மாயவளே..1
நியூயார்க் சிட்டி உலகின் பல அதிசய அழகுகளையும் பிரமிப்பூட்டும் கட்டிடக்கலைகளையும், பல சுற்றுலா தலங்களையும் கொண்டது . அமெரிக்காவின் இதயமாகவும், முதுகெலும்பாகவும் , செயல்பட்டுவருகிறது , அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு....
அங்கு வர்ஷாவின் கைகளில் சிக்காமல் ரோகித் ஓடிக்கொண்டிருந்தன்
“டேய் குரங்கு ஒழுங்கா ஓடாத நில்லுன்னு சொன்னேன் “
“ஏன், என்னை அடிச்சே கொல்லுறதுக்கா!!? நிக்கவே மாட்டேன் டி! “
“டேய் ஓடினாலும் உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன் டா !!“
“இதெல்லாம் அநியாயம் இப்படி ஆம்பிள பையனை துரத்திக்கிட்டு இருக்கியே டி! “
“நியாயமோ ; அநியாயமோ உன்னை இன்னைக்கு கொல்றதே சரி... ஒழுங்கா நில்லுடா “
“முடியாது டி ....“
“ஓடாம இருந்தா ஒரு அடியோடு தப்பிச்சிடுவ இல்லை இன்னைக்கி தர்மடிதான் சொல்லிட்டேன்... “
“எல்லாரும் நம்மளை ஒருமாதிரி பாக்குறாங்க டி “
“பாக்கட்டும் டா எருமை “
“இந்த தடவை மட்டும் மன்னிச்சுடு இதுமாதிரி இனி பண்ண மாட்டேன் டி ப்ளீஸ் “
“ஃபிகர பார்த்ததும் பிரண்ட்டை கழட்டிவிட்டுட்டா போற ..!!”
“சத்தியமா இனிமேல் கழட்டி விடமாட்டேன் டி... “
“இன்னொரு முறை சத்தியம் பண்ண வாய்லயே அடிப்பேன்.. “ என்றவள் அவன் பின்னிருந்து ஷார்ட் கலரை பிடித்து நிறுத்தினாள். மூச்சி வாங்க இருவரும் நின்றனர் .
“நீ ரொம்ப ஹாட் டா இருக்க வா ச்சில் பண்ணிட்டு வரலாம் “என அவளை இழுத்துக்கொண்டு போனான் அவன். இருவரும் ரேஸ்டாரெண்டுக்கு சென்றனர்; ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து, கதையளந்து கொண்டே சாப்பிட அங்கிருந்த அனைவரும் இவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்து சென்றனர்..
இது வழக்கமாக நடப்பதுதான் இவர்கள் இருவரும் பேசும் மொழி மற்றவர்களுக்கு புரியாது ; இருவரும் எப்போதும் ஒன்றாய் இருக்கையில் தமிழில்தான் பேசுவர் ; மற்றவர்களுக்கு இவர்கள் பேசும் மொழி புரியாது இவர்கள் பேசுவதை பார்த்து வேற்றுக்கிரக ஜந்து போல் பார்த்து செல்வார்கள் அனைவரும் . இவர்களுக்கும் இது பழகின ஒன்றுதான் .
“வர்ஷா இவங்க எல்லாரும் நம்மள ஒரு டைப்பா பாக்குறாங்க நாம பேசுறத பாத்தா இவங்களுக்கு பைத்தியம் மாதிரி தோணுதோ? “
“இருக்கலாம் டா “ என்று மீண்டும் கதையளந்து கொண்டிருந்தனர் இருவரும்
ரித்து வர்ஷினி, ரோகித் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாய் படித்து ஒன்றாய் வளர்ந்தவர்கள்; ரித்து வர்ஷினி இந்தியாவில் பிறந்தாலும் வளர்ந்தது படித்தது எல்லாம் நியூயார்க்கில் தான்.
ரோகித் தமிழ் வம்சாவழியை சேர்ந்தவன்.
ரோகித் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நியூயார்க்கில் தான் ஆனாலும் ரோகித் தமிழ் நன்றாக பேசுவான் நன்றாக எழுதவும் செய்வான் காரணம் ரித்துவின் அப்பா குணசேகரன் தான்...
