Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்று டபுள் டமாக்கா ப்ரெண்ட்ஸ்😀

உங்களுக்கான அத்தியாயம் 25 இதோ...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 25


மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் கிளம்பி உத்ராவின் வீட்டிற்கு‌ வந்தான் விக்கி.

அழைப்புமணியை தட்டியவனை கவிலயா தான் எதிர்கொண்டாள்.

அவன் கையில் ஒரு ஜோடி மாலைகள் இருப்பதைக் கண்டவள் அவன் தன்னை தாண்டிச் செல்லும்போதே உத்ராவிடம் கத்தினாள்.

“பாருக்கா காதல் தோல்வில நீ தூக்கு மாட்டி செத்துருப்பன்னு கையில மாலையோட வந்திருக்காரு விக்கி.”

சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தவளோ அவனை எதைக்கொண்டு எறியலாமெனத் தேடிவிட்டு ரிமோட்டை ஓங்கினாள்.

“ஹே! ஹே! இரு. லயா சொல்றத நம்பாத. அவ நம்ம ரெண்டு பேருக்கும் சண்ட மூட்டி விடுறா.”

“ஆமா நீங்க ரெண்டுபேரும் டபிள்யூ டபிள்யூ சாம்பியன்ஸ். உங்களுக்குள்ள சண்ட மூட்டிவிட்டா நான் நல்லா உக்காந்து வேடிக்கப் பாக்கலாம்.”

“அம்மா தாயே! ஒரே நேரத்துல ரெண்டு மூடு ஸ்விங்குகள என்னால சமாளிக்க முடியாது. நீ கொஞ்சம் மியூட் மோட்ல இரு ப்ளீஸ்.”

“மால எதுக்குனு மொதல்ல சொல்லுங்க?”

“வேற எதுக்கு? நானும் உங்கக்காவும் கல்யாணம் பண்ணிக்கத்தான்.”

“ஓ! அப்போ‌ மால எங்கக்காவுக்கு‌ இல்ல. உங்களுக்குனு சொல்லுங்க.”

அதை மெய்யாக்க உத்ரா சோபாவிலிருந்து எழுந்தாள்.

“அப்போ இதுக்கு தான் நீ நேத்து ரிஜிஸ்டர் ஆஃபிஸுக்கு என்ன ரெடியா இருனு சொன்னியா? நான் கூட என் பேர்ல இருக்க ஃப்ளாட்ட உன் பேருக்கு எழுதி வாங்கவோன்னு நெனச்சேன். அப்படி நடந்திருந்தாவாவது‌‌‌ என் அப்பா போட்டோவ விட்டுட்டு உன்‌ அப்பா போட்டோவ வச்சி‌‌ கும்பிடுறது காசுக்காகத் தான்னு என் அம்மா சொல்றது பொய்யாகிருக்கும்.”

“இப்ப என் கூட வரப்போறியா இல்லயா உதி?”

“என் பொணம் தான்டா வரும் உன்கூட.”

“அத தூக்கலாம் எனக்கு தெம்பில்ல. உயிரோட இருக்கும்போதே அந்த கனம் கனக்குற கேஸ் நீ. தயவுசெஞ்சு நீயே நடந்து வந்திரு.”

திடீரென ஒரு பாத்திரம் மிஸ்ஸாவதை உணர்ந்து, “அம்மா!” என்று படுக்கையறைக்கு ஓடினாள் கவிலயா.

பால்கனியில் நின்று அலைபேசியில் வளவளத்துக் கொண்டிருந்தவரோ அவளின் செய்தியில் வரவேற்பறை வந்தார். சோஃபாவை‌ கட்டிக்கொண்டு வரமாட்டேன் என்ற உத்ராவை சோஃபாவோடு இழுத்துக் கொண்டிருந்தான் விக்கி.

பானுமதி ஓடிவந்து தடுத்தவர், “உதி மாப்பிளக் கூட இப்ப நீ போய்த்தான் ஆகனும். இல்லனா நம்ம அம்முவ நாம எழக்க வேண்டியிருக்கும்.” என்றார் கண்டிப்புடன்.

“அதெப்படிமா? அக்கா நேத்து நைட்டு ஃபுல்லா இயர்போன்ல லவ் ஃபெயிலியர் சாங்க்ஸா கேட்டு ஃபீல் பண்ணிட்டு இன்னைக்கு எப்படி இன்னொருத்தர கல்யாணம் பண்ண‌ சம்மதிப்பா? பயங்கர டிப்ரசன் போல. இப்பக்கூட டீவில வீராச்சாமி படம் பாத்து ஃபீல் பண்ணிட்டிருக்கா. தயவு செஞ்சு அக்காவ ஃபோர்ஸ் பண்ணாதீங்கம்மா. என்னால அதப் பொறுத்துக்க முடியாது.”

“அடிப்பாவி! எனக்கு எதிராவாப் பேசுற? நீதான் எனக்காக ஹாஸ்பிடல்ல குலுங்கி குலுங்கி அழுதவளாடி?”

அன்றைக்கும் இன்றைக்கும் அதற்கு காரணம் ஒன்று தான் என்பதை பாவம் பானுமதி அறியவில்லை.

