வணக்கம் நண்பர்களே!
எப்போதும் குடும்பக் கதைகள் எழுதி வந்துள்ள நான், உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புது முயற்சியாய் இந்த கருப்பு வண்ணத்தில் ஒரு மர்மக் கதை எழுத வந்துள்ளேன். இன்று முதல் எபி போடுகிறேன். படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னில் அவன் - 1
"நா யாரு? என் பேர் என்ன? எனக்கு என்னாச்சு? நா எப்டி இங்க வந்தேன்? ப்ளீஸ்! யாராவது சொல்லுங்களேன்! எனக்கு என்ன ஆச்சு?" என்று அந்த இளம் பெண் கத்திக் கொண்டிருக்க, அவளை சமாதானம் செய்ய செவிலிகள் இருவர் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.
அவளுடைய கத்தலைக் கேட்ட அந்த இளம் மருத்துவன், அவளருகில் சென்றான்.
சராசரி உயரத்தில் சிவப்பல்லாத மாநிறத்தில் ஒடிசலான தேகத்தில் லேசான காயங்களுடன் ஆங்காங்கே கிழிசல்களுடன் சாதாரண அழுக்கு சுடிதாரில் தலைவிரி கோலமாய் பார்ப்பதற்கு அலங்கோலமாய்க் காட்சியளித்தாலும் அதையும் மீறி அவள் அழகாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
"ஹாய் மிஸ்! ஐம் டாக்டர் பிரேம்! நைஸ் டு மீட் யூ!" என்று சொல்லிக் கொண்டே தன் வலக்கரத்தை அவள் முன் நீட்டினான்.
அவனைப் பார்த்தவள் தன் கத்தலைக் குறைத்து அமைதியடைந்தவளாய், ஏதோ நண்பனைப் பார்ப்பதைப் போல லேசாக புன்னகைத்தாள்.
"ஹலோ டாக்டர்! எனக்கு நா யார்னு தெரியல! உங்களுக்கு நா யார்ன்னு எப்டியாவது கண்டுபிடிச்சிடுங்களேன்! ப்ளீஸ்!" என்று மெதுவாகக் கேட்டாள்.
அப்போது அவனுடைய கைப்பேசியில் ஒரு பாட்டு ஒலிக்க, அவளுடைய கவனம் அந்தப் பாட்டில் லயித்தது.
பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
எஸ்பிபியின் வெண்ணைக் குரல் அவனுடைய கைப்பேசி வழியே கசிந்தது.
அவளும் அந்தப் பாட்டை முணுமுணுத்தது போல அவனுக்குத் தோன்றியது. அவனுடைய எண்ணத்தைக் கலைப்பது போல அந்தக் கைப்பேசி விடாமல் அழைத்தது.
அவன் அவளிடம் ஒரு நிமிடம் என்பது போல சைகை செய்துவிட்டு தன் கைபேசியைக் காதுக்குக் கொடுத்தபடியே நகர்ந்தான்.
சில நிமிடங்கள் கழித்து வந்தவன், அவளிடம் எதோ கேட்க, அவள் இன்னும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
"டாக்டர்! இந்தப் பாட்டு.. இந்தப் பாட்டு நா நிறைய முறை கேட்டிருக்கேன். இது கேக்கும் போதெல்லாம் ஒரு கோவமான உருவம் படார்ன்னு பெரிய சத்தத்தோட கதவு சாத்துற ஞாபகம் வருது! அவங்க யார்ன்னு தெரியல! ஆனா இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப நெருக்கமான பாட்டுன்னு தோணுது!" என்றாள் அவள்.
அப்போது சரியாக "டோன் வொரி கேத்ரீன்! ரிப்போட் நார்மலாதான் இருக்காம்!" என்று யாரோ ஒருவர் தன் கைப்பேசியில் பேசிக் கொண்டே செல்ல, அவளுடைய தலை தானாகத் திரும்பியது.
"என் பேர் கேத்ரீனா! ஆமா! என் பேர் கேத்ரீனா!" என்றாள் அவள்.
லிங்காஷ்டகத்தை முணுமுணுக்கறா? ஆனா பேரு கேத்ரீனாங்கறாளே? என்று தனக்குள் குழம்பினான் பிரேம். இருந்தாலும் அவன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
"ஓ! குட் கேத்ரீனா! இப்ப பேர் ஞாபகம் வந்திருக்கு! சீக்கிரமே உங்களப் பத்தின எல்லா விஷயமும் ஞாபகம் வரும்! ஆனா நீங்க இப்டி ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கவே கூடாது. கேஷுவலா இருங்க! உங்க மூளைக்கு ஓய்வு குடுங்க! தானாவே எல்லாம் நடக்கும்!" என்றான் பிரேம்.
