Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்தொன்றாம் அத்தியாயம்

சீதாவின் காதலன்

மறுநாள் ராஜம்பேட்டை அக்கிரகாரத்தில் பெரிதும் பரபரப்புக் குடிகொண்டிருந்தது; சாயங்காலந்தான் மதராசிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த போதிலும் அன்று காலையிலிருந்தே யாருக்கும் வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. பாதிப் பேருக்கு மேல் அவரவர்கள் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் வேலையாயிருந்தவர்கள் ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை வாசலுக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். ஊரிலேயே இப்படி இருந்ததென்றால் கிட்டாவய்யர் வீடு எப்படி இருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? காலையில் காப்பி சாப்பிடுவதற்கே சீமாச்சுவய்யர் வந்து விட்டார். "என்ன ஓய்? என்ன ஓய்?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு சாயங்காலம் வரப்போகிறவர்களை வரவேற்பதற்கான காரியங்களைச் சுறுசுறுப்பாகக் கவனித்தார். இன்னும் பலர் ஒரு வேலையும் இல்லாமல் கிட்டாவய்யர் வீட்டுக்கு வருவதும் போவதுமாயிருந்தார்கள். "இன்று சாயங்காலந்தானே வருகிறார்கள்?" என்ற கேள்விக்கு ஆயிரந்தடவைக்கு மேல் கிட்டாவய்யர் 'ஜவாப்' சொல்லித் தீரவேண்டியதாயிருந்தது.

சரஸ்வதி அம்மாள் காலை நாலரை மணிக்கே எழுந்து பரபரப்பாக எல்லாக் காரியங்களையும் கவனிக்கத் தொடங்கினாள். பலபலவென்று பொழுது விடிவதற்குள்ளே வீடு மெழுகி வாசல் பெருக்கிக் கோலமும் போட்டாகிவிட்டது. அப்புறம் உக்கிராண அறையிலிருந்து சமையலறைக்குப் போவதும், தரையில் இருந்த சாமானைப் பரணியில் தூக்கிப் போடுவதும், பரணியில் இருந்த சாமானைத் தரையில் இறக்கி வைப்பதும், அங்கங்கே உள்ளவர்களை ஏதாவது அதிகாரம் பண்ணுவதுமாயிருந்தாள். "இன்றைக்கே இந்தப் பாடாயிருக்கிறதே; நாளைக்குக் கலியாணம் என்று வந்தால் எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ?" என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொண்டாள். அபயாம்பாளையும் ராஜம்மாளையும் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வந்தது பற்றிச் சரஸ்வதி அம்மாள் தன் திருப்தியைத் தெரிவித்தாள். "ஏதோ சிரமத்தைப் பார்க்காமல் நேற்றே புறப்பட்டு வந்துவிட்டீர்களே! என்னுடைய பாரம் பாதி குறைந்தது. இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு நீங்கள் வந்திராவிட்டாலும் பாதகமில்லை! ஆனாலும் வந்தது தான் சந்தோஷமாயிருக்கிறது. இதற்குத்தான் நமக்கு என்று நாலு மனுஷாள் வேணும் என்கிறது. நான் ஒண்டிக்காரி என்னத்தையென்று கவனிப்பேன்? எங்க அம்மாவினாலும் ஓடியாடி முன்னேயெல்லாம் போல் இப்போது காரியம் செய்ய முடிகிறதில்லை. நீங்கள் வந்து தான் காரியம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நடக்கவே நடக்காது என்று சொல்கிறேனா? அது ஒன்றும் கிடையாது. ஆனாலும் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்ததுதான் மனதுக்குத் திருப்தியாயிருக்கிறது!" என்று மிகப் பெரிய தமிழ்ப் புலவர்களைப் போல் இரு பொருள் வைத்துப் பேசுவாள்.

உடனடியாகத் தன் தாயாரிடம் போய், "கேட்டாயா அம்மா! குறுக்கே நெடுக்கே வீட்டிலே எங்க போனாலும் இரண்டு நாத்தனார்மார்களும் நிற்கிறார்கள். ஒரு காரியமும் செய்ய முடிகிறதில்லை. அந்தப் பெண் சீதா, ஒரு நிமிஷம்கூட விடமாட்டேன் என்று லலிதாவைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள்! இவர்கள் இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு வரவில்லையென்றால் யார் குறைபடப் போகிறார்கள்? தலைக்கு மேலே எனக்கு இருக்கிற வேலையில் இவர்களை வேறே நான் விசாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வீண் பொல்லாப்பு வந்து சேரும். ஏதோ ஒத்தாசைக்கு நீயாவது வந்து சேர்ந்தாயே, அதைச் சொல்லு! இல்லாவிட்டால் நான் தவித்துப் போயிருப்பேன்!" என்று மற்றவர்களுக்குக் காதில் விழுந்தும் விழாமலும் இருக்கும்படி கூறுவாள். சரஸ்வதி அம்மாள் சொன்னபடியே லலிதாவும் சீதாவும் இணைபிரியாமல் ஒருவரையொருவர் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் சாயங்காலம் சீதா வண்டியிலிருந்து இறங்கியவுடன் லலிதா அவளை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்றாள். அப்புறம் ஒருவரையொருவர் ஒரு நிமிஷமும் பிரியவில்லை. இராத்திரி இருவரும் படுத்துக் கொண்டது கூட ஒரே பாயில் ஒரே தலையணையை வைத்துக் கொண்டுதான். இதெல்லாம் உதவாது என்று லலிதாவின் தாயார் எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை. அன்றைக்குப் பொழுது விடிந்து எழுந்ததிலிருந்து இரண்டு பேரும் கூடிக் கூடிப் பேசிய வண்ணம் இருந்தார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு என்னதான் விஷயம் இருக்கும் என்று மற்றவர்களுக்கெல்லாம் வியப்பாயிருந்தது.

சீதா - லலிதா இவர்களின் நடத்தையைக் காட்டிலும் அதிகமான வியப்புக்கு உரியதாயிருந்தது சூரியாவின் நடவடிக்கை தான். முன் தடவையெல்லாம் அவன் ஊருக்கு வந்தால் வீட்டுக்குள் அதிகம் தங்கவே மாட்டான். கையோடு ஏதேனும் புத்தகம் கொண்டு வந்திருப்பான். எங்கேயாவது மூலையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். "ரொம்பப் படிக்காதேடா, அப்பா! கண்ணுக்குச் சூடு!" என்று அவனுடைய தாயார் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டான். அம்மா ஏதாவது கேட்டால் அதற்கு அவன் பதில் சொல்வதே அபூர்வம். பெண் பிள்ளைகள் அதிகமாகப் புழங்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் அவன் வருவதே கிடையாது. அப்படிப்பட்டவன் இந்தத் தடவை வீட்டு வாசலுக்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் குட்டி போட்ட பூனையைப் போல் அலைந்து கொண்டிருந்தான். அடிக்கடி சீதாவும் லலிதாவும் இருக்கும் இடத்துக்கு வருவான். "ஏது? இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஒரு நிமிஷங்கூட விட்டுப் பிரிய மாட்டீர்கள் போலிருக்கிறதே! நாளைக்குக் கலியாணம் ஆகிப் புக்ககம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?" என்பான். பெரும்பாலும் லலிதாதான் பதில் செல்லுவாள். "நாங்கள் ஏதாவது செய்து கொள்கிறோம். உனக்கென்ன அதைப் பற்றி?" என்பாள்.

சில சமயம், "பெண்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? போய் உன் காரியத்தைப் பார்!" என்பாள். "என் காரியம் வேறு ஒன்றுமில்லையே! உன்னை விசாரித்துக் கொள்வதுதான் எனக்கு இப்போது வேலை! தங்கைக்குக் கலியாணம் என்றால் தமையன் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? உலகம் சிரிக்காதா?" என்பான் சூர்யா. "ஆமாம்; நீ ரொம்ப இங்கு வந்து வெட்டி முறித்து விடுகிறாயாக்கும்? போடா போ!" என்பாள் லலிதா. "அவனை ஏண்டி விரட்டியடிக்கிறாய்? ஏதோ உன்பேரில் உள்ள பிரியத்தினால் தானே வருகிறான்?" என்பாள் சீதா. இந்தச் சமயத்தில் லலிதாவின் சின்னத் தம்பி சுண்டுப் பயல் குறுக்கிடுவான். "ஏன் பொய் சொல்லுகிறாய், அண்ணா! நீ லலிதாவைக் கவனித்துக் கொள்வதற்காகவா இப்படி வளைய வந்து கொண்டிருக்கிறாய்? பம்பாய் அத்தங்காளைப் பார்ப்பதற்குத்தானே வீட்டுக்குள் சுற்றுகிறாய்? எனக்குத் தெரியாது என்று நினைத்தாயோ?" என்று குட்டை உடைத்து விடுவான். "சீ! கழுதை சும்மாயிரு!" என்பான் சூரியா. "நான் கழுதையென்றால் நீ கழுதையின் அண்ணாதானே!" என்பான் சுண்டுப் பயல். விவகாரம் முற்றிச் சூரியா சுண்டுவின் சிண்டைப் பிடிக்க ஓடுவான். ஆனால் மறு நிமிடம் திரும்பி வந்து விடுவான். சூரியாவின் தொந்தரவிலிருந்து தப்புவதற்காகவே லலிதாவும் சீதாவும் அன்று மத்தியானம் சாப்பாடு முடிந்தவுடனே குளத்தங்கரை 'பங்களா'வுக்குச் சென்றார்கள்.

சீதா பம்பாயிலிருந்து வந்ததும் ராஜம்பேட்டையில் ஒரு வாரம் இருந்தாள். அந்த ஒரு வாரம் சீதாவும் லலிதாவும் அடிக்கடி குளத்தங்கரைப் பங்களாவுக்குப் போவார்கள். பிறருடைய தொந்தரவு இல்லாமல் தங்களுடைய மனோரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பகலெல்லாம் பேசினாலும் பேச்சு முடியாது. சூரியன் அஸ்தமித்த பிறகுகூட வீட்டுக்குத் திரும்பமாட்டார்கள். பங்களாவுக்கு எதிரில் இருந்த குளத்தங்கரைப் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு பேச்சைத் தொடங்குவார்கள். அந்த இளம் பெண்கள் அப்படி என்னதான் முடிவில்லாத அந்தரங்கம் பேசுவார்களோ என்று வானமாதேவி தன்னுடைய லட்சக்கணக்கான நட்சத்திரக் கண்களில் அதிசயம் ததும்பப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அத்தகைய மோகன முன்னிரவு வேளையில் சீதாவைப் பார்த்து லலிதா, "அத்தங்கா! நான் எத்தனை தடவை கேட்டும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாயே? நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்? எப்போது உனக்குக் கலியாணம்!" என்று கேட்டாள். சீதா ஆகாயத்தை நோக்கியவண்ணம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அவள் லலிதாவைப் பார்த்துச் சொன்னாள். "என் கலியாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்றால் நீ கேட்கவில்லை. பதில் சொன்னால்தான் விடுவாய் போலிருக்கிறது. நல்லது; என்னுடைய அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் கேள். அம்மா சொன்னாலும் சரி, அப்பா சொன்னாலும் சரி, அவர்கள் இஷ்டப்படி நான் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிக்க மாட்டேன்.

எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே'சரி' என்று சொல்லி விடுவேனா? ஒருநாளும் மாட்டேன், லலிதா! உனக்கு லைலா - மஜ்னூன் கதை சொன்னே னல்லவா? அது ஞாபகமிருக்கிறதா? மஜ்னூவை லைலா என்ன கேட்டாள்? 'இந்தியா தேசத்திலிருந்து பஞ்சவர்ணக்கிளி வேண்டும்' என்று கேட்டாள். மஜ்னூவும் 'கொண்டு வருகிறேன்' என்று போனான். ஆனால் நான் அவ்வளவு அற்பமான பொருளைக் கேட்கமாட்டேன். என்னை மணந்து கொள்கிறேன் என்று வருகிறவனுக்கு இராத்திரி வேளையில் நட்சத்திர மயமான ஆகாசத்தைக் காட்டுவேன். எனக்குப் பிடித்த பன்னிரண்டு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு, 'அந்த நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்பேன். அவன் போய் இன்னொருவன் வருகிறான் என்று வைத்துக்கொள். அவனைப் பார்த்து, 'முள் இல்லாத ரோஜாச் செடியிலிருந்து மல்லிகைப்பூ மணமுள்ள செண்பக மலர் எடுத்து மாலை கட்டிக்கொண்டு வர உன்னால் முடியுமா? கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்று சொல்வேன். அவன் போய் இன்னொருவன் வந்தால், 'வான வில்லின் வர்ணங்களையும் தோகை மயிலின் சாயலையும் கலந்து ஒரு அற்புதமான வர்ணச் சித்திரம் எழுதிக் கொண்டு வா! கொண்டு வந்தால் உன்னை நான் மணந்து கொள்வேன்!' என்பேன்....."

சீதா அடுத்தபடி என்ன சொல்லலாம் என்று ஒரு கணம் யோசித்தபோது லலிதா, "அத்தங்கா! இது என்ன பேச்சு? இப்படியெல்லாம் நீ கேட்டால் யாரால் கொண்டுவரமுடியும்? உன்னைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள். உனக்குக் கலியாணமே ஆகாது!" என்று சொன்னாள். "அப்படியா நினைத்தாய் லலிதா!" ஒரு நாளும் இல்லை. மூடர்கள் எல்லாரும் நான் கேட்டதைக் கொடுக்க முடியாது என்று போய் விடுவார்கள். கடைசியாகப் புத்தியுள்ளவன் ஒருவன் வருவான். வந்து அவன், 'இதோ பார்! நீ கேட்டதையெல்லாம் கொண்டு வந்து விடுவேன். ஆனால் உனக்கு நான் வேணுமா? அல்லது வெறும் நட்சத்திரமும் பூவும் காற்றும் வேண்டுமா? என்னையே உனக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்திருக்கிறேனே? அவையெல்லாம் எதற்கு?' என்று கேட்பான். மறுவார்த்தை பேசாமல் அவனைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதிப்பேன்." "அம்மம்மா! அவ்வளவு பொல்லாத மோசக்காரியா நீ?" "இதில் மோசம் என்ன வந்தது, லலிதா? பின்னே என்னவென்று நினைத்தாய்? மஜ்னூ இந்தியா தேசத்துக் கிளியுடன் திரும்பி வந்தபோது லைலாவைக் காணாமல் பைத்தியம் பிடித்து ஊர் ஊராய் அலைந்தான். என்னை உண்மையில் காதலிப்பவனை அந்த மாதிரி நான் பைத்தியமாக அடிக்க வேண்டும் என்கிறாயா?"

சீதாவின் தர்க்கம் லலிதாவின் மூளையில் ஏறவில்லை எனவே, அவள், "சரி! நீ இஷ்டப்படி செய், அம்மா! உன்னோடு பேசி என்னால் ஜயிக்க முடியுமா?" என்றாள். ஆனால் இன்றைக்கு லலிதாவும் சீதாவும் குளத்தங்கரைப் பங்களாவுக்குச் சென்று தனிமையை அடைந்த பிறகும் பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாகத் தொடங்கவில்லை. இரண்டு பேருடைய மனத்திலும் ஏதோ ஒரு தடங்கல் இருந்து தாராளமாகப் பேச முடியாமல் தடை செய்தது. "லலிதா! இன்றைக்கு நாம் இங்கு வந்தது சரியல்ல. இதற்குள் மாமி நம்மைத் தேட ஆரம்பித்திருப்பாள். நான்தான் இங்கு உன்னை அழைத்து வந்துவிட்டேன் என்று என்னைத் திட்டினாலும் திட்டுவாள்!" என்று சீதா ஆரம்பித்தாள். "உன்னை எதற்காகத் திட்ட வேண்டும்? வேணுமானால் அம்மா என்னைத் திட்டட்டும்; நான் அதற்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன்!" என்றாள் லலிதா. சாப்பிட்ட உடனே உனக்குத் தலை வாரிப் பின்னவேண்டும் என்று மாமி சொல்லிக் கொண்டிருந்தாள். தாழம்பூ வைத்துப் பின்னுவதற்கு ஒரு மணி நேரமாவது ஆகுமல்லவா? அவர்களோ சாயங்காலம் ஐந்து மணிக்கே வந்துவிடப் போகிறார்களாம்! நாம் இங்கே உட்கார்ந்திருந்தால் எப்படி?" என்றாள் சீதா.

"அதென்னமோ, அம்மா! இந்த ஏற்பாடெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. என்னைவிட நீ ஒரு வயது மூத்தவள் அல்லவா? உன் கலியாணத்தை முடிவு செய்து விட்டல்லவா என் கலியாணத்தைப் பற்றிப் பேசவேண்டும்? அப்பாகூட இப்படிச் செய்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. எனக்கு என்ன இவ்வளவு அவசரம் கலியாணத்துக்கு? இன்றைக்குத்தான் பாரேன்! இவ்வளவு தடபுடலும் ஆர்ப்பாட்டமும் எதற்காக என்று எனக்குத் தெரியவேயில்லை. இதைப் பற்றிச் சொல்லலாம் என்று பார்த்தால் அம்மா சண்டைக்கு வரப் போகிறாளே என்று பயமாயிருக்கிறது...." இந்தச் சமயத்தில், "யாருக்கு என்ன பயம்? நான் ஒருவன் இருக்கிறபோது யாரும் பயப்பட வேண்டியதில்லை" என்று சொல்லிக்கொண்டே பங்களாவுக்குள் பிரவேசித்தான் சூரியா.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்திரண்டாம் அத்தியாயம்

கன்னத்தில் ஒருஅறை

சில வருஷங்களுக்கு முன்பு கிட்டாவய்யர், "கொஞ்சம் சுகவாசியாயிருக்க வேண்டும்; நாகரிகமாக வாழ்க்கை நடத்தவேண்டும்" என்று எண்ணியபோது ஊர்க் குளத்தங்கரையில் அவருக்கிருந்த மேட்டு நிலத்தில் ஒரு சவுக்கண்டி கட்டினார். கூரைக்குக் கீத்தும் விழலும் போட்டார். நாலு புறமும் பிளாச்சு வேலி எடுத்தார். முன் பக்கத்தில் குரோடன்ஸு களும் பின் பக்கத்தில் மல்லிகை முல்லை முதலிய புஷ்பச் செடிகளும் வைத்து வளர்த்தார். குளத்தங்கரைப் பங்களா என்றும் கிராம முனிசீப் சவுக்கண்டி என்றும் பெயர் பெற்ற அந்த இடத்தைத் தம்முடைய சொந்த ஆபீசாகவும் நண்பர்களுடன் சல்லாபம் செய்யும் இடமாகவும் வைத்துக் கொண்டிருந்தார். முக்கியமாகக் கோடை காலத்தில் அந்தக் குளத்தங்கரைப் பங்களா ஜிலுஜிலுவென்று காற்று அடித்துக் கொண்டு வெகு சுகமாக இருக்கும். நாலு பேர் வருவதற்கும் சீட்டுக் கச்சேரி போடுவதற்கும் மிக்க வசதியாயிருக்கும். அதெல்லாம் சவுக்கண்டி கட்டிய புதிதில் சில காலந்தான் நடந்தது. அப்புறம் பங்களா வர வரச் சிதிலம் ஆகிப் பாழடைந்து கிடந்தது. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணம் நடக்க வேண்டியதை முன்னிட்டுக் கிட்டாவய்யர் அந்தச் சவுக்கண்டியைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார்.

