பாலைவன பைங்கிளியே!!!
3
ஆரவாரமாய் விடிய வேண்டிய வைகறைப் பொழுதோ மந்தமாய் இருந்தது… தபனன் தன் கதிர்களோடு மேகத்தின் கூண்டுக்குள் சிக்குண்டு சின்னா பின்னமாகி கிடந்தான்… மேகமானதோ தன் கருமையை வெளிப்படுத்தி, தென்றலை யுத்தமிட்டு விரட்டி, இள மென்மையாக மாரியை பொழிவித்தது…
வெள்ளச் சேதங்கள் ஏதும் ஏற்படாது அனைத்து மக்களுக்கும், அனைத்து நிலப்பரப்புக்கும் சமமாக வானிலிருந்து இறங்கியது மாரி….
கல்யாண கனவுகள் பல, பிடித்தது போல் இருந்திருந்தாலும் இன்றைய நிஜம் என்னவோ வெறுப்பையே கல்யாணப் பரிசாய் வழங்கியது அவளுக்கு… முகத்தில் ஒப்பனைகள் அப்பிக் கிடந்தாலும் மனம் சிரிக்காமல் வதனம் மட்டும் எப்படி எழில் பெறும்… கடமைக்கேயென்று அய்யர் கூறிய வாயில் நுழையாத மந்திரங்களை உலறி "ஸ்வாகா" மட்டும் சரியாய் சொல்லி வந்தாள் மண மேடையில் அமர்ந்திருந்தவள்…
மிக அருகாமையில் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து மிடுக்காய் அமர்ந்திருந்தான் அவன்.. கலையில்லா முகத்திற்குச் சொந்தக்காரன் இன்று ஏனோ மன மகிழ்ச்சியில் ஆணழகனாய் மாறிப்போயிருந்தான்… தோள்களால் குந்தவியை இடித்தவன் புன்னகைத்து வழிந்தான்..
அதைப்பார்த்தவளுக்கோ குமட்டிக்கொண்டு வந்தது… மூஞ்சியைத் தூக்கி வேறுபுறம் வைத்தாள்… பதினேழு வயதில் நடைபெறும் திருமணத்தை எந்த மங்கை தான் ஆதரிப்பாள், அதும் பிடிக்காத மணாளனோடு…
என்ன செய்வது தந்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி குந்தவியின் வயதை இருபத்தி இரண்டாக்கி, பந்தக்கால் நட்டு, இன்று திருமணம் வரை வந்ததை எண்ணி அவர் வெற்றிக் களிப்பில் சுற்றுவதைப் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது குந்தவிக்கு… கண்கள் சிவந்து போயின ஆத்திரத்தில்…
சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளின் தொடை மீது கை வைத்து கேவலமாக சிரித்தவனை அருவருப்பான ஜந்துவைப் பார்ப்பது போல் குந்தவி பார்த்து வைக்க மெதுவாய் கைகளை விளக்கினான் மருது…
மருது ஒன்றும் குந்தவி மேல் இருக்கும் அன்பாலோ காதலாலோ திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை… இவன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் மாரியைப் பற்றி தெரிந்தவுடனே துண்டை உதறி தோளில் போட்டு தன் திசை நோக்கி சென்றிருப்பான்.. ஆனால் இவன் தான் மருதாயிற்றே எப்படிச் செல்வான் தங்க ரதம் போல் மேனி மின்னும் பருவமகளையும், அவள் பெயரில் இருக்கும் கணக்கு வழக்கு இல்லா சொத்துக்களையும் எப்படி விட்டுச்செல்வான்…
ஏதேதோ மந்திரங்கள் ஓத புகைமண்டலத்திலிருந்து புகை விரவியது மணமேடை முழுவதும்… ஏதாவது ஒரு மாயம் நடந்து இந்நிலை இப்படியே போய்விடாதா என்று மங்கையவள் உள்ளம் குமுறியது… 'இந்த சித்தி எங்கபோய் தொலைஞ்சா இவளாவது எதாவது சொல்லி நிறுத்தலாமே' என்று உள்ளூற வெடித்தவள் கண்ணில் பாவமான தோற்றத்தில் தெரிந்தாள் கோதாவரி..