"தேங்க்யூ டாக்டர்! வந்து.. எனக்கு அந்த பாட்டு தருவீங்களா?" என்று கேட்டாள் அவள்.
"எந்த பாட்டு?"
"அதான்.. இப்ப உங்க போன்ல வந்துச்சே.. அது.."
"ஓ! சரி! இத நான் ஒரு பென் ட்ரைவ்ல போட்டு எடுத்துட்டு வரேன்!"
"ம்ஹூம்.. வேணாம்.. யூ ஜஸ்ட் கிவ் மீ அன் ஆன்ட்ராய்ட் மொபைல்.. ஐ கேன் சர்ச் இட்.." என்று சரளமாக ஆங்கிலத்தில் சொன்னவளை வியப்புடன் பார்த்தான்.
இவ பேசறது ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ்.. ஆனா ஆளப் பாத்தா அரசுப் பள்ளிக்கூடத்தில படிச்ச மாதிரி தோற்றம்.. லிங்காஷ்டகம் தெரியும்னு சொல்றா.. ஆனா பேரு கேத்ரீனாங்கறா.. கடவுளே.. இவளுக்கு எல்லாம் ஞாபகம் வரதுக்குள்ள எனக்கு எல்லாம் மறந்துடும் போலிருக்கே.. என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளிடம்,
"ஷ்யூர் கேத்ரீனா! ஐல் அரேஞ்ச் இட்! நௌ யூ டேக் ரெஸ்ட்!" என்று சொல்லிக் கொண்டே அவளைப் படுக்க வைத்து ஒரு ஊசி மருந்தை அவளுக்குச் செலுத்தினான்.
"தேங்க்யூ ஃபார் யுவர் கைன்ட்னெஸ் டாக்டர். ஐல் பீ வெய்ட்டிங் ஃபார் த மொபைல்!" என்றாள்.
அவன் அவளைப் பார்த்து வெற்றிக் குறியாக வலது கை கட்டை விரலை தூக்கிக் காட்டி புன்னகைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
இதே போல மற்ற நோயாளிகளை கவனித்துவிட்டு தன்னுடைய இருக்கைக்கு வந்தமர்ந்த பிரேமின் எண்ணம் முழுதும் கேத்ரீனாவைப் பற்றியே இருந்தது.
அவளுடைய நோய்க் குறிப்பேட்டைக் கையில் எடுத்தான்.
நேற்றிரவுதான் இங்கு வந்து சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்தவளை ரோந்து காவலர்கள் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க, இவள் பேந்தப் பேந்த முழித்திருக்கிறாள். இவளுடைய உடம்பில் சின்னச் சின்னக் காயங்களுடன் ஆடையில் ஆங்காங்கே ரத்தக்கறையுடன் வேறு இருந்திருக்கிறாள். நல்ல வேளையாக அந்த ரோந்துக் காவலர்கள் இருவரும் பெண்களாக இருந்ததால் இவளுடைய நிலை புரிந்து இவளைக் கொண்டு போய் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கிருந்த மருத்துவர்களின் பரிந்துரையினால் இந்த மனநலக் காப்பகத்திற்கு இவள் வந்திருக்கிறாள்.
கேத்ரீனாவைப் பற்றிய குறிப்புக்களை பிரேம் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை வேளச்சேரியில் அமைந்திருந்த அந்தப் பெரிய வணிக வளாகத்தில் இரு பெண்களும் இரு ஆண்களுமாய் இருந்த அந்த நண்பர் கூட்டம் உல்லாசமாய் அந்த வளாகத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
"என்ன வேணா நடக்கட்டும் நா சந்தோசமா இருப்பேன்..
உசிரிருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்..
ஹே ரகிட்ட ரகிட்ட ரகிட்ட.."
"ஏய் மஹிமா! போன் அடிக்கிதுடீ!" என்றான் ஜெய்.
"என் போன் இல்லடா! அதோட என்னை கூப்பிடறது நீங்க மூணு பேரும் மட்டும்தான்.. நீங்க இங்க இருக்கறப்ப வேற யார் என்னை போன்ல கூப்பிடப் போறாங்க!" என்றாள் மஹிமா.
"ஃபீல் பண்ணாதடீ!" என்றாள் யசோதா.
