Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதினோறாம் அத்தியாயம்

"என்னைக் கேட்டால்....."

ராகவன் சொன்னதற்குப் பதிலாக எதுவும் சொல்வதற்கு அங்கிருந்தவர்களில் யாருக்கும் நா எழவில்லை. அவனும் பதிலுக்குக் காத்திராமல் வீட்டின் பின்கட்டை நோக்கி விடுவிடு என்று நடந்து சென்றான். அவன் மறைந்த பிறகு காமாட்சி அம்மாள் கிட்டாவய்யரைப் பார்த்து, "நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். ராகவனை வழிக்குக் கொண்டு வருவதற்கு நான் ஆயிற்று. எல்லாவற்றுக்கும் நீங்கள் பம்பாய்க்குப் போய்விட்டுச் சீக்கிரம் திரும்பி வந்து சேருங்கள்!" என்றாள்.

ராகவன், 'நான் போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன்!' என்று சொன்னது கிட்டாவய்யருக்கு மிக்க சந்தோஷம் அளித்தது. பெண்ணை மாப்பிள்ளைக்குக் காட்டுவதற்காகப் பட்டணம் அழைத்துக்கொண்டு வரும் காரியம் அவருக்குப் பிடிக்கவேயில்லை. அது நம்முடைய கௌரவத்துக்குக் குறைவு என்று கருதினார். அதோடு தம் அருமைப் புதல்வியை அம்மாதிரி சந்தைக்கு அழைத்துக் கொண்டு போவது போல அழைத்துப் போய், யாரோ முன்பின் தெரியாத பையன் அவளைப் பார்த்து, 'வேண்டும்' 'வேண்டாம்' என்று சொல்ல இடங் கொடுக்கும் விஷயம் அவர் மனதுக்குப் பெரிதும் கஷ்டம் தந்திருந்தது. ஆகவே இப்போது ராகவன் 'நானே இவர்கள், ஊருக்குப் போய் பெண்ணைப் பார்க்கிறேன்' என்று சொன்னதை நினைத்துக் களிப்படைந்தார்.

காமாட்சி அம்மாள் கூறியதற்குப் பதிலாக உற்சாகமான குரலில் "ஆகட்டும்; பம்பாய்க்குப் போய்விட்டுக் கூடிய சீக்கிரம் திரும்பி விடுகிறேன். சௌகரியப்பட்டால் மாப்பிள்ளை என் பின்னோடேயே வரலாம்; நானே அழைத்துப் போகிறேன்!" என்றார். "அதற்குள்ளாகவே மாப்பிள்ளை உறவு கொண்டாட ஆரம்பித்து விட்டாயா, கிட்டா? ஓஹோஹோ!" என்றார் சுப்பய்யர். "அதற்கென்ன? ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அருள் இருந்தால் அவ்விதமே நடந்து விடுகிறது. இவர் என்னைக் கூப்பிட்ட சமயம் நான் பூஜை அறையில் படங்களுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். இவர் 'காமாட்சி' என்று என்னைக் கூப்பிட்ட போது ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துக்குச் சாத்தியிருந்த பூமாலையிலேயிருந்து ஒரு செண்பகப் புஷ்பம் உதிர்ந்தது. நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டேன்" என்றாள் காமாட்சி அம்மாள்.

"அப்படியானால், இந்தக் கல்யாணம் நடந்த மாதிரியேதான்! சுப்பய்யரே, இவ்வளவு நாளாக ராகவனுக்குப் பெண் கொடுக்கிறேன் என்று எத்தனைப்பேர் இந்த வீட்டைத் தேடி வந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கும். அவ்வளவு பேரையும் தட்டிக் கழித்து வந்தவள் இந்த மகராஜிதான். எப்போது இவளுடைய வாயினாலேயே 'இந்தக் கலியாணம் நடக்கும்' என்று சொல்லிவிட்டாளோ, அப்போது கட்டாயம் கலியாணம் நடந்தே தீரும்" என்றார் சாஸ்திரிகள். "எல்லாம் ஒரு நல்லதற்காகத்தான் இருக்கும்! பரஸ்பரம் இவ்வளவு நல்ல சம்பந்தம் வாய்க்க வேண்டும் என்று பிராப்தம் இருக்கிறபோது, வேறு இடத்தில் கலியாணம் எப்படி நிச்சயமாகும்? கிட்டா கூடத்தான் போன வருஷ மெல்லாம் நூறு வரன் பார்த்தான். ஒன்றும் மனதுக்குத் திருப்திகரமாயில்லை என்று தள்ளிவிட்டான். இந்த வீட்டுக்குள் கால் வைத்ததும் எப்படியோ கிட்டாவின் மனதுக்குப் பிடித்துவிட்டது. தங்களிடம் ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும், சாஸ்திரிகளே! நம்ப அம்மாளிடத்திலும் அப்படியே ஒரு தெய்வீகம் இருக்கிறது."

"ஓய் சுப்பய்யரே! பலே பேர்வழியாயிருக்கிறீரே! இப்படியெல்லாம் முகஸ்துதி செய்து என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று உத்தேசம்? அம்மாளிடம் ஏதாவது இன்ஷியூரன்ஸுக்கு அடி போட்டிருக்கிறீரோ?" என்று சாஸ்திரிகள் ஆரம்பித்ததும் சுப்பய்யர் பயந்து போனார். பேச்சின் நடுவில் குறுக்கிட்டு, "தயவு செய்து மன்னிக்க வேண்டும், எனக்கு ஆபீஸுக்கு நேரமாகி விட்டது. இப்போது நாங்கள் போய் வருகிறோம்; இனிமேலேதான் அடிக்கடி சந்திக்க வேண்டியதாய் இருக்குமே?" என்று சொல்லிக் கொண்டே சுப்பய்யர் எழுந்ததும், கிட்டாவய்யரும் எழுந்தார். அவர்களை வீட்டு வாசல் வரையில் கொண்டு போய் விடுவதற்காகச் சாஸ்திரிகளும் எழுந்தார். அந்தச் சமயத்தில் காந்திக் குல்லா தரித்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் நாலு பேர் திடுதிடுவென்று வீட்டுக்கு உள்ளே நுழைந்து வந்தார்கள். "யார் நீங்கள்?" என்று சாஸ்திரிகள் திடுக்கிட்டுக் கேட்டார். "ஸார்! பீஹார் பூகம்ப நிதிக்காகப் பணம் வசூலிக்கிறோம். தங்களால் இயன்றதைக் கொடுக்க வேண்டும்" என்று அந்தத் தொண்டர்களிலே ஒருவர் கூறினார்.

சாஸ்திரிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "பீஹாராவது பூகம்பமாவது? அதெல்லாம் இங்கு ஒன்றும் கொடுப்பதற்கில்லை!" என்று கண்டிப்பாகக் கூறினார். "அப்படிக் கண்டிப்பாகச் சொல்லக் கூடாது! லட்சக்கணக்கான ஜனங்கள் வீடு இழந்து சொத்து இழந்து...." "உயிரை இழந்து தவிக்கிறார்கள்! எல்லாம் தெரியும். அப்பா! என்னை நிரட்சரகுட்சி என்பதாக நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ பூகம்பத்துக்கு மறுநாளே நான் பாபு ராஜேந்திர பிரஸாதுக்குத் தந்தி மணியார்டரில் என்னுடைய நன்கொடையை அனுப்பிவிட்டேன்! நீங்கள் போய் வேறு யாராவது நாலு பேரைப் பாருங்கள்! வீண் பொழுது போக்க வேண்டாம்!" என்றார் சாஸ்திரிகள்.

"நாலு பேரைப் பார்ப்பதற்கு நீங்கள் சொல்ல வேண்டுமாக்கும்? " முணுமுணுத்துக் கொண்டே தொண்டர்கள் சென்றார்கள். "பார்த்தீர்கள் அல்லவா; ஒரு நிமிஷம் கதவைத் திறந்து வைத்தால் போதும்! பூகம்பம், எரிமலை, புயற் காற்று, காங்கிரஸ் கான்பரன்ஸ் என்று சொல்லிக் கொண்டு யாராவது யாசகம் கேட்க வந்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால் அங்கே உற்சவம், இங்கே பஜனை என்று கையில் சந்தாப் புத்தகத்துடன் வந்து விடுகிறார்கள். கொடுத்துக் கொடுத்து எனக்கும் சலித்துப் போய்விட்டது. மேலும் நான் என்ன பண்ணையாரா? ஜமீன்தாரா? நன்செய் நிலம் பொன்னாக விளைகிறதா! ஏதோ வெள்ளைக்கார கவர்ன்மெண்டின் புண்ணியத்திலே மாதம் பிறந்ததும் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புண்ணியவான்கள் சுயராஜ்யம் சம்பாதித்து விட்டால், நம்ப பென்ஷன் வாயிலே மண் விழுந்தாலும் விழுந்துவிடும்! கராச்சி காங்கிரஸிலே மாதம் ஐந்நூறு ரூபாய்க்கு மேலே யாருக்கும் சம்பளமே கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறார்களாம்! தெரியுமோ, இல்லையா?

அப்படியே நாம் இந்தத் தொண்டர்களிடம் ஏதாவது பணம் கொடுக்கிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள்.கொடுத்த பணம் பீஹார் நிதிக்கு நேரே போய்ச் சேருகிறதென்று நிச்சயம் உண்டா? என்னைக் கேட்டால் பூகம்பம் போன்ற விஷயங்களில் மனிதன் தலையிடவே கூடாது என்று சொல்வேன். பகவானே பார்த்துச் செய்திருக்கிற காரியத்தில் சுண்டைக்காய் மனுஷன் தலையிட்டு என்ன செய்துவிட முடியும் ஸார்....? "இவ்விதம் பேசிக்கொண்டே பத்மலோசன சாஸ்திரிகள் கிட்டாவய்யரையும் சுப்பய்யரையும் அழைத்துக் கொண்டு வாசற்பக்கம் போனார். அவர்கள் வீட்டை விட்டு இறங்கிய உடனே கதவைச் சாத்திப் பலமாகத் தாளிட்டு விட்டுத் திரும்பினார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பன்னிரண்டாம் அத்தியாயம்

கராச்சியில் நடந்தது

'தேவி ஸதன'த்தின் பின்கட்டில் ஒரு புறத்தில் சமையல் அறையும் அதற்கு எதிர்ப்புறத்தில் காமாட்சி அம்மாளின் பூஜை அறையும் இரண்டுக்கும் மத்தியில் விசாலமான கூடமும் இருந்தன. கூடத்தின் நடுவில் ஊஞ்சல் போட்டிருந்தது. ராகவன் பின்கட்டுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து தாயாரின் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கால்கள் கீழே தரையைத் தொட்டதும், லேசாக ஊஞ்சல் ஆடியது. ஊஞ்சலுடன் அவனுடைய உள்ளமும் ஊசலாடியது.

கடலில் மூழ்கிச் சாகப் போகிறவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு நிமிஷத்தில் வெள்ளித் திரையில் தோன்றுவது போல் மனக்கண் முன்னால் தோன்றி மறையும் என்று சொல்வார்கள். அம்மாதிரி இச்சமயம் ராகவனுடைய மனக்கண் முன்னால் சிற்சில சம்பவங்கள் அதிக வேகமாகத் தோன்றின. காரிருள் சூழ்ந்திருக்கும் வேளையில் மின்னல் வெளிச்சத்தில் தோன்றி மறையும் காட்சிகளைப்போல் அச்சம்பவங்கள் தோன்றி மறைந்தன. புதுடில்லியில் பொக்கிஷ இலாகாவின் தலைமை உத்தியோ கஸ்தரைப் பார்த்துவிட்டு ராகவன் ஊருக்குத் திரும்ப எண்ணியபோது கராச்சி வழியாகப் போவது என்று தீர்மானித்தான். கராச்சியில் அந்த வருஷம் காங்கிரஸ் மகாசபை கூடியது. அனேகமாக இந்திய இளைஞர்கள் எல்லாரையும் போல் ராகவன் கலாசாலை மாணாக் கனாயிருந்த போது தேசீய சுதந்திரத்தில் ஆவேசம் கொண்டிருந்தவன், அதோடு சமூக சீர்த்திருத்தப் பற்றும் கொண்டிருந்தான். இந்திய தேசத்திலிருந்து சாதி - சமய வேற்றுமைகளையெல்லாம் ஒழித்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆகையால், புது டெல்லிக்குப் போன காரியம் ஆன பிறகு கராச்சிக்குச் சென்று காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் பார்வையாளனாக ஆஜராகி நடவடிக்கைகளைக் கவனித்தான். அப்படிக் கவனித்ததினால் அவனுக்கு நம் தேசீயத் தலைவர்களைப் பற்றிய விஷயத்தில் மதிப்பு அதிகமாகவில்லை. "உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது? அமெரிக்க நாட்டில் போர்டு மோட்டார் தொழிற்சாலையில் நிமிஷத்துக்கு முன்னூறு மோட்டார்கள் உற்பத்தி யாகின்றன! இப்பேர்ப்பட்ட இயந்திர யுகத்தில் இவர்கள் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே! மணிக்கு 300 கஜம் நூல் நூற்பதாமே! கடவுளே! இப்படிப்பட்ட தலைவர்களால் இந்தியா எந்தக் காலத்தில் முன்னேறப் போகிறது?" என்று எண்ணி அலுப்படைந்தான்.

பிறகு இயந்திர யுகத்திற்கு அறிகுறியாக அந்த நாளில் கருதப்பட்ட ஆகாச விமானம் பார்க்கச் சென்றான். அப்போது கராச்சியில் புதிதாக ஆகாச விமானக் கூடம் கட்டியிருந்தார்கள். வாடகை விமானங்கள் வந்திருந்தன. ஐந்து ரூபாய் கொடுத்தால் ஆகாச விமானத்தில் ஐந்து நிமிஷ பிரயாணம் செய்யலாம். விமானம் ஆகாசத்தில் இரண்டாயிரம் அடி உயரம் விர்ரென்று ஏறிக் கராச்சி நகரைச் சுற்றி ஒரு தடவை வட்டமிட்டுவிட்டு மறுபடி கீழே வந்து இறங்கும்.

விமான கூடத்துக்குப் போனபோது ராகவன் விமானத்தில் ஏறுவது என்னும் நிச்சயத்தோடு போகவில்லை ஏதோ பார்க்கலாம் என்று போனான். அங்கே போன பிறகு கட்டாயம் ஏறியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. ஏனெனில், ஆகாச விமானம் ஏறுவதையும் இறங்குவதையும் வேடிக்கை பார்ப்பதற்காக ஜனங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் ராகவனுக்குப் பக்கத்தில் மூன்று வடநாட்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிலே ஒரு ஸ்திரீ கொஞ்சம் வயதானவள். மற்ற இருவரும் இளம் பெண்கள். ஒருத்தி கட்டையாயும் குட்டையாயும் மாநிறமாயும் இருந்தாள். அவளை இலட்சணமானவள் என்று சொல்ல முடியாது. இன்னொரு பெண்....? ஆகா....? அவளை வர்ணிப்பது சாத்தியமில்லை. கார்த்திகை மாதத்துப் பூரண சந்திரனுடைய சந்தன நிறக் கிரணங்கள் ஒரு மந்திரவாதியினுடைய மந்திரத்தினால் பெண் உருக்கொண்டது போலத் தோன்றினாள். பனிக் காலத்துக் காலை நேரத்தில் புல் நுனியில் நிற்கும் முத்துப் பனித்துளிகள் காலைச் சூரிய கிரணங்களினால் ஒளி பெற்றுத் திகழ்வதுபோல் அவளுடைய கண் விழிகள் பிரகாசித்தன. பாலகோபாலன் அன்னை யசோதையிடம் வெண்ணெய் கேட்பதற்காகத் தவழ்ந்து செல்லும்போது அவனுடைய அறையில் கட்டியிருந்த கிண்கிணிகள் ஒலிப்பது போல் அந்தப் பெண்ணின் குரல் ஒலித்தது.

அத்தகைய போதை தரும் இன்பக் குரலில் அப்பெண், "நீங்கள் மதராஸ்காரரா?" என்று ஆங்கில பாஷையில் கேட்ட போது, ராகவன் மிக ரஸித்த ஷெல்லி - கீட்ஸ் கவிதைகளைக் காட்டிலும் இனிமை வாய்ந்த கவிதையாக அந்த வார்த்தைகள் அவன் செவியில் தொனித்தன. தன்னைத்தான் அப்பெண் கேட்கிறாள் என்பதை ராகவன் உணர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. அதற்கு அவன் பதில் சொல்லியப் பிறகு, "நீங்கள் விமானத்தில் ஏறிப் பார்க்கப் போகிறீர்களா?" என்று அப்பெண் கேட்டாள். "ஆம்; அதற்காகத்தான் வந்திருக்கிறேன்!" என்று ராகவன் பளிச்சென்று பதில் சொல்லி, "நீங்களும் விமானம் ஏறுவதற்காக வந்தீர்களா?" என்று கேட்டான் "நீங்கள் முதலில் ஏறிப் போய்விட்டு வந்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்" என்றாள் அந்தப் பெண்.

அவள் பக்கத்திலே இருந்த இன்னொரு பெண் அவள் காதில் ஏதோ முணுமுணுக்கவே இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். அவ்விதம் கலந்தெழுந்த சிரிப்பில் ராகவனுடன் பேசிய பெண்ணின் சிரிப்பொலி மட்டும் தனிப்படப் பிரிந்து ராகவன் காதில் விழுந்து அவனைப் பரவசப்படுத்தியது. அந்த இரு பெண்களுக்குமிடையே தோற்றத்திலும், மேனி நிறத்திலும், குரலிலும் எத்தனை வித்தியாசம் என்று ராகவன் எண்ணி எண்ணி வியந்தான். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து இருவரில் அழகியின் பெயர் தாரிணி என்றும், இன்னொருத்தியின் பெயர் நிருபமா என்றும் தெரிந்து கொண்டான். மற்றும் அவர்கள் கராச்சி காங்கிரஸில் ஸ்திரீ தொண்டர் படையில் சேர்ந்து சேவை செய்வதற்கு வந்தவர்கள் என்றும், காங்கிரஸ் கூட்டம் முடிந்த பிறகு தன்னைப் போலவே அவர்களும் ஊர் சுற்றிப் பார்க்கிறார்கள் என்றும் அறிந்தான்.

ராகவன் ஆகாச விமானத்தில் ஏறி வானத்தில் வட்டமிட்ட போதெல்லாம் அவனுடைய நினைவு மட்டும் பூமியிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. சரியாகச் சொல்வதாயிருந்தால், கீழே பூமியில் நின்ற தாரிணியைச் சுற்றிச் சுற்றி அவன் மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். விமானம் இறங்கியதும் ராகவனுடைய கண்கள் அந்த மூன்று பெண்களும் நின்ற இடத்தைத் தேடின. ஒரு கணம் அவர்கள் அங்குக் காணப்படாதிருக்கவே அவனுக்கு உலகமே இருண்டுவிட்டதாகத் தோன்றியது. சற்றுத் தூரத்தில் இன்னொரு இடத்தில் அவர்கள் நிற்பதைப் பார்த்தவுடனே உலகில் மறுபடியும் சூரியன் பிரகாசித்தது. ராகவன் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றான். தாரிணி ஆவல் ததும்பிய முகத்துடனே அவனைப் பார்த்து, "எப்படி இருந்தது?" என்று கேட்டாள்.

ராகவன் தன்னுடைய மனது பூமியிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்னும் உண்மையைச் சொல்லாமல் வானப் பிரயாணத்தின் சுகங்களைப் பற்றி, 'அற்புதரசம்' தோன்ற வர்ணித்தான். "நீங்களும் ஏறப்போகிறீர்கள் அல்லவா?" என்று கேட்டான். தாரிணி ஏமாற்றம் தொனித்த குரலில், "இல்லை; இவர்கள் இருவரும் பயப்படுகிறார்கள்! என்னையும் போகக் கூடாது என்கிறார்கள்!" என்றாள். "பயப்பட வேண்டிய "அவசியமே இல்லை; ஸீட்டுகள் அதிகம் உள்ள விமானமாயிருந்தால் நானே உங்களை அழைத்துப் போவேன். ஆனால் இந்த விமானத்தில் ஒரே ஸீட்டுதான் இருக்கிறது. விமானியைத் தவிர ஒருவர்தான் ஏறலாம்!" என்று ராகவனும் ஏமாற்றமான குரலில் கூறினான். "சரி இனிமேலாவது நாம் போகலாமல்லவா?" என்று மற்றொரு பெண் கேட்க, தாரிணி ராகவனைப் பார்த்து, "நாங்கள் போகவேண்டும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள். சற்றுத் தூரத்திலுள்ள டாக்ஸி காரில் அவர்கள் ஏறும்போது, தான் நின்ற திசையைத் தாரிணி பார்த்ததாக ராகவனுக்குப் பிரமை உண்டாயிற்று. பிரமை என்று ஏன் கருத வேண்டும்? உண்மையாகவே இருக்கலாமல்லவா?

