மலர்மதி 19 – 20 (End)
5247
12
அத்தியாயம் – 19
இரண்டு நாள் இடைவேளைக்குப் பிறகு.
காலையிலேயே வந்துவிட்டனர் அர்ஜுனும், ஸ்ரீகாந்தும் – வந்த வேகத்திலேயே,
“அண்ணனை பார்க்க முடியவில்லை மலர், இப்படி அவர் உடைந்து நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. முதன் முதலில் அன்று நம் கம்பெனி ஆண்டு விழாவில், அண்ணன் உன்னோடு ஆடினார் பார், அன்றே முடிவு செய்து விட்டோம். நீ தான் எங்கள் அண்ணி என்று. ஆனால் நடப்பது எல்லாம் தலைகீழாக இருக்கிறது.”
ஆதங்கத்தில் அங்கலாய்த்தான் அர்ஜுன். “பெண்களைப் பற்றி பேசினாலோ! ஏன் நாங்கள் காதலித்தாலோ கூட பிடிக்காமல் இருந்தவர் தான் எங்கள் அண்ணா! அவருள்ளும் காதல் நுழைந்து, அவரை அடியோடு மாற்றியப் பொழுது, நாங்கள் எத்தனை சந்தோஷப்பட்டோம் தெரியுமா. பெரியம்மா பெரியப்பாவும் கூட, என்னென்ன கனவுகள் கண்டார்கள் தெரியுமா, எல்லாம் வீண்.” ஸ்ரீகாந்த்.
“எப்பொழுதும் அவர் எங்கள் மூவரின் நலன் பற்றி தான் அதிகம் சிந்திப்பார். முதன் முதலாக தனக்கென்று அவர் ஆசைப்பட்டது உன்னைத்தான். நீ எத்தனை சூடாகப் பேசினாலும் உன்னையே சுற்றிச் சுற்றி வந்தார். இப்போது கூட உன்னிடம் அவரை முழுமையாக ஒப்படைக்க எண்ணித்தான் ஏதேதோ செய்து, வீணாவை மதுவின் வாழ்விலிருந்து விலக்கிவிட்டார்.
இப்போது மது தன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். எங்களையும் கூப்பிட்டு பேசினார். எல்லாம் கை கூடி வரும் நேரத்தில், எல்லாற்றையும் சுக்கல், சுக்கலாக கிழித்து விட்டாயே!” அர்ஜுன்.
எங்கோ! ஏதோ உடைவது போல் உணர்ந்தாள் மலர்மதி. ஏதோ புரிவது போல், சிறிதாக மூளைக்குள் ஒரு பொறி தட்டியது. “வ…வந்து… மதுசூதனனை இங்கே வரவழைக்கிறீர்களா? இப்போதே! ப்ளீஸ்.”
கண்ணீருடன் அவர்களிடம் மன்றாடினாள். ஏதோ புரிவது போல் தோன்ற உடனே செல்லில் தொடர்பு கொண்டு அவனை அழைத்தனர்.
அவன் வந்ததும், “அன்று லீமெரீடியனில் நடந்தது என்ன மதுசூதனன். தயவு செய்து ஒளிவு மறைவில்லாமல் கூறிவிடுங்கள்.” என்றாள்
கெஞ்சலாக, முதலில் தயங்கியவன், மலர்மதியின் கண்ணீரைப் பார்த்து கூறலானான்.
“எனக்கு வீணாவின் மீது ஒருவகையான ஈர்ப்பு. அதனை காதல் என்று, முட்டாள் போல நம்பியிருந்தேன். அதுமட்டுமல்லாமல், பலமுறை அண்ணா என்னை இதுபோன்ற பெண்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறார். அதேபோல் இப்போதும் என்னை எச்சரித்தார். ஆனால் நானோ! இது உண்மையான காதல், அது இதென்று பேத்தினேன். அதற்குள் நீங்கள் வேறு அவரது வாழ்வில் நுழைந்து விட்டீர்களா. அதனால் ஒரு நாள் அண்ணன் என்னை அழைத்து, இனி எனக்கென்று ஒரு வாழ்வை ஆரம்பிக்கப் போகிறேன். அதனால் உனக்கு இறுதியாக ஒரு எச்சரிக்கை தருகிறேன். வீணாவை நம்பாதே” என்றார். நான் சான்று கேட்டேன். அவள் கெட்டவள் என்பதற்கு சான்று. உடனே நாளை மாலை லீமெரீடியனில் டேபிள் நம்பர் டூவில் உட்கார்ந்திரு என்றார். பிறகு வீணாவை அழைத்துக் கொண்டு வந்தவர். ஒருவாறு அவளுக்கு பண ஆசையை தூண்டிவிட்டார். உடனே அவள்… அண்ணனுக்கு… அண்ணனுக்கு.” முடிக்க முடியாமல் அவனது உதடுகள் துடித்தன.
“தேவையில்லை மதுசூதனன் நான்காம் நம்பர் டேபிளில் இருந்தது நான்தான். மேலே இரண்டாவது மாடியில் என்ன நடந்தது.”
