிணி." மரியாதை மரியாதை" என்றான் சர்வேஸ்வரன் கூலாக." உனக்கு என்னடா மரியாதை வேண்டியிருக்கு" என்று ஆத்திரம் பொங்க கூறினாள்.

" ஏன்னா நான் உன் புருசன்" என்றான் சிறிது கேலி கலந்த குரலில்." ஓ சாருக்கு அந்த நினைப்பு வேற இருக்கா? " என்றாள்,தாரிணி." அதுதாம்மா என் நினைப்பே.வாடா செல்லம்.உள்ள போலாம்" என்று உள்ளே செல்ல எத்தனித்தான், சர்வேஸ்வரன்." ஒழுங்கா போயிடு.இல்ல போலீஸை கூப்பிடுவேன்" என்றாள் பற்களை கடித்த வண்ணம்.


" பாத்து பல் உடைஞ்சுட போகுது" என்று கேலி பேசினான்,சர்வேஸ்." நீ பாரா மிலிட்டரி போர்ஸை கூப்பிட்டாலும் சரி நான் இங்க தான் இருப்பேன்.என் மாமனார் வீட்டில் தங்க எனக்கு முழு உரிமையும் இருக்கு " என்றான் உறுதியான குரலில்."அது இல்லைன்னு உன்னால மறுக்க முடியுமா? " என்று கேட்டான், ஆழ்ந்த குரலில்.அது எப்படி மறுக்க முடியும்? அவன் கட்டிய தாலி இன்னும் கழுத்தில் கிடக்கிறதே.அவளும் காதலித்து தானே அவனை கல்யாணம் செய்து கொண்டாள்.காதலித்து என்ன காதலித்து? இப்போது இந்த கணம் கூட அவன் மீது அவளுக்கு காதல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவள் அதை அவள் வெளிக்காட்ட விரும்பவில்லை.அதனால் வெளியே தெரிந்த தாலியை மட்டும் சுடிதாரின் உள்ளே மறைத்தாள்.

இதை கண்டவனுக்கு சிரிப்பு வந்தது; கூடவே அவள் மனம் இளகுகிறாள் என்பதையும் உணர்ந்தான்." ப்ளீஸ் சர்வா இங்கேந்து போயிடுங்க" என்றாள் தணிந்த குரலில்." இப்படி சர்வா ன்னு என் செல்ல பேரை கூட மறக்காம சொல்ற பொண்டாட்டியை விட்டு நான் எப்படிமா போவேன்" என்றான் கண்களில் கேலியுடன்.அய்யோ என தலையில் தட்டிக் கொண்டாள்.அவளால் எதுவும் பதிலளிக்க முடியவில்லை;கையை பிசைந்து கொண்டு நின்றாள்.


தங்களுக்குள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இந்த இக்கட்டான நிலையில் மனைவியை தனியாக விட அவன் விரும்பவில்லை; எத்தனையோ ஆபத்துக்கள் நேர வாய்ப்பு இருக்கின்றன.அதையெல்லாம் எண்ணி பதைபதைத்து தான் சர்வேஸ் மூட்டை முடிச்சுகளுடன் இங்கே வந்திருக்கிறான்; அவள் உள்ளே விடமாட்டாள் என்ற நம்பிக்கையுடனும் அதே சமயம் என்ன செய்தாகினும் அங்கே தங்க வேண்டும் என்ற உறுதியுடனும் வந்திருந்தான், சர்வேஸ்வரன்.


அவளின் இந்த அமைதியை பயன்படுத்தி " நல்லா யோசிச்சு பாரு பவா.மாமா இருந்திருந்தா என்னை இப்படி வாசல்ல நிக்க வச்சு பேசியிருப்பாரா?அவர் இப்பவும் நம் கூட தான் இருக்குறார் ன்னு நீ நினைச்சா என்னை உள்ள தங்க விடு " என்றான் பாவமாக.' சரியான ஆளு தான் டஎன் உயிர்நாடி தெரிஞ்சு பேசி காரியம் சாதிக்கிறான்' என சிறு கோபம் எழுந்தாலும் அவன் கூற்றில் இருந்த உண்மையையும் உணர்ந்தாள், பவதாரிணி.எதிரியாகவே இருந்தாலும் வீட்டிற்குள் அழைத்து பேச வேண்டும் என்பவர் தமிழ்நேசன்.அதிலும் மருமகன் அவருக்கு மாறாத மதிப்பும் அன்பும் உண்டு.சில சமயங்களில் சர்வேஸ்வரனிடம் சிறு வயது தமிழ்நேசனை காண்கிறேன் என்றும்
கூறியிருக்கிறார். இவற்றை கருத்தில் கொண்டு " உள்ளே வாங்க" என்றாள் மெல்லிய குரலில்.

வந்தவன் கையோடு இரவு உணவையும் வாங்கி வந்திருந்தான்.அவளுக்கு சரவணபவனில் கிடைக்கும் ரவா தோசை மிகவும் பிடிக்கும்; இன்றும் மறக்காமல் அதை வாங்கி வந்திருந்தான், அவன்.ஒருகணம் நெகிழ்ந்தாலும் சாப்பிட மறுத்தாள்,தாரிணி." மாமா இருந்திருந்தா சாப்பிடாம இருப்பியா" என்று கூறியே அவளை உண்ண செய்தான்; அவனும் அவளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டான்.இவற்றை புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தார், புகைப்படமாக மாறிவிட்ட தமிழ்நேசன்.

அதே வகையில் 'மாமா' ஜெபத்தை கூறி அவளை பாலையும் பருக செய்தான்.தாரிணி அறியாமல் அதில் ஒரு தூக்க மாத்திரையையும் கலந்து விட்டிருந்தான்.ஆதலால் அன்றிரவு நன்றாக உறங்கினாள்.தன் அறையில் தாரிணியும், தமிழ்நேசனின் அறையில் சர்வேஸ்வரனும் படுத்து கொண்டனர்.அவன் மட்டுமன்றி அவனது உடமைகளும் அவரது படுக்கையறையில் குடிபுகுந்தன‌.


காலையில் பவதாரிணி கண்விழிக்கும் போது மணி காலை பத்து.இயல்பாக எழுந்தவளுக்கு காலையில் தந்தை அன்னையின் படத்திற்கு பூ போடுவார் என்பது நினைவுக்கு வந்தது.இனி அது தன் கடமை கூடவே சேர்த்து தந்தையின் படத்திற்கும் என வருத்தமாக எண்ணிக் கொண்டே சென்றவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.


- தொடரும்​
 
Last edited:

Arthi manu

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
6
Points
3
2.பொன் வசந்தமே:
என்றோ இம்மண்ணை விட்டு மறைந்த தாய் தேவகி மற்றும் நேற்று இவ்வுலக வாழ்வை நீத்த தந்தை தமிழ்வாணன் புகைப்படங்களுக்கு உரிய நேரத்தில் பூ போட வேண்டுமே என்ற பதைபதைப்புடன் அவசரமாக குளித்து ஹாலுக்கு வந்தாள், பவதாரிணி.ஆனால் அங்கே ஏற்கனவே இருவரின் படங்களையும் பூக்கள் அலங்கரித்திருந்தன.யூகிக்க பெரிதாக ஒன்றும் இல்லை.எல்லாம் நம் சர்வேஸ்வரனின் கைங்கர்யம் தாம்.அதுமட்டுமல்ல ஹாலை சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தியிருந்தான்.

