Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதினெட்டாம் அத்தியாயம்

மண்டை உடைந்தது

வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர் கொடுத்த ஜாஜ்வல்யமான இரவு விருந்து முடிவடைந்து, விருந்தாளிகள் அவரவர்களுடைய கார் கிடைத்துப் புறப்படுவதற்கு அரைமணி நேரம் ஆயிற்று. வழக்கம்போல் ராகவனுடைய காரில் மாஜி திவானும் அவருடைய புத்திரிகளும் ஏறிக் கொண்டார்கள்; வண்டி போய்க் கொண்டிருந்தபோது தாமாவும் பாமாவும், விருந்தில் பார்த்தவை களையும் கேட்டவைகளையும் பற்றிச் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கம் போல ராகவன் அந்த பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தான். மாஜி திவானுடைய பங்களா வாசலில் வண்டி நின்றதும் அவரும் அவருடைய புதல்விகளும் காரிலிருந்து இறங்கினார்கள் ராகவன் இறங்கவில்லை. "மிஸ்டர் ராகவன்! நீங்கள் வரவில்லையா? ஒரு ஆட்டம் போடலாமே?" என்று தாமா கேட்டாள். "இல்லை; இன்றைக்கு வீட்டுக்குச் சீக்கிரமாகப் போக வேண்டும்" என்றான் ராகவன். அப்போது பாமா தாமாவிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். ராகவன் வண்டியிலிருந்து இறங்கி பங்களா முகப்பு வரையில் அவர்களுடன் சென்று, அங்கே நின்றான். "நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்றான். "பின்னே தெரியாமல் இருக்குமா? விருந்தில் தாரிணியைப் பார்த்துப் பேசியதில் மதி மயங்கிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அது உண்மைதானே?" என்று சொல்லித் தாமா மறுபடியும் சிரித்தாள். "அதில் ஒரு பாதிதான் உண்மை; தாரிணியைப் புரட்சிக்காரி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்து கொண்டீர்களா?" என்று ராகவன் கேட்டான். "மிஸ்டர் ராகவன்! அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்கள்?"

"புரட்சிக்காரியாயிருந்தால் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியுமா? விருந்து கொடுத்த நிர்வாக சபை அங்கத்தினரும் அவருடைய மனைவியும் தாரிணியிடம் எவ்வளவு சிநேகமாக நடந்து கொண்டார்கள் பார்க்கவில்லையா? இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்?" "ஓ! ராகவன்! சில காரியங்களில் நீங்கள் இன்னும் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள்! தாரிணி புரட்சிக்காரியாயிருந்தால் அவள் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியாதா? அது அவள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் காட்டுகிறது!" "நம்முடைய சி.ஐ.டி. போலீஸார் எவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பதையும் காட்டுகிறது?" என்றான் ராகவன். "அதுவும் உண்மை சி.ஐ.டி. போலீஸார் வேண்டுமென்று தான் அவளை விட்டு வைத்திருக்கிறார்கள். டில்லியில் புரட்சிக் கூட்டம் தங்கும் இரகசிய இடம் ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப் பதற்காக அவளைப் பிடிக்காமல் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!" என்றாள் தாமா. "அப்படியா? நம்ப முடியாத விஷயமாக இருக்கிறதே!" "நீங்கள் நம்ப முடியாத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அது போகட்டும் இன்றைக்கு வீட்டுக்குப் போவதற்கு அவசரம் என்ன?" "இரண்டு நாளாகச் சீதாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது. அவளுடைய மனோநிலை மேலும் கெட்டிருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் வீடு போகிறேன். ஒரு மாதம் லீவு எடுத்து அவளை மதராஸில் கொண்டு போய் விட்டு வரலாம் என்று இருக்கிறேன்." "ஓகோ! இப்போது தெரிகிறது; நீங்களும் சீதாவும் மட்டும் போகிறீர் களா? தாரிணியும் கூட வருகிறாளா?" "நீங்கள் சீதாவை மதராஸில் கொண்டு போய் விட்டு விட்டுப் பம்பாய்க்குப் போகப் போகிறீர்களாக்கும்!" "உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட இருந்து கேட்டது போலச் சொல்லுகிறீர்களே?" என்றான் ராகவன் அதிசயத்துடன். "பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்ற பழமொழி தெரியாதா?" என்றாள் பாமா.

இந்தச் சமயத்தில் பங்களாவுக்குள்ளே டெலிபோன் மணி அடித்தது. ஏற்கெனவே பங்களாவுக்குள் சென்றிருந்த ஸ்ரீ ஆதிவரா காச்சாரியார் டெலிபோனை எடுத்து "யார்?" என்று கேட்டு விட்டு, "மிஸ்டர் ராகவனுக்கு டெலிபோன்" என்றார். ராகவன் உள்ளே போய் டெலிபோனை வாங்கிச் செய்தியைக் கேட்டான். அவனுடைய முகத்தில் கவலையும் பயமும் குடிகொண்டன. "என்ன? என்ன?" என்று தாமாவும் பாமாவும் கேட்டார்கள். "சீதா சாயங்காலம் வெளியில் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லையாம் வேலைக்காரன் சொல்கிறான்!" "சீக்கிரம் போய்ப் பாருங்கள்; சாயங்காலம் எட்டு மணி சுமாருக்கு ஜந்தர் மந்தர் பக்கத்தில் ஏதோ கலாட்டா என்றும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்றும் விருந்தில் பேசிக் கொண்டார்கள்!" என்றாள் தாமா. "சீதாவுக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான். "இந்தக் காலத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் உடனே போய்ப் பாருங்கள். ஏதாவது உதவி தேவையாயிருந்தால் எங்களுக்கு டெலிபோன் பண்ணத் தயங்க வேண்டாம்!" என்றாள் பாமா. "ஆமாம் அப்பா! சீக்கிரம் போய்ப் பார்! அவசியமாயிருந்தால் டெலிபோன் பண்ணு!" என்றார் ஆதிவராகாச்சாரியார்.

சௌந்தரராகவன் வீடு போய்ச் சேர்ந்த பிறகு புதிய விவரம் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சாயங்காலம் வழக்கம் போல் உலாவச் சென்ற அம்மாள் திரும்பி வீட்டுக்கு வரவில்லை என்று மட்டும் வேலைக்காரர்கள் சொன்னார்கள். "யாராவது சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் ஏதாவது வந்ததா?" என்று ராகவன் கவலையுடன் கேட்டான். "சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் வரவில்லை. ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நாலு தடவை கூப்பிட்டார்கள்" என்று சமையற்காரப் பையன் சொன்னான். ராகவன் சிறிது திடுக்கிட்டு, "போலீஸ் ஸ்டேஷனிலிருந்து என்ன செய்தி வந்தது?" என்று கேட்டான். "ஒன்றும் இல்லை எஜமான் வீட்டுக்கு வந்துவிட்டாரா? என்று கேட்டார்கள் அவ்வளவுதான்!" என்றான் சமையற்காரப் பையன். பிறகு ராகவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலிபோன் செய்தான். அவனுக்குத் தெரிந்த சிநேகிதரான போலீஸ் உத்தியோகஸ்தர் பேசினார். "யார் மிஸ்டர் ராகவனா? உங்களை ஒன்பது மணியிலிருந்து கூப்பிட்டுக் கொண்டி ருக்கிறேன். விருந்துக்குப் போய் இப்போது தான் திரும்பினீர்கள் போலிருக்கிறது! இங்கே உடனே புறப்பட்டு வந்தால் நல்லது!" என்றார்."என்ன விசேஷம்?" என்று ராகவன் கேட்டான் "விசேஷத்தை நேரில் தான் சொல்ல வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்!" என்று சொன்னார் போலீஸ் அதிகாரி. "இங்கே எனக்கு ஒரு தொந்தரவு நேர்ந்திருக்கிறது. என்னுடைய மனைவி சீதா சாயங்காலம் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லை தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை!" "ஓஹோ! அப்படியா சமாசாரம்? நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டியது இன்னும் முக்கியமாகிறது!" என்றார் அதிகாரி.

சௌந்தரராகவன் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் முதலில் சீதாவைப் பற்றி அவனிடமிருந்து தகவல் கேட்டுக்கொண்டார். வேலைக்காரர்கள் சொல்வதை அவரிடம் கூறிவிட்டு "உங்களிடம் ஏதாவது தகவல் கிடைத் திருக்கிறதா?" என்று ராகவன் கேட்டான். "கிடைத்திருக்கிறது ஆனால் உபயோகமான தகவல் இல்லை!" என்றார் இன்ஸ்பெக்டர். பிறகு, ஒரு கைத்துப் பாக்கியை எடுத்து மேஜை மேல் வைத்து, "இது யாருடையது, தெரியுமா?" என்றார். ராகவன், அதைப் பார்த்துத் திடுக்கிட்டான் பிறகு தயக்கத்துடன் "எனக்குத் தெரியாதே!" என்றான். "ராகவன்! என்னிடமே மறைக்கப் பார்க்கிறீரா? அழகாயிருக்கிறது!" என்றார் இன்ஸ்பெக்டர். "இல்லை; ஆமாம்; மன்னிக்க வேண்டும் முதலில் பார்த்த போது தெரியவில்லை; என்னுடையது தான் எப்படிக் கிடைத்தது?" என்று உளறித் தடுமாறினான் ராகவன். "நீங்கள் தகவல் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? அந்தப் புரட்சிக்கார ஆளிடந்தான் இருந்தது அவனுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? யார் கொடுத்திருப்பார்கள்?" "சத்தியமாக எனக்குத் தெரியாது!" என்றான் ராகவன். பிறகு அவனை இன்ஸ்பெக்டர் போலீஸ் ஸ்டேஷன் 'லாக் - அப்' அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே சூரியா தலையிலும் தோளிலும் கட்டுக்களுடன் உணர்வின்றிப் படுத்திருந்தான். "இவனைக் கைது செய்வது சுலபமான காரியமாயில்லை. நாலு போலீஸ் ஜவான்களைத் திமிறிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தான். அதன் பயனாக இவன் மண்டையிலும் தோளிலும் நல்ல அடி! மண்டை பிளந்தே விட்டது!" என்றார் இன்ஸ்பெக்டர்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பத்தொன்பதாம் அத்தியாயம்

இது என்ன உலகம்?

மறுநாள் பிற்பகலில் சௌந்தரராகவன் மாஜி திவான் ஆதிவரகாச்சாரியார் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. பல நாள் கவலைப்பட்டு இராத்தூக்கமின்றிக் கண் விழித்ததினால் ஏற்படக்கூடிய சோர்வு அவனுடைய முகபாவத்திலும் குழி விழுந்த கண்களிலும் பிரதிபலித்தது. "என்ன சார்! உங்களைப் பார்த்தால் பெண்டாட்டியைப் பறி கொடுத்தவன் மாதிரி இருக்கிறதே!" என்று கூறிப் பாமா ராகவனை வரவேற்றாள். சுருக்கென்று கூரிய ஊசியினால் உடம்பிலே எங்கேனும் குத்தினால் முகம் எப்படிச் சுருங்குமோ, அப்படி ராகவனுடைய முகம் சுருங்கிப் பொறுக்க முடியாத வேதனையைக் காட்டியது. "நீங்கள் கூட இப்படி அனுதாபம் இல்லாமல் பேசுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் போய் வருகிறேன்!" என்று அழமாட்டாக் குறையாகச் சொல்லிவிட்டு ராகவன் திரும்பிப் போக யத்தனித்தான். அப்பொழுது தாமா எழுந்து வந்து ராகவனுக்கு முன்னால் நின்று மறித்துக்கொண்டு, "அவள் கிடக்கிறாள், ஸார்! பாமாவுக்கு நாக்கிலே விஷம்! எல்லாரையும் விரட்டியடிப்பது தான் அவளுடைய வேலை. அதனால் தான்.." என்று ஆரம்பித்தவள் தயங்கி வாக்கியத்தை நடுவில் நிறுத்திவிட்டு, "நீங்கள் வந்து உட்காருங்கள்! உங்களிடம் எங்களைப் போல் அனுதாபம் உள்ள சிநேகிதர்கள் இந்த டில்லியில் யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயந்தானே!" என்று சொன்னாள்.

ராகவன் திரும்பிப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டுச் சோபாவில் உட்கார்ந்தான். "டில்லியில் மட்டும் என்ன? எங்கேயும் எனக்குச் சிநேகிதர்கள் கிடையாது. உத்தியோக சிநேகம் ரயில் சிநேகத்தை விட மோசமானது. நல்ல நிலைமையில் இருக்கும் வரையில் எல்லாரும் பிராண சிநேகிதர்கள் போல நடிப்பார்கள். ஏதாவது கொஞ்சம் கஷ்டம் வந்து விட்டால் எல்லாரும் கையை விரித்து விடுவார்கள். முழுகுகிற கப்பலிலிருந்து எலிகள் ஓடுவது போல ஓடிப்போய் விடுவார்கள். நீங்களும் உங்கள் தகப்பனாரும் அதற்கு விதிவிலக்கு என்றும் நீங்கள் என்னுடைய உண்மையான சிநேகிதர்கள் என்றும் நம்பியிருக்கிறேன். நல்லதோ, கெட்டதோ, உங்கள் தகப்பனாரிடம் சொல்லி யோசனை கேட்டால் மனம் நிம்மதி அடைகிறது, இப்போது அப்பா எங்கே?" என்றான்."அப்பாவின் சிநேகிதர் பாங்கர் கஜான்ஜியாவை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து இன்றைக்கு ஒரு புதிய இன்ஷியூ ரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். அதற்காக அப்பா போயிருக்கிறார். புதிய கம்பெனியில் அப்பாவும் ஒரு டைரக்டர்" என்றாள் தாமா.

"சில பேர்களுக்குத் திடீரென்று யோகம் பிறந்து விடுகிறது. இந்த கஜான்ஜியா ஐந்து வருஷத்துக்கு முன்னால் சாதாரண மனிதராயிருந்தார். இப்போது ஐந்தாறு கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் ஆசாமிக்கு இங்கிலீஷில் கையெழுத்துப் போடக் கூடத் தெரியாது. என்னைப் போல் எத்தனையோ பேர் 'எக்னாமிக்ஸ்' படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வாழ்நாள் எல்லாம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு காலம் கழிக்கிறார்கள். இவ்வளவு லட்சணமான உத்தியோகத் துக்கும், மேலே உள்ள மூடர்கள் எப்போது சீட்டுக் கிழிப்பார்களோ என்று பயந்து நடக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு அவ்விதம் எனக்கு நேர்ந்து விட்டது!" என்று சொன்னான் சௌந்தரராகவன். "என்ன? என்ன?" "சீட்டுக் கிழித்துவிட்டார்களா?" "உத்தியோகம் போய்விட்டதா?" "எதற்காக?" "அக்கிரமமாயிருக்கிறதே!" என்று தாமாவும் பாமாவும் மாற்றி மாற்றிப் பொழிந்தார்கள். "இன்னும் வேலை அடியோடு போய்விடவில்லை. விசாரணை முடியும் வரையில் 'ஸஸ்பெண்டு' செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப எடுத்துக்கொண்டாலும் எனக்கு வேலைக்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. வெகு நாளாக வேறு உத்தியோ கத்துக்குச் சிபாரிசு செய்யும்படி அப்பாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு இதுதான் சமயம் அப்பா இந்தச் சமயம் எனக்கு உதவி செய்தேயாக வேண்டும் இல்லாவிட்டால் வேறு வழியில்லை."

"அப்பாவுக்கு அதில் கஷ்டம் ஒன்றுமிராது. கஜான்ஜியாவின் பாங்கிலோ இன்ஷியூரன்ஸ் கம்பெனியிலோ பேஷாக உங்களுக்கு வேலை போட்டுத் தரச் சொல்லுவார். உங்கள் விஷயத்தில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானமும் சிரத்தையும் உண்டு என்று தான் தெரியுமே? ஆகையால் உத்தியோகத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நடந்ததையெல்லாம் தயவுசெய்து விவரமாய்ச் சொல்லுங்கள். என்ன காரணத்துக்காக உங்களை 'ஸஸ்பெண்டு' செய்தார்களாம்? விசாரணை எதற்காக?" என்று தாமா கேட்டாள். அப்போது பாமா, "இதையெல்லாம் கேட்டு அவரை ஏன் தொந்தரவு செய்கிறாய்? பாவம்! அவர் சம்சாரத்தைப் பறி கொடுத்துவிட்டு அதைப் பற்றிப் பேசிப் புலம்புவதற்காக வந்திருக்கிறார்!" என்றாள். "சீ! நீ சும்மா இரு! அவள் கிடக்கிறாள் நீங்கள் சொல்லுங்கள், சார்!" என்றாள் தாமா. "இன்றைக்கு நான் ஆபீஸுக்குப் போனதும் இலாகாத் தலைவர் கூப்பிட்டு அனுப்பினார். 'சரி, ஏதோ வரப் போகிறது' என்று எண்ணிக்கொண்டு போனேன். அதற்குத் தகுந்தாற்போல் அவரும், 'ராகவன்! உங்களை ஸஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். காரணம் உங்களுக்கே தெரிந்திருக்க கூடியதுதான்!" என்றார். 'எனக்குக் காரணம் ஒன்றும் தெரியவில்லை. தயவு செய்து தாங்களே சொல்லிவிட்டால் நல்லது' என்றேன். 'அப்படியானால் சொல்கிறேன் புரட்சிக்காரர்களுக்கு அடிக்கடி உம்முடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக உம் பேரில் புகார்' என்றார்.

'அது எப்படி என் பேரில் புகார் ஏற்பட முடியும்? புரட்சிக்காரனைப் பற்றி நான்தானே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்?' என்று கேட்டேன். 'மிஸ்டர் ராகவன்! நீர் மிக்க அறிவாளி! என்றார் இலகாத் தலைவர். 'உங்கள் நற்சாட்சிப் பத்திரத்துக்காக மிக்க வந்தனம்!' என்றேன். 'எனக்கு வந்தனம் தேவையில்லை, நீர் மிக்க அறிவாளியாகையால் விசாரணையின்போது இதை ஒரு காரணமாகச் சொல்ல வேண்டாம். அந்தப் புரட்சிக்காரப் பையனைப்பற்றிப் போலீஸார் தகவல் அறிந்து கைது செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்தச் சமயத்தில் நீர் தகவல் கொடுத்ததினால் என்ன பிரயோசனம்? தப்பித்துக் கொள்வதற்காகக் கடைசி நேரத்தில் தகவல் கொடுத்ததாகவே ஏற்படும்!' என்றார். இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். முதலில் இன்னது சொல்வதென்று தெரியவில்லை. கார்டினல் உல்ஸி மரணதண்டனைக்கு ஆளானபோது சொன்னது நினைவு வந்தது. 'என்னுடைய அரசருக்கு நான் செய்த சேவை என் ஆண்டவனுக்குச் செய்திருந்தால் இந்தக் கதியை அடைந்திருக்க மாட்டேன்!' என்று உல்ஸி சொன்ன வாக்கியத்தை நானும் சொன்னேன். 'உம்முடைய அரசருக்கு நீர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதுதான் உம் பேரில் புகார், தெரிகிறதா? சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிலும் புது டில்லி செகரடேரியட்டில் வேலை பார்ப்பவர்கள், ஸீஸருடைய மனைவியைப் போல் சந்தேகத்துக்கு இடங்கொடாதவர்களாக இருக்க வேண்டும். இது யுத்த காலம் என்பது உமக்கு நினைவில் இருக்கிறதல்லவா? யுத்தத்திலும் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். இதை உத்தேசித்துத் தான் இத்தனை காலமும் இல்லாத வழக்கமாக ஒரு இராணுவ தளபதியை இந்தியாவின் வைஸ்ராய் ஆக்கியிருக்கிறார்கள். தளபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராயாக வந்ததைக் கொண்டு யுத்த நிலைமையின் நெருக்கடியை நீர் ஊகிக்கலாமே?' என்றார்.

அதற்கு நான், 'ஆம், பேஷாக ஊகிக்கலாம்! இந்த வேவல் எங்கேயாவது எந்த யுத்த களத்திலாவது இருந்தால் கட்டாயம் கோட்டை விட்டுவிடுவார் என்றுதானே அவரைப் பிடித்து வைஸ்ராயாகப் போட்டிருக்கிறார்கள்?' என்றேன். ஆபீஸர் சிரித்துவிட்டு, 'இந்த அபிப்பிராயத்தை நாளைக்கு விசாரணை நடக்கும்போது சொல்லலாம், இப்போது போய்வாரும்!' என்றார். 'என் பேரில் என்ன குற்றம்? என்ன சந்தேகம்? அதைச் சொல்லவில்லையே?' என்று கேட்டேன். 'விசாரணையில் எல்லாம் விவரமாகச் சொல்வார்கள். நான் ஒரு குறிப்பு வேண்டுமானால் கொடுக்கிறேன். கைது செய்யப்பட்டவனிடம் உம்முடைய கைத்துப்பாக்கி இருந்தது சந்தேகத்துக்கு ஒரு காரணம்' என்றார். 'கைத்துப்பாக்கியை அவன் திருடியிருக்கலாம் அல்லவா?' என்று கேட்டேன். 'திருடியிருக் கலாம் ஆனால் அதற்கு ருசு வேண்டும்.சந்தேகத்துக்கு இன்னொரு காரணம், உம்முடைய மனைவி திடீரென்று நேற்று ராத்திரி காணாமற் போனது' என்று ஆபீஸர் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. 'என் மனைவி காணாமற் போனதற்கும் நாம் பேசும் விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன். அதற்கு ஆபீஸர் சொன்ன பதிலைக் கேட்டதும் என்னுடைய கவலைகள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; குபீரென்று சிரித்து விட்டேன். அதை நினைத்தால் இப்போது கூட எனக்குச் சிரிப்பு வருகிறது!" என்று சொல்லிவிட்டு ராகவன் முகத்தில் அசடு வழிய, பலவீனமான சிரிப்பு ஒன்று சிரித்தான்.

"அப்படிச் சிரிக்கும்படியாக உங்களுடைய இலாகாத் தலைவர் என்னதான் சொன்னார்? சர்க்கார் உத்தியோகஸ்தர் களிலே அவ்வளவு நகைச்சுவை உடையவர்கள் கூட இருக்கிறார்களா?" என்று பாமா கேட்டாள். "அவர் அப்படி நகைச்சுவை உடையவர் அல்ல; ஹாஸ்ய உணர்ச்சியுடனும் பேசவில்லை. ஆனால் அவர் சொன்னது அவ்வளவு விசித்திர விஷயமாயிருந்த படியால் தான் சிரித்தேன். சீதாவும் ஒரு புரட்சிக்காரியாம்; அவளும் சூரியாவும் சதி செய்து சட்டவிரோதமான பல காரியம் செய்து வந்தார்களாம். இந்தியத் துருப்புகளின் போக்குவரவைப் பற்றி இரகசிய ரேடியோ மூலம் சத்துருத் தேசங்களுக்குத் தகவல் கொடுத்து வந்தார்களாம், நானும் அவர்களுக்கு உடந்தையாம். போலீஸுக்குத் தகவல் சொல்வது போலச் சொல்லி விட்டு, அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து தப்பித்துக் கொள்ளும்படி செய்து விட்டேனாம். சீதா மட்டும் எங்கேயோ போய்ப் பதுங்கிக் கொண்டிருகிறாளாம் எப்படி இருக்கிறது கதை?" "கதைக்கு என்ன? நன்றாய்த்தானிருக்கிறது ஒரு நாள் திடீரென்று போலீஸார் இந்த வீட்டுக்கு வந்து சோதனை போட்டாலும் போடுவார்கள். சீதா இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்ப்பதற்கு!" "என்ன மூடத்தனம்! புது டில்லிப் போலீஸார் எதை வேணுமானாலும் நம்பி விடுவார்கள் போலிருக்கிறது." சொல்லுகிறவர்கள் பக்குவமாய்ச் சொன்னால், கேட்பவர்கள் நம்புவதற்கு என்ன? ஏற்கெனவே போலீஸார் வெறும் வாயை மெல்லுகிறவர்கள், அவர்களுக்கு ஒரு பிடி அவலும் கிடைத்து விட்டால்?" "பாமா! மறுபடி ஏதோ மர்மமாகப் பேசுகிறீர்களே? பக்குவமாக யார் என்னத்தைச் சொல்லியிருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான்.

