Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ரசிகையின் கவிஞன்

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
வணக்கம் நட்புக்களே நான் உங்கள் மேகலா அப்பாதுரை... நிறைய பேருக்கு என்னை தெரியும்ன்னு நினைக்கிறேன். தெரியாதவங்க இனிமே தெரிஞ்சுக்கோங்க...



சகாபத்ததில் எழுதவேண்டும் என்பது எனது நீண்ட நாளைய விருப்பம். அது இன்று நிறைவேறி இருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் புது முயற்சியாய் கவிதை வடிவில் ஒரு கதையை கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இது ஏற்கனவே சங்ககாலம் முதல் இருப்பது தான் என்றாலும் எனக்கு புதிய முயற்சி தானே...



நாம் படிக்கும் நாவலை கவிதை வடிவில் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதே இது.

ரசிகையின் கவிஞன்



ஒரு கவிஞனுக்கும் அவனது ரசிகைக்கும் இடையே நடக்கும் உணர்சி மிகு போராட்டமே கதை. இதில் பெரிசா கருத்தெல்லாம் இல்லீங்க... ஒன்லி காதல்... காதல்... காதல்... வாங்க ரசிக்கலாம் ரசிகையையும், அவளது கவிஞனையும்.



இவர்கள் தினமும் வருவார்கள் உங்களைக் காண வரவேற்க காத்திருங்கள்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
ரசிகையின் கவிஞன்
1

தமிழே.....
ஆம் இப்படித்தான் தொடங்கத்
தோன்றியதெனக்கு....
இன்று முதன் முதலாய்
உன் கவிபடித்தேன்...

உன் வார்த்தைகளில் தான்
எத்தனை லயங்கள்..
உந்தன் பேனா முனையிலிருந்து
வெளிவரும் மையில்
கவிதையென்னும் கூர்மையான
ஆயுதம் படைக்கிறாய்....

வீரியம்மிக்க வார்த்தைகளைக் கொண்டு
சமூகத்தின் மீது
அஹிம்சை போர்த் தொடுக்கிறாய்....

கடவுளுக்கும் கவிபடைக்கிறாய்...
காதலிக்கும் கவிபடைக்கிறாய்...

உன் கவிதைகளை கண்டபின்
உன் காதலி
நானாயிருக்கக் கூடாதாவென
ஏக்கங் கொள்கிறேன்...

மரபுக்கவிதையாய் இருந்தவள்
புதுக்கவிதை புனைகிறேன்....

எழுத்தென்றாலே
எட்ட நின்றவளை
கவிஞியாக்கிய பெருமை
உன்னையே சாரும்...

கவிஞனே....
எனக்காய் ஒரு காதல் கவி
படைப்பாயா....?

2
பேரன்பே....
இன்று உன் காதல் கவி படித்தேன்...
நீ யாருக்காய் எழுதினாயோ....
அதை எனக்கே எனக்காய்
எழுதியதாய் அகமிழ்ந்து
ஆழ்ந்தேன் அதனுள்...

உந்தன் எழுதுகோலாய்
நானிருக்க கூடாதா...
உந்தன் விரல்களோடு
உறவாடியபடியே
இருந்திருக்கலாமே என்ற
எண்ணம் தோன்றுவதை
தவிர்க்க முடியவில்லை...

மீண்டும் மீண்டும் படிக்கிறேன்
தொள்ளாயிரத்து
முப்பத்துதேழாவது தடவையாய்....

அப்படி என்னத்ததான் படிக்கிற
என்ற என் தாயின் கேள்விக்கு
பதிலளிக்க முடியவில்லை என்னால்...

தனியாய் சிரித்த என்னை
பைத்தியமே என்று
திட்டிவிட்டு சென்ற
தங்கையின் கன்னத்தில்
முத்தமிட்டதில் - அவளோ
அதிர்ச்சியின் உச்சத்தில்....

உன் கவியோடு
புழக்கடை மாமர ஊஞ்சலில்
தஞ்சமடைகிறேன்
செவ்வெறும்பு என்னை
கடித்ததைக்கூட அறியாமல்....

