Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
1

“என் விருப்பத்தை யாருமே பொருட்படுத்தவில்லை மகிமா, எல்லாம் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே நடத்தி முடித்து விட்டனர் என்னை மன்னிப்பாயா?” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதரணமாக பேசும் கிருபாகரனை விழிவிரிய பார்த்தாள் மகிமா

ஒரு நொடி அங்கே நடப்பது எல்லாம் என்னவென்றே அவளுக்கு புரியவில்லை. சுற்றுபுறத்தை ஒரு முறை பார்த்தாள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறை படுக்கை முழவதும் மல்லிகை பூ சிதறல்கள், நடுவில் ரோஜா இதழ்களால் இதய வடிவ அலங்காரம். ரூம் ஸ்ப்ரேயின் மணமும், ஊதுவத்தியின் மணமும் சேர்ந்து ஏதோ சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது. ஆனால் இன்று காலை 6.௦௦ - 7.௦௦ முகூர்த்தத்தில், அக்னியை சாட்சியாக வைத்து நானூறு பேர் அட்சதை தூவ, திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டியவனின் பேச்சு, அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் ஒட்டாமல் ஒலித்ததை அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

விருப்பமில்லை என்று சொல்ல, நல்ல முகூர்த்தம் பார்த்து , சந்து முகூர்த்தத்தில் சொல்கிறாரா? இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் கதரியழுது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமா? அல்லது பெரியவர்களை அழைத்து பேச வேண்டுமா? கண்கள் தானாக கரித்துக் கொண்டு வந்தது ச்சே...ச்சே,, இந்த அழுகை எந்த பிரச்சனையையும் போக்காது என்று மகிமா சிந்திக்கும் பொழுதே கிருபாகரன் தொடர்ந்தான்.

“எனக்கே ரொம்பவும் அசிங்கமாகத் தான் இருக்கிறது மகிமா. ஆனால் என் நிலைமை அப்படி, என்னை மன்னிப்பாயா? என்னைப் பொருத்த வரையில் இந்தத்’ திருமணம் நடந்திருக்கக் கூடாது”

அவன் பேசப் பேச அவளுக்கு கோபம் அதிகரித்தது. ஆத்திரத்தில் தவறாக எதுவும் பேசக்கூடாது என்று ஆழ்ந்த சல மூச்சுகளை எடுத்தவள் முதல் முறையாக வாய் திறந்தாள்.

“காரணம்”

“காரணத்தை நிச்சயமாய் நீ தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கான உரிமை உனக்கு இருக்கிறது”

உரிமை!! எந்த உரிமையைப் பற்றி இவன் பேசுகிறான். கட்டிய தாலியையே விருப்பமில்லாமல் கட்டினேன் என்கிறவர். உரிமையைக் கொடுக்க மட்டும் முன் வந்திருக்கிறாரா? ம்..ஹும்.. என்று உள்ளுக்குள் குமைந்தவள். அவனது பேச்சை கவனிக்கலானாள்.

“நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளைத் தவிர வேறு பெண்ணை நினைத்துப் பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை”

தெளிவாகவே பேசினான், என்ன ஆண்மகன் இவன். காதலை வீட்டில் சொல்லத் தைரியமில்லாத கோழை. அந்த கோழைத்தனத்தை மறைக்க, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கிறோமே என்ற எண்ணமில்லாமல், இப்போது இருக்கும் இந்த தெளிவு பெண் பார்க்கும் போது இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும் என்று நினைத்தவள், அதைக் கேட்டும் விட்டாள்.

:இந்த காதல் என்னை பெண் பார்க்க வந்த பொழுது இல்லையா? அல்லது அப்பொழுது சொல்ல மறந்துவிடு இப்போது நினைவு வந்ததால் சொல்கிறீர்களா?”

குத்தலாகவே தான் கேட்டாள்.

“மகிமா ப்ளீஸ்... என்னை மேலும் கொல்லாதே. ஏற்கனவே பத்தி உயிர்தான் என்னுள் இருக்கிறது. முன்பே சொல்லி இருக்க வேண்டும்தான். ஆனால் அப்போது நியாயமான காரணம் எதுவும் இல்லை”

அவன் பதிலில் எரிச்சல் அதிகரித்தது அவளுக்கு

“வேறு ஒரு பெண்ணை காதலிப்பது உங்களுக்கு காரணமாக தெரியவில்லையா?’

“அதுதான் புவிக்கு... அதாவது நான் காதலித்த பெண்ணிற்கு திருமணமாகிவிட்டதெ. பிறகு எந்த காரணத்தைச் சொல்லி நம் திருமணத்தை நிறுத்த முடியும்” என்றவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் மகிமா, திருமணமாகிவிட்ட பெண்ணிற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம். அவனவன் திருமணத்திற்கு முன்னால் நிறைய காதலை வைத்துக் கொண்டு, அதை மனைவிடம் மூச்சுக்கூட விடாமல் வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். இவர் என்ன இத்தனை வெகுளியாய் இருக்கிறார் என்று யோசித்தவள், கொஞ்சம் தோழமை கலந்த குரலில் பேசினாள்.

“நா.. நான் உங்களை கிருபா என்று அழைக்கலாமா?” என்றவளுக்கு சரியென்பது போல் தலையசைத்தான்.

“இங்கே’ பாருங்கள் கிருபா... உலகத்திலுள்ள அத்தனை பேருக்கும்,ஒரு முதல் காதல் நிச்சயமாய் இருக்கும். நூற்றில் ஒருவருக்குத்தான் அது வெற்றிபெறும். அதனால் எல்லோரும் தேவதாஸாக ஆகிவிடுகிறார்களா என்ன? இல்லையே”

“என்னால் என் புவியை மறக்க முடியாது”

பிடிவாதம் பிடிக்கும் குழந்தையின் முகம் போல்தான் மகிமாவிறகு தோன்றியது.

“கிருபா.. இதுதான் நிதர்சனம். நீஎங்கள் வேண்டுமானால் ஒரு நாலுபேரிடம் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாய் எல்லோருக்குள்ளும் ஒரு காதல் பிளாஷ்பேக் இருக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் திருமணம் செய்யாமல் இருப்பதில்லையே?”

“அப்படியானால் உங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறதா?” என்று எந்தவித உணர்வுமில்லாமல் கேட்டவனை பார்க்கையில் சிரிப்பதா இல்லை அழுவதா என்று கூட அவளுக்கு புரியவில்லை. அவள் சொல்ல வந்தது என்ன! அவன் புரிந்து கொண்டதென்ன? இருப்பினும் அவனது கேள்விக்கு பதிலளிக்கலானாள்.

“ஆம்.. நிச்சயமாய் இருக்கிறது எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தப் பொழுது, முதலில் ஒரு பையனின் போட்டோவை காட்டினார்கள். எனக்கு அந்த போட்டோவிலேயே அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது கண்டதும் காதல் என்று கூட சொல்லலாம்” நிறுத்தினாள்.

“பிறகு ஏன் அந்த சம்மந்தம் கை கூட வில்லை?” என்று ஆர்வமாக கேட்டான்

“கைகூடவில்லை என்று யார் சொன்னது, அந்த போட்டோவில் இருந்தது நீங்கள்தான்” என்று எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் சொன்னவளை ஒரு நொடி விழியகலப் பார்த்தவன், உடனே...

“அது.. தான் நீ என்னை திருமணம் செய்து கொண்டாயே பிறகு எப்படி அது பிளாஷ்பேக் ஆகும்”

“எது.. திருமணம் இந்த மஞ்சள் கயிற்றை எனக்கு கட்டினீர்களே அதுவா?... என்ன அப்படி பார்க்கிறீர்கள். விருப்பமில்லாமல் கட்டியது என்று நீங்கள் சொன்ன பிறகு இது வெறும் கயிறாகத்தான் தோன்றுகிறது. அதனால் எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு பிளாஷ்பேக் வந்துவிட்டது”

அவள் எளிதாய் சொல்வதுபோல் பேசினாலும், அது கிருபாகரனை அதிகமாக பாதித்தது போலும்..

“இதற்கு நீ என்னை ஓங்கி அறைந்திருக்கலாம் மகிமா”

அவன் வார்த்தைகளில் வலி தெரிய உடனே சமாதானம் பேசினாள்.

“கிருபா ப்ளீஸ், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதற்கு மேல் இந்த மனநிலையில் நம் பேச்சை தொடர வேண்டாம். அது வேறுவிதமாய்த்தான் முடியும். காலையிலிருந்து அதிக சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று இருவருமே களைத்திருப்போம், இப்போது தூங்கலாம், மற்றதை காலையில் பேசலாம்” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல், குளியலறையினுள் நுழைந்து பட்டுச் சேலையை மாற்றிக் கொண்டு முகம் கழுவி விட்டு வந்தாள். பிறகு எல்லா நகைகளையும் கழற்றிவிட்டு, பீரோவில் பத்திரப்படுத்தினாள்.

மற்ற நகைகளைப் போல் எளிதாக, கழட்ட முடியாத தாலியை சற்றுநேரம் உற்றுப் பார்த்தாள். இதற்கு இந்த நிமிடம் வரை எந்த அர்த்தமும் இல்லை என்ற உண்மை சுட்டது. இருப்பினும் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்ட மகிமா அந்த கிங் சைஸ் கட்டிலில் ஒரு ஓரமாக படுத்து கண் மூடினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கியும் விட்டாள்.

தூக்கம் வராமல் தவித்தவன் கிருபாகரன் தான். அவன் நினைத்தது வேறு. இங்கு நடந்தது வேறு இந்த பேச்சு வார்த்தைக்காக கடந்த மூன்று நாட்களாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படிப் பேசினால் தன் நிலைமையை மகிமாவிடம் சரிவர எடுத்துச் சொல்ல முடியும் என்று யோசித்து, யோசித்து வாக்கியங்களை வார்த்தைகளையும் தேடிபிடித்துகோர்த்து என்று எத்தனை சிரமப்பட்டான். தன் விருப்பமின்மையை சொல்லும் பொழுது, மகிமா நிச்சயம் கண்ணீர் வடிப்பாள். அப்போது அவளை எப்படி சமாதானப்படுத்த வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலக், அம்மாவின் உடல்நிலையைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நிறைய யோசித்து வைத்திருந்தான்.

ஆனால் மகிமா வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாளே என்று யோசித்தவன். அம்மாவின் முதல் ஹார்ட் அட்டாக் பற்றி சொல்லாமலே விட்டு விட்டோமோ என்று தோன்றியது அப்படி அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் இருக்கும் பொழுது தான் அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதே. அந்த சூழ்நிலையில் எதிர்த்து, அவனால் எதுவும் பேச முடியவில்லை.

அப்பாவும், அம்மாவும் காதலுக்கு எதிரிகள் அல்ல.. ஆனால் அப்போது காதல் தோல்வியில் இருந்தவனால் எப்படி காதலை வீட்டில் சொல்ல முடியும். கல்லூரி காலத்திலிருந்தே வளர்ந்து தழைந்த காதல், எட்டு வருட காதல். சேலத்தில் இருக்கும் பாட்டியை பார்த்து வரப்போவதாக சொல்லிவிட்டுச் சென்ற புவனா. ஒரு வாரம் கழித்து அழுகையோடு செல்லில் பேசினாள்.

“என்னை கட்டாயபடுத்தி என் தாய்மாமனுக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் கரன். என்னால் தடுக்கக் கூட முடியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. இனி நீங்கள் எனக்காக காத்திருப்பது வீண் தான். எல்லாம் என் தலையெழுத்தின்படி நடந்து முடிந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் கரன். அப்படியே என்னை மறந்துவிடுங்கள், உங்களுக்கேற்ற ஒரு பெண்ணாகப் பார்த்து மணந்து கொள்ளுங்கள். இனி என்னை தொடர்பு கொள்ள நினியாக்க் வேண்டாம்” என்று மூச்சு விடாமல் அழுதுக்கொண்டே பேசியவள், இவன் நிலைமையை புரிந்து கொண்டு பேசும்முன் தொடர்பை துண்டித்துவிட்டாள். தலையில் இடி விழுந்தது போல் இருந்தது அவனுக்கு. அவளை தொடர்பு கொள்ள எந்த வழியும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அப்படி அவன் சோகத்தில் காலம் கழிக்கையில் தான் அவனது தாய்க்கு உடம்பு சரியில்லாமல் போனதும், இவனுக்கு திருமணம் நடந்ததும் எல்லாமே.

டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அம்மாவிற்கு கொஞ்சமும் மனஅழுத்தம் வந்துவிடக் கூடாது என்று. எவ்வளவுக்கு அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களோ அவ்வளவு நல்லது என்று எடுத்துச் சொன்ன பிறகு அம்மாவின் விருப்பத்திற்கு மாறாக, எது பேசவும் அவனுக்கு தைரியம் வரவில்லை. அதனால் தான் சுயநலமாக தாயின் உடல்நிலைக்காக ஒரு பெண்ணை மணந்தான்.

இப்போது மகிமாவிடம் எப்படி பேசி புரிய வைப்பது. அம்மாவின் உடல் நலம் பற்றி நிச்சயம் பேச வேண்டும். இன்று நடந்ததை நினைத்துக் கொண்டு , ஒருவேளை அவள் அம்மா வீட்டிற்குச் சென்று விட்டால்? நினைக்கவே பயமாக இருந்தது. நாளை காலை அவள் எழுந்ததும் அவளிடம் விளக்கமாக பேச வேண்டும் என்று நினைத்தவன் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
2

கண்கள் எரிவது போல் இருந்தது, இமை திறக்க முடியவில்லை. தலை அதிக பாரமாக இருந்தது. கண் விழிக்க முடியாமல் சில நொடி தவித்தவன், பிறகு மெல்ல அரை கண் திறந்து பார்த்தான் வெளிச்சமாக இருந்தது. ’அடடா ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ?’ என்று யோசித்தவன் அவசரமாக எழவும்,

“குட்மார்னிங் கிருபா” என்ற மகிமாவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது. அப்போதுதான் நேற்று நடந்த திருமணமே அவனுக்கு நினைவுக்கு வந்தது.

கையில் காபி கப்புடன் நின்றிருந்த மகிமாவைப் பார்த்தவன், அவளுக்கு பதில் சொல்ல முயன்றான்.

“கு... கு... குட்மார்னிங் மகிமா”

முழுதாக விழிவிரித்து அவளைப் பார்த்தவன் அதிசயித்தான். அன்று பூத்த மலர் போல தலை குளித்து ரோஜாப்பு கலர் புடவையில் அழகாகவே தெரிந்தாள். உடனே புவனாவின் நினைவும் வந்து விட்டது. சட்டென தலையைச் சிலுப்பி எழுந்தவன், அவள் கையிலிருந்து காப்பியை பெற்றுக்கொண்டு

“தேங்க்யூ” என்றான்.

“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்றவள் அவன் போர்த்தியிருந்த போர்வையை மடித்துக் கொண்டே,

“கி... கிருபா... நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்”

காப்பியைக் குடித்துக் கொண்டே,

“ம்....” என்றான்.

“வ... வந்து அத்தைக்கு உடம்பு சரியில்லை, இல்லையா? அவர்களிடம்... நம் விஷயத்தைச் சொல்ல வேண்டாம். உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது. ஆனால் அத்தைக்கு ஏதாவது என்றால் நம் எல்லோருக்கும் கஷ்டம்தானே” என்றவளை அதிசயமாக பார்த்தான். தான் சொல்ல நினைத்ததை அவள் சொன்னதும் அவனுக்கு சுத்தமாக நம்ப முடியவில்லை. அப்போது பார்த்து ஜன்னல் வழியே ஒரு பாட்டு கேட்டது.

‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.... உறவாட வேண்டும் ம்...ம்...ம்..ம்...’

தோட்டக்காரனின் எப்.எம். ரேடியோதான் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. ஆனாலும் இந்த நிலைமைக்குச் சரியாகவே இருக்கிறது என்று நினைத்தவன்.

“நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன் மகிமா”

“ஓ.... நீங்கள் நினைத்ததை நான் பேசிவிட்டேனா? இந்த அழகான பாட்டில் வருவது போல” என்று சரளமாய் பதிலளித்தவள் ஜன்னலையடைந்தாள்.

“யார் கிருபா இந்த பழைய பாட்டெல்லாம் ரசித்து கேட்பது?’

“அது தோட்டக்காரர், அவருக்கு வயது அறுபது இருக்கும் பழைய பாட்டென்றால் பித்து, தினமும் இப்படித்தான்” என்றவன் எழுந்து குளியலறை நோக்கி முன்னேறினான்

“ஒரு நிமிடம் கிருபா!! இந்த பெட் காப்பி பழக்கத்திற்கு இன்றே மங்களம் பாடிவிடுங்கள். ஏதோ முதல் நாள் என்பதால் கொடுத்தேன். அதுவும் அத்தையின் விருப்பப்படி நாளை முதல் பல் துலக்காமல் தண்ணீர் கூட கிடைக்காது”

மிரட்டுவது போல், குறுஞ்சிரிப்போடு பேசியவள், அவனது பதிலை எதிர்பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

ஏதோ இயந்திரமாய் குளித்துவிட்டு ரெடியாகியவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.

பெண்களின் மனதை கடவுளாலும்படிக்க முடியாது என்பது எத்தனை உண்மை. நேற்று நான் பேசியது அவளை எந்த வகையிலும் பாதித்தது போல் தெரியவில்லையே. எல்லோருடனும் தோழமையுடன் பழகுவது அவளது பிறவிக் குணமாக இருக்குமோ? அல்லது வாக்குவாதம் செய்து பிரச்சனை செய்வதில் அவளுக்கு விருப்பமில்லையோ? ஒருவேளை உண்மையாகவே அம்மாவின் மீது இருக்கும் அன்பினால் எதையும் பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம் என்று எண்ணினாளோ? அல்லது திருமணமான மறுநாள் அம்மா வீட்டிற்குச் சென்றால் அவர்கள் வருந்துவார்களோ என்ற பயமோ? இதுதான் என்று முடிவுக்கு வர முடியாமல் மண்டை காய்ந்தது அவனுக்கு. அவன் யோசனையை கலைத்தது மகிமாவின் குரல்.

“டிபன் ரெடி கிருபா, எல்லோரும் உங்களுக்காகத்தான் வெய்ட்டிங்” என்றவள் அவன் கிளம்புவதற்காக காத்திருக்க, பின்னோடு ஒரு வேலையாள்.

“ஐயா, உங்கள் மாமனார், மாமியார் வந்திருக்காங்க. பெரியம்மா உங்க ரெண்டு பேரையும் சீக்கிரம் வரச் சொன்னாங்க" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

நேற்று திருமணம் முடிந்து மண்டபத்தை காலி செய்துவிட்டு, அருகிலேயே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியவர்கள், அவளிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்ப வந்திருக்க வேண்டும். மற்றவர்கள் எப்படியோ அம்மாவின் கழுகு பார்வையில் ஏதேனும் பட்டு விடுமோ?

முதல் இரவு முடிந்த பெண்ணின் பெண்ணின் முகத்தில் எப்படிப்பட்ட மாற்றம் தோன்றக் கூடும் முன்பின் வந்தால் தான் சுடுகாடு தெரியும் என்பது போல, இப்போது முகத்தை எப்படி வைத்துக்கொண்டான் நான் வாழ்க்கையை விட்டேன் என்று ஆரம்பித்து நம்புவார்கள் என்ற தீவிர யோசனையில் படிகளில் இறங்கியவள், அதே சிந்தனையில் படியை சரியாகக் கவனிக்காமல் காலை வைத்துவிட்டு தடுமாறி விழப்போனாள் "ஆ" என்று கத்தியவளை பின்னோடு வந்து கொண்டிருந்த கிருபாகரன் தாங்கிப்பிடித்தான். அவனது ஒரு கை அவளது இடையை வளைத்திருக்க, அவளது கைகள் அவனது தோள்களை அழுத்தமாக பிடித்திருந்தன.

விழுந்தே விட்டோம் என்ற நினைப்பில் கண்களை இறுக மூடியிருந்தவள், தான் இன்னமும் விழவில்லை என்று தோன்ற லேசாக கண் விழித்துப் பார்த்தாள். மிகவும் அருகில் கிருபாவின் முகம், அதுவும் அவனது கைப்பிடியில் அவள் நின்றது, அவளை வெட்கத்தில் சிவக்க வைத்தது. சட்டென விலக முயன்றவளை,

"பார்த்து, பொறுமையாக, விழுந்து கிழிந்து வைக்காதே" என்ற அதட்டலுடன் மெல்ல விடுவித்தான்"

"மாமா உங்கள் மாப்பிள்ளை உங்களை வந்து பார்த்தார் போலத்தான் உங்கள் மகளை பார்க்கவே நேரம் போதவில்லை" என்று கிருபாகரனின் தமக்கை மிருதுளா சொல்லி அடக்கமாட்டாமல் சிரித்து கொண்டிருந்தாள்.

கீழே கூடத்தில் இருந்த அத்தனை பேரும் அவர்களப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பதைப் பார்த்து மகிமா இன்னமும். சிவந்தாள் குனிந்த தலையாக அவள் இறங்கி வர, அவளுக்கு முன்பு கிருபா இறங்கினான்.

" அது அப்படி அல்ல, அக்கா அப்பா அம்மாவை பார்த்ததும் எங்கே அண்ணி அவர்களோடு ஓடி விடுவார்களோ என்ற பயம், அது தான் கெட்டியாகப் பிடித்திருந்தார் போலும்"

அதற்குள் படிகளில் இறங்கி விட்டவளைப் பார்த்து, "சரிதானே அண்ணா?" என்ற தங்கை தாரிணியை.

