6
கிருபாகரனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே பேசலானாள் மகிமா.
“கிருபா ஒரு சின்ன ஹெல்ப்”
“என்ன மகி”
“வந்து.. தப்பா நினைக்கக் கூடாது. என்னடா இவள் நம் அலுவலக வேலையில் மூக்கை நுழைக்கிறாளே என்று”
“ச்சேச்.. சே நிச்சயமாக இல்லை சொல்லு”
“என் தோழி ரொம்பவும் நெருங்கிய தோழி பாவம் இந்த வயதிலேயே விதவையாகி விட்டாள். இப்போது அவளுக்கு முக்கியமான தேவை ஒரு வேலையாம் நேற்று கோவிலில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தன் சோகங்களை எல்லாம் கொட்டி அழுது தீர்த்துவிட்டாள். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று மாமாவும் நீங்களும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அந்த வேலையை என் தோழிக்கு தரமுடியுமா? அவளுக்கு அதற்கான தகுதி இருந்தால்”
திருமணமாகி இத்தனை நாட்களில் தனக்கென்று அவனிடம் அவள் கேட்டது இதைத்தான். அவளது முதல் வேண்டுகோள் மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை.
“உன் தோழியை என் அலுவலகத்திற்கு அனுப்பி வை மகி. பயோடேட்டாவோடு பத்து மணியளவில் வரச் சொல் கூடுமான வரை முயற்சிக்கிறேன்” என்றவன் வரப்போகும் பூகம்பம் தெரியாமல் அலுவலகம் சென்றான்.
சரியாக பத்து மணிக்கு அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.
“எஸ் கமின்” என்று பதிலளித்தவன் தன் கோப்புகளில் கவனமாக இருந்தான்.
கதவு திறக்கப்பட்ட பின்,
“குட்மார்னிங் சா...” என்ற வார்த்தை முடிவடையும் முன் சட்டென நிமிர்ந்து பார்த்த கிருபாகரனும் சரி, எதிரில் பைலுடன் இருந்த பொண்ணும் சரி உறைந்து விட்டனர். பதட்டத்தில் தன் இருக்கையிலிருந்தே எழுந்துவிட்டான்.
“புவி.. புவனேஸ்வரி! நீ... நீங்களா?”
என்ன உளறுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
“கரன்... நீங்களா? நீங்கள் மதுரையில்...”
பழைய நினைவுகள் தன்னுள் தோன்ற அவஸ்த்தையாய் தலை கவிழ்ந்தாள்.
“கவலை தரும் பல நினைவுகள் அந்த மதுரை முழுவதும் நிரம்பிக் கிடப்பது போல் தோன்றியதால், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அப்பாவின் சொந்த தொழிற்சாலையை நிர்வகிக்க சென்னை வந்துவிட்டேன். அம்மாவின் உடல்நிலையும் ஒரு காரணம் தான்”
அவன் கூறுவதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அவளுக்கும் மதுரைக்கு சென்றால் அதே பிரச்சனை தானே. என்னென்னவோ நினைவுகள் தோன்ற, எல்லாவற்றையும் பின் தள்ளி வேறு பேச முயன்றாள்.
“மகி... மகிமா...”
“ஆம், என் துணைவி தான்”
“ஓ.. அவள் சொல்லி இருப்பாளே”
“ம்.. சொன்னாள்..”
சிறு மௌனத்திற்குப் பின்,
“மூன்று வருடம் தான் ஓடியிருக்கும், அதற்குள் எத்தனை மாற்றங்கள். உன் நிலைக்கு உண்மையிலேயே நான் வருந்துகிறேன்”
“உங்கள் வருத்தத்தை விட எனக்கு முக்கிய தேவை ஒரு வேலைதான் கரன்.. சாரி கிருபாகரன் சார்”
புவனாவை அலுவலகத்திலும், மகிமாவை வீட்டிலும் மாறி மாறி பார்த்து அவன் மூளை காய்ந்து விட்டது. ஆபீஸில் புவனாவை பார்க்கும் பொழுது, அவர்கள் காதலித்தது, ஊர் சுற்றியது எல்லாம் நினைவில் வரும். பாவம், இந்த சிறுவயதில் இப்படி தனிமரமாகி விட்டாளே என்ற துக்கம் அவனுள் எழும். எல்லாம் தெரிந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் சேர்ந்து கொள்ளும்.