அதுபோக உணவு மேசையில் ஏதோ டிபன் பார்சலும் , ஒரு ப்ளாஸ்க் காபியும் இருந்தன; கூடவே ஒரு துண்டு காகிதத்தில் சிறு குறிப்பும் இருந்தது.
"எனக்கு இன்று முக்கிய காட்சிக்கான படப்பிடிப்பு இருக்கிறது.இரவு உணவு வேளையின் போது உணவுடன் வருவேன். இப்போது நீ சமையல் செய்து சிரமம் கொள்ள வேண்டாம்‌.மதியத்திற்கும் உணவு வீட்டிற்கே வந்துவிடும்.பை யுவர்ஸ் சர்வா " என்று எழுதியிருந்தது.
அந்த யுவர்ஸை கண்டு 'என்ன சாமர்த்தியம் பார் ' என்று சிரிப்பும் , ' இவ்வளோ நாள் திரும்பிக்கூட பாக்காதவனுக்கு யுவர்ஸ் ஒரு கேடா' என்று கோபமும் ஒருங்கே எழுந்தன.நேர்க்குறியும் எதிர்க்குறியும் சமம்( நடுநிலை ) ஆவது போல் அவளது உணர்ச்சிகளையும் வந்த வேகத்தில் மறைந்து போயின.வயிற்றில் பசி இருந்தாலும் ஏனோ உண்ண பிடிக்கவில்லை அவளுக்கு.

எப்படி பிடிக்கும்? சின்ன வயதில் இருந்தே அவள் அறிந்த ஒரே உறவு, தந்தை.இத்தனை ஆண்டுகள் அம்மாவாய்,அப்பாவாய், ஆசானாய், தோழனாய், சில நேரங்களில் அவளுக்கு சேவகனாகவும் அதில் அவருக்கு பெருமை கூட.'எம் பொண்ணுக்கு நான் செய்வேன்.யார் கேக்குறது' என்பார்,சிரித்த வண்ணம்.எந்தக்குறையும் தெரியாமல் அவளை ஒற்றை ஆளாய் நின்று வளர்த்தவர்.இவ்ளோ காலம் வீட்டில் சமையல் கூட அவர்தான் செய்தார்.அதற்காக பவதாரிணிக்கு சமைக்க தெரியாது என்று இல்லை.

என்னதான் மகளுக்காக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்தாலும்,மகளுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக உரிய வயதில் உரியவற்றை உரிய விதமாக சொல்லி தந்தவர், அவர்.அவளது அம்மாவே இருந்திருந்தால் கூட சமையல் மற்றும் வீட்டு வேலைகளை இவ்வளவு நேர்த்தியாக மகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்.இப்படிப்பட்ட தந்தை இப்போது உயிருடன் இல்லை என்பதை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.ஆதலால் தந்தையின் கூற்றுப்படி அவர் தம்முடன் தான் இருக்கிறார் இருப்பார் என தன் மனதுக்கு தானே கூறிக்கொண்டாள்.

உணவு பார்சலை திறக்க கூட விரும்பாதவளின் காதுகளில் ' மாமா இருந்தா சாப்பிடாம இருப்பியா' என சர்வேஸ்வரனின் குரல் தொடர்ந்து ஒலித்தது.ஆதலால் காலை டிபனுக்காக
அவன் வாங்கி வைத்திருந்த ஒரு செட் பூரியை கொஞ்சம் கூட வீணடிக்காமல் உண்டாள்.ஏதேதோ யோசித்த வண்ணம் சாப்பிட்டவளுக்கு தந்தையின் இறுதி செலவுகளுக்கு தான்
யாருக்கும் எந்த பணமும் தரவில்லை என்பது நினைவுக்கு வந்தது.விரைவாக உணவை முடித்துக் கொண்டு எதிர்வீட்டு சண்முகம் அங்கிளை தேடி போனாள்.


படப்பிடிப்பு தளம்,புறநகர் சென்னை.
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.ஆனாலும் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.துணை நடிகர்கள் இன்றைய காட்சிக்காக பயிற்சி எடுத்து கொண்டிருந்ததனர்.கேமரா மேன் கோணம்(ஆங்கில்) பார்த்து கொண்டிருந்தார்.கதாநாயகி ஒரு ஈஸி சேரில் அமர்ந்தபடி அனைத்தையும் இலகுவாக கவனித்து கொண்டிருந்தாள்.அவள் பின்னே மேக்கப் மேன் தேவையான பொருட்களுடன் நின்றிருந்தார்.தயாரிப்பாளர் தளம் முழுவதையும் சுற்றி நோட்டமிட்டு கொண்டிருந்தார்.சிலர் காலை டிபனை மொக்கி கொண்டிருந்தனர்.
"சார்" என ராகம் இழுத்த உதவி இயக்குநரை பார்த்து கூராக நோக்கி" எல்லாம் ரெடியா" என்று கேட்டான் ‌சர்வேஸ்."அது வந்து சார்" என தயங்கி நின்றான், உதவி இயக்குநர்."மென்னு முழுங்காம சொல்லி தொலைடா.சூட் க்கு டைம் ஆகுது" என்றான் சர்வா அழுத்தமான‌‌ குரலில்." ஹீரோ சார் மட்டும் இன்னும் வரலை சார்.அதை சொல்ல தான் வந்தேன் சார்" என்றான் பயந்த குரலில்." அவனோட மேனேஜருக்கு போன் பண்ணியா? " என்று விசாரித்தான்,சர்வா." பேசுனேன் சார்.சார் ஏதோ முக்கியமான வேலையாக வெளியே போய் இருக்காராம் சார் " என்றான் உதவி இயக்குநர் கதை அளக்கும் பாணியில்."ஐ டோன்ட் வான்ட் எனி ஸ்டோரி ஆர் எக்ஸ்க்யூஸஸ்.ஐ வான்ட் ஹிம் பார் ஷூட் ரைட் நவ்" ( எனக்கு எந்த கதையோ காரணமோ தேவை இல்லை.அவன் படப்படிப்புக்கு உடனடியாக வேணும் ) என்றான் சர்வா.உதவி இயக்குநர் செய்வதறியாது திகைத்து நின்றான்.


சர்வாக்கு கதாநாயகன் நடிகன் மீது பயங்கர கோபம்.சொன்ன நேரத்திற்கு எல்லாரும் வந்து காத்திருக்கிறார்கள்.
அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.கதாநாயகன் மட்டும் வந்திருந்தால் இன்னேரம் மும்முரமாக வேலை நடந்திருக்கும்.'முக்கிய வேலையாக போயிருக்கிறானாம்.அப்போ இங்கே அனைவரும் சும்மா பொழுது போக்குகிறார்களா? ' என ஆத்திரமாக எண்ணினான்,சர்வா.ஏனெனில் அந்த ஹீரோ நடிகன் இப்படி செய்வது முதல் முறையும் அல்ல.கூண்டில் சிக்கிய புலி போல் கோபமாக குறுக்கேயும் நெடுக்கேயும் நடந்து கொண்டிருந்தான்,சர்வா.