ரித்து நியூயார்க்கில் படித்தாலும் தங்களின் தாய்மொழியான தமிழை அவளுக்கு சொல்லி கொடுப்பார் குணசேகரன் அப்போது ரோகித்தும் அவர்களுடன் வந்து உட்கார்ந்து கொள்வான்; அவனுக்கும் சொல்லிக்கொடுப்பார். அவனும் மிக விருப்பத்துடன் கற்றுக்கொண்டான்; சிறுவயதில் அதுவே அவர்களின் பழக்கமானது; இவர்கள் எப்போதும் தங்களுக்குள் தமிழில் பேசிக்கொள்வதுதான் வழக்கம்.
இருவரும் இவ்வாறே சண்டையிட்டு கொண்டே ஒருவழியாய் வீடுவந்து சேர்ந்தனர் .
“ஹாய் டாடி “
“ஹாய் டா, இப்போதான் வர்ரிங்களா ரெண்டுபேரும் ? “
“ஆமா டாடி இந்த எருமையால தான் லேட்டா ஆயிடுச்சி “
“குணாப்பா பொய் சொல்றா ; அவதான் சண்டை போட்டுட்டே வந்தா; இப்போ என்னால லேட்டா ஆயிடுச்சினு சொல்றா “
"பொய் டாட் நம்பாதீங்க; அவன் என்ன பண்ணாணு கேளுங்க “
“குணாப்பா ! நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்... பாய் ....
“டாட் பாருங்க , பிராடு எப்படி எஸ்கேப் ஆகுறான் ... “
“சரி விடுமா , அவனை பத்தி நமக்கு தெரியாதா, பத்து நிமிஷத்துல இங்க இருப்பான் “என்றார் குணசேகரன் .
“நான் போய் பிரெஷ் ஆய்ட்டு வரேன் டாட் “
“சரிம்மா “என்றவர் மகஸினில் கவனத்தை செலுத்தினார்.
குணசேகரனின் பார்வை மகஸினில் படித்திருந்தாலும் அவரின் மனமோ , பின்னோக்கிய காலத்திற்கு சென்றது . தன் வீம்பினாலும் , பிடிவாதத்தினாலும், தன் மகள் தாயின் அன்பையும், அரவணைப்பையும், அனுபவைக்க முடியாமல் போய்விட்டதே!! என்ற வருத்தம் அவரை மிகவும் வாட்டியது . அவர் மனதின் நினைவுகள் பின்னோக்கி சென்றுகொண்டிருந்தது ....
கந்தபுரம் ....
அனைவரும் அந்த கிராமத்தை பார்த்தாலே மெய்சிலிர்த்துப் போவர் ; அத்தனை எழில் கொஞ்சும் அழகு; சுற்றிலும் பசுமையாய் வயல்வெளி, ஆறு, குளம்,மலை என அந்த கிராமமே சொர்க்கம் போல் காட்சியளிக்கும்; அந்த கிராமத்தில் முக்கிய தொழில் விவசாயம் , சுற்றுவட்டார கிராமங்களுக்கும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக இருந்தது.
அந்த ஊரிலே மிக செல்வாக்கான குடும்பம் ரங்கசாமி ஐயாவின் குடும்பம் தான் ; அந்த ஊரே அவர் வார்த்தைக்கு கட்டுப்படும். சிவகாமி அம்மாள் ரங்கசாமி ஐயாவின் மனைவி; எவரேனும் பசி என்று வந்து நின்றால் மனம் தாங்கமாட்டார்..பசியென்று வருவோருக்கு முதலில் உணவு அளித்துவிட்டபின் தான் மாற்ற வேலைகள் அனைத்தும்...
மற்றவர்களை வார்த்தையால் கூட காயப்படுத்த நினைக்காதவவர், அத்தனை சாந்த குணம் சிவகாமி அம்மாளுக்கு ...எத்தனை செல்வாக்கும் செல்வச்செழிப்பும் இருந்தாலும் என்றும் அதை துளியளவிலும் வெளிக்காட்டி கொள்ளாதவர்; அனைவரிடத்தும் அன்பை மட்டும் காட்டும் குணம் சிவகாமி அம்மாளுக்கு....