பாதி உடை களைந்திருந்த மாலையை சோஃபாவின் கைப்பிடியில் போட்டுவிட்டு தானும் உட்கார்ந்தபடியே விக்கி கூறினான். “உதி இன்னும் ஒரு மணி நேரத்துல நாம அங்க இருக்கனும்.”

“ப்ளீஸ் உதி! அம்மா எனக்காக கெளம்பு. நீ இப்ப போகலைனா நான் பொழச்சதுக்கே அர்த்தமில்லாமப் போயிரும்.”

“அதெப்படிம்மா அக்கா கெளம்புவா? அவளால அவ்வளவு சீக்கிரம் உதய்கிருஷ்ணாவ மறந்துர முடியுமா? அவர் மேல அவ வச்சிருக்க காதல் எவ்ளோ தெய்வீக…”

கவிலயா சுற்றிய பஞ்சுமிட்டாய் பாதியில் நின்றதற்கு காரணம் உத்ரா ஏற்றிக்கட்டிய தனது கொண்டையை அவிழ்த்துக்கொண்டே தனதறைக்குச் சென்றதே.

“நீங்க இந்த வீட்டு மாப்பிளையாகனும்னு தான் நானும் நெனச்சேன். ஆனா இப்படியில்ல.” என்று கவிலயா சோர்ந்து அவனருகில் அமர்ந்தாள்.

உள்ளே சென்ற உத்ரா ஏனோதானோவென்று இருபது நிமிடங்களில் தயாராகி வந்தாள். சற்றுமுன் தரித்திருந்த இரவுஉடையின் இடத்தை பச்சையில் பார்டர் கொண்ட நாவல்நிறப் பட்டு கைப்பற்றியிருந்தது.

மகள்கள் மூவருக்கும் அவர்கள் பருவமெய்திய நாள் முதலே சிறிது சிறிதாக நகைகளும், புடவைகளும் வாங்கிச் சேர்த்திருந்த பானுமதிக்கு அவைகளை தன் மகள்கள் அணியும்போது தான் அவற்றின் பூரண அழகு புலப்பட்டது.

கழுத்தில் எதுவும் அணியாமல் ஏன் தலையைக்கூட கடமைக்கு வாரிக்கொண்டு வந்தவளை, “என்னம்மாயிது ஒரு செயின்‌ கூட போடாம? லயா! உனக்கு ரெண்டுநாள் முன்னாடி ஒரு கவரிங் கடைலயிருந்து புரொமோஷனுக்காக ஒருப்பொண்ணு வெள்ளக்கல்‌ ஆரம் அனுப்பினாளே? அத எடுத்துட்டு வந்து அக்காக்கு போட்டுவிடு” என அவள்‌ தலையலங்காரத்தை சரி செய்ய,

“அதெல்லாம் போட்டுவிட முடியாதும்மா.” என்று எரிந்து விழுந்தாள் சின்னவள்.

“ஏன்?”

“நானே இன்னும் கன்டென்ட் கெடைக்காம அத வச்சு வீடியோ எதுவும்‌ எடுக்காம இருக்கேனாம். அனுப்பினவங்க கேட்டா என்ன சொல்றது?”

“அதெல்லாம் காசு குடுத்து இன்னொன்னு அனுப்பிவிட சொல்லிக்கலாம். இப்ப நீ நான் சொன்னத செய்”

அன்னையின் கெடுபிடியில் மக்காக்குப்பை பெட்டியிலிருந்த மாலையை தன் அக்காவின் முதுகுப்புறம் நின்று அணிவித்து விட்டாள்.

அப்போது அவளுக்கு மட்டும் கேட்குமளவில், “எப்பப் பாத்தாலும் எனக்கு சேர வேண்டியத ஆட்டே போடுறதே உனக்கு பொழப்பா போச்சுக்கா” என்று கிசுகிசுத்தாள்.

அந்நொடி தான் கடைசியாய் பார்த்த அனன்யாவின் கண்ணீர் முகம் மின்னலாய் தோன்றி மறைந்தது உத்ராவுக்கு. முயன்று எண்ணங்களை மாற்றினாள்.

அவள் முகத்தை வழித்து நெட்டிமுறித்த பானுமதி மணமக்களை கைப்பிடித்து பூஜையறை அழைத்துச் சென்றார். அங்கு வாசன் புகைப்படத்திற்கு முன்பு நின்று விக்கியும் உத்ராவும் மாலை மாற்றிக்கொள்ள, முகம்கொள்ளா புன்னகை பானுமதிக்கு.

அவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த தாலியைத் தேட, உத்ராவே தனது உள்ளங்கையை விரித்து தாலிக்கயிற்றை நீட்டினாள். ஆச்சரியத்தோடு அதை எடுத்து கழுத்தில் கட்டப்போனவனின் வேகத்தைக் குறைத்தது அவள் கெஞ்சல்.

“தயவு செஞ்சு இனிமே குடிக்காதடா. நான் பாவம்டா”

அவன் முடிச்சுக்களை போட்டபடியே சொன்னான். “சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன். போதுமா?” என்று.

இமைகள் மூடித்திறந்து சரியென்றன.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
கவிலயாவின் இதய ஒலிப்பெருக்கியில் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

ஏற்கனவே பலமான கவனிப்பின் மூலம் சார்-பதிவாளரை தனக்கேற்றாற்போல் வளைத்து வைத்திருந்தவன் மணமக்களாக இருவரும்‌ அங்கு சென்று கையெழுத்துப் போட்டக் கையோடு, மீண்டும் அவளின் வீட்டிற்கே அவளை விடச் சென்றான்.