வீட்டிற்கு வந்தால் மகிமா. அவள் ஒவ்வொன்றையும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்வது தான் ஒரு நல்ல கணவனாக இல்லாத பட்சத்திலும் மனைவிக்கான சகலகாரியங்களையும் ஒரு குறைவும் சொல்ல முடியாத அளவில் நிறைவேற்றிக் கொண்டு, தன் சொந்தபந்தங்களை விட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல மனைவியாய், தோழியாய் விளங்கும் மகிமாவையும் அவனால் விட்டுத்தர முடியவில்லை.
புவனா வேலைக்கு சேர்ந்து இந்த ஒரு வார மன போராட்டத்தில் கிருபாகரன் ரொம்பவும் மனம் நொந்து போனான்.
அப்போது தான் அந்த பார்ட்டி வந்தது. தன் நெருங்கிய நண்பனான பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்ததால் பேட்சிலர்ஸ் பார்ட்டி வைத்திருந்தான். எப்போதாவது இது போன்ற பார்ட்டிகளில் நாகரீகம் கருதி லேசாக ஆல்கஹால் பருகுவது கிருபாவின் வழக்கம். வேண்டாம் என்றால் ரொம்பவும் பிகு செய்வதாகவும், நடிப்பதாகவும் அந்த வட்டத்தில் கருதப்படும். அதனால் ஒரு ஸ்மாலை எடுத்துக் கொண்டு அந்த பார்ட்டி முழுவதும் குடித்துக் கொண்டே வலம் வருவான். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். அவன் மனம் அவனது கட்டுப்பாட்டிலில்லை. அவன் மனதின் வலி தீர்க்க மதுவிடம் சரண் புகுந்தான்.
பாஸ்கரன் எத்தனை முயன்றும் கிருபவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அளவிற்கதிகமாக குடித்துவிட்டு பிதற்ற ஆரம்பித்துவிட்டான். இதற்குமேல் சரிபடாது என்பது புரிய கிருபாவின் டிரைவரை வரவழைத்து கைத்தாங்கலாக காரினுள் ஏற்றி அனுப்பி வைத்தான்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாத கிருபாகரனை நினைத்து ரொம்பவும் கவலைப்பட்டாள் மகிமா. போன் செய்தாலும் பதிலில்லை. அவனாகவும் தகவல் தரவில்லை என்று சிறு பதட்டத்தோடு காத்திருந்தாள். சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் கதவு தட்டப்பட்டதும் திறந்த மகிமாவிற்கு அதிர்ச்சியில் இதயமே ஒரு நொடி நின்று பின் துடித்தது.
“என்ன மணி அண்ணா, இவருக்கு என்னவாயிற்று பதட்டமாக கேட்டவளிடம்”
“பயப்படும்படி எதுவுமில்லை அம்மா! ஒரு பார்ட்டியில்...” என்று அவர் தயங்கவும்.
மகிமா கிருபாகரனை நெருங்கியதும் அவர் முடிக்காமல் விட்ட வாக்கியத்தின் மீதியை அவனிடமிருந்து வந்த மதுவின் வாடை சொல்லியது. சட்டென்று நாசியைப் பொத்தியவள், கிருபாவிற்கு இந்தப் பழக்கம் உண்டா. கல்யாணமாகி இத்தனை மாதத்தில் ஒரு நாளும் இப்படி இல்லையே. அல்லது புதிதாக கற்றுக் கொண்ட பழக்கமா, நினைத்ததை டிரைவரிடம் கேட்டும் விட்டாள்.
“இல்லை மா.. அய்யா இப்படி அதிகமாக மது அருந்தி நான் இதுவரை பார்த்ததில்லை. அது தான் அம்மா மனசு புண்படுமே என்று நினைத்து இத்தனை தாமதமாக வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று பேசிக் கொண்டே இருவருமாக அவனை கட்டிலில் படுக்க வைத்தனர்.
“ரொம்பவும் நன்றி அண்ணா, அத்தைக்குத் தெரிந்தால் வேதனைப்படுவார்கள்”
“சரிம்மா நான் கிளம்புறேன்” என்று டிரைவர் சென்றுவிட சில நிமிடங்கள் கட்டிலில் கிடந்த கிருபாகரனை வெறித்தாள்
எதற்காக கிருபா இந்த மிதமிஞ்சிய மது!
