Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93




 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
அத்தியாயம் – 8

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த அழகிய மாளிகைக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு அணிகலனாக மாறி இருந்தது. சுற்றுச்சுவர் கேட்டை ஒட்டி நின்ற இரண்டு சஃபாரி மனிதர்கள் முதல் ஸ்க்ரீனிங்கை முடிப்பார்கள். அடுத்து தோட்டத்தை தாண்டி வீட்டுக்குள் நுழைய இரண்டாவது ஸ்க்ரீனிங் நடக்கும். எல்லாம் சமீபத்தில், நரேன் தாக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட ஏற்பாடு தான்.



அவன் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது முதல் முயற்சி நடந்தது. அதில் அவன் தப்பியது அதிஷ்டத்தின் உபயம். இரண்டாவது முறை அவனுடைய கம்பெனியிலேயே நடந்தது. அப்போது அவனை காத்தது செக்யூரிட்டி ஹெட் நஸீம். இப்போது அந்த வீட்டில் அபிமன்யுவின் அறையில், அவனுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் நரேனின் எதிரிகள் அல்லது எதிரிகளாக இருக்கக் கூடும் என்று சந்தேக பட்டியலில் உள்ளவர்களின் விபரம் அடங்கிய கோப்பு இருந்தது.



கணிக்க முடியாத முகபாவத்துடன் தன்னை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்த முரட்டு மனிதனை குழப்பத்துடன் பார்த்தான் நஸீம்.



"வேற ஏதாவது வேணுமா சார்?" - பார்வையில் கூர்மை… குரலில் பணிவு.



அபிமன்யுவின் புருவம் மேலேறியது. இதழ்கள் ஏளன சிரிப்பில் வளைந்தன. நசீமின் முகம் இறுகியது.



"பிசினஸ் போட்டிக்காக கொலை செய்றதுன்னு இறங்கினா இங்க ஒருத்தனும் பிசினஸ் பண்ண முடியாது இல்ல நஸீம்?" - அவனுடைய நக்கல் குரல் நஸீமின் விசாரணையை மொக்கை என்றது.



நசீமின் தாடை இறுகும் விதத்திலேயே அவன் பற்களை நறநறப்பது தெரிந்தது. அதை சுவாரஸ்யமாக பார்த்த அபிமன்யு, "எவ்வளவு நாளா இந்த வேலையில் இருக்கீங்க?" என்றான்.



"பன்னிரெண்டு வருஷம் டிஃபன்ஸ்ல இருந்திருக்கேன். நாலு வருஷமா இங்கே இருக்கேன்" என்றான்.



‘டிஃபன்ஸ்’ என்கிற வார்த்தையை கேட்டதும் அபிமன்யுவின் முகம் நக்கல் ஏளனத்தை எல்லாம் துறந்து தீவிரமாக மாறியது. இவன், தன் தாயின் கண்டுபிடிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தான். பிறகு எப்படி இவன் அடிப்படை விஷயத்தைக் கூட கோட்டைவிட்டான்! சந்தேகம் எழ அதை அவனிடமே கேட்டான்.



"பார்ல தள்ளியம் யூஸ் பண்ணி இருக்காங்க. இது சாதாரண மனுஷங்க செய்ய கூடிய விஷயமா?" என்றான்.



உண்மைதான், தள்ளியத்திற்கு நிறம்… மனம்… சுவை என்று எந்த குணமும் கிடையாது. உணவில் கலந்தால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கச்சிதமாக ஆளை முடித்துக்கட்டும். நச்சுயியல் சோதனையிலும் பிடிபடாது. அதன் ஆபத்தை உணர்ந்துதான் அரசாங்கம் அந்த இரசாயனத்தை பொதுமக்கள் புழக்கத்திலிருந்து தடை செய்தது.



ஆனால் அதே இரசாயனம் மிக ரகசியமாக நிழல் உலகத்தில் பல முக்கிய நிகழ்வுகளை சாத்தியப்படுத்தி இருந்தது. அது நஸீமுக்கும் தெரியும். ஆனாலும் அதை அவன் கணக்கில் எடுக்கவில்லை.



‘புழக்கத்தில் இல்லாத பொருட்களை பிளாக் மார்க்கெட்டில் வாங்க முடியாதா என்ன!’ - அப்படித்தான் அவன் யோசித்தான்.



"என்னோட இன்ஃபர்மேஷன் வெரி கிளியர். நா யாரையும் மிஸ் பண்ணல சார்! இந்த லிஸ்ட்ல இருக்க யாரோ ஒருத்தர் தான் இதை பண்ணி இருக்கணும்" என்றான் உறுதியாக.



"நோ… சம்திங் மிஸ்ஸிங். நாம இன்னும் டீப் டைவ் பண்ணனும்" என்றான் அபிமன்யு.



அஸீம் சற்று யோசித்தான். பிறகு ஆமோதிப்பாக தலையசைத்தான்.



"கிளம்புங்க" - ஒற்றை வார்த்தையில் அவனை விடுவித்த அபிமன்யு, அவன் கிளம்பியதும் எழுந்து பேஸ்மேட் சென்றான்.



பேஸ்மெண்ட் என்றால் மகல்பாட்னா மாளிகையில் உள்ளது போல் டார்ச்சர் ரூம் அல்ல. இது நரேன் ரசனைக்கு ஏற்றார் போல் அழகாகவும் அடிப்படை வசதிகளோடும் அமைக்கப்பட்டிருந்த பேஸ்மெண்ட். அங்கே குட்டியாக ஒரு பார் கூட இருந்தது. அதற்காகத்தான் கீழே வந்தான் அபிமன்யு.
*****​


"மாம், நீங்க நம்பவே மாட்டீங்க. அபி நிறைய மாறி இருக்கான். இங்க வந்த பிறகு ஒருதரம் கூட ட்ரக் யூஸ் பண்ணல. ஐ ஆம் டாம் ஸூர்" - அன்று இரவு மகனை பற்றி விசாரித்த பிரமிளாவிடம் அடித்து சொன்னான் நரேன்.



"இம்பாஸிபிள். ஹி வாஸ் அடிக்டட்... வருஷ கணக்கா எடுத்திருக்கான். உடனே எல்லாம் விட முடியாது. நீ கவனிச்சிருக்க மாட்ட நரேன்" - நம்ப மறுத்தார் அவர்.



"நோ வே... அபியை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். ஒரு துளி எடுத்தாலும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் போயிடுவான். இங்க வந்து பத்து நாளுக்கு மேல ஆயிடிச்சு. இதுவரை ஒரு தரம் கூட அப்படி எதுவும் ஆகல"



"ஓகே, அவன் இப்போ மெடிகேஷன்ல இருக்கான். அதனால கூட கண்ட்ரோல்ல இருக்கலாம். ஏதாவது பிரச்சனை வந்தா சூழ்நிலை மோசமாகும். அப்போ ரொம்ப அக்ரஸிவா ஆயிடுவான். நீ அலட்சியமா இருக்காத" என்றார்.



நரேன் மனம் அதை ஏற்க மறுத்தது. "நோ மாம், ஐ திங்க் அந்த டாக்டர் கெஸ் பண்ணினது கரெக்ட். அபி வேலையில ரொம்ப இன்வாவ் ஆகி இருக்கான். அதுதான் அவனை சேஞ்ச் பண்ணி இருக்கு. ட்ரக்ஸ், அவனோட பழைய லைஃப்.. இதெல்லாம் யோசிக்க அவனுக்கு இப்போ டைம் இல்ல "



"நீ சொல்றது உண்மையா இருந்தா நல்லது தான்" என்றவர் தொடர்ந்து "அங்க கிளைமேட் எல்லாம் எப்படி இருக்கு?" என்றார்.



அதற்கு நரேன் பதில் சொல்வதற்குள் படிக்கட்டில் யாரோ இறங்கும் ஓசை கேட்டது.



"கால் யு லேட்டர் மாம்" என்று கூறி அலைபேசியை அணைத்து பேக்கெட்டில் போட்டபடி திரும்பினான் நரேன்.



"ஹேய், நீ என்ன இங்க!" - அண்ணனை பார்த்ததும் ஆச்சரியப்பட்டான் நரேன்.



அபிமன்யுவின் புருவம் உயர்ந்தது. "ஏன்? வர கூடாதா?" - தம்பியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கிளாசில் ரிங்க்ஸை ஊற்றினான்.



நரேன் தோளை குலுக்கினான். "ஏன் வர கூடாது?"



"எடுத்துக்கோ" - தம்பியிடம் கிளாஸை நீட்டினான். அவன் வேண்டாம் என்று மறுத்தான்.



"ஏன்? குடிக்கிறது இல்லையா நீ?"



"இப்போ இல்ல"



"எப்போலேருந்து, அந்த பார்ல நடந்த சம்பவத்துக்கு பிறகா?" - விசாரித்தான்.



நரேன் முகத்தில் மிக மெலிதாய் ஒரு மாற்றம். மற்ற யார் கண்களுக்கும் அது தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. ஆனால் அப்போது அவன் எதிரில் அமர்ந்திருப்பவன் அபிமன்யு. ஸ்கேனர் கண்கள்... போட்டோகிராஃபிக் மெமரிக்கு சொந்தக்காரன். விட்டுவிடுவானா என்ன!



நரேன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தான். "அன்னைக்கு என் கூட இருந்த மூணு பேர் செத்துட்டாங்க அபி... அது ஒரு மோசமான நாள்" என்றான்.



"அன்னைக்கும் நீ ட்ரிங்க் பண்ணலையா?" என்றான் அபிமன்யு.



இல்லை என்று தலையசைத்தான் நரேன். "அந்தமான் வந்ததிலிருந்தே நான் ட்ரிங்க் பண்றது இல்ல"



"இன்டரெஸ்டிங்! பின்ன ஏன் பாருக்கு போன?"



"அது ஒரு பிசினஸ் மீட்... அடிக்கடி போவேன். ட்ரிங்ஸ் ஆர்டர் பண்ணுவேன். ஆனா குடிக்கறது இல்ல"



அதன் பிறகு அந்த மீட்டிங்கில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள். என்னென்ன நடந்தது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் பேசினார்கள்.



"உன்ன எப்படி விட்டானுங்க? நீதானே இந்த கேஸ்ல முதல் சஸ்பெக்ட்" என்றான் அபிமன்யு.



"உண்மைதான். ரெண்டு மாசம் ஆச்சு, என்கிட்ட எந்த தப்பும் இல்லைன்னு ப்ரூவ் ஆக" என்று சிரித்தான் நரேன்.


அதன் பிறகு சற்று நேரம் பிரதர்ஸ் டாக் சென்று கொண்டிருந்தது. அப்போது நரேன் கேட்டான், "ஹேய், தட் கேர்ள் ஃப்ரம் கீப்-லாக்... மிருதுளா… எப்படி அந்த பொண்ணு?" என்றான் ஒருவித சிரிப்பும் கண்களில் குறுகுறுப்புமாக.


பக்கென்றிருந்தது அபிமன்யுவுக்கு. அவனுடைய சுவாரஸ்ம் நிறைந்த கண்களும், சிரிப்பும் நெஞ்சுக்குள் நெருப்பை கொட்டியது போல் இருக்க, கையில் இருந்த கிளாஸை ஒரே கல்பில் காலி செய்துவிட்டு, "எப்படின்னா?" என்றான் கடுகடுப்பாக.


'அடுத்து ஒரு வார்த்தை தவறாக வரட்டும்!' - முறைத்தவன் எதிரில் இருப்பவன் தம்பி என்பதை கூட மறந்து விட்டான்.


"ஷி இஸ்..."


"ஷர்ட்-அப்" - அவன் தொடங்குவதற்குள் இவன் முடித்து வைத்தான் அந்த பேச்சை.


மிருதுளாவை பற்றி அவன் நினைப்பதை... பேசுவதை... அவனால் சகிக்க முடியவில்லை. அதுவும் இரவில்... பாரில்... குடித்துக் கொண்டிருக்கும் போது... உள்ளே புகைந்தது.


அண்ணனின் கோபத்தை கண்டு நரேனின் புருவம் சுருங்கியது. "அபி!!!" என்றான் குறும்பு பார்வையோடு.


'இடியட்... எதுக்கு இப்படி பார்க்கறான்!' - இப்போது அவனுக்குள் ஏனோ ஒரு பதட்டம் வர, " ஏய்… அறிவு இல்ல உனக்கு?" என்று குரலை உயர்த்தினான்.


"என்னவோ தப்பா இருக்கே! நீ ஏன் அந்த பொண்ணு நம்ம கேம்பஸ்ல தான் ஒர்க் பண்ணனும்னு ஸ்ட்ரிக்ட்டா இருக்க? எக்ஸ்ட்ரா கேமராஸ் வேற! வாட்ஸ் கோயிங் ஆன் ப்ரோ?"


"ஆர் யு கிரேஸி நரேன்? எனக்கு யார் மேலையும் எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல புரியுதா? நௌ கெட் அவுட்" - அடித்து துரத்தாத குறையாக விரட்டினான்.


"ஓகே... ஓகே... கூல்... உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் " என்று கூறியபடி அவன் எழ, 'வாட் த ஹெல்' - அபிமன்யுவுக்கு நெஞ்சை அடைத்தது.


"வாட் யு மீன் யு ஆர் ஹாப்பி?" என்று உறுமி கொண்டு எழுந்தான்.


நரேன் அலட்சியமாக தோளை குலுக்கினான். "நம் குடும்பத்திற்கு ஒரு பிரமிளா போதும். சிரிக்க கூட தெரியாத இன்னொரு பெண் நமக்கு வேண்டாம்' என்றான் அலட்சியமாக.


அபிமன்யுவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. அதை பார்த்து சத்தமாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் நரேன்.


நரேன் அங்கிருந்து கிளம்பி வெகு நேரம் ஆகிவிட்டது. இன்னமும் கூட அபிமன்யு சமாதானம் ஆகவில்லை.


'இவன் எதற்கு என் மிருதுவை பற்றி நினைக்கிறன்! மிருதுளா என்று உரிமையாக சொல்கிறான்! ஒருவேளை மனதிற்குள் ஆர்வம் இருக்கிறதோ! மறைக்கிறானோ!’ - உள்ளே கொதித்தது.


