யட்சகன் : 3
பவ்யா நீண்ட வருடம் கழித்து லண்டனில் இருந்து தன்னை பார்க்க வரப் போகும் செய்தியைக் கேட்டதில் இருந்து சந்தோஷத்திலும் ஆரவாரத்திலும் அந்த பழமை வாய்ந்த பிரமாண்ட கட்டிடத்தை புதுப்பித்து நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் அழகாக வடிவமைத்திருந்த கட்டிடத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் வீரபாண்டி.
வீரபாண்டி அந்த கிராமத்தின் ஊர்தலைவராக பல வருடமாக இருந்து வருகிறார். இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த ஊரில் பெரும் மதிப்போடும் செல்வாக்கோடும் இன்னும் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டும் பொதுநலன் ஆற்றி வருகிறார். அந்த ஊருக்கு பாத்தியப்பட்ட அனைத்தையும் அவர் தான் நிர்வகிக்கிறார். ஊரில் நடக்கும் பிரச்சனைகளாகட்டும் , திருவிழா ஆகட்டும் அங்கு அவர் தலைமையில் தான் நடந்தேறுகிறது.
வீரபாண்டியின் சந்தோஷமோ தன் மகள் பவ்யாவிடம் இருந்தது. தன் மகள் எப்போது வருவாள் என்று வீட்டு வாசலைப் பார்த்த வண்ணம் மகளின் வரவிற்காக இங்கு அவர் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் பவ்யாவோ அங்கு ஊரின் எல்லையில் சாம் மற்றும் சவிதாவை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தார். நிதாவோ சவிதாவின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள்.
சவிதா தன்னை தள்ளிவிட்டதை தொடர்ந்து கோபத்தோடு எழுந்த சாம் தன் உடையை குனிந்து பார்த்தான். உடை முழுவதும் புழுதியும் மண்ணுமாக இருக்க, தன் இந்த நிலைக்கு காரணமானவளை கொல்லும் வேகத்துடன் அவளை நோக்கி திரும்பினான். ஆனால் அவளோ அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தாள். எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தவள் முகம் சட்டென்று பிரகாசமாக வேகமாக அந்த திசையை நோக்கி ஓட எத்தனித்தவளை தடுத்தான் சாம்.
"ஹலோ மேடம்! எக்ஸ்யூஸ் மீ! நீ பாட்டுக்க வந்த! என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டுட்டு நீ பாட்டுக்க ஓட போனா என்ன அர்த்தம்?" – சாம்.
"ம்ம்ம்... எனக்கு வேலை இருக்குன்னு அர்த்தம்" – சவிதா.
"ஓய் நில்லு! என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டதுக்கு மரியாதைக்காகவாவது ஒரு சாரி சொல்லணும்னு உனக்கு தெரியாது! உங்க ஊரில் இந்த சாரி எல்லாம் சொல்ல மாட்டிங்களா?" - சாம்.
அதை கேட்டு சாமின் எதிரில் வந்து நின்ற சவிதா அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, "ம்ம்ம் சாரி தான சொல்லிட்டா போச்சு!" என்றவள் அவனை மறுபடியும் கீழே தள்ளினாள். தன்னைப் பிடித்து கீழே தள்ளுவாள் என்று எதிர்பார்க்காத சாம் கீழே விழுந்தபடி அவளை அதிர்ச்சியோடு பார்க்க அவனுக்கு நேராக இடுப்பில் கை வைத்து முறைத்த படியே நின்றாள்.
"ம்ம்ம் எங்க ஊரில் தெரியாமா தள்ளிவிட்டாதான் சாரி கேட்பாங்க? தெரிஞ்சே இடிக்கணும்னு வரவங்ககிட்ட சாரி கேட்க மாட்டாங்க" – சவிதா.
"ஹேய் யூ! எடக்கு நாட்டான்! நீ என்ன சொல்ற நான் உன்னை வேணும்னே இடிச்சேன்னா சொல்ற! ஆர் யூ கிரேஸி!" – சாம்.
"கிரேஸா! ம்ம்ம் அது எங்க பக்கத்து வீட்டு நாய்! அதை எதுக்கு நீ கேட்குற இப்ப?" – சவிதா.
