"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்.....
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்,
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்"
இனிமையான பாடல் ஹாலில் இருக்கும் டிவியில் ஒளித்துக் கொண்டு இருந்தது. அதனை கேட்டபடி அறையில் இருந்து வெளியே வந்த யாழினியைப் பார்த்த அவள் தாய் பூரணி ,"முகத்துக்கு அந்த முல்தானி மிட்டியை போடு. விசேஷத்துல முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும்" என்றதால் முகம் கழுவ பாத்ரூம் நோக்கி போனாள். முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்தாள். வட்ட முகம், மாநிறத்திற்கு அதிகமான நிறம், வடிவான முக அமைப்பு என அழகாக இருந்தாள். இந்த அழகும், MBA படிப்பும் அவள் டீம் லீடர் பதவியும் தான் ஆகாஷ் குடும்பத்தை யாழினியை தேடி வரவைத்தது.யாழினியின் குடும்பம் நடுத்தர வர்க்கம். ஏதோ ஒரு கம்பெனியில் ஆபிஸ் அசிஸ்டண்ட் என்ற பெயரில் குப்பைக்கொட்டி குறை சம்பளம் பெற்று அதையும் வீண்செலவு செய்யும் அப்பா, குப்பையையும் கோமேதமாக்கும் அம்மா, IT ஊழியனான அன்பான அண்ணன் என வாழ்பவள் யாழினி. ஆடை ஆபரணங்கள் என ஆசை இல்லாமல் இனிய சிரிப்புடன் வலம் வருபவள். டீம் மக்களுக்கு அன்பான கேப்டன். புத்தகம், பாட்டு என தனக்குள் வாழ்பவள்.
முகத்துக்கு பேக் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வர, "ஒரு புக் கிடைச்சா போதும், ரூமுக்குள்ளேயே கெடக்குற" என்ற தாயின் புலம்பல் கேட்டது. சிரித்தபடி வந்து தாயின் அருகில் அமர்ந்தவள், "புக் இல்லனா, உங்க மகளுக்கு வேற தோழி யாரும்மா இருக்கா?" என்றாள். "மனுஷங்க கூட பேசி பழகு. அந்த மணிமேகலை அம்மாவைப் பாத்தா, 'ஊர்கதை ஊறுகாய் போல இருக்கு. இனி அவங்க கூட பேசியாகணுமே " என்று ஆலோசனை சொன்னார்.
அடுத்தவர் வீட்டுக்கதையை ஆர்வமாக பேசும் நபருக்கு 'ஊர்கதை ஊறுகாய்' என்று பெயர் வைத்து இருந்தார் அவர். பூரணியிடம் இப்படி பட்டப்பெயர் வாங்கி இருக்கும் மணிமேகலை வேறு யாருமில்லை, ஆகாஷின் தாய். சம்பந்தி
என்றாலும் மணிமேகலையின் இந்த குணம் பூரணிக்கு பிடிக்கவில்லை. போனில் பேசும்போதெல்லாம் சீரியல் கதை முதல் பக்கத்து வீட்டுக்கதை வரை பேசிவிடுவார். எதற்கு போன் பண்ணினார் என்பதை மறந்து கதையளந்துவிட்டு கடைசியில், "அப்புறம் பூரணி , எதுக்கு எனக்கு போன் போட்ட ?" என்று கேட்டுவைப்பார். தான் அழைக்கவில்லை, மணிமேகலை தான் தன்னை அழைத்தார் என்பதை புரிய வைத்து , அவர் போன் பண்ண காரணத்தைக் கண்டுப்பிடிப்பதற்குள் பூரணிக்கு அலுப்பாகிவிடும். கதை பேசுவதில் மட்டுமல்ல தற்பெருமை பேசுவதிலும் நிபுணர்.
அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் அந்த குணம் இருந்தது.
மணிமேகலை-சந்திரன் தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் ஆனந்தி, இளையவன் ஆகாஷ். ஆகாஷிற்கு தான் யாழினியை நிச்சயிக்கப்போகிறார்கள். ஆகாஷ் MBA படித்தவன், ஓரளவு உயரம், பார்க்கும்படியான அழகு என தரமான மாப்பிள்ளை.ஆனாலும் யாழினிக்கு அவன் வீண் பெருமைகள் பிடிக்கவில்லை. அக்காவும் தம்பியும் ஏதோ தமிழ் தெரியாதவர்கள் போல இரண்டு தமிழ் வார்த்தைக்கு ஒரு ஆங்கில வார்த்தையை சேர்ப்பார்கள். கேட்க சகிக்காது. நிச்சய தேதி முடிவானதும் ஒருமுறை யாழினியைப் பார்க்க வந்த ஆனந்தி, "எனக்கும் அக்கிக்கும் பீட்சா மேல மோர் லவ். என் வீட்டு குட்டி சாத்தான்களை அதுங்க டாடி கிட்ட விட்டுட்டு வெரி ஆஃபன் பிட்ஸா சாப்பிட போவோம். உனக்கும் பீட்ஸா பிடிக்கும்னா, யு ஆல்சோ கென் ஜாய்ன் வித் அஸ் ஆப்டர் மேரேஜ்" என்று சொல்லி வைத்தாள்.
அந்த பூடகமான பேச்சு யாழினிக்கு புரிந்தது. உங்கள் திருமணத்திற்கு பிறகும் நானும் என் தம்பியும் தான் வெளியில் செல்வோம். உனக்கு வேண்டுமானால் எங்களுடன் வரலாம் என்று சொல்லிவைக்கிறாள். சகோதரனுடன் பிறந்த பெண்களுக்கு உரிய உணர்வு தான் அது. இத்தனை நாள் நமக்கு முதலுரிமை தந்த சகோதரன் திருமணத்திற்கு பின்பு தன்னை விட்டு விலகிவிடுவானோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு. அதை புரிந்துக்கொண்டதால் யாழினி பதில் பேசாமல் இருந்தாள். அதோடு பீட்ஸா என்ற பெயரைக் கேட்டாலே அவளுக்கு பிடிக்காது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அந்த காய்ந்த ரொட்டியை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் விருப்பம் இல்லை. அவளது தாய் செய்யும் கார பணியாரத்தின் சுவையை இந்த பீட்ஸா தர முடியாது என்பது அவள் எண்ணம். இதை உணராத ஆனந்தி அவளது இந்த ஊட்டச்சத்து உணவைப்பற்றி ஒரு மணி நேரம் பேசி விட்டு தான் சென்றாள்.இவர்கள் குடும்பத்துடன் எப்படி வாழ போகிறோம்? என்ற எண்ணம் யாழினிக்கு தோன்றாமல் இல்லை.
தன் யோசனைகளை ஒதுக்கிவிட்டு நிச்சயத்திற்கு தயாராகி கொண்டு இருக்கிறாள். திருமணத்திற்கு பின் மாற்றிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டாள். நிச்சயத்திற்கு அவள் அலுவலகத்தில் யாரையும் அழைக்கவில்லை. நிச்சயம் பெண் வீட்டு செலவு. சிறிய கோவில் மண்டபத்தில் நடத்தப்படுகிறது. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கலாம் என முடிவு செய்திருக்கிறாள். நிச்சயத்தன்று மட்டும் விடுமுறை எடுக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறாள். மனிதர்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறி விடுமா என்ன?
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