Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழலாய் ஒரு நினைவு

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
ஹாய் பிரெண்ட்ஸ்... மீண்டும் நானே... போன கதைக்கு உங்க ஆதரவை தந்தது போல இந்த கதைக்கும் உங்க கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... லாக்டவுன் சோதனைகளால் எபி வர கொஞ்சம் தாமதமாகலாம்... அப்போ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...

(பி.கு... இந்த எபில ஹீரோ ஹீரோயின் தவற மத்த எல்லா கதாப்பத்திரங்களையும் இண்ட்ரோ குடுத்துட்டேன்... ஹீரோ ஹீரோயின் இண்ட்ரோ நெக்ஸ்ட் எபில)
 

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
நினைவு 1

கதிரவன் பூமியில் தன் ஆதிக்கத்தை துவங்கியிருக்க, அன்றைய நாள் எப்போதும் போல அழகாய் விடிந்திருந்தது, அந்த மாளிகையில் இருப்பவர்களுக்கு. ‘மாளிகை’ என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாதவாறு அதன் அழகு கண்களைப் பறித்தது.

வெளி வாசலிலிருந்து அந்த பங்களாவிற்கு செல்வதற்கே குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகும். செல்லும் வழி முழுக்க, அழகிய பூச்செடிகளும், மரங்களும் சீரான இடைவெளியில் காட்சி தந்து கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

அந்த பங்களாவிற்குள் அடியெடுத்து வைத்தால், தரமான கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட தரை தான் முதலில் ஈர்க்கும். அங்கு உயர்ந்து நின்றிருந்த தூண்களில் செய்யப்பட்டிருந்த வேலைபாடுகளும், கண்கள் கூசாதவாறு சுவர்களில் அடிக்கப்பட்டிருந்த சாயத்தின் நிறமும், சிறந்த உட்புற வடிவமைப்பாளரின் கைவண்ணத்தை பறைசாற்றும். ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அலங்காரப் பொருட்களின் கலைநயம், அவ்வீட்டில் உள்ளவர்களின் ரசனையைக் கூறும்.

கீழே பெரிய ஹால், நவீன சமையலறையுடன் கூடிய உணவருந்தும் அறை, நன்கு அலங்கரிக்கப்பட்ட பூஜை அறை, ஒரு படுக்கை அறை, மேலும் சில அறைகள் இருந்தன. மேல் மாடியிலோ, இருபுறமும் வளைந்து சென்ற படிகளுக்கு அருகில் இரண்டு அறைகள் எதிரெராய் அமைந்திருந்தன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும், உள்ளே அறைவாசிகளின் மனநிலைக்கேற்ப இரண்டும் வெவ்வேறு விதமாய் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

ஆனால் இரு அறைகளுக்குமான ஒற்றுமை, அங்கிருக்கும் நீச்சல் குளமும், உடற்பயிற்சி அறையும் தான். இதிலிருந்தே, அவ்வறைகளியிருப்பவர்கள் ‘ஃபிட்னெஸ் ஃபிரீக்ஸ்’ என்பதை புரிந்து கொள்ளலாம்.

மற்றபடி வேறுபாடுகளை எடுத்துக் கொண்டால், ஒரு அறை, அவ்வீட்டின் சின்ன எஜமானிக்காக பிளே ஏரியாவைக் கொண்டுள்ளது. மற்றோரு அறையோ, ‘மினி-பார்’ வசதியுடன் இருந்தது. (அவ்வீட்டின் பெண்ங்களிடமிருந்து இந்த ‘மினி-பார்’ விஷயம் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது…)

மொத்தத்தில் இவ்விரண்டு அறைகளும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சூட் ரூமைக் காட்டிலும் பிரமாண்டமாக இருந்தது.

மேல் தளத்தில் அவ்விரண்டு அறைகளுக்கும் பொதுவான இடத்தில், சோஃபா பீன்-பேக்குடன் கூடிய மேஜையும், அலங்கார மீன் தொட்டியும் இருந்தன. சில அடிகள் எடுத்து வைத்தால், எப்போதும் மென்காற்று வீசிக் கொண்டிருக்கும், பால்கனியை அடையலாம். அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் இடம்பிடிப்பதற்கு அவ்வீட்டில் இருப்பவர்களுக்கிடையே தினமும் சண்டை நடக்கும். அந்த ஊஞ்சலில் அமர்ந்து, கண்களை மூடியவாறு அந்த ஏகாந்தத்தைத் ரசிக்கவும் பாக்கியம் செய்திருக்க வேண்டுமல்லவா…

மேலும் சில முக்கியமில்லாத (!!!) அறைகளையும், ஒரே ஒரு பூட்டிய அறையையும் கொண்டது அந்த மேல் தளம். இவ்வாறு பழமையும் புதுமையும் கலந்த கலவையாய் இருந்தது அந்த ‘மாளிகை’.

இவ்வளவு வர்ணனைகளையும் தாங்கி நின்றிருக்கும் இந்த மாளிகை, இந்தியாவின் பல இடங்களில் கிளைகளைப் பரப்பியிருக்கும் ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸின் உரிமையாளர்களின் உறைவிடம்.

‘வர்மா பேலஸ்’ என்று கருப்பு பலகையில் பொறிக்கப் பட்டிருந்த பெயரை, எப்போதும் போல், இன்றும் ஒரு நொடி நின்று கவனித்து விட்டே உள்ளே சென்றார், மனிஷ் வர்மா. இந்த குடும்பத்திற்கும் சரி, தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கும் சரி, இவர் தான் ஆணிவேர்.

தன் காலை நடைப்பயிற்சியை முடித்தவர், மெல்ல அந்த பிரம்மாண்டமான கதவை தள்ளியபடி உள்ளே வந்தார்.

அவர் வரவை உணர்ந்த காவலாளி பதட்டத்துடன் அருகில் வந்து, “சாரி சாப்… இப்போ தான் உள்ள போனேன்…” என்று தலையை சொரிந்துக் கொண்டே, எங்கே திட்டிவிடுவாரோ என்ற பயத்துடன் கூறினான்.

“கூல்…” என்று அந்த காவலாளியைப் பார்த்து கூரினார். பின் அங்கிருந்த தோட்டக்காரனை அழைத்து, “பத்து நிமிஷம் நீ இங்க காவலுக்கு இரு…” என்றவர், மீண்டும் அந்த காவல்காரனை நோக்கி, “நீ பத்து நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா… ஆனா வந்ததுக்கு அப்பறம் உன் கவனம் வேற எங்கேயும் சிதறக் கூடாது…” என்று சிறு கண்டிப்புடனே கூறினார்.

தன்னை முதலாளி திட்டுவார் என்று எண்ணியிருந்தவனிற்கு, அவர் பத்து நிமிடங்களை அளித்து ஓய்வெடுத்துவிட்டு வர சொன்னது ஆச்சரியத்தையே தந்தது.

தன் முதலாளி கண்களை விட்டு மறைந்ததும், தோட்டக்காரனிடம் இதைப் பற்றி விசாரித்தான்.

“நீ வேலைக்கு புதுசுல… அதான் உனக்கு தெரியல… ஐயா எப்போவுமே இப்படி தான்… தட்டிக் குடுத்து வேலை வாங்குறதுல அவர மிஞ்ச ஆளே கிடையாது… அவரு பிள்ளைங்களும் அவர மாதிரியே தான்… என்ன சின்னவருக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்… ஆனா பெரியவரு அப்படியே அவங்க அம்மா மாதிரி… அம்மா ரொம்ப சாந்தமானவங்க… வேலைக்காரங்கள அதட்டிக் கூட வேலை வாங்க மாட்டாங்க…”

“ஓ… இங்க எல்லாருமே நல்லவங்களா தான இருக்காங்க… அப்போ எனக்கு முன்னாடி வேலை பார்த்தவன் ஏன் என்ன பயமுறுத்திட்டு போனான்…”

“ஹ்ம்ம்… நான் தான் சொன்னேன்ல… சின்னவருக்கு கொஞ்சம் கோபம் ஜாஸ்தின்னு… அவரு வந்தப்போ இவன் கதவ திறக்க லேட் பண்ணிட்டான்… அதான் உடனே வேலைய விட்டு தூக்கிட்டாரு…”

அந்த காவலாளியின் முகத்தை பார்த்தவன், “நீ பயப்படாத… அவரு இங்க ரொம்ப நாள் தங்கமாட்டாரு… ஏழு வருஷமா வெளிநாட்டுல படிச்சுட்டு, இப்போ தான் இங்க வந்திருக்காரு… இந்த ஊருல இருந்தாலும், அவங்க மாமா வீட்டுல தான் இருப்பாரு… எப்போவாவது தான் இங்க வருவாரு…” என்று அவனிற்கு ஆறுதல் கூறினான்.

அக்காவலாளியும், ‘சின்னவர்’ என்றழைக்கப்படும் அவனிடம் சிக்கிவிடக் கூடாது என்று மனதில் உருப்போட்டுக் கொண்டே ஓய்வெடுக்க கிளம்பினான்.