"ராகவன்! இது விஷயமாக உங்களுக்கு ஒன்றும் சந்தேகமே உதிக்கவில்லையா? உங்கள் மனைவியையும் அந்த வாலிபனையும் பற்றிப் போலீஸுக்கு யாராவது உளவு சொல்லியிருக்க வேணும் என்று தோன்றவில்லையா? நீங்களும் அவர்களுக்கு உடந்தை என்று கூடச் சொல்லியிருக்க வேணும். இல்லாத வரையில் உங்கள் பேரில் இவ்வளவு சந்தேகப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். "கடவுளே! இப்படியும் இருக்க முடியுமா? யார் அந்த மாதிரிப் பொய் உளவு கொடுத்திருப்பார்கள்!" "நேற்று மாலை நடந்த டின்னர் பார்ட்டியில் யாரோடு கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்? அவளாயிருக்கலாம் அல்லவா? உங்களுடைய குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்கள் வேறு யாருக்குத் தெரியும்? வேறு யார் அப்படி நம்பிக்கை ஏற்படும்படி சொல்லியிருக்க முடியும்?" "தாரிணியையா சொல்லுகிறீர்கள்; அழகாயிருக்கிறது? முந்தாநாள் அவளைப் புரட்சிக்காரி என்றீர்கள். இன்றைக்கு அவள் எங்களைப் பற்றி உளவு சொல்லி இருப்பாள் என்கிறீர்கள் இது என்ன வேடிக்கை?" "வேடிக்கை ஒன்றுமில்லை; உங்கள் ஆபீஸர் சொன்னது போல் நீங்கள் அறிவாளிதான். ஆனால் சிற்சில விஷயங்களில் நீங்கள் பச்சைக் குழந்தை போல் உலகமே தெரியாதவராயிருக்கிறீர்கள். நான் முந்தாநாள் சொன்னதற்கும் இன்று சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தாரிணி புரட்சிக்காரி தான். அப்படி நடித்தால்தானே புரட்சி இயக்கத்தைப் பற்றிய உளவுகளைச் சேகரித்து சர்க்காருக்குச் சொல்ல முடியும்?" "தாரிணியைச் சர்க்காருக்காக ஒற்று வேலை செய்கிறவள் என்றும் பொய்க் குற்றம் சாட்டுகிறவள் என்றுமா சொல்லுகிறீர்கள்? ஐயோ! இது என்ன உலகம்?"

இப்படி ராகவனுடைய வாய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய மனம், 'தாரிணியைப் பற்றிய உண்மை அப்படி இருந்தாலும் இருக்கலாமோ' என்று எண்ணியது .'இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய சர்க்கார் பதவியில் உள்ளவர் களிடம் அவளுக்கு எப்படி அத்தனை செல்வாக்கு இருக்க முடியும்? அவர்களுடன் அவ்வளவு சர்வ சுலபமாக எப்படிக் கலந்து பழக முடியும்?' என்னும் ஐயங்கள் உதித்தன. "இது என்ன உலகம்?" என்ற ராகவனுடைய கேள்விக்குப் பதிலாகப் பாமா, "இது மிக மோசமான உலகம். பொய்யும் சூதும் மோசமும் தந்திரமும் நிறைந்த உலகம். இந்த உலகத்தில் உங்களைப் போன்ற சாதுக்கள் சிலரும் இருக்கிறார்கள். போகட்டும்; தங்கள் மனைவியின் விஷயம் என்னதான் ஆயிற்று? அதைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" "ஒன்றும் தெரிய வில்லை இதில் ஒரு துயரகரமான தமாஷ் சேர்ந்திருக்கிறது. நேற்று ராத்திரி நான் உங்களிடம் கூடச் சொன்னேனே? இனிமேல் என் வாழ்க்கையையே புதிய முறையில் தொடங்குவது என்றும் சீதாவுடன் மனம்ஒத்த இல்லறம் நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தேன். அவ்விதம் தீர்மானித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால், அவளைக் காணவே காணோம்! இதற்கு என்ன சொல்வது?" என்றான் சௌந்தரராகவன்.

"அற்ப மானிடர்களாகிய நம்முடைய உத்தேசத்துக்கெல்லாம் மேலாக விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா? அந்த விதி ஜயித்து விட்டது!" என்றாள் தாமா. "நான் அப்படி விதியின் மேல் பழியைப் போடமாட்டேன். சாதுவாகிய சௌந்தர ராகவனின் நல்ல உத்தேசத்தை ஒரு பெண்ணின் துர்மதி ஜயித்து விட்டது என்று சொல்வேன்" என்றாள் பாமா. "நீ கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிரு! தெரிகிறதா?" என்று தாமா அதட்டிவிட்டு, "ஏன் சார்! சீதாவைப் பற்றி ஒன்றுமே தகவல் இல்லை யென்றா சொல்கிறீர்கள்? கைது செய்யப்பட்ட சூரியாவிடமிருந்து விவரம் ஒன்றும் கிடைக்கவில்லையா? போலீஸ் இன்ஸ் பெக்டர் உங்களுக்குத் தெரிந்த சிநேகிதர் ஆயிற்றே?" என்று கேட்டாள். "தெரிந்த சிநேகிதர் தான்! முன்னொரு சமயம் எனக்குப் பெரிய உதவி செய்திருக்கிறார். இப்பொழுதும் அவரையே நம்பிக்கொண்டிருக்கிறேன். இந்த ஊரிலே சூரியாவின் விசாரணை பகிரங்கமாக நடந்தால் என் மானம் போய்விடும், நாகபுரிக்கு அனுப்பிவிடுங்கள் என்று கேட்டதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். என் பேரில் அந்தரங்க விசாரணை நடந்தால் என் பக்கம் பேசுவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் சீதாவைப் பற்றி ஒன்றும் அவரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியாவின் மண்டையில் பட்ட அடியினால் அவன் இன்னும் நல்ல அறிவு வராமல் கிடக்கிறான்.

மயக்கத்தில் பேசுகிறபோது, 'சீதா! சீதா!' 'ஆபத்து வந்து விட்டது!' 'பிடித்து விட்டார்கள்!' என்று உளறுகிறான். அவன் ஏறியிருந்த டாக்ஸி டிரைவரிடம் என்னை அழைத்துப் போய் என் முன்னிலையில் விசாரித்தார் அவன் கூறிய விவரம் விசித்திரமா யிருக்கிறது. ஷாஜஹானாபாத் வெள்ளி வீதியில் ஒரு வாலிபனும் ஒரு பெண்ணும் வண்டியில் ஏறிக் கொண்டார் களாம். ஜந்தர் மந்தர் சாலைக்கு வந்ததும் அந்தப் பெண் வண்டியிலிருந்து இறங்கி நடந்தாளாம். கொஞ்ச தூரம் போவதற்குள் இன்னொரு கார் வந்து அவள் பக்கத்தில் நின்றதாம். அந்தப் பெண்ணைப் பலவந்தமாக ஏற்றிக் கொண்டு கார் விரைவாகச் சென்றதாம். சூரியா சொன்னதின் பேரில் இந்த டாக்ஸி டிரைவரும் பின்தொடர்ந்து வண்டியை விட்டானாம். ஆனால் யமுனைப் பாலத்தில் அந்த வண்டி போனபிறகு இந்த டாக்ஸியை நிறுத்தி விட்டார்களாம். உடனே போலீஸ் வண்டி வந்து பிடித்துக் கொண்டது என்று சொல்கிறான். அவன் சொல்லும் சில அடையாளங்களிலிருந்து பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போகப்பட்டவள் சீதாவாயிருக்கலாம் என்று எண்ண இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புது டில்லியில் 1943-ம் வருஷத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணும்போது நம்பிக்கைப்படவில்லை. மேலும் சீதாவை அப்படி யார் எதற்காகப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்கத் தலை சுற்றுகிறது!" என்றான் ராகவன்.

"ஆமாம்; முன்னால் போன வண்டியைப் பற்றித் தகவல் கண்டுபிடிக்கப் போலீஸார் முயற்சி எதுவும் செய்யவில்லையா?" என்று பாமா கேட்டாள். "செய்தார்கள் நாலாபுறமும் தந்தி கொடுத்து டெலிபோன் செய்து குறிப்பிட்ட வண்டி வந்தால் நிறுத்தும்படி சொல்லியிருந்தார்கள். டாக்ஸி டிரைவர் முன்னால் சென்ற காரின் நம்பர் கொடுத்திருந்தான். அந்தக் கார் இங்கிருந்து நூறாவது மைலில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் பெண் ஒருவரும் இல்லை என்று தகவல் வந்திருக் கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்று காலையில் என்னை டெலிபோனில் கூப்பிட்டுச் சொன்னார்!" "ஆகவே உங்கள் மனைவி சீதா போனவள் போனவள் தான்! மிஸ்டர் ராகவன்! உங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபம்!" என்றாள் பாமா. "எனக்கு இவரிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை இவர் அறிந்து கொள்ளாமல் கண்கள் திறந்திருந்தும் குருடராயிருந்தார் அல்லவா? இவருக்கு இது நன்றாய் வேணும்!" என்றாள் தாமா. "எது விஷயத்தில் நான் குருடனாய்ப் போனேன்? ஊரெல்லாம் என்ன பேசிக்கொண்டார்கள்?" என்று கேட்டான் ராகவன். "அதை வேறு விண்டு சொல்ல வேண்டுமா? நீங்கள் சீதாவை இத்தனை நாள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்ததே பிசகு என்று சொன்னார்கள். இப்போது அவளே ஒரேயடியாகத் தொலைந்து போய்விட்டாள்! அதற்காக வருத்தப்படுவானேன்? உண்மையில் சந்தோஷப்பட வேண்டும்!"

தாமா எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை ராகவன் தெரிந்து கொண்டு, சற்று நேரம் தலை குனிந்து மௌனமாக இருந்தான். "எப்படியோ என் வாழ்க்கை பாழாகிவிட்டது. இத்தனை நாள் ஆபீஸ் வேலை இருந்தது; அதுவும் போய்விட்டது. இனி மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?" "ஏன் இல்லை! மதராஸில் அழகான சமர்த்துக் குழந்தை இருக்கிறது. குழந்தையை அழைத்து வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியா இருப்பதை யார் தடுப்பார்கள்!" ராகவனுடைய கண்களில் நீர் ததும்பியது. "குழந்தையை அழைத்து வந்தால்; முதலில், 'அம்மா எங்கே?' என்று கேட்பாளே? அதற்கு என்ன சொல்வது? மேலும் குழந்தையை அழைத்து வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்!" என்றான். "அதில் என்ன கஷ்டம்? குழந்தையை அழைத்து வருவதற்குள்ளே வீட்டில் இன்னொரு தாயாரைத் தயார் செய்து விட வேண்டும்! வீட்டுக்கு எஜமானியாச்சு! குழந்தைக்குத் தாயார் ஆச்சு! வேலையைப் பற்றிக் கவலையும் வேண்டியதில்லை. இந்த வேலை போய்விட்டால் அப்பா கட்டாயம் இதைவிடப் பெரிய சம்பளம் உள்ள உத்தியோகம் வாங்கித் தருவார்!"

ராகவன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, 'இன்னொரு தாயார் தயாரிப்பது பற்றித் தாமா சொன்னதின் கருத்து என்ன வாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டே போனான். ஒருவாறு புரிந்தது ஆனால் அவனுடைய மனம்அதைப்பற்றி நினைக்கவும் இடம் கொடுக்கவில்லை. வீட்டை அடைந்ததும் வேலைக்காரர்கள் முகங்களில் சோகக்களையுடன் நிற்பதைப் பார்க்கச் சகியாமல் உள்ளே போனான். ஒவ்வொரு அறையாக வளையவந்தான்; அங்குமிங்கும் நடனமாடினான். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு சாமானும் படமும் சீதாவின் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. அந்த வீட்டுக்கு வந்த புதிதில் அன்பும் அருமையுமாக வாழ்ந்த நாட்களின் சம்பவங்கள் ஞாபகம் வந்து அவன் உள்ளத்தை உருக்கின. பிற்காலத்தில் அவர்க ளுக்குள் நடந்த சண்டைகளும் நினைவு வந்தன. சண்டைகளை நினைத்தபோதெல்லாம் குற்றம் தன் பேரில்தான் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் இனிப் பச்சாதாபப்பட்டு என்ன பிரயோசனம்? போனவள் இனித் திரும்பி வரப் போகிறாளா? அல்லது அவள் இருந்த இடத்தில் இன்னொரு ஸ்தீரியை கொண்டு வந்து வைக்கத்தான் தனக்கு மனம் வருமா? தன் வாழ்க்கை யைப் புதுவிதமாகத் தொடங்கிச் சண்டை சச்சரவு இல்லாமல் பழைய நாட்களைப் போல் இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வீடு வந்த தினத்தில் அல்லவா இப்படி நடந்து விட்டது?

தன்னுடைய நல்ல உத்தேசம் இவ்வாறு வீணாகிவிட்டதே? யோசித்துப் பார்க்கப் பார்க்க, சீதா தன்னிடம் வெறுப்புக் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும் என்று ராகவனுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. தன்னுடைய கொடுமை பொறுக்க முடியாமலே தான் போய்விட்டாள். எங்கே போயிருப்பாள்? ஒருவேளை யமுனையில் விழுந்து உயிரை விட்டிருப்பாளோ? அல்லது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு ரயில் ஏறிப் போயிருப்பாளோ? அப்படியானால், சீக்கிரத்தில் தனக்குத் தகவல் தெரிந்து போய்விடும். சூரியா கைதியானதற்கும் சீதா காணாமற் போனதற்கும் உண்மையில் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா! ஒருநாளும் இருக்க முடியாது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைத் தான். தாமாவும் பாமாவும் சூரியா - சீதா இவர்களின் பேரில் கெட்ட எண்ணம் உண்டாகும்படியாக ஜாடை ஜாடையாகப் பேசியதையெல்லாம் எண்ணிப் பார்த்து, அந்தப் பேச்சுக்களில் ஏதேனும் உண்மை இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தான். ஒரு நாளும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். சில சமயம் தானும் சீதாவின் மனம் நோகும்படி சூரியாவைப் பற்றிப் பேசிய துண்டுதான். அதற்கெல்லாம் காரணம் சீதாவின் நடத்தையைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகம் அல்ல. அப்படிப்பட்ட கேவலமான சந்தேகம் லவலேசமும் தனக்கு எந்த நாளிலும் ஏற்பட்டதில்லை. சூரியாவின் பேரில் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்துக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன? அவனைப் பற்றிப் போலீஸுக்குத் தகவல் கொடுக்கும்படியாக அவ்வளவு நீசத்தனமான காரியம் தான் செய்யப் புகுந்ததின் உண்மைக் காரணம் என்ன?

தன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்கு சோதனை செய்து பார்த்து ராகவன் அந்த உண்மையைக் கண்டு பிடித்தான். தாரிணிக்கும் சூரியாவுக்கும் ஏற்பட்டிருந்த சிநேகந்தான் தன்னுடைய ஆத்திரத்துக்கெல்லாம் காரணம். அதனால் ஏற்பட்ட குரோதத்தைச் சீதாவின் பேரில் காட்டி அவளுடைய வாழ்க்கையை நரகமாகச் செய்ததினாலேயே இந்த விபத்துக்குத் தான் ஆளாக நேர்ந்தது. முதல் நாள் மாலையில் நடந்த பார்ட்டியில் தாரிணி தன்னைக் கெஞ்சி வேண்டிக் கொண்டதெல்லாம் ஞாபகம் வந்தது. சீதாவை மதராஸில் கொண்டுபோய் விட்டுப் பம்பாய்க்கு வரும்படியும் வந்தால் தன் பிறப்பைக் குறித்த ஓர் அந்தரங்கத்தை வெளியிடுவதாகவும் தாரிணி சொன்னாள். அந்த ரகசியம் என்னவாயிருக்கும்? தாமாவும் பாமாவும் தாரிணியைச் சர்க்காரின் உளவுக்காரி என்று சொன்னது சுத்த அபத்தம். அது ஒருநாளும் உண்மையாயிராது. அந்தச் சகோதரிகள் வெகு பொல்லாதவர்கள். யார் பேரிலாவது குறை சொல்லுவது தான் அவர்களுடைய தொழில். அவர்களுடைய சகவாசம் உதவவே உதவாது. இந்தச் சமயத்தில் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடியவளும் உதவி செய்யக் கூடியவளும் தாரிணி தான். தாரிணியை எப்படியாவது சந்தித்து அவளிடம் ஆலோசனை கேட்க வேண்டும். சீதா போய்விட்டதைப் பற்றி அவளிடம் உடனே சொல்லி விட வேண்டும். இன்னும் இரண்டு நாள் நேற்றைக்குப் பார்ட்டி கொடுத்த உத்தியோகஸ்தர் வீட்டிலே இருப்பேன் என்று சொன்னால் அல்லவா? அங்கே அவளைக் கூப்பிட்டுப் பார்க்கலாம். டெலிபோனை எடுத்து ராகவன் விசாரித்தான். மேற்படி உத்தியோகஸ்தர் வீட்டில் தாரிணி இல்லையென்று பதில் வந்தது. அந்த நிமிஷத்தில் ராகவனுக்குத் தன்னுடைய வருங்கால வாழ்க்கையெல்லாம் சூனியமாகத் தோன்றியது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபதாம் அத்தியாயம்

சிங்காரப் பூங்காவில்

சீதாவுக்கு உணர்வு வந்தபோது பட்சிகளின் கானம் கலகலவென்று அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது. இடை யிடையே இலைகள் அசைந்தாடும் போது உண்டாகும் சலசலப்புச் சத்தமும் கேட்டது. இவற்றுடன் கண்ணனுடைய இடையில் அணிந்த மணிச் சதங்கைகள் குலுங்குவது போன்ற 'கிண்கிணி'ச் சத்தம் சில சமயம் கலந்து கொண்டிருந்தது. வேறு நினைவே யில்லாமல் அந்த இனிய சப்தங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மூடியிருந்த கண்ணிமைகளைத் திறப்பதற்கு மனம் வரவில்லை. கடிகாரத்தில் மணி அடிக்கும் சத்தம் அவளை அந்த இன்பமயமான நாத உலகத்திலிருந்து பூவுலகத்துக்குக் கொண்டு வந்தது. மணி ஆறு அடித்தது; உடனே அவளுடைய கண் இமைகள் திறந்தன. சுற்றும் முற்றும் மேலும் கீழும் அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்படையச் செய்தது. தந்தத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்ட சலவைக் கல் சுவர்கள் நாலுபுறமும் அவளைச் சூழ்ந்திருந்தன. கீழ்த் தரையும் சலவைக் கல் பதித்தது தான். ஆனால் அதில் பெரும் பகுதியை சித்திர விசித்திரமான இரத்தினக் கம்பளம் மூடியிருந்தது. மேலே இருந்து கண்ணாடிக் குஞ்சலங்களுடன் கூடிய விதவிதமான வேலைப்பாடு அமைந்த 'குளோப்' விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பளிங்குச் சாளரங்களின் வழியாகச் சில சமயம் உள்ளே புகுந்த இனிய காலை நேரத்துக் காற்று அந்த விளக்குகளை ஆட்டிவிட்ட போது கண்ணாடிக் குஞ்சலங்கள் ஒன்றோடொன்று மோதிக் கிண்கிணிச் சத்தத்தை உண்டாக்கின.

அத்தகைய அறையின் மத்தியில் சப்ரமஞ்சக் கட்டிலில் பட்டு மெத்தை மேல் வெல்வெட் தலையணைகளுக்கிடையில் தான் படுத்திருந்ததைச் சீதா அறிந்தாள். சிறிது நேரம் திகைப்பாயிருந்தது, முதல் நாள் இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்து, நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை தான் என்பதை நிரூபித்துக் கொண்டு அவளுடைய முகத்தில் அடிபட்ட இடத்தில் 'விண் விண்' என்று இலேசான வலி உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மையே தான்! தன்னைச் சில வடக்கத்தி மனிதர்கள் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு வந்ததும், சூரியா இன்னொரு காரில் தன்னைத் தொடர்ந்து வந்ததும், சூரியாவின் வண்டி யமுனைப் பாலத்தின் முனையில் தடுத்து நிறுத்தப் பட்டதும் உண்மை தான். வழியில் ஒரு ஊரில் தான் பசிக்கிறது என்று சொன்னதும், தனக்காகப் பூரி, மிட்டாய், பால் வாங்கிக் கொண்டு வந்ததும் உண்மை தான். பாலைச் சாப்பிட்ட பிறகு அதில் மயக்க மருந்து கலந்திருக்குமோ என்ற சந்தேகம் உண்டானதும் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டதும் அதில் ஒரு ஸ்திரீ தனக்குத் துணையாக ஏறியதுங்கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்தப் பிரயாணம் இந்த அரண்மனையில் வந்து முடிவடைந்திருக்கிறது. ஆம்; இது யாரோ ஒரு மகாராஜா வின் அரண்மனை என்பதில் சந்தேகம் இல்லை. பலகணியின் வழியாகப் பார்த்தபோது வெளியிலே அழகான பூங்காவனம் தோன்றியது. செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கிய அந்தப் பூம்பொழிலில் ஆங்காங்கு பளிங்குக் கல் தடாகங்களும் தடாகங்களின் மத்தியில் முத்துத் துளிகளை வீசி விசிறிய நீர்ப் பொழிவுகளும் தோன்றின. பூங்காவனத்துக்கு அப்பால் அடுக்கடுக்கான மாட கூடங்களுடனும் கலசங்கள் ஸ்தூபிகளுடனும் மாளிகைகள் தென்பட்டன. ஆம்; அது மாமன்னர் வாழும் அரண்மனைத் தான். ஆனால் எந்த மன்னருடைய அரண்மனை? எதற்காகத் தன்னை இந்த அரண்மனைக்குப் பலாத்காரமாகப் பிடித்து வந்திருக்கிறார்கள்!

சுதேச சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் அந்தக் காலத்திலே கூடச் செய்யும் அக்கிரமமான காரியங்களைப் பற்றிச் சீதா எத்தனையோ கேள்விப்பட்டுத்தானிருந்தாள். பம்பாய் நகரில் மலபார் குன்றில் நடந்த பயங்கரமான கொலையைப் பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரிந்த விஷயம் தான். அப்படி யாரேனும் ஒரு மகாராஜா தன் பேரில் மோகம் கொண்டு தன்னை இங்கே கொண்டுவரச் செய்திருப்பானோ? அவ்விதமானால் எந்த விதத்தில் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது என்று சிந்தனை செய்தாள். பற்பல முறைகளைப் பற்றி யோசித்தாள். தப்பித்துக் கொள்ளப் பெரு முயற்சி செய்து பார்க்க வேண்டும்; முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்ள வழி தேட வேண்டும். எந்த முறையைக் கைக்கொள்வதாயிருந்தாலும் ஆரம்பத்தில் நயமாகவும் நல்லதனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே சீதா பீதியடைந்து படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அந்த அறையின் கதவு இலேசாகத் திறக்கப்பட்டபோது அவளுடைய நெஞ்சத்தின் கதவும் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே வந்தவள் ஒரு சாதாரண தாதிப் பெண் என்று பார்த்தவுடனே தெரிந்தது. வந்தவள் ஹிந்தி பாஷையில் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசினாள். பக்கத்து அறையில் முகம் கழுவிக் கொள்ளலாம் என்றும் காலைச் சிற்றுண்டி தயாராயிருக்கிற தென்றும் அவள் சொன்னதாகச் சீதா தெரிந்து கொண்டாள். அவளைப் பல கேள்விகள் கேட்கச் சீதா விரும்பினாள்; ஆனால் பேசுவதற்கு நா எழவில்லை; துணிவும் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி முகம் கழுவிக் கொள்ளச் சென்றாள்.