எல்லாம் சிதம்பரத்தின் வேலைதான் திருமணத்தை தடுக்க தொடர் முயற்சி கொண்ட கோதாவிற்கு செக்மேட் வைத்தார் சிதம்பரம் அவள் உண்மையான குணம் தெரிந்து…. அப்போது பம்மியவள் தான் இந்த நிமிடம் வரை அப்படியே இருக்கிறாள்
கண்ஜாடை காண்பித்து சித்தியை அழைக்க சித்தி "ஹூம்" என்று கழுத்தை வெட்டிக்கொண்டு திரும்பினாள் கோதா…
பின் வார்த்தையாகவே அழைத்தாள் குந்தவி… அருகினில் வந்தவளை அவள் உயரம் வரை குனியவைத்து கேட்டாள் "ஏன் சித்தி இந்த கல்யாணத்தை நிப்பாட்ட எதுமே பண்ணலையா… அப்பா நீ சொல்லியுமா கேட்கல"
அன்றைய சம்பவம் அவள் முன் நிழலாடியது, சிதம்பரம் இவள் திருமணத்தை நிறுத்தச் சொன்னதும் பாயும் புலியாய் மாறி கோதாவை அடித்து துவைத்து விட்டார்… நினைவில் நினைக்கும் போதே வந்த வலியால் கன்னத்தை ஐவிரல் கொண்டு தேய்த்துக்கொண்டாள்…
"ஹான் அது எப்படி நான் சொன்னா கேப்பாக...போடி கூறு கெட்ட கழுதை…" என்று அவளை சமாளித்து எழுந்துகொண்டார்…
வெறுப்பும் வேதனையும் மனதை ரணமாய் காயப்படுத்தியது… "இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சே" என்று கைகளைப் பிசைந்தாள்
"கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டினார் அய்யர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி
“கெட்டி மேளம்,கெட்டி மேளம்” என்று கூறியவுடன்
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று அய்யர் ஸ்ருதி சேர்த்துப் பாட, மூன்று மூடிச்சுகளில் ஒரு முடிச்சை அவன் போட, மற்ற இருமுடிச்சுகளையும் தங்கை முறையில் இருந்த ஒரு பெண் போட, இருவரும் எழுந்து அக்னிக்குண்டத்தை மூன்று முறை சுற்றி ஒருவருக்கொருவர் சொந்தமாகிப்போயினர்…
"என்ன பெரிய சொந்தபந்தம்… நீ சொல்ற சொந்தக்காரனுங்க எல்லாம் காசு இருந்தா ஒரு பேச்சு காசு இல்லைனா ஒரு பேச்சு… காசு இல்லைனா நம்ம மூச்சே நின்னாலும் கண்டுக் காதவனுங்க... அவனுங்க என்னைய மதிச்சா என்ன மதிக்காட்டி என்ன??.. நான் என் மாமானார் வீட்டோட வந்து தங்கிக்கிடுதேன்… அம்புட்டுதேன் வழியை விடு வெளிய போக" மருது உடன்பிறந்த முறையிடம் பேசிவிட்டு அடைத்திருந்த கதவை திறந்து கொண்டு வெளிவர சிதம்பரம் அவனை நன்றியோடு பார்த்துக் கொண்டிருந்தார்... உவர்நீர் கூட சுரந்தன..
"ரொம்ப சந்தோசம்யா மாப்ள…" என்றவர் அவள் தோளில் கைப்போட்டு கூட்டிச்சென்றார்… எதையோ சாதித்த நினைப்பில் மருதும் நிமிர்ந்த சட்டமாய் சென்றான்…
எதையோ தொலைத்தவள் போல் (இல்லையில்லை வாழ்க்கையை தொலைத்துத்தானே நிற்கின்றாள்) எங்கோ விரக்தியான பார்வையை பதித்து முறைப்பாய் அமர்ந்திருந்தாள்…
"குந்தவி"
"...."
குந்தவி
"....."