"யூ ! இடி.." 'இடியட்' என்று சொல்லி திட்ட வந்தவன் வேகமாக அதை வாய்க்குள் முழுங்கிக் கொண்டே "அது கிரேஸ் இல்லை கிரேஸி! நான் உன்னை கிறுக்கா பிடிச்சிருக்குனு திட்டுறேன்! எடக்கு நாட்டான்!" – சாம்.
"ஓ.. ஹோ! அப்ப அந்த நாய்க்கு கிறுக்குனா பேர் வச்சிருக்காங்க! முதல அந்த நாய்க்கு பேரை மாத்த சொல்லணும்" – சவிதா.
"யூ..! யூ..! உன்னை.. என்ன நக்கலா பண்ற!" என்று திரும்ப எழுந்தவன் "நீ என்னை வேணும்னே இடிக்குறவனு சொல்றியா?" திரும்ப முதலிலிருந்து ஆரம்பித்தான் சாம்.
"ஆமா! இதில் என்ன சந்தேகம் உனக்கு? இங்க என் முன்னாடி நீ மட்டும் தான இருக்க! உன்னை தான் சொல்றேன்! இவ்வளவு பெரிய உருவம் வரது உனக்கு கண்ணுக்கு தெரியலயோ? உன்னால என் பஸ் போச்சு?" என்று அவனிடம் குறைபட்டவள் அவனை கத்திவிட்டு எதிரில் வந்த மாட்டுவண்டியை நிறுத்த சென்றுவிட்டாள், அவளிடம் பேச முனைந்த சாம் அவள் சென்று அந்த மாட்டு வண்டியை நிறுத்துவதை பார்த்துவிட்டு "டிஸ்கஸ்டிங்!" என்று வாய்க்குள் முணுமுணுக்க ஒரு மூதாட்டி அவர்களை கடந்து சென்றார். அவரை பார்த்த சவிதா வேகமாக வா என்று கை காண்பிக்க அவர் வேகமாக சவிதா அருகில் சென்றதும் அவரை அந்த வண்டியில் அமர வைத்துவிட்டு சவிதா திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
சவிதாவை பார்த்த பவ்யா அவளை தடுத்து நிறுத்தினார். அவர்க்கு சவிதாவின் முகம் நெருங்கிய உறவை ஞாபகப்படுத்த அவளிடம் அவளது தந்தை தாய் பற்றி விசாரித்தார்.
"ஏன்மா? உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே? யார்மா நீ?" – பவ்யா.
"நானா? நான் சவிதாராணி!" – சவிதா.
"ம்ம்ம் சண்டிராணினு வச்சிருக்கணும்! அதான் கரெக்டா இருக்கும்" என்று சாம் இங்கு முணுமுணுத்துக் கொண்டான்.
"நீங்க யாரு? ஊருக்கு புதுசா?" – சவிதா.
"ம்ம்ம் பழசா இருந்தா மட்டும் என்ன செய்யப் போற?" – சாம்.
"நா உன்ன கேட்டனா?" என்று சாமிடம் கூறிவிட்டு, பவ்யாவிடம், "நீங்க சொல்லுங்க ம்மா உங்களுக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லாத,மாதிரி இருக்கே!" – சவிதா.
"சம்பந்தம் இருந்தா மட்டும் என்ன செய்யப் போற" – என்று சாம் மறுபடியும் இங்கு முணுமுணுக்க
"எங்க போறிங்க?" என்று சாமை எடை போட்டபடி சவிதா கேட்க பவ்யா சிரித்தார்.
"அடேய்யப்பா! நான் கேட்ட கேள்விக்கு பதிலா! எத்தனை கேள்வி கேட்டுட்ட நீ! எங்களுக்கும் கொஞ்சம் பதில் சொல்ல டைம் கொடுமா!" என்று பவ்யா சொல்லிச் சிரிக்க
"எங்க குலம் கோத்திரம் சொன்னா தான் அம்மா நீங்க உங்க பூர்வீகத்தை சொல்வீங்களா" என்று நிதா கேட்கவும் சவிதா சிரித்தாள்.
"அப்படி எல்லாம் இல்லை ம்மா! காலம் கெட்டுக் கெடக்குது இல்லையா! அதான் இப்படி!" என்று சவிதாவும் கூறிவிட்டு அவர்களுடன் பேசியபடியே நடந்து வந்தாள்.