ரங்கசாமி அய்யாவுக்கும் சிவகாமி அம்மாளுக்கும்,
இரு மகன்கள் ,ஒரு மகள் மூத்த மகன் கேசவமூர்த்தி; இரண்டாம் மகன் ருத்ரமூர்த்தி; மகள் சகுந்தலா. மூத்த மகனான கேசவமூர்த்திக்கும் குணவதிக்கும் திருமணமாகி பப்பு பிறந்தான், ருத்ரமூர்த்திக்கும் ஜானகிக்கும் திருமணமாகியதும் அனைவருக்கும் செல்லப்பிள்ளை சகுந்தலாதான்...
அம்மா அப்பா இரு அண்ணன்களுக்கும் அண்ணிகளுக்கும் என அனைவருக்கும் சகுந்தலா என்றால் கொள்ளை பிரியம்...
அந்த குடுப்பதின் முதல் வாரிசு பப்பு ; அவன் அனைவருக்கும் ஸ்பெஷல்.. தங்கள் குடுப்பதின் முதல் வாரிசான அண்ணன் மகன் பப்புவிடம் கொள்ளை பிரியம் சகுந்தலாவிற்கு.. வாழ்க்கை இப்படியே அழகாய் போக.. அப்போதுதான் குடுப்பதில் பெரிய பூகம்பம் உருவானது. குணசேகரன் சகுந்தலாவின் காதல் அனைவர்க்கும் தெரிய வர... அனைவர்க்கும் செல்லமாக வலம்வந்த சகுந்தலா தன் குடுப்பதினராலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாள்...
குணசேகரன் யாருமற்ற அனாதை என்பதாலும், வேற்று சாதி என்பதனாலும், சகுந்தலாவின் தந்தை இவர்களின் காதலுக்கு ஒற்றுக்கொள்ளவில்லை. சகுந்தலா எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் மனமிறங்கவில்லை...
குணசேகரன் சகுந்தலா குடும்பத்பத்திடம் பேசவந்தும் அவரை அசிங்க படுத்தி அவமானப்படுத்தி அனுப்பினார் ரங்கசாமி...
அன்பு, பாசம் எல்லாம் கௌரவத்திற்கு பலியானது தான் மிச்சம்; இதற்குமேல் இவர்களிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று எண்ணிய சகுந்தலா,.. சொந்தம், பந்தம் , பெற்றவர்கள் என அனைவரையும் எதிர்த்து தான் காதலித்த குணசேகரனை திருமணம் செய்துகொள்ள முன்வந்தாள் சகுந்தலா ...
இதனை அறிந்த குடும்பத்தார் சகுந்தலாவை அடித்து; உதைத்து ; மிரட்டியும் பார்த்தனர் . எதற்கும் அசரவில்லை அவள் .... குணசேகரன் வேறு சாதி என்பதால் உயிரே போனாலும் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று வீம்பாக இருந்தார் சகுந்தலாவின் தந்தை...
சகுந்தலாவிற்கு திருமணம் செய்து வைக்க ரங்கசாமி முடிவெடுத்தார் . இதற்கு மேல் இவர்களிடம் கெஞ்சுவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த சகுந்தலா, குணசேகரன் கரம் பற்ற முடிவு செய்தாள் ; வீட்டை விட்டு வெளியேறி குணசேகரனை திருமணம் செய்துகொண்டாள் ; சகுந்தலா காதலனை திருமணம் செய்துகொண்டது மகிழ்ச்சியளித்தாலும் , தன் பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் , துரோகம் செய்துவிட்டதை நினைத்து மனம் வலித்தது .
சகுந்தலாவின் குடும்பம் செல்வாக்கு மிக்க பணக்கார குடும்பம் ; சாதி, கௌரவம் என்று வீம்பாக இருப்பவர்கள்; தாய் தந்தை இரு சகோதரர்களுக்கு செல்ல பிள்ளையாய் வலம்வந்தவள்; செல்வச்செழிப்பில் வளர்ந்தவள் என்றும், இனிமேல் சகுந்தலாவின் குடுப்பதினர் எக்காரணத்தை கொண்டும் அவளை ஏற்கமாட்டார்கள் என்றும், அவர்களின் அன்பும், ஆசிர்வாதமும் ,சொந்தமும் இனி இந்த ஜென்மத்தில் கிடைக்காதென்றும், இதற்குமேல் இருவரும் அங்கு சென்றால்... இருவரையும் கொல்லவும் தயங்கமாட்டார்கள் என்றும், அவருக்கு நன்றாகவே தெரியும்.. இனி தன் மனைவிக்கு தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை... தானே அவளுக்கு எல்லாமாக இருந்து அவளை நல்லபடியாக பார்த்துக்க வேண்டும் எந்த துன்பமும் அவளை நெருங்க விட கூடாதென்று கவனமாய் இருந்தார் .