திடீரென்று பங்களாவுக்குள்ளே நுழைந்த சூரியாவைப் பார்த்து லலிதா எரிச்சலுடன், "இங்கேயும் வந்துவிட்டாயா? இங்கே ஒருவரும் பயப்படவும் இல்லை; வீராதி வீரன் சூரியாவின் உதவியும் வேண்டியதில்லை! பொம்மனாட்டிகள் பேசிக் கொண்டிருக்குமிடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே?" என்றாள். "பெரிய பொம்மனாட்டிகள் நீங்கள்! வாயாடித்தனத்தைப் பார்! அத்தங்கா! நீயே சொல்லு! அண்ணாவிடம் தங்கை இப்படித் தானா பேசுகிறது! நாளைக்குக் கலியாணம் ஆகி இவள் புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் யார் இவளைத் தேடிக்கொண்டு போகப் போகிறார்கள்? ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறந்தவீட்டு மனுஷர்களிடம் பிரியமாயிருக்கக் கூடாதோ? பொம்மனாட்டிகளின் சுபாவமே இப்படித்தான்! அவர்களுக்கு மனதில் கொஞ்சமாவது வாஞ்சை என்பதே கிடையாது!" என்றான் சூரியா. "ஆமாம்! நீ ரொம்பப் பெரிய மனுஷன்; பொம்மனாட்டிகளின் சுபாவத்தை ரொம்பக் கண்டு விட்டாய்! வாயை மூடு!" என்று லலிதா மேலும் கடுமையாகப் பேசினாள். அப்போது சீதா குறுக்கிட்டு, "லலிதா! அண்ணாவின் மேல் எதற்காக இப்படி எரிந்து விழுகிறாய்? யாருக்கும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதென்று தெரிவதில்லை; தெரிந்தாலும் அதைப் பாராட்டுவதில்லை. சூரியாவைப் போல் எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்று நான் எவ்வளவோ ஏங்கிக் கிடக்கிறேன்! நீயானால் இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறாய்" என்றாள்.

"சரியாய்ப் போச்சு! நீயும் சூரியாவின் கட்சியிலே சேர்ந்து கொண்டாயா?" என்றாள் லலிதா. சூரியா குதூகலத்துடன், "பின்னே எப்போதும் உன் கட்சியையே பேசுவாளோ? சீதா உனக்கு எப்படி அத்தங்காளோ அப்படியே எனக்கும் அத்தங்காள் தானே" என்றான். "நான் ஒருத்தருடைய கட்சியும் பேசவில்லை; நியாயத்தைத் தான் சொன்னேன். நீங்கள் தமையனும் தங்கையும் தயவு செய்து சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்!" என்று சீதா இதோபதேசம் செய்தாள். "நான் ஒன்றும் சண்டை போடவில்லை. இவன் என்னத்துக்காக இப்போது இவ்விடம் வந்தான் என்று கேட்டேன். அவ்வளவுதானே?" "காரியம் இல்லாமல் நான் வரவில்லை, லலிதா! அத்தை சீதாவைத் தேடினாள். இங்கே இருந்தால் அனுப்பும்படி சொன்னாள், அதனாலேதான் வந்தேன். பம்பாய் அத்திம்பேரிட மிருந்து கடிதம் வந்திருக்கிறதாம். சீதா பேருக்கு வந்திருப்பதால் அவள் வந்துதான் உறையைப் பிரிக்கவேண்டும் என்று அத்தை காத்திருக்கிறாள்! நாகரிமுள்ள மனிதர்களுக்கும் பட்டிக்காட்டு மனிதர்களுக்கும் இதுதான் வித்தியாசம், நம் ஊரிலேயானால் பிறத்தியாருக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பார்கள்!" என்றான் சூரியா.

"அத்தை கூப்பிட்டாள் என்று முன்னாலேயே சொல்வதுதானே? இதற்கு இவ்வளவு சுற்றி வளைத்துப் பேசுவானேன்? வா சீதா! நாம் போகலாம்!" என்றாள் லலிதா. "நீ என்னத்துக்காக இப்போது போகிறாய்? சீதா போய் விட்டுச் சீக்கிரம் வந்து விடுகிறாள். அதுவரையில் நாம் பேசிக் கொண்டிருக்கலாம்!" என்று சூரியா சொன்னான். "ஆமாம், லலிதா! நீ இங்கேயே இரு! நான் போய் ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சீதா புறப்பட்டாள். இரண்டு காரணங்களை முன்னிட்டுச் சூரியா லலிதாவை அங்கேயே இருக்கச் சொன்னான். முதலாவது, அத்திம்பேரிடமிருந்து வந்த கடிதத்தை அத்தையும் சீதாவும் தனியாகப் படிக்கப் பிரியப்படுவார்கள். லலிதா கூடச் சென்றால், கடிதத்தைத் தானும் படித்துப் பார்க்க வேண்டுமென்று தொந்தரவு செய்வாள். அம்மாவும் பெண்ணும் ஒரு நிமிஷம் தனித்திருந்து பேசுவதற்கு விடமாட்டாள். இரண்டாவது, லலிதாவிடம் அவளுடைய கலியாணத்தைப் பற்றிச் சில விஷயங்கள் சொல்ல வேண்டுமென்று சூரியா விரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அப்புறம் சௌகரியம் கிடைக்காது என்று எண்ணினான். லலிதாவுக்குச் சூரியாவின் மேல் வாஞ்சை இல்லை என்பது கிடையாது. ஆனால் அவள் அன்று சாயங்காலம் 'அவர்கள்' வரும் போது தான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சீதாவிடம் பேசித் தெரிந்து கொள்ள விரும்பினாள்.

அதற்குத் தடையாக சூரியா வந்து சேர்ந்தபடியால் அவ்வளவு கோபம் அவன் பேரில் அவளுக்கு வந்தது. வீட்டுக்குத் தானும் போனால் திரும்பி வரமுடியாது. சீதாவிடம் தனியாகப் பேசவும் முடியாது. ஆகையால் சீதா போய்விட்டு வருவதே நல்லது என்று குளத்தங்கரைப் பங்களாவில் இருக்கச் சம்மதித்தாள். மற்றபடி சூரியாவுடன் பேசுவதற்கு வேண்டிய பொறுமை அவளிடம் அப்போது இல்லை. சூரியா எப்படித்தான் பேச்சை தொடங்குவது என்று யோசித்தான். யோசித்து தவறான முறையிலேயே தொடங்கினான். "லலிதா உன் அத்தங்காளைப் பற்றி, அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ அளந்து கொண்டிருந்தாயே? எல்லாம் பொய்!" என்று சொன்னான். "எது பொய்?" என்றாள் லலிதா. "எல்லாந்தான்! 'பம்பாய் அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள்! ரதி என்றால் ரதிதான்' என்று எவ்வளவோ வர்ணனை செய்தாய்? அது மட்டுமா? பம்பாயிலிருந்து உன் அத்தங்காள் வந்த பிறகு கூடப் பக்கம் பக்கமாய்க் கடிதம் எழுதினாயே?" "ஆமாம் எழுதினேன். அதிலேயெல்லாம் என்ன தப்பு?" "உன்னுடைய அத்தங்காள் ரொம்ப அழகோ?" "அழகு இல்லையோ?" "இல்லவே இல்லை; சுத்த அவலட்சணம் எந்தக் குருடன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள..." மேலே சூரியா பேச முடியவில்லை. ஏனெனில், "என்ன? யார் அவலட்சணம்?" என்று சொல்லிக் கொண்டே தன் தமையனின் கன்னத்தில் பளீர் என்று அறைந்தாள்!

கொஞ்ச நாளைக்கு முன்னேயாயிருந்தால் சூரியா லலிதாவின் ஒரு அறைக்குப் பதிலாக அவளுடைய தலையில் ஆறு குட்டுக் குட்டியிருப்பான்! இப்போது அப்படியெல்லாம் செய்யவில்லை. கன்னத்தில் விழுந்த அறை அவனுக்கு உற்சாகத்தை உண்டு பண்ணியது என்று தோன்றியது. மலர்ந்த முகத்துடன் "அடே அம்மா! அத்தங்காளிடத்தில் எவ்வளவு கரிசனம்? சிநேகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? நான் வெறுமனே சொன்னேன். லலிதா! உன் அத்தங்காள் நல்ல இலட்சணமாய்த்தான் இருக்கிறாள்; புத்திசாலியாயுமிருக்கிறாள். ஆனால் அழகும் அறிவும் இருந்து என்ன பிரயோஜனம்? பெண்களுக்கு நல்ல இடத்தில் கலியாணம் ஆவதற்கு இந்தக் காலத்தில் பணம் அல்லவா வேண்டியிருக்கிறது?" "ஆமாம்; நம் ஊர்க்காரர்களுக்குப் பணம், பணம், பணம். பணந்தான் பெரிது! பணத்துக்காக உயிரை விடுவார்கள். இங்கிலீஷ்கார தேசத்திலேயெல்லாம் இப்படி இல்லையாமே? அங்கே ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் கலியாணம் செய்து கொள்வார்களாம். ஏழைப் பணக்காரர் என்ற வித்தியாசமே பார்க்க மாட்டார்களாம். நம் ஊர்ப் பிள்ளைகள், நீங்களும் இருக்கிறீர்களே! இங்கிலீஷ்காரர்களைப் பார்த்துத் தலையைக் கிராப் செய்து கொள்ளவும் கால் சட்டை மேல் சட்டை போட்டுக் கொள்ளவும் தஸ்புஸ் என்று இங்கிலீஷ் பேசவும் கற்றுக் கொள்கிறீர்கள். கல்யாணம் என்றால் மட்டும், 'பதினாயிரத்தைக் கொண்டு வா! இருபதினாயிரத்தைக் கொண்டு வா!' என்கிறீர்கள். இங்கிலீஷ்காரர்களிடமிருந்து நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் துப்பு இல்லை!" என்று லலிதா பொரிந்து கொட்டினாள்.

"லலிதா! முன்னேயெல்லாம் உன்னை ஒரு வார்த்தை பேசச் சொல்வது பிரம்மப் பிரயத்தனமாயிருக்குமே! எப்போது இவ்வளவு பெரிய வாயாடி ஆனாய்? உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிற ராஸ்கல் என்ன பாடுபடப் போகிறானோ தெரியவில்லையே?" "அண்ணா! உனக்கு என்மேல் கோபமாயிருந்தால் யாரையோ பிடித்து எதற்காக வைகிறாய்?" "அப்பப்பா! இனிமேல் வரப்போகிற புருஷனுக்கு இதற்குள் பரிந்து கொண்டு வந்துவிட்டாயா? போனால் போகட்டும், லலிதா! உன்னிடம் ஒரு விஷயம் சொல்வதற்காகவே முக்கியமாக வந்தேன். அதை இப்போது சொன்னால்தான், சொன்னது; அப்புறம் ஒரு வேளை சந்தர்ப்பம் கிடைக்காது." "என்ன சொல்ல வேணுமோ அதைப் பளிச்சென்று சொல்லேன்! மூடுமந்திரம் என்னத்திற்கு?" "மூடு மந்திரம் ஒன்றும் இல்லை, லலிதா! உன்னுடைய நன்மைக்காகவே ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். சாயங்காலம் யாரோ மதராஸிலிருந்து உன்னைப் பார்க்க வருகிறார்கள் அல்லவா? 'மாப்பிள்ளை'யாக வரப்போகிறவனை உனக்குப் பிடித்திருந்தால் சரி; பிடிக்கவில்லையென்றால் தைரியமாகச் சொல்லிவிடு. அப்பா அம்மா சொல்வதற்காகவோ, வெறுமனே சங்கோசப்பட்டுக்கொண்டோ , வாயை மூடிக்கொண்டு இருந்துவிடாதே! தெரிந்ததா? கலியாணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏதாவது ஒரு சாமான் நமக்குப் பிடிக்காவிட்டால் அதை எறிந்து விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம்; கலியாண விஷயம் அப்படியல்ல. ஒரு தடவை முடிந்து போனால் முடிந்துபோனது தானே! அப்புறம் மாற்ற முடியாதல்லவா?" "சரி! அண்ணா! நானே அப்படித்தான் மனத்திற்குள் தீர்மானம் பண்ணி வைத்திருக்கிறேன். ஒரு வேளை எனக்குப் பிடிக்காவிட்டால், நீ என் கட்சியில் இருப்பாய் அல்லவா?" "கண்டிப்பாய் இருப்பேன். அதைப்பற்றி நீ கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்!" என்றான் சூரியா.

வீட்டுக்குப் புறப்பட்ட சீதா சவுக்கண்டியின் வெளி 'கேட்டி'ன் அருகே தயங்கி நின்றாள். 'மறுபடியும் இங்கே திரும்பி வருவானேன்? லலிதாவையும் அழைத்துக்கொண்டு போய் விட்டால் என்ன?' என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றியது. எனவே, திரும்ப சவுக்கண்டிக்குள் வருவதற்காக நாலு அடி எடுத்து வைத்தாள். இதற்குள் உள்ளே தமையனும் தங்கையும் பேசியது காதில் விழுந்தது. தன்னைப் பற்றிச் 'சுத்த அவலட்சணம்' என்று சூரியா கூறியது அவள் உள்ளத்தில் ஆங்காரத்தை உண்டாக்கிற்று. அதற்குப் பதிலாக லலிதா பளீரென்று கன்னத்தில் அறைந்த சத்தமும் அவள் காதில் விழுந்தது. தன்னுடைய உத்தேசத்தை மறுபடியும் மாற்றிக் கொண்டு வீடு நோக்கிச் சென்றாள். குளத்தங்கரையிலிருந்து கிட்டாவய்யரின் வீடு குறுக்கு வழியாகச் சுமார் அரை பர்லாங்கு தூரந்தான் இருக்கும். அந்த தூரம் போவதற்குள் ஆங்காரம் கொண்ட சீதாவின் உள்ளம் எண்ணாததெல்லாம் எண்ணியது. 'இந்தத் தறுதலைப் பையனுக்கு நான் அவலட்சணமாம்! 'என்னைக் குருடன் தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம்!' அம்பிகே! தாயே! சூரியாவைப் போன்றவர்கள் வெட்கித் தலை குனியும்படியாக உயர்ந்த பதவியிலுள்ள சீமான் என்னைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள மாட்டானா?" என்று அவளுடைய குழந்தை உள்ளம் ஆத்திரத்துடன் பிரார்த்தனை செய்தது. அன்று காலையிலிருந்து வீட்டில் நடந்து கொண்டிருந்த தடபுடல்களையெல்லாம் பார்த்துவிட்டு, 'இப்படியெல்லாம் நமக்கு நடக்கப் போகிறதா?' என்று சீதா ஏக்கமடைந்திருந்தாள். சூரியா வேடிக்கையாகச் சொன்ன வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனை அளித்தன.

அதே சமயத்தில் லலிதா தன்னிடத்தில் எவ்வளவு அபிமானம் கொண்டிருக்கிறாள் என்பதையும் சீதா ஞாபகப்படுத்திக் கொண்டாள். தன்னைப்பற்றித் தமையன் சொன்ன வார்த்தையைப் பொறுக்காமல் அவன் கன்னத்தில் அறைந்து விட்டாளே? இதுவல்லவா அன்பும் சிநேகமும்! இப்படிப்பட்ட அன்புக்கும் சிநேகத்துக்கும் தன்னால் என்ன பிரதி செய்ய முடியும்? தற்காலத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பிரதி உபகாரம் செய்யக்கூடிய காலம் ஒரு சமயம் வராமலா போகும். சற்று நேரத்துக்கெல்லாம் சுண்டுப் பயல் குளத்தங்கரைப் பங்களாவுக்கு ஓடிவந்தான். "அடி லல்லு! அம்மா அழைத்து வரச் சொன்னாள். உனக்குத் தலைவாரிப் பின்னி அலங்காரம் செய்ய ஆரம்பிக்க வேணுமாம். மணி மூன்று ஆகிவிட்டது, இன்னமும் நீ இங்கே உட்கார்ந்திருக் கிறாயே? அண்ணாவுடன் அந்தரங்கம் பேசுவதற்கு இதுதானா சமயம்?" என்று கீச்சுக் குரலில் கத்தினான். "இந்தப் பிள்ளை பண்ணுகிற அதிகாரத்தைப் பார்!... சுண்டு! சீதா அத்தங்கா அங்கேதான் இருக்கிறாளா? இங்கே வருவதாகச் சொல்லவில்லையா!" என்று கேட்டாள் லலிதா. "சீதா அத்தங்காவுந்தான் உன்னை உடனே புறப்பட்டு வரச் சொன்னாள், இங்கே அவள் வரமாட்டாளாம். ஏன் என்று தெரியவில்லையா? மிஸ்டர் கே. சூரிய நாராயண அய்யர்வாள் இங்கே விஜயம் செய்திருப்பதனால்தானே!" என்று சுண்டு சொல்லிவிட்டுச் சூரியா தன்னை அடிக்க வந்தால் அவனிடம் அகப்படாமல் தப்பி ஓடுவதற்குத் தயாரானான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

இது என்ன ஓசை?

சரஸ்வதி அம்மாளும் சீதாவும் லலிதாவை வீட்டுக்கு வரும்படி சொல்லியனுப்பியது உண்மைதான். அவள் வந்ததும் அலங்காரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில், சீதா மிகவும் உற்சாகம் காட்டினாள். சட்டாம்பிள்ளை உத்தியோகம் பார்த்தாள் என்று சொல்லலாம். இந்த மாதிரி தலை பின்னிச் சடை போட வேண்டும். இப்படி முன் வகிடு எடுக்க வேண்டும், இப்படி முன்னால் இரண்டு சுருட்டை மயிரைத் தொங்கவிட வேண்டும், இந்த வர்ணப் புடவைக்கு இந்த நிற ரவிக்கைப் போட்டுக் கொள்ள வேண்டும், அதே நிறத்தில் தலையில் பூவும் கையில் வளையல்களும் இருக்க வேண்டும் - என்றெல்லாம் வாயினால் பிரசங்கம் செய்து கொண்ட சீதா கையினால் காரியமும் செய்துகொண்டிருந்தாள். லலிதாவை அலங்காரம் செய்யும் விஷயத்தில் சீதா காட்டிய தீவிர உற்சாகத்தைக் கண்டு சரஸ்வதி அம்மாளின் கடின இதயம்கூட அவள் விஷயத்தில் சிறிது இளகிவிட்டது. 'அடுத்தாற்போல் சீதாவுக்கும் ஒரு வரனைப் பார்த்து நிச்சயம் செய்துவிட வேண்டும். ஒரே முகூர்த்தத்தில் இரண்டு கலியாணமும் வைத்துக் கொண்டாலும் நல்லதுதான். ஆனால் சாஸ்திரப்படி செய்யலாம் என்கிறார்களோ, என்னமோ? செய்யலாம் என்று சொன்னால் ரொம்ப நல்லது செலவோடு செலவாய்ப் போய்விடும். ஆனால் அதற்காக முகூர்த்தத்தை ரொம்ப நாள் தள்ளிப் போடக் கூடாது. சித்திரை மாதத்திலாவது கலியாணத்தை நடத்தி விட்டால்தான் எல்லா விஷயங்களுக்கும் சௌகரியமாயிருக்கும்!" என்று மற்றவர்கள் காதிலும் விழும்படியாகச் சரஸ்வதி அம்மாள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

"ஏன் அம்மா! என் கலியாணம் நிச்சயமாகிவிட்ட மாதிரியே பேசுகிறாயே?" என்றாள் லலிதா. "அதிலே கூடச் சந்தேகமா என்ன?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அதுதான் மாமி, நானும் சொல்லுகிறேன்! மதராஸிலிருந்து வருகிறவர்கள் வெறுமனே ஜம்பத்துக்காக வருவார்களா? அல்லது நம்ம லலிதாவைப் பார்த்துவிட்டு யாராவது 'பிடிக்கவில்லை' என்றுதான் சொல்வார்களா? அப்படிச் சொல்கிறவர்களுக்குத் தலையில் கொம்பாமுளைத்திருக்கும்? லலிதா மாதிரி பெண் கிடைப்பதற்குப் பூர்வ ஜன்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டாமா!" என்று சீதா கூறியதும் சரஸ்வதி அம்மாளைப் பூரிக்கச் செய்தது. "வருகிறவர்கள் சொல்கிறது இருக்கட்டும். நான் 'மாப்பிள்ளை பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டால்?" என்றாள் லலிதா. "அசடே! பேசாமலிரு, யார் காதிலாவது விழப் போகிறது! சூரியா பேத்துகிறதைக் கேட்டுக் கொண்டு ஏதாவது உளறாதே!" என்று சரஸ்வதி அம்மாள் கோபமாய்ச் சொன்னாள். "நானும் அதுதான் இவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், மாமி! பார்க்கிறதுக்கு முன்னாலேயே 'பிடிக்காமலிருக்கும்' என்று எதற்காக நினைத்துக்கொள்ள வேண்டும்! மாமாவோ நேரில் பார்த்துவிட்டு வந்து 'மாப்பிள்ளை மன்மதன் மாதிரி இருக்கிறார்!' என்று சொல்லுகிறார். மன்மதனைவிட அழகாய் எங்கே போய் மாப்பிள்ளை பிடிக்கிறது. மாமி! இந்த விஷயத்திலே மட்டும் லலிதா கொஞ்சம் அசட்டு பிசட்டு என்று பேசிக்கொண்டிருக்கிறாள்; அது எனக்குப் பிடிக்கவே இல்லை. இவள் அண்ணாவின் துர்போதனைதான் காரணம் போலிருக்கிறது!" என்றாள் சீதா.