"ஏ புள்ள குந்து"
இதுவரை பதிலேதும் அளிக்காதவள் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் பொருமினாள்
"இந்தாரு, குந்து கிந்துனு கிட்ட வந்த எட்டி ஒருமிதிதான் அப்றம் நீ எவ கிட்டயும் போக முடியாது"
அவள் கூறிய வார்த்தைகள் எந்த ஆண்மகனையும் பொறுமையிழக்கச் செய்யும் வார்த்தைகள்… ஏதாவது ஏடாகூடமாக ஒன்று நடந்து இப்படியே அப்பன் வீட்டில் இருந்திட மாட்டோமா என்று முன்னுக்கு பின் முரனாக பேசினாள்
வந்த ஆத்திரங்கள் அனைத்தையும் அடக்கியவன் "ஏன் குந்து இப்படிலாம் பேசுற… மாமேன் உன்ன நல்லா பாத்துப்பேன்டி"
"யாருக்கு யாருயா மாமா… இன்னொரு முறை டி போட்டு பேசின நாக்கு துண்டாயிடும்" சினத்தை கக்கியவள் அறையை விட்டு வெளியேறினாள்
அவள் சென்றதும் அமர்ந்திருந்த கட்டிலை முடிந்த மட்டும் சினத்தை அடக்கி குத்தினான்.. அப்படியிருந்துமே லேசான கீறல்களை பரிசாய் வாங்கிக்கொண்டது அந்தகாலத்து பர்மா தேக்குக் கட்டில்…
"பசு ரொம்ப முரண்டு பிடிக்குதே… பாப்போமே அதையுந்தான் பசு எப்படி இருந்தாலும் இந்த காளைக்கிட்ட அடங்கித்தான போகோனும்" சிரிப்பில் விஷமத்தையும் கலந்து கொண்டான்
*****
அலைபேசியின் வழி அலாரம் அடிக்க ஏற்கனவே விழித்திருந்தவள் கரமோ அலாரத்தை அமர்த்தியது மேரி அக்கா எழுந்து விடாமலிருக்க… வழக்கம் போல வழமையான வேலைகளைத் தொடங்கினாள்… காலைக்கடன்களை முடித்தவள் உடற்பயிற்சிக்குள் குதித்தாள் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாய் உடற்பயிற்சி செய்தவளோட ஒருமணிநேரம் கடந்துவிட, வியர்வை மொட்டுக்களை துடைத்தவள் ஆசுவாசப்படுத்தி அமர்ந்தாள்…
"என்ன குந்தவி போலிஸ் வேலைல இருக்க நாங்களே எங்க உடம்ப இப்படி கவனிக்கிறது இல்ல நீ ஏன் இதெல்லாம் பண்ற" பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரெங்கநாதரைப்போல படுத்துக்கொண்டே கேள்வியை கேட்ட மேரியிடம் "உங்களுக்கு ஈசியா கெடச்சனால அதோட அருமை தெரிலக்கா… என்ன மாதிரி கீழ்மட்டத்துலயிருந்து அடிபட்டு உதபட்டு வரவங்களுக்குத்தான் அதோட அருமையே புரியும்"
"சரி டி தாயே ஆள விடு.. உன் கூட என்னால போட்டி போட்டு பேச முடியாது பா"
"அதில்ல பேரிக்கா 'ச்...சை' மேரிக்கா இதுல ஒரு சுகம் இருக்கு… என் உடம்பு என் பேச்சை கேக்குதுனு ஒரு கர்வம் இருக்கு அதான்… அதுல எனக்கு ஒரு தனி சந்தோஷம்"
"சரி சரி நான் போய் குளிச்சிட்டு வாரேன்"
"அக்கோவ் இப்ப நான் உன்ன பேரிக்கானு சொன்னேனே கோவம் வரலை"
"எனக்கு ஏன்டி கோபம் வருது நீ என்ன அக்கானு கூப்டாலும் நான் உன்னை என் புள்ளையாதான் பாக்குறேன்" என்றவள் குந்தியின் கலங்கும் முகம் பார்க்க பிடிக்காமல் குளிக்கச் சென்று விட்டார்
தொலைந்த தன் அன்னையை திருப்பி எடுத்த நெகிழ்ச்சியில் கண்ணீர் கரைத் தாண்டியது குந்தவிக்கு….