ஆகாச விமானம் ஏறிய அநுபவத்துக்குப் பிறகு ராகவன் கப்பல் பிரயாண அநுபவத்தையும் பெறுவதற்கு விரும்பினான். கராச்சி காங்கிரஸுக்கு வந்திருந்தவர்களிலே பலர் கடல் மார்க்கமாகப் பம்பாய்க்குச் சென்றார்கள். ராகவனும் ஸிந்தியா கம்பெனிக்குச் சொந்தமான கப்பல் ஒன்றிற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏறினான். அந்தக் கப்பல் கடலோரமாக மட்டும் ஓட்டுவதற்குரிய சிறிய கப்பல். அதிக மூட்டை முடிச்சுக்கள் பெட்டி படுக்கைகள் உணவுக் கூடைகள் ஆகியவற்றுடன் சகசகவென்று ஜனங்கள் நெருங்கி நிறைந்திருந்தார்கள். அந்த வடக்கத்தி ஜனங்களின் அழுக்குத் துணிகளையும் ஆபாச வழக்கங்களையும் 'ஆஓ' என்ற கூச்சல்களையும் ராகவன் பார்த்துவிட்டு, 'கடவுளே! இதில் எப்படி முப்பத்தெட்டு மணி நேரம் பொழுது போக்குவது?' என்பதாக எரிச்சல் அடைந்தான். ஆனால் கப்பல், புறப்படும் சமயத்தில் அவசரமாகப் படகில் வந்து ஏணியில் ஏறிக் கப்பலில் இறங்கிய மூன்று ஸ்திரீகளைக் கண்டதும் ராகவனுடைய மனோபாவம் அடியோடு மாறிவிட்டது. அந்த ஆபாசமான அழுக்கு நிறைந்த பழைய ஓட்டைக் கப்பல் தட்சணமே கந்தர்வ பூமியாக மாறிவிட்டது. ராகவனைக் கப்பலில் பார்த்ததும் தாரிணிக்கும் ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டதென்று அவளுடைய முகபாவத்திலிருந்து தெரிய வந்தது. அந்த ஆச்சரியத்திலே சந்தோஷம் கலந்திருந்தது என்பது ராகவனுடைய பார்வைக்குத் தெரியாமல் போகவில்லை.

ராகவன் வடநாட்டுக்கு யாத்திரை வந்தது அதுதான் முதல் தடவை தாரிணியோ பம்பாய் வாசி. எனவே வடநாட்டைப் பற்றியும், வடநாட்டின் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் தாரிணியிடம் ராகவன் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தன. தாரிணியும் சென்னை மாகாணத்தைப் பற்றிப் பல விஷயங்கள் ராகவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினாள். ஆகவே இருவருக்கும் பேசுவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. ஆனால் பேசுவதற்கு விஷயங்கள் அவர்களுக்கு அவ்வளவு அவசியமாகத் தேவையில்லைதான்! அருகில் இருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமென்ற மனோ நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆனால் கப்பலில் எல்லாப் பக்கங்களிலேயும் நெருங்கியிருந்த மற்றவர்களுடைய கவனத்தைக் கவராதிருக்கும் பொருட்டு அவர்கள் ஏதோ போலப் பாசாங்கு செய்ய வேண்டியிருந்தது. இத்தகைய சம்பாஷணைப் பாசாங்குகளின் போது தாரிணிக்குத் தமிழ்ப் பேசத் தெரியும் என்பதை அறிந்து ராகவன் அளவற்ற வியப்பும் களிப்பும் அடைந்தான்.

கப்பலில் தாரிணியையும் அவளுடைய தோழியையும் போல் இன்னும் சில தேச சேவிகைகளும் இருந்தார்கள். தாரிணியின் அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே அவள் பக்கத்தில் இருந்தாள் போலத் தோன்றிய நிருபமாவுக்குத் தேக சௌந்தரியம் இல்லாவிட்டாலும் இனிமையான குரல் இருந்தது. அவளுடைய தலைமையில் மற்ற தேச சேவிகைகளும் சேர்ந்து ஹிந்தி தேசிய கீதங்களைப் பாடினார்கள். அப்போது மிகப் பிரபலமாயிருந்த, "ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா!" என்ற தேசியக் கொடி கீதத்தைப் பாடினார்கள். பிரபல உருது கவியான ஸர் முகம்மது இக்பால் பாடிய, "ஸாரே ஜஹா (ன்ஸே) அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா!" என்றும் தேசிய கீதத்தையும் பாடினார்கள். இந்த கீதங்கள் எல்லாம் தெய்வ லோகத்தில் கந்தர்வ கன்னிகைகள் பாடும் கீதங்களாகவே ராகவனுக்குத் தோன்றின. இரண்டாவது கீதத்தின் பொருளைத் தாரிணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். முதல் அடியின் பொருள், "உலகிலுள்ள எல்லாத் தேசங்களிலும் நம்முடைய ஹிந்து ஸ்தானம் சிறந்தது" என்று அறிந்ததும் "சந்தேகம் என்ன? உன்னைப் போன்ற பெண்கள் இந்த நாட்டில் பிறந்திருக்கும் போது உலகில் வேறு எந்தத் தேசம் இந்தியாவுக்கு இணையாக முடியும்?" என்று சொன்னான். அதைக் கேட்டுத் தாரிணி கன்னங்கள் குழியப் புன்னகை செய்த தோற்றம் ராகவன் மனக்கண் முன்னால் இன்றைக்கும் அழியா வர்ணத்தில் தீட்டிய அஜந்தா சித்திரத்தைப் போல் நின்றது.

இவையெல்லாம் நடந்து இப்போது ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகின்றன. இதற்கிடையில் தாரிணிக்கும் ராகவனுக்கும் அடிக்கடி கடிதம் போய் வந்து கொண்டிருந்தது. அவை காளிதாசனும் கம்பரும் தாகூரும் பாரதியும் பெருமைப்படும்படியான கவிதை உணர்ச்சி ததும்பிய கடிதங்கள். கடிதங்கள் எழுதுவதோடு அவர்கள் நின்றுவிடவில்லை. ராகவன் ஒருமுறை பம்பாய்க்குப் போயி ருந்தான். தாரிணி அவனை எலிபெண்டாத் தீவுக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்குள்ள குகைச் சிற்ப அற்புதங்களையெல்லாம் காட்டினாள். பிறகு தாரிணி டில்லிக்குப் போனாள். புது டில்லியில் உத்தியோகம் பார்த்த ராகவன் டில்லி மாநகரின் பழைய கோட்டை கொத்தளங்கள் பிரம்மாண்டமான மசூதிகள், மொகலாய மன்னர்களின் ஒப்பற்ற அழகு வாய்ந்த பளிங்குக்கல் அரண் மனைகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாரிணியை அழைத்துப் போய்க் காட்டினான். அப்போதெல்லாம் அவர்கள் கேவலம் இந்த மண்ணுலகின் கடினமான கட்டாந்தரையில் காலால் நடக்கவில்லை. கற்பனை உலகத்தில் ஆனந்த சாகரத்தின் அலைகளின் மேலாக மிதந்து கொண்டே சென்றார்கள்.

அப்புறம் ஆக்ராவில் உள்ள உலக அற்புதங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குப் போவது பற்றி இருவரும் யோசித்தார்கள். அதைச் சில காலம் தள்ளிப் போடலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். யார் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்ற பயத்துக்கு இடமில்லாமல் இருவரும் சதிபதிகளாய்க் கைக்கோத்துகொண்டு போய் ஷாஜஹானின் ஒப்பற்ற காதற் கனவைப் பார்த்துவர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். சுருங்கச் சொன்னால், இந்த மூன்று வருஷ காலமும் ராகவனுடைய வாழ்க்கையில் கிருத யுகமாக இருந்தது. ஒருபுறம் அவன் உத்யோக ஏணியில் படிப்படியாக ஏறிக்கொண் டிருந்தான். அவனுடைய இலாகாத் தலைவரான பெரியதுரை அவனைத் தம்முடன் சீமைக்கு அழைத்து போவதாகச் சொல்லியிருந்தார். மற்றொரு புறத்தில் ராகவன் காதல் மயமான கற்பனைக் கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். இந்த நாட்களில் அவன் எந்தப் பக்கம் பார்த்தாலும் தங்க ரேகைகள் படர்ந்திருக்கக் கண்டான். இடைவிடாமல் அவனுடைய செவிகளில் தேவலோகத்து மதுர வீணாகானம் பாய்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தான். பழைய டில்லி நகரத்தின் குப்பையும் கூளமும் துர்நாற்றமும் நிறைந்த குறுகிய வீதிகளில் அவன் நடந்தபோது கூட மொகலாய மன்னர்கள் உபயோகித்த ஒப்பற்ற அத்தரின் வாசனையையும் அந்த மன்னர்களின் அந்தப்புர நாரீமணிகள் குளித்த பன்னீரின் நறுமணத்தையும் கற்பனை உணர்ச்சியால் முகர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.

ஆகா! அந்த இன்பத்துக்கெல்லாம் இப்போது முடிவு வந்து விட்டதே? எப்படி வந்தது? எதனால் வந்தது? நம்பவே முடியவில்லையே? வந்திருந்தவர்கள் விடை பெற்றுச் சென்ற பிறகு காமாட்சி அம்மாள் பின்கட்டுக்கு வந்தாள். கவலை தோய்ந்த முகத்துடன் ராகவன் ஊஞ்சலில் உட்கார்ந்து இலேசாக ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஊஞ்சலுக்கு எதிரே சுவர் ஓரமாகக் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். தன்னுடைய வருகையை எதிர்பார்த்துத் தன் மகன் அங்கே காத்துக் கொண்டிருக்கிறான் என்பது காமாட்சி அம்மாளின் உள் மனதுக்கு முன்னமே தெரிந்திருந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதின்மூன்றாம் அத்தியாயம்

வானம் இடிந்தது

ராகவன் பேசத் தொடங்குவதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. பேசத் தொடங்கிய போதும் அவன் கேட்க விரும்பியதை உடனே கேட்க முடியவில்லை, பேச்சை வேறுவிதமாக ஆரம்பித்தான். "அம்மா! அங்கே யார்? இன்னும் யாராவது வந்திருக்கிறார்களா? புதிய குரல் ஏதோ கேட்டதே?" என்றான். "ஆமாண்டா, அப்பா! பீஹாரிலே பூகம்பம் என்று சொல்லி உண்டிப் பெட்டியுடனே நாலு காந்தி குல்லாக்காரர்கள் வந்தார்கள். உன்னுடைய அப்பாவின் சமாசாரம் தெரியாதா? ஒன்றும் கிடையாது என்று சொல்லி விரட்டிஅடித்து விட்டார்!" இதைக் கேட்டதும் ராகவனுடைய முகம் சுருங்கியதைக் காமாட்சிஅம்மாள் கவனித்தாள். ஆனால், அதன் காரணத்தை அவள் நன்கு உணர முடியவில்லை.

சற்று நேரம் ராகவன் முகத்தைத் தொங்கப் போட்ட வண்ணம் இருந்தான். காமாட்சி அம்மாளும் அவனிடம் பேச்சுக் கொடுக்கப் பயந்து கொண்டு சும்மா இருந்தாள். ராகவன் இன்னும் ஏதோ முக்கியமான விஷயம் தன்னைக் கேட்கப் போகிறான் என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக்குத் தெரிந்திருந்தது. திடீரென்று அவன் தலையைத் தூக்கித் தாயாரை ஏறிட்டுப் பார்த்து "அம்மா! அப்பாவும் நீயுமாகச் சேர்ந்து என் வாழ்க்கையைக் கெடுத்துவிட உத்தேசித்திருக்கிறீர்களா? நான் சந்தோஷமா யிருப்பதில் உங்கள் இருவருக்கும் இஷ்டமில்லையா? அப்பாவின் சுயநலம் உன்னையும் பிடித்துக் கொண்டு விட்டதா?" என்று ஆத்திரம் நிறைந்த குரலில் கேட்டான்.

இந்த மாதிரி கேள்வியைத்தான் காமாட்சி அம்மாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால், அவள் கொஞ்சமும் பரபரப்பு அடையாமல் சாவதானமாகப் பதில் சொன்னாள். "ராகவா! உன் அப்பா சமாசாரத்தை என்னிடம் கேட்காதே! என்னைப் பொறுத்த வரையில் கேள், சொல்கிறேன். உன்னைப் பெற்ற நாளிலிருந்து இன்று வரையில் இந்த இருபத்து நாலு வருஷமாக, உன்னுடைய சந்தோஷத்தைத் தவிர எனக்கு வேறு எண்ணமே கிடையாது! உன்னுடைய சந்தோஷத்துக்காக என்னை என்ன செய்ய வேண்டும் என்கிறாயோ, அதைச் சொல்! கிணற்றில் விழச் சொன்னால் விழுந்து விடுகிறேன்; விஷத்தைக் குடிக்கச் சொல்கிறாயா, குடித்து விடுகிறேன். ஆனால், உன்னுடைய சந்தோஷத்தைக் காட்டிலும் என்னுடைய சுய நன்மையைப் பெரியதாகக் கருதுகிறேன் என்று மட்டும் சொல்லாதேடா அப்பா!" என்று கூறிவிட்டுக் கண்களில் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்து கொண்டாள்.

மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராகவனைப் பார்த்துக் காமாட்சி அம்மாள் மறுபடியும், "எதனால் அப்படிக் கேட்டாய், ராகவா? என்ன காரணத்தினால் என்னைச் சுயநலக்காரி என்று சொல்கிறாய்?" என்றாள். "எனக்குப் பிடிக்காத பெண்ணை என் தலையில் கட்டிவிடப் பார்க்கிறாயே, அதற்குப் பெயர் என்ன....?" என்று ராகவன் பொருமினான். "ராகவா! நீ எவ்வளவோ தெரிந்தவன்; படிப்பிலே இணையில்லையென்று இந்திய தேசமெங்கும் பேர் வாங்கியவன். அப்படியிருந்தும் என் பேரில் தவறான பழியைப் போடுகிறாயே? உனக்குப் பிடிக்காத பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளும்படி நான் சொல்வேனா? எப்போதாவது சொன்னதுண்டா? உன் அப்பா எது வேணுமானாலும் சொல்வார். வீடு கட்டிய கடன் பாக்கியை அடைப்பதற்கு உனக்கு வரும் வரதட்சணையை அவர் நம்பியிருக்கிறார். அவர் பணத்தாசை பிடித்தவர், ஆனால் நான் எப்போதாவது பணத்தைப் பெரிதாய் நினைத்ததுண்டா? ராகவா வாசலில் வருகிற பிச்சைக்காரப் பெண்ணை உனக்குப் பிடித்திருந்து அவளைக் கலியாணம் பண்ணிக்கொள்கிறேன் என்று நீ சொன்னால், அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். செல்வச் சீமானுடைய பெண்ணைக் காட்டிலும் அவளை அதிக அன்போடு வரவேற்பேன். உனக்குப் பிடிக்காத பெண்ணை ஒரு நாளும் கலியாணம் செய்து கொள்ளும்படி சொல்ல மாட்டேன். உன் அப்பா சொல்கிறார் என்று நீ சம்மதித்தால்கூட நான் சம்மதிக்க மாட்டேன்!" என்று காமாட்சி அம்மாள் கூறியபோது அவளுடைய கண்களிலிருந்து மீண்டும் கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.

"இந்த மாதிரி நீ கண்ணீர்விட ஆரம்பித்தால் நான் உன்னோட பேசவே தயாராயில்லை. எங்கேயாவது போய்த் தொலைகிறேன் சமுத்திரத்திலே விழுந்து சாகிறேன். இல்லாவிட்டால் ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்கிறேன்...." "வேண்டாமடா ராகவா! வேண்டாம்! இப்படியெல்லாம் சொல்லாதே! நான் இனிமேல் கண்ணீர் விடவில்லை. நீ கேட்க வேண்டியதைக் கேள்; செய்ய வேண்டியதைச் செய்!" என்று கூறிக் காமாட்சி அம்மாள் மீண்டும் நன்றாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். "நான் சந்தோஷமாயிருப்பதுதான் உன்னுடைய விருப்பம் என்றால், தாரிணியை ஏன் அப்படி விரட்டி அடித்தாய்?" என்று ராகவன் மிக்க எரிச்சலுடன் கேட்டான்.

"ஐயையோ! இதென்ன வீண் பழி! நானா அந்தப் பெண்ணை விரட்டி அடித்தேன்? உண்மையாகச் சொல், ராகவா! நான் விரட்டி அடித்தால் அவள் போய்விடக் கூடிய பெண்ணா....?" "அவள் ஏன் அவ்வளவு அவசரமாகப் போகவேண்டும்? நான் வெளியே போய்த் திரும்புவதற்குள்ளே அவள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பறந்தோடிப் பம்பாய் மெயில் ஏறிவிட்டாளே? அப்படி அவள் மிரண்டு ஓடும்படி ஏதோ நீ சொல்லித்தானே இருக்க வேண்டும்?" "ராகவா! ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாகச் சொல்லுகிறேன், அவளை ஒரு வார்த்தைகூட நான் தப்பாகச் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் அவள் நீ வருகிற வரையில் இருந்து உன்னிடம் புகார் சொல்லியிருக்க மாட்டாளா? அவள் என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? பயந்தவளா? உன் பேரில் அவளுக்கு உண்மையில் அன்பு இருந்தால் அப்படி நான் சொன்னதற்காகப் போய் விடுவாளா? யோசித்துப் பார்?" ராகவன் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்த பிறகு, "பின்னே என்னதான் இங்கே உண்மையில் நடந்தது, நான் இல்லாதபோது; நீ என்ன சொன்னாய்? அவள் என்ன சொன்னாள்?"

"ஐயையோ! அவள் சொன்னதையெல்லாம் சொல்வதற்கு என் நாக்குச் கூசும். அவள் என்னவோ நினைத்துக் கொண்டு வந்தாளாம். வந்து பார்த்த பின் ரொம்ப ஏமாற்றமாய்ப் போய் விட்டதாம். நானும் உன் அப்பாவும் ரொம்பக் கர்நாடகமாம்? எங்களைப் பற்றி அவள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் உன்னைச் சுத்த அசடு என்று சொன்னாள், ராகவா! முதல் கிளாசிலிருந்து எம்.ஏ. பரீட்சைக்குப் பரீட்சை மெடலும் பரிசும் வாங்கிய உன்னை 'அசடு' என்று சொன்னாள் ராகவா! அதுதான் எனக்குப் பொறுக்கவில்லை. புடவை கட்டிக் கொண்ட பெண் யாரைப் பார்த்தாலும் நீ பின்னோடு பல்லைக் காட்டிக் கொண்டு போகிறாயாம்! உனக்கு நல்ல புத்தி சொல்லி அடக்கி வைக்கும்படி சொல்லிவிட்டுப் போவதற்காக மதராஸுக்கு வந்தாளாம். இன்னும் என்னவெல்லாமோ கர்ண கடூரமாகச் சொன்னாள். என்னால் பொறுக்கவே முடியவில்லை!" என்று சொல்லிக் கண்களைப் புடவைத் தலைப்பினால் மூடிக் கொண்டு காமாட்சி அம்மாள் விம்மினாள். ராகவனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் கோபம் அம்மாவின் பேரில் வந்ததா என்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை.

தாரிணியின் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு விஷயம் ராகவனுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. "அழுகையை நிறுத்து அம்மா! இன்னும் ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்! தாரிணியின் கால்களை எதற்காகவாவது நீ தொட்டதுண்டா? தொட்டு அவளை ஏதாவது கேட்டுக் கொண்டாயா?" என்றான் ராகவன். "ஓகோ! அதை அவள் உனக்கு எழுதியிருக்கிறாளா? என்னமெல்லாம் பொய், புனை சுருட்டுச் சேர்த்து எழுதியிருக்கிறாளோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடந்ததை உள்ளது உள்ளபடி சொல்கிறேன். அவள் உன்னைப் பற்றி அலட்சியமாய் பேசிய பிறகு எனக்குக் கொஞ்சம் பயமாய்ப் போய்விட்டது. அதனால் நான் அவளிடம், "பெண்ணே! என் பிள்ளைக்கு இந்தப் பக்கத்தில் ஆயிரம் பேர் இருபதினாயிரம், முப்பதினாயிரம் பணத்துடன் பெண்ணைக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால், ராகவனுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது, எப்படியாவது அவன் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்பதுதான் என் பிரார்த்தனை. சாதி, குலம் நடவடிக்கை யெல்லாம் வித்தியாசமாயிருந்தாலும் ஏதோ எங்கள் பாஷையாவது நீ பேசுகிறாயே, அதுவரையில் சந்தோஷந்தான். ஒரே ஒரு பிரார்த்தனை உனக்குச் செய்து கொள்கிறேன். என்னையும் என் குழந்தையையும் பிரித்து விடாதே! அவன் ஒருவனுக்காகத்தான் இந்த உயிரை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

அவன் நன்றாயிருக்க வேண்டுமென்றுதான் அல்லும் பகலும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைத் தியானித்துக் கொண்டிருக்கிறேன். அவனும் நீயும் எங்கே போனாலும் எங்கே இருந்தாலும் என்னையும் உங்களோடு அழைத்துக் கொண்டு போ! உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்து கொண்டிருப்பதுதான் எனக்கு இந்த வாழ்க்கையில் இனிமேல் சந்தோஷம்! இந்த ஒரு வரத்தை எனக்குக் கொடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!' என்று சொல்லி அவளுடைய காலைத் தொட்டேன். உடனே, 'டாம்! நான்ஸென்ஸ்!' என்றெல்லாம் உன் அப்பா திட்டுவது போல் என்னைத் திட்டினாள். அதோடு, 'உங்களுக்கு வயதாச்சே புத்தி எங்கே போச்சு! நானோ சாதி, மதம் ஒன்றும் இல்லாதவள். கர்நாடக வைதிகமாகிய உங்களுக்கும் எனக்கும் எப்படிச் சரிக்கட்டி வரும்? உங்கள் பிள்ளைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லித் திருத்துங்கள்!' என்று சொல்லிவிட்டு விடு விடு என்று போய்விட்டாள். அப்பா, ராகவா!' நான் சொல்வதை நம்புவது உனக்குக் கஷ்ட மாய்த்தானிருக்கும். அவள் ஏன் அப்படி அவசரப்பட்டுக்கொண்டு போனாள் என்று எனக்கே புரியவில்லை. அவள் இங்கே இருந்தபோது யாரோ ஒருவன் வந்து கதவைத் தட்டி, 'தாரிணி அம்மாள் இங்கே இருக்கிறாளா?' என்று கேட்டான். இவள் அவசரமாய் எழுந்து போய் ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். கடிதத்தைப் படித்ததும் அவள் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 'நான் போய் வருகிறேன். உங்கள் பிள்ளையைக் கெடுத்துவிடுவேன் என்று பயப்படவேண்டாம்' என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் நடந்து வாசலில் நின்ற காரில் ஏறிக்கொண்டு போய்விட்டாள். போகும் அவசரத்தில் அவளுக்கு வந்த கடிதத்தைக்கூடக் கீழே போட்டுவிட்டுப் போய்விட்டாள். அதை நான் எடுத்து வைத்திருக்கிறேன்; நீ வேணுமானாலும் அதைப் பார்!" என்று சொல்லிக் கொண்டே காமாட்சி அம்மாள் எழுந்து போய் அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். ராகவன் அந்தக் கடிதத்தை வாங்கிக் கைகள் நடு நடுங்க நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளப் படித்துப் பார்த்தான். அதில் சுருக்கமாக நாலைந்து வரிகள்தான் எழுதியிருந்தன.

