வாகை:
வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.
அத்தியாயம் 3:
"ஆப்ரேஷன் நடக்கனும்னா நீங்க முதல்ல பணத்தை கட்டணும்..." வெள்ளை கோட் அணிந்துக்கொண்டு ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் தொங்கவிட்டபடி, ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கறாராக கூறிவிட்டு செல்ல விக்ரம் மணமுடைந்து போனான்.
"ஐயா... ராசா... எப்படியாவது காசை புரட்டி என் புள்ளைய காப்பாத்துப்பா..." விக்ரமின் அருகில் இருந்த அம்மா அவனின் கையைப்பிடித்து கண்ணீர் வடிக்க, அவன் கண்களிலுமே கண்ணீர்.
"ஆத்தா... நீ கவல படாத. என் உசுர கொடுத்தாவது என் தங்கச்சிய காப்பாத்துவேன்..." என்று ஆக்ரோஷமாக கூறிய விக்ரம், கண்ணீரை துடைத்துக்கொண்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த நோக்கியா பழய ரக பட்டன் ஃபோனை நோண்டியபடி வெளியேசென்றான்.
அதில் இருந்த எண்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டு மன்றாடியவன், ஆங்காங்கே அலைந்து திரிந்து அந்த நாளின் இறுதியில் இரண்டு லட்சம் புரட்டியிருந்தான். ஆனால் தேவையானதோ பத்து லட்சம் ரூபாய். மீதி எட்டுலட்சத்தை எப்படி புரட்டுவது என்று குழம்பியவனின் எதிரில் தெய்வம் போல் வந்து நின்ற ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணி "வேலன்... எப்படி இருக்கீங்க. என்னை தெரியுதா... இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு மால்ல தீப்பிடிச்சிடுச்சி. நீங்க தான என்னையும் என் குழந்தையையும் காப்பாத்தனீங்க..." என்று கூற, பிறகு தான் அவனுக்கு அவர்கள் யார் என்று நினைவு வந்தது. காலில் விழுந்து நன்றி கூறிய அவரை எப்படி மறந்தான் என்று தெரியவில்லை. தீயணைப்பு வீரனாக அவன் காப்பாற்றிய உயிர்கள் பல...
"நீங்க எப்படி இருக்கீங்க... பாப்பா நல்லா இருக்காலா..." என்று அவனும் விசாரிக்க, அவர் திரும்பவும் தீயில் இருந்து தன்னையும் தன் மகளையும் மீட்டு தந்ததற்கு நன்றி கூறினார்.
"என்ன இந்த பக்கம்..." என்று அவர் விசாரிக்க, தன் தங்கைக்கு விபத்து ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டு இருக்கிறது. அதற்கு பணம் வாங்க நண்பனின் வீட்டிற்கு வந்தேன் என தன் நிலைமையை எடுத்துக்கூற, அனைத்து விஷயங்களையும் விசாரித்து அறிந்த அப்பெண்மணி அறுவைசிகிச்சைக்கான முழு செலவையும் அவர் ஏற்பதாக கூறினார்.
முதலில் வேண்டாம் என்று மறுத்தவன் பிறகு அவர் என் மகளின் உயிரை காப்பாற்றியதற்காக என்று பணத்தை திணித்து விட, மகிழ்ச்சியாக மருத்துவமனைக்கு வந்தவனை அவனின் அம்மா அழுகையுடன் எதிர்கொண்டார். தன் மகள் இறந்துவிட்டதாக நெஞ்சில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டவரை வேலன் நினைவில் இருந்த விக்ரம் கண்ணீருடன் உணர்ந்துக்கொண்டு இருந்தான்.