இருவரும், ரெங்கநாயகி அனுப்பிய முகவரிக்கு விரைய தயாராகினர்…
அரைமணி நேரப்பயணத்தில் குந்தவி ரெங்க நாயகி, மேரி என மூவரும் பெரிய பணக்காரர்கள் தங்கியிருக்கும் நிலா கார்டனுக்குள் நுழைந்தனர்… அங்கு கட்டியுள்ள ஒவ்வொரு வீட்டின் வெளிப்புற அழகையும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர் மேரியும் குந்தவியும்…
அவர்கள் சென்ற கேப் அந்த பெரிய இரும்பு கதவின் முன் நின்றது.. கதவின் இடதுபுறம் அமர்ந்திருந்த காவலாளி வந்து விசாரிக்க, ரெங்கநாயகியின் பெயரை சொன்னதும் அவர் கதவைத் திறக்காமல் பதிலுக்கு ஒரு பொத்தானை அழுத்தினார்… கதவு தானாக திறந்து வழிவிட்டது…. பெரிய மாடமாளிகை இடது வலது எனச் சுற்றி எங்கும் ரம்மியமான சோலைகள்… அதில் பூக்கள் எங்கும் பூத்துக்குலுங்கின…
மேரியும் குந்தவியும் ஒரு நிமிடம் இமைக்கவும் மறந்து போயினர்… "வாங்கப்பா ஏன் அங்கேயே நின்னுடீங்க" ரெங்கநாயகி குரல் எழுப்ப பிரமை பிடித்தவர்கள் பின்னே சென்றனர்… அதை மேலே பால்கனியில் இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்… இவர்களைப் பார்த்ததும் வேக வேகமாக சரசரவென கீழே இறங்கி வந்தான்… ரெங்கநாயகியை பார்த்ததும் ஒருவித முறைப்பை வழங்கி விறுவிறுவென உள்ளே சென்று கதவையடைத்துக் கொண்டான்
போர்டிக்கோவிற்குள் நுழைந்த குந்தவிக்கு புரிந்தது யாரோ இறந்ததற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று… அந்த இடத்தை நகர்ந்து மேலும் உள்ளே செல்ல வரவேற்பரையில் மௌனமாய் கண்ணீர் வடித்து அமர்ந்திருந்தனர் பெண்டிர்… அங்கிருந்த அனைவரும் வெள்ளை உடையில் தெரிய இவர்கள் மூவரும் கருப்பு உடையணிந்து தனித்து தெரிந்தனர்… அங்கே ஒரு பெண் சற்றுத் தடித்த தேகத்தை தாங்கி அழக்கூட திராணியற்ற நிலையில் அமர்ந்திருந்தார்…
அவர் அருகில் சென்ற ரெங்கநாயகி கைகளைப் பிடித்து ஆறுதல் கூற அந்தப் பெண்மணியோ ரெங்காவை கட்டிக்கொண்டு அழுதார்… அந்த மாடமாளிகையின் சொந்தக்காரரான மாமனிதர் வெள்ளியங்கிரியின் பதினாறாம் நாள் காரியம் தான் அங்கு நடந்தேறி வருகிறது…
சுவற்றில் போட்டோவாய் தொங்கினாலும் அவரது வழக்கமான புன்னகையை ஏந்தியே அவர் வதனம் காணப்பட்டது… அவருக்கு மாலையணிவித்த அவ்வீட்டார் புகைப்படத்திற்கு கீழேயே படையலையும் போட்டு சடங்கை திருப்தியாய் முடிக்க மாலை நேரமானது… இதற்கிடையில் ரெங்கநாயகி ஏன் தன்னை இங்கு அழைத்து வந்தார் என குந்தியின் மூளைக்குள் ஓடியிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதி காத்தாள்….