"கேட்டாயா, லலிதா உன் அத்தங்காள் சொல்கிறதைக் கேட்டுக்கொள். சூரியா ஏதாவது உளறினால் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதே! அவனுக்கு இந்த விஷயமெல்லாம் என்ன தெரியும். யாரோ அவனுக்குத் தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்! சீதாதான் நல்லமாதிரி யோசனை சொல்கிறாள். அவளுடைய புத்திமதியைக் கேட்டுக்கொள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். லலிதாவை அலங்காரம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்துக்கெல்லாம் பம்பாய் ராஜம்மாள் சூரியாவைக் கூப்பிட்டு அனுப்பி "அப்பா! நான் பிறந்து வளர்ந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. குளத்தங் கரையில் அண்ணா பங்களாக் கட்டியிருக்கிறானாமே! அங்கே போய்ச் சற்று நேரம் காற்று வாங்கிவிட்டு வரலாமா?" என்றாள். "ஆகட்டும் அத்தை, போகலாம்" என்றான் சூரியா. இருவரும் பங்களாவை அடைந்தார்கள். ராஜம்மாள் பங்களாவின் திறந்த ஜன்னல் வழியாக நெடு நேரம் குளத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "எனக்குக் குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு ரொம்பப் பிரியம். வினாத் தெரிந்த நாளிலிருந்து கலியாணம் ஆகும்வரையில் ஒரு நாள்கூட இந்தக் குளத்தில் குளிக்காமல் இருந்தது கிடையாது. பம்பாய்க்குப் போனதிலிருந்து "குழாய் ஜலந்தான் 'கங்கை காவேரி' என்று ஆகிவிட்டது" என்று சொல்லி ராஜம் பெருமூச்சு விட்டாள்.

"அத்தை! உங்களுக்கு நீந்தத் தெரியுமாமே? அது உண்மையா? பெரிய அத்தை சொன்னாள்" என்றான் சூரிய நாராயணன். "உண்மைதான் சூரியா! அப்பா எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் யரோ ஒரு ஸ்திரீ காவேரி வெள்ளத்தில் போய்விட்டாள், என்று செய்தி வந்தது. அதுமுதல் 'பெண்களுக்கும் கட்டாயம் நீந்தத் தெரியவேண்டும்' என்று சொல்லி அப்பா, அதாவது உன் தாத்தா எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். இந்தக் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய்விடுவேன். சில சமயம் காவேரியில்கூட நீந்தியிருக்கிறேன். புண்ணிய காலங்களிலும் பண்டிகை தினங்களிலும் வண்டி கட்டிக்கொண்டு எல்லோரும் காவேரிக்குக் குளிக்கப் போவோம். அப்பா, அண்ணா, அக்கா எல்லோருமாகப் போவோம். நான்தான் வீட்டுக்குக் கடைக்குட்டிப் பெண். எல்லாருக்கும் என் பேரில் ஆசை அதிகம்...." ராஜம்மாள் கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அந்தப் பழங்கதையெல்லாம் இப்போது எதற்கு? என்னமோ உளறினேன். இருக்கட்டும், சூரியா! நீ இந்த வருஷம் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் படிக்கிறாயாமே? அப்படித்தானா?" என்றாள். ராஜம்மாளின் கண்ணில் கண்ணீர் ததும்புவதைப் பார்த்துச் சூரியாவும் பேச்சை மாற்ற விரும்பினான். "ஆமாம், அத்தை! முன்னேயெல்லாம் மெட்ரிகுலேஷன் என்பார்கள். இப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று அதற்குப் பெயர். எங்க அம்மாவுக்குப் பத்தாவது என்று சொன்னால்தான் தெரியும்!" என்றான்.

"ஆமாம், சூரியா! நீ ஒரு வக்கீல் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறாயாம். அந்த வக்கீலுக்கு ஒரு பிள்ளை இருக்கிறானாம்; பி.ஏ. படிக்கிறானாமே - வாஸ்தவந்தானா?" என்று ராஜம்மாள் கேட்டாள். "வாஸ்தவந்தான் அத்தை! அதற்கு என்ன இப்போது?" என்று சூரியா கேட்டபோதே அவன் மனத்தில் அந்தக் கேள்விக்குப் பதிலும் உதித்தது? வக்கீலின் பிள்ளைக்குச் சீதாவைக் கொடுக்கலாம் என்பதற்குத்தான் அத்தை அவனைப் பற்றிக் கேட்கிறாள் என்று தெரிந்துவிட்டது. அந்த எண்ணம் ஊசியால் குத்துவது போல் சுரீர் என்ற வேதனையை அவனுக்கு உண்டாக்கியது. "சூரியா! உன் அத்திம்பேர் ஒரு மாதிரி மனுஷர் என்று கேட்டிருப்பாய். எனக்கோ உடம்பு சரியாகவே இல்லை. இந்தப் பெண் சீதாவுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமென்று கவலையாயிருக்கிறது அண்ணாவிடம் சொல்லித்தான் இருக்கிறேன். ஆனால் அவனுக்கு எத்தனையோ ஜோலி. யாராவது நல்ல வரனாகத் தெரிந்தால் பார்த்துச் சொல், சூரியா! அதற்காகத்தான் முக்கியமாக உன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னேன்."

"அத்தை! இது என்ன பிரமாதம்? சீதாவின் சமர்த்துக்கும் அழகுக்கும் வரன்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரமாட்டார்களா? அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே வேண்டாம்!" என்று சூரியா கூறினான். அதே சமயத்தில் தன்னுடைய மனத்திற்குள் "நான் ஒருவன் இருக்கிறேனே? வேறு வரனைத் தேடுவானேன்?" என்று சொல்லிக்கொண்டான். இதை வெளிப்படையாக அத்தையிடம் சொல்லிவிடலாமா என்றுகூட மனத்தில் நினைத்தான், ஆனால் சங்கோசம் குறுக்கிட்டது. "சீதா சமர்த்து என்று உனக்குத் தோன்றுகிறதா, சூரியா! எதிலிருந்து அவ்வாறு சொல்கிறாய்? வயது பதினாறு பிறந்திருக்கிறது; இன்னும் விளையாட்டுத்தனம் கொஞ்சம்கூடப் போகவில்லை. ஓடையில் விழுந்ததும் 'ஓகோ' என்று கூச்சல் போட்டாளே, பார்த்தாயல்லவா?" என்றாள் ராஜம்மாள். "அதனால் என்ன அத்தை, சிறு பிராயத்தில் பெண்கள் அப்படிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால்தானே நன்றாயிருக்கிறது? அழுமூஞ்சியாயிருந்தால் யாருக்குப் பிடிக்கும்? பம்பாய்க்குப் போய் வந்த பிறகு லலிதாவின் சுபாவம்கூட மாறியிருக்கிறது. அதற்கு முன்னாலெல்லாம் அம்மாவுடன் சண்டை பிடிப்பதும் அழுவதுமாகவே இருப்பாள்; கலகலப்பாகவே இருக்கமாட்டாள். இந்த ஒரு வருஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டு சந்தோஷமாயிருக்கிறாள்" என்றான் சூரியா.

"இந்த அசட்டுப் பெண் உன் தங்கையையும் தன்னைப் போல் ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும்படி செய்து விட்டாளாக்கும்." "அடிக்கடி சீதாவை 'அசடு அசடு' என்று சொல்கிறீர்களே அத்தை! அவள் முகத்திலே சமர்த்து என்று எழுதி ஒட்டியிருக்கிறதே! எதுவரையில் படித்திருக்கிறாள்?" "படிக்கிறதிலே சீதா சமர்த்துத்தான் சூரியா. பள்ளிக்கூடத்தில் எப்போதும் முதல் மார்க்குத்தான். ஒரு தடவை காதால் கேட்ட பாட்டை அப்படியே பாடி விடுவாள், இந்தப் பக்கங்களில் எட்டாவது என்று சொல்லுகிறார்களே அதுவரையில் படித்திருக்கிறாள். இங்கிலீஷ் நன்றாகத் தெரியும், கதை சொல்லச் சொன்னால் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் உலகந் தெரியாத பெண்ணாயிருக்கிறாள். யாரிடமும் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணத்தோடு சேர்த்துச் சீதாவுக்கும் நடத்திவிட்டால் என் மனத்துக்கு நிம்மதியாயிருக்கும். மேற்படி சம்பாஷணையின் நடுவில் சூரியாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது அத்தைக்குச் சீதாவைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் போலிருக்கிறது; அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வரனைப் பற்றிய பேச்சை எடுத்திருக்கிறாள் என்று நினைத்தான். ஆனாலும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று எண்ணினான். அத்தை அந்த விஷயத்தைப் பற்றிப் பட்டவர்த்தனமாகக் கேட்ட பிறகு கொஞ்சம் 'பிகு' பண்ணிக் கொண்டு அரை மனதாகத் தன்னுடைய சம்மதத்தைத் தெரியப்படுத்துவது என்று தீர்மானித்தான்.

எனவே, சிறிது அலட்சிய பாவத்துடன், "இங்கே என்ன அப்படி ஒசத்தியான வரன் கிடைத்துவிடப் போகிறது. அத்தை! பம்பாயில் இல்லாத வரனா? அங்கேயே பார்க்கக் கூடாதா?" என்றான். "பம்பாயில் வரன் இருக்கலாம், சூரியா! ஆனால் சீதாவை இந்தப் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம், நம்முடைய குடும்பத்தில் நான் ஒருத்தி பம்பாயில் வாழ்க்கைப் பட்டது போதும் என்று இருக்கிறது. மறுபடியும் நீ தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போனதும் அந்த வக்கீலாத்துப் பையனின் ஜாதகம் வாங்கி அனுப்புகிறாயா, சூரியா? அந்தப் பையன் பெயர் என்ன?" "அவன் பெயர் பட்டாபிராமன், அத்தை! பையன் கெட்டிக்காரன்தான்; பி.ஏ. படிக்கிறான். ஆனால் சொத்து அதிகம் கிடையாது. ஒரு வீடு இருக்கிறது; அதன் பேரில் கடன். இந்த இலட்சணத்துக்கு ஏராளமான வரதட்சணை வர வேண்டும் என்று அவன் அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பட்டாபியைவிடச் சிலாக்கியமான வரன்கள் இருக்கின்றன; நான் பார்த்துச் சொல்கிறேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்" என்றான் சூரியா. "எவ்வளவோ பெரிய வரன்கள் இருக்கலாம்! ஆனால் நமக்குச் சரியாக வரவேண்டாமா, சூரியா? இந்த நாளில் பிள்ளைகளைப் பெற்றவர்கள் எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டுதான் வரதட்சணை கேட்கிறார்கள். நாளைக்கு உனக்குத்தான் கலியாணப் பேச்சு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அண்ணாவும் மன்னியும் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைந்து வரதட்சணை வாங்குவார்களா?..."

வரதட்சணை வாங்குவதைப் பற்றி ஒரு பெரிய கண்டனப் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று சூரியா எண்ணினான். கலியாண விஷயத்தில் தன்னுடைய தீர்மானமான கொள்கையை வெளியிடவும் உத்தேசித்தான். ஆனால் அதற்குள் அத்தையின் முகபாவம் மாறுவதைக் கவனித்தான். ராஜம்மாளின் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது. "சூரியா! இது என்ன ஓசை!" என்று கேட்டாள். ஓசையா? என்ன ஓசை? எனக்கு ஓசை ஒன்றும் கேட்கவில்லையே?" என்றான் சூரியா. "கவனித்துக் கேள், சூரியா! சமுத்திரத்தில் அலை ஓசை மாதிரிச் சத்தம் கேட்கவில்லையா?" சூரியாவின் காதிலும் அப்போது அந்த ஓசை கேட்டது. பங்களாவுக்கு வெளியில் எட்டிப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு விஸ்தாரமான சவுக்கு மரத் தோப்பு காணப்பட்டது. இளவேனிற் காலத்தின் இனிய தென்றல் அந்தத் தோப்பில் பிரவேசித்து நெருங்கிய சவுக்கு மரக்கிளைகளின் வழியாக நுழைந்து சென்றபோது உண்டான சத்தந்தான் அப்படிச் சமுத்திரத்தின் அலை ஓசை போன்ற பிரமையை உண்டாக்கியது! இதைத் தெரிந்து கொண்ட சூரியா, "அத்தை! அலையும் இல்லை; ஓசையும் இல்லை! அதோ அந்தச் சவுக்குத் தோப்பின் கிளைகள் காற்றில் அசைவதுதான் அலை ஓசை போன்ற சத்தத்தை உண்டாக்குகிறது." அது உண்மையென்று தெரிந்து கொண்ட பிற்பாடு ராஜம்மாளின் முகம் சிறிது தெளிவடைந்தது. "இருந்தாலும் அத்தை! நீ என்னத்திற்காக அவ்வளவு பயங்கரமடைந்தாய்? அலை ஓசையாயிருந்தால்தான் என்ன?" என்று சூரியா கேட்டான். "என் மனது இப்போது ரொம்பவும் கலங்கிப் போயிருக்கிறது. இன்னொரு சமயம் சொல்கிறேன்!" என்றாள் ராஜம்மாள். சற்றுத் தூரத்திலிருந்து 'பாம்' 'பாம்' என்று மோட்டார்க் கொம்பின் சத்தம் கேட்டது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து நான்காம் அத்தியாயம்

நெஞ்சு விம்மியது

மோட்டார் வண்டியின் சத்தம் கேட்டதும், சூரியா, "மதராஸ்காரர்கள் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது அத்தை! ஐந்து மணிக்குத்தான் வருவதாக இருந்தது, நாலரைக்கே வந்து விட்டார்களே!" என்றான். "ஆமாம், அப்பா! வேளை நெருங்கி வரும்போது எல்லாம் சீக்கிரமாகவே நடந்துவிடும். வேளை வராவிட்டால் ஒன்றும் நடவாது! வா, போகலாம்!" என்றாள் ராஜம்மாள். "நாம் அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்? அவர்கள் ஏதாவது செய்துகொள்ளட்டும். எனக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை!" என்று சூரியா அலுத்துக்கொண்டான். "நன்றாயிருக்கிறது! குடும்பத்தில் இருபது வருஷத்துக்குப் பிறகு கலியாணம் நடக்கப்போகிறது. பெண்ணுக்குத் தமையன் நீ! எல்லாவற்றையும் நீயல்லவா நடத்தி வைக்க வேண்டும்? நான் இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லையென்றாலும், சமயத்தில் இல்லாமற் போனால் யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் புறப்படு, போகலாம்!" என்றாள் ராஜம்.

போகும் வழியில் சூரியா, "அத்தை! பம்பாயிலிருந்து கடிதம் வந்ததே! ஏதாவது விசேஷம் உண்டா? அத்திம்பேர் தானே கடிதம் எழுதியிருக்கிறார்? அவர் இந்தப் பக்கம் இப்போது வரமாட்டாரா?" என்று கேட்டான். "விசேஷம் ஒன்றுமில்லை, வடக்கே பாட்னா என்று ஒரு பட்டணம் இருக்கிறதாமே? ஒரு வேளை உத்தியோக காரியமாக அங்கே போக வேண்டி யிருக்கும் என்று எழுதியிருக்கிறார். திரும்பப் போகும்போது இங்கே வந்தாலும் வருவாராம். அதற்குள்ளே சீதாவுக்கு ஒரு வேளை கலியாணம் நிச்சயமாகிவிட்டால்....." "அத்தை! நீ கூடப் பட்டிக்காட்டு ஸ்திரீகளைப் போல் ஓயாமல் 'கலியாணம்' 'கலியாணம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே? எதற்காக இவ்வளவு கவலை?" "கவலைப்பட வேண்டிய காரியம், சூரியா! அதனால்தான் கவலைப்படுகிறேன்!" என்றாள் ராஜம்மாள். இருவரும் அக்கிரகாரத்தின் வீதியை அடைந்த போது மோட்டார் வண்டி சீமாச்சுவய்யரின் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டார்கள்.

கிட்டாவய்யரின் வீட்டில் லலிதாவினுடைய அலங்காரத்தின் கடைசிக் கட்டம் நடந்து கொண்டிருந்தது. சீதாவின் பரபரப்பைச் சொல்லி முடியாது லலிதாவின் ஒரு கை வளையைக் கழற்றி இன்னொரு கையில் போடுவதும் ஒரு விரலில் உள்ள மோதிரத்தைக் கழற்றி இன்னொரு விரலில் போடுவதும் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து எடுத்துச் சரிப்படுத்தி வைப்பதும் முன் தலையையும் வகிட்டையும் சீப்பினால் இலேசாக அப்படியும் இப்படியும் வாரி அழகு பண்ணுவதும் நெற்றிப் பொட்டைப் பத்துத் தடவை மாற்றி மாற்றி வைப்பதுமாயிருந்தாள். சூரியாவைக் கண்டதும் சரஸ்வதி அம்மாள், "ஏண்டா! இத்தனை நேரமும் எங்கேடா போனாய்? அத்தையோடு அரட்டையடிப்பதற்கு இதுதானா சமயம்? அவர்கள் சொன்ன நேரத்துக்கு அரைமணி முன்னதாகவே வந்துவிட்டார்கள். டிபன் கொண்டு கொடுப்பதற்காக உன்னைப் பார்த்தால் ஆளைக் காணோம். சீமாச்சு மாமாவோ 'நேரமாச்சு!' என்று குதிக்கிறார். கடைசியில் பரிசாரகனிடம் கொடுத்தனுப்பிச் சுண்டுவையும் கூடப் போகச் சொன்னேன். இப்போதுதான் போகிறார்கள் நீயும் போ! மாப்பிள்ளைக்கு நீயே கவனித்து டிபன், காப்பி எல்லாம் கொடு! ரவா கேசரி செய்து அனுப்பியிருக்கிறேன், பரிமாற மறந்துவிடப் போகிறான். நீ போய்க் கவனித்துக்கொள்! போ சீக்கிரம் போ!" என்று விரட்டி அடித்தாள்.

"நான் ஒன்றும் போகவில்லை; எத்தனை பேர் போக வேண்டுமாம்? இதற்குள்ளே இவ்வளவு தடபுடல் எதற்காகப் பண்ணுகிறாய் என்று தெரியவில்லை!" என்றான் சூரியா. "கேட்டாயல்லவா பிள்ளையின் சமர்த்தை? அப்பாவைப் போலத்தான் பிள்ளையும் இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான் எப்படித்தான் நாளைக்குக் கலியாணம் பண்ணிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை!" இதற்குள் சீதா, "சூர்யா! அம்மா சொன்னதைக் கேட்டால் என்ன? மாப்பிள்ளையை நீ கவனியாமல் பின்னே யார் கவனிப்பார்கள்?" என்றாள். "எல்லோருமாகச் சேர்ந்து அதற்குள் 'மாப்பிள்ளை' என்று ஸ்திரப்படுத்தி விடுகிறீர்களே! இன்னும் அந்த மேதாவி வந்து லலிதாவைப் பார்த்தாகவில்லை!" என்றான் சூரியா. "அதுதான் நானும் சொல்கிறேன்!" என்றாள் லலிதா. "நீ பேசாமலிரு லலிதா!" என்றாள் அவள் தாயார் சரஸ்வதி அம்மாள். "அம்மாஞ்சி! நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிற பட்சத்தில் நான் போய் வந்தவர்களுக்கு டிபன் பரிமாறி விட்டு வருகிறேன்! நீ போகிறாயா, நான் போகட்டுமா? ஆண் பிள்ளையா இலட்சணமா ஜம்மென்று போக; 'மாப்பிள்ளை, ஸார்! வாருங்கோ!' என்று கையைப் பிடித்துக் குலுக்க! அதை விட்டு இங்கே என்னத்தைச் செய்கிறாய்?" என்றாள் சீதா. "அப்படிச் சொல், சீதா! இந்த வீட்டிலேயே நீ ஒருத்திதான் சமர்த்து. நீ மட்டும் இன்றைக்கு இல்லாவிட்டால் இந்தப் பெண்ணின் தலையை வாரிப் பின்னி விடுகிறதற்குள்ளே என்னை என்ன பாடுபடுத்தியிருப்பாள், தெரியுமா? உனக்கும் ஒரு வரனைப் பார்த்துக் கலியாணம் நிச்சயம் பண்ணிவிட்டால் தான் எனக்கு மனது நிம்மதியாகும்?"

"அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு, மாமி! இன்றைக்கு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். உங்கள் பிள்ளை போகிற வழியாகக் காணவில்லையே?" "எல்லோரும் இன்றைக்குப் புதிதாக வந்தவர்களைப்பற்றி இவ்வளவு கரிசனம் காட்டுகிறீர்களே தவிர வீட்டு மனுஷனை யார் கவனிக்கிறீர்கள்? எனக்குக் கூடத்தான் பசியாயிருக்கிறது. யாராவது என்னை 'டிபன் சாப்பிடு' என்று சொல்லுகிறீர்களா? இந்த உலகமே இப்படித்தான்? மகா மோசம்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா வெளியேறினான். சீமாச்சுவய்யரின் வீட்டுக்குச் சூரியா போய்ச் சேர்ந்த போது மதராஸிலிருந்து வந்தவர்கள் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளைப் பையன், அவனுடைய தகப்பனார், தாயார், சுப்பய்யர் ஆக நாலு பேர் வந்திருந்தார்கள் என்பதைச் சூரியா கவனித்துக் கொண்டான். அவர்களோடு உட்கார்ந்து சுண்டுவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சீமாச்சுவய்யர் அவர்களையெல்லாம் உபசரிப்பதில் ஈடுபட்டிருந்தார். சூரியா தாழ்வாரத்தின் தூணைப் பிடித்துக்கொண்டு மௌனமாய் நின்றான். அவனைக் கவனித்த மாஜி ஸப் ஜட்ஜ் சாஸ்திரியார், "இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டார். "இவன்தான் பெண்ணின் தமையன் சூரியநாராயணன்; எஸ்.எஸ்.எல்.சி படிக்கிறான்!" என்றார் சீமாச்சுவய்யர்.

சௌந்தரராகவன் எம்.ஏ. தலைநிமிர்ந்து பார்த்துவிட்டு, "எஸ்.எஸ்.எல்.சி தாராளமாய்ப் படிக்கட்டும்; அதற்காக ஏன் இவ்வளவு கோபமாயிருக்க வேண்டும்!" என்றான். சௌந்தரராகவன் ஹாஸ்யமாகச் சொன்னதை சூரியா, ரஸிக்கவில்லை. "எனக்கு என்ன கோபம்? நீங்கள் தான் வருகிற போதே கோபமாய் வந்திருப்பது போலத் தோன்றுகிறது. அதனால், நான் பரிமாற வருகிறதையெல்லாம் 'வேண்டாம் வேண்டாம்' என்கிறீர்கள். கலியாணம் ஆன பிற்பாடல்லவா கோபதாபமெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும்? இப்போது எதற்கு?" என்றான் சூரியா. "பலே அப்பா, பலே!" என்றார் ஸ்ரீ பத்மலோசன சாஸ்திரியார். "காமாட்சி! பார்த்தாயல்லவா பையனுடைய பேச்சை? இந்தக் காவேரித் தண்ணீரில் ஏதோ மகிமை இருக்கிறது என்று நான் சொன்னது இப்போதாவது உண்மையென்று உனக்குப் படுகிறதா?" என்று கேட்டார். "இந்தக் காலத்திலேயே பிள்ளைக் குழந்தைகள் எல்லோரும் சமர்த்தாகத்தானிருக்கிறார்கள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "பெண் குழந்தைகள் மட்டும் இலேசா இருக்கிறார்களா, என்ன? இவன் தங்கையோடு நீங்கள் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் தெரியும்! என்ன ஓய்! சுப்பய்யரே! நான் சொல்கிறது என்ன?" என்று சீமாச்சுவய்யர் இன்ஷூரன்ஸ் சுப்பய்யரை சாட்சிக் கூண்டுக்கு அழைத்தார். "எல்லாம் இன்னும் கால்மணியில் தெரிந்து விடுகிறது!" என்று பட்டுக் கொள்ளாமல் சொன்னார் சுப்பய்யர்.

லலிதாவின் அலங்காரம் ஒரு விதமாக முடிவடைந்தது. "சீதா! இனிமேலாவது நீ போய் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்ளேன்!" என்றாள். "எனக்கென்னடி இப்போது வந்திருக்கிறது! இதோ பார்! காதண்டை இந்தச் சுருட்டை மயிர் இப்படித் தொங்கினால் நன்றாயிருக்கும்!" என்று சீதா மறுபடியும் லலிதாவின் முகத்தை அழகுப்படுத்தத் தொடங்கினாள். "எல்லாம் இவ்வளவு போதும்! நீ போகிறாயா, மாட்டாயா? நீ மட்டும் முகம் அலம்பிப் பொட்டு வைத்துக் கொண்டு நல்ல புடவையும் கட்டிக் கொள்ளாவிட்டால் நான் காமரா உள்ளுக்குப்போய்க் கதவை இழுத்துத் தாள் போட்டுக்கொண்டு விடுவேன். யார் கதவை இடித்தாலும் திறக்க மாட்டேன். பெண் பார்க்க வந்தவர்கள் பார்க்காமலே திரும்பிப் போக வேண்டியதுதான்?" "சீதா! அவள் சொல்லுகிறதைத்தான் கேளேன்! இவ்வளவு பிடிவாதம் எதற்கு? நீயும் தோழிப் பெண்ணாகப் பக்கத்தில் நிற்கவேண்டுமென்று லலிதா ஆசைப்படுகிறாள் போலிருக்கிறது. முகத்தில் எண்ணெய் வழியக் கந்தலைக் கட்டிக்கொண்டு நின்றால் சரியாயிருக்குமா?" என்றாள் சீதாவின் பெரியம்மா. "ஆமாம், சீதா! உன் பெரியம்மா சொல்கிறதைக்கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி! இப்படி எல்லோரும் சேர்ந்து சொன்னால் நான் என்ன செய்கிறது?" என்று சொல்லிக்கொண்டு சீதா தன்னுடைய அலங்காரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாளின் தாயார் அவளைக் கூப்பிட்டுக் கொல்லைக்கட்டுக்குத் தனியாக அழைத்துக் கொண்டு போனாள்.

ஏதோ ரகசியமாகச் சொன்னாள்; அதற்குச் சரஸ்வதி அம்மாள், "உனக்கு அலாதியாக ஏதேனும் தோன்றும்! பேசாமல் இரு! கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடாது!" என்று பதில் சொன்னது எல்லாருடைய காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்தது. சீதா தன் புடவையை மாற்றிக்கொண்டு முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு வந்தாளோ, இல்லையோ, சரஸ்வதி அம்மாள் அவளைப் பார்த்து, "சீதா! சீதா! உன் மாமா வாசலிலேயே நிற்கிறார் பார்! அவரைக் கொஞ்சம் உள்ளே கூப்பிடு! அவர்கள் வருகிற போது குழந்தை என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் சொல்லாமல் இவர் பாட்டுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாரே!" என்றாள். அப்போது அபயாம்பாள், "அவன் சொல்கிறது என்ன? நமக்குத் தெரியாதா? அவர்கள் வந்து உட்கார்ந்ததும் குழந்தை கையில் வெற்றிலை பாக்குத் தட்டோ டு வரவேண்டியது. தட்டை வைத்துவிட்டு எல்லோருக்கும் சேர்ந்து ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டியது. பிறகு கூடத்துக்கு வந்து நிற்க வேண்டியது. யாராவது ஏதாவது கேட்டால் கணீரென்று பதில் சொல்ல வேண்டியது!" என்று சொன்னாள். "எல்லாவற்றுக்கும் நீ மாமாவைக் கொஞ்சம் கூப்பிடு சீதா!" என்றாள் சரஸ்வதி அம்மாள். சீதா வாசற்பக்கம் சென்று பார்த்தாள். மாமாவும் இன்னும் ஊரார் சிலரும் தெருவில் போட்டிருந்த கோடைப் பந்தலில் நின்று கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் மாமாவைக் கூப்பிடலாமா, கூடாதா என்று யோசித்துக்கொண்டு சீதா வாசற்படியருகில் சிறிது தயங்கி நின்றாள். இதற்குள் மோட்டார் வண்டி வந்து வீட்டு வாசலில் நின்றது. லலிதாவைப் பார்க்க வருகிற மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று தெரிந்துகொள்ளச் சீதாவின் மனத்தில் எழுந்த ஆவல் அவளை அப்படியே நிற்கும்படிச் செய்தது.

மோட்டாரிலிருந்து முதலில் ஒரு பெரியவர் இறங்கினார். அடுத்தாற்போல் ஒரு யௌவன புருஷன் இறங்கினான். அவன் தான் மாப்பிள்ளையாயிருக்க வேண்டும். அடடா! எவ்வளவு களையாயிருக்கிறான்! லலிதா அதிர்ஷ்டசாலிதான்; சந்தேகமில்லை. சீதாவின் நெஞ்சு விம்மித் தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் வரும் போலிருந்தது. தலை சுழன்றது; சட்டென்று சமாளித்துக் கொண்டாள். சமாளித்துக் கொண்டு பார்த்தபோது அந்த யௌவன புருஷன் தன்னை நோக்குவதைக் கண்டாள். 'என்னைக் கல்யாணப் பெண் என்று நினைத்துக் கொள்ளப் போகிறாரே!' என்ற எண்ணம் உண்டானதும் வெட்கம் பிடுங்கித் தின்றது. இரண்டே பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, "அவர்கள் வந்தாச்சு!" என்றாள் சீதா. பிறகு லலிதாவின் அருகில் சென்று அவளைக் கட்டிக் கொண்டு காதோடு, "அடியே! உனக்கு வந்திருக்கும் அகமுடையானைப் பார்த்துவிட்டேன்; ரொம்ப அழகாயிருக்கிறார். மாமா சொன்னபடி மன்மதன்தான்!" என்றாள். "சீ!போடி!" என்றாள் லலிதா.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்

கண்கள் பேசின

வீட்டு ரேழியில் திடுதிடுவென்று மனிதர்கள் வரும் சத்தம் கேட்கவே பெண்கள் எல்லாரும் காமரா உள்ளுக்கும் சமையல் உள்ளுக்கும் விரைந்து போய் மறைந்து கொண்டார்கள். சற்றுப் பொறுத்துச் சரஸ்வதி அம்மாள் மட்டும் வெளியே வந்து, சம்பந்தி அம்மாளாகப் போகிற காமாட்சி அம்மாளை நெருங்கி, "வாருங்கள்!" என்று அழைத்தாள். தயாராகப் போட்டிருந்த நாற்காலிகளில் வந்து புருஷர்கள் எல்லாரும் உட்கார்ந்தார்கள். சற்று நேரம்வரை மௌனம் குடிகொண் டிருந்தது. "என்ன ஓய்! குழந்தையை வரச் சொல்லுகிறதுதானே!" என்றார் சீமாச்சுவய்யர். "நீர்தான் சொல்லுமே, ஓய்", என்றார் கிட்டாவய்யர். சீமாச்சுவய்யர் சடசடவென்று காமரா அறைப் பக்கம் சென்று, "குழந்தையை வரச்சொல்லுங்கள்! கையிலே வெற்றிலை பாக்குத் தட்டை எடுத்து வரச் சொல்லுங்கள்! ஐந்தரை மணி முதல் ஆறு மணி வரையில் நல்ல வேளை. மணி ஐந்தேமுக்கால் ஆகிவிட்டது சீக்கிரம் வரட்டும்!" என்று இரைந்தார். காமரா உள்ளில் ஏதோ வாதப் பிரதிவாதம் நடந்ததாகத் தோன்றியது. சீமாச்சுவய்யர் மறுபடியும், "அதனால் என்ன? சீதாவும் வரட்டுமே? நீங்களும் வாருங்களேன்! எல்லோரும் வரவேண்டியதுதான். மாப்பிள்ளையும் பெண்ணும் இன்றைக்கே இரகசியம் பேசப்போகிறார்களா? அதற்கெல்லாம் பிற்பாடு நாள் இருக்கிறது!" என்றார்.

இதன் பேரில் லலிதாவும் சீதாவும் அறையிலிருந்து வெளிப்பட்டார்கள். லலிதா கையில் வெற்றிலைத் தட்டுடன் குனிந்த தலை நிமிராமல் நடந்தாள். சீதா அவளுடைய ஒரு கையைத் தன்னுடைய கையில் கோத்துக்கொண்டு ஓரளவு அவளைத் தள்ளிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சீதா தலையைக் குனிந்து கொண்டு நடக்கவில்லை. வந்திருந்தவர் களைத் தைரியமாக ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். அந்தக் கண்ணோட்டத்தில் மாப்பிள்ளையின் முகத்தையும் பார்த்தாள். தான் எதிர்பார்த்ததுபோல் அவன் லலிதாவைப் பார்க்காமல் தன்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. கனவிலே நடப்பதுபோல் நடந்து வந்த லலிதா, வந்திருந்தவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை அடைந்ததும் அவர்கள் எதிரில் இருந்த முக்காலிப் பலகையில் வெற்றிலைத் தட்டை வைத்தாள், பிறகு நமஸ்காரம் செய்தாள். லலிதா நமஸ்கரித்தபோது மறுபடியும் மாப்பிள்ளை என்ன செய்கிறான் என்று சீதா பார்த்தாள். மாப்பிள்ளை லலிதாவைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தன்னைப் பார்ப்பதைக் கண்டாள். வெறுமனே பார்த்ததோடு இல்லை; புன்னகையும் புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகை ஜோதிமயமாக்கின! - சீதாவின் இதயமாகிய உலகத்தைத்தான்!

லலிதா நமஸ்கரித்துவிட்டு எழுந்த போது அவளுக்கும் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்ற அடங்காத ஆசை உண்டாயிற்று. மடங்கியிருந்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு பார்த்தாள். அவளுடைய பார்வையில் பத்மலோசன சாஸ்திரி தட்டுப்பட்டார். "ஐயோ! இவரா!" என்ற பீதி ஒரு கணம் உண்டாயிற்று. "சீ! இவராயிராது; இவர் மாப்பிள்ளையின் தகப்பனார் போலிருக்கிறது" எனத் தெளிந்து பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள். இந்தத் தடவை அவள் பார்த்தது சௌந்தரராகவனைத்தான். ஆனால் சௌந்தரராகவன் அச்சமயம் இதழ்களில் புன்னகையுடன் வேறு எங்கேயோ அவளுடைய தோளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். லலிதா மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து கொண்டாள். "எந்தக் குழந்தையை இப்போது பார்ப்பதற்காக வந்திருக்கிறோம்? தலையிலே சடைவில்லையும் திருகுப்பூவும் வைத்துப் பின்னிக் கொண்டிருக்கிறாளே, அந்தக் குழந்தைதானே?" என்று பத்மலோசன சாஸ்திரி தமது கம்மலான கன சரீரத்தில் கேட்டார். அது யமதர்ம ராஜனின் குரலைப்போல் லலிதாவின் காதில் விழுந்தது. அவள் பார்த்திருந்த சத்தியவான் - சாவித்திரி நாடகத்தில் யமதர்ம ராஜன் அத்தகைய குரலில்தான் பேசினான்!

சாஸ்திரியின் சம்சாரம் காமாட்சி அம்மாள், "அழகாய்த்தானிருக்கிறது உங்கள் கேள்வி! பார்த்தால் எந்தப் பெண் என்று தெரியவில்லையா? நமஸ்காரம் செய்ததிலிருந்துகூடத் தெரியாமலா போச்சு!" என்றாள். "இல்லேடி! தெரியத்தான் தெரிகிறது! இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமிருக்கக்கூடாதே என்று கேட்டேன். இருக்கட்டும் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ? எதுவரை படித்திருக்கிறாள்?" "நன்றாய்க் கேட்டேளே ஒரு கேள்வி? எழுதப் படிக்கத் தெரியுமாவா? அப்பாவின் பட்டாமணியம் வேலையில் பாதி அவள் தானே பார்க்கிறாள்? அவள் படிக்காத கதைப் புத்தகம், நாவல் பாக்கி இல்லை. இங்கிலீஷ் சக்கைப் போடாகப் பேசுவாள். நாளைக்கு மாப்பிள்ளை பேசிப் பார்த்தால் தெரிந்து போய் விடுகிறது!" என்றார் சீமாச்சுவய்யர். இதைக் கேட்ட சாக்ஷாத் மாப்பிள்ளை சௌந்தரராகவன், "நாளைக்கு என்று ஏன் ஒத்தி வைக்க வேண்டும்? இன்றைக்கே பேசிப் பார்த்துவிட்டால் போகிறது!" என்றான். "அப்படிப் போடுங்க ஒரு போடு, மாப்பிள்ளை! ஆனாலும் நாங்கள் எல்லாரும் பட்டிக்காட்டு மனுஷாள்தானே? அவ்வளவு நாகரிகம் இன்னும் இங்கேயெல்லாம் பரவவில்லை. கலியாணம் ஆகிப் பெண்ணை அழைத்துக்கொண்டு போனால் பத்து நாளில் எல்லா நாகரிகமும் பழகிக் கொள்கிறாள். என்ன ஓய்! கிட்டாவய்யரே! நான் சொல்றது என்ன?"

அப்போது சப் ஜட்ஜ் சாஸ்திரி "கிட்டாவய்யரைக் கேட்பானேன்? நானே சொல்கிறேன். எனக்கும் இந்தக் காலத்து நாகரிகம் அவ்வளவாகப் பிடிக்காது. என் சம்சாரம் என்னை விடக் கர்நாடகம், மாட்டுப்பெண் இங்கிலீஷ் படித்துப் பாஸ் பண்ணி உத்தியோகம் பார்க்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படவில்லை. இருந்தாலும் பிள்ளையாண்டான் இந்தக் காலத்துப் பையன் பாருங்கோ! படித்த பெண்ணாயிருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது இயல்புதானே! போகட்டும் குழந்தைக்குப் பாடத் தெரியுமா, சிட்சை கிட்சை உண்டா?" என்றார். "என்ன ஓய், கிட்டாவய்யரே! பதில் சொல்லுமே ஓய்! எல்லாவற்றுக்கும் நான்தானா பதில் சொல்ல வேண்டும்?" கிட்டாவய்யர் உடனே "குழந்தைக்குச் சங்கீத சிட்சையில்லை; கிராமாந்திரத்தில் அதற்கு வசதி கிடையாது. ஆனால் நன்றாகப் பாடுவாள். நானே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு!" என்றார். "ஓகோகோ! அப்படி வாருங்காணூம் வெளியிலே! நீரே பாட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கிறீரா? தீக்ஷிதர் கிருதி ஏதாவது தெரியுமா?" "பேஷாகத் தெரியும்!... லலிதா! 'மாமவ பட்டாபிராமா' பாடு" என்றார் கிட்டாவய்யர்.

இத்தனை நேரமும் லலிதா தலைகுனிந்தபடியே இருந்தாள், இப்போது அப்பாவின் குரல் வந்த திசையை நோக்கி இரக்கம் ததும்பிய முகத்துடன் பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டாள். "தீக்ஷிதர் கிருதி தெரியாவிட்டால் வேண்டாம். சியாமா சாஸ்திரி கிருதி தெரிந்தால் பாடட்டும்." "ஆகா! சியாமா சாஸ்திரிக் கிருதியும் குழந்தைக்குத் தெரியும், 'ஸரோஜ தளநேத்ரி' பாடு அம்மா!" லலிதா அதற்கும் மௌனமாகவே இருந்தாள். "இல்லை பட்டணம் சுப்பிரமணிய அய்யர் கீர்த்தனம், தியாகராஜ கீர்த்தனம் எது தெரிந்தாலும் பாடட்டும்." "அதுதான்னா சரி! தீக்ஷிதர் கிருதி என்றால் அது சேலம் ஜில்லா தாம்பக் கயிறு மாதிரி நீண்டு கொண்டே இருக்கும். உனக்குச் சங்கல்பமே டீதோ மனஸா' தெரியுமோ, அதைப் பாடு! இல்லாவிட்டால் 'மருகேலரா' கீர்த்தனம் பாடு!" என்றார் சீமாச்சுவய்யர். "இல்லாவிட்டால் தியாகராஜ கிருதியில் பல்லவியும் தீக்ஷிதர் கிருதியில் அநுபல்லவியும் சியாமா சாஸ்திரி கிருதியில் சரணமும் பாடட்டுமே!" என்றான் சௌந்தரராகவன். புருஷர்கள் கோஷ்டியில் சிறு சிரிப்பின் சத்தம் உண்டாயிற்று. ஸ்திரீகளிடையே கசமுச என்ற பேச்சின் ஓசை ஏற்பட்டது. சூரியாவின் கண்ணில் தீப்பொறி பறந்தது.