என்ன மாயம் செய்தாயடா...
எந்நேரமும் உனை பற்றியே
சிந்தித்து சித்தம் கலங்கி
நிற்கிறேன்.....

கவிஞனே....
உன் கவிதையாய் நான் மாறவா...

3
அன்பனே...
உன் கவி கண்டு பித்தான நான்
உனைக் காண துடிக்கிறேன்.

நீ எப்படி இருப்பாயென
யோசித்து யோசித்து
பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன்.

நீ மணமானவனா?
இல்லையா?
நினைக்கும் போதே
நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது.

உனக்கு மணமாகியிருக்க
கூடாதென ஊர்
எல்லைச்சாமியிடம்
நேர்த்திகடன் வைத்தேன்.

என் எண்ணங்களை
வண்ணங்களாக்கி
உனக்கொரு - கவிதை
வரைந்தனுப்பி இருக்கிறேன்...

உன் பதிலுக்காய்
காத்திருக்கையில்
என் நகங்கள் முழுக்க
மூன்றாம் பிறைகளாய் தரையில்‌....

மீண்டும் ரசிக்கலாம்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
4

காத்திருத்தல்
எவ்வளவு துயரமான நிகழ்வென்பதை
உன் பதிலுக்காய் காத்திருக்கும் இத்தருணங்கள் எனக்கு உணர்த்துகிறது...

சிலமணிநேர காத்திருத்தலே சாத்யமில்லை என்று புலம்புகிறேன்...
உன் முகநூல் குறுஞ்செய்திக்காய் என் கண்கள் கைபேசியின் திரையை விட்டகலாமல் காத்திருக்கிறது‌...

முகநூலில் உன் சுயமியை பரிசோதித்து ஏமாந்தேன்
உனக்கு பாரதியே
பிடித்தம் போலும்....
எனக்கு பிடித்தம் நீதானென்பதை எப்படி சொல்வேன் உனக்கு...

உன் நிழற்படம் தேடி
உன் முகநூல்
கணக்கை முற்றுகை
இட்டு ஏமாந்து போகிறேன்...

உன் பெயரைத் திரும்ப திரும்ப உச்சரித்துப் பார்க்கிறேன்
அமுதின் சுவை இதுதானோ...!!

உன் ஒவ்வொரு கவியும்
என்னைச் சுற்றி பிணையப்பட்டது போலொரு உணர்வு... !

காத்திருத்தல் எவ்வளவு நரகமோ அதே போல் காத்திருத்தல் அவ்வளவு சுகமும் கூட
உன்னையே எண்ணிக் கொண்டிருப்பதால்....!!

5

இதோ உன் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஒளி
என் காதில தேனாய் பாய்கிறது....!

கைகள் நடுங்க...
இதயம் படபடக்க
உன் செய்தியை திறக்கிறேன்...!!

உன் செய்தியும்
கவிதையாகவே இருக்கின்றது
கண்களில் கண்ணீர் வரவா போகவாவென்றிருக்க
உன் கவிதையை படி(ரசி)க்கிறேன்...!

கவிஞனின் கவி.....!!!

ரசிகையே....!
உன் கவிகண்டேன்....!!

நீ எண்ணி மகிழ
இராமயணம் படைத்த
கம்பனுமல்ல..

நீ ஏங்கித் தவிக்க
முண்டாசுகவி
பாரதியுமல்ல..

நீ மருகி தவிக்க
பாரதிதாசனுமல்ல..

கவிதையை ரசி..
கவிஞனை ரசிக்காதே..

என்னில் என்னவள் ஆட்கொண்டிருக்கிறாள்..
அவளை எண்ணியே
நான் கவி படைக்கிறேன்...

காதலின் ஏக்கம்
என்னவென்பதை
உணர்வேன் நான்..!

ஏனெனில் என்னவளின் கடைக்கண் பார்வைக்காய்
நானும் ஏங்குகிறேன்..!!