உத்ரா வழியில் காரை நிறுத்தியவள், “இப்ப நான் உன் பொண்டாட்டி தான? உங்கம்மாவுக்கு மருமக தான? உங்க‌ வீட்டுக் குத்துவிளக்கு தான?” என்று பீடிகைப்போட்டாள்.

விக்கிக்கோ சலிப்பானது. “எதுக்கு இப்ப சுத்தி வளைக்கிற?” என்றான்.

“என்ன உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ விக்கி. கல்யாணத்துக்கப்பறமும் நான் என் பொறந்த வீட்லயே இருந்தா பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க?”

விக்கி இந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லையாதலால் திணறினா‌ன்.

“அதுவந்து இப்போதைக்கு வேணாமே உதி”

“ஏன் விக்கி உனக்கு படக்கூடாத எடத்துல அடி எதுவும் பட்டிருக்கா?”

இதற்கு மேல் ஒரு ஆண்மகன் மறுப்பானா என்ன? அவளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

கழுத்தில் மாலையோடு வீட்டிற்குள் நுழைந்த மகனைப் பார்த்து வேணி கிண்டலடித்தார்.

“உலகின் தலை சிறந்த மகன்னு உனக்கு யாரும் பாராட்டு விழா எடுத்தாங்களா என்ன?”

“பாராட்டுவிழாக்கு இல்ல, கல்யாண விழாக்கு தான் இந்த மால. பாக்கியம்! எங்கயிருக்க? வெளிய என் பொண்டாட்டி வெயிட் பண்றா. ஆரத்தியெடுத்து உள்ளக் கூட்டிட்டு வா!” என்று உரத்த குரலில் உத்தரவிட்டான்.

உடனே வாசலுக்கு விரைந்தார் வேணி. காரில் சாய்ந்து நின்றிருந்தாள் உத்ரா.

ரத்தநாளங்கள் அனைத்தும் சூடேற, தன்னை நோக்கி வந்த மகனை சாடினார்.

“என்ன காரியம் பண்ணிருக்க நீ?”

“என்ன பண்ணிருக்கேன். கல்யாணம் தான பண்ணிருக்கேன்? நீங்க தான அப்பாவோட கடைசி‌ ஆசைய நிறைவேத்த‌ச் சொல்லி ரொம்ப ஆசையா கேட்டீங்க? அதான் உடனே நெறவேத்திட்டேன்.”

“வாசனுக்காவது கடைசி காலத்துல தான் புத்தி மங்கிப்போச்சு. ஆனா உனக்கு இப்பவேடா. நம்ம குடும்பத்துக்கு நல்ல கௌரவத்த தேடிக் குடுத்துருக்க.”

“பாக்கியம்! ஆரத்திக்கு ஏன் இவ்ளோ லேட்?”

“இவ கல்யாணம் எப்படிடா நின்னுச்சு? அவன எப்படி இவ கழட்டிவிட்டா?”

“பாக்கியம்!” அவன் கொடுத்தக் குரலில் ஆரத்தித் தட்டோடு ஓடோடி வந்தார் பாக்கியம்.

அவர் வேணியின் முறைப்பில் தயங்கி நிற்க, “எல்லாம் நல்ல நேரம் தான் சுத்து” என்று அதட்டினான்‌‌.

அவர் ஆரத்திச் சுற்றி சாலையில் கொட்டச் சென்றதும், உத்ராவின் கரம் பற்றி தன் அன்னையின் எதிரிலேயே வீட்டிற்குள் நுழைய ஆயத்தமானான். அவர்களை அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கட்டிப்போட்டது வேணியின் குதர்க்கமான கேள்வி.

“இவளுக்கு இப்ப எத்தனையாவது மாசம்டா?”

நின்ற இருவரும் அவரை அருவருப்பாய் பார்த்தனர்.

“இல்ல அந்த அனன்யா மாதிரியே இவளும் கர்ப்பமானதால‌ தான் நீ இவள கல்யாணம் பண்ற முடிவுக்கு வந்தியோன்னு கேட்டேன்.” என்று உத்ராவை ஆழம் பார்த்தார்.

அவர் சாதாரண நாட்களில் பேசுவதையே சகிக்க முடியாது. இன்றோ ஒரு அணுகுண்டே வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் தைரியமாக அவரை எதிர்கொண்டிருந்தாள் உத்ரா. ஆனால், வெடித்தது ஒரு குண்டல்ல. ஆயிரமாயிரம் குண்டுகள்.

அவள் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அவதானித்துக் கொண்டிருந்தவர் விக்கியின் கரத்தை தட்டிவிட்டு உடனே அவள் தன் வீட்டிற்கு நடையைக் கட்டுவாள் என்று எதிர்பார்த்திருக்க, மாறாய் விக்கியின் கரத்தை அழுத்தியபடி வீட்டிற்குள் தனது வலது காலை எடுத்து வைத்தாள் உத்ரா.

விக்கியும் தன்னை சுதாரித்துக்கொண்டு ஆயாசமாக‌ நடந்துவந்த பாக்கியத்திடம் தங்களுக்கு மதிய உணவு தயார் செய்யுமாறு பணித்துவிட்டு, மனைவியை நேரே தனதறைக்கு அழைத்துச் சென்றான்.

