அத்தியாயம்-1
மயூரி அன்று காலையிலேயே எழுந்து விட்டாள் கோயம்பத்தூரின் பிரபலமான கல்லூரியில் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப் படிப்பு. இந்த செமஸ்டரில் 2பேப்பர் மட்டுமே தியரி மற்றவை ப்ராஜெக்ட் தான். இப்போது ப்ராஜெக்ட் முடிப்பதும் அதற்கான வைவா அட்டன்ட் செய்வது மட்டும் பாக்கி இருக்கிறது. இரண்டிரண்டு பேராக சேர்ந்து ஒரு பிராஜெக்ட்டை செய்ய சொல்லி இருந்தார்கள். மயூரியும் அவள் கிளாஸ்மேட் ஜீவாவும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்கிறார்கள் பிராஜக்ட்டின் முதல் ஸ்டெப்பை அவர்கள் பிரபசரிடம் காட்டி அனுமதி வாங்க வேண்டும் அதற்காக தான் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்..
"அம்மா சாப்பாடு எடுத்து வை", என்றபடியே கிளம்பி வந்தவள் அப்போது தான் அம்மாவும் அப்பாவும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததை கவனித்தாள்..
"நீ என்ன சொன்னாலும் சரி அவன எப்பயோ தல முழுகிட்டேன் அவனைப் பத்தி யாரும் இனிமே என்கிட்ட பேசாதீங்க மீறி பேசினா எல்லாரையும் தொலைச்சி கட்டிடுடுவேன்", என உறுமி விட்டு வேகமாக வெளியே சென்றார்..
அவர் போன பிறகு அருகில் வந்த மயூரி, "என்னமா அண்ணனை பற்றி ஏதாவது பேசுனியா..?" என்றாள்..
ஆமாம் என தலையசைத்தவரிடம், "அப்பாவப்பத்தி தான் உனக்கு தெரியுமேம்மா அப்புறம் ஏன் தேவையில்லாம அவர் கோபத்தக் கிளறுற..? அவருக்கும் மன கஷ்டம்மா ஆசை ஆசையா வளர்த்த பையன் இப்படி அவர் சொல்றத கேக்காம போய்ட்டானேன்னு. மத்தபடி அவருக்கு எங்க ரெண்டு மேலயும் எவ்வளவு பாசம் இருக்குன்னு உனக்கு தெரியாதா..? கவலைப்படாதம்மா அப்பாக்கு அண்ணன் மேல ரொம்ப நாள் கோபத்த இழுத்து பிடிச்சி வச்சிருக்க முடியாது கூடிய சீக்கிரம் அவன புரிஞ்சிப்பாரு. அதுவரையிலும் அவரை அவர் போக்குல போகவிடு இப்போ வா சாப்பாடு எடுத்து வை", என அவர் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். அவர் புலம்பலுடன் சாப்பாடு எடுத்து வைக்கவும் சாப்பிட்டுவிட்டு அவருக்கு சில பல ஆறுதல்கள் உரைத்துவிட்டு காலேஜ் கிளம்பினாள்..
குமரன்-கண்ணகி தம்பதியருக்கு வருண் மற்றும் மயூரி என இரண்டு குழந்தைகள். குமரனுக்கு வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. அது மெயின் ஏரியாவில் இருப்பதாலும் தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாலும் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. பெற்றவர்கள் இருவரையும் பாசத்தோடு தான் வளர்த்தார்கள். மயூரி கூட ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுக்க மாட்டாள் பிடிவாதம் அதிகம் அதனால் அடிக்கடி திட்டு வாங்கிக் கொள்வாள் ஆனால் வருண் அப்படியல்ல பெற்றோர் சொல்வதை தட்ட மாட்டான் அவர்கள் சொல்வது தான் அவனுக்கு வேதவாக்கு. சின்ன சின்ன விஷயங்களில் கூட தந்தையிடம் ஆலோசனை கேட்பவன் தாயிற்குச் செல்ல பிள்ளை..
சின்ன சின்ன விஷயங்களில் கூட அப்பாவிடம் வந்து நிற்பவன் அவனுடைய பெற்றோர் பெரிய விஷயமாக நினைக்கும் அவன் கல்யாண விஷயத்தில் அவனே முடிவு எடுத்துவிட்டு வந்து நின்றான். அது அவர்களுக்கு கோபத்தைக் கிளப்பியது அவனை திட்டினார்கள் சண்டையிட்டார்கள் ஆனால் அவன் பிடியில் உறுதியாக இருக்கவும் அவர்களுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. குமரன் பொறுமையாக கூட அவனிடம் பேசிப் பார்த்தார் அந்த பெண் நம்ம ஜாதி இல்லை. நம்ம சொந்தக்காரர்களுக்கு தெரிஞ்சா எனக்கு ரொம்ப பெரிய தலை குனிவு என்று சொல்லி பார்த்தார்..