காலைச் சிற்றுண்டி அருந்திய பிற்பாடு தூக்க மருந்தினால் ஏற்பட்ட மயக்கம் முழுதும் தெளியவில்லை. மறுபடியும் படுக்கையில் படுத்தாள். அரைத் தூக்கமும் அரை விழிப்புமாய் இருந்த சமயத்தில் இரண்டு மூன்று குரல்கள் பேசிக்கொண்டே வருவது கேட்டது. குரல்களில் ஸ்திரீயின் குரல் ஒன்றும் இருந்தது. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பித் தூங்குவது போலப்பாசாங்கு செய்து அசையாமலிருந்தாள். வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண் டார்கள். பேசியதெல்லாம் சீதாவுக்கு விளங்கவில்லை, ஆயினும் "மகாராஜா," "மகாராணி" என்னும் சொற்கள் நன்கு விளங்கின. "தூக்க மருந்தின் சக்தி இன்னும் இருக்கிறது!" என்று ஒரு குரல் கூறியது. அந்தக் குரல் முதல் நாள் இரவு தன்னை மோட்டாரில் ஏற்றி அழைத்து வந்தவனின் குரல் என்று சீதா அறிந்து கொண்டாள். "இவள் என் சகோதரிதானா? நிச்சயமா?" சந்தேகமில்லை. ராஜ மாதாவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றி விட்டேன்!" என்றது இன்னொரு குரல். முதிர்ந்த மாதரசி ஒருத்தியின் குரல், "இந்தப் பெண் இந்த அரண்மனையில் உன்னைப்போலவே வளர்ந்திருக்க வேண்டியவள். விதியானது அவளை இத்தனை காலமும் பிரித்து வைத்திருந்தது" என்று கூறியது. இதைக் கேட்ட சீதாவின் உடம்பு சிலிர்த்தது; உள்ளம் பரவசம் அடைந்தது. ஆயினும் அப்போது கண் விழித்து எழுந்திருக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை இதெல்லாம் கனவோ, என்னமோ? கண்ணை விழித்தால் ஒருவேளை மறைந்து விடுமோ என்னமோ?.. இத்தகைய நெஞ்சக் கலக்கத்தில் மூடிய கண்ணைத் திறவாமல் இருந்தாள் சீதா.

சில நிமிஷத்துக்கெல்லாம் அந்த மூதாட்டியின் குரல் "கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வரலாம்!" என்று சொல்லியது, இத்துடன், வந்திருந்தவர்கள் திரும்பச் சென்றார்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்த பிறகு சீதா விழித்துப் பலகணி வழியாகப் பார்த்தாள். கும்பலாகச் சென்றவர்களில் ராஜ மாதா யார் என்றும் ராஜ குமாரர் யார் என்றும் ஊகித்துத் தெரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் ஏற்படவில்லை. தூக்கம் நன்றாகக் கலைந்துவிட்டது; படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள் தான் படுத்திருந்த இடம் அரண்மனைப் பூங்காவனத்தின் மத்தியில் இருந்த மாளிகை என்று தெரிந்தது. பூந்தோட்டத்தைச் சுற்றி நாலுபுறத்திலும் இதை விடப் பெரிய பெரிய மாட மாளிகைகள் காணப்பட்டன. மாளிகைகளுக்கு மத்தியில் தோன்றிய இடைவெளி வழியாகப் பார்த்தால் தூரத்தில் நீல நிறத்து ஏரி நீர் படர்ந்திருந்தது. இது எந்த ஊர் அரண்மனை? எந்த ராஜாவின் சிங்கார மாளிகை? யார் வளர்த்த பூந்தோட்டம்? இந்த மகிமையான ராஜரீகச் செல்வங்களில் எல்லாம் தனக்கும் உரிமை உண்டா? விதி வசத்தினால் இத்தனை காலமும் பிரிந்திருக்க நேரிட்டதா? ராஜ குலத்திலே பிறந்த ராஜகுமாரியான நான் விதியின் விளையாட் டினால் ஏழைக் குடும்பத்தில் வளர்ந்து எளிய வாழ்க்கை நடத்தி எல்லையில்லாத கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கும்படி நேரிட்டதா?அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் இப்போது உண்மை யிலேயே முடிவு வந்துவிட்டதா?அந்த மூதாட்டி யார்? தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னைதானா.பெரிய தாயார் அல்லது சிறிய தாயார் உறவு பூண்டவளா! அந்த அழகிய ராஜகுமாரன் தன்னுடன் பிறந்த சகோதரனா?... ஆகா! இதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? சிறு வயதில் தான் கண்ட கற்பனைக் கனவுகள், கட்டிய ஆகாசக் கோட்டைகள், மனோராஜ் யங்கள் எல்லாவற்றையும் விட இப்போது நடந்திருப்பது அதிசயமா இருக்கிறதே?

அதிசயந்தான்! உலகத்தில் இந்த நாளிலும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிசயங்களில் ஒன்று தன் வாழ்க்கையிலும் நடந்து விட்டிருக்கிறது. தான் ராஜகுலத்தில் பிறந்த ராஜகுமாரி என்பது உண்மை தான். இல்லாவிட்டால் தன்னை இங்கே கொண்டு வருவதற்கு இவ்வளவு பிரயத்தனம் ஏன் செய்திருக்க வேண்டும்? அந்த மூதாட்டியும் ராஜகுமாரனும் பேசியதிலிருந்து அது நிச்சயம் என்று ஏற்படுகிறது. இந்த விஷயம் எல்லாம் அவருக்குத் தெரியும்போது அவருடைய மனதின் நிலை எப்படியிருக்கும்? ராஜ வம்சத்தில் பிறந்த ராஜகுமாரியைத் தான் மணந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது பற்றிப் பெருமை கொள்வாரா? தன்னை இத்தனை காலமும் இவ்வளவு கொடூரமாக நடத்தியது பற்றி வருத்தப்படுவாரா? இதற்குப் பிறகும் அவரையே கணவர் என்றும் கடவுள் என்றும் கருதித் தான் நடந்துகொள்ளப் போவது குறித்து மகிழ்ச்சியடைவாரா? இனிமேலாவது தன்னை அவமதித்து அலட்சியமாய் நடத்தாமல் அன்புடன் போற்றி அருமையாக வைத்துக் கொள்வாரா? நியாயமாகப் பார்த்தால் தன்னிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்! தனக்கு இழைத்த அநீதிகளுக்காகவும் கொடுமைகளுக்காகவும் வருந்திப் பச்சாதாபப்பட வேண்டும். இனிமேல் அப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதில்லையென்று உறுதிமொழியும் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தான் வற்புறுத்தப் போவதில்லை. அந்த மாதிரியெல்லாம் அவரை அவமானப்படுத்தத் தனக்கு ஒரு நாளும் மனம் வராது. அவர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே நிறுத்த அவருடைய வாயைத் தன்னுடைய கையினால் பொத்தி, "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொல்ல வேண்டும்.

எப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய கணவர் அல்லவா? ஏழையும் அனாதையுமாயிருந்த தன்னை ஆசைப்பட்டு மணந்த மணவாளர் அல்லவா? செல்வத்திலே பிறந்து செல்வத்திலே வளர்ந்த லலிதாவை வேண்டாம் என்று சொல்லித் தன்னை விரும்பிக் கலியாணம் செய்துகொண்ட பிராணநாதர் அல்லவா? அவர். லலிதாவுக்கு இதெல்லாம் தெரியும்போது என்ன நினைப்பாள்? சந்தோஷப்படுவாளா? அசூயைப்படுவாளா? தன் அருமைத் தோழிக்கு இத்தகைய அதிர்ஷ்டம் கிடைத்தது பற்றிச்ந்தோஷப்படத்தான் செய்வாள். ஆயினும் மனதிற்குள்ளே கொஞ்சம் அசூயையும் இல்லாமற் போகாது. கல்யாணத்துக் கென்று காலணாச் செலவு செய்ய நாதியற்று இரவல் மணப்பந்தலில் மாலையிட்ட அனாதைச் சீதா ஒரு பெரிய சமஸ்தானத் தின் ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரி என்று தெரிந்தால் கொஞ்சமாவது அசூயை உண்டாகாமல் இருக்குமா? மனுஷர்களுக்குச் சாதாரணமாக உள்ள பொறாமை லலிதாவுக்கு மட்டும் எப்படி இல்லாமற் போகும்? அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இவர்களிடம் தான் எப்படி நடந்து கொள்வது? தன் விஷயத்தில் இவர்களுடைய உத்தேசம் என்னவாக இருக்கும்? எதற்காக இவ்வளவு மர்மமாகவும் பலவந்தமாகவும் தன்னைப் பிடித்துக் கொண்டு வரச் செய்திருக் கிறார்கள்? இவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் பேச வேண்டும். தன்னை இங்கே கொண்டு வருவதற்கு அவர்கள் கையாண்ட முறையைத் தான் விரும்பவில்லையென்று காட்டி விட வேண்டும். மேலே அவர்கள் என்ன சொன்னாலும் சுலபத்தில் இணங்கிவிடக் கூடாது. அவர்களுடைய நோக்கம் இன்னதென்று தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி யோசித்துப் பதில் சொல்ல வேண்டும்.

அடாடா! இந்தமாதிரி சமயத்தில் சூரியாவின் உதவியும் யோசனையும் தனக்குக் கிடைக்குமானால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஐயோ! பாவம்! சூரியா இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறானோ? ஒருவேளை இன்னமும் என்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ? அல்லது போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு விட்டார்களோ என்னமோ! இந்த அரண்மனையில் தன்னுடைய நிலைமை இன்னதென்று தெரிந்ததும் முதற்காரியமாகச் சூரியாவைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து அவனுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். பார்க்கப் போனால் அவனைத் தவிர தன்னிடம் உண்மையான அபிமானம் உள்ளவர்கள் வேறு யார்? அவனைப் போல் தனக்காகக் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கத் தயங்காத வர்கள் வேறு யார்? இவ்வாறெல்லாம் சிந்தனை செய்த வண்ணம் சீதா அந்த அழகிய அரண்மனை உத்தியான வனத்தில் உலாவித் திரிந்தாள். ஆங்காங்கு நின்று செடிகளில் பூத்துக் குலுங்கிய புஷ்பக் கொத்துக்களிலிருந்து ஒவ்வொன்றைப் பறித்து முகர்ந்தாள். மரக் கிளையின் மீது அமர்ந்து கீதமிசைத்த பட்சிகளை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். நடந்து அலுத்துக் கால்களும் வலி எடுத்த பிறகு அந்தப் பூங்காவனத்தில் போட்டிருந்த சலவைக் கல் மேடை ஒன்றின் மீது உட்கார்ந்தாள்.

அவளுடைய உள்ளத்தின் கற்பனா சக்தி விசுவரூபம் எடுத்துப் பூமியையும் வானத்தையும் அளாவிக் கொண்டு நின்றது. அவளுடைய சித்தம் மரங்களின் உச்சி மீது உலாவி வானத்துப் பறவைகளுடன் குலாவி மேக மண்டலங்களில் திரிந்து இன்ப ஒளிக் கடலில் நீந்தி விளையாடியது. காலக் கணக்கெல்லாம் குழப்பமடைந்து, ஒரு நிமிஷ நேரம் நூறு வருஷமாக நீடித்தது. ஆயிரம் வருஷம் அரை நிமிஷமாய்ப் பறந்தது. எத்தனை எத்தனையோ மனோராஜ்யங்கள் எழுந்து உடனே சிதைந்து விழுந்தன. மின்னல் நேரத்தில் ஆகாச வெளியில் அற்புதமான கோட்டைகள் தோன்றின. அதே வேகத்தில் அவை மறைந்தன. அன்பும் ஆசையும் இன்பமும் துன்பமும் குரோதமும் குதூகலமும் அலை அலையாகவும் மலை மலையாகவும் கொந்தளித்து மேலெழுந்து நொடிப் பொழுதில் அடங்கின. அவர்கள் மறுபடியும் வந்தார்கள் ராஜமாதா, ராஜகுமாரர், அவர்களுடன் அந்தரங்கப் பணியாள் மூவரும் வந்தார்கள். சீதா அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் கண் கொட்டாத ஆவலுடன் மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். ராஜமாதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. "மகளே! உன்னைச் சிங்கார மாளிகையில் தேடிவிட்டு வருகிறோம். அதற்குள் தோட்டத்தைச் சுற்ற ஆரம்பித்து விட்டாயா? மிகவும் சந்தோஷம். இந்த அரண்மனைத் தோட்டத்திலே உலாவ உனக்குப் பூரண உரிமை உண்டு. இந்த அரண்மனையிலேயே வசிப்பதற்கும் உனக்குப் பாத்தியதை உண்டு. இதையெல்லாம் கேட்க உனக்கு வியப்பாயிருக்கிறதா?" என்று ராஜமாதா கேட்டாள்.

சீதா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ கேள்விகள் கேட்க அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டி ருந்தது. ஆனால் பேச முடியாதபடி உணர்ச்சி அவளுடைய தொண்டையை அடைத்தது. மேலும் ராஜமாதாவிடம் ஹிந்தி பாஷையில் பேசுவதற்கு வேண்டிய சக்தி தன்னிடம் இருக்கிறதா என்பது பற்றிச் சந்தேகம் உதித்தது. டில்லியில் வசித்த காலத்தில் வேலைக்காரர் களுடன் பேசிப் பழகியதனால் ஏற்பட்ட ஹிந்தி பாஷை ஞானம் இந்த மகத்தான சந்தர்ப்பத்துக்குப் போதுமானது. "மகளே, ஏன் பேசாமலிருக்கிறாய்? நாங்கள் உனக்கு அன்னியர்கள் அல்ல. நான் உன்னுடைய சிறிய தாயார்; இவன் உன்னுடைய சகோதரன். காலம் செய்த கோலத்தினால் இத்தனை நாளும் நீ வேறு எங்கேயோ வசிக்க நேரிட்டது" என்றாள். சீதாவுக்கு ஒரே பிரமிப்பா யிருந்தது வியப்பும் மகிழ்ச்சியும் போட்டியிட்டுக் கூத்தாடின. தான் எண்ணிய எண்ண மெல்லாம் உண்மைதான்; கனவுமல்ல, கருணையுமல்ல. ஏழைச் சீதா உண்மையில் ராஜ குலத்தில் பிறந்த ராஜகுமாரி! அற்புதம் என்றால் இதுவல்லவா அற்புதம்? அதிர்ஷ்டம் என்றால் இதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறு என்ன உண்டு.

"மகளே! இன்னும் நீ பேசவில்லை ஒருவேளை உன்னை இங்கே கொண்டு வந்த முறை உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது! அதனால் கோபமாய் இருக்கிறாயாக்கும்! ஆனால் உனக்கு நான் பல தடவை சொல்லி அனுப்பியும் எங்களிடம் வரச் சம்மதிக்கவில்லை. ஆகையினால் தான் உன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவது அவசியமாயிற்று. நீயே யோசித்துப் பார்! உன் சகோதரனுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. அதற்கு முன்னால் இந்தக் குடும்பத்தில் உனக்குச் செய்யப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமென்று இவன் பிடிவாதம் பிடித்தான். அப்படியானால் உன்னைப் பலவந்தமாகக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி என்ன?" என்றாள் ராஜமாதா. இந்தச் சமயத்தில் ராஜகுமாரரும் சம்பாஷணையிலே சேர்ந்து கொண்டார்: "சகோதரி! அம்மா சொல்வது சரிதான் தங்களைப் பலவந்தமாக இங்கே கொண்டு வரச் செய்ததற்குக் காரணம் என் ஆவலே. பிரயாணத்தின் போது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டி ருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டும். மேலும் தாங்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பெரு முயற்சி செய்து வருகிறீர்கள் என்று அறிவேன். அதற்குக் குந்தகம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. உண்மையில் எனக்கே இந்தச் சமஸ்தானத்து ராஜாவாக முடிசூட்டிக்கொள்வதில் விருப்பமில்லை. வெள்ளைக்காரர்களைத் துரத்தியடித்துவிட்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. அதற்கு இந்த யுத்த சமயத்தைக் காட்டிலும் நல்ல சமயம் கிடைப்பது அரிது. ஆனாலும் என் தாயாரின் வற்புறுத்தலுக்காகவே இந்த ராஜ்யப் பொறுப்பை ஒப்புக் கொள்ளப் போகிறேன். தாங்கள் என்னுடன் இருந்து ஒத்தாசை செய்ய வேண்டும் சகோதரியே! ஒத்தாசை செய்வீர்களா?"

சீதாவுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருந்தது. இது என்ன கூத்து? இவர்கள் என்னென்னமோ சொல்கிறார்களே? ஒருவேளை இவர்கள் பேசுகிற ஹிந்தி பாஷை சரியாகப் புரியாததினால் இப்படியெல்லாம் நமக்குத் தோன்றுகிறதோ? இதற்கு மேல் சும்மா இருக்கக் கூடாதென்று தீர்மானித்து, "நான் ஒரு அபலை ஸ்திரீ; என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? மேலும் என்னுடைய புருஷரிடம் கேட்க வேண்டாமா? என்னுடைய பதிக்குத் தெரியாமல் என்னை நீங்கள் கொண்டு வந்ததே பிசகு!" என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜமாதாவும் ராஜகுமாரரும் மலை சரிந்து தலையில் விழுந்தவர் களைப்போல் பிரமித்துப் போய் நின்றார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; பிறகு சற்று விலகி நின்ற மூன்றாவது ஆளின் முகத்தையும் பார்த்தார்கள். "நன்றாய்ப் படித்திருக்கிறாள் என்று நீர் சொன்னீரே? இந்த மாதிரிக் கொச்சையான ஹிந்தி பேசுகிறாளே?" என்று ராஜமாதா கேட்டாள். "கணவனைப்பற்றிப் பேசுகிறாளே? கல்யாணம் ஆகியிருக்கிறதா, என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார். மூன்றாவது ஆசாமி திகைத்த முகத்துடன் சீதாவைப் பார்த்து, "உங்களுக்கு கலியாணம் ஆகியிருக் கிறதா?" என்று கேட்டான். "ஏன் ஆகவில்லை? ரொம்ப காலத்துக்கு முன்பே ஆகிவிட்டது! குழந்தை கூட இருக்கிறது!" என்றாள் சீதா. ராஜகுமாரர், "இதென்ன அதிசயம்? அம்மணி தாங்கள் யார்? எந்த ஊர்?" என்று கேட்டார். சீதாவுக்கு எதனாலோ கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. "நான் யார் என்று தெரியாமலா என்னைப் பிடித்துக் கொண்டுவரச் செய்தீர்கள்?" என்றாள்.

"அம்மணி! தயவு செய்து சொல்லுங்கள் தங்கள் பெயர் என்ன? தங்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார். "தாராளமாகச் சொல்கிறேன் என் பெயர் சீதா! என் தந்தை பெயர் துரைசாமி ஐயர். என் தாயாரின் பெயர் ராஜாம்மாள், என் கணவன் பெயர் சௌந்தரராகவன். என் மாமியாரின் பெயர் காமாட்சி அம்மாள். என் அருமை மாமனாரின் பெயர் பத்மலோசன சாஸ்திரிகள். இன்னும் யார் யாருடைய பெயர் உங்களுக்குத் தெரியவேண்டும்?" "போதும், அம்மணி! போதும்! கியான்தாஸ்! இது என்ன மூடத்தனம்? இது என்ன அசம்பாவிதம்! இந்தத் தவறு எப்படி நேர்ந்தது?" என்று ராஜகுமாரர் பணியாள் மீது எரிந்து விழுந்தார். கியான்தாஸ் தன் சட்டைப் பையிலுள்ள புகைப்படத்தை எடுத்து சீதாவுடன் ஒப்பிட்டு இரண்டு மூன்று தடவை உற்றுப் பார்த்தான். "தவறு நேர்ந்துவிட்டது! ஐயோ! தவறு நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணும் அவள் மாதிரியே இருக்கிறாள். ஆனால் அவள் அல்ல! அடடா! எவ்வளவு பெரிய தவறு நேர்ந்து விட்டது? இப்போது என்ன செய்வது?" என்று கியான்தாஸ் கூடச் சேர்ந்து அங்கலாய்த்தான். சீதாவைப் பார்த்து ராஜமாதா, "பெண்ணே! உண்மையாகச் சொல்லிவிடு! உன்னுடைய பெயர் தாரிணி இல்லையா?" என்று கேட்டாள்.

அந்த ஒரே கேள்வியின் மூலம் சீதாவுக்குச் சகல விவரங்களும் தெரிந்துவிட்டன.அவளுடைய ஆகாசக் கோட்டை களும் மனோராஜ்ய மாளிகைகளும் இடிந்து தகர்ந்து பொடிப் பொடியாகிக் காற்றிலே பறந்து மண்ணிலே விழுந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து தொலைந்து போயின! ஆகா! இந்த முழு மூடர்கள் தன்னைத் தாரிணி என்று தவறாக எண்ணி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை நேரம் அது தெரியாமல் நாமும் ஏமாந்து ஏதேதோ கோட்டை கட்டி கொண்டிருந் தோமே? ஆசாபங்கத்தினாலும் அசூயையினாலும் ஆங்காரத்தினாலும் சீதாவின் உள்ளம் எரிமலையாகியது. எரிமலை கக்கும் தீயின் கொழுந்தைப்போல் வார்த்தைகள் சீறிக்கொண்டு வந்தன. "நான் தாரிணி இல்லை; நான் உங்கள் தூர்த்த ராஜ குலத்தில் பிறந்தவளும் இல்லை. தளுக்கினாலும் குலுக்கினாலும் மூடப் புருஷர்களை மயங்க வைக்கும் மாயக்காரியும் அல்ல. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழைப் பெண். தாலி கட்டிய புருஷனோடு மானமாய் ஜீவனம் செய்து வந்தேன். உங்களுடைய முழு மூடத்தனத்தில் இந்த மாதிரி என்னை அலங்கோலப்படுத்தி விட்டீர்கள். இனி என்னுடைய கதி என்ன?" என்று சீதா அலறினாள். "பெண்ணே! வீணாகக் கத்தாதே! நடந்தது நடந்து விட்டது. நீ இருந்த இடத்தில் உன்னைத் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்கிறேன்?" என்றாள் ராஜமாதா. "உங்களுக்கு என்ன? திருப்பிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சுலபமாய் சொல்லிவிடுகிறீர்கள். இப்படித் தெறிகெட்டு எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்தவளை அவர் திருப்பிச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா?

