பதிவு 2
“ம்மாஆஆஆஆ.... ம்மாஆஆஆஆ.... அக்காஆஆஆஆ.... ஷி...சிவா சார்...” என்று வாசலில் நின்றபடி பிச்சைக்காரியைப் போல மீரா சத்தம் போட்டு கொண்டிருக்க யாருமே வெளியே வருவது போலவே தெரியவில்லை...
வாசல் கதவை திறந்து கொண்டு வரும்பொழுது இரும்பு கதவின் சப்தம் கேட்டு ஓடி வந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் அறிவு கூட வீட்டில் உள்ளவர்களுக்கு இல்லையென எரிச்சலுடனேயே எட்டாவது முறையாக காலிங் பெல்லையும் அழுத்திவிட்டு திரும்பவும் குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள்... ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் எரிச்சல் தான் அதிகமானதே ஒழிய எவரும் வந்தமாதிரி இல்லை... இந்த கூத்தெல்லாம் இன்று ஒருநாள் மட்டும் நடப்பது இல்லை... தினமும் இதே புராணம் தான்...
ஷோரூம் முதலாளியின் மனைவியை தான் அம்மா அம்மாவென்று அழைத்துக்கொண்டிருக்கிறாள்... அவர்களிடம் வேலைக்கு இருந்தாலுமே ஷோரூமில் வேலை செய்யும் அத்தனை பேருமே முதலாளியையும் அவர் மனைவியையும் அம்மா அப்பாவென்றே அழைக்கவேண்டுமென்பது அங்கு எழுதப்படாத சட்டமும் கூட... அத்தனை பேருமே வயது வித்தியாசப்படி அவர்கள் இருவரையும் முறை சொல்லி தான் அழைப்பார்கள்... மீரா வேலைக்கு சேர்ந்த அன்றே இதனையும் சொல்லிவிட்டபடியால் அவளுமே அவர்களை அப்படித்தான் அழைக்கிறாள்... உண்மைக்கும் சொல்ல வேண்டுமென்றால் வெளியே இருந்து வந்து புதிதாக பார்ப்பவர்களுக்கு இவர்களின் அணுகுமுறை அன்பை பறைசாற்றுவதாய் இருந்தாலும் எல்லாம் காரணமாய் தான் நடக்கும்..
பிரேமா அம்மா... பார்க்க ஒன்றுமே தெரியாத அப்பாவி போலே முகத்தை வைத்துக்கொண்டு கம்பெனியில் நடக்கும் அத்தனையையும் விரல் சொடுக்கும் நேரத்தில் தெரிந்துகொள்பவர்... கணவரை முன்னிருத்தி பின்னால் இருந்து கொண்டே அத்தனையையும் அழகாய் வழிநடத்துபவர்... பாலசுப்ரமணியன், ஷோரூமின் முதலாளி... இரண்டு காதுகளைத் தவிர அவரிடத்தில் குறையேதுமில்லை... சிறுபிள்ளைப் போல இனிப்பிற்காக ஏங்கும் சக்கரைவியாதிக்கு சொந்தக்காரர்... இருவருமே வியாபார விசயத்தில் கெட்டிக்காரர்கள் தான்... எப்படி எப்படி வேலை செய்பவர்களிடத்தில் பேசினால் வேலை நடக்கும்? எங்கே தட்டிக்கொடுக்க வேண்டும்? எங்கே தள்ளி நிறுத்தவேண்டும்? என்று அத்தனையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்... அதனாலேயே என்னவோ வேலைக்கு இருப்பவர்களிடம் அன்போடும் நட்போடுமே பழகுவர்... அவர்களின் அணுகுமுறையிலேயே வேலைக்கு இருப்போருமே ஷோரூமை தங்களது சொந்த கம்பெனி போலவே பாவித்து தங்களது முழு உழைப்பை போட்டு இன்முகமாகவே செயல்படுவர்...