(Note: அங்கு நிற்பது வேலனா அல்லது விக்ரமா என்று குழம்ப வேண்டாம். அது வேலன் தான்... இந்த நிகழ்வுகள் வேலனுக்குத்தான் நடந்தது. ஆனால் நாம் இதை விக்ரமின் பார்வையில் இருந்து பார்ப்பதால் தான் விக்ரம் நின்றிருந்தான்... விக்ரம் கண்ணீர் வடித்தான் என்று கூறியுள்ளேன்... விக்ரம் சில நிமிடங்கள் வேலனாக உணர்ந்து அந்நிகழ்வுகளை அனுபவித்துக்கொண்டு இருந்தான். )
வேலன் தான் தண்ணீரில் விக்ரமை தள்ளிவிட்டிருந்தான். எதிர்பாராத அந்த தொடுகையால், விக்ரமின் அனுமதியின்றி வேலனின் கசப்பான கடந்தகாலம் அவனுள் புக, சில நிமிடங்கள் அவன் வேலனாகவே மாறியிருந்தான். என்னதான் வேலனாக விக்ரம் மாறியிருந்தாலும் இது கடந்தகாலத்தின் நினைவுகள் மட்டுமே என்பதால் விக்ரமால் வேலனின் அந்த கசப்பான கடந்தகாலத்தை மாற்ற இயலவில்லை. கடந்த காலத்தை மாற்றம் செய்ய அவன் ஒன்றும் காலப்பயணம் மேற்கொள்ளவில்லையே... நினைவுகளை மட்டும் தானே கடத்திக்கொண்டான்.
இப்படித்தான் விக்ரம் ஒவ்வொரு முறையும் யாரையாவது தொடும்போது அந்த இடத்தில் தானே இருப்பது போல, தனக்கே அந்த கொடூரமான சம்பவம் நடப்பதுப் போல உணருவான். ஆணாக இருந்தாலும் பிரசவ வலியை உணர்ந்திருக்கிறான், அவனுக்கு தாய் இல்லையென்றாலும் அந்த தாயின் பரிதவிப்பை உணர்ந்திருக்கிறான்... அவனுக்கு விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அந்த விபத்தின் வலியை உணர்ந்திருக்கிறான்... ஆசிட் வீச்சின் வலி, நெருப்பின் எரிச்சல் என்று இத்தனை ஆண்டுகளாக அவன் அனுபவிக்காமல் உணர்ந்த வலிகள் ஏராளம். தற்போது கூட உடன் பிறந்த தங்கை இல்லையென்றாலும் தங்கையின் பிரிவின் வலியை உணர்ந்தான். அந்த வலியின் தாக்கத்தால் மூடியிருந்த அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
முதலில் எல்லாம் யாரையாவது தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் இந்த சக்தி இல்லை இல்லை பிரச்சினை... விக்ரமை பொருத்தவரை இது பிரச்சினை, சாபம். முதலில் எல்லாம் யாரையாவது தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் இந்த பிரச்சினை உண்டாகிவிடும்... ஆனால் இப்பொழுது தன்னை கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டான். அதற்கு முழு காரணம் விஜய் மட்டுமே... தனக்கென எந்த தனிப்பட்ட விஷயங்களும் இல்லை... என்அண்ணன் அனைத்தையும் பார்த்துக் கொள்ளட்டும் என தன் கையை அவனே கொடுத்து தொட்டுக்கொள்... தெரிந்துக்கொள்... என்பான். அவனை தொட்டு தொட்டே தன் சக்தியை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டான் விக்ரம்.
தொடுதல் மூலமாக தேவைப்படும் நியாபங்களை மட்டும் பார்க்க கற்றுக்கொண்டவன், மற்றவர்கள் தொட்டால் தன்னை மீறிப்போகும் நினைவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு, சாபத்தையும் வரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவனை, விஜயின் ஒற்றை வரி தடுத்து நிறுத்தியது... அவ்வரியை விஜய் கூறாமல் இருந்திருந்தால் இந்நேரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கமாட்டானோ என்னவோ... தான் கூறிய சொற்கள் தன் அண்ணனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்று தெரிந்திராத விஜய் அன்று மிகவும் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்துக் கொண்டு இருந்தான்.