6
கவியே...
தலையனை என் கண்ணீர் துளிபட்டு கதறித்துடிக்கிறது....

என் தலை முல்லை
அவிழ்ந்த என் கூந்தலை விட்டு நகரமறுக்கின்றது...

உன் மனதில் ஒருத்தி இருக்கிறாளென்ற இடியை சத்தமின்றி இறக்கிவிட்டாய்
என் தலையில்....

மரணவலி என்பார்களே
அது இதுதானோ ....
மீண்டும் படித்துப் பார்க்கிறேன்
எத்துணை முறை படித்தாலும் வரத்தைகளெல்லாம் வார்த்தெடுத்த அச்சுக்களாய் அப்படியே....

கினி.. கினியென ஒலித்த பால்காரரின் மணியைவிட என் தாயின் குரல் ஓங்கி ஒலிக்கிறது பால் வாங்கடியென்று....

வந்த கண்ணீரை நீர்குடித்து விழுங்கி பால் பாத்திரத்துடன்
வாசல் வருகிறேன்....
எதிரில் எதிர்வீட்டு அவன்....

இவனொருவன் வெளியே தலைத் தெரிந்தால் போதும்
என்னையே நொந்தபடி வாங்கிய பாலுடன் விருட்டென்று உள்நுழைந்து கதவடைக்கிறேன்....

பால் பொங்கி வழிகிறது
அடுப்பின் தீஜுவாலையில்
என் மனதைப் போலவே...

உன் கவி பொய்யாயிருக்க கூடாதா...
எப்படிப் பொறுப்பேன் நான்.... பொங்கிய பால் திரிந்து போனது என் கண்ணீர் துளிபட்டு...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
ரசிகையின் கவிஞன்....