கூடியிருந்த சொந்தங்கள் ஒவ்வொருவராய் கலைந்து செல்ல வீட்டில் அவரது குடும்பம் மட்டுமே இருந்தது… இரண்டு பெண் பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் என செல்வத்தோடு சேர்த்து இந்த மக்கள் செல்வங்களையும் அதிகமாக்கிக் கொண்டார் வெள்ளியங்கிரி… பாவம் இப்படி திடீரென போய் சேருவார் என்று எவரும் அறிந்திலர்…
"மஞ்சு இப்படியே அழுதுட்டு இருந்தா போனவரு என்ன திரும்பி வரவா போறாரு நீ தான இந்த பிள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லனும்" ரெங்கா மெதுவாய் பேச்சை ஆரம்பித்தார்…
"கோமால இருக்காருனு சொன்னாங்க… சரி படுத்த படுக்கையா இருக்க மனுசன பாத்துட்டாச்சும் இருக்கலாம்னு நினைச்சேனே… ஆனா இப்படி நினைச்சுக்கூட பாக்காத நேரத்துல போய்டாரே"
"எல்லாரும் ஒருநாள் போய்த்தான் ஆகனும் மஞ்சு போனவர நினைச்சுட்டே இருக்கவங்கள விட்ராத… ஆம்பளப் புள்ளைங்க உருண்டு புரண்டு பொழச்சுக்குங்க... அங்க பாரு ரெண்டு பிள்ளையும் கல்யாண வயசுல இருக்குங்க… இதுங்களுக்கு ஒரு நல்லது பாக்கனும்ல"
"மஞ்சு, அன்னைக்கு நான் சொன்னேன்ல குந்தவி இதோ வந்துருக்கா பாரு" என்று ரெங்கா கூற குந்தவியின் பக்கம் திரும்பி மஞ்சு அவளை கண்ணசைத்து அருகில் அழைத்தார்
அருகில் சென்றவளை மஞ்சு பார்க்க பவ்யமாய் வணக்கம் வைத்தாள் குந்தவி…
"வணக்கம் மா" என்று பதில் மரியாதை மஞ்சுவிடமிருந்து வந்தது…
ரெங்கநாயகியை அழைத்துக்கொண்டு மஞ்சுளா ஒரு அறைக்குள் நுழைந்தார்…
அதுவரை அமைதிகாத்த மேரியோ குந்தவியின் அருகில் சென்று "குந்து வா இப்படிக்கா குந்துவோம்" என்று சிரிக்க
"அட சும்மா இருக்கா" என்று முகம் சுளித்தாள்
'எப்போதும் இப்படி இருக்கமாட்டாளே' என்றெண்ணிய மேரியோ அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்
"ஏன் குந்து என்னாச்சு முகம் வாடியிருக்கு"
"பின்ன என்னக்கா திருட்டு கேச பாக்கனும் சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்திருக்கு இந்தக்கா… துக்க வீட்டுக்கு போகனும்னு உண்மையை சொன்னாலே அக்கா கூப்புட்டுச்சுனு வந்துருப்பேன்ல"
"உன் வருத்தம் புரியுது டி ஆனா ரெங்கா அக்கா எது பண்ணாலும் கரெக்டாதான் இருக்கும்" என்று இழுத்துக் கொண்டு அருகிலுந்த சோலைக்குள் சென்றாள்
ஏதோ பேசி திருப்தியடைந்த நிலையில் மஞ்சுளா அறையை விட்டு வெளியே வரவும் அவர்களின் குடும்ப வக்கீல் வீட்டிற்குள் நுழையவும் சரியாய் இருந்தது…
மஞ்சுளா "வாங்க அண்ணே"
வரவேற்புக்கு சம்பிரதாயமாக பதிலுக்கு குறுநகை புரிந்தார் வந்தவர்… "வெள்ளியங்கிரி எழுதுன உயில் கொண்டு வந்திருக்கேன்மா… படிச்சுப் பாருங்க" என்றவர் முகத்தில் பதட்டம் அப்பிக் கிடந்தது…