குணசேகரனுக்கு தாய் மட்டும்தான் ; அவரும் குணசேகரனின் பதினெட்டு வயது இருக்கும் போது இறந்துவிட்டார் ;
சகுந்தலா குணசேகரனை திருமணம் செய்து கொண்டபின், சென்னைக்கு வந்து வாழ்ந்தனர் . கணவன் மனைவி என வாழ்க்கை மிக அழகாய் சென்றது ; சகுந்தலா சிறுது காலத்திலே கர்ப்பமானாள் தன் மனைவியின் கர்ப்பம் அறிந்து மகிழ்ச்சில் துள்ளி குதித்தார் அவர்.....
பிரசவ காலத்தில் குணசேகரன் சகுந்தலாவிற்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருந்தார்...
நாட்கள் மிக வேகமாய் ஓடியது...
சகுந்தலாவிற்கும் பெண் குழந்தை பிறந்தது. குணசேகரன் பிரித்து என்று பெயர் சூட்ட ஆசைப்பட்டார். சகுந்தலா தர்ஷ்வர்ஷினி என்று பெயர் சூட்ட ஆசைப்பட்டதால் ... குணசேகரன் ‘பிரித்து’ விலிருந்து ‘ரித்து’வையும், ‘ தர்ஷிவர்ஷினி’லிருந்து ‘வர்ஷினி’யையும் எடுத்து ‘ரித்து வர்ஷினி ‘என்று பெயர் சூட்டினார் ...
சகுந்தலாவிற்கும் இருவரின் ஆசைப்படி பெயர் வைத்ததில் அத்தனை மகிழ்ச்சி.... குழந்தைக்கு ரித்து வர்ஷினி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்...
இருவரும் குழந்தையின் சிரிப்பில் அனைத்தையும் மறந்து , தங்களின் உலகத்தில் மிக சந்தோசமாய் வாழ்ந்து வந்தனர் ; நாட்கள் இப்படியே நகர ரித்துவிற்கு மூன்று வயது ஆனது. அப்போது துவங்கியது பிரச்சனை.... சரியான வருமானம் இன்மை; ஏழ்மையில் நிலை என அனைத்தும் அவர்களை படுத்தி எடுத்தது...
கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் உருவானது; நாட்கள் ஆக ஆக இருவருக்குமான புரிதல் முற்றிலும் குறைந்து போனது; ஒரு கட்டத்தில் வாய்ச்சண்டை கைகலப்பு வரை போனது; இவ்வாறு ஒரு நாள் பிரச்சனை முற்றிவிட சகுந்தலா வார்த்தையை விட்டாள் “என் அப்பா அம்மா சொன்ன மாதிரி நான் உன்ன கல்யாணம் பண்ணி இருக்க கூடாது ; அன்னைக்கு நான் பண்ணது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று இப்போதான் எனக்கு புரியுது; ச்சை என்ன வாழ்க்கை இது!! நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேனே!! “என்று அழ , குணசேகரனுக்கு சர்வமும் ஆடிப் போனது... பிரச்சனை பெரிதாகி விட
“அப்போ இவ்ளோ நாள் கடமைக்குனு தான் வாழ்ந்தியா என்கூட? “என்று அவர் கேட்க ,
கோவத்தில் “ஆம் “என்று சகுந்தலா சொல்லிவிட்டாள்..
அனைத்தும் முடிந்து போனது...
கொட்டிய வார்த்தையை அள்ள இயலாதே!!...
“என்னை கல்யாணம் பண்ணதே தவறுன்னு ஆனபின் என் பிள்ளையை பெற்றது மட்டும் எப்படி சரி என்றிருக்கும் உனக்கு?? “என்றவர், ரித்துவை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.. குணசேகரன் சிறிது காலம் நண்பனுடன் தங்கி இருந்தார்; விரக்தியாலும் ,
வெறுப்பாலும் ,
இந்த நாட்டை விட்டே செல்ல முடிவெடுத்து நண்பரின் உதவியால் நியூயார்க் வந்துவிட்டார் .
