மறையாதே என் கனவே
அத்தியாயம்-1
விடியல்... ஆரஞ்சுப் பந்தாய் சுரியன் தன் செந்நிறக் கதிர்களோடு கிழக்குத்
திசையில் இருந்துக் காலை ஐந்தரை
மணிக்குத் தன்னை உலகிற்கு உதிர்த்துக் கொண்டு இருந்தது. இரவுப் போர்வை தன் கம்பளத்தைச் சுருட்டிக் கொண்டு இருக்க, இனிய பறவைகளின் கூக் குரல்கள் ஆங்காங்கே ஒலித்து விடியலை
இன்னும் ரம்மியமாகக் காட்டியது.
இயற்கையின் அழகு ஏகமாய்க் கொட்டிக் கிடக்க.. இளம் புல்களில் பனித்துளிகள் சிதறி வெள்ளி போல மின்னின.. சுற்றி இருந்த பசுமை அழகிலும் செழிப்பிலும்.. கதிரவன் எழும்பத் தயாராக, இருட்டும் வெளிச்சமும் விட்டும் விடாமலும் மப்பும்
மந்தாரமுமாக விடிய அழகே உருவமாய்
காட்சி அளித்துக் கொண்டு இருந்தது
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்
வட்டத்தில் உள்ள கம்பம்.
தன்னைச் சுற்றியுள்ள மூன்று
திசைகளும் மலைகளால் சூழப்பட்டு
ரம்மியமாக ஒரு பள்ளத்தில்
அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் ஊர். கடல் மட்டத்தில் இருந்து 1282 அடி உயரத்தில் இருந்தது. மேலும் புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி என
வளம் சேர்க்க.. விவசாயமே பிரதானத்
தொழிலாக மக்கள் இருந்தனர்.
காலைக் கதிரவன் தன்னுடன் சிலிர்க்கும் காற்றையும் சில்லென்ற தென்றலையும் வீச.. அந்தத் திராட்சைத் தோட்டத்தின் அருகில் சிறியதாக ஒரு வீடு இருந்தது. அந்த அழகிய ஓட்டு வீட்டின் பின்னால்
இருந்த விசாலமான இடத்தில் யோகா
செய்து கொண்டிருந்தாள் கௌசிகா. ஆம் கௌசிகா தான் நம் கதையின்
கதாநாயகி.
கௌசிகா - பிரம்மன் தான் மிகவும்
சந்தோஷமாக இருந்தத் தருணத்தில்
படைத்தப் படைப்பு என்பதில்
சந்தேகமில்லை. சரஸ்வதி தேவி மீது
காதல் கொண்ட தருணத்தில்
கௌசிகாவைப் படைத்திருப்பார் என்று நினைக்கிறேன். நல்ல உயரம். சந்தன நிறத்தில் அழகான அளவான உடல் அமைப்பைக் கொண்டவள். பொதுவாக தன் வயதுப் பெண்களுடன் நிற்கும் போது ஐந்தரை அடி உயரத்தில் நல்ல உயரமாக எழிலாகத் தெரிவாள். மீன் போன்ற வடிவத்தில் சுறுசுறுப்பான விழிகள். வில் போன்ற வளைவானப் புருவங்கள். நேரான நாசி. இயற்கையாக சிவந்து காணப்பட்ட அழகான அதரங்கள்.
சங்குக் கழுத்து. மொத்தத்தில் பிரம்மன் ரசித்து ரசித்துப் படைத்த படைப்பு என்று அடித்துச் சொல்லலாம்.
தன் மீது வீசிய குளிர்த் தென்றலை
உணர்ந்த கௌசிகாவின் உடல்
ரோமங்கள் சிலிர்த்தன. தனது யோகாப் பயிற்சியை முடித்துவிட்டு எழுந்தவள் அந்த இயற்கை அன்னை அள்ளித் தந்த எழிலை ரசித்தபடி நின்றாள்.
நன்றாக மூச்சை இழுத்து அந்தக் காலை நேர மென்மையானக் காற்றைக் கௌசிகா சுவாசிக்க.. அந்தக் குளிர்க் காற்று நாசியினுள் சென்று இதயம் வரை குளிர்வித்து இதம் தருவதை அனுபவித்தபடி நின்றாள். ஏனோ இந்த இரண்டு நாட்களாக ஏதோ தன் உள்உணர்வு ஆனந்தமாகவும் படபடப்பாகவும் சுற்றுவதைக் கௌசிகா உணர்ந்தாள். அப்படி என்ன நடக்கப்போகிறது என்று யோசித்தபடி நின்றாள்.
சிறிது நேரம் நின்றுவிட்டு வீட்டிற்குள்
நுழைந்தவள் தன்னுடன் தங்கி இருக்கும் கவிதா இன்னும் இழுத்துப் போத்தித் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு "எப்போது தான் சீக்கிரம் எழக் கற்றுக் கொள்ளப் போகிறாளோ" என்று குறுஞ்சிரிப்பு பூத்தபடி தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள்
புகுந்துவிட்டாள்.
கௌசிகா குளித்து முடித்துவிட்டு
தலையைத் துடைத்தபடி வெளியே வர
கவிதா அப்போது தான் சோம்பலை
முறித்த படி எழுந்தாள். எழுந்து
உட்கார்ந்தவள் தன் தலையைச்
சொறிந்தபடியே "குட் மார்னிங் கௌசி"
என்று தூக்கக் கலக்கத்திலேயே
சொன்னாள்.