"என் கண்ணே! என்னுடைய காரியம் நான் நினைத்ததைக் காட்டிலும் சீக்கிரம் ஆகிவிட்டது. இன்று மாலை மெயிலில் அவசியம் பம்பாய் புறப்படவேண்டும். உடனே ஹோட்டலுக்கு வர முடியாவிட்டால், ரயில்வேஸ்டேஷனில் வந்து சேர்ந்து கொள். உனக்கும் டிக்கட் வாங்கி விடுகிறேன். மிஸ்டர் ராகவன் காதல் தமாஷ் எப்படி இருக்கிறது? ராகவனுக்கு ஏற்கனவே இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது போதும். இன்னும் அவனுக்குத் தண்டம் வைக்காதே; ஏதாவது விபரீதத்தில் முடியப் போகிறது!" இதைப் படித்து வருகையில் ராகவனுடைய கண்கள் சிவந்து நெருப்புப் பொறி பறந்தது. அவனுடைய நெஞ்சில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கியது; கொல்லன் துருத்தியில் வரும் காற்றைப்போல் அவனுடைய மூச்சு கொதித்துக் கொண்டு வந்தது. கடிதத்தைப் படித்து முடித்ததும் ஆகாசம், பூமி, திக்குத் திகாந்தம் எல்லாம் தாறுமாறாக வெடித்தன. பட்டப் பகலில் இருள் கவிந்தது வானத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் பொலபொலவென்று உதிர்ந்து ராகவன் தலைமீது விழுந்தன.

இத்தகைய உணர்ச்சிகளுக்கெல்லாம் உள்ளான ராகவன் சற்று நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்துவிட்டுத் திடீரென்று எழுந்தான். அம்மாவின் முன்னிலையில் தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். "என்னைப்போல் மூடன் யாரும் இல்லை, தாரிணி சொன்னது சரிதான். அவளுடைய காலைப் பிடிக்கும்படியான நிலையில் உன்னை வைத்தேன் அல்லவா? இந்த க்ஷணம் முதல் நீதான் எனக்குத் தெய்வம். நீ என்ன சொல்லுகிறாயோ அதைக் கேட்கிறேன். நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்கிறாயோ, அவளையே கலியாணம் செய்து கொள்கிறேன்!" என்றான். இவ்விதம் சொல்லிவிட்டுக் கையில் உள்ள கடிதத்துடன் விடு விடு என்று நடந்து மச்சுக்குப் போனான். அங்கே மேஜை மேலே இருந்த தாரிணியின் கடிதத்தையும் தாரிணிக்குத் தான் எழுத ஆரம்பித்திருந்த கடிதத்தையும் சேர்த்துச் சுக்குச்சுக்காகக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டான். காமாட்சி அம்மாள் பூஜை அறைக்குள்ளே சென்று ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துக்கு முன்னால் பயபக்தியுடன் நமஸ்காரம் செய்து எழுந்தாள். இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதிநான்காம் அத்தியாயம்

வண்டி வந்தது

இந்தக் கதையின் வாசகர்களை இப்போது நாம் பம்பாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. பம்பாய்க்கு மட்டுமல்ல... கல்கத்தாவுக்கும் கராச்சிக்கும் டில்லிக்கும் லாகூருக்கும் கூட நம்முடன் வாசகர்கள் வர வேண்டியதாயிருக்கும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் அவ்வளவு தூரதூரமான இடங்களில் இருந்து கொண்டு அங்கங்கே நடக்கும் சம்பவங்களைக் கவனிக்கும்படி யாகவும் நேரிடக் கூடும்!

பம்பாய் நகரின் ஒரு பகுதியான தாதரில், அடையாளங் கண்டுபிடிக்க முடியாத ஒரு வீதி. அடையாளங் கண்டுபிடிக்க முடியாத ஒரு வீடு. பல வீதிகள் ஒரே மாதிரியாயிருப்பதாலும் பல வீடுகள் ஒன்றைப்போல் இருப்பதாலும் அடையாளங் கண்டுபிடிக்க முடியாதவை என்று சொன்னோம். நாம் குறிப்பிடும் வீடு ஐந்து மாடிக் கட்டிடம். அதைப்போல் அந்த வீதியின் இரு பக்கங்களிலும் அநேக கட்டிடங்கள் இருந்தன. ஒன்றைப்போல ஒன்று அச்சில் வார்த்ததுபோல் தோற்றமளித்தன. வீதி முனையிலிருந்து மூன்றாவது வீடு நாம் குறிப்பிடும் வீடு என்று அடையாளம் வைத்துக் கொள்வோம். அந்த வீட்டில் ஒவ்வொரு மாடியிலும் பத்துக் குடித்தனங்கள் வீதம் மொத்தம் ஐம்பது குடித்தனங்கள்; ஜனத்தொகை மொத்தம் முந்நூறுக்குக் குறைவு இல்லை. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அறைகளிலோ மூன்று அறைகளிலோ குடியிருந்தன. குடியிருக்கும் அறைகளைத் தவிர ஒரு குளிக்கும் அறையும் உண்டு.

அந்த வீட்டில் நாலாவது மாடியில் மூன்று அறைகளும் ஒரு குளிக்கும் அறையும் சேர்ந்த ஜாகையில் கிட்டாவய்யரின் சகோதரி ராஜம்மாள் சென்ற இருபது வருஷ காலமாக வசித்து வந்தாள். ஹிந்து சமூகப் பெண் குலத்தின் உத்தம குணங்கள் எல்லாம் ஒருங்கு சேர்த்து உருவெடுத்தாற்போன்ற அந்த மாதரசி கலியாணமாகிக் கணவனைக் கைப்பிடித்துப் பம்பாய்க்கு வந்த பிறகு அந்த மூன்று அறைக்குள்ளேயே தன்னுடைய ராஜ்ய பாரத்தைச் செலுத்தி வந்தாள். இருபது ஆண்டு இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த மூன்று அறைக்குள்ளேயே அவள் அனுபவித்தாள். குழந்தைகளைப் பெற்று வளர்த்ததும் அங்கேதான். குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு அலறி அழுததும் அங்கேதான். கூடிக்குலாவிச் சிரித்துக் களித்ததும் அங்கேதான். கணவனுடைய விசித்திர நடவடிக்கைகளை எண்ணி உள்ளம் வெதும்பி இதயம் வெடித்துக் கண்ணீர் பெருக்கியதும் அதே இடத்தில்தான்.

அந்த மூன்று அறைகளில் ஒன்றிலே தற்சமயம் ராஜம்மாள் படுத்த படுக்கையாகி, பிழைப்போம் என்ற நம்பிக்கை யையும் இழந்து, இருபது தினங்களுக்கு மேலாகப் படுத்திருந்தாள். வீட்டில் வைத்திய சிகிச்சைகளுக்கும், பணிவிடைக்கும் அவ்வளவு வசதி போதாது என்று அவளை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதாக அவளுடைய கணவர் துரைசாமி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆஸ்பத்திரிக்குப் போக ராஜம் கண்டிப்பாக மறுத்து விட்டாள். "இருபது வருஷமாக இருந்த இடத்திலேயே இருந்து கண்களை மூடுகிறேன்; ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டேன்" என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்.

பத்து வருஷத்துக்கு முன்னால் ஒரு மகாராஷ்டிர வேலைக்காரி, வீட்டுச் சில்லறை வேலைகள் செய்வதற்காக வந்தாள். ராஜத்தை அவளுக்கு ரொம்பப் பிடித்து விட்டது. வீட்டு வேலைகளை எல்லாம் அவளே இப்போது செய்தாள். ராஜம் படுத்துக் கொண்ட பிறகு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டதோடு ராஜத்துக்குக் கஞ்சி வைத்துக் கொடுப்பது மருந்து கொடுப்பது முதலிய காரியங்களையும் அந்த வேலைக்காரியே செய்து வந்தாள். கூடிய வரையில் குழந்தை சீதா அவளுக்கு உதவி புரிந்து வந்தாள். சீதா பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி ஒரு வருஷம் ஆயிற்று. ராஜம்மாள் மிக்க முன் யோசனையுடன் குழந்தையை எந்த மாதிரி இடத்தில் கலியாணம் செய்து கொடுக்க வேண்டியிருக்குமோ என்னவோ என்று எண்ணி, அவளைச் சமையல் முதலிய வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு வந்தாள். அது இப்போது மிக்க சௌகரியமாயிருந்தது. இதோ இந்தக் குறுகலான மாடி வராந்தாவில் கைப்பிடிச் சுவர் ஓரமாக நின்று கீழே வீதியைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பது யார்?.. சந்தேகம் என்ன? அகன்று விரிந்த அவளுடைய வட்ட வடிவமான கண்களிலிருந்தே தெரிந்து விடுகிறதே! லலிதாவின் அருமை அத்தங்காள் சீதாதான் அவ்வளவு ஆவலுடன் வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அடுத்த நிமிஷமே தீர்ந்து விடுகிறது. உள்ளே இருந்து, "சீதா!" என்று ஒரு தீனக்குரல் கேட்கிறது. "அம்மா! இதோ வந்துவிட்டேன்!" என்று வீணைக் குரலில் கூவிக்கொண்டு சீதா உள்ளே ஓடுகிறாள். மூன்று அறைகளில் ஒன்றில் படுத்திருக்கும் தாயாரின் அருகே செல்கிறாள். "சீதா! ஏதோ கார் சத்தம் கேட்டதே!" என்று ராஜம்மாள் தன் மெலிந்த முகத்திலே ஆர்வம் ததும்பக் கேட்கிறாள். "இல்லை, அம்மா! அது வேறு எங்கேயோ போகிற கார். இன்னும் நேரமாகவில்லை, அம்மா! ரயிலே இப்போது தான் வந்திருக்கும்! ஸ்டேஷனிலிருந்து இங்கே வரக் கால்மணி நேரமாவது வேண்டாமா! இப்படி அவசரபட்டால் என்ன செய்கிறது?" என்று கலகலவென்று வார்த்தைகளைக் கொட்டுகிறாள் சீதா. இதற்குள் மறுபடியும் கார் சத்தம் கேட்கவே, சீதா வராந்தாவுக்கு ஓடி வந்து வீதிப்புறம் எட்டிப் பார்த்தாள். ஒரு மோட்டார் வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. "அம்மா! மாமா வந்தாச்சு! நான் கீழே போய் அழைத்து வருகிறேன்!" என்று கூவிக்கொண்டே சீதா மாடிப்படிகளின் வழியாக ஓர் எட்டில் இரண்டு மூன்று படிகளைத் தாண்டிக் கொண்டு இறங்கினாள். இரண்டு மச்சு இறங்கியதும் கையில் தோல் பையுடன் டாக்டர் வருவதைப் பார்த்துத் தயங்கி நின்றாள். "டாக்டர்! உங்கள் வண்டியா இப்போது வந்தது! ஊரிலேயிருந்து மாமா வந்து விட்டாராக்கும் என்று நினைத்தேன்!" என்றாள். "ஓகோ! உன் மாமா இன்றைக்கு வருகிறாரா? அவர் வந்த பிற்பாடாவது உன் அம்மாவுக்கு உடம்பு சரியாகிறதா, பார்ப்போம்!" என்றார் டாக்டர். வழக்கம்போல் சீதா டாக்டர் கையிலிருந்து தோல் பையை வாங்கிக் கொண்டாள். பிறகு இருவரும் மௌனமாக மேலே ஏறி வந்தார்கள்.

நாலாவது மாடி வராந்தாவுக்கு வந்ததும் சீதாவின் ஆவல் அவளை மறுபடியும் வீதிப் பக்கம் எட்டிப் பார்க்கச் செய்தது. அச்சமயம் ஒரு கோச்சு வண்டி வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. அந்த வண்டியிலிருந்து தன் தகப்பனாரும் மாமாவும் இறங்குவதைச் சீதா பார்த்தாள். உடனே சீதாவின் மௌனம் கலைந்து விட்டது. "அம்மா! அம்மா! மாமா வந்தாச்சு! நிஜமாகவே வந்தாச்சு!" என்று கூவிக்கொண்டு உள்ளே போனவள், "முதலில் வந்தது மாமா இல்லை, அம்மா! டாக்டர் வந்தார்! டாக்டரை அழைத்துக்கொண்டு நான் மேலே வந்தேன். மேலே வந்ததும் வீதியில் பார்த்தால், அப்பாவும் மாமாவும் கோச்சு வண்டியில் வந்து இறங்குகிறார்கள். ஒரு டாக்ஸி வைத்துக்கொண்டு வரக்கூடாதோ? அதனால்தான் இவ்வளவு தாமதம்...." என்று கடிகாரம் அலாரம் மணி அடிப்பது போலப் பொழிந்தாள் சீதா. "அதனால் என்ன, சீதா? ஒருவேளை டாக்ஸி கிடைத்திராது. நீ மறுபடியும் கீழே போக வேண்டாம், அம்மா! இங்கேயே டாக்டருக்கு ஒத்தாசையாயிரு! அவர்கள் வந்து விடுவார்கள்" என்றாள் ராஜம். சீதா கொஞ்சம் அதிருப்தியுடன் அங்கேயே இருந்தாள். டாக்டர் வழக்கம் போலத் தர்மாமீட்டர் வைத்துப் பார்த்தார். முதுகிலே குழாயை வைத்துப் பார்த்தார்; தொண்டைக்குள் டார்ச் விளக்குப் போட்டுப் பார்த்தார். எல்லாம் பார்த்துவிட்டு, 'பிரிஸ்க்ரிப்ஷன்' மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் துரைசாமியும் கிட்டாவய்யரும் வந்து விட்டார்கள்.

ராஜத்தைப் பார்த்ததும் கிட்டாவய்யர் திகைத்துப் போனார். கிராமத்தை விட்டுப் புறப்படும்போது கிட்டாவய்யர் உற்சாகக் குறைவுடன் கிளம்பினார். ஆனால், சென்னையில் பத்மலோசன சாஸ்திரி வீட்டுக்குப் போய் 'மாப்பிள்ளைப் பைய'னைப் பார்த்ததின் காரணமாக அவருக்குக் கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. வரன் நிச்சயமானதாகவே வைத்துக் கொள்ளலாம் என்று சுப்பய்யர் உறுதி சொல்லியிருந்தார். ஆகவே, சென்னையிலிருந்து பம்பாய்க்குப் புறப்பட்டபோது கிட்டாவய்யர் உற்சாகமாயிருந்தார். அந்த உற்சாகம் காரணமாக, 'ராஜத்துக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமாயிராது. சரசு சொன்னமாதிரி கொஞ்சம் அதிகப் படுத்தியே கடிதத்தில் எழுதியிருக்கலாம்' என்று அவருடைய மனம் எண்ணத் தொடங்கியது.

ஸ்டேஷனில் அவரைச் சந்தித்த துரைசாமியும் 'காபரா'ப் படுத்தும் முறையில் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே பல நாள் காய்ச்சலினால் உலர்ந்து மெலிந்து போயிருந்த ராஜத்தைத் திடீரென்று பார்த்ததும் கிட்டாவய்யரின் அன்பு நிறைந்த உள்ளம் பெரும் துன்பத்துக்கு உள்ளாயிற்று. ராஜத்தின் உடல் மெலிவு மட்டுமல்ல; அவளுடைய முகத்தோற்றத்தில் பிரதிபலித்த ஏதோ ஒரு சாயல், 'இவள் பிழைப்பது துர்லபம்' என்ற எண்ணத்தைக் கிட்டாவய்யரின் மனதில் உண்டாக்கியது. அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு 'ராஜம் பிழைப்பாள்' என்று உறுதி பெற விரும்பியவராய், கண்ணீர் ததும்பிய கண்களுடன் கிட்டாவய்யர் டாக்டரை நோக்கினார்.

"என்ன, டாக்டர்? ராஜத்துக்கு உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டார். "நீங்கள் இன்று வந்து விட்டீர்கள் அல்லவா? இனிமேல் ஒருவேளை சீக்கிரம் குணமாகிவிடும். உங்கள் சகோதரிக்கு உடம்புக் கோளாறு காற்பங்கு; மனக் கோளாறு முக்காற்பங்கு; 'எனக்கு உடம்பு குணமாகாது' என்று இந்த அம்மாள் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டிருக்கிறாள். நான் மருந்து கொடுத்து என்ன பயன்? நீங்கள் கொஞ்சம் பிரயத்தனம் செய்து உங்கள் சகோதரிக்கு மனோதைரியம் உண்டாக்குங்கள், அப்போது உடம்பும் சரியாய்ப் போய்விடும்." இவ்விதம் சொல்லிவிட்டு டாக்டர் புறப்பட்டார். அவரைக் கொண்டு போய் விடுவதற்காகத் துரைசாமியும் கூடச்சென்றார். கிட்டாவய்யர் தம் அருமைச் சகோதரியின் அருகில் சென்று உட்கார்ந்து, "ராஜம்! டாக்டர் சொன்னதைக் கேட்டாயல்லவா? தைரியமாயிருக்க வேண்டும். அம்மா! வீணாக மனதை அதைரியப்படுத்திக் கொள்ளக்கூடாது!" என்றார்.

"அண்ணா! டாக்டர் சொல்லுவதை நீ நம்புகிறாயா? என்னைப் பார்த்தால் பிழைப்பேன் என்று தோன்றுகிறதா!" என்று ராஜம் நேரடியாகக் கேட்டதும் கிட்டாவய்யரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதுவரைக்கும் அவருடைய கண்களில் ததும்பிக் கொண்டிருந்த கண்ணீர் இப்போது கலகலவென்று கொட்டியது. அங்கவஸ்திரத்தினால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "நானே உன்னை அதைரியப்படுத்துகிறேன்! இத்தனை நாளும் உன்னைக் கவனியாமல் இருந்து விட்டேனே என்பதை நினைத்தால் எனக்குத் துக்கம் பொங்கி வருகிறது" என்றார்.

"அண்ணா! உன் பேரில் என்ன தவறு? இத்தனை நாளும் என்னை நீ கவனித்து ஆகக்கூடியது ஒன்றுமில்லை. என்னுடைய விதிக்கு நான் பிறந்தவள். நீ என்ன செய்வாய்? ஒருவேளை நீ இப்போது வராமல் இருந்து விடுவாயோ என்றுதான் பயந்து கொண் டிருந்தேன். எப்படியாவது நீ வருகிறவரையில் உயிரோடு என்னை வைத்திருக்க வேண்டும் என்றுதான் பகவானை பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய். என் மனத்திலுள்ளதை உன்னிடம் சொல்லி விட்டால், பாரம் தீர்ந்தது, அப்புறம் நிம்மதியாகக் கண்ணை மூடிப் பரமாத்மாவின் பாதாரவிந்தத்தை அடைவேன்!"

மீறி வந்த துக்கத்தையும் விம்மலையும் அடக்கிக் கொண்டு கிட்டாவய்யர், "சீ, பைத்தியமே! இது என்ன இப்படிப் பேசுகிறாய்? அதெல்லாம் உனக்கு ஒன்றும் வராது. சீதாவுக்குக் கல்யாணம் பண்ணிப் பேரன் பேத்திகள் பெற்றெடுத்துச் சௌக்கியமாயிருப்பாய்!" என்றார். அவநம்பிக்கையைக் குறிப்பிடும் சோகப் புன்னகை புரிந்தாள் ராஜம். மரணச் சாயல் படர்ந்திருந்த அவளுடைய முகத்துக்கு அந்தப் புன்னகை ஒரு கணம் உயிர் ஒளி அளித்தது. அறையில் கதவண்டை சீதா கண்ணீருடன் நின்று தங்களுடைய சம்பாஷணை யைக் கேட்டுக் கொண்டிருப்பதை ராஜம் கவனித்தாள். கையினால் சமிக்ஞை செய்து அவளை அருகில் அழைத்தாள். "சீதா! ஊரிலிருந்து மாமா வந்திருக்கிறாரே? காப்பி போட்டுக் கொடுக்க வேண்டாமா?" என்று ராஜம்மாள் சொன்னதும், சீதா, "இதோ ஒரு நிமிஷத்தில் போட்டுக் கொண்டு வருகிறேன் அம்மா!" என்று சமையலறைப் பக்கம் ஓடினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதினைந்தாம் அத்தியாயம்

ராஜத்தின் ரகசியம்

சீதா அப்பால் சென்றதும், ராஜம், "அண்ணா! பிற்பாடு எப்படி இருக்குமோ என்னமோ? அவகாசம் கிடைக்குமோ? கிடைக்காதோ? நான் சொல்ல வேண்டியதை உடனே சொல்லிவிடவேண்டும். அதற்கு முன்னால் ஒரு காரியம் இருக்கிறது! பெட்டி ஏதாவது கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா? அதைக் கொஞ்சம் கொண்டு வா!" என்றாள். அவளுடைய பரபரப்பின் காரணத்தைச் சிறிதும் அறியாத கிட்டாவய்யர், "பெட்டி கொண்டு வந்திருக்கிறேன். ராஜம்! தாழ்வாரத்தில் இருக்கிறது, ஆனால் அதற்கு என்ன இப்போது அவசரம்? மெதுவாய்க் கொண்டு வந்தால் போச்சு. பெட்டி நல்ல கனம்; அதை யாரும் சுலபமாக எடுத்துக்கொண்டு போக முடியாது! "என்றார். "அதற்காகச் சொல்லவில்லை, அண்ணா! வேறு காரணம் இருக்கிறது. பெட்டியை உள்ளே கொண்டு வா! அப்படியே வாசலில் எட்டிப் பார்த்து இவர் டாக்டரோடு காரில் ஏறிக் கொள்கிறாரா என்று கவனித்து வா! அநேகமாக மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போவார்!" என்றாள் ராஜம்.