சாமுடன் மல்லு கட்டி நிற்கும் அந்த பெண்ணை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த நிதா பவ்யா பேசியதும் தானும் இணைந்து கொண்டாள்
"ஹாய்! நான் மனுநிதா! இது எங்கம்மா பவ்யா! நாங்க லண்டனில் இருந்து வருகிறேம்" என்று நிதா சொன்னது தான் தாமதம் சவிதா பரபரப்பானாள்
"ஹேய் நீங்க தான் பவ்யாவா? நீங்க அய்யாவோட பொண்ணு தான! உங்களை கூட்டிட்டு போகத்தான் நான் இங்க வந்ததே! நடுவில் அந்த பாட்டிக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துருச்சு! என்னை மன்னிச்சிடுங்க! வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று சவிதா அவர்களை வீட்டிற்கு அழைக்க நிதாவும், பவ்யாவும் அவளுடன் சேர்ந்து பேசியபடியே நடக்க ஆரம்பித்துவிட்டனர். அப்போது சாம் சவிதாவை கைதட்டி அழைத்தான்.
மூவரும் அவனை பார்க்க,
"ஹலோ! என்ன நீங்க பாட்டுக்க போறீங்க? இந்த லக்கேஜை எல்லாம் யார் எடுப்பா?" – சாம்.
"ம்ம்ம் யார் எடுப்பான்னு கேட்டா என்ன அர்த்தம்? அவங்க துணைக்கு வந்த நீ தான் அதை எடுக்கணும்! வேலைக்காரனுக்கு ரொம்ப தான்மா இடம் கொடுக்கிறீங்க பவ்யா ம்மா!" என்று சவிதா சொல்லிவிட்டு திரும்ப சாம் அதிர்ந்தான்.
அதை கேட்ட நிதாவும் திகைத்த முகத்துடன் நிற்க, பவ்யாவோ வேகமாக "அய்யோ! சவிதா! அவன் வேலைக்காரன் இல்லம்மா! என் அண்ணன் பையன் பேர் சாம்!"
"என்னது வேலைக்காரன் இல்லையா? பார்த்தா அப்படி தெரியலையே! வேலைக்காரன்னு அடிச்சி சொல்லுற மாதிரி பத்து அம்சம் நல்லா பொருந்தி இருக்கு அவர்க்கு" – சவிதா.
"ஓய்! என்ன விட்டா ஓவரா பேசுற! நான் வேலைக்காரனா? என்னப் பார்த்தா அப்படித் தெரியுதோ?" – சாம்.
"ஆமாம்" என்று சவிதா சொல்ல சாம் கோபத்தில் இருக்க.
பவ்யா சவிதாவிடம் "தப்புமா சாமை நீ ரொம்ப தான் கிண்டல் பண்ற!" என்று பவ்யா சவிதாவை கண்டிக்க அதன்பின் சவிதா அமைதியாகிவிட்டாள்.
நிதாவும், பவ்யாவும் சாமிடம் இருந்து லக்கேஜை வாங்க முனைய அவர்களை தடுத்தான் சாம்.
"பரவாயில்லை அத்தம்மா! உங்களால் இந்த வெயிட்டை தூக்க முடியாது! நீங்க கையில் வச்சுறுக்கிறதை மட்டும் தூக்கிட்டு வாங்க! நிதா நீ இந்த ட்ராலியை மட்டும் தள்ளிட்டு வா" என்று சொல்லி அவர்களை தடுத்தவன் தானே மற்ற லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு வந்தான்.
அதை பார்த்த சவிதா, "இதை தான் நான் முதலிலிருந்து இருந்து சொன்னேன்! அப்ப குதிச்சுட்டு.. இப்ப நான் சொன்னத அதுவே செய்யிது.." என்று சவிதா வாய்க்குள் முணுமுணுத்தவாறு முன்னே நடக்க,
அதை கேட்ட சாம் சொடக்கிட்டு, "ஹேய் நில்லு! நீ இப்ப என்ன சொன்ன? திரும்ப சொல்லு"
சாமிடம் திரும்பிய சவிதா, "ம்ம்ம் கை தட்டி கூப்பிடுறதை விட்டுட்டு பேர் சொல்லி கூப்பிட பழகிக்கோங்கனு சொன்னேன்!" என்று சொல்ல
அதை கேட்ட சாம் முறைத்தபடி "உன்னை..."