"குட் மார்னிங் கவி" என்று தனது நீண்ட
கூந்தலைக் காய வைக்க நின்றபடி
கவிதாவிற்கு கௌசிகா தனது காலை
வணக்கத்தைச் தெரிவித்தாள்.
"மணி என்ன?.. அச்சச்சோ ஆறே முக்கால் ஆஆஆஆ" என்று வாயைப் பிளந்த கவிதா "என்னதான் ஆலாரம் வைத்துத் தூங்கினாலும் சீக்கிரம் எழ முடிவதில்லை கௌசி.. அப்பப்பா எப்படித்தான் காலை ஐந்தரைக்கு எழுகிறாயோ" என்று சலித்தாள் கவிதா.
"அதெல்லாம் நினைத்தால் எழலாம்.
அதற்கு முதலில் நேரத்தில் தூங்க
வேண்டும். ஆளோடு கடலைப்
போட்டுவிட்டு இரண்டு மணிக்குத்
தூங்கினால் இப்படித்தான் தூங்கி
வழிவாய்" என்று கேலி செய்துச்
சிரித்தாள் கௌசிகா.
"ச்சு போ கௌசி.." என்று வெட்கத்தோடு
எழுந்து தன் வேலைகளை செய்யத்
தயாரானாள்.
கடந்த மூன்றரை வருடங்களாக
இருவருக்கும் இதே வழக்கமான
வாழ்க்கை தான். மூன்றரை வருடத்திற்கு முன் வேலைக்காகக் கௌசிகா கம்பம் வந்தபோது தான் கவிதாவும் வேலை தேடி கம்பம் வந்தது. ஊர்ப்பெரியவரான சங்கரலிங்கம் அவர்களே தன் பள்ளியில்
இருவருக்கும் ஒரு வேலையைத் தந்தார்.
கௌசிகா மூன்று முதல் ஐந்தாம்
வகுப்பிற்கு ஆங்கிலம் எடுக்க..
கவிதாவைப் பள்ளி ஆபிஸ் வேலைக்கு
நியமித்தார் சங்கரலிங்கம். வயதுப்
பெண்கள் என்பதால் இருவருக்கும் தன் திராட்சைத் தோட்டத்து அருகில் உள்ள தன் வீட்டையே தங்கிக்கொள்ளத் தந்தார்.
ஒரு ஹால், சமையல் அறை, ஒரு
படுக்கை அறை பாத்ரூம் என
தேவையான வசதிகளோடு அழகாக
இருந்தது ஓட்டு வீடு. அவர் வீடு
என்பதால் பாதுகாப்பும் கூட. இரவு
திராட்சைத் தோட்டத்திற்கு காவலிற்கு
வரும் ஆட்களுக்கு இவர்களின்
பாதுகாப்பு பற்றியும் சொல்லியே
அனுப்பப்பட்டது. அதனால் இரண்டு
பெண்களும் எந்த அனாவசியத்
தொந்திரவும் இல்லாமல் நிம்மதியாகவே இருந்தனர்.
வந்த புதிதில் இருவரும் கொஞ்சம்
ஒதுங்கியே இருந்தாலும் நாட்கள்
செல்லச் செல்ல இருவரும் நல்ல
தோழிகள் ஆயினர். காலை எழுந்தவுடன் கவிதா வீட்டு வேலைகள்.. அதாவது வீட்டைக் கூட்டிப் பெருக்கி பாத்திரம் கழுவ.. கௌசி காலை டிபன் மதிய உணவு என அனைத்தையும் தயார் செய்து விடுவாள். வார இறுதியில் வீடு துடைப்பார்கள்.. இல்லை என்றால் சினிமா என்று பொழுதுபோக்கிற்காக தேனி வரை சென்று நேரத்தைக் கழித்து
விட்டு வருவர்.
இன்றும் அதே போலக் கவிதா வீட்டைக்
கூட்ட.. கௌசிகா இட்லியை ஊத்தி
வைத்துவிட்டுக் காயை நறுக்கிக்
கொண்டு இருந்தாள். "கௌசி சொல்ல
மறந்துவிட்டேன் பார்... இந்த வார
இறுதியில் நான் ஊருக்குப் போய்
வருகிறேன்.. திங்கள் காலையில் தான்
வருவேன்" என்று முகத்தில் எந்த
உணர்ச்சியும் காட்டாமல் சொன்னாள்.
"உன் ஆள் சுரேஷைப் பிரிந்து இருக்கப்
போற கவலையா?" என்று நமட்டுச்
சிரிப்புடன் வினவ "அடப்போப்பா.. எங்கள் விஷயத்தைச் சொல்லத்தான் ஊருக்கே போகிறேன்" என்று டென்ஷனாகச் சொன்னாள்.
"ஓஓஓ... அப்போ சீக்கிரம் 'டும் டும்'ன்னு
சொல்லு" என்று சிரித்தாள் கௌசிகா.
"வீட்டில் ஒத்துக்கிட்டா சீக்கிரம்
வச்சிக்களாம்.. ஆனால் என்ன சொல்லப் போறாங்களோ தெரியல.." கூட்டி முடித்தக் குப்பைகளை முறத்தில் அள்ளிய படியேச் சொன்னாள் கவிதா.
"அதெல்லாம் ஓகே ஆயிரும்.. சுரேஷும்
நல்ல வேலையிலும் சம்பளத்திலும்
இருக்கிறார்.. அவரை மறுப்பார்களா? நீ
பேசுகிற விதத்தில் பொறுமையாக
எடுத்துச் சொல்லு" என்று கௌசிகா
அவளிற்கு தைரியம் மூட்டினாள்.