7

கவஞனின் கவி
~~~~~~~~~~~~

என்னவளே....
ஏனடி கொல்கிறாய் என்னை....
உன் ஓர விழி பார்வை ஒன்று போதுமே நான் மோட்சம் பெற...

சந்திரனிற்காய்
காத்திருக்கும் அல்லியாய்
தவம் கிடக்கிறேன்...
உன் வருகையை அறிவிக்கும்
உன் கொலுசொலி என் காதுகளை எட்டவே இல்லையடி....

எட்டி எட்டி பார்த்து
ஏமாந்து நிற்கிறேன்...
பக்கத்து
பெட்டிக்கடைக்காரனுக்கு
கூட தெரிந்திருக்கிறது
அந்த பொண்ணை காணோமென்கிறான்...

புகைபழக்கம் இருந்திருந்தாலாவது புகைத்து ஆற்றியிருப்பேனடி
என் சகியயே...
எழுத்துமட்டுமே அறிந்தவனென்பதால்
எழுதி ஆற்றிக் கொள்கிறேன்...

ஆறும் ரணமாயிது...?
ஆற்றுப்படுத்த
நீ என்று வருவாயடீ
என் கண்ணே...
காத்துகிடக்கும் வலியை விட உன்னை காதலிக்கும் வலி கொடுமையாயிருக்குதடி....

கண்கள் உனைக் காணவும்...
காதுகள் நின் சிரிப்பொலி கேட்கவும் என் கைகள் உன் கரம் பற்றவும் துடித்துக் கொண்டிருக்குதடி....

ஊரில் உள்ள பெண்களெல்லாம் எனை கண்ணனாய் பார்க்க
நான் என்றுமே உன் ராமனென்பதை அறிவாயோ பெண்ணே...

சகியே...
நீ என்னை
பார்க்க வேண்டாம் ...
பேச வேண்டாம்..
கொஞ்ச வேண்டாம்...
வெளியே மட்டும் வா...
உனை பார்த்துக்கொண்டே இருக்கும் வரம் ஒன்றே
போதுமடி எனக்கு...!!

8

கவிஞனே....
உன் மீது கோபங்கொள்ளவும் இயலவில்லையாடா....

உன் கவி உணர்த்திய வலி
என் நெஞ்சில்
குத்தீட்டி சொறுகியது....

பகலும், இரவும் ஒன்றாகிப் போனதெனக்கு முடங்கிய அறைக்குள்ளேயே...

உன் வேதனை எந்தன் வலியாகியது...
அவள் யாரேன உரை எனக்கு
உனக்காய் தூது செல்கிறேன்...
அப்பொழுதாவது
என் வலி குறையட்டும்.
உனக்கு பிடித்ததாவது உனக்கு கிட்டட்டும்....

உன்னையே எண்ணிக் கொண்டிருப்பேன் என முன்கூட்டியே உணர்நதே எனக்கு மீராவென பெயரிட்டனரோ.....

அம்மீரா கண்ணனை எண்ணி கானம் பாடினாள்....
இம்மீரா உன்னை எண்ணி கவி படைக்கிறாள்....

மீரா என்றுமே மீராதான்
ராமனின் சீதை யாரெனக்கூறு
தூது செல்கிறேன்
அனுமனாய் அல்ல மீராவாய்...

9

ஒரு வழியாய்
அவனுக்கு எழுதிய கவியை
லட்சம் யோசனைக்கு பின்
அனுப்பிவிட்டேன்...

என்ன நினைப்பானவன்
என் செய்தி கண்டு...
இவளுக்கு பைத்தியமென
ஒதுக்குவானோ....

யாராயிருப்பாளவள்...!
அவனைக் கவர்ந்தவளைக் காணவேண்டுமெனக்கு...!!
என்னவனுக்கு பொறுத்தமாயிருப்பாளா...?

அவன் பெயர் என்னவாயிருக்கும்...?
எப்பொழுதும்
உன் சிந்தனையுடனே திரிகிறேன்..!

உனது வலி எனது வலியானபின்
உன் மகிழ்வும் எனக்கு மகிழ்வுதானே....
உன்னை நினைத்திருப்பது
என் மகிழ்வென்றால்...
அவள் உன் மகிழ்வாயிற்றே...

சிறிதே பாரம் இறங்கியதாய் உணர்கிறேன்....
நீயே வேண்டுமென
நினைப்பதை விட
உன் சந்தோசம் எனக்கு வேண்டுமென நினைப்பதே காதலென்பதாய் உணர்கிறேன்..

சிறைவாசத்தை முடித்துக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளிவருகிறேன்...
எதிரே அவன் என்னைக் கண்டு பிரகாசமாகிறான்...

ம்ஹும் .. நான் உன்னை நினைத்தேங்குகிறேன்..
இவனோ எனக்காய் ஏங்குகிறான்..
இவன் இங்கு வந்த நாளாய் பார்க்கிறான்...
இன்றுதான் என்னால் உணரமுடிகிறது
அவன் காதலை...