‘இல்லை… சிரித்தானே! நக்கல் பார்வை பார்த்தானே! ஒருவேளை நம் முகத்தில் தான் ஏதேனும் எழுதி ஒட்டி இருக்கிறதா!' - அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தான். ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.


‘இல்லை.. அவன் மிருதுவை அலட்சியமாக நினைக்கிறான்! அதனால் தான் மிஸ்.மிருதுளா என்று மரியாதையாக குறிப்பிடமல் மிருதுளா என்று மொட்டையாக சொன்னான்! சிரிக்க தெரியாதவள் என்று கூட சொன்னானே! முட்டாள்... உனக்கென்னடா தெரியும் என் தேவதையை பற்றி!' - மீண்டும் வெளியே வந்து இன்னும் இரண்டு பெக் எடுத்துக் கொண்டான். பிறகு மொபைலை எடுத்து அவளுடைய வீடியோ ஒவ்வொன்றாக ஓட விட்டான். ஜூம் செய்து அவள் முகத்தை பார்த்தான். கண்களை பார்த்தான். இதழ்களை பார்த்தான். பார்த்துக் கொண்டே அப்படியே அங்கேயே உறங்கிப் போனான்.
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
அத்தியாயம் – 9

மித்ரா கொடுத்துவிட்டு சென்ற ஃபைலை வாங்கிப் பிரித்துப் பார்த்த மிருதுளா, எரிச்சலுடன் அதை டேபிளில் தூக்கி வீசினாள். பிறகு கோபத்துடன் கேமிராவை திரும்பிப் பார்த்தாள். அந்த பக்கத்திலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் முரட்டு இதழ்களில் சின்ன புன்னகை. கண்களில் சுவாரஸ்யம்.

'அதெப்படி! கரெக்ட்டா இந்த கேமிராவை பார்க்கறா!' என்று ஆச்சரியப்பட்டான். பிறகு, 'தப்ப தப்புன்னு சொன்னா எவ்வளவு கோபம் வருது உனக்கு! ம்ம்ம்! வரட்டும் வரட்டும்.. இன்னும் எவ்வளவு கோபம் வருதுன்னு பார்த்துடலாம்' என்று தனக்குள் சொன்னபடி அவளை பார்வையால் விழுங்கினான்.

கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி சிரமப்பட்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த மிருதுளா, தூக்கி எறிந்த ஃபைலை மீண்டும் கையில் எடுத்தாள்.

பத்து நாட்களாக இந்த ஒரே ஃபைலில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இவள் என்ன கவனமாக திட்டமிட்டு ஒர்க் பிளானை கோட் செய்து அனுப்பினாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடித்து மீண்டும் மீண்டும் அந்த ஃபைல் அவள் கைக்கே வந்தது.

ஒவ்வொரு நாளும் இதைவிட சிறப்பாக செய்ய இதில் ஒன்றும் இல்லை என்று எண்ணித்தான் அவள் மித்ராவிடம் ஃபைலை கொடுப்பாள். ஆனால் மறுநாள் வந்து பார்த்தல் குறைந்தது பத்து கரெக்ஷன்ஸ் இருக்கும். அதை சரி செய்து கொடுத்தால் மீண்டும் அதில் ஒரு பத்து கரெக்ஷன். இப்படியே பத்து நாட்கள் ஓடிவிட்டது.

வேலை திட்டம் மெருகேறி இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவளை ஒரு செல்லா காசு போல், எதற்கும் உபயோகம் இல்லாதவள் போல், அவள் என்ன செய்தாலும் தவறு கண்டு பிடித்தால் எப்படி! அது மட்டும் இல்லாமல் ஒரே வேலையை எத்தனை நாள் தான் திரும்ப திரும்ப செய்வது! நினைக்க நினைக்க பிரஷர் கூடியது அவளுக்கு. நரேன் இப்படியெல்லாம் செய்வான் என்று அவளுக்கு தோன்றவில்லை. அப்படியென்றால் அந்த கேமிராவுக்கு பின்னால் இருந்து அவளை நோட்டமிடுவது யார்! - மீண்டும் ஒரு முறை கேமிராவை திரும்பிப் பார்த்தாள்.

அந்த அழகிய கண்களில் பயம், சிரிப்பு, குறும்பு, காதல் என்று அத்தனை உணர்வுகளையும் அவன் பார்த்து ரசித்திருக்கிறான். இன்று அதே கண்கள் ஒளியிழந்து வெறுமையாய் தன்னை நோக்குவதை காணும் போது மனதை பிழிந்தது அவனுக்கு. அங்கே அவர்களுக்கு குறுக்கே ஒரே சுவர் தான். அதை உடைத்து நொறுக்கி தள்ளிவிட்டு அவளிடம் பாய்ந்து சென்று, அவளை இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

'ஓ காட்… மேன்! ஐ மிஸ் ஹர் சோ மச்!!' - உள்ளே ஒருவன் புலம்பினான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை நரம்புகளிலும் தசைகளிலும் அவளுக்கான ஏக்கம் ஊடுருவி அவனை புரட்டிப்போட்டது.

அவள் இல்லாமல் எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான்! எத்தனை இரவுகள் தூங்க முடியாமல் தவித்திருப்பான்! தனிமையை தாங்க முடியாமல் எத்தனை முறை ஓவர் டோஸ் ஆகும் அளவுக்கு போதை ஏற்றி கொண்டிருப்பான்! இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இதோ... ஒரே கூரையின் கீழ்... அவன் கண்களுக்கு எதிரில்... அவனுடைய தேவதை... அவனுடைய மிருதுளா! வேறு என்ன வேண்டும்? முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

திரையில் தெரியும் அவள் முகத்தை தொட்டு வருடினான். நெஞ்சுக்குள் சில்லென்று ஒரு உணர்வு... .அவளையே தொடுவது போல்... அவள் கன்னத்தை வருடுவது போல்... 'மிருது!!!' - அவன் உதடுகள் முணுமுணுத்தது.

அந்த பக்கம் மிருதுளா தலையை ஒருபக்கம் சாய்த்து நெற்றியை நீவினாள். உடனே இவன் பார்வை கூர்மையானது. அவள் புருவ சுருக்கத்தையும், முக வாட்டத்தையும் கண்டதும், சட்டென்று இண்டர்காமை எடுத்தான்.

சற்று நேரத்தில் மிருதுளா அமர்ந்திருக்கும் அறைக்குள் வெள்ளை சீருடை அணிந்த ஒருவன் கையில் ட்ரேயுடன் நுழைந்தான். அதில் அவளுக்கு விருப்பமான பிளேவர் டீயும், ஸ்நாக்ஸும் இருந்தது.

"தேங்க்ஸ்" என்று அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு டீயை எடுத்து ஒரு மிரடு அருந்தியவள் சட்டென்று நிறுத்தினாள். பிறகு கப்பை முகத்துக்கு அருகில் கொண்டு வந்து வாசம் பிடித்தாள். அவளுக்கு விருப்பமான பிளேவர்... தன்னை மறந்து கண்களை மூடி ரசித்தாள். மனதிற்குள் இதமான ஒரு உணர்வு!

'எத்தனை நாட்களாகிவிட்டது! இப்போது! இங்கே! எப்படி!' - மனதிற்குள் கேள்விகள் எழ மீண்டும் அவள் பார்வை கேமராவின் பக்கம் திரும்பியது.

அவள் கண்களில் தெரிந்த கேள்வி... சந்தேகம்... ஆர்வம்... அனைத்தையும் பார்த்த அபிமன்யுவின் முகத்தில் புன்னகை தோன்றியது. தன்னுடைய இருப்பை அவள் உணர்கிறாளோ என்று தோன்ற உள்ளம் துள்ளியது அவனுக்கு.

அன்று மாலை வேலையை முடித்து பைலை மித்ராவிடம் ஒப்படைத்த போது, "இதுக்கு மேல என்னால இந்த பைல்ல வேலை செய்ய முடியாது. இவ்வளவு தான் என்னோட கெப்பாசிட்டி. சாட்டிஸ்பாக்ஷன் இல்லனா, மிஸ்டர் நரேன்கிட்ட வேற யாரையாவது ஹயர் பண்ணிக்க சொல்லுங்க" என்று கூறிவிட்டு சென்றாள் மிருதுளா. உண்மையில் அவள் மெண்டலி சோர்வாகிவிட்டாள்.
**********​

பினு தாமஸ் - அபிமன்யுவின் பிரைவேட் இன்வஸ்டிகேட்டர். அவன் சம்பளம் வாங்கியது என்னவோ அரசாங்கத்திடம் தான். ஆனால் வேலை பார்த்தது அபிமன்யுவிற்கு. ஆம், அவன் அண்டர்கவரில் ஏழு ஆண்டுகள் தாக்குப்பிடித்ததில் பினு தாமஸுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. நெருக்கடியான நேரங்களில், சரியான தகவலை சேகரித்து, ரகசியமாக அவனிடம் கொண்டு சேர்த்து பல முக்கியமான காரியங்களை கச்சிதமாக நடத்தி முடிக்க உதவியிருக்கிறான். மிகவும் நம்பிக்கையானவன்... விசுவாசமானவன்… நண்பன்… அதனால் தான் அவனை அந்தமானுக்கு வரவழைத்திருந்தான் அபிமன்யு.

"நீ கேட்ட எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு" - மிருதுளாவின் கடந்த ஐந்து ஆண்டு கால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து டாகுமெண்ட் செய்து அபிமன்யுவின் அலுவலகத்திற்கே வந்து அவனுடைய டேபிளில் வைத்தான்.

"ரெண்டு வாரம் கொஞ்சம் ஜாஸ்தி இல்ல இந்த வேலைக்கு?" - அவன் கொடுத்த கோப்பை தன் பக்கம் இழுத்த அபிமன்யுவின் பார்வை பினு தாமஸின் முகத்தை படிக்க முயன்றது.

அவனிடம் எந்த சலனமும் இல்லை. கைகளை பின்னால் கட்டிக் கொண்டு இறுக்கமாக நின்றான்.

"பினு, டூ ஐ ஹேவ் டு ஒர்ரி அபௌட் சம்திங்?" - இனம்புரியாத பதட்டம் அவனை ஆட்கொண்டது.

ஒரு நொடி யோசித்தவன், "இல்ல... எனக்கு அப்படி ஒன்னும் தோணல. ஆனா நீ ஒரு தரம் இந்த பேப்பர்ஸ ரீட் பண்ணிட்டு முடிவு பண்ணு” என்றான்.

அவனுடைய அந்த ஒரு நொடி தயக்கம் அபிமன்யுவின் நெஞ்சுக்குள் சுருக்கென்று குத்த, பார்வை அந்த கோப்பில் விழுந்தது.

அந்த ரிப்போர்ட்டை அவன் தனியாக படிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, “வேற ஏதாவது வேணுன்னா கூப்பிடு. ஐ ஆம் அட் யுவர் சர்வீஸ்" என்று கூறி விடைபெற்றான் பினு.

அதன் பிறகு வெகுநேரம் அபிமன்யுவிடம் அசைவில்லை. அவனால் அந்த ஃபைலை பிரித்து படிக்க முடியவில்லை. பதட்டம்… தயக்கம்… எடுத்து ட்ராயருக்குள் வைத்து பூட்டிவிட்டான்.

நீண்ட நெடு ஐந்து ஆண்டு காலம்! ஆள் மட்டும் அல்ல... அவள் குணத்திலும் மாற்றங்கள் தெரிகிறது. வாழ்க்கையில் கூட வேறு யாரையும் அனுமதித்திருப்பாளோ! - நினைத்த மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் நடுங்கியது அவனுக்கு.

சட்டென்று அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்து பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். உள் நெஞ்சு வறண்டு நுரையீரல் சுருங்கி மூச்சு முட்ட, பேராவலுடன் ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளியேற்றினான். கைகள் தானாக பேண்ட் மற்றும் சட்டை பேக்கெட்டை சிகரெட்டுக்காக துழாவின. எதுவும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும்? அவன் தான் தன்னை அடிமைப்படுத்தும் எதையும் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லையே! அவனுடைய முக்கியமான அடிக்ஷனே அவள் தான்! அவள் இருக்கும் இடத்தில் மற்றவைகளுக்கு என்ன வேலை!

ஆனால் இன்றைய மனநிலை அவனை தடுமாற செய்துவிட்டது. அதை டைவர்ட் செய்ய டோபோமின் ஸ்டுமிலேஷன் வேண்டும். அதற்கு நிகோடின் தேவைப்பட்டது. கிடைக்கவில்லை என்றதும் உள்ளே ஓர் மிருகம் உறும துவங்கியது. அவன் அதை அடக்க போராடிக் கொண்டிருந்த போது, அவனுடைய அறையில் அரவம் கேட்டது. திரும்பி பார்த்தான். நரேன்!!!
***********​

அன்று மித்ரா அலுவலகத்திற்குள் நுழையும் போதே ஜாலி மூட் ஜூலியட்டாகத்தான் நுழைந்தாள். காரணம் ரோமியோ பால்கனியில் நின்று கொண்டிருந்தான். அவளுக்கு முதுகு காட்டித்தான் நின்றான். முகத்தை பார்க்க முடியவில்லை... ஆனாலும் மனதிற்குள் ஜில் ஜில்... காரணம் அன்று அவனும் அவளும் மேச்சிங்... மேட்சிங்... ப்ளூ அண்ட் ப்ளூ...! ஹே ஹேய்!! மனம் துள்ள, 'ஐலசா ஐலசா… ஐஸ் கட்டி கொட்டிச்சா' என்று ரேண்டமாக ஒரு பாடலை முணுமுணுத்தபடி சந்தோஷ குவியலாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

"குட் மார்னிங் அசீம் சார்" - லாபியில் எதிர்ப்பட்ட செக்யூரிட்டி ஹெட்டுக்கு தன்னுடைய கன்டேஜியஸ் சிரிப்பை கடத்திவிட்டு, லிப்ட் கதவு திறப்பதை கண்டு குடுகுடுவென்று ஓடினாள். அது மூடிக்கொள்வதற்குள் இவள் நுழைந்துகொள்ள வேண்டுமே! ஐந்து நிமிடம் தாமதமாக போனால் ஒன்றும் தலை முழுகிவிடாது. ஆனால் ரோமியோவை பார்க்கும் ஆர்வம்!