"நீ எதற்காக இவ்வளவு அதிகமாய்ப் பேசவேண்டும்? நான் அடுத்த ரயிலுக்குப் போகிறதாக உத்தேசமில்லை! மெதுவாகப் பேசிக் கொள்ளலாமே!" என்று கிட்டாவய்யர் சொல்லுவதற்குள்ளே, ராஜம்மாள், "அண்ணா! உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், கொஞ்சம் நான் சொல்லுகிறபடி செய்! ரொம்ப முக்கியமான விஷயம், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் பிறகு என் மனது நிம்மதியடையும். சொல்லி முடிகிறவரையில் பெரிய பாரமாயிருக்கும். சீக்கிரமே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வா!" என்றாள். இதற்குமேல் அவளோடு விவகாரம் செய்வதில் பயனில்லையென்று கிட்டாவய்யர் அறைக்கு வெளியே சென்று தாழ்வாரத்தின் ஓரமாக எட்டிப் பார்த்தார். ராஜம் எதிர்பார்த்தபடியே துரைசாமி காரில் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டார். தாழ்வாரத்தில் வைத்திருந்த பெட்டியை அறைக்குள் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.

"அண்ணா! கொஞ்சம் கதவைச் சாத்து! சீக்கிரம் பெட்டியை இங்கே என் பக்கத்தில் கொண்டு வா!" என்றாள். கிட்டாவய்யர் அப்படியே செய்தார்; செய்துவிட்டு, ராஜம்மாள் செய்த காரியத்தை வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தார். ராஜம் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தலைமாட்டில் வைத்திருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை அவசரமாக எடுத்தாள். தலையணை உறையைக் கழற்றிவிட்டு ஒரு பக்கத்தில் போட்டிருந்த தையலை அவசர அவசரமாகப் பிரித்தாள். தலையணைப் பஞ்சுக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள். முதலில் இரண்டு கத்தை ரூபாய் நோட்டுக்கள் வெளி வந்தன. பிறகு மிக அழகிய வேலைப்பாடு அமைந்த ரத்தின மாலை ஒன்று வெளிவந்தது. மாலையில் தொங்கிய பதக்கத்தில் வைரங்கள் ஜொலித்தன. வைரங்களுக்கு மத்தியில் பொன்னிறக் கோமேதகம் ஒன்று கண்ணைக் கவர்ந்தது.

"அண்ணா! அண்ணா! இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டையும் இந்த ரத்தின மாலையையும் உன் பெட்டிக்குள்ளே பத்திரமாக வை! சீக்கிரம் வை!" என்றாள். கிட்டாவய்யர் தயங்கினார், அவர் உள்ளத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்கள் உதித்தன. "ராஜம்! இது என்ன?" என்றார். "இது ஒன்றையும் நான் திருடிவிடவில்லை, அண்ணா! முதலில் உன் பெட்டிக்குள் பத்திரமாக எடுத்து வை! பிறகு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்; சொல்லித்தான் ஆகவேண்டும்!" கிட்டாவய்யர் ஏதோ விசித்திரமான கனவு காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின மாலையையும் எடுத்துப் பெட்டிக்குள்ளே வைத்தார். பெட்டியைப் பூட்டிவிட்டுத் தலை நிமிர்ந்து சகோதரியைப் பார்த்தார்.

ராஜம் மறுபடியும் ஒரு தடவை புன்னகை புரிய முயன்றாள். அந்த முயற்சியின் பலன் கிட்டாவய்யருக்கு விபரீதமாகப் பட்டது. "ராஜம்! உடம்புக்கு ஏதாவது செய்கிறதா? மறுபடியும் டாக்டரைக் கூப்பிடச் சொல்லட்டுமா?" என்று ஆதுரமாய்க் கேட்டார். "வேண்டாம்! வேண்டாம்! டாக்டர் வந்து என்னத்தைச் செய்து விடுவார், பாவம்! அவர்தான் உன்னிடம் சொல்லி விட்டாரே? இனிமேல் மனோ தைரியந்தான் எனக்கு மருந்து! கதவைத் திறந்துவிட்டு வா; எல்லாம் சொல்லுகிறேன்!" என்று ராஜம் கூறிப் பழையபடி தலையணையில் சாய்ந்து கொண்டாள். இத்தனை நேரம் உட்கார்ந்தபடி பேசிய காரணத்தினால் அவளுக்கு மூச்சு வாங்கிற்று.

கிட்டாவய்யர் படுக்கையின் அருகில் வந்து உட்கார்ந்து கவலையுடன் அவளைப் பார்த்தார். "அண்ணா! நான் சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லாமல் சாகமாட்டேன். சொல்லாமல் செத்தால், என் நெஞ்சு வேகாது!...." "ராஜம்! இப்படி யெல்லாம் பேசாமல் இருக்க மாட்டாயா? நீ சும்மா இருந்தாலே போதும்! நான் ஒன்றும் உன்னைக் கேட்கவில்லை!" என்றார் கிட்டாவய்யர். ராஜம் சற்று நேரம் சும்மா இருந்தாள். மூச்சு வாங்கியது நின்றது, சிறிது களைப்பு நீங்கியது. "நீ ஒன்றும் கேட்க மாட்டாய்! ஆனால் நான் சொல்லித் தீர வேண்டும். இப்போது கொடுத்தேனே, இந்த இரண்டாயிரம் ரூபாய் பணமும் சீதாவின் கலியாணத்திற்காகக் கொடுத்திருக்கிறேன். ரத்தின மாலையும் கலியாணத்தின்போது அவளுக்குப் போடுவதற்காகத்தான். அண்ணா! நீயே சொன்னாய், - இருபது வருஷமாக உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லையென்று. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேண்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப் பக்கத்திலேயே நல்ல வரனாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்கவேண்டும். ஆகட்டும் என்று வாயைத் திறந்து சொல்லு. சொன்னால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும். டாக்டர் சொன்னது போல் ஒரு வேளை உடம்பு குணமானாலும் ஆகும்!" என்றாள்.

"ராஜம்! இப்படி நீ என்னைக் கேட்க வேண்டுமா? சீதாவை அப்படி நிராதரவாய் விட்டுவிடுவேனா? லலிதாவைப் போல் சீதாவும் என்னுடைய பெண் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் நம்ம பக்கத்திலேயே வரன் பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறேன். நீயும்கூட இருந்து பார்த்துச் சந்தோஷப்படப் போகிறாய். ஆனால், சீதாவின் கலியாணத் துக்காக நீ உன் அகத்துக்காரருக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்துக் கொடுக்க வேண்டுமா? கிராமாந்தரத்து ஸ்திரீகள் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கேள்விப்பட் டிருக்கிறேன். வீட்டுச் சாமான்களை விற்றும் செட்டுப் பிடித்தும் நாட்டுப் புறத்து ஸ்திரீகள் பணம் சேர்த்து வைப்பதுண்டு. அந்த மாதிரி நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மனுஷருக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வார்? உன்னைப்பற்றி என்னஎன்று எண்ணுவார்? என்னைப் பற்றித் தான் என்ன நினைப்பார் எனக்குப் பிடிக்கவே இல்லை!"

"கொஞ்சம் இரு அண்ணா! நீபாட்டுக்குப் பேசிக் கொண்டே போகாதே! அப்படியெல்லாம் நான் தப்புக் காரியம் பண்ணமாட்டேன். அவருடைய பணத்திலிருந்து காலணா நான் எடுத்தது கிடையாது. நம்ம வீட்டில் நீங்கள் எனக்குச் செய்து போட்ட நகைகளையும் ஆரம்பத்தில் இவர் எனக்குப் பண்ணிப் போட்ட நகைகளையும் விற்று அவருக்குக் கஷ்டம் வந்தபோது கொடுத்திருக்கிறேன். வீட்டுச் செலவுப் பணத்திலிருந்து எப்படிப் பணம் மிச்சம் பிடிக்க முடியும்? இந்தப் பம்பாய் பட்டணத்தில் குடித்தனம் பண்ணிப் பார்த்தால் உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். இந்தப் பணமும் ரத்தின மாலையும் சீதாவின் கலியாணத்துக்கு என்றே தெய்வத்தின் கிருபையால் கிடைத்தவை. கேட்டால் உனக்குக் கதை மாதிரி இருக்கும். நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து எனக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என்றுதான் உனக்குத் தெரியுமே! தமிழிலே வெளியான அவ்வளவு கதைப் புத்தகங்களும் நான் படித்திருக்கிறேன். ஹிந்தி பாஷையிலும் அநேக கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாளும் இந்த மூன்று அறையிலேயே அடைந்து கிடக்கும் நான் வேறு என்னத்தைதான் செய்வது? எப்படிப் பொழுது போக்குவது? நான் படித்திருக்கும் ஆயிரம் கதைகளில் நடந்த அதிசயங்களைக் காட்டிலும் அதிசயமான சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் உண்மையாகவே நடந்தது. அதை உனக்குச் சொல்லப் போகிறேன். வேறு யாருக்கும் இது தெரியாது. சீதாவுக்குக் கூடத் தெரியாது...."

இந்தச் சமயத்தில் கையில் காப்பியுடன் வந்தாள் சீதா, அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அறைக்குள் வரலாமோ, கூடாதோ என்று அவள் தயங்கியதாகக் காணப்பட்டது. "வா! அம்மா!" என்று தாயார் ஈனக் குரலில் கூறியதும் தைரியமடைந்து உள்ளே வந்தாள். கிட்டாவய்யர் அவளிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டு, "நீ கொஞ்சம் சாப்பிடுகிறாயா?" என்று ராஜத்தைப் பார்த்துக் கேட்டார். "கொஞ்சம் கொடு! இத்தனை நாளும் நான் உயிரை வைத்துக் கொண்டிருப்பது டாக்டர் கொடுத்த மருந்தினால் அல்ல; இந்தக் காப்பியினாலேதான்!" என்றாள் ராஜம். பின்னர் சீதாவைப் பார்த்து, "குழந்தாய்! வாசலில் அப்பா வந்துவிட்டாரா என்று பார்! ஒரு வேளை சாப்பிடக்கூட மருந்து இல்லை, அப்பா மருந்து வாங்கிக்கொண்டு வந்த உடனே ஓடி வந்து சொல்லு!" என்றாள். அந்தக் குறிப்பைச் சீதா அறிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறி மச்சுப்படிகளின் வழியாகக் கீழே சென்றாள்.

ராஜம் கிட்டாவய்யரைப் பார்த்து, "அண்ணா! இப்போது நான் சொல்லப் போகிற விஷயத்தை இவரிடம், அதாவது சீதாவின் அப்பாவிடம், நீ ஒருநாளும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொல்லக்கூடாது; வீட்டிலே மன்னியிடம் கூடச் சொல்லப்படாது. சொல்லுவதில்லை என்று சத்தியம் பண்ணிக்கொடு; வேண்டாம், சத்தியம் வேண்டாம். நீ சொன்ன சொல்லை நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். யாரிடமும் சொல்லாதிருப்பா யல்லவா?" என்று சொல்லி நிறுத்தினாள். "சொல்லவில்லை! சொல்லவில்லை. நீயே என்னிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் நல்லது. பேசினால் உனக்கு இரைக்கிறது! இப்படி உனக்கு தொந்தரவு கொடுப்பதற்குத்தானா நான் பம்பாய்க்கு வந்தேன்?" "எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை; கேள்!" என்றாள் ராஜம்.

"எனக்கு இந்தத் தடவை உடம்புக்கு வந்து இருபது நாளாயிற்று, நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் படுத்துக்கொண்ட அன்றைக்கு வெள்ளிக்கிழமை, சாயங்காலம் அம்பிகையின் படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணினேன். சியாமளா தண்டகம் ஸ்தோத்திரம் சொன்னேன். 'அம்மா! தாயே பராசக்தி! நீதான் என் குழந்தை சீதாவைக் காப்பாற்ற வேண்டும். நல்ல இடத்தில் குழந்தைக்குக் கலியாணம் ஆகக் கிருபை செய்யவேண்டும்' என்று வேண்டிக் கொண்டேன். உடம்பு ஏதோ மாதிரி இருந்தது; படபடவென்று வந்தது. தலை சுழலுவது போலத் தோன்றியது. உடனே இந்த அறைக்கு வந்து இதே கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சீதா அவளுடைய சிநேகிதியைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்தாள். இவர் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. உனக்குப் போன தடவையே சொல்லியிருக்கிறேனே! சில நாளைக்கு இவர் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்; சில நாளைக்கு வரவே மாட்டார். இன்றைக்கு வருகிறாரோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கண்ணைச் சுற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. அது தூக்கமா அல்லது மயக்கமா என்று எனக்குத் தெரியாது, கண்கள் மூடிக் கொண்டன. அப்புறம் கொஞ்ச நேரம் ஒன்றுமே தெரியவில்லை.

"இப்படி ஒரு மணிநேரம் போயிருக்க வேண்டும் என்று பிற்பாடு கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மயக்கம் தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது வெறுமனே சாத்தியிருந்த என் அறைக் கதவு திறந்தது. அந்தச் சத்தம் கேட்டுத்தான் என் மயக்கம் கலைந்திருக்க வேண்டும். "கதவைத் திறப்பது சீதாவா அல்லது சீதாவின் அப்பாவா என்று எண்ணினேன். அதற்குள் கதவு நன்றாய்த் திறந்தது. சீதாவும் இல்லை, அவள் அப்பாவும் இல்லையென்று தெரிந்தது. ஒரு ஸ்திரீ உள்ளே வந்தாள், கிட்டத்தட்ட என் வயதுதான் இருக்கும். வடக்கத்தியாள் போலத்தான் இருந்தாள். தலையில் முக்காடு போட்டிருந்தாள். கையில் ஒரு சின்னத் தோல் பெட்டி வைத்திருந் தாள். என் சமீபமாக வந்து, 'ராஜம்மாள் என்கிறது நீ தானா?' என்று கேட்டாள். ஹிந்தி பாஷையில் தான். இருபது வருஷமாக இந்த ஊரில் இருந்ததினால் எனக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். ஆயினும் வந்திருப்பவள் யாரோ என்னமோ என்ற தயக்கத்தினால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.

"உடனே அவள் கொஞ்சம் பதட்டமான குரலில், இதோ பார், அம்மா! ஒரு முக்கியமான காரியமாக நான் வந்திருக்கிறேன். வீண் பொழுது போக்க நேரம் இல்லை. இராஜம்பேட்டை ராஜம்மாள் என்கிறது நீதானா? துரைசாமி ஐயரின் சம்சாரம்?' என்றாள். 'ஆமாம்' என்று ஈனஸ்வரத்தில் சொன்னேன். 'அதை எப்படி நான் நம்புகிறது' என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ நாலு புறமும் பார்த்தாள். சுவரிலே மாட்டியிருக்கிற படங்கள் அவள் கண்ணில் பட்டன. சமீபத்தில் சென்று பார்த்தாள். அண்ணா! உனக்கு இங்கிருந்தே தெரிகிறதல்லவா? அந்தப் படங்களில் ஒன்று எனக்குக் கலியாணம் ஆன புதிதில் நானும் அவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். இன்னொன்று மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் அவரும் சீதாவும் எடுத்துக் கொண்டது. இரண்டாவது படத்தை உற்று பார்த்துவிட்டு, 'இதில் இருக்கிற பெண் யார்? உன் மகளா?' என்று 'அந்த ஸ்திரீ கேட்டாள், ஆமாம்' என்று சொன்னேன். இன்னும் சற்றுப் படத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சடார் என்று திரும்பி என் அருகில் வந்தாள். என் முகத்தை உற்றுப் பார்த்து, 'ஆமாம், நீ ராஜம்மாள்தான்!' என்றாள். அப்போது அவளை நான் உற்றுப் பார்த்தேன். அவளுடைய முகத்தில் ஜொலித்த களையையும் அவளுடைய கண்களின் காந்த சக்தியையும் என்னால் சொல்லி முடியாது. 'இவ்வளவு அழகான ஸ்திரீயும் உலகத்தில் உண்டா?' என்று எண்ணி நான் திகைத்துப் போனேன். அந்த ஸ்திரீ தன்னுடைய கைப் பெட்டியை அதோ இருக்கிற அந்த மேஜை மேலே வைத்து விட்டுச் சடசடவென்று நடந்து போய்க் கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு வந்தபோது என் மனத்தில் பீதி உண்டாயிற்று. எழுந்து ஓடிப் போகலாமென்று தோன்றியது. அதற்கும் துணிச்சல் ஏற்படவில்லை. கை காலை அசைக்கவே முடியவில்லை. மந்திரத்தினால் கட்டுண்ட சர்ப்பம் என்பார்களே, அம்மாதிரி இருந்தேன். அந்த ஸ்திரீ கதவைத் தள்ளிட்டு வந்து என் பக்கமாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று மேஜை மேலிருந்த தோல் பெட்டியைத் திறந்தாள். எதை எதையோ எடுத்து மேஜைமேல் பரப்பினாள். எடுத்து வைத்ததில் சிலவற்றை மறுபடியும் பெட்டிக்குள் எடுத்து வைத்தாள். மற்றவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு அருகில் வந்தாள்.

'ராஜம்மா! உனக்கு நான் இப்போது சொல்லப்போவது ஆச்சரியத்தை உண்டாக்கலாம் ஆனால், ஆச்சரியம் ஒன்றும் இல்லை. விஷயம் என்னவென்று பிற்பாடு சொல்லுகிறேன். முதலில் இந்த ரூபாயையும் ரத்தினமாலை யையும் வாங்கிக் கொள். ரூபாய் இரண்டாயிரம் இருக்கிறது. ரத்தின ஹாரம் ரொம்ப மதிப்புள்ளது. பணம், ஹாரம் இரண்டும் என்னுடைய மகளின் ஸ்ரீதனத்துக்காகக் கொடுக்கிறேன். ஒன்றும் யோசிக்காதே! வாங்கிக்கொள்!' என்றாள். ஒரே சமயத்தில் என்னை அதிசயம், ஆனந்தம், பயம் எல்லாம் பிடுங்கித் தின்றன. குழந்தை சீதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் வருகிறதே என்று சந்தோஷமாயிருந்தது. இவள் யார், இவள் எதற்காகக் கொடுக்கிறாள் என்று ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அவளுடைய பேச்சைத் தட்ட எனக்கு மனோதிடம் இல்லை. கையிலே வைத்துக்கொண்டே, 'இந்தா! பிடி!" என்று இரண்டு தடவை சொன்ன பிறகு இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டேன். 'பத்திரமாய் வை!' என்றாள். 'ஆகட்டும்; அப்புறம் பெட்டியில் வைக்கிறேன்' என்று சொல்லிவிட்டுத் தலையணையின் கீழே ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின ஹாரத்தையும் தள்ளினேன்.

பிறகு அவள், 'ராஜம்மா! இம்மாதிரி நான் பணமும் ஹாரமும் கொண்டு வந்து கொடுத்தது உனக்கு ஆச்சரியமா யிருக்கலாம். இவள் யார் முன்பின் தெரியாதவள் இம்மாதிரி கொடுப்பதற்கு என்று நீ நினைக்கலாம். உனக்கு என்னைத் தெரியாதுதான், ஆனால் உன்னை ரொம்ப நாளாக எனக்குத் தெரியும். வெகு காலத்துக்கு முன்னால் உனக்கு நான் ஒரு கெடுதல் பண்ணினேன்; வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ தெய்வாதீனமாக அப்படி நேர்ந்துவிட்டது. அதற்குப் பரிகாரமாகத்தான் இந்தப் பணத்தையும் ஹாரத்தையும் கொடுத்திருக்கிறேன். இவற்றை நீ பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து கலியாணத்தின் போது உன் மகளுக்குக் கொடுக்க வேண்டும்! ஆனால், இப்படி நான் கொடுத்தேன் என்கிற விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொன்னாலும் உன் புருஷனிடம் சொல்லவே கூடாது, தெரிகிறதா?" என்றாள். நான் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமித்துப் போயிருந்தேன். 'என்ன பேசாமலிருக்கிறாய், ராஜம்மா! நான் சொன்னதெல்லாம் தெரிந்ததா?' என்று சிறிது கடுமையான குரலில் கேட்டாள். 'தெரிந்தது' என்று முணுமுணுத்தேன். 'நான் சொன்னபடி செய்வாயா?' என்றாள். நான் சும்மாயிருந்தேன். உடனே அந்த ஸ்திரீயின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது; பத்திரகாளியாக மாறினாள். கண்கள் நெருப்புத் தணலைப்போல் ஆயின. கைப்பெட்டிக்குள்ளேயே கையை விட்டு எதையோ எடுத்தாள்; எடுத்த வஸ்து பளபளவென்று ஜொலித்தது. அது என்னவென்று நினைக்கிறாய், அண்ணா!" என்று ராஜம் கேட்டு நிறுத்தினாள்.

ராஜம் சொல்லிவந்த கதையைப்பற்றி இன்னது நினைப்பதென்று தெரியாமல் கிட்டாவய்யர் ஸ்தம்பித்துப் போயிருந்தார். ராஜம் சரியான ஞாபகத்துடன் பேசுகிறாளா என்று அடிக்கடி அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் ரத்தின ஹாரமும் சற்று முன் தாம் வாங்கிப் பெட்டியில் வைத்தது என்னவோ உண்மை. ஆகையால் கதையும் ஒருவேளை நிஜமாக இருக்கலாமல்லவா? "எனக்கு எப்படி அம்மா, தெரியும்? தெரிய வேண்டிய அவசியமும் இல்லை; நீ பேச்சை நிறுத்தினால் போதும். ராஜம்! டாக்டர் சொல்லிவிட்டுப் போனது நினைவில்லையா?"