“ஏய் குறும்புக்காரி கொஞ்சம் சும்மா இரு” என்று விட்டு

“வாருங்கள் மாமா,நேற்று அத்தனைச் சொல்லியும் இங்கே தங்க மாட்டேனென்று சொல்லிவீட்டீர்கள். பெண் கொடுத்த இடத்தில தங்கக் கூடாது என்று யார் சொன்னது என்றே தெரியவில்லை. ஆனால் அதை மந்திரம் போல் பின்பற்றுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு ரொம்பவும் தெரிந்தவன், உங்கள் மாப்பிள்ளை, நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்”

“இன்னொரு முறை வரும் பொழுது நிச்சயமாய் தங்குகிறோம் மாப்பிள்ளை” என்று மரியாதை நிமித்தமாய் எழுந்தனர் சிவநேசன் உமா தம்பதியினர்.

“சரி மற்றதை சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் மாமா வாருங்கள்” என்றவனை இடைமறித்து.

“இல்லை மாப்பிள்ளை நாங்கள் ஹோட்டலிலேயே சாப்பிட்டு விட்டோம். உங்களிடம் சொல்லிக் கொண்டு புறப்படலாம் என்று தான் வந்தோம். அப்படியே மறு வீட்டிற்கு அழைத்து விடலாம் என்ற எண்ணமும் உண்டு”

“அழைப்பது, புறப்படுவது எல்லாம் பிறகு வைத்துகொள்ளலாம். இன்று நம் வீட்டில் நிச்சயமாய் ஒரு ஸ்வீட் இருக்கும், அம்மாவினுடைய சந்தோஷத்தின் வெளிப்பாடு ஆக, அதை மட்டுமாவது மறுக்காமல் சாப்பிட வேண்டும். மகிமா, மாமா அத்தையை டைனிங் ஹாலிற்கு கூட்டி வா” என்ற உத்தரவை பிறப்பித்துவிட்டு முன்னே நடந்தான்.

எல்லோருமே சிற்றுண்டியை உண்டு விட்டு கூடத்தில் வந்தமர்ந்தனர்.

“அப்போ நாங்கள் புறப்படுகிறோம் சம்மந்தி. இப்பொழுது கிளம்பினால் தான் இரவிற்குள் வீட்டை அடைய முடியும். மறு வீட்டிற்கான ஏற்பாடுகளை எல்லாம் பார்க்க வேண்டும்”

“எதற்கு மாமா சிரமப்படுகிறீர்கள், இந்த சம்பிரதாயத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை”

“அப்படி சொல்லாதீங்க மாப்பிள்ளை, எங்கள் ஊரில் எல்லாம் முறைப்படி நடக்க வேண்டும். இல்லையென்றால், எல்லாம் வாயிலும் நுழைந்து எழ நேரிடும். அதனால் தயவுசெய்து வந்துவிடுங்கள்” என்று கெஞ்சலாய் அவர் கேட்கவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டான்.

படிகளில் கிருபாகரன் தாங்கிப் பிடித்த காட்சியே மகிமாவினுள் ஓடிக் கொண்டிருந்தது. அது தொடர்பாய் நாத்தனார் இருவரின் குறும்பு பேச்சுக்கள். ஆக அவள் முகம் சிவந்தே காணபட்டது. உதடுகளில் ஒரு இளநகையும் அவ்வப்போது கிருபாவை ஓரக்கண்ணால் பார்ப்பதும் பிறகு எல்ல்லோருக்கும் பரிமாறுவதும் என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். இதைப் பார்த்த உமாவிற்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இன்று காலை வரை இருந்த கவலை அடியோடு போய்விட்டது. சிற்றுண்டி முடிந்ததும் சிவநேசனும், உமாவும் விடைபெற்றார்கள். காரினுள் ஏறும் முன் ததன் பின்னே உமாவின் கைபற்றி கண்கலங்க நின்ற மகளை ஒருமுறை பார்த்தவர், தன்னருகில் நின்ற கிருபாகரனை ஏறிட்டுப் பார்த்தார். மகிமாவின் கையைப் பற்றியவர் அதை கிருபாவின் கையில் சேர்த்து அழுத்திவிட்டு, “என் மகளை செல்லமாக வளர்த்துவிட்டேன் மாப்பிள்ளை. கொஞ்சம் துடுக்காக பேசுவாளே தவிர, ரொம்பவும் நல்ல பெண். இனி நீங்கள் தான் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கண்கலங்க பேசியவருக்கு

“கவலைப்படாதீங்க மாமா, நான் இருக்கேனே, நிச்சயமாய் நன்றாக பார்த்துக் கொள்வேன்” என்றவன், அதிகமாக அழ ஆரம்பிக்க தயாரான மகிமாவின் பற்றியிருந்த கையை லேசாக அழுத்தி, ‘அழாதே’ என்று ஜாடை காட்டினான்.

“அடடா... என்ன மாமா நீங்கள், படிகளில் கண் கூடாக கண்ட காட்சிக்கு பிறகுமா இந்த சந்தேகம்” என்று சிரித்துக் கொண்டே தாரிணி சொல்ல

“அது என்ன காட்சி தாரிணி” என்ற கேள்வி எழுப்பினார் காயத்ரி.

“சூப்பர் சீன்மா நீங்கள் மிஸ் பண்ணிவீட்டீர்கள். அண்ணி படிகளில் தடுக்கி விழப்போக, அண்ணன் தாங்கிப் பிடிக்க, எத்தனை ரொமாண்டிக் சீனை மிஸ் பண்ணிவீட்டீர்கள் தெரியுமா?” என்று கண்கள் படபடக்க உச்சுக் கொட்டி தாரிணி சொன்ன விதத்திற்கு, அங்கே அனைவரும் சத்தமாக நகைத்தனர்.

மகிமா குங்குமமாய் சிவந்துவிட்டாள். கிருபாவோ செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தான். சூழ்நிலை நிமிடத்தில் மாறிவிட்டது.

“ஏய் வாயாடி கொஞ்சம் சும்மா இருக்க மாட்டிய? இரு மாப்பிள்ளையிடம் சொல்லி, உன் வாலை நறுக்கச் சொல்கிறேன்” என்று பொய்யாக மிரட்டி சிரித்த காயத்ரியிடம்.

“ரொம்பவும் கஷ்டம் அம்மா... அவர் என்னைப் பார்த்ததும் தன் வாலை அல்லவா சுருட்டிக் கொள்கிறார். அவராவது என்னைக் கட்டுபடுத்துவதாவது” என்று பெருமிதமாய் பேச அங்கே மறுபடியும் சிரிப்பலை எழுந்தது.

ஒரு வழியாய் உமா, சிவநேசன் அவர்கள் விடைபெற்று கிளம்பியதும் கிருபா வேகமாக தன் அறைக்கு சென்றுவிட்டான். மருமகளும், மாமியாருமாக சிற்றுண்டியை முடித்துக் கொண்டு எழுகையில், ஒரு கிளாசில் லெமன் ஜூசை ஊற்றி, மகிமாவிடம் நீட்டிய காயத்ரி,

“சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பது கிருபாவின் வழக்கம்” என்றதும் மறுக்காமல் அதை பெற்றுக் கொண்டு படியேறினாள்.

மறுபடியும் அந்தப் படிகளில் அவள் தவறி விழுந்த காட்சியே அவளுக்கு நினைவு வந்தது. கிருபாவை எல்லோரும் ரொம்பவே கிண்டலடித்து விட்டனர். அதனால் என் மேல் கோபமாக இருப்பாரோ, கண்ணை என்ன பிடரியில் வைத்திருக்கிறாயா? என்று கோபமாகக் கேட்டால் என்ன சொல்வது என்று பயந்து கொண்டே போனவள்.

நெற்றியில் சுருக்கத்துடனும், கண்களில் தீவரத்துடனும் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்திருந்த கிருபாவை பார்த்ததும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

அவள் பாடு திண்டாட்டம் தான் என்று, கீழே இருக்கும் பொழுது எத்தனை சாந்தமாக இருந்த முகம் இப்போது நேர்மாறாக கலவரமாய் இருக்கிறதே என்று பயந்து கொண்டே ஜூஸை கம்ப்யூட்டர் டேபிளின் மேல் வைத்தவள்.

“வந்து... மன்னித்து விடுங்கள் ஏதோ சிந்தனையில் படி இறங்கியது என் தவறு தான். அதனால் நீங்கள் கோபமாக இருப்பது எனக்குப் புரிகிறது” என்றவளை இடைமறித்து.

“கோபம்தான், ஆனால் உன்மேல் அல்ல, அங்கே இருந்தவர்களின் மீது, நீ தடுக்கி விழப் போனாய், விழாமலிருக்க நான் பிடித்தேன். அதை இத்தனை ரொமாண்டிக் சீனாக கற்பனை செய்ய வேண்டுமென்று இவர்களை யார் அழைத்தார்கள். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்” என்று கோபமாகக் கத்திக் கொண்டிருந்தவனை பார்க்கையில் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது மகிமாவிறகு. அவளது சிரிப்பு அவனை மேலும் எரிச்சல் படுத்தியது.

“நான் இங்கே எரிச்சலில் கத்திக் கொண்டிருக்கிறேன் உனக்கு எப்படித் தான் சிரிப்பு வருகிறதோ” பற்களை கடித்து கோபத்தின் உச்சத்துக்கு சென்று விட்டவனை

“கிருபா...ப்ளீஸ் காம் டவுன்...புதிதாக திருமணமானவர்களை எல்லோரும் இப்படி கிண்டல் செய்வது சகஜம்தானே. ஏன் நீங்களே உங்கள் நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது சும்மாவா வருவீர்கள். அங்கே எதையாவது செய்து இருவரையும் வெட்கப்பட வைத்து விட்டுத்தானே வருவீர்கள் ஆக அவர்களது தவறு என்ன?”

“ஆம்.. நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நன்றாகத் தெரிகிறது, அப்படியானால் தவறு என்னுடையதானா”

கோபம் குறையதக் குரலில் சீறினான்.

அதுவரை சிரித்துக் கொண்டே பேசிய மகிமாவின் முகம் இறுகிவிட்டது. ஏதோ தீவர யோசனையில் ஈடுபட்டிருப்பது போல் தோன்ற அவளது முகத்தை உற்றுப் பார்த்தான் கிருபா. வரண்ட குரலில் பேசலானாள்.

“தவறு... உங்கள் மீது அல்ல, தவறு தப்பாக நடந்த இந்தத் திருமணத்தின் மீது தான்” முடித்தவளின் கண்கள் கலங்கியதை கிருபா பார்த்துவிட்டான். ஆனால் உடனே அதை மறைத்தவளாக வேகமாக வெளியேறிவிட்டாள்.

ஏனோ அவளது கலங்கிய கண்கள் அவனை என்னவோ செய்தது

ச்சே... யார் என்ன சொன்னால்தான் என்ன இந்தக் காதில் வாங்கி அதை அந்தகாதில் விடுவதற்கு பதிலாக அதை மூளைவரை ஏற்றி எனக்கும் பைத்தியம் பிடிக்கச் செய்து கொண்டு... பாவம் மகிமா... அவளது குடும்பத்தை விட்டு, பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, சுற்றத்தையும் நட்பையும் விட்டு தொலைதூரம் எனக்கு மட்டுமாக வந்திருக்கிறாள். நேற்று இரவு நான் பேசும் வரை அவளது மனதில் எத்தனை கனவுகள் இருந்திருக்கும் எல்லாவற்றையும் ‘ விருப்பமில்லை’ என்ற ஒரே வார்த்தையால் சுக்கு நூறாக உடைத்துவிடேன். அவள் எத்தனை கலங்கியிருப்பாள்.. ஆனால் அந்த வெறுப்பையோ, கோபத்தையோ அவள் துளியும் காட்டவில்லை. அவள் அப்பா கிளம்பும் பொழுது கண் கலங்க நின்றாரே, பெரிதாக நான் இருக்கிறேன் என்று வாக்கு கொடுத்து அரைமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளை அழ வைத்துவிட்டேன் என்ன மனிதன் நான் எனக்கே என் மேல் எரிச்சல் வருகிறது. புவனாவையும் மறக்க முடியவில்லை, மகிமாவை நினைக்க முடியவில்லை. இருதலை கொள்ளியாக என் மூளை காய்கிறது. இப்படி யாருமே சந்தோஷமாக இல்லாததற்கு இந்த திருமணம் தேவைதானா? எல்லாம் அந்த அம்மாவால் வந்தது என்று மனதினுள் அம்மாவை நன்றாக திட்டியவன். இதற்கு தீர்வாக விவாகரத்து வரை யோசித்து உடனே மாற்றிக் கொண்டான். எல்லாம் அம்மாவின் உடல் நிலையை மனதில் கொண்டு மாற்றியது தான்.

இந்தப் பிரச்சனைகளுக்கு அன்றே ஒரு முடிவும் கண்டுவிட்டான். இனி யார் என்ன சொன்னாலும் தன்னை இல்லை என்று காதிலேயே வாங்காமல் போவதுதான் அந்த முடிவு.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
3

வாசலிலேயே நிற்க வைத்து கிருபாகரனுக்கும் மகிமாவிற்கும் ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் கவிதா, மகிமாவின் ஒரே தங்கை, கேலியும் கிண்டலுமாக ஆரத்தி எடுத்த கவிதாவைப் பார்க்க கோபம் கோபமாக வந்தது கிருபாவுக்கு. என்ன செய்ய முடியும். தனக்குள் ‘ஓம் ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு தன் கோபத்தை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தான். எத்தனை நாசுக்காக பேசிப் பார்த்தான் இந்த மறுவீட்டு சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று எதையும் அம்மா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. பிடிவாதமாக பிடித்துத் தள்ளாத குறையாக தள்ளிவிட்டார்.

அடிக்கொருதரம் மகிமாவின் பயந்த பார்வை அவன்மேல் விழும்பொழுது மட்டும் இதழ்களை விரித்து சிரிப்பது போல் பாவித்தான். ஒரு வழியாய் எல்லா கலாட்டாக்களும் முடிந்து உள்ளே நுழைய விழைந்தவனை,

“அட.. என்ன மாமா நீங்கள், சினிமா படமே பார்ப்பதில்லையா? ஆரத்தி எடுத்தால் பணம் போட வேண்டும் என்பது கூடவா தெரியாது. அதுவும் மச்சினிச்சி, இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ரொம்பவும் அழகான மச்சினிச்சி” ஏற்ற இறக்கத்தோடு கவிதா பேச,விட்டால் போதுமென்று ஒரு ஆயிரம் ரூபாவை தட்டில் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான்.

“தேங்க்யூ... மாமா... நீங்க செம கெத்தான ஆளுன்னு புரூவ் பண்ணிட்டீங்க”

பின்னால் கவிதா கத்தியது, தெளிவாக கேட்டது.

பிறகு ஒரே ஒரு இலை போடப்பட்டு தேங்காய், பழம், பால் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. தரையில்இருந்த ஒரு இலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கிருபாகரனை பார்க்கையில் மகிமாவிற்கு ரொம்பவும் பாவமாகத் தோன்றியது. ஆனால் தப்பிக்கவும் வழியில்லை. இந்த ஊர் சடங்கு அப்பா அவர்களைச் சுற்றி சிறிசுபெரிசு என்று எந்த பாகுபாடுமில்லாமல் எல்லா வயதினரும் இருந்தனர். அவரவர்களுக்குத் தெரிந்த வகையில் இளம் ஜோடியை கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஐய... மாப்புள்ள தம்பி இப்படி இலையையே வெறிச்சு பார்த்தா, சாப்பாடு தானவா வாய்க்குள்ள. போகும்?” என்று தாடை மீது கைவைத்து பேசிய பாட்டியைப் பார்க்கையில் பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு.

“ஏ... கிழவி... மாப்புள்ள பட்டணத்துல இருக்கிறவருஇல்ல. அதான் நம்ம வரமுறை தெரியல, இந்தா தம்பி... முதல்ல தேங்காய் துறுவல சாப்பிடு, பிரவு உம் பொஞ்சாதிசாப்பிடட்டும். அப்புறம் பழம். நீ பத்தி அவ பத்தி, அதே மாதிரி தான் பாலும் புரிஞ்சதா?” என்று உருட்டு விழிகளோடும், வெற்றிலைப் பாக்கு கறை படிந்த தெத்துப் பல்லுடனும் ஒரு பாட்டி மிரட்டுவதுபோல் பேசுவதைக் கேட்டதும், உடனே தன் தயக்கம் சென்றயிடம் தெரியாமல் மறைந்து போக பயம் வந்து பற்றிக் கொண்டது விட்டால் ஓங்கி ஒரு அப்பு அப்பி விடுவார்களோ என்று கூட தோன்றிவிட்டது.

கைகள் தாமாக இலையில் இருந்த உணவை வாயிற்குள் கொண்டு செலுத்தின. இனிப்போ, கசப்போ,துவர்ப்போ எதுவுமே நாக்கிற்கு தெரியவில்லை. அவர்கள் சொன்னது எல்லாவற்றிற்கும் பாதி,பாதி கடகடவென சாப்பிட்டுவிட்டு இலையை மகிமாவின் புறம் தள்ளி வைத்தான். உடனே கொல் என சஈரிப்புச் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது.

கடவுளே மாட்டினோம் என்ன தவறு செய்து தொலைத்தேனோ தெரியவில்லையே என்று கிருபாகரன் கலக்கத்தோடு பார்க்க,

“ஏய்புள்ள மகி... ரொம்பவும் கெட்டிக்கார புள்ளையைத்தான் பார்த்து இருக்கரு உங்க ஐயா, பாலும் சர்க்கரைக்கு பதிலா உப்ப அள்ளி கொட்டி வெச்சாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் குடிக்கிற உம் புருஷனை பார்க்க ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. இனி நீ எப்படி பொங்கிக் கொட்டினாலும் வாய் தொறக்காம சாப்பிடுவார்” என்ற பாட்டியை கொலை செய்யும் வெறியே அவனுள் எழுந்தது. அதை விடவும் அதிகமாக அவன் மேலேயே கோபம் வந்தது. உப்பு கூட தெரியாத அளவிற்கு மதி இழந்திருக்கிறோமோ!!! என்ற ஆற்றாமை அவனுள் எழுந்தது. அந்த சூழ்நிலையை சமாளிக்க,

“உப்பு போட்டது கவிதாதானே” குத்துமதிப்பாகத்தான் கேட்டான்.

“ஆமாம் மாமா, எப்படி கண்டுபிடிச்சீங்க?” துள்ளலாய் கேட்டாள் கவிதா.

“தெரியுமே இந்த வேலையெல்லாம் என் குறும்புகார மச்சினிச்சிதான் செய்வாள் என்று. நீ அழகான மச்சினிச்சி வேறா, அதனால் உன் தவறை அடுத்தவர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடலாம் என்று பார்த்தேன். ஆனால் எல்லாம் தெரிந்தே செய்ததுதான் என்று இப்போதல்லவா தெரிகிறது” என்று சரியான ஏற்ற இறக்கத்துடனும் இதழகளில் சிரிப்புடனும் பேசியவனை பார்த்து, நல்ல சமாளிப்பு தான் என்ற ரீதியில் கண் அசைத்தாள் மகிமா.

“அய்யோ! மாமான்னா மாமாதான், எத்தனை பிரியம் என் மேல், நான்தான் சரியான முட்டாள்.வேண்டுமென்றே உங்களுக்கு உப்பை அள்ளிக் கொட்டி தவறு செய்து விட்டேன்”

“பரவாயில்லை, ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நான் என்றும் உன்னை மறக்கவே மாட்டேன்”

“பார்த்து மாமா, அக்காவிற்கு கோபம் வரப் போகிறது”

“என் மச்சினிச்சியை நான் புகழ்கிறேன், நினைக்கிறேன் அதில் அவள் என்ன சொல்வது, சரிதானே மகி” என்றவனை விழிகள் அகல பார்த்தாள் மகிமா. அவன் பேசியதும் அதன் பொருளும் அவளுக்கு மறந்தே போனது. மகி என்று அவன் செல்லமாக அழைத்தது மட்டுமே மனதில் நிலைத்தது. அதனால் எழுந்த வெட்கச் சிரிப்புடன் அவன் சாப்பிட்ட மீதியை மகிழ்ச்சியாக சுவைத்து உண்ணலானாள்.

இதுவரை சட்டினிக்கு அம்மா துருவி வைத்திருக்கும் தேங்காயை திருடி சாப்பிட்ட போது ஏற்படாத ஒரு சுவை. அதே தென்னை மரம் தான். அதே ருசியான தேங்காய் தான். ஆனால் அவன் சாப்பிட்ட மீதம் மட்டும் இருமடங்கு சுவையாக அல்லவா இருக்கிறது.கடவுளே எப்படியாவது என் பிரச்சனைகளை நீதான் சரி செய்ய வேண்டும்.