பாவம் அவன்...

காதல்...
என்னவெல்லாம் செய்கிறது..
லேசான மழைச்சாரலில்
மண்வாசத்தோடு முகர்ந்து சுவாசிக்கிறேன் உன் நினைவகளைச் சுமந்தபடி...

மீண்டும் ரசிக்கலாம்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
ரசிகையின் கவிஞன்

10

கவிஞனின் கவி...

மீரா...
இது என்னவளின் பெயராயிற்றே...
நான் காதலிப்பவளும் மீரா...
என்னை காதலிப்பவளும் மீரா...
என்னை விந்தையிது...

என்னவளே...
உன்னிடம் தூது செல்ல தோழியொருத்தி கேட்கிறாள்...
அனுமதி தரவா...
அமைதி காக்கவா..

இரண்டு யுகமாய் கடந்த இவ்விரு நாட்களையும் நான் வரமாய் எண்ணுகிறேன்..!
ஆம்.. இத்தனை நாட்கள் செய்த தவத்திற்கு பலன் கிட்டியது...

உன் விழிகளின் பாவையிரண்டும் என்னை நோக்கிப் பயணித்ததை
பார்த்து பரவசமாகிப்போனேன்..

என்னை ஏறெடுத்தும் பார்க்காத நீ நின்று என்னை கவனித்துச் செல்கிறாய்...
பாவம் பைத்தியகாரனென்று கூட நினைத்துக்கொள்...
ஆனால் உன் தரிசனத்தை மட்டும் தடை செய்து விடாதே....

மழையின் சுவாசக்காற்றை மட்டும் நீ சுவாசிக்கவில்லையடி அதில் கலந்திருந்த என் மூச்சுக் காற்றையும் சேர்த்து தான் சுவாசித்தாய்..

உன் கண்களில் காதல் வழிகிறது..
ஆனால் அது எனக்கானதா என்று அறிமுடியாமல் தவித்துப் போகிறேனடி..

போகிற போக்கிலாவது ஒரு வார்த்தை பேசிவிடேன்
ஜென்ம சாபல்யம் அடைந்துவிடுகிறேன்...

உன் நாபிக்கமலத்திலிருந்து
உன் உதடுகளுகிடையில் சிக்கி என் பெயரை உச்சரிக்க காத்திருக்கிறேனடி சகியே
கண்திறவாயா....?

11

அவளும் மீராவாமே..
என் பெயரில் இருப்பவளையே காதலிக்கிறானா...
இல்லை
விளையாடுகிறானோ
என்னிடம் ..

கண்களைக் கட்டிக் கொண்டு ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமாய் உள்ளது என் காதல்...

ஏனடா இம்சிக்கிறாய் என்னை..?
நீ தவிக்கும் பொழுதெல்லாம் என் மனம் கசிந்துருகுகிறதே...

உனக்கோர் காதலி உண்டென மூளைக்கு உரைத்தாலும்
மனம் மந்தியாய் மாறி உன்னிடமே தாவுகிறது..

உன் நிழற்படம் காண வேண்டும் எப்படி கேட்பது உன்னிடம்

ச்சீ வெக்கங்கெட்ட மனதே என மனசாட்சி கேள்வி கேட்டதை என்னவென்று சமாளிக்க....

உன்னை பார்த்தே தீரவேண்டும்
அடுத்த குழந்தையின் பொம்மைக்கு ஆசைப்படும் குழந்தையாய் முரண்டுகிறது மனம்....

மீண்டும் ரசிக்கலாம்
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
ரசிகையின் கவிஞன்
✍️
✍️
✍️


12

கவிஞனே...
உன் ரசிகையின்
வேண்டுகோள் இது...

கவியில் கண்ட உன் உருவத்தை
நிஜத்தில் காண விழைகிறேன்...
பாரதியின் படத்தில் மறைந்திருக்கும் என் பாரதியே...
உந்தன் காதலி தரிசனத்திறக்காய்
நீ ஏங்குகிறாய்....
உன் தரிசனத்திற்காய்
நான் ஏங்குகிறேன்..

என் செயல் கண்டு கோபம் கொள்ளாதே...
உன்னவள் ரொம்பவும் அகங்காரியோ..

என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அவள் உன்னைப் புறக்கணிப்பதை..
கோவம் கொள்கிறேன் அவள்மீது...

உன் மீது காதல் கொள்ளத்தான் கொடுப்பினை இல்லை அவள் மீது கோபமாவது பட்டுக்கொள்கிறேனே...

உனக்காய் தவிக்கும் மனதினை அடக்க வழிதெரியாமல் தவிக்கிறேன்...