புவனாவை மறக்கவா, அல்லது என்னை உங்கள் வாழ்வில் சகித்துக் கொள்ள முடியாமல் வந்த துக்கத்தில் குடித்ததா? எதுவாக இருந்தாலும் வேதனை எனக்குத்தான். என்னால் தானோ என்ற குற்றவுணர்வு என்னை சுட்டெரிக்கிறது என்று மனதினுள் பேசிக் கொண்டவள் ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு, அவனை நெருங்கி அவனது ஷூ, கோட், டை என தேவையில்லாவற்றை களைந்தாள். இறுதியாக அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ்சை அவள் எடுத்ததும் அவனிடம் அசைவு தெரிந்தது. குழறலாய் ஏதோ பேசவும் செய்தான். எத்தனை உற்றுக் கேட்டும் அதன் பொருள் சுத்தமாக அவளுக்கு விளங்கவில்லை. அவளின் செவியை அவனது இதழோரம் வைத்தும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
இது தேவையில்லாத வேலை என்பது புரிய நிமிர நினைத்தவளால் எழ முடியவில்லை. காரணம் கிருபாவின் கரம் அவள் கரத்தைப் பற்றி இருந்தது. மெதுவாக அதை அகற்ற முயன்றவள் தோற்றுத்தான் போனாள். அவன் அத்தனை இறுக்கமாக பற்றி இருந்தானா அல்லது அவன் பற்றுதலில் இருந்து விடுபட அவள் விரும்பவில்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இறுதியாக தன் சக்தியை ஒன்று திரட்டி அவனின் கைகளை விடுவித்துக் கொள்ள முயல்கையில், அவனது மற்றொரு கரம் அவளது இடையை வளைத்து அவன் மேல் போட்டுக் கொண்டது. நிலை குலைந்து அவன் மேல் விழுந்தவள், இது நல்லதற்கல்ல என்பது புரிய, திமிறி விலக முயன்றாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் முகத்தைப் பார்த்தாள், அவன் கண்கள் மூடியே தான் இருந்தது. இது உள்ளே சென்ற மதுவின் பேயாட்டம் தான் என்பது புரிய,
“கிருபா இங்கே.. பாருங்கள் இது சரியல்ல, தப்பு. நீங்கள் அதிகமாக குடித்திருக்கிறீர்கள். உங்கள் நினைவில் நீங்கள் இல்லை. என்னை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்”
கண்களில் நீர் திரையிட அவனிடம் மன்றாடினாள். மனமோ! அவன் அணைப்புத் தந்த கதகதப்பில் துள்ளிக் குதித்தது.
அறிவோ ‘மகிமா விழித்துக்கொள், அவர் இப்போது சுயநினைவில் இல்லை. அவரை நீ காதலிக்கிறாய், இந்த நெருக்கம் உனக்கு பிடித்திருக்கலாம். ஆனால் காலை எழுந்தவுடன் என் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொண்டாயா? என்று அவர் கேட்டால் என்ன செய்வாய்? முகத்தை எங்கே வைத்துக் கொள்வாய், வேண்டாம் அவரிடமிருந்து விலகு’ என்று அவளை எச்சரித்தது.
“கிருபா... ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம். இப்போது என்னை விடுங்கள்” என்று கெஞ்சியவளை, ஒரே சுற்றில் கீழே படுக்க வைத்து அவளின் காதோரம்
“ஐ லவ் யூ...” என்றான்.
சப்த நாடிகளும் நின்றுவிட்டது அவளுக்கு. அவள் கேட்டது நிஜமா என்று கூட சந்தேகம் வந்தது. அவளது சந்தேகம் தீரும் விதமாக மறுபடியும் சற்று உரக்கவே.
“ஐ லவ் யூ சோ மச்...” என்றான் கிருபாகரன்.
இதற்குத்தானே அவள் ஆசைப்பட்டாள். இதற்காகத்தானே இத்தனை மனவலியையும் தாங்கினாள். இன்று இது நிஜமா அல்லது போதையில் அவன் உளறியதா என்பதை அவள் யோசிப்பதற்குள் கிருபா அவளை தன் வசபடுதும் முயற்சியில் இறங்கினான். உண்மையா பொய்யா?! நிஜமா போதையா? என்ற கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்த போதிலும் அவளால் அவனை தடுக்க முடியவில்லை. பாவம் அவளும் பெண்தானே, அதுவும் கிருபாவின் மீது காதல் கொண்ட மனம், அவன் தொட்டதும் நெகிழ்ந்து விட்டாள். தன் உண்மையான காதலை அவனுக்கு அளித்தாள். இருவரும் ஒருவருக்குள் மற்றவரை தொலைத்து எப்போது தூங்கினார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.
