Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed வேங்கியின் மோகினி

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி1



கோட்டைவாசலில் கேட்ட சத்தத்தால் கவனம் கலைந்த மழவராயர் அங்கே விரைந்தார்.தலை தாழ்த்திய கோட்டை காவலர்களில் ஒருவன் “தளபதியாரே இவர்கள் இருவரும் எங்களிடம் வம்பு வளர்க்கிறார்கள்! “என்றான்.

அஜானுபாகுவான தோற்றத்தில் நின்ற இருவரில் இளையவன் “ஓ! இந்த கிழடுதான் உங்களின் தளபதியா? “என்றான்.அவனருகே நின்ற மூத்தவன் “பார்த்தால் தளபதி போல் தெரியவில்லை.கிழபதி போல் இருக்கிறார்! “என்றான்.மழவராயர் கோபத்தை கட்டுப்படுத்தியபடி “துடுக்குகாரனே! என்னையே பகடி செய்கிறாயா? “என்று மீசையை முறுக்கினார்.



“இவர் நமக்கு அத்தை மகளா என்ன? பகடி செய்து விளையாட? “என்றான் இளையவன்.

கோபம் எல்லை கடந்து மழவராயர் வாளை உருவினார்.

“சிறுவனே! வந்து மோது என்னுடன்! “என்றார்.



“அண்ணா! அவரது கையில் இருப்பது கைத்தடி இல்லையா? “என்றான் இளையவன்.



“இல்லை ஆதித்தா! வாள் போல் தெரிகிறது.!”



“ஒருவேளை கிழபதிக்கு காக்காய் வலிப்பு இருக்குமோ? குணப்படுத்த கத்தியை கையில் வைத்து கொண்டு அலைகிறாரோ? “

மழவராயர் கோபத்துடன் தன் வாளை நிராயுதபாணிகளின் மீது வீசினார்.இளையவனின் கையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றிய குறுவாள் அவரது வாளை இடையிட்டு தடுத்தது.

“சரிக்கு சரியாக போரிட வாள் வேண்டுமா பொடியனே? வீரர்களை தர சொல்லவா? “என்றார் மழவராயர்.



“நான் கத்தியை நம்பவில்லை கிழபதியாரே! என்னை என் திறமையை நம்புகிறேன்.!”



“அப்படியானால் மரணத்தை எதிர் கொள்ள தயாராகு! “



“அதை நாளை சாகப்போகும் நீர் சொல்வதுதான் முரண்! “



இருவருக்குமான யுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் மழவராயருக்கு ஆதித்தனின் போர்திறமை புரியலாயிற்று.சின்னஞ்சிறு குறுவாளை கொண்டு லாவகமாக வாளைத்தடுத்த ஆதித்தன் சில நேரங்களில் முன்னேறி தாக்கவும் செய்தான்.மழவராயர் மெல்ல களைப்பால் தளர்ந்த போது உப்பரிகையிலிருந்து மன்னன் மார்த்தாண்டவர்மனின் குரல் தலையிட்டது.



“சண்டையை நிறுத்துங்கள்! “

மழவராயர் சட்டென்று வாளை தணித்து வணங்கினார்.

“வழிப்போக்கர்களே! யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? “என்றான் மார்த்தாண்டவர்மன்.



“கள்வர் புரத்திலிருந்து வருகிறோம் மன்னரே! “என்றான் ஆதித்தன்.



“களவுக்கு பெயர் போன ஊராயிற்றே அது.?இவர்கள் கள்வர்களா? வீரர்களே கைது செய்யுங்கள் இவர்களை! “மழவராயர் ஓங்கிய குரலில் கத்தினார்.



சகோதரர்கள் இருவரையும் காவற்படை வாள் முனையில் சுற்றி வளைத்தது.



“மன்னர் ஓலை அனுப்பியதாலேயே இங்கு வந்தோம்.எங்களை கைது செய்வது முறையல்ல.!”என்றான் ஆதித்தன்.



“ஆம்! நான்தான் ஓலை அனுப்பினேன்.கள்வர் புரத்தின் தலை சிறந்த இரண்டு கள்வர்களை அனுப்பும்படி! “என்றான் மார்த்தாண்டவர்மன்.



“அது நாங்கள் இருவரும்தான்.இதோ எங்கள் கிராம தலைவர் எழுதிய அறிமுக கடிதம்! “ஆதித்தன் இடுப்பிலிருந்த ஓலை சுருளை நீட்டினான்.வாங்கி படித்த மார்த்தாண்டவர்மன் “உங்களின் களவுதிறமையை எப்படி நான் நம்புவது? “என்றான்.



“இதோ நமது தளபதியாரின் கங்கணம், மோதிரம்! அது சொல்லும் எங்களின் திறமையை! “என்றான்.ஆதித்தனின் கையில் மழவராயரின் மோதிரமும் கை கங்கணமும் மின்னியது.மழவராயர் அப்போதுதான் தன் ஆபரணங்களை கவனிக்க ஆரம்பித்தார்.சண்டையின் போது ஆதித்தன் லாவகமாக அவற்றை கழற்றியிருந்தான்.”இதோ என் திறமைக்கு அத்தாட்சி! “என்ற அரிஞ்சயன் கூடி நின்ற காவலர்களின் திருடப்பட்ட ஆபரணங்களை உதிர்த்தான்.காவலர்கள் பரபரப்புடன் தங்களுடையதை தேட ஆரம்பித்தனர்.

“நல்லது! “என்ற மார்த்தாண்டன் கையிலிருந்த குறுவாளை வீசி எரிந்தான்.அரண்மனை தூண் ஒன்றில் அது குத்திட்டு நின்றது.”இப்போது உன் குறி வைக்கும் திறமையை காட்டு! “என்றான் மார்த்தாண்ட வர்மன்.ஆதித்தன் தன் குறுவாளை விசையோடு வீசினான்.அது சரியாக மார்த்தாண்டவர்மனின் குறுவாளின் கைப்பிடியில் குத்தி நின்றது.”சபாஷ்! “என்றான் மார்த்தாண்டவர்மன்.”அண்ணா!இப்போது உன் முறை! “என்றான் ஆதித்தன்.அரிஞ்சயன் பின்புறமாக நின்று வீசிய குறுவாள் ஆதித்தனின் குறுவாளின் கைப்பிடி வட்டத்தில் குத்தி நின்றது.

“இருவரும் குறி வைப்பதில் திறமைசாலிகள்தான்! “



“நாங்கள் எதை திருட வேண்டும் மன்னரே? “என்றான் ஆதித்தன்.



“ஒரு குதிரையை திருட வேண்டும்.வேங்கி நாட்டின் மோகினி! “



“அபூர்வ இரட்டை சுழி கொண்ட குதிரையாயிற்றே? “



“ஆம்! அதை களவாடி கொண்டு வர வேண்டும்.முடியுமா உங்களால்? “



“அதற்கு பலத்த காவல் உண்டு.ஒரு நொடி குதிரை காணவில்லை என்றாலும் தேடல் துவங்கி விடும்.மரணத்தை வரவேற்பதற்கு சமம்.அந்த குதிரையை தொடுவது.யோசிக்க வேண்டும்! “என்றான் அரிஞ்சயன்.



“அந்த குதிரையை என்னால் திருடி கொண்டு வர முடியும்! “என்றான் ஆதித்தன் உறுதியான குரலில்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 2



“ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன்.



உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்த மழவராயரை பார்த்த ஆதித்தன் “அய்யா பெரியவரே! கை நடுக்கத்தை மறைக்கவா வாளை இறுக பிடித்துள்ளீர்கள்? “என்றான்.



“உங்களால் மன்னருக்கு ஆபத்து நேராமலிருக்க காவல் இருக்கிறேன்.மன்னருக்காக உயிரையும் தருவேன்.!”என்றார் மழவராயர்.



“என்ன ஒரு ராஜவிஸ்வாசம்.இந்த புகழுரையால் மன்னர் இந்த மாத ஊதியத்தை இரட்டிப்பாக உயர்த்தவும் வாய்ப்பிருக்கிறது! “என்றான் ஆதித்தன் கேலி புன்னகையுடன்.