அந்த கிராமத்திலேயே பெரிய வீட்டுக்காரர் என்று அழைக்கப்படும் சிவநேசனுக்கு அங்கே இருந்த மொத்த நிலபுலன்களில் முக்கால் பங்கு சொந்தமாக இருந்தது. நெல், எள், நிலக்கடலை, காய்கறி, மலர்கள் என்று விதவிதமாய் பயிர் செய்து வருபவர். அங்கு சென்ற அன்றே பக்கத்தில் இருக்கும் தோப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு, பத்தி நேரம் அங்கேயே கழிக்கலானான் கிருபாகரன். அப்போதுதான் அந்த வம்பு பேசும் பாட்டிகளிடமிருந்தும், குறும்புகார கவிதாவிடமிருந்தும் தப்பிக்க முடியும் மற்றவர்களோ பட்டணத்தில் வளர்ந்த பையன் பசுமையை ரசிக்கிறான் என்று விட்டுவிட்டார்கள். அந்த மாமரத்தடியில் சேர் போட்டு பேப்பர் படிப்பதை ரசித்தான் கிருபாகரன். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இளநி, டீ, காப்பி, சூப், ஜூஸ் என்று வந்துகொண்டே இருந்தது. புது மாப்பிள்ளைக்கான மரியாதை போலும் என்று சந்தோஷமாகவே ஏற்றான். எத்தனை இனிமை வேலைக்கு லீவும் போட்டாகிவிட்டது பதினைந்து நாட்கள். அதில் ஐந்து நாட்கள் கரைந்து விட்டன. இன்னமும் பத்து நாட்கள் இந்த பாட்டிகளும் கவிதாவும் இல்லை என்றால் மீதி நாட்களையும் இங்கேயே கழிக்கலாம்.

இயற்கைச் சூழலும், சுத்தமான காற்றும், குயில்களின் கீச்சுக்குரலும்,அவ்வப்போது மாடுகளின் ஓசையும் மனதை குளிர்விக்கிறது என்ற எண்ணம் மனதில் ஓட கண்மூடி அந்த ஈசிச்சேரில் தன் உடம்பை தளர்த்தி அமர்ந்திருந்தவனுக்கு கவிதாவின் அபயக் குரல் கேட்டது.

“காப்பாத்துங்க... பா.. பாம்பு... பாம்பு” என்று கூவியவள் நிச்சயம் கவிதாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிவிட சட்டென பதட்டம் தொற்றிக்கொண்டது. பாம்பா கடவுளே பாம்பென்றால் அவனுக்கும் பயம்தான். ஆனால் ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்டதும் மற்றதெல்லாம் மறைந்துவிட்டது. வேகமாக குரல் வந்த திசைப் பக்கம் விரைந்து ஓடியவனை அதே வேக ஓட்டத்துடன் எதிர்கொண்டாள் கவிதா, இருவரும் மூச்சு வாங்க நின்ற சில நொடிகள் கரைந்ததும்,

“க... க.. கவிதா.. எங்கேபா...பாம்பு”

சுற்றுமுற்றும் தன் கண்களை சுழலவிட்டு தேடியவனை, இல்லை... இல்லை என்று கைகளால் சைகை காட்டி நிறுத்தினாள்.

“இங்கே இல்லை மாமா போர்செட்டில்...”

“அப்பாடி... நீ தப்பித்தாயே அதுவே போதும் நீ திறமைசாலிதான்”

“அய்யோ மாமா அக்கா... அங்கதான் குளிச்சிக்கிட்டு இருக்கா”

கவிதா தப்பியதில் கொஞ்சம் நிம்ம்மதி அடைந்திருந்தவன் உடனே கலவரமானான்.

“என்... எ.. மகிமா அங்கே இருக்கிறாளா? அவளை விட்டு விட்டு நீ மட்டும் சுயநலமாய் தப்பித்து வந்துவிட்டாயா? செல்பிஷ்”

“அவளுக்கு அப்போதே எச்சரிக்கை செய்தேன், அவள் தான் காதில் வாங்கவில்லை.போர்செட்டின் சத்தம் வேறு அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. அது தான் யாரையாவது கூப்பிடலாம் என்று நான் வந்தேன். அல்ல்வேளை நீங்கள் வந்தீர்கள்” என்று அவள் முடிக்கும் பொழுது அவன் அந்த இடத்தில இல்லை. காலையில் மகிமா கூறியது தான் அவன் மூளைக்குள் ஓடியது.

“கிருபா எங்கள் நிலத்தில் ஒரு போர்செட் இருக்கிறது. அதில் குளிப்பது ரொம்பவும் நன்றாக இருக்கும். சுற்றிலும் தென்னை மரம், பக்கத்தில் நெல் வயல், நடுவில் இரைச்சலுடன் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் பம்புசெட். அதில் குலைப்பது என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், சின்ன வயதிலேயே என்னை ஹாஸ்டலில் தங்க வைத்துதான் படிக்க வைத்தார்கள். அதனால் நான் விடுமுறைக்கு இங்கே வரும் பொழுதெல்லாம் பம்புசெட்டில் தான் குளிப்பேன். பெரியவளானதும் நான் குளிக்க வெட்கப்படுகிறேன் என்று புரிந்து, பண்ணையில் வேளை செய்யும் ஆட்களுக்கு ஒரு மணி நேரம் விடுப்பு கொடுத்து விடுவார் என் அப்பா. இப்போது அங்கு யாரும் இருக்கமாட்டார்கள், வாங்களேன் குளிக்க வேண்டும் என்று இல்லை, சும்மாவேனும் பார்த்து விட்டு வருவோமே!” என்று கூறியவளிடம் மறுப்பு கூறியது எவ்வளவு பெரிய தவறு. நான் மட்டும் அவளுடன் சென்றிருந்தால் இந்த பிரச்சனையே இல்லாமல் இருந்திருக்கும். ச்சே..தன்னையே நொந்துக் கொண்டவன் மேலும் வேகத்தை அதிகபடுத்தி ஓடினான்.

இரண்டே நிமிடத்தில் போர்செட்டை அடைந்தவன் பார்வையை கூர்மைபடுத்த அருவிபோல் தண்ணீர் வேகமாக பைப்பிலிருந்து வெளிவந்து சிமிண்டு தொட்டிக்குள் விழுந்து கொண்டிருந்தது. அதன் ஒரு மூலையில் ஏதோ அசைவது தெரிந்தது. பாம்பின் தலை போல் தோன்றியது. பாம்பேதான் என்று உடனே உறுதி செய்தவன்.

“மகிமா..மகிமா...” என்று கூச்சலிட்டான்.

அதன் இன்னொரு மூலையில் குளித்துக் கொண்டிருந்தவள் கிருபாகரனின் குரலுக்கு திரும்பினாள்.

“வெளியே வா உள்ளே பாம்பு அதோ பார்” என்று அவன் கத்த வெளிறிய முகத்துடன் எழுந்துவிட்டாள் மகிமா. அவன் சுட்டிகாட்டிய இடத்தில் அவளும் பாம்பை பார்த்துவிட்டாள். உடனே உடம்பெல்லாம் பயத்தில் சில்லிட்டது. உடல் நடுக்கதுடன் வெளியே ஓடி வந்தவள் அங்கே கிடந்த கல் தடுக்கி விழப்போக எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த கிருபாகரன் அவள் விழுந்து விடாமல் தாங்கிபிடித்தான்.

அவனின் தொடுகை அவளின் பயத்தை போக்குவதாய் உணர்ந்தவள் உடனே அவன் நெஞ்சில் முகம் புதைத்து இறுக அணைத்துக் கொண்டாள்.

லேசான அதிர்ச்சி கிருபாவை தாக்கினாலும் மகிமாவின் நடுங்கும் உடல் அவனை கட்டுப்படுத்தியது. அவளது பயத்தை குறைக்க நினைத்தவன் அவள் முதுகை தடவிக் கொடுத்தான். அவள் முதுகில் இருந்த தண்ணீர் துளிகள் அவனின் உள்ளங்கையில் பட்டு சிலிர்ப்பை உண்டு பண்ணின. ஈரம் சொட்டும் பாவாடையுடன் கணவனின் அணைப்பில் இருந்த மகிமாவின் நடுக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்ததும் தான், அவள் சுயநினைவிற்கு வந்தாள். உடனே தன் நிலை உணர்ந்து, சட்டென விலகி நின்றாள். அவமானத்தில் முகம் சிவந்தது.. ‘சே.. என்ன காரியம் செய்துவிட்டேன். கிருபா என்னைப் பற்றி என்ன நினைப்பார். ‘ஒரே நிமிடம் பயத்துடன் கிருபாகரனை ஏறிட்டவள் உடனே தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே வைத்து தன் மானத்தை மறைக்க முயன்றாள். அது புரிந்ததும் உடனே மறுபுறம் திரும்பி நின்று கொண்டான்.

ஓடிச்சென்று தன் புடவையை அந்தப் ஈரப் பாவாடை மீதே சுற்றிக் கொண்டிருந்த மகிமாவும், அவளின் எதிர்திசையில் கிருபாகரனும் கலகலவென்றசிரிப்பொலி கேட்டு சட்டென திரும்பினார்கள்.

“சூப்பர் மாமா... பாம்பு என்று சொன்னால் ஓடாமல் இருவரும் இங்கே என்ன ரொமாண்டிக் சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க”

“ஏய், கவிதா என்னடி இது...”

பற்களை கடித்துக்கொண்டு கேட்டாள் மகிமா

“இரு இரு சொல்றேன்” என்றவள் போர்செட்டின் அருகே சென்று அந்த பொம்மைப் பாம்பை லாவகமாக வெளியே எடுத்தாள். அதைப் பார்த்ததும் இருவருக்கும் எல்லாம் புரிந்தது.

“அறிவிருக்கா கவி உனக்கு இப்படியா விளையாடுவ?” நிஜமாக ரொம்பவும் கோபப்பட்டு கத்திவிட்டாள் மகிமா.

ஆனால் கவிதா கூலாக சிரித்தாள்.

“மாமாவுக்கு ஒரு டெஸ்ட் வெச்சோம் அக்கா. இந்த மாதிரி ஒரு நிலைமையிலும் உன்னைக் காப்பாத்தி மாமா ஹீரோன்னு ப்ரூவ் பண்ணிட்டார். சூப்பர் ஜோடிதான் நீங்கள். ஆனால் பாம்பு என்றதும் ஓடாமல் இங்கேயே நின்றது தான் கொஞ்சம் லாஜிக்கல் மிஸ்டேக் மற்றபடி சீன் பர்பெக்ட்” என்று கவிதா குறும்பு பொங்கும் குரலில் கூற அவளுக்கு உதவிய தோழியர் கூட்டம் மறுபடியும் ‘‘கொல்’ என சிரித்தது

கிருபாகரனின் கோபம் எல்லையை கடந்தது. இருப்பினும் கைமுஷ்டியை இறுக மூடி அந்த கோபத்தைக் குறைக்க முயன்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த மகிமா இன்னமும் உடைந்து போனாள்.ச்சே... தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் அவர் என்ன நினைப்பார்? ஒருவேளை எங்கள் திருமணமும் மற்றவர்களைப் போல் வெற்றி பெற்றிருந்தால், இங்கு நடந்தது இருவருக்கும் இன்பமான நினைவுகளாக மனதிற்குள் பதிந்திருக்குமோ? அது இல்லாததால் தான் இது கசப்பான சம்பவமாக மாறப் போகிறது.

அவள் யோசிக்கும் பொழுதே ஒரு வித எரிச்சலுடன் கிருபாகரன் அந்த இடத்தைவிட்டு சென்று கொண்டிருந்தான்.

“அடடா... மாமாவுக்கு வெட்கம் வந்துவிட்டது” என்று விவஸ்தையில்லாமல் சத்தமாக சொல்லிச் சிரித்த கவிதாவை ஓங்கி ஒன்று அப்பா வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

மரத்தடியில் பொறுமையில்லாமல் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான் கிருபாகரன். நனைந்த அவனது உடையை பார்க்கும் பொழுதெல்லாம் அந்தக் காட்சியே அவன் மனக் கண்ணில் தோன்றி அவனை மேலும் சித்திரவதை செய்தது. புவனாவை அணைத்த இந்தக் கைகள் இன்னொரு பெண்ணை அணைத்ததா?அவனால் நம்பக் கூட முடியவில்லை.

அவனும் புவனாவும் கண்ணியமான காதலர்கள்தான். அதிகமாக அவர்கள் வெளியே சென்ற இடம் கோவிலும், எல்லோரும் வந்து செல்லும் பார்க்கும்த்தான். எப்போதும் சிறு இடைவெளி விட்டுத்தான் அவர்கள் அமர்வார்கள்.பைக்கில் எப்போதுமே போனதில்லை. எப்போதும் கற் தான். ஒரே ஒரு நாள் மட்டும் புவனாவின் வீடு இருக்கும் பக்கத்து தெருவில் அவள் இறங்கும் பொழுது அவள் ரொம்பவும் மனம் உடைந்திருந்தாள்.

“கரன் எனக்கு தீவரமாக வரன் தேட ஆரம்பித்துவிட்டார்கள். நம் விஷயத்தை சொல்லும் நேரம் வந்துவிட்டது”

“சொல்லிவிடு புவனா, நான் இருக்கும் பொழுது என்ன கவலை உனக்கு.உன் அப்பா எதிரிலேயே உன்னைக் கைபிடித்து கூட்டி வருகிறேன் பார்”

துணிச்சலும் உறுதியுமாக அவன் பேச, சந்தோஷத்தில அவளது கண்கள் மின்னின. ஆனால் உடனே சோகத்திற்கு மாறின

“என்னடா...” என்று கிருபாகரன் மென்மையாக கேட்க.

“நாம் பிரிந்துவிட மாட்டோமே கரன்”

துடிக்கும் உதடுகளால் கேட்டவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் மென்மையாக அவளது கூந்தலை வருடி.

“உன்னை அணைத்த இந்த கைகள் நிச்சயம் வேறு ஒரு பெண்ணை அணைக்காது. இது நம் காதல் மீது சத்தியம் என்னை நம்பு” என்று வீர தீரமாக பேசிவிட்டு காரிலிருந்து அவள் இறங்கியதும்,

“ஐ லவ் யூ ஃபார் எவர்’ என்ற வசனமெல்லாம் சொல்லி..ச்சே

“.....”

ச்சே... இன்று நடந்ததை நினைத்தால் அவனுக்கே அருவருப்பாக இருந்தது.

அவள்தான் கட்டிப்பிடித்தாள் என்றால், அவளை தொட்டு ஆறுதல் படுத்தவில்லை என்று இவனை யார் அடித்தார்கள். உடனே உதறிவிட்டு ஓடி வருவதற்கென்ன கேடு வந்தது. அவனே அவனை திட்டிக் கொண்டான்.

நடந்து நடந்து களைத்துப் போனவன் சோர்ந்து போய் ஈசி சேரில் தளர்வாய் படுத்து கண்மூடிக் கொண்டான்.

“க்..ம்க்..குக்..”

லேசான இருமல் ஒலி கேட்டு கண் திறந்தவன் முன் மகிமா நின்றிருந்தாள். உடனே ஸ்விட்ச் போட்டதைப் போல் எழுந்துவிட்டான். அவனின் அந்த செய்கை அவளை சங்கடப்படுத்தியது.

“வ..வ..வந்து ரொம்பவும் சாரி கிருபா.. இந்தக் கவிதா எப்போதும் இப்படித்தான் குறும்பு செய்வாள். அவள் எங்கள் வீட்டு செல்லப் பெண் என்பதால் யாரும் அவளை அடக்குவதில்லை, ஆனால் இன்று அந்த விதியை உடைத்து விட்டுத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். இனி அவளால் உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது கண்டித்து விட்டுத்தான் வருகிறேன்” அவளும் என்னதான் செய்வாள். நம் திருமணத்தையும் சாதாரணமாக மற்ற திருமணங்களோடு சேர்த்து விட்டாள். ஆனால் நம் திருமணத்தைப் பற்றிய ரகசியம் நம் இருவருக்கு மட்டும்தானே தெரியும். இதெல்லாம் வெறும் நடிப்பு என்று.

எங்கோ வெறித்தபடி பெசியவளின் குரலில் விரக்தி தெரிந்தது. அவளது அந்தக் குரலைக் கேட்டதும் கிருபாகரனின் கோபமெல்லாம் காற்றில் கரைந்துவிட்டது. நான் எத்தனை சுயநலமாய் இருந்துவிட்டேன். மகிமாவிற்கு இதயம் என்ற ஒன்று இருக்கிறது தானே அதில் அவள் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்று புரியாமல் இருந்துவிட்டேனே.

“நடந்ததற்காக நானும் உன்னிடம் சாரி...”

“தேவையில்லை”

அவன் முடிப்பதற்குள் அவள் இடை புகுந்தாள்.

புரியாமல் பார்த்தவனிடம்,

“நான் உங்களை காதலிக்கிறேன் கிருபா. இதைக் கூற எனக்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை. ஏனென்றால் நீங்கள் என் கணவர், உங்கள் அணைப்பில் சில நொடிதான் இருந்தேன். ஆனால் அதுவே என் மனம் முழுவதும் இன்பம் பொங்கச் செய்தது. அந்த சில நிமிடங்கள் நான் ஏதோ பெருந்தவம் செய்ததால் தான் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன், எனக்கு இது முதல் அனுபவம். சந்தோஷமான மனநிலையில் இருக்கும் என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க அவசியமில்லை. மதிய சாப்பாடு ரெடியாகி விட்டதால் உங்களை அழைக்கவே வந்தேன், சீக்கிரம் வந்துவிடுங்கள்”

படபடவென்று இடைவெளி விடாமல் பேசிவிட்டு அவன் பதிலையும் எதிர்பார்க்காமல் வேகமாக செல்பவளை விசித்திரமாகப் பார்த்தான் கிருபா.

எத்தனை துணிச்சலான பெண். மனதிலிருப்பதை அப்படியே பேச அசாத்திய தைரியம் தேவைதான். அதில் இவள் மாஸ்டர் டிகிரி போலும். அவள் உண்மை பேசும் பொழுது கண்களில் பெருமை தெரிகிறது. உன் மனம் போல் நடக்க முடியாத கோழை நீ என்று அவளது கண்கள் சாடுவதுபோல் தோன்றுகிறது. என்னால் ஏன் முடியவில்லை. மனம்போல் நடக்க முடியாமல் மற்றவர்களின் விருப்பம் போல் இருக்கவும் முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தான்.

உண்மை பேசக் கூட முடியாமல் தத்தளிக்கும் தன் நிலைமையைக் கண்டு அவனுக்கே தன்மேல் பரிதாபம் தோன்றியது. சுயபச்சாதாபம் ரொம்பவும் கொடுமை என்று நன்கு உணர்ந்தவன் தான் கிருபாகரன். ஆனால் இப்போது... புவனா அவன் வாழ்விலிருந்து என்று சென்றாளோ அன்றே அவனது வாழ்க்கை மாறிவிட்டது எதெல்லாம் தவறு என்று நினைத்திருந்தானோ அதை எல்லாம் இப்போது அவன் செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பாவியாக. இன்னொரு பெண்ணை மணந்துக் கொண்டு, மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல், நிறைய பொய்கள் பேசிக் கொண்டு ஒரு கோழையாய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சுய பட்சாதாபம் மேலோங்க .இப்படி துவண்டு போய் அமர்ந்துவிட்டது எதனால். அம்மாவின் உடல் நலனுக்காக பிடிக்காத ஒரு திருமணத்தை செய்து கொண்டதால் புவனா அவனை விட்டுப் பிரிந்த போது இத்தனை அவஸ்த்தைப்பட்டானா என்பது சந்தேகம் தான். அதை விட பலமடங்கு அதிகமான வேதனையை இந்தத் திருமணத்தால் அடைந்துவிட்டான். இதற்கு தீர்வு தான் என்ன?
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
4

என்ன வாழ்க்கை இது... இன்பமே இல்லாமல் இத்தனை துன்பத்தை அனுபவிக்கத்தான் இந்த திருமணமா? தேவைதானா? பேசாமல் மூட்டை கட்டிக் கொண்டு வந்த வழியே வீட்டிற்கு சென்று விடலாமா? மனதினுள் எழுந்த அந்த கசப்பான முடிவை உடனே மாற்றிக் கொண்டாள் மகிமா. தங்கை கவிதாவின் வாழ்வும் கேள்விக்குறி ஆக வேண்டுமா? அவளுக்காகவே பல்லைக் கடித்துக் கொண்டு, இந்த விசித்திர வாழ்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

அவளது சிந்தனையை கலைத்தது. ஆழ் மனதின் குரல் ’இது மட்டும்தானா காரணம்...?’ அவளுள் எழுந்த கேள்விக்கு,அவளால் எப்படி பொய் உரைக்க முடியும் ஒத்துக் கொண்டாள்.

கிருபாகரனை விட்டு பிரிவது ரொம்பவும் கஷ்டம்தான். அதுவும் திருமணமான அன்றே தன் காதலைப் பற்றி சொல்லி அவள் மனதில் ஒரு படி மேலே ஏறியவன், மனைவி இருக்கும் பொழுதே கள்ளக் காதல் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் திருமணமான தன் காதலியை நினைத்து உருகும் மனதும், அதற்காக மனைவியிடம் ஒரு ஒட்டுதல் இல்லாமல் பழகும் அவன் குணமும், அவன் அம்மாவின் அன்பிற்காக எதையும் செய்வான் என்று புரிந்து கொண்டதும், அவன் மேல் மரியாதையும் அன்பும் படிப்படியாக உயர உதவின.