நீங்கள் மகா பாவிகள்! இரக்கமற்ற சுயநலப் பிண்டங்கள்! உங்களுடைய வம்சம் அடியோடு நாசமாகிப் பூண்டற்றுப் போகும்..."அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் ராஜமாதாவும் ராஜகுமாரரும் விரைந்து சென்றார்கள். போகும்போதே அவர்கள் அந்த மூன்றாவது ஆளை ஏதோ பலமாகக் கண்டித்துக் கொண்டு போக அந்த ஆள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் சமாதானம் சொல்லிக்கொண்டும் போனான். அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் சீதா விம்மி அழத் தொடங்கினாள். இதயத்தின் அடிவாரத்தில் வெகு காலமாக மறைந்து கிடந்த துக்கம் பொங்கிப் பீறிக்கொண்டு வந்தது. கொதிக்கின்ற கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி கன்னத்தைச் சுட்டது. பழைய காலத்துக் காவியங்களிலே வரும் கற்புக்கரசிகளைப் போலச் சீதாவுக்கு மட்டும் சக்தியிருந்தால் அந்த மூன்று பேரையும் அந்த க்ஷணமே சுட்டு எரித்துச் சாம்பலாக்கி இருப்பாள். தண்டனை அளிக்கும் அதிகாரம் உடைய அரசியாயிருந்தால் தாரிணியைச் சுண்ணாம்புக் காளவாயில் போடும்படி கட்டளையிட்டிருப் பாள்.ஆகா! எங்கே போனாலும் அந்தப் பாதகியல்லவா தன்னுடைய சத்துருவாக வந்து சேருகிறாள்? தன்னுடைய ஆசை களைப் பங்கமுறச் செய்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்கென்றே தாரிணி பிறந்தவள் போலும்! அடி! மோகன உருவம் கொண்ட பயங்கர ராட்சஸியே! கலிகால சூர்ப்பணகை என்றால் உனக்கல்லவா தகும்? உன்னை மானபங்கம் செய்து புத்தி புகட்ட எந்த வீர புருஷனாவது முன் வரமாட்டானா? சூரியாவிடம் சொன்னால் அவனாவது செய்யமாட்டானா? அப்படி யாரும் உன்னைப் பழிவாங்க முன் வராவிட்டால் அடுத்த முறை உன்னைப் பார்க்கும்போது நானே விஷம் கொடுத்துக் கொன்றுவிடுகிறேன், பார்! அவமானத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளான சீதாவின் மனதில் இது போன்ற பயங்கர எண்ணங்கள் குடிகொண்டன!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்தொன்றாம் அத்தியாயம்

குற்றச்சாட்டு

ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் அமளி துமளி பட்டுக்கொண்டிருந்தது. வருகிற ரயில்களும் போகிற ரயில்களும் ஏகச் சத்தமிட்டன. பிரயாணிகளின் கூட்டம் சொல்லி முடியாது. ரயில்களிலும் சரி, ரயில்வே பிளாட்பாரத்திலும் சரி, காலி இடம் என்பதே கிடையாது. பிரயாணிகளில் பாதிப் பேர் ஆங்கில சோல்ஜர்களும் இந்தியச் சிப்பாய்களுமாவர். அப்போது உலக மகாயுத்தம் மிக நெருக்கடியை அடைந்திருந்த சமயம் அல்லவா? மாஜி சேனாதிபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராய் பதவியை வகித்து வந்தார். அது வரையில் அவர் சென்றிருந்த போர்க்களங்களிலெல்லாம் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்க வேண்டி நேர்ந்தது. அந்த அபகீர்த்தியைப் போக்கிக்கொள்ள விரும்பிய வேவல் துரை என்ன வந்தாலும் இந்தியாவிலிருந்து பின்வாங்கு வதில்லையென்று தீர்மானித்துப் பிரமாத ராணுவ முஸ்தீப்புகளைச் செய்து வந்தார். ஆகவே இந்தியாவின் ரயில்கள் எல்லாம் அந்த 1943-ம் வருஷம் பிற்பகுதியில் சிப்பாய்கள் மயமாயிருந்தன. ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் பெரிய பெரிய பீரங்கி குண்டுகளும் அவற்றின் கூடுகளும் கும்பலாக அடுக்கப்பட்டுக் கிடந்தன! பல ரயில் பாதைகள் சந்திக்கும் பெரிய ஜங்ஷன் ஆக்ரா; ஆதலால் அங்கே இடைவிடாமல் ரயில்கள் வந்தவண்ணமும் போனவண்ணமுமாக இருந்தன. இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளுக்குரிய வெயிட்டிங் ரூமில் ஒரு மூலையில் சீதா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சிறிய டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேல் கையை ஊன்றிச் சாய்ந்துகொண்டிருந்தாள். அவளுடைய மனம் எங்கெல்லாமோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஐந்து வருஷத்துக்கு முன்னால் அதே ஆக்ராவுக்குச் சீதா தன் கணவருடனும் சூரியாவுடனும் வந்திருந்தாள். கோட்டையிலிருந்த அரண்மனைகளையும் தாஜ்மகாலையும் பார்த்துப் பரவசமடைந்தாள் பற்பல இன்பக் கனவுகள் கண்டாள்.

அந்தக் கனவுகளையெல்லாம் விட அதிசயமான நிகழ்ச்சி நேற்று நடந்தது. சில மணி நேரம் அவள் தன்னை அரண்மனையில் வாழ்வதற்குரிய அரசகுமாரி என்று எண்ணிப் பெருமித ஆனந்தம் அடைந்திருந்தாள். ஆனால் அந்தப் பெருமித ஆனந்தம் ஒரு நொடியில், ஒரு வார்த்தையில், தகர்ந்து போய்விட்டது. அவள் வெறும் சீதாதான் என்றும் சாதாரண மனுஷி தான் என்றும் ஏற்பட்டது. அவளை அவ்விதம் மதிமயங்கச் செய்வதற்குக் காரணமாயிருந்தவர்கள் ஆக்ரா ஸ்டேஷனில் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டு, டில்லிக்கு ஒரு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, மாயமாய் மறைந்து விட்டார்கள். ஆம், வெறும் டிக்கட் மட்டும் கொடுத்துவிட்டுப் போகவில்லை. அந்தச் சிறு டிரங்குப் பெட்டியையும் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவளுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்குப் பரிகாரமாக அதில் ஏதோ பரிசுப் பொருள் இருக்கிறதாம். ராணி அம்மாளின் பரிசு இங்கே யாருக்கு வேணும்? வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். பெட்டியைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கூடச் சீதா பார்க்கவில்லை. சீதாவின் உள்ளம் அவளுடைய வருங்கால வாழ்வில் ஈடுபட்டிருந்தது. அவளிடம் டில்லிக்கு டிக்கட் இருப்பது உண்மை தான். டில்லிக்குப் போகும் வண்டியும் சீக்கிரத்தில் வந்துவிடும். ஆனால் டில்லிக்குப் போய் என்ன செய்வது? அவருடைய முகத்தில் எப்படி விழிப்பது? "இரண்டு நாளாய் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏற்கெனவே காரணமில்லாமல் தன் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது தன்னை அடியோடு நிராகரித்து விடலாம் அல்லவா? சூரியாவோடு சேர்ந்து ஏதோ சதி செய்ததாக எண்ணிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

அப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தன்னை எப்படி அவர் திரும்ப ஏற்றுக் கொள்வார்! நடந்த சம்பவங்களை எல்லாம் சொன்னால் உண்மையென்று நம்புவாரா; கட்டுக்கதை என்று சொல்லமாட்டாரா? எல்லாவற்றையும் அனுபவித்த தனக்கே நடந்ததை நம்புவது கஷ்டமாயிருக்கிறதே! அவர் எப்படி நம்புவார்? அவரை விட்டுப் போய்விடுவது என்று முன்னால் உத்தே சித்திருந்தபடி செய்துவிட்டால் என்ன? அப்படியானால் எங்கே போவது? சென்னைப் பட்டணத்தில் வஸந்தி இருக்கிறாள். ஆனால் அங்கே போய் மாமனார் மாமியார் முகத்தில் எப்படி விழிக்கிறது? திடீரென்று தனியாக வந்ததற்கு என்னகாரணம் சொல்லுகிறது? அதைக்காட்டிலும் சூரியா சொன்னபடி கல்கத்தாவுக்குப் போவது நல்லது... கல்கத்தாவில் லலிதாவின் சிநேகிதி இருக்கிறாள் அல்லவா? அவள் வீட்டுக்குப் போய் அங்கிருந்தபடி யோசித்து முதலில் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொண்டு போவதுதான் உசிதமாயிருக்கும். ஆனால் பிற்பாடு தான் மதராஸுக்கு எதற்காகப் போக வேண்டும்? கல்கத்தாவில் சுதந்திரமாய் வாழ்வதற்கு ஒரு வேலை தேடிக் கொள்வதுதான் சரி. எத்தனையோ ஸ்திரீகள் இந்தக் காலத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கிறார்கள். அதுபோல் தானும் ஜீவனத்துக்கு ஒரு வேலை தேடிக் கொண்ட பிறகு வஸந்திக்குக் கடிதம் எழுதி வரவழைத்துக் கொண்டால் என்ன!....

அவ்விதம் சீதாவின் உள்ளம் டில்லிக்கும், சென்னைக்கும், கல்கத்தாவுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கை யில், அந்த வெயிட்டிங் ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு முகம் சட்டென்று அவள் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது. அப்படிப் பார்த்தவர் ஒரு முகமதியர், சுமார் ஐம்பது வயதுள்ள மனிதர். அவரை எப்போதோ பார்த்திருந்த ஞாபகம் சீதாவுக்கு வந்தது. அதனால் ஒருவிதப் பயம் உண்டாயிற்று. தன்னை அவர் உற்றுப் பார்க்கிறார் என்று தெரிந்ததும் பீதி அதிகமாயிற்று. முன்னால் இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற யோசனை முற்றியது. தலைவலி எடுக்கும் வரை யோசித்த பிறகு சட்டென்று ஞாபகம் வரவும் செய்தது. கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ரஸியாபேகம் என்னும் ஸ்திரீ ஒரு நாள் இரவு ஒருவருக்கும் தெரியாமல் வீட்டில் புகுந்து ஸ்நான அறையில் தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருந்தாள் அல்லவா? அந்தப் பயங்கரமான இரவில், தான் படுத்துத் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தபோது, பலகணிக்கு வெளியே யிருந்து ஒரு முகம் தன்னையும் தாரிணியையும் உற்றுப் பார்த்ததல்லவா? அந்த மாதிரியல்லவா இருக்கிறது இந்த சாயபுவின் முகம்? ஒருவேளை அவனேதானா? அப்படியானால் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? தன்னை எதற்காக வெறித்துப் பார்க்கிறான்? ஆக்ரா மிகவும் பொல்லாத ஊர் என்று சீதா அடிக்கடி கேள்விப்பட்டிருந்தாள்.

பாதுகாப்பில்லாமல் அஜாக்கிரதையாயுள்ள ஸ்திரீகளைப் பிடித்துக் கொண்டுபோய் விற்றுவிடக் கூடிய பாதகர்கள் அந்த ஊரில் உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தாள். இதற்கு முன்னால் தனக்கு நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாது என்று இன்னமும் கஷ்டம் ஏதேனும் காத்திருக்கிறதோ? ஆனால் இது இரயில்வே ஸ்டேஷன் இரவும் பகலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொது ஸ்தலம். இங்கே தன்னை யார் என்ன செய்ய முடியும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? ஸ்திரீகள் தனியாகப் பிரயாணம் செய்வதற்குப் பயந்திருந்த காலம் போய்விட்டது. இப்போது எத்தனையோ பெண்கள் தன்னந்தனியாகப் பிரயாணம் செய்கிறார்கள். மதராஸிலிருந்து டில்லிக்கும் பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கும் தனக்குத் தெரிந்த குடித்தன ஸ்திரீகள் எத்தனையோ பேர் போயிருக்கிறார்கள்? பின்னே எதற்காக பயப்படவேண்டும்? பயப்படக் காரணம் இல்லை தான் ஆனாலும் கல்கத்தாவுக்கோ மதராஸுக்கோ போவதைக் காட்டிலும் கிட்டத்திலுள்ள டில்லிக்குப் போவதே நல்லது. தனக்கு நேர்ந்த அனுபவங்களை இவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லி விட வேண்டும். சூரியாவின் கதி என்ன ஆயிற்று என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?....

ஏதோ ஒரு ரயில் ராட்சத கர்ஜனை செய்துகொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்திற்குள் வந்தது. "டில்லி ரயில் வந்து விட்டது!" என்று சொல்லிக்கொண்டு வெயிட்டிங் ரூமில் இருந்தவர்களில் சிலர் எழுந்து போனார்கள். சீதாவும் அவசரமாக எழுந்து டிரங்குப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். வாசற்படிக்கருகில் நின்ற சாயபுவைப் பார்க்கக் கூடாது என்ற உறுதியினால் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு சென்றாள். ஆனால் அந்த சாயபுவின் செக்கச் சிவந்த உற்றுப் பார்க்கும் கண்கள் தன் பேரில் பதிந்திருக்கின்றன என்று அவளுடைய உள்ளுணர்ச்சி அறிவித்தது. டில்லி ரயில் இது என்று தெரிந்து கொண்டதும், இரண்டாம் வகுப்பு வண்டிகளில் பெண்கள் வண்டியைத் தேடிப் பிடித்தாள். ஆனால் அந்த வண்டிகளில் பெண்களின் கூட்டம் ஏற்கெனவே அதிகமாயிருந்தது. புதிதாக ஏறப் பார்த்த சீதாவுக்கு அந்த ஸ்திரீகள் இடங்கொடுக்க மறுத்தார்கள். கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு திறக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு சீதா அதிகக் கூட்டமில்லாத வேறொரு இரண்டாம் வகுப்பு வண்டியைத் தேடிப் போனாள். முக்கியமாக, சோல்ஜர்களும் சிப்பாய்களும் இல்லாத வண்டியைத் தேடினாள். அத்தகைய கடகடத்த ஓட்டை உடைசல் வண்டி ஒன்று தென்பட்டது. அதில் அதிக ஜனங்கள் இல்லை என்பதைப் பார்த்து விட்டு ஏறினாள். ஏறி உட்கார்ந்ததும் அதே வண்டியில் ஏற்கனவே அந்த முகம்மதியர் ஏறியிருப்பது தெரிந்து திடுக்கிட்டாள்.

ஐயோ! இது என்ன? போயும் போயும் இதில் ஏறினோமே? யாரைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தோமோ, அந்த மனிதன் இங்கு உட்கார்ந்திருக்கிறானே? இறங்கி வேறு வண்டி பார்க்கலாமா? இறங்கி ஏறுவதற்கு நேரம் இருக்கிறதோ, என்னமோ, தெரியவில்லையே? இப்படிச் சீதா தத்தளித்துக் கொண்டிருக்கையில் இரண்டு மனிதர்கள் அந்த வண்டியண்டை வந்து நின்றார்கள். ஒருவன் இன்னொருவனுக்குச் சீதாவைச் சுட்டிக் காட்டினான். இரண்டாவது மனிதன் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு "அம்மா! உன் பக்கத்தில் இருக்கிற பெட்டி உன்னுடையதா!" என்று கேட்டான். "என்னுடையது தான்; எதற்காகக் கேட்கிறாய்?" என்றாள் சீதா. அவளுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; இன்னொரு பக்கம் ஏதோ அபாயம் வரப்போகிறது என்ற உணர்ச்சியினால் மனம் பதைபதைத்தது. "உன்னுடையதா? நிச்சயந்தானா?" "நிச்சயந்தான்!" "அப்படியானால் ரயிலைவிட்டுக் கீழே இறங்கு!" என்றான் அந்த மனிதன். உடனே ஒரு விசிலை எடுத்து ஊதினான்; இரண்டு ரயில்வே போலீஸார்கள் வந்து நின்றார்கள். "உம்; இறங்கு!" என்று அதிகாரத் தொனியில் கட்டளையிட்டான். இச்சமயத்தில் ஒரு ரயில்வே உத்தியோகஸ்தர் அந்தப் பக்கம் வந்தார். சீதா, "ஸார்!" என்று அவரை அழைத்து, "இவர்கள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்; நீங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்றாள். அவர் போலீஸ்காரர்களைப் பார்த்து "என்ன சமாசாரம்!" என்று விசாரித்தார். சாதாரண உடுப்பில் இருந்த போலீஸ்காரன், "இந்த அம்மாள் இவருடைய பெட்டியைத் திருடியிருக்கிறாள், திருடியதோடு தன்னுடையது என்று சாதிக்கிறாள்!" என்றான்.

ரயில்வே உத்தியோகஸ்தர் சீதாவைப் பார்த்து, "இவர்கள் உன் பேரில் குற்றம் சாட்டுகிறார்கள். அம்மா! ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அதோ பக்கத்தில் தான் இருக்கிறது! நீ அங்கே போய் இன்ஸ்பெக்டரிடம் உண்மையைச் சொல்லு! உனக்குக் கெடுதல் ஒன்றும் வராது! இவர்கள் சாட்டும் குற்றம் பொய் என்றால் இன்ஸ்பெக்டர் உன்னை விட்டு விடுவார். அடுத்த வண்டியில் நானே உன்னை ஏற்றி விடுகிறேன்!" என்றார். போகும் போது அவர், "இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை. பார்வைக்குப் பரம சாதுவாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் காரியம் நேர் விரோதமாயிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே போனார். வேறு வழியில்லையென்று கண்டு சீதா வண்டியைவிட்டுக் கீழே இறங்கினாள். வெளிப் படையாகத் துணிச்சல் காட்டி, "வாருங்கள்! உங்கள் இன்ஸ்பெக்டரிடமே சொல்கிறேன்; இந்த அநியாயத்துக்குப் பரிகாரம் கேட்கிறேன்!" என்றாள். முன்னும் பின்னும் போலீஸ் புடைசூழச் சென்றபோது சீதாவின் உள்ளம் பதைபதைத்தது. பயத்தினால் அவளுடைய கால்கள் தள்ளாடித் தத்தளித்தன. ஆனாலும் அவள் மனதில் ஒரு சிறு ஆறுதலும் தோன்றியது. நல்லவேளை! அந்தக் கொள்ளிக்கண் சாயபு இருந்த வண்டியிலிருந்து இறங்கித் தப்பித்துக் கொண்டோ மல்லவா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் உண்மையைச் சொன்னால் இந்த அதிகப்பிரசங்கிகள் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதாகும். அடுத்த வண்டியில் ஏறிக் கொண்டால் போகிறது. சாயபுவிடமிருந்து தப்பினோம் என்ற சந்தோஷமானது சீதாவைத் திரும்பிப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ளும்படி தூண்டியது; சீதா திரும்பிப் பார்த்தாள். ஆகா! இது என்ன! ஆபத்து இன்னமும் தன்னை விட்டபாடாக இல்லையே? அந்தச் சாயபுவும் ரயிலிலிருந்து இறங்கிச் சற்றுத் தூரத்தில் தொடர்ந்து வருகிறானே? ஐயோ! எதற்காக அவன் வருகிறான்? தன்னை என்ன செய்வதற்காக வருகிறான்?
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்திரண்டாம் அத்தியாயம்

விடுதலை

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சீதா திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதிக் கூண்டில் நின்றாள். அவளுடைய சித்தம் தன் சுவாதீனத்தை இழந்து பிரமை கொள்ளும் நிலைக்கு வந்திருந்தது. அரண்மனைச் சிங்கார வனத்தில் நடந்த சம்பவங்களைக் காட்டிலும் நேற்றிலிருந்து நடந்த சம்பவங்கள் அவளுடைய சுயபுத்தியைக் கொண்டு நம்ப முடியாதன வாயிருந்தன. முந்தாநாள் அவள் புராதனமான ராஜகுலத்தில் பிறந்த அரசிளங்குமரி தான் என்று கொஞ்சநேரம் எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தாள். இன்றைக்கு அவள் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டி திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்தாள். விசாரணை நடந்து கொண்டிருந்தது பிராஸிகியூஷன் தரப்பில் மூன்று நபர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்லி விட்டார்கள். மூன்று சாட்சிகளில் ஒருவன் அப்பெட்டியின் சொந்தக்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டான். ஆக்ரா ஜங்ஷன் பிளாட்பாரத்தில் இருந்த ஒரு பெஞ்சியில் தான் பெட்டியுடன் உட்கார்ந்திருந்ததாகவும், தாகம் எடுத்து ஒரு கப் 'சாய்' குடிப்பதற்குப் பாயிருந்ததாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது பெட்டியைக் காணோம் என்றும், அப்புறம் டெல்லி ரயிலில் அந்த அம்மாள் பெட்டியுடன் உட்கார்ந்திருந் ததைக் கண்டுபிடித் ததாகவும் அவன் சொன்னான். இந்தப் பெரும் பொய்யனுடைய பெயர் லாலா சத்தியப் பிரகாஷ் குப்தா என்று தெரிந்தபோது சீதா தன் பயங்கர நிலைமையிலும் புன்னகை செய்யாமலிருக்க முடியவில்லை. இன்னொரு சாட்சி மேற்படி லாலா சத்தியப் பிரகாஷினால் அழைத்து வரப்பட்ட போலீஸ் சேவகன். சத்தியப் பிரகாஷ் புகார் செய்ததின் பேரில் குற்றவாளி ஸ்திரீயை ரயிலிலிருந்து பெட்டி சகிதமாக இறக்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனதாக அவன் சாட்சி கூறினான்.

அடுத்தபடியாக மேற்படி போலீஸ் ஸ்டேஷனில் அச்சமயம் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம் கூறினார். "இந்த அம்மாள் பெட்டி திருடியிருப்பாள் என்பதை முதலில் நான் நம்பவில்லை. ஆனால் சத்தியப் பிரகாஷ் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் இந்த ஸ்திரீயிடம் 'பெட்டி உன்னுடையது தானே; அப்படியானால் அதில் என்ன சாமான்கள் இருக் கின்றன?' என்று கேட்டேன். இந்த ஸ்திரீ பதில் ஒன்றும் சொல்லாமல் திகைத்து நின்றாள். ஆனால் சத்தியப் பிரகாஷ் குப்தா பெட்டியில் இருக்கும் சாமான்களுக்கு ஜாபிதா கொடுத்தான். சாவியும் அவனிடம் தான் இருந்தது. திறந்து பார்த்தால் அவன் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்தன. இந்த அம்மாள் தன்னைப் பற்றி வேறு தகவல்களும் சரியாகக் கொடுக்கவில்லை. விலாசம் சொல்லக் கூட மறுத்து விட்டாள். ஆகையால் என்னுடைய முதல் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வழக்குப் பதிவு செய்தேன்" என்று இன்ஸ்பெக்டர் சாட்சி சொன்னார். இதையெல்லாம் சீதா கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த இன்ஸ்பெக்டர் கூறியதெல்லாம் உண்மை தான். பெட்டியில் என்ன இருந்தது என்பது தனக்கு உண்மையில் தெரியாது; ஆகையால் சொல்ல முடியாமல் திகைக்க நேர்ந்தது. தன்னுடைய சொந்த விலாசத்தைக் கொடுக்கவும் அவளுக்கு இஷ்டமில்லை. இந்த அவமானம் வேறே அவருக்கு வரவேண்டுமா என்றுதான் சொல்லவில்லை. தான் குற்றமற்றவள்; நிரபராதி இதை எப்படியும் நிரூபித்து விடலாம். நிரூபித்து விடுதலை பெறுவது நிச்சயம். பின் எதற்காகத் தன் கணவரை இந்த வெட்கக்கேட்டில் சம்பந்தப்படுத்த வேண்டும்? ஆனால் எப்படி நிரூபிப்பது?

தான் குற்றமற்றவள் என்பதை எவ்விதம் நிரூபிப்பது? அதற்கு வழி எவ்வளவு யோசித்தும் புலப்படவில்லை தன்னுடைய கதையை யார் நம்புவார்கள்? அந்தக் கோர்ட்டிலிருந்த வயோதிகரான வக்கீல் ஒருவர் சீதாவின் பேரில் கருணை கொண்டு அவளுடைய கட்சியை எடுத்துப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். தம்மிடம் உண்மையைச் சொல்லும்படி சீதாவைக் கேட்டார். சீதா உண்மையில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஆனால் அவர் ஒரேயடியாகத் தலையசைத்தார். "கதை ஜோடிக்கும் சாமர்த்தியம் உன்னிடம் அபாரமாயிருக்கிறது. எழுதும் சக்தியும் இருந்தால் பிரபல ஆசிரியை ஆகலாம். ஆனால் கோர்ட்டில் இந்தக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். நீ உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்! நான் என்ன செய்யட்டும்? முடிந்த வரையில் முயன்று பார்க்கிறேன்" என்றார். அவ்வாறே அவரால் முடிந்த வரையில் முதல் மூன்று சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் பயன் தரவில்லை. குற்றவாளிக்குச் சாதகமாக அந்தச் சாட்சிகளின் வாய் மொழியிலிருந்து எதுவும் வெளியாகவில்லை. முதல் மூன்று சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. பிராஸிகியூஷன் தரப்பில் இன்னும் ஒரே ஒரு சாட்சி பாக்கி இருந்தது. ஆனால் மாஜிஸ்ட்ரேட் அவசரப்பட்டார் "இன்னும் எதற்காகச் சாட்சியம்? கேஸ் தெளிவாக இருகிறதே" என்று சொன்னார். பிராஸிகியூஷன் தரப்பில் கேஸ் நடத்திய போலீஸ் வக்கீல் "கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாலாவது சாட்சி திருட்டைக் கண்ணால் பார்த்த சாட்சி" என்றார். உடனே, அந்த கிராதக சாயபு சாட்சிக் கூண்டிற்கு வந்து நின்றான்.