காலையில் முதலில் எழுந்தது மகிமாதான். எழுந்ததுமே நேற்றிரவு நடந்ததெல்லாம் அவள் நினைவுகளில் விரிய வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன. இதழோரம் வெட்கச் சிரிப்புடன் கிருபாகரனை பார்த்தவளால் அது முடியவில்லை. தூங்கும் அவனை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கமாக இருந்தது. அவனின் தூக்கம் கலையாமல் மெல்ல கட்டிலை விட்டு எழுந்தவள் நெகிழ்ந்திருந்த ஆடையை சரி செய்து கொண்டிருக்கையில் காதில் நாராசமாய் அந்தப் பெயர் ஒலித்தது கிருபாகரனிடமிருந்து,
“புவனா... புவனா.. புவனா...”
இன்றும் ஏதோ குழறலாய் மூடிய கண்களை திறக்காமலே அவன் புலம்புவது அவள் காதுகளில் அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது.
அமிலம் என்பது கூட சாதாரண வார்த்தைதான். அந்த வலியை அவளால் சொல்லவும் முடியவில்லை. இதயத்தை யாரோ கத்தியால் இரண்டு துண்டுகளாக வெட்டியது போல் இருந்தது. அப்படியானால்? அப்படியானால்? புவனா என்று நினைத்து... என்... என்னை, அதற்கு மேல் யோசிக்கவும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவன் தொட்டயிடமெல்லாம் எரிந்தது. எங்கே அழுது, அவன் எழுந்து இன்னமும் அசிங்கமாகி விடுமோ என்ற பயத்தில், குமுறிக் கொண்டு வந்த அழுகையை கை வைத்து மூடி கட்டுப்படுத்திக் குளியலறை நோக்கி விரைந்தாள்.
எத்தனை தண்ணீர் ஊற்றியும் உடலின் அழுக்கு அப்படியே இருப்பதுபோல் தான் இருந்தது. இந்த அழுக்கை எப்படி அகற்றுவது, கடவுளே என் மீது கருணை காட்டிவிட்டாய் என்று சந்தோஷப்பட்டேனே. எத்தனை தேய்த்தும் உடலின் கறை போனதுபோல் தோன்றவில்லை. எனவே ஷவரை வேகமாக திறந்துவிட்டு அமர்ந்தாள். விழிநீர் நீரோடு கலந்து கரைந்து கொண்டிருந்தது. ‘ஐ லவ் யூ’ ‘ஐ லவ் யூ சோமச்’ கிருபாகரனின் குரல் அவளின் காதுகளில் ஒலித்து மேலும் அவளை இம்சித்தது. காதுகளை அழுந்த மூடியும் அவளுக்கு அது கேட்டுக் கொண்டே இருந்தது. எல்லாம்.. எல்லாம் புவனாவிற்குத்தான். அவளுக்கான வார்த்தையை எனக்காகவென்று எண்ணிய முட்டாள் மட சாம்பிராணி நான் தான். எத்தனை மட்டித்தனம், எத்தனை அறிவீனம், எத்தனை அசிங்கம். என் பெண்மை அசிங்கப்பட்டுவிட்டதே. இதை எப்படி சரி செய்வது? இனி கிருபாகரனின் முகத்தில் எப்படி விழிப்பது.
ஒருவேளை அவருக்கு நூறில் ஒரு சதவீதம் நேற்று நடந்தது ஞாபகம் வந்துவிட்டால் வேறு வழியில்லாமல் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டால், மனதில் புவனா, படுக்கைக்கு நான் என்ற இந்த நிலை நிரந்திரமானால் ச்.. சீ.. அதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கிறது. அதற்கு தூக்கில் தொங்கிவிடலாம் என்று உயிரை விடும் அளவு ஒரு நொடியில் முடிவெடுத்தாள். அதை உடனே அழித்தாள். உயிர் கடவுள் கொடுத்தது, அதை அழிக்கும் உரிமையும் அவருக்கே உண்டு. அப்படியானால் இப்படி ஒரு வாழ்க்கையை, என் சுயத்தை விட்டுக் கொடுத்து வாழ வேண்டுமா? முடியவே முடியாது. அது எந்தக் காலத்திலும் நடக்காது என்ற முடிவிற்கு வந்தவள். உடனே குளியலறையிலிருந்து வெளியேறி உடைமாற்றி தயாரானாள். நல்லவேளையாக அவள் வெளிவரும் பொழுது கிருபாகரன் அங்கு இல்லை.