ஆனால் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் உன் அணைப்பிற்காக ஏங்குகின்றேன் என்று ஒரு பெண் வெளிப்படையாகச் சொல்லியும், விலகிப் போகும் கிருபாகரனை பார்க்கும் பொழுது எரிச்சல் வருவதற்குப் பதிலாக, காதல்தான் வந்து தொலைக்கிறது. அவன் பட்டும் படாமலும் விலகும் பொழுது கொஞ்சமும் வெட்கமேயில்லாமல் அவன் காலடியில் விழுந்து கதறுகிறதே இந்த பெண்மை என்று நினைக்கையில் அவளுக்கே, அவள் மீது கோபம் வந்தது. இந்த எதிர்காலமற்ற காதல் எப்படி வந்தது? இதனால் யாருக்கு பலன், மனவேதனை தான் அதிகரிக்கப் போகிறது. இப்படி தினமும் எதையேனும் யோசித்து தன்னைத் தானே வருந்திக் கொண்டாள்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. தினமும் காலையில் தூங்கும் கிருபாகரனை ஆசை தீர பார்த்து ரசிப்பதற்காகவே ஐந்து மணிக்கெல்லாம் அலாரம் வைக்காமலேயே எழுந்து விடுவாள் மகிமா.

அப்படி ஒரு நாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கிருபாகரனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை, திரும்பி படுக்கும் பொழுது லேசாக விழிதிறந்து சுற்றுமுற்றும் பார்த்தவன், தன்னையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மகிமாவைப் பார்த்ததும், முழுதாக விழித்து எழ முயன்றான். அவன் அசைந்ததும் தன்னை அவன் கண்டு கொண்டான் என்ற வெட்கம் மேலிட, இப்போது அவன் கேட்டால் என்ன சொல்வது என்ற குழப்பமும் வந்து சேர்ந்தது.

“ஏ...ஏன்..இன்னமும் தூங்கவில்லை?”

“இன்னமும் தூங்கவில்லையா? காலை ஐந்து மணி ஆகிறது. விடிந்தும் விட்டது. இது தூங்கும் நேரமல்ல எழும் நேரம்”

“சரி சரி இத்தனை சீக்கிரம் எழுந்து உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்”

ஊடுருவிய அவனது பார்வையையும், லேசாக ஏறி இறங்கிய அவனது அடர் புருவத்தையும் பார்த்தவள் தலை கவிழ்ந்தாள்.

“ஓ...இன்றும்...இ...இல்லை... சும்மாதான்”

“இன்று என்ன சூரியன் மேற்கில் உதிக்கப் போகிறதா?”

“எ... என்ன?1!!”

“ஆ.. ஆம்... பிறகு ஹரிசந்தரனின் பக்கத்து வீட்டுக்காரியான நீ எப்படி பொய் சொல்லலாம். நீதான் உண்மை விழும்பி ஆயிற்றே”

விதிர்விதிர்த்தது அவளுக்கு.ஒருவேளை என் எண்ணம் என் முகத்தில் தெரிந்து விட்டதோ, முகம் சிவந்து பதில் பேசாமல் இருந்தவளை சில வினாடி பார்த்தவன்.

“ஏய்.. உடம்பிற்கு ஏதாவது செய்கிறதா?”

அக்கறையாய் கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் கைவைத்து, எதுவுமில்லை என்று உறுதியும் செய்துகொண்டான்.

அவனது அந்த ஸ்பரிசம் அவளுள் ஆயிரம் மின்னலாய் மின்னியது. மனதில் காதல் மழை அடைமழையாய் கண்களை மூடி அந்த இன்ப அவஸ்த்தையை ரசித்தவளுக்கு கிருபாகரனின்,

“சாரி”

அபஸ்வரமாய் கேட்டது.

“போதும் கிருபா, நீங்கள் தொடும் பொழுது கூட எனக்கு வலிக்கவில்லை. ஆனால் அதற்குப் பின்னால் நீங்கள் கேட்கும் இந்த சாரி என்னை கொன்று போடுகிறது”

லேசாக கண் கலங்கினாலும் அது அவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்று வேகமாக் குளியறையினுள் நுழைந்து கொண்டவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கிருபாகரன்.

*****​

அன்று மாலை வேலையிலிருந்து வந்தவன் “மகி.. மகி...” என்று கூவிக் கொண்டே வந்தான். சமையலறையில் ஈவனிங் ஸ்நாக்ஸ் தயார் செய்து கொண்டிருந்த மகிமா அவனது ‘மகி’ என்ற அழைப்பில் நெஞ்சம் குளிர்ந்தாள். எல்லோரும் இருக்கும் பொழுது. அவன் மகிமாவை மகி என்று அழைப்பது வழக்கம் தான். அந்த அழைப்பிற்காக அவள் மனம் எப்போதும் ஏங்கும். சந்தோஷமும் வெட்கமுமாக அவன் குரல் வந்த திசையை நோக்கி விரைந்தாள்.

சோபாவில் அமர்ந்து காயத்ரியிடம் பேசிக் கொண்டிருந்தவனை ஆசையாகப் பார்த்தாள் மெல்ல அவனருகில் சென்றவள்.

“காப்பி கொண்டு வரட்டுமா?”

“இப்போது வேண்டாம் மகி. நான் முகம் கழுவி கொஞ்சம் பிரெஷ் ஆகிறேன் ரூமிற்கே எடுத்து வந்துவிடு. இருவரும் அங்கே குடித்துக் கொள்ளலாம்”

அவன் குரலில் அன்பு அதிகமாய் தெரிந்தது.

“இப்போது தான் மகிமா என்னுடன் காப்பி குடித்தாள்டா?” என்ற காயத்ரியின் பதிலுக்கு

“அதனால் என்ன, என்னுடன் ஒரு கம்பெனிக்காகவேனும் குடிக்க மாட்டாயா மகி”.

உதட்டோரம் சிரிப்புடன் அவன் கேட்க, அவள் காலடியில் பூமி இருப்பது போலவே அவளுக்கு தோன்றவில்லை. சந்திர மண்டலத்தில் மிதப்பதுபோல் உணர்ந்தாள்.

“ம்..” என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.கன்னங்கள் செங்கொழுந்தாகி விட்டது.

“ஓகே... சீக்கிரம் எடுத்துட்டு வந்திடு”

சட்டென நினைவு வந்தவளாக கையிலிருந்த கவரை அவள்புறம் நீட்டினான்.

‘என்ன’ என்பது போல பார்த்தவளிடம்

“உனக்குத்தான்” என்று விட்டு அவள் கைகளில் அழுத்தி விட்டு படிகளில் ஏறினான்.

ஆசையாக அந்தக் கவரைப் பிரித்தவள் உள்ளே இருந்த விலை உயர்ந்த பரிசைப் பார்த்து விழி விரித்தாள். உள்ளே மல்லிகைப்பூ அவளை பார்த்து சிரித்தது. மீண்டும் மீண்டும் இன்ப அதிர்ச்சிகள் இடைவிடாது தாக்கியதில் திக்கு முக்காடிப் போனாள்.

“அடடே, இந்த திருட்டு பயலுக்கு இதெல்லாம் வேறு தெரியுமா? நூறு சதவீதம் சம்சாரியாகி விட்டான். போ! போ... போய் அவனுக்கு காப்பி கொடு”

“இந்தாருங்கள் அத்தை உங்களுக்கும் சுவாமிக்கும் எடுத்துக் கொண்டு மீதத்தைக் கொடுங்கள்” என்றபடி அவள் நீட்டிய அந்த மல்லிகைக் கவரை வாங்க மறுத்தார் காயத்ரி.

“அட என்ன பொண்ணம்மா நீ உன் கணவன் ஆசையாக வாங்கி வந்து கொடுத்ததை ஏன் பிரித்தெடுக்கிறாய். அவன் அன்பு மொத்தமும் உனக்கே சொந்தம். அதுபோலத்தான் இந்தப் பூவும். முதன் முதலாய் வாங்கி வந்திருக்கிறான். நீயே முழுவதையும் வைத்துக் கொள். அப்போதுதான் அவன் சந்தோஷப்படுவான்”

குறும்பு மின்ன பேசிய காயத்ரி பிறகு டிவியில் தன் கவனத்தை பதித்தார்.

தான் சொர்க்கத்தில் சஞ்சரிப்பது போல் தோன்றியது மகிமாவிற்கு. இத்தனை நாள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் இன்று விடிவு கிடைத்துவிட்டது. மனதில் இனிமையான கற்பனைகள் எழ ஆசையாக அவன் வாங்கித் தந்த மல்லிகைப் பூவை முத்தமிட்டாள். முகம் குங்குமமாய் சிவந்தது. ஏதோ அரிய பொக்கிஷத்தை கையாள்வது போல் ரொம்பவும் மென்மையாக அவள் தலையில் சூடிக் கொண்டாள். தன் காதலனும் கணவனுமான கிருபாகரன் வாங்கிக் கொடுத்த மலர் ஆகா... இதைவிட விலை மதிப்பிட முடியாத வேறு பொருள் உண்டோ. எத்தனை தங்கம், வைரம், வைடூரியம், ஏன் பிளாட்டினம் கொடுத்திருந்தால் கூட இத்தனை சந்தோஷப்பட்டிருக்க மாட்டாள்.

எல்லா மனைவிகளும் பெரும்பாலும் ஆசையாக எதிர்பார்ப்பது கணவன் கையில் ஒரு முழம் பூவைத்தானே. பலதரப்பட்ட கனவுகளோடும் வெட்கத்தோடும் காப்பி, டிபன் கொண்ட தட்டை எடுத்துக் கொண்டு அவனறையினுள் நுழைந்தாள்.

அப்போதுதான் இரவு உடைக்கு மாறி முகம் துடைத்துக் கொண்டிருந்தான் கிருபாகரன்.

“காப்பி” என்றவளின் மென்மையான குரல் கேட்டு திரும்பியவன் அவள் நீட்டிய காப்பியை பெற்றுக் கொண்டான்.

சிவந்த அவளது கன்னங்களை பார்த்தவன். உடனே அவளது கூந்தலில் வீற்றிருந்த பூவையும் பார்த்தான்.

“தேங்க் காட் நீ எங்கே பூவை வைத்துக் கொள்ள மாட்டாயோ என்று யோசித்தேன் மகி” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவனை பார்த்து விழி விரித்தவள் சுற்றும்முற்றும் பார்வையை சுழலவிட்டாள்.

“என்ன பாக்கிற”

“இல்லை.. வந்து இங்குதான் யாரும் இல்லையே பிறகு இந்த மகி எதற்கு என்று யோசித்தேன்”

ஒருவேளை அவன் ஆரம்பிக்க தயங்குகிறானோ என்ற நினைவில் அவள் எடுத்துக் கொடுத்தாள்.

“ம்.. யாரும் இல்லைதான் ஆனால் உன்னை மகிமா மகிமா என்று அழைப்பது யாரோ பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மாவை கூப்பிடுவது போல் இருக்கிறது அதனால் மகி என்று அழைத்தேன். ஏன் உனக்கு பிடிக்கவில்லையா?”

நான் அவர் வாயிலிருந்து கிளற முயன்றால், அவர் என் வாயை கிளருகிறாரே என்று யோசித்தவள்,

“ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லை, நீங்கள் எப்படி கூப்பிட்டாலும் சந்தோஷம்தான்”

“சரி இப்படி உட்கார், உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”

தன் அருகில் கட்டிலில் அமரும்படி அவன் கேட்டதும் உச்சி குளிர்ந்து போனாள். தன் ராசிக்கு இன்று உகந்த நாள் போலும், எல்லாம் இனிப்பாகவே நடக்கிறது என்று நினைத்தாள்.வெட்கத்தோடு அவனருகில் அமர்ந்தாள்.

“நீயும் காப்பி குடியேன்”

சகஜமாக பேச விரும்புவது போல் ஆரம்பித்தான். அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டவள் போல் காப்பியை கையிலெடுத்தாள்.

“நாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம் மகி”

தீவரமான முகத்துடன் காப்பியை பருகிக்கொண்டே எங்கோ பார்த்தப்படி பேசிய கிருபாகரனை புரியாமல் பார்த்தாள் மகிமா

“அம்மாவிற்கு நம் நடிப்பில் சந்தேகம் வந்துவிட்டது மகி. இன்று காலை அம்மாவை பார்க்க அவர்களது அறைக்கு சென்றிருந்த நான் அப்பாவுடன் அவர் பேசுவதைக் கேட்டேன்”

“என்னவோ போங்க, நம் கிருபாவையும் மகிமாவையும் பார்த்தால் ஏதோ அன்னியமாக தோன்றுகிறது.. இருவரும் கொஞ்சமும் ஒட்டாமல் இருப்பது போல் தெரிகிறது”

“அட நீ வேற இந்த காலத்துப் பிள்ளைகள் பண்ற கன்றாவி வேலையை நம் பையன் செய்யவில்லையே என்று சந்தோஷப்படுவியா?”

“இல்லைங்க அதற்காக எப்பப் பார்த்தாலும் பின்னிப் பிணையனும்னு இல்லை இந்த வயசுல கூட நாம் பல விஷயங்களை கண்ணாலேயே பேசிக்கிறோம். ஒருவர் மனசு இன்னொருத்தருக்கு சொல்லாமலே தெரியுது. ஆனால் அவர்களுக்குள் அந்த கெமிஸ்ட்ரி மிஸ்ஸிங் ஏதோ சரியில்லை”

“சரி, சரி நீ ஏதாவது ஏடாகூடமாக நினைத்து உன் உடல் நிலையை கெடுத்துக் கொள்ளாதே. டாக்டர் சொன்னது நினைவில் இருக்கட்டும். வா டிபன் சாப்பிட்டுவிட்டு நேரத்திற்கு உன் மாத்திரைகளைப் போடு” என்று அப்பா சேரிலிருந்த எழும் சத்தம் கேட்டு உடனே போன தடம் தெரியாமல் திரும்பிவிட்டேன். உன் கையில் பூவை கொடுக்கும் பொழுது அம்மா எத்தனை சந்தோஷப்பட்டார்கள் பார்த்தாயா? என்று தன் அம்மாவின் சிரித்த முகத்தை மனதில் நிலைநிறுத்தியவன் தன் முன்னே சிரித்த முகம் வாடுவதைக் காண தவறிவிட்டான்.

தலைமேல் இடி விழட்டும் என்று சிலர் சபிப்பதுண்டு. அப்படி இடி விழுந்தால் கூட இப்படி ஒரு தாங்கமுடியாத வலியை உண்டு பண்ணுமா என்பது கேள்விக்குறி தான். தன் தலையில் இதுவரை பொக்கிஷமாக எண்ணியிருந்த மல்லிகைச் சரம் இப்போது நாகப்பாம்பாக மாறி அருவருப்பைத் தந்தது. தன் முக உணர்வுகள் அவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக எழுந்தவள் டிரெஸ்ஸிங் டேபிளை நெருங்கி மல்லிகைச் சரத்தை கூந்தலிலிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தாள்.

“ஏ... ஏன் மகி அதை எடுக்கிறாய்?”

பேசுவதை எல்லாம் பேசிவிட்டு இப்படி அப்பாவியாய் இவனால் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று மனதில் நினைத்தவள்.

“இ... இல்லை.. வந்து... ரொம்பவும் பாரமாய்!”

“ப்ளீஸ் மகி எனக்காக இந்த பாரத்தை கொஞ்ச நேரம் அதாவது இரவு உணவை உண்டுவிட்டு நாம் தூங்க வரும்வரை வைத்துக் கொண்டால் போதும்... ப்ளீஸ்” என்று கெஞ்சுபவனிடம் தன் ஆத்திரத்தைக் காட்டும் வழி புரியாமல் விழித்தாள் மகிமா.

கடவுளே என்னை உனக்கு இவ்வளவு அதிகமாய் பிடிக்குமா? பிடித்தவர்களை கடவுள் அதிகம் சோதிப்பார் என்று பாட்டி சொல்லி இருக்கிறாளே. வேண்டாம் வேண்டாவே வேண்டாம் பிடித்தவர்கள் பட்டியலில் இருந்து என்னை தயவுசெய்து எடுத்து விடு கடவுளே. இதற்கு மேல் என் மனம் பாரம் தாங்காது என்று இரவு முழுதும் அந்த மல்லிச் சரத்தை கையில் வைத்துக் கொண்டு துளியும் தூங்காமல் கண்ணீர் விட்டாள்.

காலை அழுது சிவந்திருந்த கண்களும் கன்னங்களும் துவண்டிருந்த முகமும் மாமியாருக்கு வேறு சேதி சொல்லியது போலும். குறும்பாக தனக்குள் சிரித்துக் கொண்டவர். லேசாக அவள் முடி கோதி.

“உன்னால் காலையில் சீக்கிரம் எழ முடியவில்லை என்றால் பரவாயில்லை மகிமா. தாமதமாக எழுந்தாலே போதும், அதுதான் இங்கு வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்களே!”

மறைமுகமாக அவர் சொல்வது புரிய தன் நெற்றியில் ஓங்கி அடித்துக் கொள்ள வேண்டும் என்று தான் தோன்றியது. இருப்பினும் வருவித்துக் கொண்ட முறுவலோடு “பரவாயில்லை அத்தை, எனக்கு ஐந்து மணிக்கெல்லாம் தானாக விழிப்பு வந்துவிடும்” என்றவள் காய்கறி நறுக்குவதில் மும்முரம் போல் காட்டிக் கொண்டாள்.

அவள் வெட்கப்படுவதாக நினைத்த காயத்ரியும் சிரித்துக் கொண்டே வெளியேறி விட்டார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
5

நாட்கள் மெல்ல நகர்ந்தது,ஒவ்வொரு நாளும் பரிட்சை போல் உணர்ந்தாள் மகிமா. எல்லா பெண்களுக்கும் கணவனைத் தவிர மற்ற புகுந்த வீட்டு உறவுகள் அன்னியமாக தெரியும். ஆனால் மகிமாவுக்கோ கணவனே அன்னியமாகப் பட்டது தான் விதி. இந்த நிலையில் தான் கிருபாகரனின் தமக்கையின் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் வந்தது. ஒரு மாதத்திற்கு முன்பாகவே விழாக்கோலம் பூண்டது அவர்களின் வீடு. எல்லோருக்கும் புதுத்துணி எடுத்தார்கள், சாப்பாட்டு மெனுவை ஒன்றாக உட்கார்ந்து தீர்மானித்தார்கள். சைவமா அசைவமா என்று முடிவெடுப்பதற்காக ஒரு வாரம் வாக்குவாதம் நடந்து பின் அசைவம் என்று முடிவானது. பெரும்பாலான உறவினர்களும், நண்பர்களும் அசைவத்தையே விரும்பி உண்பதால் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். ஒரு சில சைவ விருந்தினர்களுக்கு பக்கத்தில் இருக்கும் உயர்தர சைவ ஹோட்டலில் இருந்து வரவழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

அடுத்தது அழைப்பிதழ், குழந்தை பிரியம்வதாவே அழைப்பு விடுவதுபோல் அழகான சின்ன பத்திரிக்கை. அவளின் புகைப்படத்தோடு தயாரானது. யாருக்கு எத்தனை வேண்டும் என்று கணக்கிடப்பட்டு அச்சடிக்கப்பட்டது. இரண்டு நாத்தனர்களும் ஒரே மாதிரி நிறமும் டிசைனும் கொண்ட புடவையை பார்த்ததும் மகிமாவிற்கு தானாக கவிதாவின் நினைவு வந்தது. ஊரில் ஏதேனும் திருவிழா என்றால் இருவரும் ஒரே மாதிரி தாவணியில் தான் வலம் வருவார்கள். எல்லா இளவட்டத்தின் கண்களும் அவர்களை மொய்ப்பது பசும் நினைவுகளாய் வந்தது தானாக கண்கள் கலங்கியது. பேசிக் கொண்டே திரும்பிய ‘மிருதுளா’ அவளது கண்ணீரில் என்ன அர்த்தம் கண்டாளோ தெரியவில்லை. உடனே அதே போல் இன்னொரு புடவையையும் எடுக்கச் சொல்லி பில் போட்டு வீட்டிற்கு வந்ததும் மகிமாவிடம் புடவையை நீட்டி திக்கு முக்காடச் செய்தாள்.

“இந்த வீட்டுப் பெண்களாய் நாம் மூவரும், அன்று ஒன்று போல் தான் உடுத்த வேண்டும். அணிமணிகள், சிகை அலங்காரம், ஏன் காலணி கூட ஒன்று போல் தான் போட வேண்டும். இது என் உத்தரவு” என்று கண்டிஷன் போல் பேசும் பெரிய நாத்தனாரை நன்றி பொங்க பார்த்தாள் மகிமா. ஆனால் அதுவே அவளுக்கு வினையாகும் என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை. மாப்பிள்ளைக்கு தந்தை மட்டுமே என்பதால், விழாவை இவர்கள் வீட்டில் வைத்தக் கொள்ளலாம். வேலைகளை பகிர்ந்து செய்ய வசதியாக இருக்கும் என்று முதலிலேயே ஒரு மனதாக முடிவெடுத்திருந்தனர்.

பிறந்தநாள் அன்று எல்லோரும் குடும்பமாக கோவிலுக்குச் சென்று வந்தனர். வீட்டில் இருப்போர் அனைவரும் தங்கள் பரிசுகளை காலையிலேயே பிரியம்வதாவிற்கு கொடுத்தனர். தான் என்ன செய்வது, மதியம் கிருபாவிடம் பேசி சிறந்த பரிசாக வாங்கி குழந்தைக்கு மாலை பரிசளிக்க வேண்டுமென்று நினைத்திருந்தவள். இப்போது விழித்துக் கொண்டு நின்றாள். அவளது முகத்திற்கு முன் சொடுக்கிட்டவன் தன்னுடன் வருமாறு விழி அசைத்தான். அவனை தொடர்ந்தவளுக்கு ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்தன. அங்கே பேபி பிங்க் கலரில் ஒரு குட்டிக்கார் ரொம்பவும் அழகாக இருந்தது. காரை கைகளில் தூக்கிக் கொண்டவன் பிரியம்வதாவை நெருங்கி,

“என் செல்லக்குட்டி ஏஞ்சலுக்கு மாமா மாமியின் சார்பில் இந்த அழகான கார்” என்று நிமிர்ந்தவன் மகிமாவை பார்த்த பார்வையின் அர்த்தம் புரிய, அவளும் அந்த காரின் ஒரு பகுதியை பிடித்து கீழே வைத்து அதில் குழந்தையை அமர்த்தியும் வைத்தாள்.