வேலனின் கடந்த காலத்தால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தவனின் மூடியிருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதை அழுந்த துடைத்து விட்டவன் மெதுவாக கண்ணைத் திறந்து பார்க்க அவன் மேலே ஒரு வாகை மரம் பூத்துக்குலுங்கிக் கொண்டு இருந்தது. எழுந்து அமர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, ஏதோ காடு போல் அவ்விடம் இருந்தது. சில்லென்று அவன் காலைத்தீண்டிய கடலலை சற்று அவனுக்கு சற்று நன்றாக இருந்தது. இந்த கடலலையிலேயே காலை வைத்துக்கொண்டு இப்படியே நிம்மதியாக இருந்துவிடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கட்டுப்படுத்தியவன் எழுந்து எங்கே தான் இருக்கிறோம்? வேறு யாராவது இருக்கிறார்களா? தன்னை காப்பாற்றியது யார்? வில்லியம் & கோ எங்கே? என்ற கேள்விகளுடன் கால்போனப்போக்கில் நடந்தான். சிறிது தூரம் நடந்தவன், பிறகு தன்னுடன் வந்தவர்களின் பெயரை கத்திக்கொண்டே நடக்க, அவனுக்கு மிக அருகில் ஒரு புதரில் இருந்து ஏதோ மிருகம் உருமும் சத்தம் கேட்க, அமைதியாகியவன் பிறகு வேக எட்டுக்களை எடுத்து வைத்து ஓட ஆரம்பிக்க, அவன் செல்லும் திசையிலேயே அந்த புதரில் இருந்த மிருகமும் வருவது போல் தோன்ற அவனின் உயிர் அவன் கையில் இல்லை.
அவசரப்பட்டு வந்துவிட்டோமோ... என்று நூறாவது தடவையாக யோசித்தவன், ஒரு திசையில் சட்டென்று துப்பாக்கியின் சத்தம் கேட்டதால் வில்லியமாக இருக்குமோ என நினைத்து அந்த திசையில் ஓட , அவன் ஓடும் திசையெங்கும் புதர்கள் அசைந்துக்கொண்டே வர, உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடற்கரை மணலில் ஓடியவன் நல்லவேளையாக வில்லியமை கண்டுகொண்டான்.
"வில்லியம்... இவ்வளவு கிடச்சதே போதும். இதை எடுத்துகிட்டு நாம வீட்டுக்கு கிளம்புவோம். இதை வித்து வர பணத்துல கொஞ்சம் செலவழிச்சி நாம் திரும்ப வந்து இங்க வேற எதாவது இருக்கான்னு பார்த்துப்போம். இப்போ லேட் ஆச்சு..." என்று வேலன் வில்லியமிடம் கூற, அவர்களை நோக்கி வந்த விக்ரமின் காதிலும் வேலன் கூறியது விழுந்தது.
அவர்களின் அருகில் ஒரு பெரிய மரப்பெட்டி நிறைய தங்க வைர ஆபரணங்களை பார்த்த விக்ரம், 'முடியாதுன்னு சொல்லுவான்... எனக்கு அந்த தங்க யாளி சிலைதான் வேணும்னு சொல்லுவான். இவனை பத்தி எனக்கு தெரியாதா? ஒன்னு இங்கேயே மாட்டிகிட்டு பசில சாகனும், இல்ல இங்க இருக்கிற மிருகங்களும் இறையாகி சாகணும்...' என நினைத்தான்.
அவன் நினைத்தது போலவே வில்லியம் கூறிவிட, அவர்களிடம் வந்த விக்ரம் என்னை யாராவது தேடணீங்களா... என்று கேட்க, பார்த்திபன் மட்டும் கையை தூக்கிவிட்டு எங்க ப்ரோ போனீங்க... என்று மகிழ்ச்சியாக கட்டியணைக்க வர, கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து விட்ட விக்ரம், அவனே வேண்டுமென்றே சென்று பார்த்திபனை கட்டியணைத்து, தான் மூழ்கிப் பிறகு அங்கு நடந்ததை அறிந்துக்கொண்டான்.
வெகுநேரம் ஆகியும் விக்ரமை காணவில்லை என்றதும் அனைவருக்கும் பயம் ஆட்கொள்ளத் துவங்கியது. ஏதோ பிரச்சினை, தங்கத்துடன் ஓடிவிட்டான், வேலன் தான் அவனை தண்ணீரில் தள்ளிவிட்டு கொன்றுவிட்டான்... என பல கருத்துக்கள் எழ, வேலனே தற்போது நான் உள்ளே இறங்கிச்சென்று பார்க்கிறேன் என்று இறங்கினான். சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே வந்தவன் உடனே என்கூட வாங்க... பார்க்கவே அதிசயமா இருக்கு... என்று கூறி மற்றவர்களையும் அழைத்தான். ஒருவர் பின் ஒருவராக நீரினுள் வந்தவர்கள் அந்த ஆழ்துளை கிணறு போன்றது அமைப்பு கடலில் முடிவடைவதை கண்டு அட என்ன இது திரும்ப கடலுக்கே தான் வந்துவிட்டோம் என நினைக்க, அதான் இல்லை... அவர்கள் கடலில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தால் அருகிலேயே ஒரு தீவு தெரிந்தது. அவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகையும் காணவில்லை. அந்த பாறைகளையும் காணவில்லை... அந்த கூம்பு பாறைகள் நிறம்பியிருந்த இடத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சில கூம்பு பாறைகளும் கடலும் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த ஆழ்துளை கிணறு போன்றது அமைப்பிற்குள் சிறிதுதூரம் மட்டுமே புகுந்து வந்து எட்டிப்பார்த்தால் ஒரு தீவே தெரிகிறதே என்று குழம்பினர்.