"கடவுளே அவங்க வீட்டுல ஒத்துக்க
வச்சிரு" என்று மனதினுள் கடவுளிடம்
வேண்டத் தவறவில்லை கௌசிகா.
"ஹம்ம்... நல்ல படியாக நடந்தால்
சரிதான்" என்று பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள் கவிதா.
அதற்குப் பிறகு இருவரும் பேசிக்
கொள்ளவில்லை.. வேலையே சரியாக
இருந்தது.. கவிதா குளித்து முடித்து
வெளியே வரவும் மது டிபனை எடுத்து
சாப்பிட வைக்கவும் சரியாக இருந்தது.
"அஹாஹா.. என்ன இட்லியும் தாக்காளிச் சட்னியுமா" என்று வாசம் பிடித்தபடி வந்து அமர்ந்தாள் கவிதா.
"ஆமாம்" என்ற கௌசி அவளிற்கும்
எடுத்து வைத்துவிட்டு தனக்கும் தட்டில்
இரண்டு இட்லிகளை வைத்தாள்.
"நீ போயிட்டா எனக்கு இரண்டு நாள் போர் அடிக்கும் கவி" என்று இட்லிகளை
மென்றபடியே கௌசி குறையாகச்
சொல்ல "அப்போ நான் கல்யாணம் ஆகிப் போயிட்டா..." என்று இழுக்க கௌசி அப்படியே இட்லியை வாயில் அடைத்தபடி உட்கார்ந்திருநதாள்.
"கௌசி சொல்றேன்னு..." என்று கவிதா
ஆரம்பிக்க அடுப்பில் வைத்து இருந்த
மதியத்திற்கான சாப்பாடு தனது
மூன்றாவது விசிலை அடிக்க.. அதான்
சமயம் என்று கௌசிகா அதை அணைக்க எழுந்து சென்று விட்டாள். "ச்ச இதுவேற ஊடால" என்று எரிச்சலுற்றாள் கவிதா.
போய் ரொம்ப நேரம் ஆகியும் கௌசி
வராததைக் கண்டக் கவிதா "கௌசி நான் எதும் பேசல... வா.. வந்து சாப்பிடு" என்று அந்தச் சிறு சமையல் அறையை நோக்கிக் குரல் கொடுக்க அமைதியாக வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கினாள் கௌசிகா.
இந்த மூன்று வருடங்களில் இது இரண்டு பேருக்கும் நடக்கும் ஒன்றுதான். கவிதாவைப் பற்றி சகலமும் கௌசிக்குத் தெரியும். ஆனால் கௌசியைப் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாது.
சங்கரலிங்கத்திற்கு அவள் சொந்த ஊர் என்ன என்று மட்டும் தான் தெரியும். கவிதாவும் வந்த புதிதில் இன்டைரக்ட்டாக கௌசியிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்துவிட்டு ஒருநாள் நேராகவே கேட்டுவிட்டாள்.
"எனக்கு யாரும் இல்லை கவிதா. நான்
தனிமரம். அவ்வளவு தான் வேறு எதுவும் கேட்காதே" என்று சொல்ல அதற்கு மேல் கவிதாவும் அவளைக்
கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால் கௌசியின் கல்யாணத்தைப்
பற்றி கவிதா கேட்கும் போது எல்லாம்
கௌசி மறுப்பாள் "அதெல்லாம் குடும்பம் இருப்பவர்களுக்குக் கவி.. எனக்கு எதுக்கு அதெல்லாம்.." என்று
சொல்லுவாள் கௌசி.
"ஏய்ய் உன் அழகிற்கு லைன்ல நிப்பாங்க டி.. இப்போது எல்லாம் எவ்வளவு மேட்ரிமோனி இருக்கு. அதுவும் இல்லாமல் நீயும் கல்யாணம் செய்தால்.. உனக்கும் ஒரு குடும்பம் வந்துவிடும்பா" என்று கவிதா சொல்ல "எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை கவிதா. எனக்குக் கடைசி வரைத் தனியாக இருக்கத்தான் ஆசை" என்று முடித்துவிட்டு தன் வேலையில்
மூழ்கிவிடுவாள்.
சாப்பிட்டு விட்டுக் கவிதா மதியத்திற்குத் தேவையான உணவை இருவருக்கும் எடுத்து வைக்க கௌசி தன் சுடிதார் ஷாலிற்கு பின்னைக் குத்திக் கொண்டு வந்தாள். பின் இருவருமாக பள்ளியை அடைய மணி எட்டரை ஆகி இருந்தது. லேட் இல்லைதான். இருந்தாலும் எல்லா
ஆசிரியரும் வர ஆரம்பித்து இருந்தனர்.
சில பெரிய வகுப்பு மாணவர்களும் வந்து கொண்டு இருந்தனர்.
ஊர்ப் பெரியவரான சங்கரலிங்கம் தான் இந்தப் பள்ளியைத் தொடங்கியது. ஊரில் வளரும் அனைத்துக் குழந்தைகளுக்கும்
கல்வி அவசியம் என்பது அவரது
கொள்கையாக இருந்தது. படித்து முடித்து தன் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் மாணவர்களுக்கு அறிவுருத்துவார்.
மேலும் விவசாயத்திலும் மிகவும் ஈடுபாடு உடையவர். கம்பத்தில் திராட்சைத் தோட்டம்.. ஏலக்காய் எஸ்டேட் என அனைத்தையும் செய்து வந்தார். தேனியிலும் தோட்டம்.. வயல் என நிறைய செய்து வந்தார். பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்துத் தன் பள்ளி மாணவர்கள் அக்ரிகல்ச்சர் படிக்க வேண்டும் என்றால் முழுச் செலவையும் சந்தோஷமாக ஏற்றுக்
கொண்டு சந்தேஷமாக படிக்க வைத்தார்.