“ராயரே! எமக்கு தனிமை தேவை.நான் கோழையும் அல்ல.உம் வீரர்களுடன் வெளியேறும்!”என்றான் மார்த்தாண்டவர்மன்.ராயரின் அறிவுரைகள் கேட்டு அலுத்து போன வர்மன் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த விரும்பினான்.



“தகப்பனாரின் காலத்திலிருந்து பணி செய்யும் என்னை நீங்கள் மதிப்பதேயில்லை மன்னரே! “என்ற புலம்பலுடன் ராயர் தன் பரிவாரங்களுடன் நகர்ந்தார்.



“பாரில் மதிப்பு மிக்க பல பொருள் இருக்க மன்னர் குதிரையை களவாட சொல்வது ஏன்? “என்றான் அரிஞ்சயன்.

அவனை உற்று பார்த்த வர்மன்



“ஆநிரை கவர்தலை நீ அறிவாய்தானே? “என்றான்.



“அயல் நாட்டின் குடிகளின் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை கவர்ந்து வருவதன் மூலம் போரை உண்டாக்குவது.போரில் வெல்வதன் மூலம் நாட்டை விஸ்தரிப்பது.இவைதானே ஆநிரை கவர்தலின் நோக்கம்? “என்றான் ஆதித்தன்.



“மெய்தான்.!ஆநிரைக்கு பதில் இங்கே மோகினி.எவ்வளவு தொலைவு பயணித்தாலும் சிறிதும் களைப்படையாத வெண்ணிற புரவி.இரட்டை சுழி கொண்ட அபூர்வ வெண் புரவி.அது வேங்கியில் இருப்பது எனக்கு தகுதி குறைவாக உள்ளது.உலகத்தின் சிறந்ததெல்லாம் என்னிடம்தான் இருக்க வேண்டும்.அதை நீங்கள் களவாடி கொண்டு வந்தால் வேங்கியின் மோகினி இந்த நாட்டின் பெருமிதமாக இருக்கும்.வேங்கியின் மன்னன் இந்த குதிரையை மோகினி என்று சந்தேகித்து என்னை கள்வனென்று வாய் விட்டால் மானம் காக்க போர் தொடங்கும்.வேங்கி எனதாகும்.புரிகிறதா? “என்றான் வர்மன்.



“அரசியல் சதுரங்கத்தில் ஒரு குதிரையும் இரண்டு சிப்பாய்களும்! “என்றான் அரிஞ்சயன்.



“ராஜாவின் பணி வேலை சொல்வது.சொல்லி விட்டேன்.செய்து முடியுங்கள்.!”என்றான் வர்மன்.



“இந்த வேலை மிக கடினமானது.நம் நாட்டிலிருந்து வேங்கிக்கு நிலவழி தொடர்புகள் இல்லை.படகு போக்குவரத்து மட்டுமே உண்டு.குதிரையை கடத்தி வர வேறு மார்க்கங்கள் இல்லை.குதிரையை களவாட வந்திருக்கிறோமென்று தெரிந்தால் தலை தப்பாது.!”என்றான் அரிஞ்சயன்.



“சொல்ல மறந்து விட்டேன்.குதிரையின் காப்பாளனாக இருப்பவன் அனுபூதி.அசுவ சாஸ்திரம் அறிந்தவன்.குதிரையின் நிழலாக இருப்பவன்.குதிரைகளின் நிழல்களை பார்த்தே வகை பிரிக்கும் வல்லவன். அவனை ஏமாற்றுவது எளிதல்ல! “என்றான் வர்மன்.



“இரவின் இருளில் நிழலுக்கு வேலை இல்லை மன்னா! குதிரையை கொண்டுவர ஒரு உபாயத்தை கண்டு பிடிப்போம்.அதற்கு முன் குட்டு வெளிப்பட்டாலும் எங்களின் தலை தப்பிக்க ஒரு தற்காப்பு ஏற்பாட்டை செய்தாக வேண்டும்.! “



“அது எப்படி முடியும்? குதிரையை களவாட வந்தவர்கள் என்று தெரிந்தால் நம்மை கொன்று விடுவார்கள்.!”என்றான் அரிஞ்சயன்.



“அதற்கு ஒரு உத்தி இருக்கிறது.அவர்களே நம்மை தடபுடலாக வரவேற்று விருந்தளித்து அரண்மனையில் தங்க வைத்து சகல மரியாதைகளுடன் நடத்துவார்கள்.குதிரையை களவாடி மாட்டினாலும் நம் மீது கை வைக்க துணிய மாட்டார்கள்.!”என்றான் ஆதித்தன்.



“அது எப்படி? “என்றார்கள் அரிஞ்சயனும் வர்மனும் கோரசான குரலில்.



“ஒரு குதிரைக்காக சாக நான் தயாராக இல்லை.காத்திருங்கள்!காலையில் சொல்கிறேன்! “என்றான் விசம சிரிப்புடன் ஆதித்தன்.



கை தட்டி காவலர்களை அழைத்த வர்மன் “இவர்களை விருந்தினர் மாளிகையில் சகல வசதிகளுடன் தங்க வையுங்கள்! “என்று உத்தரவிட்டான்.

இருவரும் மன்னரை வணங்கி விட்டு கிளம்பினர்.தம்பியின் மனதில் என்ன இருக்கிறதென்று புரியாமல் குழம்பினான் அரிஞ்சயன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி மூன்றுo



மறுநாள் காலையில் வெய்யில் சுள்ளென்று மேனியில் அடிக்கும்படி தூங்கி கொண்டிருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் மெல்ல துயில் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு உணவருந்தி விட்டு புறப்பட்டனர்.அவர்களுக்காக காத்திருந்த மார்த்தாண்ட வர்மனை வணங்கினார்கள்.வணக்கத்தை ஏற்று கொண்ட வர்மன் புன்சிரிப்புடன் கேட்டான்.”சொல் ஆதித்தா! உன் கழுத்தின் மீது தலையிருக்கும் உத்தியை? “என்றான்.



“அதற்கு முன் நான் ஒரு கதை சொல்கிறேன் மன்னரே.கவனமாக கேட்டு பிழையிருப்பின் கூறுங்கள்! “



“தூங்கும்போது கதை கேட்டது பால்ய பழக்கம்.வளர்ந்த பின் காலையில் கதை கேட்பது இதுவே முதல் முறை.ஆரம்பி உன் கதையை! “என்றான் வர்மன்.



“சொல்கிறேன் மன்னரே! மோகினியை போல் இரட்டை சுழி கொண்ட ஒரு குதிரை யவனத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது உங்களுக்காக.!அதை பழக்க நம் அரண்மனையின் குதிரையோட்டிக்கு போதிய அனுபவமில்லை.அஸ்வ சாஸ்திரம் முழுதாக தெரியாத அவனால் யவனராணியை பழக்க இயலாது என்கிறான்.அதனால் நீங்கள் அவனை வேங்கி நாட்டு அனுபூதியிடம் வித்தை கற்று வர அனுப்புகிறீர்கள். “



“நல்ல யோசனை! இதில் அரண்மனை குதிரை லாயத்தின் தலைவன் யார்? “



“நான்! என் உதவியாளர் என் அண்ணன்.ஏறக்குறைய தூதர்களின் நிலையிலேயே நாங்கள் அங்கு செல்கிறோம்.உங்களின் மதிப்பை பெற்ற எங்களை நட்புறவோடுதான் நடத்துவார்கள்.அஸ்வ சாஸ்திரம் கற்கும் சாக்கில் மோகினியிடம் நாங்கள் தாராளமாக பழக முடியும்.நாளை நாங்கள் மோகினியை திருட முயன்று சிக்கினாலும் எங்களை கொல்ல மாட்டார்கள்.தண்டிக்கும் உரிமையை உங்களுக்கே தருவார்கள்.மேலும் வெற்றிகரமாக மோகினி இங்கே வந்து விட்டால் யவனத்திலிருந்து வாங்கிய குதிரை இது என்று சாதிக்கலாம்! “



“பிரமாதமான பிசிறுதட்டாத யோசனை! “என்றான் வர்மன்.



“அரசே! ஒரு கேள்வி! திருடர்களை தண்டிப்பதுதானே அரச கடமை.நீங்கள் கள்வர்களின் சகாயத்தை நாடுவது விசித்திரமாக உள்ளது.!”