"ஆகா! டாக்டர் இருக்கட்டும் டாக்டர்! இன்னும் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது; அதையும் கேட்டு விடு! அந்த ஸ்திரீ தோல் பெட்டியிலிருந்து எடுத்தது வேறு ஒன்றுமில்லை. கூர்மையாக வளைந்திருந்த ஒரு சின்னக் கத்தி. அதை எடுத்து அவள் என்னுடைய கண் முன்னால் காட்டினாள். 'பார்த்தாயா, ராஜம்மா நன்றாகப் பார்த்துக்கொள். நான் நல்லவர்களுக்கு நல்லவள்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவள். நான் சொன்னபடி எல்லாம் நீ செய்ய வேண்டும். உன் அகத்துக்காரரிடம் ஒரு வார்த்தை கூட நான் வந்தது பற்றிச் சொல்லக் கூடாது. சொன்னதாகத் தெரிந்ததோ; ஒரு நாளைக்கு இந்தக் கத்தியால் உன்னை ஒரே குத்தாகக் குத்திக் குடலைக் கிழித்து விடுவேன்! ஜாக்கிரதை" என்றாள், எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்று பிரகாசித்த அந்தக் கத்தியைப் பயங்கரத்துடன் பார்த்த வண்ணம் இருந்தேன். 'பயப்படாதே, ராஜம்! பயப்படாதே! நான் சொன்னபடி செய்தால் உனக்கு ஒன்றும் வராது!' என்று அந்த ஸ்திரீ சொல்லிக் கொண்டிருக் கையில் யாரோ மாடிப்படி ஏறிவரும் சத்தம் கேட்டது. அவள் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள். 'யார் உன் புருஷனா?' என்று மெல்லிய குரலில் கேட்டாள். 'இல்லை, மகள்!' என்று சொன்னேன். அவளுடைய கலவரம் நீங்கிற்று. சீதா அறைக் கதவின் அருகில் வந்து கதவைத் தட்டினாள். 'அம்மா! காரியமாயிருக்கிறாயா? கதவைத் திற!' என்றாள். நான் படுத்திருந்தபடியே, 'சீதா! படத்துக்குப் பக்கத்தில் விளக்கு எரிகிறதா பார்! இன்று வெளிக்கிழமை அல்லவா? முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக்கொண்டு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லு!' என்றேன். 'சரி, அம்மா' என்று சீதா சமையலறைக்குள் போனாள்.

"அந்த ஸ்திரீ அவசர அவசரமாகத் தோல் பெட்டியைப் பூட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். 'ராஜம்மா! ஜாக்கிரதை! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்!' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். கதவைத் திறந்து கொண்டு வெளித் தாழ்வாரம் சென்று அங்கிருந்து அவள் மச்சுப்படி இறங்கும் சத்தமும் கேட்டது. அப்புறந்தான் எனக்கு உயிர் வந்தது. கொஞ்சம் தைரிமும் வந்தது. இவ்வளவும் ஒருவேளை கனவில் காண் கிறோமோ என்று தோன்றியது. தலையணையின் அடியில் கையை விட்டுப் பார்த்தேன். நோட்டுக் கத்தையும் ரத்ன ஹாரமும் இருந்தன. கனவு காணவில்லை, உண்மையாக நடந்தவைதான் என்று நம்பிக்கை பெற்றேன். இதற்குள் சீதா அறைக்குள் வந்தாள். 'அம்மா! யாராவது வந்திருந்தாளா என்ன? சத்தம் ஏதோ கேட்டதே! - ஏன் அம்மா இந்த நேரத்தில் படுத்திருக்கிறாய்?' என்று கேட்டுக் கொண்டே வந்தவள், இந்த மேஜையைப் பார்த்ததும் பிரமித்து நின்றாள். பிரமிப்புக்குக் காரணம் மேஜையின்மேல் பளபளவென்று ஜொலித்த கத்திதான்! போகிற அவசரத்தில் அந்த ஸ்திரீ அதை எடுத்துப் போக மறந்து விட்டாள். நானும் கவனியாமல் இருந்துவிட்டேன். 'அம்மா! இது ஏதம்மா கத்தி, இதன் பிடி வெகு விசித்திரமாயிருக்கிறதே?' என்று கத்தியை எடுக்கப்போனாள் சீதா. எனக்கு ஒரே திகிலாய்ப் போய்விட்டது. 'வேண்டாம் சீதா வேண்டாம்! அந்தக் கத்தியைத் தொடாதே!' என்றேன். என்னுடைய குரலின் படபடப்பைக் கவனித்த சீதா கத்தியைத் தொடாமல் என் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

இதற்குள் மறுபடியும் மாடிப்படி ஏறும் சத்தம் தடதடவென்று கேட்டது. கத்தியை மறைத்து வைக்கலாமா, அறைக் கதவைத் தாளிடச் சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அந்த ஸ்திரீ புயற்காற்றுப் புகுவதைப்போல் அறைக்குள் புகுந்தாள். நேரே மேஜையருகில் வந்து கத்தியை லபக்கென்று எடுத்துத் தோல் பெட்டியில் வைத்துக் கொண்டாள். பிறகு சீதாவின் முகத்தையும் என் முகத்தையும் இரண்டு மூன்று தடவை மாறி மாறிப் பார்த்தாள். 'ராஜம்மா இந்தப் பெண் உன் குமாரியா?' என்று கேட்டாள். 'ஆமாம்' என்று சொன்னேன். உடனே சீதாவை அவள் கட்டிக்கொண்டு உச்சி முகந்து கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தாள்! கடவுள் உன்னை நன்றாக வைக்கட்டும். ஆண் பிள்ளைகளின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்!' என்றாள். பிறகு என்னைப் பார்த்து 'ராஜம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்! ஜாக்கிரதை!' என்று சொல்லிவிட்டு மறுபடியும் அறையை விட்டுச் சென்றாள். அவள் காலடிச் சத்தம் மறைந்ததும் சீதா என் அருகில் வந்து, 'இது யாரம்மா இந்தப் பைத்தியம்!' என்று கேட்டாள். 'அப்படிச் சொல்லாதே, சீதா! இவள் பைத்தியமில்லை, ரொம்ப நல்ல மனுஷி. இவளுக்கும் எனக்கும் வெகு நாளைய சிநேகிதம்' என்றேன். 'சிநேகிதம் என்றால் நான் பார்த்ததே கிடையாதே!' என்றாள் சீதா. 'நீ பிறப்பதற்கு முன்னால் இவளும் நானும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். அப்புறம் பரேலுக்கு இவள் குடி போய் விட்டாள். அதிகமாக இந்தப் பக்கம் வர முடிவதில்லை' என்றேன். பொய்தான் சொன்னேன், என்னவோ அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது..." இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், தம் மனதிற்குள், "இது மட்டுந்தானா பொய்! இத்தனை நேரம் இவள் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்தான்! பாவம்! சீதாவுக்காகக் கணவனுக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்து விட்டு இந்தக் கதையைக் கற்பனை செய்திருக்கிறாள்," என்று எண்ணிக் கொண்டார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதினாறாம் அத்தியாயம்

தேவி பராசக்தி

கதையோ கற்பனையோ என்று கிட்டாவய்யர் சந்தேகப்படும்படி ராஜம்மாள் கூறிய வரலாறு அத்துடன் முடியவில்லை. ராஜத்தையும் சீதாவையும் அதிசயக் கடலில் மூழ்க அடித்து விட்டு அந்த ஸ்திரீ கீழே இறங்கிப் போன சிலநிமிஷத்துக் கெல்லாம் துரைசாமி வந்து சேர்ந்தார். ராஜத்தைப் பார்த்து "இங்கு யாராவது வந்திருந்தார்களா, என்ன? நான் மச்சுப்படி ஏறி வந்தபோது ஒரு 'ஜெனானா' ஸ்திரீ, முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு தடதடவென்று இறங்கி ஓடினாளே?" என்றார்.

ராஜம் சீதாவைக் குறிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு "இங்கு ஒருவரும் வரவில்லையே!" என்றாள். "போகட்டும்; சாயங்கால வேளையில் நீ ஏன் படுத்திருக்கிறாய்? உனக்கு ஏதாவது உடம்பா, என்ன?" என்று கேட்டார் துரைசாமி. "அதெல்லாம் எனக்கு உடம்பு, கிடம்பு ஒன்றுமில்லை. ஏதோ படபடவென்று வந்தது, படுத்துக் கொண்டேன்" என்றாள் ராஜம். துரைசாமி அருகில் வந்து ராஜத்தின் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தார்! அவருடைய கை ஏன் இவ்வளவு ஜில்லிட்டிருக்கிறது என்று ராஜம் எண்ணினாள். "அசடே! உடம்பு ஒன்றுமில்லை என்கிறாயே! 103 டிகிரி சுரம் இருக்கும் போலிருக்கிறதே! இதோ தெர்மா மீட்டர் எடுத்துக்கொண்டு வருகிறேன்!" என்று துரைசாமி தம்முடைய அறைக்குச் சென்றார். அவர் அப்பால் போனதும் சீதா அம்மாவைத் தொட்டுப் பார்த்து விட்டு, "ஆம் அம்மா! அப்பா சொன்னது சரிதான்! உடம்பு கொதிக்கிறதே?" என்றாள். ராஜத்துக்கும் தனக்குச் சுரந்தான் என்று தெரிந்து விட்டது. உடனே ஒரு சந்தேகம் உதித்தது. சற்று முன் நடந்ததெல்லாம் சுரத்தின் வேகத்திலே தனக்குத் தோன்றிய பிரமையோ என்று எண்ணினாள். அந்த எண்ணம் அவளுக்கு மிக்க வேதனை அளித்தது. அவளுடைய முப்பத்தைந்து பிராயத்தில் இன்று ஒருநாள் அவளுடைய வாழ்க்கை கதைபோல் ஆகியிருந்தது. கதைகளில் நடப்பது போன்ற அதிசயச் சம்பவம் அன்று நடந்திருந்தது. அது பொய்யாய், கானல் நீராய் வெறும் பிரமையாய்ப் போவதாயிருந்தால், அவளுக்கு ஏமாற்றமாயிராதா?

சந்தேகம் தோன்றிய ஒரு நிமிஷ நேரத்துக்கெல்லாம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வழி தோன்றியது. தலையணை யடியில் கையை விட்டுத் துழாவிப் பார்த்தாள். ரூபாய் நோட்டுக் கத்தையும் ரத்தின ஹாரமும் கையில் தட்டுப்பட்டன. பிரமையல்ல, உண்மைதான் என்று நிச்சயம் செய்துகொண்டாள். சீதாவை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டு, "சீதா! அப்பாவிடம் ஒன்றும் சொல்லாதே! காரணம் பிற்பாடு சொல்கிறேன்" என்று காதோடு சொன்னாள். சீதாவும் குறிப்பை அறிந்து கொண்டு, "சரி அம்மா!" என்றாள். துரைசாமி தெர்மாமீட்டர் கொண்டு வந்து வைத்துப் பார்த்தார், சுரம் 104 டிகிரி இருந்தது. "ஏதோ இந்த வருஷத்துக்கு இன்னும் நீ படுத்துக் கொள்ளவில்லையே என்று பார்த்தேன். படுத்துக்கொண்டாயல்லவா?" என்றார் துரைசாமி. பிறகு அவசரமாக டாக்டரை அழைத்து வரச் சென்றார்.

அன்று படுத்த ராஜம் இருபது நாளைக்குமேல் ஆகியும் எழுந்திருக்கவில்லை. முதலில் 'இன்புளூயன்ஸா' என்றார் டாக்டர். ஐந்து நாள் ஆன பிறகு, "டைபாய்டு என்று சந்தேகமாயிருக்கிறது; பார்க்கலாம்" என்றார். பத்து நாள் ஆன பிறகு, "டைபாய்டு இல்லை; 'காலா ஹஸார்' என்று ஒரு புது சுரம் இப்போதெல்லாம் வருகிறது ஒருவேளை அதுவாயிருக்கலாம்" என்றார். கடைசியில், இது உடம்பைப் பற்றியே வியாதியே இல்லை; மனோ வியாதிதான் என்று முடிவு கூறினார். ஆயினும் தினம் தினம் மருந்து எழுதிக் கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

இவ்வளவையும் ஓரளவு அவநம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், "போதும் ராஜம்! நிறுத்து! பாக்கியை நாளைக்குச் சொல்லலாம்!" என்றார். இதற்குள் டாக்டருடன் மருந்துக் கடைக்குச் சென்ற துரைசாமியும் மருந்து வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். முன்னதாக அவருடைய வரவைத் தெரிவித்துக் கொண்டே சீதா அந்த அறைக்குள்ளே பிரவேசித்தாள். தனது மனைவியும் மைத்துனரும் இருந்த நிலையைப் பார்த்துவிட்டுத் துரைசாமி, "அண்ணா அருமையாக வந்திருக்கிறீர்களே என்று மொச்சு, மொச்சு என்று பேசிக் கொட்டினாளாக்கும். அதிகமாகப் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அவள் பேசாதபடி நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். நான் சொன்னால் கேட்பதில்லை" என்றார்.

கிட்டாவய்யர் தம் மனத்திற்குள், "நல்ல வேலை நமக்கு இடுகிறார்? அகண்ட காவேரியில் வரும் வெள்ளத்தை அணை போட்டு நிறுத்து என்று சொல்வது போலிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டார். வழக்கம்போல் அடுத்த நாளும் டாக்டர் வந்தார். தமக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே ராஜம் வியாதியாய்ப் படுத்துக் கொண்டாள் என்ற பாவத்துடனே வழக்கமாகச் சோதனை களைச் செய்தார். "நான் சொன்னது சரிதான்; அண்ணா வந்ததில் தங்கைக்குக் கொஞ்சம் உடம்பு சௌகரியமாய்த்தான் இருக்கிறது!" என்றார். ஆனாலும் காகிதமும் பேனாவும் எடுத்துப் பத்துவிதமான மருந்துகளை வரிசையாக எழுதிக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்.

அன்றைக்கும் டாக்டரின் காரில் துரைசாமி மருந்து வாங்கப் போன பிறகு, கிட்டாவய்யர், தங்கையின் சமீபத்தில் போய் உட்கார்ந்தார். "ராஜம்! நீ அதிகமாய்ப் பேச வேண்டாம் ஆனால், ஒரு விஷயம் கேட்கிறேன்; அதற்கு மட்டும் யோசித்துப் பதில் சொல்! நீ கொடுத்த பணத்தையும் நகையையும் சீதாவுக்காக உபயோகப்படுத்த வேண்டியதுதானா? அவை கிடைத்த விதத்தைப் பற்றி நீ சொன்ன விவரம் அவ்வளவு திருப்திகரமாயில்லையே! அதாவது கோயில் குளம் அல்லது தர்ம காரியத்துக்குக் கொடுத்து விடுகிறேனே! சீதாவுக்கு நான் கலியாணம் பண்ணி வைக்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். யாரோ வழியிலே போகிற ஸ்திரீ கொடுத்தது நமக்கு என்னத்திற்கு? அவள் யாரோ, என்னமோ, எப்படி இந்தப் பணமும் நகையும் அவளுக்குக் கிடைத்ததோ? அவள் கத்தியை வைத்து விட்டுத் திரும்பி வந்து எடுத்துப் போனதாக நீ சொன்னதெல்லாம் அவளைப்பற்றி என்னவெல்லாமோ சந்தேகத்தை உண்டாக்குகிறது. நன்றாய் யோசித்துச் சொல்லு!" என்றார்.

"நன்றாய் யோசித்து விட்டேன், அண்ணா! ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாக யோசித்து விட்டேன். உன்னைப் போலவே நானும் ஏதாவது தான தர்மத்துக்குக் கொடுத்து விடலாமென்று யோசித்தேன். பீஹார் பூகம்ப நிதிக்குக் கொடுத்து விடலாம் என்று கூட எண்ணினேன். உனக்குத் தெரியும் அல்லவா, அண்ணா! நீதான் பத்திரிகை படிக்கிறவன் ஆயிற்றே? எத்தனையோ பெரிய பட்டிணங்கள் எல்லாம் ஒரே நிமிஷத்தில் மண்ணோடு மண்ணாகி விட்டதாம். அங்கே ஜனங்களின் கஷ்டத்தைக் கேட்கச் சகிக்க வில்லை. அந்த நிதிக்குக் கொடுத்து விடலாமா இந்தப் பணத்தை என்று நினைத்தேன்.ஆனால், அப்படிச் செய்ய மனது வரவில்லை அது சீதாவின் சீதனம் - வேறு விதமாய்ச் செலவழிக்க எனக்குப் பாத்தியதை இல்லை என்று தோன்றியது. பூகம்ப நிதிக்கு நீ ஏதாவது கொடுத்தாயா, அண்ணா?" என்று கேட்டாள்.

"அதெல்லாம், பெரிய விஷயம் அம்மா! நீயும் நானும் கொடுத்துத்தானா ஆகப் போகிறது?" "அப்படியில்லை ஏதோ நாமும் மனுஷ ஜன்மந்தான் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? நம்மாலானதை நாம் செய்கிறது?" "ஆகட்டும்; அப்படியே செய்யலாம். சீதாவின் விஷயத்தை இப்போது பேசி முடிக்கலாம்; அந்தப் பணத்தையும் நகையையும்...." "சீதாவுக்குக் கிடைத்த அந்தச் சீதனம் சாதாரண சீதனமல்ல, அத்துடன் தெய்வத்தின் ஆசிர்வாதமும் சேர்ந்திருக்கிறது, அண்ணா!" "அது எப்படிச் சொல்கிறாய்? அந்த ஸ்திரீ யார், எப்படிப் பட்டவள் என்று எதுவும் தெரியவில்லையே?" ராஜம் சற்று நேரம் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, கண்ணைத் திறந்து கிட்டாவய்யரை ஏறிட்டுப் பார்த்து, அந்த ஸ்திரீ யார் என்று எனக்குத் தெரியும், அண்ணா!" என்றாள்.

"தெரியுமா? பின்னே ஏன் யாரோ என்று சொன்னாய்? அவள் யார்?" "இத்தனை நாளாக அவள் யார் என்று தெரியவில்லை; அதனால் 'யாரோ' என்றேன். நேற்று இரவு நான் கண்ட கனவிலே இந்த ஸ்திரீ இன்னார் என்று தெரிந்தது." "அப்படியா, அம்மா! யார் என்று தெரிந்ததா?" "அவள் 'தேவி பராசக்தி' அண்ணா! என்னுடைய இருபது வருஷப் பிரார்த்தனை வீண் போகவில்லை?" என்றாள் ராஜம். அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. இதனால் கிட்டாவய்யருடைய மனம் இன்னும் அதிகமாகக் குழம்பியது. "டாக்டர் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது. இவளுக்கு மனத்திலேதான் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டார். உடம்பாயிருந்தாலும் மனதாயிருந்தாலும் சீக்கிரத்தில் ராஜத்தைக் குணப்படுத்தி அருளும்படி அவளுடைய குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார். அதற்கு மறு நாளும் டாக்டர் வந்தார். வழக்கம்போல் சோதனை செய்து பார்த்தார். "இன்றைக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை!" என்றார். பிறகு 'பிரிஸ்கிருப்ஷன்' எழுதுவதற்குக் கையில் காகிதமும் பேனாவும் எடுத்தார் ஆனால் ஒன்றும் எழுதவில்லை. திடீரென்று ஏதோ தோன்றியவரைப் போல் காகிதத்தையும் பேனாவையும் கீழே வைத்தார்.

"மிஸ்டர் துரைசாமி! ஒரு விஷயம் சொல்லட்டுமா?" என்றார். "பேஷாகச் சொல்லுங்கள்! கேட்பானேன்?" என்றார் துரைசாமி. "உங்கள் சம்சாரத்துக்கு இனிமேல் இந்த மருந்துகளினாலெல்லாம் உபயோகமில்லை!" "பின்னே என்ன மருந்து உபயோகம்? ஆயுர்வேதம் பார்க்கலாம் என்கிறீர்களா?" "ஆயுர்வேதத்திற்குப் போனால் அவ்வளவுதான். இந்த அம்மாளை யமனிடம் ஒப்புவிக்கிற மாதிரிதான்!" "பின்னே என்ன சொல்கிறீர்கள்?"

"உங்கள் மனைவிக்கு இப்போது கொடுக்க வேண்டிய மருந்து இடமாறுதல்தான். இந்தப் பம்பாய் நகரத்தில் இருபது வருஷமாக இருந்திருக்கிறார்கள் அல்லவா? வேறு ஊருக்குப் போய்ச் சில நாள் இருந்துவிட்டு வரட்டும். உங்கள் மைத்துனர் கிட்டாவய்யர் கிராமவாசிதானே? அவரோடு கூட்டி அனுப்புங்களேன்!" "எனக்குக் கொஞ்சங்கூட ஆட்சேபமில்லை. கிட்டாவய்யர் அழைத்துப் போவதாயிருந்தால்...." "அழைத்துப் போவதாயிருந்தால் என்ன? திவ்யமாக அழைத்துப் போகிறேன். போன வருஷமே அழைத்துப் போகிறேன் என்று சொன்னேன். இவர்தான் அனுப்பவில்லை...." "நானா அனுப்பவில்லை? உங்கள் தங்கைதான் 'போக மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள்."