"அங்கிள் உள்ள வரலாமா? " என்றபடி சண்முகம் அங்கிளை காண எதிர்வீட்டிற்குள் நுழைந்தாள், பவதாரிணி.
அதுவரை அங்கே நிலவி கொண்டிருந்த கலகலப்பான சூழல் இவளை கண்டதும் நிறம் மாறியது.அவ்வீட்டினர் ஒரு பரிதாபமான பார்வையை இவள் மீது வீசினர்.பவதாரிணிக்கு அவர்களின் மகிழ்ச்சியில் குறுக்கிட்டு விட்டோமோ என கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
"வாம்மா தாரிணி " என்று வரவேற்றார், சண்முகம் மெதுவான குரலில்.மெல்லிய புன்னகையை பதிலாக தந்தாள்,தாரிணி.
"சாப்பிட்டியாமா ? முதல்ல உட்காரும்மா.தெய்வானை தாரிணிக்கு காபி கொண்டு வாம்மா " என்று கனிவாக உபச்சரித்தார், சண்முகம்.மறைந்த நண்பனை நினைத்து கொஞ்சம் கண் கலங்கினார்."ம்ம்.தமிழ் ஒரு நிமிசம் கூட சும்மாவே இருக்க மாட்டான்.எதையாவது இழுத்து போட்டு செஞ்சுட்டிருப்பான்.
அவன் இவ்வளவு சீக்கிரம் போவான்னு நினைச்சு கூட பார்க்கலையே மா" என்றார்,தழுதழுத்த குரலில்.பவதாரிணிக்கும் விழிகள் குளமாகின.
சண்முகம் மீண்டும் தொடர்ந்தார்;

"அவன் சமுதாயத்துல எத்தனையோ நல்ல மாற்றங்களை கொண்டு வரணும் ன்னு ஆசைப்பட்டான்.முடிஞ்ச மட்டும் அதுக்காக உழைச்சான்.அவனோட மிகப்பெரிய கனவுன்னா அது நீ ஐ.ஏ.எஸ் ஆகணுங்கிறது தான்.எவ்வளவோ கஷ்டம் வந்தாலும் அதை நீ மட்டும் நீ விட்டுடாத மா.தொடர்ந்து படி.என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு மா" என்றார் பரிவாக." தேங்க்ஸ் அங்கிள் " என்ற இயல்பான குரலில் கூறியவள்
" அப்போவோட இறுதி காரியத்துக்கு எவ்வளவோ ஆச்சுன்னு சொன்னீங்கன்னா நான் தந்துருவேன் அங்கிள்" என்று விசயத்திற்கு வந்தாள், பவதாரிணி.அங்கிள் தவறாக நினைப்பாரோ என்ற சிறு பதைபதைப்பு அவள் மனதில் இருந்தது.அதே சமயம் இவ்வளவு பெரிய செலவை அவரை ஏற்கும்படி செய்யவும் அவளுக்கு மனதில்லை.இது தன் கடமை என்று தோன்றவும் நன்றாக நிமிர்ந்து அவரை நோக்கினாள்.
தொண்டையை செருமி விட்டு "என் நண்பனுக்காக செய்த செலவை நான் ஏத்துக்கலாம்ன்னு தாம்மா இருந்தேன்.ஆனா காலையில் சர்வா தம்பி வந்து 'எங்க கடமையை தடுக்காதீங்க ' ன்னு சொல்லி செலவான பணத்தை கொடுத்துட்டு போயிட்டாரும்மா" என்றார் தயக்கமாக.
"என்ன அங்கிள் அவன் கொடுத்த பணத்தை போய்....எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்ருக்கலாம் ல்ல" என்றாள் குரலை உயர்த்தாமலேயே." எனக்கு என்னம்மா தெரியும்? தமிழ் சாவுல தான் உனக்கும் தம்பிக்கும் ஏதோ பிரச்சினை ன்னு புரிஞ்சுது " என்று பெருமூச்சு விட்டார், சண்முகம்.
"நீங்க சொல்றதும் சரிதான் அங்கிள்.எங்க பிரச்சினை அப்பாக்கு கூட தெரியாது அங்கிள்.அது தெரியாமலே அவரும் போய் சேர்ந்துட்டாரு‌ " என்றாள் தாரிணி விரக்தியாய்.சண்முகத்திற்கு அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை. "சரி அங்கிள்.இந்த பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன்" என்றபடி அங்கிருந்து விடை பெற்றாள்,தாரிணி.


பதினொரு மணிக்கு மேல் சாவகாசமாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்திறங்கினான், கதாநாயகன் நடிகன்.ரசிகர்களுக்கு ஹை சொல்லிவிட்டு ,சுயபடங்கள் எடுத்து விட்டு உள்ளே வருவதற்குள் கூடுதலாக அரைமணிநேரம் ஆயிற்று.பொறுமையின் எல்லையை கடந்தான்,சர்வா.கையை மூடி திறந்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
சர்வாவை நோக்கி எதுவுமே நடக்காதது போல் கதாநாயகன் இயல்பாக கையசைக்கவும், இவனால் முடியவில்லை."என்ன சார் இவ்வளோ சீக்கிரம் வந்துட்டீங்க"
என்றான் சர்வா கேலியாக.

ஹீரோ நடிகனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை;ஸ்டைல் என கருதி நெற்றியை தேய்த்தான்."டைமுக்கு வர தெரியாத நீங்கல்லாம் எதுக்கு சார் படத்துக்கு கமிட் பண்றீங்க? புரொடியூசர் காச கரியாக்கவா" என்று கேட்டான்,சூடாக."மைன்ட் யுவர் வேர்ட்ஸ் சர்வா" என்றான் ஹீரோ நடிகன் எச்சரிக்கை விடுப்பது போல்."லேட்டா வந்தா நான் கேள்வி கேக்கத்தான் செய்வேன் " என்றான் சர்வா அழுத்தம் திருத்தமாக.
"உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.கால் தி புரொடியூசர் " என கத்தினான்,ஹீரோ நடிகன்.புரொடியூசரும் சில நொடிகளில் அங்கே ஆஜராகினார்.இயக்குநர் மற்றும் கதாநாயகன் என இருவரும் சண்டை கோழிகள் சாரி சேவல்களாக சிலிர்த்து கொண்டு நிற்கின்றனர். இருவருமே ஒரு படத்திற்கு முக்கியமானவர்கள்.அவருக்கு அந்த கணத்தில் என்ன செய்வதென தெரியவில்லை.
"என்ன சவுண்ட் விடுறே ? நீ என்ன பெரிய கொம்பா? டெக்னீசியன்ஸை மதிக்க மாட்ற. டைரக்டரை மதிக்க மாட்ற.அவ்ளோ ஏன் காசை கொட்டுற புரொடியூசரையும் மதிக்க மாட்ற. உன்னை இந்த இடத்துல மக்களும் திரைத்துறையில் இருக்கும் உழைப்பாளிகள் தான்.அத மறந்துட்டு ஆடாதே " என்று கடுமையாகவே வார்த்தையை விட்டான்,சர்வா.
"நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காளான் நீ.ஒரு வெப் சீரிஸ் சக்ஸஸ் ஆகிட்டுனா நீ பெரிய டைரக்டரா? லுக்.இது உனக்கு மொத படம்.ஆனா எனக்கு இது பத்தோட பதினொன்னு.அடக்கி வாசி.இல்ல அடையாளம் தெரியாம போயிடுவே " என்று எகிறினான், கதாநாயகன் நடிகன்.
"என்னடா சொன்ன" என பாய்ந்து போய் அவன் சட்டையை பிடித்தான்,சர்வா.
"பஞ்சபரதேசி.என் மேல கை வைக்கிறியா?" என்றபடி அவனும் இவன் சட்டையை பிடிக்க அங்கே கொஞ்சம் ரசாபாசம் ஆனது.