சிறிது சிறிதாய்
மாற்றிக் கொள்ள முயல்கிறேன்..

நிழற்படத்தை அனுப்பு இது நிஜமில்லை என்பதையாவது உணர்கிறேன்....

13

ரசிகையே..
என்னவளைக் கோபிக்காதே..
அவளின் எண்ணத்தில் நானில்லை என்பது என் தவறேயன்றி அவளது தவறில்லையே....

காதலின் காந்தவிசையை அவள் காணவில்லை என்னிடம்..
காதலுக்கு முக்கிய காரணியே
ஏதோ ஒரு ஈர்ப்பு தானே..

அவள் கண்களில் நான் கண்ட ஈர்ப்பை என்னில் எதிலுமே அவள் காணவில்லை போலும்
கோவிக்காதே பெண்ணே..

என் நிழற்படத்தை கண்டாவது நிஜத்தினை உணர்ந்து கொள்கிறேனென்றாய்...
இதோ என் முகநூலில் இன்று முதல் நான் நிஜமானவனாக...

என் தந்தைக்கு பிடித்த பாரதியும்
தாய்க்கு பிடித்த கண்ணனுமாய்
நான் பாரதிகண்ணன்
ஆனேன்..

இத்தனை நாட்களாய் கண்ணன் மறைந்து பாரதி மட்டுமே இருந்தான்
இனி பாரதி கண்ணனாய்...

14

இது நீயா..?
நிஜமாகவே நீயா...?
இத்தனை நாட்களாக
உனையா ஒதுக்கினேன்..?

உன் கவி முழுமைக்கும் சொந்தக்காரி நானா..?
அந்த அகங்காரி நானாய் போனேனா..?

நிச்சயமாய் நீ இவ்வளவு தூரம் என்னை காதலிப்பாய் என்பதை நேரில் நான் உணரவில்லை
பருவவயதுக் கிளர்ச்சியென
கடந்திட நினைத்தேன்.

நிச்சயமாய் நீயாய் இருப்பாயென நான் எண்ணவில்லை...
உன் கவிகண்டே காதல் கொண்டேன்...
அக்கவியே எனக்கென்று
அறியா பேதையாய் போனேனே..

ஆர்பறித்த கடலாய்
பொங்கிய மனம்
குற்றாலச் சாரலாய் குதுகலிக்கிறது..

உன்னை கண்ட நாட்களையெல்லாம்
திரும்ப ஓட்டிப் பார்க்கிறேன்
என் நினைவலைகளில்..

அடிக்கரும்பின் ருசியாய் இனித்துக்கிடக்கிறது இதயம்.
படபடத்துப் பறக்கும் பட்டாம்பூச்சியாய்
ஆகாச வீதியில் பறக்கிறேன்..

உனைக் காணத் இதயம் துடிக்கிறது..
இதோ ஒடித் திறக்கிறேன் இத்தனை நாட்களாய் திறந்திறாத என் வீட்டுச் சன்னலை..

உன் வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் உன் கண்களில் பளிச்சென ஒரு மின்னற்கீற்று..
ஆணின் கண்கள் வசீகரமானதென்று உணர்கிறேன் இப்போது...

உனைக் கண்டு கொண்டதாய் காட்டிக் கொள்ளவில்லை நான்..
வெட்கத்தில் மருதாணி இல்லாமேயே சிவக்கிறேன்..
நாணத்தில் துடித்த இதழ்களை பற்களைக் கொண்டு கடிவாளமிடுகிறேன்..

மறைந்திருந்து நோட்டமிடுகிறேன் உன்னை..
உன் கண்கள் என்னை தேடித் தவிக்கின்றன..
உன் முகவாட்டம் எனை ஏதோ செய்ய என்றுமில்லாத் திருநாளாய்
இன்று என்வீட்டு ஜாதிக் கொடியில் பூப்பறிக்கவென மூங்கில் கூடையுடன் வாசலைடைகிறேன்..

உன் முகம் முழுக்க வானவில்லின் வர்ணஜாலம்...
காதல் இத்தனை இன்பமானதா..
ஒயிலாய் ஒவ்வொரு பூக்களாய் என் விரல்கள் பறிக்க
என் இதயத்தில் என் கண்ணனின் கவி எழுதும் விரல்களோடு என் விரல்கோர்த்திருந்தது‌‌.

கண்ணா..
நானே மீரா..
உன் மீரா..
ஆனால் உன்னிடம் கூறப் போவதில்லை நான்.

நீயாக என்னிடம் நேரில் கூறவேண்டும்..
ரசிகையாய் உன்னை காதலிப்பேன்..
மீராவாய் உன்னோடு கண்ணாமூச்சி ஆடப்போகிறேன்..

என் கண்ணனே
ஆடிப் பார்ப்போமா
காதல் கபடியை..

மீண்டும் ரசிக்கலாம்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
ரசிகையின் கவிஞன்
✍️
✍️
✍️
...

15

கவிஞனின் கவி
~~~~~~~~~~~~