மீராவும் கூட அப்படியே தான்... வேலைக்கு சேர்ந்த பொழுது அவள் இருந்த மனநிலையை மாற்றவேண்டும் என்பதற்காகவே தன் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி பிரேமாவையும் பாலசுப்பிரமணியத்தையும் ஈர்த்துவிட்டாள்... அதனாலேயே என்னவோ வெறும் காசாளராக சேர்ந்த அவளை இப்பொழுது அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் சேர்த்து பார்த்துக்கொள்ள சொல்லியிருந்தனர்... கம்பெனி விசயத்தை பொறுத்தமட்டும் மீராவிற்கு அந்த சூழல் நிரம்பவே பிடிக்கும்... ஏன் சிறுபிள்ளை போல நடந்து கொள்ளும் முதலாளியையும், இன்முகமாய் பேசும் பிரேமா அம்மாவையும் கூடத்தான்.. பிடிக்கவே பிடிக்காத விசயம் என்னவென்றால் தினமும் கணக்கை முடித்துவிட்டு பணத்தை கொண்டு வந்து வைக்க, அவள் போராடும் போராட்டம் தான்...
பாலசுப்பிரமணியன் வீட்டில் இருக்கும் சமயங்கள் எல்லாம் மிசினை கலட்டி வைத்துவிட்டு புத்தகமும் கையுமாய் அமர்ந்துவிடுவார்... பிரேமா அம்மாவோ வீட்டில் அத்தனை வேலையுமே தான் இருந்தால் தான் நடக்கும் என்பது போல சுழன்று கொண்டே இருப்பார்... இவர்கள் தான் இப்படி வாசலில் ஒருத்தி வந்து கத்துவதே தெரியாமல் தனக்கான உலகில் சஞ்சரிக்கிறார்கள் என்றால் இவர்கள் பெற்றெடுத்த செல்வக்களஞ்சியங்களோ அதற்கும் மேல்...
அதிகமாய் செல்லம் கொடுத்து வளர்த்தாலோ என்னவோ அவர்கள் பெற்ற இரண்டுமே இரண்டு ரகம்... மூத்தமகள் அமிர்தாவுக்கு என்ன தான் பிரச்சனை என்று யாருக்குமே தெரியாது... ஒரு சமயம் சிரித்த முகத்தோடு உலா வரும்... கம்பெனி செயல்பாடுகளை ஆர்வமாய் கேட்டு தெரிந்துகொள்ளும்... மற்றொரு சமயமோ விட்டேற்றியாய் அமர்ந்திருக்கும்... அதனால் அமிர்தவள்ளி எதிலேயுமே சேர்த்தி இல்லை... அடுத்தது அவர்கள் குடும்பத்தின் வாரிசு சிவபாலன்... பார்ப்பதற்கு பாலில் வெண்ணையும் நெய்யும் போட்டு பிசைந்து செய்த ரசகுல்லாவை போல இருப்பான்... ஐந்தரையடி உயரத்தில் அழகான உடல்வாகோடு, அளவான புன்னகையை சிந்தி செல்லும் இவனை எல்லோருக்குமே பிடிக்கும்... இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் முசுடு போல சுற்றித்திரிந்தவன் இப்பொழுதோ அனைவரையும் வசீகரிப்பவனாய் மாறியிருந்தான் எல்லாம் மீராவின் வைத்தியத்தால்...
சிவபாலனை பொறுத்தவரை தான்தான் என்ற அகங்காரம் சிறுவயதில் இருந்தே அதிகம் உண்டு... அதிலும் சிறுவயது முதலே பாலசுப்பிரமணியன் அவன் தான் அடுத்ததாக தன்னுடைய தொழிலை எல்லாம் கவனிக்கவேண்டும் நீ தான் முதலாளி என்று சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே அவனுக்கு வேலைக்கு இருப்பவர்களை கண்டால் அடிமைகளைப் போல தான் தோன்றும்... யாரைக் கண்டாலுமே சிடுசிடுவென எரிந்து விழுவான்... எதற்கெடுத்தாலும் அன்பாக பேசாமல் அதட்டி பேசி மட்டுமே வேலை வாங்குவான்... இப்படியே இருந்தவனை மொத்தமாக மாற்றுகிறோம் என்று தெரியாமலேயே மாற்றி நட்புணர்வோடு பழகவிட்டவள் மீரா தான்...
