Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
ஏழாம்அத்தியாயம்

லலிதாவின் கடிதம்

"என் உயிருக்குயிரான தோழி சீதாவுக்கு லலிதா எழுதிக் கொண்டது. நீ டில்லிக்குப் போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதத்தைப் பெற்று அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை தூரம் போன பிறகும் நீ என்னை மறந்து விடாமல் கடிதம் எழுதியிருக்கிறபடியால் நீதான் என்னுடைய உண்மையான பிராண சிநேகிதி என்பதில் சந்தேகம் என்ன? நாம் இரண்டு பேரும் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய சிநேகம் இப்படியே இருந்து வரவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். புதிய இடத்தில் புதுக் குடித்தனம் போட்டதில் உனக்கு வேலை அதிகமாயிருக்கும். ஆகையினால் தான் அவ்வளவு கொஞ்சமாக எழுதிவிட்டாய் என்று நினைக்கிறேன்! வார்த்தைகளை எண்ணிப் பார்த்தேன், மொத்தம் முப்பத்தாறு வார்த்தைகள் இருந்தன. இவ்வளவு கொஞ்சமாக நீ இதற்கு முன் எப்போதும் எழுதியதில்லை. புதுக் குடித்தனம் போடும் வேலையெல்லாம் தீர்ந்ததும் நீ எப்போதும் போல் விவரமாகக் கடிதம் எழுத வேண்டும் ஏழெட்டுப் பக்கத்துக்கு குறையக் கூடாது. நான் ராஜம்பேட்டையிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுவது உனக்கு ஒருவேளை அதிக ஆச்சரியமாயிருக்கும்; ஒருவேளை ஆச்சரியமாயிராது. ஆனால் நீ கொஞ்சமாவது ஆச்சரியப்படுவாய் என்று நம்புகிறேன். நான் இங்கே எதற்காக வந்தேன் என்று தெரிந்தால் கட்டாயம் ஆச்சரியப்பட்டே தீர்வாய்.

சீதா! நான் சொல்லாமலே காரணத்தைக் கண்டுபிடி, பார்க்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒரு 'க்ளூ' கொடுக்கிறேன். என்னுடைய கை ஒவ்வொன்றிலும் இப்போது அரை மணங்கு பளுவுள்ள வளையல்கள் ஏறியிருக்கின்றன. முழங்கை வரையில் வளையல் மயந்தான்! இப்போது காரணம் தெரிகிறதா, சீதா! எனக்கு வளைகாப்புக் கல்யாணம் நடந்து நாலு நாள் ஆகிறது. வளை காப்புக்காகத் தான் இந்த ஊருக்கு வந்தேன். அடுத்த மாதம் சீமந்தம் வைத்திருக்கிறது. அதற்குள் தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போக வேண்டும். சீமந்தக் கலியாணம் புக்ககத்தில்தான் நடக்க வேண்டுமென்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ? என் அம்மா இப்போதுதான் உண்மையான சந்தோஷம் அடைந்திருக்கிறாள். நடுவிலே ரொம்பவும் என்னைத் திட்டிக் கொண்டும் குறைபட்டுக் கொண்டும் இருந்தாள். 'உடன் எடுத்த பெண்கள் எல்லாரும் கையில் இரண்டு வயதுக் குழந்தையுடன் இருக்கிறார்கள்; நீ இப்படி மரமாயிருக்கிறாயே, ஜடமே!' என்று ஓயாமல் பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தாள். 'குழந்தை பிறப்பதும் பிறக்காததும் கடவுளுடைய செயல் அல்லவா?' என்று நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அம்மாவின் மனது சமாதானம் அடையவில்லை.

இப்போதுதான் அவளுடைய மனக் குறை தீர்ந்து சந்தோஷமாயிருக்கிறாள்; என்னைத் திட்டாமலும் இருக்கிறாள். திட்டு வதற்குப் பதிலாக 'இந்தப் பெண் பெற்றுப் பிழைக்க வேண்டுமே? பிரசவத்துக்கு இங்கே அனுப்புவார்களோ, அனுப்ப மாட்டார்களோ, தெரியவில்லையே! அம்பிகே! பராசக்தி!' என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். ஓயாத புலம்பலாயிருந்தாலும் சந்தோஷமான புலம்பல் தான். சீதா! உனக்கு வளைகாப்பு, சீமந்தம் நடைபெறவில்லை என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. உன் அகத்துக்காரர் சீமந்தத்துக்காகச் சீமையிலிருந்து வர முடியாது என்று சொல்லி விட்டதாக எழுதியிருந்தாயல்லவா? உன் அகத்துக்காரர் அவ்விதம் எழுதியது ஒரு விதத்தில் நன்மையாக முடிந்தது. அதுவரையில் என் அம்மாவின் மனதில் உன் பேரில் கொஞ்சம் கோபம் இருக்கத் தான் இருந்தது. என்னைப் பார்ப்பதற்கு என்று வந்தவர் உன்னைக் கலியாணம் செய்து கொண்டது பற்றித்தான் கோபம். ஆனால் உனக்குச் சீமந்தம் நடக்கவில்லை என்ற செய்தியை அறிந்ததும் அம்மாவுக்கு உன் பேரில் இருந்த கோபம் மாறிவிட்டது. 'அந்தப் பெண் சீதா இங்கே நல்ல வேளையாக இருந்தாளோ, அப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை எனக்கு வாய்க்காமல் பிழைத்தேனோ!' என்று உற்சாகத்துடன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் என் அம்மாவைப் போல் நானும் நினைப்பதாக நீ எண்ணிக் கொள்ளாதே! ஒருநாளும் இல்லை. 'வளைகாப்பு நடக்காவிட்டால் என்ன, சீமந்தமும் நடக்காவிட்டால்தான் என்ன? உன் கணவர் உன்னிடம் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு ஏது, இணை ஏது? புருஷனுடைய அன்பும் ஆதரவும் முக்கியமா? வளைகாப்பும் சீமந்தமும் முக்கியமா? சாஸ்திரம் என்பார்கள்; சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திரமாவது, மண்ணாங்கட்டியாவது? வெள்ளைக்காரர்களும், கிறிஸ்தவர்களும் சீமந்தமா பண்ணிக் கொள்கிறார்கள்! அவர்களுடைய குழந்தைகள் நன்றாயில்லையா?' என்று சூரியா ஒரு சமயம் சொன்னான். அவன் சொன்னதை நானும் ஆமோதித்தேன். என்னுடைய அபிப்பிராயத்தில், கணவனுடைய அன்புக்கு மிஞ்சிய பாக்கியம் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை. இந்த விஷயத்தில் நீ மிக்க பாக்கியசாலி நான் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை.

இவ்விதம் நான் எழுதியதிலிருந்து என் கணவர் பேரில் நான் புகார் கூறுவதாக எண்ணாதே! இவர் என்னிடம் வைத்திருக்கும் ஆசைக்கும் அன்புக்கும் அளவே கிடையாது. ஆனாலும் ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என் குறையை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? என் ஆருயிர்த் தோழி! இத்தனை நாள் சொல்லாததை, எழுதாததை இன்று தெரியப்படுத்துகிறேன். எவ்வளவோ இவர் என் பேரில் ஆசையுள்ளவராயிருந்தும் பல விஷயங்களில் அம்மாவுக்குப் பிள்ளையா யிருக்கிறார்! அம்மா இட்ட கோட்டை இவர் தாண்டுவதில்லை. மற்ற காரியங்களில் அம்மாவிடம் பக்தியோடு இருக்கட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தாலி கட்டிய மனைவி விஷயத்திலே கூடவா அப்படி இருக்கிறது? அம்மா உத்தரவு கொடுத்தால் தான் என்னை எங்கேயாவது அழைத்துப் போவார். இதைப் பற்றி நான் எப்போதாவது குறை தெரிவித்துக் கொண்டால், 'உன்னிடம் எனக்குள்ள அந்தரங்க அன்பு உனக்குத் தெரியாதா? அம்மா இஷ்டப்படி நடக்காவிட்டால் வீட்டில் வீண் கலகம் ஏற்படும். பொறுத்தார் பூமி ஆள்வார்!' என்று உபதேசம் செய்கிறார்.

என் மாமியாரின் குணத்தைப்பற்றி முன்னமே குறிப்பாக எழுதியிருக்கிறேன், சீதா! கலியாணத்தின் போது எவ்வளவு பரம சாதுவாயிருந்தாள்! அப்புறம் சீக்கிரத்தில் தன்னுடைய சொரூபத்தைக் காட்டி விட்டாள். கலியாணத்தின்போது சீர்வகையறா சரியாகச் செய்யவில்லையென்று இரண்டு வருஷம் சாந்திக் கலியாணம் பண்ணாமலே வைத்திருந்தாள். அப்பா சரணாகதி என்று அவள் காலில் விழுந்து அவள் இஷ்டப்படியெல்லாம் சீர் செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான் சம்மதம் கொடுத்தாள். சாந்திக் கலியாணத்தின் போது அவளுடைய இஷ்டப்படியெல்லாம் சீர் செய்த பிறகாவது சந்தோஷம் அடைந்தாளா? அதுவும் இல்லை. இத்தனை நாள் ஒருவரிடமும் சொல்லாததை உன்னிடம் இப்போது சொல்கிறேன் சீதா! என் மாமியார் ரொம்பப் பொல்லாதவள், ராட்சஸியேதான்! என்னை அவள் படுத்திவைக்கிற பாட்டுக்கு அளவேயில்லை. ஓயாமல் ஒழியாமல் என் மேல் புகார் செய்து கொண்டிருப்பதே அவளுக்கு வேலை. நான் எது செய்தாலும் அவளுக்குப் பிசகாகப்படுகிறது. ஒரு காரியத்தைச் செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை என்று கேட்கிறாள். 'சுயபுத்தி வேண்டாமா? எதுவும் ஒருவர் சொல்லித் தான் செய்ய வேண்டுமா?' என்கிறாள். நானாக ஏதாவது செய்து விட்டாலோ, 'உன்னை யார் செய்யச் சொன்னது? நான் ஒருத்தி இருக்கிறேனே கேட்கக் கூடாதா?' என்கிறாள். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுகிறாள், வேண்டாம் என்கிற நாட்டுப்பெண் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ஒன்றும் படாமலிருந்தாலும் குற்றம் என்பதாக இருக்கிறது.

என்னுடைய நாத்தனார் ஒருத்தியைக் கொடுத்திருக்கிற இடத்தில் அவள் அவ்வளவாகச் சுகப்படவில்லையாம்; அவளை ரொம்பக் கஷ்டப்படுத்துகிறாளாம். அதற்கு நான் என்னடி செய்வேன்? அந்தக் கோபத்தை எல்லாம் என் பேரில் காட்டுகிறாள் என் மாமியார்! நன்றாயிருக்கிறதல்லவா? இவர் இருக்கிறாரே, இவரைப்பற்றி என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. என் பேரில் ரொம்ப ஆசையாகத்தானிருக்கிறார். ஆனால் ஆசை மட்டும் இருந்து என்ன பிரயோசனம். 'அம்மாவுக்கு இது பிடிக்காது; அம்மாவுக்கு அது வருத்தம் தரும்' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, ஏதடா, இவளும் ஒரு மனுஷிதானே என்று நினைத்துப் பார்ப்பதேயில்லை! தாயார் தகப்பனாரை விட்டு, அண்ணன் தம்பிகளை விட்டு, பிறந்த ஊரையும் வீட்டையும் தெரிந்த மனுஷாள் எல்லாரையும் விட்டுத் தம்மையே கதியென்று நம்பி வந்தவளாயிற்றே என்று ஒரு தடவையாவது எண்ணிப் பார்த்திருப்பார் என்று தோன்றவில்லை. தேவபட்டணத்தில் இத்தனை நாள் இருந்தேனே? ஒரு நாளைக்கு என்னை இவர் ஒரு சினிமா பார்க்க அழைத்துப் போனதில்லை. ஒருநாள் சாயங்காலம் என்னை இந்த ஊர் நந்தவனத்துக்கு அழைத்துப் போனதில்லை. பழைய காலத்து மனுஷர்களாயிருந்தால் கோயில் குளம் தேர் திருநாளுக்காவது அழைத்துப் போவார்களே? அதுவும் இல்லை. கொஞ்சம் நாளைக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த ஊருக்கு வந்திருந்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஊரெல்லாம் திரண்டு போனார்கள். நானும் வருகிறேன் என்று ஆனமட்டும் சொன்னேன்.

'அம்மா கோபித்துக் கொள்வாள்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். எதற்கு எடுத்தாலும் 'அம்மா, அம்மா, அம்மா' தான்! எனக்கு ஒரு நாள் கோபமாயிருந்தது. 'எத்தனை நாள் இப்படி என்னை ஜெயிலில் வைத்திருக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டு விட்டேன். வழக்கம் போல் புன்சிரிப்புச் சிரித்துவிட்டு, 'கொஞ்சம் நாள் பொறுத்துக் கொண்டிரு. நாம் தனிக் குடித்தனம் போய் விடுவோம்; அப்புறம் நீ வைத்ததுதான் சட்டம். இரண்டு பேரும் கைகோத்துக் கொண்டு தினம் தினம் தெருவில் ஊர்கோலம் போவோம்' என்று சொன்னார்.உண்மையாகத்தான் சொன்னாரா பரிகாசத்துக்குச் சொன்னாரா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் நிச்சயம் தெரியவில்லை. இவர் தனிக் குடித்தனம் போவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகவில்லை. ஒவ்வொரு சமயம் இவருக்கு என்னத்துக்கு இந்த வக்கீல் வேலை என்று தோன்றுகிறது. எங்கேயாவது தூர தேசத்தில், பம்பாய் - கல்கத்தா - டில்லியில், ஏதாவது ஒரு உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளக்கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல சமயம் பார்த்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறதோ?

சீதா! நீ பாக்கியசாலி! எல்லா விஷயத்திலும் என்னுடைய நிலைமைக்கு நேர்மாறாயிருக்கிறது உன்னுடைய நிலைமை. உன் மாமனாரும் மாமியாரும் உன்னைத் தாங்குகிறார்கள். தரையில் உன் கால் படக்கூடாது என்று அவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள். கணவரோ இந்தியாவின் தலைநகரத்தில் உத்தியோகம் பார்க்கிறார். கலியாணம் ஆன உடனேயே டில்லிக்கு அழைத்துப் போனாரே! இப்போது கேட்க வேண்டுமா! எல்லா இடங்களுக்கும் உன்னை அழைத்துப் போவார். தினம் தினம் சினிமாவுக்குப் போவீர்கள். ஏதோ நீயாவது இப்படிச் சந்தோஷமாயிருக்கக் கொடுத்து வைத்திருக்கிறாயே என்பதை எண்ணித்தான் இப்போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ராஜம்பேட்டைக்கு வந்தது முதல் எனக்கு உன்னுடைய ஞாபகமே வந்து கொண்டி ருக்கிறது. தினம் தினம் தபால் ரன்னர் 'ஜிங் ஜிங்' என்று மணி அடித்துக் கொண்டு வருகிற சத்தத்தைக் கேட்டதும், பம்பாயிலிருந்து உன் கடிதத்தை எதிர்பார்த்து நான் தபாலாபீஸுக்கு ஓடிய காலம் நினைவுக்கு வருகிறது.

குளத்தங்கரைக்குப் போனால், படிக்கட்டுகளில் உட்கார்ந்து நாம் மனோராஜ்யம் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீ சொன்ன கதையெல்லாம் ஞாபகம் வருகிறது. லைலா மஜ்னூன், அனார்க்கலி, ரோமியோ ஜூலியட், சகுந்தலை, சம்யுக்தை முதலியவர்கள் எதிரில் வந்து நிற்கிறார்கள், அடியே! காதல் காதல் என்று சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்டா? அல்லது கதைகளிலே மட்டுந்தானா? இத்தனை நாளும் இந்தியாவின் சக்ரவர்த்தியாயிருந்த எட்டாவது எட்வர்ட் ராஜா யாரோ ஒரு பெண்ணின் காதலுக்காக ராஜ்யத்தைத் துறந்து விட்டாராமே? இது உண்மையா, சீதா! இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லையே? நேற்று அம்மாவும் நானும் சுண்டுவும் வண்டி கட்டிக் கொண்டு காவேரிக்குக் குளிப்பதற்குப் போயிருந்தோம். போகும் போதும் வரும்போதும் உன்னுடைய நினைவாகவே இருந்தது. வழியில் மதகடியில் தபால்கார பாலகிருஷ்ணனுடன் சூரியா குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த காட்சி அப்படியே எதிரில் நடப்பது போல் இருந்தது. சீதா! சூரியா உங்களுடன் டில்லிக்கு வந்ததையும், வழியில் உங்களுக்கு ஒத்தாசையாக இருந்ததையும் உன் கடிதத்திலிருந்து அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். ஒருவேளை டில்லியிலேயே சூரியா தங்கிவிடலாம் என்று அவன் சொன்னதாக எழுதியிருக்கிறாய். ஏனென்றால், நீ அவனைக் கவனித்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. சூரியா, ஏன் திடீரென்று படிப்பை விட்டுவிட்டான்? ஏன் இப்படி உலகத்தையே வெறுத்தவன் போலப் பேசுகிறான் என்று கேட்டிருந்தாய். அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்தபோது தான் தெரிந்தது.

என் மூத்த தமையன் கங்காதரன் இருக்கிறானே, அவனை உனக்கு அதிகமாகத் தெரியாது. ஒரே ஒரு தடவை நம்முடைய கலியாணத்தின் போது மட்டுந்தான் நீ பார்த்திருக்கிறாய். கங்காதரனை எனக்கு எப்போதுமே பிடிக்காது; முரட்டுக் குணம். அவனால் நம்முடைய கலியாணத்தின் போது ஒரு பெரிய சங்கடம் நேர்வதற்கு இருந்ததாம். குடியானத் தெரு ஆள் ஒருவனை, சொன்ன உடனே ஏதோ ஒரு வேலையைச் செய்யவில்லை என்பதற்காகக் கங்காதரன் அடித்து விட்டானாம். குடியானத் தெரு ஆட்கள் கட்டுப்பாடு பண்ண ஆரம்பித்து விட்டார்களாம். இதைத் தெரிந்து கொண்டு சூரியா குடியானத் தெருவுக்குப் போய் அண்ணாவுக்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டானாம். இதன் பேரில் குடியான ஆட்கள் சமாதானம் அடைந்தார்களாம். அடுத்த கோடை லீவுக்கு இரண்டு பேரும் ஊருக்கு வந்திருந்தபோது கங்காதரன் சூரியாவைச் சண்டைப் பிடித்தானாம். 'எனக்காக உன்னை யாரடா மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சொன்னது?' என்று. சூரியா ஏதோ பதில் சொன்னானாம்.அதற்குப் பதிலாக அண்ணா அவனை அடித்தானாம். சூரியா அடியைப் பொருத்துக் கொண்டு பொறுமையாயிருந்தானாம்.

இப்படிச் சூரியா இருந்தும் கங்காதரனுடைய கோபம் தீரவில்லை, மனஸ்தாபம் முற்றிக் கொண்டிருந்தது. போன வருஷம் சூரியா இங்கே வந்திருந்தபோது ஏதோ மனைக்கட்டுத் தகராறில் சூரியா குடியானவர்கள் கட்சி பேசினானாம். மறுபடியும் கங்காதரன் சூரியாவை அடித்து விட்டானாம். அக்கிரகாரத்தில் எல்லாரும் கங்காதரன் கட்சியாம். இதனால் சூரியா மனக்கசப்பு அடைந்து 'உங்கள் சொத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்குப் பங்கு வேண்டாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டானாம். குடும்பத்துப் பணம் வேண்டாம் என்பதற்காகவே படிப்பையும் விட்டு விட்டானாம். இந்த விவரமெல்லாம் இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்த போதுதான் எனக்கு நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில், அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சூரியாவைப் பற்றிப் பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில சமயம் 'உன்னால் தான் வந்தது' 'உன்னால் தான் வந்தது' என்று சண்டை பிடித்துக் கொள்கிறார்கள்.

"சீதா! எனக்குச் சூரியாவைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாயிருக்கிறது. சூரியா ரொம்ப நல்ல பிள்ளையடி! என்னிடம் அவனுக்கு எவ்வளவு ஆசை தெரியுமா! என்னிடம் மட்டும் என்ன? உன்னிடத்தில் கூட அவனுக்கு எவ்வளவு அபிமானம் உண்டு. டில்லியில் இருக்கும் வரையில் அவனை நீ கவனித்துக்கொள். வேளா வேளைக்குச் சாப்பிடச் சொல். சூரியாவை மட்டும் நீ கொஞ்சம் கவனித்துக் கொண்டால் என் அம்மா கூட உன் பேரில் ரொம்ப சந்தோஷப்படுவாள்? இந்தக் கடிதம் ரொம்ப ரொம்ப நீளமாய்ப் போய் விட்டது. இது நான் மூன்று நாளாய் எழுதி இன்றைக்கு முடிக்கிறேன். என் மனத்திற்குள் வெகு நாளாய் வைத்திருந்ததை எல்லாம் கொட்டிவிட்டேன். புக்ககத்தில் இருக்கும்போது இவ்வளவு நீளம் கடிதம் எழுத எனக்கு அவகாசம் ஏது? மேலும் அங்கே இருக்கும் போது இதையெல்லாம் கடிதத்தில் எழுதவும் முடியாது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கும். ஏதாவது நான் அசட்டுத்தனமாக எழுதியிருந்தாலும் மன்னித்துக்கொள். இந்த உலகத்தில் என்னுடைய அருமைத் தோழி நீ ஒருத்தித்தான். என் மனதில் உள்ள குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? சீக்கிரம் விவரமாகப் பதில் எழுது. இப்படிக்கு, சதா உன் நினைவாகவேயிருக்கும் அன்பார்ந்த சிநேகிதி, லலிதா.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
எட்டாம் அத்தியாயம்

சீதாவின் பதில்

லலிதாவின் கடிதம் சீதாவின் உள்ளத்தில் பலவித உணர்ச்சிகளை உண்டாக்கியது. லலிதாவின் புக்கக வாழ்க்கையைக் குறித்து அனுதாபம் ஏற்பட்டது. அதே சமயத்தில் லலிதாவின் நிலையுடன் தன்னுடைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவளுடைய அந்தரங்கத்தில் ஒருவித மகிழ்ச்சியும் உண்டாயிற்று. "என்னதான் இருந்தாலும் இவள் இவ்வளவு குறை சொல்லிப் புலம்பக் கூடாது!" என்று ஒரு பக்கத்தில் தோன்றியது. உடனே, "பாவம்! வேறு யாரிடத்தில் சொல்லிக் கொள்வாள்? அவள் அம்மாவோ பெரும் பைத்தியம்!" என்ற எண்ணமும் தோன்றியது. "அம்மம்மா! எத்தனை நீளம் கடிதம் எழுதுகிறாள். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை ஒன்பது வார்த்தைகளில் சொல் கிறாளே?" என்று அலுத்துக்கொண்டாள். கடைசியாக ஒருவாறு கடிதத்தைப் படித்து முடித்த பிறகு பின்வரும் பதிலை எழுதினாள்."என் பிரியமுள்ள தோழி லலிதாவுக்கு; உன்னுடைய கடிதம் கிடைத்தது. அதைப் படித்தபோது கொஞ்சம் வருத்தம் உண்டாயிற்று. உன் பேரில் கோபமாயும் இருந்தது. இவ்வளவு விஷயங் களையும் உன் மனதிற்குள் இத்தனை நாளும் மூடி வைத்துக் கொண்டிருந்தாயல்லவா? இதுதானா உண்மையான சிநேகிதத்துக்கு இலட்சணம்? போனது போகட்டும்; இனிமேல் இன்பமோ, துன்பமோ, சுகமோ, துக்கமோ, எதுவாயிருந்தாலும் உடனுக்குடனே எனக்கு நீ விஸ்தாரமாகக் கடிதம் எழுதி விட வேண்டும். ஒருவருக்கொருவர் சிநேகிதமாயிருப்பது பின் எதற்காக? சுக துக்கங்களைப் பகிர்ந்து அனுபவிப்பதற்குத் தானல்லவா?