ஒன்றுக்கும் லலிதா மசிகிற வழியாக இல்லை. சீதா இரகசியம் பேசுகிற குரலில், "ஏண்டி இப்படிப் பேசாமல் இருக்கிறாய்! ஒரு பாட்டுப் பாடடி!" என்று தூண்டினாள். அப்படித் தூண்டியும் பயனில்லாமற் போகவே மாப்பிள்ளைப் பையனைப் பார்த்தாள். அவனும் அதே சமயத்தில் அவளைப் பார்த்தான். அவர்களுடைய மனத்தில் இருந்ததை பரஸ்பரம் அவர்களுடைய கண்களின் பேச்சினால் தெரிந்து கொண்டார்கள். "இந்தப் பட்டிக்காட்டுச் சங்கோசப் பிராணியைக் கலியாணம் செய்துகொண்டு நான் என்னத்தைச் செய்வது?" என்று சௌந்தரராகவனின் கண்கள் கூறின. பதிலுக்கு, "ஆமாம்! உங்களுடைய நிலைமை கஷ்டமானதுதான்! என்னுடைய மனப்பூர்வமான அநுதாபம்" என்று சீதாவின் கண்கள் தெரியப்படுத்தின. "சீதா! நீயும் லலிதாவோடு சேர்ந்து ஒரு பாட்டுப் பாடேன்! குழந்தை தனியாகப் பாடக் கூச்சப்படுகிறாள்!" என்றார் சுப்பய்யர். "ஆமாம்; சீதா! நீயும் சேர்ந்து பாடு!" என்று சரஸ்வதி அம்மாள் பக்கத்தில் வந்து நின்று கூறினாள். சீதா பளிச்சென்று, "எங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்த பாட்டு ஒன்றும் இல்லையே!" என்றாள்.

"அப்படியானால் நீயேதான் ஒன்று பாடேன். அவள் தைரியப்படுத்திக் கொண்டு அப்புறம் பாடட்டும்?" என்றார் பத்மலோசன சாஸ்திரிகள். "யோசித்துப் பார்க்கிறேன்- ஏன் லலிதா! 'நகுமோ கனலேனி' உனக்குத் தெரியுமல்லவா? இரண்டு பேரும் சேர்ந்து பாடுவோம்! என்ன! பேசாமலிருந்து விடாதே!" என்று சொல்லி விட்டுச் சீதா கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தாள். லலிதா பல்லவியில் பாதியில் சேர்ந்து கொண்டாள். ஆனால் அவளுடைய குரல் எடுபடவில்லை. சீதாவின் குரல்தான் மேலோங்கி நின்றது. சீதா அனுபல்லவியை எடுத்து மேலே ஜம்மென்று போனபோது லலிதாவும் கூடப் பாட முயன்றாள். ஆனால் குரல் 'கிறீச்' என்று அபஸ்வரமாகக் கேட்டது. சட்டென்று நிறுத்திவிட்டுச் சீதாவின் கையை உதறி விடுவித்துக் கொண்டு விடுவிடு என்று காமரா உள்ளே நோக்கிச் சென்றாள் லலிதா. எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. கிட்டாவய்யர் கோபக்குரலில், "இது என்ன லலிதா?" என்று அதட்டினார். சரஸ்வதி அம்மாள் லலிதாவின் கையைப் பிடித்து நிறுத்தி "அசட்டுப் பெண்ணே! தினம் கச்சேரி செய்வது போல் மூன்று மணி நேரம் பாடுவாயே? இன்றைக்கு என்ன வந்தது?" என்றாள். லலிதா தாயாரின் கைகளையும் உதறிவிட்டு உள்ளே சென்றாள். சீதா, பாவம், ஒரு நிமிஷம் இன்னது செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள். பிறகு மாப்பிள்ளைப் பையனை ஒரு தடவை கண்ணைச் சுழற்றிப் பார்த்துவிட்டுத் தானும் உள்ளே போய்விட்டாள்.

எழுந்திருந்த கிட்டாவய்யரைப் பத்மலோசன சாஸ்திரிகள் உட்காரச் செய்தார். "பரவாயில்லை; குழந்தையைத் தொந்தரவு படுத்த வேண்டாம். குரல் கேட்டு விட்டது, வெகு இனிமையாயிருக்கிறது, போதும். இன்னொரு நாள் சாவகாசமாகக் கேட்டுக் கொள்ளலாம்!" என்றார். "பெண் ஊமையில்லை என்று தெரிந்துவிட்டது அல்லவா? அதுவே போதுமானது!" என்று 'கிருதக்'காகச் சொன்னான் சௌந்தரராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதே, அப்பா" என்று காமாட்சி அம்மாள் கண்டித்துவிட்டு எழுந்து உள்ளே போனாள். பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் தனித்தனியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு சம்பந்திகள் தங்கள் ஜாகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஆறாம் அத்தியாயம்

மலர் பொழிந்தது!

அன்று இரவு மாப்பிள்ளை சம்பந்தி வகையறாவுக்காகச் சாப்பாடு கொண்டு வைத்து விட்டு வந்த பரிசாரகன் சங்கரனைப் பார்த்துச் சரஸ்வதி அம்மாள், "ஏண்டா, சங்கரா! அவர்கள் என்னடா பேசிக் கொண்டிருக்கிறார்கள்? ஏதாவது உன் செவிட்டுக் காதில் விழுந்ததா?" என்று கேட்டாள். "காதில் ஒன்றும் விழவில்லை அம்மா! விழுந்த வரையில் அவ்வளவு சுவாரஸ்யமாயில்லை என்றான்?" "என்னடா உளறுகிறாய்? காதில் ஒன்றும் விழவில்லை, அவ்வளவு சுவாரஸ்யமாயில்லை என்றால்?" "ஏதோ சில வார்த்தை அரைகுறையாகக் காதில் விழுந்தது. பணங்காசைப் பற்றித்தான் பேச்சு. பதினாயிரமாம்! பதினையாயிரமாம்! இவ்வளவு படித்தவர்கள் - பெரிய மனிதர்களே இப்படி இருந்தால்.... "அதனால் என்னடா மோசம்? பிள்ளையைப் பெற்றவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். நாளைக்கு நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கலியாணம் என்றால் நாம் மட்டும் பணங்காசு இல்லாமல் பண்ணிக் கொண்டு விடுவோமா?

அதிலேயும் அந்தப் பிராமணர் கொஞ்சம் கடிசல் என்று கேள்வி. அப்படியெல்லாம் வாய் கூசாமல் ரொம்பக் கேட்கக் கூடாது என்று பிள்ளைக்குத் தாயார் ஒருவேளை சொல்லிக் கொண்டிருப்பாள். என்னைக்கேட்டால் பேச வேண்டியதை யெல்லாம் இப்போதே பேசிக் கறார் செய்து கொண்டு விடுவதுதான் நல்லது என்பேன். அப்புறம் புகாருக்கு இடம் இருக்கக் கூடாது பார்!" இவ்விதம் சரஸ்வதி அம்மாள் வாய் ஓயாமல் பேசினாள். எனினும் அவளுடைய மனத்தில் இருந்த பரபரப்பு அடங்கவில்லை. சீதாவைக் கூப்பிட்டு, "குழந்தை! அவர்கள் இறங்கியிருக்கிற வீட்டுக்குப் போய் வேண்டியதெல்லாம் வந்து விட்டதா? இன்னும் ஏதாவது வேண்டுமா?' என்று சம்பந்தியம்மாளை விசாரித்து விட்டு வருகிறாயா? அதோடு சீமாச்சு மாமாவை இங்கே உடனே வரச் சொல்லு!" என்றாள். சீதா அவர்கள் இறங்கியிருந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற போது வழியில் சீமாச்சுவய்யர் வந்து கொண்டிருந்தார். ஆயினும் அவள் திரும்பாமல் மேலே சென்றாள். வீட்டின் முன்புறத்து ஹாலில் சௌந்தரராகவன் சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தான். சீதாவைப் பார்த்ததும் அவன் நிமிர்ந்து உட்கார்ந்து, "நீ மட்டும் வந்தாயா? உன் தோழியையும் அழைத்துக்கொண்டு வந்தாயா?" என்று கேட்டான்.

சீதா சிறிது தயங்கிவிட்டுப் பிறகு, "நான் மட்டுந்தான் வந்தேன்! நீங்கள்தான் லலிதாவைக் காபராப்படுத்தி விட்டீர்களே?" என்று சொன்னாள். "அவள் இன்னும் அழுதுகொண்டுதானிருக்கிறாளா" அல்லது அழுகையை நிறுத்தியாச்சா?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "அழவும் இல்லை ஒன்றும் இல்லை; எதற்காக அழ வேண்டும்!" "அவளைப் பாடச் சொன்னதற்குப் பாடத்தான் இல்லையே? ஒருவேளை அழ ஆரம்பித்து விட்டாளோ என்று பார்த்தேன். போகட்டும்; நீயாவது இந்த மட்டும் வாயைத் திறந்து பேசுகிறாயே? சந்தோஷம். அவளைப்போல் நீயும் பேசாமடந்தையாயிருந்தால் ஆபத்துதான்" என்றான். "என்னையும் யாராவது பெண் பார்ப்பதற்கென்று வந்திருந்திருந்தால் நானும் பேசாமடந்தையாகத்தான் இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு, இதற்குமேல் அங்கே நிற்கக் கூடாது என்று எண்ணிச் சீதா உள்ளே சென்றாள். அவளுடைய நெஞ்சு எக்காரணத்தினாலோ படபடவென்று அடித்துக் கொண்டது. காமாட்சி அம்மாளும் சாஸ்திரிகளும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், சீதாவைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார்கள். "குழந்தை! எங்கேயம்மா வந்தாய்?" என்று காமாட்சி கேட்டாள். "சாப்பாடு எல்லாம் சரியாய் வந்ததா என்று மாமி பார்த்து விட்டு வரச் சொன்னாள்!" என்றாள் சீதா. "எல்லாம் சரியாய் வந்து சேர்ந்தது என்று சொல்லு. அவ்வளவுதானே?"

"அவ்வளவுதான் மாமி! லலிதாவைப் பற்றி ஒரு வார்த்தை நானே சொல்ல வேண்டுமென்று வந்தேன். இன்றைக்கு ஏதோ அவள் பேசாமல் நின்றாளே என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். எங்க லலிதாவைப் போல் இந்தப் பூலோகத்திலேயே சமர்த்து கிடையாது. கலகலவென்று பேசிக் கொண்டிருப்பாள். பாட்டு என்னை விட எவ்வளவோ நன்றாய்ப் பாடுவாள். குரல், குயிலின் குரல்தான்! இன்றைக்கு என்னமோ கலியாணத்துக்குப் பார்ப்பதற்கு என்று புது மனுஷர்கள் வந்ததும் கொஞ்சம் பயந்து போய் விட்டாள். அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது!" "இந்தப் பெண் வெகு பொல்லாத பெண்ணாயிருக் கிறாளே?" என்றார் பத்மலோசன சாஸ்திரிகள். "அதனால்தான் உங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது போலிருக்கிறது;- இவள் தான் ஒருவேளை கலியாணப் பெண்ணோ என்று!" "அதனால்தான் என்ன; இவளுக்கும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே; ஏனம்மா, உன் தகப்பனாருக்குப் பம்பாயில் என்ன உத்தியோகம்?" என்று சாஸ்திரிகள் கேட்டார். "எங்க அப்பாவுக்கு ரயில்வேயில் உத்தியோகம், மாமா." "சம்பளம் என்னவோ?" "சம்பளம் மாதம் முன்னூறு ரூபாய். ஆனால் எவ்வளவு சம்பளமாயிருந்தால் என்ன? எல்லாம் செலவுக்குத்தான் சரியாயிருக்கிறது. என்னைப் பார்த்தாலே தெரிந்து விடுமே?"

"லலிதாவைப் போல் நகைநட்டுப் போட்டுக் கொள்ளவில்லை என்று அவ்விதம் சொல்கிறாயா? ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் அருள் இருந்தால் நீயும் ஒரு நாளைக்கு வேண்டிய நகை நட்டுக்கள் பூட்டிக் கொள்வாய்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இராமச்சந்திர மூர்த்தியின் அருள் கேவலம் நகை நட்டுக்குத்தானா வேண்டும்" என்றார் சாஸ்திரிகள். "நகை நட்டுக்குந்தான் வேண்டும்; மற்ற எல்லாவற்றுக்குந்தான் வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது! இருக்கட்டும், சீதா! உன் கலியாணத்தைப்பற்றி உன் அப்பா ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லையா? வரன், கிரன் பார்க்கவில்லையா?" "மாமி! எங்க அப்பா 'எர்லி மாரியேஜ்' கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவர், நானும் எங்க அப்பா கட்சிதான். ஆனால் அம்மா மட்டும் ஓயாமல் வரன் வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். உங்களிடத்தில் கூட நாளைக்கு ஏதாவது சொன்னாலும் சொல்லுவாள் நீங்கள் கவனிக்க வேண்டாம்!...." "ஏன், அம்மா அப்படிச் சொல்கிறாய்? காலா காலத்தில் உனக்கும் கலியாணம் நடக்க வேண்டியதுதானே?" என்றாள் காமாட்சி. "நடக்க வேண்டியதுதான். ஆனால் ஐயாயிரத்தைக் கொண்டு வா, பத்தாயிரத்தைக் கொண்டு வா என்று கேட்கிறார்களே, அதற்கு எங்க அப்பா எங்கே போவார்? அதனால்தான் நான் கலியாணமே பண்ணிக் கொள்வதில்லை என்று வைத்திருக்கிறேன்."

"பெண்ணாகட்டும்; பிள்ளையாகட்டும் இப்படியல்லவா பெற்றவர்கள் விஷயத்தில் பயபக்தியோடு இருக்க வேண்டும்?" என்றார் சாஸ்திரிகள். "லலிதா மட்டும் என்ன! அப்பா அம்மா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள், மாமா! நாளைக்கு உங்கள் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் உங்களிடத்திலும் அப்படியே நடந்து கொள்வாள். நீங்கள் புறப்பட்டு வந்த பிறகு நான் அவளிடம் என்ன சொன்னேன், தெரியுமா? 'லலிதா! கலியாணம் ஆன பிற்பாடு மாமனாரும் மாமியாரும்தான் அப்பா அம்மா என்று நினைத்துக்கொள். சொந்தத் தாய் தகப்பனார் கூட அப்புறந்தான்!' என்று சொன்னேன். லலிதாவும் 'அதற்கு என்னடி சந்தேகம்?' என்றாள். கேட்டீர்களா! மாமி! இந்தக் காலத்து மாட்டுப் பெண்களைப் போல் மட்டு மரியாதையில்லாமல், தாட்பூட் என்று லலிதா நடந்து கொள்ள மாட்டாள். நான் ஏதோ சிறு பெண் சொல்லுகிறேனே என்று வித்தியாசமாய் நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் லலிதாவைக் கல்யாணம் செய்து கொள்ள உங்கள் பிள்ளை கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ள லலிதாவும் கொடுத்து வைத்தவள்தான்! சந்தேகமில்லை." "இந்தப் பெண் அபார சமர்த்தாயிருக்கிறாளே!" என்றார் சாஸ்திரிகள். இதைக் கேட்டுச் சீதாவின் உள்ளம் குதூகலம் அடைந்தது.

அதற்குமேல் அங்கே பேசிக்கொண்டு நிற்பது நியாயமில்லை என்று உணர்ந்தாள். "மாமி! நான் போய் வருகிறேன். ஏதாவது தப்பாய்ச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். போகும்போது வழியில் முன் இருந்த இடத்திலேயே இருந்த ராகவன், "நீ அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் கேட்டேன். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வக்கீல் வைத்திருந்தால் கூட நீ உன் தோழியின் கட்சியைப் பேசியது போல் யாரும் பேசியிருக்க மாட்டார்கள். உன்னைச் சிநேகிதியாகப் பெறுவதற்கு உன் தோழியும் ரொம்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!" என்றான். "தாங்க்ஸ்" என்றாள் சீதா. "எனக்கு எதற்குத் தாங்க்ஸ்? நான் அல்லவா உனக்குத் தாங்க்ஸ் சொல்ல வேண்டும்?" "நீங்கள் இப்போது தாங்க்ஸ் கொடுத்தால் நான் பெற்றுக் கொள்ளமாட்டேன். நாளைக்குக் கலியாணம் நிச்சயம் செய்து விட்டுக் கிளம்பினால் அப்போது பெற்றுக் கொள்வேன்." "கலியாணம் நிச்சயம் செய்ய வேண்டியதுதான். ஆனால் அதற்கு இரண்டு கட்சியின் சம்மதம் அல்லவா வேண்டியதாயிருக்கிறது" என்று ராகவன் கூறிவிட்டுப் புன்னகை புரிந்தான். அதற்குப் பிரதியாகச் சீதாவும் புன்னகை செய்துவிட்டுப் புறப்பட்டாள். சௌந்தரராகவனுடைய வார்த்தைக்கும் புன்சிரிப்புக்கும் பொருள் என்ன என்பது அவள் மனத்திற்குத் தெளிவாகவில்லை. ஆனால் அவளுடைய அந்தராத்மாவுக்கு ஒரு வேளை அவற்றின் பொருள் தெரிந்திருக்கலாம்.

ஒரு விஷயம் நிச்சயம், கிட்டாவய்யரின் வீடு நோக்கிச் சீதா சென்று கொண்டிருந்தபோது வான வெளியில் தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் நின்று அவள் மீது மணம் மிகுந்த நறுமலர்களைத் தூவினார்கள். தேவலோகத்து இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு அமர கன்னியர் இன்ப கீதங்களைப் பாடினார்கள். அந்தக் கீதங்களுக்கும் இணங்க ஆனந்த நடனமாடிக்கொண்டே சீதா அவ்வீதியில் நடந்தாள், தனக்கு என்ன நேர்ந்துவிட்டது. ஏன் தன் உள்ளம் இவ்வளவு உற்சாகமடைந்திருக்கிறது. இது நாள் வரையில் அனுபவித்தறியாத இந்தப் பொங்கி வரும் மகிழ்ச்சியின் மூலாதாரம் எங்கே?- என்றெல்லாம் அவள் ஆராய்ந்து சிந்தனை செய்யவில்லை. உள்ளக் களிப்பும் உடம்பின் பூரிப்பும் ஒன்றாகி நினைவு அழிந்து மெய் மறந்த நிலையில் நடந்து சென்றாள். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் ஒருவாறு பிரமை நீங்கிற்று. சரஸ்வதி அம்மாளிடம் நேரே சென்று, "மாமி! நீங்கள் கவலைப்பட வேண்டாம். லலிதாவைப் பற்றி நான் புகழ்ந்த புகழ்ச்சியில் சம்பந்திகள் அப்படியே சொக்கிப் போய் விட்டார்கள். மாப்பிள்ளை கூடக் கேட்டுக் கொண்டுதானிருந்தார். நாளைக்கு அவசியம் கலியாணம் நிச்சயம் செய்து கொண்டுதான் போவார்கள்" என்றாள்.

சரஸ்வதி அம்மாள் உள்ளம் நிறைந்த நன்றி உணர்ச்சியோடு, "உன்னுடைய சமர்த்துக்கு மற்றவர்கள் திருடப் போக வேண்டியதுதான்! வயதானவர்களுக்கெல்லாம் உன்னுடைய சமர்த்தில் ஒரு பங்கு இருக்கக்கூடாதா? வந்த மனுஷர்களை யாராவது போய் எட்டிப் பார்க்கிறார்களா பார்! எல்லாரும் இந்த வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீமாச்சு மாமா என்ன சொன்னார் தெரியுமா? இந்த வரன் நிச்சயமாகும் என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! இவரை யார் கேட்டார்கள்? ஏதாவது, 'அபிஷ்டு' என்று சொல்லி வைப்பதே சிலருக்குத் தொழில்!" என்று கூறினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஏழாம் அத்தியாயம்

இடி விழுந்தது!