சீதாவின் பயமெல்லாம் உண்மையாகி விட்டது. "இவன் எதற்காகத் தொடர்ந்து வருகிறான்?" என்று முதல் நாள் இரவு சீதா கேட்டுக் கொண்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. தன் குடியைக் கெடுப்பதற்குத்தான்; பொய் சாட்சி சொல்லித் தன்னைத் திருடி என்று நிரூபிப்பதற்குத்தான்! அடப்பாவி! உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்! நீ யார் என்பது கூட எனக்குத் தெரியாதே! எதிர்பாராத எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளான இந்த துர்ப்பாக்கியசாலியின் தலையில் இப்படிக் கடைசியாகப் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டுக் கொல்லப் பார்க்கிறாயே? அந்தக் கிராதக சாயபு, "சர்வ வல்லமையுள்ள ஆண்டவன் சாட்சியாக உண்மையே சொல்லுவேன்" என்று சத்தியப்பிரமாணம் செய்தார். பிறகு போலீஸ் தரப்பு வக்கீலின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இரண்டாவது மூன்றாவது கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் கோர்ட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. "இந்த ஸ்திரீ பெட்டியைத் திருடி எடுத்துச் சென்றதை நீர் கண்ணால் பார்த்தீர் அல்லவா?" "இல்லை நான் பார்க்கவில்லை.""ஓகோ! இது என்ன? நீர் பார்க்கவில்லையென்றால், பின்னே இவள் திருடினாள் என்பது உனக்கு எப்படித் தெரியும்? அப்படி அனுமானிப்பதற்கு வேறு காரணம் உண்டா?" "இல்லை; அப்படி அனுமானிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை! இந்த அம்மாள் பெட்டியைத் திருடவில்லை என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்!"

தன் காதில் விழுவது உண்மைதானா என்று சீதா அதிசயித்தாள். லாலா சத்தியப் பிரகாஷ் குப்தாவின் முகம் வெளுத்தது. போலீஸ்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். மாஜிஸ்ட்ரேட் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினார். சீதாவின் கட்சி பேசிய வக்கீலின் முகம் பிரகாசம் அடைந்து மலர்ந்தது. போலீஸ் வக்கீல் போலீஸ் அதிகாரியுடன் ஏதோ பேசி விட்டு, "இந்தச் சாட்சி விரோதமாய்த் திரும்பிவிட்டபடியால் விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்" என்றார். குற்றவாளி தரப்பு வக்கீல் குதித்து எழுந்து, "நான் சிலகேள்விகள் கேட்கக் கோர்ட்டார் அனுமதி கொடுக்கவேண்டும்" என்றார். மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உண்மையை அறியும்ஆர்வம் ஏற்பட்டிருந்தது கேள்வி கேட்க அனுமதித்தார். "ஜனாப்! இந்த ஸ்திரீ திருடவில்லை என்று நிச்சயமாய்த் தெரியும் என்று சொன்னீரே, நிச்சயமாய் எப்படித் தெரியும்?" "உண்மையில் பெட்டியைத் திருடியது யார் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அதனால் தான் இந்த அம்மாள் திருடவில்லை என்று நிச்சயமாய்ச் சொன்னேன்." கோர்ட்டில் பரபரப்பு அதிகமாயிற்று கசுமுசுவென்று பேசும் சத்தம் எழுந்து உடனே அடங்கிவிட்டது. "உண்மையில் பெட்டியைத் திருடியது யார்?" என்று வக்கீல் கேட்டார். முகம்மதியர் பதில் சொல்லத்தயங்கினார். "சத்தியப் பிரகாஷ் குப்தாவா?" "இல்லை!" "பின்னே யார்?" "நான்தான்!" "என்ன? நன்றாய்ச் சொல்லும் கோர்ட்டாரின் பக்கம் பார்த்துச் சத்தியமாய்ச் சொல்லும்." "பெட்டியைத் திருடியவன் நான் தான். பெட்டியை எடுத்துப் போய் நான் முதலில் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். அதே வண்டியில் பிற்பாடு அந்தஅம்மாள் வந்து ஏறினாள். நான் திருடி வந்த பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்..."

இந்தச் சமயத்தில் போலீஸ் வக்கீல் மேற்படி சாட்சியத்தை ஆட்சேபிக்க எழுந்தார். மாஜிஸ்ட்ரேட் அவரை உட்காரும்படி உத்தரவிட்டார். "போலீஸாரிடம் நேற்று இரவு நீர் எழுதி வைத்த வாக்குமூலத்தில் இந்த அம்மாள் திருடியதைக் கண்ணால் பார்த்த தாக எழுதி வைத்தீர் அல்லவா? அது ஏன்?" "சத்தியப் பிரகாஷ் குப்தா அவ்விதம் சொல்லும்படி கேட்டுக் கொண்டான்.சொன்னால் ஐநூறு ரூபாய் தருவதாகவும் ஒப்புக் கொண்டான்." "பின் எதனால் இப்போது மாறி உண்மையைச் சொன்னீர்?" "இந்த சாட்சிக் கூண்டில் ஏறி அல்லாவின் பெயரால் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு பொய் சொல்ல மனந்துணியவில்லை. அந்த அம்மாளுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக உண்மையைச் சொன்னேன்". "ஆனால் இந்த ஸ்திரீ பெட்டி தன்னுடையது என்று போலீசாரிடம் சொன்னாளே, அது ஏன்?" "இந்த அம்மாள் போலீஸாரிடம் என்ன சொன்னாளோ, எனக்கு அது தெரியாது. இந்த அம்மாளைப் பார்த்தாலே ஒரு மாதிரி பிரமை பிடித்திருக்கிறது என்று தெரிகிறது பிரமையில் ஏதாவது சொல்லியிருக்கலாம்." சீதாவின் வக்கீல் சுருக்கமாகத் தம்முடைய வாதத்தைச் சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார். மாஜிஸ்ட்ரேட்டு வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டு, சீதாவின் கட்சி பேசிய வக்கீலைப் பார்த்து, "இந்த ஸ்திரீயின் பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். இவள் யார் எந்த ஊர் என்பதைக் கண்டுபிடித்து இவளுடைய சொந்தக்கார மனுஷர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அது வரையில் இந்த நகரிலுள்ள அனாதை ஆசிரமத்திலாவது வேறு தகுந்த ஸ்தாபனத்திலாவது இவளை விட்டுவைப்பது நல்லது" என்றார்.

"ஆகட்டும்" என்றார் வக்கீல். முதிய பிராயத்தவரும் உத்தமருமான அந்த வக்கில் சீதாவுக்குச் சித்தப்பிரமை இல்லையென்றும், பல காரணங்களினால் மனம் குழம்பியிருந்தாலும் தன்னுடைய நிலைமையைப் பற்றி யுக்தாயுக்தம் பார்த்துத் தீர்மானிக்கும் தெளிந்த அறிவு அவளிடம் இருக்கிறது என்றும் விரைவிலேயே அறிந்தார். அன்று பிற்பகலில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போய் உணவு அருந்துவித்தார். இரவில் ஆக்ரா ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். வழியில் அவர் "ஆமா! சாட்சி சொன்ன சாயபுவை உனக்கு முன்னமே தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாது; அவர் எங்கே இப்போது? நான் பார்த்து நன்றி கூறவேண்டும்!" என்றாள். "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், மகளே! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன், கேட்கிறாயா?" "அவசியம் கேட்கிறேன், ஐயா! அவ்வளவு நன்றியாவது தங்களிடம் எனக்கு இருக்க வேண்டாமா?" "நல்லது கேள்! கடவுளின் அருள் உன்னை இன்று காப்பாற்றியது. அந்த முகம்மதியனின் சாட்சியம் தான் உன்னுடைய விடுதலைக்குக் காரணமாயிருந்தது என்பது உண்மை தான். ஆனால் அவனை யோக்கியன் என்று நான் கருதவில்லை. ஏதோ ஒரு நோக்கம் வைத்துக் கொண்டுதான் அவன், தான் திருடியதாகச் சொல்லி உன்னை விடுதலை செய்திருக்கிறான். நீ சர்வ ஜாக்கிரதை யாயிருக்க வேண்டும். இதைக்காட்டிலும் பெரிய ஆபத்து உனக்கு வரக்கூடும்." "இன்றைக்கு என்னைக் காப்பாற்றிய கருணாமூர்த்தியான கடவுள் இனியும் காப்பாற்ற மாட்டாரா?" "காப்பாற்றுவார்;

காப்பாற்றட்டும் ஆனால் நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தச் சாயபு பெட்டி திருடவில்லை என்பது நிச்சயம். உனக்கு யாரோ பெட்டியைக் கொடுத்ததாகச் சொன்னாயே, அதை நான் நம்புகிறேன். பின் எதற்காக அந்த முகம்மதியன் திருட்டுக் குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டு உன்னை விடுதலை செய்விக்கிறான்?" "ஐயா! அந்த முகம்மதியர் இப்போது எங்கே? ஒருவேளை அவரைக் கைது செய்து விடுவார்களோ?" "ஒருவேளை என்ன? திருட்டுக் குற்றத்தைக் கோர்ட்டில் ஒப்புக்கொண்ட ஆசாமியைச் சும்மா விட்டுவிடுவார்களா!" "ஐயா! அவரைத் தாங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்ய வேண்டும் உங்களுக்குப் புண்ணியம் உண்டு." "என்னால் ஆனதைச் செய்கிறேன் சற்றுமுன்னால் அவனைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவன் தன்னைப் பற்றி ஒன்றும் பேசவில்லை; உன்னைப் பற்றியே பேசினான். உன்னை எப்படியாவது பத்திரமாய் டில்லிக்கு அனுப்பிவிட வேண்டுமாம். அங்கே உள்ளவர்கள் உன்னைக் கவனித்துக் கொள்வார் களாம். மகளே! என்னுடைய புத்திமதியைக் கேட்பாயா?" "சொல்லுங்கள், ஐயா!" "என் அபிப்பிராயத்தில், நீ இப்போது டில்லிக்கே போகக் கூடாது. அங்கே யாரோ உன்னை ஏதோ செய்யக் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு எங்கேயாவது போவது நல்லது; நீ மதராஸ்காரிதானே? மதராஸுக்கே போகலாமே?" "இல்லை ஐயா! மதராஸுக்கு இப்போது போக நான் இஷ்டப்படவில்லை." "டில்லிக்குத்தான் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால்..." "இல்லை; டில்லிக்கு போகவும் எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. கல்கத்தாவில் எனக்கு ரொம்ப வேண்டிய சிநேகிதர்கள் இருக்கிறார்கள். ஆகையால் கல்கத்தா போகலாம் என்று பார்க்கிறேன் டிக்கெட்டுக்குத்தான் பணம் வேண்டும்." "அதைப்பற்றி நீ கவலைப் படாதே! நான் டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கல்கத்தா போனாலும் போவார்கள் . அவர்களிடம் உன்னை ஒப்புவித்து அனுப்பி வைக்கிறேன் சரிதானே?" "அப்படியே ஆகட்டும்; எனக்கு நல்ல காலம் பிறக்கும் போது நீங்கள் கொடுக்கும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன்." "பணத்தைப் பற்றி யார் கேட்டார்கள்? சௌக்கியமாகப் போய்ச் சேர்ந்தால் எனக்குப் பரம திருப்தி!" என்றார் வக்கீல்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

உல்லாச வேளை

உலகத்து மாநகரங்களுள்ளே நவயௌவன சௌந்தரியம் பெற்றுவிளங்குவது கல்கத்தாநகரம். அந்த நகர சுந்தரியின் வனப்புமிக்க தோள்களின் மேலே மிதந்து அசைந்தாடிக் கொண்டிருந்த நீலப் பட்டு உத்தரீயத்தைப் போல் இனிய புனல் ததும்பிய ஏரி ஒய்யாரமாக நீண்டு நெளிந்து கிடந்தது. நீல உத்தரீயத்தின் ஓரங்களில் அமைந்த பச்சை வர்ணக் கரையைப் போல ஏரிக்கரை யோரமாகப் பசும்புல் படர்ந்திருந்தது. ஏரியின் நடுவே மரகதச் சோலைகள் செழித்து வளர்ந்திருந்த தீவு சித்திரக் கலைஞனுடைய கற்பனைச் சித்திரமோ என்று சொல்லும்படி விளங்கியது. ஏரி நீரில் ஆங்காங்கு சில வெண்ணிறப் பறவைகளும் உல்லாசப் படகுகளும் மிதந்து கொண்டிருந்தன. ஏரியின் மத்தியில் இருந்த சோலைத் தீவிலிருந்து புள்ளினங்கள் கோஷ்டி கானமாகப் பாடிய நாத கீதங்கள் இளங் காற்றில் மிதந்து வந்து நாலாபுறமும் இசை இன்பத்தைப் பரப்பின. உல்லாசத்துக்குரிய மாலை வேளையில் ஏரிக்கரை ஓரத்துப் பசும்புல் தரையில் ஆங்காங்கு ஆடவரும் பெண்டிரும் கும்பலாகக் காணப்பட்டனர். சிலர் ஏகாந்தமாகப் புல் தரையில் சாய்ந்து கொண்டு பகற் கனவு கண்டு கவிதை புனைந்து கொண்டிருந்தனர். சிலர் கூட்டமாக உட்கார்ந்து காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தம்பதிகள் அளாவிளாவிப் பேசி மகிழ்ந்தனர். இளமையின் இன்பத்தில் திளைத்த காதலர்களும் புதுமணம் புரிந்த தம்பதிகளும் வாய்ப் பேச்சுக்கு அவசியத்தைக் காணாது கண்களோடு கண்களும் இதயத்தோடு இதயமும் பேசும்படி விட்டுக் களிப்படைந்தனர்.

அதோ, அந்த இளம் தம்பதிகள் யார்? நமக்குத் தெரிந்தவர்களைப் போலத் தோன்றுகிறார்களே?... ஆம்; தெரிந்தவர் கள்தான் தேவபட்டணம் தாமோதரம்பிள்ளையின் குமாரன் அமரநாதனும் அவனுடைய மனைவி சித்திராவுந்தான். "இந்தக் கல்கத்தா ஏரிக்கரையின் அழகு திருச்செந்தூர்க் கடற்கரைக்குக் கூட வராது!" என்றாள் சித்ரா. "உனக்கு இன்னமும் இந்த வங்க நாட்டு மோகம் விடவில்லை போலிருக்கிறது. எனக்கு இந்த ஏரிக் காட்சி இப்போதெல்லாம் அவ்வளவாக இன்பம் அளிக்கவில்லை. இதைப் பார்க்கும்போது துக்கந்தான் உண்டாகிறது. வங்க மாதா தன் அருமை மக்களின் பரிதாப நிலையை எண்ணிச் சொரிந்த கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்புவதாக எனக்குத் தோன்றுகிறது" என்றான் அமரநாத். "ஒரு சமயம் இந்த ஏரியைப் பற்றி நீங்கள் வேறு விதமாக வர்ணித்தது எனக்கு நினைவிருக்கிறது. 'பங்கிம் சந்தருடைய நாவல் களையும் ரவீந்திரரின் கவிதைகளையும் படித்துவிட்டு வங்க மாதா பொழிந்த ஆனந்தக் கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தது!' என்று சொன்னீர்கள். அந்தப் பரவசமெல்லாம் இப்போது எங்கே போயிற்று?" "அதையெல்லாம் இந்த பயங்கரமான பஞ்சம் அடித்துக் கொண்டு போய்விட்டது. மூன்று மாதமாகத் தினம் தினம் சாலையின் இரு பக்கங் களிலும் பட்டினியால் செத்துக் கிடப்பவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, கதையாவது கவிதையாவது காவியமாவது என்று தோன்றுகிறது.

சுத்தப் பைத்தியக்காரத்தனம்; அதனால் தான் காந்தி மகாத்மா சொன்னார்: 'மக்கள் பசியால் வாடும் நாட்டில் கலை என்ன, கவிதை என்ன, பாடல் என்ன?' என்றார். 'இராட்டையின் ரீங்காரமே இனிமையிலும் இனிமையான சங்கீதம்!' என்றார். மகாத்மா வுக்கும் டாகூருக்கும் இதைப்பற்றி ஒரு சமயம் பலத்த விவாதம் நடந்தது. நான் அப்போது டாகூரின் கட்சிதான் சரி என்று எண்ணினேன். இந்த மூன்று மாதத்துப் பயங்கரங்களைப் பார்த்த பிறகு, பதினாயிரக்கணக்கான ஜனங்கள் பசிக்குச் சோறின்றித் தெரு வீதிகளில் விழுந்து செத்து மடிவதைப் பார்த்த பிறகு, மகாத்மா சொல்வதுதான் சரியென்று எண்ணுகிறேன்." "இந்த வங்க நாட்டு ஜனங்கள் இவ்வளவு தேச பக்தியும் கடவுள் பக்தியும் உள்ளவர்களாயிற்றே! கடவுள் எதற்காக இவர் களை இப்படிச் சோதிக்கிறாரோ, தெரியவில்லையே!" என்று சித்ரா பரிதபித்துக் கூறினாள். "வங்காளிகள் நல்லவர்கள் தான்! ஆனால் இவர்களிடம் பெரிய துர்க்குணம் ஒன்றும் இருக்கிறது. குறுகிய மாகாணப் பற்று அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு 'வங்காளிகள் தேவ ஜாதிகள்; மற்ற நாட்டார் எல்லாரும் நீச்ச ஜாதிகள்' என்று எண்ணம். மதராஸியையோ பம்பாய்க் காரனையோ கண்டால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் மட்டும் லாகூர் வரைக்கும் சென்று உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால் மற்ற மாகாணத்தார் இங்கே வந்து பிழைப்பது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அந்தக் கெட்ட குணத்துக்காகத் தான் கடவுள் இவர்களை இப்படித் தண்டித்திருக்கிறார்!" என்றான் அமரநாத். "கடவுளை அவ்வளவு கொடுமையானவராக ஆக்கி விடுகிறீர்களே?

கிருஷ்ண சைதன்யரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் விவேகானந்தரும் அவதரித்த நாட்டின் மக்களைக் கடவுள் அவ்வளவு கருணையில்லாமல் தண்டிப்பாரா? சுரேந்திரநாதரும் தேசபந்துவும் சுபாஷ் போஸும் பிறந்த நாட்டின் மக்கள் கொஞ்சம் மாகாணப் பற்று உள்ளவர்களாயிருந்தால்தான் என்ன?" "பின்னே, நீ என்ன காரணம் சொல்லுகிறாய்? வங்காளிகள் எதற்காக இவ்வளவு பயங்கர மான கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டும்?" "எல்லாம் மனிதர்கள் செய்கிற காரியந்தான். பணத்தாசை பிடித்த பேய்கள், விளைந்த தானியத்தையெல்லாம் வாங்கி முடக்கி விட்டால் பஞ்சம் வராமல் என்ன பண்ணும்?" "அந்தக் கொடிய மனிதர்களையும் கடவுள்தானே சிருஷ்டித்தார்? 'எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார்' என்று நம்முடைய வேத சாஸ்திர புராணங்கள் எல்லாம் சொல்லு கின்றனவே! ஆகையால் மனிதன் செய்தாலும் அதன் பொறுப்பு கடவுளின் தலையிலேதானே விழும்?" "உங்களோடு விவாதம் செய்ய முடியாது. நீங்கள் இந்தக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இப்படி நாஸ்திகராகப் போய் விட்டீர்கள்! நான் உங்களோடு பேசத் தயாராயில்லை!" என்றாள் சித்ரா. "போகட்டும்; கம்யூனிஸ்டுகளால் இந்த ஒரு நன்மையாவது நிச்சயம் இருக்கிறது. அவர்களுடைய சகவாசத்தினால் ஒரு பெண்மணியின் வாயை மூடி மௌனமாகச் செய்ய என்னால் முடிந்ததல்லவா?" என்று கேலி செய்தான் அமரநாத். "வீண் ஆசை! அந்த மாதிரி எண்ணி நீங்கள் கர்வங்கொள்ள வேண்டாம். வங்க நாட்டுக்கு இந்தக் கொடும் பஞ்சத்தை அனுப்பியவர் கடவுளாக இருந்தால், அதனாலும் ஏதோ ஒரு நன்மை ஏற்படும் என்பது நிச்சயம். இந்த வங்காளத்தில் பஞ்சம் வருவது இது முதல் தடவையல்ல, முன்னேயும் வந்திருக்கிறது.

'ஆனந்த மடம்' கதையில் வங்க நாட்டில் அப்போது பரவியிருந்த பயங்கரமான பஞ்சத்தைப் பற்றிப் பங்கிம் சந்திரர் எப்படி வர்ணித்திருக்கிறார் என்று ஞாபகம் இருக்கிறதா? அந்தப் பஞ்சத்தின் காரணமாக ஒரு பெரும் புரட்சி தோன்றியது. மகேந்திரன், கல்யாணி, ஜீவானந்தன், சாந்தி, பவானந்தன், ஸத்தியானந்தர் முதலிய சுதந்திர வீரர்கள் உதயமானார்கள். 'வந்தேமாதரம்' என்னும் மகா மந்திரமும் ஏற்பட்டது. இப்போது இந்தப் பஞ்சத்தின் காரணமாகவும் ஒரு பெரும் புரட்சி ஏற்படப் போகிறது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கப் போகிறது. அந்த எரிமலை பொழியும் நெருப்பில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி விடப் போகிறது. இந்திய தேசம் சுதந்திரம் அடையப் போகிறது." "இந்தியா சுதந்திரம் அடையட்டும்; நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை; குறுக்கே நின்று தடுக்கவும் இல்லை. ஆனால் எனக்கென்னமோ சந்தேகந்தான். பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் புரட்சி செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. பசியினாலும் பஞ்சத்தினாலும் பிரஞ்சு புரட்சி ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். ஒருவேளை அரை வயிறு பட்டினியாயிருப்பவர்கள் புரட்சி செய்யலாம். முழுதும் பட்டினி கிடப்பவர்கள் அடியோடு சக்தியை இழந்து சோர்ந்து விடுகிறார்கள்; அல்லது செத்தே போய் விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் எப்படிப் புரட்சி செய்ய முடியும்?

நீயே பார், சித்ரா! இந்த வங்காளப் பஞ்சத்தில் ஐம்பது லட்சம் பேர் செத்து போயிருக்கிறார்கள். இவர்களில் கால்வாசிப் பேர், ஒரு பத்து லட்சம் பேர், சுதந்திரத்துக்காக உயிரை விடத் துணிந்திருந்தால் இந்தியா சுதந்திரம் பெற்றி ருக்கும். அவ்வளவு கூட வேண்டாம்; ஒரு லட்சம் பேர் உயிரை விடத் துணிந்து கிளம்பியிருந்தாலே போதும். ஆனால் வீதி ஓரங்களில் விழுந்து செத்தாலும் சாவார்களேயன்றி நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுக்க முன்வர மாட்டார்கள்...." "ஏன் வரமாட்டார்கள்? பேஷாக முன் வருவார்கள். ஜனங்களை நடத்திச் செல்லத் தகுந்த தலைவர்கள் இல்லாத தோஷந்தான். சுபாஷ் பாபு மட்டும் இச்சமயம் இங்கே யிருந்தால் கட்டாயம் புரட்சி ஏற்பட்டிருக்கும். சுபாஷ் பாபு இப்போது மலாய் நாட்டில் சேர்த்து வரும் சைனியத்தில் இந்திய வீரர்கள் ஏராளமாய்ச் சேருகிறார்களோ, இல்லையோ? உயிரைக் கொடுக்கத் துணிந்து தானே அவர்கள் சேருகிறார்கள்? ஆகா! தலைவர் என்றால் சுபாஷ் பாபுவைப் போல் இருக்க வேண்டும்." "சுபாஷ் பாபுவின் பேரில் உன்னுடைய மோகம் இன்னும் போகவில்லை. சுபாஷ் பாபு வெற்றியடைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்தியாவில் இங்கிலீஷ்காரர்களின் ஆட்சிக்குப் பதிலாக வங்காளிகள் ஆட்சி ஏற்படும்!" என்றான் அமரநாத். "ஏற்பட்டால் என்ன? அன்னியர்களாகிய இங்கிலீஷ்காரர்களின் கீழ் அடிமைகளாயிருப்பதைக் காட்டிலும் வங்காளிகளின் ஆட்சியில் நாம் இருந்தால் என்ன?"