லிஃப்ட் மேல் தளத்திற்கு வந்ததும் முதல் ஆளாக வெளியேறி, தன்னுடைய கேபினுக்குள் நுழைந்து கைப்பையை அதன் இடத்தில் தூக்கி கடாசிவிட்டு, நேராக ரெஸ்ட்ரூம் சென்று கண்ணாடியில் தன் ஆடை அணிமனைகளை சரிபார்த்துக் கொண்டு வெளியே வந்து, அந்த பறந்து விரிந்த காரிடாரில் நின்றாள். வலது பக்கம் சென்றால் நரேனுடைய அறை... இடது பக்கம் சென்றால் அபிமன்யுவின் அறை... நேராக சென்றால் மிருதுளா வேலை செய்யும் கான்பிரன்ஸ் அறை.

அவளுக்கு மிருதுளாவும் வேண்டாம்... நரேனும் வேண்டாம்... ஓடிச் சென்று ரோமியோவுக்கு சேம்-பின்ச் சொல்ல வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அது முடியாது... அட்லீஸ்ட் ஒரு குட் மார்னிங்? சொல்லலாம்.. ஆனால் அடுத்து அவன் கேட்க போகும் கேள்வி என்ன என்று அவளுக்கு தெரியும். மிருதுளா செய்து கொண்டிருக்கும் வேலையை பற்றி ஸ்டேட்டஸ் கேட்பான். முதல் நாள் சிடுசிடுக்கும் முகத்தோடு அவள் கொடுத்துவிட்டு சென்ற கோப்பு நினைவிற்கு வந்தது.

'ம்ஹும்... இவனுக்கு ரிப்போர்ட் செய்வதற்கு முன் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும்' - இந்த பக்கமும் அந்த பக்கமும் கையை ஆட்டி தனக்குள் பேசிக்கொண்டு, நரேனின் அறை பக்கம் நடையை கட்டினாள்.
*********​

மித்ராவை பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அபிமன்யுவின் அஸிஸ்டண்ட்டாக அவளை அனுப்பிய பிறகு ஓரிரு முறை காரிடலில் பார்த்ததோடு சரி. அவளால் அபிமன்யுவிடம் தாக்குப் பிடிக்க முடியாது என்று இவன் எண்ணி இருக்க அவளோ அவனிடம் வேலை செய்யும் விதத்தை அறிந்து கொண்டு நேக்காக காலம் தள்ளியது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘அபியையே மேனேஜ் பண்ணிட்டா!’ என்று நரேன் மித்ராவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செகரட்டரியிடம் வந்து அவள் பேசிக் கொண்டிருப்பதை கேமிராவில் பார்த்தான் அவன்.

'அட!' - என்று ஆச்சரியப்பட்டான். அதற்குள் செகரட்டரி இண்டர்காமில் அழைத்து மித்ரா அவனை பார்க்க வந்திருப்பதை சொன்னான். அவளை உள்ளே அனுப்பும்படி நரேன் சொல்ல, மித்ரா அவன் எதிரில் வந்து நின்றாள்.

அவளை அமர சொல்லி என்ன விஷயம் என்று கேட்டான். அவ்வளவு நேரமும் மனதிற்குள் அவளை பற்றி யோசித்து எதையும் குரலிலோ முகத்திலோ சிறிதும் காட்டிக்கொள்ளாமல் வெகு பிரஃபஷனலாக நடந்துகொண்டான்.

"அபிமன்யு சார் கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ் எம்பலாயி மிஸ்.மிருதுளாகிட்ட நிறைய ரீ-ஒர்க் டிமாண்ட் பண்றாங்க. ஆனா மிருதுளா கோபப்படறாங்க. இதுக்கு மேல அவங்க ஒர்க் திருப்தியா இல்லைன்னா வேற யாரையாவது ஹயர் பண்ணிக்க சொல்றாங்க" என்றாள்.

நரேனின் புருவம் சுருங்கியது. "என்ன பிரச்சனை?" என்றான் யோசனையுடன்.

"எனக்கு சரியா தெரியல. ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகல" என்றாள்.

'ஐ ஆம் நாட் சர்ப்ரைஸ்ட்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், "சரி, நான் அபிகிட்ட பேசறேன்" என்றான்.

"தேங்க் யூ" என்று எழுந்தாள் மித்ரா.

அவளிடம் இன்னும் பேச்சை வளர்க்க வேண்டும் போல் தோன்ற, "அபி ஆபீஸ் வந்தாச்சா?" என்றான்.

சட்டென்று அவள் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது... முகம் பிரகாசமானது... கண்கள் ஒளிர்ந்தது... "எஸ் எஸ்... வந்தாச்சு..." என்றாள் உற்சாகமாக.

'என்ன ஒரு ஆனந்தம்!' - மனம் கூம்பியது. அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் எழுந்து அவளோடு சேர்ந்து நடந்தான்.

"எவ்வளவு நாள் ஆகுது இங்க ஜாயின் பண்ணி?" - இயல்பாக கேட்டான்.

"அல்மோஸ்ட் ஆறு மாதம்..." - புருவம் ஏறி இறங்கியது... பற்கள் பளீரிட்டன. குரலில் பெருமை.

எதையும் மறைக்க தெரியாத திறந்த புத்தகம் அவள்! நரேன் அவளை ரசித்தான். "குட்" என்று பாராட்டினான். " வேலை எப்படி போகுது?" என்று விசாரித்தான்.

அவள் சற்று யோசித்தாள். 'ஹெச்-ஆர் அசிஸ்டென்ட்டா ஜாயின் பண்ணின என்னை பர்சனல் அசிஸ்டெண்ட்டா மாத்திட்டு வேலை பிடிச்சிருக்கான்னு வேற கேட்பியாடா பம்பரக்கட்ட மண்டையா?' - மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்லாமல், "அமேஸிங்..." என்றாள் மலர்ந்த முகத்தோடு.

'ஓஹோ! அபிக்கிட்ட வேலை செய்றது அமேஸிங்கா! கொஞ்சம் வெயிட் பண்ணு.. அவனுக்கு நல்லா கீ கொடுத்து உன்ன செம்மையா கவனிக்க வைக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டு அவன் அபிமன்யுவின் அறைக்குள் நுழைய, 'பை-பை' என்று அவன் முதுகுக்கு டாடா காட்டிவிட்டு அவள் தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தாள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93

அத்தியாயம் - 10

அவனுக்கு மிருதுளாவை தெரியும்... மிக நன்றாக தெரியும்... அவளுடைய எண்ணங்கள்... உணர்வுகள்... காயங்கள்... கோவங்கள்... அத்தனையும் தெரியும். அதனால் தான் பயந்தான். அவளுடைய கோபம்... சீற்றம் எல்லாம் அவளை தன்னிலை இழக்கச் செய்திருந்தது. தன் வலியை மறக்க... காயத்தை ஆற்ற... ஏன், அவனை மொத்தமாக மனதிலிருந்து துடைத்தெறிய எண்ணி கூட அவள்...! அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை.

அவள் மனதில்... அவனுடைய இடத்தில்… 'நோ...!' - உடல் நடுங்கியது. கண்கள் சிவந்தது... 'இருக்காது... முடியாது... அவளால் முடியாது' - மனம் உருப்போட்டது. ‘ஆனால் பினுவின் முக பாவம் வேறு ஏதோ சொன்னதே! அவனுடைய யோசனை... தயக்கம்… அதில் ஏதோ இருக்கிறது!’ - அந்த எண்ணமே அவனுக்குள் காட்டாற்று வெள்ளத்தை ஆர்பரிக்கச் செய்தது.

நல்லவேளை! அவன் கொடுத்த கோப்பை பிரித்துப் பார்க்காமல் டிராயருக்குள் வைத்து பூட்டிவிட்டு பால்கனிக்கு விரைந்து வந்துவிட்டான். இலையென்றால்... இல்லையென்றால்...! மூச்சு முட்டியது. நிக்கோடினுக்காக சிகரெட்டை சட்டையிலும் பேண்ட் பாக்கெட்டிலும் மாற்றி மாற்றி தேடினான். இருந்தால் தானே கிடைப்பதற்கு! ஃபிரஸ்ட்ரேஷன் அதிகமானது. நடந்து செல்லும் தூரத்தில் தான் கடற்கரை... காற்று சில்லென்று வந்து முகத்தில் மோதியது. ஆனாலும் ஆர்ப்பரிப்பு அடங்கவில்லை. யாரேனும் சிக்கினால் அவர்களை சிதைத்துவிடும் வேகம்... கோபம்... அதே நேரம் அறையில் ஏதோ அரவம் கேட்க திரும்பி பார்த்தான். நரேன்!

"வாட் த ஹெல் ஆர் யு டூயிங் ஹியர்?" - தன் எல்லைக்குள் நுழைந்துவிட்ட மற்றொரு சிங்கத்தை விரட்டும் காட்டு ராஜாவின் கர்ஜனை அது.

நரேன் திகைத்து போய்விட்டான். "பேசணும் அபி... ஆனா என்ன ஆச்சு உனக்கு? ஏன் இவ்வளவு கோவமா இருக்க?" - அவனுடைய கடுமையை புறம்தள்ளி அக்கறையாக கேட்டான்.

அந்த அக்கறை அவனை இன்னும் வெறுப்பேற்றியது. "கெட் அவுட்... நௌ…" - அந்த குரலுக்கு வேறு யாரேனும் அப்போது அந்த இடத்தில் இருந்திருந்தால் நடுங்கி போயிருப்பார்கள். ஆனால் நரேன் அசைந்து கொடுக்கவில்லை. அதே சமயம் அவன் பதில் பேசவும் இல்லை.

கடைசியாக தாயிடம் பேசிய போது, 'அவன் இப்போ மெடிகேஷன்ல இருக்கான். அதனால கூட கண்ட்ரோல்ல இருக்கலாம். ஏதாவது பிரச்சனை வந்தா சூழ்நிலை மோசமாகும். அப்போ ரொம்ப அக்ரஸிவா ஆயிடுவான். நீ அலட்சியமா இருக்காத' என்று அவர் எச்சரித்தது நினைவிற்கு வந்தது. அவனுக்கு உதவி தேவை என்பதை புரிந்து கொண்டான். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அபிமன்யு நரேனை ஒதுக்கிவிட்டு அறைக்குள் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கணினி திரையை ஆராய்ந்தான். கான்பிரன்ஸ் அறை காலியாக இருந்தது. அவள் இன்னும் வரவில்லை. படபடப்பு மேலும் அதிகமாக கையை முறுக்கி மேஜையில் குத்தினான். அது ஹெவி டியூட்டி டெம்பர்ட் கிளாஸ் என்பதால் உடையவில்லை. ஆனால் மேஜையின் மீது இருந்த பொருட்களெல்லாம் அதிர்ந்தன... சில அலகார பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன.

அபிமன்யுவின் திடீர் மனநிலை மாற்றம் நரேனை அச்சுறுத்தியது. அவன் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் விளிம்பில் இருப்பதை புரிந்து கொண்டு, "அபி, ப்ளீஸ் காம் டௌன்" என்று மெல்ல சொன்னான்.

ட்ரக்ஸ் மட்டும் கையில் இருந்திருந்தால் இந்நேரம் காம் டௌன் ஆவதென்ன! காற்றில் மிதந்துக் கொண்டிருந்திருப்பான்! ஆனால் அவன் தேடும் ட்ரக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை. கேமிராக்களை மாற்றி மாற்றி தேடி களைத்து, "வேர் இஸ் ஷி?" என்றான் ஆத்திரத்துடன்.

"யாரு?" - புரியாமல் கேட்டான் நரேன்.
"கீப்-லாக் எம்பலாயி?" - கொதிநிலையில் இருந்த போதும் கூட அவன் மிருதுளாவை பற்றி நரேனிடம் வெளிப்படுத்தவில்லை.

"மிருதுளா?" - நரேன் புருவம் சுருக்கினான். இவன் எதற்காக அந்த பெண்ணிடம் இத்தனை தீவிரம் காட்டுகிறான் என்கிற யோசனை மீண்டும் அவனுக்குள் எழுந்தது.

"எஸ் இடியட்... வேர் இஸ் ஷி?" - அறை கிடுகிடுத்தது.

'ஓ… காட்!' - இப்போது நரேன் தன்னைத்தானே அமைதி படுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

"அபி ப்ளீஸ் லீசன் டு மீ. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் ஆங்கர். கீப்-லாக் ஸ்டாண்டர்ட் நீ எதிர்பார்க்கற அளவுக்கு இல்ல. உன்னால அந்த மிருதுளா கூட ஒர்க் பண்ண முடியலைன்னா விட்டுடலாம். சொல்ல போனா எனக்குமே அந்த பொண்ணு மேல அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்ல. நாம வேற கம்பெனியை கன்சிடர் பண்ணலாம்" என்றான்.

"வாட்!" - அதிர்ந்தான் அபிமன்யு. அதுவரை அவனை ஆக்கிரமித்திருந்த உணர்வுகள் மொத்தமும் சட்டென்று வடிய அவன் மனநிலையும் மாறியது. 'காட்! இவன் மிருதுவ ரீப்லேஸ் பண்ண நினைக்கிறான்!' - மனம் பதற, " சீரியஸ்லி நரேன்!!!" என்றான். அவன் முகத்தை சுளித்த சுளியில், நரேன் குழம்பி போனான்.

"உனக்கு அவங்க ஒர்க்ல திருப்தி இல்லை தானே? அதனால தானே அவ்வளவு கரெக்ஷன் சொன்ன?" என்றான்.

“வாவ்! எவ்வளவு அற்புதமான அனாலிசிஸ்!” – கை தட்டினான்.

நரேன் குழப்பத்துடன் அவனை பார்க்க, "பத்து நாட்களுக்கும் மேல என்னோட இதுல டைம் இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். யாருமே பிரேக் பண்ண முடியாத ஒரு பர்ஃபெக்ட் பிளான் டிசைன் பண்ணி இருக்கேன். இப்போ எல்லாத்தையும் தூக்கி குப்பையிலே போடுன்னு சொல்றியா நீ?" - சீறினான்.
"ஆனா..." - வார்த்தை கிடைக்காமல் தடுமாறினான் நரேன்.