அன்று வழக்கம் போல பள்ளிக்குள்
நுழைந்த இருவரும் நேராக ஆபிஸ்
ரூமிற்குச் சென்றனர். உள்ளே நுழைந்த
இருவரையும் கண்ட ப்யூன் சாமி
படங்களைத் துடைத்தபடியே
இருவருக்கும் காலை வணக்கத்தைத்
தெரிவித்து விட்டு மீண்டும் சாமி
படங்களுக்குப் மலர்களை வைக்க
ஆரம்பித்தார்.
கௌசிகா ஆபிஸ் ரெஜிஸ்டரில் தான்
இன்று வந்ததிற்கான கையெழுத்தைப்
போட்டுக் கொண்டுத் திரும்ப சுரேஷ்
உள்ளே நுழைந்தான். வந்தவன்
கௌசியிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து
விட்டு நேராக கவிதாவிடம் சென்று
நேற்று இரவு கவிதாவிடம் பாதியில்
விட்டக் கடலையைத் தொடங்கினான்.
சுரேஷ் கம்பத்தைச் சேர்ந்தவன் தான்.
வந்த ஒரு மாதத்திலேயே கவிதாவிடம்
காதலைச் சொல்லி அதை செயலிலும்
உணர்த்தி அவளைச் சம்மதிக்க
வைத்தவன். எப்போதும் காதல்
வண்டுகள் தான்.
சரியாக ஒன்பது மணிக்குத் தனக்குக்
குடுத்த மூன்றாம் வகுப்பிற்குள் கௌசிகா நுழைந்தாள். 'அப்பாடா' என்று மூச்சை இழுத்து விட்டவள் சிரிப்புடன் பாடத்தை எடுக்கத் தொடங்கினாள். ஏனோ இந்த
வாண்டுகளோடு இருக்கும் போது
எல்லாம் மறந்துவிடும் கௌசிக்கு.
யாரையும் மிரட்டாமல் அதட்டாமல்
நேக்காகப் பாடத்தை மனதில் பதிய
வைத்து சாமர்த்தியமாக நல்ல
மதிப்பெண்களையும் பெற
வைத்துவிடுவாள். அதே நேரம்
ஒழுக்கத்தில் கண்டிப்பும் உண்டு.
பாடத்தை மட்டும் இல்லாமல்
மரியாதையாகப் பேசுவது, கூச்சப்
படாமல் ஒருவருக்கு பதில் பேசுவது என அனைத்தையும் கற்றுக் கொடுப்பாள்.
அன்றும் அதே போல தனது முதல்
இரண்டு வகுப்புகளை முடித்துக் கொண்டு ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட தனி அறைக்கு வந்து உட்கார்ந்தாள். பள்ளிக்கு
வந்தால் கவிதாவும் கௌசிகாவும் மதிய இடைவெளியைத் தவிர மற்ற
நேரங்களில் பேசவே நேரம் இருக்காது.
கவிதா ஆபிஸ் வேலையிலேயே மூழ்கி
இருப்பாள்.. கௌசிகாவிற்கும் வகுப்பு
மற்றும் இன்சார்ஜ் வொர்க் என்று
அதிலேயே நேரம் சென்றுவிடும்.
அன்று மதியம் கவிதா சாப்பிட வர
சுரேஷும் வந்து இவர்களுடன் சேர்ந்து
கொண்டான். அவர்கள் காதலிக்க
ஆரம்பித்த நாட்களிலிருந்து இதுவும்
வழக்கமான ஒன்று தான்.
என்னதான் சுரேஷ் கௌசிகாவிடம்
நட்போடு பழகினாலும்.. அவ்வப்போது
கவிதாவை வெறுப்பேற்ற கௌசிகாவிடம் கொஞ்சம் அதிகமாகப் பேசுவான். ஆனால் எல்லை மீற மாட்டான். கௌசிகா அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் சாதரணமாகவே பேசுவாள். என்னதான் சுரேஷ் கவிதாவை
வெறுப்பேற்றவே செய்தாலும் தானும்
அவனுடன் இணைந்து அவளை
சீண்டக்கூடாது என்று எண்ணினாள். அது எவ்வளவு வலியைத் தரும் என்பது கௌசிகா நன்கு அறிந்த ஒன்று. அதன் வலியை அனுபவித்தவளும் கூட.
"இன்னிக்கு ஈவ்னிங் சங்கரலிங்கம் சார் வருவார்" என்று மதிய உணவை உண்ட படி சுரேஷ் இருவரிடமும் சொன்னான்.
"என்ன ரௌன்ட்ஸா?" என்று கௌசிகா
செய்திருந்த வெண்டைக்காய்
பொறியலை கபளீகரம் செய்தபடிக்
கவிதா கேட்டாள்.
"அப்படி இருந்திருந்தால் நமக்கு முன்
கூட்டியே சொல்லி இருப்பார்கள் இல்லை" என்று கவிதாவைப் பார்த்து
யோசனையாகக் கேட்டாள் கௌசி.
இருவரையும் ஒரு முறை பார்த்துச்
சிரித்தவன் "அதான் இல்லை.. இன்னிக்கு நம்ம சங்கரலிங்கம் சாரோடப் பையன் இங்கு வருகிறார்" என்றான் சுரேஷ்.