உள்ளே சென்ற மனிஷோ, தன் காதல் மனைவியின் செய்கைகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

பல்லவி, மனிஷின் காதல் மனைவி… இந்த மாளிகையை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியவர். இவ்வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாது இருப்பவர். கடிந்து பேசத் தெரியாதவர். எவ்வித சூழலிலும் தன் அமைதி கொண்டே அனைவரையும் கவர்பவர். திருமணத்திற்கு முன்பு வரை தன் சகோதரன் சொல் தட்டாமல் வாழ்ந்தவர், திருமணத்திற்குப் பின், தன் பதிக்கேற்ற பத்தினியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். சுருங்கச் சொன்னால், தன் குடும்பத்தையே உலகமாய் பாவிக்கும் குடும்பப் பெண்களில் இவரும் ஒருவர்.

சாமிப் படங்களுக்கு ஆரத்தி காட்டிக் கொண்டிருக்கும்போதே தன் கணவனின் வரவை அறிந்தவர், பூஜை அறையின் வேலைகளை வேகவேகமாக முடித்தார். கணவனிற்கேற்ற பதத்தில் குளம்பியைக் கலந்தார், அதை எடுத்துக் கொண்டு வரும்போது, கணவனின் பார்வையில் எப்போதும் போல் அவருக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது.

“ஹே ஜான்… என்னதிது… என்னமோ இன்னைக்கு தான் உன்ன பொண்ணு பார்க்க வந்திருக்க மாதிரி வெட்கப் படுற…” என்று கண்சிமிட்டி வேண்டுமென்றே அவரை வம்பிழுத்தார் மனிஷ்.

அவரின் சுத்தமான தமிழ் உச்சரிப்பில், ‘எல்லாம் தனக்காக…’ என்ற கர்வம் தோன்ற மனம் மயங்கினார் பல்லவி.

மனிஷ் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். பரம்பரை பணக்காரர்களாக இருந்தவர்கள், மனிஷின் தாத்தாவின் மெத்தனப் போக்கால், சிறிது சிறிதாக செல்வத்தை இழந்தனர். மனிஷின் தந்தை தலையெடுத்ததும், ஓரளவிற்கு இழந்ததை மீட்டெடுத்தனர். மனிஷ் தொழிலில் கால் பதித்ததும், அசுர வளர்ச்சியைக் கண்டது அவர்களின் தொழில்.

இன்று இந்தியாவில் முதல் பத்து தொழிலதிபர்களில் மனிஷும் ஒருவர். இவர் ஆரம்பித்த, ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸ் பல குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்து வருகிறது. கடந்த முப்பது வருட உழைப்பில், அவர் கால் பதிக்காத துறைகளை எண்ணிவிடலாம். அந்தளவிற்கு ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸின் வளர்ச்சி இருந்தது.

தன் முப்பதாவது வயதில், சென்னையில் தன் தொழிலை விரிவு படுத்துவதற்காக வந்த மனிஷிற்கு, அவரின் வாழ்க்கையையே மாற்றிய நிகழ்வு தான் பல்லவியை சந்தித்தது.

எந்தவொரு தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தை நடக்கும் முன், கடவுளை வழிபடுவது, மனிஷின் வழக்கம். அது போலவே, அன்றும் ஒரு கோவிலில் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தவரின் செவிகளில் மெல்லிய கொலுசொலி கேட்க, மெல்ல கண்களைத் திறந்தவர், பல்லவியின் அழகில் மயங்கித் தான் போனார்.

பல்லவியின் தோற்றம் மட்டுமல்ல குணமும் அவரை ஈர்க்கவே, இவ்வளவு நாட்கள், கல்யாணத்தைப் பற்றிய நினைவே இல்லாதவர், ஒரே மாதத்தில் பல்லவியிடம் காதலை சொல்லி, அவர் வீட்டில் பேசி, பல்லவியின் ஒரே உறவான அவளின் சகோதரன் கைலாஷின் அனுமதி பெற்று, பல்லவியை தன் மனையாளாக்கிக் கொண்டார்.

இதில் அவர் மிகவும் சிரமப் பட்டது, பல்லவியின் விருப்பம் அறியவே… பல்லவி அவ்வளவு சீக்கிரம் மனிஷின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர் இல்லாமல் தனியாக வளர்ந்ததால் உண்டான பாதுகாப்பற்ற உணர்வோ, தினந்தோறும் கேள்விப்படும் காதல் ஏமாற்றங்களோ, வாய்ப்பு கிடைத்தால் பழிப்பதற்காகவே காத்திருக்கும் சமுதாயமோ… ஏதோ ஒன்று மனிஷின் காதலை ஏற்பதற்கு முட்டுக் கட்டையாக இருந்தது.

மிகவும் சவாலான சூழ்நிலைகளையும் அசாதாரணமாகக் கையாளும் மனிஷிற்கு பல்லவியின் சம்மதம் பெறுவது கடினமாகவே இருந்தது. இரு வாரங்களாய் தொடர்ந்து பேசி, பல்லவியின் மனதைக் கரைத்தவருக்கு அடுத்த சவாலாக இருந்தது கைலாஷ், பல்லவியின் தம்பி.

இருவருக்குமிடையே உள்ள வேறுபாடுகளைச் சொல்லி மனிஷை நிராகரித்தான் கைலாஷ். அதில் முதலாவதாக அவன் கூறியது மொழி. மனிஷிற்கு ஹிந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது. பல்லவியோ தமிழ் மட்டுமே நன்றாக தெரிந்தவர். பள்ளியிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றதால், ஆங்கிலம் ஓரளவிற்குத் தான் தெரியும். இதுவே இருவரும் சேர பெரிய தடையாக இருந்தது.

அடுத்த ஒரு வாரம், மனிஷ் பல்லவியைக் காண வரவில்லை. இவ்வளவு நாட்கள் பின்னாடியே சுற்றியவர், ஒரு வாரமாக வரவில்லை என்பது பல்லவியைத் தேடத் தூண்டியதோ… தலைவனைக் காணாத தலைவியாய் துடித்தவர், அந்த கணத்தில் தன் காதலை உணர்ந்தார். மனிஷின் வருகைக்காக காத்திருந்தார்.

அன்று கவலையுடன் கோவிலுக்கு கிளம்பிய பல்லவி கண்டது, பட்டு வேட்டி சட்டையில் அழகாக வந்திருந்த மனிஷைத் தான். அக்காவையும் தம்பியையும் மேலும் அதிர்ச்சியடையச் செய்தது, அவர் பேசிய தமிழ்.

ஆம் காதலி(க்)ற்காக ஒரே வாரத்தில் சுமாராக இல்லாமல் நன்றாகவே தமிழ் பேசக் கற்றுக் கொண்டார் மனிஷ். அவரின் இச்செயலில் பல்லவி முடிவே செய்து விட்டார், மனிஷ் தான் தன் வாழ்க்கைத் துணையென.

ஆனாலும் கைலாஷ் திருப்தியடையாதவனாய், தமக்கையை அவ்வளவு தொலைவு கல்யாணம் செய்து கொடுத்து, தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று அடுத்த வாதத்தை முன் வைக்க, ஒரே நொடியில் அதற்கு தீர்வு கூறினார் மனிஷ்.

தன் ஒட்டுமொத்த தொழிலையும் சென்னைக்கு மாற்றி விடுவதாகவும், இனி சென்னையிலேயே இருப்பதாகவும் வாக்களித்தார்.

அதற்கு மேல் ஒன்றும் கூற முடியாத கைலாஷ், தன் தமக்கையைப் பார்க்க, அவரின் விழியிலேயே மனிஷ் மேலிருக்கும் காதலைக் கண்டு கொண்டவன், மனிஷிற்கு தன் சம்மதத்தை தெரிவித்தான்.

மனிஷும் பல்லவியும் தங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, அதைக் கலைக்கும் விதமாய், “குட் மார்னிங் டேட்… குட் மார்னிங் மா…” என்றவாறே இறங்கி வந்தான் கௌரவ் வர்மா, மனிஷ் – பல்லவி தம்பதியின் மூத்த மகன்.

அவனிற்கு பின் தங்கள் இரண்டரை வயது மகள் சுர்வியுடன் இறங்கினாள் தீப்தி கௌரவ் வர்மா.

“மார்னிங் மாமா… அத்தை… காபி குடிச்சுட்டீங்களா மாமா…?”

“இப்போ தான் மா குடிச்சேன்… உங்க அத்தை கையால போட்ட காபி தனி டேஸ்ட் தான்…” என்றார் பல்லவியைப் பார்த்தபடி…

பல்லவியோ, ‘சிறியவர்கள் முன்பு என்ன இதெல்லாம்…?’ என்பது போல முறைத்தார்.