தனது மகளுக்காகவும் மருமகனுக்காகவும் விதவிதமாக சமைத்துக் கொண்டிருந்த பானுமதிக்கோ இருப்பு கொள்ளவில்லை. இருவரும் வர ஏன் இவ்வளவு தாமதம் என்று ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவரின் கண்கள் வாசலை நோக்கி அலைபாய்ந்த வண்ணமிருந்தன. கை கரண்டியை பிடித்திருந்தாலும் வாய் அவர்களைப் பற்றியே அசைபோட்டது.

“லயா, உதிக்கு போன் போட்டு அவங்க ரெண்டுபேரும் எங்க நிக்கிறாங்கன்னு கேளும்மா. அவங்க வந்ததும் உப்பு மொளகா வச்சு சுத்திப்போடனும். அவங்க ஜோடி பொருத்தம் பிரமாதம் இல்ல?” எனவும்,

“ஆமா ராஜா ராணில வர்ற ஆர்யா நஸ்ரியா ஜோடி மாதிரியே சூப்பரா இருந்தது.” என்றாள்.

தாய்க்கு அவள் கூறியதிலுள்ள விசமம் புரியவில்லை. மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.

விக்கியின் அறையிலோ உத்ரா தன் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் அவன் மேல் வீசிக்கொண்டிருந்தாள். ஒன்றிரண்டு மேலேப்பட்டது தவிர பெரிய சேதாரமில்லை அவனுக்கு.

“திடீருன்னு உனக்கு என்னாச்சு உதி? ஏன் இப்படி அக்ரசிவா பிகேவ் பண்ற?” என்று பலமாகக் கத்தினான்.

“ம்? ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி. தானா அது போய் விழுமாம் கழனிப்பானைல துள்ளி”

“இதுக்கு நீ‌ சொல்ல முடியாது போடான்னு‌ சொல்லிருக்கலாம்”

“போடா!”

அவன் பக்கத்து அறைக்கு செல்வதற்காக கதவை திறக்கப்போக, “நில்லு! அந்த அனன்யா கர்ப்பமாயிருந்த விசயத்த ஏன் என்கிட்டருந்து மறச்ச? இவ்வளவு நாள் உன் அப்பா மேல நான் வச்சிருந்த மரியாத மொத்தமும் ஒரு நொடில சரிஞ்சுப்போச்சிடா. அவரும் சாதாரண மனுஷன் தான்னு நிரூபிச்சிட்டாரு. உன் அம்மாவாவது எதயும் வெளிப்படையா காட்டிடுறாங்க. உங்கப்பா அத மனசுல வச்சிட்டே எங்க முதுகுல குத்திருக்காருடா. சாகப்போற மனுசனாச்சே, நிம்மதியா கண்ண மூடட்டுமேனு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டதுக்கு சரின்னேன். ஆனா அவரு எனக்கு இவ்ளோ பெரிய நம்பிக்க துரோகத்த பண்ணிருக்க வேணாம்.” என்று வருத்தப்பட்டாள்.

“முட்டாள்! எதுவுமே தெரியாமத்தான் அன்னைக்கு அவ வீட்டுக்குப் போயிட்டு வந்து எனக்கு எல்லா உண்மையும் தெரியும்னு சொன்னியா?”

“அப்பவாவது உன் வாயிலயிருந்து ஏதாவது புடுங்க முடியுதான்னு பாக்கத்தான்டா பொய் சொன்னேன். அவ உன்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணின வரைக்கும் தான் என்கிட்ட சொன்னா” எனவும், அவன் ஆத்திரப்பட்டான்.

தான் மறக்க நினைத்த கதைகளை தன் வாயாலேயே சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது எவ்வளவு பெரிய துயரம்!


கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் இருபத்தாறு இதோ...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 26


தன் தந்தையிடம் உற்சாகமாகத் தன் காதலைச் சொல்ல ஓடிவந்த விக்கியை அவரின் புற்றுநோய் செய்தி கொடூரமாகத் தாக்கியது.

அதிர்ச்சியில் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த வேணி அவனை கண்டதும் ஆற்றாமையில் கரைந்தார்.

“இவ்வளவு நாள் நம்ம கிட்டலாம் மறச்சிட்டாரு பாரு விக்கி. ஏன் வாசன் ஒடம்பு ரொம்ப எளைக்குது? ஏன் இருமல் வந்தா பாத்ரூமுக்கு ஓடுறீங்க? நான் கிட்ட வந்தா ஏன் தள்ளி தள்ளிப் போறீங்க? முடி கொட்றதுக்கெல்லாம் மொட்ட அடிப்பாங்களா? எவ்வளவு கேள்வி கேட்டுருப்பேன். எல்லாத்துக்கும் பொய் சொல்லியே சமாளிச்சிட்டாரேடா? அந்தாளு பாஷ்யமும் இதுக்கு ஒடந்த.‌‌ ஃபேமிலி டாக்டர்னு நம்புனது தப்பாப்போச்சு. நான் வேற ஹாஸ்பிடலுக்கு இவர கூட்டிட்டுப் போயிருக்கனும்.” என்றார்.

“ஹே! நான் சொல்லித்தான் அவன் மறச்சான். நீ போய் எதும் சொல்லிட்டு இருக்காத?” வாசன் குறுக்கிட்டார்.