புரொடியூசர் தான் இடையில் புகுந்து பிரித்து விட்டார்.அவரது முகத்திற்காக விலகினர், இருவரும்.அதன்பின்பும் கொதிப்பு அடங்காமல் "சாரி சாரி.இவன் படத்துல என்னால நடிக்க முடியாது.வேற ஏதும் சான்ஸ் வந்தா என்னை கூப்பிடுங்க" என்று தயாரிப்பாளரை நோக்கி கூறிவிட்டு வந்த காரிலேயே கிளம்பி சென்றான்,ஹீரோ நடிகன்.
"உன்கிட்ட நான் இத எதிர்பார்க்கல சர்வேஸ்.என்னை டென்ஷன் பண்ணாம கிளம்பிடு.எல்லாரும் பேக் பண்ணிட்டு கிளம்புங்க.படமும் பண்ண வேணாம்.ஒன்னும் பண்ண வேணாம்.எவ்ரிபடி கோ " என்று சத்தம் போட்டார், தயாரிப்பாளர்.அவரது குரலில் விரக்தியும் ஆதங்கமும் அதிகம் இருந்தது.சமாதானமாக பேச வந்த சர்வாவை நோக்கி " நீ கிளம்பு பா.என் பிபி ஏத்தாத.ப்ளீஸ் க்ளியர் திஸ் ப்ளேஸ்.தயவுசெய்து திரும்ப என்னை தேடி வராதே " என்றார் அழுத்தமான குரலில்.அவனுக்கு மனது என்னவோ செய்தது;தன்மீதே கோபம் திரும்பியது.கோபத்தில் வேகமாக வண்டியை செலுத்தி வீட்டிற்கு சென்றான்.வழி முழுவதும் நடந்த நிகழ்வு அவனது மூளையில் ஒலிபரப்பு ஆகி கொண்டிருந்தது.


சண்முகம் அங்கிளை பார்த்து விட்டு வந்த பவதாரிணி குளித்து ரெடியாகி படிக்க அமர்ந்தாள்.ஆனால் முடியவில்லை; முழுதாய் கவனம் செலுத்த இயலவில்லை.தந்தையின் முகம் கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தது.புத்தகத்தை மூடி வைத்து விட்டு மேசையில் அப்படியே முகம் சாய்த்தாள்;காலிங் பெல் அடித்தது.சர்வா மதியத்திற்கு சொல்லிய உணவாக இருக்கும் என்றெண்ணியபடி கதவை திறந்தாள்.ஆனால் அவனே கையில் ஒரு பார்சல் உடன் நின்று கொண்டிருந்தான்.
அவனோடு முந்தைய காலம் போல் பேச ஆசைதான்.ஆனால் ஈகோ என்னாவது?
அவனுக்கு தர வேண்டிய பணத்தை கொண்டு வந்து மேஜையில் வைத்து விட்டு அவனிடம் கண் காட்டினாள்."எதற்கு" என்று கேட்டான் ஒற்றை சொல்லாய்."அப்பாவோட இறுதிச்சடங்கான செலவு" என்றாள், இயல்பாக.அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. "என்னை பாத்தா காசு இல்லாத பிச்சைக்காரன் மாதிரி தெரியுதா? நான் அவருக்கு யாரு? மருமகன்.அதற்கு அர்த்தம் ஆவது உனக்கு தெரியுமா? அவருக்கு இன்னொரு மகன்.காசை கொடுத்து என் அன்பை கேவலப்படுத்தாத " என்று ஆத்திரமாக பேசிவிட்டு தன் மாமனார் அறைக்குள் அதான் தற்போது அவன் வசிக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.


அவனது இந்த கோபத்தில் தாரிணி சற்று கலங்கி விட்டாள்.சோஃபாவில் சோகமாய் அமர்ந்திருந்த தாரிணிக்கு சற்று நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி தந்தான்,சர்வா.ஆம் தமிழ்நேசனின் தோற்றத்தில் வந்து நின்றான்.தாரிணி கேவியபடி ஓடி சென்று அவன் மார்பில் சாய்ந்தாள்.



-தொடரும்​
 

Arthi manu

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
6
Points
3
3.பொன் வசந்தமே

பவதாரிணி இயல்பிலேயே திடமான சித்தம் கொண்டவள்; எதற்கும் கலங்கி நிற்பவள் இல்லை.ஒரு பிரச்சினை வந்தால் வருந்தாது அதற்கான தீர்வை நோக்கி சிந்திப்பவள். ஆனால் பிரியமான தந்தையின் இழப்போ இல்லை நீண்டநாள் கழித்து தன் காதல் கணவனோடு ஒரே வீட்டில் வசிப்பதோ அவளை உணர்ச்சி வசத்திற்கு ஆளாக்கியிருந்தது.அதுவும் பாசமும் பரிவாக நடந்து கொண்டிருந்த சர்வேஸ்வரன் திடீரென கத்தவும் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது; அவனிடமிருந்து அவள் இதை எதிர்பார்க்கவில்லை.இயல்பிலேயே அவன் கொஞ்சம் முன்கோபிதான்.ஆனால் தான் தகப்பனை இழந்து வாடி நிற்கும் இந்த சமயத்தில் அவன் இப்படி நடந்து கொள்வான் என அவள் துளியும் நினைக்கவில்லை.

இவ்வாறு நடந்ததில் அவள் மனம் தொட்டாற் சுருங்கியாகிவிட்டது.ஆதலால் சோஃபாவில் கையால் முகத்தை தாங்கியபடி கொஞ்சம் சோகமாக அமர்ந்து விட்டாள்.சிந்தனை எங்கோ சென்றிருந்தது; எங்கோ என்ன எங்கோ? அவர்களது கடந்த கால காதல் நினைவுகளுக்கு தான். காண்பவர் கண்வைக்கும் வகையில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்? ஒருவேளை கண்ணடிதான் பட்டுவிட்டதோ? எல்லா இனிமையான நிகழ்வுகளும் குறுகிய காலத்திலேயே கசந்து விட்டனவே! பழையதை எண்ணி 'ம்ம்ம்ம்' என ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது, பவதாரிணியிடமிருந்து.

சற்று நேரத்தில் 'பவா' என்று அவனின் குரல் அவளது அருகே கேட்டது.அவள் திரும்பவில்லை.மீண்டும் மீண்டும் அவன் அழைத்தாலும் அவள் அவனை துளியும் கண்டுகொள்ளவில்லை.மாறாக அவனது அழைப்பு அதிகரிக்க, அதிகரிக்க உடம்பை விறைப்பாக வைத்து கொண்டாள்.ஆனால் இதுவும் ஒரு வகையில் அவனது அழைப்பிற்கான எதிரொலி தானே.அதை உணர்ந்தவனின் இதழ்கள் சிறு சிரிப்பை உதிர்த்தன; அவள் அறியாத வண்ணம் தான்.பின்னே யார் அதற்கும் அவளது கோபத்தை மூட்டை கட்டிக் கொள்ளுவது?

சில விநாடிகளுக்கு பின் "தாரும்மா " என்ற அழைப்பு வந்தது.தந்தை தமிழ்நேசனின் பிரத்யேக அழைப்பு அது.அதுவும் மிக நெகிழ்ச்சியான தருணங்களில் தான் அப்படி அழைப்பார்.மற்றநேரங்களில் வெறும் பவி தான்.ஓரிரு சமயம் மாமனாரின் இந்த அழைப்பையும், அதை கேட்டதும் மனைவியின் முகம் கனிவதையும் சர்வா கவனித்திருக்கிறான்.சர்வாவின் உருகிய குரலில் இதை கேட்ட பின்னும், முகத்தை நம் பவதாரிணியால் நிமிர்த்தாமல் இருக்க முடியவில்லை.

கண்களை உயர்த்தியவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.சர்வா அவளது தந்தையின் உருவில் நின்று கொண்டிருந்தான்.
அதாவது அவரது உடை மற்றும் கண்ணாடியை அணிந்திருந்தான்.தலைமுடியை கூட அவரை போல பவ்யமாக வாரியிருந்தான்.நெற்றியில் கூட விபூதி கீற்று இடம்பெற்றிருந்தது.ஆனால் ஐந்தரையடி தமிழ்நேசனின் உடை ஆறடி சர்வாக்கு பத்தும் பத்தாமல்
இருந்தது.