அவன் எதற்கும் அசைகிற மாதிரி தெரியவில்லை எனவும் கடைசியில் கோபத்துடன் ஒன்று நாங்கள் வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் சொல்வதைக் கேட்டு எங்களுடன் இருக்க வேண்டும் இல்லையேல் அந்த பெண்ணோடு போய்விட்டு எங்களை தலைமுழுகி விடு என்று சொல்லி விட்டார். வருணும் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தான் அவர் அவனுக்கு தந்தையல்லவா அவனுக்கு மேல் பிடிவாதம் பிடித்தார். எவ்ளவோ கெஞ்சி பார்த்தும் அவர் இறங்கி வரவில்லை எனவும் கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் வாழ்வு அந்த பெண்ணுடன் தான் என சொல்லி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்..
கொஞ்ச நாள் தந்தை தாயை பார்த்த போது அவளுக்கு பாவமாக கூட இருந்தது அப்படி என்ன காதல் கண்ணை மறைக்கிறது. இங்கே இருந்து கொஞ்ச நாட்கள் அவருடன் போராடி இருந்தால் அவன் மேல் உள்ள பாசத்தில் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் சம்மதித்து இருப்பார். அதை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறுவது என்றால் இவ்வளவு நாள் அவன் பாசமாக இருந்ததற்கு என்னதான் அர்த்தம். அது குமரனுக்கும் தோன்றி இருக்குமோ என்னமோ அதற்குப் பிறகு அவன் பெயரை எடுத்தாலே அந்த வீட்டில் சண்டை வந்தது தான் மிச்சம். முதலில் அவனுக்கு ஆதரவாகப் பேச வாயைத் திறந்த மயூரி கூட ஒரு கட்டத்தில் தந்தையின் கோபம் அவர் நம்பிக்கையை உடைத்தது மட்டும்தான் என தெரிந்த பிறகு அவனைப் பற்றி பேசுவதையே தவிர்த்துவிட்டாள். ஆனால் அம்மாவிற்கு பெத்த பாசம் விடவில்லை அதனால் அவ்வப்போது அவனைப் பற்றி பேசி வாங்கிக் கட்டிக் கொள்வார். அவரைப் பார்த்தாலும் பாவமாக இருந்தது எல்லாவற்றிற்கும் காரணமான அண்ணனை நினைத்தபோது கோபமாக கூட வந்தது. எல்லாரையும் கஷ்டப்படுத்தி விட்டு அவன் மட்டும் போய் சந்தோஷமாக இருக்கிறானே அவனால் எப்படி தான் இதெல்லாம் முடிகிறது என நினைத்தாள். எப்படியோ எங்காவது அவனாவது நல்லா இருந்தால் சரிதான் என்று தான் நினைக்க முடிந்தது..
காலேஜ் வாசலிலேயே ஜீவா அவளுக்காக காத்திருந்தான்.. "என்ன மயூ ஒன்பது மணிக்கெல்லாம் வர சொன்னா இவ்வளவு லேட்டா வர்ற..? உன்ன வச்சுக்கிட்டு எப்படி ப்ராஜெக்ட்ட செஞ்சி முடிக்கப் போறேன்னு தெரியலயே..?"
"எப்படியும் நம்ம பிரபசர் எப்ப வருவாருனு எனக்கு தெரியாதா இன்னும் வந்து இருக்க மாட்டாரே..?"
"அவர் இன்னும் வரல தான் ஆனா நம்ம சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு சில வேலை இருக்கு அதுக்கு தான் உன்ன முன்னாடி வர சொன்னேன்.."
"எனக்கும் தெரியும் ஜீவா அவர் வர்றதுக்குள்ள அதை முடிச்சிடலாம்", என இருவரும் அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து இந்த புராஜெக்டை பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்..
ஒருவழியாக பிரபசர் வந்ததும் தாங்கள் கேட்க வேண்டிய ஒரு சில சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டு இருவரும் வெளியில் வந்து சற்று நேரம் அதை பற்றி மேலும் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்று கிளம்பினர். ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு காலேஜை விட்டு வெளியில் வரவும் அவளுக்கு நந்தினியிடம் இருந்து கால் வரவும் சரியாக இருந்தது..