கௌரவ்வும் தீப்தியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“டேட், நான் கூட பெட்-காபி குடிச்சுருப்பீங்கன்னு நெனச்சேன்… நீங்க என்னடானா நடு வீட்டுல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று கௌரவ் கேட்க…

“டேய் இது நான் கட்டுன வீடு டா… எங்க வேணா என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணுவேன்… நீ எதுக்கு டா அத கேக்குற…” என்றார் மனிஷும் அவனிற்கு சளைக்காதவராய்.

பல்லவி தான் இவர்களின் விவாதத்தைக் கண்டு தலையில் அடித்தவராக, தன் மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இவ்வளவு நேரமும், தாயின் தோளில் தூக்கக் கலக்கத்தில் இருந்த சுர்வி, தன்னை யாரும் கண்டு கொள்ளாததால் உண்டான கோபத்தில், தாயிடமிருந்து இறங்கி, மனிஷின் மேலேறி அமர்ந்தாள். அவளின் செயலில் சிரித்தவர், இதே போல தான் தன் இளைய மகனும் அவனின் சிறு வயதில் தன்னிடம் ஒட்டிக் கொண்டே திரிந்ததை எண்ணி பெருமூச்சு விட்டார்.

“தாத்தா, சித்து எப்போ…” என்று கேட்க…

அவளின் கேள்வியைப் புரிந்து கொண்ட குடும்பத்தினருக்கு, அப்போது தான் அவன் இன்று வருவதாகக் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது.

“ராஜா, கண்ணா எப்போ வருவேன்னு சொன்னான்…” என்று கேட்டார் பல்லவி.

“கரெக்ட் டைம் சொல்லல ம்மா… என்னைக்கு அவன் சொன்ன டைமுக்கு வந்திருக்கான்…” என்று கடைசி வரியை முணுமுணுத்தான் கோபத்தில்.

ஆம் கோபம் தான்… வெளிநாட்டில் தன் எம்.பி.பி.எஸ் எம்.எஸ்ஸை வெற்றிகரமாக முடித்து, ஒரு மாதத்திற்கு முன்னர், நாடு திரும்பியவன், இரு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தான். அதற்கு பின் தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாகக் கூறிக் கிளம்பியவன், இன்று தான் வருவதாய் கூறியிருந்தான் அவன்.

கௌரவ்விற்கு நன்கு தெரியும், தன் தாய்க்கு தன்னைக் காட்டிலும் தன் தம்பியின் மீது கொஞ்சமே கொஞ்சம் பாசம் அதிகம் என்று. அதை அவன் பெரிதாக என்றுமே எண்ணியதில்லை. அதுவும் ‘அந்த’ சம்பவத்திற்கு பின்னர், அனைவருமே அவனைத் தாங்கினர். இவ்வளவு பாசம் வைத்திருக்கும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காமல், ஊரிலிருந்து வந்தவுடன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றது அவனிற்கு வருத்தமே… அந்த வருத்தமே கோபமாய் வெளிப்பட்டது.

அவனின் முணுமுணுப்பு அருகிலிருந்த தீப்திக்கு நன்றாகக் கேட்டது. அவள் தான் அவன் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு, கண்களால் ஆறுதல் கூறினாள்.

தீப்தி கூட அவனிடம் இதுவரை சரியாக பேசியதில்லை… இவர்களின் திருமணத்திற்கு முன்பே வெளிநாடு சென்று விட்டதால், அவ்வப்போது வீடியோ காலில் பேசுவதோடு சரி… ஒரு மாதத்திற்கு முன் வீட்டிற்கு வந்தபோது தான் நேரில் சந்தித்தாள்.

ஆனால், சுர்வியோ அவன் வந்த பின்னர், அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தாள். வீடியோ காலிலேயே நன்றாக பேசுவார்கள் இருவரும்… அது மட்டுமில்லாமல், அவன் வந்த பொது, சுர்விக்காக பொம்மை, சாக்லேட்ஸ் என்று விதவிதமாக வாங்கி வந்ததால், அவன் பின்னாடியே சுற்றினாள் அந்த குட்டி.

பல்லவியோ தன் ஆசைக் கண்ணன் எப்போது வருவான் என்று காத்திருக்க, மனிஷ் தன் மனைவியின் முகம் பார்த்தே அவரின் மனதில் இருப்பதை அறிந்தவருக்கு கவலை ஏற்பட்டது.

அந்த கவலைக்கு காரணம், அவரின் இளைய மகனே… அவனைப் பற்றி அவர் கேள்விப்படும் விஷயங்கள் எதுவும் நல்லதாக அவருக்கு படவில்லை… அவனின் வளர்ப்பில் எங்கோ தவரியதாக உணர்ந்தார்.

இவ்வாறு அவர்கள் ஒவ்வொருவரின் மனமும், ஒவ்வொரு உணர்ச்சியின் பிடியில் இருக்க, இவர்களின் எண்ணத்தின் நாயகனோ, அங்கு தன் நாயகியை ரசித்துக் கொண்டிருந்தான்.

நினைவுகள் தொடரும்...
 

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
ஹாய் பிரெண்ட்ஸ்... இது ரொம்ப லேட்டான பதிவு தான்... ஆனா எனக்கு எழுத நேரமே கிடைக்குறது இல்ல... ரொம்ப சாரி இப்படி லேட்டா எபி குடுக்குறதுக்கு... இப்படி லேட்டா எபி குடுக்குறதுனால படிக்கிறதுல கன்டினியூட்டி போய்டும் எனக்கு புரியுது... சோ உங்ககிட்டயே கேக்குறேன்... முழுசா எழுதுனதுக்கு அப்பறம் ஒவ்வொரு எபியா போடவா... இல்ல இந்த மாதிரியே எப்பப்போலாம் எழுத்துறேனோ அப்ப போடவா... நீங்களே சொல்லுங்க ரீடெர்ஸ்... கதைய படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க...
 

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
நினைவு 2


பெங்களூரு… இரவு 9 மணிக்கெல்லாம் அந்த பிரபல ஹோட்டலுடன் கூடிய பப்பில் கூட்டம் களைக்கட்டத் துவங்கியது. மந்தமான வெளிச்சத்தில் ஆங்காங்கே மட்டும் பச்சை, சிவப்பு என்று வெவ்வேறு வண்ண ஒளிக்கற்றைகளைத் தூவியபடி இருக்க, காதை பிளக்கும் இசையை ஒலிக்கவிட்டிருக்க, அங்கிருப்பவர்களோ வெளியுலகக் கவலைகள் இல்லாமல், தங்களை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே நுழைந்தான் அவன். ஆறடிக்கு மிஞ்சிய தன் உயரத்தால் மற்றவற்களையெல்லாம் குள்ளமாக்கியவாறு, தன் சிக்ஸ்-பேக் உடல் தெரியுமாறு டைட் ஃபிட் டி-ஷர்ட்டும் அங்கங்கே கிழித்துவிட்ட முரட்டு ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவனின் கூர்பார்வையை மறைத்தபடி கண்களில் இருந்த ரேபான் கிளாஸும், கைகளில் அணிந்திருந்த பிரெமோண்ட் வாட்சும் அவனின் செழுமையை உணர்த்த, அழகும் பணமும் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்ட சில பெண்களின் பார்வை இவனை நோக்கித் திரும்பியது.

அதை உணர்ந்தவனின் முகத்தில் எப்போதும் போல அலட்சிய பாவம் வந்து ஒட்டிக்கொண்டது. ‘பணம் தான் வாழ்க்கை’ என்ற கொள்கையில் ஊறிப் போனவனிற்கு இப்பார்வைகள் எல்லாம் தன் செல்வத்திற்காக தான் என்ற எண்ணம் வேரூன்றியிருந்தது. அதில் அவனிற்கு பெருமையே!!!

தன் செல்வத்தின் மேல் எவ்வளவு கர்வமோ, அதே அளவு கர்வம் தன் உடலழகிலும் அவனிற்கு உண்டு. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தன் சிக்ஸ்-பேக் உடம்பை பேணிக் காப்பதில் அலாதி ஆர்வம் அவனிற்கு.

ஒரு முறை வாசலில் நின்று அனைத்தையும் உற்று கவனித்தவன், தன் நண்பர்கள் குழுமியிருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றான்.

அப்போது அவன் அருகில் வந்த ஒரு நவநாகரீக மங்கை, “ஹாய் ஹாண்ட்சம்... ஷால் வி டான்ஸ்…” என்று குழறினால். உள்ளே சென்ற மதுவினாலோ, இல்லை அவனைக் கண்டு மயங்கினாளோ… இது தான் சாக்கென அவனின் மேல் ஒட்டிக் கொண்டிருந்தவளை, துச்சமாக பார்த்தவன், சட்டென்று விலகினான்.

அவளின் முழு பாரத்தையும் அவனின் மேல் போட்டிருந்ததால், அவன் விலகியதும் கீழே விழுந்தாள். அவனோ கண்ணடியைக் கழட்டி, அவளை நோக்கி ஒரு கேலிப் பார்வையை வீசியவன், தன் வழியில் செல்லலானான்.