அலட்சியமாய்
பார்க்கும் உந்தன்
பார்வையில் தானடி
அமிர்தத்தின் வாசனை
நுகர்ந்தேன்..

நான் அப்படி தானென்ற
உன் திமிரில் தானடி
எனதன்பின்
முழு பிம்பம் உடைய
கண்டேன்..

பிடிக்காதது போலவே
பாவனைகளனைத்தையும்
அம்புகளென தொடுக்கிறாய்..

உனக்கு பிடிக்கும் என்பதனை
நான் அறிவேன்...

ஆனால்
சொல்ல மாட்டேனென்ற
உன் பிடிவாதத்தில் தானடி
என் பிடிமானம் அனைத்தும்
இழந்து நிற்கிறேன்...

உனக்கு எப்போது
என் மீதான நேசம் புரிகிறதோ
அப்போது உணர்த்திடவும்,
உரைத்திடவும்,
உள்ளன்போடு காத்திருக்கிறேன்...

அதுவரை
என்னை எப்போதும் போல் உன் விழிகளின் வீச்சிலேயே கொல்..

நீ கடந்து செல்லும் போது
அலட்சியமாய்
ஓர் ஒற்றை பார்வை பார்ப்பாயே
அது போதும் இப்போதைக்கு எனக்கு...

16

ரசிகையின் மடல்
~~~~~~~~~~~~~

கண்ணா...
உன் கவிதையில்
என்னை மறந்தேன்...
என் பெயரிலோ
என்னையே தொலைத்தேன்..
மறப்பதுவும், தொலைப்பதுவும் காதலில் சாத்தியமே...

நீ என் கண்ணனெனில் நான் மீராவாய் இருப்பது சம்மதமே...

உன்னை விட்டு விலகிடவே எத்தனிக்கிறேன்...
எட்டி நின்று பார்ப்பது இயலாத காரியம் என்றாகிவிட்டது...

கிட்டாதாயின் வெட்டென மறவென்றார்கள்...
எப்படி மறப்பெதென்ற வித்தையை கற்றுதர மறந்துவிட்டார்கள்...

மறப்பதோ... மறைப்பதோ இனி செய்யப் போவதில்லை நான்...
நீ எனக்கானவன்...

இனி தொடர்வேன்..
உன் உயிர் உள்ளவரை..
என் உயிர் உள்ளவரை‌..

17

ரசிகையே...
என் ரசிகையாய் என்னைத் தொடரலாமே அன்றி
காதலியாய் நிச்சயமாய் தொடர இயலாது என்னை...

என் நினைவும், நிஜமும் என்னவளுக்கே...
கனவிலும் அதில்
வேறொருத்திக்கு இடமில்லை...

உன் என் கவி பாதிக்கிறதெனில் இனி இங்கு பதிவிடப்போவதில்லை...

பெண்ணே...
அது என்னவளுக்காய் என்றும் என் கையேட்டை அலங்கரித்து காத்திருக்கும்...

அவளுக்காய் வடித்த கவி அவள் படித்தால் போதுமானது...

ஊர்மெச்சும் கவிஞனென்ற பட்டம் தேவையில்லை எனக்கு...
என்னவளின் இதயம் கிட்டினால் அதுவே சொர்க்கம்...

மன்னித்துக்கொள்...
இனி உன்னோடு உரையாடுவதில் விருப்பமில்லை எனக்கு...

இருந்தாலும் ..
இறந்தாலும்...
என்னவளுக்காய் மட்டுமே...

மீண்டும் ரசிக்கலாம்...
 
Top Bottom