“கள்வர்களின் பங்களிப்பும் நிறைந்ததுதான் அரசியல்.சட்டத்தை மீறிய சில செயல்களுக்கு, மக்களை பயமுறுத்த, சில தீய சக்திகள் தேவை.!ஆதித்தா உனக்கு அஸ்வ சாஸ்திரம் சிறிதாவது தெரியுமா? “



“சிறிதளவு தெரியும் மன்னா! சித்திரை மாதத்தில் பிறந்த குதிரையை வாங்க கூடாது.அப்படி வாங்க நேர்ந்தால் காதை அறுத்து விட்டு பயன்படுத்தலாம்.வாங்கும்போது லத்தி போடும் குதிரையை வாங்கலாம்.சிறுநீர் கழிக்கும் குதிரையை வாங்க கூடாது.இது போல் சிலவற்றை அறிவேன்.!”



“போதாது! இன்னும் சிலவற்றை நீ அறிய வேண்டும்.குதிரைகளின் வயதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அதன் பற்களின் நிறத்தை வைத்து முடியும். பற்களின் நிறம் மாறும், ஒவ்வொரு நிறமும் மூன்று வருடங்கள் நிலைக்கும். இவ்வாறு ஒன்பது விதமான நிறங்களிருக்கின்றனவாம். காலிகா, அறளிகா, குளிகா, காஜா, மாக்கா, சிங்கா, ஊலிகா, லங்குனி, மற்றும் பெஸ்தி ஆகியன குதிரைகளின் பற்களின் நிறங்கள். ஒவ்வொரு நிறத்திற்கு குறிப்பிட்ட வயதாக கணிக்கிறார்கள்.குதிரையின் மீதான வர்ண கலப்பை கொண்டு அதன் இயல்பை அறியலாம்.நீரில் இறக்கப்படும் குதிரையின் செயலை வைத்து எந்த வேலைக்கு அந்த குதிரை லாயக்கு என்பதையும் அறியலாம்.!”



“உங்களுக்கும் கொஞ்சம் தெரியும் போலிருக்கிறதே மன்னா?”



“உன் அளவுதான் எனக்கும் தெரியும்.இந்த காரியத்திற்கு எவ்வளவு எதிர் பார்க்கிறீர்கள்? “



“ஒரு லட்சம் பொன்.நாளை மறுநாள் கள்வர் புர தலைவரின் கையில் அந்த காசுகள் இருக்க வேண்டும்.!”



“நான் கொடுக்காமல் விட்டு விட்டால் அதை நீங்கள் எப்படி அறிவீர்கள்.?”



“ககன மார்க்கமாக சேதி அறிவோம்.அப்படி செய்தால் மோகினியும் வராது.நாங்களும் வர மாட்டோம்.!”



“சும்மா சோதித்தேன்.சரி காரியத்தில் இறங்குங்கள்.பொன் வீடு தேடி போகும்.!”



“உத்தரவு மன்னரே! “



இருவரும் வர்மன் எழுதி கை சாத்திட்ட ஓலையுடன் விடைபெற்று கிளம்பிய போது கோட்டை மதில் சுவரில் மழவராயரை பார்த்தார்கள்.

“ராயரே! நாங்கள் திரும்பும்வரை உயிரோடு இருப்பீரா? இல்லை இறந்து போன உம் மனைவியை பார்க்க போயிருப்பீரா?”என்றான் ஆதித்தன் இடக்காக.



“போன காரியம் தோற்று திரும்பினால் இந்த ராயனின் கை வாள் உங்களின் தலையை துண்டிக்கும்.அதுவரை காத்திருப்பேன்! “என்றார் ராயர் மீசையை முறுக்கியபடி.



“அந்த கைவாள் வெங்காயத்தை மட்டுமே அரிவதாக கேள்வி? “என்றான் ஆதித்தன்.



“துஷ்டர்களே! நகரை விட்டு போய் தொலையுங்கள்! “என்றார் கோபத்துடன்.



“விடப்பா! அவமானம் தாங்காமல் மதில் சுவரிலிருந்து குதித்து செத்து விட போகிறார்.”



“ராயரே! போவதற்கு முன் ஒன்று சொல்கிறேன்.உம்மை உரிமையுடன் கேலி செய்ய காரணமிருக்கிறது.நீர் இறந்து போன என் சின்ன தாத்தாவின் சாயலில் உள்ளீர்.அதனாலேயே கேலி செய்தேன்.கோபம் வேண்டாம்.!”



ராயர் குழப்பத்துடன் “உன் தாத்தாவும் என்னை போன்ற போர் வீரரோ? “என்றார்.



“இல்லை! பிறந்ததிலிருந்தே பைத்தியமாக இருந்தார்! “என்றான் ஆதித்தன் சிரிப்பை அடக்கியபடி.



“துஷ்டர்கள்! துடுக்கு பிடித்த பைத்தியக்காரர்கள்! “என்று ராயர் வசை மாரி பொழிய துவங்கிய போது இருவரும் கோட்டையிலிருந்து மின்னலென வெளியேறியிருந்தனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி நான்கு



ஆதித்தனும், அரிஞ்சயனும் கடக நாட்டின் கோட்டையிலிருந்து மழவராயரின் வசவுகளை புறம்தள்ளி விட்டு புரவியில் முன்னேறினர்.மதுரைக்கு வழி வாயிலே என்பதைப் போல் எதிர்பட்டவர்களை விசாரித்த போதுதான் வேங்கி இரண்டு நாள் பயண தொலைவில் இருப்பதை அறிந்தார்கள்.சீரான வேகத்தில் குதிரைகளை செலுத்தி கொண்டிருந்த இருவரில் மூத்தவன்



“ஆதித்தா! குதிரையை களவாட உன்னிடம் எதாவது திட்டமுண்டா? “என்றான்.



“இதுவரை உபாயம் எதுவும் என் மனதில் உதயமாகவில்லை.நேரும் சூழ்நிலைகளை சாதகமாக்கி காரியம் சாதிப்பதில் நம் திறமை இருக்கிறது.!”



“கள சூழ்நிலைகளை கண்ட பின்பு முடிவெடுப்போம்.ஒரு குதிரை இரு நாட்டினரிடையே போரை உண்டாக்குவதுதான் விசித்திரம்! “



“மனிதர்களின் பேராசைக்கு குதிரை என்பது ஒரு மொக்கை காரணம்தான்! “



“வர்மன் கொடுத்த முத்திரை மோதிரத்தை பாதுகாப்பாக வைத்துள்ளாயா? “



“வைத்திருக்கிறேன்.!வேங்கியை தவிர வேறு எங்கும் அதை பயன்படுத்தி ராஜ உபசாரம் பெறும் எண்ணம் எனக்கில்லை.!”



“காரணம் என்னவோ? “



“சரியான நேரத்தில் சொல்வேன்.!”



சூரியன் உச்சிக்கு வந்த போது சாலையின் இருமருங்கிலும் இருந்த மரங்களில் வழி போக்கர்களின் கைகளுக்கு அகப்படாமல் தப்பி பிழைத்த கனி வர்க்கங்களை புசித்து பசி தீர்த்தபடி பயணத்தை தொடர்ந்தனர்.அந்தி மயங்கும் நேரத்தில் ஒரு ஆற்றங்கரையை நெருங்கி கொண்டிருந்தனர்.அதன் கரையில் இடையர்கள் மேய்ச்சலுக்கு வந்த ஆடுகளையும், கோழிகளையும் ஒன்று திரட்டி கொண்டிருந்தனர்.குதிரையிலிருந்து இறங்கிய ஆதித்தன் அவர்களில் ஒருவனை அணுகி “இடையரே! இன்று இரவு தங்க எதாவது சத்திரம் அருகில் உள்ளதா? “என்று வினவினான்.



“இன்னும் இரண்டு காத தூரத்தில் ஒரு சத்திரம் உண்டு! “



“நல்ல சேதி சொன்னீர்! “என்று சொன்ன ஆதித்தன் தன் தலையில் புழுதி படாமலிருக்க கட்டியிருந்த துணியை அவிழ்த்தபடி ஆற்றை நோக்கி போனான்.