அவளின் மனப் போராட்டத்தில் அதிக நேரம் குளியலறையில் இருந்ததால் அவன் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்று யூகித்தவளுக்கு அவன் அலுவலகமே சென்றுவிட்டான் என்ற தகவல் வேலைக்காரி மூலம் தெரியவந்தது. கையில் சூடான காப்பியுடன் அவளை எதிர்கொண்ட சமையல்காரம்மா,
“ஐயா ஆபீஸ் போயிட்டாரும்மா. அம்மா உங்களுக்கு சூடா காப்பி கொடுக்கச் சொன்னாங்கம்மா” என்றதும் இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.”ச்சே.. அழுவது எத்தனை மடத்தனம். இன்னமும் இந்த அறையில் இந்த வீட்டில் கிருபாகரனின் முகம் பார்த்து வாழ்வது மிகவும் கடினம்” என்று மனதினுள் நினைத்தவள் சமையல்காரம்மாவை அனுப்பிவிட்டு வேகமாக ஒரு பெட்டியை எடுத்து தன் துணிகளை அடுக்கலானாள். தன் செல்போன் மூலம் தந்தையுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.
“அப்பா, அம்மாவை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது. அவர் அதிக வேலையாக இருப்பதால் நீங்களே வந்து கூட்டிக் கொண்டு போகிறீர்களா?” என்று முடிக்கையில் அழுகையை கட்டுப்படுத்த சிரமப்பட்டு போனாள்.
அவர் என்ன நினைத்தாரோ உடனே வருவதாக் ஒப்புக் கொண்டார். மனம் சற்று நிம்மதியடைந்தது போல் தோன்றியது. ஆனால் அத்தையிடமும் மாமாவிடமும் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவள் மெல்ல காயத்ரியை தேடிச் சென்றாள்.
தோட்டத்தில் காலை நடைப்பயற்சி முடிந்து அங்கிருந்த கல் பெஞ்சில் இளைப்பாறிக் கொண்டிருந்த காயத்ரியை நெருங்கியவள்.
“அத்தை” என்று மென்மையாக அழைத்தாள்.
“வா மகிமா இப்படி உட்கார்” என்று தள்ளியமர்ந்தார் காயத்ரி.
“அத்தை.. வந்து...”
அவள் தயங்கவும்
“என்னம்மா... என்ன தயக்கம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்” என்று ஊக்கமூட்டினாள் அவர்.
“என்... நெருங்கிய தோழிக்கு திருமணமாம். இப்போதுதான் அப்பா போன் செய்தார். நான் நிச்சயமாக போக வேண்டும். அப்பா ஏதோ வேலையாக சென்னை வருகிறாராம். நீங்கள் அனுமதித்தால் அவரோடு...”
முடிக்க முடியாமல் நிறுத்தினாள். “இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது கிருபாகரனிடம் கேட்டாயா அவன் என்ன சொன்னான்?”
லேசாக கண்கள் கலங்கிவிட அது காயத்ரிக்கு தெரியாமலிருக்க தலை கவிழ்ந்தாள்.
“அவரிடம் நீங்கள் தான் சொல்ல வேண்டும் அத்தை”
வார்த்தைகளை கோர்த்து சிறிதும் தடுமாற்றமில்லாமல் பேசிவிட்டதை எண்ணி அவளுக்கே ஆச்சர்யம் தான். அவளின் முகத்தில் எதைப் படித்தாரோ அவளுக்கு தெரியவில்லை முகம் மலர,
“அதற்கென்ன மகிமா, புது மனைவியை பிரிய யாருக்குத்தான் பிடிக்கும். நான் அவனிடம் பேசுகிறேன், ஏதேனும் திட்டிவிட்டானா? கண்கள் கலங்குகிறது பார். சரியான முட்டாள் அவன்” என்று சரமாரியாக மகனை திட்ட ஆரம்பித்தவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள் மகிமா.