"என்ன ஆனா?" - சிடுசிடுத்தான் அபிமன்யு.

"மிருதுளா இஸ் நாட் ஹேப்பி அபௌட் அஸ்"

"என்ன!"

"நிறைய ரீஒர்க் வருதுன்னு பீல் பண்ணறதா கேள்விப்பட்டேன்"

அபிமன்யுவின் புருவம் உயர்ந்தது.

"இன்னொரு முறை கரெக்ஷன் வந்தா, ஷி வோண்ட் பி வித் அஸ். நம்ம கூட... ஒர்க் பண்ண... மாட்டாங்களாம்!" - அதிருப்தியுடன் கூடிய கோபம் தெரிந்தது அவன் குரலில்.

அபிமன்யுவின் உதடுகள் அழுந்த மூடின. அவனுடைய மென்மையான மிருதுளா இப்போது அடம்பிடிக்கும் ‘க்ராங்கி’ குழந்தையாக மாறிவிட்டாள். அவளுடைய அந்த முரட்டுத்தனம் கூட அவன் ரசனைக்கு தீனி போட்டது. மனதிற்குள் ஏதோ ஒரு இதமான உணர்வு... கூடவே நிறைய பயம்... அவளை நெருங்கவே முடியாதோ என்று...

தான் அந்த அறைக்குள் நுழையும் பொழுது எரிமலை பிழம்பு போல் வெடித்து சிதறியவன் இப்போது அமைதியாக அமர்ந்திருப்பதை வியப்புடன் கண்ட நரேன், "அபி!" என்றான் அவனுடைய மனநிலையை புரிந்துகொள்ள முயன்றபடி.

தன்னை கரிசனத்தோடு நோக்கும் தம்பியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அபிமன்யு. அவனுடைய உணர்வுகள்… எண்ணங்கள்… சிந்தனைகள் அனைத்தும் அவளோடு பின்னிக்கிடக்க, நரேன் அந்த அறையில் தன் எதிரில் நின்று கொண்டிருக்கிறான் என்பதை கூட மறந்தவனாக எழுந்து விறுவிறுவென்று வெளியே நடந்தான்.
*************
ஐந்து ஆண்டுகளுக்கு முன்... செங்கடலில் மிதந்துக் கொண்டிருந்த இந்திய விமானம் தாங்கி கப்பலின் ஏர் விங்கிலிருந்து கிளம்பிய ஈஏ-18ஜி கிரௌலர் ஏர்கிராஃப்ட், வானில் மறு பக்கத்தில் பறந்து கொண்டிருந்த எதிரி போர் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி, அதை சுட்டு வீழ்த்தியது.

அதுவரை இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக 'ஏர் டு லேண்ட்' எனப்படும் வானிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை செலுத்தி பல தாக்குதல் நடத்தி இருக்கிறது. 'ஏர் டு ஏர் ஸ்ட்ரைக்' கூட செய்திருக்கிறது. ஆனால் 'ஏர் டு ஏர் கில்' ஆப்பரேஷன் அதுவே முதல் முறை. அதுமட்டும் அல்ல... அதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அந்த ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்தது, ‘ஸ்ட்ரைக் ஃபைட்டர்’ முப்பத்தி ஐந்தாம் படைப்பிரிவை சேர்ந்த ஒரு பெண் விமானி.

கடற்படையும் விமானப்படையும் இணைந்து நடத்தி முடித்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆப்பரேஷனில் ஈடுபட்டிருந்த அந்த பெண் விமானியின் பெயரையோ அல்லது அவர் செலுத்திய ஏர்கிராஃப்ட்டில் லோட் செய்யப்பட்டிருந்த ஆயுதங்கள் பற்றிய விபரத்தையோ இந்திய அரசு வெளியிடவில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போது விஷயம் லீக் ஆகிவிட்டது.

உளவாளிகளிடமிருந்து, தேசிய சிறப்பு ஆப்பரேஷன் சென்டருக்கு வந்து சேரும், ‘ஹியூம்-இண்ட்’ எனப்படும் ஹியூமன் இன்டெலிஜென்ஸ் தகவல்களின் படி, ஏமன் நாட்டிலிருந்து செயல்படும் ஒரு போராட்ட குழு... அல்லது உலக நாடுகளின் மொழியில் குறிப்பிடுவதென்றால் தீவிரவாத குழு, அந்த பெண் விமானியை குறி வைத்துள்ளது.

கோப்பில் குறிப்பிடப்பட்டிருத்த செய்தியை வாசித்து முடித்துவிட்டு அதை மூடி ஓரமாக வைத்துவிட்டு நிமிர்ந்து, எதிரில் அமர்ந்திருக்கும் பினு தாமஸை நோக்கினார் பிரமிளா.

"இஸ் திஸ் எ சீரியஸ் த்ரெட்?" என்றார்.

‘இந்த அச்சுறுத்தல் முகாந்திரத்திடன் கூடியதா?’ என்று கேட்டவரின் முகத்தில் அச்சம் என்பது மருந்துக்கும் இல்லை. ஆனால் புரோட்டோகால் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பின்பற்றும் தீவிரம் இருந்தது. அவருக்கு தெரியும்... அச்சுறுத்தலில் சீரியஸ் கேஷுவல் என்று எந்த பாகுபாடும் இல்லை. அவர்களை பொறுத்தவரை அச்சுறுத்தல் என்றாலே அது நூல்நுனி அளவே என்றாலும் 'சீரியஸ் த்ரெட்' மட்டுமே. ஆனாலும் சூழ்நிலையின் தீவிரத்தை அறிந்துகொள்ள விரும்பி அந்த கேள்வியை கேட்டார்.

பினு தாமஸ் கண்மூடி திறந்து தலையசைத்து, "எஸ் மேம்" என்று சொன்ன விதத்திலேயே புரிந்துவிட்டது. இனி தான் வெகு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

அதே நேரம் பினு தாமஸின் அலைபேசி ஒலித்தது. அவன் அதை சைலன்ட் செய்துவிட்டு பிரமிளாவின் அடுத்த கேள்விக்கு தயாராகி அவர் முகத்தை பார்த்தான். அலைபேசி மீண்டும் ஒலித்தது.

"அபி" என்றான் பினு.

"பேசு" என்றார் பிரமிளா.

அவன் அழைப்பை ஏற்று, "எனிதிங் எமர்ஜன்ஸி அபி? மீட்டிங் ல இருக்கேன்" என்றான்.

அந்த பக்கத்திலிருந்து என்ன சொன்னானோ! ஓரிரு நொடிகள் இடைவெளிக்கு பிறகு "நோ" என்றான். பிறகு மீண்டும் இன்னொரு முறை, "நோ" என்றான். அடுத்து அழைப்பை துண்டித்துவிட்டு பிரமிளாவின் முகம் பார்த்தான். அதுவரை அவரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இல்லையில்லை... அவன் முகத்தை.... உடல்மொழியை படித்துக் கொண்டிருந்தார்.

"அபி இப்போ டிஃபன்ஸ்ல இல்ல... எந்த மிஷனிலேயும் இன்வால்வ் ஆகல. ஹி இஸ் ஆன் ஹிஸ் பர்சனல் பிஸினஸ்" என்றார். குரல் குற்றம் சாட்டியதோ!

அவன் தன் எல்லைகளை கடந்து அந்தமானுக்கு சென்று நண்பனுக்கு ஏதோ ஒரு வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான் என்று அவர் அறிந்திருந்தார். அதன் பொருட்டே அந்த கண்டிப்பு.

பினு நிதானமாக சொன்னான். "நீங்க கூட எக்ஸ்-ஆஃபீஸர் தானே மேம். த்ரெட் இருக்க தானே செய்யுது. அபிக்கும் அதே நிலைதான். நான் என்னோட டியூட்டியை தான் செய்தேன்" என்றான். அவர் புருவம் மேலேறி கீழிறங்கியது.
************
பினு அந்தமானிலிருந்து கிளம்பி நொய்டா சென்று இருபத்தி நான்கு மணிநேரம் கடந்துவிட்டது. அவன் கொடுத்துவிட்டு சென்ற கோப்பு இன்னும் பூட்டிய ட்ராயருக்குள் தான் இருந்தது. மிருதுளா இரண்டாவது நாளும் அலுவலகத்திற்கு வரவில்லை. அவனால் அலுவலக அறையில் அமர முடியவில்லை. ஊசி முனையில் நிற்பது போன்ற அந்த நிலையை அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாமல், அலைபேசியை எடுத்து பினு தாமஸை அழைத்தான். அழைப்பொலி முழுவதும் சென்று அடங்கியது. அவன் எடுத்து பேசவில்லை. கோபத்துடன் மீண்டும் அழைத்தான். இம்முறை எடுத்தான்.

"எனிதிங் எமர்ஜன்ஸி அபி? மீட்டிங்ல இருக்கேன்".

"நான் கேட்கற கேள்விக்கு சுத்தி வளைக்காம, 'எஸ் ஆர் நோ' ஒரே வார்த்தையில் பதில் சொல்லு.

அந்த புறத்திலிருந்து எந்த பதிலும் இல்லை. இவனுடைய கேள்விக்கான காத்திருக்கிறான் என்று புரிந்தது. அபிமன்யு ஓரிரு நொடிகள் தாமதித்தான். பிறகு, "மிருதுளா லைஃப்ல வேற யாராவது இருக்காங்களா?" என்றான்.

"நோ" - உடனே பதில் வந்தது பினுவிடமிருந்து. ஐஸ் மழையில் நனைந்தது போல் இருந்தது அவனுக்கு. ஓரிரு நொடிகள் அந்த குளுமை உணர்வை அனுபவித்துவிட்டு அடுத்த கேள்வியை கேட்டான்.

"எனக்கு பிறகு வேற யாராவது இருந்திருக்காங்களா?" என்றான்.

அதற்கும், "நோ" என்று உடனே பதில் சொன்னான்.

அபிமன்யுவின் நீண்ட நெடும் நிம்மதி பெருமூச்சு பினு தாமஸின் செவியை எட்டியது. எதிரிகளை கொன்று குவித்து, வெகு கடினமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்த போதெல்லாம் கூட இப்படி ஒரு விடுதலை உணர்வை அவன் அனுபவித்ததில்லை. வெகு நாட்களுக்கு பிறகு ஒருவித களிப்பு... எதையோ வென்றுவிட்ட உணர்வு அவனுக்குள் தோன்றி அவனை உயிர்பெற செய்தது.

"பினு... யு நோ வாட்? எனக்கு தெரியும்.... ஷி காண்ட்... ஷி ஜஸ்ட் காண்ட்..." என்றான்.

அன்று இரவே டின்னர் டேபிளில் அபிமன்யு நரேனிடம் பேசினான். "லெட்ஸ் ஃபைனலைஸ் த டீல் நரேன்"

"டீல்?" - அவன் புரியாமல் அபிமன்யுவை பார்த்தான்.

"கீப்லாக் செக்யூரிட்டி சர்விஸஸ் டீல்" - தெளிவாக சொன்னான்.

நரேனின் கண்களில் சுவாரஸ்யம் கூடியது. "ஆர் யு ஸுர்?" - மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொள்ள விரும்பினான்.

அபிமன்யு தலையசைத்து 'ஆம்' என்றான். கூடவே, "நீயே பர்சனலா கால் பண்ணி சொல்லிடு நரேன்" என்றான்.

"நானா!" - தயங்கினான் நரேன். வழக்கத்தில் இல்லாத ஒன்றை செய்ய சொன்னால் தயங்கத்தானே செய்வான்!

"என்னோட செகரட்டரியை கால் பண்ணி மீட்டிங் அரேஞ் பண்ண சொல்றேன். அங்க பேசிக்கலாம்" என்றான்.

அபிமன்யுவின் முகம் சுருங்கியது. "இந்த ப்ராஜெக்ட்ல நான் தான் டிஸைடிங் அத்தாரிட்டி" என்றான் கடும் கோபத்துடன்.

நரேன் அவனை வெறித்து பார்த்தான். அவனுக்கும் கோபம் வரத்தான் செய்தது. 'அதற்காக நீ என்னை டிக்டேட் செய்ய முடியாது' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டான். இரண்டு நாட்களுக்கு முன் அவனுடைய மனநிலை எட்ஜிற்கு சென்று திரும்பியது நினைவிற்கு வந்தது. எனவே மேலும் அவனுடைய கோபத்தை அதிகரிக்க விரும்பாமல், "ஓகே... ஐ வில் டாக்" என்றான்.

"மீட்டிங் ஆபீஸ்ல வேண்டாம். பிசினஸ் லன்ச் அரேஞ் பண்ணிடு. லெட் இட் பி ஸம் பீச் சைடு ரெஸ்டாரண்ட். டீல் அங்கேயே சைன் பண்ணிக்கலாம்" - மிருதுளாவுக்கு பிடித்த இடம்... கடந்த காலங்களில் அவர்களுக்கு கடற்கரையோடம் பல அனுபவங்கள் உண்டு. கடற்காற்று அவர்களுடைய நெருக்கத்தை பல முறை உறுதி செய்திருக்கிறது. அப்படி ஒரு இடத்தில் தான் அவள் தன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினான்.​
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
அத்தியாயம் - 11

வழக்கம் போல் மித்ரா, சரியான நேரத்திற்கு தான் அலுவலகத்திற்கு வந்தாள். ஆனால் அதற்கு முன்பாகவே அபிமன்யு வந்துவிட்டான். 'பின் தூங்கி முன் எழும் மனைவியை கேள்விப்பட்டிருப்போம்! இவன் பின் போய் முன் வரும் பாஸ்! சரியான பைபாஸ்! எல்லாத்துலயும் ஸ்பீடு... ஆளும் ரொம்ப ரூடு..!' - எண்ணமிட்டுக் கொண்டே காஃபி மேக்கரை உருட்டினாள்.

'நாம என்ன இவனுக்கு செகரட்ரியா இல்ல சர்வரா! காபி ஸ்னாக்லேருந்து பிரேக்ஃபாஸ்ட் லன்ச் வரைக்கும் எல்லாத்தையும் நம்மளே டெலிவரி பண்ண வேண்டியதா இருக்கு! ரூமைவிட்டு வெளியே வரவே மாட்டேங்கிறான்! அப்படி என்னதான் அந்த கம்பியூட்டரில் பார்க்கறான்!' - மண்டையை குடையும் கேள்வியோடு காஃபி கப்பை ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்தவள் அங்கே அவனை காணாமல் திகைத்தாள்.