அவள் வேலைக்கு வந்து சேர்ந்த ஆரம்பத்தில் சிவபாலன் பிசினஸ் விசயமாக வெளியூர் சென்றிருக்க, மீரா வேலைக்கு சேர்ந்ததெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது... ஊரிலிருந்து வந்து பார்த்த பொழுது தான் அவளை வேலையில் சேர்த்து ஒருமாதம் ஆகப்போகிறது என்பதே தெரியவந்தது... அவளை தன்னிடம் கேட்காமலேயே வேலைக்கு சேர்த்ததற்காக அவள் தாய் தந்தையரிடம் காட்டு கத்தல் கத்தி வைத்தான்... பிறகு இரண்டு மாதம் வரைக்கும் பொறுத்து பார்க்கலாம் என்று இருவரும் கேட்டுக்கொள்ளவும் அமைதியாக விட்டுவிட்டான்... இது எதுவும் புரியாத மீராவோ ஒருநாள் எதார்த்தமாய் கொட்டேசன் புத்தகம் தீர்ந்துவிட்டதென்று வீட்டில் போய் அலுவலக அறையில் எடுக்க, இப்பொழுது போலவே காட்டுகத்தல் கத்திக்கொண்டிருக்க, அவள் சென்ற நேரமோ என்னவோ பிரேமா அம்மா, தன் மகளோடு மதுரை வரைக்கும் சென்றிருந்தார்... பாலசுப்பிரமணியும் சர்வீஸ் டிபார்ட்மெண்டில் சீனியர் இன்ஜினியர்களோடு மீட்டிங்கில் இருக்க வீட்டில் இருந்தது சிடுமூஞ்சி சிவபாலன் தான்...
இவள் போய் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அம்மா அம்மாவென்று சத்தம் போட, முகப்பில் வலதுபுறம் சென்ற மாடிப்படிகளின் முடிவில் இருந்த அறைக்குள்ளேயிருந்து அவனுடைய குரல் கேட்டது....
“யாரது?...”என்று... திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டவள்,
“நான் மீரா... பிரேமா அம்மா இல்லையா?...”என்று இங்கிருந்தே கத்தினாள்... அந்த பக்கம் ஒரு பத்து நொடிகள் அமைதியே நீடித்திருக்கும்... திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தவளுக்கு திடுதிடுவென்று ஓடிவந்தவனின் உருவம் தான் கண்ணில் பட்டது... அவனை பார்த்ததுமே பளபளவென பாலில் ஊரவைத்த பால்பனியாரம் தான் நினைவில் வந்து போனது... அடர்ந்த புருவங்களும், சிறிய விழிகளும், முழுதாய் மலித்த தாடியும், அளவான மீசையுமாய் இருந்தவனை ஒருதடவை கொஞ்சம் பார்த்து தான் வைத்தாள்... கன்னத்தில் விழுந்த குழிக்கு கொஞ்சம் மட்டும் சிரித்தபடி வந்திருந்தான் என்றால் மீராவிற்கு அந்த நிமிடமே அவனை பிடித்திருக்குமோ என்னவோ! முசுடு போல உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு அவன் வந்து நிற்க இவளுமே தன் ரசனையான எண்ணத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கெத்தாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்... அவனோ அவள் பார்வை எதையுமே கண்டுகொள்ளாதவனாய்,
“என்ன?...” என்க, இவளும் கேட்டாளே ஒரு கேள்வி... அவ்வளவு நேரமும் தோரணையாய் நின்றவனுக்கே, புஸ்ஸைன்றாகிவிட்டது...
“வாட்? என்ன என்ன கேட்ட?...”
என்று அவன் திரும்பவும் கேட்க, அதே கேள்வியை திரும்பவும் கேட்டாள்...