"சரி! சரி! சீக்கிரம் வாங்க! ஃபுட் கோர்ட்ல சேர் புடிக்கணும்.. கும்பல் வந்தா இடம் கிடைக்காது.. நம்ம சொந்த துட்டை குடுத்து சாப்பாடு வாங்கிட்டு தட்டை தூக்கிகிட்டு உக்கார இடம் தேடி அலையற கொடுமைலாம் இங்கதான் நடக்கும்!" என்று அலுத்துக் கொண்டான் ஜெய்.
"ஹே.. ஆமாம்பா!" என்றான் நவீன்.
மூவரும் அவன் சொன்னதை ஆமோதித்தபடியே வேகமாக உணவகம் நோக்கி நடந்தனர்.
அங்கு சென்று யசோதா இடம் பிடிக்க, மஹிமா வேண்டியது கேட்டு வாங்க, ஜெய் மற்றும் நவீன் இருவரும் வாங்கிய உணவுப் பண்டங்களை தங்களுடைய மேஜைக்கு எடுத்து வந்து பரத்தி வைத்தனர்.
நால்வரும் அரட்டையடித்தபடியே சாப்பிட்டு முடித்து மேலும் ஒன்றரை மணி நேரத்தை உல்லாசமாகக் கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
வணிக வளாகத்திலிருந்து வெளியே வந்த நால்வரும் கையாட்டிப் பிரிந்தனர். மஹமாவும் யசோதாவும் தங்கள் விடுதி நோக்கிச் செல்ல, ஜெய்யும் நவீனும் தங்கள் விடுதி நோக்கிச் சென்றனர்.
யசோதவும் மஹிமாவும் மெதுவாகப் பேசியபடியே நடக்கையில் வழியில் நடைபாதையிலிருந்த பழைய புத்தகக் கடையில் நின்றாள் மஹிமா.
"கொஞ்சம் இருடி!"
"உனக்கு இதே வேலையாப் போச்சு! ஒரு புக்கு கடை கண்ணில படக் கூடாதே! ஒடனே நின்னுடுவ! அப்டி என்னதாண்டி இருக்கு இந்த புக்குல!" என்று சலித்துக் கொண்டாள் யசோதா!
"ஹூம்! கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை! ஒரு புக்கை வாங்கி அத ஒவ்வொரு பக்கமா பிரிச்சி வார்த்தை வார்த்தையா வரி வரியா ரசிச்சிப் படிச்சிப் பாரு.. அந்த சுகமே அலாதிதான்!" என்றாள் மஹிமா.
"ம்.. என்னென்னமோ சொல்ற! எனக்கொண்ணும் புரியல! சரி! சீக்கிரம் வாங்கு! நேரம் ஆகுது!" என்றாள் யசோதா.
மஹிமா அந்த தெருவோர புத்தகக் கடையில் தனக்குப் பிடித்த புத்தகங்களை தேடித் தேடி எடுத்து பிரித்துப் பார்த்து படித்துப் பார்த்து வாங்குவதற்குள் யசோதாவின் பொறுமை பறக்கலாயிற்று.
"சீக்கிரம் வாடி! லேட்டாச்சுன்னா வார்டன் வேற கத்துவாங்க!" என்று படபடத்தாள்.
"அண்ணா! இந்த அஞ்சு புக் அண்ணா! எவ்ளோ ஆச்சு?"
அந்த புத்தக விற்பனையாளர் அவள் எடுத்துக் கொடுத்த புத்தகங்களைப் பார்த்து அதன் விலையைக் கூறினார்.
"அறுநூறு ஆகுதுமா!"
"அறுநூறா.." என்றபடியே தன் பர்சைக் குடைந்தவளின் கையில் ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு மட்டுமே தட்டுப்பட,
"ஏய்! ஒரு நூறு ரூபா இருந்தா குடுடீ! ரெண்டு நாள்ல திருப்பி தரேன்!" என்றாள் மஹிமா.
"நூறு ரூபாயா? நீ வேற.. எங்கிட்ட சல்லிக்காசில்ல.. சாரி!" என்றாள் யசோதா!
"ம்ச்.. அண்ணா! ஐநூறுதான் இருக்கு! அதுக்கு தகுந்த மாதிரி எதாவது ஒரு புக்கை எடுத்துடுங்க. மத்தத வாங்கிக்கறேன்!" என்றாள் மஹிமா.