'எங்க போய்ட்டான்!' - அறை முழுவதும் பார்வையை சுழலவிட்டாள். பெரிய அறைதான். ஆனால் அதில் எங்கும் அவன் இல்லை. ரெஸ்ட்ரூமில் சத்தம் கேட்டது.

'ஓ! உள்ள இருக்கியா!' என்று எண்ணியபடி அவனுடைய மேஜையில் காபி கப்பை வைத்தாள். உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு! அவனுடைய ரகசியத்தை தெரிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம்!

டேபிளை சுற்றிக் கொண்டு முன் பக்கம் வந்து கணினி திரையை பார்த்தாள். அவ்வளவுதான்... கண்கள் தெரித்துவிடுவது போல் விரிய, "அடப்பாவி!" என்றாள் அதிர்ச்சியுடன்.

அதே நொடி, "ஏய்!" என்கிற அதட்டல் குரலில் அறையே அதிர்ந்தது. மித்ரா திடுக்கிட்டு திரும்பினாள்.

நொடி பொழுதில் அவளிடம் பாய்ந்த அபிமன்யு அவளை இழுத்து தூர தள்ளினான். அவள் பறக்கும் தட்டு போல் சுழன்று சென்று சுவர் ஓரமாக இருந்த புக் ஷெல்ஃப் மீது விழுந்தாள். அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்களெல்லாம் தடதடவென்று அவள் மீது சரிய பெருங்குரலெடுத்து அலறினாள் அவள். அது அவன் செவியை எட்டியதாய் கூட தெரியவில்லை. காரணம், அவள் குரலுக்கு மேல் ஓங்கி ஒலித்தது அவன் குரல்.

"ஹூ த ஹெல் ஆர் யு? ஆர் யு ஃபாலோயிங் மீ? நொய்டால என்ன பண்ண ட்ரை பண்ணின? யார் அனுப்பினா உன்ன? என்ன உன்னோட பிளான்?" - இரண்டே எட்டில் அவளிடம் சென்று, கீழே கிடந்தவளை ஒற்றை கையால் தூக்கி சுவற்றில் சாத்தி கழுத்தை பிடித்தான். பொறியில் சிக்கிக் கொண்ட முயல்குட்டி போல் விழி பிதுங்கி போனாள் மித்ரா.

அவள் கனவில் கூட நினைத்திராத சம்பவம் அது. ராட்சசனை கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறாள்! பயங்கர வில்லன்களை திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள்! ஆனால் அந்த கதாபாத்திரங்களெல்லாம், அப்போது அவளுக்கு எதிரில், ஆறடிக்கும் மேல் உயர்ந்து, மலை போல் நின்ற அந்த நிஜ கொடூரனின் நிழலுக்கு கூட சமமில்லை.

மண்டிக் கிடந்த ரோமக்காட்டுக்கு நடுவே உருண்டை அந்த வெறிபிடித்த விழிகளும்... வெடித்துவிடும் அளவுக்கு புடைத்திருந்த நெற்றி நரம்பும்... அழுந்த கடித்த பற்களால் இறுகிவிட்ட தாடையும்... அவன் மனிதனே அல்ல!

மித்ரா எதிர்பற்ற நிலைக்கு சென்றுவிட்டாள். அவள் மூளை ஆக்சிஜன் கிடைக்காமல் அன்கான்ஷியஸ் ஸ்டேட்டிற்கு அவளை தள்ள துவங்கிய அதே நொடி, அவன் முதுகுக்கு பின்னால் படாரென்ற பெரும் சத்தத்துடன் கதவு திறந்தது. கூடவே, "ஹேய்... லீவ் ஹர்" என்று உச்சஸ்தாதியில் ஓங்கி ஒலித்தது அந்த குரல்! அவள் குரல்! அவனுடைய தேவதையின் குரல்!

அதுவரை காட்டாற்று வெள்ளம் போல் கட்டுப்பாடற்று அவனை ஆட்கொண்டிருந்த ஆக்ரோஷம் சரசரவென்று வடிந்தது. இதயத்தின் துடிப்பு, அதிவேக தொடர்வண்டியின் ரிதத்தில் வேகம் எடுத்தது. நெஞ்சு கூடு காலியாகி, கைகள் வலுவிழக்க மித்ரா கந்தல் துணி போல் துவண்டு கீழே விழுந்தாள்.

பெரியபெரிய இருமலும் கேவலுமாக தடைபட்ட மூச்சுக்காற்றை உள்ளிழுக்க அவள் போராடிக் கொண்டிருந்த நேரம், பட்ட மரம் போல் அசையாமல் நின்றான் அவன். வேரூன்றிவிட்ட கால்களை நகர்த்த முடியவில்லை.

மித்ரா முயன்று தன்னை சமன்படுத்திக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். யாரிவன்! சற்று நேரத்திற்கு முன் மனித மிருகமாக மாறியிருந்த அதே அபிமன்யு தானா இவன்! வெறுப்பை மட்டுமே உமிழும் அவன் கண்களில் முதன் முறையாக வலியை கண்டாள். எப்பொழுதும் பாறை போல் இறுகி இருக்கும் அவன் முகம் அப்போது கனிந்திருந்தது. அவளால் நம்ம முடியவில்லை. பார்வையை வாயில்புரம் திருப்பினாள். அங்கே திகைப்பூண்டை மிதித்தது போல் அசைவற்று நின்றாள் மிருதுளா.

அவளுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அபிமன்யுவின் கணினி திரையில் மிருதுளாவின் வீடியோவை பார்த்ததுமே நினைத்தாள். இப்போது நூறு சதம் உறுதியாகிவிட்டது. மீண்டும் அபிமன்யுவின் பக்கம் தன் பரிதாப பார்வையை திருப்பினாள்.

'அட பாவி! ஆள பக்கத்துல வச்சுக்கிட்டேவாடா தேவதாஸ் கெட்டப் போட்ட!' - தட்டுத்தடுமாறி எழுந்தாள். மிருதுளா உள்ளே வந்து அவளை தாங்கி பிடித்தாள்.

கைநீட்டினால் தொட்டுவிடும் தூரத்தில் அவள்... அபிமன்யுவின் நெஞ்சு தடதடத்தது. உடல் நடுங்கியது. பார்வை தானாக அவள் பக்கம் திரும்பியது. அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆச்சர்யம் இல்லை... பதட்டம் இல்லை... ஏன்.. கோபம் கூட இல்லை... அது ஒரு வெற்று பார்வை. யாரோ ஒரு மூன்றாம் மனிதனை பார்க்கும் அறிமுகமற்ற பார்வை!

**********
மிருதுளா தயாரித்து கொடுத்த கோப்பில் இனி பெரிதாக எந்த மாற்றமும் இருக்க போவதில்லை. இருந்த சின்ன சின்ன மாற்றங்களையும் தங்களுடைய தரப்பிலேயே செய்து முடிந்துவிட்டதாகவும்... மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்திட்டுக்கொள்ளலாம் என்றும் நரேன் ரகோத்தமனை அழைத்து சொல்லிவிட்டான். அவருக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. மூழ்கிக் கொண்டிருக்கும் தன் கம்பெனியை இந்த ஒரே ப்ராஜெக்டில் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற ஆனந்தத்துடன் மிருதுளாவை அழைத்து விஷயத்தை சொன்னார்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவருடைய மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவள், நரேன் குறிப்பிட்டிருந்த... அவர்கள் தரப்பில் செய்து முடித்திருந்த அந்த சின்ன சின்ன மாற்றங்கள் என்ன என்பதை, ஒப்பத்தம் கையெழுத்திடுவதற்கு முன் அறிந்துகொள்ள விரும்பினாள். அதனால் தான் அன்று அவள் அவர்களுடைய நிறுவனத்திற்கு வந்திருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்க தேவையில்லாமல் அன்று உடனே நரேனை சந்தித்து பேச முடிந்தது. அவன் குறிப்பிட்ட மாற்றங்கள் எதுவும் அவள் டிசைன் செய்திருந்த செயல் திட்டத்தை பாதிக்க போவதில்லை என்பதை உறுதி செய்து கொண்டு விடைபெற்று கிளம்பினாள்.

அவள் நரேன் அறையிலிருந்து வெளியே வந்து காரிடரில் லிஃப்டை நோக்கி நடக்கும் போது, பெரிதாக தடபுடவென்று பொருட்கள் சிதறுவதும் கூடவே ஒரு பெண்ணின் அலறல் ஒளியும் கேட்க திகைத்துப் போய் நின்றாள். பக்கத்தில் தான்... அதோ அந்த அறையிலிருந்து... இப்போது கனமான ஆண் குரலின் கர்ஜனை! நொடி கூட தாமதிக்காமல் குரல் கேட்ட அறையை நோக்கி ஓடி... தடாலென்று கதவை தள்ளினாள். அது தாழிடப்படாமல் இருக்க, சட்டெட்ன்று திறந்துகொண்டு பெரும் சத்தத்துடன் சுவற்றில் மோதியது. எதிரில் ஒரு பெண்... அவள் குரல்வளை அந்த முரடனின் பிடியில் சிக்கியிருக்க, அவளால் தன் கண்ணெதிரில் நடக்கும் சம்பவத்தை உள்வாங்கக் கூட முடியவில்லை.

இதயம் படபடக்க... உடல் நடுங்க... "ஹேய்... லீவ் ஹர்" என்று கத்தினாள். அடுத்த நொடியே அந்த பெண் கீழே விழுந்தாள். அப்போதுதான் பார்த்தாள். அது மித்ரா!

இப்போது அவள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. முதலில் பதட்டத்தில்... குழப்பத்தில்... அவள் சரியாக பார்க்கவில்லை. ஆனால் இப்போது பார்த்தாள். அவளுக்கு முதுகு காட்டி தான் நின்றான்! மாத கணக்கில் வெட்டாமல் கேசம் ஒழுங்கற்று மண்டி தான் கிடந்தது! அவன் ரசனைக்கு சம்மந்தம் இல்லாத ஒரு பொருந்தாத ஆடையைத்தான் அணிந்திருந்தான்! ஆனாலும் அவள் பார்த்தாள். ஆயிரம் பேருக்கு மத்தியில் நின்றாலும் அவள் கண்களுக்கு தனித்து தெரியும் அந்த உருவத்தை பார்த்தாள்.

அடிவயிறு தடதடத்தது. உள்ளங்காலெல்லாம் கூசியது. உடல் சூடாகி... முகம்... காதுமடலெல்லாம் சிவந்து... நெஞ்சு உலர்ந்து போய்... உள்ளே ஒன்றுமே இல்லாத கூடு போல் உணர்ந்தாள். காற்றில் கரைந்து விட வேண்டும்... மந்திரத்தில் மறைந்துவிட வேண்டும்... பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் போல் தோன்றியது. எதுவும் நடக்கவில்லை. அவளால் நகர கூட முடியவில்லை. கண்ணை கரித்தது. தொண்டையை அடைத்தது... 'நோ... நோ... நோ... நீ பிரேக் டௌன் ஆக கூடாது... நீ உடஞ்சு போக கூடாது... யு ஆர் வெரி ஸ்ட்ராங்... யு ஆர் வெரி ப்ரேவ்... ஃபேஸ் பண்ணு... ஹி காண்ட் ட்ராஷ் யு திஸ் டைம். ஹி காண்ட் பிரேக் யு திஸ் டைம்...' - மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஐந்து ஆண்டு காலம் மந்திரம் சொல்வது போல் உருப்போட்டு தன்னை திடப்படுத்திக் கொண்டிருக்கிறாள். இவள் பழைய மிருதுளா அல்ல... புதியவள்... திடமானவள்... எதையும்... யாரையும் எதிர்கொள்ள கூடியவள். முதுகுத்தண்டு நிமிர்ந்தது... அவள் முகம் மாறியது... கண்களில் கர்வம் மீண்டது...

அங்கே மித்ரா தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றாள். அணிந்திருக்கும் ஹை ஹீல்ஸ் ரிதமிக்காக ஓசை எழுப்ப சற்றும் தயக்கம் இல்லாமல் உள்ளே சென்றாள் மிருதுளா. அவனுக்கு வெகு அருகில்... பக்கத்தில்... அவன் வாசத்தை நுகரும் நெருக்கம்... அப்போதும் தயக்கம் இல்லை. மித்ராவை தாங்கி பிடித்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தை பார்த்தாள்... கண்களை பார்த்தாள்... முகம் தெரியாதவனை பார்ப்பது போல்... மூன்றாம் மனிதனை பார்ப்பது போல்... அவனால் தன்னை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது என்பதை காட்டுவது போல் பார்த்தாள்.

'யு ஆர் நத்திங் டு மீ அர்ஜுன்.... யு... ஆர்... நத்திங் டு மீ....' – மனதிற்குள் சொன்னபடி மித்ராவை அழைத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

"ஆர் யூ ஓகே?" - அக்கறையாக தான் கேட்டாள் மிருதுளா. ஆனால் மனம் அவள் வெறுப்புக்கு உரியவனிடம் சிக்கிக் கொண்டிருக்க குரலில் கடுமை கொப்பளித்தது.

'செத்து பிழச்சு வந்திருக்கேன்! இந்த நேரத்துல கூட இந்த டோன்ல பேசுவியா! யாரும்மா நீ!' - நொந்து போய்விட்டாள் மித்ரா. அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் பிரேக் அடித்து நின்று மிருதுளாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

'இந்த சிடுமூஞ்சியும்... அந்த முரட்டு பீஸும் ஜோடியா!!' - அவர்களால் காதலிக்க கூட முடியுமா என்பதை கற்பனையில் கூட யோசிக்க முடியவில்லை அவளுக்கு. என்னதான் அவள் சமாளித்துக் கொண்டு எழுந்து நடந்தாலும், புயலில் சிக்கி மீண்ட கோடி போல அவள் உடல் கட்டுப்பாட்டை மீறி துவண்டு போக, மிருதுளாவின் பிடியிலிருந்து நழுவினாள்.