அதன் பின் இந்தியாவிற்கு செல்லவில்லை ; செல்ல அவர் விரும்பவும் இல்லை ;
பழைய நினைவுகளில் இருந்தவர் மனம் பாரமானது...
தன்னுடைய கோவத்தினாலும், பிடிவாதத்தினாலும், தாயிடமிருந்து மகளை பிரித்து விட்டோமோ என்று வேதனையாக இருந்தது. இன்றளவும் தன் மனைவியின் குடுபத்தாரை மன்னிக்கவோ மறக்கவோ அவர் மனம் நினைக்கவில்லை . வருடங்கள் கடந்தாலும் வலியின் சுவடுகள் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது...
தனக்கு பின் தன் மகளுக்கு யார் துணை என்று நினைக்கையில் தான் மனம் பதறியது ... தன் மகளை தனித்து விட்டுவிடுவோமோ என்று பயம் அவரை ஆட்கொள்ள தொடங்கியது.... இதுவே கொஞ்ச காலமாகவே அவர் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது...
“அம்மாடி வர்ஷி இங்க வாடா... “
“இதோ வரேன் டாடி... “என்றவள் அவள் தந்தை முன் போய் நின்றாள் ...
அவர் முகம் வாடி இருப்பதை கண்டு ,
“என்ன டாடி? ஏன் டல்லா இருக்கீங்க ..உடம்புக்கு ஏதும் முடிலையா ?? “
“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா நீ இப்படி வந்து உக்காருடா.. “என்று ஷோபாவை காட்ட , அவளோ தரையில் அமர்ந்து , தன் தந்தையின் மடியில் தலைசாய்த்து கொண்டாள்... அவள் தலையை வருடிவிட்ட படியே “அம்மாடி வர்ஷி அப்பா மேல உனக்கு கோவம் இல்லையடா?? “
“எனக்கு ஏன் டாடி உங்க மேல கோவம் இருக்க போது?? “
“இல்லடா ... உன்ன உன் அம்மாகிட்ட இருந்து பிரிச்சிட்டேன் டா உன் டாடி... எங்களுக்குள்ள நடந்த மனஸ்தாபத்தால உன்னோட சந்தோசத்தை பறிச்சிட்டேனோன்னு தோணுது டா...
உனக்கு அம்மாவோட அன்பு என்னன்னே தெரியாம வளத்துட்டேனே டா !!!“
“ஏன் டாடி இப்போ இதை பத்தி பேசிகிட்டு விடுங்க. “
“இல்லைடா என் சுயநலத்துக்காக உனக்கு கிடைக்க வேண்டிய தாய்ப்பாசத்தை எல்லாம் கிடைக்க விடாம பண்ணிட்டேன் .. நான் எவ்ளோ பெரிய சுயநல காரனா இருந்திருக்கேன் “என கண்கலங்கினார் குணசேகரன் ...
“டாடி ப்ளீஸ் நீங்க பீல் பண்றதால எதுவும் மாறிடப்போறது இல்லை “அவளுக்கும் தன் தாயுடன் வாழவேண்டும் ; அவர்களின் பாசத்தினை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகளெல்லாம் உண்டு... ஆனால் , அவை எல்லாம் நடக்காதவை என்று தனக்குள்ளேயே போட்டு புதைத்து கொள்வாள்.. தந்தையிடம் சொன்னாள் தந்தை கஷ்டப்படுவாரோ என்று அவரிடம் எதையும் காட்டிக்கொள்ள மாட்டாள்..
தெருவில் குழைந்தைகள் அம்மாவின் விரல் பிடித்து நடந்து போவதை பார்த்தால்... தனக்கு இப்படி எல்லாம் ஒரு பாக்கியம் கிடைக்க வில்லையே!!! என இப்போது வரை மனம் ஏங்கும்... என்னதான் வளர்ந்தாலும், படித்து பட்டம் பெற்றாலும், தாயின் அன்பிற்காக ஏங்கும் சிறு பிள்ளைதான் அவள்...
தாயின் அன்பை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டு... தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, முறை மாமன் என பெரிய குடும்பத்தில் செல்ல பிள்ளையாய் வாழ ஆசை அவளுக்கு..
உறவுகள் இல்லா அனாதையாய் வாழும் வாழ்க்கை எத்தனை வலிகளை கொடுக்கும் என்பது ரித்துவிற்கு நன்றாக தெரியும் ... இவைகளை எல்லாம் ஒருபோதும் தந்தையிடம் அவள் சொன்னதில்லை ; அவள் சொல்லாவிட்டாலும் அவளின் ஏக்கங்களை அறிந்தவர் குணசேகரன்..