தமிழ்நேசன் பொதுவாக அரைக்கை வைத்த வண்ண சண்டைகளும், சந்தன நிற வேட்டியும் அணிவது வழக்கம்.'வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்தால் என்ன? ' என மகள் கடிந்து கொள்வாள்; தந்தையின் வெள்ளை உள்ளத்திற்கு பொருத்தமாக இருக்குமாம்.ஒரு புன்சிரிப்பு மட்டும் அவரிடமிருந்து பதிலாக வரும்.நியாயமாக,அவனது தோற்றத்தை கண்ட அவள் விழுந்து விழுந்து சிரித்திருக்க வேண்டும்.ஆனால் அவளது உள்ளம் இப்போது உணர்ச்சிப்பெருக்கில் இருக்கிறது.பொங்கிய அழுகையுடன் இரண்டே எட்டில் அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.அவன் மீதான அவளது கோபதாபங்கள் தற்காலிமாக விடுப்பு எடுத்துக் கொண்டன.

தன் நெஞ்சில் புதைந்தவளை தன்னோடு இறுக்கி கொள்ள தான் அவனுக்கும் ஆசையாக இருந்தது.ஆனால் அவளது நெகிழ்ச்சியை தான் பயன்படுத்தி கொண்டதாக இருக்க கூடாது என நேர்மையாளனாக எண்ணினான், சர்வா.
அதேசமயம் விசும்பும் மனைவியின் முதுகை அவனது விரல்கள் தன்னிச்சையாக வருடின‌.இந்த நிலை எவ்வளவு கணங்கள் இல்லை நிமிடங்கள் நீடித்தது என்பது அவர்களுக்கே தெரியாத விடயம்.ஒரு கட்டத்தில் சுதாரித்த பவதாரிணி (காதல்) எதிரியிடம் சரண் புகுந்த தன்னையே நொந்து கொண்டவளாய் (தன்) அவனிடமிருந்து விலகினாள்.மனைவியின் மனதை புரிந்து கொண்டவனின் உதடுகள் புன்னகையை சிந்தின.ஆனால் அதற்கும் அவளுக்கு கோபமே வந்தது.' தான் அழுகிறேன்.இவன் சிரிக்கிறான் என்று தான்'.ஆனால் அவளையும் சிரிக்க வைக்கும் முயற்சிதான் அது என அவளுக்கு புரியவில்லை.

மனைவியின் முகமாற்றங்களை கவனித்தவனுக்கும் தன் மனதை அவளுக்கு எப்படித்தான் புரிய வைப்பது என தெரியவில்லை.முன்பு தங்களின் மண வாழ்க்கையில் அவன் சில தவறுகள் செய்தான் தான்.ஆனால் அதுவும் அவள் நினைப்பது போல திட்டமிட்டு செய்யப்பட்டவை அல்ல.எதேச்சையாக நடந்தவை.ஆனால் அதை சும்மாவே தன் சுயமரியாதையை பெரிதாக நினைக்கும் பவா புரிந்து கொள்வாளா? அப்படி இருப்பதில் தவறு இல்லை தான்.ஆனால் எதிரே இருப்பவர்களின் கருத்தை கேட்க மாட்டேன் என காதுகளை மூடி வைத்து கொள்ளலாமா? பிறகு ஐம்புலன்கள் நமக்கு எதற்கு இருக்கிறது? எதையும் ஆராய்ந்து உணர்வதற்கு தானே?
' ஆனால் இவள் இல்லாமல் நான் எங்கள் வீடு திரும்ப போவதில்லை.பவா இல்லாமல் இனி எனக்கு வாழ்வு இனிக்க போவதும் இல்லை' என தனக்குள் சொல்லிக் கொண்டான், சர்வேஸ்வரன்.


லேசாக கனைத்தவன் தன் திடீர் கடுமைக்கான காரணத்தை அவளிடம் விளக்கலானான். " உனக்கே தெரியும் பவா.சினிமால்ல ஒரு டைரக்டராக ஜெயிக்கணும்ங்கிறது என் கனவு.ஆனா ஜான் ஏறினா முழம் சறுக்குது.வரவர டைரக்டருக்கே மரியாதை இல்லாம போயிட்டு.நான் என்னதான் செய்றது பவா? லேட்டா வந்த ஹீரோவை ஒரு வார்த்தை கேட்டதுக்காக புரொடியூசர் எனக்கு கெட் அவுட் சொல்லிட்டாரு.நானும் மனுசன் தானே.நான் தன்மானம் பாக்க கூடாதா? கண் முன்னாடி கனவுகள் சிதையுறதை கண்கொண்டு பார்க்க முடியல பவா.அந்த கடுப்புல தான் உன்னை கத்திட்டேன்.சாரி டா" என்று வருந்தினான், சர்வா.ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய பாவனையை அவனது முகம் பிரதிபலித்தது.

கணவனின் கதையை கேட்டவளின் கண்கள் கனிந்தன.பவதாரிணியின் மலர் இதழ்கள் அவனுக்கு ஆறுதல் கூற துடித்தன.சொல்லலாம் தான்.ஆனால் நெஞ்சு முட்ட இருக்கும் இருக்கும் கோபத்தை என் செய்வது? 'ஏய் உண்மையை சொல்லுடி.உனக்கு அவன் மேல் கோபம் மட்டும் தான் இருக்கா? ' என வினவிய மனசாட்சியை ஒதுக்கியவள், டேபிளின் மேலே இருந்த தன் போனை எடுத்தாள்.தன் தோழிக்கு டயல் செய்தாள்; எதிர்ப்புறத்திலிருந்து வந்த ஹலோவை புறக்கணித்து விட்டு தாமாக, " கனவு பத்தி கலாம் ஐயா சொன்னதை மறந்துட்டியா? உண்மையான கனவு நம்மள தூங்க விடாது; சாப்பிட விடாது.எந்த நிலையிலும் பின்வாங்க விடாது.இந்த காலத்துல தன்மானம் பாக்க கூட ஒரு பொசிசன் வேணும்.அந்த ஸ்டேஜ் வரவரைக்கும் உணர்ச்சிகளை கட்டுக்குள்ள தான் வைக்கணும்.கோபத்துக்கு அதிகபட்ச ஆயுள் ஒருநாள் தான்.ஆனா உன் கனவோட ஆயுள் என்னன்னு நீதான் தீர்மானிக்கணும்.இன்னைக்கு பெரிசா அவமானமா தெரியுற விசயம் நாளைக்கே அற்பமா தெரியும்.வாய்ப்பு அடிக்கடி வர்ற டவுன் பஸ் இல்ல.போ போய் உன் கனவுகளை மீட்டெடுக்குற வழியை பாரு" என்றாள்.

எதிர்ப்பக்கம், " ஏன்டி மதியம் தூங்குறவளுக்கு போன் பண்ணி என்னடி உளர்ற? போடி குக் வித் கோமாளி அஸ்வின் கூட ட்ரீம் ல்ல பேசிட்டு இருந்தேன்.அத கலைச்சிட்டியே போடி" என கதறிய தோழி மதுவை கண்டுகொள்ளாமல் தன் கருத்துக்களை கூறி முடித்தாள், பவதாரிணி.அத்தோடு தன் அறைக்குள் சென்று கதவை மூடினாள்.

மதுமதி பவதாரிணிக்கு நெருங்கிய தோழி.பள்ளிப்பருவத்தில் இருந்தே இணை பிரியாது லூட்டி அடிக்கும் தோழிகள்.கல்லூரி வாழ்க்கை இருவரையும் பிரித்த போதும் அன்பில் ஏதும் மாற்றம் இல்லை.மதுமதி ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.இதுவரை முரட்டு சிங்கிளாக சுற்றிக் கொண்டு இருப்பவள் ( ஏன் ஆண்களில் மட்டும் தான் முரட்டு சிங்கிள்கள் இருப்பார்களா? ).