"ஏ...ஏய்... " என்று அவளை பிடித்து நிறுத்த முயன்றாள் மிருதுளா.

அதே நேரம் நஸீமுடன் ஏதோ பேசிக் கொண்டே தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த நரேன், தூரத்தில் மித்ரா துவண்டு விழுவதையும், அவளை மிருதுளா பிடித்து நிறுத்த முயல்வதையும் கவனித்துவிட்டு, "நசீம், என்ன நடக்குது அங்க?" என்றான்.

"ஐ டோண்ட் நோ..." என்று சொல்லிக் கொண்டே நசீம் அவர்களிடம் விரைந்து வர, நரேன் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டான். இனம் புரியாத பயம்... தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி அவனை செயல்பட விடாமல் தடுத்தது.

"ஹேய்... வாட்ஸ் ராங் வித் ஹர்?" - குரல் கொடுத்தபடியே அவர்களிடம் ஓடி வந்த நசீம், மித்ராவை தாங்கி பிடித்துக் கொண்டான்.

"அந்த ரூம் லேருந்து கூட்டிட்டு வரேன். கழுத்துல மார்க்ஸ் இருக்கு... மெடிக்கல் ஹெல்ப் வேணும்" – சுருக்கமாக சொன்னாள் மிருதுளா.

என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்ட நசீம் நரேனை திரும்பிப் பார்த்தான். அவனுடைய பார்வை கடத்திய செய்தியை உடனடியாக புரிந்து கொண்டான் நரேன். அவன் பயந்துதான்... உள்ளே சுருக்கென்றது... முகம் செத்துவிட்டது.

கையை உயர்த்தி 'இங்கே கொண்டு வா' என்று சைகை செய்தான். அடுத்த நொடி மித்ராவை கையில் ஏந்தி கொண்டு நரேனின் அறையை நோக்கி நடந்தான் நசீம்.

மிருதுளா தனிமையில் நின்றாள். அதுவரை அவள் இழுத்து பிடித்து வைத்திருந்த திடம் கரைந்தது. மனதை பலவீனம் ஆக்கிரமிக்க துவங்கியது. கண்கள் கண்ணீருக்கு இடம் கொடுத்தன. மெல்ல திரும்பி மூடியிருந்த அந்த கதவை பார்த்தாள். காயம்பட்ட இதயத்தில் மீண்டும் ஒரு ஊசி இறங்கியது. அந்த வலியோடு அங்கிருந்து விலகி நடந்தாள்.​
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
அத்தியாயம் - 12
காலம் - காயத்தை ஆற்றும் அருமருந்தாம்! கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று வரை அதை நம்பிக் கொண்டும் இருந்தாள். ஆனால் இன்று எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஐந்து ஆண்டுகால கடும் பயணம் அவளை கொஞ்சம் கூட மாற்றவில்லை. வெளியே என்ன வேஷமிட்டு ஊரை ஏமாற்றினாலும் உள்ளுக்குள் இன்னும் அவள் அதே பழைய மிருதுளா தான்.

அவளை பெற்றவர்கள் தலை சிதறி மண்ணில் சாய்ந்த காட்சி இன்னும் அவள் கண்ணைவிட்டு விலகவில்லை. அதற்கு காரணமானவனை மறக்கவும் இல்லை... மன்னிக்கவும் இல்லை.

அவள் நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் வலி... வேதனை... ஏமாற்றம்... துரோகம்... வேறு ஒன்றுமே இல்லை. எப்படி தங்குவாள் அந்த சின்ன பெண்! அவளை ஆற்றவோ தேற்றவோ இந்த பறந்து விரிந்த உலகத்தில் அவளுக்கென்று யார் இருக்கிறார்கள்? அவளும் தான் யாருக்காக வாழ வேண்டும்! யாருக்காக இந்த துயரத்தை எல்லாம் தாங்க வேண்டும்! எத்தனையோ முறை வாழ்க்கையின் விளிம்புவரை சென்று மீண்டிருக்கிறாள்.

இந்த துன்பத்தை எல்லாம் அவளுக்கு கொடுக்க அவன் கொஞ்சம் கூட தயங்கவில்லை. அவளால் மீள முடியாது என்று தெரிந்தும் அவளை உடைத்து நொறுக்கியவன், இன்று அவள் கண் எதிரில் வந்து நிற்கிறான்! காயம்பட்டு புரையோடி போன அவள் இதயத்தை மீண்டும் கீறிவிட்டு அவள் துடிப்பதை ரசிக்க வந்திருக்கிறான்! அவளால் தாங்க முடியவில்லை. நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு விம்மி வெடித்து அழுதாள். நெஞ்சுக்குள் பாறை போல் இறுகி போயிருக்கும் துக்கத்தை கரைத்து கண்ணீராக வெளியேற்றி விடும் தவிப்பில் அழுது தீர்த்தாள். நேரம் தான் கரைந்தது. மனபாரம் அப்படியேதான் இருந்தது. அவள் தான் அந்த பாரத்தோடு வாழ பழகியிருந்தாளே! கண்களை துடைத்துக் கொண்டு காரை எடுத்தாள்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் அவளை தேடி வந்தான்! அவள் இருப்பிடத்தை எப்படி கண்டுபிடித்தான்! முன்பு போல அவளிடம் ஏதேனும் டிராக்கிங் டிவைஸ் வைத்திருப்பானோ! மீண்டும் அவளை பிணையாக வைத்து ஏதேனும் சாதிக்க நினைக்கிறானோ! - பதில் இல்லா கேள்விகள் மண்டையை குடைந்தன.

அப்போதுதான் இன்னொரு விஷயமும் அவள் சிந்தனையில் மின்னல் வெட்டியது போல் உரைத்தது. ஆமாம்... மித்ராவோடு என்ன செய்து கொண்டிருந்தான்! கழுத்தை பிடித்து நெரித்து... அவளை... கொல்ல பார்த்தானா! யோசிக்கும் போதே தன்னையும் ஒருமுறை இதே போல் கழுத்தை பிடித்து நெரித்து மூச்சுமுட்ட வைத்தது நினைவிற்கு வந்தது. நின்றிருந்த கண்ணீர் மீண்டும் பெறுக துவங்கியது.

அன்று அவளை எப்படி நம்பவைத்து ஏமாற்றி துரோகம் செய்தானோ... அதே போல் இன்று மித்ராவிடம் நடந்துகொள்கிறானோ! - இந்த சிந்தனை வந்ததும் அவள் மனம் நூறு மடங்கு அதிகமாக வலித்தது. அவன் மாறவில்லை! இன்னும் மாறவில்லை!

நெஞ்சுக்குள் ஈட்டி பாய்வது போல் இருந்தது. அவன் மாறி இருப்பான் என்று நினைத்தாளா! எப்போது அந்த எண்ணம் அவளுக்குள் வந்தது! ஏன் இந்த ஏமாற்றம்! ஏன் இந்த புது வலி! மீண்டும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கினாள். மூச்சு முட்டியது. வீடு போய் சேர முடியும் என்று தோன்றவில்லை.

மேல் மூச்சு வாங்கியபடி கார் கதவை அடித்து சாத்திவிட்டு அதன் மீதே சரிந்து தரையில் அமர்ந்தாள். உள்ளே அலைபேசி அழைக்கும் ஒளி கேட்டது. அவளால் எடுக்க முடியாது. பேச முடியாது.

"என்னம்மா ஆச்சு?" - யாரோ உதவிக்கு வந்தார்கள்.

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதை புரிந்து கொண்டு, "இட்ஸ் ஓகே... ரிலாக்ஸ்... ப்ரீத்... எஸ்... ப்ரீத் வித் மீ" என்று அவளுடைய மூச்சு சீராக உதவினார்கள்.

'அன்று அவனும் இப்படித்தானே செய்தான்!' - மீண்டும் அவன் நியாபகம் வந்தது. மேலும் இருவர் உதவிக்கு வந்தார்கள். அவளுக்கு தண்ணீர் கொடுத்தார்கள். அவளை கை கொடுத்து தூக்கி, கார் சீட்டில் வசதியாக அமர வைத்தார்கள். உதவிக்கு யாரையாவது அழைக்கட்டுமா என்று கேட்டார்கள்.

'யார் இருக்கிறார்கள்!' - அவள் விரக்தியாக உதட்டை பிதுங்கும் போது மீண்டும் அலைபேசி ஒலித்தது. உதவிக்கு இருந்தவர்கள் எடுத்து பேசினார்கள். ரகோத்தமன் தான் அழைத்தார். விஷயம் அவரிடம் சென்று சேர்ந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் நஸீம் அவளை தேடி வந்தான்.
***************

அன்று நஸீம் அலுவலகத்தில் பிஸியாக இருந்தான். கடற்கரையோர ரெஸ்டாரண்டில் டேபிள் புக் செய்யும்படி அபிமன்யு கூற அதை நரேனும் ஒப்புக் கொண்டிருந்தான். டூரிஸ்ட் அதிகம் வரும் ஏரியாக்களில் பாதுகாப்பு பணி சற்று சிரமம் என்பதால் அவன் வெகு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை. எனவே தன்னுடைய உதவியாளன் கொண்டு வந்து கொடுத்திருந்த உணவகங்களின் பட்டியலையும் அதன் கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் வடிகட்டி அனுப்பும் பட்டியல் அபிமன்யுவின் டேபிளுக்கு செல்லும். அவனோ ஒரு நொடியில் பத்து பிழைகளை கண்டுபிடிக்கக் கூடியவன். எனவே வெகு கவனமாக வேலை செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு ரகோத்தமனிடமிருந்து அழைப்பு வந்தது.

அவருடைய அழைப்பை அவன் ஒருபோதும் அலட்சிய படுத்துவதில்லை. எனவே உடனே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான். அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தியில், செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய கார் சீறி பாய்ந்து வந்து மிருதுளாவிடம் நின்றது.

அவன் அங்கே வந்து சேர்ந்த போது, சுற்றியிருந்த பொதுமக்களின் கரிசனத்தாலும் உதவியாலும் மிருதுளா வெகுவாக தன்னிலைக்கு மீண்டிருந்தாள். நஸீமை பார்த்ததும், அவள் முகத்தில் கடுமை ஏறியது.

"வை ஆர் யு ஹியர்?" - எரிச்சலுடன் கேட்டாள்.

அவளுடைய கோபமும் எரிச்சலும் அவனை சங்கடப்படுத்தியது. ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. "ரகோத்தமன் சார் கால் பண்ணி இருந்தார்" என்றான் தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள முயன்றபடி.

அவள் முகம் உடனே கடுமையை தொலைத்து கனிந்தது. பிடிவாதத்துடன் இறுக்கி பிடித்திருந்த அவளுடைய கடுமை கரைந்து கண்களில் கண்ணீர் திரையிட்டது. எத்தனை முயன்றும் இந்த மனம் இளகுவதை தவிர்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளுடைய அந்த போராட்டம் அவனுக்கு வலித்ததோ என்னவோ... நஸீமின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.

"ஐ திங்க் ஷி காட் பேனிக் அட்டாக்" - "நீங்க அவங்களோட ஃபேமிலியா?" - "கொஞ்ச நேரத்துல சீரியலா ஆயிட்டாங்க. பத்திரமா பார்த்திக்கோங்க" என்று பல கேள்விகளையும் ஆலோசனைகளையும் நஸீமிடம் வீசி, கிடைத்த பதிலில் திருப்தியடைந்த பிறகு அவளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு சுற்றிநின்ற கூட்டம் விலக, அவன் அவளிடம் நெருங்கி, "வா?" என்று கை நீட்டினான்.

நீட்டிய அவன் கையை பிடிக்காமல் எழுந்து தன்னுடைய காரில் ஏறி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தாள் மிருதுளா.

அவளை இயலாமையுடன் பார்த்த நஸீம் "யு ஆர் நாட் வெல் மிருதுளா. இப்போ இந்த பிடிவாதம் வேண்டாமே ப்ளீஸ்" என்றான்.

" நான் உங்கள கூப்பிடல. நீங்க என்னை கேர் பண்ணணும்ங்கற அவசியம் இல்ல. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று கடுப்படித்துவிட்டு ஸ்டியரிங்கை பிடித்தவள் தன் கை கட்டுப்பாடில்லாமல் நடுங்குவதை கண்டு திகைத்தாள். அவனும் அப்போதுதான் அவளுடைய நிலை எத்தனை தீவிரமாக உள்ளது என்பதை கவனித்தான்.

"ஓ நோ..." - சட்டென்று காரை சுற்றிக் கொண்டு வந்து, ட்ரைவர் சீட் பக்கம் கதவை திறந்தவன், அவள் கையை பிடித்து, "இறங்கு மிருதுளா" என்று பிடிவாதமாக அவளை வெளியே இறங்க செய்தான்.

அதற்கு மேல் பிடிவாதம் செய்ய அவளுக்கும் விருப்பம் இல்லை. தான் ‘ட்ரைவ்’ செய்யும் நிலையில் இல்லை என்பது தெளிவான பிறகு வறட்டு பிடிவாதம் எதற்கு உதவும்! அமைதியாக அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள்.
**************

மித்ரா முழுதாக நினைவிழக்க வில்லை. ஆனால் செயல்பட முடியாமல் தளர்ந்து துவண்டு போனாள். மிருதுளா கத்தியது. நஸீம் அவளை தூக்கிச் சென்றது... எல்லாம் மங்கலாக... தேய்ந்து போன பழைய டிவிடியில் படம் பார்ப்பது போல் தெரிந்தது. அவளை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. வழியில் நரேன் நின்றான். அவளை தொட்டான்... கன்னத்தில்... பிறகு மங்கலாக தெரிந்த காட்சிகளெல்லாம் இன்னும் மங்கியது... மேலும் மேலும் மங்கி இருள் சூழ்ந்தது... அவ்வளவுதான்... மீண்டும் அவள் கண்விழித்த போது... அதற்கு முன் அவள் பார்த்திடாத... அறிமுகமற்ற ஒரு அறையில்... வசதியான படுக்கையில் இருந்தாள்.

'எங்க இருக்கோம்!' - தனக்குள் கேட்டபடி அறையை விழிகளால் அலைந்தாள்.

"எப்படி இருக்க?" - தலைக்கு பின்னால் இருந்து ஒலித்தது அந்த குரல்.