"இந்த வருஷமும் அதையேதான் சொல்லுகிறேன்!" என்றாள் ராஜம்மாள். "இந்தப் பிடிவாதம் உனக்கு ஆகாது. அம்மா!ஊர் மாறாவிட்டால் உனக்கு உடம்பு குணமாகாது." "டாக்டர்! இருபது வருஷமாக இந்த இடத்தில் இருந்து விட்டேன். பாக்கி இருக்கும் சில நாளும் இங்கேயே இருந்து விடுகிறேன்." "அப்புறம் உங்கள் இஷ்டம்; நான் என்ன சொல்லட்டும்?" என்று டாக்டர் கூறி மறுபடியும் காகிதத்தையும் பேனாவையும் எடுத்து வரிசையாக மருந்துகளை எழுதினார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதினேழாம் அத்தியாயம்

துரைசாமியின் இல்லறம்

டாக்டருடைய யோசனை ராஜத்தைத் தவிர மற்ற எல்லாருக்கும் பிடித்தமாயிருந்தது. கிட்டாவய்யர் ராஜத்தைத் தம்முடன் ஊருக்கு வரும்படி அடிக்கடி வற்புறுத்தினார். அவருடன் சேர்ந்து துரைசாமியும் சொன்னார். இந்த இருவரையும் விட அதிகமாகச் சீதா தன் தாயாரிடம் மன்றாடினாள். "ஊருக்குப் போய் வரலாம் அம்மா! எனக்கு லலிதாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!" என்பதாக நிமிஷத்துக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், ராஜம்மாள் இதற்கெல்லாம் இணங்குவதாக இல்லை. இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு துரைசாமியின் சுபாவத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. கிட்டாவய்யர் வந்த புதிதில் சாந்தமாகவும் எல்லாரிடமும் பிரியமாகவும் இருந்தவர் திடீரென்று வெறி கொண்டவர் போல் காணப்பட்டார். வீட்டில் அதிகமாகத் தங்குவதில்லை, யாருடனும் பேசுவதில்லை. ராஜத்தின் உடம்பைப் பற்றிக் கவனிப்பதில்லை; சீதாவின் பேரிலும் எரிந்து விழுந்தார். பாத்திரங்களையும் சாமான்களையும் தடார் படார் என்று வீசி எறிந்தார்.

ஒரு நாள் இரவு ராஜம் படுத்திருந்த அறைக்குள்ளே பெரிய ரகளை நடந்தது. துரைசாமியும் ராஜமும் முதலில் சாவதானமாகப் பேசத் தொடங்கினார்கள். கிட்டாவய்யரும் சீதாவும் இன்னொரு அறையில் படுத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால், அவர்கள் தூங்கவில்லை. துரைசாமிக்கும் ராஜத்துக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக அவர்களுடைய காதில் விழுந்து கொண்டிருந்தது. சற்று நேரத்துக்குள் சம்பாஷணையின் ஸ்வரம் ஏறியது. வார்த்தைகள் வரவரக் கடுமையாயின. "நான் செத்துப் போனால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும்!" "ஒரு வழியாகச் செத்துத் தொலைந்து போய் விடேன்! உயிரோடிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்?" இப்படிப்பட்ட கொடூரமான பேச்சுக்கள் கேட்டன.

கிட்டாவய்யருக்குத் தன் மனைவியின் சுபாவத்தில் சில நாளாக ஏற்பட்டிருந்த மாறுதல் ஞாபகம் வந்தது. அதைப் பற்றி அவர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவர் இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையைக் காட்டிலும் தம்முடைய இல்வாழ்க்கை எவ்வளவோ மேலானதல்லவா என்று எண்ணித் திருப்தி அடைந்தார். திடீரென்று ராஜத்தின் அறையில் 'பட், பட், பட்' என்று சத்தம் கேட்டது. "ஐயோ! வேண்டாமே ஐயோ! வேண்டாமே!" என்று ராஜம் அலறினாள். ராஜத்தைத் துரைசாமி அடித்துக் கொல்லுகின்றார் என்று நினைத்துக் கொண்டார் கிட்டாவய்யர். நிலைமை மிஞ்சிவிட்டது இனித் தாம் சும்மா படுத்துக் கொண்டிருக்கக் கூடாதென்று ஒரு நொடியில் தீர்மானித்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். அறைக் கதவு வெறுமனே சாத்தியிருந்தபடியால் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தார்.

அறைக்குள் அவர் கண்டது அவர் நினைத்ததற்கு மாறாக இருந்தது. துரைசாமி ராஜத்தை அடிக்கவில்லை; அவர் தம்முடைய தலையிலேதான் 'பட், பட், பட்' என்று போட்டுக் கொண்டிருந்தார். அதை நிறுத்துவதற்குத்தான் ராஜம், "வேண்டாமே! வேண்டாமே!" என்று கத்தினாள். அந்த ஒரு கண நேரத்தில் கிட்டாவய்யருக்கு ஒரு பெரிய உண்மை புலனாயிற்று வீட்டின் ஒரு சிறிய பலகணியின் வழியாக வெளியே பார்த்தால் விஸ்தாரமான மைதானமும் தொலை தூரத்திலுள்ள மரங்களும் மலைத் தொடர்களும் மலைச் சிகரத்துக்கு மேலே வானில் உலாவும் மேகங்களும் தெரிவது போலக் கிட்டாவய்யருக்கு இந்த ஒரு சம்பவத்திலிருந்து அந்தத் தம்பதிகளின் இருபது வருஷத்து இல்வாழ்க்கையின் இயல்பு தெரிய வந்தது. இதுவரையில் மாப்பிள்ளை துரைசாமி தன் சகோதரியைக் கொடுமைப்படுத்துவதாக அவர் நினைத்து ராஜத்தினிடம் இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது கொடுங் கோன்மை செலுத்துவது உண்மையில் ராஜம்தான் என்பதை அறிந்து துரைசாமியிடம் இரக்கம் கொண்டார்.

கிட்டாவய்யரைக் கண்டதும் துரைசாமி தம் தலையில் அடித்துக் கொள்வதைச் சட்டென்று நிறுத்தினார்; ராஜமும் அலறுவதை நிறுத்தினாள். துரைசாமியின் அருகில் சென்று கிட்டாவய்யர் உட்கார்ந்து "மாப்பிள்ளை! இப்படிச் செய்யலாமா!" என்று சாந்தமான குரலில் கூறினார். இதற்குப் பதிலாகத் துரைசாமி சத்தம் போட்டுக் கத்தினார். "ஆமாம், ஸார்! 'இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா?' என்று என்னிடந்தான் சொல்லுவீர்கள். இவளுடைய மூடப் பிடிவாதத்தை மாற்ற உங்களால் முடியவில்லை யல்லவா! 'ஊர் மாறினால்தான் இவள் பிழைப்பாள்' என்று, டாக்டர் கண்டிப்பாகச் சொல்கிறார். இவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? என் காலடியிலேயே கிடந்து செத்துப் போக வேண்டுமாம்! அப்போதுதான் இவளுக்கு நல்ல கதி கிடைக்குமாம்! இவளுடைய எண்ணம் எப்படி இருக்கிறது, பாருங்கள்! குழந்தை சீதாவுக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டுமே என்ற ஆசைகூட இவளுக்குக் கிடையாது! 'செத்துப் போகிறேன்' 'செத்துப் போகிறேன்' என்று இருபத்து நாலு மணி நேரமும் இதுவே ஜபம்!- உண்மையாகவே இவள் செத்துத் தொலைந்து போய்விட்டால் தாயில்லாப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்ன செய்கிறது? சீதாவுக்குக் கல்யாணம் செய்து வைத்து இவள் போய்த் தொலைந்தாலும் பாதகமில்லை?"

இந்தச் சண்டமாருதப் பேச்சுக்கு முன்னால் என்ன பதில் சொல்வது என்று கிட்டாவய்யர் திகைத்து நிற்கையில் ராஜம்மாள் அவருடைய உதவிக்கு வந்தாள். மூச்சு வாங்கிக் கொண்டே அவள் பேசினாள்: "நான் உன்னுடன் ஊருக்கு வருகிறேன், அண்ணா! நாளைக்கே புறப்படத் தயார். நான் இந்த வீட்டில் இருந்து இவர் காலடியில் நிம்மதியாகச் சாவது இவருக்குப் பிடிக்கவில்லை. அங்கே மன்னியிடம் இடிபட்டுப் பேச்சுக் கேட்டுத்தான் சாகவேண்டுமாம். அகண்ட காவேரிக் கரையிலேதான் என்னை வைத்துக் கொளுத்த வேண்டுமாம்!..." "ராஜம்! என்ன இப்படி உளறுகிறாய்? உனக்கு மூளை அடியோடு பிசகிவிட்டதா! ராஜம்பேட்டையில் இருக்க உனக்கு இஷ்டமில்லாவிட்டால் உன் தமக்கை வீடு பக்கத்து ஊரில் இருக்கிறதே. அங்கே இருக்கலாமே? உன் பேரில் எங்களுக் கெல்லாம் என்ன விரோதமா? டாக்டர் சொன்னபடியினால் தானே எல்லோரும் வற்புறுத்து கிறோம்? கொஞ்சம் மனசைச் சாந்தப்படுத்திக் கொண்டு யோசித்துப் பேசு அம்மா!" என்றார் கிட்டாவய்யர்.

"சாந்தமாக யோசித்துத்தான் சொல்லுகிறேன், அண்ணா! ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்! நான் உன்னோடு புறப்பட்டு வருகிறேன்! நிச்சயமாகத்தான் சொல்லுகிறேன்!" என்றாள் ராஜம். "இவளுடைய பிடிவாதத்துக்கு என்ன காரணம் தெரியுமா, ஸார்! இவள் இங்கே இருந்துதான் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாளாம்! இல்லாவிட்டால் நான் குடித்துக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விடுவேனாம்! அப்படி இவள் மனத்திற்குள்ளே எண்ணம்! அவ்விதமெல்லாம் நான் கெட்டுப் போகிறவனாயிருந்தால் இவளால் என்னைத் தடுத்துவிட முடியுமா?..." "நான் தான் ஊருக்குப் புறப்படுகிறேன் என்று சொல்லி விட்டேனே! இன்னும் என்னத்துக்காக இந்தப் பேச்செல்லாம்? அண்ணா நீ போய்ப் படுத்துக்கொள்!... சீதா! சீதா!" என்று ராஜம் கூவினாள்.

"ஏன் அம்மா!" என்று வெளியிலிருந்தே சீதா கேட்டாள். "இன்னும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாயா? இங்கே வா, அம்மா!" என்றாள் ராஜம். சீதா குதித்துக் கொண்டே உள்ளேவந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது. அப்பாவும், அம்மாவும் இந்த மாதிரிச் சண்டை போடுவது வெகு சகஜமாகையால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. சண்டையின் முடிவாக ஊருக்குப் போகிற விஷயம் முடிவானது அவளுக்கு அளவில்லாத குதூகலத்தை அளித்திருந்தது! "சீதா உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறி விட்டது. ஊருக்குப் போகவேண்டும், லலிதாவைப் பார்க்க வேண்டும் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாயே? கடைசியாக நாம் ஊருக்குப் போகிறதென்றே தீர்மானமாகிவிட்டது சந்தோஷந்தானே?"என்றாள் ராஜம்."ரொம்ப சந்தோஷம், அம்மா!"என்றாள் சீதா.

அன்று இரவிலிருந்து ராஜத்தின் உடம்பு விரைவாகத் தேறி வந்தது. கிட்டாவய்யர் பம்பாய்க்கு வந்த எட்டாவது நாள் அவரும் ராஜம்மாளும் சீதாவும் விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷனில் மதராஸ் மெயிலில் ஏறினார்கள். துரைசாமி ஸ்டேஷனுக்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொடுத்து அவர்களை ரயில் ஏற்றி விட்டார். விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷன் அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டு பிளாட்பாரங்களில் ஏக காலத்தில் ரயில் வண்டிகள் வரும் சத்தமும், புறப்படும் சத்தமும், வண்டிகள் கோக்கப்படும் சத்தமும், ஆயிரக்கணக்கான பிரயாணிகள் பல பாஷைகளில் சம்பாஷிக்கும் சத்தமும் 'சாவாலா'க்களின் கூவலும், 'பாணி வாலா'க்களின் கூக்குரலும், போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமும், பத்திரிகைச் சிறுவர்களின் ஆரவாரமும் சேர்ந்து காது செவிடுபடும்படியான பெரும் கோஷமாக எழுந்து கொண்டிருந்தன. வெள்ளைக்காரர்களும், வெள்ளைக் காரிச்சிகளும், குஜராத்திகளும், மராட்டிகளும், பார்ஸிகளும், மதராஸிகளும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், கிழவர்களும் ஒருவரோடொருவர் மோதி இடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றிலும் ராஜத்தின் கவனம் செல்லவில்லை. அவ்வளவு சத்தங்களிலே எதுவும் அவளுடைய காதில் விழவும் இல்லை. அவளுடைய இரு கண்களும் துரைசாமியின்மீது ஏகாக்கிரக பாவத்துடன் படிந்திருந்தன. துரைசாமி சொன்ன வார்த்தைகளையே அவளுடைய காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன. ரயில் புறப்படும் சமயத்தில் கிட்டாவய்யர் ரயில் வண்டியின் கதவு அருகில் நின்று துரைசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பேசிக் கொண்டிருந்தபோதே அவருடைய கவனம் வேறு பல விஷயங்களின் மீதும் சென்று கொண்டிருந்தது. முக்கியமாகப் பத்திரிகை விற்ற பையன்கள் கூக்குரல் போட்டுக் கத்திய ஒரு விஷயம் அவர் காதில் விழுந்து மனத்திலும் பதிந்தது.

"ரஜனிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சி" "ஒரு பெண் பிள்ளையின் சாகசம்" "கையில் கத்தியுடன் கைது செய்யப்பட்டாள்" என்று அந்தப் பத்திரிகை விற்ற பிள்ளைகள் ஆங்கிலத்திலும் ஹிந்துஸ்தானியிலும் கூச்ச லிட்டார்கள். கிட்டாவய்யர் தமக்குத் தெரிந்த இங்கிலீஷ் ஞானத்தைக் கொண்டு விஷயத்தை ஒருவாறு அறிந்து கொண்டார். துரைசாமியுடன் பேசிக்கொண்டிருந்த போதே, "இது என்ன மகாராஜா கொலை விஷயம்?" என்று கேட்டார்."பம்பாயில் இந்த மாதிரி எவ்வளவோ நடக்கும்! நமக்கென்ன அதைப் பற்றி?" என்று துரைசாமி கூறியபோது அவருடைய முகம் கறுத்துச் சுருங்குவதைக் கிட்டாவய்யர் கவனிக்கும்படி நேர்ந்தது.

இதற்குள்ளே வண்டி புறப்படும் நேரம் வந்துவிட்டது. ரயில் நகரத் தொடங்கிய பிறகு துரைசாமி உணர்ச்சி மிகுந்த குரலில் உரத்த சத்தம் போட்டுக் கூறியதாவது: "ராஜம்! கூடிய சீக்கிரம் நான் அங்கே வந்து உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறேன். வீண் கவலைப்படாதே! நான் சரியாக இருப்பேன்! சீதா! அம்மாவைச் சரியாகப் பார்த்து கொள்! நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும் கிட்டாவய்யர்! போய் வருகிறீர்களா? ஜாக்கிரதை! இரயில் வண்டியின் உட்புறம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள்! ராஜம்! உடம்பு ஜாக்கிரதை!" துரைசாமி உண்மையாகவேதான் அவ்விதமெல்லாம் சொன்னார். "சீக்கிரத்தில் ஊருக்கு வந்து உங்களை அழைத்து வருகிறேன்" என்று அவர் கூறியதும் மனப்பூர்வமாகத்தான். ஆனால் மனிதன் ஒருவிதத் திட்டம் போட்டிருக்க விதி வேறு விதமாகத் திட்டம் போடுகிறதை உலகில் பார்க்கிறோமல்லவா!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பதினெட்டாம் அத்தியாயம்

மூன்று நண்பர்கள்

தேவபட்டணத்தின் தேரோடும் மாடவீதியில் எதிர் எதிராக இரண்டு மச்சு வீடுகள் இருந்தன. இரண்டு வீடுகளிலும் வாசல் தாழ்வாரத்திற்கு இரும்புக் கம்பியினால் அடைப்புப் போட்டிருந்தது. இரண்டு வீட்டு வாசற் புறத்திலும் ஒவ்வொரு போர்டு தொங்கிற்று. ஒரு போர்டில், "ஆர், ஆத்மநாதய்யர்,பி.ஏ., பி.எல்., அட்வகேட்" என்றும் இன்னொரு போர்டில், "என். தாமோதரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அட்வகேட்" என்று எழுதியிருந்தது ஆத்மநாதய்யரும், தாமோதரம் பிள்ளையும் நெடு நாளைய சிநேகிதர்கள், தேவபட்டணத்தில் பெரிய வக்கீல்கள். இருவரும் பெரிய குடும்பிகள்; நல்ல சம்பாத்தியம் உள்ளவர்கள்; ஆனாலும் பெரிய வீடு கட்டிக் கொஞ்சம் கடன்பட்டிருந்தார்கள். இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுடைய அந்தஸ்தில் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. 'பப்ளிக் பிராஸிகியூடர்' பதவிக்கு இருவரும் பிரயத்தனம் செய்தார்கள். ஒருவருக்கொருவர் தெரிந்துதான் பிரயத்தனம் செய்தார்கள். "தாமோதரம் பிள்ளைக்கு எந்தக் காரணத்தி னாலாவது கொடுக்காவிட்டால் எனக்குக் கொடுங்கள்" என்று ஆத்மநாதய்யர் கேட்டார். "ஆத்ம நாதய்யருக்கு ஒருவேளை கொடுக்காவிட்டால் எனக்குக் கொடுங்கள்" என்று தாமோதரம் பிள்ளை சொன்னார். ஊரில் இன்னும் பல வக்கீல்களும் தத்தமக்குப் பதவிக்காகப் பிரயத்தனம் செய்தார்கள். கடைசியில் ஸ்ரீ தாமோதரம் பிள்ளைக்குப் 'பப்ளிக் பிராஸிகியூடர்' வேலை கிடைத்தது. இதைக் குறித்து அபார சந்தோஷமடைந்து முதன் முதலில் ஸ்ரீ தாமோதரம் பிள்ளைக்குப் 'பார்ட்டி' கொடுத்தவர் ஸ்ரீ ஆத்மநாதய்யர்.

சந்தோஷம் ஒருபுறம் இருந்தபோதிலும் ஆத்மநாதய்யரின் மனத்தில், "நம்முடன் இவ்வளவு சிநேகமாயிருந்த மனிதர் இந்த ஒரு விஷயத்தில் நமக்கு விட்டுக் கொடுக்கவில்லை பார்த்தாயா?" என்ற எண்ணம் இருந்தது. தாமோதரம் பிள்ளையின் மனத்திலோ, "நம்முடன் இவ்வளவு சிநேகமாயிருந்த மனிதர் கடைசியில் நம்மோடு போட்டியிட முன் வந்தார் அல்லவா?" என்ற எண்ணம் இருந்தது. இம்மாதிரி எண்ணத்தை இருவரும் தங்கள் மனதிற்குள் வைத்துக்கொண்டு மற்றபடி முன் மாதிரி சிநேகமாகப் பழகி வந்தார்கள். ஆனால் பழைய தலைமுறையைச் சேர்ந்த வயதான இந்த மனிதர்களைப் பற்றி நமக்கு இப்போது என்ன கவலை? இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் கவனிக்கலாம். தாமோதரம் பிள்ளை வீட்டின் மூன்றாவது மச்சில் ஒரு நாள் முன்னிரவில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து மூன்று வாலிபர்கள் உல்லாசமாகப் பேசிக்கொண்டிருந் தார்கள். அவர்களில் ஒருவன் தாமோதரம் பிள்ளையின் மூத்த மகனான அமரநாதன்; இன்னொருவன் ஆத்மநாதய்யரின் சீமந்த புத்திரனான பட்டாபிராமன். மூன்றாவது வாலிபன் நமது ராஜம்பேட்டை கிட்டாவய்யரின் திருக்குமாரன் சூரிய நாராயணன். முதல் இருவரும் இந்த வருஷத்தில் பி.ஏ. பரீட்சை எழுதுவதற்குப் படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் வயது இருபது ஆனவர்கள். சூரியநாராயணன், அவர்களுக்கு இரண்டு வயது சின்னவன். ஆனாலும் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குத்தான் படித்துக் கொண்டிருந்தான்; ஏனெனில் கொஞ்சம் வயதான பிறகே அவனை ஹைஸ்கூல் படிப்புக்காகக் கிட்டாவய்யர் தேவபட்டணத்துக்கு அனுப்பினார்.

ஆத்மநாதய்யர் கிட்டாவய்யரின் வக்கீல்; நெடுநாளைய சிநேகிதர். ஆகையால் பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படி அவரிடம் கிட்டாவய்யர் சொல்லியிருந்தார். சூரியநாராயணன் ஹோட்டலில் சாப்பிட்டான். படிப்பதற்கு வசதியிருக்கும் என்று ஆத்மநாதய்யர் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தான். "அமர்நாத்! நம்ம சூரியா நாளைக்கு ஊருக்குப் போகிறான் தெரியுமோ, இல்லையோ?" என்றான் பட்டாபி. "அப்படியா? இப்போது ஊரில் என்ன விசேஷம்? பரீட்சை நெருங்கிவிட்டதே!" என்றான் அமரநாத். "மதராஸிலிருந்து யாரோ பெண் பார்க்க வருகிறார்களாம்; அதற்காக என்னை வந்துவிட்டுப் போகும்படி அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்" என்றான் சூரியா. "யாரோ பெண் பார்ப்பதற்கு வந்தால் உனக்கு என்னடா வந்தது? நீ பெண்ணா? அல்லது யாரோவா?" என்றான் அமரநாதன். "என்ன இப்படிக் கேட்கிறாய்? இவனுடைய தங்கைக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிறதாயிருந்தால் இவன் அங்கே இருக்க வேண்டாமா?" என்றான் பட்டாபிராமன். "யார்? சூரியாவின் தங்கை லலிதாவுக்கா கல்யாணம்? அவளைப் பார்ப்பதற்காகவே மதராஸ்காரன் வருகிறான்? அழகாயிருக்கிறதே! ஏனப்பா பட்டாபிராமா! சூரியாவின் தங்கையை நீ கட்டிக்கொள்ளப் போகிறாய் என்றல்லவா எண்ணியிருந்தேன்....?" "சீ! சீ! என்ன இப்படி உளறுகிறாய்? அதுவும் சூரியாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு."