கிட்டாவய்யர் வீட்டு வாசலில் போட்டிருந்த கோடைப் பந்தலில் ராஜம்பேட்டைத் திண்ணை மகாசபை கூடியிருந்தது. சிலர் பந்தலின் கீழே பெஞ்சிகளிலும் சிலர் திண்ணை விளிம்பிலும் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளேயிருந்து வந்த கிட்டாவய்யரைப் பார்த்துப் பஞ்சு அய்யர், கேட்டீர்களா! ஐயர்வாள்! உங்களுடைய பையன் சூரியா ஒரே போடாய்ப் போடுகிறானே. நாலு நாள் கல்யாணம் நடத்துகிறதும் கல்யாணத்துக்காக ஏகப்பட்ட ரூபாய் செலவு பண்ணுகிறதும் ரொம்பப் பிசகாம். வரதட்சணை கேட்கிறது, வாங்குகிறது எல்லாம் வெறும் மூடத்தனமாம்!" என்றார். "அவன் சொல்வதில் என்ன அதிசயம்? இந்தக் காலத்திலே எல்லாருந்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஏழைகள் கஷ்டப்படுகிறபோது வீண் ஆடம்பரத்திலே பணம் செலவழிக்கிறது நியாயமல்லவென்று பேசுகிறார்கள்!" என்று கிட்டாவய்யர் தம்முடைய குமாரனைத் தாங்கிப் பேசினார். "அதோடு நிறுத்தினால் பரவாயில்லையே? பணத்தை வீணாகச் செலவழிக்கக் கூடாது, செட்டாயிருக்க வேண்டும் என்று சொன்னால் சொல்லட்டும்! அப்பாபாடு பிள்ளைபாடு என்று விட்டு விடலாம். சூரியா பெரிய சோஷலிஸ்ட் மாதிரின்னா பேசறான்? குடியானவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறார்களாம். அவர்கள் உழைப்பினால் வருகிற பணத்தை நாம் ஆடம்பரத்திலே செலவழிக்கிறோமாம். 'இதெல்லாம் ரொம்ப நாள் நடக்காது!' என்று எச்சரிக்கை வேறே பண்ணுகிறான்!"

"பின்னே என்னங்காணும்! இப்படியே சதகோடி வருஷம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீரா? உலகம் போகிற போக்கு உமக்குத் தெரியவில்லை. 'உழுகிறவனுக்குத்தான் நிலம்' என்ற பிரசாரம் நடந்து வருகிறது. நீங்கள் கிணற்றுத் தவளைகளாய் இருக்கிறீர்கள்!" என்றார் சீமாச்சுவய்யர். "அப்பா! சீமாச்சு! நீயும் அவன் கட்சியில் சேர்ந்து விட்டாயா? இன்றைக்கு, 'உழுகிறவனுக்கு நிலம்' என்பார்கள். நாளைக்கு 'அறுக்கிறவனுக்கு நெல்லு!' என்பார்கள். அப்புறம் 'கொத்தனுக்கு வீடு!' 'வண்ணானுக்கு வேஷ்டி' 'டிரைவருக்கு மோட்டார்' 'டாக்டருக்கு மருந்து' 'போர்ட்டருக்கு ரயில் வண்டி' என்றெல்லாம் ஏற்படும். 'சமைக்கிறவனுக்கு சாதம்' என்று சொன்னாலும் சொல்வார்கள். விநாசகாலே விபரீத புத்தி!" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "பட்டாமணியத்துக்கு வரிப்பணம் என்றும் ஏற்பட்டு விட்டால் எனக்கு ரொம்ப சௌகரியமாயிருக்கும், சாஸ்திரிகளே! இதிலேயெல்லாம் ஆத்திரப்பட்டு என்ன பிரயோசனம்? எது எது எப்போது நடக்க வேண்டுமோ அது அது நடந்துதானே தீரும்? காலத்திற்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கொள்ள வேண்டியதுதானே!" என்றார் கிட்டாவய்யர். "மாறிக்கொள்கிறோம், ஐயர்வாள்! மாறிக் கொள்கிறோம்! சரியான காரியமாயிருந்தால் காலத்தை யொட்டி மாற வேண்டியதுதான். முன்னேயெல்லாம் சிரார்த்தம் என்றால் மத்தியானம் மணி மூன்று ஆகும். இப்போது மணி பத்துக்கெல்லாம் பிராமணாளுக்கு இலை போடவேணும் என்கிறார்கள், அதை ஆட்சேபிக்கிறோமோ? காப்பி சாப்பிட்டு விட்டுத்தான் சிரார்த்தம் பண்ணுவேன் என்கிறான் கிரகஸ்தன். காலத்திற்கேற்ப இந்த மாறுதலையெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் ஆனால் 'உழுகிறவனுக்குத்தான் நிலம்' என்கிற கொள்கை உமக்கு ஏற்கச் சரியாயிருக்கிறதா என்று கேட்கிறேன்" என்றார் சாஸ்திரிகள்.

"சரியோ இல்லையோ, உலகம் ஒப்புக்கொண்டால் நாம் மட்டும் தடைசெய்து என்ன பிரயோஜனம்!" என்றார் கிட்டாவய்யர். "உலகந்தான் ஒப்புக் கொள்ளட்டும்; பிரம்மதேவனே ஒப்புக்கொள்ளட்டும். சரியில்லாததை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? காந்திமகாத்மா இதைத்தானே படித்துப் படித்துச் சொல்கிறார்? 'நீ ஒருத்தனாயிருந்தாலும் உனக்குச் சரியென்று தோன்றுகிறதைச் செய்!' என்கிறார். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சுயபுத்தியை உபயோகிக்க வேண்டாம். யாரோ எவனோ சொல்கிறதை அப்படியே ஒப்புக்கொள்ளு என்கிறீர்கள்." "உங்களை யார் ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள்?" "யார் சொல்கிறார்கள்? இப்போது சூரியாதான் சொன்னான், நமக்குத்தானே அவன் பிரசங்கம் செய்தான்?" "எல்லாம் இப்போது அப்படித்தான் சொல்லுவான் காணும்! கிட்டி முட்டி வரும்போது வேறு விதமாய்ச் சொல்வான். எங்கே? கிட்டாவய்யர் நிலத்தில் சூரியாவுக்கு உள்ள பங்கை உழுகிறவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுவானா, கேளுங்கள்!" என்றார் சீமாச்சுவய்யர். "சீமாச்சு மாமா! எழுதிக் கொடுத்தாலும் கொடுப்பேன். அல்லது நானே வயலில் இறங்கி உழுவேன். அப்போது நிலம் என்னுடையதாயிருக்கும்" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லுடா தும்மட்டிக்கா பட்டா என்றானாம். நீ மட்டுந்தான் உழுவாய் என்று நினைத்தாயோ? அத்தகைய காலம் வந்தால் நாங்கள் எல்லோரும் இடுப்பிலே துணியை வரிந்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி விட மாட்டோ மா?" என்றார் பஞ்சுவய்யர்.

"அது வரையில் காத்திருப்பானேன், இப்போதிருந்தே நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ளலாமே என்று சொன்னேன். நாமே உழுது பயிரிடுவது என்று ஏற்பட்டால் இப்படியெல்லாம் நாலு நாள் கல்யாணத்துக்கு ஆடம்பரச் செலவு செய்ய முடியுமா?" என்றான் சூரியா. "ஆகக்கூடி, சூரியாவின் பாயிண்ட் என்னவென்று இப்போது தெரிகிறது. லலிதாவின் கலியாணத்துக்கு அதிகமாகச் செலவு செய்துவிடக்கூடாது என்று அப்பாவுக்குப் புத்திமதி சொல்கிறான் அவ்வளவுதானே, சூரியா" என்றார் சீமாச்சுவய்யர். "இல்லவே இல்லை, அப்பாவிடத்தில் அப்படியெல்லாம் தான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேச மாட்டேன்!" என்றான் சூரியா. "அப்படியே சூரியா சொன்னாலும் நான் அதைக் கேட்க மாட்டேன். குடும்பத்தின் சொத்தில் புருஷர் குழந்தைகளைப் போல் பெண் குழந்தைகளுக்கும் சமபாகம் கொடுக்க வேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் பேசுகிறார்களே! லலிதாவுக்குச் சொத்தில் என்ன பாகம் உண்டோ , அதைத்தான் கலியாணத்துக்குச் செலவழிக்கப் போகிறேன்" என்றார் கிட்டாவய்யர். "ஒரு விஷயம், அப்பா! லலிதாவுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்; என்னுடைய கட்சியும் அதுதான். ஆனால் லலிதா சொத்தின் பாகத்தை நம் இஷ்டப்படி செலவழிக்க நமக்கு என்ன பாத்தியதை இருக்கிறது? அதை அவளுக்கே எழுதி வைத்து விடுவதாயிருந்தால் எனக்குப் பூரண சம்மதம். வீண் ஆடம்பரக் கலியாணச் செலவுகளிலும் வரதட்சணையிலும் செலவு செய்வதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்?" என்றான் சூரியா.

"நீ ஆட்சேபித்தால் ஆட்சேபிக்க வேண்டியதுதான். ஊருக்கெல்லாம் ஒரு வழி, நமக்கு ஒரு வழி என்றால் நடக்கிற காரியமா?" "அது இருக்கட்டும், ஐயர்வாள்! எனக்கு ஒரு சந்தேகம். அதை ஒருவரும் தீர்த்து வைக்கிற வழியாக இல்லை. 'உழுகிறவனுக்கு நிலம்' என்று சொல்கிறார்களே? உண்மையிலேயே உழுகிறது யார்? மாடு அல்லவா கலப்பையை இழுத்துப் போய் உழுகிறது? அப்படியானால் உழுகிற மாட்டுக்குத்தான் நிலம் சொந்தம் என்றல்லவா ஏற்படுகிறது?" என்றார் பக்கத்து வேளாளர் தெருவிலிருந்து வந்திருந்த கர்ணம் வேலாயுத முதலியார். "கணக்குப்பிள்ளை! நல்ல போடு போட்டீர்! ஏண்டா சூரியா, இதற்கு என்னடா பதில் சொல்கிறாய்?" என்றார் சீமாச்சுவய்யர். சூரியா சிறிது திகைத்துத்தான் போனான் பிறகு "இது விளையாட்டுக் கேள்வி, நிலம் மாட்டுக்குச் சொந்தமாயிருக்க முடியாது. மாட்டை ஓட்டுகிற உழவனுக்குத்தான் சொந்தமாயிருக்க முடியும்" என்றான். "நீ சொல்கிறதற்குச் சரி என்றே வைத்துக்கொள்வோம். சீமையிலேயெல்லாம் உழுகிறதற்கு டிராக்டர் என்று ஒரு மெஷின் வந்திருக்கிறதாம். 'ஒரு டிராக்டரைக் கொண்டு ஐந்நூறு ஏக்கரா நிலம் உழலாமாம். அவ்விதம் டிராக்டரைக் கொண்டு ஐந்நூறு ஏக்கரா உழுகிறானே, அவனுக்கு அந்த ஐந்நூறு ஏக்கராவும் சொந்தம் என்று ஏற்படுமா? அப்படியானால் சொல்லு! நான் எப்படியாவது ஒரு டிராக்டர் வாங்கி விடுகிறேன். அதை ஓட்டவும் கற்றுக்கொண்டு விடுகிறேன்!" என்றார் வேலாயுத முதலியார்.

சூரியா சிறிது நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்:"நான் கூறியது ஒரு விதத்தில் தப்புத்தான். 'உழுகிறவனுக்கு நிலம்' என்று சொல்வது அவ்வளவு சரியல்ல. நிலம் உண்மையில் சர்க்காருடையது." "நல்ல காரியம்! நிலமெல்லாம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தம் என்கிறாயா? ஏற்கெனவே அவன் வசூலிக்கும் வரிப்பளு தாங்க முடியவில்லை!" "இப்போது வெள்ளைக்கார சர்க்காராயிருக் கிறபடியால் இப்படிச் சொல்கிறீர்கள். இந்தியாவில் கூடிய சீக்கிரம் சுயராஜ்ய சர்க்கார் ஏற்பட்டே தீரும். அப்போது நிலமெல்லாம் சர்க்காருக்குப் பொதுவாயிருந்தால் தேச மக்களின் பொதுச் சொத்து என்று ஏற்படும். ஆபீஸ் குமாஸ்தாவும் பள்ளிக்கூட உபாத்தியாயரும் சர்க்கார் சம்பளம் பெறுவதுபோல் உழவர்களும் சம்பளம் பெறுவார்கள். கலப்பையில் மாட்டைக் கட்டி உழுதாலும் சரிதான்; டிராக்டரை ஓட்டி உழுதாலும் சரிதான்." "அப்பொழுது நம்மைப் போன்ற மிராசுதாரர்கள் எல்லாம் என்ன செய்வதாம்? வாயிலே விரலை வைத்துக் கொண்டு நிற்பதோ?" என்று பஞ்சுவய்யர் கொஞ்சம் ஆத்திரமாய்க் கேட்டார். "உங்களுக்கு - பிராமணாளுக்கு,- பரவாயில்லை. ஐயர்வாள்! எங்கேயாவது போய் எந்த உத்தியோகமாவது பண்ணிப் பிழைத்துக் கொள்வீர்கள்! ஒன்றுமில்லாவிட்டால் ஹோட்டலாவது வைத்து விடுவீர்கள்! எங்கள் பாடுதான் ஆபத்தாய்ப் போய்விடும்! என்றார் வேலாயுத முதலியார்.

மேற்கண்டவாறு திண்ணைப் பார்லிமெண்ட் சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சீமாச்சுவய்யரின் தர்மபத்தினி அன்னம்மாள் விடுவிடுவென்று நடந்து வந்து கிட்டாவய்யரின் வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் நுழைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளே ஒரு பயங்கர பூகம்பம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஆத்திரம் நிறைந்த குரல்களில் ஒரே கூச்சல். யாரோ விம்மி விம்மி அழுகிற குரலும் கேட்டது. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் சரஸ்வதியின் தாயார், "இந்தக் குடி கேடிகளை வரச் சொல்ல வேண்டாமென்று சொன்னேனே, கேட்டாயா? பெண் பார்க்க வருகிறதற்கு முன்னாலே மெனக்கெட்டு உன்னைத் தனியாக அழைத்துப் போய்ச் சொன்னேனே அதையாவது கேட்டாயா? 'கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய் விடாது' என்று சொன்னாயே! இப்போது கொண்டு போய் விட்டதேடீ? என்ன செய்யப் போகிறாய்? எல்லாரும் என்னை அசடு, பைத்தியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! நான் அசடுமில்லை பைத்தியமும் இல்லை. நீதான் சுத்த நிர்மூடம்! இல்லாவிட்டால் பூனைக்குட்டியை மடியிலேயே கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பாயா?" என்று பிரசங்கமாரி பொழிந்த சத்தம் கேட்டது. அதற்குச் சரஸ்வதி அம்மாள், 'இந்த மாதிரி அநியாயம் நடக்கும் என்று யார் அம்மா கண்டது?.... அடே சுண்டு! உங்க அப்பாவைக் கூப்பிடு. இங்கே வீடு பற்றி எரிகிறது, அங்கே என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? கூப்பிடடா உடனே" என்றாள். இதுவும் அங்கிருந்த எல்லாருடைய காதிலும் விழுந்தது. கிட்டாவய்யர் அவசரமாகவும் கோபமாகவும் எழுந்து வீட்டுக்குள்ளே போனார்.

"என்னடி இங்கே ரகளை? இடி யார் தலையிலே விழுந்து விட்டது?" என்று கேட்டார். "ஆமாம்; இடிதான் விழுந்து விட்டது?" என் தலையிலே, உங்கள் தலையிலே, குழந்தை லலிதாவின் தலையிலே, எல்லாருடைய தலையிலும் விழுந்து விட்டது. சீமாச்சு மாமாவாத்து மாமி என்ன சொல்லுகிறாள் என்று கேளுங்கள்! அழகான மனுஷாளைச் சென்னைப் பட்டினத்திலிருந்து வரவழைத்தேளே, அவர்களுடைய காரியத்தைக் கேளுங்கள். பம்பாயிலிருந்து அருமைத் தமக்கையைச் சீராட்டக் கூப்பிட்டுக் கொண்டு வந்தீர்களே! அதன் பலன் என்ன ஆயிற்று என்று கேளுங்கள்!"- இவ்விதம் சரஸ்வதி அம்மாள் கூச்சல் போட்டாள். "ஆகட்டும் எல்லாம் கேட்கிறேன். நீ மட்டும் கொஞ்சம் மெதுவாய்ப் பேசு! யாருக்கோ பிராணன் போய்விட்ட மாதிரி சத்தம் போடாதே!" என்றார் கிட்டாவய்யர்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து எட்டாம் அத்தியாயம்

நிச்சயதார்த்தம்

கிட்டாவய்யரின் அதட்டலுக்குச் சிறிது பயன் ஏற்பட்டது. வீட்டுக்குள்ளே கூச்சல் கொஞ்சம் அடங்கியது. பிறகு விஷயம் இன்னது என்பதும் வெளியாயிற்று. சீமாச்சுவய்யரின் மனைவி அன்னம்மாளின் காதில் மதராஸிலிருந்து வந்திருந்தவர் பேசிக்கொண்டிருந்து அரை குறையாக விழுந்தது. அதிலிருந்து மாப்பிள்ளைப் பையன் லலிதாவைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படவில்லையென்றும், சீதாவைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்றும் தெரிந்தன. பையனுடைய தாயாரும் தகப்பனாரும் முதலில் அவனுடைய மனத்தை மாற்றப் பார்த்தார்கள். பையன் பிடிவாதமாயிருந்தபடியால் கடைசியில் அவர்களும் சரியென்று சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தைக் கிட்டாவய்யரிடம் எப்படிப் பிரஸ்தாபம் செய்வது என்று அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். இன்ஷுரன்ஸ் சுப்பய்யரிடம் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். இப்போதே விஷயத்தைச் சொல்லி 'உண்டு இல்லை' என்று நிச்சயப்படுத்திக் கொண்டு போகிறதா அல்லது ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறோம் என்று சொல்லிவிட்டுப் போய் விவரமாகக் கடிதத்தில் எழுதுவதா என்பதைப் பற்றி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் கேட்டவுடன் சாதுவான கிட்டாவய்யருக்குக் கூட ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆனால் ஆத்திரத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் சீமாச்சுவய்யரைப் பார்த்து, "என்ன ஓய்! நான் அப்போதே சொன்னேனே, பார்த்தீரா! மதராஸ்காரன்களுடைய யோக்கியதை தெரிந்ததா?" என்றார்."தெரியாமல் என்ன ஓய்? நானுந்தான் அப்போதே சொன்னேனே? ஆனாலும் இந்தப் பிரம்மஹத்தி சொல்கிறதை வைத்துக்கொண்டு ஒன்றும் நாம் தீர்மானித்து விடக்கூடாது. இந்தச் சோழன் பிரம்மஹத்திக்கு ஏதாவது கலகம் பண்ணி வைப்பதே தொழில். அவர்கள் வேறு சொல்லியிருப் பார்கள்! இவளுடைய செவிட்டுக் காதில் வேறு ஒன்று விழுந்திருக்கும்; எல்லாவற்றுக்கும் நான் போய் விஷயம் இன்னதென்று ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். ஏ சோழன் பிரம்மஹத்தி! இப்படி வந்து தொலை! இருக்கிற பிராப்தங்கள் போதாது என்று நீ ஒருத்தி வந்து சேர்ந்தாயே? ஏ எழரை நாட்டுச் சனியனே! வருகிறாயா? இல்லையா?" என்று இம்மாதிரி சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை அருமையாக அழைக்க, அம்மாளும்,

"என்னை எதற்காக இப்படிப் பிடுங்கி எடுக்கிறீர்கள்?" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டாள். இருவரும் வீதியில் போகும் போதுகூட, சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை வாழ்த்திய குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சீமாச்சு அய்யர் மேற்கண்டவாறு தமது மனைவியைத் திட்டியதானது அங்கேயிருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் ஓரளவு மனத் தெளிவை உண்டாக்கியது. "இந்தப் பிராமணர் எதற்காக அன்னம்மாளை இப்படி வைகிறார்? அவள் என்ன செய்வாள்?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "பின்னே, யார்தான் என்ன செய்வார்கள்? எந்தக் காரியமும் பிராப்தம் போலத் தானே நடக்கும்?" என்றார் கிட்டாவய்யர். "இவர்கள் வேண்டாம் என்றால் லலிதாவுக்குக் கல்யாணம் ஆகாமல் போய் விடுமோ? எனக்கு மட்டும் உத்தரவு கொடுங்கள், நாளைக்கே ஆயிரம் வரன் கொண்டு வருகிறேன்!" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "போதும்; போதும்! இனிமேல் இந்த வருஷம் என் பெண்ணுக்குக் கலியாணம் என்கிற பேச்சே வேண்டாம். முதலிலே, வந்தவர்கள் எல்லோரும் ஊருக்குப் போகட்டும்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். இந்தச் சமயத்தில் ராஜம்மாள், "அண்ணா! குற்றம் என் பேரில். நான் துரதிர்ஷ்டக்காரி, எங்கே போனாலும் என்னுடைய துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வருகிறது!" என்றாள். "ஏதாவது உளறாதே! உன்னை யார் இப்போது என்ன சொன்னார்கள்?" என்றார் கிட்டாவய்யர்.