'யார்ரா அது?' – சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்..." - முன்பக்கம் வந்தான் நரேன். முகம் களையிழந்து போயிருந்தது.

'செத்து பொழச்சது நாம. இவன் எதுக்கு எங்கேயோ செமத்தியா வாங்கின மாதிரி மூஞ்ச வச்சிருக்கான்!' - மனதிற்குள் கமெண்ட் அடித்தவள், மீண்டும் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜன்னலை தவிர, படுக்கை அறையில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இருந்தன. மற்றபடி அங்கே அவர்களை தவிர வேறு யாரும் இல்லை.

'அட கடவுளே!' - பதட்டத்துடன் எழுந்தாள். 'சுரீர்' என்று கழுத்துப் பகுதியில் ஒரு வலி. தடுமாறி மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.

" யு ஓகே? ரொம்ப வலிக்குதா?" - பதறி அவளிடம் நெருங்கினான் நரேன்.

மித்ராவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது. " ஹி அல்மோஸ்ட் கில்ட் மீ" என்றாள் ஆத்திரத்துடன். ஆனால் குரல் தான் எழும்பவில்லை. தொண்டை கட்டிக்கொண்டது போல் கீச்கீச் என்றது.

'அச்சோ...' - கலவரத்துடன் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். என்னவோ அவன் தான் அவளுடைய சேவியர் போல. அந்த பார்வை அவனுக்குள் ஓர் அழகிய உணர்வை ஏற்படுத்தியது.

"ஐ ஆம் சாரி..." என்றான் முகம் கனிந்து.. குரல் குழைந்தது.

“மை வாய்ஸ்!” - பயத்துடன் கேட்டாள்.

"யு ஆர் ஆல்ரைட். டாக்டர் வந்து பார்த்தாங்க. மெடிசன் கொடுத்திருக்காங்க. ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும்" என்றான்.

அவள் முகம் சுருங்கியது. அவனுக்கு சங்கடமாக இருந்தது. மீண்டும் "சாரி மித்ரா... இப்படி நடந்திருக்க கூடாது. ஐ ஆம் ரியலி சாரி" என்றான்.

"அம்மா... ரொம்ப ஸ்ட்ரிக்ட்... மாட்டிக்க போறேன்" - கவலையோடு சொன்னாள். என்னவோ அவளுடைய முக பாவத்தில் அவன் முகத்தில் புன்னகை தோன்றியது.

"நா பேசுறேன். உன் மேல தப்பு இல்லன்னு எக்ஸ்ப்லைன் பண்ணறேன்" என்றான்.

என்னது!' - பதறியவள், 'இவன் நம்மை கோர்த்துவிடாம விடமாட்டான் போலருக்கே!' என்று எண்ணினாள்.

அவள் சட்டென்று தன்னை அப்படி திரும்பி பார்த்ததும், "என்ன ஆச்சு?" என்றான் அவன்.

அவள் தலையை குறுக்காக அசைத்துவிட்டு, "பேச முடியல... நா கிளம்புறேன்" என்று எழுந்தாள்.

"நா டிராப் பண்ணறேன்" என்று அவனும் கூட வர தயாராக, 'ஐயோ... சாமி.. ஆள விடுங்கடா...' என்று நொந்து போய் நினைத்தவள், அதை வெளியே சொல்ல முடியாமல், "வண்டி இருக்கு. நான் போயிக்குவேன்" என்றாள் பட்டென்று.

"நீ மெடிசன் எஃபட்ல இருக்க. தனியா போக முடியாது" - விடாக்கண்டன் என்று நிரூபித்தான் அவன்.

வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி அவனை கன்னாபின்னாவென்று திட்ட வேண்டும் போல் இருந்தது. ‘அவன் என்னடாவென்றால் கழுத்தை நெரித்து கொல்ல பார்க்கிறான். இவன் என்னடாவென்றால் டயலாக் பேசியே டார்ச்சர் பண்றான்! என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க என்னைய?’ - மேல்மூச்சு வாங்க... நுனிநாசி சிவக்க அவனை முறைத்தாள். யாருக்கு வந்த விருந்தோ என்று அவன் அப்படியே நின்றான்.

‘'எனக்குன்னே வருவீங்களாடா!' - உள்ளுக்குள் குமுறினாள்.

அந்த நிலையிலும் அவள் கோபத்தை அவன் மனம் ரசிக்க, "போலாமா?" என்றான் மின்னும் கண்களோடு.

'வேற வழி? வந்து தொலையுறேன்' வாதம் செய்யும் நிலையிலா இருக்கிறாள். ஒன்றும் சொல்ல முடியாமல் அவனோடு கூட நடந்தாள்.

அந்த அறையில் அவள் கண்டது இரண்டு கதவுகள் ஒன்று ரெஸ்ட்ரூம் கதவு. மற்றொன்று வெளியே செல்லும் கதவு. இப்படித்தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அந்த மற்றொரு கதவை திறக்கும் போது அங்கே ஒரு மின்தூக்கியை தான் காண முடிந்தது.

'இது என்னடா கொடுமை! கரண்ட் இல்லன்னா எப்படி வெளியே போறது!' என்கிற யோசனையோடு மின்தூக்கிக்குள் நுழைந்தாள். அது நேராக அவர்களை கராஜுக்கு கொண்டு சேர்ந்தது. அங்கே நான்கைந்து கார்கள் மட்டுமே இருக்க, பிரைவேட் கராஜ் போல் தெரிந்தது.

' இது என்ன ஒரு மார்க்கமான இடமா இருக்கு! இந்த பில்டிங்ல இப்படி ஒரு ரூம்... அதுக்கு இப்படி ஒரு என்ட்ரன்ஸ்!' - அவளுடைய கியூரியாசிட்டி தலைதூக்க, 'இவனோடு வந்தது கூட நல்லதாகிவிட்டது. இல்லையென்றால் இந்த இடத்தையெல்லாம் பார்த்திருக்கவே முடியாதே!' என்கிற எண்ணம் எழுந்தது.

எதிர்பார்த்தது போலவே வீட்டுக்கு வந்ததும் அம்மா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

"என்ன சீக்கிரம் வந்துட்ட? வண்டி எங்க? யார் கார் அது? இன்னிக்கு என்ன பிரச்னையை இழுத்துட்டு வந்த?"

"அது கால் டாக்சி ம்மா. வண்டி ரிப்பேர் ஆயிடிச்சு. சர்வீஸ்க்கு விட்டுருக்கேன்" - தன்னுடைய வழக்கமான சாமர்த்தியத்தை அவரிடம் காட்டினாள். உடனே அவர் மகளின் குரல் மாற்றத்தை கவனித்துவிட்டு என்ன ஆச்சு என்று விசாரித்தார். அதற்கும், "உடம்பு சரியில்லம்மா... அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்று சொல்லி சமாளித்துவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.​
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
ஹாய் கண்மணீஸ் :love::love::love:,
லாஸ்ட் டைம் சர்ப்ரைஸ் எபிஸோடு கொடுத்தேன். ஆனா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ஜாஸ்தி இல்ல. என்ன ஆச்சு? ஸ்டோரி போர் அடிக்குதா? இல்ல நல்லா தான் போகுதா? :unsure:

கரெக்ட்டான ரூட்ல தான் போறேனா தெரியல. இன்டெராக்ஷன் இல்லாம தெரிஞ்சுக்கறதும் கஷ்ட்டம் இல்லையா? ஸோ கெமெண்ட் செக்ஷனை கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க.... :cool::cool:

அடுத்த எபிஸோட் திங்கள் அன்று எதிர்பார்க்கலாம்.

நன்றி... நன்றி... நன்றி...
நித்யா
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
Hey Beautiful Ladies,
The episode will be updated in an hour. Meanwhile, can you guess who this guy is?

 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
அத்தியாயம் - 13

Abhi3.jpg

'எக்ஸ்பெக்ட் த வொர்ஸ்ட்' - கோர்த்தாவில் மட்டும் அல்ல... டிஃபன்ஸ் அகாடமியிலும் அவன் படித்த முதல் பாடம் அதுதான். டபுள் ட்ரைனிங்... அண்டர் கவர் எக்ஸ்பீரியன்ஸ்... மாஃபியா மூளையின் மாஸ்டர் பிளான் எல்லாம் தரைதட்டி நின்ற தருணம் அது. பிளான்-ஏ, பிளான்-பி என்று பல கோண திட்டங்களோடு எப்போதும் தயார்நிலையில் இருக்கக் கூடியவன் தலைகுப்புற கவிழ்ந்த தருணம் என்று கூட சொல்லலாம்.

பல கசப்பான அனுபவங்கள்... விரும்பத்தகாத சம்பவங்கள் அனைத்தையும் கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய தேவதையை நேருக்கு நேர் சந்திக்க போகிறான். அது அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய ஸ்பெஷல் மொமண்ட்!

அந்த சந்திப்பு ஒரு ரம்யமான சூழ்நிலையில் அமைய வேண்டும் என்று விரும்பினான். அதை ஒரு மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டான். கடந்த முறை அவளிடம் காட்ட முடியாத அன்பை... ஆசையை... காதலை... இம்முறை கொட்டித் தீர்த்துவிட வேண்டும்... அவளை ஒரு பூ போல ரசிக்க வேண்டும்... குழந்தை போல கையில் ஏந்தி கொஞ்ச வேண்டும். ஆசை தீர அவள் கையை பிடித்துக் கொண்டு கடற்கரையோரம் நடக்க வேண்டும்... முகத்தை கையில் அள்ளியெடுத்து கண்ணோடு கண்கலங்க வேண்டும்.. நெற்றியோடு நெற்றி முட்ட வேண்டும்... சேர்ந்து சிரிக்க வேண்டும்... கூந்தலை வருட வேண்டும். அவள் வாசத்தை நுகர வேண்டும். இன்னும்... இன்னும்... இன்னும்... மொத்தத்தில் நொடி கூட விலகாமல் அவளோடு பசைபோட்டு ஒட்டிக்கொள்ள வேண்டும்! - மழைமேகத்தை கண்ட பாலைவனம் போல, அவளை தொலைதூரத்தில் கண்டதுமே அவளோடு ஒட்டி உறவாடி... ஒன்றுக்குள் ஒன்றாய்... கலந்து.. கரைந்து... காணாமல் போக தயாரானான்.

ஆனால் அவனுடைய திட்டங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் தகர்த்து தரைமட்டமாக்கினாள் மிருதுளா. அவள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை... ஒரு கதவை திறந்தாள் அவ்வளவுதான். அவனுடைய கனவு கோட்டை உடைந்து நொறுங்கியது.

இம்முறை அவள் தன்னை எப்படி பார்க்க வேண்டும் என்று அவன் விரும்பினானோ, அதற்கு நேர் எதிராக மிக மோசமான சூழ்நிலையில் அவள் அவனை பார்த்தாள். அவனுடைய கோபமும் வன்முறையும் அவள் கண் எதிரில் பட்டவர்த்தனமாகிவிட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவனை அப்படி ஒரு சூழ்நிலையில் பார்த்தும் அவள் ஏன் ரியாக்ட் செய்யவில்லை? கோபம்… அதிர்ச்சி... ஆச்சர்யம்... வருத்தம்... அழுகை... எதுவுமே இல்லையே! அது என்ன பார்வை! ஏதோ ஜடப்பொருளை பார்ப்பது போன்றதொரு வெற்றுப் பார்வை! எப்படி முடிந்தது அவளால்! அந்த அளவுக்கு கூட அவன் அவளை பாதிக்கவில்லையா!

அவளுடைய அருகாமையில் அவன் நிலைகுலைந்து அல்லவா போனான்! திரும்பி பார்க்க கூட முடியாமல் திகைத்து நின்றானே! அதில் ஒரு துளி பாதிப்பு கூட இல்லாமல் எப்படி அவள் கல்லாக மாறினாள்!

ஒருவேளை நம்மை மொத்தமாக மறந்துவிட்டு புது வாழ்க்கைக்கு பழகிவிட்டாளோ! ஆனால் அது எப்படி முடியும்! அவனால் முடியவில்லையே! ஒரு நொடி கூட அவளை மறந்து அவனால் செயல்பட முடியவில்லையே! கடந்த ஐந்தாண்டு காலமும் அவளை நினைத்து நினைத்தே அவன் தன்னை அழித்துக் கொண்டானே! அவளால் மட்டும் எப்படி முடியும்! - அவன் தன்னை தேற்றிக்கொள்ள முயலும் போதே அவள் பார்த்த பார்வை மீண்டும் நினைவிற்கு வந்தது.

மனதில் கொஞ்சமேனும் ஓட்டுதல் இருந்தால் எப்படி அவளால் அப்படி பார்க்க முடியும்! - இன்னொரு மனம் கேள்வி கேட்டது.

அவள் தன்னை ஒதுக்கிவிட்டாள்... அந்நியப் படுத்திவிட்டாள் என்கிற எண்ணம் நெறுஞ்சி முல்லை விழுங்கியது போல் உள்ளே குத்திக் கிழித்தது. அதை ஜீரணிக்க முடியாமல் சென்று சேரில் அமர்ந்தான்.

கணினி திரையில் மிருதுளாவின் உருவம் தெரிந்தது. அவனுடைய அறைக்கு வெளியே மித்ராவை தாங்கி பிடிக்க முயன்று கொண்டிருந்தாள். நஸீம் ஓடி வந்தான். மித்ராவை தூக்கிக் கொண்டு அங்கிருந்து போனான். மிருதுளா அவர்களோடு செல்லவில்லை. அங்கேயே தேங்கி நின்றாள். பிறகு திரும்பி பார்த்தாள். அவனுடைய அறையை தான் பார்த்தாள். அந்த பார்வையில் அவன் எதிர்பார்த்த கோபம்... ஆத்திரம்... அழுகை எல்லாம் இருந்தது... அவளுடைய அந்த ஒற்றை பார்வை பற்றுக்கோளாக மாறி துக்க கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவனை மீட்டெடுத்தது.

**************
மிருதுளா கம்பெனியில் இருந்து வெளியேறி ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அவளுடைய காயத்தின் ஆழத்தையும் கோபத்தின் வீரியத்தையும் எண்ணிப்பார்த்தபடி அமர்ந்திருந்த அபிமன்யு சட்டென்று உடல் விரைத்தான்.