மறுபடியும் அறையினுள் சென்றவளால் கொஞ்சமும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கிருபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதி விடலாமா? நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் எழுத்தில் கோபத்தை காட்டலாமா? என்று யோசித்தவள். ஒரு பேப்பர் பேனா சகிதமாக அமர்ந்தாள். ஆனால் அவளால் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. கண்ணீர் தான். கேட்காமலே சென்று விட்டால் என் மனம் ஆறாது என்றுணர்ந்தவள். ஷாப்பிங் போக வேண்டும் என்று காயத்ரியிடம் சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டாள். நல்லவேளையாக அவள் கார் ஓட்ட கற்றிருந்தாள். இல்லையேல் டிரைவர் எங்கே சென்றாள் என்று மாமியாரிடம் சொல்லிவிடக் கூடுமல்லவா.
என்னென்ன பேச வேண்டும் என்று மனதினுள் குறிப்பெடுத்துக் கொண்டே வண்டி ஒட்டியவள். ஒருவாறு பேசும் துணிவுடன் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு மேலே அறைக்குச் செல்லலானாள். வழியில் எதிர்ப்பட்ட சிலர் திருமணத்திற்கு வந்ததால் அடையாளம் தெரிந்து முகமன் தெரிவித்தனர். போலியான புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்தவள் வேகமாக எம்.டி என்ற பெயர் பலகையிட்ட அறையை நோக்கி விரைந்தாள். அறை வாசலில் இருந்த கேபினில் செக்கரட்டரியை காணோம்.
இந்த ஈஸ்வரி எங்கே போய்த் தொலைந்தாள் என்று ஒரு நொடி அங்கே சுற்றும் முற்றும் தேடியவள் உடனே ஏதோ தோன்ற விரைந்தாள். நான் கிருபாகரனின் மனைவி தானே நான் ஏன் அவரின் அறைக்கு செல்ல தயங்குகிறேன். இப்படி நினைத்தவள் உடனே கதவை நோக்கி விரைந்தாள். லேசாக திறந்திருந்த கதவை தட்டுவதற்காக கை வைத்தவள் சிலையென உறைந்து நின்றாள்.
உள்ளே.. உள்ளே ஈஸ்வரி கண்ணீருடன் கிருபாகரனின் மார்பில் சாய்ந்திருந்தாள்.
“நாம் பிரிந்திருக்கக் கூடாது கரன், எல்லா பிரச்சனைகளும் வேதனைகளும் அதனால தான். நீங்களும் சரி, நானும் சரி வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் கரன்” என்று உரக்கப் பேசி குலுங்கி அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. நல்லவேளை கிருபாகரன் கதவிற்கு முதுகுக்காட்டி நின்றிருந்ததால் மகிமாவை பார்க்கவில்லை. சட்டென திரும்பியவள் அந்த காட்சி தந்த அதிர்ச்சி குறையாமலே வீடு வந்து சேர்ந்தாள். எப்படி வந்தாள்? அதுவும் எந்த விபத்தும் ஏற்படாமல் எப்படி வந்தாள், அவளுக்கே ஆச்சர்யம்தான் அவள் வருவதைப் பார்த்த காயத்ரி பேசியது கூட அவள் காதுகளில் துளியும் விழவில்லை. நேராக அறைக்குள் சென்று கதவடைத்தவளுக்கு அழுகை கூட வர மறுத்தது.
ஈஸ்வரி புவனேஸ்வரி.. அவள் தான் புவனாவா? இது கூட தெரியாமல் அவளை நானே வேலைக்கு அமர்த்த கோரி சிபாரிசு செய்தேனே. கடைசியில் நான்... என் தலையில் மண் அள்ளி போட்டுக் கொண்டேனே.. இல்லையில்லை, புவனா இல்லாத போது மட்டும் கிருபாகரன் என்னோடு கொஞ்சினாரா என்ன இல்லையே. அவள் மேல் பழிபோட்டு என்ன பலன். எனக்கு தாலி கட்டியவர் மனதில் நான் இல்லையே அவள் தானே. இப்படி ஆபீஸில் புவனாவோடு சல்லாபமாக இருப்பதாக நினைத்து தான் அவர் நேற்று என்னோடு சீ... ச்சீ.. இனி அவருடன் பேசுவது என்ன, அவரை கண்ணால் பார்ப்பது கூட பாவம்.. அசிங்கம்.. இனி கொஞ்சமும் தாமதிக்க முடியாது. இந்த வீட்டில் இருந்தாலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். எங்கே அம்மா.. அம்மாவின் மடிதான் இப்போது தேவை அவளுக்கு. இப்படி நினைவுகளில் மூழ்கி திளைத்தவள். வேலைக்கார மணி வந்து கதவு தட்டியது கூட தெரியாமல் விட்டத்தை வெறித்திருந்தாள்.