காதல் என்பது கதைகளிலே மட்டும் அல்ல; இந்த உலகத்திலும் உண்டு என்பது நிச்சயம். அதற்கு என்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அடியே! லலிதா! உண்மையில் நான் பாக்கியசாலிதானடி; ஆனால் இந்தப் பாக்கியம் ஒருவிதத்தில் உன்னால் தான் எனக்குக் கிடைத்தது என்பதை ஒருநாளும் மறக்க மாட்டேன். எனக்குப் பதிலாக இன்றைக்கு நீ இங்கே இந்த அழகான புதுடில்லி பங்களாவில் இருந்திருக்கலாம் என்பதை நினைக்கும் போது என்னமோ பண்ணுகிறது. உனக்கு எப்படி நான் நன்றி செலுத்துவேன்! என்னுடைய சமாசாரம் இருக்கட்டும், உன்னுடைய புக்ககத்து வாழ்க்கையைப் பற்றி நீ எழுதியிருப்பதைப் படித்து வருத்தம் அடைந்தேன். உலகம் எவ்வளவோ முன்னேற்ற மடைந்திருக்கும்போது நாகரிகம் இவ்வளவாகப் பரவியிருக்கும் காலத்தில் உன் புக்ககத்து மனிதர்களைப் போன்றவர்களும் இருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! உன்னைச் சிறையில் போட்டு அடைத்து வைத்திருப்பதுபோல் அல்லவா வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது? அதை நினைத்தால் எனக்கு அசாத்தியக் கோபம் வருகிறதடி. ஆனால் ஒரு விஷயம் உன் கணவன் பட்டாபிராமன் உன்னைச் சினிமாவுக்கு அழைத்துப் போகாததினாலேயே அவனுக்கு உன்பேரில் அபிமானம் இல்லை என்று நினைத்து விடாதே! இது பட்டிக்காட்டுப் பெண்கள் பேசுகிற பேச்சு. புருஷர்களுக்கு எத்தனையோ சௌகரிய அசௌகரியங்கள் இருக்கும். அதையெல்லாம் கவனித்து நாம்தான் நல்ல மாதிரி நடந்து கொள்ளவேண்டும். நம்முடைய புருஷன் வேறொரு பெண்ணிடம் பேசிவிட்டால் அதனால் குடி முழுகிப் போய்விட்டது என்று நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது; நாகரிகமே தெரியாத படிப்பற்ற ஸ்திரீகள்தான் அப்படியெல்லாம் சந்தேகப்படுவார்கள்.

உன் மாமியாரைப்பற்றி நீ எழுதியிருப்பதையும் நான் முழுதும் ஒப்புக்கொண்டு விட முடியாது. எல்லாம் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்தது. பிறந்தகத்தை விட்டுப் புக்ககத்துக்குப் போனால் அப்புறம் பிறந்தகத்துப் பாசமே இருக்கக்கூடாது. மாமனார் மாமியார்தான் தாயார் தகப்பனார் என்று எண்ணி நடந்து கொள்ள வேண்டும். என்னுடைய 'ஓர்ப்படி' மாமியாரிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாது என்று நினைத்துத் தான் பிறந்த வீட்டுக்குப் புருஷனையும் அழைத்துக் கொண்டு போய் விட்டாள். ஆனால் நான் எப்படியிருக்கிறேன், பார்! என் மாமியார் என்னிடம் வைத்திருக்கும் அபிமானத்துக்கு அளவே கிடையாது. 'பெற்ற பெண் கூட இவ்வளவு பிரியமாயிருக்க மாட்டாள்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நீயும் உன் தாயார் தகப்பனாரை அடியோடு மறந்துவிட்டு மாமியாரும் மாமனாருந்தான் பெற்ற தாயும் தகப்பனும் என்று நினைத்து நடந்து கொள்ளு, அப்போது அவர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள், பார்! சூரியா காங்கிரஸுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து விட்டான். லலிதா! மிகவும் சந்தோஷமான ஒரு செய்தி. என் அகத்துக்காரருக்குச் சூரியாவை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் அன்னியோன்னிய சிநேகிதர்களாகி விட்டார்கள். ஓயாமல் காங்கிரஸைப்பற்றியும் இங்கிலீஷ் சர்க்காரைப்பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேச ஆரம்பித்து விட்டால் பேச்சின் சுவாரஸ்யத்தில் சாப்பாட்டைக் கூட மறந்து விடுகிறார்கள். சில சமயம் நான் ஒருத்தி இருப்பதைக் கூட மறந்து விடுகிறார்களடி! எப்படியிருக்கிறது வேடிக்கை!

சென்ற ஞாயிற்றுக்கிழமை எல்லாருமாக இந்த டில்லியிலுள்ள குதுப்மினார் கோட்டை, ஜந்தர் மந்தர் முதலிய இடங்களுக்குப் போய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். சூரியாவும் எங்களுடன் வந்ததுதான் மிகவும் சந்தோஷமாயிருந்தது. நாளைய இரவு நாங்கள் ஆக்ராவுக்குப் புறப்படப் போகிறோம். சூரியாவும் எங்களுடன் வருகிறான் ஆனால் என் மாமியார் வரவில்லை. குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். உலகத்தில் ஒன்பது மகா அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மகால் ஆக்ராவில்தான் இருக்கிறது. நீ சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறாய் அல்லவா? ஷாஜஹான் சக்கரவர்த்தி தன்னுடைய பட்டத்து ராணி மும்தாஜின் ஞாபகார்த்தமாகக் கட்டிய அற்புதக் கட்டிடம் தாஜ்மஹால், முக்கியமாக, அதைப் பார்த்துவிட்டு வரத்தான் நாங்கள் போகிறோம். ஆக்ராவிலிருந்து ஓர் இரவு ரயில் பிரயாணம் செய்தால் ரஜினிபூர் என்று ஒரு ஊர் இருக்கிறதாம், அது ஒரு சுதேச ராஜாவின் ஊராம். அங்கே ஒரு விஸ்தாரமான ஏரியும் ஏரியின் நடுவில் ஒரு அழகான நீராழி மண்டபமும் உண்டாம். ஏரிக்கரை ஓரத்தில் ஆயிரம் பதினாயிரக்கணக்கில் வெள்ளை வெளேர் என்ற நிறமுடைய கொக்குகள் வந்து மந்தை மந்தையாக உட்கார்ந்து விட்டு, அவ்வளவும் சேர்ந்தாற்போல் பறந்து போகுமாம். அதைப் போன்ற அழகான காட்சி உலகத்திலேயே கிடையாதாம். ஆக்ராவிலிருந்து அங்கேயும் போய் வரலாமென்று இவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சூரியா ஆக்ராவிலிருந்து திரும்பி வந்துவிட வேண்டுமென்றும் ஏதோ ஒரு கூட்டம் தனக்கு இருக்கிறதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். "கூட்டமும் ஆச்சு! மண்ணாங்கட்டியும் ஆச்சு!" என்று இவர் நேற்றைக்கு சூரியாவுடன் சண்டை பிடித்தார்.சூரியாவை நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன், லலிதா! அவனைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். சூரியா நம்மிருவருக்கும் செய்திருக்கிற உதவிக்கு நான் அவனுக்கு எவ்வளவு செய்தாலும் தகும். நல்ல சமயம் பார்த்து இவரிடம் சொல்லி அவனுக்கு ஒரு உத்தியோகம் பண்ணி வைக்கச் செய்யலாமென்று எண்ணியிருக்கிறேன். என்னுடைய மாமியாருடைய தங்கை பெண் ஒருத்திக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சூரியாவுக்குப்பண்ணிக் கொள்ளலாம் என்று மாமியார் சொல்கிறார். அந்த மாதிரி நடந்தால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். சூரியா இங்கேயே குடியும் குடித்தனமுமாய்த் தங்கிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அப்போது நீ கூடச் சில சமயம் இங்கே வந்து விட்டுப் போவாய் அல்லவா?

பம்பாயில் உன்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிய நினைவு எனக்கு வருகிறது. டில்லியிலும் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் உன்னை அழைத்துக்கொண்டு போய்க் காட்டுவது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் தெரியுமா? இதோ இவர், 'வெளியில் உலாவப் போவதற்கு நேரமாகி விட்டது' என்று அவசரப்படுத்துகிறார். ஆகையால் இந்தக் கடிதத்தை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். ஆக்ராவிலிருந்து திரும்பி வந்த பிறகு மறுபடியும் விவரமான கடிதம் எழுதுகிறேன். இப்படிக்கு, உன் பிரிய சிநேகிதி, சீதா. - குறிப்பு: நான் டில்லிக்கு வந்த அன்று ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிறு சம்பவம் நடந்தது. அதைப்பற்றி என்னமோ ஏதோ என்று எனக்கு ரொம்பவும் கவலையாயிருந்தது. ஆனால் கவலைக்குச் சிறிதும் இடம் இல்லையென்று இப்போது நிச்சயமாகிவிட்டது. என்னுடைய அசட்டுத்தனமான சந்தேகத்தைப் பற்றி மறுமுறை நாம் நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன். அதைக் கேட்டால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் - சீதா."
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
ஒன்பதாம் அத்தியாயம்

மல்லிகை மாடம்

ரயில் வண்டி ஆக்ராவை நெருங்கிக் கொண்டிருந்த போது சூரியாவுக்கும் ராகவனுக்கும் விவகாரம் முற்றி அவர்களுடைய குரல் ரயிலின் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்டது. "காங்கிரஸை வரவர மிதவாதம் பற்றிக் கொண்டு வருகிறது. மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் ஏற்பட்டதினால் என்ன மாறுதலைக் கண்டோம்? ஒன்றுமில்லை! கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் முன்போலவே அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். போலீஸ் கெடுபிடியும் முன்போலவே தான் இருக்கிறது!" என்று சொன்னான் சூரியா. "அது மட்டுமா? ரயில் முன் போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. தபால்கள் முன் போலவே டெலிவரி ஆகிக்கொண்டிருக்கின்றன. மாஜிஸ்ட்ரேட்டுகள் முன் போலவே திருடர்களை தண்டித்து வருகிறார்கள் - இப்படியெல்லாம் புகார் செய்வாய் போலிருக்கிறதே! நல்ல சோஷலிஸ்ட் நீ பின்னே என்னதான் செய்யவேண்டும் என்கிறாய்? கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் போலீஸ்காரர்கள் உள்பட எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் சட்ட திட்டங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிறாயா? ஒழித்துவிட்டால் அரசாங்கம் எப்படி நடக்கும்! அரசாங்கமே வேண்டாம் என்கிறாயா?" என்றான் ராகவன்.

"அரசாங்கமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கம் என்றால், இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். அரசாங்கந்தான் என்பது உங்களுடைய எண்ணம். இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம்முடைய தேசத்தில் அரசாங்கமே கிடையாதா?" "ஏன் கிடையாது? பேஷாக உண்டு! இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம் தேசத்தில் அங்க, வங்க, கலிங்க, குக்குட, கர்நாடக, மராட்ட முதலிய ஐம்பத்தாறு ராஜாங்கங்கள் இருந்தன; ராஜாக்களும் இருந்தார்கள். சுல்தான்களும், பாதுஷாக்களும் கூட இருந்தார்கள், அவரவர்கள் இஷ்டமே சட்டமாக அரசாட்சி நடத்தினார்கள். அத்தகைய ராஜாக்களின் ஆட்சிக்கு நாம் திரும்பிப் போகவேண்டும் என்கிறாயா? நீதான் சுதேச சமஸ்தானங்களையே ஒழித்துவிட வேண்டும் என்கிறாயே!" "ஆம்; சுதேச ராஜ்யங்களையெல்லாம் ஒழித்துவிட வேண்டியதுதான். அந்தப் பழைய ஹைதர் காலத்து ஆட்சிக்கோ பேஷ்வா காலத்து ஆட்சிக்கோ போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பழைய ஆட்சி வேண்டாம் என்றால், புதிய ஆட்சி என்பது இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். ஆட்சிதானா? உலகத்தில் வேறு தேசங்கள் இல்லையா? அந்தந்த தேசங்களில் அரசாங்கம் நடக்கவில்லையா?

"நடக்கிறது, அப்பனே நடக்கிறது; ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. இத்தாலியில் முஸோலினி ஆட்சியும் நடக்கிறது. இங்கிலாந்திலிருந்து திரும்பும்போது ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் நான் போய்விட்டு வந்தேன். கல்விக்கும் நாகரிகத்துக்கும் பெயர் போன ஐரோப்பாவில் நடக்கும் அரசாங்க முறைகளைப் பார்த்தால் ஆங்கில ஆட்சி முறை எவ்வளவு மேலானது என்று உனக்குத் தெரியும். அங்கே எல்லாம் ஜனநாயகம் என்பது மருந்துக்கும் கிடையாது. சுதந்திரம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது..." "அதைப்பற்றி நமக்கென்ன கவலை? ஹிட்லரும் முசோலினியும் எவ்வளவு பொல்லாதவர்களாயிருந்த போதிலும் அவரவர்களுடைய நாட்டுக்குள்ளேதான் இருக்கிறார்கள்? இங்கிலீஷ்காரர்களைப் போல உலகத்தையே கட்டியாள அவர்கள் ஆசைப்படவில்லையே? பிற நாடுகளையெல்லாம் தங்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளாக்கவில்லையே..." "உனக்கு எப்படித் தெரியும்? அவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் சொரூபத்தைக் காட்டுவார்கள். இங்கிலீஷ்காரர்களை விட எவ்வளவோ பொல்லாதவர்களாயிருப்பார்கள். சீனாவில் ஜப்பான் செய்கிற அநியாயத்தைப் பார்!"

"இங்கிலீஷ்காரர்களுடைய கொட்டத்தை அடக்கக்கூடிய கீழ்நாடு ஜப்பான் ஒன்றுதான். சீனாவில் ஜப்பான் அக்கிரமம் செய்வதாகச் சொல்லுகிறதெல்லாம் இங்கிலீஷ்காரர்கள் செய்யும் பிரசாரந்தானே? உண்மை நமக்கு எப்படித் தெரியும்? என்னைக் கேட்டால் இங்கிலீஷ்காரர்களின் அரசாட்சியைக் காட்டிலும் வேறு எந்த அரசாட்சியும் மேல் என்று சொல்லுவேன். இங்கிலீஷ் ஆட்சி ஒரு தேசத்தின் ஆத்மாவையே அழித்துவிடுகிறது. தேச மக்களுக்குள் பிரிவையும் பிளவையும் உண்டாக்குகிறது..." "சூரியா! நன்றாகச் சொன்னாய்? நமது தேசத்தில் ஏற்கனவேயுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் விடவா இங்கிலீஷ் ஆட்சியால் அதிகம் உண்டாகிவிட்டது?" "இங்கிலீஷ்காரர்கள் தலையிடாமலிருந்தால் நம்மிடையேயிருந்த பிளவுகளும் பிரிவுகளும் இதற்குள் தீர்ந்து போயிருக்கும்!" "சரித்திரத்தையே பொய் என்று நீ சாதிக்கப் பார்க்கிறாய்! உன்னோடு எப்படி விவாதம் செய்வது?" என்று அலுத்துக் கொண்டான் ராகவன். இந்தச் சமயத்தில், "போதும் உங்கள் பேச்சு! சண்டையை நிறுத்துங்கள்; ஆக்ரா ஸ்டேஷன் வந்துவிட்டது!" என்றாள் சீதா.

"நேபிள்ஸ் நகரத்தைப் பார்த்துவிட்டுச் செத்துப் போகவும்!" என்று மேனாட்டில் ஒரு வசனம் வழங்குகிறது."ஆக்ராவைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்கவும்!" என்று இந்தியாவில் பிறந்தவர்களுக்கு நாம் சொல்லுகிறோம். இந்திய தேசத்தின் மத்திய கால மகோந்நதத்தையும் கலை வளத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஆக்ரா நகரைப் பார்க்கவேண்டும். மனிதனுடைய உள்ளமானது கற்பனை செய்யக்கூடிய இன்பமயமான சொர்க்க பூமியும் கந்தர்வ லோகமும் எப்படியிருக்குமென்று தெரிந்து கொள்ள விரும்புவோர் ஆக்ராவை அவசியம் பார்க்கவேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரை டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றி, ஆக்ராவுக்கு உயர்வையளித்தார். அக்பரின் பேரன் ஷாஜஹான் சக்கரவர்த்தி, ஆக்ராவின் சொப்பனபுரியைப் போன்ற பற்பல பளிங்கு மாளிகைகளும் தாஜ்மகாலையும் கட்டி ஆக்ரா நகரை உலக சரித்திரத்தில் என்றும் நிலை பெறக்கூடிய அமரபுரியாக்கினார். ஆக்ராவுக்கு போகிறவர்கள் சாதாரணமாக முதலில் அந்நகரின் பழைய கோட்டையிலுள்ள அரண்மனைகளைப் பார்க்கப் போவார். பார்த்து வியந்து, "இதைக் காட்டிலும் அதிகமான அற்புதம் என்ன இருக்கபோகிறது!" என்று எண்ணிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்கச் செல்வார்கள். தாஜ்மகாலைப் பார்த்ததும் அதிசயிக்கும் சக்தியையுங்கூட இழந்து பிரமித்து நிற்பார்கள்.

அந்த முறையைப் பின்பற்றி ராகவனும் சீதாவும் சூரியாவும் முதலில் ஆக்ரா கோட்டைக்குப் போனார்கள். கோட்டைச் சுவரின் உயரத்தையும், நேற்றுதான் கட்டியது போல் புத்தம் புதியதாக விளங்கிய அதன் தோற்றத்தையும் கண்டு வியந்தார்கள். கோட்டை வாசலின் கம்பீரமான அமைப்பைப் பார்த்து அதிசயித்தார்கள். பிறகு உள்ளே பிரவேசித்து திவானி ஆம் என்னும் பொது ஜனசபா மண்டபத்தை நோக்கிச் செல்கையில் பக்கத்தில் காணப்பட்ட ரோஜா மலர்த் தோட்டத்தைச் சீதா பார்த்தாள்; உடனே அந்தப் பக்கம் ஓடினாள். சில நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "ஏன், ஸார்! அனார்க்கலி இங்கேதான் புஷ்பம் விற்றுக் கொண்டிருந்திருப்பாள்; சலீம் இங்கேதான் அவளைச் சந்தித்திருப்பான்; இல்லையா? இருவரும் எந்தச் சுரங்க வழியாக யமுனைக் கரைக்குப் போனார்களோ!" என்றாள். "அனார்க்கலியின் ஞாபகம் இன்னும் உன்னை விட வில்லையா?" என்று நகைத்தான் ராகவன். "அதெப்படி அனார்க்கலியை நான் மறக்க முடியும்? அனார்க்கலி புஷ்பம் விற்ற இடத்தைப் பார்ப்பதற்காகத்தானே நான் முக்கியமாக இங்கு வந்தேன்?" என்றாள் சீதா. "அனார்க்கலி என்றால் யார்!" என்று சூரியா கேட்டான். "அதுகூடத் தெரியாதா உனக்கு? அனார்க்கலி கதையை நீ வாசித்ததே இல்லையா?" என்றாள் சீதா. "வாசித்ததில்லை, அத்தங்கா! எனக்குக் கதையும் நாவலும் அவ்வளவாகப் பிடிக்காதே!" என்றான் சூரியா.

"நம்ம சூரியாவுக்கு நாவலும் கதைகளும் படிக்க நேரம் ஏது? காரல்மார்க்ஸைக் கட்டிக்கொண்டு அழுவதற்குத்தான் அவனுக்குப் பொழுது சரியாயிருக்குமே?" என்று எகத்தாளம் செய்தான் ராகவன். "அம்மாஞ்சு! நான் சொல்கிறேன், தெரிந்துகொள்! அனார்க்கலி என்றால் மாதுளை மொக்கு என்று அர்த்தம். இளவரசன் சலீம் அவளுக்குக் கொடுத்த பெயர் அது!..." "சலீம் என்பது யார்?" "அது கூடவா தெரியாது? ஜஹாங்கீர் சிம்மாசனம் ஏறுவதற்கு முன்னால் அவன் பெயர் சலீம்..." "சீதாவை என்னமோ என்று நினைக்காதே, சூரியா! மொகலாயர் சரித்திரத்தில் அவள் பெரிய எக்ஸ்பர்ட்! ஜதுநாத் சர்க்காருக்கும் வின்சென்ட் ஸ்மித்துக்கும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சீதாவினிடம் தான் அவர்கள் கேட்க வருவது வழக்கம்." "இவர் இப்படித்தான் பரிகாசம் பண்ணுவார், அம்மாஞ்சி! நான் சொல்கிறதைக் கேட்டுக் கொள். ஜஹாங்கீர் சிறுபிள்ளையா இருக்கும்போது அவனை வளர்த்த தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள், அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துவிட்டு சலீம் அவளுக்கு 'மாதுளை மொக்கு' என்று பெயரிட்டு அழைத்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்திருந்தான்..." இப்படிக் கதை சொல்லிக் கொண்டே அவர்கள் திவானிகாஸ் என்னும் அழகிய பளிங்குக்கல் சபா மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தின் அழகிய தூண்களையும் மேல் விதானத்தையும் விதவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் கண்டு அதிசயித்தார்கள்.

பிறகு அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் சென்றார்கள். அங்கே ஷாஜஹானின் புதல்விகள் ரோஷனாராவும் ஜஹானாராவும் வசித்த இடங்களைப் பார்த்தார்கள்; கண்ணாடி மகாலைப் பார்த்தார்கள். பிறகு அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் ஜலக்ரீடை செய்வதற்காக அமைந்த பளிங்குக்கல் குளங்களைப் பார்த்தார்கள். அந்த நாளில் ராணிகளின் தூபுரங்களோடும் சிலம்புகளோடும் போட்டி இட்டுக்கொண்டு சலசலவென்ற சத்தத்துடன் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருந்த பளிங்குக்கல் ஓடைகளைப் பார்த்தார்கள். "அடாடா? இந்த அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகளும் ராஜகுமாரிகளும் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந் திருக்கும்?" என்றாள் சீதா. "எப்படியிருந்திருக்கும்? இங்கே வசித்தவர்களுக்கு நரகமாக இருந்திருக்கும்; சிறைச்சாலையாக இருந் திருக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்குத் தான் வசிக்கும் கூண்டைப் பார்த்தால் என்ன தோன்றும்? தங்கத்தினால் செய்து ரத்தினங்கள் இழைத்த கூண்டாயிருந்தாலும், கிளிக்கு அதன் கூண்டு சிறைச்சாலை தானே?" என்றான் சூரியா. "பலே சூரியா! அத்தங்காளுக்குச் சரியான அம்மாஞ்சி நீதான்!" என்றான் ராகவன். "நீங்கள் இரண்டு பேருமாய்ச் சேர்ந்துகொண்டு எனக்கு அசட்டுப் பட்டம் கட்டப் பார்க்கிறீர்கள். இந்த மாதிரி சலவைக்கல் அரண்மனையைச் சிறைச்சாலை என்று சொன்னால் அது உண்மை யாகிவிடுமா? இந்த மாதிரி ஒரு சிறைச்சாலை கட்டி அதில் இருக்கச் சொன்னால் யார்தான் இருக்கமாட்டேன் என்பார்கள்? என்னை இருக்கும்படி சொன்னால் இருந்து விடுவேன்!" என்றாள் சீதா.

"சீதா! இந்த அரண்மனைகளைப் பார்த்து அவ்வளவு மயங்கிவிடாதே! இவற்றைக் கட்டிய பாதுஷாக்களும் ராஜாக்களும் இருந்த காலத்தில் இந்த நாட்டில் எந்த ஸ்திரீயும் பத்திரமாயிருக்க முடியவில்லை. அரசனுடைய கண்பார்வைக்கு எந்தப் பெண்ணாவது ஆளாகிவிட்டால், ஒன்று அவள் உயிரை இழக்க வேண்டும்; அல்லது கற்பை இழக்க வேண்டும் என்ற நிலைமையாயிருந்தது. ஏதோ கடவுள் அருளால் இங்கிலீஷ் அரசாங்கம் இந்திய தேசத்திற்கு வந்தது" என்றான் ராகவன். "அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இங்கிலீஷ் ஆட்சி வந்ததினால் என்ன ஆகிவிட்டது? இன்றைக்கும் இங்கிலீஷ் மேலதிகாரத்திற்கு உட்பட்ட சுதேச சமஸ்தானங்களில் மகாராஜாக்கள் என்னவெல்லாம் அக்கிரமம் பண்ணுகிறார்கள்." "உங்கள் சண்டையை மறுபடியும் ஆரம்பித்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லுவது ஒன்றும் சரியில்லை. நானும் கொஞ்சம் சரித்திரம் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். சிவாஜி மகாராஜாவின் முன்னால் முஸ்லிம் ஜாகீர்தாரின் பெண்ணைக் கொண்டுபோய் நிறுத்தியதும் என்ன சொன்னார்? 'அம்மணி! என்னுடைய தாயார் உன்னைப்போல் அழகாயிருந்தால் நானும் எத்தனையோ அழகாயிருந்திருப்பேனே?' என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணைச் சகல மரியாதைகளுடன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிடவில்லையா? இந்த அரண்மனையைக் கட்டிய ஷாஜஹானையே பாருங்கள். மும்தாஜ் பீகத்தைக் கலியாணம் செய்துகொண்ட பிறகு இன்னொரு ஸ்திரீயை அவன் கண்ணெடுத்துப் பார்த்தானா? மும்தாஜ் செத்த பிறகு கூட அவளை ஷாஜஹான் மறக்கவில்லையே? அவளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து தாஜ்மகாலைக் கட்டினான்? அதோ பாருங்கள்!" என்றாள் சீதா.