அவளிற்கோ, அவன் அவளை மதிக்காதது ஒரு புறம், அனைவர் முன்பும் கீழே விழுந்தது ஒரு புறம் என்று இரு மடங்கு கோபத்தை தந்தது அவனின் செய்கை. ஆனால் அவளால் என்ன செய்து விட முடியும்.

இந்தியா முழுவதும் கொடி கட்டிப் பறக்கும் ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ஸின் இளைய வாரிசான அவனை, வைபவ் வர்மாவை, இப்போது தான் பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் கத்துக்குட்டியான அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்தவள், மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறி விட்டாள்.

இப்படி செல்லும் இடமெல்லாம், தன் அலட்சியத்தால் எதிரிகளை சம்பாத்தித்துக் கொண்டிருப்பதை அறியாமல், தன் நண்பர்களுடன் சென்று கலந்து கொண்டான் வைபவ்.

அதே நேரம், அதே ஹோட்டலின் நுழைவு வாயிலில், கைப்பேசியில் தீவிரமாக உரையாடியபடியே உள்நுழைந்தான் அவன்.

ஆறடிக்கு ஒரு இன்ச் கம்மியாக, வெண்ணையில் தோய்த்ததைப் போன்ற நிறத்தில், கூர்மையான கண்களுடன், பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு அடர்த்தியான புருவங்களுடனும், எனக்கு சிரிக்க மட்டுமே தெரியும் என்பதைப் போன்று எப்போதுமே விரிந்த இதழ்களுடனும், பெண்கள் கண்டவுடனே மயங்கக் கூடிய அத்தனை அம்சங்களும் பக்காவாக பொருந்தியிருந்தது அவனிற்கு…

அவன் அதர்வா… ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனி’ஸிற்கு சொந்தமான ‘எல் கேர் ஹாஸ்பிடல்’லின் சென்னை கிளையில் தான் இதய நிபுணனாக பணியாற்றி வருகிறான். பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தன் கலகல பேச்சால் அனைவரின் இதயங்களையும் திருடி விட்டான் அந்த இதய மருத்துவன்.

பேச்சு மட்டுமல்ல, அவனின் அசாத்திய அறிவாற்றலாலும், நோயாளிகளிடம் அவன் காட்டும் அக்கறையும் பொறுமையும், அவனை பணிக்கு சேர்ந்த சில காலத்திலேயே அங்கு பிரபலமடையச் செய்தது. அதன் காரணமாகவே பெங்களூருவில் நடைபெறும் கலந்தாய்விற்கு அவனின் ஹாஸ்பிடல் சார்பாக அவன் கலந்து கொள்ள வந்திருந்தான்.

கலந்தாய்வின் கடைசி நாளான இன்று, தன் நண்பர்களிடம் (அங்கிருந்த நாலு நாட்களில் வெவ்வேறு இடத்திலிருந்து வந்தவர்களை பேசியே தன் நட்புப் பட்டியலில் இணைத்திருந்தான்…) பேசி விடைபெற்று வர தாமதமாகியதால் அவனின் தந்தையின் கோபத்திற்கு ஆளாகி, இப்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

“ப்பா… ப்ளீஸ் ப்பா… நான் தான் சொல்றேன்ல… நாளைக்கு ஏர்லி மார்னிங் பஸ் பிடிச்சு வந்துவேன்… என் செல்ல வெங்கில… நோ கோபம்…” என்று பேசிப் பேசியே கரைத்துக் கொண்டிருந்தான்.

அந்த பக்கம் என்ன சொன்னர்களோ… “இதோ இப்போ போய் சாப்பிடுடுவேன்… நீங்க சாப்பிட்டீங்களா..? மாத்திரை எல்லாம் கரெக்டா போட்டீங்களா..?” என்றான் சீரியஸ் மோடிற்கு தாவியபடி…

மீண்டும் மறுப்புறம் பேசியதைக் கேட்டவன், “சரி ப்பா… ரூம் போனவொடனே வீடியோ கால் பண்றேன்…” என்றவன் அவரை வம்பிழுக்க நினைத்து, “ஹ்ம்ம் அவனவன் இந்நேரத்துக்கு கேர்ள்-பிரென்ட் கூட வீடியோ கால் பண்ணி பேசிட்டு இருப்பான்… எல்லாம் என் நேரம்…உங்க கிட்ட பேச வேண்டியதாயிருக்கு…” என்றதும் அவனின் தந்தை சொல்லியதைக் கேட்டவன்…

“நீங்க சொல்லிட்டீங்கள… இதுக்காகவே இன்னும் ஒரே மாசத்துல ஒரு பொண்ண லவ் பண்ணிக் காட்டுறேன்…” என்று சபதம் போட்டபடி அழைப்பைத் துண்டித்தான்.

அவன் போட்ட சபதத்தை எண்ணி அவனிற்கே சிரிப்பு வர, புன்னகையோடு நடக்க ஆரம்பித்தவன், எதிரில் வந்தவனை கவனிக்காமல் இடிக்க, அதே புன்னகையுடன் “சாரி பாஸ்…” என்றான்.

எதிரில் இருந்த வைபவோ, அவனைக் கவனிக்க கூட நேரமில்லாதவனாய் பரபரப்புடன் அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றது, பெங்களூருவில் இருக்கும் எல் கேர் ஹாஸ்பிடலுக்கு தான். அங்கு ஏற்கனவே இருந்த நண்பர்களின் அருகில் சென்றவன், “எங்க டா அவ..?” என்று கேட்டான். அவன் குரலிலேயே அவனின் அடக்கப்பட்ட கோபத்தை உணர்ந்த நண்பர்கள், அவளிருந்த அறையைக் காட்டினர்.

புயலென உள்ளே நுழைந்தவன், “ஹே லூசா நீ… சாகுறதுனா சும்மா சாக வேண்டியது தான… எதுக்கு என்ன இழுத்து விடுற… என்னமோ உருகி உருகி உன்ன லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி லெட்டர் எழுதி வச்சுருக்க… சொல்லு டி நான் உன்ன லவ் பண்றேன்னு எப்பயாச்சும் சொல்லிருக்கேனா…” என்று அவளின் கழுத்தைப் பிடித்து நெறிக்க, அவளின் நல்ல நேரமோ அவனின் நண்பர்கள் உள்ளே வந்து அவனைத் தடுத்திருந்தனர்.

நடந்தது இது தான். அவள் கனிஷ்கா, ஆந்திர அமைச்சரின் ஒரே மகள். வைபவ் வெளிநாடு சென்றிருந்தபோது, இங்கிருந்த அவனின் நண்பர்களின் நட்பு வட்டம் விரிந்திருக்க, அதில் ஒருவள் தான் இந்த கனிஷ்கா.

வைபவ் இந்தியா திரும்பியதும் பத்து நாட்கள், தன் நண்பர்களுடன் கழிக்க சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்ய, அதில் கலந்து கொண்ட கனிஷ்கா வைபவை பார்த்தவுடன் காதல் கடலில் விழுந்துவிட்டாள்.

வைபவோ அவளிடம் பேசக் கூட இல்லை. அவனின் ஒதுக்கம் அவளை வாட்ட, ஒரு முறை மனதில் தைரியத்தை வரவழைத்து தன் காதலை அவனிடம் சொல்ல, அவனோ பரிகாசமாய் சிரித்து அவளின் காதலை நிராகரித்தான்.

அவனைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க… அதற்கிடையில் காதல், கல்யாணம் எல்லாம் அவனின் இலட்சியத்திற்கு ஏற்படும் தடையாகக் கருதினான்.

தன் நிராகரிப்பைக் கூட பரிகாசமாய் தான் வெளிப்படுத்தினான். ஏனெனில், அவன் தன் வாழ்நாளில் இதுவரை, தன் தாயைத் தவிர பிற பெண்களை மதித்ததே இல்லை.

இப்படிப்பட்டவனிற்காக தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ள துணிந்த, அந்த பேதையின் காதலை என்னவென்று சொல்வது…

மற்ற பெண்களை மனிதர்களாக கூட மதிக்காதவன், தன் கர்வம் அனைத்தும் அழிந்து அவளிற்காக அவளிடம் கெஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வான்…

தன் நண்பர்களின் கெஞ்சலால் அவ்வறையை விட்டு எரிச்சலுடன் வெளியேறியவனின் அலைப்பேசி ஒலிக்க, எடுத்தவனின் முகம் பாறையென இறுகியது.

“என்ன நடக்குது மருமகனே…?” என்ற குரலில் எப்போதும் இருக்கும் கனிவு இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன், அதே எரிச்சலுடன் அங்கு நடந்ததை கூறினான்.