“பாத்தியாடா இவர் பேசறத?”

“அவள விடு விக்கி. போன்ல ஏதோ குட்நியூஸ் சொல்றேனு சொன்னியே, என்ன அது?”

“அது வந்து.. இப்ப வேணாம் ப்பா. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க.”

“அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்ல. நீ சொல்லு.”

“நான் என் ஆஃபிஸ்ல ஒரு பொண்ண லவ் பண்றேன் ப்பா. பேரு அனன்யா. ஜீனியர் எம்ப்ளாயி.”

“ரியல்லி? எப்ப அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போற?”

காது வழியே புகைவிட்டுக் கொண்டிருந்த வேணி, “வாசன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கவர் மாதிரியா பேசுறீங்க? யாரோ ஒரு அன்னாடம்காட்சிய லவ் பண்றதா சொல்றான் உங்கப்புள்ள. உடனே ஆள் அனுப்பி அவளப் பத்தி விசாரிக்காம அவன் சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு இருக்கீங்க.”

“வேணி சில்லியா‌ பிகேவ் பண்ணாத. மூச்சுக்கு முன்னூறு தரம் நான் ஒரு மாடர்ன் மாம்னு சொல்லிக்கிட்டா மட்டும் பத்தாது. யோசிக்கிறதுலயும் மாடர்னிசம் இருக்கனும். உங்கப்பன் சோப்பு வியாபாரி ஒத்தக்கண்ணன் மாதிரியே பேசக்கூடாது. யப்பா! அந்தாள் கூட போராடி உன்ன கல்யாணம் பண்றதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே?”

பழைய கதையைக் கேட்டதும் சிரித்து விட்டான் மகன்.

“ஏன் சொல்ல மாட்டீங்க? ஒழுங்கா அவர் பேச்ச கேட்டிருந்தா கமிஷ்னர் கணபதி பொண்டாட்டியா கம்பீரமா ஜீப்ல வலம் வந்திருப்பேன். இப்படி புருஷன் நம்மள பாதியிலேயே விட்டுட்டுப் போகப் போறானேனு கண்ணீர் வடிச்சிட்டு உக்காந்திருக்க மாட்டேன்.” -பேசும்போதே அவர் கண்களில் நீர் பெருகியது.

“மாம்” என்று அணைத்து ஆறுதல் படுத்த வந்தவனை தள்ளிவிட்டவர்,

“போங்கடா‌!” என்று தனதறைக்கு ஓடிவிட்டார்.

“என்னப்பாயிது?”

“டோன்ட் வொரி விக்கி. ஐ வில் ஹேண்டில் ஹேர்.”

“ம், டேக் கேர்ப்பா” என்றதோடு அவன் மின்தூக்கியில் தனதறைக்குச் சென்றுவிட, தனது அலைபேசியில் உத்ராவின் எண்ணை தேடினார் வாசன்.

திடீரென அந்த முயற்சியை கைவிட்டு தனது ரகசிய உளவாளிகள் சிலரை தொடர்புகொண்டு அனன்யா பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொன்னார். முள்ளுக்கும் வலிக்காமல் சேலைக்கும் நோகாமல் காரியத்தை செய்து முடிப்பதில் வல்லவர் வாசன். மனைவியின் அவசரப் புத்தி அவருக்கு கிடையாது.

தங்களை மதித்து மகன் காதலைச்‌‌ சொல்லும்போது அவனுக்கு ஆதரவாகப் பேசி தான் தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டுமே தவிர,‌ முதலிலேயே தன் மேல் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாய் இருந்தார்.

மேலும், வேலைக்குச் சேர்ந்த நாள் முதலே துடிப்பாய் இருக்கும் உத்ராவை தன் வீட்டிற்கு மருமகளாக்கும் அளவிற்கு பிடித்திருந்தது அவருக்கு. அவளின் குடும்ப சூழ்நிலை குறித்தும் பெரிதாக குறையில்லை. இவ்வளவு அறிவார்ந்த நல்லப்பெண்ணை நம் மகனுக்கு மணம் முடித்தால் எப்படியிருக்குமென்ற யோசனை ஒரு முறை உதித்ததாலேயே அனன்யாவை பற்றி விசாரிக்க அவளை ஏவவில்லை.

அனன்யா நல்லப்பெண்ணாக இருந்தால் சரி, இல்லையென்றால் உத்ராவை அணுகுவதில் சங்கடமாகிவிடும் அல்லவா? சாதூர்யமாய் காய்களை நகர்த்தினார்.

இது தெரியாமல் அறைக்குச் சென்ற‌ வேணி குமுறினார்.

“இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னே தெரியல? கேட்குறதெல்லாம் கெட்ட செய்தியாவே இருக்கு. இந்த வாசனுக்கும் தான் இன்னைக்கு என்னாச்சு? நானே இந்த கேரக்டர் ரிபோர்ட்லாம் எதுக்குனு கிண்டலடிச்சாக்கூட, ஒரு நகைக்கே நைன் ஒன் சிக்ஸ் முத்திர தேவைப்படுறப்போ லைஃப் பார்ட்னர்க்கு தேவைப்படாதா? ‘நூலப் போல சேல; தாயப் போல பிள்ள’ மேக்சிமம் செவன்டிஃபைவ் பெர்சென்டேஜ் பிஹேவியர் பேரண்ட்ஸோட ஜீன்ஸ் அண்ட் வளர்ப்பு வச்சு தான் வருது; அது இதும்பாரு. இப்ப என்ன மாடர்னா திங்க் பண்ண சொல்றாரு. என் தலையெழுத்து! இத இப்படியே விட முடியாது.” என்று தனது அலைபேசியில் விக்கியின் நண்பன் மகேஷிற்கு அழைத்தார்.