“அண்ணா வாருங்கள்! தாகம் தணிப்போம்.!”என்றான்.அரிஞ்சயன் புரவியிலிருந்து இறங்கி ஆற்றில் கை கால்களை கழுவிய போது ஆதித்தன் துணியை நனைத்து கீழே போடுவதையும் பிறகு அதை எடுத்து பிழிந்து ஈரத்துடன் தன் உடைக்குள் வைப்பதையும் பார்த்தான்.



“அந்த துணியை தலையில் கட்டினால் எளிதில் காயுமே ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன்.



வெறும் புன்னகை ஒன்றை பரிசளித்த ஆதித்தன் “கிளம்பலாம்! “என்றான்.

இடையர்களிடமிருந்து அவர்கள் விடை பெற்று ஒரு காத தூரம் பயணித்தார்கள்.



“இரவு உணவை முடிக்கலாமா அண்ணா? “என்றான் ஆதித்தன்.



“நாம் இன்னும் சத்திரத்தை அடையவில்லையே ஆதித்தா! “



“அங்கே இப்போது போவது ஆபத்து! “



“என்ன சொல்கிறாய் நீ! “



“நாமோ கள்வர்கள்.வணிகர்களிடம் வழிப்பறி செய்பவர்கள்.நம்மிடம் பொருளை பறி கொடுத்த யாராவது சத்திரத்தில் தங்கியிருந்து நம்மை அடையாளம் கண்டு விட்டால் கதை கந்தல்தான்! “



“வர்மனின் முத்திரை மோதிரம் நம்மை காப்பாற்றுமே? “



“கள்வர்களிடம் முத்திரை மோதிரம் இருந்தால் அதையும் நாம் களவாடியதாகவே நினைப்பார்கள்.வீணாக ஆபத்தை தேட வேண்டாம்.எல்லோரும் தூங்கிய பிறகு இரண்டாம் சாமத்தில் சத்திரத்தை அடைவதுதான் பாதுகாப்பு.!”



“ஆம்! வாஸ்தவம்! அந்த கோணத்தில் நான் யோசிக்கவில்லை.இரவு உணவிற்கு என்ன செய்வது? “



ஆதித்தன் தன் உடையிலிருந்து அந்த ஈரத்துணியை எடுத்து விரித்தான்.அதில் ஒரு கோழி கழுத்து திருகப்பட்டு கிடந்தது.



“இடையர்களிடமிருந்த கோழிகளில் ஒன்று.ஈரத்துணியை பயன்படுத்தி அதை பிடித்தேன்.!”



“சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறாய்.இரவு நேரத்தில் இடையர்களின் பட்டிகளிலிருந்து ஆட்டை திருட நேர்ந்தால் அவற்றின் கழுத்து மணி சத்தம் காட்டிகொடுத்து விடுமே? அப்போது என்ன செய்வாய்? “



“எளிது அண்ணா! களிமண்ணை பிசைந்து மணியின் உள் பகுதியில் அப்பி விட்டால் எப்படி ஒலி பிறக்கும்? “



“கெட்டிகாரன்தான்! உன் திட்டத்தை செயல்படுத்துவோம்! “



அரிஞ்சயன் அந்த கொழுத்த கோழியை கையில் வாங்கிய படி இறங்கினான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி5



சுள்ளிகளை பொறுக்கி கோழியை சமைத்து உண்ட இருவரும் நிலவு உச்சி வானத்திற்கு வரும்வரை காத்திருந்தனர்.பிறகு இரண்டு காத தூரத்திலிருந்த சத்திரத்தை அடைந்து அதன் அடைபட்ட கதவை தட்டினர்.கொட்டாவியுடன் கதவை திறந்த சத்திரத்து உரிமையாளன் “இங்கே ராப்போஜனத்திற்கு எதுவும் இல்லையப்பா! தங்கிப் போக திண்ணையை தவிர வேறு இடமில்லை.!”என்றான்.



“இருவர் முடங்கி கொள்ள இந்த இடம் போதுமய்யா! எங்களின் புரவிகள் நீண்ட தூர பயணத்தில் களைப்படைந்து விட்டன.அவை அருந்த நீர் கிடைக்குமா? “என்றான் ஆதித்தன்.



“சத்திரத்தின் பின்புறம் ஒரு கிணறு உண்டு.அதில் நீர் இறைத்து கொள்ளுங்கள்.!”



“நன்றி ஐயா! அதிகாலையிலேயே நாங்கள் இங்கிருந்து கிளம்பி விடுவோம்! “



“எங்கே பயணப்படுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? “



“வேங்கிக்கு ஒரு வேலை விசயமாக சென்று கொண்டிருக்கிறோம்.!”



“வேங்கியா? இங்கிருந்து பத்து கல் தொலைவில் சரயு நதியை கடந்தல்லவா செல்ல வேண்டும்? அதுவும் சமவெளி பகுதியை கடப்பது மரணத்தை வரவேற்பது போல்! “



“என்ன காரணமோ? “



“வேறு என்ன? கள்வர் பயம்தான்! வேங்கியிலிருந்து கப்பல் வழியாக வரும் வணிகர்களை தாக்கி வணிக பொருள்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அலைகிறது.அவர்களுக்கு பயந்து வணிகர்கள் கூட்டமாக இணைந்து கூலிக்கு பாதுகாப்பு தரும் போர்வீரர்களின் உதவியுடன் கடக நாட்டிற்குள் நுழைகிறார்கள்.நீங்கள் தனியாக சமவெளி பகுதிக்குள் நுழைந்தால் தொலைந்தீர்கள்.!”



“தகவலுக்கு நன்றி ஐயா! கதவை தாழிட்டு கொள்ளுங்கள்! “என்றான் அரிஞ்சயன்.



அவன் கதவை தாழிட்டு கொண்டதும் திரும்பிய அரிஞ்சயன் “மோகினியை நாம் நினைத்தது போல் நினைத்த நேரத்தில் கொண்டு வர முடியாது போலிருக்கிறதே? “



“இரவுக்கு ஆயிரம் கண்களும், காதுகளும் உண்டு அண்ணா! இப்போது இதைப்பற்றி சம்பாஷிக்க வேண்டாம்! “



“அதுவும் சரிதான்! “என்ற அரிஞ்சயன் குதிரைகளுக்கு நீர் இறைத்துவிட்டு படுத்தான்.சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்த ஆதித்தன் உறக்கத்தின் பிடிக்குள் நழுவினான்.



மறுநாள் சூரிய உதயத்தின் போது சமவெளி பகுதியில் புரவியில் நின்றிருந்தனர் இருவரும்.!



“சமவெளி பகுதி தாக்குதலுக்கு உகந்தது.எங்கிருந்து வேண்டுமானாலும் அம்புகளும் ஈட்டிகளும் பாயலாம்! கவனமாக இதை கடக்க வேண்டும்! “என்றான் அரிஞ்சயன்.



“அண்ணா! இரண்டு கல் தொலைவை குதிரையில் நான் கடக்கிறேன்.தொலை நோக்கியால் என்னை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்.அடையாளம் காட்டியதும் புறப்பட்டு வா! “



“அடையாளம் என்பது சீழ்க்கை ஒலியா?அது கள்வர்களின் கவனத்தை கவர்ந்து விடாது? “



“இது வேறு! பொறுத்திருந்து பார்! “



ஆதித்தன் பொறுமையாக சமவெளியில் குதிரையை நடக்க விட்டான்.அவனது கண்கள் நாலாபுறமும் கண்காணிக்க ஆரம்பித்தன.பின்புறத்திலோ அரிஞ்சயன் குழல் வடிவ தொலை நோக்கியில் சுற்றுபுற அசைவை கண்காணிக்க ஆரம்பித்தான்.இரண்டு கல் தொலைவை அபாயமின்றி கடந்த ஆதித்தன் தன்னுடைய் உடைமைகளில் ஒன்றான கையடக்க கண்ணாடிதுண்டை அரிஞ்சயன் இருந்த திசையில் பிரதிபலித்தான்.கண்கள் கூச அதை கவனித்த அரிஞ்சயன் தம்பியின் திறமையை வியந்தபடி குதிரையை விரட்டினான்.அரிஞ்சயன் ஆதித்தனை நெருங்கிய போது ஆதித்தன் கையிலிருந்த வாளால் புதர் செடிகளை வெட்டி கிடத்தியிருப்பதை பார்த்தான்.