அப்போது அவர்கள், மல்லிகை மாடம் என்று பெயர் பெற்ற அரண்மனைப் பகுதியின் மேல் தாழ்வாரத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் யமுனை நதிக்கு அக்கரையில் தாஜ்மகாலின் அற்புதத் தோற்றம் காணப்படும். மூன்று பேருமே சிறிது நேரம் வரையில் அந்தக் காட்சிக்குத் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களாய்ப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். பிறகு சீதா, "நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறீர்களே? ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா? எவ்வளவு சிரமம் எடுத்து, எவ்வளவு பிரயத்தனம் பண்ணி, எவ்வளவு செலவு செய்து, தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும்? மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை, எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும்? தாஜ்மகாலைக் கட்டியது மட்டுமா? கட்டிய பிறகும் ஆயுள் முடியும் வரையில் தினம் தினம் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்து கடைசியில் செத்துப் போனானாம். அவன் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தது இந்த மல்லிகை மாடத்திலிருந்து தான் போலிருக்கிறது!" "ஆமாம், சீதா! உன்னுடைய ஊகம் உண்மைதான். இந்த இடத்தில் இருந்தபடியேதான் ஷாஜஹான் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே செத்துப் போனான்!" என்றான் ராகவன். "ஏன் தெரியுமா, அத்தங்கா! நான் படித்த சரித்திரத்தைச் சொல்லுகிறேன். ஷாஜஹான் அரசாங்கப் பொக்கிஷத்தை இப்படியெல்லாம் வீண் விரயம் செய்தது, அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லையாம். தகப்பனாரைச் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையிலே அடைத்து வைத்து, 'நீங்கள் உங்களுடைய அருமை மனைவியின் ஞாபகமாகக் கட்டிய கட்டிடத்தைச் சதா சர்வ காலமும் பார்த்துக் கொண்டே இருங்கள்!" என்று சொல்லி விட்டானாம். ஷாஜஹான் இங்கேயே இருந்து தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இறந்தானாம்!" என்றான் சூரியா.

"ஷாஜஹானுக்குச் சரியான தண்டனைதான். நான் ஔரங்கசீப்பாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன்!" என்றான் ராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! இப்பேர்ப்பட்ட அற்புதமான காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி பேசுகிறீர்களே! உங்களுக்கெல்லாம் கண் எங்கே போயிற்று?" என்றாள் சீதா. உண்மையில் அந்தச் சமயம் ராகவன், சூரியா இருவருடைய கண்களும் தூரத்தில் தெரிந்த தாஜ்மகாலையோ அல்லது பக்கத்திலே இருந்த அற்புதமான பளிங்குக்கல் சித்திரங்களையோ பார்க்கவில்லை. அந்த மல்லிகை மாடத்தின் தாழ்வாரத்தின் வழியாக எதிர்ப்புறமிருந்து வந்து கொண்டிருந்தவர்களின் மீது அவர்களுடைய பார்வை போயிருந்தது. மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள், இருவர் ஸ்திரீகள்; ஒருவர் ஆடவர். கராச்சி காங்கிரஸின் போது விமான கூடத்தில் ராகவன் பார்த்த பெண்கள்தான் அவர்கள் இருவரும். ஒருத்தி தாரிணி; இன்னொருத்தி அவளுடைய சிநேகிதி. ராகவன் செயலற்று நின்றான், தாரிணியின் முகத்திலிருந்து அவனுடைய கண்கள் அப்பால் இப்பால் நகரவில்லை. வேறு யாரையும் எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அவனுடைய உள்ளம் மறந்து விட்டது. எதிரில் தாரிணி வருகிறாள் என்கிற ஒரு நினைவுதான் அவனுடைய மனதில் நிலை பெற்றிருந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பத்தாம் அத்தியாயம்

பகற் கனவு

ஒரு நிமிஷ நேரம் இந்தப் பூமண்டலம் மட்டுமின்றி ஈரேழு பதினாலு உலகங்களும் ஸ்தம்பித்து நின்றன. சப்தமயமான பிரபஞ்சத்தில் மிக மெல்லிய இலை அசையும் சத்தம் கூடக் கேளாத நிசப்தம் குடிகொண்டிருந்தது. வாயுபகவானும் தன்னுடைய இயற்கையான சலனத்தை மறந்து நின்றுவிட்டதாகத் தோன்றியது. பிறகு எங்கேயோ அதலபாதாளத்திலிருந்து பேசுவது போலச் சௌந்தரராகவனுடைய குரல் கேட்டது. "நான் காண்பது உண்மையா? அல்லது கனவு காண்கிறேனோ?" என்றான். "தாஜ்மகாலைச் சொல்கிறீர்களா? ஆம்; அதைக் 'காதல் கனவு' என்றும் 'பளிங்குக்கல் சொப்பனம்' என்றும் கவிகள் வர்ணித்திருக்கிறார்கள். ஆனாலும் இங்கு நின்று பார்க்கும் போது தாஜ்மகால் என்பது வெறும் கனவல்லவென்றும் நிஜக் கட்டிடந்தான் என்றும் தோன்றுகிறது!" இந்தப் பதிலைத் தாரிணி கூறினாள். இடையில் தாரிணியின் தோழி நிருபமா தலையிட்டு, "இவர் மிஸ்டர் ராகவன் அல்லவா? என்ன அதிசயமான சந்திப்பு?" என்றாள். "ஆம்; அந்தத் துரதிர்ஷ்டசாலி நான் தான்!" என்றான் ராகவன் நிருபமாவைப் பார்த்து. "ஆகா! இவ்வளவு அடக்கம் உங்களுக்கு எப்போது வந்தது? உங்கள் பின்னால் நிற்கும் பெண் யார்?" என்று நிருபமா கேட்கவும் ராகவனுடைய முகம் கொஞ்சம் சுருங்கியது. "அவரிடம் அதைக் கேட்பானேன்? உன்னால் ஊகிக்க முடியவில்லையா, நிருபமா? அவருடைய அருமை மனைவியாகத் தான் இருக்க வேண்டும்!" என்று தாரிணி கூறினாள். "இது உண்மைதானா?" என்று நிருபமா பிடிவாதமாகக் கேட்டாள். "உண்மைதான்!" என்று ராகவன் மென்று விழுங்கினான்.

"ஹா ஹா! எவ்வளவு அழகான பெண்! இப்படிப்பட்டவளைக் கலியாணம் செய்து கொண்டும் உம்மை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்கிறீரே! நல்ல வேடிக்கை இது" என்று கூறி நகைத்துவிட்டு, "அதோ பின்னால் வருகிற இளைஞர் யார்?" என்று கேட்டாள் நிருபமா. "என்னுடைய மனைவியின் பந்து" என்று ராகவன் முணுமுணுத்தான். "எனக்குக் கூடத் தெரிந்த முகமாய்த் தோன்றுகிறது. சமீபத்தில் எங்கேயோ பார்த்திருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இந்தப் பையனை நீ எப்படிப் பார்த்திருக்க முடியும்? வேறு யாரையோ பார்த்துவிட்டுத் தவறாகச் சொல்கிறாய்!" என்றான் சௌந்தரராகவன். இதற்குள் சூரியா கொஞ்சம் முன்னால் வந்து, "இவர் சொல்வது பிசகில்லை, ஹரிபுரா காங்கிரஸில் இவரை நான் பார்த்தேன்" என்று சொல்லிவிட்டு, தாரிணியை நோக்கி, "நீங்கள் சோஷலிஸ்ட் கட்சிக் கூட்டத்துக்கு வந்திருந்தீர்கள் அல்லவா?" என்றான். ஹரிபுரா காங்கிரஸ் என்றதும் எட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்த கராச்சி காங்கிரஸ் ராகவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. கராச்சி விமானக்கூடமும் அங்கே முதன் முதலில் தான் தாரிணியைச் சந்தித்த சந்தர்ப்பமும் நினைவுக்கு வந்தன. இதற்கிடையில் தாரிணியின் மதுரமான குரல், "ஆம்; சோஷலிஸ்ட் கூட்டத்துக்கு நான் வந்திருந்தேன். அங்கே நீங்கள் பிரமாதமான பிரசங்கம் ஒன்று செய்தீர்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!" என்று கூறியது கனவிலே கேட்பது போல் ராகவன் காதில் விழுந்தது.

சற்று அவன் நிதானித்துத் தாரிணி சூரியாவைப் பற்றித்தான் அவ்விதம் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டான். தன்னுடைய எழுத்துத் திறமையைக் குறித்துத் தாரிணி ஒரு சமயம் பாராட்டிப் பேசியது அவனுக்கு நினைவு வந்தது."ஓகோ! சூரியா அவ்வளவு பெரிய அதிகப்பிரசங்கி என்று எனக்குத் தெரியாதே?" என்றான்."அதிகப்பிரசங்கம் ஒன்றும் இவர் செய்யவில்லை.சுருக்கமாகத் தான் பேசினார்; பேசிய வரையில் அற்புதமாய்ப் பேசினார்" என்றாள் தாரிணி."ஏழை பணக்காரன் எல்லாம் ஒன்றாகி விடவேண்டும்; சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்; சுதேச ராஜாக்களை ஒழித்து விட வேண்டும் என்றெல்லாம் வெளுத்துக் கட்டினானாக்கும்!இப்படியெல்லாம் தீவிரமாகப் பேசுவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை.யார் வேணுமானாலும் இப்படி தடபுடலாய்ப் பேசலாம்!" என்றார் ராகவன். நிருபமா மறுபடியும் குறுக்கிட்டு, "தயவு செய்து கொஞ்சம் உங்கள் விவாதத்தை நிறுத்தி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுங்கள். என்னுடைய கணவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். இவர்தான் மிஸ்டர் வேணி பிரசாத் பி.ஏ.,எல்.எல்.பி.; இந்த ஊரில் பிரபல வக்கீல்; ஆனால் பிராக்டிஸ் மட்டும் கிடையாது! இப்போதைக்கு இவருடைய மனைவியின் சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது தான் இவருக்கு முக்கிய வேலை. தாரிணி எங்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். நீங்களும் வந்து தங்கினால் இவருக்கு மிக்க சந்தோஷமாயிருக்கும். எங்களால் முடிந்த சௌகரியம் செய்து கொடுப்போம். ஆக்ராவில் எத்தனை நாள் தங்கியிருப்பதாக உங்களுடைய உத்தேசம்?" என்று சௌந்தரராகவனைப் பார்த்து நிருபமா கேட்டாள்.

"இன்றைக்கும் நாளைக்கும்தான்; தங்களுடைய அன்பார்ந்த அழைப்புக்காக வந்தனம். ஆனால் இன்னொரு சமயம் வருகிறோம். பொய் சொல்லுகிறவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க எனக்கு இஷ்டமில்லை." "அது என்ன? யார் பொய் சொன்னது?" என்று நிருபமா கேட்டாள். "உங்களுடைய தோழிதான், நீங்களே கேளுங்கள்; இவள் இறந்து போய்விட்டதாகக் கடிதம் எழுதியது உண்டா இல்லையா என்று?" தாரிணி புன்னகை புரிந்து, "நான் இறந்து போய் விட்டதாக நானே எப்படி எழுதியிருக்க முடியும்?" என்றாள். "நீ எழுதாவிட்டால் வேறு யாரையோ கொண்டு எழுதச் சொல்லியிருக்கிறாய்!" "நான் இறந்து போனது என்னமோ உண்மையான செய்திதான்!" "அப்படியானால் இப்போது இங்கே எப்படி இருக்கிறாய்?" "இறந்து போனவள் மீண்டும் பிழைத்தெழுந்தேன்." "எதற்காக?" என்று ராகவன் கடுமையாகக் கேட்டான். "இறந்து போன பிறகு தங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைப் பற்றி நினைவு வந்தது. அதை நினைத்து நினைத்து நீங்கள் இராத் தூக்கம் இல்லாமல் தவிப்பீர்களே என்று எண்ணி மறுபடியும் பிழைத்து எழுந்து வந்தேன்."

"பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும். நீ ஒரே அண்டப் புளுகாய்ப் புளுகுகிறாய். அன்றைக்கு டில்லி ஸ்டேஷனில் பார்த்த போது, 'நான் தாரிணி இல்லை' என்று சொன்னாயே? அந்தப் பொய் எதற்காகச் சொன்னாய்?" "அப்படி நான் சொல்லவில்லையே? 'பழைய தாரிணி நான் இல்லை'யென்று தான் சொன்னேன். மேலே சொல்வதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது." "ஆகா! முன்னைப் போலவே எதற்கும் காரணம் சொல்லிச் சமாளித்துக் கொள்கிறாய்" என்றான் ராகவன். "நான் எல்லா விஷயங்களிலும் முன்னைப் போலவேதான் மாறாமல் இருக்கிறேன். மற்றவர்களும் அப்படியிருந்தால் இந்த மாதிரி பேச்சுக்கே இடமிராது போனால் போகட்டும். உங்களை மறுபடியும் எங்கே சந்திப்பது? பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா!" "அதற்கு அவசரம் ஒன்றுமில்லை; மெதுவாய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் உங்களை மறுபடியும் நான் சந்திக்க வேண்டும், தாஜ்மகால் பார்த்தாகிவிட்டதா?" "சாயங்காலம் மஞ்சள் வெளியில் பார்த்துவிட்டு இரவு பூரண சந்திரனுடைய நிலவிலும் பார்க்கலாம் என்று உத்தேசம்." "நாங்களும் அந்த நேரத்திற்குத்தான் வருவதாக இருக்கிறோம். பாக்கி விஷயம் அங்கே பேசிக் கொள்ளலாம்." "இதற்குள் இரண்டு கோஷ்டியும் பிரிந்து வெவ்வேறு வழி போக வேண்டிய இடம் வந்தது; விடை பெற்றுக் கொண்டு பிரிந்தார்கள்.

தாரிணி முதலியவர்கள் போனதும் இத்தனை நேரமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் மௌனமாயிருந்த சீதா, "ஏன்னா! இந்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "உன் அம்மாஞ்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்!" என்றான் ராகவன். "அம்மாஞ்சியைக் கேட்பானேன்? நீங்கள்தான் சொல்லுங்களேன்! உங்களுக்குத் தெரியாதா!" "பேஷாகத் தெரியும்! உன்னைப்போல் அவளும் ஒரு ஸ்திரீ தான்!" "ஸ்திரீதான் என்று எனக்கும் தெரிந்தது. ஆனால் உருவத்திலே தான் ஸ்திரீயே தவிர, நடவடிக்கை எல்லாம் ஆண்பிள்ளை மாதிரி! புருஷனாய்ப் பிறந்திருக்க வேண்டியவள்; தவறிப் பெண்ணாய்ப் பிறந்து விட்டாள் போலிருக்கிறது." "நீ சொல்வது ரொம்ப சரி; ஆகவே அந்தப் பெண்ணாய்ப் பிறந்த புருஷனோடு நான் பேசுவதினால் உனக்கு மனக்கஷ்டம் ஏற்படாதல்லவா?" "மனக் கஷ்டமா? எனக்கு எதற்காக மனக் கஷ்டம்? அசல் பெண்ணாய்ப் பிறந்தவளோடு நீங்கள் பேசினால்தான் எனக்கு என்ன வந்தது? என்னைச் சுத்தப் பட்டிக்காடு என்று நினைத்துக் கொண்டீர்களா? நானும் பம்பாய் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள்தான்." "அந்த மகத்தான விஷயத்தை மறந்து போய்விட்டேன் தயவுசெய்து மன்னிக்க வேணும். "

"ஆனால் என்னிடம் எதையும் மறைத்துப் பேசினால் மட்டும் எனக்குப் பிடிக்காது. டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் ஓடிப் போய் பேசினவள் இவள்தான்? அதை எதற்காக மறைக்க வேண்டும்?" "பார்த்தாயா? சூரியா, உன் அத்தங்காளின் சமர்த்தை? இவளிடம் பயந்துகொண்டு நான் எதையோ மறைத்தேனாம்! நம்ம பக்கத்துப் பெண்களிடம் இதுதான் ஒரு பெரும் சங்கடம் வெறும் சந்தேகப் பிராணிகள்?" "நான் ஒன்றும் சந்தேகப் பிராணி இல்லை. 'ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துப் பேசியவள் யார்?' என்று நான் கேட்டதற்குத் 'தெரியாது' என்று ஏன் மெழுகி மறைத்தீர்கள்?" "மெழுகவும் இல்லை; மறைக்கவும் இல்லை தெரிந்தவளாக்கும் என்று போய்ப் பேசினேன். அவள் இல்லை என்று சாதித்தாள்; அப்படியிருக்க, 'யார்? யார்?' என்று நீ துளைத்தால் நான் என்ன பதில் சொல்வது? இப்போது அவளும் நானும் பேசிக் கொண்டிருந்தோமே? அதிலிருந்து உனக்கு விஷயம் தெரியவில்லையா?" "ஏதோ இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தீர்கள்! என்ன பேசினீர்கள் என்று நான் கண்டேனா? அவ்வளவு இங்கிலீஷ் எனக்குத் தெரியாது." "தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு."

"இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்; அன்பாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாது." இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்னால் சூரியா வந்து கொண்டிருந்தான். பாரதியாரின் பாடலில், "தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமா?" என்ற வரிகள் அவனுடைய நினைவுக்கு வந்தன. அடடா! இவர்களுடைய இன்பமயமான இல்வாழ்க்கையில் இந்த ஒரு துளி விஷம் கலந்து விட்டதாகவல்லவா காணப்படுகிறது? என்று மனதிற்குள் பச்சாதாபப்பட்டான். "அத்தங்கா! நீ அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னது கொஞ்சமும் சரியல்ல; உத்தமமான தேச சேவகி அவள். ஹரிபுரா காங்கிரஸில் அவள் ஓடி ஓடித் தொண்டு செய்ததைப் பார்த்திருந்தாயானால் அவளுடைய குண மேன்மை உனக்குத் தெரிந்திருக்கும். அவள் 'பானி சாஹியே;' (தண்ணீர் வேண்டுமா?) என்று கேட்கும் வார்த்தையின் இனிமையினாலேயே தாகம் தணிந்துவிடும். அவளைப் பற்றி நீ ஒன்றும் தவறாக எண்ணிக் கொள்ளாதே!" என்று ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தான் சூரியா. "நீ பெரிய அதிகப்பிரசங்கி என்று தாரிணி சொன்னது சரிதான்? ஒரே வர்ணிப்பாய் வர்ணிக்கிறாயே!" என்றான் ராகவன். அதற்குப் பிறகு ஆக்ரா கோட்டையில் பாக்கியிருந்த கட்டிடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். ஆனால் முன்னைப் போல் அவ்வளவு உற்சாகம் யாருக்கும் இல்லை. "நடந்து நடந்து எனக்குக் காலை வலிக்கிறது; ஓட்டலுக்குப் போகலாமா?" என்றாள் சீதா. "ஆமாம்; பளிங்குக் கல்லாலேயே எல்லாக் கட்டிடங்களும் கட்டியிருப்பதால் ஒன்றைப் போலவே இன்னொன்று இருக்கிறது. ஒரு வித்தியாசமும் இல்லை; திரும்பிப் போக வேண்டியதுதான். சாயங்காலம் தாஜ்மகால் வேறே பார்க்க வேண்டும் அல்லவா?" என்றான் ராகவன். "தாஜ்மகாலைப் பற்றியும் இப்படித்தான் சொல்வீர்களோ, என்னமோ? அதுவும் பளிங்குக் கல்லால் கட்டியதுதானே?" என்று சொன்னான் சூரியா.

"ஆஹா! அது வேறு விஷயம்; தாஜ்மகால் கட்டிடமே இல்லை. அது உயிருள்ள தெய்வீக சிற்ப வடிவம்; இந்தியாவில் மொகலாயர் காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஜீவ பிம்பம்; ரதியும் மன்மதனும் பவனி வரும் வெண்மலர் விமானம்; சந்திர கிரணங்களையும் மந்தமாருதத்தையும் வானவில்லின் வர்ணங்களையும் காதல் இன்பத்தையும் குழைத்து எழுதிய உயிர்ச் சித்திரம்; ஒரு தடவை பார்த்தவர்களின் உள்ளத்திலிருந்து என்றென்றும் அகலாத சௌந்தர்ய மோகினி. தாஜ்மகாலை பார்க்காத ஜன்மம் மனித ஜன்மமேயல்ல!" என்று ராகவன் சொல்மாரி பொழிந்தான். மூவரும் ஆக்ராவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றார்கள். சாப்பிட்டுவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள். சீதா பட்டுப் பூச்சியின் பலவர்ண இறகுகள் போல் பிரகாசித்த உடைகள் அணிந்திருந்தாள். சிலந்திப் பூச்சியின் கூண்டைப் போல் தோன்றிய மெல்லிய சல்லாத் துணியைத் தலை பாதி மறையும்படியாகப் போர்த்திக் கொண்டிருந்தாள். விலை மதிக்க முடியாத முத்து மாலைகளையும் ரத்தின ஹாரங்களையும் அணிந்திருந்தாள். பாதங்களையும் விரல் நகங்களையும் செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டு இருந்தாள்.

வெண்ணிலாவின் நிறத்தையொத்த பளிங்குக் கல்லினால் கட்டி, பலவர்ண இரத்தினக் கற்களினால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அரண்மனையின் மண்டபங்களிலும் மாடங்களிலும் அங்குமிங்கும் நடமாடினாள். ஆங்காங்கு, பளிங்குக் கல் வாய்க்கால்களில் சலசலவென்று ஓடிய நீரோடையைப் பார்த்து மகிழ்ந்தாள். சிற்சில இடங்களில் நீரோடையில் சிறு குளங்கள் அமைந்திருந்தன. அந்தக் குளங்களில் அன்று மலர்ந்த குமுதங்களும் தாமரைகளும் செங்கழுநீர்ப் பூக்களும் கொடிகளுடனும் இலைகளுடனும் காணப்பட்டன. இன்னும் சில குளங்களில் அன்று பூத்த ரோஜா மலர்களைக் கொட்டியிருந்தார்கள். புஷ்பங்களின் வாசனையோடு, ராணி நூர்ஜஹான் கண்டுபிடித்து உலகத்துக்கு அளித்த ரோஜா அத்தரின் வாசனையும் அகிற்புகை வாசனையும் கலந்து பரிமளித்தன. குளங்களின் ஓரமாக நின்று, மலர்ந்து மிதந்த புஷ்பங்களைச் சில சமயம் சீதா உற்றுப் பார்த்தாள். சில சமயம் ஸ்படிகம் போன்ற தண்ணீரில் தன்னுடைய பொன் மேனியின் அழகைக் கண்ட ஆனந்தத்தினால் அவளுடைய தேகமெல்லாம் சிலிர்த்தது. திடீரென்று அவளைச் சுற்றிப் பல பணிப் பெண்கள் நின்றார்கள். எங்கிருந்து வந்தார்களோ தெரியாது எல்லாரும் அழகிகள்தான். படமெடுத்து ஆடி அவ்வப்போது சீரும் நாக சர்ப்பத்தின் அழகை அவர்களுடைய அழகு ஒத்திருந்தது.