“உன் மனசை படிச்சவன் மா நான்; என்ன மன்னிச்சிடுடா... உன்னை இவ்ளோ நாள் உன் அம்மாகிட்ட இருந்து பிரிச்சி வச்சதுக்கு.. “
“டாட் விடுங்க “
“இல்லடா நான் இவ்ளோ நாள் பண்ணது எவ்ளோ பெரிய தப்புனு இப்போதான் புரிஞ்சது.“என தன் மகள் தலையை வருடியபடி சொல்ல, ரிதுவிற்கு ஆச்சர்யம் , சந்தோஷம் என அனைத்தும் ஒருசேர வந்தது . ஏனெனில், இதுவரை அவர் இப்படி எல்லாம் பேசினதே இல்லை ...
“டாட் அம்மா கூட இண்டியாலதான இருக்காங்க !!”என குழந்தைபோல் அவள் கேட்க ,
“ஆமா டா “
“டாட் அங்க நமக்கு நிறைய ரிலேட்டிவ்ஸ்ல இருக்காங்களா? “
“ஹ்ம்ம் ஆமா நிறைய பேர் இருக்காங்க “என்றார் குணசேகரன் ...
“என்ன விட்டுட்டு நீங்க மட்டும் என்ன கதை பேசுறீங்க? “என்றபடி உள்ளேவந்தான் ரோகித்
“டேய் எரும இங்க இருக்க வீட்டுலேருந்துவர இவ்ளோ நேரமா?? “
“அதான் வந்துட்டேன் இல்ல “
“உனக்காகத்தான் வைட்டிங் சரி வா “
“எங்க? “
“ஹ்ம்ம்ம் சமைக்கத்தான் “
“ஹே பிளீஸ் டி இன்னைக்கு நீயே சமைச்சிடு வர்ஷி ...“
“நோ.. போய் ஒழுங்கா குக் பண்ணு மேன் “ என அவனை வலுக்கட்டாயமாய் சமயலறையினுள் தள்ளினாள் ரித்து...
“இதெல்லாம் சரியே இல்லை டி “
“எல்லாமே சரியாத்தான் இருக்கு டா , நல்லா பாரு எல்லாத்தையும் கரெக்ட்டா வாங்கிவச்சிட்டேன் டா.. “என்றாள் வேண்டுமென்றே ...
அவன் முறைக்க “இம்சை புடிச்சவளே நானே பண்ணி தொலைக்குறேன் “என்று சமையலை துடங்கினான் ரோகித் .
“ரொம்ப அலுத்துக்காத டா “
“ஏன் சொல்லமாட்ட !”
“அம்மாடி அவனை ஏன் கஷ்ட படுத்துற நீயே சமச்சிடேன்மா “
“நோ டாடி டுடே ரோகித் தான் சமைக்கணும் அதான் அவனுக்கு பனிஷ்மென்ட். பிராடு காலைல என்ன வேலை பண்ணினானு உங்களுக்கு தெரியாது டாடி; தெரிஞ்சா நல்லா நாலு அடி வைப்பிங்க... என்ன ரோகித் டாடி கிட்ட சொல்லவா? “என்று அவனை மிரட்ட
“என்னமா பண்ணான் எதை சொல்லட்டானு அவன்கிட்ட கேக்குறே?“என்று குணசேகரன் கேட்க , ரோகித் திருதிருவென முழித்தான் ...
“இவன் ஏன் இப்படி முழிக்குறான்? டேய் என்ன பண்ண?”
“அதுவா டாடி !!”என்று அவள் தொடங்கும் முன்பே ரிதுவின் வாயைப்பொத்தினான் ரோகித். “குணாப்பா ! அவ சும்மா எதையோ ஒளறிட்டு இருக்கா, நான் எதுவுமே பண்ணல “என்று ரித்துவை சமையலறையினுள் இழுத்து சென்றான் கையோடு ...