“அம்மா அம்மா” சற்று உரக்க அவன் அழைத்ததும் தான் நினைவிற்கு வந்தாள்.
“எ.. என்.. என்ன மணி?”
“உங்கள் அப்பா வந்திருக்கிறார். அம்மா உங்களை கூட்டி வரச் சொன்னார்கள்” என்றது தான் தாமதம் பெட்டியோடு கீழே இறங்கிவிட்டாள்.
“அடடா உங்கள் பெண்ணை பாருங்கள், அப்பா வீடு என்றதும் பெட்டியோடு இறங்கிவிட்டாள்” என்று கிண்டலடித்த காயத்ரியை,
“நீ மட்டும் என்னவாம். இன்றும் உன் தம்பிகள் யாரேனும் வந்து நிற்கட்டுமே, எப்படி பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடுவாய் என்று எனக்கல்லவா தெரியும்” என்ற லக்ஷ்மணனோடு சேர்ந்து மூவரும் சிரித்தனர். மாமியாரின் முன் வந்து நின்றவள்,
“அத்தை நான் கிளம்பட்டுமா?”
பலகீனமான குரலில் கேட்டாள்.
“அட, என்ன அவசரம் மகிமா, அப்பா இப்போது தானே வந்தார் சாப்பாடு தயாராகிவிட்டது. சாப்பிட்டதும், நீயும் சாப்பிடு பிறகு போகலாம்” என்ற காயத்ரியிடம்.
“வேண்டாம் சம்பந்தி. இப்போதுதான் சாப்பிட்டேன் கொஞ்சம் அவசரம் ஊரில் வேலை இருக்கிறது, நாங்கள் கிளம்புறோம்”.
அப்பாவின் பதில் அவளுக்கு நிம்மதி அளித்தது. இன்னமும் கொஞ்ச நேரம் அந்த வீட்டில் இருந்தாலும் உடைந்து அழுது, ஒரு பெரிய களேபரமாகிவிடும் என்பது அவளுக்கு சர்வ நிச்சயம்.
“ஆமாம் அத்தை, அப்பா சொல்வதும் சரிதான் அவருக்கு அங்கே அதிக வேலை இருக்கிறது என்று சொல்லி, என்னைத் தயாராக இருக்கச் சொன்னார்”
“ஓ..” என்று யோசித்த லக்ஷ்மணன்.
“சரி சம்பந்தி, உங்கள் வேலை கெடுவதாக இருந்தால் நீங்கள் கிளம்பலாம். ஆனால் அடுத்த முறை வரும்பொழுது ஒரு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்”
“நிச்சயமாக சம்பந்தி” என்றவர் பொதுவான வணக்கத்தோடு வெளியே காரை நோக்கி சென்றார்.
மாமியாரின் அருகில் சென்றவள், மறுபடியும் ”நான் கிளம்புறேன் அத்தை... அவர்...” என்று முடிக்க முடியாமல் நிறுத்தினாள். அவளை புரிந்து கொண்ட காயத்ரி மென்மையாக அவளின் கைப்பற்றி,
“நான் அவனிடம் பேசிவிட்டேன் மகிமா. தோழியின் திருமணத்திற்கு நீ போவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையாம். அதையே நினைத்து மனதை வருத்திக் கொள்ளாமல் நிம்மதியாக உன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்” என்று முடித்த போது மகிமாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டியது
“அட, என்னம்மா நீ, மூன்று நாள் ஊருக்கு போவதற்காகவா இப்படி அழுகிறாய்”
“அட, என்னம்மா நீ, கணவனை பிரிந்து முதல் முறையாக போகும்போது எல்லாப் பெண்களும் அழுவார்கள் தானே. நீ கூடத்தான் முதன்முதலில் சீமந்தம் செய்து, உன்னை அழைத்துச் சென்ற போது என் கையை பிடித்துக் கொண்டு எப்படி அழுதாய்” என்று பேசி நிலைமையை சகஜமாக்கினர்.