“நீங்க யாருன்னு கேட்டேன்? பிரேமாம்மா இல்லையா? அவங்க எங்க?...” என்று அடுக்கடுக்காக அவள் கேள்விகளை கேட்க, கொஞ்சமும் தாமதிக்காதவனாய்,
“இடியட்....” என்று அவள் முகத்திற்கு நேராகவே சொன்னான்... அவன் அப்படி சொன்ன பிறகும் சாதாரணமாய் நின்றால் அது மீராவே கிடையாதே... பொங்கி விட்டாள்...
“இடியட்டா? ஹலோ யாரப்பாத்து இடியட்ன்னு சொல்லுற? ஸ்டுப்பிட்... அறிவில்ல ஒனக்கு? யாருன்னு கேட்டா நாந்தான் இன்னாரு... இந்த வீட்டுக்கு இன்னாரு... நீங்க யாருன்னு கேட்கணும்... நீ யாருன்னு கேட்டதுக்கு அப்படி தானே நான் சொன்னேன்... ஏதோ பெரிய இவனாட்டம் இடியட்ன்னு சொல்லுற யாருடா நீ?...” என்று அவள் பொறிய,
“நீ புதுசா வந்துருக்க அந்த கேசியர் தானே?...” என்று கேட்டு வைத்தான்...
“நான் அந்த கேசியரோ! இல்ல அந்துபோகாத கேசியரோ! நீ யாருய்யா முதல்ல?.பெரிய இவன் மாதிரி பேசுற... ஒழுங்கா என்கிட்ட சாரி கேளு...” என்று படபடவென காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துபிடித்தபடி கேட்க, இடுங்கிய விழிகளுடனேயே நின்றவன்,
“யூஸ்லெஸ்... ஐ அம் த ஓனர் ஆஃப் த ஷோரூம்... சிவபாலன் பாலசுப்பிரமணியன்...” என்றான்... ஓனர் என்று சொன்னதும் திடுக்கிட்டு கையைக்கட்டிக்கொண்டு பேசும் சுபாவம் உள்ளவளாக இருந்திருந்தால் அவர்களின் பேச்சுவார்த்தை அப்பொழுதே நிறைவு பெற்றிருக்கும்... மீராவிற்கும் அந்த நிமிடமே வேலையும் பறிபோயிருக்கும்... ஆனால் அவள் தான் அப்படி எதுவும் செய்யவில்லையே... தோரணையாக நின்றவனை அர்ப்பமாய் பார்த்தவள்,
“நீ எவனா இருந்தா எனக்கென்னடா? சாரி கேளுன்னா கேளு... உன்கிட்ட வேலை பார்த்தா இடியட்ன்னு சொல்லுவியோ! ஆளும் மண்டையும் பாரு... உன் மண்டைக்கு மேல இருக்க வெயிட்ட இறக்கி வச்சுட்டு எல்லார்க்கிட்டேயும் ஒழுங்கா பழகு... அப்பத்தான் எவனா இருந்தாலும் ஒன்ன மதிப்பான்... எந்தலையெழுத்து இன்னைக்கு உன்கிட்ட வந்து திட்டு வாங்கணும்னு... வேஸ்ட் ஃபெல்லோ...” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டிவிட்டு நடையைக்கட்ட, போகும் அவளையே தன்னை மறந்த சிரித்த புன்னகையோடு பார்த்திருந்தான்.. அதன்பிறகு அவளும் அன்று வேலை மும்முரத்தில் தீவிரமாகிவிட, இவனுமே அடுத்தடுத்த தனது பிசினஸ் விசயங்களில் மூழ்கிவிட்டான்…
இதுபோலவே தான் இருவரும் எதிர்பாராமல் சந்திக்கும் தருணங்கள் எல்லாம் பல சமயங்களில் மோதலிலேயே ஆரம்பித்து மோதலிலேயே முடியும்... சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் அவளுடைய காரசாரமான வாக்குவாதங்களில் தன்னை மறந்துமே நின்றிருக்கிறான்... இரண்டு மாதங்கள் வரைக்கும் பொறுத்திருந்து பார்த்து அவளை இந்த வேலையில் நீடிக்கவிடலாமா? வேண்டாமா? என்று சொன்னவன் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே மேலாண்மை பொறுப்பையும் அவளிடத்திலேயே கொடுக்க சொல்லி பெற்றவர்களிடம் பேசினான்... நாட்கள் செல்ல செல்ல அவனுடைய குணமும் மாற இப்பொழுதோ அவனை பிடிக்காத பணியாளர்கள் ஷோரூமில் மட்டுமல்ல, அவனுடைய மேற்பார்வையில் இருக்கும் எந்த தொழிலுமே இல்லை என்று தான் சொல்லலாம்... சரி இதற்கு மேலும் விளக்கு விளக்கென்று எதனையும் விளக்க தேவையில்லை... மேலோட்டமாய் சொல்ல வேண்டியது இப்பொழுதைக்கு இவ்வளவே தான்... மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் இப்பொழுது நம் நாயகியோடு பயணிப்போம்...