தன் குழப்பங்களையெல்லாம் ஓரம் கட்டி வைத்தவர்கள், அந்த ஆழ்துளை கிணறு முடியும் இடத்தை நன்றாக குறித்து வைத்துக்கொண்டு தீவினுள் இறங்கி தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட நினைக்க, தேடி வந்த தெய்வம் எதிரில் வந்து நின்றது போல ஒரு பாறைக்கு மறைவில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதை திறந்து பார்க்க அதில் தங்க வைர வைடூரிய ஆபரணங்கள் நிறைந்திருந்தன. அதைக்கண்ட வில்லியமிற்கு சந்தேகம் எழுந்தது. அவ்வளவு சீக்கிரம் தங்கம் கிடைத்துவிட்டதே... தான் படித்து அறிந்தது போல் இது ஒரு பொறியா( trap) என்று சந்தேகித்தான்.
மற்ற ஐவரும் அந்த தங்க ஆபரணங்களை பார்வையிட்டுக் கொண்டு இருக்க, சட்டென்று அவர்களுக்கு துப்பாக்கியின் தோட்டா சத்தம் கேட்டது. சட்டென திரும்பி பார்த்தவர்கள் வில்லியம் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். தாங்கள் அனைவரையும் சுட்டுவிட்டு புதையல் முழுதையும் எடுத்துக்கொள்ளப் போகிறானோ என்று பார்த்திபன் அச்சமடைய, துப்பாக்கி ஒரு புதரின் திசையில் குறிபார்த்து இருப்பதைப் பார்த்து, மெதுவாக அங்கு சென்று பார்க்க, அங்கே ஒரு வெண்குதிரை காலில் குண்டடிப்பட்டு விழுந்துக்கிடந்தது.
விக்ரம் அங்கு வருவதற்கு முன்பாக நடந்த எல்லாவற்றையும் பார்த்திபனின் நினைவுகளின் மூலமாக அறிந்துக்கொண்டவன், மனமோ தங்கத்தை பார்க்கும் ஆவல் சிறிதுமின்றி அந்த குண்டடிப்பட்ட குதிரை எப்படி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள ஏக்கம் கொண்டது.
அது எப்படி இருக்கிறது என்று பார்க்க நினைத்த மனதை அடக்கியவன், அனைவரையும் கேள்விகளால் துளைத்தான். நடந்ததை எல்லாம் அவர்கள் கூற அறிந்துக்கொண்டவன், அவர்கள் கூறிய பிறகே குதிரை ஒன்று அடிப்பட்டதை அறிந்தார் போல் நடித்து பிறகு அதை அங்கு சென்று பார்த்தான். அவன் நினைத்திருந்தால் அவர்களை கண்டுகொள்ளாமல் அதனிடம் சென்றிருக்க முடியும். அவ்வாறு செய்தால் வீண் சந்தேகங்கள் தான் எழும் என்பதால் அமைதியாக இருந்தான்.
அந்த குதிரையிடம் சென்று பார்த்தவன், அது இரத்த வெள்ளத்தில் பாதி மயக்கத்தில் இருப்பதை பார்த்தவன், மனது கேட்காமல் பார்த்திபன் தன்னுடன் கொண்டு வந்த விக்ரமின் தோல்பையில் இருந்து முதலுதவி பெட்டி எடுத்து அதுக்கு சிகிச்சை அளித்தான்.