"உளறல் என்னடா உளறல்? உண்மையைச் சொன்னால் உளறலா? சூரியாவைத்தான் கேட்கிறேனே? எனக்கு என்ன பயம் ஏண்டா, சூரியா? நம்ம பட்டாபிராமன் தினம் பொழுது விடிந்தால் லலிதாவைப் பற்றியே எண்ணி எண்ணி உருகிக் கொண்டிருக்கிறானே!- அப்படியிருக்கும்போது லலிதாவைப் பார்க்க மதராஸிலிருந்து ஒருவன் வருவானேன்?" என்றான் அமரநாத். "அதெல்லாம் எனக்கென்ன தெரியும், ஸார்! என்னைக் கேட்டுக் கொண்டா ஏற்பாடு செய்கிறார்கள்? ஒருவேளை பட்டாபிக்கு ஜாதகப் பொருத்தம் சரியில்லையோ என்னமோ?" என்றான் சூரியா. "ஜாதகம் பார்க்கிறது, கீதகம் பார்க்கிறது என்றெல்லாம் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நம்முடைய தேசம் பாழாய்ப் போகிறது நடக்கிற கல்யாணம் எல்லாம் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறார்கள். ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு நடப்பதென்ன? 100-க்கு 90 தம்பதிகளின் இல்வாழ்க்கை நரகமாயிருக்கிறது. எத்தனையோ பெண்கள் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குள்ளே விதவைகளாகித் தொலைகிறார்கள். விதவைகளோடு நிற்கிறார்களா? எத்தனையோ காரியங்களுக்கு அபசகுனமாக எதிரே வந்து காரியங்களைக் குட்டிச் சுவராக்கு கிறார்கள். இந்தத் தேசத்திலேயுள்ள ஜாதகங்களை யெல்லாம் திரட்டித் தீயிலே போட்டுப் பொசுக்கினால் எவ்வளவு நன்மையுண்டு!" என்று குட்டிப் பிரசங்கம் செய்தான் அமரநாத்.

"எல்லாம் வாய்ப் பேச்சுத்தான்; உன் தகப்பனார் கூடப் பெரிய 'சூனா மானா' மாதிரிதான் பேசுகிறார். ஆனால், போன வருஷம் உன் சகோதரியின் கல்யாணம் நடந்ததே, பிராமணப் புரோகிதரைக் கூப்பிட்டுத்தானே நடத்தினார்? அப்புறம் 'ஜோஸ்யத்தில் எனக்கு நம்பிக்கையேயில்லை; சுத்த ஃபிராடு!' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், பப்ளிக் பிராஸிகியூடர் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் ஏற்பட்டதும் சப்தரிஷி வாக்கியம் என்னும் ஏட்டுச் சுவடி வலையில் விழுந்து விட்டாரா இல்லையா?" "பட்டாபி! இது என்ன வாதத்தில் சேர்ந்தது? என் அப்பா செய்யும் காரியங்களுக்கெல்லாம் நான் ஜவாப்தாரியா?" என்றான் அமரநாத். "ரொம்ப சரி! அது போலவே சூரியா தங்கையின் கல்யாணத்துக்கும் ஜாதகத் தடைக்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய ஜாதகத்தைக் கேட்கவும் இல்லை; பார்க்கவும் இல்லை. கலியாண விஷயத்தில் என்னுடைய திடமான கொள்கை உனக்குத் தெரியாதா? பி.ஏ. பாஸ் செய்து விட்டுக் குறைந்த பட்சம் மாதம் இருநூறு ரூபாய் சொந்தத்தில் சம்பாதிக்கும் நிலைமை ஏற்பட்ட பிறகுதான் நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே?"

"அடே, இந்தக் கதையெல்லாம் யாரிடம் அளக்கிறாய்? சென்ற வருஷத்தில் கிட்டாவய்யரும் அவருடைய குமாரியும் உன் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தபோது நீ என்ன பாடுபட்டாய் என்று எனக்குத் தெரியாதா! வீட்டின் உள்ளேயிருந்து வெளியிலும், வெளியிலிருந்து உள்ளேயும் குட்டி போட்ட பூனை போல் நிமிஷத்துக்கு ஒரு தடவை போய் வந்து கொண்டிருந்தாயே? அதையெல்லாம் நான் மறந்து விட்டேன் என்றா நினைத்தாய்?" "அமரநாத்! உன்னிடம் நான் இந்தப் பேச்சை எடுத்ததே தப்பு. சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்." "அதெல்லாம் முடியாது, அப்பா, முடியாது! கோர்ட்டில் கேஸ் தாக்கல் செய்து விட்டால் அப்புறம் வாதியின் இஷ்டம் போல் வழக்கை வாபஸ் பெற முடியுமா? பிரதிவாதியும், கோர்ட்டாரும் சம்மதித்தால்தானே முடியும்? நான் கேஸை வாபஸ் கொடுக்கச் சம்மதிக்கவில்லை, பட்டாபி! லலிதாவைப் பற்றி நீ அந்த நாளில் வர்ணனை செய்ததெல்லாம் எனக்கு நினைவில்லை என்றா நினைக்கிறாய்? கம்பனும் காளிதாஸனும் வெட்கிப் போகும்படி வர்ணனை செய்தாயே? ஒரு கவிகூடப் பாடியது எனக்கு நினைவிருக்கிறதே! 'ஒரு நாள் குமுத மலர்கள் நிறைந்திருந்த குளக்கரையோரமாக லலிதா சென்றாள். கூம்பியிருந்த குமுத மலர்கள் எல்லாம் கலீரென்று சிரிப்பது போல் மடலவிழ்ந்து மலர்ந்தன. லலிதாவின் சௌந்தரிய வதனத்தை அந்தக் குமுதங்கள் பூரணச் சந்திரன் என்று நினைத்துக்கொண்டு விட்டதுதான் காரணம்?' என்று நீ ஒரு கவி பாடவில்லையா? நிஜமாகச் சொல்லு!"

"அப்பா! அமரநாத்! போதும், இத்துடன் நிறுத்து. வீணாக என் மானத்தை வாங்காதே. உன் பரிகாசப் பேச்சைப் பற்றிச் சூரியா ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறான்!" என்று பட்டாபிராமன் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டே சொன்னான். "தப்பாக நினைத்துக் கொண்டால் நினைத்துக் கொள்ளட்டும். நினைத்துக்கொண்டு என் தலையையா வாங்கி விடப் போகிறான்? அப்படி வாங்குவதாயிருந்தாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன். சூரியா! இருந்தாலும் உன் அப்பா செய்கிற காரியம் கொஞ்சமும் நன்றாயில்லை. நம்ப பட்டாபிராமன் இருக்கும்போது உன் அப்பா எதற்காக வேறு வரன் தேடவேண்டும்? இவனுக்கு என்ன குறைவு?" இத்தனை நேரமும் முகச் சிணுக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தச் சூரியா இப்போது, "நானும் உண்மையைச் சொல்லி விடட்டுமா? எனக்கும் அப்பாவின் ஏற்பாடு பிடிக்கவில்லை. லலிதாவைப் பட்டாபிராமனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். லலிதாவுக்கும் அதுதான் சந்தோஷமாயிருக்கும். யாரோ முன்பின் தெரியாத ஆசாமியின் கழுத்திலே லலிதாவைக் கட்டுவதற்கு ஏன் முயற்சி செய்கிறார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே எனக்கு அது பிடிக்கவில்லை" என்றான்.

"நான் ஒருவன் இருக்கிறேன், என் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனையேயில்லாமல் இரண்டு பேரும் பேசுகிறீர்களே! லலிதா விஷயமாக எனக்கு அத்தகைய எண்ணம் கிடையவே கிடையாது, ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். யாரோ ஒரு முன்பின் தெரியாத மனிதன் வருவது - பெண்ணை அவன் முன்னால் கொண்டு நிறுத்துவது - அவன் சாமுத்திரிகா லட்சணம் எல்லாம் சரியாயிருக்கிறதா - என்று பார்ப்பது - அப்புறம் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லுவது - இவையெல்லாம் மிகப் பிசகான காரியங்கள், இதே மாதிரி 'வேண்டும்; அல்லது வேண்டாம்' என்று சொல்லுகிற உரிமை பெண்ணுக்கும் இருந்தாலும் பாதகமில்லை! ஆனால் பெண்ணுக்கோ வருகிறவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் தைரியம் கிடையாது..." "அதென்னப்பா, அப்படிச் சொல்கிறாய்? பெண் பார்க்க வந்தவனைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எத்தனையோ பெண்கள் சொல்லித்தானிருக்கிறார்கள். அதனால் பல கலியாணங்கள் நின்று போயிருக்கின்றன."

"அப்படியெல்லாம் கதைகளிலே நடந்திருக்கும். உண்மை வாழ்க்கையிலே நடப்பதில்லை." இதுவரை நடந்திருக் கிறதோ, இல்லையோ, இப்போது அப்படிச் செய்தாலென்ன என்றுதான் கேட்கிறேன். சூரியா! நான் சொல்லுகிறதைக் கேள்! நீ உன் தங்கையிடம் சொல்லி, வந்து பார்க்கிறவனை, 'எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லப் பண்ணிவிடு!" என்றான் அமரநாத். "அப்படியெல்லாம் செய்யாதே, சூரியா! லலிதா விஷயத்தில் என்னுடைய மனத்தை தவறாக அறிந்து கொண்டு அமரநாதன் சொல்கிறான். ஒரு மரத்திலே ஓர் அழகான புஷ்பம் மலர்கிறது. 'அது அழகாயிருக்கிறது; கண்ணுக்கினிய காட்சியாயிருக்கிறது!' சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? சிலர் அப்படிப்பட்ட ஆசை கொண்டவர் களாயிருக்கலாம். ஆனால் என்னுடைய கருத்து அதுவல்ல. மரத்திலே பூத்திருக்கும் புஷ்பத்தைப் பார்த்தே நான் சந்தோஷப்படத் தயார். யாராவது அந்த மலரைப் பறித்துத் தலையில் வைத்துக் கொண்டாலும் என்னால் பார்த்துச் சந்தோஷப் படமுடியும்!"

"நீ சொல்வது சுத்த ஹம்பக்! அப்படி அழகான மலரை மரத்திலேயே விட்டு வைக்கத் தயாராயுள்ள மானிடர் வெகு அபூர்வம். அதுமட்டுமல்ல! மலரைப் பறித்துத் தலையில் சூடிக் கொள்வதாயிருந்தால், அதற்குத் தகுதியானவர்களின் தலையில் சூட்டப்பட்டால்தானே அழகாயும் பொருத்தமாயும் இருக்கும்? அதுதான் சந்தோஷமளிக்கும் காட்சி. அவலட்சணம் பிடித்த கழுதைக்கு அழகிய பூவைச் சூட்டினால் அதை எப்படிப் பார்த்து அநுபவிக்க முடியும்? கழுதையினாலேயே முடியாதே! பூவைக் காகிதம் என்று நினைத்துக்கொண்டு தின்றுவிடப் பார்க்குமே. மற்றவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து எப்படிச் சந்தோஷப்பட முடியும்?" என்றான் அமரநாத். "உம்மோடு என்னால் விவகாரம் செய்ய முடியாது, ஸார்! ஆனாலும் நான் சொல்கிறதுதான் சரி!" என்றான் பட்டாபிராமன். "சூரியா! நீ என்ன சொல்கிறாய்?" என்று அமரநாதன் கேட்டான். "நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்!" என்றான் சூரியா. "பார்த்தாயா, பட்டாபி! மெஜாரிட்டி அபிப்பிராயம் உனக்கு விரோதமாயிருக்கிறது! என்ன செய்வது?" என்றான் அமரநாத்.

"உலகத்தில் மெஜாரிட்டியார் முட்டாள்கள் என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறாரே, தெரியாதா?" என்றான் பட்டாபி. "அப்பனே! 'பெரும்பான்மையோர் முட்டாள்கள்' என்று சுவாமி விவேகானந்தர் சொல்லலாம்; ஆனால் நீயும் நானும் சொல்லக்கூடாது! வருங்காலத்தில் மெஜாரிட்டிதான் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம்? பெரும்பான்மையோரை அலட்சியம் செய்கிறவன் உலகில் முன்னுக்கு வரவே முடியாது. பெரும்பான்மை மக்களின் இஷ்டப்படி நடக்க முடியாவிட்டால் அவர்களை ஏமாற்றியாவது பிழைக்க வேண்டும்!" என்றான் அமரநாத்!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
பத்தொன்பதாம் அத்தியாயம்

மோட்டார் விபத்து

மாசி மாதத்து மனோரம்மியமான மாலை நேரத்தில் ராஜம்பேட்டையை நெருங்கிச் சென்ற சாலையில் இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டி ஒன்று ஜாம் ஜாம் என்று போய்க்கொண்டிருந்தது. காளையின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய சதங்கை மணிகள் கலீர் கலீர் என்று சப்தித்தன. வண்டியும் வண்டி மாடுகளும் வண்டிக்காரன் கட்டிய முண்டாசும் அந்த வண்டி பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டியென்பதை உலகமறியத் தெரிவித்தன. வண்டிக்குள்ளே கிட்டாவய்யரின் மூத்த புதல்வன் சூரியநாராயணன் பெட்டி படுக்கை சகிதமாக வீற்றிருந்தான். அவனுடைய உள்ளம், தன்னுடைய அருமைத் தங்கை லலிதாவைப் பற்றியும் அவளைப் பார்ப்பதற்காகப் பட்டினத்திலிருந்து வரப் போகிற மேதாவி எப்படியிருப்பான் என்பது பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. காரணமில்லாமலே அந்த மேதாவியின் பேரில் சூரியாவுக்குச் சிறிது கோபமும் உண்டாகியிருந்தது. "மகா பெரிய மனிதன் இவன்! பெண்ணைப் பார்க்க வருவதாம்! பிடித்திருக்கிறது - இல்லை என்று தீர்ப்புச் சொல்வதாம்! சுத்த வெட்கக் கேடு!" என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தை உறுத்தியது. முந்தா நாள் இரவு தாமோதரம்பிள்ளை வீட்டு மச்சின் பேரில் நடந்த சம்பாஷணையும் இடை இடையே அவனுக்கு நினைவு வந்து கொண் டிருந்தது.

ராஜம்பேட்டை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சூரியா வண்டி முகப்பில் வைத்திருந்த பெட்டி படுக்கையின் மேலாக எட்டிப் பார்த்தான். சமீபத்தில் ஒரு மைல் கல் தென்பட்டது. அதில் பெரிய கறுப்பு எழுத்தில் 3 என்று எழுதியிருந்தது. "இன்னும் மூன்று கல் இருக்கிறது. இருட்டுவதற்கு முன் போய் விடலாமா, முருகா!" என்று சூரியா கேட்டான். "நல்லாப் போய்விடலாம்! நீங்கள் மட்டும் 'மாட்டை விரட்டாதே' என்று சும்மாச் சும்மாச் சொல்லியிரா விட்டால் இத்தனை நேரம் போய்ச் சேர்ந்திருப்போம்! அம்மாகூட, 'சாயங்காலம் காப்பி சாப்பிடச் சின்னய்யாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடு' என்று சொல்லியிருந்தாங்க!" என்றான் வண்டிக்கார முருகன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, முன்னால் சுமார் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு கட்டை வண்டி போய்க்கொண்டிருப்பதைச் சூரியா கவனித்தான். அந்த வண்டிக்குள்ளே யாரோ பெண் பிள்ளைகள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வண்டியும் ராஜம்பேட்டைக்குத்தானே போக வேண்டும்? வண்டிக்குள் இருப்பவர்கள் யாராயிருக்கும்?- என்று சூரியா சிந்தித்துக் கொண்டிருந்தபோதே பின்னால் 'பாம் பாம்' என்று முழங்கிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டி வந்தது.

"பாருங்க, சின்னய்யா! மோட்டார் வண்டியிலே ஏறி விட்டாலே தலை கிறுங்கிப் போவுது! இவன் வந்துட்டா, மற்ற வண்டியெல்லாம் உடனே ஒதுங்கிக்கொள்ள வேணுமாம்! மோட்டார் வண்டிக்கு என்று தனியாக ரோடு போட்டுக் கொள் கிறதுதானே!" என்று புகார் சொல்லிக்கொண்டே முருகன் வண்டியைக் கொஞ்சம் சாலை ஓரத்தில் ஒதுக்கினான். மோட்டார் வண்டி அவர்களைத் தாண்டி ஒரு பெரிய புழுதிப் படலத்தை வாரித் தூவிவிட்டு மேலே சென்றது. அது போன உடன் முருகன், "சின்னய்யாகூடப் படிச்சுப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து மோட்டார்கார் வாங்க வேணும்!" என்றான். "அப்போது, மோட்டார் காரர்களைப் பற்றி நீ இப்போது திட்டியது போலத்தானே பத்துப்பேர் என்னையும் திட்டுவார்கள்!" என்றான் சூரியா. இதற்குள் எதிரே கொஞ்ச தூரத்தில் நடந்த சம்பவம் அவர்களுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பெட்டி வண்டியைத் தாண்டிச் சென்ற மோட்டார், கட்டை வண்டியையும் சாலை ஓரமாக ஒதுங்கச் செய்வதற்காகப் 'பாம்' 'பாம்' என்று முழங்கியது. கட்டை வண்டிக்காரன் இடது புறத்தில் ஒதுக்குவதற்குப் பதிலாக, வலது பக்கத்தில் ஒதுங்க முயன்றான். கட்டை வண்டியை வலப்பக்கமாகக் கடக்க முயன்ற மோட்டார் அது முடியாதென்று தெரிந்து அதி வேகமாக ஒரு திரும்புத் திரும்பி இடப்பக்கம் தாண்டிச் சென்றது. போகும்போது வண்டி மாட்டின்மீது உராய்ந்து விடும் போல அவ்வளவு நெருக்கமாகச் சென்றபடியால் வண்டி மாடுகள் மிரண்டு சாலையோரத்துப் பள்ளத்தில் இறங்கி விட்டன. அப்படி இறங்கியதில் மாடுகளை மூக்கணையுடன் பிணைத்திருந்த கயிறுகள் கழன்றன. வண்டிக்காரன் காபரா அடைந்து கீழே குதித்தான். வண்டியின் மூக்கணை மேலே போயிற்று. வண்டியின் பின் தட்டுக் கீழே வந்து தரையைத் தொட்டது. வண்டிக்குள்ளிருந் தவர்கள் சறுக்குமரத்திலிருந்து வழுக்கி விழுகிறவர்களைப்போல உருண்டுவந்து வெளியே தரையில் விழுந்தார்கள். அவர்கள் மேலே சாமான்கள் உருண்டு விழுந்தன.

இத்தகைய கட்டைவண்டி விபத்தை உண்டாக்கிய மோட்டார்வண்டி அதை மறைப்பதற்கு ஒரு பெரிய புழுதித் திரையையும் உண்டாக்கிவிட்டு மறுகணமே தூரத்தில் மறைந்து போய்விட்டது. புழுதி மறைந்தபடியால் மேற்படி விபத்தைப்பற்றி நடந்ததைக் காட்டிலும் அதிகமாகச் சூரியா மிகைப்படுத்தி எண்ணிக் கொண்டான். "முருகா! ஓட்டு! ஓட்டு! வண்டி குடையடித்து விட்டது போலிருக்கிறதே! சீக்கிரம் ஓட்டு!" என்று பதறிக்கொண்டே கூறினான். முருகனும் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்ச் சம்பவம் நடந்த இடத்துக்குச் சமீபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். "சின்னய்யா! நம்ம அத்தை அம்மாபோல இருக்கிறதே! பம்பாய் அம்மாவும் அவங்க பொண்ணுங்கூட இருக்காங்களே! சாமி ஆண்டவனே! ஒருத்தருக்கும் ஒண்ணும் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று வண்டிக்காரன் சொன்னது ஒன்றும் சூரியாவின் காதில் விழவில்லை. வண்டியிலிருந்து அவன் பளிச்சென்று குதித்துக் குடையடித்த வண்டியை நெருங்கி ஓட்டமாக ஓடினான்.

குடை சாய்ந்த வண்டியின் பின்புறச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பம்பாய் ராஜம்மாள் உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் மூட்டைகள் சிதறிக் கிடந்தன. ஒரு தகரப் பெட்டி இன்னும் வண்டிக்குள்ளேயே இருந்து கொண்டு தானும் கீழே விழலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. ராஜம்மாளுக்கு வண்டிச் சட்டத்தைத் தான் விட்டால் அந்தப் பெட்டி தன் தலையில் விழுந்து விடும் என்ற பயம் தோன்றியிருந்தது. ஏற்கெனவே நோயினால் மெலிந்திருந்த அவளுடைய முகம் மேற்படி பயத்தினால் வெருண்ட தோற்றம் அளித்தது. ஆனால், அவளுடைய பயத்துக்குக் காரணம் இது மட்டுந்தானா? "அம்மா! அம்மா! இதோ நான் வெள்ளத்தில் முழுகப் போகிறேன். என் மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! இதோ முழுகப் போகிறேன்!" என்று அவளுடைய செல்வக் குமாரி சீதா அலறிக்கொண்டிருந்ததும் ராஜம்மாளின் பீதிக்கு ஒரு காரணமாயிருக்கலாமல்லவா?