"இருந்தால் என்ன? ஒன்றுமில்லை விஷயம் என்னவென்று உனக்குச் சொன்னேன்! அவ்வளவுதான். பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் ஆனந்த மடம் எழுதியிருக்கிறாரே? அதில் யாரைத் தூக்கி வைத்து எழுதியிருக்கிறார்? வங்க மாதாவின் புதல்வர்களைத் தான்! 'வந்தே மாதரம்' கீதத்தில் ஏழு கோடி மக்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதை முப்பது கோடி என்று பின்னால் மாற்றினார்கள். எப்படியும் வங்காளிகளிடம் இந்த துர்க்குணம் இருக்கத்தான் இருக்கிறது. அதன் பலனைப் பார், சித்ரா! வங்காளம் இப்போது முஸ்லீம் லீக் மந்திரிகளின் ஆட்சியில் இருக்கிறது. முஸ்லிம் லீகர்களும் வங்காளிகள் தான்! ஆனால் எப்பேர்ப்பட்ட வங்காளிகள்!" "டாக்டர் டாகூரும் வங்காளி தான் அவரைப் பாருங்களேன்! உலகமெல்லாம் ஒன்று. மனித ஜாதியெல்லாம் ஒரே ஜாதி என்று சொல்லவில்லையா? நீங்கள் வங்காளிகளைப் பற்றிக் குறை சொல்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதுவும் இந்த நாட்டில் நாம் தொழில் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டே இந்த நாட்டு மக்களைப் பற்றிக் குறை சொல்லலாமா? போதும், புறப்படலாம்! ஹாவ்ராவுக்குப் போக வேண்டும் என்கிறீர்களே!" இவ்வாறு சொல்லிக் கொண்டே சித்ரா எழுந்தாள். "நான் இங்கே அதிக நாள் இருப்பதாக உத்தேசமில்லை சித்ரா! சீக்கிரம் தமிழ்நாட்டுக்குப் போய்விட விரும்புகிறேன்" என்று சொல்லிக் கொண்டு அமரநாத்தும் எழுந்தான். "அதெல்லாம் முடியாது! நீங்கள் போவதாயிருந்தால் தனியாகப் போக வேண்டியதுதான்.

உங்கள் நாட்டில் குடிகொண்டிருக்கும் சிறுமைப் புத்தியும் சின்னச் செயல்களும் எனக்குக் கொஞ்சம் பிடிக்க வில்லை. ஒருவரை யொருவர் நிந்திப்பதே தமிழ்நாட்டாருக்கு வேலை. ஒரு ஸ்திரீயும் புருஷனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் போதும், உடனே நூறு சந்தேகங்களைக் கற்பித்து அவதூறு பேச ஆரம்பித்து விடுவார்கள்!" "வங்காளிகளிடம் இந்தக் குணம் கிடையாது என்று நினைக்கிறாய், சித்ரா! உனக்குத் தெரிந்த இலட்சணம் அவ்வளவுதான்!" "எனக்குத் தெரிந்திருக்கிற அளவே போதும், பிறத்தியாரிடம் என்ன துர்க்குணம் இருக்கிறது என்று தோண்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள எனக்குக் கொஞ்சமும் விருப்ப மில்லை!" இவ்வாறு முடிவில்லாத விவாதம் செய்துகொண்டே அந்த அன்யோன்ய தம்பதிகள் மோட்டார் வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்று வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அமரநாத்தும் சித்ராவும் கல்கத்தாவில் ஜாலீகஞ்ச் என்னும் பகுதியின் ஒரு அழகான பங்களாவில் வசித்தார்கள். முன்னேயெல்லாம் அவர்கள் அடிக்கடி ஏரிக்கரைக்குக் காற்று வாங்க வருவதுண்டு. பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் கல்கத்தாவிற்கு வரத் தொடங்கிய நாளி லிருந்து அவர்கள் அதிகமாக வெளிக் கிளம்பவில்லை. தெருக்களில் பஞ்சத்தில் அடிப்பட்டுச் செத்துக் கிடந்தவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டு போக அவர்களுக்குச் சகிக்கவில்லை.

அதோடு பஞ்சநிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த ஸ்தாபனம் ஒன்றில் சேர்ந்து சித்ராவும் தொண்டு செய்து கொண்டிருந்தாள். பர்மாவிலிருந்து வந்த அகதி ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் உதவி புரிவதற்கென்று அந்த ஸ்தாபனம் முதலில் ஏற்பட்டது. அவ்வேலை ஒருவாறு முடிந்ததும் பஞ்சம் வந்து விட்டது பஞ்சத்தில் அடிப்பட்டு மெலிந்தும் குற்றுயி ராகவும் வந்த அனாதை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஸ்தாபனம் தொண்டு செய்து வந்தது. இப்போது சில நாளாக அப்பஞ்ச நிவாரண வேலை குறைந்திருந்தபடியால் மூன்று மாதத்திற்குப் பிறகு அமரநாத்தும் சித்ராவும் கொஞ்சம் ஏரிக் காற்று வாங்கிவிட்டு ஹாவ்ரா நண்பர் களையும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள். ஹாவ்ரா ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரத்துக்கருகில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் தொழில் நடத்திய வீதிகள் இருந்தன. அந்த விசாலமான வீதிகளில் நெருங்கியிருந்த ஜனக்கூட்டத்தையும் மோட்டார் முதலிய வாகனங்களின் நெருக்கத்தையும் சொல்லி முடியாது. மாலை நேரங்களில் நிமிஷத்துக்கு ஒரு கஜ தூரம் வீதம் ஊர்ந்து கொண்டுதான் அந்தப் பகுதிகளில் மோட்டார் செல்லவேண்டும். "பஞ்சத்தில் அத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள். இத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள் என்று சொல்லு கிறார்களே! அவ்வளவு பேர் செத்துப் போன பிற்பாடும் இங்கே இத்தனை கூட்டமாக இருக்கிறதே?" என்றான் அமரநாத். "இருந்து விட்டுப் போகட்டும்; நீங்கள் யார் பேரிலாவது வண்டியை ஏற்றி ஜனத்தொகையைக் குறைக்கும் கைங்கரியத்தைச் செய்ய வேண்டாம்!" என்றாள் சித்ரா. "இந்த வீதியில் யார் பேரிலாவது வண்டியை ஏற்றினால் அவன் அநேகமாக அரிசியை முடக்கிய கறுப்பு மார்க்கெட் முதலாளியாக இருப்பான். அவனைக் கொன்றால் தேசத்துக்குப் பெரிய சேவை செய்தவனா வேன்!" என்று சொன்னான் அமரநாத்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து நான்காம் அத்தியாயம்

வெடித்த எரிமலை

மாலைப் பொழுது இரவாக மாறிக் கொண்டிருந்தது. சாலை ஓரத்துக் கம்பங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனால் விளக்குகள் எல்லாவற்றுக்கும் ஏ.ஆர்.பி. கூண்டுகள் போட்டிருந்தபடியாக தீபங்கள் பிரகாசமாக எரியவில்லை. "இந்த ஜப்பான் யுத்தம் வந்தாலும் வந்தது; கல்கத்தாவின் சோபையே போய்விட்டது! முன்னேயெல்லாம் இந்த இடத்தில் எப்படிப் பிரகாசமான விளக்குப் போட்டு ஜகஜ்ஜோதியாக இருக்கும்!" என்றாள் சித்ரா. இப்படி அவள் சொல்லி வாயை மூடினாளோ இல்லையோ, எட்டுத் திக்கும் திடுக்கிடும்படியாகப் படார், படார் என்று சத்தம் கேட்டது. உடனே ஏ.ஆர்.பி. ஸைரன் உடம்பு சிலிர்க்கும்படி சோக சத்தத்துடன் ஊளையிடத் தொடங்கியது. ஜப்பான் விமானம் வந்து குண்டு போடுகிறதென்றும், ஏ.ஆர்.பி. ஸைரன் முன் எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாகப் பின் எச்சரிக்கை செய்கிறதென்றும் அமரநாத்தும் சித்ராவும் தெரிந்து கொண்டார்கள். இது அவர்களுக்குப் புதிய அனுபவ மாதலால் அவர்களுடைய உடம்பு நடுங்கிற்று. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சித்ரா அமரநாத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டாள். அமரநாத் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினான். வீதியில் எள் விழவும் இடமில்லாதபடி நெருங்கி நின்று கொண்டிருந்த ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடி மறைந்தார்கள். வண்டிகள் மட்டும் அப்படி அப்படியே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தன. குண்டுகளின் சத்தம் ஓய்ந்தது ஐந்து நிமிஷம் ஆயிற்று. 'சரி; இவ்வளவுதான் போலிருக்கிறது; இனிமேல் போகலாம்' என்ற எண்ணம் அவர்கள் மனதிலே தோன்றியது. அடுத்த கணத்தில், ஆகா! இது என்ன அதிசயமான வெளிச்சம்!

ஆயிரம் கோடி சூரியன் பூமியை நோக்கி விரைந்து வருவது போன்ற வெளிச்சம்! உடனே அந்த அதிசயமான வெளிச்சம் மங்குகிறது! ஒரு பெரிய சத்தம் அண்டங்கள் வெடித்து விழுவது போன்ற பயங்கரமான சத்தம் கேட்கிறது. காது செவிடாகி விட்டதென்றே தோன்றுகிறது. மோட்டார் கிடுகிடுவென்று நடுங்குகிறது. மோட்டாரின் கண்ணாடிக் கதவுகள் சடசடவென்று விரிந்து உடைகின்றன. சுற்றுப்புறமெங்கும் மக்கள் ஓலமிடும் பயங்கரமான சத்தம் எழுகின்றது. பயங்கரம் இத்துடன் முடிந்துபாய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் ஒரு பெரும் புகைத் திரள் குப்குப் என்று கிளம்பிப் பரவி வானை மறைக்கிறது புகைத் திரளுக்கு மத்தியிலிருந்து ஒரு செந்தீப் பிழம்பு வானை நோக்கி ஜுவாலை விட்டுக்கொண்டு மேலே மேலே போய் வானத்தையே மூடிவிடும் போல் தோன்றுகிறது. இத்தனை நேரமும் அமரநாத்தைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடியிருந்தாள். இப்போது வாயைத் திறந்து நடுநடுங்கிய மெல்லிய குரலில், "ஐயோ! இது என்ன இவ்வளவு பெரிய நெருப்பு எங்கிருந்து கிளம்புகிறது?" என்றாள். "எனக்கும் இப்போதுதான் தெரிகிறது; டி.என்.டி. வெடி மருந்துக் கிடங்கில் தீப் பிடித்திருக்க வேண்டும். அதுதான் இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது!" என்றான் அமரநாத். "உலகத்துக்கு கேடுகாலம் வந்து விட்டது; சந்தேகம் இல்லை" என்றாள் சித்ரா. "உலகத்துக்கு ஏதோ கேடுகாலம் முன்னமே வந்துவிட்டது; இப்போது தான் கல்கத்தாவுக்குக் கேடு வந்திருக்கிறது!" என்றான் அமரநாத். "நாம் சிவனே என்று மதராஸுக்கு போய் விடலாம்.

கல்கத்தாவில் இத்தனை நாள் இருந்தது போதும்!" என்றாள் சித்ரா. "முதலில் இன்று ராத்திரி வீடு போய்ச் சேரலாம் நாளைக்கு மதராஸுக்குப் போவது பற்றி யோசிக்கலாம்" என்றான் அமரநாத். "வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விடுங்கள்! ஹாவ்ராவுக்கு இன்றைக்கு வேண்டாம்!" என்றாள். "கொஞ்சம் என் கை நடுக்கம் நிற்கட்டும். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஹாவ்ராவுக்குப் போக நினைத்தாலும் இன்றைக்கு முடியாது!" என்றான் அமரநாத். அமரநாத் கூறியது உண்மை என்பதை எதிரிலே தோன்றிய காட்சிகளும் சுற்றுப்புறமெங்கும் கேட்ட சத்தங்களும் உறுதிப்படுத்தின. முதலில் கிளம்பிய பெரும் நெருப்பு மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்குச் சமீபத்தில் அங்குமிங்கும் இன்னும் சிற்சில சிறிய தீப்பிழம்புகள் தோன்றலாயின. திரள் திரளாகக் கரிய புகை கிளம்பிச் சுழன்று பரவி வானவெளியை யெல்லாம் மூடியது. தீப்பிடித்த இடங்களை நோக்கி ஜனங்கள் பலர் பயங்கரமான ஊளைச் சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து ஓடினார்கள். நாலாபக்கங்களிலிருந்தும் டாண் டாண் டாண் என்று மிக்க வேகமான மணி அடித்துக் கொண்டு நெருப்பு அணைக்கும் என்ஜின்கள் பறந்து ஓடி வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த மோட்டார் வண்டிகள் திடீரென்று ஏக காலத்தில் புறப்பட யத்தனித்தபோது அவற்றின் ஹாரன்கள் எழுப்பிய சத்தங்கள், மகா கோரமாகக் காது செவிடுபடக் கேட்டன. வானை மூடியிருந்த புகைத் திரள் காற்றின் வேகத்தினால் கொஞ்சம் விலகிக் கொடுத்துத் தீயின் வெளிச்சம் கட்டிடங்களில் மேலே விழும்படி செய்த போது, சாலையின் இருபுறமும் இருந்த நாலு மெத்தை ஐந்து மெத்தைக் கட்டிடங்களின் மேல்தளங்களில் ஜனங்கள் நிழல் உருவங்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காட்சி, பயங்கரமான யமலோகக் காட்சியை நினைவூட்டியது.

சித்ரா அதையெல்லாம் பார்க்கச் சகியாமல் கண்களை மூடிக் கொண்டாள். பிறகு கேட்கச் சகியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள். "வண்டியைத் திருப்பி ஓட்டப் போகிறீர்களா, இல்லையா!" என்றாள். "ஓட்டுகிறேன்! நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக முன்னாலும் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டு வா" என்றான் அமரநாத். கார் திரும்பிப் புறப்பட்டு அந்த வீதியைத் தாண்டி அடுத்த வீதியில் நுழைந்தது. அங்கே கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு பெரிய ஜனக் கூட்டம் அருகில் நெருங்கிப் பார்த்தபோது ஒரு மார்வாரியின் கடைக்குள் ஜனங்கள் புகுந்து கிடைத்த சாமான்களைச் சுருட்டிக் கொண்டு ஓடுவதாகத் தெரியவந்தது. கூட்டத்தின் மத்தியில் சில போலீஸ்காரர்களும் காணப்பட்டார்கள். ஜனங்கள் கடையில் புகுந்து சூறையாடுவதை அந்தப் போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஜனக் கூட்டத்தின் ஓரம் வரையில் அமரநாத் காரைக் கொண்டு வந்து விட்டுப் பிறகு சிறிது தயங்கினான். மறுபடியும் காரைத் திருப்பி விடலாமா என்று நினைத்தான். திரும்பிப் போவதற்கு வேறு நல்ல வழி கிடையாது ரொம்பவும் சுற்றி அலைய வேண்டும். மேலும் இந்தக் காலிக் கூட்டத்துக்குப் பயந்து திரும்பிப் போவதா? வீதி ஓரமாகக் கூட்டத்திற்குள்ளே அமரநாத் காரை விட்டான். கூட்டத்தில் சிலர் காரின் மேல்தட்டைத் தட்டினார்கள்; சிலர் கதவைத் தட்டினார்கள். சிலர் பின்னால் நின்று வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்தப் பார்த்தார்கள். சிலர் 'ஆய் ஊய்' என்று கத்தினார்கள். 'மாரோ! மாரோ!" என்று ஒரு குரல் கேட்டது. அமரநாத் கதிகலக்கத்துடன்தான் வண்டியை ஓட்டினான். நல்ல வேளையாக அபாயம் ஒன்றும் நேரவில்லை. கூட்டத்தைத் தாண்டியதும் வேகமாக வண்டியை விட்டான்.

"சித்ரா! பார்த்தாயல்லவா இலட்சணத்தை! எங்கேயோ குண்டு வெடித்தது! எங்கேயோ தீப்பிடித்தது! இங்கே கடையிலே புகுந்து காலிகள் கொள்ளையடிக்கிறார்கள்! இந்த இலட்சணத்தில் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம்! உருப்பட்டாற் போலத்தான்!" என்றான் அமரநாத். இப்படி அமரநாத் சொல்லிக் கொண்டிருக்கும் போது காரின் மேல் ஒரு கல் விழுந்தது. ஓடும் வண்டியில் விழுந்தபடியால் வெடி குண்டு வெடித்தது போலச் சத்தம் கேட்டது. "நான் சொன்னது சரியாகப் போய்விட்டதல்லவா? இந்தக் கல் என் பேரிலோ எதிர்க் கண்ணாடியின் பேரிலோ விழுந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும்?" என்றான் அமரநாத். "நான்தான் சொல்லிவிட்டேனே? இந்தக் கல்கத்தாவிலே இருந்ததும் போதும்; சம்பாதித்ததும் போதும். நாளைக்கே ஊருக்குப் புறப்படலாம்; உள்ளதைக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்." "ஊருக்குப் போனால் நிம்மதி வந்துவிடுமா? அங்கேயும் இந்த மாதிரியான ஜனங்கள் தானே இருப்பார்கள்? இங்கே செய்வதைப்போல் அங்கேயும் செய்ய மாட்டார்களா?" "நம்ம பக்கத்து ஜனங்கள் ஒரு நாளும் இந்த மாதிரி மிருகப் பிராயமாக நடந்துகொள்ள மாட்டார்கள்!" என்று தீர்மானமாகக் கூறினாள் சித்ரா. கொஞ்ச தூரம் போனதும் ஒரு மோட்டார் பஸ் சாலை ஓரத்தில் பக்கவாட்டில் விழுந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். "பஸ்ஸில் எப்படித் தீப்பிடிக்கும்?" என்றாள் சித்ரா. "தானாகப் பிடித்திராது! யாரோ காலிகள் தீ வைத்திருக்கிறார்கள்!" என்றான் அமரநாத். "எதற்காக?" "எதற்காக என்று கேட்டால் என்ன சொல்லுவது? காலிகளுடைய காரியங்களுக்குக் காரணம் சொல்ல முடியுமா? கொள்ளை, கொலை, தீ வைத்தல் ஆகிய காரியங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம்! நிஷ்காம்ய கர்மமாகவே செய்வார்கள்!" வண்டி இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் சாலை ஓரத்தில் ஓர் உருவம் விழுந்து கிடப்பது தெரிந்தது.

அது பெண் உருவமாகவும் காணப்பட்டது. அதன் பக்கத்தில் ஒரு பையன் குனிந்து நின்று கொண்டிருந்தான். "நிறுத்துங்கள்! வண்டியை நிறுத்துங்கள்!" என்று சித்ரா கூறினாள். வண்டி நின்றது அதைப் பார்த்ததும் பெண் உருவத்தின் பக்கத்தில் நின்ற பையன் விழுந்தடித்து ஓடினான். "அந்தப் பையன் என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று சித்ரா கேட்டாள். "கையிலிருந்த வளையலைக் கழற்றிக் கொண்டிருந்தான். நம்மைப் பார்த்ததும் ஓடினான்! சித்ரா! கொஞ்ச நாளாகக் கல்கத்தா சாலைகளில் பிரேதங்களைக் காண்பதில்லையென்று குறைப்பட்டாயல்லவா? இதோ உன் குறை தீர்ந்து விட்டது?" "ஏதாவது கன்னாபின்னாவென்று சொல்லா தீர்கள்! நான் பிரேதத்தைக் காணவில்லையென்று குறைப்பட்டேனாக்கும்! ஒருவேளை இன்னும் உயிர் இருக்கிறதோ, என்னமோ? இறங்கிப் பார்க்கலாம் வாருங்கள்" என்றாள் சித்ரா. இருவரும் இறங்கி அந்த உருவத்தின் அருகில் போனார்கள். "அடாடா! மதராஸ் பக்கத்துப் பெண் போல அல்லவா இருக்கிறது? வயதும் அதிகமிராது; சிறு பெண்!" என்றாள் சித்ரா. "மதராஸ் பெண் என்பதற்காக யமன் விட்டுவிடுவானா, என்ன? பார்த்தாகிவிட்டது! வா, போகலாம்" என்றான் அமரநாத். "செத்துப் போய் விட்டதாக அவ்வளவு நிச்சயமாய் ஏன் சொல்ல வேண்டும்? உயிர் இருக் கிறதா என்று பாருங்கள்!" "நீயே பார்! உனக்குத் தான் இந்த மாதிரிக் காரியங்களில் அனுபவம் அதிகம்!" என்றான் அமரநாத்.

கீழே கிடந்த பெண்ணின் மூக்கின் அருகே சித்ரா விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு இலேசாக வந்து கொண்டி ருந்தது. மார்பில் கை வைத்துப் பார்த்தாள், மார்பு அடித்துக் கொண்டிருந்தது என்பதும் நன்கு தெரிந்தது. "நிச்சயமாக உயிர் இருக்கிறது! சீக்கிரம் பிடியுங்கள்!" என்று சொல்லிச் சித்ரா அந்தப் பிரக்ஞையற்ற பெண்ணின் தலையின் கீழ் கையைக் கொடுத்துத் தூக்கினாள். "ஏன் மரம் மாதிரி நிற்கிறீர்கள்! சீக்கிரம் காலின் பக்கம் பிடித்துத் தூக்குங்கள்" என்றாள். "யாரோ தெருவில் கிடக்கிறவளுக்காக நான் 'மரம்' என்று வசவு வாங்க வேண்டியிருக்கிறது! அவளுடைய காலையும் பிடித்துத் தொலைக்க வேண்டியிருகிறது!" என்று சொல்லிக் கொண்டே அமரநாத் அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துத் தூக்கினான் இருவருமாகக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள். "விடுங்கள்! சீக்கிரம் காரை விடுங்கள்! ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்!" என்றாள் சித்ரா. வண்டி கிளம்பிப் போகத் தொடங்கியதும், "எங்கே விடுகிறது! காரை எங்கே விடுகிறது?" என்று அமரநாத் கேட்டான். "வீட்டுக்குத் தான் விடவேண்டும்! வேறு எங்கே?" "அப்படியானால் நான் வண்டியை நிறுத்தி வெளியில் எடுத்து எறிந்து விடுவேன். வீட்டுக்குக் கொண்டு போகவே கூடாது. யாரோ? என்ன சங்கடமோ? நம் வீட்டில் செத்து வைத்தால் என்ன செய்கிறது?" என்றான் அமரநாத். "உங்களைப் போல் இரக்கமற்ற மனிதரை நான் பார்த்ததே கிடையாது. அப்படியானால், அனாதை விடுதிக்கு விடுங்கள்! சீக்கிரம் போனால் சரி!" என்றாள் சித்ரா. அமரநாத் அதிவேகமாகக் காரை விட்டுக்கொண்டு சென்றான். பிரக்ஞையற்றுக் கிடந்த பெண்ணின் முகத்தில் வேகமாகக் காற்றுப் பட்டதினாலேயே அவளுக்கு உயிரும் உணர்வும் வரத் தொடங்கின. அனாதை ஆசிரமத்திற்குக் கொண்டுபோய்ச் சிறிது நேரம் ஆரம்ப சிகிச்சை செய்ததும் நன்றாக உயிர் வந்துவிட்டது. இனி அபாயம் இல்லையென்று தெரிந்து கொண்டு அமரநாத்தும் சித்ராவும் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்

லலிதாவின் கடிதம்

காலை நேரத்தில் அரைமணி நேரம் சடசடவென்று பெய்த மழையினால் கல்கத்தாவின் வீதிகள் சுத்தமாக விளங்கின. ஓரங்களில் வளர்ந்திருந்த செழுமையான மரங்களிலிருந்து மழைத் துளிகள் முத்து முத்தாகச் சொட்டிக் கொண்டிருந்தன. பட்சிகள் சிறகுகளை அடித்து மழைத் துளிகளை உதறிக் கொண்டிருந்தன. மேல் மாடியின் பலகணி மாடத்தில் உட்கார்ந்து சித்ரா அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் அமரநாத் ஆபீஸுக்கு போவதற்காக உடுப்புத் தரித்துக் கொண்டிருந்தான். "இன்றைக்கு சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுவீர்களா? மழை பெய்திருக்கிறபடியால் ஏரிக்கரை இன்று ரொம்ப சுகமாயிருக்கும் சீக்கிரம் வந்தால் போகலாம்!" என்றாள் சித்ரா. "சரிதான், சரிதான்! அன்றைக்கு ஒரு நாள் ஏரிக்கரைக்குப் போனது போதாதா? அன்றிலிருந்து ஏரி என்றாலே எனக்குப் பயமாயிருக்கிறது. திரும்பி வரும்போது பஞ்சத்தில் அடிப்பட்ட இன்னும் ஒரு பெண்மணி யாரையாவது காப்பாற்ற வேண்டி நேரிட்டால்? அதைக் காட்டிலும் ஏதாவது நல்ல சினிமாவுக்குப் போய்விட்டு வந்தாலும் வரலாம் 'அன்னா கரினா' வந்திருக்கிறதாம்!..." "புருஷர் களுடைய காரியமே விசித்திரமா யிருக்கிறது. நாடகத்திலும் சினிமாவிலும் யாராவது ஒரு அனாதைப் பெண் வீதியிலே கிடந்தால் அதைப் பார்த்து உருகிப் போய்விடுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அந்த மாதிரி ஒரு பெண் கிடந்தால், அந்தப் பக்கமே பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்..." "அது உண்மைதான்; யார் இல்லை என்கிறார்கள்? அதற்குக் காரணம் இருக்கிறது. சினிமாவில் ஒரு பெண் தெருவில் கிடந்தாள் என்றால், அவள் சாமான்யப் பெண்ணாயிருப்பாளா? ஒரு கிரேடா கார்போ, அல்லது நார்வா ஷியரர் அல்லது கண்ணன் பாலா அவ்விதம் விழுந்து கிடப்பாள். பார்க்கிறவர்களுடைய மனம் கட்டாயம் உருகத்தான் செய்யும்.."