'ஒருவேளை அவள் இங்கிருந்தும் சென்றுவிட்டால்! தன்னை இங்கு பார்த்த பிறகு, அதுவும் அப்படி ஒரு நிலையில் பார்த்த பிறகு... அவளுடைய கோபமும் வெறுப்பும் இன்னும் அதிகமாயிருக்க கூடும். அவனிடமிருந்து விலகி கண்காணாத இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று நிச்சயம் யோசிப்பாள்' - இந்த எண்ணம் தோன்றியதும் கார் சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

அவளை கண்டுபிடித்த முதல் நாளே அவள் வசிக்கும் முகவரியும் அவனுக்கு மனனமாகி இருந்தது. பல முறை அந்த பக்கம் வட்டமடித்தும் இருக்கிறான். இப்போதும் நேராக அங்குதான் சென்றான். பிஸியான நகர்புறத்தை தாண்டி... மரங்கள் அடர்ந்த பகுதியில், ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத குடியிருப்பு ஏரியாவில் அமைந்திருந்தது அந்த அழகிய தனி வீடு. சந்தேகம் வராத அளவில் தூரத்தில், ஏற்கனவே நின்று கொண்டிருந்த இரண்டு கார்களுக்கு மத்தியில் தன்னுடைய காரையும் நிறுத்திவிட்டு காத்திருந்தான். வாசலில் அவளுடைய கார் இல்லை.

'அப்போதே கிளம்பிவிட்டாளே! இன்னும் வீட்டுக்கு வரவில்லையா! அல்லது நாம் இங்கு வருவதற்கு முன்பே பொருட்களை பேக் செய்து கொண்டு பறந்துவிட்டாளா!' - யோசனை எங்கெங்கோ ஓடியது. காத்திருக்க முடியாமல், காரை ஸ்டார்ட் செய்து அந்த ஏரியாவை வட்டமிட்டான். ஏதாவது ஜன்னல்... கதவு திறந்திருக்கிறதா? நடமாட்டம் தெரிகிறதா என்று வீட்டை சுற்றி சுற்றி வந்தான்.

சற்று நேரத்தில் ஒரு கார் வந்து அவளுடைய வீட்டுக்கு எதிரில் நின்றது. மிருதுளா தான் இறங்கினாள். ஆனால் பேஸஞ்சர் சீட்டிலிருந்து. அவன் முகம் இறுகியது. புருவம் சுருங்கியது. 'யார் அது! அவனுடைய மிருதுளாவுக்கு அருகில்!' - பார்வையை கூர்மையாக்கினான். ட்ரைவர் சீட்டிலிருந்து இறங்கிய நஸீம் அவசரமாக காரை சுற்றி கொண்டு வந்து மிருதுளாவை தோளோடு அணைத்து பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

அடிநெஞ்சில் இருந்து பொங்கி எழுந்த ஆத்திரம் கழுத்துவரை நிறைந்துவிட மூச்சு முட்டியது அவனுக்கு. அப்படியே காரை அவன் மீது ஏற்றி கொல்ல வேண்டும் போல் வெறி எழுந்தது. அதற்குள் அங்கே இன்னொரு கார் வந்து நிற்க அதிலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர் இறங்கி வீட்டுக்குள் சென்றார். அவர் முகத்தை பார்த்ததுமே அபிமன்யுவின் முகம் மாறியது.

'ரகோத்தமன்!' - தோற்றத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும், அவனால் அடையாளம் காண முடிந்தது.

மிருதுளா ரகோத்தமன் என்பவருக்கு கீழ் வேலை செய்கிறாள் என்று தெரியும். அவருடைய பெயரில் தான் கீப்-லாக் அக்ரிமெண்ட் சைன் ஆக போகிறது என்றும் தெரியும். ஆனால் அந்த ரகோத்தமன் இவராக இருக்கக் கூடும் என்று அவன் யோசிக்கவில்லை.

சற்று நேரம் கழித்து நஸீம் மற்றும் ரகோத்தமன் இருவரும் வெளியே வந்தார்கள். இருவருக்கும் மிக நெருக்கமான பழக்கம் என்று பார்க்கும் போதே தெரிந்தது. சட்டென்று தன்னுடைய அலைபேசியை எடுத்து ஒரு படம் பிடித்துக் கொண்டான்.

அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை அவர்களுடைய உடல்மொழியை அவதானித்துக் கொண்டிருந்தவன், அதன் பிறகு அந்த புகைப்படத்தை பினு தாமஸுக்கு அனுப்பிவிட்டு அவனை அழைத்தான்.

எடுத்ததுமே அவன் கேட்ட முதல் கேள்வி, "நீ இன்னும் நான் கொடுத்த ஃபைலை படிக்கலையா?" என்பது தான்.
**************

ரகோத்தமன் டிஃபென்ஸில் இருந்த போது ஐந்து ஆண்டுகள் பகவான் இருந்த ரெஜிமெண்ட்டில் தான் இருந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தது பலரும் அறிந்த உண்மை. அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து தான் பகவான் கோர்த்தாவில் முக்கியமான ஆள் என்கிற விஷயம் வெளியே தெரிந்தது. அப்போது அவரோடு தொடர்பில் இருந்த அனைவரும் பல கட்ட விசாரணைக்கு ஆளாக்க பட்டார்கள். அதில் ரகோத்தமனும் ஒருவர். அவருடைய ரெக்காட் க்ளீனாக இருந்ததால், அவரால் தொடர்ந்து ஆர்மியில் வேலை செய்ய முடிந்தது. ஓய்வு பெற்ற பிறகு ‘கீப்-லாக் செக்யூரிட்டி சர்வீசஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார்.

பகவான் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி தெரிந்த பிறகு இவராகத்தான் மிருதுளாவை தேடி கண்டுபிடித்து அவளுக்கு உதவிக்கரம் நீட்டினார். அதை பினு அவனுடைய கோப்பில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டிருந்தான்.

நஸீம் ஆர்மியில் ரகோத்தமனுக்கு கீழ் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வேலை செய்திருக்கிறான். திறமையானவன். அதனால் அவருக்கு மிக நெருக்கமான சிஷ்யனாக மாறியதில் வியப்பு ஏதும் இல்லை.

பிரமிளாவுக்கு நம்பிக்கையான அதிகாரி ஒருவர் நஸீமை ரெக்கமண்ட் செய்ததால் அவர் அவனை நரேனுக்கு பாதுகாப்பு அதிகாரியாக அனுப்பி இருந்தார். இப்போது நஸீமுடைய பரிந்துரையின் பெயரில் தான் ரகோத்தமன் நரேன் கம்பெனியில் என்ட்ரி கொடுத்திருந்தார். மேலோட்டமாக பார்த்தால் இந்த சங்கிலி தொடர் இணைப்புகள் எதிலும் தவறு கண்டுபிடிக்க முடியாது ஆனால் பினு பல இடங்களை அடிகோட்டிருந்தான்.

அதில் முதலாவது, பகவானுக்கும் ரகோத்தமனுக்குமான பழக்கம். இரண்டாவது அவர் தானாக முன்வந்து மிருதுளாவை தேடி கண்டுபிடித்து உதவிகரம் நீட்டியது. மூன்றாவது... மிக முக்கியமானது... நஸீம் மிருதுளாவிடம் காட்டும் நெருக்கத்தை ஊக்குவிப்பது.

ஆம், நஸீமிற்கு மிருதுளாவின் மீது விருப்பம் இருந்தது. அதை ஓரிரு முறை அவளிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறான். அவளுக்கு அதில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இல்லை என்றாலும், அவள் மீது அதீத அக்கறை கொண்டிருக்கும் ரகோத்தமன் அவர்கள் இருவரையும் திருமணத்தில் இணைத்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

படித்து முடித்த கோப்பை மீண்டும் டிராயரில் வைத்துவிட்டு, நரேனை தேடி அவனுடைய அலுவலக அறைக்கு சென்றான் அபிமன்யு.

பினு அடி கோடிட்டிருந்த விஷயங்கள் எல்லாம் சரியானவை தான். ஆனால் அவன் எதிர்பார்த்த அளவுக்கு அபிமன்யு பெரிதாக கலங்கிவிடவில்லை.

ரகோத்தமனுக்கு பகவானோடு பழக்கம் இருந்திருக்கலாம்.. ஆனால் கோர்த்தாவுடனான தொடர்பு உறுதிப்படுத்தப்படாதது. அதை கணக்கில் எடுத்துக் கொண்டானே தவிர கவலைப்படவில்லை. ரகோத்தமனின் விஷயத்தை அவன் பார்த்த கோணம் வேறு விதமாக இருந்தது. மிருதுளாவை அவன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது ஒரு வகையில் அவர் தானே. அதுதான் அவனுக்கு முதன்மையாக பட்டது.

அடுத்து நஸீம் விஷயம். அது கொஞ்சம் உறுத்தத்தான் செய்தது. ஆனால் மிருதுளாவுக்கு ஈடுபாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தது ஆறுதல். அதனால் அதுவும் அவனை பெரிய அளவில் அசைக்கவில்லை.

ஆனால் இன்று எதிர்பாராமல் அவனை அவள் பார்த்துவிட்டு சென்ற பிறகு அடுத்து அவள் என்ன செய்வாள் என்றுதான் அவனால் ஊகிக்க முடியவில்லை. அதை உறுதி செய்து கொள்ளத் தான் இப்போது நரேனை தேடி வந்தான்.

"சார் வெளியே போயிருக்காங்க" என்றான் அவனுடைய செகரட்டரி.

அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, "ஆன் மை வே" என்கிற இறுகிய குரல் பதிலாக வந்தது.

சொன்னபடியே அடுத்த சில நிமிடங்களில் அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்தான் நரேன்.

"நீ இப்போ கோர்த்தா மேனும் இல்ல... இன்டெலிஜெண்ட்ஸ் ஏஜெண்டும் இல்ல... யு ஆர் ஜஸ்ட் எ காமன் மேன்... அது நியாபகம் இருக்கா உனக்கு?" - சாதுவான அவன் முகம் இப்போது மாறியிருந்த விதம் அவனை வேறொரு மனிதனாக காட்டியது.

சட்டென்று சேரை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து, "கம் அகைன்... என்ன சொன்ன? திரும்ப சொல்லு?" என்று அவனிடம் நெருங்கினான் அபிமன்யு. வேட்டை மிருகத்தின் குரூரம் தெரிந்தது அவன் கண்களில்.

நரேனிடம் துளியும் சலனமில்லை. அவன் மீது பதித்த பார்வையை விலக்காமல், "மித்ரா இந்த கம்பெனி எம்பலாயி. யு காண்ட் ட்ரீட் ஹர் லைக் தட்" என்றான்.

"என்னை நோய்டாலேருந்து ஃபாலோ பண்ணினா... என்னோட கம்ப்யூட்டரை ஸ்பை பண்ண ட்ரை பண்ணினா... நா அப்படிதான் ரியாக்ட் பண்ணுவேன். என்ன செய்வ?" என்றான் அபிமன்யு சவால் விடுவது போல.

நரேன் முகத்தில் ஒரு சின்ன அதிர்வு... ஒரே கணம் தான்... மீண்டும் இயல்பு நிலைக்கு மீண்டுவிட்டான். இப்போது அவனிடம் பழைய கோபம் இல்லை. ஆனால் முகத்தில் கண்டிப்பு இருந்தது.

"உனக்கு சந்தேகம் இருந்தா ப்ரூவ் பண்ணு. அதுக்கு முன்னாடி யார் மேலையும் கை வைக்காத" என்றான்.

அபிமன்யு அவனை ஏற இறங்க பார்த்தான். முகத்தில் ஒரு கோணல் புன்னகை. பிறகு ட்ரையரை திறந்து ஒரு டாக்குமெண்டை எடுத்து டேபிளில் போட்டான்.

"நியாபகம் இருக்கா? நீ சைன் பண்ணின டாகுமெண்ட். இந்த காம்ப்ஸ் உள்ள... ம்ஹும்... நீ இருக்க எந்த இடத்துலயும் செக்யூரிட்டி த்ரெட் இருக்குனு எனக்கு தோணினா... நான் என்னோட ஸ்டைல்ல ஒர்க் பண்ணலாம். நீ அந்த பவர் எனக்கு கொடுத்திருக்க" என்றான்.

இப்போது நரேன் மீண்டும் சூடானான். "உன்னோட அட்ராஸிட்டியை நான் அப்ரூவ் பண்ணலாம். ஆனா இந்த கண்ட்ரியோட ப்ளாடி ‘லா’ டாலரேட் பண்ணாது புரியுதா?"

"ஹா... லைக் ஐ கேர்" - தோளை குலுக்கி அலட்சியமாக கூறியபடி மீண்டும் சென்று தன் நாற்காலியில் அமர்ந்தான்.

ஒன்றும் செய்ய முடியாத இயலாமையுடன் பல்லை கடித்தான் நரேன். பிறகு, "ஷி வோண்ட் ஒர்க் ஃபார் யு எனிமோர். உன்னோட உதவிக்கு வேற யாரையாவது அரேஞ் பண்றேன்" என்றான்.

"அப்பவும் என்னுடைய ஒரு கண் அவள் மீது இருக்கும்" என்றான்.

அதை சொல்லும் பொழுது அவன் முகத்தில் இருந்த தீவிரம் நரேனை அச்சுறுத்தியது. அபிமன்யுவின் வார்த்தைகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடியவை அல்ல என்று அவனுக்கு தெரியும்.

அவன் மித்ரா மீது ஒரு கண் வைத்தால் தான் இரண்டு கண்களையும் வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

"பிரதர்... அந்த கீப்-லாக் எம்பலாயி... மிருதுளா... நாளைக்கு மீட்டிங்ல இருக்கணும். அதை மேக் ஸூர் பண்ணிக்கோ" என்றான். உள்ளுக்குள் அவள் வராமல் போய்விடுவாளோ என்கிற அச்சம் இருந்தது. அதிலும் அந்த நஸீம் விஷயம் தெரிந்த பிறகு, அவளிடமிருந்து தள்ளி இருக்கும் பொறுமை சிறிதும் இல்லை அவனுக்கு.​
 
Last edited:

Latest posts

New Threads

Top Bottom