“என் செல்லக்குட்டி இனி வீட்டுக்குள்ளும் காரிலேயே வலம் வரலாம்” என்ற மகிமா குழந்தையின் கன்னங்களில் இதழ் பதித்தாள்.

“நல்ல நியாயம் இது. என் மகளுக்கு உண்மையான கார் வாங்கித் தராமல் பொம்மைக் கொடுத்து ஏமாற்றுகிறாயா?” என்று தம்பியை வம்பிற்கு அழைத்தாள் தாரிணி.

“என் செல்லக்குட்டிக்கு நான் கார் வாங்கிக் கொடுக்க தயார் தான் ஆனால் அவளை சாக்கிட்டு நீயும் மாமாவும் தான் காரை ஓட்டுவீர்கள். அதனால் இவள் வளர்ந்ததும் நானே ஒரு லேட்டஸ்ட் மாடல் கார் வாங்கிக் கொடுத்து அதை ஒட்டவும் கற்றுக் கொடுப்பேனாக்கும்”

காலரை தூக்கி பேசிக்கொண்டிருந்த கிருபாகரனை ஆசையாகப் பார்த்து ரசித்தாள் மகிமா.

“சரி, சரி மழுப்புவது உனக்கு கைவந்த கலைதானே” என்று தமக்கை வேறு வேலையில் மும்முரமாகிவிட்டாள்.

“கார் ரொம்பவும் அழகாக இருக்கிறது கிருபா... நான் தான் ஒன்றுமே வாங்காமல் இருந்துவிட்டேன். மதியம் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்று, குட்டிக்கு அழகான பரிசு ஒன்று வாங்க வேண்டும்”

“அதுதான் நான் கொடுத்துவிட்டேனே, பிறகு நீ வேறு தனியாக எதற்கு? எல்லாம் ஒன்று தான் வா மாலை விழாவுக்கான ஏற்பாட்டை கவனிப்போம்”

இயல்பாக கூறிவிட்டு நடந்தவனை பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இருவரையும் ஒன்றாகக் கருதுகிறார். இன்னமும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவளுள் மலர்ந்தது.

மாலை ஏழு மணி அளவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து, அனைவரையும் அழைத்திருந்தால், ஆறுமணிக்கே அவர்களது வீடு அமளி துமுளி பட்டுக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாக தயாரா என்று பார்த்துக் கொண்டிருந்த மகிமாவை நெருங்கிய தாரிணி.

“மகி, நீ இன்னமுமா தயாராகவில்லை.போ போய் சீக்கிரம் தயாராகு”

“சரி அண்ணி” என்றவள் தன் அறைக்குள் நுழைந்து புடவை உடுத்த தயாரானாள்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியாக பிளவுஸ் தைத்து வரவழைத்தது தாரிணி தான். அதைப் பிரித்து எடுத்து பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

அந்த பிளவுஸின் ஊக்கு பின்பக்கமாக தைக்கப்பட்டிருந்தது. இதுவரை அவள் இப்படி தைத்து அணிந்ததே இல்லை. எவ்வளவு முயன்றும் அவளால் அந்த பிளவுஸின் முதல் இரண்டு ஊக்கைக் கூட போட முடியவில்லை. புடவை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டவள் லேசாக தன் அறைக்கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே மிருதுளா அவசரமாக நடந்து செல்வது தெரிய,

“மிருதுளா” உரக்க அழைத்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்த மிருதுளா தன் அண்ணியை கதவிடுக்கில் பார்த்துவிட்டு நெருங்கி வந்தாள்.

“கொஞ்சம் உள்ளே வாயேன்” பதட்டத்துடன் பேசிய அண்ணியை பார்த்தவள்.

“என்ன அண்ணி, என்ன பிரச்சனை, இவர் வேறு என் பெயரை சொல்லி கீழேயிருந்து கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்கிறார்”

கணவனின் மேல் செல்லமாக கோபத்தைக் காட்டி பேசினாள்.

“இல்லை வந்து இந்த பிளவுஸின் ஊக்கை முடியவில்லை அதான்...”

“ஓ..அப்படியா” என்று உள்ளே செல்ல எத்தனித்தவள்,

“மிருது.. என்னதான் செய்கிறாய் எத்தனை முறை அழைப்பது” என்ற கணவரின் குரல் கேட்டு நின்று விட்டாள்.

“சாரி அண்ணி, கொஞ்சம் உள்ளேயே இருங்க, இவர் கூப்பிட்டும் நான் போகவில்லை என்றால் கோபித்துக் கொள்வார். நான் கீழே சென்று அக்காவை நிச்சயம் அனுப்புகிறேன்” என்றவள் சென்றுவிட உள்ளே வந்தவள் அணிமணிகளை அணிய ஆரம்பித்தாள். பதட்டத்தில் கதவை தாளிட மறந்துவிட்டாள்.

“என்ன பிரச்சனை மகி வரச் சொன்னாயாமே?” என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்த கிருபாகரனை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பதட்டம் தொற்றிக் கொள்ள அவசரமாக முந்தானையை எடுத்து போர்த்திக் கொள்ள முயன்றாள். ‘பதறிய காரியம் சிதறும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவளால் சரியாக போர்த்திக் கொள்ளவும் முடியாமல் போனது.

அங்கு நடப்பதைப் பார்த்தவன் சில நொடி குழம்பினாலும் உடனே புரிந்து கொண்டு அவளுக்கு முதுகுக்காட்டி நின்று கொண்டான்.

“சாரி மகி.. மிருதுளாதான் அண்ணிக்கு ஏதோ பிரச்சனையாம் அதை உன்னால்தான் சரி செய்ய முடியுமாம். உன்னை அனுப்பச் சொன்னார்கள். சீக்கிரம் போ” என்றாள் அதுதான்...

“இல்லை.. பரவாயில்லை தாழ்ப்பாள் போடாதது என் தவறுதானே”

“சரி உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே”

“இல்லை என்று எப்படிச் சொல்வது அல்லது இதுதான் பிரச்சனை என்றும் எப்படி சொல்வது. பதில் பேச முடியாமல் விழித்தவளை திரும்பிப் பார்த்தவன் அவளது குழப்பங்கள் படிந்த முகத்தில எதையோ படித்து விட்டு,

“எதுவாக இருந்தாலும் சொல் மகி” என்று தைரியமூட்டினான்.

“வந்து.. வந்து... அது .. இந்த பிளவுஸ்...”

எத்தனை முயன்றும் அவளால் சொல்ல முடியவில்லை.

“நான் மிருதுளாவைத் தான் கூப்பிட்டேன். அவள் அண்ணியை அனுப்புவதாகத் தானே சொன்னாள்”

சிறு எரிச்சல் குரலில் புலம்பினாள்.

அடடா, இப்போது நான் வந்ததுதான் தவறா? அப்படி என்ன பெரிய கம்பச்சித்திர வேலை என்னால் முடியாதது.

எப்போது வீரதீர வார்த்தையை விட வேண்டும் என்று தெரியாமல் வாய் விட்டுவிட்டான். அவன் கேட்டவிதமே அவளது கன்னங்களை செம்மையுற செய்தன. இருப்பினும் எப்படிச் சொல்வது. அவள் உள்மனதோ, எதிரில் இருப்பது உன் கணவன் தானே அவனிடம் என்ன வெட்கம். அதுவுமில்லாமல் இந்த மிருதுளா வேண்டுமென்று தான் கிருபாகரனை இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள். மறுபடியும் வேறு யாரிடம் உதவி கேட்டாலும் அவளுக்கு தெரிந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. நாம் சொல்வதை சொல்லிவிடலாம். பிறகு அவரது முடிவு என்று யோசித்தவள் மிகுந்த தயக்கத்தோடு தன் பிரச்சனையை அவனிடம் சொல்லிவிட்டாள்.

அதை கேட்ட கிருபாகரன் உறைந்து நின்றான். அவனது இறுக்கத்தை புரிந்து கொண்டவள்,

“பரவாயில்லை கிருபா எனக்குப் புரிகிறது நான் இந்த விழா முழுவதும் இப்படி தலைப்பால் போர்த்திக் கொண்டே இருந்துவிடுகிறேன்” என்றவன் தன் அணிமணிகளை அணிவதைத் தொடரவும் தீடீர் என

“வேண்டாம்” என்று பதறினான் கிருபா, என்னவென்று புரியாமல் திரும்பியவள் அவனின் பதட்ட முகத்தை பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தவன்,

“நீங்கள் மூவரும் ஒரே மாதிரி உடுத்தவும், அணிகள் அணியவும், ஏன் தலை முதல் கால்வரை ஒன்று போல அலங்கரித்துக் கொள்ளத்தானே விரும்பினீர்கள். இப்போது மற்ற இருவரும் போத்தீஸ் கடையின் விளம்பர மாடல் திரிஷாவை தோற்கடிக்கும் நோக்கத்தில் முந்தானையை ஸ்டைலாக இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருக்கையில் , நீ மட்டும் போர்த்திக் கொண்டிருந்தால் சந்தேகம் வரும். அதுவும் குறும்புகார மிருதுளாவுக்கு தெரிந்தது நான் தொலைந்தேன் வேண்டுமென்றே தான் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள். அவளது குறும்புச் சிரிப்பை பார்த்த போதே எனக்கு சந்தேகம். இப்படி என்னை இக்கட்டில் மாட்டி விடுவாள் என்று. அதனால்.. நீ தவறாக நினைக்கவில்லை என்றால்.. நா. .நானே..”

அவனால் முடிக்க முடியவில்லை.

ஆனால் மகிமாவிற்கு புரிந்து விட்டது. நாடகம் நடிக்க ஆரம்பித்துவிட்டால் சுபம் போடும்வரை நடித்துதானே ஆக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்பது புரிய. அவளும் அவனுக்கு முதுகுக்காட்டி தன் சம்மதத்தை தெரிவித்தாள். இருதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. என்னதான் நாடகமாக இருந்தாலும், அவள் ஒன்றும் மெழுகால் செய்த சிலையல்லவே. அவளின் உணர்வுகளை யாரும் பொருட்படுத்தவில்லையே. அந்த மிருதுளாவாக இருக்கட்டும், இந்த கிருபாகரனாக இருக்கட்டும், ஆனால் அவன் தன் பின்னால் அடிமேல் அடி எடுத்து வைத்து நெருங்கி வருவதை அவளால் நன்றாக உணர முடிந்தது.

மென்மையாக.. இல்லையில்லை மிக மிக மென்மையாக அவளது சேலைத் தலைப்பை தளர்த்தியவன் மிகுந்த பிரயத்தனத்தோடு, அதாவது அவனது விரல் அவள் மேல் துளியும் படாமல், ஊக்கை போட்டு விட முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். அவனது வெப்பமான மூச்சுக் காற்று, அவளது கழுத்து வளைவில் மோதி அவளை இம்சித்தது.

இப்படி அவன் பட்டும் படாமலும் இன்று முழுவதும் முயற்சித்தாலும் முடியாது என்று தோன்ற மகிமாவிற்கு எரிச்சல் வந்தது. நான் என்ன தீண்டத்தகாதவளா என்ற கோபம் மேலோங்க அதை கேட்டும் விட்டாள். அவனுக்கு என்ன தோன்றியதோ உடனே கொக்கியைப் போட்டுவிட்டான். அதனால் ஏற்பட்ட அவன் விரலின் ஸ்பரிசம் அவளை சிலிர்க்கச் செய்தது. மனதில் என்னென்னவோ தோன்றி இம்சித்தது. எங்கே தன் உணர்வுகள் தன்னை மீறி வெளிவந்து விடுமோ என்ற பயத்தில எதிரிலிருந்த டிரெஸ்ஸிங் டேபிளை இறுக பிடித்துக் கொண்டு கண்களை மூடி எச்சிலை விழுங்க, தன்னுள்ளே பொங்கி எழுந்த உணர்வுகளை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.

“வந்து.. வந்து.. ரொம்பவும்...” என்றவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்பது தெளிவாக தெரிந்து விட, சட்டெனத் திரும்பி தன் விரல்களால் அவன் இதழ் மூடினாள். இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது. அவளின் கலங்கிய கண்கள் அவனுக்கு ஏதோ செய்தி சொல்ல, வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

பொத்தென ஸ்டூலில் அமர்ந்தவளின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. ரொம்பவும் பிரயத்தனப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டாள். தன் கண்மை கலைந்து கண்கள் சிவந்து, விழாவில் எல்லோரும் என்னவென்று கேட்கும் அவலப் பொருளாகிவிடுவாள். தன் உணர்வுகளை கண்மூடி கட்டுப்படுத்தியவள், ஒருவாறு அதில் வெற்றியும் கண்டாள். பிறகு தன்னால் இயன்றவரை விரைவாகத் தயாராகி, கீழே ஹாலிற்கு வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் மிருதுளா வேகமாக வந்தாள். மகிமாவின் தோளை தன் தோளால் செல்லமாக இடித்தவள்.

“என்ன அண்ணி, இன்ப அதிர்ச்சி கொடுத்தேனா?”

சரிதான், ஆனால் இன்பத்தை மட்டும் அழித்து விட வேண்டும் என்று மனதினுள் நினைத்தவள், தலை கவிழ்ந்து சிரித்து வைத்தாள். அதற்குள் பின்னால் வந்த கிருபாகரன்,

“ஏய் வாலு, உன் வேலையை என்கிட்டயே காட்டுறியா. இனி இதுபோல் விளையாடதே” என்ற எச்சரிக்கையை சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டான்.

ஆனால் அவளோ, “அட மனதிற்குள் ஆயிரம் நன்றிகள் சொல்லிவிட்டு இப்போது பிடிக்காதது போல் நடிப்பு வேறா/? உலகமகா நடிப்புடா சாமி” என்று சொல்லி சிரித்தவள், மேலும் ஏதேனும் ஏடாகூடமாய் பேசும் முன் கிருபா முந்திக் கொண்டான்.

“அதோ மாப்பிள்ளை உன்னை கூப்பிடுகிறார் பார், நீயானால் இங்கே வாயாடிக் கொண்டிருக்கிறாய்” என்று பேசி அவளை அனுப்பி விட்டவன், சில முக்கிய விருந்தினர்களை மகிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். எல்லோரும் அவளின் அழகையும், இருவரின் ஜோடி பொருத்தத்தையும் மனதார பாராட்டி அவர்களை வாழ்த்தினார்கள். அவனும் சிரிப்புடனே ஏற்றுக் கொண்டான். எல்லாம் நடிப்புதான் வெறும் நடிப்புதான் என்று தன்னுள் தாரக மந்திரம் போல ஜபித்துக் கொண்டே வந்ததில் அவளுக்கு தலை விண் விண் என்று வலிக்க ஆரம்பித்து விட்டது. இருமுறை அவள் நெற்றியை அழுந்தப் பிடித்ததை பார்த்த கிருபா அவளுக்காக சூடான டீ வருவித்து கொடுத்தான்.

“தலை வலித்ததால் சொல்வதற்கென்ன, இந்த டீயை குடித்துவிட்டு, இப்படி கொஞ்சம் இந்த ஸ்டூலில் உட்கார்” என்றவனது கண்டிப்பான குரல் அவளுக்கு சந்தோஷத்தையே கொடுத்தது. எத்தனை அக்கறை என் மேல் என்று பூரித்து போனாள். கேக் வெட்டி முடித்ததும் சாப்பிடுவதற்கு முன்பாக டான்ஸ் பார்ட்டி நடந்தது. ஹாலிலுள்ள அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டு, இரவு விளக்குகள் போடப்பட்டது. மெல்லிய இசை அங்கே ஒலிக்க ஆரம்பித்தது. எல்லோரும் அவரவர் தங்கள் துணையுடன் இசைக்கேற்ப ஆட ஆரம்பித்துவிட செய்வதறியாது விழித்தனர் கிருபாவும் மகிமாவும்.

தன் கணவரோடு ஆடிக் கொண்டே இவர்களை நெருங்கிய தாரிணி,

இப்படியே நின்று எங்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்களா? ம்.. அல்லது ஆரம்பிக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருக்கிறீர்களா? என்று கேட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டாள்.

அப்போதுதான் கிருபாகரன் ஒன்றை கவனித்தான் ஹாலின் ஓரத்தில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்த தாயும், தந்தையும் சிறியவர்கள் ஆடுவதை சந்தோஷமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை இவர்களை நெருங்கி விட சட்டென மகிமாவின் இடையைப் பற்றி தன் புறமிழுத்து அவளின் கைப்பற்றி ஆடுவதுபோல பாவனை செய்ய ஆரம்பித்தான். அவனின் இந்த திடீர் செயலை எதிர்பார்க்காமல் நிலை குலைந்தாள் தடுமாறி சரியாக அவனது நெஞ்சில் புதைந்தாள். அவ்வளவு தான், சொர்க்கமே தன் காலடியில் வந்துவிட்டது போல் தோன்றியது அவளுக்கு. அவனைவிட்டு விலகும் எண்ணம் துளியும் அவளுக்கு வரவில்லை. கண்களை மூடி அந்த சந்தோஷத்தை அனுபவித்தாள்.

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவளின் காதருகே,

“ப்ளீஸ் மகி அம்மா அங்கேயிருந்து நம்மையே பார்க்கிறார்கள் அதனாலதான்” என்றவனின் நெஞ்சில் இன்னமும் நெருக்கமாக புதைந்தவள்,

“விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை கிருபா”

கிசுகிசுப்பான அவளது குரல் அவனை என்னவோ செய்தது.

ஒரே ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் தான் அவனையும் மீறி அவளின் முதுகில் கை வைத்து தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு கண்களை மூடி இசைகேற்றவாறு அசைந்து கொண்டிருந்தான். அவளையும் அசைய வைத்துக் கொண்டிருந்தான். அந்த வினாடி இருவருமே சொர்க்கத்தின் வாசல்வரை சென்று திரும்பினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பலமான கரகோஷமும், சிரிப்பு சத்தமும் அவர்களை நனவுலகம் கொண்டு வந்தது.

பலரின் கண்கள் அவர்களை துளைப்பது புரிந்து இருவரும் சட்டென விலகி நின்றனர். மகிமாவின் முகம் செந்தாமரையாய் மாறி விட்டிருந்தது. தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கும் திராணி இல்லை. அவளை காப்பாற்றுவது போல் அந்த குடும்பத்து மூத்த மாப்பிள்ளை உரக்க பேசலானார்.

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் தேங்க்ஸ் ஃபார் த ஒன்டர்புல் டான்ஸ், நவ் இட்ஸ் டைம் பார் டின்னர், கமான் லெட்டஸ் என்ஜாய் த புட்” என்றது தான் தாமதம் எல்லோரின் கவனமும் உணவில் திரும்பியது.

விழா முடிந்து எல்லோரும் விடைபெற்று சென்றதும், குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் சேர்ந்து உண்டார்கள். விழாவைப் பற்றி பெருமையாக எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டு சாப்பிட கிருபாகரனும், மகிமாவும் அவரவர் நினைவுகளில் தொலைந்து போனார்கள்.

மகிமா படுக்கையறைக்கு வந்து வெகுநேரமாகியும் கிருபாகரன் வரவேயில்லை. அவளை நினைத்து அவளுக்கே கோபம் கோபமாக வந்தது. தன் வாயாலேயே தான் அசிங்கப்பட்டு விட்டோமே என்று உள்ளுக்குள் புழுங்கினாள். கிருபா என்ன நினைத்திருப்பார். அவரின் தொடுகைக்கும், அணைப்பிற்கும் அலைபவள் என்று தானே நினைத்திருப்பார். ச்சே.. என்ன காரியம் செய்துவிட்டேன். இனி அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்.

தோட்டத்தில் கால் கடுக்க நடந்து கொண்டிருந்த கிருபா, தனக்குள் பல மாற்றங்கள், இதுதான் என்று அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. மகிமாவை தவிர அவனது மூளைக்குள் வேறு எதுவும் ஓடவில்லை. மலர்க்கொடி போல் தன் மேல் துவண்டு விழுந்தவளை நினைக்கையில் அவனுக்கே பாவமாக இருந்தது ஒரு பெண்ணின் உணர்வுகளோடு விளையாடுகிறேனோ நானெல்லாம் என்ன மனிதன். மகி மிகவும் மென்மையானவள். அவள் மனது மட்டுமல்ல அவளின் ஸ்பரிசமும் தான். ஒரு நிமிடம் என்னையே மறக்கடித்துவிட்டது. அவளுக்கும் இது நன்றாகவே தெரிந்திருக்கும். என்னைப் பற்றி என்ன நினைப்பாள். அவள் முகத்தில் இனி எப்படி விழிப்பது ஒன்றும் புரியவில்லை. ஒருவாறு நடந்து, நடந்து கால்கள் துவண்டு போக, படுக்கையறைக்கு வந்தான். மகிமா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள் முகத்தை சில நொடி உற்று நோக்கியவன் அருகிலிருந்து போர்வையை எடுத்து மென்மையாக அவளுக்கு போர்த்தி விட்டான்.