அதைப்பார்த்த வில்லியமிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சாதாரண திருடனுக்கு இவ்வளவு நேர்த்தியாக சிகிச்சை அளிக்க முடியுமா என்று... மயக்க ஊசி போடுவதாகட்டும், புல்லட்டை நேர்த்தியாக வெளியே எடுப்பதாகட்டும், தையல் போடுவதாகட்டும், கட்டு போடுவதாகட்டும் என அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டான். உண்மையில் விக்ரம் ஒரு கால்நடை மருத்துவன். அரசின் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிகிறான். அவன் இத்துறையை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அவனுடைய சக்திதான். மனிதர்களை தொட்டால் ஒரு நொடியில் பிரச்சனைக்கு உள்ளாகிறவன், விலங்குகளிடம் சாதாரணமாக விளையாட முடிவதால் செல்லப் பிராணிகள் என்றால் அவனுக்கு உயிர்.
"சரி... நாம டைம் வேஸ்ட் பண்ணாம உள்ள போகலாம்..." என்று வில்லியம் கூற, விக்ரமோ தான் கேட்ட அந்த கர்ஜனை சத்ததை பற்றி அவனிடம் கூறினான்.
புலியோ சிங்கமோ... எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று கூறிய வில்லியம், அவனின் தோற்பையில் இருந்து தூப்பாக்கிகளை எடுத்து அனைவரிடம் கொடுக்க, அனைவரும் அதிர்ந்தனர் விக்ரமைத் தவிர. அவன் இத்தனை வைத்திருப்பான் என்று யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"வில்லியம்... எனக்கு என்னவோ சரியாப்படல. நாம கிடைச்சதோட போய்டலாம்..." என்று பார்த்திபன் கூற "அப்போ நீ கிளம்பு... உனக்கு ஒரு குண்டூசி கூட கிடையாது..." என்று காட்டமாக வில்லியம் கூற, பார்திபனுக்கு வேறுவழி இல்லாமல் போனது. இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தவர்கள் கூட ஒன்றும் கூறாமல் அமைதியாகிப்போக, காட்டிற்குள் உள்ளே செல்ல இருந்தவர்களை தடுத்தது அந்த வெண்குதிரை.
எதிரில் வந்து நின்று கனைத்துக்கொண்டு இருந்த குதிரையைக் கண்டு வில்லியம் எரிச்சல் அடைய, விக்ரம் ஆச்சரியம் அடைந்தான். மயக்க மருந்து கொடுத்தும், இவ்வளவு இரத்தம் சிந்தியப்பிறகும் எப்படி இந்த குதிரை எழுந்து நிற்கிறது என்று ஆச்சரியப்பட்டான். அது எழுந்து நின்று அவர்களின் எதிரே வந்து கனைத்துக்கொண்டும், துள்ளிக்குதித்துக் கொண்டும் இருந்ததால் விக்ரம் கட்டிய கட்டிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்ததை அவன் கவனித்தான். அதன் எதிரே சென்று அதை அடக்க முற்பட அது அடங்கப்போவதாக தெரியவில்லை.
கோபமுற்ற வில்லியம் அதை சுட்டு சாகடிக்குமாறு ஆணை பிறப்பிக்க, விக்ரமை தவிர மற்றவர்கள் அனைவரும் தங்களின் கைகளில் இருந்த துப்பாக்கியை பார்க்க, விக்ரமோ வில்லியனிடம் வாக்குவாதத்திற்கு செல்ல, அங்கே ஒரு கைக்களப்பு ஏற்பட்டு குதிரையின் மீது பாயவேண்டிய குண்டு தெரியாமல் விக்ரமின் மீது பாய்ந்தது.
- தொடரும்.
விக்ரமிற்கு நடக்கப்போவது என்ன? அனைவரும் பத்திரமாக ஊர் திரும்புவார்களா? அந்த தங்க யாளி சிலைக்கு வில்லியம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து காரணம் என்ன? அவனுக்கு இந்த இடம் பற்றி எப்படி தெரியும்? கால்நடை மருத்துவனான விக்ரமாதித்யனுக்கு அங்கு என்ன வேலை? விஜய் அப்படி என்ன விக்ரமிடம் கூறினான்? இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து, உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பரிசுக்களை வெல்ல லாகின் செய்து கமெண்ட் செய்யுங்கள். அடுத்த அத்தியாயம் நாளை பதிப்பிக்கப்படும்... நன்றி