“ப்ச்… படிச்சு முடிச்சு வந்த உன்ன பட்ட தீட்டி வைரமா ஜொலிக்க வைக்க நான் பிளான் பண்ணா, இந்த நேரத்துல பொண்ணு விஷயம்…. ஹ்ம்ம் எனக்கு இதெல்லாம் சரியா படல மருமகனே… இந்த சமுகத்துல நல்ல பதவி, புகழ்னு சம்பாதிச்சுட்டா, மத்ததெல்லாம் தானா வரும் மருமகனே… ஆனா இப்போ நீ பொண்ணு பின்னாடி சுத்துன, அப்புறம் அந்த பதவி, புகழ் சம்பாதிக்கிறதெல்லாம் நீ நெனச்சாலும் நடக்காது…” என்று தன் உயரிய அறிவுரையை வைபவிற்கு தந்தார் அவனின் தாய்மாமா கைலாஷ்.

தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று சொன்ன பின்பும், தனக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் தன் தாய்மாமனை எண்ணி சிறிது கோபம் கொண்டவனாக, பல்லைக் கடித்துக் கொண்டு, “மாமா, என் வாழ்க்கைல எதுக்கு ப்ரையாரிட்டி குடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… நான் உங்க வளர்ப்பு மாமா…” என்றான் அவரைக் குளிர்விக்கும் விதமாய்…

அவன் எய்த அம்பு சரியாக வேலை செய்ய, “சந்தோஷம் மருமகனே… எப்போ இங்க வர…?” என்றார்.

“நாளைக்கு ஏர்லி மார்னிங் கிளம்பிடுவேன், மாமா…”

மேலும் சிறிது நேரம், தங்கள் வருங்கால திட்டங்களைத் தீட்டியப் பின்னர் ஓய்வெடுக்கச் சென்றனர் அந்த இருவர் குழு… இவர்களின் (சதித்)திட்டங்களால் பாதிக்கப் படுவது யாரோ…

****

“இங்க பாரு கண்ணா… அந்த பக்கம் போக கூடாது…”

“ராஜா நீ தான் தம்பிய பாத்துக்கணும்…”

“இல்லங்க… எனக்கு ஏதோ தப்பா தோணுது…”

தெளிவற்ற குரல்கள் ஒலித்தது. சற்று நேரத்தில், ஒரு பள்ளத்தில் கால் தடுக்கி விழும் சிறுவனின் “அம்மா…ஆ…” என்ற சத்தமும் ஒலிக்க, திடுக்கிட்டு விழித்தனர் அம்மூவரும்…

உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, மூச்சுக்கு தவிக்கும் அவள், வாயைத் திறந்து மூச்சுக்காற்றை சுவாசித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அவள் எழுந்த அதிர்வில் அவளருகே சயனித்திருந்த அவளின் அன்னை, “என்ன டி ஆச்சு…? திரும்ப அதே கனவா…?” என்று எழுந்தமார்ந்தார்.

அவரின் வெண்கலக் குரலின் சத்தத்தில் முழித்த அவளின் தந்தையும் அறைக்குள் வந்தார்.

“எல்லாம் உங்கள சொல்லணும்… டூர் போன எடத்துல சும்மா இருக்காம, அப்பாவும் பொண்ணும் ட்ரெக்கிங் போறேன்னு போய்ட்டு, அங்க ஒரு சின்ன பையன் மலை மேலயிருந்து கீழ விழுந்தத பார்த்தன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும், அதுவே கனவுல வந்து பயந்து எழுந்துக்குறா… கல்யாணம் பண்ற வயசுல, இவளுக்கு இப்படி ஒரு பிரெச்சனை இருக்குன்னு வெளிய தெரிஞ்சா எப்படி இவளுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்றது…” என்று வழக்கம் போல புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அங்கு தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்துக் கொண்டனர்.

மகளை மனைவியின் புலம்பலிலிருந்து காக்க எண்ணிய தந்தையாய், “அம்மாடி பாவ்னா, நீ அப்பா ரூம்ல போய் படும்மா…” என்க…

இது தான் தப்பிக்க ஒரே வழி என்று நினைத்தவள், “சரி ப்பா…” என்று நல்ல பிள்ளையாக தலையாட்டியபடி தாயைப் பார்க்காமல் எழுந்து சென்றாள்.

அவள் பாவ்னா… பெயருக்கேற்றார் போல அனைத்து பாவனைகளையும் தன் கண்களில் காட்டிவிடும் திறமை கொண்டவள். எப்போதும் சிரித்த முகம், துறுதுறு பேச்சு என்று அவளை சுற்றியிருப்போரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவளே. அதே போல் யாராவது உதவி என்று வந்தால், சிறிதும் தயங்காமல், அதனால் தனக்கு என்ன பிரச்சனைகள் வரும் என்று கூட யோசியாமல் உதவிடுவாள். இவளின் இந்த உதவும் மனப்பான்மையால், எதிர்காலத்தில் இவளவன் என்ன பாடுபட போகிறானோ…

மொத்தத்தில் கோதுமை நிறத்தில் இருக்கும் ஐந்தரை அடி அழகுப் புயல் இவள். ஒருவன் வாழ்வில் புயலாகவும், மற்றொருவன் வாழ்வில் தென்றலாகவும் வீசக் காத்திருக்கிறாள்!!!

*****

பெங்களூரு ஹோட்டலில்…

நேரம் நள்ளிரவு 12 மணி… கனிஷ்காவுடனான பிரச்சனையில் சோர்ந்தவன், தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டு, 10 மணியளவிலேயே தன்னறைக்கு வந்துவிட்டான், வைபவ். படுத்தாலும் தூக்கம் வரமாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய, அவனிற்காகவே காத்திருந்த ஒயின் பாட்டிலைத் திறந்தவன், மெல்ல அதை தொண்டையில் சரித்துக் கொண்டான்.

அதைக் குடித்ததும் சிறிது நேரத்திலேயே தன்னை மறந்த உறக்கத்திற்கு சென்றவன், கனவில் கண்ட அந்த சிறுவனின் “அம்மா…ஆ…” என்ற சத்தத்தில் தூக்கிவாரிப்போட எழுந்தமார்ந்தான்.

குடித்த போதை தெளிய, அந்த ஆறடி ஆண்மகனும் கனவின் உபயத்தால் வேர்த்து போய் அமர்ந்திருந்தான். 21 ஆண்டுகளாக தன்னை ஆட்டுவிக்கும் அந்த கனவினால் அவனிற்கு பயமே…

ஆனால் தன் பயத்தை அவன் யாரிடமும் பகிரவில்லை… ஏன் அவன் தன் குருவாக கருதும் மாமனிடமே இதுவரை அந்த கனவைப் பற்றிக் கூறியதில்லை…

இனிமேல் தூங்க முடியாது என்று தெளிவாக தெரிந்ததினால், வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான் வைபவ்.

இங்கு வைபவின் நிலை இதுவென்றால், எதிர்த்த அறையில் இருந்த அதர்வாவோ, தான் கண்ட கனவிலிருந்து விழித்தவன், தன் தந்தையின் போட்டோவை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

தூக்கத்தின் நடுவே எழுந்ததால், தலைவலியும் மண்டையை பிளக்க, சூடான நீரை அருந்தி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

இந்த கனவு எதற்காக வருகிறது என்று அவன் நினைக்காத நாளில்லை. ஒரு முறை தன் தந்தையிடம் நடந்ததைக் கூறிய போது அவரின் எதிர்வினையைக் கண்டு, இனிமேல் அவரிடம் அதைப் பற்றிக் கூறக் கூடாது என்ற முடிவிற்கு வந்தான். இதோ இப்போது வரை அதைக் காத்தும் வருகிறான்.

ஒரு பெருமூச்சுடன், தன் பயணப் பொதியை எடுத்து வைத்துக் கிளம்ப ஆயத்தமானான்.

இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள்… இதுவரை ஒருவரையொருவர் அறிந்திடாதவர்கள்… ஆனால் அவர்களுக்கு வரும் கனவு மட்டும் ஒற்றுமை உடையது… இது முன்ஜென்மத்து தொடர்ச்சியா… இறந்த காலத்தின் மிச்சமா… எதிர்காலத்தின் துவக்கமா…

நினைவுகள் தொடரும்…
 

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
ஹாய் பிரெண்ட்ஸ்... அடுத்த எபியோட நான் வந்துட்டேன்... படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ மறக்காம சொல்லுங்க... இந்த எபி படிச்சுட்டு இது என்ன மாதிரியான கதைன்னு உங்க கெஸ்ஸ கமெண்ட்ல சொல்லுங்க...
 

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
நினைவு 3

தூக்கம் முற்றிலும் அகன்றவனாய், அப்போதே, கிளம்ப ஆயத்தமானான் வைபவ். தன்னை சுத்தப்படுத்தியவன், அங்கங்கு இரைந்து கிடந்த பொருட்களை தன் பையில் தூக்கிப் போட்டவாறு, தன் நண்பர்களுக்கு கிளம்புவதாக செய்தி அனுப்பினான். அவர்கள் இன்னமும் மருத்துவமனையில் தான் இருந்தனர் என்பதை அறிந்தும், சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையில் கவனமாயிருந்தான் வைபவ்.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, அறையைக் காலி செய்து கிளம்ப, ஒரு மணி நேரம் பிடித்தது.