விடிந்து எழுந்த இருவரும் முந்தின நாள் பற்றி மறந்தும் பேசிவிடவில்லை. சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்கள். நாட்கள் மெல்ல நகர்ந்தன.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
6

கிருபாகரனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே பேசலானாள் மகிமா.

“கிருபா ஒரு சின்ன ஹெல்ப்”

“என்ன மகி”

“வந்து.. தப்பா நினைக்கக் கூடாது. என்னடா இவள் நம் அலுவலக வேலையில் மூக்கை நுழைக்கிறாளே என்று”

“ச்சேச்.. சே நிச்சயமாக இல்லை சொல்லு”

“என் தோழி ரொம்பவும் நெருங்கிய தோழி பாவம் இந்த வயதிலேயே விதவையாகி விட்டாள். இப்போது அவளுக்கு முக்கியமான தேவை ஒரு வேலையாம் நேற்று கோவிலில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தன் சோகங்களை எல்லாம் கொட்டி அழுது தீர்த்துவிட்டாள். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று மாமாவும் நீங்களும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அந்த வேலையை என் தோழிக்கு தரமுடியுமா? அவளுக்கு அதற்கான தகுதி இருந்தால்”

திருமணமாகி இத்தனை நாட்களில் தனக்கென்று அவனிடம் அவள் கேட்டது இதைத்தான். அவளது முதல் வேண்டுகோள் மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை.

“உன் தோழியை என் அலுவலகத்திற்கு அனுப்பி வை மகி. பயோடேட்டாவோடு பத்து மணியளவில் வரச் சொல் கூடுமான வரை முயற்சிக்கிறேன்” என்றவன் வரப்போகும் பூகம்பம் தெரியாமல் அலுவலகம் சென்றான்.

சரியாக பத்து மணிக்கு அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.

“எஸ் கமின்” என்று பதிலளித்தவன் தன் கோப்புகளில் கவனமாக இருந்தான்.

கதவு திறக்கப்பட்ட பின்,

“குட்மார்னிங் சா...” என்ற வார்த்தை முடிவடையும் முன் சட்டென நிமிர்ந்து பார்த்த கிருபாகரனும் சரி, எதிரில் பைலுடன் இருந்த பொண்ணும் சரி உறைந்து விட்டனர். பதட்டத்தில் தன் இருக்கையிலிருந்தே எழுந்துவிட்டான்.

“புவி.. புவனேஸ்வரி! நீ... நீங்களா?”

என்ன உளறுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.

“கரன்... நீங்களா? நீங்கள் மதுரையில்...”

பழைய நினைவுகள் தன்னுள் தோன்ற அவஸ்த்தையாய் தலை கவிழ்ந்தாள்.

“கவலை தரும் பல நினைவுகள் அந்த மதுரை முழுவதும் நிரம்பிக் கிடப்பது போல் தோன்றியதால், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அப்பாவின் சொந்த தொழிற்சாலையை நிர்வகிக்க சென்னை வந்துவிட்டேன். அம்மாவின் உடல்நிலையும் ஒரு காரணம் தான்”

அவன் கூறுவதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அவளுக்கும் மதுரைக்கு சென்றால் அதே பிரச்சனை தானே. என்னென்னவோ நினைவுகள் தோன்ற, எல்லாவற்றையும் பின் தள்ளி வேறு பேச முயன்றாள்.

“மகி... மகிமா...”

“ஆம், என் துணைவி தான்”

“ஓ.. அவள் சொல்லி இருப்பாளே”

“ம்.. சொன்னாள்..”

சிறு மௌனத்திற்குப் பின்,

“மூன்று வருடம் தான் ஓடியிருக்கும், அதற்குள் எத்தனை மாற்றங்கள். உன் நிலைக்கு உண்மையிலேயே நான் வருந்துகிறேன்”

“உங்கள் வருத்தத்தை விட எனக்கு முக்கிய தேவை ஒரு வேலைதான் கரன்.. சாரி கிருபாகரன் சார்”

புவனாவை அலுவலகத்திலும், மகிமாவை வீட்டிலும் மாறி மாறி பார்த்து அவன் மூளை காய்ந்து விட்டது. ஆபீஸில் புவனாவை பார்க்கும் பொழுது, அவர்கள் காதலித்தது, ஊர் சுற்றியது எல்லாம் நினைவில் வரும். பாவம், இந்த சிறுவயதில் இப்படி தனிமரமாகி விட்டாளே என்ற துக்கம் அவனுள் எழும். எல்லாம் தெரிந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் சேர்ந்து கொள்ளும்.

வீட்டிற்கு வந்தால் மகிமா. அவள் ஒவ்வொன்றையும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்வது தான் ஒரு நல்ல கணவனாக இல்லாத பட்சத்திலும் மனைவிக்கான சகலகாரியங்களையும் ஒரு குறைவும் சொல்ல முடியாத அளவில் நிறைவேற்றிக் கொண்டு, தன் சொந்தபந்தங்களை விட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல மனைவியாய், தோழியாய் விளங்கும் மகிமாவையும் அவனால் விட்டுத்தர முடியவில்லை.

புவனா வேலைக்கு சேர்ந்து இந்த ஒரு வார மன போராட்டத்தில் கிருபாகரன் ரொம்பவும் மனம் நொந்து போனான்.

அப்போது தான் அந்த பார்ட்டி வந்தது. தன் நெருங்கிய நண்பனான பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்ததால் பேட்சிலர்ஸ் பார்ட்டி வைத்திருந்தான். எப்போதாவது இது போன்ற பார்ட்டிகளில் நாகரீகம் கருதி லேசாக ஆல்கஹால் பருகுவது கிருபாவின் வழக்கம். வேண்டாம் என்றால் ரொம்பவும் பிகு செய்வதாகவும், நடிப்பதாகவும் அந்த வட்டத்தில் கருதப்படும். அதனால் ஒரு ஸ்மாலை எடுத்துக் கொண்டு அந்த பார்ட்டி முழுவதும் குடித்துக் கொண்டே வலம் வருவான். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். அவன் மனம் அவனது கட்டுப்பாட்டிலில்லை. அவன் மனதின் வலி தீர்க்க மதுவிடம் சரண் புகுந்தான்.

பாஸ்கரன் எத்தனை முயன்றும் கிருபவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அளவிற்கதிகமாக குடித்துவிட்டு பிதற்ற ஆரம்பித்துவிட்டான். இதற்குமேல் சரிபடாது என்பது புரிய கிருபாவின் டிரைவரை வரவழைத்து கைத்தாங்கலாக காரினுள் ஏற்றி அனுப்பி வைத்தான்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாத கிருபாகரனை நினைத்து ரொம்பவும் கவலைப்பட்டாள் மகிமா. போன் செய்தாலும் பதிலில்லை. அவனாகவும் தகவல் தரவில்லை என்று சிறு பதட்டத்தோடு காத்திருந்தாள். சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் கதவு தட்டப்பட்டதும் திறந்த மகிமாவிற்கு அதிர்ச்சியில் இதயமே ஒரு நொடி நின்று பின் துடித்தது.

“என்ன மணி அண்ணா, இவருக்கு என்னவாயிற்று பதட்டமாக கேட்டவளிடம்”

“பயப்படும்படி எதுவுமில்லை அம்மா! ஒரு பார்ட்டியில்...” என்று அவர் தயங்கவும்.

மகிமா கிருபாகரனை நெருங்கியதும் அவர் முடிக்காமல் விட்ட வாக்கியத்தின் மீதியை அவனிடமிருந்து வந்த மதுவின் வாடை சொல்லியது. சட்டென்று நாசியைப் பொத்தியவள், கிருபாவிற்கு இந்தப் பழக்கம் உண்டா. கல்யாணமாகி இத்தனை மாதத்தில் ஒரு நாளும் இப்படி இல்லையே. அல்லது புதிதாக கற்றுக் கொண்ட பழக்கமா, நினைத்ததை டிரைவரிடம் கேட்டும் விட்டாள்.

“இல்லை மா.. அய்யா இப்படி அதிகமாக மது அருந்தி நான் இதுவரை பார்த்ததில்லை. அது தான் அம்மா மனசு புண்படுமே என்று நினைத்து இத்தனை தாமதமாக வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று பேசிக் கொண்டே இருவருமாக அவனை கட்டிலில் படுக்க வைத்தனர்.

“ரொம்பவும் நன்றி அண்ணா, அத்தைக்குத் தெரிந்தால் வேதனைப்படுவார்கள்”

“சரிம்மா நான் கிளம்புறேன்” என்று டிரைவர் சென்றுவிட சில நிமிடங்கள் கட்டிலில் கிடந்த கிருபாகரனை வெறித்தாள்

எதற்காக கிருபா இந்த மிதமிஞ்சிய மது!

புவனாவை மறக்கவா, அல்லது என்னை உங்கள் வாழ்வில் சகித்துக் கொள்ள முடியாமல் வந்த துக்கத்தில் குடித்ததா? எதுவாக இருந்தாலும் வேதனை எனக்குத்தான். என்னால் தானோ என்ற குற்றவுணர்வு என்னை சுட்டெரிக்கிறது என்று மனதினுள் பேசிக் கொண்டவள் ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு, அவனை நெருங்கி அவனது ஷூ, கோட், டை என தேவையில்லாவற்றை களைந்தாள். இறுதியாக அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ்சை அவள் எடுத்ததும் அவனிடம் அசைவு தெரிந்தது. குழறலாய் ஏதோ பேசவும் செய்தான். எத்தனை உற்றுக் கேட்டும் அதன் பொருள் சுத்தமாக அவளுக்கு விளங்கவில்லை. அவளின் செவியை அவனது இதழோரம் வைத்தும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இது தேவையில்லாத வேலை என்பது புரிய நிமிர நினைத்தவளால் எழ முடியவில்லை. காரணம் கிருபாவின் கரம் அவள் கரத்தைப் பற்றி இருந்தது. மெதுவாக அதை அகற்ற முயன்றவள் தோற்றுத்தான் போனாள். அவன் அத்தனை இறுக்கமாக பற்றி இருந்தானா அல்லது அவன் பற்றுதலில் இருந்து விடுபட அவள் விரும்பவில்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இறுதியாக தன் சக்தியை ஒன்று திரட்டி அவனின் கைகளை விடுவித்துக் கொள்ள முயல்கையில், அவனது மற்றொரு கரம் அவளது இடையை வளைத்து அவன் மேல் போட்டுக் கொண்டது. நிலை குலைந்து அவன் மேல் விழுந்தவள், இது நல்லதற்கல்ல என்பது புரிய, திமிறி விலக முயன்றாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் முகத்தைப் பார்த்தாள், அவன் கண்கள் மூடியே தான் இருந்தது. இது உள்ளே சென்ற மதுவின் பேயாட்டம் தான் என்பது புரிய,

“கிருபா இங்கே.. பாருங்கள் இது சரியல்ல, தப்பு. நீங்கள் அதிகமாக குடித்திருக்கிறீர்கள். உங்கள் நினைவில் நீங்கள் இல்லை. என்னை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்”

கண்களில் நீர் திரையிட அவனிடம் மன்றாடினாள். மனமோ! அவன் அணைப்புத் தந்த கதகதப்பில் துள்ளிக் குதித்தது.

அறிவோ ‘மகிமா விழித்துக்கொள், அவர் இப்போது சுயநினைவில் இல்லை. அவரை நீ காதலிக்கிறாய், இந்த நெருக்கம் உனக்கு பிடித்திருக்கலாம். ஆனால் காலை எழுந்தவுடன் என் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொண்டாயா? என்று அவர் கேட்டால் என்ன செய்வாய்? முகத்தை எங்கே வைத்துக் கொள்வாய், வேண்டாம் அவரிடமிருந்து விலகு’ என்று அவளை எச்சரித்தது.

“கிருபா... ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம். இப்போது என்னை விடுங்கள்” என்று கெஞ்சியவளை, ஒரே சுற்றில் கீழே படுக்க வைத்து அவளின் காதோரம்

“ஐ லவ் யூ...” என்றான்.

சப்த நாடிகளும் நின்றுவிட்டது அவளுக்கு. அவள் கேட்டது நிஜமா என்று கூட சந்தேகம் வந்தது. அவளது சந்தேகம் தீரும் விதமாக மறுபடியும் சற்று உரக்கவே.

“ஐ லவ் யூ சோ மச்...” என்றான் கிருபாகரன்.

இதற்குத்தானே அவள் ஆசைப்பட்டாள். இதற்காகத்தானே இத்தனை மனவலியையும் தாங்கினாள். இன்று இது நிஜமா அல்லது போதையில் அவன் உளறியதா என்பதை அவள் யோசிப்பதற்குள் கிருபா அவளை தன் வசபடுதும் முயற்சியில் இறங்கினான். உண்மையா பொய்யா?! நிஜமா போதையா? என்ற கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்த போதிலும் அவளால் அவனை தடுக்க முடியவில்லை. பாவம் அவளும் பெண்தானே, அதுவும் கிருபாவின் மீது காதல் கொண்ட மனம், அவன் தொட்டதும் நெகிழ்ந்து விட்டாள். தன் உண்மையான காதலை அவனுக்கு அளித்தாள். இருவரும் ஒருவருக்குள் மற்றவரை தொலைத்து எப்போது தூங்கினார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

காலையில் முதலில் எழுந்தது மகிமாதான். எழுந்ததுமே நேற்றிரவு நடந்ததெல்லாம் அவள் நினைவுகளில் விரிய வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன. இதழோரம் வெட்கச் சிரிப்புடன் கிருபாகரனை பார்த்தவளால் அது முடியவில்லை. தூங்கும் அவனை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கமாக இருந்தது. அவனின் தூக்கம் கலையாமல் மெல்ல கட்டிலை விட்டு எழுந்தவள் நெகிழ்ந்திருந்த ஆடையை சரி செய்து கொண்டிருக்கையில் காதில் நாராசமாய் அந்தப் பெயர் ஒலித்தது கிருபாகரனிடமிருந்து,

“புவனா... புவனா.. புவனா...”

இன்றும் ஏதோ குழறலாய் மூடிய கண்களை திறக்காமலே அவன் புலம்புவது அவள் காதுகளில் அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது.

அமிலம் என்பது கூட சாதாரண வார்த்தைதான். அந்த வலியை அவளால் சொல்லவும் முடியவில்லை. இதயத்தை யாரோ கத்தியால் இரண்டு துண்டுகளாக வெட்டியது போல் இருந்தது. அப்படியானால்? அப்படியானால்? புவனா என்று நினைத்து... என்... என்னை, அதற்கு மேல் யோசிக்கவும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவன் தொட்டயிடமெல்லாம் எரிந்தது. எங்கே அழுது, அவன் எழுந்து இன்னமும் அசிங்கமாகி விடுமோ என்ற பயத்தில், குமுறிக் கொண்டு வந்த அழுகையை கை வைத்து மூடி கட்டுப்படுத்திக் குளியலறை நோக்கி விரைந்தாள்.

எத்தனை தண்ணீர் ஊற்றியும் உடலின் அழுக்கு அப்படியே இருப்பதுபோல் தான் இருந்தது. இந்த அழுக்கை எப்படி அகற்றுவது, கடவுளே என் மீது கருணை காட்டிவிட்டாய் என்று சந்தோஷப்பட்டேனே. எத்தனை தேய்த்தும் உடலின் கறை போனதுபோல் தோன்றவில்லை. எனவே ஷவரை வேகமாக திறந்துவிட்டு அமர்ந்தாள். விழிநீர் நீரோடு கலந்து கரைந்து கொண்டிருந்தது. ‘ஐ லவ் யூ’ ‘ஐ லவ் யூ சோமச்’ கிருபாகரனின் குரல் அவளின் காதுகளில் ஒலித்து மேலும் அவளை இம்சித்தது. காதுகளை அழுந்த மூடியும் அவளுக்கு அது கேட்டுக் கொண்டே இருந்தது. எல்லாம்.. எல்லாம் புவனாவிற்குத்தான். அவளுக்கான வார்த்தையை எனக்காகவென்று எண்ணிய முட்டாள் மட சாம்பிராணி நான் தான். எத்தனை மட்டித்தனம், எத்தனை அறிவீனம், எத்தனை அசிங்கம். என் பெண்மை அசிங்கப்பட்டுவிட்டதே. இதை எப்படி சரி செய்வது? இனி கிருபாகரனின் முகத்தில் எப்படி விழிப்பது.

ஒருவேளை அவருக்கு நூறில் ஒரு சதவீதம் நேற்று நடந்தது ஞாபகம் வந்துவிட்டால் வேறு வழியில்லாமல் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டால், மனதில் புவனா, படுக்கைக்கு நான் என்ற இந்த நிலை நிரந்திரமானால் ச்.. சீ.. அதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கிறது. அதற்கு தூக்கில் தொங்கிவிடலாம் என்று உயிரை விடும் அளவு ஒரு நொடியில் முடிவெடுத்தாள். அதை உடனே அழித்தாள். உயிர் கடவுள் கொடுத்தது, அதை அழிக்கும் உரிமையும் அவருக்கே உண்டு. அப்படியானால் இப்படி ஒரு வாழ்க்கையை, என் சுயத்தை விட்டுக் கொடுத்து வாழ வேண்டுமா? முடியவே முடியாது. அது எந்தக் காலத்திலும் நடக்காது என்ற முடிவிற்கு வந்தவள். உடனே குளியலறையிலிருந்து வெளியேறி உடைமாற்றி தயாரானாள். நல்லவேளையாக அவள் வெளிவரும் பொழுது கிருபாகரன் அங்கு இல்லை.

அவளின் மனப் போராட்டத்தில் அதிக நேரம் குளியலறையில் இருந்ததால் அவன் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்று யூகித்தவளுக்கு அவன் அலுவலகமே சென்றுவிட்டான் என்ற தகவல் வேலைக்காரி மூலம் தெரியவந்தது. கையில் சூடான காப்பியுடன் அவளை எதிர்கொண்ட சமையல்காரம்மா,

“ஐயா ஆபீஸ் போயிட்டாரும்மா. அம்மா உங்களுக்கு சூடா காப்பி கொடுக்கச் சொன்னாங்கம்மா” என்றதும் இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.”ச்சே.. அழுவது எத்தனை மடத்தனம். இன்னமும் இந்த அறையில் இந்த வீட்டில் கிருபாகரனின் முகம் பார்த்து வாழ்வது மிகவும் கடினம்” என்று மனதினுள் நினைத்தவள் சமையல்காரம்மாவை அனுப்பிவிட்டு வேகமாக ஒரு பெட்டியை எடுத்து தன் துணிகளை அடுக்கலானாள். தன் செல்போன் மூலம் தந்தையுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.

“அப்பா, அம்மாவை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது. அவர் அதிக வேலையாக இருப்பதால் நீங்களே வந்து கூட்டிக் கொண்டு போகிறீர்களா?” என்று முடிக்கையில் அழுகையை கட்டுப்படுத்த சிரமப்பட்டு போனாள்.

அவர் என்ன நினைத்தாரோ உடனே வருவதாக் ஒப்புக் கொண்டார். மனம் சற்று நிம்மதியடைந்தது போல் தோன்றியது. ஆனால் அத்தையிடமும் மாமாவிடமும் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவள் மெல்ல காயத்ரியை தேடிச் சென்றாள்.

தோட்டத்தில் காலை நடைப்பயற்சி முடிந்து அங்கிருந்த கல் பெஞ்சில் இளைப்பாறிக் கொண்டிருந்த காயத்ரியை நெருங்கியவள்.

“அத்தை” என்று மென்மையாக அழைத்தாள்.

“வா மகிமா இப்படி உட்கார்” என்று தள்ளியமர்ந்தார் காயத்ரி.

“அத்தை.. வந்து...”

அவள் தயங்கவும்

“என்னம்மா... என்ன தயக்கம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்” என்று ஊக்கமூட்டினாள் அவர்.

“என்... நெருங்கிய தோழிக்கு திருமணமாம். இப்போதுதான் அப்பா போன் செய்தார். நான் நிச்சயமாக போக வேண்டும். அப்பா ஏதோ வேலையாக சென்னை வருகிறாராம். நீங்கள் அனுமதித்தால் அவரோடு...”

முடிக்க முடியாமல் நிறுத்தினாள். “இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது கிருபாகரனிடம் கேட்டாயா அவன் என்ன சொன்னான்?”

லேசாக கண்கள் கலங்கிவிட அது காயத்ரிக்கு தெரியாமலிருக்க தலை கவிழ்ந்தாள்.

“அவரிடம் நீங்கள் தான் சொல்ல வேண்டும் அத்தை”

வார்த்தைகளை கோர்த்து சிறிதும் தடுமாற்றமில்லாமல் பேசிவிட்டதை எண்ணி அவளுக்கே ஆச்சர்யம் தான். அவளின் முகத்தில் எதைப் படித்தாரோ அவளுக்கு தெரியவில்லை முகம் மலர,

“அதற்கென்ன மகிமா, புது மனைவியை பிரிய யாருக்குத்தான் பிடிக்கும். நான் அவனிடம் பேசுகிறேன், ஏதேனும் திட்டிவிட்டானா? கண்கள் கலங்குகிறது பார். சரியான முட்டாள் அவன்” என்று சரமாரியாக மகனை திட்ட ஆரம்பித்தவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள் மகிமா.

