Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 16 (End)

அத்தியாயம் – 16

மோகன் லட்சுமி திருமண நாள் வந்தது. காலையிலேயே காலிங் பெல் அழுத்தப்பட்டது. மோகன் தான கதவைத் திறந்தான். அம்மா அப்பா அண்ணன் அண்ணியைக் கண்டதும் முகம் மலர்ந்தது. அண்ணியின் கையை பிடித்துக் கொண்டிருந்த பிஞ்சு முகத்தைப் பார்த்தான். அதிர்ந்து போனான். கமல் தான்.. அது கமலே தான்.

 

“இவன்…” இழுத்தான்.

 

“உள்ள போயி பேசலாமே” ராஜம் வீட்டினுள் நுழைந்தாள். அதற்குள் லட்சுமி அங்கு வந்துவிட்டாள். ராஜம் லட்சுமியை கட்டிப் பிடித்துக் கொண்டாள். அனைவரும் மோகனை நலம் விசாரித்தார்கள். மோகன் பழைய கேள்விக்கே வந்தான்.

 

“கமல் எப்படிம்மா உங்க கூட?”

 

“அதை நான் சொல்றேன் அத்தான்” சிவா வந்தாள். பட்டுப் புடவையில் கையில் போக்கேயுடன் தேவதை போல் இருந்தாள்.

 

“முதல்ல விஷ் யூ எ வெரி ஹாப்பி மேரிட் லைப்” என்று பொக்கேயை அவன் கைகளில் திணித்தாள்.

 

அதை அருகிலிருந்த டீபாயில் வைத்துவிட்டு சிவாவை ஆவலோடு பார்த்தான்.

 

“சொல்லு சிவா”

 

“இது நம்ம லட்சுமி அக்காவோட ஏற்பாடுதான். சாரதா அக்காக்கும், சங்கர் அத்தானுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். குழந்தைதான் ஒவ்வொரு தம்பதியினருக்கும் வாழ்க்கையின் பிடிப்பு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று தான்  நினைத்தோம். சாரதி இறந்ததால் அவர் மகனைத் தேடி கண்டுபிடிச்சு தத்தெடுத்துக் குடுத்து ப்ளைட்ல அனுப்பும்படி அக்காதான் சொன்னாங்க. அந்த காரியத்தை கச்சிதமா முடிச்சுக் கொடுத்தேன். டூ இன் ஒன் பர்பஸ். இவங்களுக்கு குழந்தை கிடச்ச மாதிரி உங்களுக்கும் நிம்மதி கிடச்சா மாதிரி”

 

மோகன் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்தான். அப்பொழுதுதான் லட்சுமி சமையலறையிலிருந்து வந்தாள்.

 

“நீ எப்போ வந்த சிவா?”

 

“இப்போ தான் அக்கா” எழுந்து சென்று அவளைக் கட்டியணைத்து திருமண நாள் வாழ்த்துக் கூறினாள்.

 

“அத்தானை மயக்கிட்டிங்களா?” செல்லமாக லட்சுமியின் காதக் கடித்தாள். அவள் வெட்கத்துடன் தலைக் குனிந்தாள்.

 

“பெரியவனுக்கு ஒரு பையன் இருக்கான். சின்னவனுக்கு என்ன ஒன்னையும் காணும்?” ராஜம் ஆரம்பித்தாள்.

 

“ஒரு வருஷம் தானே அத்தை ஆச்சு. அடுத்த வருஷம் பாருங்க… குவா குவா தான்” சிவா கிண்டலடித்தாள்.

 

சிரிப்பும் களிப்புமாக இருந்தது அந்த இல்லம். அனைவர் மனதிலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது.

 

அன்று இரவு லட்சுமி படுக்கையறைக்கு வரும் பொழுது மோகன் உறங்கியிருப்பான் என்றே அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

 

“தூங்கலையா நீங்க?”

 

“ம்ஹும்…”

 

“சரி லைட் ஆப் பண்ணிட்டு தூங்குங்க” வழக்கம் போல் அவள் கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக்கொள்ள அவன் “லட்சுமி” என்று அழைத்தான்.

 

“என்னங்க?”

 

“சாரி”

 

“சாரியா! எதுக்குங்க?” புரியாமல் கேட்டாள்.

 

“உன்னை புரிஞ்சுக்காம இருந்ததுக்கு”

 

“என்னங்க நீங்க… நான் உங்க மனைவி. என்கிட்டே எதுக்கு சாரி பூரி எல்லாம். பேசாம படுங்க”

 

“என்ன சொன்ன?”

 

“எ… என்னங்க?” சற்று பயந்துவிட்டாள்

 

“இப்போ நீ என்ன சொன்ன?”

 

“சாரி சொல்ல வேண்டாம்னு சொன்னேன்”

 

“இல்ல அதுக்கு முன்னாடி”

 

“அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன்!”

 

“நீ சொன்ன”

 

“என்ன!! நான் உங்க மனைவின்னு சொன்னேன்”

 

அவனிடம் ஒருவிதமான சிரிப்பு தோன்றியது. ‘மாட்டிக்கிட்டியா?’ என்பது போல் பார்த்தான்.

 

“என்னங்க?” அவள் மலங்க விழித்தாள்.

 

“நீ என் மனைவிதானே?”

 

“ஆமாம்”

 

“அப்போ நான் அந்த உரிமையை எடுத்துக்கலாமா?” கேட்டுவிட்டான். லட்சுமியின் முகம் வெட்கத்தில் குபீரென்று சிவந்துவிட்டது.

 

“என்ன சொல்லு… சொல்லு சொல்லு…” அவள் வெட்கத்தை ரசித்தபடி அவளை வம்புக்கு இழுத்தான்.

 

அவள் “போங்க…” என்று கூறிவிட்டு அதற்க்கு எதிர்மறையாக அவன் மார்பிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

 

சன்னல் வழியே தெரிந்த நிலா இவர்களது நெருக்கத்தை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு மேகத்தினுள் மறைந்தது. இனி இல்லறம் என்றும் நல்லறம் தான். இனி வரும் இரவுகள் இன்பமானவை.

 

முற்றும்




6 Comments

You cannot copy content of this page