"அந்தப் பெண் உள்ளே விசித்து விசித்து அழுது கொண்டிருக்கிறது! சீதா என்ன செய்வாள்? வந்திருந்தவர்களின் முன்னால் வரமாட்டேன் என்றுதான் அவள் சொன்னாள். லலிதாதான் 'நீ வராவிட்டால் நானும் போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள். மன்னியாவது தடுத்தாளா? அதுவும் இல்லை!" என்றாள் பெரியம்மாள் அபயாம்பாள். "நான் ஒரு அசடு, என் பெண் பெரிய அசடு - என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே! நீங்கள் எல்லாம் தெரிந்த பெரியவர்கள் இருந்தீர்களே? சொல்கிறதுதானே?" என்று சரஸ்வதி அம்மாள் சீறினாள். "போதும் வாக்கு வாதம்! நிறுத்துங்கள்! அழுகிற குழந்தையைப் போய் யாராவது சமாதானம் செய்யுங்கள்!" என்றார் கிட்டாவய்யர். "அழுகை என்ன அழுகை! எதற்காக அழ வேண்டும்? செய்கிறதையும் செய்துவிட்டு ஜாலம்வேற!" என்றாள் சரஸ்வதி அம்மாள். உள்ளே, சீதாவைச் சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்த லலிதாவின் காதில் இதெல்லாம் விழுந்தது. அம்மா சொன்ன கடைசி வார்த்தையைக் கேட்டதும் லலிதா ஆங்காரத்துடன் வெளியில் வந்தாள். "அப்பா! நான் சொல்கிறதைத் தயவு செய்து கேளுங்கள். இன்றைக்கு வந்த பிள்ளையை நான் ஒருநாளும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். என்னை வெட்டிப் போட்டாலும் மாட்டேன்.

முன்னாலிருந்தே எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் நீங்கள் ஒருவரும் கேட்கவில்லை. அம்மா அனாவசியாமாகச் சீதாவைக் கோபித்துக் கொள்கிறாள். இது தெய்வத்துக்கே பொறுக்காது. சீதா முகத்தை அலம்பிக் கொள்ளக் கூட மாட்டேன் என்றாள்; என்னுடன் வருவதற்கும் அவள் இஷ்டப்படவில்லை. நான்தான் வலுக்கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்தேன். அப்படியிருக்க அவளைக் கோபித்துக்கொண்டு என்ன பயன்? இப்படி யெல்லாம் நீங்கள் அநியாயமாய்ச் சீதாவின் பேரில் பழி சொல்லுவதாயிருந்தால் நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்; இல்லாவிட்டால் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன்!" என்று லலிதா ஆத்திரமும் அழுகையுமாய்ப் பேசினாள். இவ்விதம் லலிதா தன் தோழிக்காகப் பரிந்து பேசியது எல்லாருடைய மனத்தையும் இளகச் செய்தது. ஆனால் சரஸ்வதியின் கோபத்தை மட்டும் அதிகப்படுத்தியது. "போ, இப்போதே போய்க் கிணற்றில் விழு! எனக்குப் பெண்ணே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்!" என்று சொன்னாள். "அடாடாடா! இதெல்லாம் என்ன பேச்சு? இப்போது ஒன்றும் தீர்மானமாகி விடவில்லையே? சீமாச்சுதான் போயிருக்கிறானே? விஷயத்தைக் தெரிந்து கொண்டு அவன் வரட்டுமே?" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள்.

"சீமா மாமா என்னத்தை வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வரட்டும்! அந்தப் பிள்ளை என்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும் நான் பண்ணிக் கொள்ளப் போவதில்லை. சத்தியமாய்ப் பண்ணிக் கொள்ளப் போவதில்லை!" என்று லலிதா சபதம் செய்தாள். "லலிதா! இதென்ன நீ கூட இப்படி எல்லாம் பேசுகிறாயே?" என்றார் கிட்டாவய்யர். "அவள் சுயமாகவா பேசுகிறாள்? சொல்லிக் கொடுத்தல்லவா பேசுகிறாள்?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மன்னி! என்னைப்பற்றிச் சொல்கிறாயா? நான் ஒரு பாவமும் அறியேனே! லலிதாவுடன் நான் அரை நிமிஷம் பேசக் கூட இல்லையே!" என்றாள் ராஜம்மாள். "நான் உங்களையொன்றும் சொல்லவில்லை. என் பிள்ளையைத்தான் சொல்கிறேன். சூரியாவின் துர்போதனை தான் இப்படி லலிதாவைப் பைத்தியமாக அடித்துவிட்டது. அவனுடைய புத்தியையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள்....!" இத்தனை நேரம் சும்மா கேட்டுக் கொண்டு நின்ற சூரியா இப்போது சம்பாஷணையில் தலையிட்டான். "என்னுடைய புத்தி சரியாகத்தான் இருக்கிறது. இந்த முட்டாள்தனமெல்லாம் வேண்டாம் என்று நான் அப்போதே சொன்னேன்; யாரும் கேட்கவில்லை. அம்மா! உங்கள் காலத்தில் நீங்கள் எல்லாரும் கலியாணம் பண்ணிக்கொண்டு திண்டாடுகிறது போதும்.

எங்களை எங்கள் இஷ்டப்படி விட்டு விடுங்கள். லலிதாவுக்குப் பிடித்திருந்தால் கலியாணம் பண்ணிக் கொள்வாள். இல்லாவிட்டால் பிரம்மதேவன் வந்து சொன்னாலும் பண்ணிக்கொள்ள மாட்டாள். லலிதாவுக்குச் சொன்னது தான் சீதாவுக்கும்! மதராஸிலிருந்து வந்திருக்கும் மகா பிரகஸ்பதியைச் சீதாவுக்கும் பிடிக்காவிட்டால், பிடிக்கவில்லை என்று தைரியமாய்ச் சொல்லி விடட்டும். இதற்காக அவள் விம்மி அழ வேண்டிய அவசியம் எதுவும் இல்லை" என்று சொன்னான் சூரியா. சூரியாவின் உள்ளம் அப்போது உண்மையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மதராஸிலிருந்து பெண் பார்க்க வந்த மகா பிரகஸ்பதியை அவனுக்கு ஏற்கெனவே பிடிக்கவில்லை. அந்தப் பிரகஸ்பதி லலிதாவுக்குப் பதிலாகச் சீதாவை மணந்து கொள்ள விரும்புகிறான் என்ற செய்தி கேட்டதும் அந்தக் கொந்தளிப்பு தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஜுவாலை விட்டுப் பொங்கியது. காமரா உள்ளின் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சீதா இன்னமும் விம்மிக் கொண்டிருந்தாள். லலிதா அவளுக்கு ஆறுதல் கூறிச் சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் கபடமற்ற லலிதாவிற்குச் சீதாவின் மனோநிலை என்ன தெரியும்? உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தை மறைத்துக் கொள்வதற்காகவே சீதா விம்மினாள். அவளுடைய மனக் கண் முன்னால் உலகமே ஒரு ஆனந்த நந்தவனமாகத் தோன்றியது.

அந்த நந்தவனத்திலிருந்த மரங்களும் செடிகளும் பல வர்ணப் புஷ்பங்களுடன் குலுங்கின. அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடின; மயில்கள் ஆடின; மான்கள் துள்ளி ஓடின; கிளிகள் மழலை பேசின; புறாக்கள் கொஞ்சி முத்தமிட்டன; சந்தன மரங்களின் சுகந்தத்துடன் மந்தமாருதம் வீசியது. இத்தகைய ஆனந்த நந்தவனத்தில் சீதாவின் உள்ளம் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் எங்கேயோ கடல் பொங்கி மலைபோல் அலைகள் கிளம்பி மோதி விழும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் சீமாச்சுவய்யர் கிட்டாவய்யருக்கு ஆள் விட்டு அனுப்பினார்; கிட்டாவய்யர் போனார். அவரிடம் சப் ஜட்ஜ் சாஸ்திரியாரும் அவருடைய சக தர்மினியும் விஷயத்தைத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். "உங்கள் குமாரிக்கு ஒரு குறையும் இல்லை கிளி மாதிரிதான் இருக்கிறாள். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களின் போக்கே தனியாயிருக்கிறது. 'முதலிலே சீதாவைப் பார்த்தேன்; பார்த்தவுடனே அவளைப் பிடித்துவிட்டது. கலியாணம் பண்ணிக்கொண்டால் அவளைத்தான் பண்ணிக் கொள்வேன்' என்று பிள்ளையாண்டான் சொல்லுகிறான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்; கேட்கவில்லை. உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் நாளைக்கே நிச்சயதார்த்தம் செய்து விடலாம்.

பெண்ணுக்காவது பெண்ணின் தாயாருக்காவது பிடிக்காவிட்டால் அதையும் சொல்லி விடுங்கள்; இதில் வலுக்கட்டாயம் ஒன்றுமில்லை" என்றார்கள். கிட்டாவய்யர் திகைத்துப் போனார். ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. "அதற்கென்ன? பெண்ணின் தாயாரைக் கேட்டுவிட்டுச் சொல்லுகிறேன்" என்று புறப்பட்டார். புறப்பட்டவர் நேரே வீட்டுக்கு வரவில்லை. சீமாச்சுவய்யரையும் சுப்பய்யரையும் குளத்தங்கரைப் பங்களாவுக்கு அழைத்துப் போய் யோசனை செய்தார். அவர்கள் இருவரும், "பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று! உங்கள் பெண்ணுக்கு என்ன? நூறு வரன் பார்த்துச் சொல்கிறோம். அந்த பம்பாய் பெண்ணுக்கு வரன் கிடைப்பதுதான் கஷ்டம். பணம் காசு இல்லாமல் பண்ணிக் கொள்கிறேன் என்கிறார்கள். வேண்டாம் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? அதனால் யாருக்கு என்ன லாபம்? நாளைக்கே 'பாக்கு வெற்றிலையைப் பிடி!' என்று நிச்சயதார்த்தம் செய்து விடுவதுதான் சரி!" என்றார்கள். ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த ஆத்திரம் தணிந்து விட்டபடியால் கிட்டாவய்யருக்கு அதுதான் நியாயம் என்று தோன்றியது. ஆனால் இதைத் தம்முடைய பாரியாளிடம் எப்படி சொல்லிச் சரிக்கட்டுவது என்று யோசித்துக்கொண்டு இரவு ஒரு மணிக்கு வீடு திரும்பினார். அதற்கு வழி அவருடைய புதல்வன் சூரியா சொல்லிக் கொடுத்தான்.

தூக்கம் பிடியாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவுக்கு அதற்குள் மனம் தெளிவடைந்திருந்தது. யார் கண்டது? ஒருவேளை கடவுளுடைய விருப்பம் இவ்விதமிருக்கலாம். டில்லியில் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் பார்க்கும் சௌந்திரராகவன் தன்னைக் காட்டிலும் சீதாவுக்கு தக்க வரன் என்பதில் சந்தேகம் என்ன? அத்தங்காளின் அதிர்ஷ்டம் இந்த விதமாக அவனைக் கொண்டு விட்டிருக்கிறதோ என்னமோ? சீதாவின் வாழ்க்கை இன்பத்திற்குக் குறுக்கே நிற்கத் தனக்கு என்ன உரிமை? அன்றிரவு தாமோதரம் பிள்ளை வீட்டு மேல் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவனுடைய நண்பன் பட்டாபிராமன் சொன்னது சூரியாவுக்கு நினைவுக்கு வந்தது. "செடியில் உள்ள புஷ்பத்தைத் தூரத்தில் இருந்து பார்த்தே நான் சந்தோஷப்படுவேன். அதைப் பறித்துக் கசக்கி முகர வேண்டுமென்ற ஆசை எனக்குக் கிடையாது" என்று பட்டாபி சொன்னான் அல்லவா! அடடா! எவ்வளவு தாராளமான உள்ளம் அவனுக்கு! அந்தக் கொள்கையைத் தானும் ஏன் பின்பற்றக்கூடாது? கிட்டாவய்யர் இரவு ஒரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்ததும் சூரியா, "அப்பா! அவர்கள் என்ன சொன்னார்கள்? என்ன முடிவு ஆயிற்று!" என்று கேட்டான்.

"இன்னும் நீ தூங்கவில்லையா, சூரியா? உங்களிடம்தான் யோசனை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அன்னம்மாள் சொன்னது உண்மைதான். 'சீதாவைத்தான் கலியாணம் பண்ணிக் கொள்வேன்' என்று அந்தப் பையன் சொல்கிறான். அவனுடைய அப்பா அம்மாவும் அதற்குச் சம்மதித்து விட்டார்கள். பணங்காசு சீர்வகையறா ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உன் தமையன் கங்காதரனைக் காட்டிலும் உன்னுடைய யோசனையைத்தான் நான் மதிக்கிறேன். அவனுக்குப் படித்துப் பரீட்சை பாஸ் செய்யத் தெரியுமே தவிர உலக விவகாரம் தெரியாது. நீ அப்படியில்லை? நாலும் தெரிந்தவன், உன் அபிப்பிராயத்தைச் சொல்!" என்றார். "அப்பா! இவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டபடியால் இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன். நம்முடைய வக்கீல் ஆத்மநாத ஐயரின் பிள்ளை பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கலியாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போன வருஷம் நீங்கள் எல்லோரும் தேவப்பட்டணத்திற்கு வந்து வக்கீல் வீட்டில் சில நாள் இருந்தீர்கள் அல்லவா? அப்போது பட்டாபி லலிதாவைப் பார்த்திருக்கிறான். லலிதாவை அவனுக்குப் பிடித்திருக்கிறது. வேறு வரன் பார்ப்பது பற்றி அவனுக்கு வருத்தம்.

அவன் மட்டும் என்ன, வக்கீல் ஐயர்வாளுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம்தான். 'நாங்கள் எல்லாம் உங்க அப்பாவுக்கு இலட்சியமா? பெரிய இடமாய்ப் பார்ப்பார்! தூரத்துப் பச்சைக் கண்ணுக்குக் குளிர்ச்சி!' என்று ஜாடைமாடையாகச் சொன்னார்!" என்றான் சூரியா. "வாஸ்தவந்தான்! வக்கீல் ஆத்மநாதய்யரின் பிள்ளை நல்ல வரன்; எனக்கு அது ஞாபகம் இல்லாமற் போகவில்லை. ஆனால் உன் அம்மா 'இன்னும் பெரிய இடமாகப் பார்க்க வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தாள். எனக்கென்னமோ பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கொடுப்பதற்குப் பூரண சம்மதம். அதைப் பற்றி யோசித்து முடிவு செய்வோம். சீதா விஷயம் என்ன சொல்கிறாய்?" என்று கிட்டாவய்யர் கேட்டார். "சீதா விஷயம் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவளுக்கும் அத்தைக்கும் சம்மதமாயிருந்தால் சரிதான். பணங்காசு அதிகம் செலவில்லாமல் இவ்வளவு நல்ல இடம் கிடைத்தால் சந்தோஷப்பட வேண்டியதுதானே? அதனால் நமக்கும் நல்ல பெயர் ஏற்படும்!" என்றான் சூரியா. "அப்படியானால், சூரியா, நீதான் உன் அம்மாவிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அவளைச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அவள் பத்ரகாளி அவதாரம் டுத்திருக்கிறாள். நான் சொன்னால் தங்கையின் பெண்ணுக்குப் பரிந்துகொண்டு சொல்லுகிறேன் என்று நினைத்து இன்னும் அதிக ஆத்திரப்படுவாள்!"

"அதற்கென்ன அப்பா! கட்டாயம் நான் அம்மாவைச் சரிக்கட்டிவிடுகிறேன்" என்றான் சூரியா. சூரியா ஏற்றுக்கொண்ட காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆயினும் கடைசியில் வெற்றி பெற்றான். முக்கியமாக மதராஸ் பையனுக்கு லலிதாவைக் கொடுத்தால் அவன் டில்லி எங்கே, லாகூர் எங்கே என்று தூர தேசங்களுக்குப் போய்க் கொண்டிருக்க நேரிடும் என்றும், வக்கீல் பிள்ளைக்குக் கொடுத்தால் பக்கத்தில் இருப்பாள் என்றும் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்றும் சூரியா கூறியது சரஸ்வதி அம்மாளின் மனசை மாற்றிவிட்டது. மறுநாள் சாயங்காலம் எல்லாருடைய சம்மதத்தின் பேரில் மதராஸ் பத்மாபுரம் மாஜி சப் ஜட்ஜ் பத்மலோசன சாஸ்திரிகளின் புதல்வன் சிரஞ்சீவி சௌந்தரராகவனுக்குப் பம்பாய்த் துரைசாமி ஐயர் குமாரி சீதாவைப் பாணிக்கிரணம் செய்து கொடுப்பதாய் நிச்சயதார்த்தம் ஆயிற்று. பம்பாய்த் துரைசாமி ஐயர் இதற்கு ஆட்சேபம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று ராஜம்மாள் சம்பந்திகளுக்கு உறுதி கூறியதின் பேரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்த வைபவத்தில் லலிதாதான் எல்லாரிலும் அதிகக் குதூகலமாக இருந்தாள். ராகவனை 'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டு அவனிடம் பேசக்கூட ஆரம்பித்து விட்டாள். சீதாவின் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி நாம் தற்போது ஒன்றும் சொல்லாமல் நேயர்களின் கற்பனா சக்திக்கே விட்டுவிடுகிறோம்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஒன்பதாம் அத்தியாயம்

பீஹார்க் கடிதம்

கலியாணம் நிச்சயம் பண்ணிக்கொண்டு சௌந்தரராகவன் சென்னைக்குத் திரும்பியபோது மிக உற்சாகமாயிருந்தான். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய ஆனந்த அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது என்ற எண்ணம் அவன் மனத்தில் குடிகொண்டிருந்தது. தாரிணிக்கும் தனக்கும் ஏற்பட்ட சினேக சம்பந்தத்தை ஒரு மாயக்கனவு என்று தீர்மானித்து அதை மறக்கப் பிரயத்தனப்பட்டதுடன் அநேகமாக மறந்தும் விட்டான். ஆனால் அந்த சம்பந்தத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தும் இரண்டு கடிதங்கள் ராகவன் சென்னை திரும்பிய மூன்றாவது நாள் வந்தன. முதற்கடிதத்தின் மேல் உறையில் எழுதியிருந்த விலாசக் கையெழுத்தைப் பார்த்தவுடனேயே ராகவனுக்கு அதை எழுதியது யார் என்று தெரிந்து விட்டது. முத்து முத்தான அந்த வட்ட வடிவக் கையெழுத்து தாரிணியின் கையெழுத்துத்தான். ஒரு பக்கம் அந்தக் கடிதத்தைப் பிரிக்க ஆர்வமும் இன்னொரு பக்கம் அதில் என்ன எழுதியிருக்குமோ என்ற தயக்கமும் அவன் மனதைக் கலக்கின. கடைசியில் பிரித்துப் பார்த்தான்.

முஸபர்பூர்,(பீஹார்) 9-2-34

அன்பரே!