“அவர்கள் இருவரும் வருவதற்கு முன்பே, என்னை அந்த அறைக்குப் போகச் சொல்லி, குறுஞ்செய்தி அனுப்பி விட்டார் அண்ணா. நானும் அங்கே சென்று விட்டேன்.”
“ரூமினுள் நுழைந்ததும், வீணா என்னை பார்த்து மிரண்டு விட்டாள். நான் அவளை சரமாறியாக பொழிந்து விட்டு, அண்ணனோடு வீடு திரும்பிவிட்டேன். உதட்டை அழுந்த கடித்துக் கொண்டு, அதில் இரத்தம் கசிய நின்ற வீணாவைத் தான் நான் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு அவள் இருக்கும் திசைப் பக்கம் கூட செல்வதில்லை. மூன்று மாத சம்பளத்தை, அவளது வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டு, அனுபவ கடிதத்தை அவளது ஹாஸ்டலுக்கு அனுப்பி விட்டேன். அன்று லீமெரீடியனில் நடந்தது ஒரு நாடகம் மலர், அண்ணன் நல்லவர்.” எல்லாம் புரிந்து விட்டது, சூரியனை மறைத்த மேகம் அகன்று விட்டது. அன்று உதட்டின் காயம் வந்த காரணம் வேறு, ஆனால் வீணா கூறிய காரணம் வேறு. சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்தே வீணாவிற்கு மலர்மதியின் மீது வெறுப்புத்தானே. அவளை துன்புறுத்தவே வீணா இப்படி செய்திருக்க வேண்டும். என் மனதில் தனா இருப்பது தெரிந்து தான் காய் நகர்த்தியிருக்கிறாள். அவளது எண்ணம் ஈடேறவில்லை என்பதால், என் வாழ்வையும் அழிக்கத்துணிந்து விட்டாள். அவள் செய்யக் கூடியவள்தான் என்கின்ற உறுதி தோன்ற…
“த…தனா… தனா இப்போது… எங்கே?” என்றாள் இதழ்கள் துடிக்க.
“அண்ணா இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை. அவரது வீட்டிலேயே அடைந்திருக்கிறார். வாருங்கள் நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.” என்று சாவியுடன் மதுசூதனன் முன்னே செல்ல, எல்லோரும் பின்தொடர்ந்தனர்.
அத்தியாயம் – 20
ஜன்னல் கம்பிகளின் வழியே வெளியே இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டு நின்றான் தன்யன். வாழ்வே சூன்யமாய் போனது போல் தோன்றியது. இனி என்றும் மகிழ்ச்சி உண்டாகப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயமாய். மலர் இல்லாத வாழ்வை நினைக்கவும் அவனுக்கு அச்சமாக இருந்தது.அவன் சிந்தனையை கலைப்பது போல், சட்டென கதவு திறக்கப்பட்டு மலர்மதி உள்ளே நுழைந்தாள்.
“வந்துட்டியா மலர்மதி.” என்று ஆவலாய் இரண்டடி முன்னே எடுத்து வைத்தவன் சட்டென நின்று, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“உட்காருங்கள் மலர்மதி.” என்று அவன் காட்டிய இருக்கையை விடுத்து, அவன் முன்னே வந்து நின்றாள்.
“மதி என்கின்ற அழைப்பு அழகாக இருந்தது தனா!” கண்கள் பளிச்சிட,
“எ…என்ன…!’’ புரிந்தும் புரியாமலும் சில நொடி விழத்தான். பின்பு,
“என் கண்களைப் பார்த்துச் சொல் மலர்மதி. நான் உனக்கு செய்வேனா!என்றவனது கண்களைப் பார்த்தவள், அடுத்த நொடி அவனது இறுக்கமான அணைப்பில் சிக்குண்டாள்.
“நம்புகிறேன் தனா. மனப்பூர்வமாக நம்புகிறேன். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தவறான ஒன்றை, என்னை நம்ப வைத்து விட்டது,மன்னித்து விடுங்கள்.” இன்னமும் இறுக்கமாக அவளை அணைத்துவிட்டு மென்மையாக, நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான்.
“நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.”
“எதற்கு.”