"உக்காருங்கண்ணே முதல்ல.. ரேனு போய் அங்கிள்க்கு ஜூஸ் கொண்டு வா"
மஞ்சுவின் மகள் ரேனு எழ அதெல்லாம் "வேணாம்மா நான் கொஞ்சம் அவசரமா போகனும்…" என்று முகத்தில் வடிந்த வியர்வைத்துளிகள் கீழே விழாதவாறு கைக்குட்டையில் ஏந்திக்கொண்டார்
"உயில், வெள்ளியங்கிரி முழு சுயநினைவோடு எழுதினதுமா ஒரு தடவை படிச்சு பாருங்க நான் கிளம்பனும்"
"என்ன பெரிசா இருக்கப் போகுது எல்லாம் அவரு முன்னாடியே சொல்லிட்டாருண்ணா எங்கிட்ட"
"பரவால்லமா மறக்காம படிச்சு பாருங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன்மா" என்றவர் எட்டு கால் பாய்ச்சலில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்…
ஆர்வத்தில் உயிலை வாங்கிப் படித்த ரேனு எழுதியிருப்பதை தாயிடம் கூற "ஓஓஓஓஓஓஓ…." வென உயிரை வெறுத்து அடிக்குரலில் ஓலமிட, அறையின் கழிவறைக்குள் இருந்த ரெங்கநாயகியும், சோலைக்குள் இருந்த குந்தவி மற்றும் மேரியும் அடித்து பிடித்து மஞ்சுளாவிடம் வந்து சேர்ந்தனர்…
வேகமாக ஆர்வத்தில் குந்தவி வாங்கிப் படிக்க அத்தனை சொத்துக்களும் அவரின் மகன் நகுலனின் பெயரில் இருந்தது…
"யாருமா நகுலன்" சந்தேகமாய் நெற்றிய தேய்த்துக்கொண்டே கேட்க
"எங்க ரெண்டாவது அண்ணே" என்று ரேனு கூறினாள்
"என்ன குந்தவி என்னாச்சு" ரெங்கநாயகி பரிதவித்து கேட்க
"எல்லா சொத்தையும் நகுலன் பேருல எழுதிருக்காரு வெள்ளியங்கிரி சார்"
"எப்படி இது சாத்தியம் அப்ப மத்த பிள்ளைகள் கதி"
"விடு ரெங்கா இது அவரோட கடைசி ஆசை போல, எங்க அவன் இன்னும் உருப்படாம போய்டுவானோனு நெனைச்சு எழுதிருப்பாரு…"
"அப்ப உனக்கும் இதுல சம்மதமா"
"சம்மதமானு கேட்டா என்ன சொல்ல,
அவரோட கடைசி ஆசைக்கு நான் எப்படி குறுக்க நிக்க முடியும்…"
"அப்ப உங்களுக்கு இதுல சந்தோசம் இல்லை, அப்படித்தானமா" அறைக்குளிருந்து எல்லாவற்றையும் கேட்ட நகுலன் கதவைத்திறந்து கொண்டு இவ்வாறு கதைத்தான்
"அய்யோ அப்படி இல்லடா உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் டா" அம்மா கூறிய எதையும் பொருட்படுத்தாத பொறுப்பற்ற பிள்ளை
"நான் கொஞ்சம் வெளிய போகனும் போயிட்டு வரேன்" என்றான்
"ஒரு நிமிஷம் நகுலா" ரெங்கநாயகி அழைக்க, 'என்ன' என்று வார்த்தையால் கேட்காமல் தெனாவெட்டாய் புருவம் உயர்த்திக் கேட்டான்
குந்தவிக்கு அவனின் நடத்தையிலேயே புரிந்தது இருவருக்கும் ஏதோ காரணத்திற்காக முன்பகை என்று…
தன்னை அவன் மரியாதை குறைச்சலாய் நடத்துவது வருத்தம் அளித்தாலும் மேலும் தொடர்ந்தார் ரெங்கா "நீ உன் தங்கச்சிகளுக்கும், அண்ணனுக்கும் இதுல பங்கு கொடுக்கமாட்டியா"