மறுபடியும் அறையினுள் சென்றவளால் கொஞ்சமும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கிருபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதி விடலாமா? நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் எழுத்தில் கோபத்தை காட்டலாமா? என்று யோசித்தவள். ஒரு பேப்பர் பேனா சகிதமாக அமர்ந்தாள். ஆனால் அவளால் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. கண்ணீர் தான். கேட்காமலே சென்று விட்டால் என் மனம் ஆறாது என்றுணர்ந்தவள். ஷாப்பிங் போக வேண்டும் என்று காயத்ரியிடம் சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டாள். நல்லவேளையாக அவள் கார் ஓட்ட கற்றிருந்தாள். இல்லையேல் டிரைவர் எங்கே சென்றாள் என்று மாமியாரிடம் சொல்லிவிடக் கூடுமல்லவா.

என்னென்ன பேச வேண்டும் என்று மனதினுள் குறிப்பெடுத்துக் கொண்டே வண்டி ஒட்டியவள். ஒருவாறு பேசும் துணிவுடன் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு மேலே அறைக்குச் செல்லலானாள். வழியில் எதிர்ப்பட்ட சிலர் திருமணத்திற்கு வந்ததால் அடையாளம் தெரிந்து முகமன் தெரிவித்தனர். போலியான புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்தவள் வேகமாக எம்.டி என்ற பெயர் பலகையிட்ட அறையை நோக்கி விரைந்தாள். அறை வாசலில் இருந்த கேபினில் செக்கரட்டரியை காணோம்.

இந்த ஈஸ்வரி எங்கே போய்த் தொலைந்தாள் என்று ஒரு நொடி அங்கே சுற்றும் முற்றும் தேடியவள் உடனே ஏதோ தோன்ற விரைந்தாள். நான் கிருபாகரனின் மனைவி தானே நான் ஏன் அவரின் அறைக்கு செல்ல தயங்குகிறேன். இப்படி நினைத்தவள் உடனே கதவை நோக்கி விரைந்தாள். லேசாக திறந்திருந்த கதவை தட்டுவதற்காக கை வைத்தவள் சிலையென உறைந்து நின்றாள்.

உள்ளே.. உள்ளே ஈஸ்வரி கண்ணீருடன் கிருபாகரனின் மார்பில் சாய்ந்திருந்தாள்.

“நாம் பிரிந்திருக்கக் கூடாது கரன், எல்லா பிரச்சனைகளும் வேதனைகளும் அதனால தான். நீங்களும் சரி, நானும் சரி வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் கரன்” என்று உரக்கப் பேசி குலுங்கி அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. நல்லவேளை கிருபாகரன் கதவிற்கு முதுகுக்காட்டி நின்றிருந்ததால் மகிமாவை பார்க்கவில்லை. சட்டென திரும்பியவள் அந்த காட்சி தந்த அதிர்ச்சி குறையாமலே வீடு வந்து சேர்ந்தாள். எப்படி வந்தாள்? அதுவும் எந்த விபத்தும் ஏற்படாமல் எப்படி வந்தாள், அவளுக்கே ஆச்சர்யம்தான் அவள் வருவதைப் பார்த்த காயத்ரி பேசியது கூட அவள் காதுகளில் துளியும் விழவில்லை. நேராக அறைக்குள் சென்று கதவடைத்தவளுக்கு அழுகை கூட வர மறுத்தது.

ஈஸ்வரி புவனேஸ்வரி.. அவள் தான் புவனாவா? இது கூட தெரியாமல் அவளை நானே வேலைக்கு அமர்த்த கோரி சிபாரிசு செய்தேனே. கடைசியில் நான்... என் தலையில் மண் அள்ளி போட்டுக் கொண்டேனே.. இல்லையில்லை, புவனா இல்லாத போது மட்டும் கிருபாகரன் என்னோடு கொஞ்சினாரா என்ன இல்லையே. அவள் மேல் பழிபோட்டு என்ன பலன். எனக்கு தாலி கட்டியவர் மனதில் நான் இல்லையே அவள் தானே. இப்படி ஆபீஸில் புவனாவோடு சல்லாபமாக இருப்பதாக நினைத்து தான் அவர் நேற்று என்னோடு சீ... ச்சீ.. இனி அவருடன் பேசுவது என்ன, அவரை கண்ணால் பார்ப்பது கூட பாவம்.. அசிங்கம்.. இனி கொஞ்சமும் தாமதிக்க முடியாது. இந்த வீட்டில் இருந்தாலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். எங்கே அம்மா.. அம்மாவின் மடிதான் இப்போது தேவை அவளுக்கு. இப்படி நினைவுகளில் மூழ்கி திளைத்தவள். வேலைக்கார மணி வந்து கதவு தட்டியது கூட தெரியாமல் விட்டத்தை வெறித்திருந்தாள்.

“அம்மா அம்மா” சற்று உரக்க அவன் அழைத்ததும் தான் நினைவிற்கு வந்தாள்.

“எ.. என்.. என்ன மணி?”

“உங்கள் அப்பா வந்திருக்கிறார். அம்மா உங்களை கூட்டி வரச் சொன்னார்கள்” என்றது தான் தாமதம் பெட்டியோடு கீழே இறங்கிவிட்டாள்.

“அடடா உங்கள் பெண்ணை பாருங்கள், அப்பா வீடு என்றதும் பெட்டியோடு இறங்கிவிட்டாள்” என்று கிண்டலடித்த காயத்ரியை,

“நீ மட்டும் என்னவாம். இன்றும் உன் தம்பிகள் யாரேனும் வந்து நிற்கட்டுமே, எப்படி பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடுவாய் என்று எனக்கல்லவா தெரியும்” என்ற லக்ஷ்மணனோடு சேர்ந்து மூவரும் சிரித்தனர். மாமியாரின் முன் வந்து நின்றவள்,

“அத்தை நான் கிளம்பட்டுமா?”

பலகீனமான குரலில் கேட்டாள்.

“அட, என்ன அவசரம் மகிமா, அப்பா இப்போது தானே வந்தார் சாப்பாடு தயாராகிவிட்டது. சாப்பிட்டதும், நீயும் சாப்பிடு பிறகு போகலாம்” என்ற காயத்ரியிடம்.

“வேண்டாம் சம்பந்தி. இப்போதுதான் சாப்பிட்டேன் கொஞ்சம் அவசரம் ஊரில் வேலை இருக்கிறது, நாங்கள் கிளம்புறோம்”.

அப்பாவின் பதில் அவளுக்கு நிம்மதி அளித்தது. இன்னமும் கொஞ்ச நேரம் அந்த வீட்டில் இருந்தாலும் உடைந்து அழுது, ஒரு பெரிய களேபரமாகிவிடும் என்பது அவளுக்கு சர்வ நிச்சயம்.

“ஆமாம் அத்தை, அப்பா சொல்வதும் சரிதான் அவருக்கு அங்கே அதிக வேலை இருக்கிறது என்று சொல்லி, என்னைத் தயாராக இருக்கச் சொன்னார்”

“ஓ..” என்று யோசித்த லக்ஷ்மணன்.

“சரி சம்பந்தி, உங்கள் வேலை கெடுவதாக இருந்தால் நீங்கள் கிளம்பலாம். ஆனால் அடுத்த முறை வரும்பொழுது ஒரு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்”

“நிச்சயமாக சம்பந்தி” என்றவர் பொதுவான வணக்கத்தோடு வெளியே காரை நோக்கி சென்றார்.

மாமியாரின் அருகில் சென்றவள், மறுபடியும் ”நான் கிளம்புறேன் அத்தை... அவர்...” என்று முடிக்க முடியாமல் நிறுத்தினாள். அவளை புரிந்து கொண்ட காயத்ரி மென்மையாக அவளின் கைப்பற்றி,

“நான் அவனிடம் பேசிவிட்டேன் மகிமா. தோழியின் திருமணத்திற்கு நீ போவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையாம். அதையே நினைத்து மனதை வருத்திக் கொள்ளாமல் நிம்மதியாக உன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்” என்று முடித்த போது மகிமாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டியது

“அட, என்னம்மா நீ, மூன்று நாள் ஊருக்கு போவதற்காகவா இப்படி அழுகிறாய்”

“அட, என்னம்மா நீ, கணவனை பிரிந்து முதல் முறையாக போகும்போது எல்லாப் பெண்களும் அழுவார்கள் தானே. நீ கூடத்தான் முதன்முதலில் சீமந்தம் செய்து, உன்னை அழைத்துச் சென்ற போது என் கையை பிடித்துக் கொண்டு எப்படி அழுதாய்” என்று பேசி நிலைமையை சகஜமாக்கினர்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
7

எப்போதும் அப்பாவுடன் முன் சீட்டில் அமர, கவிதாவும் மகிமாவும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் இன்று பின் சீட்டில் ஏறி அமர்ந்த மகிமாவை வித்தியாசமாக பார்த்தார் சிவநேசன்

வீட்டிற்குள் நுழைந்ததுமே சம்பந்தி அவர்கள்.

“என்றைக்கு சம்பந்தி திருமணம்” என்று கேட்டபோது கொஞ்சம் தடுமாறித்தான் போனார் ஆனால் பதில் சொல்லவில்லை.

“தோழிக்கு திருமணம், ஊருக்கு போக வேண்டுமென்று ரொம்பவும் சந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருக்கிறாள் மகிமா” என்ற காயத்ரியின் பேச்சைக் கேட்டு ஏதோ புரிந்தார் போல் அமைதி காத்தார்.

“ஏதோ வேலை விஷயமாக இங்கு வந்ததாக மகிமா கூறினாள், அது நல்லபடியாக முடிந்ததா?’ என்ற கேள்விக்கும் லேசாக ஆம் என்பது போல் தலையாட்டி வைத்தார்.

இப்போது மகிமா கண்மூடி சாய்ந்திருக்கும் இந்த நிலையை பார்க்கும்பொழுது. ஏதோ பிரச்சனை என்பது சர்வநிச்சயம். ஆனால் அதை என்னவென்று கேட்பது. இது சொந்த விஷயமென்று மகிமா சொல்லிவிட்டால், கூடாது கூடாது இதில் அவசரப்படக் கூடாது. வீட்டில் உமாவிடம் சொல்லிவிட்டால் அவள் கேட்டுக் கொள்வாள். அம்மாவிடம் பெண்கள் மனம் விட்டுப் பேசுவார்கள்.

உமா வாசலிலேயே இவர்களை எதிர் கொண்டார். எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் மகிமா வீட்டிற்குள் வந்தது அவரை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அதை விடவும் அவள் கையில் இருந்த பெரிய விஐபி சூட்கேஸ் அவருக்கு பயத்தை அளித்தது என்று கூட சொல்லலாம். யோசனையாய் கணவரைப் பார்க்க, அவரோ விட்டத்தை வெறித்துவிட்டு உள்ளே சென்றார். அப்போதே மண்டைக்குள் அபாயமணி அடித்தது. இப்போது எதுவும் பேச வேண்டாமென்று முடிவு செய்தவர். இருவருக்குமான சிற்றுண்டியை கொடுத்துவிட்டு, மகள் படுக்கச் சென்றதும், கணவரை தேடி தோட்டத்திற்கு சென்றார்.

தேங்காய் குலைகளின் எண்ணிக்கையை சொல்லிக் கொண்டிருந்தார் கணக்குபிள்ளை சுந்தரம். ஆனால் அவரது கவனம் அதில் இல்லை என்பதை அவர் முகம் பார்த்துப் புரிந்து கொண்ட சுந்தரம் அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டார். இதை பார்த்துக் கொண்டே அருகில் வந்த உமாவின் கண்ணசைவில், சுந்தரம் அங்கிருந்து சென்றுவிட்டார். கணவரை நெருங்கியவர், மென்மையாக அவர் தோள் தொட்டார். தொடுகையை உணர்ந்து நடப்பிற்கு வந்தவர் திரும்பவும்,

“என்னங்க ஆச்சு, ஊரிலிருந்து வந்த நீங்களும் சரியில்லை, மகியும் சரியில்லை அப்படி என்னதான் நடந்தது”

“தெரியலயே உமா எத்தனை யோசித்தும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ பெரிய பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது என்ன?”

“சின்ன சின்ன விஷயங்களுக்கு நம் பெண் இது போல் பெரிய முடிவு எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி இருக்க, இந்த முடிவு எதனால்? எத்தனை யோசித்தும் புரியவே இல்லை எனக்கு.

கவலை அதிகமான முகத்துடன் தன்னைத் தானே அவர் வருத்திக் கொள்வது புரிய,

“என்னங்க இது, அவள் எதற்காக இங்கே வந்தாள் என்று நிச்சயமாய் தெரியாத போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும். ஒருவேளை உண்மையிலேயே நம்மைப் பார்க்கும் ஆசை வந்திருக்கலாம். வெறுமனே போக வேண்டுமென்று சொன்னால் அனுப்பமாட்டார்களோ என்று பயந்து தோழிக்கு திருமணம் என்ற பொய்யையும் சொல்லியிருக்கலாம். முதலில் நீங்கள் தைரியமாக இருங்கள். நான் விசாரிக்கிறேன்” என்று உமா பேசியதும் தான் லேசான தெளிவு அவர் முகத்தில தெரிந்தது. ஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.

ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு தன் அறையில் விட்டத்தை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் மகிமா. என்னவெல்லாம் நடந்துவிட்டது. நேற்று இரவுஅவருடன் எத்தனை இன்பமாக இருந்தது. இன்று இப்படி தனிமையில் மனம் முழுக்க புழுக்கமாய் கடவுளின் திட்டம் தான் என்ன. என்னை படைக்கும் பொழுது, அந்த பிரம்மதேவன் கோபமாக இருந்தாரோ. கோபத்தில் ஏதேதோ கிறுக்கிவிட்டாரோ? கண்ணீர் கசிந்து வழிந்தோடியது.

அவளின் களையிழந்த முகமும், கண்ணீரும் வெறித்த பார்வையும் மனதால் படம்பிடித்த வண்ணம் உள்ளே நுழைந்தாள் உமா.

“என்ன மகி ஏதோ யோசனையாய்?”

சட்டென நடப்பிற்கு வந்தவள் வேகமாக கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“ஒன்றுமில்லை அம்மா .நான் இல்லாமல் அவர் எப்படி சமாளிப்பார் என்று யோசித்தேன்..”

ஏதோ மழுப்பலாய் பேசி முடித்தாள்.

“ஏன் ஆறு மாதத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இருப்பார்” குறும்போடு கேட்டார் உமா

அப்படியே இருப்பது தானே என்னுள் வலியை ஏற்படுத்துகிறது என்று மனதினுள் பேசியவள்.

“போங்கம்மா” என்று வெட்கப்படுவது போல் முகத்தை கவிழ்த்துக் கொண்டாள். நடிப்பு ஆரம்பமாகிவிட்டது. இத்தனை நாள் புகுந்த வீட்டில் தான் நடந்தது. இன்று பிறந்த வீட்டிலும் ஆரம்பிக்கிறது. இன்னமும் என்னவெல்லாம் நடக்குமோ என்று யோசித்தவளை அதிகமாக கவலைப்படுத்தாமல் உமா அங்கிருத்து அகன்றார்.

“என்ன உமா பேசினியா, ஏதேனும் தெரிந்ததா?” என்று ஆர்வமாய் கேட்ட சிவநேசனை, ஒரு வினாடி நிமிர்ந்து பார்த்த உமா லேசான புன்னகையை இதழோரம் செயற்கையாய் ஏற்படுத்திக் கொண்டு

“எல்லாம் பேசியாச்சு, எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாமல் மனதை வருத்திக் கொள்ளாமல் இருந்தாலே போதும்” என்று விளக்கியதும் தான் அவர் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

“அப்பாடா, இப்போது தான் என் மனதிலிருந்த பாரம் இறங்கியது உமா, நீ சொன்னது உண்மைதானே. காரில் வரும் பொழுது கூட பிள்ளை முகத்தில கவலை படர்ந்திருந்தது. அதனாலத்தான் கேட்கிறேன். முதல் தடவையா புருஷனை விட்டுட்டு தனியா வர கஷ்டமா இருந்திருக்கும். அதுக்கெல்லாம் இப்படி மனசைப் போட்டு குழப்பிப்பாங்களா. நீங்க கவலைப்பட எதுவுமே இல்லை. நீங்க நிம்மதியா இருக்கனும் அதுதான் வேணும்” என்று பேசிப் பேசியே சிவநேசனின் கவலையைப் போக்கினார். தன்னுள் அதைவிட பல மடங்கு சுமையை ஏற்றிக் கொண்டார்.

ஒரு பெண்ணின் உள்ளம் மற்றொரு பெண்ணிற்குத் தானே தெரியும். அதுவும் பெற்ற தாய்க்கு மகளின் உணர்வுகள் புரியாமல் இருக்குமா என்ன? எல்லாம் புரிந்தது, அவள் முகத்தில் படிந்திருக்கும் கவலை, வெட்கம் என்று சொல்லிக் கொண்டு தலை கவிழ்ந்து அவள் அழும் நிலை, இப்படி எல்லாமே முரண்பாடாகத் தான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும் அது தான் புரியவில்லை. இன்று மகிமா பேசியதை வைத்துப் பார்த்தால் எப்படியும் அவள் வாய்வழி உண்மை வரப் போவதில்லை என்பது உறுதி. அவளின் கண்களில் கணவனைப் பிரிந்த துன்பம் தெரிகிறது. அப்படியானால் அது காதல் தான், இத்தனை காதலை வைத்துக் கொண்டு எதற்காக பிரிந்து வர வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளை ஏதேனும் தவறு.. இதை எப்படி கண்டுபிடிப்பது,உள்ளும் புறமும் குழம்பி நின்றார் உமா.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
8

நேரமும் காலமும் யாருக்காகவும் நிற்பதில்லை. மகிமா தாய் வீடு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில் தினமும் கிருபாகரன் தொலைபேசி மூலம் மாமானரிடமோ, மாமியாரிடமோ பேசி மகிமாவின் நலனைப் பற்றி தெரிந்து கொள்வான். “மகிமாவிடம் பேசுங்களேன் மாப்பிள்ளை” என்று இவர்கள் கேட்கும் பொழுதெல்லாம்,

“அவளின் செல்போனில் தினமும் நான்கு முறை பேசத்தான் செய்கிறேன் மாமா, இருப்பினும் உங்களிடமும் கேட்டால் தான் எனக்கு முழு நிம்மதி அதனால்தான்” என்று அக்கறையாய் பேசும் மாப்பிள்ளையிடம் வேறு எதைக் கேட்பது.

காயத்ரியும், லக்ஷ்மணனும் அவ்வப்போது மகிமாவுடன் பேசுவதுண்டு. அப்பொழுது எல்லாம், “நீ இல்லாமல் வீடே சரியில்லை மகிமா. ஏன் கிருபாகரனும்தான். ஆனால் உன்னை இங்கே வரச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்று உறுதியாக எங்களிடம் சொல்லிவிட்டான்”

அவர்களிடம் வருகிறேன் என்றும் சொல்ல முடியாமல், வரமாட்டேன் என்றும் சொல்ல முடியாமல் மௌனம் காப்பாள். போதாதற்கு வற்புறுத்த வேண்டாம் என்று கிருபாகரன் சொன்னது வேறு அடிமனத்தைக் குடைந்தது. வலி, வலி... உடல் மனம் என்று எல்லாம் வலி.. கிருபாகரனை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் தன்னுள்ளேயே புழுங்கி துடியாய் துடித்தாள். சரியாக சாப்பிடாமல், தூங்காமல் நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே போகும் பெண்ணை பார்க்க உமாவிற்கும் சிவநேசனிற்கும் உள்ளம் பதறியது. ஆனால் இருவரிடம் கேட்டாலும் யார் மீதும் தவறு இருப்பது போலவே காட்ட மறுக்கிறார்கள். இது தான் பிரச்சனை என்று தெரிந்தால் தானே அதற்கான தீர்வை யோசிப்பது, பிரச்சனையே இல்லை என்று நடிக்கும் இருவரிடமும் எப்படி மேற்கொண்டு பேசுவது என்பது புரியாமல் இரு தரப்பு பெரியவர்களும் குழம்பினார்கள்.

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. எப்பொழுதும் போல் மதிய வேளையில் பம்ப்செட்டிற்கு சென்ற மகிமா மயங்கி விழுந்துவிட்டதாக செய்தி வர, உமா என்னவோ ஏதோ வென்று பதறியடித்துக் கொண்டு ஓடினார். ஆனால் அங்கே அவர் காதிற்கு இனிய செய்தியே கிடைத்தது. மகிமா தாய்மையடைந்து விட்டாள் என்று. ஆனால் இதற்கு சந்தோஷப்படுவதா இல்லையா என்பது தான் குழப்பமாகவே இருந்தது.

மயக்கத்திலிருந்து எழுந்த மகிமாவோ அந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தாளே ஒழிய மகிழ்ந்ததாய் உமாவிற்குத் தோன்றவில்லை. அங்கே வைத்து எதையும் பேச வேண்டாமென்று தோன்ற, அவசரத்திற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிந்து விட்டு, கைத்தாங்கலாய் மகிமாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

அறையின் கட்டிலில் அமர்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த மகளை எது கேட்கவும் பயமாக இருந்தது. இத்தனை பெரிய சந்தோஷமான விஷயத்தை சம்பந்திகளிடமிருந்து மறைப்பதும் தவறுதானே என்று யோசித்தவர். ஒருவாறு மனதில் உறுதியை வரவழைத்துக் கொண்டு தொலைபேசி மூலம் அவர்களுக்கு செய்தியை தெரியப்படுத்தினார். போனிலேயே அவர்களது மகிழ்ச்சி வெளிப்படையாய் தெரிந்ததுமில்லாமல் மறுநாளே வீட்டிற்கும் வந்திறங்கி விட்டனர். கூடை கூடையாய் பழம், மாங்காய், பூ..இத்யாதி இத்யாதி என்று ஏகப்பட்டதை வாங்கி வந்து மருமகளின் முன் குவித்தனர்.