"ஹலோ நண்டு என்னடி இந்த டைம்ல போன் பண்ணிருக்க உனக்கு பிராஜெக்ட்டலாம் என்ன ஆச்சு..?"
"அதப்பத்தி அப்புறம் சொல்றேன்டி நீ எங்க இருக்க..?" அவள் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது..
"பிராஜக்ட்ல ஒரு டவுட் கேக்கணும்னு காலேஜ் வந்தேன்டி.. என்னடி என்ன விஷயம் ஏன் பதட்டமா இருக்க..? "
"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டி கேஎம் ஹாஸ்பிடல் வந்துருடி"
"என்னது ஹாஸ்பிடலுக்கா ஏன்டி உனக்கு என்ன ஆச்சு ஏதாவது ப்ராப்ளமா..?"
"நான் நேர்ல சொல்றேன் நீ உடனே கிளம்பி வா"
"சரிடி", என போனை வைத்தவள் என்னவாக இருக்கும் என்ற யோசனையினூடே ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்..
உள்ளே நுழையும் முன்னே அவளுக்கு பல யோசனைகள் ஆன்டி அங்கிளுக்கு ஏதாவது இருக்குமோ இல்லையே அப்படி இருந்திருந்தால் என்னிடம் கண்டிப்பாக சொல்லி இருப்பாள் பக்கத்தில் தானே இருக்கிறார்கள் அம்மா அப்பாவுக்காவது தெரிந்திருக்கும். அப்படியானால் வேறு யாருக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் அதற்கு ஏன் என்னை கூப்பிடுகிறாள் குழப்பத்துடனே உள்ளே நுழைந்தாள்..
ரிசப்ஷன் வாசலிலேயே நின்றவள் விரைந்து வந்து அவளை அழைத்து சென்றாள்..
"என்னடி எதுக்கு இங்க வரச்சொன்ன யாருக்கு என்ன ஆச்சு..?"
"என் பிரண்டு தாண்டி ஒரு ஆக்சிடெண்ட் இங்கேதான் அட்மிட் பண்ணிருக்கோம்"
"ஓ அப்படியா ஒன்னும் பிராப்ளம் இல்லைல..?"
கவலையுடன், "இல்லடி கொஞ்சம் சீரியஸ்னு தான் சொல்லியிருக்காங்க. உன்ன கூட ஒரு உதவிக்காக தான் இங்க கூப்பிட்டேன்.."
"என்ன உதவிடி..?"
"சொல்லுறேன் வா"
ஒருவேளை பிளட் குடுக்க கூப்பிட்டிருப்பாளோ இருக்கும் எதுவாக இருந்தாலும் அவளே சொல்வாள் ஆனால் அவள் கொஞ்சம் உடைந்து போயிருப்பது போல தோன்றுகிறது. எனக்கு தெரியாமல் அவ்வளவு நெருக்கமான பிரண்ட் யாராக இருக்கும் சின்ன வயதிலிருந்து எனக்கு தெரியாமல் ஒரு ரகசியமும் அவளிடம் இருந்ததில்லை. அவளுடைய காதலை கூட அது தனக்குள் தோற்றுவித்த மாற்றத்தை கூட தூங்க விடாமல் உளறியிருக்கிறாளே. நந்தினி அவளது சின்ன வயது தோழி வீட்டினருக்கு அடுத்து நெருக்கமாக பழகுவது அவளிடம் தான். என்னை பற்றிய ஒரு சின்ன விஷயத்தை கூட அவளிடம் மறைத்ததில்லை ஆனால் அவள் அவளுடைய நண்பர்களைப் பற்றி கூட தன்னிடம் சரியாக சொன்னதில்லையோ. ஏனெனில் அவளை அழைத்துச் சென்றவள் ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு அங்கிருந்த அவளை விட ஓரிரு வயது வித்தியாசத்தில் இருந்த நாலைந்து பேரிடம் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவர்களோடு நந்தினியுடைய காதலனும் நின்றிருந்தான் அவனும் இங்கே என்ன செய்கிறான். இருவருக்கும் பொதுவான நண்பனோ தன்னைப் பற்றிய பேச்சு தான் என்பது அவர்கள் இவளை பார்த்த பார்வையில் தெரிந்தது என்னவாக இருக்கும் எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என அமைதி காத்தாள்..