"அது என் அம்மா சொன்னா நடக்கும்" உதிர்த்த வார்த்தைகளின் காரத்தன்மை அனைவருக்கும் தெரிந்தது… சொன்னவன் வெளியே சென்று விட்டான்
"மஞ்சு நீ உன் பையன்ட பேசு"
"இது அவரு எடுத்த முடிவு ரெங்கநாயகி அத நான் எந்த காலத்திலும் மாத்த மாட்டேன்"
"இவளைத் திருத்தவே முடியாது" என தலையில் கைவைத்து அமர்ந்தார்
பள்ளிப் பருவ நட்பு.. இருபது வருட நட்பாக மாறியிருக்கிறது… இன்றுவரை மஞ்சு எந்த முடிவும் ரெங்கநாயகியை கேட்காமல் எடுத்ததில்லை… வெள்ளியங்கிரியும் தங்கமான மனிதர் ரெங்கநாயகியை தங்கையாக பாவித்து குடும்ப உறுப்பினராக்கிக் கொண்டார்… ஒருமுறை நகுலனால் ஏற்பட்ட பிரச்சனை ரெங்கநாயகியால் தான் தீர்த்து வைக்கப்பட்டது…
வெள்ளியங்கிரியின் முடிவை மாற்றாவிட்டாலும் மஞ்சுவிற்கு வேதனை பலமடங்கு ஏறிப்போயிருந்தது… கண்கள் நீரை இறைத்துக் கொண்டிருந்தன…. ரேனுவும் அவளது தங்கை பானுவும் அம்மாவின் அருகில் இருந்து அவரைத் தேற்ற முற்பட, மஞ்சு அவர்களைக் கட்டிக்கொண்டு அழுதார்…
ரெங்கநாயகியின் அருகில் சென்ற குந்தவி "அக்கா இந்த உயில் விஷயம் இவங்களுக்கு முன்னாடியே தெரியாதா"
"ஆமா குந்தவி நகுலன் தான் இந்த வீட்டுலையே அடங்காதவன்… அவனைத் திருத்த தான் அவங்க அப்பா உயிலே எழுதுறேனு சொல்லிட்டு இருந்தாரு… மஞ்சுகிட்ட வெள்ளியங்கிரி அண்ணா சொன்னது என்னன்னா, "எல்லாருக்கும் சமமா பங்கு எழுதி வச்சுட்டேன் ஆனா நகுலன் இன்னும் திருந்தாம இருந்தா அவன் பங்கு அநாதை ஆசிரமத்துக்குப் போகும்னு எழுதப்போறதா சொன்னாருனு அன்னைக்கு மஞ்சு என்கிட்ட சொன்னா"
"ஓ அப்படியாக்கா சரி அந்த டாக்குமெண்ட்ட நான் மறுபடி பாக்கலாமா"
"இந்தாமா" என்ற கைகளில் சுருட்டி வைத்திருந்த பத்திரத்தை மஞ்சு அவளிடம் கொடுக்க, ஒரு வரி இடைவெளி இல்லாமல் முழுதுமாக படித்தாள்… பின்பு கடைசி பக்கத்தில் இருந்த கையெழுத்திலும், விரல்ரேகையிலும் அவளது கவனம் வந்து நின்றது…
தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பூதக்கண்ணாடியை எடுத்தவள் உற்று நோக்கினாள் கையெழுத்தை…
"ஏதோ தப்பா இருக்கு"
வீட்டில் இருந்த அனைவரும் குழப்பமாகிப்போக ரெங்கநாயகி மட்டும் அமைதியாய் காணப்பட்டார்…
மஞ்சுளா ரெங்கநாயகியின் காதில் கிசுகிசுத்தார் "அந்த பொண்ணு என்ன சொல்றா"
"அவ ஃபாரன்சிக் சைன்ஸ் படிச்ச பொண்ணு… கைரேகை கையெழுத்து திருட்டுனு எல்லா கேஸ்லயும் ஸ்பாட்டுக்கு போய் நல்லா தேடிப்பாத்து சரியா துப்பு கொடுப்பா… அது எல்லாமே சரியா இருக்கும்…. எனக்கு கூட நிறைய கேஸ்ல இன்டேரக்டா நிறைய உதவி பண்ணிருக்கா…அவ சொல்றானா நிச்சயம் சரியா இருக்கும்… நான் அவளை இங்க கூட்டிட்டு வந்த நோக்கம் வேற.. ஆனா இங்க நடக்குறது வேற…"