தமிழ்நேசன் இறந்த அன்று தோழிக்கு துணையாக இங்கே தான் இருந்தாள்.கொஞ்ச நாட்கள் அவளுக்கு ஆதரவாக இங்கேயே தங்க நினைத்தாள்.ஆனால் பவியே தனிமையை விரும்புகிறேன் எனவும் தோழியை அவளது விருப்பம் போலவே விட்டு விட்டாள்.அத்தோடு சர்வா இங்கே வந்து தங்கவும் அவளுக்கு நிம்மதியாயிற்று.தோழி மீண்டும் கணவனோடு சேர்ந்து நல்லபடியாக வாழ்வாள் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
பவதாரிணி அழைப்பு துண்டித்த பிறகு, சில கணங்கள் ஒன்றும் புரியாதவளாக
விழித்த மது மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.ஏனெனில் அவளுக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே அரிது.

மனைவியின் வார்த்தைகள் அவனை உலுக்கின.' எத்தனையோ போராடித்தான் இந்த வாய்ப்பையே வாங்கினோம்.பெரிய இலக்கை இந்த கோபம் என்ற சிறிய தடை தகர்ப்பதா? கூடாது ' என மனதில் நினைத்தவன் தன் உடைக்கு மாறி வெளியே கிளம்பினான்.பைக் சத்தம் பவதாரிணிக்கும் கேட்டது.அவன் போகுமிடம் அவனுக்கு புரிந்து விட்டது.இயல்பிலேயே சாமர்த்தியசாலியாக தன் கணவன் நிச்சயம் சாதிப்பான் என அவள் மனம் கூறியது.அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.என்னதான் அவன் திறமைசாலியாக இருந்தாலும் இந்த கோபம் கெடுத்து வைத்து விடுகிறது.
ஏன்? அவள் முதன்முதலில் சர்வேஸ்வரை கண்டது அவனது சினம் மிகுந்த முகத்துடன் தான்.எண்ண அலைகள் பவதாரிணியை தங்களது முதல் சந்திப்பிற்கு அழைத்து சென்றது.

அப்போது பவதாரிணி இளங்கலை வேதியியல் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருந்தாள். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.எல்லா குடும்பங்களை போலவும் தந்தையும் மகளும் இனிமையாக செலவிடும் ஓய்வு தினம் அது.ஓய்வு நாள் என்றாலும் அவர்களின் வீடு சுறுசுறுப்பாக தான் இருக்கும்.அப்பாவும் மகளும் ஏதாவது ஒரு வேலையை பகிர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.மதியம் சமையலும் சிறப்பாக இருக்கும்.ஏனெனில் வாரநாட்களில் வேலைக்கு செல்லும் தகப்பனார் மற்றும் கல்லூரிக்கு மகளால் அப்படி என்ன பெரிதாக உண்டிருக்க முடியும்? தமிழ்நேசன் ஒரு உண்மையான, நேர்மையான பத்திரிக்கை ஆசிரியர்.ஆனால் அவ்விரண்டிற்கும் இக்காலத்தில் மதிப்பு குறைவு தானே? அதுவும் தற்போது நேர்மறையான செய்திகளை விட எதிர்மறையான தகவல்கள் தானே வைரல் ஆகிறது.

ஆதலால் அவரது வருமானம் குறைவு தான்.ஏதோ இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.அதுபோக தமிழ்நேசனுக்கு அவரது தந்தை வழிவந்த ஓரிரு சொத்துக்கள் இருந்தது தான்.ஆனால் அதை அவர் ஒன்றும் கட்டிக்காக்கவில்லை.அத்தோடு சமூக சேவையில் இறங்கியவருக்கு அவற்றை கணக்கில் கொள்ள தோன்றவில்லை.பவதாரிணியும் பண விடயத்தில் அக்கறை கொண்டதில்லை.அப்படியே அப்பாவின் அச்சு அல்லவா? ஆனால் வருமானத்திற்கேற்ப சிக்கனமாக நடந்து கொள்வாள்.அவரை நினைத்து அவளுக்கு எப்போதும் பெருமிதம் தான்.
தன் வாழ்க்கை தன் தேவை என ஓடும் உலகத்தில் அவர் ஆயிரத்தில் ஒருவர் அல்லவா? இயன்றவரை அவருக்கு துணை செல்வாள்.' நீ இன்னும் சிறப்பாக சேவை செய்ய ஐ.ஏ.எஸ் போன்ற பதவிக்கு போக வேண்டும்' என்று இடையிடையே மகள் வாழ்வை பற்றிய தன் எதிர்பார்ப்பை கூறுவார், தமிழ்நேசன்.அவள் மனதில் ஐ.ஏ.எஸ் கனவிற்கான விதையை விதைத்தது அவர் தாம்.ஒவ்வொரு முறையும் உதவி பெறுபவர்கள் மனநிறைவுடன் வாழ்த்தும் போது அவள் உள்ளமும் நிறைந்து போகும்; ' இப்படியே வாழ்வு சென்று விட்டால் போதும் இறைவா' என தினந்தோறும் வணங்குவாள், பவதாரிணி.ஆனால் விதி வலியது அல்லவா? அத்துடன் மாற்றம் ஒன்று தானே மாறாத விடயம்.

அவள் வாழ்விலும் திருப்புமுனை அழைப்பு மணியை அடித்தது, சர்வேஸ்வரன் வடிவில்.

-தொடரும்
 

Arthi manu

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
6
Points
3
4.பொன் வசந்தமே

அந்த
ஞாயிற்றுக்கிழமை தமிழ்நேசன் ஒரு முக்கிய விடயத்திற்காக வெளியே சென்றிருந்தார்.எப்போதும் போல் அரக்க பரக்க வெந்ததும் வேகாததுமாக உண்டு விட்டு கல்லூரிக்கு ஓடும் அவசியம் இல்லாத காரணத்தால் இன்று நிதானமாகவே எழுந்தாள், பவதாரிணி.அவள் எப்போதுமே அதிகாலையில் எழுபவள் தான்.ஆனால் வாக்கிங், உடற்பயிற்சி மற்றும் காலைப்படிப்புக்கு பின் கல்லூரி கிளம்பவதென்றால் ஒலிம்பிக் ஓட்டம் தான்.ஞாயிறு மட்டும் விதிவிலக்கு.பொதுவாகவே மகள் உரிய நேரத்தில் தூங்கி உரிய நேரத்தில் எழுபவள் என்பதால் தந்தையும் இந்த விடயத்தில் ஏதும் கூறுவதில்லை.

பொறுமையாகவே எண்ணெய் தேய்த்து தலைக்குளித்தவள், ஆற அமர ஈர கூந்தலை உலர்த்தினாள்.தமிழ்நேசன் இருந்தால் அவர் மகளின் அடர்த்தியான கூந்தலுக்கு சாம்பிராணி போடுவது வழமை.இருப்பதிலேயே இலகுவாக உணர வைக்கும் உடையை அணிந்து கொண்டாள்.பெரிதாக ஒன்னும் இல்லை; கடல்வண்ண டீசர்ட் மற்றும் கருப்பும் வெள்ளையுமாக பூக்கள் கொண்ட த்ரீ போர்த் பேன்ட்.நடுத்தர உடல்வாகு கொண்ட அவளை அந்த உடை கொஞ்சம் பப்ளியாக காட்டியது.தந்தை தயார் செய்து வைத்திருந்த சப்பாத்தி குருமாவை ஒரு வெட்டு வெட்டி விட்டு கொஞ்ச‌ நேரம் டிவியில் டாம் அண்ட் ஜெர்ரியை ரசித்தாள்.