"கொஞ்சம் நில்லுங்கள், மிஸ்டர்! அன்றைக்குத் தாங்கள் பெரிய மனது செய்து காரிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்க் காப்பாற்றினீர்களே, அந்தப் பெண் உங்கள் கிரேடா கார்போ அல்லது உங்கள் கண்ணன் பாலாவுக்கு எந்த விதத் திலும் குறைந்தவள் அல்ல! நான் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்! இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள்! இரண்டு பேருமாகப் போய் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போவோம். கல்கத்தா நகரத்தைச் சுற்றிக்காட்டுவதாக அவளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறாள்" என்றாள் சித்ரா. "முடியவே முடியாது! அந்த மாதிரி நீ சொல்வதாயிருந்தால் நான் ஆபீஸிலிருந்து இராத்திரி பத்து மணிக்குத்தான் திரும்பி வருவேன். நம்முடைய திருநெல்வேலிப் பக்கங்களில் 'விருதுப்பட்டிக்குப் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற் போல்' என்பார்கள். அம்மாதிரியல்லவா இருக்கிறது நீசொல்லுகிற காரியம்?" "ஊர்பேர் தெரியாத ஒரு அனாதைப் பெண்ணிடம் உங்களுக்கு என்னத்திற்காக இவ்வளவு கொடூரம்?" என்று கேட்டாள் சித்ரா. "ஊர் பேர் தெரியாததினால்தான் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவள் யோக்யமான ஸ்திரீயாயிருக்கும் பட்சத்தில் ஊர் பேர் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? இன்னும் சொல்லாமல்தானே இருக்கிறாள்" என்றான் அமரநாத். "அதனால் என்ன? எத்தனையோ காரணம் இருக்கலாம். ரொம்பவும் துக்கப்பட்டவளாகத் தெரிகிறது. அவளுடைய யோக்யதையைப் பற்றி எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் நான் சத்தியம் செய்யத் தயாராயிருக்கிறேன். அனாதை விடுதியின் தலைவி சௌதாரிணி அம்மாள் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லுகிற புகழ்ச்சிக்கு அளவேயில்லை. தினம் ஐம்பது அனாதைக் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி விடுகிறாளாம்! அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறாளாம். அவள் இங்கேயே இருந்துவிட்டால் எவ்வளவோ தனக்கு உதவியாயிருக்கும் என்று சௌதாரிணி அம்மாள் சொல்லுகிறாள்."

"அவ்வளவு நல்ல பெண்ணாயிருக்கும் பட்சத்தில் ஊர், பேர் சொல்ல எதற்காக மறுக்க வேண்டும்?" என்று அமரநாத் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான். "யார் கண்டது, அவளுடைய கணவன் உங்களைப் போன்ற கொடூர குணம் உள்ளவனா யிருக்கலாம்! இவளை அடித்துத் துரத்தியிருக்கலாம்! அதைச் சொல்லிக் கொள்ள அவள் வெட்கப்படலாம்!" "சரி, சரி! உன்னை நான் ஒரு நாளைக்கு வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறேனா, இல்லையா, பார்!" என்றான் அமரநாத். "நீங்கள் அப்படிச் செய்தால் நான் இந்தச் சாதுப் பெண்ணைப் போல் வாயை மூடிக்கொண்டிருப்பேன் என்று நினைக்க வேண்டாம்! என்னை அடித்துத் துரத்திய அருமைக் கணவர் யார் என்பதை ஊரெல்லாம் பறையடித்து விடுவேன்!" என்றாள் சித்ரா. இந்தச் சமயத்தில் வேலைக்காரப் பையன் அன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அமரநாத் முதலில் தபால்களைப் புரட்டிப் பார்த்து, "ஸ்ரீ மதி சித்ரா தேவிக்கு ஒரு கடிதம் இருக்கிறது. லலிதா தேவி எழுதியதாகத் தோன்றுகிறது!" என்று சொல்லிக் கொண்டே ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். பிறகு தன் தபால்களைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். சித்ரா தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குப் படிப்பதற்குப் போனாள். ஐந்து நிமிஷத்துக் கெல்லாம், "கேட்டீர்களா கதையை?" என்று கூவிக் கொண்டே ஓடிவந்தாள். அமரநாத் நிமிர்ந்து சித்ராவைப் பார்த்துவிட்டு, "கதை பரபரப்புள்ள மர்மம் நிறைந்த திடுக்கிடும் கதையாக இருக்கும் போலிருக்கிறதே?

அப்படிப்பட்ட கதையை யார் எழுதியிருக்கிறது? லலிதாவா?" என்றான். "ஆமாம்; லலிதாவேதான் ஆனால் இதில் அவள் எழுதியிருப்பது வெறும் கதையல்ல, கதையைக் காட்டிலும் திடுக்கிடச் செய்யும் உண்மைச் சம்பவம். இதைப் படித்து பாருங்கள்!" என்று கடிதத்தை நீட்டினாள். "அதெல்லாம் முடியாது! உனக்கு வந்த கடிதத்தை நான் படிக்க மாட்டேன். அப்புறம் எனக்கு வரும் கடிதங்களை நீ படிக்க வேண்டும் என்பாய். ஏதாவது விசேஷ சமாசாரம் இருந்தால் வாயினால் சொல்லி விடு!" என்றான் அமரநாத். "உங்கள் மாதிரி பிடிவாதம் உள்ள மனுஷரை நான் பார்த்ததே கிடையாது. போனால் போகட்டும்! நான் சொல்லுவதையாவது கேளுங்கள். லலிதாவின் அண்ணன் சூரியா, டில்லியில் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடப் பார்த்தானாம். போலீஸார் அவனைச் சூழ்ந்து கொள்ளவே துப்பாக்கியால் சுட்டானாம். ஆனால் போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து விட்டார்களாம். அதனால் பலத்த காயம் பட்டு ஆபத்தான நிலைமையில் இருக்கிறானாம். இதைப்பற்றி லலிதா ரொம்பவும் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுகிறார்களாம். வருத்தம் இராதா, பின்னே? இது போதாதற்கு இன்னொரு பெரிய விபத்து அவர்களுக்கு! அதுவும் டில்லி சமாசாரந்தான். சீதாவைத் திடீரென்று ஒரு நாள் காணோமாம்! எவ்விதத் தகவலும் சொல்லாமல் மாயமாய் மறைந்து போய்விட்டாளாம். சூரியா பிடிபட்டதும் சீதா காணாமல் போனதும் ஒரே நாளில் நடந்ததாம். சீதாவின் கணவன் லலிதாவின் தகப்பனாருக்கு அதைப்பற்றி எழுதி இருக்கிறானாம். ஒருவேளை தேவப்பட்டணத்துக்கோ ராஜம்பேட்டைக்கோ வந்து சேர்ந்தால் தனக்கு உடனே தகவல் தெரிவிக்கும்படி எழுதியிருக்கிறானாம்! சூரியாவுக்கு நேர்ந்த விபத்தைக் காட்டிலும் சீதாவைப் பற்றிய செய்திதான் லலிதாவை அதிகமாகத் துன்பப்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றி ரொம்பவும் புலம்பியிருக்கிறாள்!"

இதைக் கேட்டுக் கொண்டு வந்த அமரநாத் நடுவில் பெரும் யோசனையில் ஆழ்ந்து விட்டான். திடீரென்று குதித்து எழுந்து, "சித்ரா! நாலு நாளைக்கு முன்பு டில்லி சமாசாரம் ஒன்று பத்திரிகையில் வந்ததே; உனக்குப் படித்ததாக ஞாபகம் இருக்கிறதா?" என்று சொல்லிக் கொண்டே தினசரிப் பத்திரிகைகள் அடுக்கி வைத்திருந்த மூலைக்குப் போய் அங்கிருந்த பத்திரிகைகளைப் புரட்டத் தொடங்கினான். சில நிமிஷ நேரத்துக்குள் அவன் தேடிய பத்திரிகைச் செய்தி அகப்பட்டு விட்டது. "ஆகா! இதோ அந்தச் செய்தி இருக்கிறது! கேள், சித்ரா!" என்று செய்தியைப் படித்தான். "நாலு நாளைக்கு முன் சூரியநாராயணன் என்னும் புரட்சிக்காரன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி இந்தப் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட போது மேற்படி புரட்சிக்காரன் போலீஸாரை எதிர்த்ததன் காரணமாகப் பலமாக அடிக்கப்பட்டுக் காயம் அடைந்தான். இது காரணமாக அவனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காகச் சேர்த்துப் போலீஸ் காவலும் போட்டிருந்தார்கள். நேற்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டு போய்விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. போலீஸ் காவலை மீறி அவன் எப்படித் தப்பித்துக் கொண்டு போனான் என்பது பெரிய மர்மமாயிருக் கிறது. இரகசிய போலீஸார் தீவிரமாகப் புலன்விசாரித்துக் கொண்டிருப்பதாய் அறிகிறோம் நிற்க, "சூரிய நாராயணன் கைது செய்யப்பட்ட அன்று மறைந்துவிட்ட புரட்சிக்காரி இன்னும் அகப்பட வில்லையென்று தெரிகிறது. அவள் மிகவும் சாமர்த்திய சாலி என்றும், புது டில்லியில் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியதாகவும், பெரிய பெரிய உத்தியோக வர்க்கக் குழாங்களில் பழகி வந்ததாகவும் தெரிய வருகின்றன. இந்தப் புரட்சிக்காரியைப் பற்றியும் இரகசிய போலீஸார் புலன்விசாரித்து வருகிறார்களாம்."

மேற்கண்ட செய்தியை மிகப் பரபரப்புடன் படித்து முடித்த அமரநாத், "இதைப் பற்றி என்ன நினைக்கிறாய் சித்ரா! 'சூரிய நாராயணன்' என்ற பெயரைப் பத்திரிகையில் படித்தபோது சூரியாவின் ஞாபகமே எனக்கு வரவில்லை. ஆனால் இது நம்முடைய சூரியாவாகத்தான் இருக்கவேண்டும். அவனுடைய சாமர்த்தியத்தை என்னவென்று சொல்லுவது? இத்தனை நாள் போலீஸுக்கு டிமிக்குக் கொடுத்து வந்தது பெரிதல்ல; மறுபடியும் ஆஸ்பத்திரியிலிருந்து போலீஸ் காவலை மீறித் தப்பித்துக் கொள்வது என்றால் சாமான்யமா? அதிலும், உடம்பெல்லாம் காயம்பட்டுக் கிடக்கும் நிலையில் - என்ன பேசாமல் நிற்கிறாய், சித்ரா! சூரியாவின் காரியம் உனக்கு அதிசயமாயில்லையா?" என்றான். "உங்கள் சூரியாவின் பெருமை இருக்கட்டும். நான் வேறொரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். மாயமாய் மறைந்த சீதாவைப் பற்றித்தான்! ஸார்! தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இன்றைக்கு ஆபீஸுக்கு லீவு போட்டு விடுங்கள். டெலிபோனில் கூப்பிட்டுச் சொல்லி விடுங்கள். இரண்டு பேரும் பஞ்ச நிவாரண விடுதிக்குப் போய் விட்டு வரலாம்! இப்பொழுதே புறப்பட்டுப் போக வேண்டும்?" என்றாள் சித்ரா. "பஞ்ச நிவாரண விடுதிக்கு இப்போது என்னத்திற்கு? எதற்காக நான் லீவு எடுக்க வேண்டும்?" என்று அமரநாத் கேட்டான். "உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? அன்றைக்கு நாம் வீதி ஓரத்தில் கிடந்தவளை எடுத்துக் கொண்டு வந்து அனாதை விடுதியில் சேர்த்தோமே? அவளைப் பற்றி ஒரு சந்தேகம் உண்டாகிறது." "ஒருவேளை அவள் சீதாவாக இருக்கலாம் என்று சொல்லுகிறாயாக்கும்.

லட்சணமாகத்தான் இருகிறது? டில்லி எங்கே? கல்கத்தா எங்கே? அங்கேயிருந்து இங்கே எதற்காக அவள் வரவேண்டும்? அவளுடைய கணவன் எழுதியிருப்பது போலத் தேவப்பட்டணம் அல்லது ராஜம்பேட்டைக்குப் போயிருந்தாலும் அர்த்தம் உண்டு!" என்றான் அமரநாத். "ரொம்பப் புத்திசாலிதான்! சீதா புரட்சிக்காரி என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்! ராஜம்பேட்டை அல்லது தேவபட்டணத்துக்குப் போனால் போலீஸாருக்கு நோட்டீசு கொடுத்ததுபோல் ஆகாதா? கல்கத்தா தான் தலைமறைவாயிருக்கச் சரியான இடம் என்று வந்திருக்கிறாள். வந்த இடத்தில், பாவம் ஏதோ ஆபத்து நேர்ந்திருக் கிறது. அது இருக்கட்டும்; ஏன் ஸார்; நீங்கள் தான் முன்னே சீதாவைப் பார்த்திருக்கிறீர்களே? உங்களுக்கு அவளை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமே?" "கல்யாணத்தின் போது ஒரே ஒரு தடவை பார்த்தது தானே! அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னால்! எப்படி ஞாபகம் இருக்கும்? மேலும் அன்று இராத்திரி காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு வந்தபோது அவள் முகத்தையே நான் பார்க்கவில்லை. இருட்டாகவும் இருந்தது, எப்படி அடையாளம் சொல்வது?" "இப்போது வந்து நன்றாய்ப் பாருங்கள்; பார்த்து அந்தப் பெண் சீதாதானா என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!" "எனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? சீதாவாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? நீயே கேட்டுத் தெரிந்துகொள். உன்னை அனாதை விடுதியில் கொண்டு போய் விட்டுவிட்டு நான் ஆபீஸுக்குப் போய்ச் சேர்கிறேன்" என்றான் அமரநாத். இரண்டு பேரும் காரில் ஏறிக் கொண்டு அனாதை விடுதிக்குச் சென்றார்கள். அமரநாத் சொன்னபடியே சித்ராவை அங்கே இறக்கி விட்டுவிட்டு, தான் ஆபீஸுக்குப் போனான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஆறாம் அத்தியாயம்

கவலை தீர்ந்தது!

அன்று சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாகவே அமரநாதன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தான். அனாதை விடுதியி லிருந்து சித்ரா திரும்பி வந்திருப்பாளா அல்லது நான் போய் அழைத்து வரவேண்டுமா என்று சிந்தித்துக் கொண்டே வீட்டு வாசலில் காரை நிறுத்தினான். ஒருவேளை திரும்பி வந்திருந்தால் அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரம் ஏதாவது தெரிந்து கொண்டு வந்திருப்பாளா என்றும் எண்ணமிட்டான். வீட்டு வாசலில் வந்து கார் நின்ற மறுநிமிடமே சித்ரா வாசற் பக்கம் வந்தாள். அவள் முகம் குதூகலத்தினால் மலர்ந்திருந்தது. "சித்ரா! சித்ரா! முழுகிப் போய் விடாதே! மெதுவாகக் கரையேறிவிடு! நான் வேணுமானால் கைகொடுத்துத் தூக்கி விடட்டுமா?" என்று அமரநாத் கேட்டான். "என்ன இப்படித் திருவாய் மலர்ந்து திரு உளறல் உளறுகிறீர்கள்?" என்று கேட்டாள் சித்ரா. "நான் ஒன்றும் உளறவில்லை உன்னைப் பார்த்தால் ஆனந்தக் கடலில் முழுகித் தத்தளிப்பவளைப் போலத் தோன்றியது. கைதூக்கி கரை சேர்க்கலாம் என்று பார்த்தேன்!" என்றான் அமரநாத். "ஆனந்தத்துக்குக் காரணம் இருக்கிறது!" என்றாள் சித்ரா. "பின்னே இல்லாமல் இருக்குமா? அந்தப் பெண் இன்னவள் என்று கண்டுபிடித்து விட்டாயாக்கும்!" "ஆமாம்! நான் சொன்னதுதான் உண்மை என்று ஆயிற்று. இருக்கவே இருக்காது என்று நீங்கள் சாதித்தீர்களே?" "உன்னுடைய வாக்குப் பொய்த்துப் போகுமா என்ன? தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுது அழுகிறவள் பெய்யெனப் பெய்யும் மழை என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார்! அப்படியிருக்க உன் வாக்குப் பலித்ததற்குக் கேட்பானேன்?" இருவரும் வீட்டின் முன்புறத்து ஹாலுக்குள் நுழைந்தார்கள். அங்கே சோபாவில் ஒரு பெண் உட்கார்ந்து ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அமரநாத் திடுக்கிட்டான்.

அவர்கள் வருவதைப் பார்த்ததும் அந்தப் பெண் எழுந்து அவசரமாய் அருகிலிருந்த மச்சுப்படியில் ஏறி மேலே சென்றாள். அவள் மறைந்ததும், "சித்ரா! இவள்தான் சீதாவா! இன்னார் என்று கண்டுபிடித்ததோடல்லாமல் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாயா?" என்றான் அமரநாத். "ஆமாம்; நான் ஒரு காரியத்தில் முனைந்தால் அதை முடிக்காமல் வந்துவிடுவேனா?" என்றாள் சித்ரா. "அதைப்பற்றிக் கேட்பானேன்? நீ ஒரு காரியத்திலும் முனையாமல் இருக்க வேண்டுமே என்றல்லவா நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்! இப்போது பார்! இந்த சனியனை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாய்!" "தயவு செய்து தங்கள் திருவாயை மூடிக்கொள்ளுங்கள்." "தேவி மன்னிக்க வேண்டும்; இந்த தேவலோகத்துக்குப் பெண்ணரசியைத் தேடிப் பிடித்து அழைத்து கொண்டு வந்திருக்கிறீர்களே! என்ன நோக்கத்துடன்? அதைத் தயவு செய்து தெரிவித்து அருள வேண்டும்." "நோக்கம் என்ன வந்தது? இது என்ன கேள்வி? நம்ம பக்கத்துப் பெண், உங்கள் அருமைச் சிநேகிதர் சூரியாவின் அத்தங்காள். அவளை அனாதை விடுதியிலேயே விட்டு வருகிறதா?" "விட்டு விட்டு வந்தால் என்ன? அன்றியும், இவள்தான் சீதா என்பது என்ன நிச்சயம்?" "நிச்சயந்தான்; என்னுடைய ஊகம் பிசகாய்ப் போகுமா? இவளே ஒப்புக்கொண்டு விட்டாள்." "இத்தனை நாள், ஒரு வாரமாக, ஊர் பேர் சொல்லாதவள் இன்றைக்கு எதனால் திடீர் என்று ஒப்புக்கொண்டாள்?" "அதற்கு ஒரு யுக்தி செய்தேன்." "அது என்ன அதிசய யுக்தி என்பதை அடியேன் அமரநாதன் தெரிந்து கொள்ளலாமா?"

"ஆக! பேஷாய்த் தெரிந்து கொள்ளலாம்; அமரநாதன் தெரிந்து கொள்ள முடியாத இரகசியம் சித்ராவிடம் என்ன இருக்க முடியும்? தாங்கள் என்னை அனாதைப் பஞ்ச நிவாரண விடுதியில் விட்டுவிட்டுப் போனீர்கள் அல்லவா? உடனே போய்ச் சீதாவிடம் பேசிப் பார்த்தேன். வழக்கம் போலவே அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை. குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் நின்ற சௌதாரிணி அம்மாளிடம் நான் சென்று பேசினேன். பேச்சின் மத்தியில் சீதாவின் காது கேட்கும்படியாகச் சூரியாவைப் பற்றிய செய்தியைச்சொன்னேன். சூரியா என்ற வார்த்தை காதில் விழுந்ததும் சீதா திடுக்கிட்டதைப் பார்த்துக்கொண்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா என்னைத் தேடிக் கொண்டு வந்தாள். தலைவி அம்மாளிடம் என்ன சொன்னேன் என்று கேட்டாள். அவளிடமும் சூரியாவைப் பற்றிய செய்தியைத் திருப்பிச் சொன்னேன். அவளுடைய முகபாவத்தை கவனித்துக் கொண்டே சொன்னேன். கடைசியாக, 'இதைப்பற்றி உனக்கென்ன இவ்வளவு ஆவல்? நீ யார்?' என்று கேட்டேன். அப்போதும் சொல்லாமல் சும்மா இருந்தாள். 'என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீதானே சீதா?' என்று நான் சட்டென்று கேட்டதும் அவளுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பிறகு எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு விட்டாள். அதன் பேரில்தான் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டேன். முதலில் வருவதற்கு மறுத்தாள், அனாதை விடுதியில் குழந்தைகளுக்குப் பணிவிடை செய்வது தனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். நாங்கள் எல்லாரும் வாரத்துக்கு இரண்டு நாள் முறை போட்டுக்கொண்டு சேவை செய்வது போல் அவளும் செய்யலாம் என்று சொல்லி வற்புறுத்தி நம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தேன் எப்படி என்னுடைய யுக்தி?"

"கேட்பானேன்? நியாயமாக இந்திய சர்க்காரின் சி.ஐ.டி. இலாகாவில் நீ உத்தியோகம் பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற சாமர்த்தியசாலிகள் தற்போது அந்த இலாகாவில் இல்லாதபடியால் யு.ஜி.க்களைப் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்!" "யு.ஜி.க்கள் என்றால் என்ன?" "யு.ஜி. என்றால் தெரியாதா? 'அண்டர் கிரௌண்ட்' என்று அர்த்தம். அதாவது பூமிக்கு அடியில் இருப்பவர்கள். போலீஸாரிடம் அகப்படாமல் மறைந்திருந்து புரட்சி வேலை செய்பவர்களுக்கு அந்தப் பட்டம் இப்போது வழங்கி வருகிறது. இந்தச் சாலைக்கு அடுத்த சாலையின் முனையில் சில போலீஸாரும் சி.ஐ.டி.காரர்களும் நின்று கொண்டிருப்பதை நான் வரும்போது பார்த்தேன். அவர்கள் யாரோ ஒரு யு.ஜி.யைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்." "அப்படியா? ஒருவேளை.." என்று ஆரம்பித்த சித்ரா சட்டென்று நிறுத்தினாள். "ஒருவேளை என்ன?" "ஒன்றுமில்லை; நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசுகிறீர்களா? அவள் இங்கே வருவதற்கே ரொம்பவும் தயங்கினாள். இந்த வீட்டு ஆண் பிள்ளை என்ன சொல்லுவாரோ என்னமோ என்று முணுமுணுத்தாள். "அதெல்லாம் இந்த வீட்டில் ஆண்பிள்ளை ஒருவரும் இல்லை. ஒரு ஹஸ்பெண்டு தான் இருக்கிறார்!" என்று சமாதானம் சொல்லி அழைத்துக்கொண்டு வந்தேன். நீங்கள் அதைக் கொஞ்சம் உறுதிப்படுத்தினால் நல்லது மேலே போகலாம் சற்று வருகிறீர்களா?"