“இது எதற்கு ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன் குழப்பத்துடன்.



“”சமவெளியை ஒரு பெரும் கும்பல் கடக்க போவதான பிரமையை உருவாக்க போகிறோம்! “என்றான் ஆதித்தன்.



“இருப்பதோ நாம் இருவர்.அது எப்படி சாத்தியம்?”



“குதிரையின் வாலில் இந்த புதர் செடிகளை கட்டுவோம் அண்ணா.குதிரைகளை வேகமாக செலுத்தும் போது மணல் புழுதி எழும்.அது தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு பெரும் கூட்டம் ஒன்று செல்வதான பிரமையை உருவாக்கும்.புழுதி புயலில் நாம் இருவர் மட்டுமேதான் இருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.அப்படி யாராவது பின் தொடர்ந்தால் படை வீரர்களின் கொம்பை ஊதி பீதியை கிளப்புவோம்! “

ஆதித்தனின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஒரு பெரும் புழுதி புயலை உருவாக்கியபடி இரு புரவிகளும் உச்சவேகத்தில் சமவெளிக்குள் பாய்ந்தன.முகத்தை சுற்றி துணியை கட்டி புழுதியிலிருந்து தங்களை பாதுகாப்பு செய்திருந்தனர் சகோதரர்கள் இருவரும்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி6



புரவியில் புயல் வேகத்தில் சகோதரர்கள் இருவரும் சமவெளியை கடந்து கொண்டிருந்தனர்.மணல்பரப்பில் ஒரு குட்டி புழுதி புயலை கிளப்பியபடி இருவரும் விரைந்தனர்.சமவெளியை விரைவாக கடந்து மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆற்றின் கரையை அடைந்த போது அவர்கள் காவல் ஆட்களால் மறிக்கப்பட்டனர்.



“யார் நீங்கள்? “



“கடக நாட்டின் தூதர்கள்.!இதோ மன்னரின் முத்திரை மோதிரம்! “



“கொள்ளையர்களின் கையில் சிக்காமல் வெகு தந்திரமாக தப்பி விட்டீர்கள்.வேங்கி நாட்டிற்கு செல்லும் விருந்தினர்களை இந்த கடற்புரம் அன்புடன் வரவேற்கிறது.எமது நகரின் சட்டதிட்டங்களை மதிப்பது விருந்தினரின் கடமை! “



“அதற்கு எங்களால் குந்தகம் நேராது நண்பனே! “



ஆதித்தனும் அரிஞ்சயனும் அந்த கடற்புர நகரை பார்த்தபடி மெதுவாக நடை போட்டனர்.நிறைய வணிகர்கள் தங்களின் சரக்கை படகுகளில் ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தனர்.



“ஆதித்தா! இனி படகு மூலம்தான் நாம் பயணத்தை தொடர வேண்டும்! “



“ஆம்! பயணிகள் படகை தேடுவோம்! “



“சக்கர வியூகத்தில் அகப்பட்டிருக்கிறோம் ஆதித்தா! குதிரையை திருடி வந்தாலும் கொள்ளையர்களிடமிருந்து தப்ப முடியாது.துரத்தி வரும் வேங்கியின் படையை நதி தடுத்தாலும் கொள்ளையர்களை தாண்டி நாம் எப்படி கடகத்தை அடைவது? “



“அண்ணா! நமது நேரம் நன்றாக இருந்தால் வணிகர் குழு எதாவது வீரர்களின் பாதுகாப்புடன் சரக்கோடு கிளம்பும் நேரத்தில் நாம் குதிரையோடு இணைந்து கொள்ளலாம்.அதிர்ஷ்டம் துணையிருக்க வேண்டும்.மனதை தளர விடாதே! “



“அப்படி நடந்தால் ஆட்டை காளிக்கு பலியாகத் தருவேன்! “



இருவரும் ஒரு படகில் குதிரையுடன் ஏறினார்கள்.சில மணி நேர பயணத்திற்கு பின் அவர்கள் வேங்கியின் மண்ணில் கால் பதித்தார்கள்.முத்திரை மோதிரத்தை பார்த்தவுடன் வேங்கியின் வீரர்கள் பாதுகாப்புடன் கோட்டையை நோக்கி அழைத்து சென்றனர்.அரைநாள் பயண தூரத்தில் இருந்த வேங்கியை இருவரும் அடைந்த போது சூரியன் உச்சிக்கு வந்திருந்தது.வேங்கியின் மன்னன் மகிபாலனின் பேட்டிக்காக இருவரும் காத்திருந்த போதுதான் அமைச்சர் தண்டநாயகன் உள்ளே நுழைந்தான்.ஆதித்தனிடமிருந்து ஓலையை வாங்கி படித்த மகிபாலன் “நல்லது தூதர்களே! நீங்கள் விருந்தினர் மாளிகையில் தங்கி ஒய்வெடுங்கள்.நாளை அபூதியிடம் பயிற்சிக்கு செல்லலாம்.!”என்றான்.



குறுக்கிட்ட தண்டநாயக்கன் “அஸ்வ சாஸ்திரம் கற்க வேங்கியை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? “என்றான் சந்தேக பார்வையுடன்.



“இங்கேதானே மோகினி என்னும் அடங்காத குதிரையும், அதை அடக்கியவரும் இருக்கிறார்கள்.மோகினியின் புகழ் பார் முழுவதும் பரவி கிடக்கிறதே? “என்றான் ஆதித்தன்.



“மோகினி எனக்கு புகழை தேடி தருகிறது!”என்றான் மகிபாலன்.



“சமயங்களில் ஆபத்தையும் தேடி தரும் வாய்ப்பு உள்ளது மன்னா!”என்றான் தண்ட நாயக்கன்.



“மன்னா! மற்றொரு வேண்டுகோள்.உங்களின் ஆஸ்தான ஓவியரிடம் ஓவியம் வரைய கற்று கொள்ள விரும்புகிறேன்.!”என்றான் ஆதித்தன்.



“இதென்ன புதிரான வேண்டுகோள்? “



“என் அத்தை மகளுக்கு ஓவியம் என்றால் மிகவும் ப்ரியம்.அவளை மணக்க நான் ஓவியம் கற்று கொள்ள வேண்டுமாம்? நானும் சுயமாக முயற்சி செய்தேன்.நரியை வரைந்தால் பரி போல் இருக்கிறது.குருவற்ற வித்தை பாழ் என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது.ஆகவே முறைப்படி கற்க உத்தேசித்துள்ளேன்.மன்னர் பிரான் மனம் வைத்தால் நான் மணமகனாகி விடுவேன்.குழந்தை பிறந்தால் உங்கள் பேரை வைத்து நன்றி பாராட்டுவேன்! “என்றான் ஆதித்தன்.



“ஆவண செய்தோம்.காலையில் அசுவ சாஸ்திரமும், மாலையில் ஓவியமும் கற்று கொள்ளும்.”என்றான் மகிபாலன்.



“அஸ்வ சாஸ்திரம் கற்க இரண்டு வாரங்கள் போதும் மன்னரே! ஆனால் ஓவியம் கற்க நீண்ட நாட்களாகும்.!”என்றான் தண்டநாயக்கன்.



“குதிரையை வரைந்து அது கழுதை என்று என் அத்தை மகள் நம்பினாலும் கூட போதும் நாயக்கரே!பிறக்கும் இரண்டாவது பெண் குழந்தைக்கு தண்டநாயகி என்று உமது பெயரை சூட்டுவேன்.மகிழ்ச்சிதானே? “என்றான் ஆதித்தன்.



“மந்திரியாரே! உம்மையும் பகடி செய்கிறான் இந்த இளைஞன்! வயதின் குறும்பு! “என்றான் மகிபாலன்.



“தூதனாக உதவி நாடி வந்ததால் பொறுக்கிறேன் மன்னரே! “என்றான் தண்டநாயக்கன் வெறுப்புடன்.



“மனம் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள் மந்திரியாரே! எங்களுக்கு விடை கொடுங்கள்! “என்றான் ஆதித்தன் பவ்யமாக.



இருவரும் விடை பெற்று விருந்தினர் மாளிகை நோக்கி புரவியுடன் நடைபோட்டனர் .