பின் சிறிது நேரம் வீட்டை ஒழுங்குபடுத்தியவள் , மதிய உணவிற்கான சமையலில் இறங்கினாள்.நேற்று அதிசயமாக கிடைத்த நீலம் மாங்காய்களை வைத்து சேலத்து மாங்காய் குழம்பையும் தொட்டு கொள்ள பருப்பு துவையலும் செய்ய திட்டமிட்டாள்.வேண்டுமானால் கூட கொஞ்சம் அப்பளமும் வடகமும் பொரித்து கொள்ளலாம்‌.மாங்காய் துண்டுகளை குழம்பில் போடும் போது அழைப்பு மணி அழைத்தது.அதுவும் விடாமல் அடித்தது.

கொதிக்கும் குழம்பை மூடி வைத்து விட்டு வீட்டு கதவை திறந்தாள், பவதாரிணி.அவள் கிச்சனிலிருந்து வாயிலுக்கு வருவதற்குள் கதவும் வேகமாக தட்டப்பட்டது. ' அப்பா இதுபோல் செய்யமாட்டாரே.யாராக இருக்கும் ' என்ற ஆவல் இருந்தாலும் கதவை திறக்க அவளுக்கு தயக்கமாக இருந்தது.எனினும் தனக்கு தான் தற்காப்பு கலை தெரியுமே என்ற தைரியத்தில் கதவை திறந்தாள். எதிரே ஒரு உயரமான சிடுமூஞ்சி நின்று கொண்டிந்தான்.அவனது பெயர் சர்வேஸ்வரன் என்று அவளுக்கு பின்னால் தெரிந்தது. அவன் முகம் கோபத்தில் எள்ளுமாய் கொள்ளுமாய் வெடித்து கொண்டிருந்தது. ' யாரிவன்? அப்பா மீது எவருக்கும் கோபமே வராதே.அப்படி அவர் நடந்து கொள்ள மாட்டாரே? பின்னே இவன்' என புரியாமல் பார்த்தாள், பவதாரிணி.அவன் முகத்தில் இருந்த கடுமை சிறிதும் குறையவில்லை.


வந்தவனின் கரம் தன்னை அறைய வருவதை கண்டு அந்த ஆத்திரக்காரனின் கையை வலுவாக பிடித்து நிறுத்தினாள்.அவனது கண்களில் சிறு வியப்பு தெரிந்தது. சாதாரணமாக வந்திருந்தால் மரியாதையாக பேசியிருப்பாள்.அடாவடியாக வந்தவனிடம் அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணத்தில்" யார்டா நீ ? அப்பா இல்லாத நேரத்துல வம்பு பண்ணன்னே வந்திருக்கிறியா" என்றாள், மிடுக்காகவே.அவளின் ' டா' இன்னும் கொதிப்பூட்ட, " ஏய் என்னடி கொழுப்பா? முன்னே பின்னே தெரியாத ஆம்பளயை 'டா' போட்டு பேசுறே " என்றான், பற்களை கடித்த வண்ணம்.
" நீ மட்டும் யாரோ ஒரு பொண்ணை கைநீட்டி அடிக்க வரலாமா டா ? " என்றாள் சூடாகவே, 'டா' வில் அழுத்தம் கொடுத்து." ஏய் " என அவன் ஏதோ பேச துவங்கும் போது சமையலறையில் விசில் சத்தம் கேட்டது.

அவனை பொருட்படுத்தாமல் அவள் உள்ளே போகவும் அவனும் ஆத்திரமாக அவளை பின்தொடர்ந்தான்.பவதாரிணியுடனே கிச்சனிற்குள் நுழைய முயன்ற சர்வாவின் கால்கள் தயங்கி நின்றன.ஆயிரம் இருந்தாலும் அனுமதி இல்லாமல் அடுத்தவர் வீட்டு அடுக்களைக்குள் நுழைய கூடாது என்ற எண்ணம் அவனை தடுத்து நிறுத்தியது‌.அடுப்பை அணைத்து விட்டு வந்தவள் " ஹே மரியாதையா வெளியே போ‌ " என்று கத்தினாள், பவதாரிணி.
" முடியாதுன்னா என்னடி பண்ணுவ " என்று அலட்சிய பாவத்துடன் கூறியவனை அற்பமாக நோக்கி " எனக்கு டேக்வான்டோ தெரியும் " என்றாள். கூடவே அட்டாக் பொசிசனுக்கும் சென்றாள்.ஒருகணம் அவனிடம் கொஞ்சம் பிரமிப்பு தெரிந்தாலும் அடுத்த கணமே கேலியாக சிரித்தான்.அவள் ' என்ன' என்பது போல் நோக்கவும் " ஐ நோ கராத்தே" என்றான் புன்னகைத்த வண்ணம்.அக்கணம் மாயக்கண்ணனின் மறுஉருவம் போல் நின்று கொண்டிருந்தவனை நோக்கி சில கணங்கள் லயித்தாள், பவதாரிணி.



" என்ன மோதி பாக்கலாமா " என்றவனை நோக்கி " நான் ரெடி" என்றாள் முதுகு தண்டை நேராக வைத்தபடி." ஆனா சமபலம் இல்லாதவங்க கிட்ட மோதுற பழக்கம் எனக்கு கிடையாது " என்றான் காலரை தூக்கி விட்டபடி." நான் ஒன்னும் உனக்கு சளைச்சவ இல்லை" என்றவளை இடைமறித்து " இதோ பார்.இப்போ நீ என் கூட வரணும்.அவ்ளோ தான் " என்றான் உத்தரவு இடும் குரலில்.' எதுக்கு? ' என்றவளை வெறுப்பாக பார்த்து " எப்படிடி அவ்ளோத்தையும் பண்ணிட்டு உங்களால அப்பாவி மாதிரி இப்படி கேட்க முடியுது " என்றான், கசந்த குரலில்.அவனது முகத்தில் எரிச்சலும் வெறுப்பும் அப்பட்டமாக தெரிந்தது.

அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.இதுவரை அவளிடம் யாரும் இப்படி பேசியதில்லை.காதல் தொல்லை தந்திருக்கிறார்கள்; வாலாட்ட முயற்சித்திருக்கிறார்கள்.அதற்கு உரிய வகையில் அவள் பதிலும் தந்திருக்கிறாள்.ஆனால் இவன் என்ன திடீரென புயல் போல் வந்து தாக்குகிறான்? அநியாயமான பிதற்றல் வேறு.ஓங்கி ஒன்று கொடுக்கலாம் என்று பார்த்தால், ஒரு அடியில் ஒதுங்கி போகிறவனாகவும் தெரியவில்லை.கரோத்தே வேறு தெரியுமாம்.இவனை வாய்வார்த்தையாகவே திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

" என்னால எங்கேயும் வரமுடியாது " என்றாள் திடமாக." உன்கிட்ட யாரும் அனுமதி கேட்கலை" என்றவனை நோக்கி " பின்னே" என்றாள்.அடுத்து அவன் கள்வனை போல் சிரித்ததற்கு அர்த்தம் அவன் அவளை மதுரை வீரன் பொம்மியை தூக்கியது போல் தூக்கிய பின்தான் தெரிந்தது.எதிர்பாராத இந்த தாக்குதலில் தடுமாறியவள் சுதாரித்து அவனிடம் இருந்து திமிறினாள்.ஆனால் அவனோ ஒரு வெள்ளை கைக்குட்டையை அவள் மூக்கில் வைத்து அழுத்தினான்.தங்கள் ஊகம் சரிதான்.மயக்க மருந்தை சுவாசித்த பவதாரிணி அப்படியே அவன் தோளில் தொய்ந்தாள்.அவளை அப்படியே ஜாக்கிரதையாக யார் கண்ணிலும் படாமல் தூக்கி சென்றான்.பவதாரணி மயக்கம் தெளிந்து கண்விழித்த போது......