அவனும் இந்த காதலுக்கு உடந்தையோ என ஐந்து நிமிடங்கள் வறுத்தெடுத்தப் பின், தீவிரமாக அனன்யாவைப் பற்றி விசாரித்தார். இறுதியில் தன் மகன் விடாக்கொம்பன் எனவும், அவர்களுக்குள் ஓடுவது அனைத்தையும் அவனுக்கு தெரியாமல் இனி தனக்கு தெரிவிக்கும்படியும் மிரட்டிவைத்தார்.‌

விக்கியின் வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கக் காத்திருந்த மகேஷும் பவ்யமாக ஒப்புக்கொண்டான்.

மறுநாள் காலை விக்கி அழைத்ததின் பெயரில் அவன் அறைக்கு வந்தவளிடம் தன் தந்தையிடம் தங்கள் காதல் விவகாரத்தை கூறிவிட்டதாகச் சொன்னான் விக்கி.

திடுக்கிட்டவள், “இப்பயே அவங்கக்கிட்டலாம் சொல்லித் தொலைக்கனுமா? எல்லாத்தையும் எங்கம்மாக்கிட்ட எழுதுற நானே இன்னும் ஒன்னும் சொல்லலயாம். கொஞ்ச நாள் கழிச்சி சொல்லிருக்கலாமே விபூ? இன்னும் நாம ஒழுங்காக்கூட காதலிக்க ஆரம்பிக்கல.” என்று குறைப்பட்டாள்.

“இப்ப இல்லனா எப்ப சொல்றது? நமக்கு பல்லெல்லாம் கொட்டி கம்பூன்டி நடக்குற வயசுலயா? நீயும் வெயிட் பண்ண வேணாம். உடனே உங்கம்மாக்கிட்ட சொல்லிரு.”

“அய்யோ! வேணவே வேணாம். அம்மா எவ்வளவு நம்பிக்கையா என்ன ஆஃபிஸுக்கு அனுப்புறாங்க தெரியுமா? நான் இங்க அவங்களுக்கு தெரியாம லவ் பண்றேன்னு தெரிஞ்சதோ அவங்க ஹார்ட்டே நின்னுரும். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பொறுமையா சொல்லிக்கலாம் விபூ.”

“எனக்கு தெரிஞ்சு நீ‌ எப்பவுமே உங்க அம்மாக்கிட்ட இந்த விசயத்த சொல்லிக்கிற மாட்ட அனி. உன் அம்மா நம்பர் சொல்லு?”

“வேணாம் விபூ”

“எனக்கு வேணும் சொல்லு?”

“என்ன வேலைக்கே போகக்கூடாதுனு‌ சொல்லிருவாங்க”

“அதயும் தான் பாக்கலாம்”

“ப்ளீஸ் விபூ”

“அப்போ உன் அம்மா வேண்டாம்னு சொன்னா என்ன லவ் பண்றத விட்ருவியா?”

“அதெப்படி?”

“அவங்க சூஸைட் பண்ணிப்பேன்னு மெரட்டினா?”

“அப்படி மெரட்டினாலும் உங்கள லவ் பண்றத என்னைக்குமே விடமாட்டேன். அவங்கக்கூடவே கடைசி வர கன்னிப்பொண்ணா வாழ்ந்து செத்துப்போயிருவேன்.”

“செமயா உருட்டுறியே நீ”

“உண்மையாவே” சிணுங்கினாள்.

“அப்ப நம்பர் குடு?”

“விடமாட்டீங்களா?”

“ம்ஹூம்”

“என் போன்லயே பேசுங்க.”

அவளே பெயரைத் தேடி சொடுக்கினாள்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அலைபேசியை காதில் வைத்திருந்தவனை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் ஆர்வமாய் கேட்டார் கங்கா.

“குட்டிமா காஃபி பிரேக்காடா?”

வகுப்பறையில் உட்கார்ந்திருப்பார் போலும், பிள்ளைகளின் கூச்சல் கேட்டது.

“நான் விக்கி. அனி என்னப் பத்தி உங்கக்கிட்ட சொல்லிருப்பானு நெனைக்கிறேன். விக்டரி டெக் சொலுஷனோட சிஇஓ”

ஆண்குரல் கேட்டதும் விரைத்தது உடல்.

“ஹே! எல்லாம் அமைதியா இருங்க!”

அதட்டி பிள்ளைகளைப் பணிய வைத்தவர் பதட்டமாக விசாரித்தார்.

“என்னாச்சு எம்பொண்ணுக்கு?”

“அவளுக்கு ஒடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல. மனசுக்கு தான்‌ பாரமா ஃபீல் பண்றா, அங்க நான் இருக்கதால.”

விக்கி அதட்டாமலே அமைதியாகிப்போனார் கங்கா.