அவர்களை வெறுப்புடன் பார்த்த தண்ட நாய்க்கன் “எனக்கென்னவோ ஏதோ விபரீதத்தை நிகழ்த்தவே இவர்கள் வேங்கி வந்தது போல் தெரிகிறது.அபாயமானவர்கள்! “என்றான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 7



“என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே? “என்றான் மகிபாலன்.



“இவர்களின் மீது எனக்கு ஐயம் வருகிறது மன்னரே? “என்றான் தண்டநாயக்கன்.



“எதனால்? “



“கடகத்தின் மன்னருக்கு வேங்கியின் மீது ஒரு கண் இருப்பதை நாம் அறிவோம்.மோகினியை களவாடுவதன் மூலம் போரை முன்னெடுக்க முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது.!”



“மோகினிதான் பிரச்சனையின் அடிப்படையென்றால் மோகினியை வேறு இடத்திற்கு மாற்றுவோம்! “



“செய்யலாம்! ஆனால் அவர்கள் மோகினி போன்ற ஒரு குதிரையை அடக்கி பழகத்தான் இங்கே வந்துள்ளனர்.அசுவ சாஸ்திரத்திற்கு மோகினி தேவை! “



“திட்டத்தை தெளிவாகவே போட்டிருக்கிறான் ஆதித்தன்.அப்படியானால் அவனை கண்காணிக்க ஏற்பாடு செய்வோம்.!”



“வேண்டாம் மன்னா! அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.வேறு ஏற்பாடு செய்கிறேன்.!”



“என்ன செய்ய போகிறீர்கள்? “



“என் வயதான சித்தப்பா வீட்டில் பொழுது போகாமல் புலம்பி கொண்டிருக்கிறார்.என் மாளிகையிலிருந்து பார்த்தால் அனுபூதியின் லாயமும், ஆதித்தனின் விருந்தினர் மாளிகையும் தெளிவாக தெரியும்.அவரை தொலை நோக்கி மூலம் கண்காணிக்க சொல்கிறேன்! “



“நல்லது! உமது மதியூகத்திற்கு சவால் ஆதித்தன் மூலம் வந்திருக்கிறது.!”



“வெல்வது யாரென்று கடைசியில் தெரியும் மன்னா! “



மறுநாள் காலை அனுபூதியின் குதிரை லாயத்திலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி மகாதேவி ஆலயத்தில் குரு காணிக்கையோடு காத்திருந்தனர் சகோதரர்கள் இருவரும்.கடிவாளம் இடப்படாத ஒரு குதிரையில் அலட்சியமாக உட்கார்ந்தபடி வந்து சேர்ந்தான் அனுபூதி.

“வணக்கம் குருவே! “என்று காலில் விழுந்த ஆதித்தனை “தீர்க்காயுஷ்மான் பவ! “என்று வாழ்த்தி எழுப்பிய அனுபூதி

“நீதான் கடக நாட்டின் தூதனா? “என்றான்.



“ஆம்! நான்தான் அந்த தூதுவன்.இப்போது உங்களின் மாணவன்! எப்படி குருவே கடிவாளம் இடப்படாத குதிரையில் பயணம் செய்கிறீர்கள்? பயமாக இல்லையா? “

“ஹாஹாஹா!குதிரைகள்தான் என்னை பார்த்து பயப்படும்.!சரி எனக்கு தட்சணையாக என்ன கொண்டு வந்தீர்கள்? “என்றபடி தட்சணை தட்டை மூடியிருந்த துணியை நீக்கி பார்த்தவன் ஏமாற்றத்துடன் உதட்டை பிதுக்கினான்.

“யவன மது ஒரு குடுவை இருந்தால் இரவு பொழுதை ஏகாந்தமாக கழித்திருக்கலாம்! “



“அதற்கென்ன ஏற்பாடு செய்தால் போயிற்று! “



“சரி! மகாதேவி கோவிலில் விளக்கை காணிக்கையாக செலுத்தி வேண்டுவது வாடிக்கை! காணிக்கையை செலுத்தி வேண்டி கொள்ளுங்கள்! “



கடவுளை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான ஒரு ஓலை குடிசையை பார்த்த ஆதித்தன் “குருவே! அது என்ன? “என்றான்.



“மகாதேவியின் ஆழித்தேர்! வேங்கியின் பெருமைகளில் மோகினியை போல் இதற்கும் இடம் உண்டு! “

அவர்கள் அனுபூதியின் குதிரை லாயத்தை நோக்கி புரவிகளுடன் நடக்க தொடங்கினர்.

கோட்டை சுவரை நெருங்கியதும் இருவரையும் தேக்கி நிறுத்திய அனுபூதி

“ஆதித்தா! உனக்கு ஒரு கேள்வி.!உன் எதிரி இந்த மதில் சுவரின் மறுபக்கம் குதிரையுடன் உன்னை கொல்ல காத்திருக்கிறான் என்று வைத்து கொள்.அதை நீ எப்படி அறிந்து கொள்வாய்? “



“கடினம் குருவே! என் வரவை எதிர்பார்த்து அவன் பதுங்கியல்லவா கிடப்பான்? எப்படி கண்டறிவது? “



“எளிது ஆதித்தா! இப்போது பார்! “என்ற அனுபூதி புரவி ஒன்றின் முதுகில் விசையுடன் அறைந்தான்.புரவி பலத்த குரலில் கனைத்தது.அதற்கு பதிலாக கோட்டைஉள்ளிருந்து கொத்தவாலின் குதிரை கனைத்து பதில் எழுப்பியது.



“எப்படி உத்தி? குதிரைகள் பேசி காட்டி கொடுத்து விடும்! நீ உஷாராகி விடலாம்! “



“அருமை குருவே! பிரமாதமான யுக்தி! “என்று ஆதித்தன் சொல்லி கொண்டிருந்த போது தளபதி வீரசிம்மன் தலைமையில் ஒரு சிறுபடை கோட்டையினுள் நுழைந்தது.

குதிரையிலிருந்து இறங்கி வந்த வீரசிம்மன் “அனுபூதி! உன் குதிரை லாயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க சொல்லி தண்ட நாயக்கர் உத்தரவிட்டிருக்கிறார்! “என்றான்.



“குதிரையை திருடி விடுவார்கள் என்று அமைச்சர் நினைப்பார் போல் தெரிகிறதே? “என்றான் ஆதித்தன்.



“வழக்கமாக மோகினிக்கு தரப்படும் பாதுகாப்புதான் இது.விருந்தாளிகள் சங்கடப்பட வேண்டாம்! “என்றான் வீர சிம்மன்.

அரிஞ்சயன் இதை மீறி நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை போல் ஆதித்தனை பார்த்தான்.ஆதித்தனின் உதடுகளில் ஒரு விசம புன்னகை பிறந்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 8



காலையில் ஆதித்தனும் அரிஞ்சயனும் அனுபூதியிடமிருந்து அஸ்வ சாஸ்திரத்தின் முதல் பாடத்தை கற்க ஆரம்பித்தனர்.



“குதிரையின் ஆயுள் காலம் 32 ஆண்டுகள்.அவற்றின் ஆயுள் காலத்தை பற்களின் நிறத்தை கொண்டு அறியலாம்.மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பற்களின் நிறம் மாறும்.இதோ அரண்மனையிலிருந்து வயதிற்கு ஒன்றாக பத்து குதிரைகளை வரவழைத்திருக்கிறேன்.அவற்றின் பற்களின் நிறத்தை கொண்டு வயதை அறிவதை இப்போது நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்! “



லாயத்திலிருந்த 10 குதிரைகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர் மூவரும்.

“ஆயுட்காலம் 32 என்றால் ஒரு குதிரை குறைகிறதே குருவே? “என்ற ஆதித்தனை பார்த்த அனுபூதி “அது தொண்டு கிழமாகி மரணத்திற்காக காத்திருக்கிறது.அதனால் நடமாட இயலாது.நாம்தான் அதன் இருப்பிடம் போக வேண்டும்! “என்றான்.



“அந்த குதிரை இறந்து விட்டாலும் சமாதியை தோண்டி பற்களை பார்த்து விடுவேன் குருவே! “



“உன் கற்று கொள்ளும் ஆர்வம் எனக்கு பிடித்திருக்கிறது ஆதித்தா! “



“நன்றி குருவே! இன்று இரவு உங்களை மகிழ்விக்க யவனமதுவை வாங்க எண்ணியுள்ளேன்.அங்காடிகள் இருக்குமா? “



“இரவிலும் இயங்கும் அல்அங்காடிகள் வேங்கியில் உண்டு.கவலை வேண்டாம்.காத்திருப்பேன்.!”



“நல்லது குருவே! “



இருவரும் அஸ்வசாஸ்திரத்தின் பாடத்தை கற்று கொண்டு விடுதி திரும்பும் வழியில் அரிஞ்சயன் கேட்டான்.



“கற்ற வித்தைகளை நாம் அனுபூதிக்கு எதிராகவே பயன்படுத்த போகிறோம் என்று தெரிந்தால் அனுபூதி வித்தை சொல்லி தரவே மறுத்திருப்பான்! “



“கற்று கொடுத்தவனிடம்தானே நன்றாக கற்று கொண்டதை நிருபிக்க வேண்டும்.தவறு இருந்தால் அவனே திருத்தட்டும்! “



மதிய உணவிற்கு பின் சிரமபரிகாரம் செய்யஅறையின் படுக்கையில் சாய்ந்தனர் சகோதரர்கள் இருவரும்.



“தண்டநாயக்கன் என் திட்டத்திற்கு பெரும் சவாலாக இருப்பான் போலிருக்கிறது.!என்னை விடவும் மதியூகியாக வேறு இருக்கிறான்.!”



“பலவீனத்துடன் மோதி ஜெயிப்பதை விட பலத்துடன் மோதி வெல்வதே வீரம்.!அவனிடம் தோற்றாலும் பெருமையே! “



“ஆம்! நம் வரவின் நோக்கை அறிந்து மோகினியின் காவலை பலப்படுத்தி விட்டான்.சவால் கடுமையாகிறது.!”



“”இதை மீறி உன்னால்…”



“முயற்சி திருவினையாக்கும்.அண்ணா சுவற்றில் தெரியும் அந்த வட்ட வெளிச்சத்தை பார்த்தாயா? “



“வெளிச்சத்தில் உள்ள கண்ணாடியோ, உலோகமோ சுவற்றில் எதிரொளிக்கிறது.அதன் பிரதிபிம்ப வட்டம் அது! “



“சரிதான்! ஆனால் காலையில் அனுபூதியின் லாயத்தின் மூலையிலும் இதே வட்டம் அங்கிங்குமாக அலைய கண்டேன்.!”



“அப்படியானால்? “



“யாரோ நம்மை தொலைநோக்கி மூலம் கண்காணிக்கிறார்கள்.தண்டநாயக்கனின் மாளிகையிலிருந்துதான் அந்த பிரதிபலிப்பு நம்மை தொடர்கிறது.கண்காணிக்க ஆட்களை நியமித்திருக்க கூடும்.!”



“அபாயம் நிழலாக தொடர போகிறது! “



“அதைத்தான் சக்ரவியூகம் என்று சொன்னேன்!”



“அடுத்தது என்ன செய்ய போகிறோம் ஆதித்தா? “



“மாலையில் ஆஸ்தான ஓவியர் ரவி தாசனிடம் ஓவியம் கற்று கொள்ள போகிறேன்.குரு தட்சணையை காலையிலேயே வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.!”



“அத்தை மகள் இருப்பதாகவும், அவளுக்கு ஓவியத்தில் உயிர் என்றும் நீ சொன்னது கதைதானே? “

“முற்றிலும் கட்டுக்கதை! அண்ணா மாலை நான் தனியாக ரவிதாசரிடம் ஓவியம் கற்க போக போகிறேன்.நீ குருவிற்கு யவனமதுவை வாங்க கிளம்பு! வட்டம் யாரை பின் தொடர்கிறது என்று பார்ப்போம்.!”



“தனித்தனியாக பிரிந்து அவர்களை குழப்ப போகிறோம்.?”



“ஆம்! அவர்கள் யாரை அதிகம் கண்காணிக்கிறார்களோ அவர் நல்ல பிள்ளையாக நடிக்க வேண்டியதுதான்.கவனத்தில் வராதவர் முக்கிய வேலைகளை செய்ய வேண்டியதுதான்! “



“நல்ல யோசனை! “



“நீ தினமும் மாலை கடை வீதிக்கு சென்று ஒரே ஒரு குவளை யவனமது மட்டும் வாங்கி வா! உனை கண்காணிப்பவர்கள்மது வாங்கி வர மட்டுமே செல்கிறாய் என்று கண்காணிப்பை தளர்த்துவார்கள்.கண்காணிப்பு இல்லாத உன் மூலம்ஆட்டத்தை ஆரம்பிப்போம்.!மதுவை அருந்தி விட்டு வருவது போல் நடிப்பது இன்னமும் உத்தமம்! “



“மாறாக என்னை கண்காணித்து உன்னை விட்டு விட்டால்? “



“குரங்கு அழித்த வனமாகும் வேங்கி! என் விளையாட்டு எளிதாகும்! “



அன்று மாலை சகோதரர்கள் இருவரும் கிழக்கும், மேற்குமாக பிரிந்தனர்.தண்டநாயக்கனின் மாளிகை சன்னல் வட்டம் ஒரு நிமிடம் குழம்பி தவித்து “தண்டநாயக்கா! “என கூவியது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 9



சித்தப்பாவின் கூவலை கேட்டு மாடிக்கு வந்த தண்டநாயக்கன் “என்னாயிற்று சித்தப்பா? உன் பொழுது போக்கில் குறை எதுவும் உண்டோ? “என்றான்.



அந்த வயதான கிழவர் குழல்நோக்கியை மடக்கியபடி “இருவரும் திசைக்கு ஒருவராக பிரிந்து விட்டார்கள்.நான் யாரை கண்காணிப்பது? “என்றார்.



“இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களை மட்டும் நீர் கண்காணித்தால் போதும்.தனித்தனியாக பிரிந்தவர்களின் பின்னால் ஒற்றர்கள் போயிருக்கிறார்கள்.சற்று நேரத்தில் தகவல் வரும்.!போய் ஒய்வெடுங்கள்! “என்று அவரை அனுப்பினான்.



சற்று நேரத்தில் விரைந்து வந்த ஒற்றர்களில் ஒருவன் “மந்திரியாரே! அரிஞ்சயன் மதுவருந்தி விட்டு ஒரே ஒரு குவளை மதுவை வாங்கி கொண்டிருப்பதாக தகவல் சொல்ல சொன்னார்கள்! “



“அது ஒரு குவளை மது யாருக்காக இருக்கலாம்? “



“அனுபூதிக்காக இருக்கலாம்.அவனோரு மொடாக்குடியன் என்பதும் சதிர் ஆட்ட அடிமை என்பதும்ஊருக்கே தெரியுமே அமைச்சரே! “



“நானும் அதைத்தான் ஊகித்தேன்.அவனுக்கு தருவதை மொத்தமாக வாங்கி கொடுத்து விடலாமே? ஏன் ஒரு குவளை மட்டும் வாங்கி கொடுக்க வேண்டும்? நாளை அரிஞ்சயனுக்கு மட்டும் இரண்டு பொற்காசுகளுக்கு மூன்று குவளை மதுவை தர சொல்! “



“அதாவது இரண்டு குவளை வாங்கினால் ஒரு குவளை இலவசம்! அப்படித்தானே? “



“ஆம்! குடிப்பிரியன் ஒரு குவளை மது கூடுதலாக கிடைப்பதால் இரண்டு காசுகளுக்கு மூன்று மது குவளைகளை வாங்குவான்.நம்மை ஏமாற்ற எதாவது சதி செய்தால் ஒரு குவளை மட்டுமே வாங்குவான்.!அதை வைத்து யார் அபாயமானவர் என்பதை அறிந்து கண்காணிப்போம்! “



“இருவரையும் கண்காணித்தால் என்ன? “



“கடக மன்னரிடம் கண்காணிப்பதாக ஒருவன் புகார் கூறினால் மற்றொருவன் மறுப்பான் அல்லவா? அதனாலேயே ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும், இன்னொரு கண்ணுக்கு வெண்ணெயும் வைக்கிறோம்! புரிந்ததா? ஆதித்தன் என்ன செய்கிறான்? “



“அவர் ரவிதாசனின் மாளிகையில் பேசி கொண்டிருக்கிறார்.!”



“வாய்துடுக்கும், பகடியும் பேசுபவன்தான்.குறைக்கிற நாய்கள் எப்போதும் கடிப்பதில்லை! நீ போகலாம்! “



தண்டநாயக்கனின் மாளிகையில் இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது ரவிதாசனின் மாளிகையில் பணிவுடன் நின்று கொண்டிருந்தான் ஆதித்தன்.



“என்ன ஆதித்தா? அத்தை மகளுக்காகத்தான் ஓவியம் கற்றுக் கொள்ள முனைகிறாய்! இல்லையா? “என்றான் ரவிதாசன்.



“பொய் சொல்ல விரும்பவில்லை தாசரே! உண்மை அதுவே! “



“பெண் பேரழகியோ? “



“என் கண்களுக்கு மட்டும் தாசரே! “



“உமது உண்மை கூறும் குணத்திற்காகவே நான் வித்தை கற்று கொடுக்கிறேன்.மொழிக்கு முன் தோன்றியது ஓவியம்.ஆதி மனிதன் ஒரு ஆட்டை பார்த்தால் அதன் குரலை எழுப்பி அடையாளப்படுத்தினான்.அதே தான் பார்த்த வினோத விலங்கை மற்றவர்களுக்கு வரைந்து காட்டியே விளக்கினான்.ஆக மொழிக்கு முன்பாக தோன்றியது ஓவியமே! இன்றும் சீன தேசத்தவர்கள் சித்திரத்தையே மொழியாக பயன்படுத்தி வருகின்றனர்.”



“ஓவியத்தின் உயிர் அதன் வண்ணத்தில் உள்ளதென்று நினைக்கிறேன் தாசரே! “



“ஆம்! வண்ணத்தை வெளிச்சத்திற்கேற்ப குறைத்தோ, கூட்டியோ வரைவதில்தான் ஒரு ஓவியத்தின் உயிர் இருக்கிறது.!”



“இந்த வண்ணங்களின் ஆயுள் நீடிப்பதில்லையே? பிறகு எப்படி ஓவியம் காலத்தைவென்று நிற்கும்?”



“என் ஓவியங்கள் நிற்கும்.அதற்கென்று அழியாத பிரத்யேக வண்ணங்களை நான் யவனத்திலிருந்து வரவழைத்து பயன்படுத்துகிறேன்.அவற்றின் பலவீனம் வெய்யிலில் வைத்தால் ஓவியங்கள் தங்களின் வண்ணத்தை இரண்டு நாட்களில் இழந்து விடுகின்றன! அதனால் நிழலில் வைத்து பாதுகாக்கிறேன்! "



“அழியாத வண்ணக்கலவை ரகசியத்தை நான் அறிவேன் தாசரே! “என்றான் புன்னகையுடன் ஆதித்தன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி10



“என்ன சொல்கிறாய் ஆதித்தா? காலத்தால் அழிக்க முடியாத வண்ணத்து பூச்சின் ரகசியத்தை நீ அறிவாயா? “ரவிதாசனின் குரலில் பரபரப்பு கூடியது.



“கடக நாட்டின் மலைக்குகை ஓவியத்தை பற்றி அறிந்துள்ளீரா தாசரே? “என்ற ஆதித்தன் வலையை நைச்சியமாக விரித்தான்.ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் என்ற தங்கவிதியை ஆதித்தன் அறிந்திருந்தான்.



“ஆம்! நேரிலும் பார்த்துள்ளேன்.!காலத்தால் அழிக்க முடியாத குகை ஒவியங்கள் அல்லவா அவை! நூறு ஆண்டுகளாக தங்கள் வண்ணத்தை சற்றும் இழக்காமல் புதிது போல் காட்சியளிப்பதே அதன் சிறப்பு! “



“அந்த ஒவியங்களின் வண்ண ரகசியத்தை அறிந்தவர்கள் என் முன்னோர்கள்.!என் தாத்தாவும் கூட சிறந்த ஓவியரே! அவருக்கு வண்ண கலவை செய்ய சிறு வயதில் உதவியிருக்கிறேன்.என் ஓவிய பரம்பரையில் தவறி போய் குதிரைகளின் பக்கம் வந்தவன் நான்.அந்த அவப் பெயரை போக்கவே என் அத்தை மகள் என்னை ஓவியம் கற்று கொள்ள சொல்கிறாள்.!”



“ஓ! அப்படியா? அப்படியானால் அந்த வண்ண ரகசியத்தை எனக்கு தந்து உதவலாமே? “



“உதவ விரும்புகிறேன் தாசரே! ஆனால் சிறு வயதில் கற்ற அந்த வித்தைகளை நான் சற்று மறந்து விட்டேன்.முயற்சி செய்தால் பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்புண்டு.!”



“உலகின் சிறந்தவையெல்லாம் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மன்னரின் ஆசை.அந்த வரிசையில் மோகினி, ஆழித்தேர் இவற்றுடன் என் ஓவியமும் சேரட்டுமே? “



“தங்களின் ஓவியத்திற்கு அந்த தகுதி இருக்கிறது.ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது.!”



“என்ன அது? “



“வண்ண கலவையின் பகுதி பொருளாக எப்போதும் குதிரையின் சூடான சிறுநீர் தேவை! “



“குதிரையின் சிறுநீர் எதற்கு? “



“எனக்கு தெரியாது.என் தாத்தா குதிரைகள் லாயத்திலிருந்துதான் வண்ண கலவைகளை தயாரிப்பார்.அப்போது குதிரைகளின் சிறுநீரை கொண்டு வருவதே என் பணி.அதில் எதாவது ரகசியம் இருக்கலாம்.அப்படி குதிரைகளோடு பழகி ஓவியத்தை விட்டு விட்டு குதிரை காதலனாக நான் மாறினேன்.!”



“வர்ண கலவை ரகசியத்தை பற்றி மன்னரிடம் பேசுகிறேன்.உன் இருப்பிடத்தை குதிரை லாயத்திற்கு உள்ளாக மாற்றுகிறேன்.நீ அசுவ சாஸ்திரம் கற்ற நேரம் போக மீதி நேரத்தில் வர்ண கலவைகளை பற்றி ஆராயலாம்! என் வேண்டுகோளை மன்னர் மறுக்க மாட்டார்! “



“நன்றி தாசரே! உமது கலைக்கு என்னாலான பங்களிப்பு! அப்படியே எனக்கு குதிரையை வரைய சொல்லி கொடுங்கள்.என் அத்தை மகளை மணக்க வேண்டும்.!”



“ஆஹா! அதற்கென்ன சில நிமிடங்களில் கற்று கொள்ளலாம்! “



ரவிதாசன் பாடத்தை தொடங்கினான்.தாசனின் வேண்டுகோள் பலித்தது.மறுநாள் குதிரை லாயத்திற்குள்ளேயே சகோதரர்கள் இருவரும் தங்க வைக்கப்பட்டனர்.ஆதித்தன் ஓய்ந்த நேரங்களில் பச்சிலைகளை அடுப்பில் வைத்து குதிரைகளின் மூத்திரத்தை ஊற்றி ஆராய்ச்சி என்ற பெயரில் எதையெதையோ செய்ய துவங்கினான்.குதிரை லாயத்தில் தங்க வைப்பதை எதிர்த்த தண்ட நாயக்கனின் எதிர்ப்பு மன்னரால் புறம் தள்ளப்பட்டது.லாயத்தில் தன் அருகே இருந்த மோகினியை பார்த்த ஆதித்தன் “பொறு மோகினி! இன்னும் 13 நாட்களில் உன்னை தூக்கி செல்வேன்! “என்று புன்னகைத்தான்.மாளிகையில் தண்டநாயக்கன் தன் கண்காணிப்பிலிருந்து ஆதித்தன் சாதுர்யமாக தப்பித்ததை எண்ணி குமுறி கொண்டிருந்தான்.அவன் அறிய மாட்டான் மறுநாள் அரிஞ்சயன் தன்னை முட்டாளாக மாற்ற போவதை!
 

New Threads

Top Bottom