பவ்யா சாமிடம், "போதும் ப்பா! உங்க சண்டையை கொஞ்சம் நிறுத்துறீங்களா"
"சவிதா! என் சாம் ரொம்ப நல்லவன். நீ ரொம்ப தான் என் சாம் கிட்ட வம்பு பண்ற! – நிதா.
அதற்கு "ஓ..." என்று சொல்லிவிட்டு மேலே சவிதா நடக்க ஆரம்பிக்க, சாம் வேறு வழியில்லாமல் லக்கேஜை தூக்கியபடி நடந்தான்.
பவ்யாவும், நிதாவும் சாமை பாவமாக பார்த்தபடியே அவனிடம் இருந்த லக்கேஜை வாங்க முனைய சாம் அவர்களை தடுத்துவிட்டு தானே அனைத்தையும் தூக்கிக் கொண்டு வந்தான்.
சிறிது தூரம் சென்றவுடன் சாமிடம் வந்த சவிதா, "குடுங்க நா ஒரு பையை தூக்கிட்டு வர்றேன்"
"வேண்டாம்மா! அப்புறம் அதுக்கு எதாவது என் கிட்ட சண்ட பிடிப்ப!" - சாம்.
"அய்யோ பாவமேன்னு கேட்டா.. ரொம்பத்தான் போய்யா!" - சவிதா.
"சரி சரி ரொம்ப கெஞ்சி கேட்குற" - சாம்.
"ஏதே! கெஞ்சி கேட்டேனா?" - சவிதா.
"ஆரம்பிச்சிடிங்களா?" - பவ்யா.
"இல்ல ம்மா" - சவிதா.
"இல்ல அத்தம்மா! இந்தா இந்த பேக்கை முதுகுல மாட்டிக்கோ, இத கையில பிடிச்சு உருட்டிட்டு வா!" என்று இரண்டை அவளிடம் கொடுத்துவிட்டு மீதி இருந்த பெரிய இரண்டை சாம் தூக்கி வந்தான்.
சவிதா அந்த பிரம்மாண்ட வீட்டின் முன் சென்று மற்றவர்கள் முன்னேற முடியாமல் தன் இரு கைகளை விரித்து நிற்க அவளை பின்பற்றி வந்த பவ்யாவும் சிறு சிரிப்புடன் நின்றார். நிதா அந்த கட்டிடத்தை பிரம்மிப்புடன் பார்த்தவாறு நின்றாள்.
சாம் மூச்சுவாங்க தான் கொண்டு வந்த பைகளை கீழே வைத்தவன் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான். அங்கு சென்றதும் சவிதா யாரையோ கத்தி அழைத்தாள்.
அதை கேட்ட சாம் தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டே, "ச்சூ இவ என்ன இப்படி கத்துறா! இவ கத்தியே என் ரெண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிடும் போல" என்று சாம் சொல்ல சவிதா அவனை முறைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
வீட்டுக்குள் சென்றவள், “அய்யா அவங்க வந்துட்டாங்க” என்று சவிதா யாரிடமோ பேசுவது இங்கு வெளியே அமர்ந்து இருந்த மூவருக்கும் கேட்க அடுத்த நிமிடம் ஆர்த்தி தட்டுடன் ஒரு பெண்மணி வந்தார்.
அவர் அனைவருக்கும் திருஷ்டி சுற்ற ஒரு வயதான மனிதர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்ததும் "அப்பா!" என்று அழைத்தபடி அவரை கட்டிக் கொண்டு அழுதார் பவ்யா. அந்த பெரியவர் கண்களிலும் கண்ணீர் துளிகள் உதிர்த்தது. இருவரும் இப்படி அழுது கொண்டிருக்க அவர்களை கலைத்தது ஒரு குரல்.
"அய்யா சின்னம்மா ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்காங்க. எதுக்கு கண் கலங்கிட்டு வீட்டுக்குள்ளே கூட்டிட்டு போங்கய்யா!" என்று கண்ணப்பர் சொல்ல அவரது குரலை அடுத்து திரும்பிப் பார்த்தாள் பவ்யா.
அங்கு அவர்கள் வீட்டு கணக்குப்பிள்ளை கண்ணப்பர் நின்று இருந்தார். அவரைப் பார்த்ததும் வேகமாக அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் பவ்யா. அதை கண்ட அவர் வேகமாக பவ்யாவை தடுத்தார்.