"பரவால்லம்மா! ஐநூறு குடு போதும்! இந்தா! அஞ்சையும் வாங்கிக்க!" என்று பெரிய மனதுடன் ஐந்து புத்தகங்களையும் கொடுத்தார் அவர்.
"நெஜமாவா! ரொம்ப தேங்க்ஸ் அண்ணா!" என்று குரலில் உண்மையான மகிழ்ச்சியுடன் கூறியவளைப் பார்த்து புன்னகைத்தபடியே அவள் கொடுத்த ஐநூறு ரூபாய்த் தாளை வாங்கி தன் டப்பாவில் போட்டார் அவர்.
உண்மையான வாசகனுக்கு மட்டுமே இந்த மாதிரி மனதின் மகிழ்ச்சி புரியும். அல்லவா?
"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடீ! இந்த புக்கெல்லாம் எவ்ளோ வேல்யூபுள் தெரியுமா? புக் ஷாப்ல போய் புது புக்கா வாங்கியிருந்தா கண்டிப்பா ரெண்டாயிரம் மூவாயிரம் ஆகியிருக்கும்! அவரே பழைய புக்னு விலை கம்மியா விக்கறார்! அதுலயும் எனக்கு நூறு ரூபா குறைச்சிகிட்டு குடுத்திருக்கார்! க்ரேட் இல்லடீ!" என்று புத்தகம் வாங்கிய துள்ளலுடன் வருபவளை கோபமாக முறைத்தாள் யசோதா!
"ஒண்ணுக்கும் யூஸ் இல்லாத புக்கு புக்கா வாங்கி அடுக்கற நீ! நீ புக்கு வாங்கின காசை பத்திரப்படுத்தியிருந்தா இந்நேரம் சென்னைக்கு மிக அருகில் ஒரு கால் கிரவுண்டு மனை வாங்கிப் போட்டிருக்கலாம்! இல்லன்னா உன் கல்யாணத்துக்கு அஞ்சாறு பவுன் நகை வாங்கி வெச்சிருக்கலாம்! ஹூம்!" என்று பெருமூச்சு விட்டாள் யசோதா.
"இதோட வேல்யூ என்னன்னு உனக்கு தெரியல! விடு! எனக்கு இதுதான் பெரிய சொத்து!" என்று கூறினாள் மஹிமா.
இருவரும் பேசியபடியே தங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.
வெளியில் சென்று வந்த களைப்பு தீர குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டு படுக்க வந்தனர்.
யசோதா தன்னுடைய மெத்தையில் படுத்து விட, மஹிமா வாங்கி வந்த புத்தகங்களைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினாள்.
"ஏய்! லைட்டை அணைச்சிட்டு படுடீ! படிக்கறேன்னு உயிர வாங்காத!" என்றாள் யசோதா.
"தோ! அஞ்சு நிமிஷம்டீ!" என்றபடியே ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தாள் மஹிமா.
எப்போதுமே இப்படி புத்தகங்கள் வாங்கி வந்ததும் அதை முழுவதுமாக பிரித்துப் பார்ப்பது அவளுடைய வழக்கம். பழைய புத்தகமாதலால் அதன் முந்தைய சொந்தக்காரர்கள் புத்தகத்தைப் பற்றிய குறிப்புகளையோ, விசிட்டிங் கார்டு போன்ற ஏதாவது காகிதமோ வைத்திருக்கலாம். அல்லது அதன் பக்கங்கள் கிழிந்திருக்கலாம். அதனால் அதை முழுமையாகச் சரிபார்த்து ஒட்ட வேண்டிய பக்கங்களை ஒட்டி அட்டை போட்டு அதற்கு ஒரு வரிசை எண் எழுதி வைப்பது அவளுடைய வழக்கம். அதன்படி இப்போது புதிதாக வாங்கிய புத்தகங்களை சரி பார்க்கும் போது ஒரு புத்தகத்திலிருந்து வரைபடம் (மேப்) போல ஒன்று அவளுடைய காலடியில் விழுந்தது.
அதை எடுத்துப் பார்த்தவளுக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை. ஆனால் அது அவளுக்கு எதையோ உணர்த்துவதாய் அவள் நினைத்து அதிசயித்தாள்.
கேத்ரீனா யார்? உண்மையாகவே அவள் பெயர் கேத்ரீனாதானா?
மஹிமாவுக்கு கிடைத்திருப்பது என்ன வரைபடம்? அது என்ன உணர்த்துகிறது?
எல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்.
- தொடரும்....
உங்களின் மேலான கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னில் அவன் - Comments