ராஜத்துக்கு நாலைந்து அடி தூரத்தில் தரையில் விழுந்திருந்த இன்னொரு ஸ்திரீ, "ஐயோ! அப்பா!..." என்று முனகிக் கொண்டே மெதுவாக முயன்று எழுந்து உட்கார்ந்தாள். "மோட்டார் சத்தம் கேட்டவுடனேயே 'வண்டியை ஒதுக்கி ஓட்டடா' என்று அடித்துக் கொண்டேன் கேட்டால்தானே?" என்று வண்டிக்காரனுக்கு வாய் நிறைந்த ஆசீர்வாதங்களைச் செய்தாள். பிறகு, "ராஜம்! உனக்குக் காயம் கீயம் ஒன்றும் படவில்லையே!" என்று கவலை நிறைந்த குரலில் கேட்டாள். ஏதோ பயங்கரமான பெரும் விபத்து ஏற்பட்டு விட்டதாக எண்ணி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்த சூரியா மேற்கூறிய காட்சியை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து ஒரு நொடிப் பொழுதில் நிலைமையைத் தெரிந்து கொண்டான். வண்டிக்குச் சற்றுத் தூரத்தில் எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்த ஸ்திரீ தன்னுடைய மூத்த அத்தை அபயாம்பாள் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் ஒரு நிமிஷத்துக்கு மேல் நிற்கவில்லை.

சாலையில் ஓரத்தில் இருந்த நீர் ஓடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு, "அம்மா! நான் முழுகப் போகிறேன்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மீது அவனுடைய கண்களும் கவனமும் சென்றன. இரண்டே எட்டில் ஓடைக் கரைக்கு ஓடிச் சென்றான். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கரையேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடேதான். ஓடையில் விழுந்து மேற்கண்டவாறு கூச்சலிட்டுக் கொண்டே காலினாலும் கையினாலும் தண்ணீரை அடித்து அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த இளம் பெண், ஓடைக் கரையில் வந்து வியர்க்க விருவிருக்க நின்ற வாலிபனைப் பார்த்தாள். உடனே கூச்சலிடுவதையும் தண்ணீரைக் காலாலும் கையாலும் அடிப்பதையும் நிறுத்தினாள். ஏதோ, ஓர் ஆபூர்வமான அதிசயக் காட்சியைப் பார்ப்பது போல் சூரியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அப்படிப் பார்த்தவண்ணம் கலகலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் ஒலி செவியில் விழுந்தபொழுது அமுதமுண்ட குயிலின் கீதம் ஆயிரம் பதினாயிரம் வர்ண மலர்களாக மாறி மேலே விழுவது போன்ற உணர்ச்சி சூரியாவுக்கு உண்டாயிற்று.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,069
Reaction score
83
Points
48
இருபதாம் அத்தியாயம்

அம்மாஞ்சி அறிமுகம்

சிரிப்பின் ஒலியைக் கேட்டதினால் அடைந்த திகைப்பு நீங்கியதும் சூரியா தன்னுடைய தவறை உணர்ந்தான். ஓடையில் விழுந்திருந்த பெண்ணைத் தான் கரை சேர்க்க எண்ணியது எவ்வளவு பைத்தியக் காரத்தனம் என்பதை அறிந்தான். அவள், "முழுகப் போகிறேன்" என்று கத்தியது வெறும் விளையாட்டுத் தான் என்பதும் தெளிவாயிற்று. ஓடையில் முழங்கால் அளவு தண்ணீருக்குமேல் இல்லையாகையால் அந்தப் பெண்ணுக்கு அபாயம் ஒன்றும் ஏற்படக் காரணம் கிடையாது. சாலைக்கு மண் போடுவதற்காகச் சாலையின் ஓரத்தில் மண் எடுத்து எடுத்துப் பள்ளமாயிருந்தது. நாளடைவில் அப்பளத்தில் தண்ணீர் தேங்கிச் சாலைக்கும் நன்செய் நிலத்துக்கும் இடையே நீண்ட ஓடையாக மாறியிருந்தது. நீர் ஓடையின் அகலம் சுமார் பதினைந்து அடிதான். ஆழமோ எந்த இடத்திலும் மூன்று அடிக்குமேல் இராது. மழை காலத்தில் பெய்யும் மழையும் வயல் களிலிருந்து வடிந்த தண்ணீருமாகச் சேர்ந்து நீரோடையில் வருஷத்தில் பத்து மாதத்துக்குக் குறையாமல் தண்ணீர் நிற்கும். நீண்ட காலம் இப்படித் தண்ணீர் நின்ற காரணத்தினால் அல்லிக் கொடிகளும் செங்கழுநீர்க் கொடிகளும் மண்டிப் படர்ந்து கொழுகொழுவென்னும் இலைகளோடும் அழகிய மலர்களோடும் விளங்கின. மாலை வேளையானதால் அம்மலர்கள் நன்றாக இதழ் விரிந்திருக்கவுமில்லை; அடியோடு கூம்பவும் இல்லை. அரைவாசி விரிந்திருந்த அல்லி.... செங்கழுநீர்ப் புஷ்பம் ஒவ்வொன்றும் ஓர் அழகிய வர்ணப் பளிங்குக் கிண்ணத்தைப் போல் காட்சியளித்தன.

ஓடையின் மேலாகச் சாலை ஓரத்து ஆலமரக் கிளைகள் தழைத்திருந்தன. அஸ்தமனச் சூரியனின் பொற்கிரணங்கள் அந்தப் பசுங் கிளைகளின் வழியாக நுழைந்து வந்து நீல நிற ஓடை நீரில் லீலை புரிந்தன. சற்று தூரத்தில் பொன்னிற நெற் கதிர்களைத் தாங்க முடியாமல் வயலில் சாய்ந்திருந்த நெற்பயிர்களும் இன்னும் அப்பால் மரகதப் பசுமை வாய்ந்த அடர்ந்த தென்னந்தோப்புகளும் காணப்பட்டன. இந்த இயற்கை வர்ணக் காட்சிகளை எல்லாம் சூரியாவினுடைய கண்கள் பார்த்து, புகைப்படக் கருவி படம் பிடிப்பது போலப் பிடித்து, அவனது உள் மனத்தில் பதியச் செய்தன. அவ்வளவு இயற்கை எழில் களும் அந்த நீல நிற ஓடையில் விழுந்த ஜலகன்னிகையின் முகத்தின் அழகைச் சிறப்பித்துக் காட்டுவதற்காக ஏற்பட்ட செயற்கைச் சித்திரங்களாகச் சூரியாவுக்குத் தோன்றின. தன்னுடைய வாழ்நாள் உள்ளளவும், தன் உடம்பில் உயிர் இருக்குமளவும், தன் மனத்திற்கு நினைக்கும் சக்தி இருக்குமளவும், இந்த நிமிஷத்திலே தான் பார்க்கும் காட்சியைத் தன்னால் மறக்க முடியாது என்று சூரியாவின் உள் மனத்தில் ஒரு பகுதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

ஜலகன்னிகை சிரிப்பை நிறுத்தி, "பெரியம்மா! இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டவுடனே, சூரியா கனவு லோகத்திலிருந்து இந்தப் பூவுலகத்துக்கு வந்தான். "இவன்தான் உன் அம்மாஞ்சி சூரியா! பார்த்தால் தெரியவில்லையா, சீதா! கிடக்கட்டும், நீ கரை ஏறு. "ஓகோ லலிதாவின் அண்ணாவா, பெரியம்மா!" "ஆமாண்டி பெண்ணே! லலிதாவின் தமையன்தான். நீ சீக்கிரம் கரையேறி வந்து சித்தாடை உடுத்திக் கொள்!" என்று அபயாம்பாள் சொல்லி விட்டுப் பின்னர் சூரியாவைப் பார்த்து, "நீ எங்கே இருந்தடா அப்பா, வருகிறாய் - இவர்கள்தான் உன் பம்பாய் அத்தை ராஜமும் அவளுடைய பெண்ணும். இவர்களை நீ பார்த்ததேயில்லையே!" என்றாள். தேவப்பட்டணத்திலிருந்து வருகிறேன் அத்தை!" என்று சொல்லிக்கொண்டே சூரியா ஓடக் கரையிலிருந்து இப்பால் வந்தான். "ஒருவருக்கும் காயம்படவில்லையே, அத்தை?" "ஏதோ நல்ல காலமாய்ப் போச்சு! இங்கே இந்த வண்டிக்குச் சத்தத்தைக் கொடுத்து அனுப்பிவிடலாம். நம்முடைய வண்டியிலேயே எல்லாரும் போய்விடலாம்" என்றான்.

இதற்குள் சீதா ஓடையிலிருந்து கரையேறி வந்தாள். "பெரியம்மா! அம்மாஞ்சியை அறிமுகம் செய்து கொள்வதற்குச் சரியான இடந்தான். இந்த ஓடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாயில்லாதது மட்டும் ஒரு குறை!" என்று சொல்லிக் கொண்டே சூரியாவை ஒரு விஷமப் பார்வை பார்த்தாள். பிறகு அம்மாவின் அருகில் சென்று, "பெட்டியிலிருந்து வேறு புடவை எடுத்துக் கொள்கிறேன், அம்மா! உனக்கு ஒன்றும் காயம் கீயம் இல்லையே!" என்று கவலையுடன் கேட்டாள். "எனக்கு ஒன்றுமில்லை சீதா! ஆனாலும் நீ இப்படி முழுகப் போகிறேன், என்று கூச்சல் போடலாமா? ஒரு நிமிஷம் நான் கதி கலங்கிப் போய்விட்டேன்!" என்றாள் ராஜம். "நீ இனிமேல் என்னைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், அம்மா! அம்மாஞ்சி சூரியா இருக்கிறபோது உனக்கு என்ன கவலை? என்னை இந்த முழங்கால் மட்டும் ஜலத்திலிருந்து காப்பாற்று வதற்காக அம்மாஞ்சி ஓடிவந்த வேகத்தை நீ பார்த்தாயோ, இல்லையோ?" என்று சொல்லிக் கொண்டே சீதா சூரியாவை மறுபடி ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். "இந்தப் பெண்ணுக்கு எப்போது பார்த்தாலும் சிரிப்புத் தான்; எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்!" என்றாள் ராஜத்தின் தமக்கை.

சூரியா சொன்னபடி எல்லோரும் ஒரே வண்டியில் ஏறிப் போகவில்லை. ராஜம்மாளுக்குத் தன் மருமகனோடு தனியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம். இதற்குள் இரண்டு வண்டிக்காரர்களுமாகக் குடையடித்த வண்டியை நிமிர்த்திச் சாலைக்குக் கொண்டு வந்து மாட்டையும் மெள்ளப் பூட்டி விட்டார்கள். ராஜம்மாள் வற்புறுத்தியதன் பேரில் அவளும் சூரியாவும் வாடகை வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சீதாவும் அவளுடைய பெரியம்மாவும் பெட்டி வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டிகள் ராஜம்பேட்டையை நோக்கி ஜாம் ஜாம் என்று சென்றன. சீதா பெரியம்மாளிடம், "அம்மாஞ்சியைப் பார்த்தால் லலிதாவை அச்சடித்தது மாதிரி இருக்கிறது; அம்மாஞ்சிக்குப் புடவை கட்டிவிட்டால் லலிதா என்றே பார்க்கிறவர்கள் நினைப்பார்கள். பெரியம்மா! ஒருவேளை அவர்கள் இரண்டு பேரும் இரட்டைக் குழந்தைகளோ?" என்றாள் சீதா. "சீ சீ! அசடே! என்ன சொல்கிறாய்! லலிதாவைவிடச் சூரியா மூன்று வயது பெரியவன். என் மனத்திற்குள்ளே நான் என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால்....." "என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாய், சொல்லேன்! "அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? தொழுவூர் அய்யனார் கிருபை வைத்தால் நடக்கும்!" அது யார் பெரியம்மா, தொழுவூர் அய்யனார்?" என்றாள் சீதா. "உனக்குத் தெரியாதா? நம் குடும்பத்தின் குல தெய்வம்! ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்.

"ஓகோ! அப்படியா? நான் என்ன நினைத்தேன் சொல்லட்டுமா, அத்தை! அய்யர்களிலே பணக்காரர்களுக்கு 'அய்யனார்' என்ற பட்டப் பெயரோ என்று நினைத்தேன்." "சீதா! எதற்கும் ஒரு குதர்க்கம் பேசுகிறது என்று வைத்துக் கொண்டிருக்கிறாய். இது நன்றாயில்லை, பெரியவர்கள் சொல்கிறதைப் பயபக்தியோடு கேட்டுக் கொள்ளவேணும்." சீதா உடனே கையைக் கட்டிக் கொண்டு, "ஆகட்டும்" அப்படியே செய்கிறேன். அய்யனாரால் இப்போது என்ன காரியம் ஆகவேணும்?" என்று கேட்டாள். "நான் நினைத்தது கை கூடினால் ஆயிரத்தெட்டுத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்." "நீ நினைத்துக் கொண்டிருப்பது என்ன சொல்லு, பெரியம்மா!" அபயாம்பாள் வண்டிக்காரனுக்குக் கேளாதபடி தன் குரலை மெல்லியதாக்கிக் கொண்டு, "உன்னைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கலாம் என்று தான்; கிட்டா உடனே சம்மதித்து விடுவான்; நான் சொன்னால் தட்ட மாட்டான். ஆனால் அந்த ராட்சஸி இருக்கிறாளே?" "அது யார் ராட்சஸி, பெரியம்மா!" "உன் அம்மாமி சரஸ்வதிதான்! அவள் சம்மதிப்பதுதான் சந்தேகம். பெரிய இடமாய் இருக்கணும்; எதிர் ஜாமீனும் சீரும் செனத்தியும் வீடு கொள்ளாமல் வரணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் பகவான் புண்ணியத்திலே...." "பெரியம்மா! நீ சொல்லுவது தப்பு, சரஸ்வதி அம்மாமி சொல்லுவது தான் சரி, சூரியாவைப் பார்த்தால் என்னுடைய அண்ணாவோ தம்பியோ என்று சந்தேகப்படும்படி இருக்கிறது. அப்படிப் போய் யாராவது கலியாணம் திட்டம் செய்வார்களா? பெண்ணுக்கும் பிள்ளைக்கும் குறைந்தது ஐந்து வருஷமாவது வித்தியாசம் இருக்க வேண்டாமா?"

"ஐந்து வருஷம் என்னத்துக்கு வித்தியாசம்? இரண்டு வருஷம் இருந்தால் ஏதேஷ்டம். உன் தாத்தாவுக்கு அதாவது எங்க அப்பாவுக்குப் பதினாலு வயதிலே கலியாணம் நடந்ததாம். அப்போது அம்மாவுக்கு வயது பதிமூன்றுதான். உன் பாட்டி எத்தனை குழந்தை பெற்றாள் தெரியுமா? பதினேழு பெற்றாள்." "அதெல்லாம் அந்தக் காலம், பெரியம்மா! இந்த நாளிலே இருபது வயதுக்குக் குறைந்த எந்தப் பிள்ளையும் கலியாணம் பண்ணிக்க மாட்டான்; அப்படிப் பண்ணிக் கொண்டாலும் அவர்கள் சந்தோஷமாயிருக்க மாட்டார்கள்!" "ஏன் சந்தோஷமா இருக்க மாட்டார்கள்? பேஷாக இருப்பார்கள். உன் அம்மாமி மாத்திரம் சம்மதித்தால் கலியாணம் நடந்து விடும். ஆனால் அவள் எங்கே சம்மதிக்கப் போகிறாள்! ரொம்பப் பேராசை அவளுக்கு, ஆனால் குழந்தைகள் மட்டும் தங்கக் கம்பிகள் தான்! அப்பாவின் குணத்தைக் கொண்டு அவர்கள் பிறந்திருக்கிறார்கள்!" "பெரியம்மா! பிறத்தியாரைப் பற்றி அவர்கள் இல்லாத போது குறை சொல்லக் கூடாது. அது ரொம்பப் பிசகு, மாமியைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் சொல்கிறாய்? சரஸ்வதி மாமி ரொம்ப நல்லவள். என்னிடம் எவ்வளவு பிரியமாயிருக்கிறாள் தெரியுமா?" என்றாள் சீதா. "அசட்டுப் பெண்ணே! நீயும் உன்னுடைய அம்மாவைப் போலவேதான் இருக்கிறாய். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறாய். மாமியின் சுபாவம் போகப் போகத் தெரியப் போகிறது பார்!" என்றாள் அபயாம்பாள்.

முதலில் சூரியாவுக்கு சீதா ஏறிய வண்டியில் தானும் ஏறவில்லையே என்று இருந்தது. அந்த ஏமாற்றம் ஒரு கணத்துக்குமேல் இருக்கவில்லை. சீதாவுடன் பேசிக் கொண்டு போவதற்கு அடுத்தபடியாகப் பம்பாய் அத்தையுடன் பேசிக்கொண்டு பிரயாணம் செய்வது அவனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. "அத்தை! நீங்கள் எங்கே போய் விட்டு வருகிறீர்கள்? ராஜம்பேட்டையில் இருப்பதாக வல்லவா நினைத்தேன்? 'லலிதாவைக் கலியாணத்துக்காகப் பார்க்க வருகிறார்கள்; நீயும் வந்து விட்டுப்போ!' என்று அப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்ற ஆசையினால் தான் நான் வந்தேன். போன வருஷம் லலிதா பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து உங்களைப் பற்றியும் சீதாவைப் பற்றியும் ஓயாமல் ஏதாவது புகழ்ந்து கொண்டே யிருப்பது அவளுக்கு வழக்கமாகி விட்டது! அதிலிருந்து எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாயிருந்தது" என்று சூர்யா தன்னுடைய வழக்கத்தைவிட அதிகப் படபடப்புடன் வார்த்தைகளைக் கொட்டினான்.

"இங்கேதான் ஒரு வாரத்துக்கு மேலே இருந்தோம். சூர்யா! அக்கா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அதற்கு வரவேண்டுமென்று ரொம்பச் சொன்னாள்; போய்விட்டுத் திரும்பினோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று. நல்ல சமயத்துக்கு நீ வந்தாய்!" என்றாள் ராஜம். "நான் வந்து என்ன செய்து விட்டேன்? ஒன்றுமில்லையே!" "அப்படிச் சொல்லாதே, அப்பா! வண்டி குடை கவிழ்ந்ததும் எனக்கு ஒரே பயமாய்ப் போய் விட்டது, அதுவும் இந்த அசட்டுப் பெண் விளையாட்டுக்காக, 'முழுகப் போகிறேன்; முழுகிக் கொண்டிருக்கிறேன்' என்று கத்தினதும் எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது. உன்னைக் கண்ட பிறகுதான் தைரியம் உண்டாயிற்று. வேண்டுமென்கிற மனுஷாள் பக்கத்தில் இருந்தாலே எப்படிப்பட்ட ஆபத்திலும் ஒரு தைரியந்தானே?"

"அத்தை! என்னைப் பார்த்ததும் நான் வேண்டும் என்கிறவன் என்று உனக்குத் தெரிந்து விட்டதா? என்னை இதற்கு முன்னால் நீ பார்த்ததே கிடையாதே!" "எத்தனை நாள் பிரிந்திருந்தாலும் பார்க்காதிருந்தாலும் இரத்த பாசம் என்பது ஒன்று இருக்கிறதல்லவா? உன்னைப் பார்த்ததுமே எனக்குத் தெரிந்து போய் விட்டது. சூர்யா! உன்னுடைய வயதில் உன் அப்பா உன்னைப் போலவே இருந்தார். நீ தலையைக் கிராப் செய்துகொண்டிருக்கிறாய்; உன் அப்பா குடுமி வைத்துக் கொண் டிருந்தார் மற்றபடி தத்ரூபம் அதே மாதிரி இருக்கிறாய். திடீரென்று உன்னைப் பார்த்ததும் எனக்குப் பழைய காலத்து நினைவு வந்தது. வண்டி குடையடித்ததைப் பார்த்து விட்டு அண்ணாதான் ஓடி வருகிறார் என்று நினைத்தேன். அண்ணா உன் பிராயமாக இருந்த நாளிலேதான் எனக்குக் கலியாணம் நடந்தது. நேற்றுப் போல் இருக்கிறது; ஆனால், அதெல்லாம் நடந்து வருஷம் இருபது ஆகிவிட்டது!" என்று ராஜம் சொல்லுகையில் அவளுடைய கண்கள் கலங்கின.

"அத்தை! கலியாணம் ஆகிப் புக்ககத்துக்குப்போன பிறகு நீ இந்த ஊருக்கு வரவே இல்லையாமே? ஏன் அப்படி?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; வரவேயில்லை. உன் அத்திம்பேரின் சுபாவந்தான் காரணம். இப்போது கூட வரமாட்டேன் என்று சொன்னேன். ஆனால், வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்போது வந்திரா விட்டால் உங்களையெல்லாம் எங்கே பார்க்கப் போகிறேன்? இந்த ஊரையெல்லாந்தான் மறுபடி எந்தக் காலத்தில் பார்க்கப் போகிறேன் சூரியா? சீதாவைவிட இரண்டு வயது குறைவாயிருந்த போதே எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. அப்போது போனவள் இப்போதுதான் திரும்புகிறேன். ஆனாலும் இந்தச் சாலையும் ஓடையும், வயலும் வரப்பும், தோப்பும் துரவும், கோயிலும், குளமும் அப்படியே எல்லாம் ஞாபகம் இருக்கின்றன. இந்தச் சாலை வழியாக இதே மாதிரி மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு எத்தனை உற்சவங்களுக்கும் கலியாணங்களுக்கும் போயிருக்கிறேன் தெரியுமா? அதையெல்லாம் நினைத்தால் சந்தோஷமாயுமிருக்கிறது; துக்கமாயு மிருக்கிறது!" என்றாள் ராஜம். சூரியாவும் அப்போது சந்தோஷமும் துக்கமும் கலந்த மனோநிலையை அடைந்தான். அத்தைக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்ல வேண்டுமென்று நினைத்தான். ஆனால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
 

New Threads

Top Bottom