சந்தோஷம் என்பது துளியும் இல்லை என்றாலும் மூத்த தலைமுறையினர் மனம் நோகக்கூடாது என்பதற்காக மகிழ்வது போல் நடித்தாள் மகிமா.

“என் தங்கம்...” என்று திருஷ்டி முறித்தபடி அருகில் அமர்ந்த காயத்ரி.

“என் நோயெல்லாம் போன இடம் தெரியலடியம்மா என்னவோ பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போன்னு பார்த்து கிருபா வேற ஏதோ மீட்டிங்குன்னு வெளியூர் போயிருக்கான். ஆனாலும் செய்தியை சொல்லிவிட்டோம். கேட்டதும் சந்தோஷத்துல பேச்சு மூச்சு இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சுதான் நிஜமாவான்னு கேட்டான். ஆமாண்டான்னு நான் சொல்லும் பொழுதே அந்த செக்கரட்டரி புவனா வந்து கூப்பிட்டிருப்பாள் போல அவள் குரல் போலதான் இருந்தது. அப்புறம் பேசுறேன்மான்னு சொல்லி வெச்சுட்டான்” என்று குறைப்பட்ட காயத்ரியை அடிபட்ட மனதுடன் பார்த்தாள் மகிமா.

அவர் சந்தோஷத்தில் உறையவில்லை. அத்தை அதிர்ச்சியில் உறைந்திருப்பார், கூடவே தான் இருக்கிறாளே புவனா. அவள் இருக்கும் பொழுது என் சம்பந்தப்பட்ட செய்திகளெல்லாம் அவருக்கு தேவையற்றவைதானே, என்று மனதினுள் நினைத்தவள், உள்ளேயே அழுதும் தீர்த்தாள். இன்னமும் கடவுள் அவளுக்கு எத்தனை துன்பங்களை உருவாக்கி இருக்கிறாரோ எல்லாம் படத்தானே வேண்டும். கெடுதலிலும் ஒரு நன்மையை கிருபாவின் உயிர் என்னுள். அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே என் காலத்தைக் கழித்துவிடுவேன். இது நான் கிருபாவின் மேல் கொண்ட காதலின் அடையாளம் அல்லவா. அதை என்னால் எப்படி வெறுக்க முடியும்.

கிருபாவிற்கு இந்த விபரம் தெரிந்துவிட்டதே அவர் என்ன நினைப்பார். அன்று நடந்தது அவர் நினைவில் இருக்கிறதோ இல்லையோ? ஒருவேளை இது.. இது.. யார் குழந்தை? என்று கேட்டுவிட்டால் அய்யோ!... என் போன்ற நிலை இந்த உலகில் எந்த ஒரு பெண்ணிற்கும் வந்துவிடக் கூடாது. கூடுமானவரை அவர் இங்கு வராமல் இருந்தாலே போதும். அவர் முகத்தைப் பார்க்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்று நினைத்தவளை விதி பார்த்து சிரித்தது. அப்படி இலகுவாகவிட்டுவிட்டால் விதி வலியது என்ற கூற்றிற்கு பொருள் இருக்காது தானே.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
9

மாமியார் மாமனார் வந்து போன மூன்றாம் நாள் மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த மகிமாவிடம், கவிதா மூச்சிரைக்க வந்து நின்றாள்.

“என்ன கவிதா! இத்தனை அவசரமாக ஓடிவரும் அளவிற்கு அப்படியென்ன மிக முக்கியச் செய்தி?” என்று கேட்டவளிடம்,

“மா...மா.. மாமா வந்திருக்கிறார், அம்மா உன்னை கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்”

வேக மூச்சுக்களிடையே திக்கத் திணறி பேசி முடித்தாள் கவிதா.

சப்த நாடிகளும் அடங்கிவிட்டது மகிமாவிற்கு. சுவாசிக்கவும் மறந்து விழி விரித்து நின்றவளிடம்,

“அடடா, மாமா வந்துட்டாருன்னதும் சந்தோஷத்துல உறைஞ்சு நின்னுட்டியே. இப்படியே நின்னா உனக்கு அவரைப் பார்க்க இஷ்டமில்லைன்னு திரும்பிப் போயிடப் போறாரு” என்று சிரித்துக் கொண்டே பேசிய கவிதாவிடம் என்ன சொல்வது என்று புரியாமல்,

“நீ போ கவிதா நான் பின்னோடு வருகிறேன்” என்று விட்டு கண்களை மூடி வேகமாக பெரிய மூச்சுக்கள் எடுத்து தன் இதயத்துடிப்பை சமன்படுத்த முனைந்தாள். முழுதாக முடியவில்லை என்றாலும், ஓரளவு சமன்ப்பட்டதும் மெல்ல படி இறங்கலானாள்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது கிருபாவை பார்த்து அவர் குரலைக் கேட்டு. எப்படி இருப்பார், நான் அவரை விட்டு வந்த சந்தோஷத்தில் கொஞ்சம் உடல் பருமனாகியிருப்பாரோ, விட்டது சனியன் என்ற நிம்மதியில் அவரின் முகம் அதிக களையாக இருக்குமோ? இப்படி ஏதேதோ யோசித்துக் கொண்டே கூடத்திற்கு வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த கணவனின் கால்களை மட்டுமே பார்த்தாள் எனலாம். அதைத் தாண்டி அவன் முகம் பார்க்க அவளது மனம் அனுமதிக்கவில்லை. ஏதோ ஒரு பொருளை கீழே தொலைத்துவிட்டு தேடுவதைத் தன் முதல் கடமைபோல் நிலம் பார்த்து நின்ற மகிமாவிடம்,

“மகி மாப்பிள்ளையை உள்ளே கூட்டிப் போய் குளிக்கச் சொல்லம்மா, பிரயாண களைப்புத் தீரும். குளிச்சிட்டு வந்தீங்கன்னா பலகாரம் சாப்பிடலாம் மாப்பிள்ளை” என்ற சிவநேசனின் வார்த்தைக்கு கட்டுபட்டுபவன் போல்

“சரிங்க மாமா...” என்று உடனே எழுந்து கொண்டான். அவனின் குரல் அவளுள் என்னவோ செய்தது. ஆனால் எதுவும் பேச மனமின்றி படிகளில் முன்னே ஏறி அவனுக்கு வழி காட்டுவதுபோல் செல்ல,அவளை பின் தொடர்ந்தான்.

அறையினுள் சென்றதுமே கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது மகிமாவிற்கு. எந்த ஒரு பிடிப்புமில்லாமல் நிற்பது நிச்சயம் சாத்தியப்படாது என்பது புரிய, கதவருகில் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டாள். ஏதோ பேச வாய் திறந்தால், வெறும் காற்றுதான் வந்ததே தவிர ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஒருவாறு மென்று விழுங்கி,

“குளியலறை அந்தப் பக்கம்” என்று சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டாள். அவளின் எந்த வார்த்தையையும் எதிர்பார்க்காமல் முதலிலேயே கட்டிலில் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை வைத்துவிட்டு அதிலிருந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தான். அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தவன், இப்பொழுதும் அவள் நிலம் பார்த்தே நின்றாள்.

“எப்படி இருக்கிறாய் மகிமா?” என்ற அவனது மெல்லிய விசாரிப்பில் சட்டென விழி உயர்த்தி பார்த்தவளது கண்கள் தாமாக கலங்கின.

சேச்சே.. இவர் முன் அழுவதா! கூடாது கூடாது என்று தன்னை கட்டுபட்டுத்திக் கொண்டவள். கண்ணீர் அவனுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மறுபடியும் தலை கவிழ்ந்தாள். அவர் கேட்ட கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டுமே என்பது உறைக்க,

“ம்...” என்ற பதிலை மட்டும் கூறிவிட்டாளே தவிர, அது அவளுக்கே கேட்டதா என்று புரியவில்லை. ஆனால் அதற்குள் கிருபாகரன் குளியலறைக்குள் புகுந்து கதவடைக்கும் சத்தம் கேட்டது. அப்பாடா என்ற நிம்மதி மனதினுள் எழுந்தது. அப்பொழுதுதான் அவனது தோற்றம் குறித்து ஏதோ சிந்தனை அவளுள் எழுந்தது. கொஞ்சமாய் இளைத்திருக்கிறாரே, முகத்தில் கூட முன்பிருந்த அந்த தேஜஸ், கண்களின் ஒளி, இப்படி எதுவும் இல்லையே ஏன்.. ஏன்.. ஒருவேளை நான் தாயாகப் போவது புவனாவிற்கு தெரிந்து ஏதேனும் தகராறு செய்தாளா? அதில் வந்த சோகமா? பேசாமல் இது உங்கள் குழந்தை இல்லை, நீங்கள் மனம் போல் வாழலாம் என்று சொல்லிவிடவா? அச்சச்சோ.. என் வயற்றில் உதித்த ஒரே பாவத்திற்காக அந்த பிஞ்சுக் குழந்தை களங்கப்பட வேண்டுமா? கூடாது கூடாது. இப்படி ஏதேதோ யோசித்துக் கொண்டு நின்றவள், கணவன் குளித்து விட்டு வந்ததைக் கூட கவனிக்கவில்லை. குளிக்க போகும் முன் நின்ற அதே இடத்தில் இருந்த மகிமாவை வினோதமாகப் பார்த்தவன்.

“எத்தனை நேரம் இப்படி நின்று கொண்டே இருப்பதாய் உத்தேசம்” என்று கேட்டதும் தான் நடப்பிற்கு வந்தாள்.

“வா, வந்து உட்கார்” என்று கட்டிலைக் காட்டியவனிடம் மறுப்பாய் தலையசைத்தாள் மகிமா.

“சரி உன் இஷ்டம், நான் கீழே போகிறேன், வருவதானால் வரலாம்”

பேசியபடியே கதவைத் திறந்து வெளியேறியவனை பின் தொடர்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. போகாவிட்டால் பெற்றோரின் கேள்விக்கு வேறு பதில் சொல்ல வேண்டுமே அதற்கு பல்லைக் கடித்துக் கொண்டு நடப்பதை சகிப்பதே மேல்.

கீழே அவனுக்காக சுடச்சுட பஜ்ஜியும். கேசரியும் தயாராக இருந்தது.

“நீ மாப்பிள்ளைக்கு வேண்டியதை பார்த்து வைம்மா, நான் காப்பி கலந்து வருகிறேன்” என்று இருவரையும் தனிமையில் விட்டுச்சென்ற தாயை மனதினுள் நன்றாகத் திட்டினாள்.

இயந்திரமாய் இரண்டு பஜ்ஜியையும் தேங்காய் சட்னியையும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் நீட்டியவளிடம்

“முதலில் இனிப்பு கொடுக்கலாமே” என்ற கணவனின் குரலில் ஏதோ ஒன்று மறைந்திருப்பது புரிந்தது

இல்லை இல்லை இந்த காதல் கொண்ட மனமே இப்படித்தான் பைத்தியமாய் யோசிக்கும் என்று அந்த யோசனையை பின் தள்ளி மற்றொரு தட்டில் கேசரி வைத்து அவனிடம் நகர்த்தினாள். சந்தோஷமாக உண்ணத் தொடங்கிய கணவனை, அவன் பார்த்துவிடாத வண்ணம் பார்த்து ரசித்தாள். இவைதானே அவளது வாழ்வில் கடைசிவரை அவள் நினைவுகளில் புதைந்துவிடப் போகிற புகைப்படங்கள். கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

சாப்பிட்டு முடித்தவன் உமா கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு,

“நீயும் காப்பி குடித்துவிட்டு தயாராகிவிடு மகி, நாம் வெளியே செல்லலாம். அத்தை நான் மகிமாவுடன் வெளியே போகலாம் தானே அல்லது வேறு ஏதேனும் முக்கிய வேலை இருக்கிறதா?”

“அதெல்லாம் இல்லை தம்பி, நீங்க போயிட்டு வாங்க” என்று வாயெல்லாம் பல்லாக பேசும் தாயைப் பார்க்க பார்க்க கோபமாக வந்தது.

“அப்போ சீக்கிரமாக கிளம்பு மகி” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் படிகளில் ஏறினான்.

எத்தனை சாமர்த்தியம், அம்மாவின் முன்னிலையில் கூறிவிட்டாள் என்னால் மறுக்க முடியாது அப்படித்தானே. ஒருவேளை தனியே கூட்டிப்போய் யாருதடி இந்தக் குழந்தை என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. உண்மையை சொன்னால் நம்புவாரா, இதற்கு யாரை சாட்சிக்கு அழைக்க முடியும். அவராக அன்று நடந்ததை நினைவில் கொண்டு வந்தால்தான் என் மானம் காக்கப்படும். கடவுளே என்னுடன் துணையிரு என்ற வேண்டுதலுடனேயே அவனோடு காரில் ஏறினாள்.

கார் நேரே ஒரு பெரிய மகப்பேறு மருத்துவமனையில் சென்று நின்றது. உடனே மகிமாவிற்கு அபாய மணி அடித்தது. இப்படி நயமாக பேசி இங்கே அழைத்து வந்தது கருகலைப்பிற்காகவா? அப்படித்தான் இருக்க வேண்டும். அவருடைய குழந்தை என் வயற்றில் வளர்ந்தால் விவாகரத்து கிடைப்பது கொஞ்சம் சிரமமாகிவிடும். புவனாவும் இதை ஏற்க மாட்டாள். குடும்பத்தில் உள்ளவர்களும் குழந்தைக்காகவேனும் முடிவை மாற்றிக் கொள் என்று அவனை மூளைச் சலவை செய்வார்கள்.

இதற்கெல்லாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தாரோ? அய்யோ என் குழந்தை, இதை நான் அழிக்க விடமாட்டேன். அவர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எனக்கு அதில் எந்த கவலையும் இல்லை, என் குழந்தை எனக்கு வேண்டும், என்று மனதினுள் குமுறியவளை,

“இறங்கு மகி” என்ற கிருபாகரனின் குரல் இன்னமும் ஆவேசப்படுத்தியது.

“இல்லை நான் இறங்க மாட்டேன் எனக்கு என் குழந்தை வேண்டும். இதை கலைக்க விடமாட்டேன். முடியாது நான் வர முடியாது” என்று ஆவேசமாய் கத்தியவளை அதிர்ச்சியோடு நோக்கினான் கிருபாகரன். சில நிமிடம் என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. உடனே காரினுள் அமர்ந்து கதவைச் சாத்தி, கண்ணாடிகளை மேலேற்றி, ஏசியை ஆன் செய்தான். அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து அவளிடம் நீட்டினான்.

வேக மூச்சுக்களோடு இரு கைகளையும் வயிற்றின் மேல் வைத்து அழுந்த பிடித்துக் கொண்டு வெளிறிய முகத்துடன் அமர்ந்திருந்தவளை பார்க்க அவனுக்கே பாவமாகத் தான் இருந்தது.

“முதலில் இந்த தண்ணீரைக் குடி” என்றவனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“சரி, தண்ணீர் வேண்டாமென்றால் பரவாயில்லை. முதலில் உன் பயத்தை அகற்று. நம் இங்கு வந்தது கரு கலைப்பிற்காக இல்லை” என்று அவன் முடிக்கும் முன்னே,

“இல்லை, நான் நம்ப மாட்டேன், என் குழந்தை. இது என் குழந்தை. நீங்கள் வேண்டுமானால் உங்கள் புவனாவை மணந்து கொள்ளுங்கள். ஆயிரம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என் வாழ்வின் ஆதாரமான என் குழந்தையை விட்டுவிடுங்கள். தாலி கட்டிய பாவத்திற்காக வேணும் என்னை விட்டுவிடுங்கள்” என்ற அழுகையினுடே வெடித்து குமுறியவள் இறுதியில் மயங்கி சரிந்தாள்.

வாடிய கொடி ஒன்று பற்றுதலுக்காக தன் மேல் சாய்ந்தது போல் தோன்றியது கிருபாகரனுக்கு. எத்தனை மனக்கஷ்டம், உடல்கேடு, வலிகள் எல்லாம் என்னால்தானே. என் இருதயத்தில் இருந்து இம்சித்த புவனாவால் தானே, எல்லாம் விதி என்பதா அல்லது கடவுளின் விளையாட்டு என்பதா? நான் மட்டும் புவனாவை சந்தித்திராமல் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். என் கையில் கிடைத்த மாணிக்கக் கல்லை கூழாங்கல் என்று தவறவிடும் நிலைமை ஏற்பட்டிருக்குமா? இதற்கெல்லாம் எது காரணம், ஒருவேளை ஆன்மீகம் சொல்வது போல் பூர்வ ஜென்ம பாவங்களா? முன்னோரின் பாவச் சுமைகளா? எதுவென்றாலும் புழுவைப் போல் துடிதுடிப்பது இந்த அப்பாவி பெண்ணா? இது என்ன நியாயம் என்று தன்னைதானே கேட்டுக் கொண்டான் கிருபாகரன்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
10

மகிமா மயக்கத்திலிருந்து எழுந்தவுடன் முதலில் பார்த்தது உமாவைத்தான்.

“அம்மா” என்ற விசும்பலுடன் அவரின் தோள்களில் தஞ்சமடைந்தாள். ஒரு தாய்க்கல்லவா தெரியும் தன் குழந்தையைப் பற்றி, அவளை தன்னோடு சேர்த்தணைத்து ஆறுதல்படுத்தினார். சில நொடிகளில் சட்டென விலகியவள்.

“அம்மா அவர்.. அவர்...” என்ற குரலில் அதிக நடுக்கத்தை உணர்ந்த உமா

“தம்பி அப்போதே சென்றுவிட்டார் மகிமா.. ஏதோ முக்கிய வேலையாம்” என்ற அம்மாவின் பதிலில் சற்றே சமாதானமடைந்தாள்.

தன் நிலையை நினைத்து அவளுக்கே பரிதாபமாக இருந்தது. இது போன்ற சமயங்களில் பெண்கள் தன் கணவனுடன் இருக்கவேண்டுமென்று தான் விரும்புவார்கள். ஆனால் நான், அவர் போக வேண்டுமென்று வேண்டுகிறேன். என் இந்த நிலை, என் விரோதிக்கும் வரக்கூடாது.

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. ஆறு மாதங்கள் வேகமாக உருண்டோடியது என்று சொல்ல முடியாது. கவலை அதிகமாக இருந்தால் நேரம் பொறுமையாகத் தான் செல்லும். ஆனால் பொறுமையாக சென்றாலும் நேரம் செல்லத்தானே செய்கிறது. கண்ணீருடனும், கவலையுடனும் ஆறு மாதங்களை தள்ளிவிட்டாள் மகிமா.

ஒவ்வொரு மாதமும் டாக்டர் எத்தனையோ எடுத்துச் சொல்லிவிட்டார்.

“நீ இப்படி உடம்பைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது நல்லதல்ல, உன் குழந்தையைப் பாதிக்கும்”

“அதுதான் நீங்கள் டானிக் கொடுக்கிறீர்களே டாக்டர்”

“மருந்தும் மாத்திரையும் எதுவும் செய்ய முடியாதம்மா, உன் மனம் அதற்கு ஒத்துழைக்கும் வரையில்”

மனதிற்கு என்ன டாக்டர், நான் நன்றாகதான் இருக்கிறேன்

“உன் டெஸ்ட் ரிசல்ட் அப்படிச் சொல்லவில்லையே மகிமா. அத்துடன் என் கண்களும் ஒன்றும் மங்கிவிடவில்லை. இங்கு வரும் அத்தனை பெண்களும் தான் தாய்மையடைந்து விட்டோம் என்ற பூரிப்பில் மாதா மாதம் எடையை ஏற்றிக் கொண்டே போகிறார்கள். நீயானால் எடை குறைந்து கொண்டே போகிறாய். உன் கணவர் எங்கே? நான் அவருடன் பேச வேண்டும்”

கணவர் என்றதும் முகம் வெளிறிவிட்டது மகிமாவிற்கு.

“அவர்.. அவர்’.. வெளிநாட்டில் இருக்கிறார் டாக்டர்”

“வெளிநாட்டிலா? இப்படிப்பட்ட நேரத்தில் மனைவியுடன் இருக்காமல் பணத்தின் பின் ஓடுகிறாரா?”

“ஆ.. ஆ.. ஆமாம் டாக்டர்”

அவளின் படபடப்பும் வெளிறிய முகமும் டாக்டருக்கு எதையோ உணர்த்த

“சரி, நீ போய் உன் அம்மாவை அனுப்பு அவர்களிடம் தனியாக பேச வேண்டும்”

“எதுவானாலும் என்னிடமே சொல்லுங்களேன்”

“எதை யாரிடம் சொல்ல வேண்டுமோ அதை அவர்களிடம் தான் சொல்ல வேண்டும். நீ வெளியே சென்று உன் அம்மாவை உள்ளே அனுப்பு” என்று உத்தரவிடும் தொனியில் டாக்டரம்மா பேசியதும் வேறு வழியின்றி உமாவை உள்ளே அனுப்பினாள் மகிமா.
 

Latest posts

New Threads

Top Bottom