அந்த விடிந்ததும் விடியாத காலைப் பொழுதை ரசிக்கக் கூட மனமில்லாதவனாய், தன் மகிழுந்திற்காக காத்துக் கொண்டிருந்தான். அப்போது தான் இன்று செல்வதை வீட்டினரிடத்தில் தெரிவிக்க வில்லை என்பது நினைவிற்கு வந்தது. உடனே அலைப்பேசியில் தன் தமையனை தொடர்பு கொண்டான்.

அவனின் போதாத காலமோ, எதிர்முனையில் அழைப்பு எடுக்கப்படவில்லை. அவனும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் தனக்கு பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன், ஒரு கணம் அதிர்ந்து தான் போனான்.

அவன் கண்டது இதுவே… யாரோ ஒருவன் கத்தியை தன் முதுகிற்கு குறி பார்க்க, மற்றொருவன் அவனை தடுத்துக் கொண்டிருந்தான். அதற்குள் அங்கிருந்த ஒரு சிலர் நடக்கவிருந்த விபரீதத்தை உணர்ந்து அங்கு வந்து அவர்களை விலக்கினர்.

முதலில் சற்று அதிர்ந்திருந்த வைபவ், சுதாரித்தவனாய் தன்னை குத்த வந்தவனின் சட்டையைப் பிடித்து, “ப்ளடி ராஸ்கல், ஹொவ் டேர்... யாரு டா நீ…?” என்று சில கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து அவனை காய்ச்சிக் கொண்டிருந்தான்.

அவன் கையில் சிக்கியவனோ, அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை வைபவிற்கு எரிச்சலைத் தர, அவனை அடிக்கச் சென்றவனின் கரங்களை பற்றி யாரோ தடுக்க, தன்னைத் தடுத்தவனை திரும்பிப் பார்த்தான் வைபவ். அங்கு தன் வாடா புன்னகையுடன் நின்றிருந்தான் அதர்வா.

“பாஸ்… நீங்க ஏன் இப்படி அடிச்சுக்கிட்டு உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க… எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்…” என்று கூற…

அதர்வாவை மேலும் கீழும் பார்த்த வைபவ், ‘நீ சொல்வதை நான் கேட்பதா…’ என்ற நக்கல் பாவனையுடன் அவனை நெருங்கினான்.

அதற்குள் விஷயத்தை அறிந்து ஓடி வந்த வைபவின் நண்பர்கள், அவனின் கைகளில் சிக்கியிருப்பவனைப் பார்த்து, “ராஜேஷ், உனக்கு என்ன அவ்ளோ அவசரம்… நாங்க சொல்றத முழுசா கூட கேட்காம, இங்க வந்திருக்க…” என்று திட்ட ஆரம்பித்த நண்பர்கள் குழு, அந்த ராஜேஷ் எனப்பட்டவனின் கையிலிருந்த கத்தியைக் கண்டு நிலைமை கைமீறி விட்டதை உணர்ந்தனர்.

அதில் ஒருவன், “டேய் லூசா டா நீ… யாரு மேல தப்புன்னு தெரியாம இப்படி தான் எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவெடுப்பியா…” என்று அவனை திட்டினான்.

“இப்போ என்ன டா பண்ண சொல்றீங்க..? அதிர்ந்து கூட பேச தெரியாத பொண்ணு டா என் தங்கச்சி… அவள அப்படி ஒரு நிலைமை பார்க்க முடியல டா… பிடிக்கலனா அத பொறுமையா எடுத்து சொல்லாம்ல… எவ்ளோ ஹார்ஷா இவன் பேசியிருந்தா, அவ இந்த முடிவ எடுத்திருப்பா…” என்று கண்கள் கலங்க அவன் சொன்னதைக் கேட்டதும், ‘ஓ கனிஷ்காவோட அண்ணனா…’ என்று யோசித்தான் வைபவ்.

அப்போதும் ஒரு அலட்சிய பாவத்துடனே நின்றிருந்தான் வைபவ். சற்று முன் நடந்த சம்பவத்தை எண்ணி கோபம் கொண்டவனாக, “ஹே என்ன ஓவர் சென்டிமெண்டா பேசிட்டு இருக்க… என்னமோ டேட்டிங், மீட்டிங் எல்லாம் பண்ணி கடைசில கழட்டி விட்ட மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்க… நல்லா பணக்கார பையனா பார்த்து லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியது, ஷாப்பிங்னு சொல்லி அவன் காசுல ஓசில ஊர் சுத்த வேண்டியது, அப்பறம் வீட்டுல பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லி அவன கழட்டி விடவேண்டியது… உன் தங்கச்சியும் எங்கிட்ட இருக்க பணத்த பார்த்து தான என் பின்னால சுத்துனா…” என்று பேசிக் கொண்டே போக…

அவன் கூறியதில் மீண்டும் கோபமாக, “டேய் என் தங்கச்சிய பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுன…” என்று கூறியவாறு வைபவின் சட்டையை பிடிக்க வர, அவர்களின் நண்பர்கள் தான் இருவரையும் பிரிக்க வேண்டியதாயிருந்தது.

அதில் ஒருவன் ராஜேஷை தனியாக அழைத்துச் செல்ல, மற்றொருவன் வைபவிடம், “நீ ஊருக்கு கிளம்பு வைபவ்… போயிட்டு கால் பண்ணு… “ என்றான். மேலும் அவன் இங்கிருந்தால், இந்த பிரச்சனை பெரிதாக வாய்ப்பிருப்பதால் அவ்வாறு கூறினான்.

வைபவும் தலையசைத்து அவனிடம் விடைபெற்று தன் மகிழுந்தின் புறம் திரும்பினான்.

அப்போது அங்கு நடந்தவற்றை ஏதோ யோசனையில் பார்த்துக் கொண்டிருந்த அதர்வா கண்ணில் பட்டான்.

அதர்வா தான் தன்னைக் காப்பற்றியது என்பது நினைவிற்கு வர, அவனிடம் சென்று “தேங்க்ஸ்…” என்று கூறினான்

அவனோ தன் ட்ரேடமார்க் சிரிப்புடன், “யு ஆர் வெல்கம்…” என்று கூறியவாறு, தன் பையை தோளில் மாட்டியவாறு, அங்கிருந்து கிளம்பினான்.

ஏதோ தோன்ற, சற்று தூரம் சென்றவனை அழைத்த வைபவ், “சென்னையா..” என்று கேட்டான்.

“ஆமா பாஸ்… இனிமே பஸ் பிடிச்சு போகணும்… இந்நேரத்துக்கு பஸ் இருக்குமான்னு கூட தெரியல…” என்று அவனின் ஒற்றை வார்த்தை கேள்விக்கு ஒரு பக்கம் அளவில் பதில் கூறினான்.

“வாங்க நானும் அங்க தான் போறேன்… உங்கள ட்ராப் பண்ணிடுறேன்…” தன் உயிர் காத்ததிற்கான உபகாரமாய் வைபவ் கேட்டான்… இன்னும் சிறிது நேரத்திலேயே ‘எதற்காக இவனை வண்டியில் ஏற்றினோம்…?’ என்று வருந்தப் போவதை அறியாதவனாய்...

வண்டியில் ஏறி அமர்ந்ததிலிருந்து இதோ சென்னையை அடைய சில மணி நேரங்களே உள்ள இப்போதுவரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வருபவனைக் கண்டு இவனை தன்னுடன் அழைத்து வந்தது தவறோ என்று ஆயிரமாவது முறையாக எண்ணிக் கொண்டான் வைபவ்.

அதர்வாவோ, அவன் கேட்கிறானா இல்லையா என்பது கூட தெரியாமல், தன் சொந்த வரலாற்றை கூறிக் கொண்டிருந்தான். அப்படி தான் அவன் சென்னையில் உள்ள தங்கள் எல் கேர் மருத்துவமனையில் வேலை செய்கிறான் என்பது தெரிந்தது.

அதன் பின் தன் அப்பாவின் ‘ஏவி டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ரில் துவங்கி பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் நாய் குட்டி வரை அதர்வாவின் கதை தொடர்ந்தது.

அவனின் பேச்சை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் வைபவ் முழிக்க, அவனை காப்பாற்றவென, அவனின் அலைப்பேசியின் ரிங் டோன் ஒலித்தது. அதன் ஒலியிலேயே அழைத்தது தன் அண்ணன் தான் என்பது தெரிந்ததும், அருகில் இருப்பவனை மறந்தவனாய் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

அவன் அழைப்பை ஏற்ற அடுத்த நொடி, “சித்தூ…” என்ற மழலையின் குரல் கேட்டது.

தான் வெளிநாட்டிலிருந்து வந்ததும் வீட்டில் தங்காமல், நண்பர்களுடன் சுற்றுலா சென்றது கௌரவிற்கு பிடிக்கவில்லை என்பது வைபவிற்கு தெரியும். அதனால் அவன் தன்னிடம் பேச மாட்டான் என்பதையும் நன்கு அறிவான். தன் தந்தையையோ தாயையோ பேச வைப்பான் என்றே நினைத்திருந்தான்.

ஆனால் சுர்வி பேசுவாள் என்று அவன் நினைக்கவில்லை. ஏனெனில், அவ்வீட்டில் அவன் அடங்கும் ஒரே ஆள் சுர்வி மட்டும் தான். மற்றவர்களின் பேச்சை அலச்சியத்துடன் கடந்து செல்லும் வைபவிற்கு, சுர்வியின் பேச்சை தட்ட முடியாது… இதுவரை அவன் தட்டியதும் இல்லை...

அதனால் தான் சுற்றுலாவிற்கு செல்லும்போதும் கூட, அவள் எழுவதற்கு முன்பே அவளிடம் கூறாமல் கிளம்பியிருந்தான்.

இப்போது அவனிருக்கும் மனநிலையில், சுர்வியிடம் பேச வேண்டாம் என்று நினைத்தவன், அழைப்பை துண்டிக்க செல்ல, அதற்குள் பேச்சை துவங்கியிருந்தான் அந்த வாயாடன் (வாயாடியின் ஆண்பால்…)

“ஹாய் பாப்பு…”

தன் ‘சித்து’வின் குரல் அல்ல என்பதை உணர்ந்த சுர்வி… “யாது…?” என்றாள் மழலை மொழியில் கோபத்தை கூட்டியவாறு…

மெல்லிய சிரிப்புடன், “என் பேரு அதர்வா… பாப்பு பேரு என்ன…?” என்றான்.

“அத்…த்..வா…” என்று அவனின் பெயரை சொல்லி பார்த்தவள், பின் தனக்கு வாயில் வருமாறு சுருக்கி, “அத்து… “ என்றாள்… பின் அவளே, “பாப்பா பேது சுவி…” என்றாள்.

“ம்ம்ம் சுவி பாப்புக்கு என்ன பிடிக்கும்…?” – இப்படி ஆரம்பித்த அவர்களின் பேச்சுவார்த்தை, ஐஸ்- கிரீம், சாக்லேட், பார்க், ஊஞ்சல், டோரா, ஷின் சான் என்று ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.

இவர்களின் பேச்சை தடுக்காமல், ரசித்துக் கொண்டிருந்தான் வைபவ். ஏனோ இவர்களின் பேச்சு எரிச்சலாக இருந்த அவன் மனதை ஆறுதல் படுத்துவது போல் இருந்தது.

அந்த பக்கம், கௌரவோ, தன் மகள் ‘சித்து’ என்று அழைக்காமல், ‘அத்து’ என்று அழைத்து யாரிடம் பேசுகிறாள் என்ற சந்தேகத்தில் அதனை ஸ்பீக்கரில் போட்டான். அங்கு வேறு யாருடைய குரலோ கேட்க, “ஹலோ… வைபவ்…” என்றான்.

இப்போது அதர்வா அமைதியாக வைபவை பார்க்க, அவனோ “ம்ம்ம்” என்ற ஓசையில் தன் இருப்பை உணர்த்தினான்.

“இப்போ யாரு கூட சுர்வி பேசுனா…?” என்று கேட்டான் கௌரவ்.

“அது… என் பிரென்ட்…” என்று கூறுவதற்குள், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வேலையை அதர்வாவே எடுத்துக் கொண்டான்.

இவன் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான் என்று எண்ணியவன், அவன் பேச்சின் இடைவெளியில், “இன்னும் டென் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவேன்… வந்து பேசுறேன்…” என்றவாறே அழைப்பை துண்டித்தான்.

அடுத்த இரு நிமிடங்களில், “பாஸ் இங்கயே நான் இறங்கிக்குறேன்…” என்றான் அதர்வா.

வைபவும் ஓரமாக நிறுத்த, தன் பையை எடுத்து தோளில் மாட்டியவன், “பை பாஸ்… ஹாஸ்பிடல்ல மீட் பண்ணலாம்…” என்றான் புன்னகையுடன்.

வைபவ் புருவ சுழிப்புடன் அவனைப் பார்க்க, “என்ன பாஸ் கிட்டத்தட்ட சிக்ஸ் ஹவர்ஸ் ட்ராவல் பண்ணிருக்கோம்… இதை கூட கண்டுபிடிக்க மாட்டேனா… அதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல மிஸ்டர். வைபவ் வர்மா , எம்.எஸ் ஆன்காலஜி, எல் கேர் ஹாஸ்பிடலுக்கு வர போறாருன்னு நியூஸ் காட்டுத் தீயா பரவிட்டு இருக்குறப்போ, அவரப் பத்தி தெரிஞ்சுக்காம இருப்பேனா…” என்றான்

ஒறு நொடி அவனை மனதிற்குள் மெச்சியவன், மறுநொடியே அலட்சியத்தை முகத்தில் ஏற்றி, ஒரு தலையசைப்புடன் வண்டியை எடுத்தான்.

அதர்வாவோ அவனின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல், அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி, தன் அரட்டையை அந்த ஆட்டோ டிரைவரிடம் தொடர்ந்தான்.

வைபவோ, முதலில் மாமாவை சந்திக்கலாம் என தன் மகிழுந்தை கடற்கரை பக்கம் திருப்பினான்.

****

கடலிலிருந்து வரும் காற்று முகத்தில் அடிக்க, கடலலை ஓசையோ செவியை நிறைக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் வில்லாக்களில் சற்று பெரிதாக இருந்தது, கைலாஷ் வில்லா…

முழுவதும் நவீனமாக கட்டப்பட்ட அந்த வில்லாவிற்குள் நுழைந்தது வைபவின் மகிழுந்து.

அந்த வில்லாவை பார்க்கும் போதெல்லாம், “ஒருத்தருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு…?” என்று வைபவிற்கு தோன்றும்.

அதை தன் மாமனிடமும் கேட்டிருக்கிறான். அவரோ, “மருமகனே, நம்ம வசதியா இருந்தா மட்டும் பத்தாது… அத மத்தவங்ககிட்ட காட்டவும் தெரியணும்… நாம எத போடுறோம், எத சாப்பிடுறோம், எங்க இருக்கோம், யாரு கூட பழகுறோம்… இதை வச்சு தான் இந்த சமுதாயத்துல நம்ம மதிப்பு உயருது… இதுவும் ஒரு வித பிசினஸ் டாக்டிக்ஸ் தான் மருமகனே…” என்றார்.

இன்றும் அதே நினைப்போடு உள்நுழைந்தவனை மகிழ்ச்சியுடன் வந்து கட்டிக்கொண்டார் கைலாஷ்.

“வா வா மருமகனே… உனக்காக தான் இவ்ளோ நாள் காத்திட்டு இருந்தேன். எப்போ உன் படிப்ப முடிச்சிட்டு பிசினஸ்ல நுழைவன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்…” என்று கைலாஷ் சிரிக்கவும், வைபவும் சேர்ந்து சிரித்தான்.

அவர் பிசினஸ் என்று சொன்னதும், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும்முன் இங்கு நடந்த நிகழ்வு வைபவிற்கு நினைவு வந்தது.

மனிஷ் தன் கன்ஸ்டரக்ஷன் தொழிலை பார்ப்பதற்காக கௌரவை ஏற்கனவே பொறியியல் துறையில் சேர்ந்து படிக்கக் சொன்னார். அதே போல தன் சின்ன மகனை, தங்கள் குழுமத்திற்கு கீழியங்கும் மருத்துவமனைகளை நிர்வகிக்க வேண்டி மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

அதைக் கேட்ட வைபவிற்கு தன் தந்தையின் மீது கோபம் வந்தது. ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ என்றாலே அதில் முதன்மையாக விளங்குவது அவர்களின் ‘வர்மா கன்ஸ்டரக்ஷன்ஸ்’ தான். அதை அண்ணனிடம் கொடுத்துவிட்டு தனக்கு, சேவை மனப்பான்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனையை கொடுத்தது அவனிற்கு பாரபட்சமான முடிவெனத் தோன்றியது.

உடனே தன் மாமன் வீட்டிற்கு வந்து, நியாயம் கேட்டான். அதற்கு அவரோ, “கவலைய விடு மருமகனே… உன்ன பெரிய பிசினஸ்மேனாக்குறேன் நான்…” என்றார் சிரித்தபடி…

“மாமா… நான் மெடிஸின் படிச்சா ஹாஸ்பிடல டாக்டரா தான ஒர்க் பண்ணனும்… நான் எப்படி பிசினஸ்மேன் ஆகுறது…”

“மருமகனனே… இப்போ டாப்ல இருக்க பிசினஸ் எது தெரியுமா… மருத்துவம்….”

வைபவ் புரியாத பார்வை பார்க்க… “ஆமா மருமகனே… கண், காது, தொண்டை, தோல்னு ஒவ்வொரு பார்ட்டுக்கும் தனி தனியா ஹாஸ்பிடல் வச்சு இப்போ டாக்டர்ஸ் தான் கோடி கோடியா சம்பதிக்குறாங்க… அங்க அவங்க சொல்றது தான் ட்ரீட்மெண்ட்… ஒண்ணுமே இல்லாத கேஸ் ட்ரப்பிளுக்கு, எல்லா ஸ்கேனையும் எடுக்கச் சொல்லி ஆயிரமா கொள்ளையடிப்பாங்க… நம்ம மக்களும் எதுக்கு ஏன்னே தெரியாம, அவங்க சொல்றத நம்பி பணத்த கட்டி வைத்தியம் பார்ப்பாங்க… சுருக்கமா சொல்லணும்னா ஏமாறுறவங்க இருக்க வரைக்கும் ஏமாத்துறவங்களுக்கு லாபம் தான்… நோயாளிங்கள இன்வெஸ்ட்மெண்டா வச்சு பெருசா நடக்குற பிசினஸ் டா மருமகனே, மருத்துவம்… அதுவே கைல கிடைக்குறப்போ எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்க…” என்று நவீன மருத்துவத்தின் (!!!) விளக்கத்தை அளித்தார் கைலாஷ்.

இப்படி பால பாடம் துவங்கி, பிசினஸ் பாடம் வரை அனைத்தையும் தன் தாய்மாமனிடமிருந்து கரைத்துக் குடித்திருந்தான் வைபவ்.

இன்று கூட மருத்துவமனைகக்கு சென்றதும், முதலில் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று காலந்துரையாடவே இந்த சந்திப்பு.

****

“ம்மா… எனக்கு டைம் ஆச்சு… இன்னும் சாப்பாடு எடுத்து வைக்காம என்ன பண்றீங்க…” காதில் அந்த வளையத்தை போட்டுக் கொண்டே, தன் அறையிலிருந்து கத்தினாள் பாவ்னா.

“லேட்டா எழுந்ததும் இல்லாம, சாப்பாடு எடுத்து வை, தண்ணிய எடுத்து வைன்னு என் உசுர வாங்குறா…” என்று அவளின் அன்னையும் பதிலுக்கு கத்தினார்.

பின்னால் இருந்து அவரைக் கட்டிக்கொண்ட பாவ்னா, “ம்மா… என்ன பத்தி தான் பெருமையா பேசுறீங்களா…?” என்றாள்.

“விடு டி என்ன… கழுத... எத்தன தடவ சொல்றேன்… சீக்கிரமா எந்திரின்னு… ஒரு நாளாச்சும் வேகமா எழுந்து எனக்கு ஹெல்ப் பண்றீயா…” என்று புகார் பட்டியல் வாசிக்க… அங்கு வந்த தந்தையை பாவமாக பார்த்தாள் மகள்.

“மீனாம்மா விடு மா பாவம் குழந்த…”

“ஆமா குழந்த… மடில தூக்கி வச்சு தாலாட்டு பாடுங்க…” என்று சைட் கேப்பில் கணவரையும் திட்டினார்.

அன்னையின் திட்டில் களுக்கென்று சிரித்தவள், அவரின் முறைப்பில் அங்கிருந்த நழுவினாள்.

“ஹே நில்லு டி… இந்த வருஷத்தோட படிப்பு முடியுதுல…மாப்பிளை பார்க்க ஆரம்பிக்கலாமான்னு ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன்… நீ பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டு இருக்க…”

“ம்மா நான் இன்னும் படிக்கணும்… பெரிய கைனகாலஜிஸ்ட்டா ஆகணும்…” என்று கனவுகள் மின்ன கூறிக் கொண்டிருக்க, அதை பாதியில் நிறுத்திய அவளின் தாயோ, “நீ படிச்சதெல்லாம் போதும்… நாங்க எவ்வளவோ சொல்லியும் அடம்பிடிச்சு மெடிஸின் சேர்ந்த… இப்போயாச்சும் நாங்க சொல்றத கேளு...” என்று கூறினார்.

தாயின் பேச்சில் வருந்தியவளோ, தந்தையைக் காண, அவரோ கண்களாலேயே தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். தந்தையின் செய்கையில் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் கிளம்பினாள்.

பாவ்னா, எல் கேர் மருத்துவக் கல்லூரியில் தன் மருத்துவப் படிப்பை மேற்கொள்பவள். தற்போது எல் கேர் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெற்று வருகிறாள்.


வீட்டிற்குள் நுழைந்த அதர்வாவை வரவேற்றது வெங்கடேஷின் புலம்பல்கள் தான்.

“இந்த பையனுக்கு கொஞ்சமும் சீரியஸ்னெஸே இல்ல… இவ்ளோ நேரமாகுது இன்னும் வரல… வந்ததுக்கு அப்பறம் இப்போவே ஹாஸ்பிடல் போகணும்னு நிப்பான்… அப்பாக்கு வயசாச்சுன்னு நெனப்பு இருக்கா… ஒரு கல்யாணத்த பண்ணா, என் மருமக கையால வாய்க்கு ருசியா சாப்பிடலாம்னு பார்த்தா… ஹும் இந்த ஜென்மத்துல நடக்காது போல… நான் பாக்குற பொண்ணு தான் பிடிக்கலன்னா, அவனாவது ஏதாவது பொண்ண லவ் பண்றான்னா… அதுவும் கிடையாது… ஷப்பா இந்த பையன வச்சுக்கிட்டு…” என்று அவரின் புலம்பல்கள் நீண்டு கொண்டே சென்றது.

“ப்பா… இப்போ இருக்கிற பொண்ணுங்களுக்கெல்லாம் அவ்ளோவா சமைக்க தெரியாதாம்… பேசாம எனக்கு பொண்ணு பார்க்குறத விட்டுட்டு வீட்டுக்கு நல்ல சமையல்காரிய பார்க்கலாம்னு நெனைக்கிறேன்…” என்று கண்சிமிட்டி சிரித்தான் அந்த மாயவன்...

“அத்து நீ எப்போ டா வந்த…” என்று பரபரப்பானார் வெங்கி.

“மிஸ்டர் வெங்கி… இப்போ எதுக்கு இவ்ளோ பரபரப்பு… கூல் டவுன்… “ என்றவாறே அவரை சோஃபாவில் அமரவைத்து, “ப்பா… இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா, நீ என்ன ‘அத்து’ன்னு கூப்பிடுற மாதிரியே ஒரு பாப்பாவும் கூப்பிட்டா…” என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடித்தான்.

இதில் வைபவை கத்திக் குத்திலிருந்து காத்ததை மட்டும் அவரிடம் கூறவில்லை. இவ்வாறு மற்றவர்களை காக்கும் போது தன் மகன் ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்வானோ என்று ஒவ்வொரு சராசரி அப்பாவிற்கு இருக்கும் கவலை அவருக்கும் உண்டு.

வெங்கடேஷ், நகரின் முக்கிய பகுதியில், ‘ஏவி டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்’ வைத்திருக்கிறார். முதலில் சாதாரண மளிகை கடையில் ஆரம்பித்த அவரின் தொழில் இப்போது சிறிய டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் வைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அவரின் கடின உழைப்பே காரணம். அதர்வாவும் அவன் படிக்கும் காலத்தில் அவ்வப்போது அங்கு சென்று அவருக்கு உதவியாய் இருப்பான்.

ஒருவழியாக அனைத்தையும் கூறி முடித்தவன், மணியைப் பார்க்க, “அச்சோ வெங்கி எனக்கு லேட்டாச்சு… நான் ஓடிப் போய் குளிச்சுட்டு வரேன்… அதுக்குள்ள பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணி.வைங்க…” என்று கூறியவாறே அறைக்குள் சென்றான்.

கைலாஷின் வீட்டில், மாமனும் மருமகனும் தங்கள் கலந்துரையாடலை (!!!) முடித்தனர். “மருமகனே… வா சாப்பிடலாம்…” என்று அழைத்தார் கைலாஷ்.

“மாமா… டென் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லிட்டு இன்னும் வீட்டுக்கு போகாம இருக்கேன்… இப்போ இங்க சாப்பிட்டேன்னு உங்க அக்காக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான்… டேம ஓபன் பண்ணிடுவாங்க… நான் கிளம்புறேன் மாமா… ஹாஸ்பிடல்ல மீட் பண்ணலாம்…” என்று கூறியவாறு கிளம்பினான்.

வைபவ் தன் வீட்டிற்கும், பாவ்னாவும் அதர்வாவும் மருத்துவமனைக்கும் செல்ல கிளம்பினர். இவர்கள் மூவர் செல்லும் பாதையும் ஒன்றாக அமைந்தால்… இவர்களின் சந்திப்பு எவ்வாறு அமையும்...

நினைவுகள் தொடரும்…
 
Top Bottom