நாகப் பாம்பு தன் நீண்ட நாவை நீட்டுவது போல் அந்தப் பணிப் பெண்கள் எல்லாரும் சீதாவை நோக்கித் தங்கள் ஆட்காட்டி விரலைச் சுட்டிக் காட்டினார்கள், நெருப்புத் தழலைப் போல் அவர்களுடைய கண்கள் பிரகாசித்தன. "இவள்தான்!" இவள்தான்!" என்று சொல்லி ஏககாலத்தில் எல்லாரும் சீறினார்கள். "வா! எங்களுடன் வா!" என்று சீதாவை அழைத்தார்கள். அவர்களுடைய அழைப்பை மறுக்க முடியாமல் சீதா அவர்களுடன் சென்றாள். விசாலமான பளிங்குக் கல் மண்டபம் ஒன்றில், தோகை விரித்த மயிலைப் போல் பின்புறச் சாய்வு அமைந்த ரத்தின சகிதமான சிம்மாசனத்தில் மொகலாய மன்னனின் பட்ட மகிஷி அமர்ந்திருந்தாள். "ஆஹா! அந்த மாதரசியின் கர்வந்தான் என்ன? சீதாவை, "வா!" என்று கூட அழைக்கவில்லை; உட்காரவும் சொல்லவில்லை. "இந்த அசட்டுப் பைத்தியக்காரி யார்? எதற்காக இவளை இவ்விடம் கொண்டு வந்தீர்கள்?" என்று பணிப் பெண்களைப் பார்த்துச் சக்ரவர்த்தினி கேட்டாள். "மஹாராணி! இவள்தான் நம் இளவரசரின் காதலைக் கவர்ந்த காதகி? ராஜபுத்திர மங்கை சீதா!" என்று ஒரு பணிப்பெண் கூறினாள். "ஓகோ! அப்படியா? இவளுக்குத் தக்க தண்டனை விதிப்போம். இன்று நள்ளிரவு வரையில் இவள் உயிரோடு இருக்கட்டும்!" என்று அரசியின் ஆக்ஞை பிறந்தது.

அந்தி மாலையில் அரண்மனை உத்தியான வனத்தில் சீதா அங்குமிங்கும் அலைந்தாள். ரோஜா மலர்களையும் மல்லிகைப் பூக்களையும் பறித்து முகர்ந்தாள். அவளுடைய மனதில் கவலை குடிகொண்டிருந்த போதிலும் இளவரசர் வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது. இளவரசருடைய முகத்தோற்றத்தை எண்ணிப் பார்த்தபோது மொகலாய உடை தரித்த சௌந்தரராகவனுடைய வடிவமும் முகமும் சீதாவின் அகக்கண் முன்னால் வந்தன. மாலை மயங்கி இருளான போது அவளுடைய உள்ளத்தில் திகில் தோன்றியது. அதிதுரிதமாக நள்ளிரவு நெருங்கி வந்தது. அரண்மனையை ஜோதிமயமாகச் செய்து கொண்டிருந்த தீபங்கள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. பிறகு சீதா இருளும் தானும் தனிமையுமாக ஆனாள். சலவைக்கல் சுவரில் அமைந்திருந்த சித்திரப் பலகணி வழியாகச் சந்திரனுடைய கிரணம் ஒன்று உள்ளே புகுந்து சீதாவின் கன்னத்தைத் தொட்டுத் தன்னுடைய மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது. திடீரென்று அறைக்கு வெளியே பேச்சுக் குரல் கேட்டது. "அடியே! தூங்கிவிட்டாள் போலிருக்கிறதடி!" "இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே தூக்கமாய்த் தூங்க வேண்டியவள் தானே!" "எனக்கு என்னமோ இவளை ஒரேயடியாக் கொன்று விடுவதில் விருப்பமில்லை. அனார்க்கலியைச் சிறையில் அடைத்ததுபோல் இவளையும் அடைத்துவிட்டால், தானே பைத்தியம் பிடித்துப் புலம்பிச் சாகிறாள்!" "எல்லாவற்றுக்கும் மகாராணியைக் கேட்டுக் கொண்டு வருவோம், வாருங்கள்!"

பேச்சுக் குரல்கள் நின்று மௌனம் குடிகொண்டது. உடல் நடுக்கத்துடன் சீதா எழுந்தாள்; இனி அங்கே ஒரு கணம் தாமதிப்பது ஆபத்தாகிவிடும். உடனே கிளம்பி எப்படியாவது இந்த அந்தப்புரச் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து ஓடிப் போக வேண்டும். இளவரசர் இங்கு வந்து தன்னைத் தப்புவிப்பார் என்று நினைப்பது மதியீனம். தான் இங்கு இருப்பதே அவருக்குத் தெரியாதே. பின் எப்படிக் காப்பாற்றுவார்?' 'டில்லியிலேயே இருக்கவும், ஆக்ராவுக்கு வரவேண்டாம்' என்று இளவரசர் சொன்னதைக் கேட்காமல் அல்லவா வந்து விட்டோம். இருள் சூழ்ந்த அந்தப்புரத்தின் தாழ்வாரங்கள் வழியாகச் சீதா தட்டுத்தடுமாறி நடந்து சென்றாள். கையினால் சுவர்களைத் தடவிக் கதவு உள்ள இடத்தைத் தேடிக் கொண்டே சென்றாள். ஆங்காங்குப் பலகணிகளின் வழியாக வந்த நிலா வெளிச்சம் அவளுக்கு ஒருவாறு வழிகாட்டிக் கொண்டிருந்தது. பல இடங்களில் சுவரைக் கதவு என்று எண்ணி ஏமாந்தாள். கதவு தட்டுப்பட்டாலும் அதைத் திறக்க முடியாமல் ஏமாற்றமடைந்தாள். ஒரு யுகம் போலத் தோன்றிய ஒரு நாழிகை நேரம் இப்படி அலைந்து திரிந்த பிறகு கடைசியில் ஒரு கதவு அவள் கையை வைத்ததும் திறந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, வாசற் படியைத் தாண்டினாள். வெளியே வந்ததும் தன் எதிரே பிரம்மாண்டமான கோர ராட்சஸ உருவம் ஒன்று நிற்பதைக் கண்டு திகைத்து நின்றாள். அந்த உருவம் யார் என்பதை அவள் அறிவாள். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி அவன். அதோடு செவிட்டு ஊமை; காது கேளாது, பேசவும் முடியாது. ஆனால் அவன் கண் பார்வை தீட்சண்யமானது.

தன்னுடைய கடமை என்னவென்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப்புரத்திலிருந்து வெளியே போகிறவர்களைத் தடுப்பது அவனுடைய முதற்கடமை. மீறிப் போக யத்தனிப்பவர்களைக் கொஞ்சமும் தாட்சண்யம் பாராமல் கண்ட துண்டமாக வெட்டுவதற்காக அவன் கத்தி வைத்திருந்தான். கத்திக்கு இரையாகாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியும் வைத்திருந்தான். இவனைப் போல் பல அலிகள் மொகலாய பாதுஷாவின் அந்தப்புரத்தைப் பாதுகாத்து வந்தார்கள். இவற்றையெல்லாம் நன்கறிந்திருந்த சீதா நடுநடுங்கினாள். அந்த அலியோ ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை உற்றுப் பார்த்து விழித்தான். அவ்வளவுதான்; சீதா பீதியினால் தன்னை மறந்து விட்டாள். "சூரியா! சூரியா!" என்று கதறினாள். தன்னைக் காப்பாற்றுவதற்காகத் தன் அம்மாஞ்சி சூரியா அந்தக் கோட்டைக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒளிந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேதான், "சூரியா!" என்று அவள் கதறினாள்.

சீதாவின் கதறலுக்கு ஒரு பதில் குரல் வந்தது. "இங்கே சூரியா இல்லை; நான் இருக்கிறேன்; வருகிறேன்!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. அது யாருடைய குரல் என்று சீதா அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் வெண்ணிலவு பிரகாசித்த நிலா முற்றத்துக்கு அப்பால் இருள் சூழ்ந்திருந்த மண்டபத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. கொஞ்ச தூரம் வந்ததும் அது யாருடைய உருவம் என்பது சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. அன்றொரு நாள் தன் தாயார் நோயாய்ப் படுத்திருந்தபோது அவளைப் பார்க்க வந்து பணமும் நகையும் கொடுத்து விட்டுப் போன ஸ்திரீதான். புதுடில்லிச் சாலை முனையில் கையில் கத்தியுடன் மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாளே, அவள்தான்! அந்த ஸ்திரீ இப்போதும் அக்கத்தியைக் கையில் பிடித்திருந்தாள். நிலா வெளிச்சத்தில் கத்தியில் சுடர் விளிம்பு தழல் கீற்றைப்போல் பிரகாசித்தது. அந்த ஸ்திரீ யார்? அவள் எதற்காக வருகிறாள்? அலியைக் கொன்று தன்னைக் காப்பாற்ற வருகிறாளோ? அல்லது அந்தப்புரத்திலிருந்து தப்ப முயன்றதாகத் தன்னையே கொன்று விடுவதற்குத்தானோ?... "அத்தங்கா! அத்தங்கா! இது என்ன தூங்கிக்கொண்டே பேசுகிறாய்? எழுந்திரு!" என்றான் சூரியா. சீதா கண் விழித்தாள்; பட்டப்பகலில் தான் தூங்கியது மட்டுமல்லாமல், பயங்கரமான கனவு கண்டு பிதற்றியும் இருக்க வேண்டும் என்று தெரிந்து வெட்கினாள். வெட்கத்தை மறைப்பதற்காக, "நான் ஒன்றும் பிதற்றவில்லையே, சூரியா! இவர் எங்கே போனார்?" என்று கேட்டாள். "டோங்கா கொண்டு வருவதற்காக வாசலுக்குப் போனார். எழுந்திரு, சீக்கிரம்! தாஜ்மகாலுக்குப் புறப்பட வேண்டாமா? மணி நாலு அடித்துவிட்டதே!" என்றான் சூரியா.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதினொன்றாம் அத்தியாயம்

தாஜ்மகால்

புது மணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பது போலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப் பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்திய டாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப் போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன. உலகம் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசைகொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணம் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.

சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. "தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலை குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்! பளிங்குக் கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா! எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே அவள் வந்திருக்கிறாள்! அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன?

தாஜ்மகாலின் முன் வாசலில் பிரவேசித்த பிறகு பிரதான கட்டிடம் வரையில் உள்ள நிலா முற்றம் ஏறக்குறைய இரண்டாயிரம் அடி நீளமும் ஆயிரம் அடி அகலமும் உள்ளது. இந்த நிலா முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நீலோத்பலம் மலர்ந்த நீரோடைகள் பல இருக்கின்றன. வெள்ளைப் பளிங்குக் கல் ஓடைகளில் நீல வர்ண ஜாலமும் நீலோத்பலமும் நீல வானத்தின் பிரதிபலிப்பும் நட்சத்திரங்களின் கிலுகிலுப்பும் வர்ணிக்க முடியாத சௌந்தர்யக் காட்சியாகத் திகழ்கின்றன. கட்டிடத்தை நெருங்கும்போது நீர் ஓடைகளில் தாஜ்மகாலின் பிரதிபிம்பத்தையும் காணலாம். பௌர்ணமியன்று பூரண சந்திரனுடைய பிரதிபிம்பமும் ஓடை நீரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் என்று சொல்லவா வேண்டும்? "தங்க நிலாவின் ஒளியில், வெள்ளிப் பளிங்குக் கல் தரையில், நீல ஓடைக் கரையில், சீதா, ராகவன், சூரியா, தாரிணி, நிருபமா, அவளுடைய கணவர் வேணிப்பிரஸாத் ஆகியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மாலை நேரமெல்லாம் அவர்கள் தாஜ்மகாலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். உள்ளே சென்று ஷாஜஹான் - மும்தாஜ் சமாதிகளைப் பார்த்தார்கள். சமாதிகளைச் சுற்றிலும் சலவைக் கல்லில் அமைந்திருந்த அதி அற்புதமான சித்திர விசித்திர வேலைகளைப் பார்த்தார்கள். தூர தூர தேசங்களிலிருந்து தருவித்துப் பதித்திருந்த இரத்தினக் கற்களினாலான புஷ்ப ஹாரங்களைப் பார்த்தார்கள். நாலு மூலையிலும் நூற்றறுபது அடி உயரம் நிமிர்ந்து நின்ற காவல் கோபுரங்களிலே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறி உச்சியிலிருந்து நாலாபுறமும் பார்த்து மகிழ்ந்தார்கள். யமுனை நதியில் இறங்கிக் களித்தார்கள்.அங்குமிங்கும் ஓடியாடினார்கள்; ஓடியவர்களைத் துரத்திப் பிடித்தார்கள். கலகலவென்று சிரித்தார்கள் விளையாட்டாக ஒருவரையொருவர் அடித்தார்கள்.

இப்படியெல்லாம் குதூகலமாக மாலை நேரத்தைக் கழித்த பிறகு எல்லாரும் ஓரளவு உடல் சோர்ந்து ஓடைக் கரையில் உட்கார்ந்தார்கள். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும்; புற உலகமெங்கும் அமைதி நிலவியது. ஆனால் நம்முடைய நண்பர்கள் எல்லாருடைய உள்ளத்திலும் அமைதி நிலவியது என்று சொல்ல முடியாது. சீதா, ராகவன், தாரிணி, சூரியா ஆகிய ஒவ்வொரு வருடைய உள்ளமும் வெவ்வேறு காரணத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. "மனித ஜன்மம் எடுத்துத் தாஜ்மகாலைப் பார்க்காமலிருப்பதில் என்ன பயன்? அப்படிப்பட்ட ஜன்மமும் ஒரு ஜன்மமா?" என்று சீதா பேச்சைத் தொடங்கினாள். "அதுவும், பகலில் பார்த்தால் மட்டும் போதாது. இந்த மாதிரி பௌர்ணமி நிலவிலே பார்க்க வேண்டும்" என்றான் ராகவன். "பார்த்துவிட்டு உடனே உயிரை விட்டுவிட வேண்டும்; அப்புறம் உயிர் என்னத்திற்கு?" என்றான் சூரியா. அவன் பரிகாசமாகச் சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட சீதா, "ஆமாம், அம்மாஞ்சி! தாஜ்மகாலைப் பார்த்த பிறகு உயிரோடிருப்பது அவசியமில்லைதான்!" என்றாள்.

"தீப ஒளியைப் பார்க்கிற விட்டில் பூச்சி அப்படித்தான் எண்ணிக் கொள்கிறது!" என்றான் சூரியா. "என்னைப் பொறுத்த வரையில், இந்த மாதிரி ஒரு கட்டிடம் என்னைப் புதைக்குமிடத்துக்கு மேலே கட்டுவதாயிருந்தால், நான் இங்கேயே இந்த நிமிஷமே உயிரை விடத் தயார்!" என்றாள் நிருபமா. "அப்படி ஏதாவது செய்து வைக்காதே! இப்போதெல்லாம் உயிரோடிருப்பவர்கள் வசிப்பதற்கு வீடு கட்டுவதே கஷ்டமாயிருக்கிறது. செத்துப் போனவர்களுக்கு எப்படிக் கட்டிடம் கட்ட முடியும்? நிச்சயமாக என்னால் முடியாது?" என்றார் நிருபமாவின் கணவர் வேணிபிரஸாத். "மிஸ்டர் பிரஸாத்! தங்களுடைய மனைவிதான் இம்மாதிரி முதன் முதலில் சொன்னார் என்பதில்லை. இதற்கு முன் இங்கு வந்து பார்த்த ஸ்திரீகள் வெள்ளைக்கார துரைசானிமார்கள் உள்பட இம்மாதிரியே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சிறிதும் யோசனை யின்றித்தான் சொல்லியிருக்கிறார்கள். செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன? அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன? இறந்தவர்களுக்கு எப்படிச் செய்தாலும் ஒன்றுதான்!" என்று சூரியா சொன்னான்.

"சரியான பேச்சு! என்னுடைய கட்சியும் அதுதான். செத்துப் போன ஷாஜஹானுடைய ராணிக்கு இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் யாதொரு பயனும் இல்லை. ஆனால் நம்மைப் போல் உயிரோடிருப்பவர்கள் எத்தனையோ பேர் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. உமர்கய்யாமின் கவிதை இந்த மாதிரி இடத்துக்குத்தான் பொருந்தும். "தங்குவதற்கு தாஜ்மகால்; ஒரு கூஜா திராட்சை ரசம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகிலே நீ; இதைக்காட்டிலும் வேறு சொர்க்கமும் உண்டோ?" என்று கூறி சௌந்தரராகவன் தாரிணியை உற்று நோக்கினான். "இத்தகைய மனோரதம் உங்களுக்கும் வேணிபிரஸாத்துக்கும் நிறைவேற இடம் உண்டு. ஆனால் தாரிணியையும் மிஸ்டர் சூரியாவையும் போன்றவர்கள் என்ன செய்வது?" என்று நிருபமா சொன்னாள். "அவரவர்களுக்கும் ஒரு நாள் கலியாணம் நடந்து விடுகிறது. சூரியா விஷயத்தில் கலியாணத்தைப் பற்றி கவலையே இல்லை. அவன் சம்மதிக்க வேண்டியதுதான்! மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றாள் சீதா. "அத்தங்கா! உனக்கு எப்போதும் காதலும் கலியாணமும் தான் நினைவு. காதலைத் தவிர உலகத்தில் வேறொன்றும் கிடையாதா?" என்றான் சூரியா.

"சந்தேகம் என்ன? காதலைக் காட்டிலும் உலகத்தில் முக்கியமானது ஒன்றுமில்லைதான். கவிதைகள், காவியங்கள், எல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டுதானே புனைகிறார்கள்! காதல் இல்லாவிட்டால் வால்மீகியின் ராமாயணம் ஏது? காளிதாஸனின் சாகுந்தலம் ஏது? ஷேக்ஸ்பியரின் நாடகம் ஏது? மற்றும் இந்த நாளில் நவீன ஆசிரியர்கள் நவ நவமாக எழுதி வெளியிடும் அற்புதமான நாவல்களைத்தான் அவர்கள் எப்படி எழுத முடியும்" என்றான் ராகவன். "ஆகா! உங்கள் நாவல்களைக் கொண்டு போய் குப்பையிலே போடுங்கள். வேறு ஒன்றும் விஷயம் இல்லாதவர்கள் காதற் கதைகள் எழுதுகிறார்கள், வேலையற்ற வீணர்களே காதற் கவிதைகள் புனைகிறார்கள்!" என்று சூரியா சொன்னான். நிமிஷத்துக்கு நிமிஷம் அவனுடைய உள்ளத்தில் ஆவேசமும் அவன் குரலில் ஆத்திரமும் பெருகிக் கொண்டிருந்தன. "பின்னே எல்லோரும் காரல்மார்க்ஸைப் போலவே எழுத வேண்டும் என்கிறாயாக்கும்!" என்று சௌந்தரராகவன் கேலியாகக் கேட்டான். "எல்லாரும் காரல்மார்க்ஸைப் போல் எழுத வேண்டாம்; டால்ஸ்டாயைப் போல் எழுதட்டுமே? காந்தி மகானைப் போல் எழுதட்டுமே? ஜவாஹர்லால் நேருவைப் போல் எழுதட்டுமே? பெர்னாட்ஷாவைப் போல் எழுதட்டுமே?" "அம்மாஞ்சி! பாரதியாரைப் போல் எழுதலாமா, கூடாதா? பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? நினைவிருக்கிறதா?" என்றாள் சீதா.

"பாரதியார் என்ன சொல்லியிருந்தால் இப்போது என்ன? அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லையே? பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்த போது தேசத்தின் சுதந்திரத்தைப் பாடினார். கொஞ்சம் மயக்கமாயிருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்!" என்றான் சூரியா. "இவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ காதலில் ஏமாற்றமடைந்தவர் போலத் தோன்றுகிறது!" என்று தாரிணி கூறிப் புன்னகை புரிந்தபோது அவளுடைய முல்லைப் பற்கள், நிலா வெளிச்சத்தின் முகத்தைப்போல் பிரகாசித்தன. அவளுடைய முகபாவத்தில் அனுதாபம் காணப்பட்டது. "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொல்லி சூரியா வெட்கத்தினால் தலையைக் குனிந்து கொண்டான். "சூரியா இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்வான், அவனுடைய போக்கே ஒரு தனி. சீதா! பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? அதைச் சொல்லு? நாங்கள் கேட்கிறோம்" என்றான் ராகவன். "அன்பு வாழ்கென்று அமைதியில் ஆடுவோம்! ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்!" என்று மெல்லிய பொய்க் குரலில் பாடிக் காட்டினாள் சீதா. "அந்தப் பாட்டை முழுவதும் நன்றாகப் பாடுங்கள்! கேட்க விருப்பமாயிருக்கிறது" என்றாள் தாரிணி. "ஆம்; பாடுவதற்கேற்ற சமயம் இது; இவ்வளவு நேரம் வீண் பேச்சில் போய்விட்டது. சங்கோஜப்படாமல் குரலை நன்றாக விட்டுப் பாடுங்கள்!" என்றாள் நிருபமா. "சீதா, ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். "அபஸ்வரமில்லாமல் பாடுவதாயிருந்தால் பாடு" என்றான் ராகவன். ராகவனுடைய பதில் சீதாவுக்குக் கோபத்தை ஊட்டியது. ஆயினும் சமாளித்துக்கொண்டு, "அபஸ்வரமோ; ஸுஸ்வரமோ, எனக்குத் தெரிந்தபடிதானே பாடமுடியும்?" என்றாள்.

"எங்களுக்கு ஸுஸ்வரமும் தெரியாது; அபஸ்வரமும் தெரியாது. எல்லா ஸ்வரமும் எங்களுக்கு ஒன்றுதான் தைரியமாகப் பாடுங்கள்!" என்றாள் நிருபமா. பிறகு ராகவனைப் பார்த்து, "உங்களுக்குப் பிடிக்காவிட்டால் காதை அடைத்துக் கொள்ளுங்கள்!" என்றாள். "பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!" என்ற பாட்டைச் சீதா பாடினாள். பாடும்போது எல்லாரும் சீதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராகவன் மட்டும் தாரிணியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டு முடிந்ததும், தாரிணியும் நிருபமாவும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். நிருபமாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் தாரிணி, பாட்டின் கருத்தை விளக்கினாள். ராகவன், "இது என்ன பாட்டு, டா, டூ, என்று? எனக்கு ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை" என்றான். இந்தப் பாட்டில் நல்ல கருத்துக்கள் பல இருக்கின்றன. ஆனால் காதலைப்பற்றி இவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டாம். "காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!" என்பதெல்லாம் மிகைப்படுத்துவதில் சேர்ந்தது. காதற் பெண்கள் கடைக்கண்ணால் பணித்தால் என்ன வேணுமானாலும் செய்து விடலாமாக்கும்! சுத்த அபத்தம்! இந்த மாதிரிக் காரியம் செய்தவர்களால்தான் இந்திய தேசம் அடிமைப்பட்டுப் பாழாய்ப் போயிற்று, பிருதிவிராஜனைப் போல? அத்தங்கா! பாரதியாரின் தேசிய கீதம் ஒன்று பாடு!" என்றான் சூரியா.

"எனக்குத் தேசீய கீதம் ஒன்றும் தெரியாது. பாடினாலும் அபஸ்வரமாயிருக்கும் டா, டூ என்று கர்ண கடூரமாயிருக்கும்!" என்றாள் சீதா. "தாரிணி உனக்கு ஹிந்துஸ்தானியில் ஒரு தேசீய கீதம் தெரியுமே? அதைப் பாடு!" என்றான் ராகவன். "ஆமாம், தாரிணி! 'ஸாரே ஜஹான்ஸே அச்சா' என்ற கீதம் உனக்குத் தெரியுமே? அதைப் பாடு, கராச்சியிலிருந்து பம்பாய்க்கு கப்பலில் போனபோது கடைசியாக நீ பாடிக் கேட்டது, அப்புறம் கேட்கவே இல்லை" என்றாள் நிருபமா. தாரிணி பாடினாள்; இரவு நேரத்தில் சப்தம் செய்யும் பட்சிகளும் வண்டுகளும் காற்றும் கூட அடங்கி நின்றன. பூரண சந்திரன் தாஜ்மகால் மோகினியை ஒரு கணம் மறந்து தாரிணியின் கீதத்தில் கவனம் செலுத்தினான். நட்சத்திரங்கள் கண் கொட்டுவதைக் கூட நிறுத்தி ஆர்வத்தோடு கேட்டன. நிலா வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரரும் அவருடைய துரைசானியும் கூடத் தங்கள் காமிராவை மூடிவிட்டுக் காது கொடுத்துக் கேட்டனர். பாடி முடித்ததும் நிருபமாவும் அவளுடைய கணவரும், "அச்சா! பஹூத் அச்சா!" என்றார்கள். "பலே பேஷ்!" என்றான் சூரியா. "பாடினால் இப்படிப் பாடவேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும்" என்றான் ராகவன். சீதாவின் உள்ளம் புண்பட்டது என்பதைச் சூரியா கவனித்தான். அவளைப் பார்த்து, "அத்தங்கா! நீ கூட இந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ளலாம். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 'உலகில் எல்லாத் தேசங்களிலும் சிறந்தது நம்முடைய ஹிந்துஸ்தானம்' என்பது முதல் வரியின் கருத்து" என்றான்.

"அதற்குக் கூடச் சந்தேகமா? உலகத்திலெல்லாம் மிகச் சிறந்த தேசம் நம் இந்திய தேசம் தான். அதை நிரூபிக்க இந்தத் தாஜ்மகால் ஒன்று போதுமே!" என்றாள் சீதா. "நீ சொல்வது தப்பு; இந்தியாவின் மகிமை தாஜ்மகாலில் ஏற்படவில்லை. இமயமலையினாலும் கங்கை நதியினாலும் புத்தராலும் அசோகராலும் சிவாஜியினாலும் ஜான்ஸிராணியினாலும் இந்தியாவுக்கு மகிமை ஏற்பட்டது" என்றான் சூரியா. "இமயமலையும் கங்கை நதியையும் போல் வேறு தேசங்களில் மலையும் நதியும் இருக்கின்றன. ஆனால் தாஜ்மகாலைப் போன்ற ஒரு கட்டிடம் கிடையாது. ஆகையால் இந்தியா தாஜ்மகாலினாலே தான் பெருமையடைந்திருக்கிறது" என்று சொன்னான் ராகவன். "இந்தப் பெருமை இந்தியாவுக்கு வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்" என்றான் சூரியா. "உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் உனக்கு மட்டும் அதிசயமில்லை யாக்கும்!" என்றான் ராகவன். "மிஸ்டர் சூரியாவுக்கு அதிசயமில்லாவிட்டால் உலகம் அஸ்தமித்துவிடாது. இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் இந்தியாவின் மகிமை விளங்குகிறது; சலனமில்லாத காதலின் பெருமையும் இதன் முலம் வெளியாகிறது!" என்றார் பிரஸாத். "ஆ! நீங்கள் கூடக் காதலைப் புகழ ஆரம்பித்து விட்டீர்களா!" என்று சூரியா அருவருப்பு நிறைந்த குரலில் கேட்டான்.

"நீங்கள் ஏன் காதல் என்றால் கரிக்கிறீர்கள்? இந்தத் தெய்வீக அழகு வாய்ந்த தாஜ்மகால் ஷாஜஹானுடைய காதலிலிருந்து தானே உற்பவித்தது?" என்று நிருபமா கூறினாள். "அம்மணி! தயவு செய்து கேளுங்கள், ஷாஜஹானுடைய காதலிலிருந்து இந்தத் தாஜ்மகால் கட்டிடம் பிறக்கவில்லை. பாதுஷா ஷாஜஹானுடைய கொடுங்கோன்மையிலிருந்து பிறந்தது. அந்தக் கொடுங்கோன்மை அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்கே பொறுக்கவில்லை. அதற்காக அவன் தன்சொந்தத் தகப்பனைச் சிறையில் அடைத்து வைத்தான்." "ஆ! ஔரங்கசீப் கலை உணர்ச்சி என்பது அறவே இல்லாதவன். அவன் கொடுங்கோலன் என்பது சரித்திரப் பிரசித்தமானது. ஷாஜஹான் எப்படிக் கொடுங்கோலனாவான்? அவன் ரொம்ப நல்லவன் என்று சரித்திரம் சொல்கிறதே!" "ஆமாம்; ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனால் அந்த ஒரு நல்லவனுடைய தற்பெருமைக்காக எத்தனை ஜனங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா? இந்தத் தாஜ்மகாலைக் கட்டி முடிக்க இருபது வருஷம் ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியுமா? இருபதாயிரம் தொழிலாளர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ இரவு பகல் பாடுபட்டார்கள் என்று தெரியுமா? மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த வரிப் பணத்தில் கோடானு கோடி ரூபாய் செலவழிந்தது என்பது தெரியுமா? ஒரு தனி மனிதனுடைய தற்பெருமைக்காக இருக்கட்டும்; அல்லது அவனுடைய அதிசயமான காதலுக்காகவே இருக்கட்டும்; இருபதினாயிரம் பேர் இருபது வருஷம் உழைத்து உழைத்து உயிர் விட வேண்டுமா? இதை ஒருநாளும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஆங்காரத்துடன் கூறிச் சூரியா மூச்சு விடுவதற்காக நிறுத்தினான். "உமக்கு அதிகாரம் இருந்தால் என்ன செய்வீர்?' என்று தாரிணி புன்னகை புரிந்த வண்ணம் கேட்டாள்.

அன்று மாலை தாஜ்மகால் வாசலில் இருந்த விளையாட்டுச் சாமான் கடையில் சீதா ஒரு பளிங்குக் கல் 'மாடல்' தாஜ்மகாலை வாங்கியிருந்தாள். அது சூரியாவின் பக்கத்தில் இருந்தது. சூரியா அதைக் கையில் எடுத்துக் கொண்டான். "ஆயிரம் பதினாயிரம் மக்களைக் கொடுமைப்படுத்தி ஒரு மூட அரசன் தன்னுடைய தற்பெருமைக்காகக் கட்டிய இந்த தாஜ்மகாலை, எனக்கு அதிகார மிருந்தால், இந்த நிமிஷமே இடித்துத் தள்ளிச் சுக்குநூறாக்குவேன்!" என்று இரைந்து கத்தியவண்ணம், கையில் எடுத்திருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தான். எறிந்த தாஜ்மகால் பொம்மை தாரிணியை நோக்கிச் சென்றது. அவளுடைய தலையிலோ முகத்திலோ அது விழப் போகிறது என்ற பயத்தினால், பார்த்திருந்தவர்கள் எல்லாரும், ஆஹா!" என்றார்கள். தாரிணியும் திடுக்கிட்டுச் சிறிது தலையைப் பின்வாங்கிக் கொண்டாள். நல்லவேளையாக, எறியப்பட்ட தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் பக்கத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் சுக்குநூறாயிற்று. உடைந்த பகுதி ஒன்று எகிரிக் கிளம்பிச் சென்று தாரிணியின் நெற்றியில் தாக்கியது. முன் கூந்தலுக்குக் கீழே காயம் பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. தாரிணியின் தந்த நிற நெற்றியிலிருந்து கசிந்த இரத்தத் துளியை வெண்ணிலவின் கிரணம் தழுவி அதை ஜோதி மயமான நாகரத்தினம் போலத் திகழச் செய்தது.

தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் கீழே விழுந்ததினால் பயம் நீங்கப் பெற்றவர்களை இந்த விபரீதம் மீண்டும் திடுக்கிடச் செய்தது. சூரியாவைத் தவிர மற்றவர்கள், "ஆஹா!" என்று சத்தமிட்டுக்கொண்டு தாரிணியைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் அவளை அணுகிச் சென்று நெற்றியில் கையை வைத்து இரத்தத்தை நிறுத்த முயன்றவன் ராகவன்தான். நிருபமா பலாத்காரமாக அவனுடைய கையை அப்புறப்படுத்திவிட்டுத் தன்னுடைய கைக்குட்டையினால் காயம்பட்ட இடத்தில் கட்டினாள். மற்றவர்களைப் போலவே கவலையுடன் தாரிணியின் அருகில் சென்ற சீதா, ராகவனுடைய செய்கையைப் பார்த்து நெஞ்சினிலே அம்பு பாய்ந்தவளைப் போன்ற வேதனை அடைந்தாள். சிறிது நேரம் தாரிணியைச் சுற்றி ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அமைதி ஏற்பட்டது. எல்லாரும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள். வேணிப் பிரஸாத் ராகவனைப் பார்த்து, "உங்கள் சிநேகிதர் மிக்க முரடர் போலிருக்கிறதே?" என்றார். "சுத்த இடியட்! செய்ததற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுக் கொள்ளாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருக்கிறான்!" என்றான் ராகவன். "இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு எதற்காக தடபுடல் செய்கிறீர்கள்?" என்றாள் தாரிணி. "நல்லவேளை, நெற்றில் பட்டதோடு போயிற்று! ஒருவேளை கண்ணிலே பட்டிருந்தால் என்ன ஆகும்?" என்றான் ராகவன். "அதுதான் படவில்லையே? பின் எதற்காக இந்தப் பேச்சு! நீங்கள் எல்லாரும் சும்மா இருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்!" என்று தாரிணி கூறினாள்.

சீதா மௌனமாயிருந்தாள்; அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு சிறு கடுகத்தினை காயம் நெற்றியில் ஏற்பட்டதற்கு இவ்வளவு உபசாரமா, இவ்வளவு தடபுடலா என்று ஒரு கணம் நினைத்தாள். "இவளுக்கு நன்றாக வேண்டும்! காயம் இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பட்டிருக்கக் கூடாதா?" என்று மறுகணம் நினைத்தாள். "இந்தக் காயம் நமக்குப் பட்டிருக் கக்கூடாதா? நம்மையும் இப்படி எல்லாரும் சூழ்ந்து உபசாரம் செய்வார்கள் அல்லவா?" என்ற எண்ணமும் ஒரு பக்கத்தில் இருந்தது. "பாவம்! சூரியா என்ன செய்வான்? தவறிப் பட்டதற்கு அவன் பேரில் இவ்வளவு எரிந்து விழுகிறார்களே?" என்று அனுதாபப்பட்டாள். "இந்த உலகத்திலேயே நம்மிடம் உண்மையான அபிமானம் உள்ளவன் சூரியா ஒருவன் தான். முன்னேயெல்லாம் அவனை நாம் கண்டபடி பரிகாசம் செய்து அவமானப்படுத்தினோமே?" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னுடைய அனுதாபத்தைப் பார்வையின் மூலம் தெரியப்படுத்த எண்ணிச் சூரியாவை அடிக்கடி நோக்கினாள். ஆனால் அவனோ ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். தாஜ்மகால் நொறுங்கித் தாரிணிக்குக் காயம் பட்ட சம்பவத்துக்குப் பிறகு பேச்சு ஒன்றும் அவ்வளவாகச் சுவாரஸ்யப் படவில்லை. "போதும் தாஜ்மகால் பார்த்த இலட்சணம்; ஓட்டலுக்குத் திரும்பிப் போகலாமே?" என்றாள் சீதா. "சரி" என்று சொல்லி எல்லாரும் உடனே எழுந்தார்கள். ஓட்டலுக்குச் சென்றதும் சூரியா தன் சாமான்களை எடுத்துக்கொண்டு அவசரமாக டில்லிக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பன்னிரண்டாம் அத்தியாயம்

சரித்திர நிபுணர்

"ஸ்ரீமதி தாரிணி தேவி அவர்களுக்கு; இன்று தாஜ்மகாலில் என்னால் தங்களுக்கு நேர்ந்த இன்னலைக் குறித்து வருந்துகிறேன். தங்கள் நெற்றியில் காயப்படுத்தி இரத்தம் வருவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அணுவளவும் இருந்ததில்லை. அத்தகைய சந்தேகம் தாங்களும் கொண்டிருக்க மாட்டீர்கள். பேசும்போது உணர்ச்சி வேகத்தினால் தூண்டப்பட்டுக் கையிலிருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தேன். அது சுக்குநூறாயிற்று; இதைப் பற்றி நான் வருந்தவில்லை. அசல் தாஜ்மகாலும் ஏதேனும் ஒரு காரணத்தினால் இம்மாதிரி நொறுங்கிப் போயிருந்தாலும் அதற்காக நான் சிறிதும் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ ஒரு மௌடீகக் கிழவனுடைய கையில் இந்தப் பெரிய தேசம் ஒரு காலத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. வயோதிகத்தினால் அறிவு மங்கி வந்த நாளில், அந்த அரசன் காதல் என்னும் மூடப்பிரமை காரணமாக ஒரு பெரிய பொம்மை செய்தான். செத்துப்போன தன்னுடைய காதலியின் ஆத்ம திருப்திக்காக என்றெண்ணிக் கோடி கோடி ரூபாய்ச் செலவிட்டு அந்தப் பொம்மையைச் செய்தான். இதைத் தான் 'தாஜ்மகால்' என்னும் உலக மகா அதிசயங்களில் ஒன்று என்பதாக அறிவற்ற சிந்தனா சக்தியில்லாத, மனித மந்தைகள் ஆச்சர்யத் துடன் பார்க்கின்றன; வியந்து கொக்கரிக்கின்றன! இது என்னுடைய உறுதியான அபிப்பிராயம்.

ஆனால் எப்போதோ இருந்து இறந்துபோன கிழவன் ஷாஜஹான் தாஜ்மகால் கட்டியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் பேரில் எனக்குக் கோபம் கிடையாது. கோபம் காரணமாக வேண்டுமென்று அந்தப் பொம்மைத் தாஜ்மகாலை நான் எறியவில்லை. அதன் துகள் தங்கள் நெற்றியில் பட்டுக் காயமாகும் என்றாவது, இரத்தம் வரும் என்றாவது கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. இப்படி எதிர்பாராமல் நேர்ந்த காரியத்திற்காக மறுபடியும் தங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். ஆனால் இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் இன்னொரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். தங்களைக் காயப்படுத்த விரும்பவில்லையென்று சொன்னேனல்லவா? ஆனால் தங்களுடைய நெற்றியில் ஒரு சிறு காயம் பட்டுவிட்டதற்காக அப்படித் தங்களைச் சூழ்ந்து கொண்டு, 'ஆ ஹூ' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே, அவர்களை எல்லாம் தலையில் இரண்டு குட்டுக் குட்டிக் கன்னத்திலும் இரண்டு அறை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது! என் கையில் பிரம்பு இருந்தால் தலைக்கு நாலு அடி முதுகில் கொடுத்து இழுத்து அப்பால் விட்டிருப்பேன். அறிவற்ற நிர்மூடர்கள்! ஒரு சின்ன விஷயத்துக்கு எத்தனை கூச்சல்? எத்தனை குழப்பம்? எவ்வளவு ஆர்ப்பாட்டம்? பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்குள்ளே இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ மகத்தான கஷ்டங்களைச் சகித்தாக வேண்டும்; லட்சக் கணக்கான ஜனங்கள் உயிரைப் பலி கொடுத்தாக வேண்டும்; கண்ணைத் திறந்து கொண்டு நெருப்பிலே குதித்தாக வேண்டும். சுதந்திரமடைந் திருக்கும் வெளி நாடுகளைப் பாருங்கள்!

நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போர் புரிந்து எத்தனை பேர் கையிழந்தும், காலிழந்தும் கண்ணிழந்தும் அங்கஹீனர்களாக வாழ்நாள் முழுவதும் காலம் கழிக்கிறார்கள். முகமெல்லாம் பயங்கரமான காயங்களின் அடையாளங்களுடன் எத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள்? இந்த நாட்டில் நாமோ ஒரு நெற்றிக் காயத்திற்காக ஒரு துளி ரத்தம் வந்துவிட்டதற்காக இவ்வளவு தடபுடல் படுத்துகிறோம்! இப்படிப்பட்ட கோழைகளையும் பயங்கொள்ளிகளையும் 'ஹிஸ்டீரியா' நோயாளிகளையும் வைத்துக்கொண்டு இந்தப் பாரததேசம் எப்படித்தான் சுதந்திரம் அடையப் போகிறதோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். இந்த வீரபூமியில் நம்முடைய முன்னோர்கள் இப்படியெல்லாம் இருக்கவில்லை. வீர இராஜபுத்திர நாட்டுக்கு நாளை நீங்கள் போவீர்கள். அங்கே எத்தகைய வீர புருஷர்களும் வீர வனிதைகளும் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள்! 'கோட்டை விழுந்து விட்டது; எதிரிகள் உள்ளே புகுந்து விட்டார்கள்!" என்று கேட்டதும், தயாராக வளர்த்து வைத்திருந்த பெருந்தீயில் நூற்றுக்கணக்கான நாரீமணிகள் விழுந்து உயிரை விட்ட நாடல்லவா இது! ராணாடங்கிராமசிங் என்று ஒரு மகாவீரன் இருந்தான். அவனுடைய தேகத்தில் போர்க்களத்திலே பெற்ற தொண்ணூற்றாறு காயங்களின் வடுக்கள் இருந்தனவாம்! முத்துக்களும் ரத்தினங்களும் பதித்த ஆபரணங்களைக் காட்டிலும் அந்தக் காயங்களின் வடுக்களையே சிறந்த பூஷணமாக அந்த மகாவீரன் கருதினானாம். அப்படிப்பட்ட வீரர்கள் வாழ்ந்த தேசத்தில் இன்றைக்கு ஒரு சிறு காயம் நம்மையெல்லாம் நிலை கலங்கச் செய்துவிடுகிறது. பெண்களை மட்டுமல்ல; புருஷர் களைக்கூட 'ஹிஸ்டீரியா' வுக்கு உள்ளாக்கி விடுகிறது! இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்; எங்கள் நாட்டுக் கவி 'நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாரதியார் பாடல் சீதாவுக்குத் தெரியும்; பாடச் சொல்லிக் கேளுங்கள். இங்ஙனம், சூரியா.

இந்தக் கடிதத்தை ஆக்ராவிலிருந்து ரஜினிப்பூருக்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் வைத்துத் தாரிணி படித்துக் கொண்டிருந்தாள். ஒரு தடவை படித்து இரண்டாந் தடவையும் படித்து விட்டு அந்தக் கடிதத்தைத் தன்னுடைய கைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள். இதைப் பார்த்த ராகவன், "கடிதத்தை இவ்வளவு பத்திரமாய் வைத்துப் பூட்டுகிறீர்களே? அது என்ன காதல் கடிதமா?" என்று கேட்டான். "பிதற்றல்!" என்றாள் தாரிணி; ராகவனுடைய கேள்வியைப் பற்றி மேற்கண்ட அபிப்பிராயத்தை அவள் தெரிவித்தாள். ஆனால் ராகவன் அதைத் தெரிந்து கொள்ளாததுபோல், "பிதற்றலைப் பெட்டியில் வைத்துப் பூட்டுவானேன்!" என்றான். அன்று காலையில் தாரிணியும் அவள் தோழியும் வந்து ரயில் ஏறியபோது எற்கெனவே வண்டியில் ராகவனும் சீதாவும் மட்டும் ஏறியிருப்பதைக் கவனித்தார்கள். தாரிணியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது "சூரியா எங்கே?" என்றாள். "அவன் வரவில்லை டில்லிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன். "நேற்றிரவுச் சம்பவத்துக்காக அவரைச் சண்டை பிடித்துத் துரத்தி விட்டீர்களா, என்ன!" என்று தாரிணி கேட்டாள். "நாங்கள் ஒன்றும் சண்டை பிடிக்கவில்லை. அவனுக்கே அவமானமாயிருந்தது போலிருக்கிறது. பிடிவாதமாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன். சீதா தன்னுடைய அம்மாஞ்சியின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டி, " அவனுக்கு ஏதோ அவசர ஜோலியாம். ஆக்ராவுக்கு மட்டும் வருவதாகத்தான் முன்னே சொல்லியிருந்தான். உங்களுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் கூட கொடுத்திருக்கிறான்?" என்று கூறினாள். பிறகு தன் கணவனைப் பார்த்து, "கடிதத்தை அவரிடம் கொடுங்களேன்!" என்றாள். "வண்டி புறப்படட்டும்; இப்போது என்ன அவசரம் அந்தக் கடிதத்திற்கு?" என்றான் ராகவன். தாரிணி, "மன்னிப்பாவது, கடிதமாவது? ஒரு சின்ன விஷயத்துக்காக நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவரைச் சண்டை பிடித்துத் துரத்திவிட்டீர்கள். எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றாள்.

இது சீதாவுக்குத் திருப்தியாயிருந்தது, ஆனால் ராகவன் கோபமாக, "சின்ன விஷயமா அது! நெற்றியில் பட்டதுபோல் கண்ணில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இருந்தாலும், மனிதராய்ப் பிறந்தவர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது?" என்றான். அவனுடைய அபிப்பிராயத்தை நிருபமா ஆதரித்து, "ஆமாம்; அந்தப் பையன் சுத்தப் பட்டிக் காடாகத்தான் நடந்து கொண்டான்!" என்றாள். "பட்டணங்களில் உள்ளவர்கள் ரொம்ப நாகரிகமாக நடந்து கொள்வதாக உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. பட்டணங்களில் வசிப்பவர்கள் எப்படிச் சில சமயம் புலி கரடிகளாகவும், பேய் பிசாசுகளாகவும் மாறு கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!" என்றாள் தாரிணி. வண்டி புறப்பட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம், "அந்தக் கடிதம் எங்கே?" என்று தாரிணி கேட்டாள். "ஏது? ஏது? அதைப் பார்க்காவிட்டால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படாது போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். "அது என்ன காதல் கடிதமா?" என்று ராகவன் கேலியாகப் பேசியபோது, அவர்கள் எல்லாருக்கும் கடிதத்தை முழுவதும் படித்துக் காட்டிவிட வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றியது. மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அந்தக் கடிதத்தில் அடங்கியுள்ள விஷயங்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். மேலும் ஏதாவது பரிகாசமாகப் பேசுவார்கள். இவ்விதம் எண்ணிச் சீதாவைப் பார்த்து, "நீங்கள் மறுபடியும் உங்கள் அம்மாஞ்சியைப் பார்க்கும் போது, 'இவ்வளவு நீளமான மன்னிப்புக் கடிதத்துக்கு அவசியமே இல்லை' என்று நான் சொன்னதாக அவரிடம் தெரியப்படுத்துங்கள்! என்றாள்.

ஆயிரம் ஆண்டுகளாக வீர புருஷர்களின் இரத்தமும் தீர மாதரசிகளின் கண்ணீரும் சிந்திப் புனிதமான இராஜபுத்திர நாட்டுக்குள் அவர்கள் ஏறியிருந்த ரயில் வண்டி பிரவேசித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வறண்ட பூமி; அல்லது மொட்டைப் பாறைகள்; ஆங்காங்கே இடிந்த கோட்டைச் சுவர்கள்; சிதைந்த மண்டபங்கள்; பாழடைந்த மசூதிகள்; பசுமை என்பதையே பார்க்க முடியவில்லை அடர்த்தியான காடுகள் இல்லை; பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற நெல் வயல்கள் இல்லை; பொன்னிறம் கொண்ட கோதுமைப் பயிர்களும் இல்லை; சிற்சில இடங்களில் தானாக மண்டிய முட்புதர்கள் மட்டும் காணப்பட்டன. "நாம் போகிற வழி நெடுகிலும் இப்படித்தான் இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "இல்லை; ரஜினிபூர் சேர்ந்துவிட்டால் வேறு விதமாயிருக்கும். ஆனால் அங்கே போய்ச் சேருகிற வரையில் இந்த லட்சணந்தான். 'சுதந்திரம், சுதந்திரம்' என்று அடித்துக் கொள்ளுகிறார்களே; இராஜபுத்திர வீரர்கள் அந்த நாளில் சுதந்திரத்துக்காகப் போரிட்டதன் பலன்தான் இது! இராஜஸ்தானத்தில் பெரும் பகுதி பாலைவனமாகப் போய்விட்டது!" என்று ராகவன் சொன்னான். "இராஜபுத்திரர்கள் சுதந்திரத்துக்காகப் போரிட்டதனால் இராஜஸ்தானம் பாலைவனமாகவில்லை. ஒருவருக்கொருவர் சகோதரச் சண்டையிட்டதினால் இப்படியாயிற்று.

அண்ணன் சுதந்திரத்துக்காகச் சண்டை போட்டால் தம்பி எதிராளியோடு சேர்ந்து கொண்டான். எத்தனை ராஜபுத்திரர்கள் மொகலாயர்களுக்கு அடிமையாகி ஏவல் செய்து வாழ்ந்தார்கள்! இந்திய தேசம் நாசம் அடைந்தது சகோதரச் சண்டையினால்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், இவற்றை எல்லாம் சரித்திரத்தில் படித்திருந்தும் நமக்குப் புத்தி வந்தபாடில்லை. இன்னமும் சகோதரச் சண்டைகள் போட்டுக் கொண்டுதானிருக்கிறோம்" என்றாள் தாரிணி. "அம்மணி! நீங்கள் என்ன பெரிய சரித்திர நிபுணரைப் போல் பேசுகிறீர்களே!" என்று ராகவன் பரிகாசக் குரலில் கேட்டான். "என்ன சொன்னீர்கள்?" என்று சொல்லிவிட்டு நிருபமா இடியிடி என்று சிரித்தாள். அவளுடைய சிரிப்பின் காரணம் என்னவென்று விளங்காமல் ராகவன் திகைத்தான். "எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்றான். "என்ன சொன்னீர்கள்? 'பெரிய சரித்திர நிபுணரைப் போல்' என்றா? 'போல்' என்று சொன்னதற்காகத்தான் சிரித்தேன்" என்றாள் நிருபமா. "அப்படிப் 'போல்' என்ற வார்த்தையில் நகைச்சுவை என்ன இருக்கிறது? எனக்கு விளங்கவில்லையே?" "உங்களுக்கு விஷயம் தெரியாதென்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. தாரிணியைப் பழைய தேச சேவிகை தாரிணி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. பீஹார் பூகம்பத்துக்குப் பிறகு அவள் காலேஜில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று இப்போது யூனிவர்சிடி உதவிச் சம்பளம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள். இது உங்களுக்குத் தெரியுமென்று எண்ணியிருந்தேன். பின்னே எதற்காக என்னையும் இழுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைகிறாள் என்று நினைத்தீர்கள்? தற்போது இராஜஸ்தானத்துச் சரித்திரத்தில் விசேஷ ஆராய்ச்சி நடைபெறுகிறது!"