"வேண்டாம், வேண்டாம்! அந்த அம்மாள் தான் என்னைக் கண்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு மேலே போய்விட்டாளே! அவளை எதற்காக இப்போது தொந்தரவு செய்ய வேண்டும்?" என்றான் அமரநாத். "அதெல்லாம் ஒன்றுமில்லை; நான் வேண்டுமானால் மேலே போய்க் கேட்டுக்கொண்டு வருகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே சித்ரா மச்சுப் படிகளில் குதித்தேறிச் சென்றாள். அங்கே சீதாவிடம் போய்ச் சித்ரா தன் புருஷனை அழைத்து வரட்டுமா என்று கேட்டதும், "வேண்டாம், சித்ரா! இப்போது வேண்டாம்! நாளைக்கு ஆகட்டும்!" என்றாள் சீதா. சித்ரா ஏமாற்றத்துடன், "ஏன் இப்படிச் சொல்கிறாய்" என்று கேட்டாள். "இன்றைக்கு மனது சரியாக இல்லை. லலிதாவின் கடிதத்தைப் படிப்பதற்காகக் கொடுத்தாய் அல்லவா? அதைப் படித்தபோது பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன. அதனால் மனது நிம்மதியை இழந்திருக்கிறது. உன்னுடைய கணவரிடம் நாளைக்குப் பேசுகிறேன்!" என்றாள் சீதா. இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே கீழ்த் தட்டில் தடதடவென்று மனிதர்கள் பிரவேசிக்கும் சத்தம் கேட்டது. கால் பூட்ஸுகளின் சத்தம் அதிகமாயிருந்தது. இப்படித் தடபுடலாய் வருகிறவர்கள் யாராயிருக்கும் என்ற எண்ணத்துடன் சித்ரா மச்சுப் படிகளில் இறங்கி வந்தாள். பாதிப் படிகள் இறங்கியதும் கீழே போலீஸ்காரர்களும் சி.ஐ.டி.காரர்களுமாய் வந்து நிற்பதைப் பார்த்தாள். சித்ராவின் தலை கிறுகிறுவென்று சுழன்றது. மச்சுப்படிகளின் விளிம்புச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு சமாளித்தாள். வந்திருந்தவர் களில் தலைவர் என்று காணப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அமரநாத்திடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்; "இந்த யு.ஜி. பெண்பிள்ளை மிகக் கெட்டிக்காரி; ஒரே ஆசாமி. சீதா என்றும் தாரிணி என்றும் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு புது டில்லிப் போலீஸை ஏமாற்றி வந்திருக்கிறாள். இப்போதுதான் பாருங்களேன் அனாதை விடுதிக்கு நாங்கள் வரப்போகிறோம், என்று தெரிந்து கொண்டு அரைமணிக்கு முன்னால் உங்கள் மனைவியை ஏமாற்றி இவ்விடத்துக்கு அழைத்து வரச் செய்திருக்கிறாள்! நீங்கள் வரவேண்டும் என்று தான் இத்தனை நேரமும் தெரு முனையில் காத்துக்கொண்டிருந்தோம்."

இதற்கு அமரநாதன், "இன்ஸ்பெக்டர்! நீங்கள் ஏதோ ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்த ஸ்திரீ யு.ஜி. அல்ல; புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவளும் அல்ல!" என்றான். "உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்டர் அமரநாத்! எங்களிடம் வேண்டிய அத்தாட்சிகள் இருக்கின்றன. போட்டோ ப் படம் கூட இருக்கிறது!" என்றார் இன்ஸ்பெக்டர். பின்னர் காரியங்கள் வெகு துரிதமாக நடந்தன. அமரநாத் மேலே ஏறி வந்து மச்சுப் படியில் பாதி வழியில் நின்ற சித்ராவிடம் விஷயத்தைச் சொன்னான். அவள் ரொம்ப அங்கலாய்த்தாள் "இந்த அக்ரமத்தை நீங்கள் தடுக்க முடியாதா, உங்களுடைய செல்வாக்கு எங்கே போயிற்று? இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உங்களுக்கும் சினேகமாயிற்றே!" என்றாள். "போலீஸ்காரர்கள் விஷயம் உனக்குத் தெரியாது. அவர்களுக்கு 'டியூடி' என்று வந்து விட்டால் சிநேகிதர்களுமில்லை; பந்துக்களும் இல்லை ஈவிரக்கம் கிடையாது. 'லாமிஸராப்ளே' கதையில் வருகிற போலீஸ்காரனை நினைவிருக்கிறதல்லவா? அந்த மாதிரிதான் அநேகமாக எல்லாப் போலீஸ்காரர்களும்! நம்மைச் சேர்த்துப் பிடிக்காமல் விடுகிறார்களே, அதுவே பெரிது. இப்போது உன் சிநேகிதியை அனுப்பி வைக்க வேண்டியதுதான். பின்னால் கூடுமான முயற்சியெல்லாம் செய்து பார்ப்போம். 'ஹேபியஸ் காப்பஸ்' வழக்கு வேண்டுமானாலும் நடத்துவோம்", என்றான் அமரநாத். சித்ரா கண்ணுங் கண்ணீருமாய் மேலே ஓடிப் போய்ச் சீதாவிடம் விஷயத்தைச் சொன்னாள். முதலில் விஷயம் அவ்வளவு தெளிவாக விளங்க வில்லை சீதாவுக்கு. நன்றாகப் புரியும்படி தெரிந்து கொண்டதும் சீதாவின் உள்ளத்திலிருந்து ஒரு பெரியபாரம் நீங்கியது போலிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்கிற சங்கடமான பிரச்னைகள் எல்லாம் இனிமேல் இல்லை! கடவுளே பார்த்துத் தான் தனக்கு இத்தகைய சகாயத்தை அனுப்பியிருக்கிறார்? சிறைச்சாலைக்குள் போய் நிம்மதியாயிருக்கலாம். படிப்பும் அந்தஸ்தும் வாய்ந்த எத்தனையோ பெண்மணிகள் இப்போது சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் கைதிகளாயிருக்கிறார்கள் நாம் இருப்பதற்கு என்ன வந்தது?

குழந்தை வசந்தியை இப்போதைக்குப் பார்க்க முடியாது; அதுவும் ஒரு நல்லதற்குத்தான் . குழந்தையைப் பார்த்து என்னத்தைச் சொல்வது! அப்பாவைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் கூறுவது? பேத்தியைப் பாட்டி நன்றாய்ப் பார்த்துக் கொள்வாள். கண்ணும் கருத்துமாக வளர்ப்பாள் அதுவே போதும். எப்படியாவது குழந்தை சௌக்கியமாய் இருந்தால் சரி, நல்ல காலம் பிறந்து கடவுள் கூட்டி வைக்கும்போது பார்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல் சீதா கீழே இறங்கி வந்து போலீஸாரிடம் தன்னை ஒப்புக் கொடுத்தாள். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அமரநாத், சீதா உயர் குடும்பப் பெண் என்றும், அவளை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். போலீஸ் இன்ஸ்பெக்டர் அதற்கிணங்கி வாக்குக் கொடுத்தார். சீதா வீட்டைவிட்டுப் புறப்படும் தறுவாயில் சித்ரா கண்ணும் கண்ணீருமாக அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு, "சீதா! கவலைப்படாதே! நான் இவரைக் கொண்டு 'ஹேபியஸ் கார்பஸ்' வழக்குப் போடச் சொல்லி உன்னை விடுதலை செய்கிறேன் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவாய்!" என்றாள். "அப்படியெல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம், சித்ரா! கடவுளே பார்த்து எனக்கு இந்தச் சகாயத்தைச் செய்திருக்கிறார். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாமலிரு!" என்றாள் சீதா.


கல்கியின் அலை ஒசை / மூன்றாம் பாகம் - 'எரிமலை' – முற்றிற்று
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
கல்கியின் அலை ஒசை

பாகம் 4- 'பிரளயம்'

முதல் அத்தியாயம் :

தாயின் மனக்குறை

இராஜம்பேட்டை கிராமத்தை நாம் பார்த்து ஏறக்குறைய ஒரு வியாழ வட்டம் ஆகிறது. கணக்காகச் சொல்லப் போனால் பதினோரு வருஷமும் பத்து மாதமும் ஆகின்றன. பழைய தபால் சாவடிக் கட்டிடமும் ஏறக்குறைய முன்னால் பார்த்த மாதிரியே காணப்படுகிறது. ஆனால் அக்கட்டிடத்தின் வெளிச்சுவரிலும் தூண்களிலும் சில சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விளம்பரம் ஒட்டப்படாத இடங்களில் "ஜே ஹிந்த்" என்றும், "நேதாஜி வாழ்க!" என்றும் எழுதப்பட்டிருந்தன. தபால் சாவடிக்கெதிரே சாலையில் கப்புங் கிளையுமாகப் படர்ந்திருந்த பெரிய ஆலமரத்தைக் காணவில்லை. இதனால் அந்தச் சாலையின் அழகு குன்றி வெறிச்சென்றிருந்தது. மிட்டாய்க் கடை இருந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை இருந்தது. கடைக்காரர் மனது வைத்து எப்போது அரிசிப் படி போடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நாலைந்து ஸ்திரீகள் கையில் கூடையுடன் நின்றார்கள். தபால் சாவடிக்குள்ளே ஜன நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. போஸ்ட் மாஸ்டர், போஸ்ட்மேன், ரன்னர் - எல்லோரும் நமக்குப் புதியவர்கள். வரப்போகும் தபால் ஸ்டிரைக்கைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந் தார்கள். இந்தத் தெரியாத மனிதர்களை விட்டு விட்டு நமக்குத் தெரிந்த மனிதர்கள் இன்னும் வசிக்கும் இராஜம்பேட்டை அக்கிரகாரத் துக்குப் போவோம்.

அக்கிரகாரத்தின் தோற்றத்தில் சில மாறுதல்கள் காணப்பட்டன. முன்னே நாம் பார்த்ததற்கு இப்போது இன்னும் சில வீடுகள் பாழடைந்து போயிருந்தன. கிட்டாவய்யரின் வீட்டு வாசலில் பந்தல் இல்லை. வீட்டின் முகப்பு களைகுன்றிப் போயிருந்தது. ஆனால் சீமாச்சுவய்யரின் வீடு இப்போது முன்னைவிட ஜோராக இருந்தது. சீமாச்சுவய்யர் சரியான சமயத்தில் தேவபட்டணத்துக்குப் போய் ஜவுளிக் கடை வைத்தார். திருமகளின் கடாட்சம் அவருக்கு அமோகமாகப் பெருகியது. பழைய வீட்டைத் திருத்தி நன்றாகக் கட்டியிருந்தார். கிட்டா வய்யருக்குச் சமீப காலத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. குடிபடைகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் குடியிருக்கும் மனைக் கட்டு விஷயமாக நெடுங்காலமாய்ச் சச்சரவு நடந்து கொண்டிருந்தது. சென்ற வருஷத்தில் கோர்ட்டில் மிராசுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. இந்த வழக்கில் முன்னால்நின்று நடத்தும் பொறுப்புக் கிட்டாவய்யரின் தலையில் சுமந்திருந்தது. இதனால் பணவிரயம் அதிகமானதோடு குடிபடைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத விபத்து ஒன்று கிட்டாவய்யருக்குச் சென்ற வருஷம் நேரிட்டது. சுற்றுப் புறங்களில் திருட்டுகளும், கொள்ளைகளும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன; திருட்டுக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் பட்டாமணியம் கிட்டாவய்யரைச் சமபடுத்தி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். உடனே கிட்டாவய்யர் பட்டாமணியம் உத்யோகத்திலிருந்து சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளைப் பற்றிய போலீஸ் விசாரணையும் உத்தியோக விசாரணையும் நடந்தன. கடைசியாக விரோதத்தின் பேரில் பொய்யாக எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று ஏற்பட்டது. ஆயினும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கிட்டாவய்யருடைய மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கே அவருக்கு வெட்கமாயிருந்தது! ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது! பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், "பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார்!" என்ற பேச்சும் பராபரியாகக் காதில் விழாமற் போகவில்லை. பத்துநாளைக்கு முன்பு கிட்டாவய்யர் தேவபட்டணம் சென்று, அதற்குச் சில நாளைக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்திருந்த தம் மாப்பிள்ளை பட்டாபிராமனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இராஜம்பேட்டையிலிருந்து நாலு மைல் தூரத்தில் இராத்திரி பத்து மணிக்குக் கட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்திருந்த திருடர்கள் ஏழெட்டுப்பேர் வந்து சூழ்ந்து கொண்டு வண்டிக்காரனையும் கிட்டாவய்யரையும் நன்றாக அடித்து விட்டு அவரிடமிருந்த மணிபர்ஸை அபகரித்துக் கொண்டு போய் விட்டார்கள். கிட்டாவய்யர் உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவே அவருக்குக் கடுமையான சுரமும் வந்துவிட்டது.

இந்தச் செய்தியை அறிந்ததும் தேவபட்டிணத்திலிருந்து பட்டாபிராமனும் லலிதாவும் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு நாள் இருந்துவிட்டுப் பட்டாபிராமன் போய் விட்டான். கிட்டாவய்யரும் சரஸ்வதி அம்மாளும் கேட்டுக் கொண்டதின் பேரில் லலிதாவையும் குழந்தைகளையும் இன்னும் சில நாள் இருந்துவிட்டு வரும்படி சொல்லிப் போனான். ரேழிப் பக்கத்துக் காமரா அறையில் போட்டிருந்த கட்டிலில் கிட்டாவய்யர் படுத்திருந்தார் - அவருக்கு உடம்பு இப்போது சௌகரியமாகி விட்டது. ஆனாலும் முன்போல் எழுந்து நடமாடும் படியான தெம்பு இன்னும் ஏற்படவில்லை, இப்போது அவர் அரைத் தூக்கமாயிருந்தார். வீட்டுக்குள்ளே கூடத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் முதன் முதலில் பார்த்த காட்சியை இன்றைக்கும் பார்க்கிறோம். லலிதாவுக்கு அவளுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் லலிதா முன்னைப் போல் இப்போது சின்ன வயதுக் கன்னிப் பெண் அல்ல. அவள் - இரண்டு குழந்தைகளின் தாயார். அந்தக் குழந்தைகள் இருவரும் - பட்டுவும் பாலுவும் - சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பொம்மைகள் நிறையப் போட்டிருந்த ஒரு தமிழ் சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லலிதாவின் முகமண்டலத்தில் அவ்வளவாகச் சந்தோஷம் குடிகொண்டிருக்கவில்லை. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. மழை பொழியத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் மாரிக்காலத்து இருண்ட மேகங்களை அவளுடைய கண்கள் அச்சமயம் ஒத்திருந்தன. ஏதாவது ஒரு சின்னக் காரணம் ஏற்பட வேண்டியதுதான்; அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மழை சொரியத் தொடங்கிவிடும். அத்தகைய காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் இருக்கவே இருந்தாள். லலிதாவின் தலையை வாரிக்கொண்டே தன்னுடைய மனக்குறைகளையும் அந்த அம்மாள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.

"இறுக்கம் தாங்கவில்லை; ஆனால் பாழும் மழை மட்டும் பெய்ய மாட்டேன் என்கிறது! வயல்களில் பயிரெல்லாம் காய்கிறதாம்! தெய்வம் எப்போது கண் திறந்து பார்க்குமோ தெரியவில்லை. இந்தக் கலியுகத்தில் தெய்வத்துக்கே சக்தி இல்லாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகத்தில் நடக்குமா? உங்கள் அப்பா பெயரைச் சொன்னால் நாடு நகரமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த உலகம் உண்டு. இப்போது அவருடைய வண்டியைத் திருடர்கள் வழி மறித்து அடித்துப் பணப் பையைப் பிடுங்கிக்கொள்ளும் காலம் ஏற்பட்டுவிட்டது. ஒரு அதிகாரம், ஒரு அத்து - இப்போதெல்லாம் கிடையாது. பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது." லலிதா குறுக்கிட்டு, "அம்மா, ஊரெல்லாம் அப்பா பெயரைக் கேட்டுப் பயந்து கொண்டிருந்த காலத்திலும் நீ மட்டும் பயப்பட வில்லையே? எதிர்த்துப் பேசிக்கொண்டுதானே இருந்தாய்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி நீ சொல்வது! என் மாதிரி புருஷனுக்குப் பயந்து எல்லாரும் நடந்தால் போதாதா? ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது! நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? உன்னுடைய கலியாணத்தையே எடுத்துக்கொள்! என் இஷ்டப்படி விட்டிருந்தால் இந்த இடத்தில் உன்னைக் கொடுத்திருப்பேனா? கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது!...."

"ஏதாவது உளறாதே, அம்மா குழந்தைகளின் காதில் விழப்போகிறது." "விழுந்தால் என்ன? நன்றாய் விழட்டும். உன் பெண்ணும் பிள்ளையும் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் போய்ச் சொல்லட்டும். எனக்கு ஒருவரிடத்திலும் பயம் கிடையாது. காங்கிரஸாம்! காந்தியாம்! இரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து விட்டு வந்தாராம்! எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும்! திருடினாரா? கொள்ளையடித்தாரா? மாப்பிள்ளைக்குப் போட்டியாக இந்தப் பிராமணரும் ஜெயிலுக்குப் போய்விடுவாரோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஏதோ நான் செய்த பூஜா பலத்தினால் அந்த ஒரு அவமானம் இல்லாமற் போயிற்று. உன் அகத்துக்காரர் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டுத்தான் வந்தாரே? என்ன பலனைக் கண்டார்? சில பேர் காங்கிரஸிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய் வந்து விட்டு மெம்பர், கிம்பர் என்று ஆகிச் சம்பாதித்து வருகிறார்களே? அப்படியாவது ஏதாவது உண்டா? அதுவும் கிடையாது...""அம்மா! இவர் மற்றவர்களைப்போல் சட்டசபை மெம்பர் ஆவதற்காகவோ, வேறு உத்தியோகப் பதவிக்காகவோ ஜெயிலுக்குப் போகவில்லை; சுயராஜ்யத்துக்காகப் போனார்!...." "சரி அப்படியாவது சுயராஜ்யம் வந்ததா? சொல்லேன், பார்ப்போம்! யுத்தத்திலே ஹிட்லர் ஜெயித்துவிடப் போகிறான் - இங்கிலீஷ்காரன் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறான் என்று எல்லோருமாகச் சேர்ந்து சொன்னீர்கள். உன் அண்ணா சூரியா இருக்கிறானே, அந்தச் சமர்த்துப் பிள்ளை, உன் அப்பாவைப் பட்டாமணியம் வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னான் கடைசியில், என்ன ஆயிற்று?

சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா? வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய்! இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா? பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா? அப்படிச் செய்தால்தான் என்ன? உனக்கு வைத்துக் கொண்டு வாழத் தெரியவில்லை. அவர்தான் சொன்னார் என்று ஒரு தங்க ஒட்டியாணத்தை விற்றுவிட்டேன் என்று சொல்கிறாயே? உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது? கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டாலும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ! இது என்னடி வெட்கக்கேடு...?"

"அம்மா! இப்படியெல்லாம் நீ அவரைப் பற்றிக் குறை சொல்வதாயிருந்தால், இரண்டு நாளைக்குப் பிறகு போகிறவன் இன்றைக்கே புறப்பட்டு விடுகிறேன்..." என்றாள் லலிதா. "போ!போ! இந்த நிமிஷமே புறப்பட்டுவிடு! என் தலையெழுத்து அப்படி. நான் யாருக்கு என்னமாய் உழைத்தாலும் என் பேரில் யாருக்கும் ஈவிரக்கம் கிடையாது. தான்பெற்ற பிள்ளையும் பெண்ணும் தனக்கே சத்துரு என்றால், அது லையெழுத்துத் தானே? பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா? பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா?" "என்னை நீ எவ்வளவு வேணுமானாலும் சொல், அம்மா! பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய்? இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம்?" என்று கேட்டாள் லலிதா. "நான் ஒன்றும் இந்த மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துப் பிடித்துக் கொண்டு வரவில்லை. உன் அண்ணா சூரியா சொன்னான் என்று உன் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனை நான் உனக்காக வரன் பார்த்திருந்தேன். கொடுத்து வைக்கவில்லை, பம்பாயிலிருந்து அந்த மகராஜி - உன் அத்தை, - சரியான சமயம் பார்த்து அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிற சமயத்தில் வீட்டில் வேறு பெண் இருக்ககூடாது என்று முட்டிக் கொண்டேன்.

என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் என்ன இங்கிலீஷ் படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? பட்டிக்காட்டு ஜடம் தானே; என் பேச்சை யார் கேட்பார்கள்? ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந் தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான்! உன்னுடைய அதிர்ஷ்டம் கட்டையாகப் போய் விட்டது...." "இல்லவே இல்லை, என் அதிர்ஷ்டம் நன்றாயிருந்தது. அந்த ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனைச் சீதா கலியாணம் செய்து கொண் டாளே அவளுடைய கதி என்ன ஆயிற்று? அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா? போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள். சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும்?" என்றாள் லலிதா. "அப்படி ஒன்றும் கிடையாது, அந்தப் பெண் சீதாவுக்குத் துக்கிரி ஜாதகம். அதனாலே அவள் போன இடம் அப்படியாயிற்று. உன்னை அந்த வரனுக்குக் கொடுத்திருந்தால் இப்போது ராஜாத்தி மாதிரி இருப்பாய்!"

"என்னுடைய ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகமாயிருந்தால், நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் சுபிட்சமாயிருக்க வேண்டுமே? அவ்விதம் ஏன் இல்லை?" என்று கேட்டாள் லலிதா. "உன் அரட்டைக் கல்லிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நீ போன இடத்தில் இப்போது என்ன குறைந்து போய்விட்டது? வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும்? ஜாதகம் என்ன செய்யும்? உன் தங்க ஒட்டியாணத்தை விற்றுத்தான் சாப்பிடவேண்டும் என்று ஆகிவிடவில்லை. மாப்பிள்ளைக்கு ஏதோ கிறுக்குப் பிடித்திருக்கிறது. நீயும் சேர்ந்து கூத்தடிக்கிறாய்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி, அம்மா, சரி! தலை பின்னியாகி விட்டதோ இல்லையோ? போதும், விடு!" என்றாள் லலிதா. இவ்வளவு நேரமும் சரஸ்வதி அம்மாள் தன்பெண்ணின் கூந்தலைவாரி ஜடை போட்டுக் கொண்டி ருந்தாள். கூந்தலை விட்டுவிட்டால் அப்புறம் லலிதாவை உட்கார வைத்துத் தன் மனக் குறைகளைக் கேட்கச் செய்ய முடியாது என்று சரஸ்வதி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையினாலேயே சிறிதும் அவசரப்படாமல் சாவகாசமாகக் கூந்தலை வாரிப் பின்னி விட்டாள். அவள் தலை முடிந்த சமயத்தில் வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டது. லலிதா உடனே அம்மாவின் பிடியிலிருந்து தலைப் பின்னலைப் பலவந்த மாகத் திமிறி விடுவித்துக்கொண்டு எழுந்தாள். "இவ்வளவு வயதாகியும் உன் சுபாவம் மட்டும் மாறவில்லை. அந்த நாளில் திமிறிக் கொண்டு ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறாய். நல்லவேளையாகத் தபால் ஆபீஸுக்கே ஓடிப் போகாமல் வீட்டு வாசலோடு நிற்கிறாயே, அதுவரையில் விசேஷந் தான்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு லலிதா வாசற்பக்கம் சென்றாள்.
 

Latest posts

New Threads

Top Bottom