"அவர் பையன் இங்கு வந்துதான் ஒரு
மாதம் ஆச்சே" என்று கவிதா மேலே பேச வந்தவனை பேசவிடாமல் இடையில் புகுந்தாள்.
"அட முழுசா சொல்ல விடுடி.." என்று
சலித்தவன் "அவர் பையன் வந்து ஒரு
மாதம் ஆச்சு தான்.. ஆனால் இன்று தான் மகனோடு பள்ளிக்கு வருகிறார்
சங்கரலிங்கம் சார். இனிமேல் பள்ளியை அவர் மகன் தான் பார்க்கப் போகிறார். வெளிநாட்டு வேலை போர்
அடித்துபோல.. இன்று காலை தான்
நம் ப்யூன் சொன்னார்" என்று அவன்
காலையில் ப்யூன் சொன்னதை இருப்
பெண்களிடம் அளந்து கொண்டு
இருந்தான்.
பேசியதில் நேரம் போனதும்
தெரியவில்லை உணவு காலி ஆனதும்
உணரவில்லை மூவரும். பின் சாப்பிட்டு முடித்து விட்டு அவர்வர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.
மதியம் வகுப்பு இல்லை என்பதால்
கௌசிகா ஆசிரியர்கள் அறையிலேயே உட்கார்ந்து இருந்தாள். சும்மா உட்காரப் பிடிக்காமல் அடுத்த மாதம் வர வேண்டிய பரிட்சைக்கு வினாத்தாள் எடுத்துக் கொண்டு இருந்தாள். திடீரென தன் இதயம் பன்மடங்காகத் துடிப்பதை
உணர்ந்தாள் கௌசிகா.
இந்த இரண்டு நாட்களாக இப்படித் தான் அவ்வப்போது இருக்கிறது.. எதனால்? என்று தன்னைத்தானே கேட்டுக்கேட்டு மூளையைக் கசக்கினாள். ஏனோ ஒரு பக்கம் ஏதோ பதட்டமாகவும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் என்று உணர்வுகள் மாறி மாறி வந்து கௌசிகாவை வேலை செய்ய விடாமல் செய்தது.
"அடடட ச்சை..." என்று ஜன்னல் பக்கம்
வந்து வெளி அழகை கொஞ்ச நேரம்
ரசிக்க எண்ணி நின்றவள் அதையும்
செய்ய முடியாமல் தவித்தாள்.
ஏன்? என்ன ஆச்சு? இந்த மூன்றரை
ஆண்டுகளில் திடீரென ஏன் இந்த மாதிரி உணர்வு என்று குழம்பிக் கொண்டு இருந்தாள். இது சரிவராது என்ன எண்ணியவள் 'பேசாமல் ஆபிஸிற்குச்சென்று கவிதாவுடன் ஏதாவது பேசியபடி அவளுக்கு உதவியாது செய்யலாம்' என்று முடிவு செய்தாள். மணி இரண்டரை ஆகி இருக்க இனித் தனக்கு எடுக்க
வகுப்பும் இல்லை பேசாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு
சென்று விடலாம் என்று நினைத்தவள்
தன் பிக் ஷாப்பரை எடுத்துக் கொண்டு
கீழே வந்தாள்.
மூன்று மணிக்கு ஆபிஸ் அறைக்குள்
வந்த ப்யூன் "இன்னிக்கு எல்லாரும்
நான்கு மணிக்கு மேல் ஒரு அரை மணி
நேரம் இருக்க வேண்டும்மா..
சங்கரலிங்கம் ஐய்யா வருகிறார்" என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை அறிவிப்புப் போலச் சொல்லிவிட்டு, அடுத்து எல்லா
வகுப்பிற்கும் சொல்லச் சென்று விட்டார்.
மூன்றே முக்காலிற்கு அணைத்து மாணவ மாணவியர்களும் பள்ளியில் இருந்து வெளியே ஆரவாரத்துடன் ஜாலியாக நகர கௌசிகா எல்லாவற்றையும் பார்த்தபடி
நின்றிருந்தாள். பள்ளிக்குள் வரும் போது இப்படி யாராவது ஜாலியாக
வருகிறார்களா? என்று தன்னைத்தானே கேட்ட கௌசியின் மூளையிடம், கௌசியின் மனம் "அடிப்பாவி நீயும் ஒரு காலத்தில் இப்படித் தான் சென்றாய்.. ஆசிரியர் ஆனால் மறந்துவிடுமா?" என்று
கேட்கக் கௌசி சமாதானம் ஆனாள்.
ஏனோ மீண்டும் தன் மனம் வேகமாகத்
துடிப்பதைக் கௌசி உணர்ந்தாள். 'இது
என்ன இப்படித் துடிக்கிறது..' என்று
மனதிற்குள் புலம்பியவள் கவிதாவைத்
தேடிச் சென்றாள்.
பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும்
வேலையாட்கள் தவிர அனைவரும்
சென்று இருந்தனர். "கவிதா நான்
ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன். சார்
வந்தால் நீ போ நான் வந்து விடுவேன்"
என்று ரெஸ்ட்ரூமிற்குச் சென்று முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு வந்தாள் கௌசிகா.
அவள் வரவும் ப்யூன் ஏதோ கவிதாவிடம் சொல்லிக் கொண்டு போகவும் சரியாக இருந்தது. கௌசிகா அருகில் வர "கௌசி சங்கரலிங்கம் சாரும் அவர் மகனும் வந்துட்டாங்கலாம்.. வா போலம்" என்று
கவிதா அழைக்க அவளுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்தாள் கௌசிகா.
உள்ளே நுழைந்து ஆசிரியர்களுக்கான
இருக்கையில் இருவரும் அமர சுரேஷும் வந்து கவிதாவின் அருகில் அமர்ந்தான். "சார் வந்துட்டாங்க-ன்னு சொன்னாங்க.. இன்னும் வரலையே" என்று கௌசிகா மனதில் நினைத்ததை கவிதா ஆரம்பிக்க
"ஏதோ அவரும் அவர் மகனும்
கரஸ்பாண்டன்ட் அறையில் பேச்சு"
என்று கவிதாவிடம் சுரேஷ் சொன்னது
கௌசியின் காதிலும் விழுந்தது.
சில நிமிடங்களில் அறையின் வாயிலில் காலடிச் சத்தத்தைக் கேட்டு அனைவரும் மரியாதைக்குரிய விதத்தில் எழுந்து நிற்க கௌசியும் எழுந்து நின்று திரும்பிப் பார்த்தாள். முதலில் சங்கரலிங்கம் சாரைப் பார்த்து புன்னகைத்த கௌசி அவருடன் வந்த மகனைப் பார்த்து 'திக்'
என்று இருந்தது.
"இவனா? இவன் எங்கே இங்கே? இவன்
தான் சாரோட மகனோ? கடவுளே இவன் தொல்லையை இனி இங்கேயும்
அனுபவிக்க வேண்டுமா?" என்று
கௌசியின் மனதில் ஆயிரம்
எண்ணங்கள் எழுந்தன.
கவிதா தொண்டையைச் செறும
அவளைத் திரும்பிக் கௌசி பார்க்க
"இவன் என்ன டி இங்க?" என்று கவிதா
கண்களாலேயேக் கௌசியிடம் கேட்டாள். கண்களாலேயே கவிதாவை 'எதுவும் முகத்தில் காட்டாதே' என்று அடக்க இருவரும் தன்னிலைக்குத் திரும்பினர். இருந்தாலும் இவன் எதற்கு இங்கு வந்திருக்கக் கூடும் என்று ஆயிரம் கேள்விகள் கௌசிகாவிற்கு.
யோசனையில் இருந்த கௌசியை
சங்கரலிங்கம் சாரின் குரல் கலைத்தது. வெள்ளை வேஷ்டியிலும் சந்தன நிற சட்டையிலும் சாந்த முகத்துடன் அதே சமயம் சிறிது கம்பீரமான குரலில் பேசத்
தொடங்கினார்.
"எல்லோருக்கும் மாலை வணக்கம்.
எல்லோரும் ரொம்ப நேரம்
காத்திருங்கீங்க-ன்னு நினைக்கிறேன்.
இடையூறுக்கு வருந்துகிறேன்.
திடீரென்று இந்தக் கூட்டத்தை கூட்டும் படி ஆகிவிட்டது. இனிமேல் இந்தப் பள்ளியை என் மகன் பிரபு தான் ஏற்று நடத்தப் போகிறான். இப்பள்ளியின்
கரெஸ்பாண்டன்ட் ஆகவும் இனி
பொருப்பேற்கப் போகிறான்" என்று தனது மகிழ்ச்சியான குரலில் அனைவருக்கும் அறிவித்தார்.
எல்லோரும் சங்கரலிங்கம் சார் பேசி
முடித்தவுடன் கைதட்ட கௌசியும் கடனே என்று கையைத் தட்டினாள். பிரபு தன்னை அப்பப்போ பார்ப்பதை
கௌசிகா உணர்ந்தாள்.
"இனி உங்களின் கோரிக்கை.. உங்களின் ஐடியா எல்லாவற்றையும் உங்கள் புதிய கரெஸ்பாண்டன்டிடமே தெரிவிக்கலாம். நான் வருவதைக் குறைக்கப் போவதால் எதுவும் நம் பள்ளியில் மாறப்போவது இல்லை. வழக்கம் போல எல்லாம் செயல்
படுத்தப்படும்" என்று தன் பேச்சை
முடித்தார் சங்கரலிங்கம்.
அவர் பேச்சை முடிக்க எல்லோருக்கும்
டீயும் பிஸ்கட்டும் கொண்டு வரப்பட்டது.
ப்யூன் அனைவருக்கும் எடுத்துத் தர
எல்லோரும் அவரவர் குழுவிற்குள்
பேசியபடி இருந்தனர். பின்
எல்லோரையும் தன் மகனிற்கு அறிமுகம் செய்த படி வந்து கொண்டு இருந்தார் சங்கரலிங்கம்.
கடைசியாக சுரேஷிடம் வந்தவர் "பிரபு
இது சுரேஷ்... இவங்க ரெண்டு பேரும்
கவிதா கௌசிகா.. இவங்க தான் நம்ம
திராட்சைத் தோட்டத்திற்கு பக்கத்தில்
உள்ள வீட்டில் தான் தங்கியிருக்காங்க " என்று தன் மகனிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கௌசிகாவிற்கு அவனைப் பார்த்தது
அதிர்வாக இருந்தாலும் பயமாக இல்லை. அவன் 'ஹலோ' என்றதற்கு 'ஹலோ' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
பின் எல்லோரும் அந்த மீட்டிங் முடிந்து
கிளம்ப கவிதாவும் கௌசிகாவும்
கிளம்பினர். ஆபிஸ் ரூமிலிருந்து
வெளியே வந்த இருவரும் சங்கரலிங்கம் சாரும் பிரபுவும் சுரேஷிடம் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்தனர். "சரி
போலாம்.. சுரேஷிடம் இன்று பேசுவது
கஷ்டம்தான். மழை வேறு வர மாதிரி
இருக்கு" என்று கவிதா சொல்ல
இருவரும் வெளியே வரத் திரும்பினர்.
ஆனால் பிரபுவின் பார்வை தன்னைத்
தொடர்வதை கௌசிகாவால் உணர
முடிந்தது. வேகநடையுடன் பள்ளியை
விட்டு வெளியே வந்தாள்.
கடந்த ஒரு மாதமாக பிரபு இவளைத்
தொடர்ந்து கொண்டு இருக்கிறான்.
பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள டீ
கடையில் கௌசி வரும் வரை நின்று.
அவள் வந்தவுடன் அவளைத் தொடர்ந்து பள்ளி வரை செல்வது என அனைத்துச் சேட்டைகளையும் செய்து கொண்டு இருந்தான்.
அவனைக் கவனித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக முகத்தை வைத்துச் சென்று விடுவாள். அவன் முகத்திலும் உடையிலுமே அவன் பணக்காரச் செழுமைத் தெரிந்தது. 'இப்படித் தான் சுற்றுவான்.. வேறு எதாவது பெண் கிடைத்தால், தன்னால் அவள் பின் சென்று விடுவான்' என்ன கௌசிகா எண்ணி இருந்தாள்.
ஆனால் ஒருவன் பின் தொடர்வதைக்
கவனித்தக் கவிதா "ஏய் என்னடி இவன்
டெய்லியும் பின்னாடி வந்துட்டு
இருக்கான்.. உன்னைத் தான் பாலோ
பண்றான். உனக்குத் தெரியுதா
இல்லையா" என்று கௌசிகாவிடம்
கவிதா சற்று எரிச்சலானக் குரலில்
வினவினாள்.
"தெரியும் டி... நாம திரும்பிப் பார்த்தால்
தான் இன்னும் உரிமை எடுப்பார்கள்.
அதான் அவனைச் சட்டை செய்வதே
இல்லை.. வேறு யாராவது வந்தால்
அவனாகப் போய்விடப் போகிறான்"
என்று கௌசி சொல்ல கவிதா மேலே
பேசினாள்.
"இல்லை டி.. அவன் சும்மா
விளையாட்டிற்கு உன் பின்னாடி வர
மாதிரித் தெரியல.." என்றவள் "பாரு பாருபின்னாடி எப்படி வரான்னு" என்று
பின்னால் வந்து கொண்டு
இருந்தவனைப் பார்த்தபடி கவிதா
படபடப்பான குரலில் சொல்ல தன்
தோழியின் படபடப்பைக் கண்டு
கௌசிகாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
ஆனால் கவிதா சொல்வதும்
கௌசிகாவை யோசிக்க வைத்தது.
மேலும் ஒருவன் பின்னாலேயே வந்து
கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள்
என்ன நினைப்பார்கள் என்று
யோசித்தாள் கௌசிகா. அவன் அவளிடம் பேசத் துடிப்பதும் கௌசிகாவிற்குப் புரியாமல் இல்லை.
அன்று மாலை வரும்போது நேர் ரோட்டில் இல்லாமல் குறுக்கு வழியில் தோட்டத்துப் பாதையில் புகுந்தாள் கௌசிகா. ஏதோ கேட்க வந்த கவிதாவிடம் "பேசாமல் வா...." என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.
கௌசிகா நினைத்த மாதிரியே அவன்
அவர்களின் பின்னாலேயே வந்தான்.
கொஞ்ச தூரம் அந்தப் பாதையில் உள்ளே சென்ற பின்.. யாரும் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பு கௌசிகா நடப்பதை நிறுத்தி திரும்பி நின்று அவனைப் பார்த்தாள்.
அவளின் செய்கையில் அவன் மட்டும்
இல்லை கவிதாவுமே திகைத்தாள்.
"என்னடி பண்ணற கௌசி.." என்று
கௌசியின் காதின் அருகில் படபடத்து
அவளின் கையைப் பிடித்து இழுத்து "வா போலாம்" என்றாள் கவிதா.
"நீ இரு.. இன்னிக்கே இதைக் கட்
பண்ணனும்" என்ற அவளின் கையை
உருவியக் கௌசி "ஹலோ சார்.. ஹலோ.. உங்களைத்தான்.." என்று அவனைக் கூப்பிட்டாள்.
அவள் திரும்பி நின்ற பின் வேடிக்கை
பார்ப்பது போல நின்று கொண்டு
இருந்தவன் அவள் தன்னை முதலில்
கூப்பிட்டதும் திரும்பிவிடலாம் என்று
எண்ணினான். ஆனால் அவள் மீண்டும் கூப்பிட்டதும் 'சரி இதான் வாய்ப்பு' என்று அவர்கள் அருகில் சென்று நான்கு அடி இடைவெளியில் தள்ளி நின்றான்.
"வந்து என் பெயர்....." என்று அவன்
ஆரம்பிக்க கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள் கௌசி.
"உங்க பெயர் எல்லாம் எனக்குத் தேவை இல்லாத விஷயம் சார்" என்றவள் "எதுக்கு என்ன பாலோ பண்றீங்க" என்று வழவழ என்று பேசாமல் நேராக விஷயத்திற்கு வந்தாள்.
அவனால் எதுவும் பேச முடியவில்லை..
ஏதாவது 'என் பின்னால் சுற்ற வேண்டாம்' என்று கேட்பாள் என்று நினைத்தவன்.. நேரான பார்வையில் தைரியமான நிமிர்வுடன் அவள் தன்னைக் கேள்வி கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை.