அவர்கள் அருகில் வந்த அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அபர்ணா, சுபாஷ், நரேன், அப்புறம் இவரை உனக்கு தெரிந்திருக்கும். தெரியும் என்ற விதமாக தலையாட்டினாள். அபய் அவளுடைய காதலன். உள்ளே இருப்பது இவர்களுடைய நண்பன் தான் அவனுக்கு தான் ஆக்ஸிடென்ட். இவரை எப்போது காதலிக்க ஆரம்பித்தேனோ அப்போதுதான் அவனிடம் பழக ஆரம்பித்தேன் இப்போது அவனும் எனக்கு உயிர் தோழனாகி விட்டான். அவன் இப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் நீ மனது வைத்தால் மட்டும் தான் அவனை காப்பாற்ற முடியும்.
"நானா நான் என்ன செய்யமுடியும் என்னடி சொல்ற புரியும்படி சொல்லு எனக்கு ஒன்னும் புரியல"
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. இப்போது அபய் சொல்ல தொடங்கினான். உள்ளே இருக்கிறானே அவன் பெயர் வசீகரன். நாங்கள் எல்லோரும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். டிகிரி முடித்த பிறகு மேற்படிப்புக்காக அவன் வெளிநாடு சென்றான். அப்போது அவனுக்கு பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கும் போல அவளை இவன் பார்த்ததில்லை அவளும் இவனை பார்த்ததில்லை ஆனால் இருவரும் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தான் ஊருக்கு வந்த பிறகு அவளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறான். அவள் ஒரு ஏமாற்றுக்காரி போல ஊருக்கு வந்த பிறகு இவனை தொடர்பு கொள்ளவும் இல்லை பேசவும் இல்லை இவன் தான் பித்து பிடித்தது போல அவளை தேடி அலைந்தான். இவன் இருக்கும் நிலை பார்த்து நாங்களும் அவளை தேடி அலைந்தோம் அந்தக் கட்டத்தில்தான் இவனுக்கு இப்படி ஆகிவிட்டது. இப்போது இவன் மனதில் அவளை பற்றிய நினைவு இருக்கும் போல அவன் பிழைக்க வேண்டுமென்றால் டாக்டர் அவளை கூட்டி வர சொல்கிறார். தெரியாத அவளை நாங்கள் எங்கிருந்து கூட்டி வருவது அவள் வந்தால் தான் குணமாகும் வாய்ப்பைப் பற்றி மேற்கொண்டு பேச முடியும் என டாக்டர் சொல்கிறார்"
"அந்தப் பெண் கிடைக்கவில்லை என டாக்டரிடம் சொல்லி மேற்கொண்டு என்ன செய்யலாம் எனக் கேட்க வேண்டியதுதானே..?"
"அவன் குணமாகவதற்கு அவள் முக்கியம் என டாக்டர் சொல்லிவிட்டார்"
"அவள் கிடைக்கவில்லை என்றால் நீங்களும் தான் என்ன செய்ய முடியும்"
"ஆமாம் அதற்காகத்தான் உன் உதவியை நாங்கள் நாடினோம்"
"நானா இதில் நான் என்ன செய்யமுடியும்..?"
இப்போது மறுபடியும் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்னவென்று சொல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்களே எரிச்சல் வந்தது அவளுக்கு.
"நான் சொல்வதை அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக கேளுடி. இதில் உன்னால மட்டும் தான் உதவ முடியும்"
"புரியவில்லை"
மறுபடியும் அவள் தயங்கி "அது வந்து... " என இழுத்தாள்.
"எதுவா இருந்தாலும் சொல்லுடி இப்படி யோசிச்சிட்டே இருந்தா எப்போ தான் சொல்லி முடிப்ப..?"
"நீ தப்பா நினைச்சுப்பியோன்னு தயக்கமா இருக்கு வேற ஒன்னும் இல்லடி"
"நம்ப இன்னைக்கு நேத்து பழகல நந்து சின்ன வயசுலருந்து பழகுறோம் உன்ன போய் நான் எப்படிடி தப்பா நினைப்பேன் நீ எது செஞ்சாலும் யாருடைய நல்லதுக்காகவாவது தான் இருக்கும். நான் உன்ன முழுசா நம்புறேன் எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுடி"
கண்களில் கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டாள்.
"எங்களுக்கு வேற வழி தெரியலடி அதனாலதான் உன்கிட்ட இந்த உதவிய கேக்குறோம்"
ஒரு நிமிடம் ஆழ மூச்சை உள்ளிழுத்து விட்டு, "வசி காதலிச்ச அந்தப் பொண்ணா நீ நடிக்க முடியுமா..?" என கேட்டு முடித்தாள்.
"என்ன..?!" என மயூரி அதிர்ச்சியாக அவளை பார்த்தாள்..