ரயிலிருந்து தங்களுக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்கலாம். அதுவே தங்களுக்கு நான் எழுதும் கடைசிக் கடிதம் என்று எண்ணியிருந்தேன். இங்கு வந்து நிலைமையைப் பார்த்த பிறகு எதனாலோ மறுபடியும் தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும் அது கைகூடவில்லை. இப்போது நான் இயற்றிவரும் தொண்டில் தங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கிக் கொண்டிருக்கிறது. இக்காரணங்களினாலேயே தங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்தேன். இங்கே பூகம்ப நிவாரணத் தொண்டர்களின் முகாமில் எல்லாரும் தூங்கிய பிறகு நான் மட்டும் மங்கலான கிரோஸின் எண்ணெய் விளக்கின் அருகில் உட்கார்ந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். பீஹாருக்கு நான் வந்து பத்து தினங்கள் ஆகின்றன. இந்தப் பத்து நாளும் நான் கண்ட காட்சிகள், அம்மம்மா, - ஆயிரம் வருஷம் உயிரோடிருந்தாலும் மறக்க முடியாதவை. இந்த ஜென்மத்திலே மட்டும் அல்லாமல் அடுத்த ஜன்மத்திலும், அதற்கடுத்துவரும் ஜன்மங்களிலும் கூட மறக்க முடியாது என்று தோன்றுகிறது. பகலில் பார்த்த காட்சிகளை இரவில் மறுபடியும் என் கனவில் காண்கிறேன். பகலில் மன உறுதியினால் உணர்ச்சியை அடக்கிக் கொள்கிறேன். ஆனால் கனவில் அது சாத்தியப்படவில்லை. சில சமயம் பயங்கரத்தினால் அலறிக் கொண்டும் சில சமயம் பரிதாபத்தினால் தேம்பி அழுதுகொண்டும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறேன்.



திருஷ்டாந்தமாகச் சில சம்பவங்களைச் சொன்னால் என்னுடைய மனோநிலையைத் தாங்களும் அறிந்து கொள்வீர்கள். முஸபர்பூரில் பாபு லக்ஷ்மி நாராயண பிரசாத் என்று ஒரு பிரமுகர். பீஹார் மாகாணத்தில் நடக்கும் கதர்த்தொண்டின் தலைவர் இவர். ஒரு மாதத்திற்கு முன்பு இம்மாகாணத்தில் உள்ள சர்க்கார் சங்கக்கிளை ஸ்தாபனங்களைப் பார்வையிடுவதற்காகப் புறப்பட்டார். ஒரு மாதம் ஆனதும் மனைவி மக்களின் நினைவு வந்தது. ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று கிளம்பினார். வரும் வழியில் உலகம் தலை கீழாகத் திரும்புவது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது. அது பூகம்ப அதிர்ச்சி என்று தெரிந்து கொண்டதும், "ஐயோ! வீட்டில் தனியாக மனைவி மக்களை விட்டு வந்தோமே! அவர்களுடைய கதி என்னவாயிற்றோ?" என்று திடுக்கிட்டார். பதைபதைப்புடன் வீடு திரும்பினார். அவருடைய பதைபதைப்புக்குக் காரணம் இருந்தது. அவருடைய வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய கும்பல், மண்ணும் கல்லும் மரத்துண்டுகளும் உடைந்த ஓடுகளும் கிடந்தன. ஆகா! அவருடைய மனைவி மக்கள் எங்கே? அலறினார்; பதறினார். மண்ணையும் கல்லையும் அப்புறப்படுத்தத் தொடங்கினார். மற்றும் பல தொண்டர்கள் அவருக்கு உதவி செய்தார்கள். ஐயோ! என்ன கோரம்! என்ன பரிதாபம்! அந்தக் கும்பலுக்கு அடியில் அவருடைய மனைவியும் குழந்தைகளும் மடிந்து நசுங்கி உருத் தெரியாத பிணங்களாகக் கிடந்தார்கள். பாபு லக்ஷ்மி நாராயண பிரஸாத் இப்போது பைத்தியம் பிடித்தவராக, "என் பெண் எங்கே? பிள்ளை எங்கே?" என்று கேட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்.

மாங்கீர் என்னும் பட்டிணத்தில் பிரபாவதிதேவி என்று ஒரு ஸ்திரீ இருந்தாள். பாவம்! அவள் கைம்பெண்! கணவர் விட்டுப்போன சொற்ப சொத்தைக்கொண்டு குழந்தைகளைத் தைரியமாகக் காப்பாற்றி வந்தாள். கைக்குழந்தை தொட்டிலில் தூங்கியது. இன்னொரு குழந்தை கூடத்தில் விளையாடியது. பிரபாவதி சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு குலுக்கல், வீடு சுழன்றது; சமையல் பாத்திரம் கவிழ்ந்தது; கொல்லைப்புறத்தில் தடதடவென்று சத்தம் கேட்டது. கொல்லைத் தாழ்வாரத்தில் கன்றுக்குட்டி கட்டியிருந்ததை எண்ணிக் கொண்டு ஓடினாள். அவள் கொல்லைப்புறம் செல்வதற்குள் கன்றுகுட்டி இருந்த இடத்தில் கூரைஇடிந்து விழுந்து மேடு போட்டிருந்தது. இதற்குள் வீட்டின் முன்கட்டிலும் அதே மாதிரி சத்தம் கேட்டு ஓடினாள். இரண்டு குழந்தைகள் மேலும் வீடு இடிந்து விழுந்து அடியோடு மூடி மேடிட்டு விட்டது. "ஐயோ!" என்று அலறிக்கொண்டு பிரபாவதி வாசல் பக்கம் ஓடி வந்தாள். "என் குழந்தைகளை இழந்தேனே! பூமி வெடித்து என்னையும் விழுங்கி விடாதோ?" என்று கதறினாள். அந்தப் பதிவிரதையின் வாக்கு உடனே பலித்தது. அவள் நின்ற இடத்தில் பூமி விரிந்து பிளந்தது. அதற்குள் விழுந்து பிரபாவதி மறைந்தாள். சீதாதேவி பிறந்த மிதிலை ராஜ்யந்தான் இப்போதைய பீஹார் என்பதை அறிந்திருப்பீர்கள். சீதையைத் தன்னிடத்தே ஏற்றுக்கொண்ட பூமாதேவி இன்று பீஹார் மாகாணத்தில் எத்தனையோ உத்தம பத்தினிகளை விழுங்கி விட்டாள்.

அன்பரே! இத்தகைய பூமிப் பிளவு ஒன்றை நான் அருகில் நெருங்கிப் பார்த்தேன். பக்கத்திலிருந்தவர்கள் தடுத்தும் என் மனம் கேட்கவில்லை. பள்ளத்தின் ஓரமாகச் சென்று குனிந்து பார்த்தேன். பள்ளம் கீழே ஆழம் கணக்கிட முடியாதபடி அதல பாதாளம் வரையில் போகிறது. கொஞ்ச தூரத்துக்குக் கீழே ஒரே கன்னங் கரிய இருள். அதற்குக் கீழே எவ்வளவு தூரம் போகிறது என்று சொல்ல முடியாது. அதிக நேரம் உற்றுப் பார்த்தால் மயக்கம் வந்து தலை சுற்றுகிறது. பூகம்பம் இன்னும் எத்தனையோ விசித்திரங்களையெல்லாம் இங்கே உண்டாக்கியிருக்கிறது. மேட்டுப் பிரதேசங்கள் திடீரென்று பள்ளமாகிப் பெரிய ஏரிகளைப் போல் தண்ணீர் ததும்பி நிற்கின்றன. ஏரிகள் இருந்த இடத்தில் தண்ணீர் அடியோடு வற்றிக் கட்டாந்தரை ஆகியிருக்கிறது. குடிசைகளும் வீடுகளும் பிரும்மாண்டமான மாளிகைகளும் கம்பெனிக் கட்டிடங்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இடிந்தும் விழுந்தும் எரிந்தும் கிடக்கின்றன. மொத்தம் 25,000 ஜனங்கள் பூகம்பத்தில் மாண்டிருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். மாண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள், தப்பிப் பிழைத்தவர்களில் லட்சக்கணக்கான ஜனங்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தலைக்கு மேலே கூரையின்றி, உட்காரவும் இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்பரே! இதையெல்லாம் தாங்கள் வந்து பார்த்தீர்களானால் இப்படிப்பட்ட மகத்தான துரதிர்ஷ்டத்தையடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் வாழ்க்கையில் வேறு என்ன பெரிய காரியம் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வருவீர்கள். பூகம்பத்தினால் ஏற்பட்ட கஷ்ட நிவாரணத் தொண்டுக்காக இந்தியாவின் நாலா பக்கங்களிலிருந்தும் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். எல்லாரும் பாபு ராஜேந்திர பிரஸாத்தின் தலைமையில் வேலை செய்கிறார்கள். பாபு ராஜேந்திர பிரஸாத் ஓர் அற்புத மனிதர். அவருடைய சாந்தம், அடக்கம், அன்பு, தொண்டு செய்யும் ஆர்வம் - இவற்றுக்கு நிகரேயில்லை. ஒரு வாரத்துக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இங்கு வந்தார். நாம் இருவரும் முதல் முதலில் சந்தித்தோமே, கராச்சி நகரில்; அங்கே நடந்த காங்கிரஸில் பண்டித ஜவஹர்லால் நேருவை நான் பார்த்தேன். அதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் இப்பேர்ப்பட்ட மகா புருஷர் என்று அறிந்து கொள்ளவில்லை. மாபெரும் தலைவர் தாம் என்கிற உணர்ச்சியேயில்லாமல் தொண்டர்களோடு தொண்டர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஆகா! என்ன ஆர்வம்? என்ன அவசரம்? எத்தனை சுறுசுறுப்பு? அவர் நடப்பதே கிடையாது; ஒரே ஓட்டந்தான்.

நேற்று ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. பூகம்பத்தினால் இடிந்து விழுந்து நாசமான ஒரு தெருவின் வழியாக நேருஜி போய்க் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு தீனமான சத்தம் கேட்டது. நாய்க்குட்டி குரைக்கும் குரல் போலிருந்தது. நேருஜி அங்கேயே நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அதே குரல் கேட்டது. உடனே நேருஜி சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார். இடிந்து விழுந்து மேடிட்டுக் கிடந்த கல்லையும் மண்ணையும் அப்புறப்படுத்தத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி மற்றத் தொண்டர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். அரை மணி நேர வேலைக்குப் பிறகு அவர்கள் தேடிய காட்சி தென்பட்டது. மர விட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்து ஒரு சிறு கூரையைப் போலாகிக் கீழே காலி இடம் உண்டுபண்ணியிருந்தது. அந்த இடத்தில் பாவம்! ஒரு சிறுவன் இறந்து கிடந்தான். இறந்த குழந்தையைக் காத்துக்கொண்டு அந்த நாய் இருந்தது. இத்தனை நாளும் அது எப்படித்தான் உயிர் வைத்திருந்ததோ தெரியாது! மேலே மூடியிருந்தவற்றை எடுத்தவுடனே நாய் வெளியே ஓடி வர வேண்டுமே! கிடையாது! செத்துக் கிடந்த சிறுவனை முகர்ந்து பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றது.

கடவுளே இந்த மாதிரி எத்தனையோ பயங்கர சம்பவங்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு உலகத்து நாடோ டி வாழ்க்கையில் யாருக்குத்தான் மனம் செல்லும்! மனித வாழ்க்கை எடுத்ததின் பயன் இம்மாதிரி கஷ்டப்படுகிறவர்களுக்குச் சேவை புரிவதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தாங்களும் இங்கு வந்து பார்த்தால் என்னைப் போலவேதான் எண்ணுவீர்கள். ஏற்கெனவே எத்தனையோ விஷயங்களில் நம்முடைய அபிப்பிராயங்கள் ஒத்திருந்தன அல்லவா? சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு, மோட்டார்கள், டீ பார்ட்டிகள் - இவற்றில் எல்லாம் என்ன சுகம் இருக்கிறது? இங்ஙனம், தாரிணி.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
முப்பதாம் அத்தியாயம்

இதுவா உன் கதி?

தாரிணியின் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தபோது சௌந்திரராகவனின் உள்ளத்தில் பழைய அன்பும் ஆர்வமும் ததும்பிக் கொண்டிருந்தன. பூகம்பத்தினால் விளைந்த விபரீத நிகழ்ச்சிகளைப் பற்றிப் படித்தபோது அவனுடைய மனம் இளகிற்று. கடிதத்தின் கடைசிப் பகுதி இளகிய மனத்தை மறுபடியும் கல்லாக மாற்றியது. சௌந்திரராகவனுடைய மனதிற்குள் தன்னைப் போன்ற ஒரு புத்திசாலி இந்தியா தேசத்தில் இதுவரை பிறந்ததில்லை என்ற எண்ணம் குடிகொண்டிருந்தது. தாரிணி அவனிடம் கொண்டிருந்த காதல் அந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்ந்திருந்தது. இப்போது அவள் தனக்கு மனித வாழ்க்கை எடுத்ததின் பலனைப் பற்றிய போதனை செய்ய ஆரம்பித்தது ஆத்திரத்தை உண்டாக்கியது. அதிகப்பிரசங்கி! சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு முதலியவை குறித்து இவள் என்ன நமக்கு உபதேசிப்பது? நல்லவேளை! இப்படிப்பட்ட அதிகப்பிரசங்கியுடன் நமது வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளாமல் தப்பினோம்! மூத்தோர்சொல் வார்த்தை 'அமிர்தம்' என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? கலியாண விஷயத்தில், அம்மா சொன்னதை கேட்கத் தீர்மானித்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? அப்பா அடிக்கடி சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான்.

பெண்கள் வீட்டுக்குள்ளேயிருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம். தேசத்தொண்டு என்றும் பொதுஊழியம் என்றும் சொல்லிக்கொண்டு ஸ்திரீகள் வெளியில் கிளம்புவது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அது எங்கே கொண்டு விடும் என்று யார் சொல்ல முடியும், தாரிணியின் விஷயத்தில் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோ ம். அவளுடைய முக வசீகரமும் வெளி மினுக்கும் நம்மை ஏமாற்றிவிட்டன. பார்க்கப் போனால் சீதாவைக் காட்டிலும் தாரிணி அழகிலே அதிகம் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளும் இல்லை. அல்லது சமர்த்திலேதான் சீதா குறைந்து போய் விடுவாளா? அதுவும் இல்லை! அன்றைக்குத் தன் அப்பா, அம்மாவிடம் சீதா எவ்வளவு சாதுர்யமாகப் பேசினாள்? அழகோடும் சமர்த்தோடும் சீதா அடக்கம் என்னும் அருங்குணத்தையும் அணிகலனாகப் பூண்டிருப்பாள். குடும்ப வாழ்க்கைக்கு தகுந்தபடி நடந்து கொள்வாள். பெரியவர்களிடம் பயபக்தியோடு இருந்து நல்ல பெயர் வாங்குவாள். பணம் பணம் என்று ஜபம் செய்து கொண்டிருந்த அப்பாவையே மனம் மாறும்படி செய்து விட்டாளே! அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டு, 'பணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வேண்டிய பணம் நீ சம்பாதித்துக் கொள்வாய். இந்த மாதிரி சமர்த்துப் பெண் கிடைப்பது துர்லபம். உனக்குப் பிடித்திருந்தால் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சொல்லி விட்டாரே?

கடவுளுடைய கருணை தன்னிடத்தில் பூரணமாய் இருக்கிறது; ஆகையினாலே தான் தாரிணியோடு தன் வாழ்நாள் முழுவதையும் பிணைத்துக் கொண்டு திண்டாடாமல் இந்த மட்டும் தப்ப முடிந்தது. பெண் பார்க்கப் போன இடத்தில்தான் என்ன? கடவுளுடைய சித்தந்தானே லலிதாவைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவை முதலில் கொண்டு வந்து விட்டது? ஆனால் இந்த விஷயத்தில் கடவுளின் சித்தத்தைக்கூட இரண்டாவதாகத்தான் சொல்ல வேண்டும். அம்மாவுக்குத்தான் முதல் நன்றி செலுத்த வேண்டும். அம்மா மட்டும் அவ்வளவு பிடிவாதமாயிருந்திராவிட்டால், தான் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாளெல்லாம் திண்டாட நேர்ந்திருக்கும்? இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ராகவனுடைய கவனம் உறை பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதத்தின் மீது சென்றது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அதில் அடங்கியிருந்த விஷயம் அவனைத் திடுக்கிட்டுத் திகைக்கும்படி செய்தது. அது முஸபர்பூர் பூகம்பத் தொண்டர் படை முகாமிலிருந்து வந்து கடிதம். அதில் எழுதியிருந்தாவது:

முஸபர்பூர் 12-2-34

அன்பார்ந்த ஐயா,

வருத்தம் தரும் ஒரு விஷயத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. பம்பாயிலிருந்து வந்த ஒரு தேச சேவிகை - தாரிணி என்னும் பெயர் கொண்டவள் - இந்த முகாமில் தங்கிப் பூகம்பத்தினால் நஷ்டமடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்து வந்தாள். அவளுடைய உயர்ந்த குணங்களினால் இங்கே எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவளாயிருந்தாள். நேற்று மத்தியானம் விடுதியில் சாப்பிட்டுவிட்டுப் போனவள் இரவு திரும்பி வரவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவளிடம் ஒரே ஒரு துர்ப்பழக்கம் இருந்தது. பூகம்பத்தினால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பூமிப்பிளவுகளுக்குப் பக்கத்தில் போய் அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பாள். நாங்கள் பலமுறை எச்சரித்தும் அவள் கேட்கவில்லை. கடைசியாக நேற்றுப் பிற்பகல் தாரிணியைப் பார்த்தவர்கள் அத்தகைய பிளவு ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று அவள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். எவ்வளவோ தேடிப் பார்த்தும் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. "அன்று ஜனககுமாரி பூமிக்குள் போனதுபோல் நானும் போய்விட விரும்புகிறேன்" என்று தாரிணி அடிக்கடி சொல்வது வழக்கம். அவளுடைய விருப்பம் நிறைவேறி விட்டதென்ற வருத்தத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. தாரிணியின் உற்றார் உறவினர்கள் பற்றி எங்களுக்கு யாதொரு தகவலும் இல்லை.



அவளுடைய டைரியில் தங்கள் விலாசம் குறிக்கப்பட்டிருந்தபடியால் இதைத் தங்களுக்கு எழுதுகிறோம். தாரிணியின் பந்துக்களைத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களுக்கும் அறிவிக்கக் கோருகிறோம். ஒருவேளை தாரிணி எங்கேயாவது வழி தப்பிப் போயிருந்து திரும்பி வந்து விட்டால் தங்களுக்கு உடனே தெரியப்படுத்துகிறோம். இங்ஙனம், சரளாதேவி. இந்தக் கடிதத்தின் முதல் சில வரிகளைப் படிக்கும் போதே ராகவனுக்குத் தாரிணிமீது ஏற்பட்டிருந்த ஆத்திரமெல்லாம் மாறிவிட்டது. அவனுடைய இருதயத்தில் அன்பும் இரக்கமும் ததும்பின. கடிதத்தை முடிக்கும்போது கண்களில் கண்ணீர் ததும்பியது. எழுந்து சென்று பூட்டியிருந்த அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த தாரிணியின் படத்தை எடுத்தான். வெகுநேரம் அதை உற்று பார்த்துக் கொண்டேயிருந்தான். தாரிணியின் பேச்சுக்களும் முக பாவங்களும் நடை உடை பாவனைகளும் ஒவ்வொன்றாகவும் சேர்ந்தாற்போலவும் அவன் மனக் கண் முன்னால் வந்து கொண்டிருந்தன. "அடடா! இதுவா உன் கதி?" என்று எண்ணியபோது ராகவனுடைய கண்ணில் ததும்பிய கண்ணீர் வழிந்து தாரிணியின் படத்தின் பேரில் முத்து முத்தாக உதிர்ந்தது. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தில் ஓர்அதிசயமான நிம்மதியும் உண்டாயிற்று. அப்புறம் ஒருவாரம், பத்துநாள் வரையில் முஸ்பர்பூரிலிருந்து வேறு ஏதேனும்- நல்ல செய்தி கொண்ட கடிதம் - ஒருவேளை வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அத்தகைய கடிதம் ஒன்றும் வரவேயில்லை.
 

Latest posts

New Threads

Top Bottom