அவனிடமிருந்து விடுபட்டவள் “டாடி.. “என்று மீண்டும் அவரிடம் சொல்ல முற்பட “அம்மா தாயே தயவு செஞ்சி என்ன விட்டுடு... உனக்கு என்ன இப்போ சமைக்கணும் அவ்ளோதான... டென்மினிட்ஸ்ல சூப்பரா குக் பண்ணிடுறேன் போதுமா “
“ஹ்ம்ம் இப்போதான் நீ குட் பாய் சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணு ஓடு !!”என்றாள் ரித்து ...
அவன் முறைத்துக்கொண்டு வேலையை செய்ய அவளுக்கு சிரிப்புதான் வந்தது..
************
இரவு நேரம் அனைவரும் அவரவர் வீடுகளில் உண்டுவிட்டு உறங்கி கொண்டிருந்தனர் . சென்னையில் பஸ்டாண்டில் பசியின் கொடுமையால் கண்கள் மூடியிருந்தும் நித்ராதேவி அவனை நெருங்காமல் தூரம் நின்று அவன் படும் வேதனையை பார்த்துக்கொண்டிருந்தாள்...
பசியின் கொடுமையால் வயிற்றினுள் பலரக சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது; ஒரு கட்டத்திற்கு மேல் வயிற்றினுள் எதுவோ இழுத்து புடித்திருப்பதை போல் வயிறு வலிக்க காலையிலிருந்து ஏதும் சாப்பிடததின் விளைவை அவன் வயிறு இப்போது சமயம் பார்த்து பழிவாங்கிக்கொண்டிருந்தது.. கண்கள் மூடி இருந்தும், உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான் அவன் ...
இதையெல்லாம் உணரவோ அல்லது புரிந்துகொள்ளும் மனபக்குவமோ தெளிவோ அவனுக்கு இல்லை....இந்த கடவுளுக்கும் சிலநேரங்களில் கண் இல்லாமல் போய்விடுகிறது . ஏழைகள் படும் பாட்டை கண்டும் காணாமலே இருந்து விடுகிறார்..
அந்த பஸ்டாண்டில் படுத்திருக்கும் ஒரு பெரியவர் இவனை பார்த்து அவன் அருகில் வர “தம்பீ.., தம்பீ “என அவனை தட்டி எழுப்பினார் அந்த பெரியவர்.. எழுப்பியதில் கண் திறந்தவன் , அலறி கத்தினான்... “பயப்படாத தம்பி! , நான் உன்ன ஏதும் பண்ணல “
அவன் அழுதுகொண்டே, “அங்க... அடிச்சி !! அடிச்சி “என வேறு திசையில் கையைக்காட்டி சொல்ல ,
“உன்ன அடிச்சாங்களா யாரது? “என்று கேட்டார் அந்த பெரியவர் ,
“ஹ்ம்ம்ம் ஆமா ஆமா “என மண்டையை பலமாய் ஆட்டினான் அவன் .
“சாப்டியா? “என சைகை காட்டி கேட்க,
“இல்லை “என தலையாட்டினான் அவன் .
“இந்தா, இதை சாப்பிடு “என பன்னை அவனிடம் நீட்டினார் அந்த பெரியவர் ....
பயந்து அதை வாங்க தயங்கியவன் “நான் உன்ன அடிக்க மாட்டேன் பயப்படாத! “என்ற பின் தான் அவன் பன்னை அவசர அவசரஅவசரமாக சாப்பிட்டான்....
அதை பார்த்த பெரியவருக்கு மனம் தாங்க வில்லை ; பசியின் கோரத்தாண்டவம் யாரைத்தான் விட்டுவைத்தது....
“இனிமேல் உனக்கு பசி எடுத்தா, என்கிட்ட வா சரியா “
“ஹ்ம்ம்ம் சரி “என்று பலமாய் தலையாட்டினான் அவன் .
“யாரு பெத்த புள்ளயோ புத்தி பேதலிச்சுப்போய் இருக்கு; பெத்தவங்க இவனை எங்க எல்லாம் தேடுறாங்களோ! “என அவர் புலம்பினார். அவரால் அதை மட்டுமே செய்ய முடிந்தது ..
“நீ படுத்து தூங்கு பா “என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்...
அவனும் படுத்து உறங்கிவிட்டான்
ஏனோ கடவுள் ஏழைகளுக்கு கோடீஸ்வர மனதையும், கோடிஸ்வரர்களுக்கு அடுத்தவருக்கு உதவாத கொடூரமான மனதையும், கொடுத்து வேடிக்கை பார்க்கிறான்...
-தொடரும்