வெகுநேரம் வரைக்கும் வீட்டு வாசலிலேயே நின்று கத்திக்கொண்டிருந்தவள், பொறுமை தாங்காமல் நிலைப்படியில் நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள்... கொடுமையிலும் கொடுமையாய் ஹாலில் கிடந்த சோபாவில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி அமிர்தா படுத்துக்கிடக்க தலையில் அடித்துக்கொண்டு புலம்பினாள்...
“தெனந்தெனம் இதே பொலப்பா போயிடுது இந்த வீட்டுல... இந்த அக்காவுக்கு நான் ஒருத்தி கத்துற சத்தம் கேட்கவேயில்லையா? வேணும்னே பண்ணுதா! இல்ல உண்மைக்குமே இப்படியான்னே தெரிய மாட்டுதே... ஆமா இதுக்கு மட்டும் அங்க என்ன தெரியுதுன்னு தெரியலையே...” என்று சுவற்றையும் அமிர்தாவையும் மாற்றி மாற்றி பார்த்தவள், தோளை குலுக்கியபடி வேறு எவரேனும் கண்ணுக்கு தென்படுகின்றனரா என்று பார்க்க, வீட்டின் பின்வாசலுக்கு போகும் கதவு வரைக்கும் வரிசையாக இருந்த மூன்று கதவுகளுமே திறந்து கிடந்தது...
“இப்புடி எல்லா கதவையும் பப்பரப்பேன்னு தெறந்து போட்டுட்டு எங்ப தான் போயிருப்பாங்க? பேசாம நாமலே ஆபிஸ் ரூமை திறந்து பணத்தை லாக்கர்ல வச்சு பூட்டிட்டு போயிடுவோமா?...” என்று யோசிக்கும் பொழுதே பின்வாசல் வழியாக பிரேமா அம்மா வியர்த்து வழிய, தூக்கி சொருகிய புடவையோடு தலையில் போட்டிருந்த கொண்டையை முடியக்கூட முடியாமல் ஒற்றைக்கையில் மாவோடு வந்து கொண்டிருந்தார்... மீராவை கண்டவர் வேகமாய் வந்து அமிர்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சத்தம் போட்டார்...
“இந்தா... சும்மா தானே படுத்துக்கெடக்க... புள்ள வந்து எவ்ளோ நேரமா கத்திட்டு இருக்கு... அந்த பையெல்லா வாங்கி வச்சா தான் என்ன?...” என்றவர் அமிர்தா எந்த ரியாக்சனுமே கொடுக்காமல் கிடக்கவும் மாவுக்கையுடனேயே தலையில் அடித்துக்கொண்டு வந்து சாவியை எடுத்து மீராவிடத்தில் கொடுத்தார்...
“இன்னைக்கின்னு பார்த்து கிரைண்டர் சொதப்பிடுச்சு மீராம்மா... ஊறவச்ச அரிசியை அள்ளிப்போட்டுட்டு தான் பாக்குறேன் ஓடவேயில்ல... அதான் சின்னவரு வீட்டுல போயி மாவ ஒட்டிக்கிட்டு இருந்தேன்... நீ கூப்புட்டது கேட்கவேயில்ல... சிவா தான் நீ வந்து நிக்குறன்னு போன் பண்ணி சொன்னான்...” ஒரு வித பார்வையுடனேயே மாடியில் இருந்த அவன் அறையை பார்த்துவிட்டு அலுவலக அறையை திறந்து தான் கொண்டு வந்த அனைத்தையும் உள்ளே வைத்துவிட்டு வந்து நின்றாள்...