“நிறைய காரணம். முதல் காரணம், அன்று உன்னை ரேட் கேட்டதற்கு, அன்றே உன் மீது எனக்கு ஏதோ ஒரு ஈடுபாடு இருந்தது. அதற்கு நீ கொடுத்த பதிலடியும், என் மன்னிப்பை ஏற்காமல் வீராப்பாய் நீ சென்றதும், என்னை முழுதாக உன் வசம் இழுத்துவிட்டது. பிறகு அன்று வீணாவிடம் காதல் வசனம் பேசியதற்கும் மன்னித்துவிடு. அது உனக்கு எப்பொழுதும் தெரிந்து விடக் கூடாது என்றும் நினைத்தேன். தெரிந்தால் உன் மனம் இப்படி உடைந்து போகுமென்று தெரியும். நடிப்பாக இருந்தாலும், என்னாலேயே தாங்க முடியவில்லை. நீ எப்படி தாங்குவாய் என்று நினைத்துத்தான் மறைத்தேன். மன்னித்து விடு கண்மணி. உனக்கு ஒன்று தெரியுமா மதி, நான் உன்னை எந்தளவு நேசிக்கிறேன் என்பதே அன்று வீணாவிடம் காதல் வசனம் பேசிய பொழுதுதான் தெரிந்தது. நடிப்புஎன்று தெரிந்திருந்தாலும், ஒவ்வொரு வார்த்தையும் உதடு வரை வராமல் உள்ளேயே நின்றது. அப்படியெல்லாம் பேச, எப்படி தவித்தேன் தெரியுமா? எல்லாம் உன்னோடு நான் வாழப் போகிற நிம்மதியான வாழ்வுக்காக தானே என்று நினைத்துக் கொண்டு, திக்கித் திணறி பேசி முடித்தேன் தெரியுமா?”
வெட்கம் மேலிட, “என் மனமும் தெள்ளத் தெளிவாக அப்போது தான் புரிந்தது தனா. நீங்கள் வீணாவிடம் பேசியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவேயில்லை. என்னவரான நீங்கள், அவளிடம் எப்படி பேசலாம் என்று உள்ளே எழுந்த கோபம் என்னையும் மீறி வெடித்ததன் பலன்தான். அதனை தொடர்ந்து வந்த நாட்களில் நடந்தவை. நான் முதலில் உங்கள் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் தனா!”
“அதைப் பற்றிய கவலையே விடு. இனி நடப்பதைப் பார்ப்போம்” என்று மையலோடு அவளை அவன் நெருங்க, “போதும் போதும் உங்கள் ரொமாண்ட்ஸ், மீதியை திருமணம் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.” என்று கோரஸாக மூன்று தம்பிகளும் உள்ளே வந்தனர். பின்னோடு வாஞ்சிநாதனும் வந்தார்.
“எல்லாம் சுபம் தானா.” என்றார் இதழில் குறுஞ்சிரிப்புடன்.
“பின்னே சுபமில்லாமல் எப்படிப் போகும். பார்த்த உடனே இவர்களுக்கு காதல் வந்ததோ இல்லையோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் பார்த்த உடனே மலர்தான் எங்கள் அண்ணி என்று நாங்கள் முடிவெடுத்து விட்டோம்.’’ என்றனர் அர்ஜுனும், ஸ்ரீகாந்தும்.
“தொடர்ந்து இவர்கள் காதல் வளர, நாங்கள் பட்ட பாடு… அப்பப்பா, கடவுளுக்குத்தான் தெரியும். எல்லாம் நன்றாக வரும் பொழுது, இந்த மதுவால் எல்லாம் மீண்டும் குழம்பியது…ஸ் அப்பாடா இப்போது எல்லாம் சரியானது.” என்று பெருமூச்சு விட்டனர் அர்ஜுனும் ஸ்ரீகாந்தும்.
“நானும் தான் என் பிறந்த நாள் விழாவில், இரவு கேக் வெட்டும் பொழுது, ஜோடியாய் வந்த உங்களைப் பார்த்து, அப்பொழுதே மனதாற வேண்டிக் கொண்டேன். இருவரும் வாழ்வில் இணைய வேண்டுமென்று.’’ என்றார் வாஞ்சிநாதன்.
“ஆக எங்களைச் சுற்றி, நீங்கள் எல்லோரும் இருந்ததால்தான் எனக்கு காதல் வந்ததோ.” கேலி போல் தன்யன் இழுக்க.
“இருக்கும் இருக்கும்.” என்று செல்லமாக முறைத்தாள் மலர்மதி. அங்கே ஒரு பலத்த சிரிப்பொலி எழுந்தது.
சுபம்
12 Comments
Nice story
Super story mam
Superb
Mam story super. Now this time i read u story. Very interesting. Madhu and dhanyan pair super
Super story
Super super very nice story
Super story madam
Nice story Mam
ஹாய்!இன்று உங்களுடைய நாவல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆழகான கதை.வாழ்த்துக்கள்ப்பா.
Hi mam
அருமையான காதல் நாவல் ,சிலநேரங்களில் காணும் காட்சியும் அதற்கு பின்னான காரணம் வேறாக இருக்கும் ,அப்படித்தான் மதி தனா வீணா சந்திப்பை பார்த்து தீனாவை தவறாக நினைத்தது,மதி தனா காதல் அழகாக இருந்தது,அர்ஜுன் ஶ்ரீகாந் குறும்பு ரசிக்கும்படியாக இருந்தது.
நன்றி
மிக்க நன்றி தாட்சாயிணி. சகாப்தம் தளத்திற்கு முதல் கமெண்ட் கொடுத்திருக்கிறீர்கள். இந்திராவின் கதைக்கும் நல்ல கமெண்ட்… மிக்க நன்றி…
நன்றி தாட்சாயனி,
உங்களது கமன்ட்டை படித்ததில் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து உங்களது ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.
நன்றி,
இந்திரா செல்வம்