நிருபமா இவ்விதம் சொன்னதும் ராகவனுடைய உள்ளம் ஒரே ஒரு நிமிஷத்தில் என்னவெல்லாமோ கற்பனை செய்யத் தொடங்கியது. ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். ஆஹா! படிப்பின் மேல் உள்ள ஆசையினால் அல்லவா இவள் கலியாணத்தை வெறுத்திருக்கிறாள்? இந்த உண்மையை நம்மிடம் முன்னமேயே தெரிவித்திருக்கக் கூடாதா? தெரிவித்திருந்தால் இவளுடைய படிப்புக்கு நாம் குறுக்கே நின்றிருப்போமா? என்று அவன் மனம் எண்ணமிட்டது. தாரிணி பி.ஏ. பட்டம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள் என்னும் செய்தியைச் சொல்லிவிட்டு நிருபமா படுத்துத் தூங்கிப் போனாள். தாரிணியிடம் அவளுடைய காலேஜ் வாழ்க்கையைப் பற்றி ராகவன் பல கேள்விகள் கேட்டான். அவளோ பாரா முகத்துடன் ஏனோதானோவென்று பதில் சொல்லி வந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் ராகவனும் தூங்கிவிட்டான். பிறகு தாரிணி சீதாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "உங்கள் அம்மாஞ்சி சூரியாவைப் பற்றிச் சொல்லுங்கள், அவர் எப்போதுமே இப்படித்தான் படபடப்பாயிருப்பாரா? என்று கேட்டாள். முந்தைய சம்பாஷைணையின் போதெல்லாம் சீதாவுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் வளர்ந்து வந்தது. முதல் நாள் தாரிணியைச் சந்தித்தது முதல், நிருபமா - தாரிணி சம்பாஷணைகளைக் கேட்டதிலிருந்தும் தன்னுடைய சொந்த ஊகத்தினாலும் அவள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தாள். ராகவனும் தாரிணியும் பழைய சிநேகிதர்கள் என்பது நிச்சயம். பத்மாபுரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசிய வம்புப் பேச்சுகளில் ஏதோ உண்மை இருக்கத்தான் வேண்டும். ராகவனுக்குத் தாரிணியின் மேல் இன்னும் அபிமானம் இருந்தது என்பதும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. தான் இருக்கும்போது இதையெல்லாம் அவர்கள் காட்டிக் கொள்ளாததை நினைத்து நெஞ்சம் கொதித்தது. சீச்சீ! என்ன வெட்கங்கெட்ட ஸ்திரீ இவள்!

நம்மை எதற்காக இப்படித் தொடர்ந்து வருகிறாள்? வேறு எங்கேயாவது போய்த் தொலைவதுதானே? சூரியாவும் நிருபமாவின் கணவனும் இந்தக் கோஷ்டியில் சேர்ந்து கூட்டமாக இருந்தபோது ஒரு மாதிரி கலகலப்பாக இருந்தது. இப்போது அவர்களும் இல்லை; அதனால் கலகலப்பும் இல்லை. இந்த மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால், இந்தப் பிரயாணத்துக்கு வரவில்லையென்றே சொல்லியிருக்கலாம். இப்பொழுதுதான் என்ன 'அவள் வந்தால் நான் வரவில்லை; அவளையே அழைத்துக்கொண்டு போங்கள். நான் டில்லிக்குத் திரும்பிப் போகிறேன்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டியதுதான்... இவ்விதம் எண்ணி எண்ணிப் பலமுறை பேசுவதற்குச் சீதாவின் உதடுகள் துடித்தன.ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அப்படிச் சொன்னால் அதன் பலன் என்ன ஆகுமோ என்று உள்ளத்தின் ஒரு பகுதி அஞ்சியது.இத்தகைய மனோநிலையில் சீதா இருந்த போது தாரிணி அவளிடம் நெருங்கி உட்கார்ந்து, "சூரியாவைப் பற்றி சொல்லுங்கள்" என்றதும் சீதாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. "சூரியாவைப்பற்றி இப்போது என்ன விசாரணை வேண்டிக் கிடக்கிறது? என்னைப் போல் அவனும் ஓர் அசடு; அனாதை!" என்றாள். "சகோதரி! ஏன் இவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்? என் நெற்றியில் காயப்படுத்தி விட்டதற்காகச் சூரியா ரொம்பவும் மனம் நொந்து எழுதியிருக்கிறார், உத்தம குணம் படைத்தவர். ஆனால் கொஞ்சம் படபடப்புக்காரர் என்று தோன்றுகிறது. காயம் சரியாய்ப் போய் விட்டது. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று உன்னிடம் சொல்லியனுப்ப விரும்பினேன். உனக்கு அவரைப் பற்றிப் பேச இஷ்டமில்லை யென்றால் வேண்டாம்!" என்றாள் தாரிணி.

இதைக் கேட்டதும் சீதாவின் மனம் மாறிவிட்டது. "இல்லை, இல்லை எனக்கு வெறுப்பு ஒன்றுமே இல்லை. சூரியா உத்தமமான பிள்ளைதான், அவ்வளவு ஒன்றும் படபடப்பாக அவன் பேசுவதும் கிடையாது. என் மாமா குடும்பத்திலேயே சூரியாதான் நிதானத்துக்கும் பொறுமைக்கும் பெயர் போனவன். நேற்று அவன் படபடப்பாகப் பேசியதும் தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்து உடைத்ததும் எனக்கே ஆச்சரியமாயிருந்தது. பாவம்! அவனுக்கு என்ன மனக் கஷ்டமோ? மொத்தத்தில் அதிர்ஷ்டக் கட்டை; இல்லாவிட்டால் இப்படிவந்து திண்டாடுவானேன்? படித்துப் பாஸ் செய்து எவ்வளவோ நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம்!" என்றாள். "அதிர்ஷ்டக்கட்டை என்று எதனால் சொல்கிறாய்?" என்று தாரிணி கேட்க, சீதா கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியாவின் கதையைச் சொன்னாள். அவனுடைய தகப்பனார், தமையன், அம்மா, தங்கை ஆகியவர்களைப் பற்றி சொன்னாள். தமையனோடும் ஊராரோடும் அவனுக்கு நேர்ந்த தகராறுகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னாள். ஆனால் தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, கலியாணம் இவற்றைக் குறித்து மட்டும் எதுவும் சொல்லவில்லை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதின்மூன்றாம் அத்தியாயம்

ரஜினிபூர் ஏரி

ரஜினிபூர் சமஸ்தானத்தின் திவான் ஸர்.கே.கே. ஆதிவராகாச்சாரியாருக்குப் புத்தி கூர்மையுள்ள வாலிபர்களிடம் பொதுவாக அபிமானம் உண்டு. சௌந்தரராகவன் இங்கிலாந்துக்குப் பிரயாணம் செய்தபோது கப்பலில் அவரைச் சந்தித்துப் பழக்கம் செய்து கொண்டான். ராகவனுடைய புத்தி கூர்மையும் சாதுர்யமான சம்பாஷணையும் திவான் ஆதிவராகாச்சாரியாரின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அதோடு புதுடில்லி செகரட்டேரியட்டில் உத்தியோகம் பார்ப்பவர்களில் எத்தனை பேரைத் தெரிந்திருக்கிறதோ அவ்வளவுக்குப் புருஷார்த்தம் கைகூடுவது எளிதாகும் என்ற நம்பிக்கையும் ஸர் ஆதிவராகாச்சாரியாருக்கு இருந்தது. அவருக்குச் சந்தான பாக்கியத்தைப் பகவான் பரிபூரணமாக அளித்திருந்தார். பெரிய உத்தியோக பதவிகளை வகிக்கத் தகுந்தவர்களாக அவருக்குப் புதல்வர்களும் மாப்பிள்ளைகளும் பலர் இருந்தார்கள். இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததும் ரஜினிபூருக்கு ஒரு தடவை வரவேண்டும் என்றும், வரும்போது மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்றும் ஆதிவராகாச்சாரியார் சௌந்தரராகவனிடம் சொல்லியிருந்தார். அந்த அழைப்புக்கு இணங்க இப்போது சௌந்தரராகவன் சீதாவுடன் திவான் மாளிகைக்குச் சென்றான். தாரிணியும் அவளுடைய தோழியும் வேறு ஜாகைக்குச் சென்றார்கள். துரதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் திவான் ஆதிவராகாச்சாரியார் முக்கியமான ராஜாங்கக் காரியமாக வெளியூருக்குப் போயிருந்தார். எனினும் ராகவனுடைய தந்தியைப் பார்த்து விட்டு அவனையும் அவனுடைய மனைவி யையும் கவனித்துக் கொள்ளும்படியாகத் தம்முடைய புதல்விகளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அவர்கள் அவ்விதமே ராகவ னையும் சீதாவையும் வரவேற்றார்கள்.

ஆதிவராகாச்சாரியின் புதல்விகளான பாமா, தாமா இருவரும் இங்கிலாந்து சென்று திரும்பியவர்கள், ஆங்கில நாகரிகத்தில் முழுகியவர்கள். ஒருத்தி ஒல்லியாயும் உயரமாயும் இருந்தாள். இன்னொருத்தி குட்டையாயும் பருமனாயுமிருந்தாள். இரண்டு பேரும் தலை மயிரை 'பாப்' செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொண்டுதான் வெளியில் புறப்படுவார்கள். எப்பொழுதும் இங்கிலீஷில்தான் பேசுவார்கள். அதுவும், ஆங்கில நாவலாசிரியர் வோட் ஹவுஸின் கதாபாத்திரங்கள் பேசுகிற இங்கிலீஷ் நடையைக் கையாண்டு பேசுவார்கள். பியானோ வாத்தியத்தில் இங்கிலீஷ் சங்கீதம் வாசிக்கவும், "பால் ரூம் டான்ஸ்" ஆடவும் கற்றுக் கொண்டு திறமையும் பெற்றிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களிடையே அகப்பட்டுக் கொண்டு சீதா ரொம்பவும் விழித்தாள். அவர்கள் சீதாவிடம் முதலில் இங்கிலீஷில் ஏதாவது கேட்பார்கள். சீதா ஒன்றும் புரியாமல் திகைப்பதைக் கண்டு தட்டுத் தடுமாறித் தமிழில் அதையே சொல்வார்கள். அவர்கள் இங்கிலீஷ்காரி களைப்போல் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்துப் பேசியபடியால் சீதாவுக்குத் தெரிந்திருந்த கொஞ்சம் நஞ்சம் இங்கிலீஷும் அங்கே பயன்படவில்லை. ஆகையால் குளத்துத் தண்ணீரிலிருந்து எடுத்துக் கொதிக்கின்ற சட்டுவத்தில் போடப்பட்ட மீனைப் போல் சீதா அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டு தத்தளித்தாள்.

சீதாவுடன் பழகினதைக் காட்டிலும் ராகவனுடன் அவர்கள் சரளமாகப் பேசிப் பழகினார்கள். ராகவனும் அவர்களுடன் உற்சாகமாகப் பேசினான். அவன் அப்போது வீசிய நகைச்சுவைத் துணுக்குகளையும் ஹாஸ்ய சிலேடைகளையும் கேட்டு அவர்கள் இடி இடி என்று சிரித்தார்கள். இதெல்லாம் சீதாவுக்கு ஓரளவு அருவருப்பாயிருந்தாலும் அவளுக்குக் கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. அந்தப் பெண்கள் இருவரும் அவ்வளவு அழகாயில்லை என்பதுதான் இதற்குக் காரணமோ அல்லது அவர்கள் விஷயத்தில் ராகவனுக்குக் கொஞ்சமும் மதிப்புக் கிடையாது என்பது சீதாவின் உள்மனதுக்குத் தெரிந்ததோ, நாம் சொல்ல முடியாது. இடையிடையே சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ராகவன் சீதாவிடம் தனியாக அந்தப் பெண்களின் அவலட்சணத்தைப் பற்றியும் குரங்கு சேஷ்டைகளைப் பற்றியும் சொல்லி வந்தான். "ஆனாலும் இவர்களிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிரம்ப இருக்கிறது. புதுடில்லியில் சமூக வாழ்க்கை நடத்துவதற்குச் சிற்சில நடை உடை பாவனைகள் அவசியம்!" என்று ஒரு தடவை ராகவன் சொன்னான். "இவர்களிடம் நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமாம்? உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொள்ளவா?" என்று சொல்லி விட்டுச் சீதா சிரித்தாள். "ஆமாம்; அதுகூடத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதில் பிசகு என்ன இருக்கிறது?

நம்முடைய நாட்டில் வெற்றிலை போட்டுக் கொள்ளவில்லையா? அதனால் உதடு சிவப்பதில்லையா? கதாநாயகிகளின் உதடுகளைப் பவழத்துக்கும் கோவைப் பழத்துக்கும் மாதுளை மொட்டுக்கும் ஒப்பிட்டுக் கவிகள் வர்ணித்தால் மட்டும் 'ஆஹா' என்று பிரமாதப்படுத்து கிறோமே?" என்றான் ராகவன். "அதெல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும்" என்றாள் சீதா. "இயற்கை யாவது, மண்ணாங்கட்டியாவது? இயற்கையாக இருந்தால் ஆப்பிரிக்கா தேசத்துக் காட்டுமிராண்டிகளைப் போல் இருக்க வேண்டி யதுதான். வகிடு எடுத்துத் தலை வாரிக் கொள்வதும், நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வதும், கண்ணுக்கு மை தீட்டிக் கொள்வதும், கைக்கு மருதாணி இட்டுக் கொள்வதும் இயற்கையா? காதிலும் மூக்கிலும் தொளையிட்டு நகை போட்டுக் கொள்வதுதான் இயற்கையா? எல்லாவித அழகும் அலங்காரமும் செயற்கையில் சேர்ந்ததுதான்!" என்று ராகவன் அடித்துப் பேசியபோது சீதாவினால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காக "அலங்காரத்துக்கும் ஒரு அளவு வேண்டும். தாரிணியைப் பாருங்கள்; அவளும் இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்றவள்தானே? அவள் 'லிப்ஸ்டிக்' தடவிக் கொள்கிறாளா?" என்று சொல்லி வைத்தாள். "சில பேருக்குப் பிறவியிலேயே அழகு உண்டு; அவர்கள் ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாவிட்டாலும் நன்றா யிருப்பார்கள். அந்த மாதிரி எல்லாரும் இருக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போலாகும்!" என்று சொன்னான் சௌந்தரராகவன். சீதாவுக்குத் தாரிணியின் பேச்சை எதற்காக எடுத்தோம் என்று இருந்தது.

இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் தலைநகரங்களுக்குள்ளே ரஜினிபூர் மிக அழகான ஒரு பட்டணம். மறுநாள் முழுவதும் ராகவனும் சீதாவும் அந்தப் பட்டணத்தைச் சுற்றிப் பார்ப்பதில் கழித்தார்கள். ரஜினிபூர் ராஜாவின் பழைய அரண்மனை, புதிய அரண்மனை, வஸந்தோத்ஸவம் கொண்டாடும் பளிங்கு மாளிகை, நந்தவனங்கள், பிராணிக் காட்சிச் சாலைகள், பட்டணத்துக்குச் சற்றுத் தூரத்திலிருந்த பழைய கோட்டை, கொத்தளங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் களித்தார்கள். ஆனால் ஒரு இடத்திலாவது அதிக நேரம் அவர்கள் நிற்கவில்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும் ராகவன் நெருப்பில் காலை வைத்து விட்டவன்போல் அவசரப்பட்டான். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் சீதாவும் ராகவனுடைய அவசரத்திற்கேற்ப அங்கங்கே பார்க்க வேண்டியதைச் சட்டென்று பார்த்து விட்டுக் கிளம்பினாள். திவானுடைய பங்களாவுக்குச் சாயங்காலம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, "அவர்கள் இரண்டு பேரையும் இன்றைக்கெல்லாம் காணவேயில்லையே?" என்றாள் சீதா. இப்படிச் சொல்லிவிட்டு ஏன் சொன்னோம் என்று உதடுகளைக் கடித்துக் கொண்டாள். "அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு டெலிபோன் பண்ணுவதாகச் சொன்னார்கள்; பண்ணவில்லை!" என்றான் ராகவன். இவ்விதம் சொல்லி இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் ராகவன் திவானுடைய டிரைவரிடம், "டஹரோ!" என்று கத்தினான். யாரும் தன்னை இவ்விதம் அதட்டிப் பேசி அறியாத அந்த மோட்டார் டிரைவர் சடக்கென்று பிரேக்கைப் போட்டு வண்டியை நிறுத்தியபோது, ீசீதாவைத் தூக்கிப் போட்டுவிட்டது. விஷயம் என்னவென்று பார்த்ததில், பக்கத்தில் ஒரு வீட்டுக்கு அருகில் டங்கா வண்டியிலிருந்து தாரிணியும் நிருபமாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ராகவன் தாரிணியைப் பார்த்து, "இதென்ன நீங்கள் இப்படி ஏமாற்றிவிட்டீர்கள்?' என்று கடுமையான குரலில் கேட்டான். "ஏமாற்றுவது என்ன? உங்களுடன் ஊர் சுற்றப் போனால் ஒன்றுமே பார்க்க முடியாது. விவாதம் செய்வதற்குத்தான் சரியாயிருக்கும். அதனால்தான் நாங்கள் இருவரும் தனியாகப் போய் வந்தோம்" என்றாள் தாரிணி. "நாளைக்கும் இப்படிச் செய்வதாகத்தான் உத்தேசமா?" என்று ராகவன் கேட்டான். "நாளைக்கு ஏரிக்குப் போவதாயிருந்தால் நாங்களும் வருகிறோம். இங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு போக முடியுமா?" என்றாள் தாரிணி. "பேஷாக முடியும் ஆனால் இன்று மாதிரி ஏமாற்றி விடாதீர்கள்; எனக்கு ரொம்பக் கோபம் வரும்!" என்றான். ராகவன் அன்றைக் கெல்லாம் ஏன் அவ்வளவு பரபரப்பாக இருந்தான் என்னும் விஷயம் சீதாவுக்கு இப்போது நன்கு விளங்கியது. அன்றிரவு அவள் சேர்ந்தாற்போல் அரை மணிக்கு மேல் தூங்கவில்லை. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்த போது தலையை ஒரே கனமாய்க் கனத்தது. இரண்டு பொட்டுக்களிலும் சம்மட்டியால் அடிப்பதுபோல் வலித்துக் கொண்டிருந்தது. "நான் இன்றைக்கு ஏரி பார்க்க வரவில்லை. டில்லிக்கே திரும்பிப் போய் விட்டாலும் நல்லதுதான்!" என்று ராகவனிடம் சொன்னாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதிநான்காம் அத்தியாயம்

ரஜினிபூர் ஏரி

அன்று பிற்பகலில் ராகவன் சீதாவைப் பார்த்து, "அப்படியானால், உனக்கு நிஜமாகவே தலையை வலிக்கிறதா?" என்று கேட்டான். "பின்னே பொய்யாகவா தலைவலிக்கும்? இது என்ன கேள்வி?" என்றாள் சீதா. "சரி நான் போய்வருகிறேன்!" என்று ராகவன் கிளம்பினான். "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள் சீதா. "புறப்படுகிறபோது, 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா? வேறு எங்கே போவேன்? ஏரிக்குத்தான்!" "என்னை விட்டுவிட்டுத் தனியாகவா போவீர்கள்?" "தனியாக என்ன? தாரிணியும் அவளுடைய தோழியும் தான் வருவதாகச் சொல்லியிருக்கிறார்களே?" "என்னை இங்கே ஒண்டியாக விட்டுவிட்டு அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு போவீர்களா?" "இங்கே நீ ஒண்டியாக இருப்பானேன்? இது என்ன காடா? வீடுதானே? தாமாவும் பாமாவும் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள்." "அவர்களோடு என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது." "அப்படியானால் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிரு." "எப்படியாவது நீங்கள் போய்த்தான் தீரவேண்டும்?" "போய்த்தான் தீரவேண்டும்; போட்ட திட்டத்தை உன்னுடைய தலைவலிக்காக மாற்ற முடியாது?" "நான் செத்துப் போனால் அப்போதாவது போட்ட திட்டத்தை மாற்றுவீர்களா?" "செத்துப் போய்ப் பார்! அப்போது தெரிகிறது!"

சீதாவுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. ஆயினும் அப்போது ராகவனோடு தகராறு செய்வதில் பயனில்லை என்று உணர்ந்தாள். "பெண் ஜென்மம் எடுத்தாகிவிட்டது, தலைவலி என்று சொன்னால் என்ன பிரயோஜனம்? இங்கே தனியாகக் கிடந்து சாவதைக் காட்டிலும் உங்களுடன் வந்தே பிராணனை விடுகிறேன்!" என்று சொன்னாள். "விடுகிற பிராணனைச் சீக்கிரமாக விட்டுத் தொலைக்கலாம் புறப்படு உடனே" என்றான் ராகவன். காரில் போகும்போது இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சீதா மட்டும் அடிக்கடி கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். தாரிணியும் நிருபமாவும் இறங்கியிருந்த ஜாகையின் வாசலில் வண்டி நின்றது. மேல் மாடியின் முகப்பில் நிருபமா வந்து நின்று கையைத் தட்டி அழைத்து "கொஞ்சம் இப்படி வந்து உட்காருங்கள்; தாரிணிக்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்று சொன்னாள். "நான் வரவில்லை காரிலேயே இருக்கிறேன். எப்போதாவது நான் புறப்பட ஒரு நிமிஷம் தாமதமானால் பிரமாத கோபம் வந்துவிடும் இப்போது மட்டும்?" என்றாள்."ஏதாவது உளறிக்கொண்டிராதே! தெரியுமா?" என்று ராகவன் கோபமாகச் சொல்லிவிட்டுக் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றான்.

சீதாவுக்கு காரில் உட்கார்ந்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாக இருந்தது. அத்தகைய பல நிமிஷங்களுக்குப் பிறகு மேலே கலகலவென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சிரிப்புச் சத்தம் சீதாவின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. தலையைச் சிறிது காருக்கு வெளியே நீட்டி மேலே அண்ணாந்து பார்த்தாள். சிறிது நேரம் வரையில் பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் கேட்டதே தவிர கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. சட்டென்று பலகணிக்கருகே ஒரு காட்சி தென்பட்டது. ராகவன் ஏதோ ஒரு கவரை கையில் பிடித்துக்கொண்டு தாரிணியிடம் அதைக் கொடுக்கப் போனான். அவள் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தாள். ராகவன் சட்டென்று அவளுடைய கரத்தைப் பிடித்துப் பலாத்காரமாக அந்தக் கவரைத் திணிக்க முயன்றான். அப்புறமும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் தாரிணி தன்னை விடுவித்துக் கொண்டு ஓடினாள். ராகவன் அவளைத் தொடர்ந்து பின்னால் ஓடினான். அரை நிமிஷ நேரமே நீடித்திருந்த இந்தக் காட்சி சீதாவின் உள்ளமாகிய காமிராவில் படமாகப் பதிந்துவிட்டது. சிறிது நேரம் சிந்தனா சக்தியையே இழந்திருந்தாள். பின்னர் ஏதேதோ சந்தேகங்கள் உதித்து மனதை அரிக்கத் தொடங்கின. உடம்பெல்லாம் விடவிடவென்று நடுங்கும்படியாக மனதில் ஆத்திரம் பொங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் ராகவனும் தாரிணியும் மட்டும் கீழிறங்கி வந்தார்கள். தாரிணியைப் பின்னால் சீதாவுக்குப் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு ராகவன் காரின் முன்புறத்தில் அமர்ந்தான். நிருபமா பின்னால் வருவாள் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவள் வராமலே கார் புறப்பட்டதைக் கண்டதும் துணுக்குற்றாள். அதைப்பற்றி விசாரிக்க விரும்பினாலும் பேசுவதற்கு நா எழவில்லை.

தாரிணி சீதாவின் முகத் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படி ஒரு மாதிரியாயிருக்கிறாய், சீதா! உடம்பு ஏதாவது சரிப்படவில்லையா, என்ன?" என்று கேட்டாள். "ஆமாம்; காலையிலிருந்து தலைவலி!" என்று சீதா முணுமுணுத்தாள். "அடடா! ரொம்பத் தலைவலி போலிருக்கிறதே! குரல் கூட எப்படியோ ஆகிவிட்டதே! இதோடு வெளியில் புறப்படாவிட்டால் என்ன? நாளைக்குப் போயிருக்கலாமே? ஏரி எங்கே ஓடியா போகிறது!" என்று தாரிணி கூறியது சீதாவின் மனதில் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனை அளித்தது. "வரவில்லையென்று சொன்னால் கேட்டால்தானே!" என்றாள். சற்றுப் பொறுத்துத் தாரிணி, "உடம்பு சரியில்லையென்று தான் நிருபமா கூட வராமல் நின்றுவிட்டாள். இப்போது கூட மோசம் போய் விடவில்லை, திரும்பிப் போய்விடலாம்! என்ன, மிஸ்டர் ராகவன்!" என்றாள். அதற்கு ராகவன், "அவ்வளவு ஒன்றும் அவளுக்குப் பிரமாதமான தலைவலி இல்லை. ஏரியில் படகிலே போனால் தலைவலி தீர்ந்து விடும்!" என்றான். நீல வானத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துப் பூமியில் வைத்தது போலிருந்தது ரஜினிபூர் ஏரி. அதன் இரு பக்கங்களில் இரண்டு மலைத் தொடர்கள் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் மதில் சுவர்களைப் போல் உயர்ந்து நின்றன. மற்ற இரு புறங்களில் பசுமையான மரங்கள் அழகிய நீல வர்ணச் சித்திரத்துக்குப் பச்சை வர்ணச் சட்டங்கள் போட்டது போல் நின்றன. அங்கே நள்ளிரவின் நிசப்தம் நிலவியது. வைகறையில் சலனமற்ற சாந்தம் குடிகொண்டிருந்தது. மாலை நேரத்தில் மனோகரம் பரவி இருந்தது.

அந்த விஸ்தாரமான நீல நிற நீர்ப்பரப்பைப் பார்த்தால் ஞானிகள் எங்கும் நிறைந்த பரம்பொருளைத் தங்களுக்குள்ளே காணும்போது அடையும் ஆனந்தத்தைப் பாமர ஜனங்களும் அடைவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகளின் கண்களுக்குள்ளே தங்கள் பிரதி பிம்பத்தைக் காணும்போது அடையும் களிப்பை அந்த ஏரி நீரில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் எவரும் பெறுவார்கள். முதன் முதலில் பெற்றெடுத்த குழந்தையின் இதழ்களில் இலேசாக அரும்பும் புன்னகையைப் பார்க்கும்போது அன்னைக்கு உண்டாகும் மகிழ்ச்சி, அந்த ஏரி நீரின் சிற்றலைகள் விரியும் காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் உண்டாகும். தும்பை மலரைப் போல் வெண்ணிறத்துடன் விளங்கிய ஆயிரக்கணக்கான பறவைகள் அந்த ஏரி நீரின் மீது கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் காட்சியை ஒரு முறை பார்த்தவர்கள் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள். அத்தகைய ஏரிக்கரையில் வந்து ராகவன், சீதா, தாரிணி மூவரும் காரிலிருந்து இறங்கினார்கள். ஏரியின் காட்சியைப் பார்த்துவிட்டுத் தாரிணி, "ஆகா! என்ன அழகு! என்ன அழகு! நானும் இயற்கைக் காட்சிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி பார்த்ததில்லை!" என்றாள். "அதனால்தான் உங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு வற்புறுத்தி அழைத்து வந்தேன். ஸ்விட்ஸர்லாந்தில் உலகப் பிரசித்தமான ஏரிகளை இதன் காலிலே கட்டி அடிக்க வேண்டும். ஆயினும் இதைப் பார்ப்பதற்கு உங்கள் இருவரையும் அழைத்து வருவதற்குள் என் பிராணனில் பாதி போய் விட்டது!" என்றான் ராகவன்.

சீதா மட்டும் ஒன்றும் சொல்லாமல் ஏரியை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்த கடுகடுப்பைப் பார்த்து விட்டுத் தாரிணி, "ஏரி என்னமோ அழகாய்த்தானிருக்கிறது, ஆனால் இரண்டு பேராக வந்திருந்தால் இன்னும் நன்றாக இதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லது நாலு பேராக வந்திருக்க வேண்டும்!" என்று கூறினாள். அவள் மனதில் நினைத்துச் சொன்னது சீதாவும் ராகவனும் மட்டும் வந்திருக்கலாம் என்று. ஆனால் சீதா அதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு, "நான் வரவில்லை என்று ஆனமட்டும் சொன்னேன்; கேட்டால் தானே?' என்று முணுமுணுத்துவிட்டு ஏரிக்கரையை நோக்கி விடுவிடு என்று நடந்தாள். கரை ஓரமிருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து ஏரியைப் பார்க்கலானாள். ஆனால் அவளுடைய கண்கள் ஏரியைப் பார்த்தனவே தவிர, மனது வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஏரியின் குளிர்ந்த நீரில் அளாவிக் கொண்டு வந்து உலாவிய காற்று அவளுடைய உடம்பெல்லாம் அக்கினி ஜுவாலையை மூட்டியது. அவள் விடுவிடு என்று நடந்து போனதைக் கவனித்த தாரிணி, ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவி என்ன இன்றைக்கு இப்படி இருக்கிறாளே? இது தலைவலி மட்டும் அல்ல; உள்ளக் கோளாறும் ஏதோ இருக்கும் போலிருக்கிறது" என்று சொன்னாள். "இந்த மாதிரி செய்வாள் என்று தெரிந்திருந்தால் அவளை அழைத்து வந்திருக்கவே மாட்டேன்" என்றான் ராகவன். "பெண்களின் மனதை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாக வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போக வேண்டும் என்று எண்ணம்!"

"அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு வந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்களிரு வருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனதில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது." "அது யாருடைய தப்பு அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுடன் சமதையான படிப்பில்லாதவளை மணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்போது தப்புச் செய்து விட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?" "தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான் உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!" "வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள், உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம் வாருங்கள்! இல்லாவிட்டால் அவளுடைய கோளாறு இன்னும் அதிகமாகிவிடும்." "அதிகமானால் ஆகட்டும்; அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை" என்றான் ராகவன். ஆயினும் தாரிணி போகத் தொடங்கியதும் அவளைப் பின்பற்றி அவனும் போனான். இருவரும் ஏரி ஓரம் சென்று சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். ஏரிக்கரையில் படகு ஒன்றும் இல்லை. ஆனால் ஏரியில் சில படகுகள் மிதந்து சென்று கொண்டிருந்தன. அவை ஏரியின் நடுவில் இருந்த சோலை சூழ்ந்த ஒரு சிறு தீவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அந்தத் தீவின் உயரமான மரங்களின் மத்தியில் ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. "அந்த மாளிகை யாருடையது?" என்று தாரிணி கேட்டாள்.

"சரித்திர நிபுணராகிய தங்களுக்கு இது தெரியாதா, என்ன? பழைய சரித்திரத்தைத்தான் ஆராய்வீர்கள் போலிருக்கிறது. இந்த சமஸ்தான ராஜாவின் அரண்மனைதான் இது. காலம் சென்ற பெரிய ராஜா உயிரோடிருந்தபோது இந்த மாளிகையில் அடிக்கடி வசிப்பாராம். அவருடைய உல்லாசக் கேளிக்கைகள் எல்லாம் இதிலேதான் நடக்குமாம்! உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ? ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இந்த நாட்டின் ராஜாவைக் கொல்வதற்குப் பம்பாயில் ஒரு முயற்சி நடந்தது, கொல்ல முயற்சித்தவள் ஒரு ஸ்திரீ. பத்திரிகைகளிலே கூட பிரமாதப்பட்டது ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்த ஸ்திரீ இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை அடைந்ததுதான் லாபம். கத்திக் காயம் கூடப் படாமல் அப்போது ராஜா தப்பிவிட்டார். இரண்டு வருஷத்துக்கு முன்பு அதிகக் குடி காரணமாகச் செத்தொழிந்தார்." "இப்போதுள்ள ராஜா யார்? அவருடைய குணம் எப்படி?' என்று தாரிணி கேட்டாள். "இப்போதுள்ள ராஜா சிறு பையன், டேராடூனில் படிக்கிறான். நாம் இறங்கியிருக் கிறோமே, அந்த வீட்டில் வசிக்கும் திவான் ஆதிவராகாச்சாரியார்தான் இப்போது ராஜ்ய நிர்வாகம் செய்து வருகிறார். "அப்படியானால், இப்போது ராஜ்யம் நன்றாக நடந்து வருகிறதாக்கும்." "ஏதோ சுமாராய் நடந்து வருகிறது ஆனால் பழைய ராஜாவின் துர்மந்திரியாயிருந்த விநாயகராவ் மதோங்கர் இன்னும் உயிரோடிருக்கிறான். அரண்மனையிலும் சரி, சமஸ்தானத்திலும் சரி, அவனுடைய அட்டூழியங்கள் அதிகம். திவானும் அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருந்து வருகிறார். இல்லா விட்டால், ஏதாவது இல்லாதது பொல்லாததைக் கிளப்பி விட்டுத் திவானுடைய வேலைக்கே உலை வைத்து விடுவான்!"

ஆரம்பத்தில் வேறு கவனமாக இருந்த சீதா, பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்லும் முயற்சி நடந்ததைப் பற்றிக் காதில் விழுந்ததும், அவர்களுடைய பேச்சில் கவனம் செலுத்தலானாள். ராகவன் மதோங்கரைப் பற்றிச் சொல்லி முடித்ததும், "பம்பாயில் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "ஓகோ! நீ கூடக் கவனித்துக் கொண்டிருக்கிறாயா? அந்த ஸ்திரீ யாரோ தெரியாது. சிலர் அவளை ஹிந்து ஸ்திரீ என்றார்கள். சிலர் அவளை முஸ்லீம் ஸ்திரீ என்றார்கள். ஒரு சிலர் அவளைத் தென்னாட்டைச் சேர்ந்தவள் என்றும் சொன்னார்கள். யாராயிருந்தால் என்ன? பெரிய ராட்சஸியாயிருக்க வேண்டும்! பட்டப்பகலில் கொலை செய்ய முயற்சிப்பதற்கு அவளுக்கு எத்தனை தைரியம் இருந்திருக்க வேண்டும்?" என்றான் ராகவன். "புருஷர்கள் மட்டும் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம்; ஸ்திரீகள் அதற்குப் பழிவாங்க முயற்சிப்பதுதான் பிசகோ?" என்றாள் சீதா. "ஏது ஏது? கொலைகாரிக்கு ரொம்பப் பரிந்து பேசுகிறாயே? இப்படிப் பேச எங்கே கற்றுக் கொண்டாய்?" என்றான் ராகவன். தாரிணி குறுக்கிட்டு, "அந்த ஸ்திரீ பிறகு என்ன ஆனாளாம், தெரியுமா?" என்று கேட்டாள். இத்தனை நேரம் மௌனமாயிருந்த அவளுடைய குரலில் இப்போது அதிசயமான மாறுதல் காணப்பட்டது. முன்னே சீதாவின் குரல் நடுங்கியது போல் இப்போது தாரிணியின் குரலும் நடுங்கிற்று. ஆனால் ராகவன் அதைக் கவனியாமல், "யாருக்குத் தெரியும்? இரண்டு வருஷம் சிறையில் இருந்து விட்டு வெளிவந்த பிறகு எங்கே போய்க் கெட்டலைகிறாளோ? அதைப்பற்றி நமக்கென்ன கவலை!" என்றான்.

சீதாவின் மனதில் பம்பாயை விட்டுத் தான் ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்குச் சில நாள் முன்பு கையில் கத்தியுடனேயே ஒரு ஸ்திரீ வந்திருந்த சம்பவமும், ரயில் ஏறும்போது பத்திரிகையில் படித்தறிந்த விஷயமும், அப்போது தன் மனதில் ஏற்பட்ட சந்தேகமும் இப்போது டில்லிக்கு வந்த பிறகு அன்றொரு நாள் சாலை முனைக்கு அதே ஸ்திரீயைக் கையில் கத்தியுடன் பார்த்த விஷயமும் நினைவுக்கு வந்தன. அதையெல்லாம் பற்றிப் பிரஸ்தாபியாமல் வாயை மூடிக்கொண்டிருந்தாள். அவளுடைய மனம் ஸ்திரீ வைத்திருந்த கத்தியின் மேல் அடிக்கடி சென்றது. அவள் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயன்றதற்குத் தக்க காரணம் இருந்திருக்க வேண்டும். என்ன அக்கிரமம் செய்தானோ, என்னமோ? ஆனால் புருஷர்கள் மட்டுந்தானா அக்கிரமம் செய்கிறார்கள்? ஸ்திரீகளுந்தான் செய்கிறார்கள். உதாரணமாக இந்தத் தாரிணியைப் போன்ற வெட்கங்கெட்ட ஸ்திரீயைப் பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்டவர்களைக் குத்திக் கொன்றால் கூடப் பாதகம் இல்லை. தன்னிடம் மட்டும் இப்போது ஒரு கத்தியிருந்தால்?...

தன்னுடைய எண்ணம் எவ்வளவு பயங்கரமான காரியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த சீதா திடுக்கிட்டுத் தாரிணியின் முகத்தை நோக்கினாள். அவளுடைய நெற்றியிலிருந்த இரத்தக் காயம் கண்ணில் பட்டது. ஆகா; நல்ல வேலை செய்தான் சூரியா! அவன் மட்டும் இப்போது இங்கிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? தன்னை விட்டு ஒரு நிமிஷ நேரமும் அகலாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான் அல்லவா? அவன் இங்கே இருந்தால், இவர்கள் இருவரையும் நாம் இலட்சியம் செய்ய வேண்டியதேயில்லையே! இந்தச் சமயத்தில் படகு ஒன்று கரையை அணுகியது. படகில் ஏறிக்கொண்டு வந்தவர்கள் கரையில் இறங்கினார்கள். "இந்தப் படகை அமர்த்தட்டுமா? ஏரியில் போய் வரலாமா?" என்று ராகவன் கேட்டான். தாரிணி, "நான் தயார்; போகலாம் ஆனால் உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாளோ?" என்றாள். "அவளும் தானே வருகிறாள் அப்படி அவள் வர இஷ்டப்படாவிட்டால் இங்கேயே கரையில் இருக்கட்டும்; நாம் இருவரும் போய் வரலாம்." இப்படிச் சொல்லிவிட்டு ராகவன் வாடகைப் படகு அமர்த்திக் கொண்டு வருவதற்காகச் சென்றான். ராகவன் அப்பாலே சென்றதும், தாரிணி சீதாவைப் பார்த்து, "சீதா! உனக்கு ஏதாவது என் பேரில் கோபமா? ஒரு மாதிரியாயிருக்கிறாயே?" என்று கேட்டாள். "ஒரு மாதிரி என்ன, ஒருமாதிரி, எப்போதும் இந்த இலட்சணந்தான்!" என்று சீதா முணுமுணுத்தாள். "மறுபடியும் கோபமாகவே பேசுகிறாயே! நான் உன்னோடு சிநேகமாயிருக்க விரும்புகிறேன் சீதா" என்றாள் தாரிணி. "எதற்காக? நீயும் நானும் முன்பின் பார்த்தது கூட இல்லையே?" என்று சீதா சொன்னாள்.

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தாரிணி திகைத்துப் போனாள். சற்றுப் பொறுத்து, "சீதா! உன் கழுத்தில் ஒரு ரத்தின ஹாரம் போட்டிருக்கிறாயே? அது ஏது?" என்று தாரிணி கேட்டாள். சீதா திடுக்கிட்டாள் அவள் மனதில் என்னவெல்லாமோ உருத்தெரியாத சந்தேகங்கள் உதித்தன. இந்தப் பாதகி எந்த விதத்திலாவது நம்மைக் கெடுத்து விடுவது என்று தீர்மானித்திருக்கிறாள் போலிருக்கிறது. ஒருவேளை நம் பேரில் திருட்டுக் குற்றம் சாட்டப்போகிறாளோ, என்னவோ? ஐயோ?! இந்த நேரத்தில் சூரியா இங்கு இல்லாமற் போய்விட்டானே! தாரிணி மறுபடியும், "சீதா! நான் கேட்டது உன் காதில் விழவில்லையா? கழுத்தில் ஒரு ரத்ன ஹாரம் போட்டுக் கொண்டிருக்கிறாயே அது ஏது என்று கேட்டேன்!" என்றாள். "என்! அம்மா எனக்குக் கொடுத்தாள்! நீ எதற்காகக் கேட்கிறாய்? ஒருவேளை நான் அதைத் திருடிவிட்டேன் என்று உனக்கு எண்ணமோ?" என்றாள் சீதா. "ஐயோ! என்ன கொடூரமாகப் பேசுகிறாய்? அந்த ரத்தின ஹாரம் ரொம்ப அழகாயும் வேலைப்பாடாயும் இருக்கிறபடியால், எங்கே செய்தது என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன் . அதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறாய்?" "எனக்கு ஒன்றும் கோபமில்லை?" "கோபமில்லையென்றால் சரி, உன் அம்மாவுக்கு எந்த ஊர் சீதா! உன் பிறந்தகம் எங்கே?" "அதையெல்லாம் பற்றி இப்போது ஒன்றும் என்னைக் கேட்க வேண்டாம் என் மனது சரியில்லை." "அது ரொம்ப நன்றாய்த் தெரிகிறது!" என்றாள் தாரிணி.

ராகவன் வாடகைக்குப் படகு அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்தான். "சீக்கிரம் படகில் ஏறுங்கள் ஏற்கெனவே நேரம் ரொம்ப ஆகிவிட்டது?" என்றான். "அவசியம் படகில் ஏறத்தான் வேண்டுமா? பேசாமல் திரும்பிப் போய்விடலாமே" என்றாள் தாரிணி. "அழகாயிருக்கிறது! இந்தப் படகோட்டியுடன் எவ்வளவோ வாதாடிப் படகு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் இப்போது தகராறு செய்யாதீர்கள் சீதா எழுந்திரு! சீக்கிரம் வந்து படகில் ஏறிக்கொள்." சீதா எழுந்து வந்தாள் அவளுடைய கையைப் பிடித்துப் படகிற்குள்ளே ஏற்றி விட்டான் ராகவன். பிறகு தாரிணி தயக்கத்துடன் வந்து தானாகவே படகில் ஏற முயன்றாள்! அது சாத்தியப்படவில்லை படகு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. "சொன்னால் கேட்கிறீர்களா? இங்கே கையைக் கொடுங்கள்!" என்று கூறி ராகவன் தாரிணியின் கையையும் பிடித்துப் படகிற்குள் ஏற்றிக்கொண்டான். தாரிணி சீதாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். ராகவன் அவர்களுக்கு எதிரேயிருந்த படகுச் சட்டத்தின் மீது உட்கார்ந்தான். படகு நகரத் தொடங்கியது. இதற்கிடையில் திடீரென்று வானம் கருத்து மேக மண்டலங்கள் திரளுவதையும், காற்று பலமாக அடிக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. ஏரிக்கரைக்கு அவர்கள் வந்த சமயம் ஏரியின் நீர்ப்பரப்பில் கடற்கரை மணலில் தோன்றுவது போன்ற பூ அலைகள் எழுந்து சத்தமின்றி விரிந்து பரவி மீண்டும் ஜலத்திரளில் மௌனமாகக் கலந்து கொண்டிருந்தன. இவர்கள் ஏறிய படகு புறப்பட்ட சமயத்திலோ அலைகள் ஒரு அடி உயரம் எழும்பி விழுந்தன. ஆங்காங்கு அலைகளின் நுனியில் வெண்ணுரை காணவும் ஆரம்பித்திருந்தது. அலை அடிக்கும் ஓசை 'கும்' என்று கேட்கத் தொடங்கியது.

ஏரிக்கரையிலிருந்து அதன் நடுவில் இருந்த சோலைத் தீவு சுமார் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும். தீவை நோக்கிப் படகு போகலாயிற்று. அரை பர்லாங் தூரம் போவதற்குள் காற்றின் வலிவு அதிகமாகி விட்டது. அலைகள் திரைத்தெழுந்து நுரை பொங்கி ஒரு கஜம் உயரம் வரையில் எழுந்து விழுந்து அலைகளின் சத்தம் 'ஹோ!' என்ற பெரும் ஓசையாகிவிட்டது. படகு அப்படியும் இப்படியும் பலமாக ஆடி எழுந்து விழுந்தது. படகுக்காரன் அவனுடைய பாஷையில் ஏதோ சொன்னான். "தாரிணி, இதென்ன? காற்று இவ்வளவு பலமாகி விட்டதே! திரும்பிப் போய்விடலாமா!" என்றாள். "முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது. உயிருக்கு அவ்வளவு பயப்பட வேண்டுமா!" என்றான் ராகவன். சீதா நாலா பக்கமும் திரும்பிப் திரும்பிப் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள். திடீரென்று, "ஐயோ! அம்மா! எனக்குப் பயமாயிருக்கிறதே!" என்று கூச்சலிட்டுவிட்டு விம்மத் தொடங்கினாள். ராகவன் மிகக் கடுமையான குரலில், "சீதா இது என்ன மடத்தனம்? அழுகையை உடனே நிறுத்துகிறாயா, இல்லையா?" என்றான். சீதாவின் வெறி இன்னும் அதிகமாயிற்று. "ஐயோ அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போய்விட்டதே; அலையில் விழுந்து நான் சாகப் போகிறேனே!" என்று அலறினாள்.

இந்த எதிர்பாரா நிலைமை ராகவனைக் கலங்க அடித்துவிட்டது. அவன் பெரும் மனக் குழப்பத்துடன் தாரிணியை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தான். "இந்தச் சனியன்களையெல்லாம் இதற்குத்தான் வெளியில் அழைத்துக்கொண்டு புறப்படக் கூடாது என்கிறது. நீங்கள் கொஞ்சம் சமாதானப்படுத்திப் பாருங்களேன்!" என்றான். "மிஸ்டர் ராகவன்! சமாதானப்படுத்திப் பயனில்லை. உங்கள் மனைவிக்கு 'ஹிஸ்டீரியா' மாதிரி இருக்கிறது. படகுக்காரனை உடனே கரைக்குத் திருப்பச் சொல்லுங்கள் வேறு வழியில்லை!" என்றாள். ராகவனும் படகுக்காரனை இரைந்து கூப்பிட்டு, "கரைக்குத் திருப்பு!" என்று உத்தரவிட்டான். படகுக்காரன் "குச் டர் நஹி, சாகிப்!" என்றான். "எப்படியிருந்தாலும், சரி! கரைக்கு உடனே படகைத் திருப்பு!" என்று ராகவன் கத்தினான். "படகுக்காரன் திருப்பமாட்டான்; அவனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!" என்று கூறிவிட்டு, சீதா மேலும் விம்மினாள். "ஏதாவது பிதற்றாதே, சீதா! வாயை மூடு!" என்று ராகவன் அதட்டிவிட்டு, படகுக்காரனை மறுபடியும் பார்த்து, "திருப்பு உடனே! திருப்பு கிறாயா, இல்லையா?" என்று கத்தினான். "டீக், ஸாகிப் டீக்!" என்றான் படகுக்காரன்.

உண்மையென்னவென்றால், படகுக்காரன் படகைத் திருப்பத்தான் பார்த்தான். ஆனால், காற்றினாலும் அலையினாலும் அது அவ்வளவு சுலபமாயில்லை. படகுக்காரன் எவ்வளவு பலமாகக் கழியைப் போட்டாலும், படகு சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்குள் சீதாவின் விம்மல் சத்தம் அதிகமாயிற்று. இடையிடையே, "அம்மா! அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று அலறிக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த தாரிணி, "மிஸ்டர் ராகவன்! 'ஹிஸ்டீரியா' அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் இங்கே பக்கத்தில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் ஒரு கையைத் தான் கெட்டியாகப் பிடித்தாள். தாரிணி பிடித்த கையைச் சீதா பலமாக உதறி விடுவித்துக் கொண்டு ஒரு துள்ளு துள்ளிப் படகில் எழுந்து நின்றாள். படகு பேயாட்டம் டிக்கொண்டிருந்தது. "ஓகோ! எனக்கு 'ஹிஸ்டீரியா' என்று சொல்லி ஜலத்தில் தள்ளிவிடப் பார்க்கிறாயோ? எனக்கு ஒன்றும் 'ஹிஸ்டீரியா' இல்லை! நான் விழமாட்டேன்!" என்று கூவினாள். "சீக்கிரம்! இவளை வந்து உடனே பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று தாரிணி கத்தினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
Contd...