"ஏன்மா? என் காலில் போய் விழுந்துக்கிட்டு.. உன் நல்ல குணத்துக்கு நீ நல்லா இருப்பமா" என்று அவர் வாழ்த்த நிதாவிடம் திரும்பினார் பவ்யா.
"அப்பா! இது நிதா! என் பொண்ணு." – பவ்யா.
"ஓ! மனுக்குட்டியா? எவ்ளோ வளர்ந்துட்டா? அப்படியே அவள் அப்.." என்று ஆரம்பித்த வீரபாண்டி பாதியில் நிறுத்திக் கொண்டார். அதை கேட்ட பவ்யாவும் வருத்தமடைந்தார்.
இதை கண்ட கண்ணப்பர் பவ்யாவை மாற்றும் விதமாக சாமை பார்த்து "இது யார்ன்னு சொல்லவே இல்லையேமா?" என்று கண்ணப்பர் சாமை சுட்டிக் காட்டி கேட்க
"இவன் சாமுவேல். இவன்..." என்று பவ்யா சொல்வதற்குள் அவரது காலில் விழுந்து வணங்கினான் சாம்.
"பிளஸ் மீ கிராண்ட்பா!" என்று சாம் சொல்ல பவ்யாவை கண்ணப்பர் புரியாமல் பார்த்தார்.
"இவன் தான் மனோகர் அண்ணன் பையன். அண்ணா வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்னு சொல்லி இருக்கார்." என்று பவ்யா சொல்ல கண்ணப்பர் திகைத்துவிட்டார்.
தன் மகனின் பிள்ளையை பார்த்த சந்தோசம் அவர் கண்களில் தெரிய அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது. தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து திரும்பவும் அணிந்து கொண்டே தன் பேரனை பார்த்தார் கண்ணப்பர்.
அவனை நெட்டி முறித்தவர், "டேய் பேராண்டி! எப்படிடா இருக்கா? உன் அப்பன் எங்க ந்னு இருக்கடா" – கண்ணப்பர்.
"யா ரியலி கிராண்ட்ப்பா" – சாம்.
"என்னடா ரியலி! கிராண்ட்னு சொல்லிகிட்டு! நல்லா தமிழ்ல தாத்தானு கூப்பிடுறா பேராண்டி" என்று கூறி அவர் சாம்மின் கன்னத்தில் இடித்தார்.
அதற்கு வேகமாக "ஓகே தாத்தா" என்று தன் கன்னத்தை தேய்த்தபடியே கூறினான் சாம்.
அப்போது ஏதோ ஞாபகம் வந்தவராய் பவ்யா கண்ணப்பரிடம் திரும்பி, "ஆமா இது யார் ன்னு நீங்க சொல்லலயே!" என்று சவிதாவை பார்த்து பவ்யா கேட்க
"இவ என் பொண்ணு நாச்சியா மகள்மா பேர்.." – கண்ணப்பர்.
"சவிதாராணி" – நிதா.
"என்னது! நாச்சியா பொண்ணா!" என்று பவ்யா வியக்க கண்ணப்பர் சாமிடம் திரும்பினார் .
"டேய் பேராண்டி, இவ உன் அத்தை பொண்ணுடா. உனக்கு முறைப் பொண்ணு. உனக்கு ஞாபகம் இருக்கா?" என்று கண்ணப்பர் கேட்டது தான் தாமதம் சாம் "ஓ! நோ!" என்று பயத்தில் கத்தினான். அதை கண்டு முறைத்தாள் சவிதா.
ஒருவழியாக குசலங்கள் விசாரித்து அனைவரும் வீட்டுக்குள் வர வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த போட்டாவை கண்டு நின்றார் பவ்யா. பவ்யாவை தொடர்ந்து தன் பார்வையை பதித்த நிதாவின் கண்களில் சோகம் தொற்றிக் கொண்டது .
அந்த புகைபடத்தில் வீரபாண்டி அமர்ந்து இருக்க அவருக்கு இரு பக்கங்களிலும் பவ்யா மற்றும் தரங்கிணி நின்று இருந்தனர். வீரபாண்டியின் காலில் அமர்ந்து இருந்தனர் சிறுவயது யவன் மற்றும் மனுநிதா.