அலைபேசியை அனன்யாவிடம் நீட்ட, “அம்மா என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“ஒன்னும் சொல்லல. கட் பண்ணிட்டாங்க.”

“காலையா? நம்ம காதலையா?”

“அத வீட்டுக்குப் போனதும் நீதான் சொல்லனும்”

“நான் இப்பவே‌‌ வீட்டுக்குப் போறேன் விபூ. நிச்சயம் அம்மா பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு வந்திருப்பாங்க.”

“எதுல போறதா உத்தேசம்?”

“நடந்து தான்”

“என் கார்ல கொண்டுபோய் விடுறனே?”

“அப்ப தெரு முக்குலயே எறங்கிருவேன். பரவாயில்லையா?”

“டன்”

அனன்யா நினைத்ததுபோலவே தலைவலியென விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்திருந்தார் கங்கா. ஆனால், தன் மகள் தெருமுனையில் காரில் வந்திறங்கியதை எதிர்புறமாக வந்தவர் கவனித்துவிட்டார்.

வீட்டிற்கு வந்ததும் பதட்டமாக, “அம்மா” என்றவளை‌,

“தலைக்கு‌‌ குளிச்சிட்டு வா.” என்றார்.

அவளும் காரணம் கேட்காமல் குளிக்கச்சென்றாள். முடிகளில் நீர் சொட்டச் சொட்ட வந்தவளை பூஜையறையில் சாமிப்படத்திற்கு முன்புபோய் உட்கார வைத்தவர் தானும் அருகிலமர்ந்து‌ மனதை சுத்தப்படுத்தும் பீஜ மந்திரத்தை ஆயிரத்தெட்டு‌ முறை‌ சொல்ல வைத்தார்.

அவள் அத்தனை முறை சொல்லி முடித்ததும் எழுந்து படுக்கையில் சென்று விழுந்து விட்டார். அவளுக்கு அவரிடம் என்ன கேட்பதென்றே‌ தெரியவில்லை. இரவு உணவு செய்யவும் அவர் எழவில்லை.‌ தான் காலையில் கட்டியப் புடவையோடே கழுத்திலிருந்த அடையாள அட்டையைக் கூட கழற்றாமல் கிடந்தவரை இவ்வளவு துன்பப்படுத்துவது அவளுக்கே வேதனையாகத்தான் இருந்தது. தண்டனையாக தானும் வயிற்றை காயப்போட்டாள்.

மறுநாள் காலையிலோ சமையல் வேலை துரிதமாய் நடந்தது. மகளுக்குப் பிடித்த காரக்குழம்பும், பீன்ஸ் பொரியலும் செய்தார் கங்கா.

எப்போதும் போல், “குட்டிமா லேட்டாகிருச்சிடா. எந்திரிடா” என்று எழுப்புபவரை கண்களை கசக்கி ஆச்சரியமாகப் பார்த்தாள் மகள்.

அவர் நேற்று தன்னை பேசாமல் தண்டித்ததில் அழுகையே வந்துவிட்டது.

“ம்மா!” என்று அவரின் இடையைக் கட்டிக்கொண்டாள்.

“ச்சீ! இதுக்கெல்லாமா அழுவாங்க? நானே எம்பொண்ணு பெரிய மனுஷியாகிட்டாளேன்னு சந்தோசத்துல இருக்கேன். வேலைக்கு நேரமாச்சுப் பாரு. சீக்கிரம் கெளம்பு.” என்று அவளின் முதுகில் தட்டினார்.

அவர் இயல்பாக இருப்பதுபோல் தன்னைக் காட்டிக்கொண்டது மனதோரத்தில் உறுத்தியது மகளுக்கு.

எப்போதும் போலவே அவளுக்கு காலையுணவை ஊட்டிவிட்டு தன் ஸ்கூட்டியிலேயே நிறுவன வாயிலில் அவர் இறக்கிவிட்டுச் சென்றதாக அனன்யா கூற, விக்கியுமே புதிராகத் தான் பார்த்தான்.

பெரிய நாடகமொன்றை எதிர்பார்த்தவனுக்கு கங்கா குறைந்தபட்சம் கோபமாகக்கூட கத்தவில்லை என்பது சரியாகப் படவில்லை.

உடனே மகேஷை அழைத்து கங்கா வேலைப் பார்க்கும் பள்ளிக்கு அவனையனுப்பி அவரின் வருகையை உறுதிபடுத்தச் சொன்னான்.

அவனும் விதியே என்று விசாரித்து கங்கா வழக்கம்போல் பாடம் எடுத்துக் கொண்டிப்பதாகத் தகவல் தர, குழப்பமாக இருந்தது காதலர் இருவருக்கும்.

இவ்விடத்தில் மகேஷ் தகவலை வேணிக்கும் சேர்த்தே பரிமாற்றினான். உடனே, கங்காவை மிரட்டி காரியம் சாதிக்கத் திட்டம்போட்டது அவரின் மூளை. மகேஷிடமே அனன்யாவின் வீட்டு முகவரியைப் பெற்று‌, ருத்ரதாண்டவத்திற்கு தயாரானார்.

மறுநாள் கங்காவும், வேணியும் ஒருவரையொருவர் எதிர்கொண்டது இரு துருவங்கள் மோதிக்கொள்வது போல் தான் இருந்தது.

தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னையே நாட்டாமை பண்ணும் வேணியை எரிச்சலாகப் பார்த்தார் கங்கா.

“இங்கப் பாருங்க! நான் என் அப்பாப் பேரச் சொன்னதுலயிருந்தே நாங்க‌ எவ்ளோ பெரிய ஆளுங்கன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். என் பையன் செல்லமா வளந்தவன்‌. அவன் எது கேட்டாலும் எங்களால தட்ட முடியாது. இப்படித்தான் சின்ன வயசுல தெருவுல கெடந்த ஒரு நாய தூக்கிட்டு வந்து நம்ம இத வளக்கனும்மானு சொன்னான். நானும் ஒன்னும் சொல்லல. அதுக்கூடவே ஒரு பொமரேனியன வாங்கிட்டு வந்து தான் விட்டேன். தானா தெருநாய்கிட்ட இருந்து ஒதுங்கி அதுக்கிட்ட ஒட்டிக்கிட்டான். இப்பவும் உங்கப்பொண்ணு விசயத்துல அவன நான் தப்பு சொல்லவே மாட்டேன். அவன் வயசு அப்படி. தங்கத்துக்கும் ஜிகினா பேப்பருக்கும்‌ உள்ள வித்தியாசத்த காமிச்சிட்டா தானா கைக்கழுவிடப் போறான்.” என்றார் தோரணையாக.

அனன்யாவோ இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் பயங்கரமான வலியுறுத்தல்படி தனது வார‌ வேலைநேரம் எழுபதுமணி நேரமாக இருந்திருக்கக்கூடாதா என்று நொந்துகொண்டாள். அவளுக்கு விருப்பமான ஞாயிற்றையே துறக்கும் அளவுக்கு வேணியின் பேச்சு கடுப்பைக் கிளப்பியது. உடன் அவர் வாயசைவில் கூடுதல் கவனத்தைப் பெற்ற அந்த அடர்சிவப்பு‌‌ நிற உதட்டுச் சாயத்தையும் வெறுத்தாள்.

கங்காவின் கண்களோ வேணியின் கையில்லாத ரவிக்கை மீது பட்டு பட்டுத் திரும்பியது‌. ‘குடும்பப் பொண்ணா இவ?’ என‌ உள்ளுக்குள் குமுறியவர் வெளியில் நிமிர்வுடன் பேசினார்.

“நீங்க ஒரு விசயத்த நல்லாப் புரிஞ்சிக்கனும். எம்பொண்ணு ஏதோ ரோட்டுல கெடக்கற நாயும் இல்ல. நான் பொமரேனியன் வச்சிருக்கற பொம்பளையப் பாத்து பயப்படுறவளும் இல்ல. மொதல்ல என் பொண்ணும் சரி; உங்கப் புள்ளையும் சரி; இருபத்தியோரு வயசு‌ பூர்த்தியானவங்க. சட்டம் தெரியுந்தான உங்களுக்கு? அவங்க முடிவுல நான், நீங்க, யாருமே தலையிட முடியாது. சும்மா வில்லி மாதிரி பேசிட்டுத் திரியாம அவங்களுக்கு ஆதரவா இருக்கற வழியப் பாருங்க.” என்றார்.

தன் அன்னையின் நச் பதிலில் அவரை ஓடிச்சென்று கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அனன்யாவுக்கு. முயன்று தன்னை கட்டுப்படுத்தினாள்.

கங்காவுக்கும் அவர்கள் காதலில் சம்மதம் இருக்காது என்று எதிர்பார்த்து வந்த வேணிக்கோ பெரிய அடியாக இருந்தது அவரின் இந்த காட்டமான பதில். தானும் சளைத்தவரில்லை என்பதால்‌ பதிலுக்குக் கத்தினார்.

“பெரிய எடம்னதும் சட்டம் கிட்டம்னு பூச்சாண்டிக் காட்டுறியா? நீங்கலாம் பட்டா தான் திருந்துவீங்க. என் மகன் சீக்கிரமே உன் மகள தூக்கியெறியுறானா இல்லையா பாரு.”

“எவ்வளவு கெட்ட எண்ணம் உங்களுக்கு? ஒருக்கால் நீங்க‌ சொல்றபடியே நடந்தாலும் எம்பொண்ணு உங்க மகனுக்காக தற்கொலையெல்லாம் செஞ்சுக்க மாட்டா. ஏன்னா என் வளர்ப்பு அப்படி.”

வேணி கங்கா‌வை நீர்க்குமிழியாய் நினைத்தால் அவர் பேப்பர் வெயிட்டாய் கனத்தார். தன் கணிப்பு பொய்யானதில் பதிலுக்கு இரண்டு கத்து கத்திவிட்டு விரக்தியாக வீடு திரும்பினார்.

அவர் சென்றதும் கங்கா மனம் பொறுக்காமல் தன் மகளிடம் கவனம் சொன்னார். “இப்படியொருத்தி உனக்கு மாமியாரா வர்றது எனக்கு சரியாப்படல குட்டிமா. அவளும் அவ ப்ளவுஸும். எதுக்கும் அவப்பையன் கிட்ட பாத்தே பழகு” என்றார்.

அறிவுரை கூறிய தாயை‌ அன்பொழுகப் பார்த்தவளும் சரியென்று தலையசைத்தாள்.



கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom