செப்பனிடா சொப்பனமே..
அத்தியாயம் - 1
வெளிறிப்போன வானம். சுட்டெரிக்கும் சூரியனும் இல்லை, தகதகக்கும் நிலவொளியும் இல்லை.
வானெங்கும் சுற்றி த்திரியும் பல்லாயிரம் செயற்கைக் கோள்களில் ஒன்றாய்.. இங்குப் பூமிக்குச் செயற்கைத் துணைக்கோள். ஆம்.. இந்த முழு உலகிற்கும் ஒட்டுமொத்தமாய் இரண்டாம் நிலவு. செயற்கை நிலவு ஒன்றும் ஒளிப் பாய்ச்சி கொண்டிருந்தது.
ஒட்டுமொத்தச் சூரிய சக்தியும் ஒரு புறம் தனியாக உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இங்கு எஞ்சியிருக்கும் மிச்ச சொச்ச உயிர்களுக்காக இந்த நிலவொளியாவது இருபத்து நாலு மணி நேரமும், வருடத்தின் அனைத்து நாட்களிலும் வியாபித்திருக்க வேண்டாமா? அந்த ஒரு சிறு கரிசனத்துக்காகத் தான் இந்தச் செயற்கை நிலவு.
அந்தக் குளிர் நிலவினைப் போலவே எங்கெங்கும் பறந்து விரிந்திருக்கும் மெல்லிய பனி போர்த்திய புல் தரை.
ஆளரவமற்ற பிரதேசங்கள். சுற்றிலும் ஒரே அமைதி. அவ்வப்பொழுது காற்று வீசுவதும், அங்கிருந்த சிற்சில மரங்களும், தாவரங்களும், அந்தக் காற்றின் இசைவுக்கு ஏற்ப அசைவதும், கடலும், புனலும் மெல்லிய அலை எழுப்புவதுமான ஓசையும்.. அந்த ஓசையில் சோர்ந்துப் போய் இருந்த சிறுசிறு விலங்கினங்களுமாக இருந்தது அன்றைய புவி.
ஆம்.. அன்றைய புவி தான் அது. ஏறத்தாழ 2195ம் ஆண்டு அது என்று அப்பொழுதையக் கணக்கீடுகள் கூறின.
ஆனால் இப்படி மேலே விவரிக்கப்பட்ட பகுதிக்கு நேரெதிராகப் புவியின் மற்றொரு பகுதி இருந்தது.
அங்கும் முழுக்க முழுக்கப் பனி படர்ந்து வெண் பஞ்சு ஆடைத் தரித்தே காணப்பட்டாள் புவியரசி. ஆனால் கூடவே சிறு வேறுபாடாக, இந்த மற்றொரு பகுதியில் முழுக்க முழுக்கப் பல மிதக்கும் கட்டிடங்கள்.. அதவாது காற்றுக் குமிழ்கள் போன்ற கட்டிடங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.
பெரிய பெரிய அடுக்குமாடிகளாய் இல்லாது, ஒவ்வொரு தளமும் தனித்தனிக் குமிழாய், அடுக்கடுக்காய்க் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அந்த ஒவ்வொரு மிதக்கும் குமிழும் தனித்தனி வீடுகளாகவோ, அல்லது உற்பத்திக் கூடங்களாகவோ, அப்படியும் அல்லாது கண்காணிப்பு மையங்களாகவோ, இன்னும் சில, சிறைக் கூடுகளாகவோ இருந்தான.
அப்படியான குமிழ்களுக்குள் அங்கும் இங்குமாய் அறக்கப் பறக்க, பறந்துப் பறந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். பறந்து, பறந்து என்றால்.. நிஜமாகவே பறந்துப் பறந்துத் தான்.
காலுடன் இணைக்கப்பட்டிருந்த பறக்கும் மிதவைகள் முலமாக அவர்களால் பறக்க முடிந்தது. தனியாக நின்றுகொண்டோ, அல்லது சொகுசாக அமர்ந்துகொண்டோ, அல்லது கூட்டம், கூட்டமாக மக்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்த்தும் படியாகவோ பல்வேறு வடிவுகளில், அளவுகளில், இயங்கக் கூடியதாய் அந்த மிதக்கும் பலகைகள் இருந்தன. அவை ஹவர் போர்டு போல இருந்தாலும்.. தரையில் பாதம் தோயாது.. காற்றினூடாகப் பயணம் செய்யும்படி இயங்கிக் கொண்டிருந்தன.
இப்படி நிஜமாகவே பறந்துப் பறந்து வேலைச் செய்யும் அவர்கள்.. அவைகள்.. எந்திரங்கள்.
ஆம்.. ஹுமனாய்டு எனப்படும் மனித அறிவும், குணமும் கொண்ட, இப்பொழுது மனித உருவே கொண்ட எந்திரன்கள்.
அப்படிப்பட்ட எந்திரன்கள் புடைச் சூழ அங்கிருந்த ஒரு மிதக்கும் சிறைக் குமிழிலிருந்து வெளியே வந்தாள் அவள்.
அவள் NS030. ஆம். இது தான் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள எண்.
இங்கு ஒட்டுமொத்த உலகையே தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்த அந்த எந்திரன்களை எதிர்ப்பவர்களுக்குப் பெயர்கள் கிடையாது.
தாய், தந்தையர் கிடையாது. குறிப்பிட்ட வயது வரும்வரை பெற்றோருடன் இருந்துவிட்டு, அதன் பிறகு தனிமைச் சிறை. அடிப்படை உணவு.. அடிப்படை கல்வியறிவு. அதாவது அந்த ரோபோட்களுக்கு அடிபணியக் கற்றுக்கொடுக்கும் அறிவு.
பிறகு இறுதியாக அவர்கள் மொழியில் இணையேற்பு. அதாவது மனிதர்களின் மொழியில் திருமணம்.
அந்தத் திருமண முடிவின் பொழுது, இணையர்கள் இருவரும் எந்திரன்களை எஜமானர்களாய் ஏற்றால் நல்லதொரு வேலை, விரும்பிய படிப்பு, தனி வீடு, வேண்டிய வசதிகள்.. மிக முக்கியமாக அடையாள எண்களுக்கு மாற்றமாய்த் தனிப் பெயர்கள் என இத்தனை வசதிகள் செய்து தரப்படும்.
ஆனால், அப்படி அல்லாது, எந்திரன்களை எதிர்த்தால்.. ஆயுள் சிறை. உயிர்வாழ மருந்து. பிறக்கும் குழந்தையைக் கூடத் தியாகிக்கும் நிலை.
இப்படித் தான் நாயகியையும், அவள் பெற்றோர் தியாகம் செய்திருந்தனர்.
இப்பொழுது இது இவள் முறை. ஏனென்றால், அந்த ஹுமனாய்டு ரோபோட்கள் இவளது இணையைத் தேர்வு செய்துவிட்டிருந்தன.
அதை இவள் ஏற்றேயாக வேண்டும். அவர்களது கட்டளைக்கு மறுப்புக் கூற, இவளுக்கு ப்ரோக்ராம் செய்யப்படவில்லை என்பது அந்த ரோபோட்களின் எண்ணம்.
ஆனால், தாயமுதுடன் கூடவே, மனிதர்களின் முற்காலத்தையும், அது இப்படியாய் இழிந்து போனதைப் பற்றியும்.. கோபமும், ஆதங்கமுமாய்க் கொட்டி கொட்டித் தானே அவளை வளர்த்தாள் அவளது அன்னை.
அன்னையுடன் கழித்த அந்த ஐந்தாண்டுகள் இப்பொழுதும் கூட மனக்கண்ணில் மிக விஸ்தாரமாக விரிந்தது. நெஞ்சோரம் ஓவென்று குமுறும் ஏக்க எண்ணவோட்டங்களும் தொண்டையை அடைத்தன. ஆனாலும் அதன் பிறகான இந்த இருபது ஆண்டுகாலத் தனிமைச் சிறையில் அவள் உள்ளத்துள் உருவேற்றிக் கொண்ட அத்தனை அத்தனை விஷயங்களும் அவளைப் பாறாங்கல்லாய் இறுகிப்போக வைத்திருந்தன.
இதையெல்லாம் அவள் அசைபோட்டுக் கொண்டிருக்கையில் அந்த இணையேற்பு நிகழ்வு நடக்கும் குமிழுக்குள் நுழைந்தாள் அவள்.
சுற்றிலும் பல மனிதர்கள். எல்லாரும் அவள் வயதை ஒத்த ஆண்கள் மற்றும் பெண்கள் தான். இவள் இங்கு வந்திருக்கும் காரணமாகத் தான் அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.
இதில் அவளுக்கு ஏற்ற இணையாக யாரைக் கோர்த்துவிடும்களோ இந்த மெட்டல் மண்டையன்கள் என்று கேலியாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அந்த இணையேற்பு நிகழ்வை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த திருவாளர் தலைமை ரோபோட்., அவருக்கெல்லாம் திவ்யமாய்ப் பெயரிருக்கிறது தான்.. மரியாதைக்குரிய மிஸ்டர். கெவின்.
அவர், இவளைப் பார்த்து நக்கலுடன் சிரித்தார். முழுக்க முழுக்க மனிதர்களைப் போலவே.. தலை முடித் தொட்டு, கால் விரல் நக நுனி வரை அனைத்தும் மனிதனைப் போலவே. கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் தான் சாதாரணமாய் இந்த ரோபோட்களுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் காண இயலும்.
ஆனால், இந்தக் குமிழுக்குள் இருப்பவர்கள் அனைவரும் இது நாள் வரையில் தனிமைச் சிறையில் இருந்து இப்பொழுதுத் தான் வெளி உலகத்தையே பார்ப்பதால் மருண்டு விழித்துக் கொண்டிருப்பதனாலும், அதையும் விட மனிதர்களுக்கு மேலாக, அந்த ரோபோட்கள் மனிதனைத் தனியே அடையாளம் கண்டு விடும் திறமைப் பெற்றிருப்பதாலும் அவ்வளவாகக் குழப்பம் வருவதில்லை.
அதிலும் இவளைத் தெரியாத ரோபோட்களே இல்லை எனலாம்.
ஏனெனெறால் இவளது பூர்வீகம் அப்படியானது. இந்த ரோபோட்களின் இப்படியான மகோன்னத மேன்மை நிலைக்குக் காரணமே இவளது மூதாதையரான ஓர் பெண்மணி தான்.
இன்னமும் சொல்லப் போனால் இவளது கொல்லுப்பாட்டியின் அதி புத்திசாலித் தனமான அறிவினைக் கொண்டே இந்த ரோபோட்களுக்கெல்லாம் தலைமை ராணித் தேனியாக விளங்கும் அவள் - சோபியா உருவாக்கப்பட்டாள்.
அதனால் இவளைப் பற்றி இவளுக்கே தெரியாத விசங்களெல்லாம் அந்த ரோபோட்களுக்குத் தெரியும். அதிலும் இந்தக் கெவின்.. இன்னும் அறிவார்ந்தவன். நக்கல் பிடித்தவன்.
இவளைக் கண்டதும், தனது ஆசனத்திலிருந்து எழுந்து மிகுந்த பயபக்தி உடையவனைப் போல, இடைவரைக் குனிந்து.. "இளவரசியாருக்கு எனது வந்தனங்கள்.." என்று எந்திரக் குரலில் நக்கல் கலந்து கூறினான்.
அவனது இந்தச் செய்கையைக் கண்ட மற்ற ரோபோட்களும் அவளைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டன.
அதையெல்லாம் கண்டு இவள் முறைத்துக் கொண்டிருக்க, அந்தக் கெவின் மேலும் தொடர்ந்தான்.
"என்ன இளவரசியாரே.. பதிலே சொல்லல?
ஹ்ம்ம்.. நீங்க எப்படிப் பதில் சொல்லுவீங்க? நீங்க தான் எங்களுக்கே உயிர் கொடுத்த.. அதாவது மனிதனைப் போலச் சிந்திக்கற ரோபோட்களை உருவாக்கின வம்சத்தைச் சேர்ந்தவங்களாச்சே.. எங்க கூடவெல்லாம் பேசினா, உங்க மரியாதை என்னாகிறது?
ஹ்ம்ம்.. ஆனாலும் இப்படிப் பரம்பரைப் பரம்பரையா அந்த டயரியை.. அதான் உங்க கொல்லுப் பாட்டியோட டயரியை எதுக்காகப் பத்திரமாப் பாதுகாக்கறீங்கன்னுத் தெரில.
அதுல உன் பாட்டியோட கனவு மட்டும் தானே இருக்கு.. அந்தக் கனவே இப்போ இங்க நினைவாப் பளிச்சுடுச்சுல்ல? அப்பறம் எதுக்கு அது?" என்று அப்படியே மனிதனைப் போலப் பிறரை காயப்படுத்தி அதில் சுகம் காணும் வெறியுடன் கேட்டுக்கொண்டே எழுந்து வந்தவன், அப்பொழுதும் கூடச் சற்றுத் தன்னோட அணைத்தவாறே பிடித்திருந்த அந்தச் சிறு டயரியை அவளது கரத்திலிருந்து பிடுங்க எத்தனிதத்தான்.
ஆனால் இவள் மறுப்புடன் முகம் திரும்பி நின்று கொள்ள, ஒரு கணம் அவளையே பார்த்த அந்தக் கெவின், இன்னமும் விரிந்த நக்கல் சிரிப்புடன்.. "நீ எந்தப் பரம்பரையச் சேர்ந்தவளா இருந்தாலும்.. இப்போ எங்களோட அடிமை தான். போ.. போய் வரிசையில நில்லு." என்று கர்ஜித்து விட்டு மீண்டும் அவனது இடத்திற்குச் சென்று அமர்ந்து விட்டான்.
அனைத்தையும் தலை குனிந்துக் கடுப்புட ஏற்றிருந்த அவள், சோர்வுடன் நடந்து போய் வரிசையின் இறுதியில் நின்றுகொண்டாள்.
அவளுக்கு முன்பாக நிறையப் பேர் இருந்ததால், அன்று அந்தி சாயும் பொழுதில் தான் அவள் அழைக்கப்பட்டாள்.
"NS030" என்று அவள் அழைக்கப்படவுமே, சுரத்தின்றி, அதே தரையில் பதித்த பார்வையுடன் சென்று முன்னே நின்றாள்.
பிறகு, "BK230" என்று அழைக்கப்பட்டதும், திடகாத்திரமான ஒருவன் வந்து முன்னே நின்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த அந்தக் கெவின்.. "உன்னோட DNA டீடெயில்ஸ் எதுவும் எங்கக் கிட்ட இல்லையே?" என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் கூறும் முன்பாக.. அருகிருந்த மற்றொரு ரோபோட்.. "அந்த வைரஸ் பிரச்சனையால நம்ம டேட்டா அழிஞ்சுதுல்ல? அந்தச் சமயத்துல இவனதும் அழிஞ்சுடுச்சு" என்று கூறியது.
அந்த மற்றொரு ரோபோட் அப்படிக் கூறியதும், இங்குக் கெவினுக்கு அப்படியொரு கோபம்.
"முட்டாள்.. உன்னோட சிஸ்டம்ல ஏதாவது பிரச்சனையா? எதையெல்லாம் எங்கெங்கே பேசலாம்னுத் தெரியாதா?" என்று எரிந்து விழுந்தான்.
இந்த மற்றோரு ரோபாட்டும்.. "நான் சம்மந்தப்பட்டவர்களோட விவரம் தானே சொன்னேன்? இதுல ரகசியம் காக்கணும்னு எதுவும் இல்லையே?' என்று அப்பாவியாய்க் கேட்டது.
அந்தச் சில வருடப் பழைய ரோபோட்டின் அறிவை எண்ணிச் சலிப்படைந்த கெவின்.. "எதுக்கும் நீ மெய்ன் சிஸ்டத்துக்குப் போ.. நான் அங்க இருக்கக் கெர்ட்டி கிட்டப் பேசறேன்." என்று கூறிவிட்டு ஒரு நானோ செகண்டுக்கும் குறைவான நேரத்தில் அந்த மற்றொரு ரோபோட்டின் செயல் திறன் பற்றிய தகவலை கெர்ட்டிக்கு அனுப்பியது.
அந்தக் கெர்ட்டி தான் இந்த அனைத்து ரோபோட்டைகளின் தலைமை நிலையத்தைக் கண்காணிப்பதும், ஒருங்கிணைப்பதும், மற்றும் பிரச்னைகளைக் களைவதும்.
அதற்கு மேலாக அந்த அனைத்து ரிப்போட்டுகளையும் அவர்களது மரியாதைக்குரிய தலைவி சோபியாவிடம் ஒப்படைப்பதும்.
இந்தப் பேச்சு வார்த்தையெல்லாம் காதில் விழுந்தாலு, விழுந்தாலும் மூளையை அடையாதபடி.. இங்கு இதில் எதிலேயும் சுரத்தில்லாதபடி நின்றிருந்தனர் நாயகியும், அவளுக்கு இணையனான நாயகன் - BK230ம்.
"ஹ்ம்ம்.. இனி நீங்க ரெண்டுப் பேரும் தான் இணை. சரியா? சரியான்னு என்ன கேள்வி..
NS030ம், BK230ம் இனி இணைகள்" என்று கூறிக்கொண்டே அதைத் தன்னிடமிருந்த சிறு டேபில் குறித்துக் கொண்டான் கெவின்.
பேருக்குக் கூட நிமிரவில்லை அவள். கிட்டத்தட்ட நாயகனுக்கும் அந்த நிலையே..
இருவரின் முகத்தையும் நோக்கிய கெவின்.. "உங்க ரெண்டுப் பேரையும் பார்த்தாலே எனக்குப் புரியுது. ஆனாலும் கேட்க வேண்டியது என்னோட கடமை. அதனால.. நீங்க ரெண்டுப் பேரும் மேடம்.சோபியாவை தலைமையா ஏத்துக்கறீங்களா?" என்று மிகவும் தீவிரமான முகபாவத்துடன் கேட்டான்.
அதற்கு அவள் மறுப்பாய்த் தலையசைத்து வைக்க.. அந்த அவனோ.. "முடியவே முடியாது" என்று கர்ஜித்தான்.
அந்தக் குரலில் இருந்த வெறுப்பையும், கோபத்தையும் உணர்ந்து மெய் சிலிர்க்க அப்பொழுதுத் தான் அவனைத் திரும்பியே பார்த்தாள் அவள்.
சிவந்த விழிகள் கோபத்தைக் கக்க, நிமிர்ந்தத் தலையுடன், திண்ணிய நெஞ்சுடன் நின்றிருந்தான் அவன்.
ஆனால் இந்தக் கோபமெல்லாம் கெவினுக்குப் பழக்கம் தானோ என்னவோ.. "ஹ்ம்ம்.. இந்த வீராப்பெல்லாம் எத்தனை நாளுக்குன்னு எனக்குத் தெரியும் மிஸ்டர்.BK230.." என்றான்.
பிறகு.. "சரி எதிர்பார்த்த முடிவுத் தான். அப்போ, இங்க வாங்க.." என்று தன் முன்னே நின்றிருந்தவர்களுக்குப் பின்னால் எட்டிப் பார்க்க, அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த இரண்டு ரோபோட்களும் இவர்களை அந்தக் குமிழை விட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றன.
இது போல அரசாங்க அலுவல்கள் நடைபெறும் இடத்திற்கு வெகுதூரத்திற்கு வெகுதூரம், பற்பலக் குமிழ்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதியபடிக் கசகசவென இருந்தன.
அதில் பலத்த இடைஞ்சல்களுக்கு இடையே இருந்த ஒரு குமிழுக்குள் இருவரையும் தள்ளிய அந்த இரண்டு ரோபோட்களும்.. "ஹ்ம்ம்.. இன்னும் கொஞ்ச வருஷத்துக்குச் சொர்க்கப் போகம் தான்.. துணைக்கு மனுஷங்க.. இருக்க இவ்வளவு வசதியா ஒரு தனி வீடு.. ஹ்ம்ம்.. இதுல எங்கத் தலைமையை ஏத்திருந்தா இன்னும் நல்ல வாழ்க்கையே கிடைச்சுருக்கும்.
சீக்கிரம் மனசு மாறுங்க. இல்லைனா.. உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தை.. உங்களுக்கு இல்ல." என்று எச்சரித்துவிட்டுச் சென்றன அவை.
நிலாப் பொழியும் இரவா, அல்லது கதிரொளி படரும் பகலா என்று எதுவும் புரியாத, விண்வெளியின் மாய வலைக்குள்.. அந்தகார இருளில் இத்தனை நாட்களாய்த் தொலைந்து கிடந்தவர்கள், இதோ இன்று இரவென்றும், பகலென்றும் புரிகின்ற ஏதோ ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.
இருவருக்கும் இருக்கும் தனியறையில்.. அவர்களுக்கு வழங்கப்பட்டதே அந்த ஒரு அறைதானே? அதில் இருவரும் இருக்கும் முதல் நாள் இன்று. ஆனாலும் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாய் அமர்ந்துத் தத்தமதுச் சிந்தைக்குள்ளேயே மூழ்கியிருந்தனர். முத்தெடுக்க முயன்றிருந்தனர்.
அடிமைகளுக்கான ஒற்றை அறை அது. இதுவரைக்கும் பேச ஆளற்றுத் தனித்தே இருந்தவர்களுக்கு இப்பொழுது இணையாய், துணையாய் மற்றொருவர். இருந்தாலும்.. ஆனந்திக்க இயலவில்லை.
அவளுக்கு எப்பொழுதும்.. இப்பொழுதும் உற்றத் துணையாய் அவளது கொல்லுப் பாட்டியின் அந்த நாட்குறிப்பு மட்டுமே. காலமெல்லாம் கட்டுண்டு கடுஞ்சிறையில் கழிக்கவேண்டிய நாட்களில் இதோ இப்பொழுது சில காலங்கள் மட்டுமே.. கடலில் மூழ்குபவன், நீர்மட்டத்திற்கு மேலே, தலையை நாசி வரையில் மட்டுமே நீட்டி மூச்செடுப்பது போலச் சற்றே சற்றான ஆசுவாசம். அந்த ஆசுவாசத்தைக் கூட அனுபவியாமல்.. கையாலகாத் தனத்துடன், கடலில் மூழ்கிடவே விழைகிறது அவள் மனம்.
ஆனால் இப்படியே எத்தனை காலங்கள் கழிப்பது? நாட்கள் வாரங்களாகி.. வாரங்கள் மாதங்களாகி.. அதிலும் மூன்று திங்கள் கழிந்திருந்தது.
இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிடவேண்டும் என்று உறுதியோடு எண்ணியிருந்தான் அவன்.
அப்பொழுதுத் தான் உறங்கி எழுந்தாள் அவள். அவள் எழுந்ததைக் கண்டு.."ஹ்ம்ம்.." என்று தொண்டையைச் செருமினான்.
அதற்கு அவள் சிறு புருவச் சுளிப்புடன் அவனை நிமிந்துப் பார்க்க.. "நாம கொஞ்சம் பேசணும்.." என்றான் நேரடியாக விசயத்திற்கு வந்தபடி.
அவளோ இன்னமும் புருவச் சுளிப்பை மாற்றவில்லை தான். இருந்தாலும் பார்வையை விலக்காது.. அங்கிருந்து எழுந்துச் செல்லாது அவனையே பார்த்தபடி இருந்தாள்.
அதுவே அவனைப் பேச ஊக்கம் கொடுக்கப் போதுமானதாய் இருந்தது.
எனவே மீண்டும்.. "ஹ்ம்க்கும்.." என்று தொண்டையைச் செருமிச் சீர் செய்து கொண்டவன்..
"நீ.. உனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னுத் தெரியுது. எனக்கும் கிட்டத்தட்ட அப்படித் தான்.
ஆனா.. யோசிச்சுப் பாரு.. நமக்கு முன்னாடியும் பலகாலம் மக்கள் இப்படித் தான் அடிமையா வாழ்ந்துட்டு இருந்தாங்க. இப்பயும் வாழ்ந்துட்டு இருக்காங்க.
இதுல நாம் புதுசா எத மாத்திட முடியும்னு நினைக்கற?" என்று அவன் கேட்கவும்.. இப்பொழுது அவளது புருவச்சுளிப்பு கோப முறைப்பாய் மாறியது.
உடனே அவனும்.. "இது உன்ன கோபப்படுத்தறதுக்காகவோ.. இல்ல நீ என் பேச்சைக் கேட்டு நடக்கணும்ன்றதுக்காகவோ நான் கேட்கல. நம்ம ரெண்டு பேரும் தான் இனி இணைகளா இருக்கப் போறோம்ன்றதால.." என்று அவன் கூறி முடிக்கவும், அவனுக்கு எதிரில் இருந்தவள் சீறினாள்.
"இணையா? உனக்கு எவ்வளோ தைரியம் இருந்தா என்ன உன்னோட இணைன்னு சொல்லுவா? இந்தப் பந்தத்தோட உண்மையான பொருள் என்னனுத் தெரியுமா? இதுக்குப் பேர்.. புனிதமான திருமணம்.
அப்படினா ரெண்டு மனங்கள் இணையறது. இப்படி நீயும் நானும் இணைஞ்சா, இனொருத்தங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடைக்கும்படியா ஒரு உயிர் பிறக்கும்னு கணக்குப் போட்டு உருவாகிற பந்தம் இல்ல இது.
அதுக்கும் மேல.. நாம.. மனித இனம் எப்படி இருந்தோம்னு தெரியுமா? இதோ என் கையில் இருக்கறது என்னன்னு உனக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட இருநூறு வருஷங்களுக்கு முன்னாடி.. சுதந்திரமா இருந்த மனுஷி ஒருத்தியோட கனவு.
இதோ.. நம்மளையே இப்படி ஆட்டிப் படிச்சுட்டு இருக்கே ஒரு ஹுமனாய்டு.. அதி புத்திசாலி ஹுமனாய்டு.. அத வடிவமைச்சவளோட கனவு.
அவளோட கனவு பளிச்சுதுத் தான்.
அப்படியோர் அற்புதச் சொப்பன லோகமா இந்தப் பூமி இருந்துச்சுத் தான். அதுக்கு நாம தான், அதாவது மனுஷங்க தான் தலைமையா இருந்தோம்.
ஆனா.. காலப்போக்கில் அந்தச் சொப்பனம் சிதைஞ்சு.. சின்னாபின்னமாகி.. இதோ இப்போ செப்பனிடாத சொப்பனமாகிடுச்சு." என்று கூறிவிட்டு அதுவரை மனதிற்குள் அழுத்தி வைத்துக்கொண்டிருந்த ஆத்திரமெல்லாம், தன்னைப் போன்ற ஒரு சக மனிதனைப் பார்த்ததும் ஆற்றாமையின் வெளிப்பாடாக, அழுகையாகக் கொட்டியது அவளுக்கு.
உங்களோட கருத்துக்கள் தான் என் எழுத்தை மேலும் சுவாரஷ்யப் படுத்தும்..
கருத்துத் திரி :