மஞ்சுளா "கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இவளை இங்க வரவழைச்சுருக்காரு"
குந்தவி "ரேனு உங்கப்பா சைன் இருக்க வேற டாக்குமெண்ட்ஸ் இருந்தா எடுத்துட்டு வா"
"ஹான் அக்கா"என்றவள் மாடியறை நோக்கி வேகமாக ஓடினாள்
ரேனு கையோடு கொண்டு வந்த பத்திரத்தை வாங்கியவள் இரண்டு பத்திரங்களிலும் உள்ள கையெழுத்தை சேர்த்து வைத்துப் பார்த்தாள்… உற்று கவனித்தாள் கையெழுத்தின் வித்தியாசத்தை புரிந்து கொண்டாள்…
"மை கெஸ் இஸ் கரெக்ட்… சிக்னேச்சர் ரொம்ப ஷேக்கியா இருக்கு.. ஐ திங்க் இட்ஸ் போர்ஜெரி டாக்குமெண்ட்" அந்த வக்கீல் கொண்டு வந்த பத்திரத்தை மேலே தூக்கிக் காட்டி சத்தமாய் கூற மஞ்சுளா குடும்பம் வாயடைத்துப் போனது…
"எப்படி சொல்றீங்க.. எங்களை எங்கப்பா எதுக்காக ஏமாத்தனும்" என்று மஞ்சுளாவின் கடைக்குட்டி பானு கேட்க
"உங்கப்பா உங்களை ஏமாத்துனதா சொல்லல… அவரோட கையெழுத்துப் போட்டு இடையில வேற யாரோ ஏமாத்திருக்காங்கனு சொல்றேன்... உங்க வக்கீலாக இருக்கலாம் இல்ல.." என்று இடைவெளிவிட்டவள் தொடர்ந்தாள் "ஏன் அது உங்க அண்ணா நகுலனா இருக்கலாம் இல்லரெண்டு பேரும் சேர்ந்து கூட இந்த வேலையை பாத்துருக்கலாம்"
"நிறுத்துமா விட்டா பேசிட்டே போற" தாயின் மனம் குமுறியது தன் மகனைத் தவறாகக் கூறியதும்…
"எல்லா சொத்தும் அவரு பேருல இருக்கனால அவரு கூட ஏமாத்தலாம்னு தோணுச்சு அதான்.. மன்னிச்சுக்கோங்கமா" என்றாள்
"இரு மஞ்சுளா அவசரப்படாத" என்றார் ரெங்கநாயகி….
இதற்கிடையில் "எந்த விதமான டெஸ்ட்டும் பண்ணாம நீங்க எப்படி இப்படி சொல்லாம்" என ரேனு ஆரம்பித்தாள்…
"இவங்களுக்கு எப்படி சொல்றது" என்று தன்னுள்ளே பேசியவள் "சோ சிம்பிள் ரேனு அதாவது நம்ம கையெழுத்தை நம்ம போடும் போது முதல்ல நம்ம மூளை ஆடர் போடும்… அப்பறம்தான் நம்ம கை கையெழுத்து போட ஆரம்பிக்கும்… ஆனா இன்னொருத்தரோட கையெழுத்த போடும் போது கை தான் முதல்ல வேலையை ஆரம்பிக்கும் அப்றம் தான் கையெழுத்த சரியா போடனும்னு மூளை ஆடர் போடும்.. அப்ப நம்மளை அறியாமலே ஒரு சின்ன ஷேக் அந்த கையெழுத்துல இருக்கும்…
அதுமாதிரி தான் இந்த டாக்குமெண்ட்ல இருக்கு.. நயன்டி பர்செண்ட் இது ஃபேக் டாக்குமெண்ட் இத முழுசா நிரூபிக்கனுமா??.. அக்காட்ட குடுங்க டெஸ்ட் பண்ணிட்டு வந்து ரிப்போர்ட் தரேன்… ஆனா இது ஃபேக் டாக்குமெண்ட்" என்று மறுமுறையும் கூறியவள் அங்கிருந்து வெளியேறினாள்
Word count:1972
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...