“ம்மா சிவா சார் ரூம்ல தான் இருக்காரா?...”
“ஆமாண்டா... ஏன் அப்பா வர சொன்னாரா?...”
“இல்லம்மா நாந்தான் பார்க்கணும்...” என்று மேலே பார்த்தபடியே
சொல்ல, மாடியில் இருந்து அவன் குரல் கேட்டது... “மேல வா மீரா...” என்று, பிரேமாவும் புன்னகைத்தபடியே தலையசைத்துவிட்டு சாவியை வாங்கி வைத்துவிட்டு உள்ளே செல்ல,
முணங்கியபடியே பைலை எடுத்துக்கொண்டு படிகளில் ஏறினாள்...
'மனசக்குள்ள பெரிய டேஷுன்னு நெனப்பு... ரூம்குள்ள இருந்துட்டே எல்லாத்தையும் டீல் பண்ணுவான்... பிச்சைக்காரி கணக்கா கத்திட்டு இருக்கேன்... மாடியில இருந்துட்டு பக்கத்து வீட்டுல இருக்கவங்களுக்கு போன் பண்ணி சொல்லுவானாம், கீழ மட்டும் எறங்கி வரமாட்டானான்... டாமிட்...' என்று மனதிற்குள்ளேயே சிவாவை கரித்துக் கொட்டியவள், வேக நடை போட்டு அவனது அறைவாசலில் போய் நிற்க, கதவு தானாக திறந்து கொண்டது... அவள் வரும் நேரத்தை சரியாக கணித்து வைத்திருப்பான் போல, கதவை திறந்தவன் வெளியே வந்து புன்னகை வழியும் விழிகளோடு நிற்க, இவளோ முறைத்து வைத்தாள்...
“என்ன விசயம் மீரா?... பார்வையே சரியில்லையே கோபமா இருக்கியோ?..” என்க, இல்லையென தலையசைத்தவள்,
“ஒன்னுமில்ல சார்...” என்று வார்த்தைகளை கடித்து துப்ப, சிரித்துவிட்டான்...
“நல்லாவே தெரியுது நீ செம்ம கோபத்துல இருக்கன்னு...” என்று அவன் சொன்னது தான் தாமதம், கீழே ஒருமுறை எட்டி பார்த்தவள் திரும்பி ஓங்கி ஒன்று தலையில் வைக்க, வலியில் முகம் சுருக்காமலேயே சிரித்து வைத்தான்...
“சிரிக்காத... செம்ம கடுப்பா இருக்கு... சீக்கிரமா போகணும்னு சொல்லிருந்தேன்ல... வாசல்ல வந்து நின்னுட்டு காட்டு கத்தலா கத்துறேன் ரூம்குள்ள இருந்துட்டே சத்தம் போடாம இருக்க? என்னடா நெனச்சுட்டு இருக்க நீ?...” என்க,
“சொல்லட்டா...” என்று அவளை பார்த்தபடியே சிரித்துவைக்க, சட்டென்று முகம் மாறினாள்...
“நீ ஒன்னத்தையும் சொல்லி கிழிக்க வேணாம்... இந்தா பிடி... இந்த ரெண்டு பேப்பரையும் ஸ்கேன் பண்ணி இந்த ஐடிக்கு மெயில் அனுப்பிடு... நான் மார்னிங் வந்து பார்த்துக்குறேன்... டைமாச்சு... விமல் வெயிட் பண்ணிட்டு இருக்கான்...” என்று கடகடவென்று சொல்லி பைலை அவன் கையில் திணித்துவிட்டு இவன் பார்வையில் இருந்து தப்பித்தால் போதுமென்று நடையைக் கட்டினாள்...