கைப்பேசி அழைக்கும் சத்தம் காரணமாக கடந்த கால நினைவிலிருந்து விடுபட்டாள், பவதாரிணி.முக்கிய அழைப்பு ஏதும் இல்லை.வெறும் கம்பெனி கால் தான்.கடிகாரத்தை பார்த்தால், மணி நான்கு.இவ்வளவு நேரமாகவா இப்படியே அமர்ந்திருக்கிறாள்.சரிதான்.கொஞ்சம் வீட்டு வேலைகளை பார்த்து விட்டு படிக்க அமர்ந்தாள், பவதாரிணி.

சர்வேஸ்வரன் கிளம்பி சென்ற இடம், தான் காலையில் சண்டையிட்ட ஹீரோவின் வீடு தான்.ஹீரோ சார் வீட்டில் இருக்கிறாரா என உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே சென்றான்.சர்வா அடிக்கடி வந்து போகிறவன் என்பதால் காவலாளி இலகுவாக உள்ளே அனுமதித்தான்.வேலையாட்களும் மரியாதைகவே நடத்தினர். ஆனால் கதாநாயகனின் மேலாளர், சர்வாவை தடுத்து நிறுத்தினான்." போங்க சார்.உங்களை பாத்தா சார் இன்னும் டென்ஷன் ஆகிடுவாங்க.எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான்.இதை சொல்லும் சாக்கில் மேலாளர் சர்வாவின் சர்ட் மீது கை வைத்து லேசாக பின்தள்ளினான்.சர்வா ஒரு பார்வை தான் பார்த்தான்.மேலாளர் விலகி நின்று வழி கொடுத்தான்.

சர்வாவிற்கு உள்ளூர தன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது.அது தந்த திடத்தில் தைரியமாக உள்ளே சென்றான்.உள்ளே கதாநாயகன் கையில்லாத டீசரட் மற்றும் சார்ட்ஸ் அணிந்து கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.கைகள் மொபைல் கேமில் பிஸியாக இருந்தன.சர்வா மெதுவான குரலில் " ஹலோ " என்றான்.

ஏதோ தோன்ற கம்பீரமான குரலில் மீண்டும் " ஹலோ " என்றான்.இப்போது ஹீரோவிடம் அசைவு இருந்தது.சர்வா " சாரி" என்ற போது அதிசயமாக அதே வார்த்தைகளை கதாநாயகனின் உதடுகளும் உதிர்த்தன.இருவரும் மிகுந்த ஆச்சர்யத்தோடு ஒருவரை ஒருவர் நோக்கினர்.சர்வா நட்பாக கைநீட்டவும் ஹீரோவும் அதை ஏற்றுக் கொண்டான்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபமாக கிளம்பி வந்த கதாநாயகன் நிறைய சிந்தித்தான்.இயக்குனர் புதியவன் தான்.ஆனால் வலுவான கதைக்களம் அது.நிச்சயம் ஹிட் ஆகும்.தற்போதைய ட்ரெண்டில் வேறு இருக்கிறது.கூடவே கதாநாயகி வெற்றி படங்களில் பங்காற்றியவள்.தமிழ்நாடு அளவில் விருதுகளை வாங்கியவள்.அது போல் தயாரிப்பாளரும் பிரபலமானவர்; சினிமா துறையில் வல்லமை வாய்ந்த ஒருவர்.அவர் பெயருக்கே சினிமா உலகில் தனிமதிப்பு இருக்கிறது.அவர் படப்பிடிப்பு நின்ற ஆத்திரத்தில் எதும் செய்யலாம்; சட்டம் கூட தன் மீது பாயலாம்.பொருளாதார நஷ்டத்தை முன்வைத்து வழக்கு பதிய முடியும் தான்.இதனால் தன் பெயர் தான் பாழாய் போகும்.

அவனது எண்ண ஓட்டம் அதே போக்கில் தொடர்ந்தது.சர்வாக்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை.இப்போது தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறான், அவன்.வைத்த காலை திரும்ப பத்திரமாக விலுக்கென்று எடுத்து கொள்ள இயலும்.அப்படியே அவன் பேர் ரிப்பேர் ஆகி அவன் படம் பண்ணாமல் போவதில் எனக்கென்ன இலாபம்? அதேசமயம் நான் இந்த பிரச்சினையால் இத்துணை காலம் காபந்து பண்ணியது எல்லாம் என்னாகும்? தாமதமாக சென்றது தவறில்லை தான்.ஆனாலும் இயக்குனர் சர்வாவிடம் அப்படி நடந்திருக்க கூடாது.கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாம்.இந்த எண்ணம் வந்ததும், சர்வாவை சாயங்காலம் அழைத்து பேசலாம் என நினைத்திருந்தான்.அதற்கேற்றாற் போல் சர்வா வந்ததும், அவன் இன்னும் இளகிவிட்டான்.

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.பின் கொஞ்ச நேரம்
இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர்.சூடாக வந்த காபியை பருகியவர்கள் தயாரிப்பாளரை சந்திக்க அவரது இல்லம் நோக்கி கிளம்பினர்‌.இதில் மொக்கை வாங்கியது, மேலாளர் தான்.

முதலில் கோபமுகம் காட்டினாலும் சற்று நேரத்தில் இருவரையும் ஏற்று கொண்டார், தயாரிப்பாளர்.நல்ல படத்தை பாதியில் விட அவருக்கு மட்டும் வேண்டுதலா என்ன? அதேசமயம் தன் வருத்தத்தை வெளிக்காட்டிய பின் இயல்பாக பேசினார்.இவர்களின் வருகையை அவர் எதிர்ப்பார்த்திருந்தது போல் நடந்து கொண்டது ஹீரோ நவீன்பிரசாத் மற்றும் நம் சர்வாவிற்கு வியப்பை அளித்தது.அவரும் பல படங்களை தயாரித்து இருக்கிறார் அல்லவா?
இது போன்ற நிகழ்வுகள் அவருக்கு
புதிது அல்ல.அவர்களின் சண்டையினால் ஏற்பட்ட மறைமுக நன்மையையும் எடுத்து கூறினார்.

"புயலோடு கிடைக்கும் மழை ன்னு சொல்லுவாங்க.இன்னிக்கு நடந்த களேபரத்துனால பைசா செலவு இல்லாம நம்ம படத்துக்கு விளம்பரம் கிடைச்சிருக்கு.நீங்க போட்ட சண்டை தான் இன்னிக்கி சோசியல் மீடியா ல்ல டிரெண்ட்.படுவைரல்" என்று சிரித்தார், தயாரிப்பாளர்.மற்ற இருவரும் அசடு வழிந்தனர்; மன்னிப்பும் கேட்டனர்.

" சண்டை வருவது சகஜம் தான்.ஆனா அது படப்பிடிப்பை பாதிக்க கூடாது.இனிமே எதுனாலும் நமக்குள்ளேயே முடிச்சிக்கணும் " என்றார். சர்வாவும் நவீனும் அதை ஆமோதித்தனர்.

மூவரும் ஒன்றாக சுய புகைப்படங்கள் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்தனர்.இயக்குநர் மற்றும் கதாநாயகன் சண்டையிட்டது எந்தளவிற்கு வைரல் ஆனது அதைவிட அவர்கள் மீண்டும் இணைந்த செய்தி ட்ரெண்ட் ஆனது.மறுநாளிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்ற செய்தி குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.தயாரிப்பாளர் தன் வீட்டில் டின்னர் சாப்பிட சொன்னதை இயல்பாக மறுத்துவிட்டு மகிழ்ச்சியாக மனைவியை காண சென்றான்.செல்லும் வழியில் இனிப்பும் பூவும் வாங்கி கொண்டான்.அவன் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பியிருந்தது.வழி நெடுக இனிய கற்பனைகளில் மிதந்தபடி சென்றான்.ஆனால் அங்கே....



-தொடரும்​
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom