Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மௌரியனின் மயூரி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
517
Reaction score
555
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

Thank you Nithya sister.
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28
வணக்கம் பிரெண்ட்ஸ். மௌரியனின் மயூரி முதல் அத்தியாயம்.

அத்தியாயம் – ஒன்று​

கதிரவன் ஓய்வெடுக்கச் செல்லும் மாலை வேளை . அரவமில்லா அந்த ராஜபாதையில் இரு புரவிகளின் காலடிச் சத்தம் சற்று மெல்லியதாகவே இருக்க, அதில் அமர்ந்து இருந்த வாலிபர்களும் களைப்புடனே காணப்பட்டனர். இருவரின் முகக் குறிப்பும் அவர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததை உணர்த்தியது. இருவர் மத்தியிலும் எந்த விதமான சம்பாஷனையும் இல்லாமல், அமைதியாகவே வந்து கொண்டு இருந்தனர்.

அவர்களின் களைப்பைப் போக்குவது போல மெல்லிய தென்றல் காற்று இருவரையும் வருடிச் செல்ல, அதில் குளுமையும் கலந்தே இருந்தது. அந்தக் குளுமையை அவதானித்த இருவரில் ஒரு வாலிபன்,

“அருகில் நீரோடை இருக்கிறது யுவராஜ்” என்றான்.

அந்த வாலிபனின் கூற்றைக் கேட்டதற்கு அடையாளமாக தலை மட்டும் அசைத்த மற்றவன், தன் புரவியைத் தென்றல் வந்த திசையில் நடக்க விட்டான்.

அவனைப் பின்பற்றி முதலாம் வாலிபனும் தன் புரவியோடு அதே திசையில் சென்றான்.

கிட்டதட்டக் கால் யோஜனை தூரம் சென்றப் பின்பு அழகிய வனம் ஒன்றைக் கண்டனர். வனம் முடியும் இடத்தில் தெளிவான நீரோடையும் கண்டனர். இருவரும் அந்த நீரோடை நோக்கிச் செல்ல, அருகில் சென்றதும் வியந்தனர்.

காரணம் அது நீரோடை அல்ல. ஆற்றங்கரை. தற்போது முதலாம் வாலிபனால் யுவராஜ் என்றழைக்கப்பட்டவன்,

“இது நீரோடை அல்ல ரதகுப்தா” என,

“ஆம் யுவராஜ்” என்றுப் பதில் கூறினான்.

இருவரும் புரவிகளில் இருந்து இறங்கி, அதனைத் தட்டிக் கொடுக்க, புரவிகள் இரண்டும் தங்கள் எஜமானர்களின் கழுத்தைத் தன் நாவால் தடவிக் கொடுத்து விட்டு , நீரோடை நோக்கிச் சென்றன.

வாலிபர்கள் இருவரும் தங்கள் களைப்பை நீக்கிக் கொள்ள, நீர் அருந்தியும், கை , கால் , முகங்களை நீரால் துடைத்தும் கொண்டனர்.

ரதகுப்தன் வேகமாகச் சென்று வனத்திலுள்ள மரங்களில் இருந்து சில கனிகளைப் பறித்து வந்தான்.

ஆற்றில் இருந்த அல்லி மலர் இலைகள் சிலவற்றைப் பறித்து அதில் கனிகளை வைத்து யுவராஜ் முன் நீட்டினான்.

“உனக்கு எங்கே ரதகுப்தா?”

“நீங்கள் பசியாருங்கள் யுவராஜ். மேலும் வேண்டும் என்றால் பறித்து வருகிறேன்.”

“எனக்கு இவையே அதிகம் தான். நீயும் இதைப் பகிர்ந்துக் கொள் “

“நான் எனக்குப் பறித்து வருகிறேன். நீங்கள் முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள் “

“சொன்னால் கேட்க மாட்டாயா? இன்னும் இரு யோஜனைத் தூரத்தில் இந்திரப்பிரஸ்தம் நகரம் வந்து விடும். அங்கே இருவரும் தங்கிக் கொண்டு, புரவிகளையும் இளைப்பாற விடலாம் என்று எண்ணி இருக்கிறேன். இப்போது இவை முழுதும் நான் எடுத்து கொண்டால், என்னால் இனி பயணம் செய்ய முடியாது. இங்கு தங்குவதும் பாதுகாப்பு அல்ல” என்றுக் கூறவும், மற்றுமொரு அல்லி இலையைப் பறித்து யுவராஜ் முன் வைக்க, தன் இலையில் இருந்து கனிகளை எடுத்து வைத்தான் யுவராஜ்.

இருவரும் கனிகளை உண்ட பின், மீண்டும் அந்த ஆற்றில் நீர் பருகி , மேலும் தங்கள் நீர்க் குடுவைகளிலும் நிரப்பிக் கொண்டனர்.

புரவிகள் சற்று நேரம் அருகில் இருந்த புல் வெளியில் மேய்ந்து விட்டு வரட்டும் என்று எண்ணிய யுவராஜ், அவன் நண்பன் ரதகுப்தனுடன் உரையாடிக் கொண்டு இருந்தான்.

“ரதா , இப்படி ஒரு கனிச் சோலை இந்த இடத்தில் இருப்பது விசித்திரமாய் இருக்கிறதே”

“இதில் என்ன விசித்திரம் யுவராஜ்?

“ஆற்றங்கரை அருகில் சோலைகள் இருந்தால் கார்காலத்தில் இந்த மரங்கள் பிழைக்குமா?

“யுவராஜ் சற்று நன்றாகப் பாருங்கள். இந்த சோலை காலத்திற்கும் நிலைத்து நிற்க உருவாக்கப்பட்டவை அல்ல “

“எப்படிச் சொல்கிறாய் ?

“இங்குள்ள கனிகள் அனைத்தும் கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் தணிப்பதற்கு உண்டானவை. அதனால் இதன் ஆயுள் சில காலமே. கார் காலத்தில் மரங்கள் காற்றிலும், மழையிலும் முறிந்து விடும். “

“யார் ஏற்பாடு இது? இப்படி ஒரு சோலை உண்டாக்க வேண்டிய அவசியம் என்ன?

“இவை ஆற்றின் நீர் ஆதாரத்தை தேக்கிக் கொள்ளவும், சில விலங்குகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் மனிதர்களின் தேவைக்காகளுக்காக இயற்கையாய் உண்டான வனங்களை அழிப்பதற்கு பதில், இது போன்ற செயற்கை வனங்களை உண்டாக்கி, அதை நமக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட சோலை”

“இந்த ஏற்பாடுகளின் சூத்திரதாரி யாரோ ?

“நம் மௌரிய சாம்ராஜ்ஜியத்தில் எந்த ஒரு காரியமும் ஆச்சார்யர், மற்றும் சாம்ராட் அறியாமல் நடக்க வாய்ப்பில்லை யுவராஜ். அத்தோடு இது சாம்ராட் அவர்களின் கட்டளை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்’

“ஓஹ். வனங்களைக் காப்பாற்ற எண்ணிய சாம்ராட் மனைவியைக் காப்பாற்ற மறந்தது ஏனோ ? மரங்களுக்கும் கீழாகப் போய்விட்டார்களா மகாராணி ?

யுவராஜின் பதிலில் ரதகுப்தன் அதிர்ந்து பார்க்க , யுவராஜ் விழிகளோ எங்கேயோ நிலைத்து நின்றது.

சற்று நேரம் அமைதியாகக் கழிய, இருவரின் புரவிகளும் அவர்கள் அருகில் வந்தன. அதன் அரவத்தில் தன் நிலைக்குத் திரும்பிய யுவராஜ்

“தேஜா , உன் வயிறு குளிர்ந்ததா?” என்று வினவ, கேள்வி புரிந்தது போல புரவி தலையசைக்க, அதன் மேல் லாவகமாக ஏறிய யுவராஜ்,

“செல்லலாம் ரதா “ என்றான். அவனின் உத்தரவில் ரதகுப்தனும் தன் புரவி மீது ஏறி யுவராஜைப் பின் தொடர்ந்தான்.

யுவராஜ் என்றழைக்கப்பட்ட பிந்துசாரா மௌரியப் பேரரசின் சாம்ராட் சந்திரகுப்தரின் புதல்வன். மௌரிய சாம்ராஜியத்தின் குரு ஆச்சாரியார் சாணக்கியரின் பிரதான சீடன். அவரின் உத்தரவின் பேரில் தக்ஷஷீலா பல்கலைக் கழகத்தில் சர்வ கலைகளும் கற்று நாடு திரும்பிக் கொண்டு இருக்கிறான். ரதகுப்தா பல்கலைக் கழகத்தில் யுவராஜோடு இணைந்து கல்வி பயின்றவன். சில நாட்களில் நெருங்கிய நட்பு இருவருக்கும் உண்டாக, தன்னோடு பாடலிபுத்திரத்திற்கு அழைத்து வந்தான்.

தக்ஷசீலம் நாட்டின் வடமேற்கில் இருக்க, தலைநகர் பாடலிபுத்திரமோ அதற்கு எதிர்க் கோடியில் இருந்தது. இரு இடங்களுக்கும் இடையேயான பயணகாலம் சில நாட்களே ஆகும். எனில் சாம்ராஜியத்தின் விஸ்தீரணம் சொல்லவும் வேண்டுமோ?

அத்தனை பெரிய சாம்ராஜியத்தின் யுவராஜன் பிந்துசாராவுடன் பயணித்துக் கொண்டிருந்த ரதகுப்தன் மனதில் கேள்விகள் பல இருந்தன.

இவர்கள் இருவர் மட்டுமில்லாமல், புரவிகளும் நன்றாகவே இளைப்பாறி இருந்ததால், அவர்கள் எண்ணியதை விட விரைவாகவே இந்திரபிரஸ்தம் சென்று விட்டனர்.

மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் உருவாக்கிய இந்த பிரதேசம் இன்றும் அதே பெயரால் அழைக்கப்படுகிறது. பாண்டவர்களுக்காக தேவ சிற்பி மயன் உருவாக்கிய இந்நகரம் இன்றும் எழில் நிறைந்த நகரம். சம காலத்தில் மௌரிய நகரங்களே நாகரிகத்தில் உச்சம் பெற்றவை. ஆனால் அவை எல்லாம் இந்திரபிரஸ்தம் என்ற நகரின் அருகில் கூட நெருங்க முடியவில்லை.

நேர்த்தியான அரண்மனைகளும், சத்திரங்களும், வளமான சோலைகளும், வண்டிப்பாதைகளும் நிறைந்த நகரம். இங்குள்ள மக்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள். எத்தனை படையெடுப்புகள் நடந்த போதிலும் அங்குள்ள கட்டடங்களை சேதப்படுத்த இதுவரை எந்த அரசர்களும் முயலவில்லை.

சந்திரகுப்தருக்கு முந்தைய காலம் வரை சிற்றரசாக இருந்த இந்த பிரதேசம் , மௌரியர் ஆட்சிக்காலத்தில் அவை பிராந்தியங்களாகக் கருதப்பட்டன. அரசின் சார்பில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் அங்கிருந்து கண்காணித்தனர். இங்குள்ள மக்களும் கட்டுப்பாடு மிகுந்தவர்கள்.

பிந்துசாராவும், ரதகுப்தனும் நகருக்குள் செல்ல, அந்த நேரத்தில் நகரின் சந்தடி வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பெரிய வீதிகளின் வழியாக செல்ல முயலும் போது காவலர்கள் இவர்கள் யார் என்று விசாரிக்க, ரதகுப்தனை பதில் சொல்ல விடாமல் , பிந்து சராவே காவலர்களுக்கு பதில் சொல்லத் தொடங்கினான்.

“நாங்கள் இருவரும் உஜ்ஜையின் மாகாணத்தை சேர்ந்தவர்கள்”

“இந்த இரவு நேரத்தில் இங்கே வரக் காரணம் ?”

“நாங்கள் தக்ஷசீலத்தில் குருகுலம் முடித்து விட்டுத் திரும்பி கொண்டு இருக்கிறோம்”

“அதற்கு வேறு பாதை இருக்கிறதே? இந்த வழியாக ஏன் வந்தீர்கள்?”

“நாங்கள் ஊர் திரும்பும் முன் வாரணாசி நகரில் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு, ஈசனைத் தரிசனம் செய்ய எண்ணினோம். பொழுது போய்விடவே, இன்று இரவு இந்நகருக்குள் தங்கி , நாளை பயணத்தைத் தொடரலாம் என்று நகருக்குள் வந்தோம்”

“சரி. சரி. இந்த வீதிகளின் வழியாக செல்ல வேண்டாம். அடுத்த வீதியின் கோடியில் செல்லும் பாதை வழியாக சென்றால் சத்திரங்கள் உள்ளன. அங்கே செல்லுங்கள்” என்று கூறி இருவரையும் திருப்பி அனுப்பினர் காவலர்கள்.

அவர்களிடம் “சரி” என்று கூறிய பிந்துசாரா, ரதாவிடம் தலை அசைக்க , இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

யுவராஜ் தான் யார் என்று ஏன் கூறவில்லை என்று யோசித்தபடியே ரதா பின் தொடர, பிந்துசாராவோ அங்கிருந்த சத்திரம் ஒன்றிற்கு சென்றான். புரவியை விட்டு இறங்கி நிற்கவும், ரதா கேள்வியாகப் பார்த்தான்.

யுவராஜ் முகக் குறிப்பில் தானும் இறங்கி சத்திரம் உள்ளே சென்றான். அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்த ஒருவர்,

“யார் நீங்கள் ? இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினார்.

ரதா “ஐயா, நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம். இன்று இரவு நாங்கள் தங்கி இளைப்பாற இடம் கிடைக்குமா?” என்று கேட்டான். “

“தற்பொழுது அரசாங்க அலுவலாக மௌரிய பேரரசின் மகாகுருவும், அவரின் கீழ் இயங்கும் நேரடி அதிகாரிகளும் இந்திரபிரஸ்தம் வந்து இருக்கிறார்கள். அவர்களின் வேலையாட்கள் , மற்றவர்கள், குதிரைகள் தங்குவதற்காக அனைத்து சத்திரங்களும் பயன்படுத்தப்பட்டு விட்டன. ஒரே ஒரு அறை மட்டுமே மீதம் இருக்கிறது . அதுவும் சற்று சிறியது. வேண்டுமென்றால் அதில் தங்கிக் கொள்ளலாம். “ என பொறுப்பாளர் கூறவும்,

ரதா “ என்ன ? இவரை யார் என்று அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் ஐயா?” என்று சற்று இரைந்தான். சத்திரத்தின் பொறுப்பாளாரோ

“நல்ல உயர் ஜாதிக் குதிரைகளும், தங்கள் தோற்றப் பொலிவும் வைத்து என்னால் உணர முடிகிறது வீரரே! தாங்கள் இருவரும் நிச்சயம் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று. ஆனால் தற்போதைய நிலைமை இதுவே. பேரரசர் தங்கும் மாளிகை தவிர மற்ற அனைத்துமே நிரம்பி வழிகின்றது. “ என்று கூறினார்.

“ஐயா, நாங்கள் அந்த சிறிய அறையில் தங்கிக் கொள்கிறோம். எங்களுக்கு உணவு எதுவும் கிடைக்குமா?” பிந்துசாரா வினவ,

“நல்ல காலம். இங்கு தங்கிருக்கும் அனைவரும் நல்ல உழைப்பாளிகள் மற்றும் வீரர்கள். அவர்களுக்கு உணவு தேவை அதிகமாக இருக்கும். அதனால் சற்று அதிகமாகவே தயார் செய்து கொண்டு இருக்கிறோம். தங்களுக்கும் போதுமானதாகவே இருக்கும்” என்றார்.

“நன்றி ஐயா . நாங்கள் சற்று இளைப்பாறி விட்டு வரலாம் இல்லையா?”

“தாராளமாக. இன்னும் சொல்ல போனால் மகாகுருவின் உத்தரவு எல்லா காலமும் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதே. அதனால் நகரின் ஒரு பகுதியில் எப்பொழுதும் உணவு கிடைக்கும். வழிப் போக்கர்கள் அங்கே உணவு உண்டுவிட்டு இளைப்பாறி செல்லலாம்”

அதற்கு மேல் பேச்சுக் கொடுக்காமல் “ரதா, புரவிகளை கொட்டடியில் கட்டி விட்டு வா. பசியாறி விட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்” “ என்றார் பிந்துசாரா.

“சரி. நான் உள்ளே சென்று தலைமை பரிசாரகரிடம் உங்கள் இருவரின் உணவிற்கும் கூறி விடுகிறேன். உங்கள் வேலைகளை முடித்து விட்டு வாருங்கள்” என்று சத்திரத்தின் பொறுப்பாளர் சென்று விட, அவர் சென்றதும் ,

ரதா “யுவராஜ், தங்கள் மாளிகையில் தங்குவதை விடுத்து, இந்த இடத்தில் தங்க வேண்டிய அவசியம் என்ன ?” என்று வினவினான்.

“தேவையில்லாமல் எவரையும் சந்திக்க விரும்பவில்லை ரதா”

“ராஜகுரு விஜயம் பற்றி தாங்கள் அறிவீர்களா யுவராஜ்?”

“அறிவேன் “

“நாம் இருவரும் ஒன்றாகத் தானே பயணம் செய்து வந்தோம் யுவராஜ்? எப்போது அறிந்து கொண்டீர்கள்?”

“இந்திரபிரஸ்தம் நகரம் தன் நிறைவு பெற்ற நகரம். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களே உற்பத்தி செய்து கொள்பவர்கள். அதனால் மக்கள் கதிரவன் மறைந்த பிறகு தங்கள் வீடுகளில் அடைந்து கொள்பவர்கள் என்று அறிவேன். இன்றைக்கு நாம் நகருக்குள் நுழையும் போதே அதிகப்படியான நடமாட்டாங்களை உணர்ந்தேன். நாம் முக்கிய வீதிகளின் வழியாக வரும்போது காவலர் கண்காணிப்புகளும் பலமாகவே இருந்தது. அதனால் அமைச்சர் அளவில் யாரோ வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ராஜகுரு என்று எண்ணவில்லை”

தன்மையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த பிந்துசாரா , முடிக்கும் போது மட்டும் குரலில் ஏளனம் கலந்து இருந்ததோ என்று ரதாவிற்கு தோன்றியது. ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

ரதா புரவிகளைக் கட்டிவிட்டு வரவும், இருவரும் சத்திரத்தின் உள்ளே சென்றனர். சிறு பாதை வழியாக உள்ளே செல்ல, எதிரில் சற்று விசாலமான கூடம் இருந்தது. அந்தக் கூடத்தில் அழகான பெர்ஷிய நாட்டு ரஜாய் விரிக்கப்பட்டு இருக்க, ஓரங்களில் அழகான உருளை வடிவ தலையணைகள் அடுக்கப்பட்டு இருந்தது. ஆங்கே ஆங்கே பல நாட்டு அலங்கார விளக்குகள் அலங்கரிக்க , அவற்றில் தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. அத்தோடு பெர்ஷிய நாட்டின் நறுமண அகிலும் மணம் பரப்பியது.

பிந்துசாராவின் கண்கள் ரசனையுடன் அந்தக் கூடத்தை அளவெடுத்தது. ரதா அருகில் வரவும் ,

“ரதா , இந்த சத்திரம் நடத்துபவர் மிகுந்த செல்வாக்கான நபர் போல இருக்கிறது” என்றான்.

“எப்படிக் கூறுகிறீர்கள் யுவராஜ்?

“இதோ இங்கே உள்ள கலைப் பொருட்களை எல்லாம் பார். மிகுந்த விலை என்பதோடு எளிதாக கிடைக்கக் கூடியவை அல்ல. அனைத்தும் வெளிநாட்டு வணிகர்கள் கொண்டு வரக் கூடிய பொருட்கள். “

ரதாவும் ஒருமுறை தன் கண்களால் அளவிட்டு

“உண்மை தான் யுவராஜ் “ என்றான்.

பிந்துசாராவின் கண்கள் அளவிட்டது மட்டுமில்லாமல், ஏதோ சிந்தனையிலும் இருப்பதாக ரதாவிற்கு தோன்றியது. யுவராஜ் எதுவும் கூறுவாரோ என்று ரதா காத்து இருந்தான்.

ரதாவிடம் எதுவும் வாய்மொழியாக கூறாமல், தலையசைவால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் செல்லும்படி கூறினான்.

அந்த அறை சிறியதாக இருந்தாலும் இருவர் தங்கும் அளவிற்கே இருந்தது. அதே போல அறையில் வசதிகளும் ஓரளவு நன்றாகவே இருந்தது. இளவரசருக்கு ஏற்ற அலங்கார ஸ்வரூபமாய் இல்லை என்றாலும், சுத்தமான மெத்தை விரித்து தரமான ரஜாய் விரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் ஒரு மெத்தை தரையில் விரிக்கப்பட்டு இருந்தது. மெத்தை தற்போது தான் போட்டு இருக்க வேண்டும். இவர்கள் புரவிகளை கொட்டடியில் விட்டு விட்டு வருவதற்குள் ஏற்பாடு செய்யபட்டு இருந்ததைக் கண்டு இருவரின் கண்களும் வியப்பில் விரிந்தன.

அறையில் தாழ்வாரமும் இருக்க, அதன் வழியாக வெளியே செல்லவும் வசதி இருந்தது. இருவரும் தங்கள் உடைமைகளை அறையில் வைத்து விட்டு, தாழ்வாரம் வழியாக பின்புறம் சென்றனர். பின்புறத்தில் ஒருபுறம் பெரிய தோட்டம் இருக்க அதற்கு நீர் ஆதாரமாக மறுபுறம் சிறிய அளவில் ஓடை ஒன்று இருந்தது. நல்ல கோடை காலத்திலும் இந்த இடம் குளுமையாக இருக்கும் என்று உணர்ந்தனர். தங்களைச் சுத்தபடுத்திக் கொண்டு மீண்டும் உள்ளே வரவும், சத்திரத்துப் பொருப்பாளார் இருவரையும் பசியாற அழைத்தார்.

சுவையும், சத்தும் நிறைந்த உணவு வகைகளே பரிமாறப்பட்டது. இருவரும் நன்றாக உண்டபின் தங்கள் அறைக்கு உறங்க சென்றனர்.

நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் நன்றாக உறங்கினர். குருகுல வழக்கமாக உதய காலத்தில் இருவரும் எழுந்தனர்.

காலை கடன்களை முடித்து விட்டு , இருவரும் சூரிய நமஸ்காரம் செய்த பின் தங்கள் அறைக்குள் செல்ல, அங்கே ஒரு வீரன் நின்று இருந்தான். அவனோடு சத்திரப் பொறுப்பாளரும் நின்று இருந்தார்.

அவரைப் பார்த்த பிந்துசாரா “என்ன விஷயம் ஐயா ?” என்று வினவ,

அவர் மண்டியிட்டு “யுவராஜ் என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் மௌரிய சாம்ராஜ்ய இளவரசர் என்று அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டுகிறேன் “ என்றார்.

பிந்துசாரா ரதாவின் முகம் பார்க்க , ரதாவோ பொறுப்பாளரிடம்

“தங்களுக்கு யார் கூறியது ஐயா ?” என்று வினவினான்.

“இதோ இந்த வீரன் தான் கூறினார் “ என்று கூற, பிந்துசாரா அந்த வீரனை நேராகப் பார்த்தான்.

வீரனோ “யுவராஜ், தங்களை உரிய மரியாதையுடன் தங்கள் அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவாயிருக்கிறது. சத்திரத்தின் வாயிலில் வீரர்களும், அதிகாரிகளும் தயாராக இருக்கின்றனர் “ என்றார்.

“என்னை அழைத்து வர உத்தரவா?”

“ஆம் யுவராஜ்”

“உத்தரவிட்டவர் எவரோ ?”

“மௌரிய பேரரசின் ராஜகுரு ஆச்சாரியார் சாணக்கியார் “

ரதா திடுக்கிடலோடு யுவராஜ் முகம் பார்க்க, பிந்துசாராவோ சிந்தனையோடு நின்று இருந்தார்.

பின் வீரரிடம் “ஹம்.. சற்று நேரத்தில் கிளம்பலாம்” என்று கூறினான்.

அந்த வீரன் மறுபடியும் மண்டியிட்டுவிட்டு வாயில் நோக்கிச் செல்ல, சத்திரப் பொறுப்பாளர் அங்கேயே நின்று இருந்தார்.

“ஐயா , நீங்களும் செல்லலாம்” என பிந்துசாரா கூறவும்,

“தங்களை ஆச்சாரியாரிடம் சேர்க்கும் வரை என் பொறுப்பு தீராது யுவராஜ்” என்று அங்கேயே நின்றார்.

பிந்துசாரா விருப்பமில்லா தலையசைவுடன் தங்கள் அறைக்குள் சென்றார். ரதாவும் இணைந்து உள்ளே சென்று , தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டான்.

சத்திரத்தின் பொறுப்பாளாரிடம் ஒரு பனா வெள்ளி நாணயத்தைப் பரிசாக வழங்கினான் பிந்துசாரா.

“வேண்டாம் யுவராஜ். தாங்கள் இந்த ஏழையின் சத்திரத்தில் தங்கியதே பெரும் பாக்கியமாகும்.” என்று மறுத்தார்.

பிந்துசாரா “இது யுவராஜின் கட்டளை” என, வாங்கிக் கொண்டார்.

பின் யுவராஜ், ரதா இருவரும் வாயில் நோக்கிச் செல்ல, அங்கே வீரர்கள் புடை சூழ ஒரு பாலக்கி (பல்லக்கு) தயாராக இருந்தது. அதைக் கண்ட யுவராஜ் , அந்த குழுவின் தலைவன் யார் என கேட்டான்.

முதலில் வந்த வீரனே வந்து நிற்க,

“இது என்ன ?” என்று சிவிகையைப் பார்த்துக் கேட்க,

“யுவராஜ் , தங்களை தகுந்த பெருமையோடு அழைத்து வர எங்களுக்கு கட்டளை இடப்பட்டு இருக்கிறது” என்றான்.

“ஓஹ். ஒரு இளம் வயது வீரனை இப்படி அழைத்து வருவது தான் பெருமையோ?”

“சாதாரண வீரன் என்றால் புரவிகள் புடை சூழ அழைத்து வரலாம். ஆனால் தாங்கள் சாம்ராட் இளவரசர். தங்களை மற்ற வீரர்கள் போல அழைத்து வருவது தவறு என்று தான் இவ்வாறு ஏற்பாடு செய்து இருக்கிறோம் யுவராஜ்”

“இதுவும் உங்கள் ராஜகுருவின் உத்தரவா?”

வீரன் தலை குனிந்து பதில் பேசாமல் நிற்க,

“ராஜகுரு வயதானவர். அவருக்கு வேண்டுமானால் சிவிகை தேவைப்படலாம். என்னை போன்ற வீரனுக்கு அவனின் புரவியே பெருமை. உங்கள் பால்கியை திருப்பி அனுப்புங்கள். அத்தோடு இத்தனை பேர் என்னோடு வர வேண்டாம். இரு வீரர்கள் மட்டும் இருக்கட்டும்”

வீரர் தலைவன் மற்றவர்களை திருப்பிச் சொல்ல உத்தரவிட்டு விட்டு, இரு வீரர்களை மட்டும் தன்னோடு நிறுத்திக் கொண்டான். வீரர் தலைவனிடம் பிந்துசாரா உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் போதே, ரதா புரவி கொட்டடிக்கு சென்று இருவரின் புரவிகளையும் தயார் செய்து இருந்தான்.

பிந்துசாரா வாயால் சிறு சப்தம் எழுப்ப, புரவி ஒன்று வந்து நின்றது. அதன் அருகில் சென்று

“தேஜா , தயாரா?” என்று வினவ, அது கணைத்து தன் பதிலைத் தெரிவித்தது.

அதைக் கண்ட யுவராஜ் சிரித்தபடி அதனை தடவிக் கொடுத்து விட்டுப் புரவியின் மீது ஏறினான். ரதாவும் தன்னுடைய புரவியில் ஏறிட , வீரர் தலைவனைப் பார்த்து தலையசைத்தான். அவர்களும் தாங்கள் வந்த புரவியில் அமர்ந்து முன்னால் செல்ல, யுவராஜ் தொடர்ந்தான்.

முந்தைய இரவில் செல்ல மறுக்கப்பட்ட மாளிகை வீதிகளின் வழியாக இப்போது யுவராஜ், ரதா இருவரும் சென்றனர்.

இரவை விட, தற்போது வெளிச்சத்தில் ஒவ்வொரு மாளிகையின் அழகும், அமைப்பும் வெகுவாகக் கவர்ந்தது. அதை விட அந்த நகரத்தின் கட்டமைப்பு இவர்களுக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. கிட்டத்தட்ட யுகங்கள் தாண்டி இந்த நகரம் நிலைத்து நிற்பதில் அதிசயம் ஏதுமில்லை என்று உணர்ந்தார்கள்.

அரை யோஜனை தூரம் சென்றபின் ஒரு மாளிகையில் வீரர்கள் தலைவன் நிற்க, யுவராஜ் அவனை என்ன என்பது போலப் பார்த்தான்.

“சாம்ராட் மாளிகை இதுதான் யுவராஜ். தாங்களும் இங்கே தங்க ஏற்பாடு செய்யபட்டு இருக்கிறது “

யுவராஜ் முகத்தில் சில உணர்ச்சிகள் வந்து செல்ல, கண்கள் மூடி தன்னை சமன் செய்து கொண்ட பின்,

“முதலில் ஆச்சாரியரை தரிசிக்க வேண்டும். அவரின் மாளிகைக்கு அழைத்துப் போ “ என்று உத்தரவிட்டான்.

“தற்போது ஆச்சாரியார் நித்ய அனுஷ்டானங்களில் இருப்பார். சில நாழிகைகள் சென்ற பின் சென்று தரிசிக்கலாமே யுவராஜ்”

“இங்கே நான் யுவராஜா அல்லது .. “ என்று முடிக்காமல் விட, ரதா சட்டென்று வீரர் தலைவனிடம்

“ஆச்சாரியார் இங்கிருக்கும் போது அவரிடம் ஆசி பெறாமல் இளவரசர் மேற்கொண்டு எந்த காரியமும் செய்ய மாட்டார். அத்தோடு ஆச்சாரியாரின் பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டும். அழைத்துச் செல்லுங்கள் “ என்று கூறவும், மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்த வழியில் சற்று தூரம் சென்று வேறு ஒரு பாதையில் அழைத்துச் சென்றான்.

வீரர் தலைவன் ஆச்சாரியார் மாளிகை அழைத்துச் செல்வான் என்று எண்ணி இருக்க, அவனோ யமுனை ஆற்றங்கரை அருகில் அழைத்துச் சென்றான்.

சரி ஆச்சாரியார் நீராடிக் கொண்டு இருக்கலாம் என்று பார்க்க, அங்கேயோ ஆற்றின் அருகில் புதிதாக போடபட்ட குடிசை அருகில் சென்று வீரர் தலைவன் நின்றான்.

பிந்துசாராவும் ,ரதாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, உள்ளிருந்து கணீர் என்ற குரலில் மந்திரம் உச்சாடனை கேட்டது.

சட்டென்று புரவியில் இருந்து இளவரசனும், ரதாவும் இறங்கினர். குடிசை வாயிலின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தங்கள் கை , கால்களைச் சுத்தம் செய்துகொண்டு குடிசைக்குள் சென்றனர்.

பூஜையின் நடுவில் பிரசாதம் அம்சிதை செய்வதற்கு ஆச்சாரியார் காத்து இருக்க , அந்த நேரம் தங்கள் வரவை கூறும் பொருட்டு

“வணக்கம் ஆச்சாரியாரே “ என்று இருவரும் கூறினார்.

அவர்களை ஏறெடுத்துப் பார்த்த ஆச்சாரியார் கைகளை மட்டும் தூக்கி ஆசீர்வதித்து விட்டு பூஜையைத் தொடர்ந்தார்.

- தொடரும்-

அத்தியாயங்களுக்கு கருத்துக்கள் பகிர கீழே உள்ள லிங்க் பயன்படுத்தவும். இந்த திரியில் கதை மட்டுமே பதிவிடப்படும்.

 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் - இரண்டு​


மௌரிய சாம்ராஜ்யம் பொறுத்த வரை சாம்ராட் சந்திரகுப்தருக்கு நிகரான அதிகாரமும், அந்தஸ்தும் கொண்டவர் ஆச்சாரியார் ஒருவரே. அதிலும் சாம்ராட் அவர்களே கட்டுப்படும் ஒரே நபரும் ஆச்சாரியார் மட்டுமே. இத்தனை பெரிய சாம்ராஜ்யம் உருவாகவும், அதில் சந்தரகுப்தர் சக்ரவர்த்தியாக அமரவும் முழு முதற் காரணம் சாணக்கியர். அதனால் அவரின் உத்தரவும், ஆலோசனையும் இல்லாமல் சக்கரவர்த்தி எந்த காரியமும் செய்வது இல்லை.

வனத்தில் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த சந்திரகுப்தனை போர் வீரனாக மாற்றினார். தனக்குத் தெரிந்த போர் சாஸ்திரங்களை கற்றுக் கொடுத்ததோடு, சிறந்த ராஜதந்திரியாக போரில் வெற்றி பெறும் வழியையும் காண்பித்துக் கொடுத்தார். நந்த குலத்தாரால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி வெதும்பிக் கொண்டிருந்த பிராமணரான சாணக்கியர் , சாமானியன் ஒருவனால் நந்த வம்சத்தின் செருக்கை அழிக்க சந்திரகுப்தனை உபயோகப்படுத்திக் கொண்டார். அத்தோடு நந்தர்கள் ராஜ்ஜியம் மட்டுமில்லாது , மேற்கே கிரேக்க நாட்டு வரையிலும் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி சந்திரகுப்தரை சிறந்த அரசனாக்கினார். தற்போதும் மௌரிய சாம்ராஜ்யத்தில் முதல் அமைச்சர் என்ற பதவி வகிப்பத்தோடு , சக்கரவர்த்தியின் காரியங்கள் யாவையும் ஒழுங்குப் படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனைப் பெரிய பதவியும், அந்தஸ்தும் இருந்தாலும், ஆச்சாரியாரின் வாழ்க்கை முறை மிகவும் எளிதானதே . தலைநகரில் அவரின் இல்லம் மிகவும் சிறியது. அதில் அவர் ஒருவர் மட்டுமே வசிக்க முடியும். ராஜாங்க காரியங்கள் முன்னிட்டு மட்டுமே சக்கரவர்த்தியின் மாளிகைக்குச் செல்வார்.

அவரிடம் கல்வி பயிலும் மாணவர்கள் பகலில் பாடம் கற்றுக்கொண்டு, மாலையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் இல்லத்திற்கு சென்று விடுவார்கள்.

காலையும், மாலையும் ஈசனை சாலிக்கிராம ஸ்வரூபமாக தன் இல்லத்தில் பூஜை செய்பவர், வெளியிடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் கையோடு எடுத்துச் சென்று விடுவார்.

ஈசனின் பூஜைக்காக நீர் நிலை அருகில் உள்ள இடங்களில் குடில் அமைத்து தன் நித்திய பூஜையை தவறாது மேற்கொள்வார்.

ஆச்சார்யார் பூஜை நிறைவேறியதற்கு அறிகுறியாக தீப ஆரத்தி காண்பிக்கவும் , இளவரசனும், ரதாவும் இறைவனை தரையில் விழுந்து வணங்கினார்கள்.

ஆச்சாரியார் பூஜையை முடித்து விட்டு தீர்த்தம், மலர்கள், பழங்கள் ஆகியவற்றை முதலில் தான் எடுத்துக் கொண்டு, பின் இளவரசனை நோக்கி வந்தார்.

அவர் அருகில் வரவும் , காலில் விழப் போன பிந்துசாராவை தடுத்த சாணக்கியர் .

“இறைவன் சன்னதியில் அவனை தவிர யாரையும் வணங்க கூடாது என்பதை மறந்து விட்டாயோ பிந்துசாரா” என்றார்.

“எழுத்தறிவித்தவனும் இறைவன் தானே ஆச்சாரியாரே “ என்று பதில் கூறவும், அவனை ஒரு முறை பார்த்தவர்

“சர்வ கலாசாலையில் ஆசானுக்குப் பதில் சொல்லவும் கற்றுக் கொண்டாய் போல இருக்கிறது” என்றவர் “ரதகுப்தா , பிரசாதம் எடுத்துக் கொள் “ என்று கொடுத்தார்.

“ஆச்சாரியார் என்னை அறிந்து இருப்பது என்னுடைய பாக்கியம்” என்று கூறி பயபக்தியுடன் பிரசாதங்களை வாங்கிக் கொண்டான்.

சாணக்கியர் அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு, பிரசாதங்களை தன் பிரதான சீடனிடம் கொடுத்து வாயிலில் நிற்கும் மற்றவர்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு, அந்த குடிலுக்கு அருகில் இருக்கும் மற்றும் ஒரு குடிலுக்குச் சென்றார். பிந்துசாராவை தன்னை பின்பற்றச் சொல்லி தலையைசக்க, இவர்கள் பின் தொடர்ந்தனர்.

முதலில் இருந்த குடிலை விட சற்று பெரிதாகவும் , வசதியாகவும் இருந்தது. ஆச்சாரயார் அமர மட்டும் மான் தோல் போர்த்திய ஆசனம் இருக்க, எதிரில் “ப” வடிவில் மரத்தால் ஆன இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. அதன் மேல் மெல்லிய மெத்தைகள் விரிக்கப்பட்டு இருந்தன. ஆடம்பரமாக இல்லாவிட்டாலும், அழகாக இருந்தது.

பிந்துசாரா மட்டும் உள்ளே செல்ல, ரதகுப்தன் வெளியே நின்றான். ஆச்சாரயார் அமர்ந்தாலும், பிந்துசாரா நின்று இருந்தான். சாணக்கியர் அவனை அமருமாறு இருக்கையை காண்பிக்கவும், இளவரசன் அமர்ந்தான். அங்கே சற்று நேரம் மௌனமே நிலவியது.

பிந்துசாரா “ஆச்சாரியார் என்னை அழைத்ததன் நோக்கம் அறியலாமா?” என்று கேட்டான்.

“கலாசாலையில் இருந்து நாடு திரும்ப இத்தனை நாட்களா?” என்று கேட்டார்.

“வரும் வழியில் சில இடங்களில் தங்கி வந்தோம்”

“மௌரிய இளவரசன் சத்திரங்களில் எல்லாம் தங்க வேண்டிய அவசியம் என்ன ?”

“மௌரியப் பேரரசு உருவாகக் காரணமான தாங்களே இது போன்ற குடில்களில் தங்கும் போது , நான் தங்குவதில் ஆட்சேபனை ஏன் குருவே?

“இந்த ஏழை பிராமணன் சகாயம் யாருக்குத் தேவை இளவரசே?”

“எங்களைப் போன்ற க்ஷத்ரியர்களிடத்தில் பொன் , பொருள் தான் இருக்கின்றது குருவே. தங்களிடத்தில் தான் அறிவு செல்வம் இருக்கிறது. நாங்கள் அழிந்தாலும், எங்களைப் போன்று இன்னும் நூறு க்ஷத்ரியர்களை தங்களால் உருவாக்க முடியும். இதோ நந்தர்களை அழித்து மௌரியர்களை உருவாக்கினீர்கள். ஆனால் உங்களைப் போன்று இன்னும் ஒரு சாணக்கியரை கூட எங்களால் உருவாக்க முடியாது”

ஆச்சாரியரை புகழ்வது போல் தோன்றினாலும் சற்று ஏளனம் கலந்து இருந்ததோ என்ற சந்தேகம் வெளியில் நின்று இருந்த ரதகுப்தாவிற்கு தோன்றியது.

சாணக்கியரின் குரல் வேதம் கற்றுக் கொடுப்பதால் சற்றுப் பெரிய குரலே. இளவரசரும் உரக்கவே பேசியதால் வாயில் அருகே நின்று இருந்தவனுக்கு நன்றாகவே கேட்டது.

உள்ளிருந்து சற்று நேரம் எந்த அரவமும் இல்லாமல் இருக்க, என்ன நடக்கிறது என்று பார்க்கலாமா என்று ரதகுபதன் நினைத்தான். அது வேவு பார்ப்பது போல தோன்றி ஆசான் கோபாமடைவாரோ என்று யோசித்து தயங்கினான்.

ஆசான் அறிந்தால் நிச்சயம் தண்டனை உண்டு என்பதோடு , ஆசானுக்கு எல்லா திசையிலும் கண்கள் என்பதும் அவன் அறிவான். யாத்தரீகர்கள் போல முதல் நாள் இரவு தங்கியவர்களை, விடியல் நேரத்தில் கண்டு பிடித்து இருக்கிறார் என்றால் அவர் அறியாமல் துரும்பும் அசையாது என்று புரிந்து கொண்டான். எனவே காதில் விழும் வார்த்தைகள் மட்டும் கிரகித்துக் கொள்வோம் என்று எண்ணி அசையாமல் நின்றான்.

உள்ளே பிந்துசாராவைக் கூர்ந்து கவனித்த சாணக்கியர் பதில் ஒன்றும் கூறவில்லை. சற்று நேரம் கண்களை மூடி ஏதோ சிந்தனையில் இருந்தவர், பின்

“ரத குப்தா உள்ளே வா” என்று அழைத்தார்.

ஆச்சார்யன் அழைப்புக் கேட்டு உள்ளே வந்த ரதா “உத்தரவிடுங்கள் ஆசானே “ என்றான். எதிரில் இருக்கும் ஆசனத்தில் அமரச் சொல்லி ஆசான் கூற,

“தங்கள் முன் அமரும் தகுதி எனக்கு இல்லை ஆசானே “ என்றான்.

“தகுதி என்று எதைக் கூறுகிறாய் ரதா ?”

“பிறப்பால் ..” என்று இழுத்து நிறுத்த,

“ஒருவனின் பிறப்பு அவனின் தகுதியை தீர்மானிப்பதில்லை ரதா. அவனின் செயல்கள் மட்டுமே தகுதியை நிர்ணயிக்கும். இதை உனக்கு கலாசாலை கற்றுத் தரவில்லையா?”

“தெரியும் குருவே. என்றாலும் தங்கள் முன் ..” என்று மீண்டும் இழுக்கவும்,

“நாம் சற்று உரையாட வேண்டி இருக்கிறது. சமமாக அமர்ந்தால் மட்டுமே என்னால் உங்கள் இருவரையும் நேரடியாகப் பார்த்துப் பேச முடியும். “ என்று கூறவும், அதற்கு மேல் மறுக்காமல் இளவரசன் அருகில் இருந்த மற்றும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

இருவரையும் நேராகப் பார்த்த சாணக்கியர்

“பிந்துசாரா , நீ தற்போது தலைநகரம் செல்ல வேண்டாம்,” என்று கூற, இளவரசன் ஏன் என்பது போல பார்க்க, ரதகுப்தாவோ முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அமர்ந்து இருந்தான்.

“நமது நாட்டின் தெற்கு பகுதியில் தற்போது கிளர்ச்சிக்காரர்கள் உருவாகி இருக்கிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த நீ தெற்கே உஜ்ஜைனில் சில காலம் தங்கி நிலைமைகளை கண்காணிக்க வேண்டும்”

“கிளர்ச்சிகளை நமது படைகளைக் கொண்டு அடக்க வேண்டியது தானே குருவே “ என்றான் பிந்துசாரா.

“அந்த படைகளை நடத்தவும் தலைவன் வேண்டுமல்லவா?” என்று சற்றுக் கோபமாக சாணக்கியர் கேட்கவும், அதற்கு மேல் அவரிடத்தில் பிந்துசாரா தர்க்கம் செய்யவில்லை.

அவரின் உத்தரவை எதிர்நோக்கிக் காத்து இருந்தான். இளவரசனின் எண்ணம் அறிந்தவராக

“பிந்துசாரா , தெற்கே தக்காணம் பகுதி மன்னர்கள் ஒன்று சேர்ந்து நம் ராஜ்ஜியத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். நம் மீது படை எடுக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால் நம்மால் அவர்களின் சுதந்திரம் பறிபோவதாக உணர்வதால் , இந்த வழியில் இறங்கி இருக்கிறார்கள். “

“நான் என்ன செய்ய வேண்டும் ஆச்சாரியரே?”

“தற்போது உன் நண்பனோடு உஜ்ஜைன் சென்று, அங்கே சில காலம் தங்கி இரு. கிளர்ச்சியாளர்கள் விவரம் சேகரி. நமது ஒற்றர்கள் அவ்வப்போது உனக்கும், எனக்கும் தகவல் கூறுவார்கள். உரிய காலம் வரும்போது நானும் அங்கே வருகிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைக் கவனித்துக் கொள்ளலாம்”

“சரி ஆசானே. நான் தந்தையை சந்திக்க வேண்டாமா?”

“தற்சமயம் வேண்டாம் பிந்துசாரா. நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கு அரச குடும்பத்தினர் இடையே நடக்கும் பிணக்குகளும் காரணம். உன்னைத் தலைநகரில் கண்டால் அந்த பிணக்குகள் இன்னும் அதிகமாக வாய்ப்பு அதிகம். அதனால் நீ நாட்டுக்குள் வந்ததே யாருக்கும் தெரிய வேண்டாம். “

“இப்போது இந்திரபிரஸ்த நகரத்தினருக்கு தெரிந்து இருக்குமே?”

“இல்லை. உன்னை அழைக்க வந்தவர்கள் அனைவரும் என்னுடைய வீரர்கள் தான். சத்திரப் பொறுப்பாளரும் என் கீழ் பணிபுரிபவனே. என் உத்தரவு இல்லாமல் எங்கும் கூற மாட்டார்கள்.”

“எனில் , என்னை ஏன் முதலில் மாளிகைக்கு அழைத்துச் செல்லக் கூறினீர்கள்?’

“உன் மனநிலை அறிய” என்று சுருக்கமாகக் கூறவும், பிந்துசாரா புரியாமல் பார்த்தான்.

“ஆசானின் மேல் உனக்கு இருக்கும் மதிப்பைச் சோதிக்க எண்ணினேன்.” என்று கூறவும் கோபமாக ஆச்சாரியரைப் பார்த்தான் பிந்துசாரா.

“தங்கள் மேல் எனக்கும் ஒரு கணக்கு இருக்கிறது ஆசானே. அதன் உண்மை தன்மை அறியும் போது, தங்கள் மேல் தற்போது இருக்கும் மதிப்பு என்னவாகும் என்று அறியேன்?”

ஆச்சாரியார் உரக்க சிரித்து “ஹம்ம. நானும் அதை அறிய ஆவலாகவே உள்ளேன் இளவரசே” என்றவர், ரதாவிடம் திரும்பி

“ரதா , இளவரசனோடு நீ இருக்க வேண்டும். அவரை விட்டு அகலக் கூடாது. யார் இளவரசனைச் சந்திப்பதாக இருந்தாலும் உன்னைத் தாண்டி தான் சந்திக்க வேண்டும். இயன்ற வரை நீயே வெளி மனிதர்களை சந்தித்து விட்டு பிந்துசாராவிடம் தகவலாகக் கூறு. தவிர்க்க முடியாதவர்களை மட்டும் நேராக சந்திக்கட்டும். அத்தோடு இளவரசனின் வேலையாட்கள் மேலும் கவனமாக இரு” என்று கூறினார்.

“உத்தரவு குருவே” என்று கூறினான் ரதகுப்தன்.

“உங்கள் இருவரையும் அரசாங்க காரியமாக நான் தான் அனுப்பி இருக்கிறேன் என்ற தகவல் இருவரின் வீட்டினருக்கும் சென்று விடும். அதனால் அதைப் பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம். இன்றைக்கு கதிரவன் இறங்கு முகத்திற்குள் நீங்கள் இருவரும் மதுரா எல்லையை கடக்க வேண்டும். அதனால் பசியாறி விட்டு புறப்படுங்கள்”

இருவரும் மீண்டும் ஆச்சார்யரை வணங்கி விட்டு வெளியே செல்ல எத்தனிக்க,

“பிந்து, உன்னிடம் தேஜா தானே இருக்கிறான் ? “ என்று வினவ,

“ஆம் . குருவே “ என்றான்.

“தேஜாவை சரியான முறையில் பராமரித்து வா. உன் காரியங்களுக்கு மிகவும் பக்க பலமாக இருப்பான்” என,

“உண்மை ஆச்சாரியரே. தேஜாவின் சாகசங்கள் அநாயாசம் தான்” என்று பிந்து பதில் கூறினான்.

தலையைசைத்த சாணக்கியர் “புறப்படுங்கள்” என்றார்.

பிந்துசாரா, ரதா இருவரும் வீரர் தலைவன் முதலில் அழைத்து வந்த மாளிகைக்குச் சென்றனர்.

வீரர் தலைவனிடம் “எங்கள் இருவரின் புரவிகளுக்கும் வேண்டியதைச் செய்து தயார்படுத்து. சிறிது நாழிகையில் இருவரும் புறப்படுகிறோம்.” என்று விட்டு உள்ளே சென்றான் பிந்துசாரா.

இருவரும் தங்களை சுத்தம் செய்து கொண்டு வந்து உணவருந்த அமர்ந்தனர்.

மாளிகை பணியாளர்கள் வேண்டியதைப் பரிமாறி விட்டு ஒதுங்கி நின்றனர். ரதா உணவருந்தினாலும், அவனுக்குள் சில கேள்விகள் எழ, அவன் அந்த சிந்தையிலேயே இருந்தான். இளவரசனோ உணவருந்தும் வேலையை மட்டுமே செய்தான்.

அவர்கள் அங்கு இருக்கும் நேரங்களில் மாளிகை பணியாளர்களைத் தவிர, வேறு எவரும் அவர்களைச் சந்திக்கவில்லை. நாட்டின் இளவரசன் தங்கள் நகருக்கு விஜயம் செய்து இருப்பது அறிந்தால், அரசாங்க அதிகாரிகள், வணிகர்கள், நகரின் செல்வாக்கு மிக்கவர்கள் அனைவரும் வந்து வணங்கிவிட்டுச் செல்வார்கள். மக்களும் இளவரசரைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இளவரசரின் நகர் வலம் ஏற்பாடு செய்யப்படும்.

ஆனால் ஆச்சாரியாரின் முன்னேற்பாடுகளால் அவை எதுவுமே நடைபெறாமல் , பிந்துசாரா இந்திரபிரஸ்தம் விட்டு வெளியேறுவது ரதா, இளவரசன் இருவருக்குமே வியப்பு தான். ஆச்சாரியாரின் ஆற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை.

யுவராஜ் புறப்படும் போது மாளிகை பொறுப்பு அதிகாரி இளவரசனிடத்தில் துணிகளால் மூடபட்ட ஒரு மூட்டையைக் கொடுத்தார். இளவரசன் என்ன என்பது போல ஏறெடுத்துப் பார்க்க,

“நம் மௌரிய நாணயங்கள் யுவராஜ். தங்களுக்குத் தேவைப்படக் கூடும் என்று ஒப்படைக்கச் சொல்லி ஆச்சார்யார் உத்தரவு.” என்றான்.

அதை வாங்கி ரதாவிடம் கொடுத்து விட்டு , மாளிகைப் பொறுப்பாளரிடம் புரவிகளை அழைத்து வரச் சொன்னான்.

புரவிகள் வரவும், இருவரும் உஜ்ஜைன் நகரம் நோக்கிப் புறப்பட்டனர். இந்திரப்பிரஸ்தம் நகரை தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. முதல் நாள் மாலையில் இருந்து புரவிகளும் ஓய்வெடுத்து இருந்ததால் , வேகமாகவே சென்றன. தேஜா அவன் பெயருக்கு ஏற்றார் போல வேகமாகச் செல்ல, அதற்கு ஈடுகொடுக்க ரதகுப்தாவின் புரவி திணறியது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சாதாரண புரவிகளைவிட இதுவும் நல்ல வேகத்தில் தான் சென்றது.

ஏறக்குறைய இரண்டு யோஜனை தூரம் கடந்தபின் புரவிகள் லேசாக களைப்புற, இவர்களுக்கும் சற்று இளைப்பாற வேண்டும் போல இருந்தது. இருவரும் அடுத்து வந்த நீரோடை அருகில் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

சற்று நேரம் அமைதியாகக் கழிய ரதா இளவரசனிடம்

“யுவராஜ் , உணவு அருந்துகிறீர்களா?” என்று வினவினான்.

“உணவு ஏது ரதா ?”

“நம் மாளிகை பரிசாரகர் அடுத்த வேளை உணவு மட்டும் மந்தாரை இலையில் கட்டிக் கொடுத்து இருக்கிறார் யுவராஜ் “

“ஏன் அதை எடுத்துக் கொண்டாய் ரதா? நம் பயணம் எந்த வழியில் இருக்கும் என்று தெரியாது. அடர்ந்த காட்டு வழிப் பயணம் என்றால், உணவு வாசனைக்கு காட்டு விலங்குகள் நம்மைப் பின் தொடரும் என்று அறிய மாட்டாயா?”

“அறிவேன் இளவரசே. ஆனால் என்னை விட நம் பரிசாரகர் அதை நன்றாகவே அறிந்து இருக்கிறார். நீங்கள் கூறிய காரணத்தைக் கூறி நான் உணவை மறுத்தப் போது , மதுரா வரை ராஜபாட்டை தான். அதிக மக்கள் நடமாட்டம் இல்லாவிட்டாலும், அவை விலங்குகளுக்கான பாதையும் அல்ல என்று விளக்கினார் “

“ஓ.. நம் மௌரிய மக்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர் தான் போல்”

“நம் ஆச்சாரியார் கீழ் பணிபுரியும் நபர்கள் வேறு எப்படி இருப்பார்கள் யுவராஜ்?”

“நீயும் ஆச்சாரயார் பஜனை பாட ஆரம்பித்து விட்டாயா?”

“ஏன் யுவராஜ்? நம் மௌரிய சாம்ராஜ்ஜியம் இன்று பேரரசாக கோலோச்சுவது ஆசானால் தானே ?”

“ஆம். ஆனால் அவரின் அந்த ராஜ்ஜிய ஆசைக்கு மற்றவர்களின் இழப்பைப் பற்றி அவர் கவலைப்படுகிறாரா என்ன ?

“தவறாகக் கூறுகிறீர்கள் யுவராஜ். ராஜ்ஜிய ஆசை அவருக்கு இருந்தால் அவர்தானே சக்கரவர்த்தியாக இருந்து இருக்க வேண்டும். தங்கள் தந்தை தானே சக்கரவர்த்தி “

“யார் அவரிடம் கேட்டார்கள் இந்த ராஜ்ஜியம் எல்லாம்? என் தந்தை சாதாரண வேட்டைக்காரானகவே இருந்து இருக்கலாம். உன் ஆசான் நந்தர்களை அழிப்பதற்கு என் தந்தையை உபயோகப்படுத்திக் கொண்டார். அதற்கு கைமாறாகத் தான் இந்த ராஜ்ஜியம் “

“இருக்கலாம் யுவராஜ். ஆனால் அவர் நினைத்து இருந்தால் சக்கரவர்த்தியை பிரதான தளபதியாக வைத்து தானே அரசனாக இருந்து இருக்காலமே. தங்களுக்கு ஆச்சாரியார் மேலே ஏதோ மனவருத்தம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது யுவராஜ். “

ரதாவை ஏறிட்டுப் பார்த்த இளவரசன் “என் மனத்தில் இருக்கும் வேதனை யாரும் அறியார் ரதா. அதை என்னால் வெளியிட்டும் கூற முடியாது. தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் வரை நான் என் வேதனையை எனக்குள்ளே தான் அடக்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறவும், ரதா திடுக்கிட்டான்.

இளவரசனுக்கும் , ஆச்சாரியாருக்கும் ஏதோ பிணக்கு இருப்பதை அவன் உணர்ந்து இருந்தான்தான். ஆனால் இளவரசனிடத்தில் இந்த வேதனை அவன் அறியவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு,

“யுவராஜ், தங்கள் வேதனைக்கான காரணம் நான் அறியவில்லை. தாங்கள் கூறுவதைப் பார்க்கும் போது அது தற்போது மற்றவர் அறியும் விவரம் இல்லை என்றும் புரிகிறேன். என்றாலும் என்னைப் பொருத்தவரை ஆச்சாரியார் தங்களை வேதனைபடுத்தக் கூடிய செயல் செய்பவர் இல்லை. அப்படி ஒருவேளை நடந்து இருந்தாலும் அதிலும் உங்கள் நன்மையே இருக்கும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அந்த உண்மைகளைத் தாங்கள் அறியும் காலம் விரைவில் வரட்டும் என்று அந்த ஈசனை வேண்டிக் கொள்கிறேன் யுவராஜ்.” என்றான்.

அவனின் வார்த்தைகளில் பிந்துசாரா சற்று அமைதி அடைந்தாலும், அது நிரந்தரமானது அல்ல என்று இருவருமே அறிந்து இருந்தனர். பின்,

“யுவராஜ் , இதற்கு பின் பாதை எப்படி இருக்கும்?” என்று வினவ ,

“இன்னும் ஒரு நாழிகையில் நாம் மதுராவை அடைந்து விடலாம். இனி அடர்த்தியான வனங்கள் இடையே தான் நம் பயணம் இருக்கும் ரதா. அதனால் குறுவாள் மற்றும் வில், அம்பு முதலியவற்றை மதுராவில் சம்பாதித்துக் கொண்டு புறப்படலாம். இன்று இரவு அங்கேயே தங்கி விட்டு, நாளை உதயத்திற்குப் பின் புறப்படலாம் “

“உத்தரவு யுவராஜ்” என்றவன், புரவிகளை சங்கேதக் குரல் மூலம் அழைக்க, புரவிகளும் வந்து நின்றன.

மீண்டும் மிக வேகமான பயணத்தில் திட்டமிட்டபடி இருவரும் மதுரா வந்து அடைந்தனர். கதிரவன் விழும் முன் வந்து சேர்ந்து விட்டதால் , எண்ணியபடியே தேவையான ஆயுதங்கள் வாங்கினார்கள்.

மதுரா ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பிடம் என்பதால் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். அதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நகரம். ஆச்சாரியார் வழிகாட்டுதல் படி அங்கும் மக்கள் தங்க சத்திரங்கள், அன்னதானம் எல்லாம் அதிகாரிகளே பொறுப்பேற்று மேற்பார்வை செய்வதால் , எல்லா இடங்களிலும் ஒரு ஒழுங்கு முறை பின்பற்றப் பட்டது.

சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில் குற்றங்களுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையாகவே இருந்தன. அதனால் பொதுவாகவே மக்கள் ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்றினார்கள்.

அதிகாரிகள், அமைச்சர்கள் , மக்கள் யார் தவறு செய்தாலும், அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதற்கான தண்டனை நிறைவேற்றப்படும்.

பிந்துசாரா குழந்தைப்பிரயாத்தில் பாடலிபுத்திரம் தவிர எங்கும் சென்றது இல்லை. அடுத்து ஆச்சாரயாரின் குருகுலத்தில் கல்வியும், பின் தக்ஷசீலத்தில் சர்வ கலையும் பயிலச் சென்று விட்டதால் வெகு சிலரைத் தவிர இளவரசனை யாரும் அறிந்தது இல்லை.

அதுவே நன்மையாக , இங்கும் யாரும் அறியாமல் சத்திரத்தில் தங்கிவிட்டு மறுநாள் மதுராவில் இருந்து இருவரும் புறப்பட்டனர்.

-தொடரும்-

அத்தியாயங்களுக்கான கருத்துகள் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் – மூன்று​



மதுராவில் இருந்து புறப்பட்ட இளவரசனும், ரதகுப்தனும் அன்றைய நாள் முழுதும் பயணம் செய்து நிலவு எழும் வேளையில் உஜ்ஜைன் நகரத்திற்கு அருகில் வந்து சேர்ந்தனர்.

உஜ்ஜைன் நகரம் புராணக் காலத்தில் தோன்றியது. சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாகத் தோன்றிய பன்னிரெண்டு திருத்தலங்களில் ஒன்று. மஹாகாலேஸ்வரர் லிங்க ஸ்வரூபாமாக காட்சியளிக்கும் இந்த நகரம் மௌரியர்கள் காலத்தில் மிக முக்கிய நகரமாக விளங்கியது.

மௌரியர்கள் ராஜ்ஜியத்தைத் தெற்கே உள்ள அரசுகளோடும் மேற்கில் அரபிக் கடலோர பகுதிகளையும் இணைக்கும் முக்கியப் பகுதி உஜ்ஜைன் நகரமே. உஜ்ஜைன் நகரத்தின் தென் பகுதியில் விந்திய மலைத் தொடரின் ஒரு பகுதியான சாத்பூரா மலைத் தொடரின் அடர்ந்த வனங்கள் ஆரம்பமாகின்றது. இவை சாம்ராஜ்ஜியத்திற்கு அரணாக காத்து நிற்கின்றது.

இளவரசனும், ரதகுப்தனும் நகரின் வட பகுதியில் இருந்து வந்து கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு யோஜனை தூரத்தில் நகரம் வந்துவிடும் என்றபோதில், இளவரசன் அங்கேயே நின்று விட்டான்.

ரதாவும் தன் புரவியை நிறுத்தி விட்டு நிற்க,

“ரதா இனி நாம் இருவரும் பிரிந்து செல்லலாம். நான் மட்டும் மாளிகைக்குச் செல்கிறேன்.”

“ஆனால் ஆச்சாரியார் தங்களோடு தான் இருக்க வேண்டும் எனக் கட்டளையிட்டு இருக்கிறாரே யுவராஜ்?”

“எனக்கு நகரத்தின் உண்மை நிலவரம் தெரியவேண்டும் ரதா. மற்றவர்கள் மூலம் நான் தெரிந்துக் கொள்ளும் விஷயங்களில் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. “

“எனில் என்னிடத்தில் பெறும் விவரங்கள் மட்டும் நம்பிக்கைக்கு உரியதாக இருக்குமா இளவரசே ?”

ரதாவின் கேள்வியில் வாய் விட்டுச் சிரித்த இளவரசன்,

“என் மனமாக உன்னைக் காண்கிறேன். என் மனம் உண்மைக்குப் புறம்பாகக் கூறாது அல்லவா?” என்றான்.

“மன்னிக்க வேண்டுகிறேன் யுவராஜ். என் ஐயத்தைத் தெளிவுபடுத்தவே தங்களிடத்தில் வினவினேன். மற்றபடி என் உடல், ஆவி அனைத்தும் தங்களுக்கும் , இந்த மௌரியப் பேரரசுக்கும் மட்டுமே சொந்தம். தங்கள் கட்டளையை என் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவேன்”

“நான் உன்னை அறிவேன் ரதா. உனக்கு இந்த நகரம் பரிச்சயம் தானே.” என்று இளவரசன் கேட்டான்.

“ஆம் யுவராஜ். இங்கு என் உறவினர்கள் இல்லம் இருக்கிறது. நான் அங்கே தங்கிக் கொள்கிறேன். “

“நீ நகருக்குள் இருந்து என்ன நடக்கிறது என்று கண்காணித்து , எனக்குத் தகவல் கொடு. சரியான நேரம் வரும்போது இருவரும் இணைந்து ஆச்சாரியார் கூறும் காரியங்களை நிறைவேற்றுவோம். “

“உத்தரவு யுவராஜ். நான் தங்களைத் தொடர்பு கொள்வது எவ்வாறு?”

“நகரின் தென் பகுதியில் வனப் பகுதியின் ஆரம்பத்தில் மகாகாளி ஆலயம் உள்ளது. அங்கே சந்திக்கலாம்.”

“ஆலயத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்குமே யுவராஜ் ?”

“இல்லை ரதா. வேட்டைக்குச் செல்பவர்கள் மட்டுமே அங்கே வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். மற்றபடி விழாக் காலங்களில் மட்டுமே மக்கள் கூடுவார்கள். அதனால் இரவு ஆரம்பமாகி ஒரு நாழிகை சென்றப் பின் அந்தக் கோவிலில் சந்திக்கலாம்”

“உத்தரவு யுவராஜ். “ என்ற ரதா, நகருக்குள் செல்லும் பாதையில் சென்றான்.

பிந்துசாரா நகரின் மத்தியில் அமைந்து இருந்த அரச மாளிகை நோக்கிச் சென்றான். மௌரியர்களின் நகர அமைப்பு அந்த அந்த ஊரின் வளங்களைப் பொறுத்தே அமையும். சாம்ராஜ்யத்தில் நீர் வழிப் போக்குவரத்தை விட, நில வழிப் போக்குவரத்தே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். அதனால் ஊர் மக்கள் அவரவர் தொழில்களுக்கு ஏற்ப வீடுகள் அமைத்துக் கொண்டு வசித்து வருகின்றனர்.

ஆனால் ராஜ்யத்தின் எல்லைகளில் உள்ள நகரங்கள் மட்டும் அதில் இருந்து மாறுபட்டு இருக்கும்.

நகரின் எல்லைகளில் போர் வீரர்களின் கூடாரங்கள் அமைக்கபட்டு இருக்கும். அடுத்து போர்க் கருவிகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் , அடுத்து மற்ற தொழில் செய்பவர்களின் இல்லங்கள் அனைத்தும் அமையப்பெற்று இருக்கும். இவை எல்லாம் கடந்த பின் அரசாங்க அதிகாரிகள் மாளிகை , அதைத் தொடர்நது அரசருக்கான மாளிகை அமைந்து இருக்கும். அரசர் மாளிகையை தொடர்நது ஆயுதக் கூடங்களும் அமைந்து இருக்கும்.

செவ்வக வடிவில் அமைந்து இருக்கும் இந்த நகரின் அமைப்பில் நான்கு புறங்களிலும் போர் பயிற்சிக் கூடங்களும், அங்கேயே போர் வீரர்கள் தங்கும் வசதியும் செய்யப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு மக்கள் குடியிருப்பின் முடிவிலும் வண்டிப் பாதைகள் அமையப் பெற்று இருப்பதால், தேவை ஏற்படின் ஆயுதக் கூடாரங்களில் இருந்து விரைவாக ஆயுதங்கள் செல்லவோ, வீரர்கள் அணி வகுக்கவோ வழி இருக்கும்.

இளவரசன் வட பகுதியில் இருந்து நகரின் உள்ளே செல்வதால், முதலிலேயே அரச மாளிகை தான் அமையப் பெற்று இருந்தது.

ஆனால் மாளிகை உள்ளப் பகுதியில் காவல்கள் பலமாக இருந்தன. காவலர்கள் இளவரசரிடம் யார் என வினவினார்.

“நான் ஆச்சாரியார் பிரதிநிதியாக வந்துள்ளேன்” எனக் கூறவும்,

“யாரைச் சந்திக்க வேண்டும்?” என்று காவலன் வினவினான்.

“இந்நகரின் நகரிக்காவைச் (நகர அதிகாரி) சந்திக்க வேண்டும்”

“இந்த இரவு நேரத்தில் அவரைச் சந்திக்க இயலாது. ஏதும் சத்திரத்தில் தங்கி விட்டுப் பொழுது புலர்ந்ததும் சந்திக்கலாம்”

“இல்லை. நான் இப்பொழுதே சந்திக்க வேண்டும், “

“இயலாது என்கிறேன் இல்லையா?” சற்று வேகமாகக் கூறவும், இளவரசன் அவனைப் பார்த்தப் பார்வையில் காவலன் திகைத்தான்.

“என்னைச் சந்திக்க இயலாது என்றால் உன்னோடு அந்த நகரிக்காவும் ராஜ தண்டனைக்கு ஆளாக நேரிடும் “ என்ற வார்த்தைகளில் , தன் அருகில் உள்ள காவலனை அழைத்து நகர அதிகாரியை அழைத்து வரக் கூறினான்.

அதுவரை பிந்துசாரா அங்கிருந்தே நகரின் அமைப்பினைப் பாரவையிட்டுக் கொண்டு இருந்தான். அவனின் புரவி தேஜாவோ அந்தக் காவலனைப் பார்த்தப் பார்வையில் காவலன் எச்சில் முழுங்கினான். புரவியின் லகான் அமர்ந்து இருப்பவன் கையில் இருக்கவே சரி. இல்லை என்றால் இத்தனை நேரத்தில் தேஜாவே அந்தக் காவலனை ஒரு வழி செய்து இருக்கும் என்பது அதன் பார்வையிலேயேப் புரிந்தது. இன்னும் எத்தனை நேரம் இதனை சமாளிக்க வேண்டுமோ என்று காவலன் நினைக்கும் போதே பின்புறம் அரவம் கேட்டது.

எத்தனை வேகத்தில் சென்று, யாரிடம் என்ன கூறினானோ, அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு அதிகாரி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

வந்தவர் பிந்துசாராவை யார் என விசாரித்தார்,

தன்னைப் பிந்துசாரா , மௌரியப் பேரரசின் யுவராஜ் எனக் கூறவும், அந்த அதிகாரி திகைத்தாலும்

“தாங்கள் யுவராஜ் என்பதற்கு சாட்சி?” என்று வினவினார்.

கேள்வியில் பணிவு இருந்தாலும், உறுதிப் படுத்திக் கொள்ளும் எண்ணமே மிகுந்து இருப்பது நன்றாகத் தெரிந்தது.

“இதோ ஆச்சாரியார் அளித்த ஓலை. “ என்றுக் கொடுக்க, வாங்கிப் படித்த அதிகாரி , சட்டென்று பணிந்து வணங்கினான்.

“தங்களின் விஜயம் உஜ்ஜைன் மாகாண மக்களைப் பெருமைப் படுத்துகிறது யுவராஜ்” என்றவன், காவலனை அழைத்து

“மந்திரி மற்றும் நகரிக்காவிற்கு விவரம் கூறி இளவரசரின் வரவேற்பிற்கு தயார் செய்” என்றுக் கூறினான்.

“வேண்டாம். எல்லோரையும் நாளைக் காலையில் சந்திக்கிறேன். தற்போது மாளிகைக்குச் செல்லலாம். “ என்றவன் செல்லலாம் எனத் தலையசைத்தான்.

அதிகாரி தான் வந்தப் புரவியில் ஏறிக் கொள்ள, முதலில் தன்னைத் தடுத்தக் காவலனை மட்டும் தன்னோடு வரச் சொல்லித் தலையசைக்க அவனும் பின் தொடர்ந்தான்.

“ஐயா தங்கள் பெயர் ?” என்று யுவராஜ் வினவ,

“சுபோத்“ என்றுக் கூறினான் அந்த அதிகாரி. காவலனின் பெயரையும் விசாரிக்க அவன், பாதல் என்றான். தன் வயதை ஒட்டியே இருக்கக் கூடும் என்று நினைத்த பிந்துசாரா சுபோதிடம் மெதுவாக உரையாட ஆரம்பித்து இருந்தான்.

“சுபோத், இந்த நகரத்தில் தங்கள் பொறுப்பு என்ன ?”

“பரஸ்தார் (மேற்பார்வையிடுபவர்) “

“நகரத்தில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கின்றதே. “

“நம் நகரம் எல்லையில் இருப்பதால் எப்போதும் கெடுபிடிகள் அதிகம் தான். அதிலும் சில காலங்களாக கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருப்பதால், இன்னும் கட்டுப்பாடுகளை அதிகரித்து இருக்கிறோம் யுவராஜ்.“

“யார் கிளர்ச்சி செய்கிறார்கள்?”

“பொது மக்களில் சிலரும், போர் வீரர்கள் மத்தியிலும் குழப்பங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது “

“காரணம் என்ன ?”

“ஒவ்வொருவர் ஒவ்வொன்று கூறுகிறார்கள்”

“புரியவில்லை சுபோத் “

“போர் வீரர்களிடத்தில் ஒருவர் உணவு வழங்கல் சரியில்லை என்றால், மற்றொருவர் ஆயுதங்களில் தரம் இல்லை என்கிறார். வேறொருவர் அவர்களின் மேலதிகாரி தௌவரிக்காவின் (தலைமைக் காவலாளர்) செயல்பாடுகள் சரியில்லை எனப் புகார் கூறுகிறார்கள் யுவராஜ்”

“ஓஹ். மக்களிடத்தில் என்ன குழப்பம்?’

“நகர கார்மிகாவின் (செயல் அதிகாரி) கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். தேவை இல்லாத வரிகள் விதிப்பதாகக் கூறுகிறார்கள்”

“வரி விதிப்பது கோபாவின் வேலை தானே “

“ஆம் யுவராஜ். ஆனால் அதைச் செயல்படுத்துவது கார்மிகாவின் பொறுப்பே”

“எத்தனைக் காலங்களாக கிளர்ச்சிகள் நடக்கிறது சுபோத் ?”

“கடந்த ஒரு மண்டலமாக நடக்கிறது. அதிலும் கடந்த பட்சமாக அதிகரித்து வருகிறது”

“சரி. நான் விஜயம் செய்து இருப்பதைத் தற்போது யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நாளைக் காலை தர்பார் கூட்டம் நடைபெறும் போது வருகிறேன். என் காவலுக்கு பாதல் மட்டும் நிற்கட்டும்” என்றான் இளவரசன்.

அங்கே அங்கே உள்ள காவலர்கள் புதிதாக வருபவனைப் பார்த்தாலும், சுபோத்தோடு வருவதால் தடை சொல்லவில்லை.

மாளிகைக்குள் செல்லும் முன், பாதலிடம் தன் புரவியை கொட்டடிக்குள் சேர்க்குமாறு கூற, பாதல் விழித்து நின்றான்.

பிந்துசாரா “என்ன விஷயம் பாதல்?” என,

“யுவராஜ் , தங்கள் புரவி என்னிடம் கட்டுப்படுமா?” என்றான்.

யுவராஜ் சத்தமாகச் சிரித்தபடி புரவியிடம், “தேஜா , இவரோடு அமைதியாகச் சென்று ஓய்வெடுத்துக் கொள்” என்றுக் கூறவும், புரவி தலையசைத்தது.

ஒரு நீண்ட கணைப்பிற்குப் பின் , புரவி பாதலை தன் மேல் ஏற அனுமதித்தது. தேஜாவைப் பார்த்து பயந்ததுப் போல தெரிந்தாலும், பாதல் தேஜாவைக் கையாண்ட விதம், புரவிகளிடத்தில் அவனுக்கு நன்கு பரிச்சயமிருந்ததைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

மாளிகையின் உள்ளே சென்ற பின் , சுபோத் இளவரசனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்தான். பின் இளவரசரின் அறை வாயிலில் பாதலைக் காவல் வைத்து விட்டு சுபோத் தன் இல்லத்திற்குச் சென்றான்.

பிந்துசாரா தன் அறையின் உப்பரிகையில் நின்றபடி நீண்ட நேரம் சிந்தனையில் இருந்தான். சுபோத் கூறியச் செய்திகளைக் கேட்டதில், கிளர்ச்சிகள் தானாக நடைபெற்றார் போல தோன்றவில்லை. ஒருவரோ அல்லது பலரோ மற்றவர்களைத் தூண்டி விடுவதாகத் தெரிந்தது.

ஆச்சாரியார் கூற்றுப் படி இவைகளின் பின்னணியில் அண்டை நாடுகளின் கரம் இருக்காலம் என்றாலும், அவர்களுக்கு உள்நாட்டில் உதவுபவர்களைக் கண்டறிவதே முக்கியம் என்று உணர்ந்தான்.

மேலும் சிறிது நேரம் சிந்தித்தவன், பின் நாளை ரதாவைச் சந்தித்தப் பின் மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியபடி உறங்கச் சென்றான்.

நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பில் நன்கு உறங்கிய இளவரசன், காலையில் உதய தாரகைகளின் ஒலியில் தான் விழித்தான்.

காலைக் கடன்கள் முடித்து விட்டு அறையை விட்டு வெளியே வரும்போதே சுபோத் வேறு சிலருடன் நிற்பதைக் கண்டான்.

இளவரசன் அறையை விட்டு வெளியில் வந்த அடுத்தக் கணம்

“உஜ்ஜைன் நகர மக்களின் சார்பாக நகரிக்காவின் வணக்கத்தை இளவரசர் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று முன்னால் வந்து மண்டியிட்டார் .

இளவரசர் சுபோத் மீது சற்றுக் கோபமானப் பார்வையை வீச, அவனோ தான் கூற வில்லை என்பது போல தலையசைத்தான். பின் பாதல் பக்கம் திரும்ப அவனும் இல்லை என்பதைப் போல் தலையசைக்கவும் , சிந்தனையோடு பார்த்தான்.

அவரின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டார் போல தலையசைக்கவும், எழுந்து நின்ற நகரிக்கா ,

“யுவராஜ் மன்னிக்க வேண்டும். இந்த இரு முட்டாள்களும் இரவே என்னை எழுப்பிக் கூறி இருந்தால் , நானும் தங்களை இரவே வந்து சந்தித்து இருப்பேன்” என்றார்.

அவர் கோபத்தில் சுபோத், பாதல் இருவரையும் உறுத்து விழிப்பது நன்றாகவேத் தெரிந்தது.

“அதனால் என்ன ஐயா? நான்தான் பயணக் களைப்பில் இருப்பதால் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றுக் கூறினேன்”

“என்றாலும் யுவராஜாவைத் தகுந்த முறையில் வரவேற்க வேண்டியது எங்கள் கடமையல்லவா? அதைத் தடுத்தது அவர்களின் குற்றமே “

“குற்றம் என்ற பெரிய பதம் வேண்டாம் ஐயா. தவறு என்று வேண்டுமானால் கூறுங்கள். அப்படிக் கூறினாலும் அதில் சரி பாதிப் பங்கு என்னுடையதே. என்ன தண்டனைத் தரலாம் என்று நீங்களே கூறுங்கள்?

“தங்களுக்குத் தண்டனை அளிக்கும் அளவிற்கு நாங்கள் யார் யுவராஜ்? ஏதோ தங்களை முறையாக வரவேற்கவில்லையோ என்ற அச்சத்தில் பேசிவிட்டேன். மன்னித்து விடுங்கள்”

“சரி. தற்போது இதை விட்டுவிடலாம். நீங்கள் வந்தக் காரியத்தைக் கூறுங்கள்”

தற்போது நகரிக்கா என்னக் கூறுவது என்று யோசித்தார். இளவரசரின் திடீர் விஜயத்திற்கான காரணம் அவர் தானே கூறவேண்டும். தன்னைக் கேட்கிறாரே என்ற சிந்தனையோடு, அவருக்கு என்னப் பதில் கூறுவது என்றும் புரியாமல் நின்றார்.

அவரின் அமைதியைக் கண்ட பிந்துசாரா ,

“ஐயா , சர்வ கலா சாலைப் படிப்பு முடிந்ததும், தலைநகரம் திரும்பும் முன் மஹாகாலேஸ்வரரைத் தரிசித்து , சில காலம் இங்கே தங்கி இருக்கலாம் என்று எண்ணி வந்து இருக்கிறேன். அதில் தங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?” என்றான்

“யுவராஜ், இது என்ன கேள்வி? தங்கள் ராஜ்ஜியம் இது. தாங்கள் எங்கு விருப்பமோ அங்கே தங்குவதற்கு எல்லா உரிமைகளும் தங்களுக்கு உண்டு. “

“எனில், நான் ஏன் இங்கே வந்தேன் என்பது போல தங்கள் சிந்தனை சென்றது போல எனக்குத் தோன்றுகிறதே ?”

“உண்மைதான் யுவராஜ். தற்சமயம் இங்கே நிலவரம் சரியில்லை. இந்த நேரத்தில் தங்கள் பாதுகாப்பிற்கு எந்தக் குந்தகமும் ஏற்படக் கூடாதே என்பது என் கவலை”

“கவலை வேண்டாம் ஐயா. நானும் சில விவரங்கள் அறிந்துக் கொண்டு தான் வந்தேன். அத்தோடு என் பாதுகாப்புப் பற்றித் தாங்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை. உரிய ஏற்பாடுகள் செய்து கொள்கிறேன்”

‘நல்லது இளவரசே. தங்கள் வருகை எல்லோருக்கும் நன்மை பயக்கட்டும். தற்போது தங்களின் விருப்பம் என்ன யுவராஜ்? தர்பார் கூட்டட்டுமா?”

“தர்பார் வழக்கம் போலவே கூடட்டும். நான் தற்போது மகாகாலேஸ்வரரைத் தரிசித்து வருகிறேன். அத்தோடு தர்பார் முடிந்த பின் மக்களைச் சந்திக்கிறேன் என்றும் தெரிவித்து விடுங்கள்”

“உத்தரவு யுவராஜ். தங்கள் பாதுகாப்பிற்கு ..?” என்று நிறுத்தவும்,

“சில நாயக்கர்களை (காவலர்கள்) மட்டும் அனுப்பி விடுங்கள். மற்றவர்களைத் தர்பாரில் சந்திக்கிறேன். என்னுடன் சுபோத் மற்றும் பாதல் இருவரும் வரட்டும்” என்றான் யுவராஜ் .

மீண்டும் மண்டியிட்டுவிட்டு நகரிக்காவோடு மற்றவர்கள் செல்லவும், பிந்துசாரா சுபோத், பாதல் இருவரையும் தலையாசவால் தன் அருகே வரவாழைத்தான்.

“சுபோத் , உங்கள் இருவரை மீறி எவ்வாறு என் வருகை மற்றவர்களுக்குத் தெரிந்தது?”

“தெரியவில்லை யுவராஜ். இரவில் நான் என் இல்லத்திற்குச் சென்று விட்டேன். அதிகாலையில் நகரிக்கா என்னை அழைப்பதாகக் காவலன் கூற அவரைக் காணச் சென்றேன். அவர் என்னிடம் என்ன விஷயம் என்றுக் கூடக் கூறாமல் சற்று நேரம் கோபமாகப் பேசினார். பின் வா என்றுக் கையோடு இங்கு அழைத்து வந்து விட்டார். “

பாதல் புறம் திரும்பிப் பார்க்கவும் “நான் தங்கள் அறை வாயிலை விட்டு எங்கும் செல்லவில்லை யுவராஜ்” என,

“அப்படி என்றால் வந்து இருப்பது யுவராஜ் என்றுத் தெரிந்த யாரோ இங்கு இருக்கிறான் “ என்றுக் கூறியபடி சுபோத்தைப் பார்த்தான். அவன் முகத்திலும் சிந்தனைத் தெரிய, சரி யார் என்றுப் பிறகு பார்க்கலாம் என்றபடி சிவனைத் தரிசனம் செய்யச் சென்றார்கள்.

மகாகாலேஸ்வரரைத் தரிசனம் செய்துக் கொண்டு இருந்தபோது ,

ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


எனும் லிங்காஷ்டகம் இனிமையான குரலில் இசைக்கக் கேட்டான். குரல் வந்த திசையில் பிந்துசாராவின் கால்கள் தானாகச் செல்ல, அங்கே ஒரு பெண்ணின் பின்புறம் தெரிந்தது.

பக்தியும், இனிமையும் கலந்த அந்தப் பெண்ணின் குரலை மட்டுமே கேட்டபடி லிங்காஷடகம் முடியும் வரை கண்கள் மூடி நின்று இருந்தான் இளவரசன். பாடல் முடிந்த பின்னும் கண்கள் திறக்காதவன், சுபோத் அருகில் வந்து

“தீப ஆராதனை ஆரம்பிக்கப் போகிறது யுவராஜ்” என்றுக் கூறவும் கண்கள் திறந்துப் பார்த்தான். எதிரில் யாரும் இல்லாமல் இருக்க, பக்கத்தில் சுபோத் மட்டுமே நின்று இருந்தான்.

அந்தப் பெண்ணின் முகம் காணவில்லையே என்ற எண்ணத்தோடு சுற்றுமுற்றும் பார்க்க, பெண் என்று யாரும் தென்படவில்லை. ஏன் இளவரசர் வருகை என , பொதுமக்கள் கூட வெளியில் நிறுத்தபட்டு இருந்தனர். அதைக் கண்ட யுவராஜ், இதற்கு மேலும் இங்கு நிற்பது முறையல்ல என்று மஹாகாலேஸ்வரர் சந்நிதிக்குச் சென்றான்

-தொடரும் -

கருத்துக்கள் பதிவிட கீழே உள்ள லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நட்புக்களே

 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் - நான்கு​


இளவரசன் வரவையொட்டி சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, மஹாகாலேஸ்வரரை திவ்யமாக வணங்கி விட்டு வெளியில் வந்தான் பிந்துசாரா.

யுவராஜின் கண்கள், மக்கள் கூட்டத்தில் அந்தப் பெண்ணைத் தேடியது. அவன் அவளின் முகம் காணவில்லை என்றாலும், அவனின் உள்ளுணர்வு அந்தப் பெண் அங்கே தான் இருக்கிறாள் என்று கூறவே, கண்கள் நாலாபுறமும் தேடியது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்குள் மக்கள் “சாம்ராட்டிற்கு ஜெய் ! யுவராஜ்க்கு ஜெய் ! ஆச்சாரியார்க்கு ஜெய் !” என்று கோஷமிட ஆரம்பிக்கவும், பிந்துசாரா தலை வணங்கி ஏற்றுக் கொண்டான்.

பின் மக்களைப் பார்த்து “ஈசனின் சன்னதியில் அவன் புகழ் மட்டும் பேசலாம் மக்களே. எல்லோரும் அமைதியாக இறைவனை தரிசித்து விட்டுச் செல்லுங்கள். இன்றைய தர்பார் முடிந்ததும் , உங்களை எல்லாம் அர்த்த மண்டபத்தில் சந்திக்கிறேன். உங்களின் கோரிக்கைகளை அங்கே கூறுங்கள். தற்போது அமைதியாக ஆலயத்திற்குள் செல்லுங்கள்” என்று கூறி அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

சுபோத், பாதல் இருவரும் பின் தொடர அரண்மனைக்குச் செல்லும் வழியில்,

“அதற்குள் மக்களுக்கு என் வருகை எவ்வாறு தெரிந்தது சுபோத்?” என்று வினவினான்.

“தற்சமயம் இங்கே மதில்களுக்குக் கூட கண்களோடு , காதுகளும் இருக்கிறது யுவராஜ். எத்தனை கவனமாய் இருந்தாலும் விஷயங்கள் வெளியேறி விடுகின்றன.”

“இங்ஙனம் இருந்தால் ராஜாங்க ரகசியங்கள் எப்படிப் பாதுகாக்கப்படும்?” என்று பிந்துசாரா அதிருப்தியுடன் தலையசைத்தான்.

மௌரியர்கள் காலத்தில் தான் ஆச்சாரியார் சாணக்கியரின் வழிகாட்டுதல் படி சட்டங்கள் உருவாக்கப்பட்டது. அவரின் வழிகாட்டுதலில் நிர்வாகம், குற்றங்களுக்கானத் தண்டனைகள் , நீதிமன்றங்கள், பொருளாதாரம், அந்நிய நாட்டுடன் உறவு , அரசனுக்கான கடமைகள், மக்களுக்கான பொறுப்புகள் என அனைத்துத் துறைகளுக்கான சட்டங்களும் , நிர்வாக அமைப்புக்களும் ஏற்படுத்தபட்டன.

ராஜ்ஜியம் நான்கு மாகணங்களாகப் பிரிக்கப்பட்டது. நான்கு திசைகளிலும் நான்கு நகரங்கள் பொருளாதாரம், அரசியல், அரசு நிர்வாகம் சார்ந்து முக்கிய நகரங்களாகக் கருத்தபட்டன. அவற்றில் உஜ்ஜைன் நகரமும் ஒன்று. எனவே ஏறக்குறைய தலைநகரமான பாடலிப்புத்திரத்தில் நடைபெறும் அனைத்து நிர்வாக முறைமைகளும் இந்நகரத்திலும் பின்பற்றபடும்.

அதன்படி நகரத்தை நிர்வாகிக்க தலைமை அதிகாரியான நகரிக்காவும் அவரின் கீழ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்தனர். செலவீனங்களைக் கண்காணிக்கும் தலைமை அதிகாரி கோபா என அழைக்கபட்டார். அவரின் கீழ் அநேக அதிகாரிகள் பணியாற்றினர்.

யுவராஜ் தர்பார் மண்டபத்திற்குச் சென்ற போது நகரத்தின் முக்கிய அதிகாரிகள் கூடி இருந்தனர். அவன் மண்டபத்தினுள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்

காவலர்கள் “யுவராஜ்க்கு ஜே “ என்ற வாழ்த்தொலி கூற, மற்றவர்களும் அதை எதிரொலித்தனர்.

நகரிக்கா அவரின் சிம்மாசனத்தில் இளவரசனை அமரச் சொல்லிக் கூற, பிந்துசாராவும் அமர்ந்தான். பின் மற்றவர்களை அமரச் சொல்லிவிட்டு,

“மௌரிய இளவரசனான என்னை இங்குள்ள பிரஜைகள் அனைவரும் அறிந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. குருகுலக் கல்வியும், சர்வகலா கல்வியும் கற்று நாடு திரும்பிக் கொண்டு இருந்த நான் ஆச்சாரியார் உத்தரவின் பேரில் இந்நகருக்கு விஜயம் செய்து இருக்கிறேன். பெரியவர்களின் ஆசியும் , பிரஜைகளின் அனுகூலமும் எல்லோரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்” என்றான்.

நகரின் பிரதான அதிகாரியாக நகரிக்கா இருந்தாலும், வயதில் முதிர்ந்த கண்காணிப்பு அதிகாரி எழுந்து,

“நம் பிரஜைகள் மனம் குளிர ஆட்சி செய்யும் சாம்ராட் சந்திரகுப்தர் அவர்களின் புதல்வரும் , ஆச்சாரியாரின் பிரதான சீடருமான இளவரசர் பிந்துசாராவிற்கு உஜ்ஜைன் பிரஜைகள் சார்பாக வாழ்த்துக்களும், என் போன்றோரின் ஆசிகளும் என்றைக்கும் உண்டு யுவராஜ். “ என்றுக் கூறி அமர்ந்தார்.

யுவராஜ் “பிரஜைகள் மனம் குளிர என்றுப் பெரியவர் கூறினார். ஆனால் உஜ்ஜைன் நகர நிலவரம் அவ்வாறு தெரியவில்லையே?” என்றுக் கேட்கவும், மற்றவர்கள் என்ன பதில் கூறுவது என்று சிந்திக்க, கார்மிக்கா எழுந்து தன் கம்பீரக் குரலில்

“யுவராஜ் அவர்கள் ஐயப்படுவது உண்மைதான். நகரத்தில் தற்போது அதிகமான அளவில் குழப்பங்கள் நிறைந்து காணப்பட்டுகிறது” என்று கூறினார்.

“எனில், குழப்பத்தை சரி செய்யாமல் இருப்பது ஏன் ?”

“யார் சரி செய்வது என்பதில் தான் விஷயமே யுவராஜ்?” எனக் கார்மிகா கூறவும். மற்றவர்கள் அவரை முறைத்தனர்.

“தங்கள் பதில் புரியவில்லை ஐயா?”

நகரிக்கா எழுந்து “அவர் உளறுகிறார் யுவராஜ். குழப்பங்கள் இருந்தாலும் இரண்டொரு நாளில் அவை சரி செய்யப்பட்டு விடும். அதற்கு உண்டான காரியங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன” என்று கூறினார்.

“ஓஹ். தாங்கள் எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கூறலாமே” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே , உள்ளே வந்த ஒரு காவலன்,

“யுவராஜ் ! தங்களைக் காண அர்த்த மண்டபத்தில் பிரஜைகள் கூடி இருக்கின்றனர். உடனே தங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள்.” என்றான்.

“என்ன ஒரு ஒழுங்கீனம்? தர்பார் கூட்டம் முடிந்து சந்திப்பதாகத் தானே கூறி இருந்தேன். அதற்குள் கூச்சலிடுவது ஏன்? சட்டத்தை மீற மக்கள் எவ்வாறு கற்றுக் கொண்டார்கள்? “ என்று கோபப்பட்டான்.

அப்போது கார்மிகா எழுந்து “யுவராஜ், தாங்கள் தற்போது பிரஜைகளைச் சந்தித்து விட்டு வருதல் நலம். இல்லை என்றால் கூச்சலும், குழப்பமும் அதிகமாகும். அதை அடக்க முயலும் நம் காவலர்கள் மக்களின் அதிருப்திக்கு ஆளாவார்கள்” என்று கூறினார்.

சரி என்று எழுந்த யுவராஜோடு மற்ற அதிகாரிகள் வர, அவர்களைத் தடுத்த பிந்துசாரா

“என்னோடு சுபோத் மட்டும் வரட்டும்” என்று கூறினார்.

அவர்கள் செல்லவும் மற்ற அனைவரும் கார்மிகாவை முறைத்துப் பார்க்கத் தவறவில்லை. ஆனால் எல்லோருக்கும் உள்ளூர அச்சமும் நிலவியது

அர்த்த மண்டபம் சென்ற யுவராஜ் ஒரு ஆசனத்தில் அமர , பிரஜைகள் வேகமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு முன்னால் வரத் துடித்தனர். அவர்களைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் முயன்றும் இயலவில்லை. சற்று நேரம் பார்த்த இளவரசன் சுபோத்தை அருகில் அழைத்து ஏதோ கூற, அவன் அங்கிருந்த காவலரிடம் இளவரசன் கூறியதைக் கூறினான்.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு காவலன் பறை அடிக்கும் கருவியுடன் வந்து , வேகமாக அடிக்கவும், மக்கள் மத்தியில் சட்டென்று அமைதி நிலவியது.

அந்த சமயம் எழுந்த யுவராஜ்

“மற்ற நாட்டினரை விட நாகரிகத்தில் வெகுவாக முன்னே சென்று கொண்டு இருக்கும் நம் மௌரியப் பிரஜைகள் இன்று செய்துக் கொண்டு இருக்கும் செயல்கள் சரியா மக்களே? “ என்று வினவினான்.

மக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருக்கவும்,

“உங்கள் குறைகளைக் கேட்கத் தான் இங்கே அமர்ந்து இருக்கிறேன் . ஒவ்வொருவராக பொறுமையாக உங்கள் குறைகளைக் கூறுங்கள். “ என்று பிந்துசாரா கூறினான்.

அப்போது கூட்டத்தில் வயது முதிர்ந்த ஒருவர் எழுந்து ,

“யுவராஜ் , அரசர் சார்பில் எங்கள் குறைகளைக் கேட்க வந்து இருக்கும் தங்களுக்கு மிகுந்த நன்றிகள். தங்கள் வயதில் இருக்கும்போது சாம்ராட் அவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அதற்கு பின் இத்தனைக் காலம் அரச குடும்பத்தினரை நான் இந்த எல்லைக்குள் கண்டதில்லை. என்றாலும் எங்கள் வாழ்க்கை நன்றாகவேத் தான் சென்றுக் கொண்டு இருந்தது. அதற்கு ஆச்சாரியார் அவர்களே முக்கியக் காரணம். அவர் அவ்வப்போது நேரில் வந்து கவனித்துக் கொண்டார். ஆனால் முதுமை காரணமாக அவரின் வருகையும் குறைந்துக் காணப்படுகிறது, இவை எல்லாம் மக்கள் மனதில் சேர்ந்துத் தங்களை மௌரியப் பேரரரசு புறக்கணிக்கின்றதோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் உலாவுகிறது” என்று கூறினார்.

இதற்கு பதிலாக “ஐயா, பெரியவரே மக்கள் மனநிலைப் பற்றித் தாங்கள் எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி. மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு ஜீவனும் சாம்ராட் அவர்களுக்கு முக்கியமே. எந்த உயிரும் துன்புறக்கூடாது என்பதே நம் அரசரின் கட்டளை. அதற்காகவே வணவிலங்குகள் பாதுகாப்பு வரை அரசர் கண்காணித்து வருகிறார். தன் மக்களை அவ்வாறு கைவிட்டு விடுவாரா? தங்களுக்கு இப்படி ஒரு ஐயம் வர என்னக் காரணம் ஐயா?” என்று கேட்டான்.

“மக்கள் தற்போது வரிகளால் பாதிக்கப்படுகிறார்கள் யுவராஜ். இங்ஙனம் இருந்தால் மக்கள் செழிப்புடன் வாழ்வது எப்போது? “

“வரிகள் மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தத்தானே தவிர, அவர்களை துன்புறுத்த அல்ல. இதனை அரசர் கவனத்தின் கீழ் கொண்டு சென்று விரைவில் அதற்கு ஒரு தீர்வு காணலாம்”

“அத்தோடு தற்சமயம் நகரில் திருட்டும் , கொள்ளையும் அதிகமாக நடக்கிறது இளவரசே”

“என்ன ? கொள்ளையா ? கொள்ளையார்கள் யார்? இன்னும் அவர்களைப் பிடிக்காமல் காவலர்கள் என்ன செய்கிறார்கள் ? “ என்று கோபமாகக் கூறவும் ,

“காவலர்களா அவர்கள் ? அப்பாவிகளிடத்தில் லஞ்சம் பெற்றுத் தங்கள் வயிறு வளர்க்கத் தான் அவர்களுக்கு பொழுது சரியாய் இருக்கிறது” என்றுக் கூட்டத்தில் ஒரு குரல் வந்தது”.

அதில் இன்னும் கோபமடைந்த பிந்துசாரா , “சுபோத், நகரின் காவல் படைத் தலைவரை நான் சந்திக்க வேண்டும் என்று செய்தி அனுப்பு. தர்பார் கூட்டத்தை இரண்டு நாட்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டு, நான் கூறும் நேரம் ஒவ்வொரு அதிகாரியையும் தனித் தனியாக சந்திக்க ஏற்பாடு செய்” என்று கூறினான்.

பின் மக்களிடம் திரும்பி “மக்களே, உங்கள் அனைவரின் குறைகளையும் விரைவில் தீர்த்துவிட்டுத் தான் நான் தலைநகர் திரும்புவேன், கொள்ளையர்கள் விவகாரமும் விரைவில் தீரக்கபடும். மேலும் இரண்டொரு நாளில் நகர்வலம் வருகிறேன். வேறு ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் அப்போது என்னிடம் கூறலாம். தற்போது அமைதியாகக் கலைந்துச் செல்லுங்கள். “ என்று கூறவும், மக்கள் மீண்டும் “யுவராஜ்ஜிற்கு ஜே “ என்று கூறிவிட்டுக் கலைந்துச் சென்றார்கள்.

எல்லோரும் சென்றபின் தன் மாளிகைக்குச் திரும்பிய பிந்துசாராவோடு சுபோத் மற்றும் பாதல் நின்றனர்.

சுபோத்திடம் “காவல் படைத் தலைவருக்குச் செய்தி அனுப்பினாயா?” என்று வினவ,

“அனுப்பி விட்டேன் யுவராஜ். அவர் நகரின் தென் எல்லையில் காவலர் பயிற்சிக் களத்தில் ஏதோ விவகாரம் என்று சென்று இருப்பதாகத் தகவல் வந்தது. அதைத் தீர்த்து விட்டு நேராக இங்கே வருவதாகக் கூறி இருக்கிறார்”

“ஹம்”

“இளவரசே, காலையில் ஆலயத்தில் பிரசாதம் உண்ட பிறகு தாங்கள் எதுவும் உண்ணவில்லை . காவல் அதிகாரி வருவதற்குள் தங்கள் உணவை முடித்துக் கொண்டால் நலமாக இருக்கும்”

“சரி. உணவை எடுத்து வரச் சொல்” எனவும் , பணியாளரை அனுப்பி வைத்தான் சுபோத். அவன் எடுத்து வந்த உணவு வகைகள் ருசியாக இருந்த போதிலும் , இளவரசன் அதை உணரும் நிலையில் இல்லை. அவனின் எண்ணம் எல்லாம் கொள்ளையர்கள் பற்றியே இருந்தது.

யுவராஜ் உணவை முடித்த சில நாழிகையிலேயே காவல் தலைவர் வந்து இருந்தார். இளவரசன் உத்தரவின் பேரில் உள்ளே செல்லவும், அவரை அமரச் சொல்லி கை காட்டியவன்,

“அந்தர் விம்சகா (காவல் தலைவன் ) ! தாங்கள் இந்நகரின் பொறுப்பேற்று எத்தனைக் காலம் ஆகிறது?” என்று வினவினான்.

“கடந்த பத்து வருடங்களாக நான் இந்தப் பொறுப்பில் இருக்கிறேன் யுவராஜ்”

“இன்றைக்குப் பிரஜைகள் கூட்டம் பற்றிய செய்திகள் தங்களுக்கும் வந்திருக்கும் அல்லவா? அதற்குத் தங்கள் பதில் என்ன ?”

“யுவராஜ், மக்களை நான் குறைக் கூற விரும்பவில்லை. ஆனால் அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை அல்ல என்று மட்டும் கூற விழைகிறேன்”

“எது? கொள்ளை நடக்கவில்லை என்கிறீர்களா?”

“இல்லை. கொள்ளை நடக்கிறது தான். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை”.

“ஏன்? நம் படை வீரர்களை விட பெரிய பலசாலிகளா? இல்லை எண்ணிக்கையில் பெரியவர்களா?”

“தந்திரத்தில் பெரியவர்கள் யுவராஜ்”

“புரியவில்லை “

“ஆம் யுவராஜ் ! அவர்கள் தந்திரசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் மக்களோடும், வீரர்களோடும் கலந்து விட்டார்கள். அவர்களைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை”

“ஏன் பிரிக்க முடியவில்லை? தாங்கள் ஐயப்படும் நபரை விசாரித்தால் உண்மை தெரிந்து விடும் தானே ?”

“அங்குதான் பிரச்சினையே. போர் வீரர்களிடத்தில் ஒருவன் மேல் சந்தேகம் என்று விசாரித்தால், அவனைச் சுற்றி ஒரு குழு உருவாகி, அந்த வீரர்கள் கோஷமிடுகிறார்கள். சரி மக்கள் மத்தியில் சந்தேகத்தின் பேரில் ஒருவனைப் பிடித்தால், மக்கள் சட்டென்று கூடி காவலர்களையோ, அதிகாரிகளையோ எதிர்க்கிறார்கள். “

நீங்கள் கூறுவது மிகவும் ஆபத்தான விஷயம் அந்தர் விம்சகா . நம் மக்கள் காவலர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து இருப்பவர்கள். அவர்கள் நம்பிக்கைக் குலையக் காரணம் என்ன ? அதிலும் சில காவலர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றம் எழுந்து உள்ளதே ? அதற்கு என்ன பதில் ஐயா?”

“அதிலும் அந்த சந்தேகப்படும் நபர்கள் தான் சிக்கியுள்ளனர் இளவரசே. நம் காவலரில் ஒருவனாகச் செயல்படுகிறார்கள். “

“தற்போது என்ன பிரச்சினைக்காகச் சென்று இருந்தீர்கள்?’

“நகரின் தென் பகுதிப் படை வீரகள் தங்கும் இடத்திற்கு இன்றைய உணவிற்கான தானியங்கள் வந்து சேரவில்லை யுவராஜ். அதில் வீரர்கள் சற்றுக் கோபமடைந்து விட்டார்கள். அவர்களுக்கு சமாதானம் கூறிவிட்டு வந்தேன்”

“என்ன கொடுமை இது? நாடு காக்கும் படை வீரர்கள் உணவில் கை வைப்பவன் யார்? எப்படி இது நேர்ந்தது? தானியங்கள் இருப்பை முன்னதாகச் சரிப் பார்ப்பது இல்லையா?”

“இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது யுவராஜ். அவர்கள் இன்னும் தானியங்கள் பிரித்து அனுப்பவில்லை”

“ஏன்?

“தானியங்கள் பொறுப்பாளர் மக்கள் வரியாகக் கொடுக்க வேண்டிய தானியங்களைக் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்”

“தற்போது அவர்களின் உணவிற்கு என்ன ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள் ?”

“மற்ற படை வீரர்கள் பகுதியில் இருந்து தானியங்கள் பெற ஏற்பாடு செய்து இருக்கிறேன். அங்கே அவை வந்து சேர்ந்து சமைப்பதை பார்வையிட்டு விட்டு, அவர்களை உணவு அருந்தவும் அனுப்பி விட்டுத் தான் தங்களைக் காண வந்தேன் யுவராஜ் “

“மிகவும் நல்லது ஐயா. கொள்ளையர்களை முறியடிப்பதற்கான விரிவான திட்டம் ஒன்றை நாளைத் தயார் செய்து விடுவோம். தாங்கள் அதுவரை வீரர்கள் கூடாரங்களை பார்வையிட்டு, மேலும் எந்த சிரமும் அவர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நாளை எப்போது சந்திக்கிறேன் என்பதை சுபோத் தெரிவிப்பான்”

“மிக்க மகிழ்ச்சி யுவராஜ். இந்த இக்கட்டான சமயத்தில் தங்களின் வருகை எனக்கு மட்டுமல்ல, நம் வீரர்களுக்கும் ஒரு நம்பிக்கைக் கொடுத்து இருக்கிறது. மீண்டும் சந்திப்போம் யுவராஜ்” என்றுக் கூறிவிட்டு விடைப் பெற்றுச் சென்றார் அந்தர் விம்சகா.

அவர் சென்றதும் இளவரசன் எண்ணம் எல்லாம் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்றே சென்றது. கதிரவன் மறையும் வரை இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தவன் , பின் தன்னைச் சுத்தபடுத்திக் கொண்டு வந்தான். சுபோத்தை அவனின் இல்லம் அனுப்பி வைத்தவன், நிலவு எழுந்து ஒரு நாழிகைச் சென்றதும், அரண்மனை விட்டு வெளியே வந்தான். அவன் பின்னோடு பாதல் வரவும் அவனைத் தடுத்து விட்டு புரவி கொட்டடி நோக்கி நடந்தான்.

அனேக புரவிகள் அங்கே மேய்ந்துக் கொண்டு இருக்க, சங்கேதக் குரல் மூலம் தேஜாவை அழைத்தான். குரல் கேட்ட அடுத்த நொடி எங்கிருந்தோ பாய்ந்து வந்த தேஜா, இளவரசன் அருகில் வந்து, கணைப்பின் மூலம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அதைத் தடவிக் கொடுத்த இளவரசன், சட்டென்று அதன் மீது ஏறி “செல்லலாம் தேஜா” என்றான். முதலில் வேகமாகச் செல்ல ஆரம்பித்தத் தேஜா , இளவரசன் அதன் கழுத்தில் கொடுத்த அழுத்ததில் , சத்தமில்லாமல் சென்றது. அதைக் கண்ட இளவரசன் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

நகரின் தென் கோடி நோக்கிச் சென்ற இளவரசன், சில நாழிகைகளில் மகாகாளி ஆலயத்தை வந்தடைந்தான். அவன் எண்ணியது போல அங்கே மக்கள் நடமாட்டமே இல்லை. மாலை ஆலயத்தில் பூஜை முடிந்ததற்கான அடையாளங்கள் இருந்தாலும், அதற்கு மேல் யாரும் வந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நன்றாகத் தெரிந்தது.

இளவரசன் ஆலயத்தின் வெளிக் கதவு அருகே நின்று இருக்க , அடுத்த சில நிமிடங்களில் புரவி ஒன்று வரும் அரவம் கேட்டது. கதவின் நிழல் தரையில் விழுந்ததால், விளக்கு வெளிச்சமும் எதிர்புறமாக இருந்ததால் இளவரசன் நிற்பது தெரியவில்லை.

புரவியில் அமர்ந்து இருந்தவன் யாரின் வரவையோ எதிர்பார்த்து கோவிலின் மற்றொரு புறம் வழித்தடத்தைப் பார்த்து இருந்தான். அவனது புரவியோ அவனின் நண்பனை அறிந்தார் போல கணைத்து , இளவரசன் பக்கம் சென்றது. அதைத் தடுக்க எண்ணும்போது அந்தப் பக்கம் கவனித்தவன், புரவியை விட்டு இறங்கி வேகமாக இளவரசன் அருகில் சென்றான்.

“வணங்குகிறேன் யுவராஜ்” என்று பணிந்து எழுந்தான்.

“உனக்காகத் தான் காத்து இருக்கிறேன் ரதா “ என்றான் இளவரசன்.

-தொடரும்-

உங்கள் கருத்துக்களைப் பதிவிடக் கீழே உள்ள லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்

 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் – ஐந்து​

மஹாகாளி ஆலயம் அடர்ந்த வனத்தின் அருகில் இருப்பதால், ஆலயத்தில் இவர்கள் நின்று இருக்கும் பகுதி அத்தனை வெளிச்சமாயில்லை. என்றாலும் இன்னும் இருள் அடர்ந்து இருக்கும் பகுதிக்குள் சென்றனர்.

தனக்காகக் காத்து இருந்த யுவராஜனைக் கண்டு ,

“மன்னிக்க வேண்டும் யுவராஜ்! சில விவரங்களைச் சரிப் பார்த்து விட்டு வர சற்றுத் தாமதமாகி விட்டது. “ என்றான் ரதா.

“உன்னை அறிவேன் ரதா. காரணம் இல்லாமல் தாமதம் செய்து இருக்க மாட்டாய் “ என்றவன், “புரவிகளை சற்று நேரம் வனத்திற்குள் அனுப்பி விடு. நாம் அதோ அந்த மரத்தின் அடியில் நாம் உரையாடலாம். “ என்று கூற, ரதா அவன் உத்தரவை நிறைவேற்றச் சென்றான்.

ரதா மீண்டும் இளவரசன் அருகில் வர, இருவரும் அங்கிருந்த மரத்தை நோக்கிச் சென்றனர். ஆண்டாண்டு காலமாக செழித்து வளர்ந்து இருந்த அந்த மரத்தின் அடிப்பாகம் அநேக வேர்களை பூமியின் மேற்பரப்பில் படர விட்டு இருந்தது. அதில் சற்று உயரமும், பருமனுமாக இருந்த ஒரு வேரில் யுவராஜ் அமர்ந்தான். அதன் அருகில் மற்றொரு வேரைக் கைகாட்டி ரதாவையும் அமரச் சொன்னான் இளவரசன். அதுவே ஒரு ஆசனம் போல இருந்தது.

“ஹம்.. சொல் ரதா. இந்த நகரில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி என்னத் தெரிந்துக் கொண்டாய்? “

“யுவராஜ் , முதலில் தங்களிடம் ஒரு விஷயம் தெளிவு பெற வேண்டும்”

“என்ன சொல்?”

“ஆச்சாரியார் நம்மை இந்நகருக்குச் செல்லும்படி கட்டளையிட்ட போது , தங்களுக்கும் இந்நகரில் ஆபத்து இருக்காலம் என்று தானே கூறினார். எனில் தாங்கள் இவ்வாறு மக்களை சந்திப்பது எல்லாம் சரியாக வருமா?“

“ஆபத்து எவ்வாறு வரும்?”

“தாங்கள் பணியாளர்களைக் கூட நம்ப வேண்டாம் என்று ஆச்சாரியார் கூறினார் அல்லவா?”

“பணியாளர்கள் அனைவரையும் தேர்ந்தெடுப்பவர் ஆச்சாரியாரின் விசுவாசிகள் தானே? அப்படி என்றால் ஆபத்தை உருவாக்குவதே ஆச்சாரியார்தானே ?”

“இல்லை யுவராஜ். தாங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டீர்கள். பணியாளர்களை எளிதாக மிரட்டியோ அல்லது வேறு வழியிளோ மடை மாற்றி விடலாம். அதை நம் எதிரிகள் செய்யக்கூடும் என்று ஆச்சாரியார் அஞ்சுகிறார்”

“இன்றைக்கு புவனத்தில் அதிக அளவிலான பரப்பளவைக் கொண்டது நம் மௌரிய சாம்ராஜ்ஜியம். நமக்கு எதிரிகள் யார் இருக்கப் போகிறார்கள்? துரோகிகள் வேண்டுமென்றால் இருக்க வாய்ப்பு உள்ளது”

“அத்தனை அலட்சியமாய் இருக்க வேண்டாம் யுவராஜ். ஆச்சாரியாரின் கணிப்பில் நிச்சயம் தவறு இருக்க வாய்ப்பு இருக்காது”

“ம்ச். உன் ஆச்சாரியாரின் புராணம் போதும். உன்னிடத்தில் ஒப்பட்டைத்த வேலை ஆயிற்று ரதா?”

“மன்னித்து விடுங்கள் யுவராஜ். தங்களைக் குறித்தக் கவலையில் பேசி விட்டேன். இனி, யுவராஜ் நான் விசாரித்து அறிந்த வரைக்கும், மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் யாருக்கும் மக்கள் கட்டுப்பட மறுக்கிறார்கள். இதைச் சரி செய்ய வேண்டியவர்களோ மக்களிடம் இன்னும் விரோதத்தை வளர்க்கிறார்கள். “

“எனக்கும் அதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இவற்றில் உள்ளே யார் இருக்கிறார்கள் என்றுத் தெரிந்ததா?”

“ஒரு யூகம் இருக்கிறது யுவராஜ். நமது அண்டை நாடான கலிங்கத்தில் இருந்து ஒற்றர்கள் ஊடுருவி இருக்கலாம் என்று தோன்றுகிறது”

“கலிங்க நாடா? நம் உஜ்ஜைன் மாகாணத்தின் கால் பகுதிக் கூட வராத தேசம் நம்மை எதிர்க்கிறதா? என்னால் நம்ப முடியவில்லையே. “

“எனக்கும் அவர்களால் எவ்வாறு முடியும் என்ற ஐயம் இருந்தது யுவராஜ். ஆனால் சற்று நேரம் முன் நான் கண்ட ஒரு காட்சி என் கூற்றை உறுதிப்படுத்துவது போல இருந்தது.”

“என்ன கண்டாய்?

“இன்றைக்கு அர்த்த மண்டபத்தில் தாங்கள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்துக் கொண்டு இருந்த போது நானும் அங்கே தான் இருந்தேன். அப்போது ஒருவன் எழுந்து கண்டிக்க வேண்டிய காவலர்களே லஞ்சம் வாங்கிக் கொண்டு கவலைப்படுவது இல்லை என்று கூறினான் அல்லவா?”

“ஆமாம். “

“அத்தனைக் கூட்டத்தில் அந்த முதியவர் பேசிய பிறகு யாரும் பதில் பேசவில்லை. இவன் மட்டும் பேசுகிறானே என்ற ஐயத்தில், அவனைப் பின் தொடர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் மக்களோடு நின்றவன், சற்று நேரத்தில் நம் தென் திசை போர் பயிற்சிக் கூடாரத்திற்குள் சென்றான். வீரன் அல்லாத ஒருவன் அங்கே செல்ல வேண்டிய அவசியம் என்ன ? என்று சிந்தித்துக் கொண்டு இருந்த போது , அவன் படை வீரர் உடையோடு நம் அந்தர் விம்சகாவின் அருகில் நின்று கொண்டு இருந்தான். “

“என்ன? எனில் அவர்தான் இந்தக் கிளர்ச்சிகளுக்கு சூத்திரதாரியா?”

“இல்லை யுவராஜ். அவர் அவனை படை வீரன் என்று தான் எண்ணிக் கொண்டு இருந்தார். “

“பின் என்ன நடந்தது?”

“அவர் தங்களைக் காணச் செல்லவும் , அவன் அந்தக் கூடாரம் விட்டு சாதாரண உடையில் வெளியே வந்து இந்த மஹா காளி ஆலயத்தின் மற்றொரு புறம் குளக்கரைத் தோப்பிற்குள் செல்வதைப் பார்த்தேன்”

“அவனைப் பின் தொடர்நது செல்லாமல், என்ன செய்துக் கொண்டு இருந்தாய்?”

“தங்களைக் காண வர வேண்டும் என்பதோடு, அந்தத் தோப்பில் அவனோடு எத்தனை பேர் இருக்கிறார்களோ ? தகுந்த முன்னெச்சரிக்கை இல்லாமல் அந்த இடத்தில் ஒற்றறிவது அறிவார்ந்த செயல் இல்லை என்று எண்ணித் திரும்பி விட்டேன்”

ரதாக் கூறியதைக் கேட்ட பிந்துசாரா,

“எனில், நாம் இங்கிருப்பது தற்போது மிகவும் ஆபத்து. கிளம்பு” என்றுக் கூறியவன் , தேஜாவை சங்கேதக் குரலால் அழைத்தான்.

அவன் குரல் கேட்ட அடுத்த நொடி , தேஜா அருகில் வந்து நின்றது. ரதாவின் புரவியும் பின்னோடு வர, இருவரும் புரவியில் தாமதமின்றி ஏறினர்.

அவர்கள் புரவியை வேகமாகச் செலுத்த, அந்த காளி கோவில் வாயில் அருகே வரும்போது எங்கிருந்தோ சிறு கத்தி ஒன்று யுவராஜின் கண்கள் அருகே வந்தது.

அந்த சமயம் தேஜாவைச் சட்டென்று ஒரு அடி பின்னால் இழுக்க , அந்தக் கத்தி இளவரசரைத் தாக்கவில்லை.

ரதா திகைத்து அருகில் செல்ல முயற்சிக்கும் முன், அந்தக் கத்தியின் கைப்பிடி இளவரசனின் கைகளில் இருக்கக் கண்டான். கண் சிமிட்டும் நேரத்தில் அந்தக் கத்தியை கோவில் வாயில் கதவை நோக்கி எறிய, ஒருவன் “ஹா” என்ற கூச்சலோடு கீழே விழுந்தான்.

அதைப் பார்த்து ரதா வியந்து நிற்க, இளவரசனோ ,

“ஹ. ஹ. “ என்று சிரித்தவன், “பிறக்கும் போதே எமனை வென்றவன் பிந்துசாரா” என்றபடி அந்தக் கத்தியை மீண்டும் தன் கையில் எடுத்தார்.

“வா ரதா. வேகமாகச் செல்லலாம். “ என்றபடி காளி கோவிலின் மற்றொரு வாசலை நோக்கி வேகமாகச் சென்றார்.

“யுவராஜ், அந்தக் கத்தியை அங்கேயே விட்டு விட்டு வந்திருக்கலாமே?” என்று வினவினான் ரதா.

“இந்தக் கத்தியின் பிடியைப் பார்” என்றார் பிந்துசாரா.

அதில் வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. எனினும் அவசியம் இல்லாமல் இளவரசர் கூறியிருக்க மாட்டார் என்ற எண்ணத்தில் மீண்டும் அதை உற்றுக் கவனித்தான். பின் இளவரசரின் முகம் காண, அவரின் முகமும் ரதாவின் யூகம் சரியே என்பது போல இருந்தது.

“ஆம் ரதா. உன் சந்தேகங்கள் சரியே என்பதற்கான விடை இந்தக் கத்தியின் பிடியில் தான் உள்ளது. “

“கத்தியின் பிடியில் லிங்க முத்திரை இருக்கிறது”

“கலிங்க நாட்டின் சின்னம் லிங்க வடிவமே”

“காயமடைந்தவனை இன்று எங்கும் பார்த்து இருந்தாயா?”

“இல்லை யுவராஜ்”

“அப்படி என்றால் இன்னும் இவனைத் தொடர்நது வீரர்கள் வரக்கூடும். இந்த இடத்தை விட்டுக் கிளம்புவது உசிதம்” என்றார் பிந்துசாரா.

“சரி யுவராஜ். ஆனால் இவனைத் தொடர்நது யாரும் வர வாய்ப்பு இல்லை”

“ஏன்?”

“இவனின் குறி தாங்கள் அல்ல யுவராஜ். “

இளவரசன் கேள்வியோடு அவனை நோக்கவும்,

“இவன் நாம் யார் என்று அறிந்து நம்மைத் தாக்கவில்லை. யாரோ வழிப்போக்கர் அல்லது படைவீரர் என்று எண்ணி இருக்கிறான். அவனின் உடல்மொழி மௌரியர் யுவராஜாவைக் கொல்லத் துணியும் உடல் மொழி இல்லை. “

“உண்மைதான். என்றாலும் இவன் இந்த இடத்திற்கு வந்த நோக்கம் தெரியவில்லையே “

“நான் இன்றைக்கு நகரில் சுற்றி வந்த போது பல கதைகள் கேள்விப்பட்டேன் யுவராஜ். அதில் ஒன்று இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைக்க வழிப்பறிக் கதைகளும், அவற்றோடு சில துர்சக்திகளைப் பற்றிய வதந்திகளையும் பரப்பி விட்டுள்ளார்கள். இதனால் ஒற்றர்களின் நடமாட்டம் தடையில்லாமல் நடக்கிறது. அப்படி வழிப்பறி செய்ய அனுப்பட்டவனாக இருக்கலாம். நாளை காலையில் தான் இவனைத் தேட வாய்ப்புகள் அதிகம். “

“எப்படி இவை அனைத்தும் உன் ஆச்சாரியார் கவனத்திற்கு வராமல் இருக்கிறது?

“வந்திருக்கிறது யுவராஜ். அதனால் தான் நம்மை இங்கே அனுப்பி இருக்கிறார்”

அதற்கு பதில் சொல்லாத பிந்துசாரா, சற்று நேரம் புரவியை மெதுவாக நடக்கவிட்டபடி சிந்தனையில் ஆழந்தான்.

பின் “ரதா, நீ நாளையும் உன் உறவினர் இல்லத்தில் தங்கி, இன்று கூட்டத்தில் பேசியவன் வேறு எங்கு எல்லாம் செல்கிறான் என்று கவனி. அதனோடு ஊருக்குள் இந்த வதந்திகளை எல்லாம் பரப்பியவர் யார் , எப்படி பரப்பபட்டது என்றும் தெரிந்துக் கொள். இன்று போல அல்லாமல், நாளை நள்ளிரவு நேரத்தில் சந்திக்கலாம். இன்றைக்கு நாம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த மரத்தின் அருகே நேராக வந்துவிடு.”

“இன்று விழுந்து கிடப்பவனிடம் யார் வந்தார்கள் என்று அறிய முற்படுவார்கள் அல்லவா?”

“ஆம். ஆனால் அவனுக்கு நாம் யார் என்று தெரியாது தானே. யாரோ இருவர் என்று தான் கூறுவான். என்றாலும் சற்றுக் கவனமாகவே இரு”

“உத்தரவு யுவராஜ். தாங்களும் கவனமாக இருங்கள். மாளிகையில் யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம்.”

சரி என்று தலையைத்த இளவரசன் முதலில் கிளம்ப, ரதா சற்று நேரம் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

பின் இறந்து கிடந்தவனின் அருகில் சென்று அவனை ஆராய, அவனிடத்தில் சில பொருட்கள் கிடைக்க, அவற்றை நன்கு ஆராய்ந்தான். சிறு யோசனையில் நாளை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன் பின் தன் உறவினர் இல்லம் நோக்கிச் சென்றான்.

நள்ளிரவில் யாரும் அறியாமல் மாளிகைக்குத் திரும்பிய பிந்துசாரா , ரதா கூறியவைகளைப் பற்றியே சிந்தித்தான். மறுநாள் செய்ய வேண்டியவைகளை வரிசைப்படுத்தி விட்டு, நித்திரை கொண்டான்.

மறுநாள் உதயத் தாரகையின் ஒலியில் கண் விழித்தவன், குருகுலத்தில் கற்றுக் கொண்டபடி சூரிய நமஸ்காரம் செய்த பின், முதல் நாள் போல மஹா காலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றான். அங்கிருந்து நேராக தென் திசை போர் கூடாரம் நோக்கிச் செல்லும்போது அந்த வழியில் அழகான சிறு ஓடை தென்பட்டது.

காலைக் காட்சிகளாக பறவைகளும், பசுக்களும் வந்து நீர் அருந்தி கொண்டிருக்க, அதில் சில யானைகளும் கூட சுகமாக நீராடிக் கொண்டு இருந்தது.

அதிலும் மௌரிய நாட்டின் செல்வமான மயில்கள் அங்கு ஏராளமாகத் துள்ளி விளையாடின. அதைக் காண கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சிப்ரா ஆற்றின் செழிப்பான கிழக்குக் கரையிலிருந்து உழவுத் தொழிலுக்காகவும், நீர் ஆதாரத்திற்காகவும் நகருக்குள் கால்வாய் திருப்பி விடப்பட்டு இருந்தது. அதில் இந்த சிறு ஓடை வாயில்லா ஜீவன்களின் தாகத்திற்காக உருவாக்கப்பட்டு இருந்தது. அருகிலேயே சிறு அளவிலான மேய்ச்சல் நிலங்களும் இருக்க, நகரில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளை இங்கே மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள்.

இப்படி ஒரு அமைப்பை எல்லாம் ஏற்படுத்தியது ஆச்சாரியார் என்பதும் அறிவான். சந்திரகுப்த மௌரியர் இளமையில் காடுகளில் வளர்ந்தவர் என்பதால் இயல்பாகவே விலங்குகளிடத்தில் பிரியம் அதிகம். அதனால் அவற்றின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

அவரின் அந்த எண்ணம் தெரிந்தோ அல்லது இயல்பிலேயே அவரிடத்திலும் கருணை இருக்குமோ , ஆச்சாரியார் இந்த மாதிரி முன்யோசனைகளும், அதைச் செயல்படுத்தும் முறைகளையும் வடிமைத்துக் கொடுத்து இருந்தார். அதை அவ்வப்போது கண்காணிக்கவும் செய்கிறார் என்பது இந்த ஓடையின் பராமரிப்பில் தெரிந்தது.

பிந்துசாரா அந்த ரம்மியமான சூழ்நிலையை அனுபவிக்க எண்ணி, தன் தேஜாவை விட்டு இறங்கினார். அதுவும் துள்ளிக் குதித்து ஓட , அங்கே இருந்த தன் இன நண்பர்களோடு உரையாடச் சென்றுவிட்டது போல் என்று எண்ணிச் சிரித்தார் யுவராஜ்.

முந்தைய நாள் இரவில் பிந்துசாராவிற்கு அவரின் தாயின் நினைவு அதிகமாக வந்தது. அதன் தாக்கம் காலையிலும் இருக்க, தற்போது மனதில் ஒரு அமைதி குடிக்கொண்டது.

சற்று நேரம் அந்த விலங்குகளைப் பார்வையிட்ட பின் ஓடையில் இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்தார். தேஜாவோ அவரின் அருகில் நின்று கொண்டு இருந்தது.

அப்போது அவரின் பின்பக்கமாக “லக்ஷ்மி” என்று மெல்லிய பெண் குரல் கேட்டது. ஏனோ அந்தக் குரல் மெல்லிய பூங்காற்றாக வருட, அதைக் கண் மூடி அனுபவித்தார்.

அந்த பெண் அழைத்த லக்ஷ்மி இந்தக் கூட்டத்தில் யார் என்று தேட, அழகான வெண்ணிற பசு ஒன்று மெதுவாக நடந்து செல்வது அவர் பார்வையில் பட்டது.

லக்ஷ்மி “மா” என்று குரல் கொடுக்கவும்,

“இன்னும் எத்தனை நேரம் இந்த நீரில் ஆடுவாய் லக்ஷ்மி? தந்தை பூஜைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். வா “ என, அது மீண்டும் “மா” என்று கத்தியது.

“போதும். உனக்கு வர வர வெளியில் சுற்றும் எண்ணம் அதிகம் ஆகி விட்டது. இனியும் இப்படியே செய்தாய் எனில் , உன் பிள்ளை கிருஷ்ணணை உன்னோடு அனுப்பி விடுவேன். அவனின் சேட்டைகளைப் பார். அப்போது தான் என் கஷ்டம் உனக்குப் புரியும்” என்று கூறினாள்.

“அடேயப்பா . பெரிய தண்டனையாக இருக்கிறதே. ஆனால் பிள்ளையின் சேட்டையைத் தாய் ஒருநாளும் கஷ்டமாக எண்ண மாட்டாள்” என்று கூறியபடி அந்தப் பெண்ணை நோக்கிப் பிந்துசாரா திரும்ப, அந்த இடத்தில் ஓர் ஆணின் குரலை எதிர்பார்க்காத அந்த பெண் , சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

பிந்துசாரா அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது அவளின் பின்புறம் மட்டுமே தெரிய, தற்போது இவள் தான் மஹாகாலேஸ்வரர் சன்னதியில் பாட்டுப் பாடியவளோ என்று தோன்றியது.

“பெண்ணே. நீதான் நேற்றைக்கு ஈசனின் சன்னதியில் பாடினாயா?” என்றுக் கேட்க, அவளோ ஒரு நிமிடம் தயங்கிவிட்டு , பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பதில் கூறாமல் இருக்கவும், மீண்டும் “உன் பேச்சு வார்த்தை எல்லாம் வாயில்லா ஜீவன்கள் மட்டுமோடு தானா? “ என்றவன் , “அது சரி. அவைகள் தானே உன்னை மறுத்துப் பேசாது” என்று மீண்டும் ஏளனம் செய்ய, அந்தப் பெண் வேகமாகச் சென்று விட்டாள்.

“பெண்ணே, பெண்ணே .. உன் பெயராவது சொல்லிவிட்டுப் போ “ என, அதற்கும் பதில் இல்லை. அவள் கூப்பிட்டவுடன் சென்ற லக்ஷ்மியின் அருகில் வந்த இளவரசர் “லக்ஷ்மி , இந்த முறையும் உன் தோழியின் முக தரிசனம் கிடைக்கவில்லை. “ என்று அதன் கழுத்தில் தடவிக் கொடுத்தார்.

பின் அதைத் தட்டி விட, அதன் தோழி சென்ற பாதையில் தானும் சென்றது.

அந்தப் பெண்ணின் பேச்சில் பிந்துசாரவின் மனதிற்குள் இதமான உணர்வு தோன்ற, தன் வேலைகளைத் தொடர புறப்படலானார்.

தேஜா அருகில் வரவும் , அதன் மேல் ஏற அதுவோ லக்ஷ்மி சென்ற பக்கம் செல்ல ஆரம்பித்தது. அதைக் கண்ட பிந்துசாரா,

“தேஜா, இது என்ன சேட்டை?” என்றார். ஒருவிதமாக தேஜா கனைக்க ,

“ஹ ஹ. தற்போது அந்தப் பெண்ணின் பின்னால் செல்ல நேரமில்லை. அதை விட முக்கியக் கடமைகள் இருக்கின்றன. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது எதிர் திசையில் செல்” எனக் கூறவும், அரை வட்டம் அடித்து வந்த பாதையில் தென் திசை போர் கூடாரம் நோக்கிச் சென்றது தேஜா.

அங்கே இவர் செல்லும்போது கூச்சலும் , குழப்பமுமாக இருந்தது.

ரதா பின் தொடர்நது சென்ற அந்தக் கூட்டத்தில் ஒருவன் , சுபோத் மாளிகையில் நின்று இருந்தான்.

முந்தைய நாள் முதல் இளவரசனோடு மட்டுமே இருந்த சுபோத்தை இவன் சந்திக்கிறான் என்றால், ஆச்சாரியார் கூற்றில் உண்மை இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. அவரிடத்தில் ரதாவிற்கு சந்தேகம் எதுவும் கிடையாது என்றாலும், அவர் எந்த அளவிற்கு விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்று புரிந்து கொண்டான். சுபோத் மாளிகைக்குள் செல்ல ஏதும் வழி இருக்கிறதா என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போதே , அந்த ஒருவன் மீண்டும் வெளியில் வந்தான்.

அவனைப் பின் தொடர்ந்த ரதா, அவன் ஒரு சத்திரத்திற்குள் செல்ல, ரதாவும் வழிப்போக்கன் போல உள்ளே சென்றான். அந்த சத்திரப் பொறுப்பாளரிடம் தங்கும் இடம் பற்றிய விவரம் கேட்டுக் கொண்டு இருந்த போது, அந்த ஒருவனோடு மற்றும் ஒருவன் வெளியில் வந்தான்.

அவனைக் கண்டதும் ரதா இவருக்கு இங்கு என்ன வேலை என்று சிந்தித்தான்.

-தொடரும் -

உங்கள் கருத்துக்களை இந்த லிங்க்கில் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்

 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் - ஆறு​


இளவரசர் பிந்துசாரா தென்திசை போர் பயிற்சி கூடாரத்திற்குள் செல்லும் போது அங்கிருந்த வீரர்கள் அவர்களின் நாயக்கிடம் (தளபதி) ஏதோ முறையிட்டுக் கொண்டிருந்தனர். பார்க்கப் பேசுவது போல தெரிந்தாலும், அருகில் நெருங்க நெருங்க வாக்குவாதம் என்று தோன்றியது.

பெரிய மைதானம் போன்ற இடத்தில் முள் வேலியிட்டு , உள்ளே இடைவெளி விட்டு துணியாலான கூடாரங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. வீரர்கள் எந்த இடம், நேரம் என்றாலும் தங்குவதற்கும் , அதே சமயம் இடம் விட்டு இடம் மாற எளிதாகவும் இருக்க இவ்வகையான கூடாரங்களையே பயிற்சி காலத்திலும் பழகிக் கொள்வார்கள்.

அந்த முள்வேலியின் அருகிலேயே தன் வெண்ணிற புரவி தேஜாவை விட்டு விட்டு இளவரசர் நடந்து கூடாரத்திற்குள் சென்றார். வீரருக்கு உண்டான ஆடை மட்டுமே அணிந்து இருந்த இளவரசர், அவரின் அந்தஸ்திற்க்கு ஏற்ற ஆபரங்கணங்களோ, அணிகலனோ அணிந்திருக்கவில்லை.

இடையில் ஒரு நீண்ட வாள் மட்டும் இருக்க ஏதோ பதவியில் இருப்பவர் என்ற தோற்றத்திலேதான் இருந்தார். அந்தப் பயிற்சிப் பாசறையில் இருந்தவர்கள் அவரை நேரில் பார்த்தது இல்லை என்பதால், அங்கே அங்கே சிலர் இளவரசர் பாசறைக்குள் வந்ததைக் கவனித்து இருந்தாலும் தடுக்கவில்லை.

இத்தனை முக்கியமான இடம் , யார் வேண்டும் என்றாலும் வந்து செல்வது போல இருப்பது நல்லதற்கு அல்லவே என்ற கோபம் வந்தது.

இன்னும் உள்ளே செல்லச் செல்ல வீரர்களின் அணிவகுப்பு நடக்கும் இடம் அருகே சென்றப்போது அநேக வீரர்கள் அங்கிருந்த நாயக்கைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்தனர்.

அந்தக் கூட்டத்திற்குள் ஒருவனாக இளவரசர் ஊடுருவி செல்ல, யாரோ வீரன் என்று நினைத்து அவருக்கு வழிவிட்டப்படி மற்ற வீரர்கள் நின்று இருந்தனர்.

கூட்டத்தின் மையப்பகுதி அருகே வரும்போது நாயக்கிடம் மற்றவர்கள் பேசுவதுத் தெளிவாகக் கேட்டது.

“நாயக் , எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள். இப்படிப் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? பயிற்சிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் இல்லை. பாதுகாப்பு கவசங்கள் இல்லை. இவை எல்லாவற்றையும் விட உணவு கூட குறைவான அளவு என்றால் எங்களால் எப்படி பயிற்சியில் ஈடுபட முடியும்?”

அதற்கு நாயக் “வீரர்களே! இங்கே நானும் உங்களோடு தான் இருக்கிறேன். நிர்வாகத்தினுள் என்ன குளறுபடி என்று புரியவில்லை. அதிலும் கடந்த சில நாட்களாகத் தான் இப்படியான விஷயங்கள் நடக்கிறது. அந்தர் விம்சகா நேற்றைக்கு விரைவில் அனைத்தும் சரி செய்து விடுவாதாகக் கூறி விட்டுச் சென்று இருக்கிறார். நம்பிக்கையோடு பொறுத்து இருங்கள்” என்று பதில் கூறினார்.

“அந்தர் விம்சகா கூறியது ஒரு புறம் இருக்கட்டும். மௌரிய இளவரசர் நம் நகருக்கு விஜயம் செய்து இருக்கிறார் அல்லவா? அவரை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். அவரிடத்தில் எங்கள் குறைகளை முறையிட்டுக் கொள்கிறோம்”

“அவர் என்ன காரியமாக விஜயம் செய்து இருக்கிராரோ ? நம் இஷ்டப்படி அவரைச் சந்திக்க இயலாது. “

“இளவரசர் எல்லோருக்கும் பொதுவானவர். ஓரிடத்தில் விஜயம் செய்தார் எனில் , எல்லாத் தரப்பு மக்களையும் தான் அவர் சந்திக்க வேண்டும். அதிலும் எங்களைப் போன்ற நாட்டைப் பாதுக்காக்கும் வீரர்களுக்கு அரச மரபினர் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். “ என்று ஒருவன் கடுமையாகப் பேச, இளவரசருக்கு மிகுந்தக் கோபம் வந்தது.

ஆனால் அதற்கு வேறு ஒரு வீரன் “உணர்ச்சி வசப்படாதே வீரனே. நாயக் கூற்றில் உண்மை இல்லை. இளவரசர் நேற்றைக்கு மக்களைச் சந்தித்து இருக்கிறார். அதோடு அந்தர் விம்சகாவும் நம் நிலையை எடுத்துக் கூறியிருக்கிறார். நாம் சற்றுப் பொறுத்து இருந்தால் அவரே நம்மைச் சந்திக்க வரலாம். அல்லது நாம் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கலாம்” என்றான்.

“எனக்கு அந்த நம்பிக்கை இல்லை” என்று முதலாமாவன் கூறும் போது,

“இரு நகரங்களுக்கு இடையில் இருந்த சிறு ராஜ்ஜியத்தை , இரு சமுத்திரங்களை எல்லையாகக் கொண்ட ராஜ்ஜியமாக மாற்றியது உங்களைப் போன்ற வீரர்கள்தான். அப்பேற்பட்ட வீரர்களை பேரரசரோ அல்லது அவரின் வாரிசுகளோ என்றைக்கும் கைவிடாது வீரர்களே” என்று குரல் கேட்கவும், யார் எனத் திரும்பிப் பார்த்தனர்.

அப்போது அவர் அருகில் இருந்த வீரன் , அவரை உற்றுப் பார்த்தப் பின் இளவரசர் எனக் கண்டு கொண்டான். அடுத்த நொடி

“மௌரிய யுவராஜ்க்கு ஜே “ என்று கோஷமிடவும், சட்டென்று மற்றவர்கள் வழிவிட்டு ஒதுங்கினர். பின் மற்றவர்களும் கோஷமிட, இளவரசர் கூட்டத்தின் முன் பகுதிக்கு வந்தார். அப்போது ஒருவன் கொம்பு ஊத , வீரர்கள் சடசடவென்று அணிவகுத்து நின்றனர். அது அவர்களுக்கான குறிப்பொலி. அதைக் கண்ட இளவரசருக்கு பெருமிதமாக இருந்தது.

எத்தனை குழப்பங்கள் இருந்த போதிலும் நம் வீரர்கள் கடமையில் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கை வந்தது. அதே சமயம் அவர்களின் குறை தீர்ப்பது தன் கடமை என்று எண்ணியவர்,

“நாயக் , இவர்களின் குறைகளைக் தீர்ப்பது அவசியம். வீரர்கள் இல்லையேல், நாட்டு மக்கள் பாதுகாப்போடு வாழ்வது இயலாது. இனி எந்த நேரமானாலும் என்னைச் சந்திக்க விரும்பும் வீரர்களுக்குத் தனி அடையாள ஓலை முறை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து விடுங்கள். அந்த ஓலைக் கொண்டு வருபவனை , மாளிகையில் யாரும் தடை செய்ய மாட்டார்கள். அதோடு அதைப் பற்றிய என் உத்தரவையும் ஓலையாக்கி அத்தனை அதிகாரிகளுக்கும் அனுப்பி விடுங்கள். இது இங்கு மட்டுமல்ல, எல்லா போர்ப் பாசறைகளுக்கும், போர் வீரர்களுக்கும் பொருந்தும். இது என்னைச் சந்திப்பதற்கான நடைமுறை மட்டுமே. சக்கரவர்த்திக்கோ , மற்றவர்களைகக்கோ இது பொருந்தாது. என் மேல் நம்பிக்கை இருந்தால் , வீரர்கள் இந்த ஏற்பாட்டை ஏற்று , எந்நேரமும் என்னைச் சந்திக்க வரலாம்” என்று கூறினார்.

அவர் கூறி முடிக்கவும் வீரர்கள் மத்தியில் இருந்து , யுவராஜ்க்கு ஜே என்ற முழக்கங்கள் கேட்டன.

பின் அவர்களை அமைதிப் படுத்திய இளவரசர்,

“வீரர்களே , உங்களோடு நானும் போர் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு தயாராகுங்கள்.” எனவும், வீரர்கள் “ஜே” கோஷத்துடன் தங்கள் ஆயுதங்களை சரி பார்த்து வைப்பதில் கவனத்தைச் செலுத்தினர்.

அதற்குள் நாயக்கிடம் “இன்னும் சில நாழிகைகளுக்குள் இங்கு இருக்கும் அனைவருக்கும் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களும், ஆயுதங்களும் அதற்குரிய சேமிப்பு இடங்களில் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். அதை செய்து முடிக்க வேண்டியது கோபா மற்றும் காரணிக்காவின் பொறுப்பு என கட்டளை ஓலை எழுதி எடுத்து வாருங்கள். என் முத்திரை வைத்ததும் அதை அவர்களிடம் சேர்க்க வேண்டியது தங்கள் பொறுப்பு. “ என்று விட்டு தன் வாளைச் சரிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஆயுதக் கிடங்கில் தனக்குத் தேவையான ஆயுதங்களைப் பார்வையிட்டார்.

இளவரசரின் குரலும், அவரின் முகத்தில் தோன்றிய கடினத் தன்மையும் கண்ட நாயக் , பதில் ஏதும் பேசாமல் அவர் உத்தரவை நிறைவேற்றச் சென்றார்.

வீரர்கள் அணிவகுத்து நிற்க , அவர்களைப் பார்த்த பிந்துசாரா,

“வீரர்களே , நான் தற்போது ஒவ்வொரு ஆயுதங்களையும் எடுத்துக் கொள்கிறேன். அந்த அந்த ஆயுதங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என்னோடு சண்டையிடலாம். இருவரில் ஒருவரின் ஆயுதம் பறிக்கபடும் போது போட்டி முடியும். தயாரா?” என்று வினவினார்.

அவரின் கூற்றில் வீரர்கள் “யுவராஜ்க்கு ஜே” என்ற ஆரவாராம் செய்தனர். பின் அந்த அந்த சிறு வீரர்கள் குழுவின் தலைவன் முன்னாடி வந்து நிற்க, அவரவர் கைகளில் உள்ள ஆயுதங்களைக் கண்ட பிந்துசாரா முகத்தில் மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.

முதலில் ஈட்டி எறிவதில் வல்லவன் வந்து நிற்க, அவனை நன்கு கவனித்தார். பின் சிறு புன்முறுவல் கொண்டு தலையசையக்க , இருவரும் போரிடத் தயாராகினர்.

ஈட்டியினைக் கொண்டு அந்த வீரன் இளவரசரைத் தாக்க ஆரம்பிக்க, அவர் தாக்குதலில் இருந்து விலக மட்டுமே செய்தார். சற்று நேரத்தில் அந்த வீரன் மெல்ல உக்கிரமடைய ஆரம்பிக்க, பிந்துசாராவோ அந்த புன்முறுவலைக் கைவிடாமல் சண்டையிட்டுக் கொண்டு இருந்தார். அவன் எதிர்பார்க்காத தருணம் , வீரனின் ஈட்டியை இளவரசர் ஒரு சுழற்று சுழற்றி எறிய , அது பறந்து சென்றது. அது பறந்த வேகத்தையும், உயரத்தையும் கண்ட வீரர்கள், ஹோ என்று கூச்சலிட்டனர் .

அந்த வீரன் அவர் முன் மண்டியிட, அவனைத் தட்டிக் கொடுத்தார் இளவரசர். பின் நாயக்கிடம் திரும்பி ஏதோ கூற, நாயக் அவனைத் தனியாக நிற்கச் செய்தார்.

அடுத்து நீண்ட வாள் கொண்டு ஒரு வீரன் அவரோடு சண்டையிட, அவனின் வாளும் சற்று நேரத்தில் பறந்தது. வீரர்கள் நடுவில் உற்சாகம் அதிகம் ஆனது.

பின் சற்று நடுத்தரமான வாளுடன் வீரன் வர, அவன் இளவரசரின் யுக்தி புரிந்து கொண்டு உக்கிரமாகப் போரிடாமல் இலகுவாக சண்டையிட்டான். ஆனால் இரண்டொரு வாள் வீச்சில் அவனின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட இளவரசர், தற்போது உக்கிரமாக சண்டையிட, வீரன் சில நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்க இயலாமல் தன் ஆயுதத்தை இழந்து தோற்று நின்றான்.

அவன் தலைகுனிந்து நிற்க, இளவசரோ அவனைக் கட்டித் தழுவி நாயக்கிடம் அனுப்பி வைத்தார்.

ஆயுதங்கள் முடியவும் சண்டைகளை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணிய வேளையில் , ஒரு புரவியுடன் வந்து நின்ற வீரன் ஒருவன்,

“யுவராஜ் தங்கள் வீரத்தை இந்த புரவிப் படை வீரர்களும் காணக் காத்து இருக்கிறோம். தாங்கள் அதற்கு தயவு செய்ய வேண்டும்” என்றான்.

இளவரசரின் முகத்தில் தற்போது புன்னகை பெரிதாக,

“வீரனே , உங்கள் ஆசையையும் நிறைவேற்றுவோம் “ என்றபடி சங்கேதக் குரல் கொடுக்க, எங்கிருந்தோ காற்றின் வேகமாய் வந்த தேஜா , இளவரசரின் அருகே நின்றது.

சுற்றி நின்ற வீரர்கள் தற்போது மின்னல் ஒன்று தான் பாய்ந்தாதோ என்று வியப்படைந்தனர்.

புரவியின் கால்கள் மெல்லியதாகவும், அதன் உடலோ நல்ல எடையுடன் காட்சி அளிக்க, இந்தப் புரவி எப்படி சண்டைக்குச் சரியாகும் என்று எண்ணி வியந்தனர்.

அவர்களின் வியப்பை மேலும் அதிகமாக்கும் வண்ணம், இளவரசர் நொடியில் புரவி மீது ஏறியிருக்க , புரவியோ அரை வட்டமாகச் சுழன்று தன் முன்னங்கால்களைத் தூக்கி கனைத்து நின்றது.

புரவிப் படை வீரர்கள் கூட இப்படி ஒரு புரவியைக் கண்டதில்லை. அதன் பால் போன்ற வெண்ணிற சருமம் காண்பவரின் கண்களைக் கூசச் செய்தது என்றால், அதன் பிடரி மயிர்கள் காற்றில் ஆடுவது அதன் அழகை மேலும் கூட்டியது. முகம் மறைக்கும் சேனைக் கட்டாமல் , சிறு கயிறுகளே கட்டியிருக்க, அது தன் எஜமான் கட்டளைக்கு மட்டுமே அடங்கும் என்று செருக்கு கொண்டு நின்றது. அதன் கருவிழிகளிகளின் கூர்மையோ எதிரில் நிற்பவரின் நெஞ்சில் பயத்தைக் கூட்டுவதாக இருந்தது.

இளவரசர் வந்ததில் வீரர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கத் தோன்றியதே தவிர, அவரின் தோற்றத்தை இதுவரை ஆராயவில்லை.

தற்போது அவரின் தோற்றதைக் காணும் போது அந்த மகாபாரத அர்ஜுனன் இப்படித்தான் இருந்து இருப்பானோ என்றுத் தோன்றியது.

மிகப் பெரிய பலசாலி என்று காட்டும் வண்ணம் வெளிப்புற உடல் பருமனாக இல்லாமல், தேவையான அளவில் இருந்தாலும் , உடலின் உறுதி எதிரிகளை சில அடிகள் எட்டியே நில் என்று எச்சரிக்கும் வண்ணமே இருந்தது.

பளபளத்த சிகைகள் காற்றில் பறக்க, தோள்களின் நிமிர்வில் எப்பேற்பட்ட போரையும் அசாத்தியமாக சந்திக்கும் திறன் கொண்டது என்று பறை சாற்றியது.

கண்களின் தீட்சண்யம் எதிராளிகளின் உள்ளத்தை ஊடுருவும் தன்மை கொண்டது என்றால், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகமோ அச்சத்தை உண்டாக்கியது.

கால்களின் உறுதியைக் கண்டபோது , இவர் என்ன மனிதரா இல்லை தேவகுமாரரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இவை அனைத்தும் இளவரசர் தேஜாவில் அமர்ந்த சில நிமிடங்களில் அங்கிருந்த வீரர்கள் மனதிலோடிய எண்ணங்கள். இதோ புரவி வீரனும், இளவரசரும் மோதும் காட்சிகள் ஆரம்பிக்கின்றன.

ஆரம்பித்த கணம் மட்டுமே வீரர்கள் நினைவில் இருக்க, எப்போது சண்டை போராக மாறியது என்று புரியாமல் திகைத்தார்கள்.

ஆம் , சற்று முன் வரை இளவரசர் காண்பித்தது விளையாட்டு என்ற அளவில் தான் என்று புரிந்துக் கொண்டார்கள். அதற்கே அந்த வீரர்களால் தாக்கு பிடிக்க இயலவில்லை.

இப்போது நடப்பதோ ஒரு உக்கிரமான போரில் நடக்கும் சண்டைகள் போல இருந்தது. இருவரும் சளைக்காமல் போரிட்டுக் கொண்டிருக்க, தேஜாவோ இளவரசரின் எண்ணம் அறிந்து பாய்ந்தது.

இதோ தேஜா முன்னங்கால்களை தூக்கி எதிரில் நிற்பவனின் புரவியின் தலையில் அடிக்க வர, அதை உணர்ந்த எதிர் புரவியோ தன் கழுத்தைத் திருப்பி அதன் அடியில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டது.

இரு புரவிகளும் கால்களைத் தூக்கிப் பாய்ந்து செல்வதைப் பார்க்கும்போது இது தரையில் நடக்கும் சண்டையாகத் தெரியவில்லை. ஆகாயத்தில் நடப்பது போல தோன்றியது. அந்த வீரனைத் தாக்கி அவனைக் கீழே தள்ள முயற்சி செய்யும் சமயத்தில் ,

“போதும் யுவராஜ்” என்ற குரல் கேட்டது.

அந்தக் குரலை அடையாளம் கண்ட யுவராஜ் சட்டென்று இறங்கி விட, அத்தனை வீரர்களும் மண்டியிட்டு அவரை வணங்கினார். யுவராஜ் மட்டும் தன் கைகளைக் கூப்பி,

“வணங்குகிறேன் சேனாதிபதி” என்றார்.

ஆம், மௌரிய சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி அவர். பேரரசர், ஆச்சாரியார் இருவருக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய பதவியில் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆச்சாரியார் அரசரின் மூளை என்றால், சேனாதிபதியோ அவரின் இயக்கம் என்று கூறலாம். சக்கரவர்த்தியின் எண்ணங்களை அட்சரம் பிசகாமல் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்.

இளவரசர்களின் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு, அவர்களின் திறனை வெளிக் கொண்டு வருபவர் சேனாதிபதி தான்.

தலைநகரை விட்டு அத்தனை சீக்கிரம் வெளி வாராதவர், இன்றைக்கு உஜ்ஜைன் நகருக்கு விஜயம் செய்து இருப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

யுவராஜ்ஜின் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட சேனாதிபதி

“யுவராஜ் , மனதில் உள்ள கோபம் எல்லாம் விளையாட்டில் வெளி வருகிறது போல் இருக்கிறதே” எனவும், இளவரசர் சேனாதிபதியைப் பார்த்தார். அந்தப் பார்வையின் கூர்மை தாளாமல், சட்டென்று பேச்சினை மாற்றினார்.

“யுவராஜ், தாங்கள் இந்நகருக்கு விஜயம் செய்து இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறவும்,

“நானும் தங்களை எதிர்பார்க்கவில்லை சேனாதிபதி” என்றார் இளவரசர்.

“தாங்கள் பாடசாலை படிப்பு முடிந்தவுடன் தலைநகருக்குத் தானே திரும்பியிருக்க வேண்டும். இங்கு வந்தது அதிசயமாக இருக்கிறது யுவராஜ்”

“தாங்கள் கூடத்தான் தலைநகரை விட்டு வெளியே செல்லாதவர். தாங்களும் இங்கு விஜயம் செய்து இருப்பது அதிசயமாகத் தான் இருக்கிறது”

“இந்நகரில் கிளர்ச்சியாளர்கள் மிகுந்து இருப்பதாக சக்கரவர்த்தியின் செவிகளுக்கு தகவல் சென்று இருக்கிறது. அதை அறிந்து வர எனக்கு உத்தரவிட்டுள்ளார் யுவராஜ் “

“எனக்கும் அதே தகவல் கிடைத்ததால், நானும் இங்கே விஜயம் செய்துள்ளேன்”

இருவரின் உரையாடலும் நிற்காமல் சென்று கொண்டிருக்க, அப்போது ஒரு புரவியில் வந்த வீரன் இளவரசர் , சேனாதிபதி இருவரின் அருகே வந்து நின்று வணங்கி நின்றான்.

இருவரும் வணக்கத்தை ஏற்க, தான் கொண்டு வந்த செய்தியை யாரிடம் கூறுவது என்று திகைத்து நின்று இருந்தான்.

சேனாதிபதி தன்னிடம் கூறுமாறு சொல்ல எண்ணும் முன், இளவரசர்

“என்ன செய்தி?” என்றார்.

வீரனும், “யுவராஜ், நம் சக்ரவர்த்தியாரின் பிரிய மனைவி , கிரேக்க ராணியின் ஆலோசகர் நிக்கோலஸ் அவர்களிடமிருந்து ஒரு மாணவர் வந்து இருக்கிறார். தன் பெயர் டியோடரஸ் என்றவர், தங்களைக் காண வந்ததாகக் கூறியிருக்கிறார்” என்றான்.

“தகவல் தெரிவித்தவர் யார்? “

“நமது கார்மிகா சுபோத் அவர்கள் தான் தகவல் தெரிவித்தார்”

“ஓஹ். நம் மாளிகையில் அவரை விருந்தினராக தங்குவதற்கு ஏற்பாடுகள் நடக்கட்டும். மாலை தர்பார் மண்டபத்தில் அவரைச் சந்திக்கிறேன் என்ற தகவலைத் தெரிவித்து விடு” எனவும்,

“உத்தரவு யுவராஜ்” என்று வீரன் சென்றான்.

பின் சேனாதிபதியிடம் திரும்பி ,

“சேனாதிபதி, தங்களையும் மாலை தர்பார் மண்டபத்தில் சந்திக்கிறேன். தற்போது தாங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என, சேனாதிபதி திகைத்தார்.

போர் பயிற்சி கூடத்தின் முழு பொறுப்பும் சேனாதிபதிக்கு மட்டுமே உண்டு. சேனாதிபதி இளவரசரைப் பார்க்க வந்தது போலக் கொண்டு வந்து, அவரின் இடத்திலிருந்து அவரையே இளவரசர் வெளியேற்றியதை எண்ணி சிறு கோபத்துடன் சென்றார்.

அதற்கு பின் நாயக்கிடம் திரும்பிய இளவரசர்,

“நாயக். என்னுடன் யுத்தம் செய்த வீரர்கள் அனைவருக்கும் இன்னும் தனிப் பயிற்சி கொடுக்க வேண்டும். நான் எங்கு, எப்போது அழைத்தாலும் வருவதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு தாங்கள் தான் பொறுப்பு” என்றார்.

“உத்தரவு யுவராஜ்”

“நான் சொன்ன காரியங்கள் என்ன ஆயிற்று?”

“அனைத்தும் முடிந்தது யுவராஜ். தங்கள் உத்தரவுப்படி உணவு தானியங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. ஆயுதங்களுக்கான ஆலைகளில் முழு வீச்சில் ஆயுதங்கள் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. “

“நல்லது. இனி ஒருமுறை இதைப் போன்ற குறைகள் என் செவிகளுக்கு வரக்கூடாது. அத்தோடு உங்களுக்கும் இது சம்பந்தமான சில அதிகாரங்கள் அரசரிடம் ஆலோசித்து வழங்கப்படும்”

“நன்றி யுவராஜ்.” என்றார் நாயக் .

“மற்றுமொரு விஷயம். கூடாரங்களின் நாலு வாயிலிலும் காவல்கள் பலமாக இருக்கட்டும். அவர்களைத் தாண்டி ஒரு பறவை கூட, கூடாரத்தினுள் புகுந்து விடக் கூடாது. “

“ஏற்கனவே அப்படித்தான் நடைமுறையில் இருக்கிறது யுவராஜ்”

“இல்லை. நான் வந்ததோ, தற்போது சேனாதிபதி வந்த போதோ யாரும் எங்களைத் தடுக்கவும் இல்லை. எந்த கேள்விகளும் கேட்கவும் இல்லை. யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்ற நிலையில் தான் இருக்கிறது”

“மன்னித்து விடுங்கள் யுவராஜ். தற்போதைய சூழ்நிலை மட்டுமே அதற்கு காரணம். மற்றபடி காவலர்கள் அறியாமல் யாரும் வர முடியாது”

“இனியும் அதேக் காரணத்தைக் கூறிக் கொண்டு இருக்காமல் , தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யுங்கள்”

“உத்தரவு யுவராஜ்” என்றார் நாயக் .

இளவரசர் வீரர்கள் அணிவகுக்க மீண்டும் கொம்புகளை இசைக்கக் கூறினார்.

வீரர்கள் அணிவகுக்கவும்

“வீரர்களே, உங்களோடு செலவழித்த இந்தப் பொழுதுகள் என்றும் என் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கும். தற்போது உங்கள் தேவைகளைத் தீர்க்க ஏற்பாடு செய்து விட்டேன். விரைவில் அரசரைச் சந்தித்து , நிரந்தர தீர்வு எட்ட வழி செய்கிறேன். நீங்கள் மனம் தளராமல் , உத்வேகத்துடன் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். விரைவில் உங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்” என்று கூறி முடிக்கவும்,

வீரர்கள் மத்தியில் இருந்து “யுவராஜ்க்கு ஜே” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

-தொடரும் -

அத்தியாயத்தைப் பற்றிக் கருத்துக்கள் பகிர கீழே உள்ள லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்.

 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் – ஏழு​



தென்திசைப் போர் பயிற்சி பாசறையில் இருந்து புறப்பட்ட இளவரசர் தன் மாளிகைக்குச் சென்று, அங்கே சற்று நேரம் இளைப்பாறிவிட்டு , அந்த வேளை உணவை முடித்தார். சற்று நேரம் சிந்தனையில் இருந்த பிந்துசாரா, காவலன் பாதலை அழைத்தார். காவலன் வரவும்,

“சுபோத்தை வரச்சொல்” என்றார்.

சற்று நேரத்தில் சுபோத் வரவும்,

“வணங்குகிறேன் யுவராஜ் !” என்றான்.

“போர் பயிற்சி வீரர்களுக்கு உணவு வழங்குவதில் என்ன இடர்பாடுகள் ?”

“யுவராஜ், பயிற்சி வீரர்களுக்கு செலவினங்கள் அதிகமாவதாக ஒரு கருத்து நிலவுகிறது”

“இது என்ன அறிவில்லாத செயல் ? யார் இப்படிக் கூறி வருகிறார்கள்?”

“பொதுவாக மக்கள் சொல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் நம் அரசவையில் ..” என்று நிறுத்தவும்,

“ம்ம்.. அரசவையில் கூறுகிறவர் எவர்?” என்று கேட்டார் இளவரசர்.

மீண்டும் சிறு தயக்கத்தின் பின் “அதிகாரிகளும் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்றான்.

இதைக் கேட்ட இளவரசரின் முகம் கோபத்தில் சிவந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“மக்கள் இவ்வாறு பேசக் காரணம் என்ன? இதுவரை இப்படி எல்லாம் அவர்கள் சிந்தித்தது இல்லையே?” என்று கேட்டார்.

“கடந்த சில மாதங்களாக நம் வரிகளைக் கண்காணிக்கும் பரிஷத் (சபை / துறை) அதிகாரிகள் , வரிகளை அதிகப்படுத்தி இருக்கிறார். அது மக்களுக்கு உவப்பானதாக இல்லை”

“ஓஹ். வரிகள் அதிகபடுத்தக் காரணம் ?”

“தெரியவில்லை யுவராஜ்”

“சரி. வீரர்களுக்கான ஆயுதங்களில் பற்றாக் குறை ஏன் ?’

‘அந்த தொழிற்சாலைகள் தற்போது செயல்படுவதில்லை யுவராஜ்?

“ஓஹ். அதைத் தடுப்பவர் யார்?”

“கார்மாண்டிக்கா” (தொழிற்சாலைகள் தலைவர்)

“மாலை தர்பாரில் இவை எல்லாம் தீர்க்கப்பட வேண்டும். “ என்று இளவரசர் கூறியதும்,

“உத்தரவு யுவராஜ்” என்ற சுபோத் “தங்கள் உத்தரவின் பேரில் கிரேக்க அறிஞர் டியோடரஸ் இன்று மாலை தங்களைக் காண வருகிறார் யுவராஜ்” என்று உரைத்தான்.

“ஆம். அவரையும் தர்பார் மண்டபத்திலேயே சந்திக்கிறேன்” என்று கூறவும், சுபோத் புறப்பட ஆயத்தமாக,

“சுபோத் , டியோடரஸ் அவர்களைத் தகுந்த மரியாதையுடன் அழைத்து வர வேண்டும்” என்றார் இளவரசர்.

“தங்கள் ஆணைபபடியே யுவராஜ்” என்று கூறிவிட்டு சுபோத் வெளியேறினான்.

மேலும் சிறிது நேரம் சிந்தித்துக் கொண்டிருந்த இளவரசர், சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை தர்பார் கூட்டத்திற்கு தயாரானார்.

இளவரசர் தர்பார் மண்டபம் நெருங்கும் போது, அங்கிருந்த வீரர்கள் , “யுவராஜ்க்கு ஜே” என்ற வாழ்த்து ஒலி எழுப்பினர். அன்று காலையில் பயிற்சி பாசறையில் இளவரசரின் சாகசங்களும், வீரர்களிடம் அவரின் தோழமையும் நகருக்குள் தீயெனப் பரவியிருக்க, வீரர்கள் இடத்தில் உற்சாகம் நிரம்பி இருந்தது. அது அவர்களின் வாழ்த்துகள் மூலம் வெளிப்படவும் செய்தது.

சம்பந்தபட்ட மூன்று வாரியங்களின் தலைவர்களிடம் தான் உரையாடல் என்றாலும், தர்பார் கூட்டம் என்று அறிவித்தால், மற்ற அதிகாரிகளும் கலந்து கொள்ளுதல் அங்கிருந்த பொதுவான நடைமுறை. எனவே ஓரளவு தர்பார் மண்டபம் நிரம்பி இருக்க, அவர்களோடு சேனாதிபதியும் அமர்ந்து இருந்தார்.

இளவரசரின் பிரவேசத்தின் போது மற்ற அதிகாரிகள் எழுந்து வணங்கினர். சேனாதிபதியும் எழுந்து நின்று இருந்தார். மற்றவர்களின் வணக்கத்தை ஏற்ற இளவரசர், சேனாதிபதியை அவரின் பதவி மற்றும் வயதை முன்னிட்டுத் தானே வணங்கினார். சேனாதிபதியும் கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தார்.

இளவரசர் அரியணையில் அமர்ந்ததும், கூட்டம் ஆரம்பிப்பதற்கான ஒலியை இசைக்கும் கருவியை எடுக்கவும், இளவரசர் சைகையில் தடுத்தார்.

எல்லோரும் கேள்வியுடன் இளவசரசரை நோக்க,

“சற்றுப் பொறுக்கலாம் “ என, என்னவோ என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அந்த சமயம் வாயிலில் அரவம் கேட்க, எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே பெப்லாஸ் எனப்படும் நீண்ட கம்பளி ஆடையின் மேற்புறம் விசிறிகள் போன்ற மடிப்புகளாகவும், கீழ் புறம் நீண்ட அங்கி போலவும் ஆடை உடுத்தி, தலைமுடி பழுப்பு கலரில் இருக்க, அவரின் மேனி நிறமோ பால் வெள்ளை நிறத்தில் இருந்தது. அவரைக் கண்டவுடன் கிரேக்க நாட்டினைச் சேர்ந்தவர் என்று புரிந்து கொண்ட அவையினருக்கு வியப்பே மிகுந்து இருந்தது.

சக்கரவர்த்தி கிரேக்க ராணி ஒருவரை மணந்து கொண்டிருக்கிறார் என்பதோடு , அந்த ராணியின் சார்பாகவும், கிரேக்க நாட்டுத் தூதுவராகவும் நிக்கோலஸ் என்பவர் தலைநகர் பாடலிபுத்திரத்தில் தங்கி இருக்கிறார் என்பதும் நாட்டின் மூலைகளில் எல்லாம் பரவியச் செய்திதான்.

நிக்கோலஸ் என்பவர் தூதுவர் மட்டுமல்ல மிகச் சிறந்த அறிஞரும் கூட. அதனால் அவர்கள் தேசத்தில் இருந்து மாணவர்கள் மௌரியர் தலைநகரில் தங்கி கல்வி பயில்கிறார்கள்.

இந்த விவரங்களோடு , ராணியின் நிறம், அழகைப் பற்றியும் தலைநகரில் உள்ளவர்கள் பேசக் கேட்டு இருக்கிறார்கள் தான். ஆனால் யாரும் நேரில் கண்டது இல்லை.

தர்பார் மண்டபத்தில் அப்படி ஒருவரைக் காணவும் அவர்தான் நிக்கோலஸ்சோ என்ற எண்ணம் தோன்றும்போதே, இங்கு வந்தவரின் இளவயது தோற்றம் இருக்காது என்று எண்ணினார்கள். இவர் யார் என்ற எண்ணத்தில் மற்றவர்கள் இருக்கும்போது இளவரசரின் குரல் அவரை வரவேற்றது.

“அறிஞர் நிக்கோலஸ் அவர்களின் பிரதான சீடர் டியோடரஸ் அவர்களை உஜ்ஜைன் நகர அரசவை சார்பாகவும், மக்களின் சார்பாகவும் வரவேற்கிறேன் அறிஞரே” என்றார்.

இளவரசரின் வரவேறப்பில் , கட்டியம் கூறுபவன் “அறிஞர் டியோடரஸ் வாழ்க” என்று கூற , மற்றவர்களும் கூறினார்.

சபையின் நடுவில் நின்று, இரு கைகளையும் கூப்பிய டியோடர்ஸ்

“தங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது யுவராஜ். நாகரிகத்திலும், அறிவிலும், பண்பாட்டிலும், கலைகளிலும் முன்னோடியாகத் திகழும் மௌரிய சாம்ராஜியத்தில் தங்கி கல்வி பயில வாய்ப்புக் கிடைத்தமைக்கு மிகவும் பேறு பெற்றவனாகிறேன். தங்களுக்கும், சக்கரவர்த்திக்கும் என்றென்றும் நன்றிகள் பல” என்றான்.

“தங்களைப் போன்றவர்களின் நட்பும், அன்பும் கிடைத்ததில் மௌரியர்களும் பெருமை கொள்கிறோம். தாங்கள் உஜ்ஜைன் நகரத்திற்கு விஜயம் செய்த காரணம் அறியலாமா?” என்று இளவரசர் வினவினார்.

“யுவராஜ் , நாங்கள் விஜயம் செய்த நகரங்களைப் பற்றிய பயணக் குறிப்பு எழுதுவது எங்கள் மரபு. தலைநகரைப் பற்றி அநேக மாணவர்கள் குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள் என்பதால், நான் வேறு நகரங்களைப் பற்றி எழுத ஆசைக் கொண்டு ஆசிரியரிடத்தில் விண்ணப்பித்தேன். அவரே உஜ்ஜைன் மாநகரம் பற்றிக் கூறி இங்கே விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். நான் இங்கே வந்த பிறகே தங்களின் வருகை பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். அதனால் தங்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ள விழைந்தேன்”

“மிகவும் நல்லது நிக்கோலஸ் சீடரே. தங்கள் விருப்பபடி உங்கள் குறிப்புகளை எழுதிக் கொள்ளலாம். நம் நகர வாசிகளும், அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டும் உதவிகள் புரிவார்கள். இது இந்த யுவராஜன் பிந்துசாரனின் கட்டளை”

“மிக்க நன்றி யுவராஜ். என் பயணக் குறிப்பில் தங்களைப் பற்றியும் எழுத விழைகிறேன். அதற்கும் தங்கள் அனுமதி வேண்டும்”

“சரி. தங்கள் வேலைகளை தற்பொழுதே தொடங்கலாம்” என்று கூறிய இளவரசர் , சுபோத்தைப் பார்க்க, சுபோத் அங்கிருந்த ஆசனம் ஒன்றில் டியோடர்சை அமரச் செய்தான்.

அவர் அமர்ந்த பின் பறை ஒலிப்பவரை நோக்கித் தலையசைக்க, தர்பார் தொடங்கலாம் என்பதற்கான கருவியை ஒலிக்கச் செய்தார்.

தர்பார் தொடங்கவும், தர்பார் பொறுப்பாளர் இளவரசரை வணங்கிவிட்டு,

“நம் நகர ஆயுத தொழிற்சாலை நிர்வாகிகளிடம் இளவரசர் உரையாட விரும்புகிறார்” எனவும், அந்த நிர்வாகிகள் தலைவர் எழுந்து கொண்டார் .

“கார்மாண்டிகா , கடந்த சில நாட்களாக போர் வீரர்கள் தங்களுக்கான ஆயுதங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று முறையிடுகிறார்களே? அதற்கு என்ன காரணம்?”

“தொழிற்சாலைகள் தற்போது இயங்குவதில்லை யுவராஜ்”

“என்ன காரணம்? “

“எங்களுக்குத் தேவையான கனிமங்கள் கொண்ட சுரங்கங்கள் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. அந்த மூலப்பொருட்கள் கிடைத்தால் மட்டுமே எங்கள் ஆலைகளில் வேலை நடக்கும் யுவராஜ். “

“எதனால் சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளன?”

“கார்மிகா உத்தரவால் “ என்று கூற, அவரை ஒரு பார்வை பார்த்தார் யுவராஜ். அவர் பதில் கூற எழ , சைகையால் தடுத்தார் இளவரசர்.

பின் உணவு வழங்கல் அதிகாரிகளிடம் திரும்ப, அதன் தலைவர்

“யுவராஜ், மக்கள் வரியாகக் கொடுக்கும் தானியங்களை வைத்தே வீரர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். கடந்த அரை வருட காலமாக தானியங்கள் வரத்து குறைவாகவே இருக்கிறது. மக்களிடத்தில் எங்களால் அதிகம் அழுத்தம் கொடுக்க இயலவில்லை “ என்றார்.

“மக்கள் தானியம் வரி கொடுக்க மறுப்பது ஏன் ?”

“அதிக வரி விதிப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள். “

“யார் உத்தரவின் பேரில் அதிக வரி விதிப்பு நடந்தது?”

அதற்கும் அத்தனை பேரும் கார்மிகாவைப் பார்க்க, அவர் “என்னை என்ன செய்ய முடியும்” என்பதைப் போல எழுந்து நின்றார்.

“இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தங்கள் பதில் என்ன கார்மிகா ? “ இளவரசர் வினவவும்,

“இவை எல்லாம் குற்றச்சாட்டுக்கள் அல்ல யுவராஜ். என்னைப் பொருத்தவரை என் வேலைகளைத் தான் நான் செய்தேன்” என்று தைரியமாகவே எதிர்த்து நின்றார்.

இளவரசர் அவரைக் கூர்ந்துப் பார்க்க,

“யுவராஜ் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன், உஜ்ஜைன் நகரில் காலநிலை மாற்றத்தால் சிப்ரா ஆற்றில் எதிர்பாரா சமயத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சில இடங்களில் பயிர்கள் நாசமடைந்து விட்டது. அதனால் உணவுப் பொருள் வரி செலுத்துபவர்கள் கால அவகாசம் வேண்டினார்கள். ஆனால் இன்று வரை அந்த வரிகளைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த பற்றாக் குறையை ஈடுகட்ட , வரி விதிப்பு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டியதாகி விட்டது. “ என்று கூறினார்.

“வரி விதிப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் மக்களைப் பாதிக்கக் கூடாது அல்லவா?”

“உண்மைதான் யுவராஜ். ஆனால் மக்களைப் பாதிக்கும்படியான வரிகளை நம் பரிஷத் செயல்படுத்தவில்லை”

“எனில் தற்போது மக்களின் ஆத்திரத்திற்கு காரணம் ?”

“அது தேவையில்லாத ஆத்திரம்”

“மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது வரிகள் அதிகரித்தால் அவர்கள் ஆத்திரப்படுவது நியாயம் தானே”

“இல்லை யுவராஜ். அந்த சமயத்தில் அவர்களுக்கு வேண்டிய அவகாசம் கொடுத்ததோடு, அதை ஈடுசெய்யும் விதமாக அவர்கள் மீண்டும் பயிர் செய்ய நம் பரிஷத் மூலம் உதவிகள் செய்தோம். குறிப்பாக குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதற்கு பலனும் இருந்தது. ஆனால் அதில் இருந்து வரியாக நம் அரசாங்கத்திற்குச் சேர வேண்டியதை மக்கள் கொடுக்க மறுத்து கிளர்ச்சிகள் செய்தார்கள். அதைக் கட்டுப்படுத்தவும், பற்றாக் குறையை ஈடுகட்டவும் வரிகளை உயர்த்த வேண்டியிருந்தது. “

“உங்களின் கூற்றுப்படி , மக்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டியது யார் என்ற அறிந்து கொண்டீர்களா?”

“இல்லை யுவராஜ். அதை அறிய பெரும் முயற்சி செய்தோம். ஆனால் இயலவில்லை.”

“இது சரியான விடை அல்ல கார்மிகா. இந்த பாரதக் கண்டத்திலேயே மிகப்பெரிய சைனியமும் , நுட்பமான ஒற்றர் படையும் கொண்ட நம் மௌரிய ராஜாங்க அதிகாரிகள் இப்படி கூறுவது முறையல்ல”

“உண்மைதான் யுவராஜ். ஆனால் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் கிளர்ச்சி செய்யத் தூண்டுபவர்களை கண்டு அடக்கி விடுவோம்”

“அது அத்தனை எளிதல்ல”

“ஏன் யுவராஜ்?

“அதைப் பிறகு கூறுகிறேன். ஆயுதங்களைப் பற்றித் தாங்கள் என்ன விடைக் கூறுவீர்கள்?”

“கிளர்ச்சியாளர்கள் கைகளில் இருக்கும் ஆயுதம் நம் ஆயுதக் கிடங்குகிளில் இருந்து தான் செல்கிறது என்பதை அறிந்த பின், அவற்றை மூட உத்தரவிட்டு விட்டேன். அதை நேரடியாகச் செய்யாமல் சுரங்கங்கள் மூடுவது மூலமாகச் செய்தேன்”

“ஆனால் மக்கள் வேறு மாதிரிக் கூறுவதாக அறிந்தேன்?”

“அப்படி வதந்தியை ஏற்படுத்தியது நான்தான்”

“காரணம்?”

“கிளர்ச்சியாளர்களுக்கு இந்த தகவல் தெரிந்தால், அவர்கள் வேறு வழியில் வெளிவரக் கூடும் என்ற எண்ணத்தில் தான் யுவராஜ்”

ஹம்ம.. என்று கூறிய இளவரசர் சற்று நேரம் சிந்தனையில் இருந்தார்.

“வரி விதிப்பு சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் நகர பரிஷத்திற்கு உண்டு என்றாலும், அவற்றை பேரரசர் அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியாது என்பது தெரியும் அல்லவா? தங்களுக்கு அதற்கு அனுமதி அளித்தது யார்?”

“ஆச்சாரியாரிடம் கலந்து கொண்ட பிறகே இவ்வாறு செய்கிறோம்” எனவும், இளவரசர் கண்களில் சிறு கோபம் தெரிந்தது. அதை வெளிக்காட்டாத படி ,

“சரி. தற்போது இதற்கு தீர்வு சொல்லப்போவது யார்? “ என வினவினார்.

தற்போது அதிகாரிகள் அனைவரும் அமைதியாக இருக்க, இளவரசர் எல்லோரையும் ஒருமுறை பார்த்து விட்டு,

“நான் அறிந்த வரையில் தீர்வு கூறலாமா?” என்றார்.

அரசவையினர் இளவரசரைப் பார்க்க,

“கார்மிகா , முதலில் ஆயுத ஆலைகளைத் திறக்க உத்தரவிட்டு ஆயுதங்கள் உற்பத்தி ஆரம்பமாகட்டும்” என்றார்.

“உத்தரவு யுவராஜ். மக்கள் கேள்விகளுக்கு விடை ?”

“அவர்களிடம் நான் பேசுகிறேன். அத்தோடு நம் தலைநகரில் இருந்து வேண்டிய உணவுப் பொருட்களை உஜ்ஜைன் நகரத்திற்கு அனுப்பி விடக் கூறி ஓலை அனுப்புங்கள்“

இதுவரை நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த சேனாதிபதி எழுந்தார்.

“யுவராஜ், கார்மிகாவின் ஏற்பாடுகள் இதுவரை சரியாகவே இருப்பதாக எண்ணுகிறேன். அதிலும் ஆச்சாரியாரின் வழிகாட்டுதல் படி என்னும் போது தவறு இருக்கவும் வாய்ப்பு இல்லை. இன்னும் சில காலம் பொறுத்து இருந்தால் , கிளர்ச்சிகள் அடங்கிவிடுமே. அதை விட்டுத் தற்போது ஏன் இந்த அவசரம்?”

“அவசரம் இல்லை சேனாதிபதி. அவசியம்”

“தங்களின் எண்ணம் புரியவில்லை”

“கிளர்ச்சியாளர்களைத் தூண்டிவிடுபவர்கள் யார் என்று கேள்வி எழுந்தது அல்லவா? “

சேனாதிபதி தலையசைக்க, அதற்கு விடையாக முதல் நாள் இரவில் அவர் கைகளில் கிடைத்த கத்தியை அவரிடம் கொடுத்தார்.

முதலில் அதைச் சாதாரணமாகப் பார்த்தச் சேனாதிபதி, பின்னர் கண்களில் ஆத்திரம் மிக,

“தங்களுக்கு இது எவ்வாறு கிடைத்தது யுவராஜ்?” என்று வினவினார்.

அவரின் ஆத்திரம் ஏன் என்று அறியாத மற்றவர்கள் சேனாதிபதியைப் பார்க்க, இளவரசர் நிதானமாக,

“இந்தக் கத்தியின் இலக்கு நானாக இருந்தேன்” என்று கூறவும், அவையினர் அனைவரும் எழுந்து,

“என்ன? தங்களுக்கு ஆபத்து விளைவிப்பவன் இந்த நகரில் இருக்கிறானா? அவனின் தலையை வெட்டி நம் மஹாகாளிக்கு இரத்த அபிஷேகம் செய்கிறோம். எங்கே இந்த சம்பவம் நடந்தது என்று மட்டும் கூறுங்கள்” என்றனர்.

இன்னும் நிதானமாக “அவள் ஆலயத்தின் வாயிலில் தான் நடந்தது” என்றார் இளவரசர். இப்போது அனைவரும் திகைத்து நிற்க, சேனாதிபதி மட்டும்

“இளவரசே இந்தக் கத்திக் கூறும் கதை கலிங்கத்து ஒற்றர்கள் இந்நகரில் வாசம் செய்கிறார்கள் என்பதுதானே. அந்த ஒற்றர்கள் இங்கே வாசம் செய்யட்டும். என் தலைமையில் கலிங்கத்திற்கு படையெடுத்து அந்நாட்டு மன்னனை சிறை பிடித்து வருகிறேன்” என்றார்.

“அவசரம் வேண்டாம் சேனாதிபதி. நீங்கள் கூறுவது போல இவர்கள் ஒற்றர்கள் அல்ல. கலிங்கப் படையின் ஒரு பிரிவினர். இவர்கள் நம் மக்களோடு கலந்து உள்ளனர். அவர்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் நம் மக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாது. எனவே ஒரு பக்கம் படை தயாராகட்டும். அதற்குள் நம் மக்கள் பிரச்சினையைத் தீர்த்து, அவர்களின் ஒத்துழைப்பைப் பெற ஏற்பாடு செய்வோம்”

இளவரசர் கூறவும் அவையினர் அதை ஏற்றுக் கொண்டனர். என்றாலும் தங்கள் எல்லைக்குள் நடந்த இச்சமபவம் அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பின் மேலும் சில விரிவான ஆலோசனைகள் செய்யப்பட்டப் பின் தர்பார் முடிந்தது.

பின் இரவு உணவிற்கு இளவரசர் டியோடரசை விருந்தினராக அழைக்க, அவரும் கலந்து கொண்டார்.

இரவு உணவிற்கு பின் மற்றவர்களை அனுப்பி விட்டு, டியோடரஸ் இளவரசர் மட்டும் உரையாடினர்.

“கிரேக்க அறிஞரே, என் சிறிய தாயார் கிரேக்க ராணி நலம் தானே?

“நலமாக உள்ளார் யுவராஜ். தங்களை மிகவும் கேட்டதாகக் கூறினார்.”

பின் பொதுவாக சில நிமிடங்கள் உரையாடி விட்டுப் பின்

“யுவராஜ், கிரேக்க ராணி தங்களை மிகவும் கவனமாக இருக்கச் சொல்லிக் கூறினார்” என்றார்.

“நான் கவனமாகத் தான் இருப்பேன் என்பதை ராணி அறிவார். என்றாலும் கூறியிருக்கிறார் என்றால் காரணம் என்ன ?”

“தங்களைக் கொலை செய்ய அரச குடும்பத்தினரே முயற்சிப்பதாகக் கூறினார். அத்தோடு தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருப்பவர்களே அதற்கு காரணமாகவும் இருப்பார் என்றும் தெரிவித்தார்”

அவர் கூறியதைக் கேட்டவுடன் இளவரசரின் மனதில் ஆச்சாரியார் வந்து செல்ல, சற்றே ஏளன புன்முறுவலோடு ,

“நான் கவனமாகவே இருக்கிறேன் அறிஞரே” என்று கூறினார். பின் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு டியோடரஸ் புறப்பட்டார்.

நள்ளிரவாக இன்னும் சில நாழிகையே இருந்த நேரத்தில், இளவரசர் யாரும் அறியாமல் மாளிகையின் பின்புறம் சென்றார்.

மிதமான ஒலியில் சங்கேதக் குரல் கொடுக்க,, எங்கிருந்தோ தேஜா வந்து நின்றது.

அதன் மேல் லாவகமாக ஏறிய இளவரசர், தேஜாவிடம் நலம் விசாரித்தபடி வழிநடத்தினார். இளவரசரின் எண்ணம் புரிந்தது போல , வேகமான நடையாக இருந்தாலும், அதிக சத்தம் எழுப்பாமல், முந்தைய நாள் சென்ற மஹாகாளி ஆலயம் அருகே சென்றது.

தேஜாவின் புத்திக் கூர்மை கண்டு பாராட்டும் விதமாக

“உன்னைக் காட்டிலும் உற்ற நண்பன் மானிடரில் எவரும் இல்லை தேஜா.”

என்றபடி அதன் கழுத்தில் தடவிக் கொடுத்தார்.

பின் அடர்ந்த வனத்தின் உள்ளே அந்தப் பெரிய மரத்தை நோக்கிச் செல்ல, முந்தைய நாள் போல அல்லாமல் ரதா முன்பாகவே வந்து இருந்தான்.

இளவரசரைக் கண்டதும் பணிந்து வணங்கிட,

“ரதா, இன்றைக்கு நாம் மற்ற விஷயங்கள் பேசும் முன், நாளை முதலில் நீ ஒரு வேலை செய்ய வேண்டும். “ என்றார்.

சிறு புன்முறுவலோடு கூடிய அந்தக் குரல் இதுவரை ரதா அறியாதது.

“உத்தரவிடுங்கள் யுவராஜ்” என்றான்.

“அன்றைக்கு மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் ஒரு பெண் பாடினாள் அல்லவா? அவளைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் “ என, ரதா இளவரசரை வியந்துப் பார்த்தான்.

பின், “நாளை முதல் வேலையாக அறிந்து கொள்கிறேன் யுவராஜ். “ என்றான்.

அவனின் குரலில் திரும்பிப் பார்த்த இளவரசர் ரதா தன்னை அறிந்து கொண்டிருப்பானோ என்று எண்ணியவர், பின் அதை விடுத்து, மற்றதைப் பற்றி உரையாட ஆரம்பித்தார்.

-தொடரும் -
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
111
Reaction score
115
Points
28

அத்தியாயம் – எட்டு​

இளவரசர் சட்டென்று ஒரு பெண்ணைப் பற்றி அறிய விரும்புவார் என்று எதிர்பாராத ரதாவிற்கு , அவர் உத்தரவிற்கு பணிந்தாலும், அந்த தாக்கத்திலிருந்து விடுபட சற்று நேரம் எடுத்துக் கொண்டது. ரதா அந்த சிந்தனையில் இருக்கும்போது இளவரசர் அன்றைய நிகழ்வுகளைப் பற்றி வினவவும், தானும் அதற்கு பதில் கூற ஆரம்பித்தான்.

“அந்தக் கூட்டத்தில் இருந்த ஒற்றன் பற்றி அறிந்துக் கொண்டாயா?”

“யுவராஜ், அவனைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துக் கொள்ள முடியவில்லை”

“ஏன்?”

“முதலில் அவன் கலிங்கத்து ஒற்றனாக இருக்கலாம் என்று தான் கணித்தேன். இன்றைய அவனின் செயல்பாடுகள் அப்படி இல்லை என்று தோன்றுகிறது.”

“எப்படிக் கூறுகிறாய்?”

“யுவராஜ், நேற்றைக்கு தவறவிட்ட அந்த ஒற்றன் , இன்று காலையில் போர் பயிற்சி பாசறையில் வீரர்கள் கூச்சலிட்ட போது அங்கிருந்து புறப்பட்டு, உஜ்ஜைன் நகர பரஸ்தார் சுபோத் மாளிகைக்குச் சென்றான்.” என ரதா நிறுத்தவும், தன் புருவங்கள் நெறிய மேலும் கூறுமாறு இளவரசர் தலையசைத்தார்.

“பரஸ்தார் மாளிகையில் இரு நாழிகைக்கு மேல் தங்கி இருந்தான். பின் அங்கிருந்து நகரிக்கா மாளிகைக்குச் சென்று உடனே வெளியேறி விட்டான். அடுத்து நேராக சத்திரத்திற்குச் சென்றவன், கிரேக்க மாணவர் டியோடரஸ் அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் சுபோத் மாளிகைக்குச் சென்று விட்டான். அங்கிருந்து அவன் வெளியேறவில்லை. ஆனால் மாலையில் தர்பார் மண்டப வாயில் காவலனாக நின்று இருந்தான். அதன் பிறகு நேராக மீண்டும் போர் பாசறைக்குச் சென்று விட்டான். மீண்டும் அவன் வெளியேறவில்லை.”

“இல்லை ரதா. அவன் தற்போது பாசறையில் இருக்க மாட்டான். இன்றைக்கு பகலில் அவன் செய்தது எதுவும் சந்தேகத்திற்கு உரியது அல்ல. இரவில் அவன் எங்கே சென்றிருக்கிறான் என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்”

இளவரசர் கூறியதில் திகைத்த ரதா,

“தாங்கள் என்ன கூற வருகிறீர்கள் யுவராஜ்?” என்றான்.

“அந்த ஒற்றன் பகலில் வேவு பார்த்ததில் அவனுக்கு அதிகமான விபரங்கள் கிடைக்கப்பெற்று இருக்காது. அவை அனைத்தும் பகிரங்கமாக அந்த இடத்தில் இருப்பவரிடம் கேட்டாலே தெரிந்துக் கொள்ளக் கூடிய விவரங்களே. அதில் எந்த ரகசியங்களோ , திட்டங்களோ இல்லை. ஆனால் அவன் இரவில் யாரைச் சந்திக்கிறானோ அல்லது யாரை வேவு பார்க்கிறானோ அது தான் நமக்குத் தேவை. “

“மன்னித்து விடுங்கள் யுவராஜ். நாளை எப்படியும் அவனின் மற்ற விவரங்கள் அறிந்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன்”

“விடு ரதா. ஏனோ அவனில் ஆபத்து இருப்பதாகத் தோன்றவில்லை”

“எப்படிக் கூறுகிறீர்கள் யுவராஜ்?”

“என்னை அவன் பின் தொடர்வது ஒற்றறிய அல்ல. எனக்கு விவரங்களைத் தெரியப்படுத்த என்று எண்ணுகிறேன்”

அதைக் கேட்டு வியந்த ரதா,

“எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது யுவராஜ். தாங்கள் பாசறையில் நிலைமையைக் கையில் எடுக்கவும், அவன் அங்கிருந்து அகன்று விட்டான். தங்களைப் பின்தொடர்பவன் எனில் அங்கேயே இருந்து இருப்பான்”

“உண்மை. ஆனால் அவனின் நோக்கம் அறிய வேண்டியது அவசியம். “

“இவன் ஒற்றனே அல்ல என்று தோன்றுகிறது” என்றான் ரதா.

கேள்வியோடு ரதாவைப் பார்க்க,

“இந்த ஒற்றன் நம் எதிரி நாட்டைச் சேர்ந்தவனாக இருக்க வாய்ப்பு இல்லை” என்றான்.

“ஏன் ?”

“எதிரி நாட்டு ஒற்றன் எனில் அவனின் நடமாட்டம் இத்தனை இயல்பாக இருக்காது. நம்மோடு கலந்து கொள்வானே அன்றி, ஒவ்வொரு இடமாகச் சென்று தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டான். மேலும் நம் பயிற்சி பாசறைக்குள் அவன் சென்று வருவது அத்தனை எளிதல்ல யுவராஜ்”

“ஆனால் பாசறை இன்றைக்கு நான் சென்றபோது காவல் இல்லாமல் தான் இருந்தது ரதா. “

“உண்மைதான். ஆனால் நான் சூரிய உதயத்தில் இருந்து அங்கே தான் நின்று இருந்தேன். காவல் பலமாகத் தான் இருந்தது. என் யூகம் சரி எனில் தங்கள் வருகை பற்றி அவன் அறிந்து இருக்க வேண்டும். தாங்கள் வரும் நேரம் அந்தக் கலகத்தையும் அவனே தூண்டி விட்டு இருக்கலாம். “

சிந்தனையோடு “ஹம்.. அப்படியும் இருக்கலாம். எனில் அவன் யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

“அதுதான் தெரியவில்லை யுவராஜ்” என்று சற்றுக் கலக்கத்தோடு ரதா கூறவும், சட்டென்று இளவரசரின் விழிகள் பளிச்சிட்டது. மேலும் சிறிது நேரம் தன் சிந்தனையைச் செலுத்தியவர், அது சரிதான் என்பது போல் தலையசைத்தார்.

ரதாவிடம் “ரதா, அவனைப் பற்றி வீண் கவலைப்படாதே . இரண்டொரு நாளில் அதை நாம் தெரிந்துக் கொண்டு விடலாம். என் அந்தரங்க காவலன் பாதலை நாளை உன்னிடம் அனுப்பி விடுகிறேன். அந்த ஒற்றனைக் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் கொடுத்து விடு. “ என்றார் இளவரசர்.

ரதா இளவரசரைப் புரியாமல் பார்க்க, அவரின் கண்களில் சிறு அலட்சியமும், உதடுகளில் ஏளனப் புன்னகையும் கண்டவன் வேறு எதுவும் கேட்காமல்,

“அப்படியே செய்கிறேன் யுவராஜ்” என்றான்.

“ரதா, நாளை பாதலிடம் பொறுப்பை ஒப்படைத்தப் பின், கலிங்கத்து விவரங்களை நீ அறிந்து வரவேண்டும். தற்போதைய அரசர் முதல் அவர்களின் நோக்கம் வரை முற்றிலும் நான் அறிய வேண்டும். அதை நீ இங்கிருந்து அறிந்து கொண்டாலும் சரி அல்லது கலிங்க தேசம் சென்று வந்தாலும் சரி”

“தாங்கள் கூறுவது , இங்கிருந்து அறிய முடியும் என்றால் , கலிங்கத்து ஒற்றர்கள் இங்கே யார் என அறியவேண்டும். அவர்களைப் பிடித்து விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள் இல்லையா யுவராஜ்?”

“ஹ. ஹ. நன்கு விளங்கிக் கொண்டாய் ரதா. இங்கே நகருக்குள் சுற்றித் திரிபவர்களை கண்டறிய வேண்டும்”

“உத்தரவு யுவராஜ்” என்றான்.

“நேற்றைக்கு நம் கத்தி வீச்சில் இறந்தவன் பற்றிய விவரம் அறிந்து கொண்டாயா?”

“இன்று காலையில் வந்துப் பார்த்த போது அவனின் உடல் இங்கில்லை யுவராஜ். மிருகங்கள் இழுத்துச் சென்று இருக்கலாம்”

“எதை வைத்துக் கூறுகிறாய்?”

“காலடித் தடம் அருகில் கண்டேன் யுவராஜ்”

“யாரோ அவன் உடலை எடுத்துச் சென்று விட்டு, மிருகங்கள் காலடித் தடத்தைப் பதித்து குழப்பியிருக்கிறார்கள். இந்த எல்லையில் மிருகங்கள் அதிலும் மனிதனை இழுத்துச் செல்லும் அளவிற்கான மிருகங்கள் நிச்சயம் வாய்ப்பு இல்லை. அவன் அடையாளத்தை மறைக்க எண்ணி இதைச் செய்து இருக்கிறார்கள். “ என்ற யுவராஜ் “அவன் விழுந்த இடத்தில் வேறு எதுவும் கவனித்தாயா?” என்று வினவினார்.

“காலையில் நான் கவனிக்கவில்லை யுவராஜ். ஆனால் நேற்று இரவு தாங்கள் சென்ற பின் அவனைச் சோதித்ததில் கலிங்க நாணயம் சிலவற்றைக் கண்டேன். அத்தோடு லிங்க முத்திரை கொண்ட ஓலைகளும் கண்டேன்.”

“ஓலையைப் படித்தாயா?”

“இல்லை யுவராஜ். அவற்றைப் படிக்க இயலவில்லை. ஏதோ ஏதோ முத்திரைகள் வரையப்பட்டு இருந்தது. இறுதியில் லிங்க முத்திரை இருந்தது. “

“அந்த ஓலை அவனின் உடலில் எளிதாக தெரியுமாறு இருந்ததா?”

“ஆம் யுவராஜ்”

“எனில் அவனும் உண்மையான ஒற்றன் அல்ல. இவனை ஒற்றன் என்று நம்மை எண்ண வைத்துவிட்டு , அவன் தப்பித்து விட்டான். “

“அப்படியானால் அந்த ஓலையில் வரையப்பட்டு இருந்தது ? “

“அது நம்மைக் குழம்பச் செய்யவே வைத்து இருக்க வேண்டும். நான் கூறியது போல நாளை வேறு வழிகளில் ஒற்றர்களைக் கண்டறிய முயற்சி செய்”

“உத்தரவு யுவராஜ். அத்தோடு நாளை அந்தப் பெண்மணி யார் என்பதையும் அறிந்துக் கொண்டு வருகிறேன்” எனக் கூறவும், அத்தனை நேரம் இருந்த கடுமை காணாமல் போய், இளவரசரின் முகம் மென்மையாக மாறியது.

சிறு புன்முறுவலுடன் தலையை மட்டும் அசைத்த இளவரசர், கிளம்பலாம் எனச் செய்கையில் தெரிவித்தார்.

ரதா புரவிகளுக்கு சங்கேதக் குரல் கொடுக்க, இரு புரவிகளும் தங்கள் எஜமானரிடம் வந்து நின்றது. லாவகமாக முதலில் புரவியில் ஏறிய இளவரசர் , ரதாவிடம் தலையசைத்து விட்டு தேஜாவைத் தட்டிக் கொடுத்தார். அடுத்தக் கணம் அது சீறிப் பாய்ந்தது.

“ஹ. தேஜா.. உன் தாவல் அதி வேகமாக இருக்கிறதே? என்ன காரணமோ?” என்று வினவ, அது இளவரசரை ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டு இன்னும் வேகமாகச் சென்றது.

“ஓஹ். என்னுடைய மகிழ்ச்சி தான் காரணமா ?” என இளவரசர் வினவ, ஆமோதிப்பது போல தன் முன்னங்கால் இரண்டையும் தூக்கிச் சுழற்றியது.

“ஹ. ஹ. போதும் போதும். சற்று நிதானமாகவே போகலாம்” எனவும், தன் சந்தோஷத்தை மட்டுப்படுத்தி நிதானமாகச் சென்றது தேஜா.

மீண்டும் தன் மாளிகைக்கு இளவரசர் திரும்பும்போது உதயத்திற்கு சிறிது காலமே இருந்தது. இளவரசர் நன்றாக உறங்கி உதயக் காலத்தில் மிகச் சரியாக எழுந்துக் கொண்டார்.

காலை முதல் வேலையாக பாதலை அழைத்து,

“பாதல் , நம் வைசியர் வீதியில் முத்துக்கள் விற்பனைக் கூடம் இருக்கும். அங்கே சென்று ரதாவைப் பார்க்க வேண்டும் என்று சொல். ரதா வருவான். அவனிடத்தில் இளவரசர் அனுப்பி வைத்தார் என்று கூறு. உன் வேலையை அவன் கூறுவான். “ என்றார்.

“யுவராஜ் , தங்கள் பாதுகாவலுக்கு ..?” என்று கேள்வியோடு தயங்கி நிறுத்த,

“என்னைப் பாதுகாக்க என் வாளும், வில்லும் போதும் பாதல். மற்றவை எல்லாம் அரச சம்பிரதாயமே . தற்போது ரதா கூறுவதைச் செய்வது மட்டுமே உன் வேலை.” எனவும்,

“உத்தரவு யுவராஜ்” என்று புறப்பட்டான் பாதல்.

“பாதல், அவன் கூறும் வேலையை முடித்துவிட்டு என்னிடம் மட்டுமே கூற வேண்டும். வேறு எவரிடமும் நீ எங்கே செல்கிறாய் என்ற விவரம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை புரிகிறதா?

“தங்கள் விருப்பப்படியே செய்கிறேன் யுவராஜ்”

பாதல் புறப்படவும், தன் காலை வேலைகளை முடித்துவிட்டு இன்றும் மகாகாலேஸ்வரர் ஆலயம் நோக்கிப் புறப்பட்டான்.

ஈசனை மனதார வணங்கிவிட்டு, போர் பாசறைகளைப் பார்வையிடப் புறப்பட்டான். செல்லும் வழியில் ஷிப்ரா நதியின் கிளை ஓடை வரவும், இளவரசர் சிறு எதிர்பார்ப்புடன் பார்க்க, தேஜாவோ தானாகவே ஓடையின் அருகில் சென்று விட்டது.

அங்கே முந்தைய தினம் போலவே அநேகப் பசுக்கள் மேய்ந்துக் கொண்டு இருக்க, மற்ற விலங்குகளும் தண்ணீரில் சுகமாக நீந்திக் கொண்டு இருந்தன. இந்த ஓடைக்கு வருபவை அனைத்தும் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் என்பதால், மனித வாடை அவைகளுக்கு நல்ல பழக்கமே. அதனால் புது மனிதரைக் கண்டு மிரளாமல் தன் போக்கில் நடந்துக் கொண்டு இருந்தன.

அந்தப் பெண் அழைத்தப் பெயரான “லக்ஷ்மி” என்று இளவரசர் அழைக்க, சட்டென்று இரண்டு , மூன்று பசுக்கள் திரும்பிப் பார்த்தன.

அதைக் கண்ட இளவரசர்

“இங்கே பார் தேஜா !! இத்தனை லக்ஷ்மிகளில் அந்தப் பெண் அழைத்த லக்ஷ்மியைப் எப்படிக் கண்டறிவேன்?” என்று சிரித்துக் கொண்டே கூற, தேஜாவோ நன்றாகக் கனைத்தது. அதன் பொருள் இளவரசருக்குப் புரிந்தது போல,

“என்னைப் பார்த்து நகைக்கிறாயா? பார்த்துக் கொண்டேயிரு. உன் இணையைத் தேடி நீயும் இப்படித்தான் புலம்பப் போகிறாய்” என்றார்.

அப்போது அவருக்குப் பின்னால் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்க, திரும்பிய இளவரசர் மகிழ்ச்சியில் திளைத்து நின்றார்.

யாரைக் காண வேண்டும் என்று எண்ணி இங்கே வந்தாரோ அந்தப் பெண்ணே அவருக்குப் பின் நின்று சிரித்துக் கொண்டு இருந்தாள்.

“பெண்ணே! எதற்கு சிரிக்கிறாய்?” என்று இளவரசர் வினவ,

“ஐயா, தங்கள் புரவியிடம் பேசிக் கொண்டு இருந்தீர்களே . அதைக் கண்டு தான் நகைத்தேன் ” என்றாள்.

“அதில் நகைக்க என்ன இருக்கிறதோ?

“நீயும் இப்படித்தான் புலம்பப் போகிறாய் என்று புரவிக்குச் சாபம் கொடுத்தீர்களே? உங்களின் மொழி அதற்கு புரியுமா என்ன ?

“ஆம். விலங்குகளோடு பழகினால் அவற்றுக்கு நம் மொழியும் புரியும். அவற்றின் மொழியும் நாம் அறியலாம்”

“தாங்கள் உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறீர்கள். மிருகங்களுக்கு மானிட மொழி புரிந்தால் , அவை நம்மைக் கட்டுப்படுத்தும். ஆனால் இன்றும் நாம் தானே மிருகங்களைக் கட்டுப்படுத்துகிறோம்”

“இல்லை பெண்ணே. நேற்றைக்கு நீ லக்ஷ்மி என்று அழைத்ததும் நீ வளர்க்கும் பசு உன்னிடத்தில் வந்தது அல்லவா? அதற்கு லக்ஷ்மி என்று தானே பெயர் சூட்டிக் கொண்டதா என்ன ? “

சற்றுக் குழப்பத்துடன் “லக்ஷ்மியை அதன் தாய் ஈன்ற பொழுதில் இருந்து நான் அதனோடு இருக்கிறேன். அதனால் என் குரல், என் மொழி அவற்றுக்குப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் புரவி அப்படி அல்லவே. எங்கிருந்தோ இறக்குமதி செய்யப்படுவது தானே” என்றாள்.

அவளின் தெளிவான கேள்வியில் , சிறு மெச்சுத்தலுடன் கூடிய பார்வையை செலுத்திய இளவரசர்,

“புரவியும் அப்படித் தான் பெண்ணே. அதனை வளர்க்கும் எஜமானர் யாரோ, அவர் அறிமுகப்படுத்துபவரிடம் மட்டுமே பழகும். யாரை எஜமானர் என்று அழைக்கிறோமோ அவரின் கட்டளைக்கு மட்டுமே கட்டுப்படும். அந்த வகையில் என் பேச்சு என் தேஜாவிற்கு புரியும்” என்றார்.

“ஓஹ். புரவியின் பெயர் தேஜாவா .. மிகப் பொருத்தமான பெயர்”

“எப்படிக் கூறுகிறாய்?

“தேஜ் என்றால் வேகம் என்று பொருள். அதையே பெயராக மாற்றி தேஜா என்று வைத்துள்ளீர்கள் போலும் “

“ஓஹ். நல்ல ஆராயிச்சி தான். “ என்றவர் ,

“பெண்ணே நீ யார்? உன் பெயர் என்ன ?” என்று வினவவும்,

“அது எதற்கு உங்களுக்கு? அனாவசியமாக என்னைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் “ என்றாள்.

“எது அவசியம், எது அனாவசியம் என்பதை நான் அறிவேன் பெண்ணே. தற்போது உன்னை பற்றிய விவரம் கூறு”

“என்னைப் பற்றிய விவரம் தங்களுக்கு எதற்கு? முன்பின் அறியாத பெண்ணிடம் இப்படித் தான் பேசுவீர்களா?”

“நேற்றைக்கும், இன்றைக்கும் சந்தித்து இருக்கிறோம். இதில் எப்படி முன் பின் அறியாதவர் என்பதாம் ?

“இந்தச் சந்திப்பிற்கு எல்லாம் விவரங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை ஐயா. நான் லக்ஷ்மியை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன்” என்றவள் , தற்போது அவளின் குரலில் லக்ஷ்மியை அழைக்க, லக்ஷ்மியோ தன் தோழியைக் கண்டு கொண்டு , ஆடி அசைந்து அவள் அருகில் வர, அந்தப் பெண்ணோ லக்ஷ்மியிடம் பேசியவாறே அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டாள்.

சற்று தூரம் சென்ற பின்னர் தன்னைத் திரும்பிப் பார்ப்பாளோ என்ற எண்ணத்தில் இளவரசர் நின்று இருக்க, அவளோ திரும்பிப் பார்க்காமலே சென்று விட்டாள்.

அதனைக் கண்டுச் சிரித்த இளவரசர் சுற்று முற்றும் நோக்க, அங்கே ஒரு மரத்தின் அடியில் தன் புரவியை மேய்த்துக் கொண்டு ரதா நின்று இருந்தான். இளவரசர் அவனிடம் புன்னகை புரிய , அவரிடம் தலையசைத்து விட்டு ரதா தன் புரவியோடு அந்தப் பெண்ணின் பின் சென்றான்.

பின்னர் இளவரசர் அங்கிருந்து கிளம்பி போர் பயிற்சி பாசறையில் சிறிது நேரம் தங்கி இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தி விட்டு மாளிகைக்குத் திரும்பினார்.

முதல் நாள் தான் இட்டக் கட்டளைகளை அதிகாரிகள் சரியாக நிறைவேற்றுகிறார்களா என விசாரித்துத் தெரிந்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து சுபோத் வந்து சேனாதிபதி சந்திக்க விரும்புவதாகக் கூறவும், அவரை அழைத்து வரக் கூறினார்.

இளவரசர் சேனாதிபதி வந்ததும்

“வணங்குகிறேன் சேனாதிபதி. “ என்றார்.

சேனாதிபதியும் “வணங்குகிறேன் யுவராஜ்” என்றார்.

‘தாங்கள் மிகவும் அவசரமாகச் சந்திக்க விரும்புவதாக சுபோத் கூறினார். எதுவும் அவசரமான காரியமா?” என்று வினவினார் இளவரசர்.

“ஆம் யுவராஜ். நாளை ஆச்சாரியார் உஜ்ஜைன் நகருக்கு விஜயம் செய்கிறார்”

“ஓ. என்ன விஷயமாக வருகிறார்?

“என்ன யுவராஜ் இப்படிக் கேட்டு விட்டீர்கள்? நகரில் கிளர்ச்சி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. தங்களைக் கொல்ல முயற்சி நடந்து இருக்கிறது. அத்தோடு நகருக்கு உண்டான தானிய வகைகள் அனைத்தும் தலைநகரில் இருந்து வரவழைக்க வேண்டும் என்றீர்கள். இவை எல்லாம் ஆச்சாரியார் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் எவ்வாறு நடக்கும்?” என சேனாதிபதி கூறவும், கோபத்தில் தன் கைகளில் இருந்த சிறு பெட்டி ஒன்றை தூக்கி எறிந்தார் இளவரசர். இதைக் கண்ட சேனாதிபதி திகைத்து நின்று இருந்தார்.

-தொடரும்-
 
Status
Not open for further replies.
Top Bottom