"வந்து உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்" என்றான்.
"எதுக்குப் பேசனும்?.. உங்களுக்கும்
எனக்கும் என்ன சம்மந்தம் சொல்லுங்க" என்று கௌசி பிசிரில்லாத குரலில் கேட்க அவன் தடுமாறினான்.
என்ன சொல்லுவது என்று தெரியாமல்
அவன் கௌசிகாவைப் பார்க்க "எந்த
சம்பந்தமும் இல்லை அல்லவா?
இனிமேல் என் பின்னாலையும் வராதீங்க. யாராவது பார்த்தால் எங்கள் பெயர் தான் கெட்டுப்போகும்" என்ற கௌசி அவனது பதிலைக் கூட எதிர்ப்பார்காமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவன் சங்கரலிங்கம் சாரின் பையன் என்று அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை.
தன் சிந்தனைகளிலேயே உழன்று
கொண்டு வந்தவள் வீடு வந்தே சேர்ந்து
விட்டாள். கூட வந்த கவிதாவைக் கூடக்
கவனிக்கவில்லை.. அவளும் அதே
சிந்தனையில் தான் வந்திருப்பாள் போல எதுவும் பேசவில்லை.
பின் இருவரும் உடையை மாற்றி விட்டு
வர அவரவர் வேலையைப் பார்த்தனர்.
"கௌசி நம்ம பிரபு சாரைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேலிப்
புன்னகையுடன் கேட்டாள்.
ஆனால் கவிதாவின் கேலி கௌசிக்கு
ஒட்டவில்லை "நான் என்ன நினைக்க..
நம்ம சங்கரலிங்கம் சாரின் பையன்..
அப்புறம் நம்ம புது கரஸ்பாண்டன்ட்
அவ்வளவுதான்" என்று தோளைக்
குலுக்கினாள் கௌசிகா.
"சரி சீரியஸாக் கேட்கிறேன்.. பதில்
சொல்லு.." எனக் கேட்டாள் கவிதா.
"கேளு" என்றபடி தான் மதியம் பாதியில் விட்டு வைத்த வினாத்தாளை எடுக்க ஆரம்பித்தாள்.
"அவரு.. சும்மா ஒன்னும் நம்ம ஸ்கூலிற்கு வர மாதிரி எனக்குத் தோனல.. ஒருவேளை அவர் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணா என்ன சொல்லுவ" என்று தயங்கிய படியேக் கௌசிகாவிடம் கேட்டாள்.
கவிதா கேட்ட கேள்வியில் ஒரு கணம்
வினாத்தாளில் இருந்து பார்வையை
விலக்கி அவளைப் பார்த்த கௌசி
"வேண்டாம்.. அதான் என் பதிலாக
இருக்கும்" அழுத்தம் திருத்தமாகச்
சொல்லி முடித்தாள்.
அதற்கு மேல் எதுவும் கவிதாவும்
கேட்கவில்லை.. இரு பெண்களும் அன்று இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் படுக்கையில் படுத்தனர். மீண்டும் அதே துடிப்பு இதயத்தில் கௌசிகாவிற்கு.. எழுந்து சென்று தண்ணீரைக் குடித்துக் கொண்டு வந்து படுத்து உறங்கிவிட்டாள் கௌசிகா.
அதே நேரம் கௌசிகாவை நினைத்த படி தனது பெட்டில் படுத்து விட்டத்தை
வெறித்துக் கொண்டு இருந்தான் பிரபு.
ஊருக்கு வந்த புதிதில் ஒரு
ஞாயிற்றுக்கிழமை சுற்றச் சென்ற போது தான் அவன் கௌசிகாவைப் பார்த்தது. அவர்கள் திராட்சைத் தோட்டத்துப் பக்கத்தில் உள்ள பெரிய தண்ணீர்த் தொட்டியின் திண்டில் அமர்ந்து தன் தோழியிடம் பேசிக் கொண்டு இருந்தவளைக் காண்கையில் அவனிற்கு அவளின் அழகு தெவிட்டவில்லை. அவளின் அழகில் தன்னைத் தொலைத்துவிட்டான் என்று தான்
சொல்ல வேணடும். பிறகு அவளைப்
பற்றி செய்திகளைச் சேகரித்துக்
கொண்டு அவளைப் பின் தொடர
ஆரம்பித்தான்.
அவளது அமைதியும், பண்பும் அவனை
மிகவும் ஈர்த்தது. அவள் 'என் பின்னால்
வர வேண்டாம்' என்று சொன்ன பிறகும்
அவனால் சும்மா இருக்க முடியவில்லை.அவளைப் பற்றி விசாரித்ததில் யாரும் உறவுகள் இருப்பதாகத் தெரியவில்லை..
அப்படி ஒரு அழகியை விடவும் மனம்
இல்லை. எப்படியாவது அவளைக்
காதலோடு கைப்பிடித்து ஆக வேண்டும் என்றுதான் பள்ளியைத் தன் பொறுப்பில் பிரபு ஏற்றது.
அவளிடம் முடிந்த அளவில் பேசிப் புரிய
வைத்து அப்பாவிடமும் பேச வேண்டும்
என்று எண்ணினான்.
ஆனால் அவனது காதலும் திட்டமும்
கௌசிகா சொல்லப்போகும் செய்தியில், கோயிலில் உடைத்த தேங்காயைப் போல சிதறப் போவதை அப்போது பிரபு அறியவில்லை.