ராகவன் எழுந்து சீதாவை நெருங்கி வருவதற்கு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தச் சமயத்தில் படகை ஒரு பெரும் அலை மோதியது. படகு ஒரே ஆட்டமாகத் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்போல் ஆடியது. ராகவன் படகுக்குள்ளே கால் தடுமாறி விழுந்தான். சீதா, "வீல்!" என்று கத்திக்கொண்டு தண்ணீரில் விழுந்தாள். தாரிணி, "ஐயோ! கடவுளே!" என்று அலறினாள். படகுக்காரன் தன்னுடைய பாஷையில் ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். கவிழ்ந்து விடும் போலிருந்த படகு எழுந்து நிமிர்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சீதா மேலே வந்து கொண்டிருந்தாள். நிமிர்ந்த படகு சீதாவை விட்டு அகன்று போய்க் காண்டிருந்தது. சீதா ஒரு தடவை தலையைத் தண்ணீருக்கு மேலே தூக்கி, "அம்மா!" என்று அலறினாள். அந்த அலறல் சத்தம் காற்றின் பேரொலிக்கும் அலைகளின் பெரும் ஓசைக்கும் மேலே கேட்டது. தாரிணி ராகவன் இவர்களுடைய நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் அந்த அபயக்குரல் பாய்ந்தது. தாரிணி, "என்ன சும்மா நிற்கிறீர்களே! தண்ணீரில் குதித்து அவளைக் காப்பாற்றுங்கள்!" என்று கூவினாள்.

படகிற்குள் தடுமாறி விழுந்த ராகவன் அப்போதுதான் சமாளித்து எழுந்தான். "ஐயோ! எனக்கு நீந்தத் தெரியாதே!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் தலை தெரிந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். ராகவனுடைய அந்தரங்கத்தில் அப்போது ஒரு கணம் ஒரு பயங்கரமான எண்ணம் உதயமாயிற்று. "ஒருவேளை இதுதான் விதி போல் இருக்கிறது. சீதா இறந்து போனால்... மேலே அந்த பயங்கர நினைவுக்கு இடங்கொடுக்க விரும்பாமல் "படகுக்காரா! அடே படகுக்காரா..." என்று ராகவன் கூவினான். முழுகிக் கொண்டிருந்தவளின் பக்கத்தில் படகைக் கொண்டு போகும்படி சொல்ல அவன் உத்தேசித்திருந்தான். ஆனால், அதற்குள்ளே தாரிணி படகிலிருந்து தண்ணீரில் குதித்துச் சீதா முழுகிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வெகு லாவகமாக நீந்திப் போய்க் காண்டிருந்தாள்! அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக வருணனும் வாயுவும் அமைதியாக நின்றார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதினைந்தாம் அத்தியாயம்

புனர் ஜென்ம

'ஹோ' என்ற பேரோசை கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரையில் அந்த ஓசையைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. வேறு நினைவு ஏதும் ஏற்படவில்லை. அது என்ன சத்தமாயிருக்கும், என்று சீதா யோசித்தாள். நெடு நேரம் வரை அதே யோசனையாயிருந்தாள்.சட்டென்று நினைவு வந்தது, அம்மா அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்த அலை ஓசையாகத்தான் இருக்கவேண்டும். ஆம், ஆம்; அலை ஓசைதான்! காதே அடைத்துப் போனது போலக் கேட்கிறது. இந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியது எப்போதிருந்து? எப்போதிருந்து? எப்போதிருந்து - இதோ நினைவு வருகிறது! தண்ணீரில் மூழ்கியதிலிருந்து; தண்ணீரில் முழுகி மூச்சு முட்டிப் போனதிலிருந்து. மூச்சு முட்டும் தருணத்தில், 'தண்ணீருக்கும் மேலே இருந்தபோது இவ்வளவு சத்தம் இல்லையே? தண்ணீருக்குள் இவ்வளவு அதிக சத்தமாயிருக்கிறதே?' என்று எண்ணியது இப்போது சீதாவுக்கு நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து, 'சரி, இனி பிழைக்கப் போவதில்லை' என்று எண்ணியதும், 'அம்மா! உன் பேச்சைக் கேட்காமல் போனேனே?' என்று வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தன. அந்த ஆபத்தான தருணத்தில் கையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. பிறகு, அப்படித் தட்டுப்பட்டதும் ஒரு கைதான் என்று தெரிந்தது. அது யாருடைய கை? வளையல் அணிந்திருந்தபடியால் ஒரு ஸ்திரீயின் கை தான் அது! அந்த ஸ்திரீ யார்? ஆபத்துக் காலத்தில் தன்னை வந்து காப்பாற்றுவதாகச் சொல்லி இப்படியெல்லாம் எண்ணமிட்டது வரையில், சீதாவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது, கண்ணை மட்டும்தான் திறக்க முடியவில்லை. ஒரே இருட்டாயும் வெளிச்சமாயுமிருக்கிறது. ஆம், இருட்டாயுமிருக்கிறது; வெளிச்சமாயுமிருக்கிறது. இருட்டில் வெளிச்சமாயிருக்கிறது; வெளிச்சத்தில் இருட்டாயிருக்கிறது. ஆனால் கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் கண் இமைகளைத் திறக்க முடியவில்லை....

ஏதோ குரல் கேட்கிறதே, அது என்ன? யார் குரல்? யார் என்ன சொல்கிறார்கள் இந்த நாசமாய்ப் போன அலைச் சத்தம் மட்டும் அடங்கினால்?.. அலைச் சத்தம் கொஞ்சம் இப்போது குறைந்துதானிருக்கிறது! யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள்; என்ன பேசுகிறார்கள்? கண் தெரியாவிட்டாலும் நல்லவேளையாகக் காது கேட்கிறது; கவனித்துக் கேட்கலாம். "உங்கள் மனைவிக்கு நினைவு வந்து கொண்டிருக்கிறது. கண்ணிமைகள் கொஞ்சம் அசைகின்றன. சீக்கிரத்தில் கண்ணை விழித்துக் கொள்வாள்." "இன்றைக்குச் சீதாவுக்குப் புனர் ஜென்மம்தான். உன்னாலேதான் சீதா பிழைத்தாள் நீதான் அவளுக்கு இரண்டாவது தாயார்!" "சீதா தாயில்லாப் பெண் என்று கேள்விப்பட்டேன் அது உண்மையா?" "தாய் இல்லாமல் பெண் எப்படி வருவாள்? இராமாயண சீதையைப்போல் பூமியிலிருந்தே வந்து விடவில்லை. தாயார் வயிற்றில்தான் பிறந்தாள் ஆனால் இப்போது அவளுக்குத் தாய் உயிரோடில்லை. இனிமேல் நீதான் அவளுக்குத் தாயார்." "அப்படியே ஆகட்டும் சீதாவுக்கு நான் தாயார் என்றால், நீங்கள் எனக்கு மாப்பிள்ளையாக வேண்டும். அழகான மாப்பிள்ளை நீங்கள்! கட்டிய மனைவி தண்ணீரில் முழுகிக் கொண்டிருக்கையில், படகிலிருந்து இறங்காமலிருந்த மாப்பிள்ளை!" "அதற்கு நீதான் காரணம்! பலாத்காரமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டாய்! அதைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எப்படித் தண்ணீரில் திடீரென்று குதிக்க முடியும்? அந்த முட்டாள் படகுக்காரன் உளறியதை நீ புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. இந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேல் தண்ணீர் கிடையாதாம், சீதா தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்தால் கூடச் சாத்தியமாகியிராது."

"போதும், நிறுத்துங்கள்! சீதாவுக்குப் பிரக்ஞை வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் உங்களுடைய மடியில் எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அவளுக்கு நல்ல நினைவு வரும் போது, என்னுடைய மடியில் அவள் படுத்திருப்பதையும், உங்களுடைய உடுப்புக் கூட நனையாமல் இருப்பதையும் பார்த்தால் ஒரு நாளும் உங்களை மன்னிக்க மாட்டாள்!" "உனக்குத் தெரியாது, தாரிணி! உனக்குத் தெரியாது. எங்கள் ஊர்ப் பெண்களுக்கு எவ்வளவு தூரம் மன்னிக்கும் சக்தி உண்டு என்பது உனக்குத் தெரியாது!" மேலே கண்ட சம்பாஷணையில் எல்லா விவரங்களும் சீதாவின் மனதில் பதியவில்லை, சில சில வார்த்தைகள்தான் பதிந்தன. ஆனால் அவற்றிலிருந்து தான் முழுகுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் நன்றாக நினைவுக்கு வந்துவிட்டன. ஏரியில் விழுந்து தத்தளித்து முழுகிக் கொண்டிருந்த தன்னைக் காப்பாற்றியது தாரிணி என்பதைத் தெரிந்து கொண்டாள். தான் அப்போது தாரிணியின் மடியில் படுத்திருப்பதையும் உணர்ந்தாள். ராகவன் 'மன்னிக்கும் சக்தி'யைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது தாரிணி தன்னை அலுங்காமல் எடுத்து ராகவன் மடியில் போட்டதையும் அவள் உணர்ச்சியினால் அறிந்தாள்.

"சீதா! சீதா!" என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் அவளுடைய கண்ணிமைகளைத் தொட்டான், உடனே கண்கள் திறந்து கொண்டன. திறந்த கண்கள் ராகவனுடைய முகத்தை உற்று நோக்கின. அந்தக் கண்களின் மூலமாகச் சீதா என்ன செய்தி கூறினாளோ நமக்குத் தெரியாது. "ஆம்; நீ எவ்வளவு கிராதகராயிருந்தாலும் உம்மை மன்னிக்கும் சக்தி என்னிடம் இருக்கிறது!" என்றுதான் சொன்னாளோ, அல்லது, "என்னுடைய மன்னிக்கும் சக்திக்கும் ஒரு வரம்பு உண்டு" என்று எச்சரிக்கை தான் செய்தாளோ, நாம் அறியோம். "சீதா! நான் யார் தெரிகிறதா, நன்றாகப் பார்த்துச் சொல்!" என்றான் ராகவன். சீதா ஈனஸ்வரத்தில், "தெரியாமல் என்ன? தாங்கள் மிஸ்டர் சௌந்தரராகவன் எம்.ஏ." என்றாள். "பலே! பலே! அப்படிச் சொல்லு!" அதோ உன் எதிரில் இருக்கிறது யார் தெரிகிறதா? சொல் பார்க்கலாம்." "தெரியாமல் என்ன? என் அம்மாவை எனக்குத் தெரியாமல் இருக்குமா!" "இதைக் கேட்ட ராகவன் சிறிது திடுக்கிட்டான். தானும் தாரிணியும் சற்று முன் பேசியது அவள் காதில் விழுந்ததா என்ன? மூளை கலங்கிப் போய்விட்டதா? சீதா ராகவனுடைய மடியிலிருந்து சட்டென்று எழுந்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று மற்ற இருவரும் யோசிப்பதற்கு முன்பு தாரிணிக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். "நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; எனக்கு இது புனர் ஜன்மம். இந்தப் புது ஜன்மத்துக்கு நீங்கள்தான் என் அம்மா!" என்றாள்.

தாரிணி அதை மறுக்க எண்ணி, "சீதா! நீ தவறு செய்கிறாய்! உன்னைக் கப்பாற்றியது நான் அல்ல; உன்னுடைய கணவர்..." என்பதற்குள், சீதா, "எல்லாம் எனக்குத் தெரியும்; அவருடைய உலர்ந்த உடுப்பையும் உங்களுடைய ஈரப்புடவையையும் பார்த்தாலே தெரியவில்லையா?" என்றாள். இதற்குள், ராகவன் குறுக்கிட்டு, "இல்லை சீதா? தாரிணி சொல்கிறது பொய், நீ ஊகித்ததுதான் உண்மை. தாரிணிதான் உன்னைக் காப்பாற்றினாள். எனக்கு நீந்தத் தெரியாது என்பது தான் உனக்குத் தெரியுமே! உன்னை நான் தனியாக அழைத்து வந்திருந்தால் நம்முடைய கதி அதோகதிதான். அடுத்த தடவை உன்னைப் படகில் ஏற்றி அழைத்துப் போவதற்குள்ளே நீந்தக் கற்றுக் கொண்டு விடுகிறேன்!" என்றான். "எனக்காக நீந்தக் கற்றுக் கொள்ள வேண்டாம்; நான் இனிமேல் தண்ணீருக்குச் சமீபத்தில் கூடப் போகப் போவதில்லை" என்று கூறினாள் சீதா. சீதாவின் உள்ளத்தில் என்றுமில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆனந்தம் அவளுடைய உடம்பின் நரம்பின் ஒவ்வொரு அணுவிலும் வெளியாகிக் கொண்டிருந்தது. யமலோகத்தின் வாசலிலிருந்து தான் திரும்பி வந்த விஷயத்தை அவள் நன்கு உணர்ந்தாள். கொஞ்சம் தாமதித்திருந்தால் உயிர் போயிருக்கும். இது தனக்குப் புனர் ஜன்மம்; மறுபிறப்பு, தான் இன்னும் ஜீவித்திருப்பது உண்மை. எதிரே தோன்றிய நீல நிற ஏரி, பசுந்தளிர் விருட்சம், வெண்ணிறப் பறவைகள் இவையெல்லாம் உண்மை. தூரத்தில் இருண்டு வந்த இடத்தில் வானம் குனிந்து பூமியைத் தழுவுவதும் உண்மை.

தான் ராகவனுடைய மடியில் படுத்திருப்பதும் உண்மை. எதிரே ஈரப் புடவையுடனும் கருணை நிறைந்த முகத்துடனும் தாரிணி உட்கார்ந்திருப்பதும் உண்மை. படகும் உண்மை; மோட்டார் காரும் உண்மை. புதுடில்லி பங்களாவில் மாமியாரிடம் விட்டு வந்திருக்கும் தன் அருமைக் கண்மணியும் உண்மை. ஆகா! இந்த உலகம் எவ்வளவு ஆனந்த மயமானது? உயிரோடு வாழ்வது எவ்வளவு இன்பகரமானது? இந்த வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் கொள்வது போல் மூடத்தனம் வேறு உண்டா? மூன்று பேரும் அன்றிரவு திவானுடைய வீட்டுக்குப் போனபோது வெளியூருக்குப் போயிருந்த திவான் வந்து சேர்ந்திருந்தார். ஏரியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவரும் அவருடைய குமாரிகளும் மிக்க கவலைக்கும் பரபரப்புக்கும் உள்ளானார்கள். தாரிணியின் தைரியத்தைப் பெரிதும் பாராட்டினார்கள். தாரிணியைத் திவானுக்குப் பெரிதும் பிடித்துப் போய்விட்டது. அவள் தன் தோழியையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து விட வேண்டும் என்றும், எல்லாரும் தன் வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும் என்றும் சொன்னார். அதை அவருடைய குமாரிகளும் ஆமோதித்தார்கள் சீதாவோ மிகவும் வற்புறுத்தினாள். ஆகவே, தாரிணியும் நிருபமாவும் திவானுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். திவான் வீடு அந்த இரண்டு நாளும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த இரண்டு நாளைக்கு சீதாவும் தாரிணியும் இணை பிரியாத அத்தியந்த சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். ராகவன் இதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான். சீதாவின் மனதில் ஏற்பட்டிருந்த களங்கம் அடியோடு நீங்கி விட்டதாகக் காணப்பட்டது.

டில்லிக்குப் போவதற்கு முதல் நாள் தாரிணியும் சீதாவும் தனியாக இருக்க நேர்ந்தபோது, "சீதா! அன்றைக்கு உன்னிடம் ஒரு விஷயம் கேட்டேன். அதற்கு நீ சரியாகப் பதில் சொல்லவில்லை. நீ கழுத்தில் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப் பற்றித்தான். இப்போதாவது அதைப்பற்றிச் சொல்லலாமா?" என்றாள் தாரிணி. "அக்கா! அன்றைக்கு எனக்கு ஏதோ பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் அகாரணமாகக் கோபம் வந்தது. நீங்கள் கூடப் படகில் 'ஹிஸ்டீரியா' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு 'ஹிஸ்டீரியா' தானோ என்னமோ? இல்லாவிட்டால் உங்கள் பேரில் எனக்கு எதற்கு அப்படிக் கோபம் வரவேண்டும்? நினைத்துப் பார்த்தால் வெட்கமாயிருக்கிறது!" என்றாள் சீதா. "அதைப்பற்றி நினைக்க வேண்டாம், சீதா! காரணம் எதுவாயிருந்தாலும் ஏரியில் அதற்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டாய்! அடியோடு பழைய கதையெல்லாம் மறந்துவிடு!" என்றாள் தாரிணி. "ஆகட்டும்; மறந்துவிடப் பார்க்கிறேன். நான் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப்பற்றி நானே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அதுவே நினைவாக இருக்கிறது." "அது என்ன? இந்த ஊருக்கும் உன்னுடைய ரத்தின ஹாரத்துக்கும் என்ன சம்பந்தம், சீதா!" "நேரான சம்பந்தமில்லைதான் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்பாக ஞாபகம் வந்து கொண்டிருந்தது; சொல்கிறேன், கேளுங்கள்!"

இந்த முகவுரையுடன் சீதா ரத்தின ஹாரம் தனக்குக் கிடைத்த கதையைச் சொல்லத் தொடங்கினாள். தன்னுடைய தாயார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்தபோது முகமூடி அணிந்த அந்த ஸ்திரீ திடுதிடுவென்று மச்சுப்படி ஏறி வந்தது. தாயாரிடம் இந்த ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துத் தன்னுடைய கலியாணத்துக்காக என்று சொன்னது, கத்தியை மறந்து வைத்துவிட்டுப் போனது, திரும்பி வந்து கத்தியை எடுத்துக் கொண்டு தன்னைக் கட்டி முத்தமிட்டுப் போனது ஆகிய எல்லா விவரங்களையும் சொன்னாள். பிறகு தானும் அம்மாவும் கிட்டாவய்யருடன் கிராமத்துக்குப் புறப்பட்டபோது ரயில்வே ஸ்டேஷனில் பத்திரிகைச் சிறுவர்கள் கூறியதையும், பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்தவுடன் தனக்கு உண்டான சந்தேகத்தையும் பற்றிக் கூறினாள். "அக்கா! பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ எனக்கு இந்த ரத்தின ஹாரத்தைக் கொடுத்தவள் தானோ என்கிற சந்தேகம் என் மனதில் அப்போதே உதித்தது. இந்த ஊருக்கு நாம் வந்து சேர்ந்தது முதல் அந்த ஸ்திரீயைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் இவரும் ஏரிக்கரையில் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேச்சு எடுத்தார். அக்கா! உங்களுக்கு அதைப்பற்றி என்ன தோன்றுகிறது?" என்றாள் சீதா.

"உன்னுடைய சந்தேகத்தில் உண்மை இருக்கலாம். ஆனாலும் நீ யாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாமலிருப்பதே நல்லது. உன் கணவரிடம் இதைப்பற்றி எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?" என்றாள் தாரிணி. "சொல்லவில்லை சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்கமாட்டார்" என்றாள் சீதா. "சொல்லாமலிருப்பதே நல்லது; புருஷர்களுடைய மனப் போக்கு விசித்திரமானது. ஒரு சமயம் அலட்சியமாய் விட்டாலும் விடுவார். இன்னொரு சமயம் 'இந்த ரத்தின மாலை என்னத்திற்கு?' என்று எடுத்து ஏரியில் எறிந்தாலும் எறிந்து விடுவார்." "அந்தப் பயத்தினாலேதான் நானும் அவரிடம் சொல்லவில்லை." "உன் தாயார் கொடுத்த சீதனத்தை நீ பத்திரமாய்க் காப்பாற்ற வேண்டும் . உன் தாயார் பெயர் என்ன, சீதா?" சீதாவின் தாயார், தகப்பனார் பெயர் முதலிய விவரங்களைக் கேட்டுத் தாரிணி தெரிந்து கொண்டாள். பிறகு, "உன் அப்பா இப்போது எங்கே இருக்கிறார்? அவர் உன்னைப் பார்க்க வருவதுண்டா?" என்று கேட்டாள். "அப்பா என்னை வந்து பார்த்து எத்தனையோ நாளாயிற்று. அம்மா செத்துப் போய்விட்டாள், அப்பா உயிரோடிருக்கிறாரோ, இல்லையோ, தெரியாது. கடிதம் கூட வெகு நாளாய் வரவில்லை. அக்கா! நான் அனாதை, தேவ பட்டணத்தில் என் மாமா பெண் லலிதா இருக்கிறாள். என் அருமைத் தோழி, இப்போது நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் தவிர எனக்கு வேண்டியவர்களே கிடையாது."

சற்றுப் பொறுத்துத் தாரிணி, "சீதா! ரத்தின மாலை கொடுத்த அந்த ஸ்திரீ யார் என்று உன் தாயார் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா?" என்று கேட்டாள். "இல்லை; ஒருவேளை அம்மாவுக்கும் அது தெரிந்திராது தெரிந்திருந்தாலும் என்னிடம் சொல்லவில்லை." "சீதா! அந்த ஸ்திரீயை அப்புறம் நீ பார்த்ததேயில்லையே? "ஒரு தடவை பார்த்திருக்கிறேன்." "எங்கே? எப்போது?" சீதா புதுடில்லியில் தான் குடியிருந்த வீட்டுக்குத் திரும்பவும் நாற்சந்தில் ஒரு நாள் கத்தியும் கையுமாக அந்த ஸ்திரீயைப் பார்த்தது பற்றிச் சொன்னாள். "அடாடா! அவளைப் பார்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் என் கண்ணில் படவில்லை." "அப்படியா, அக்கா! அவளை எதற்காக நீங்கள் தேட வேண்டும்? உங்களுக்கு அவளைத் தெரியுமா என்ன?" "தெரியும், சீதா!" "எப்படித் தெரியும்?" "அவள் என் தாயார்!" ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனாள் சீதா. தாரிணியை வெறிக்கப் பார்த்தாள். "இப்போது தெரிகிறது உண்மை! தங்களுடைய முகஜாடை எங்கேயோ பார்த்த ஞாபகத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது எதனால் என்று இப்போது தெரிகிறது" என்றாள். "சீதா! நீ நினைப்பது தவறு; அந்த ஸ்திரீ என்னுடைய சொந்தத் தாயார் அல்ல; என்னை வளர்த்த தாயார். என்னுடைய சொந்தத் தாயாரும் தகப்பனும் யார் என்பதும் இன்று வரையில் எனக்குத் தெரியாது. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத் தான் ரஸியாபேகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்." "அவள் பெயர் ரஸியாபேகமா? அவள் முஸ்லிம் ஸ்திரீயா?"

"ஆம்; என்னை வளர்த்தவள் முஸ்லிம் ஸ்திரீதான். நாலு வருஷத்துக்கு முன்னால் நான் பீஹாருக்குப் போயிருந்தேன். அங்குப் பூகம்ப விபத்துக்கு உள்ளானவர்களுக்குத் தொண்டு செய்வதற்காக. அந்தச் சமயம் ரஸியாபேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்ததற்காக இரண்டு வருஷம் சிறைக்குப் போய்விட்டாள். விடுதலையடைந்த பிறகு எவ்வளவோ தேடியும் பார்க்க முடிய வில்லை. சீதா! நான் எப்பேர்ப்பட்ட துர்ப்பாக்கியசாலி என்று தெரிந்து கொண்டாயல்லவா?" சீதாவின் கண்களில் நீர் ததும்ப, "அக்கா! அந்த ஸ்திரீயை மறுபடியும் நான் பார்த்தால் அவசியம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்" என்றாள். "அதோடு நான் அவளை அவசியம் பார்க்க வேண்டும் என்று சொல்லு. அப்படிப் பார்க்க முடியாவிட்டால் நான் என்னுடைய உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் சொல்லு!" "அக்கா! அப்படியெல்லாம் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது. உங்களைத்தான் நான் முழுவதும் நம்பியிருக்கிறேன்" என்றாள் சீதா.
 

Latest posts

New Threads

Top Bottom