Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதினாறாம் அத்தியாயம்

தேவபட்டணம் தேர்தல்

"என் உயிருக்குயிரான அருமைத் தோழி சீதாவுக்கு, உன்னுடைய அன்பான கடிதம் கிடைத்தது. நீங்கள் எல்லாரும் தாஜ்மகாலுக்குப் போனது பற்றியும் ஆக்ரா கோட்டையில் பார்த்த அதிசயங்களைப் பற்றியும் விவரமாக எழுதியிருந்ததைப் படித்து அளவில்லாத சந்தோஷம் அடைந்தேன், ரொம்ப ரொம்ப வந்தனம். அதையெல்லாம் படித்தபோது எனக்கு உங்களுடன் வந்து எல்லாக் காட்சிகளையும் பார்த்தது மாதிரியே இருந்தது. உங்களுடன் வந்து நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தமாயும் இருந்தது. அந்தப் பாக்கியம் எனக்கு எப்போது கிடைக்குமோ, தெரியவில்லை! இந்த ஜன்மத்தில் கிடைக்கும் என்றே தோன்றவில்லை. இவரிடம் நீங்கள் எல்லாரும் தாஜ்மகால் பார்த்தது பற்றிச் சொல்லி, "எப்போதாவது நாமும் போய் வரலாமா?" என்று கேட்டேன். வழக்கம் போல் தூக்கி எறிந்து பேசிவிட்டார். "நம்முடைய தமிழ்நாட்டில் பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. தஞ்சாவூர்ப் பெரிய கோவிலைப் பார்க்கவில்லை; மாமல்லபுரத்துக் கற்கோயில்களைப் பார்க்கவில்லை. தாஜ்மகால் பார்க்காததுதான் குறையாய்ப் போய்விட்டதாக்கும்!" என்றார். இவரிடம் ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது. எங்கள் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த என் மாமியார் வேறே ஆரம்பித்துவிட்டாள். 'ஏதோ காசி ராமேசுவரம் போகவேண்டும் என்று ஆசைப் படுவார்கள்; கேட்டதுண்டு. அந்த மாதிரி புண்ணிய ஸ்தலங்களுக்குப் போனால் போகிற கதிக்காவது பிரயோஜனமாக இருக்கும். துருக்க ராஜாக்கள் கட்டி வைத்த சமாதிகளைப் பார்க்க வேண்டுமென்று யாராவது ஆசைப்படுவார்களா? இந்தக் காலத்துப் பெண் களுடைய புத்தி ஏன்தான் ப்படியெல்லாம் போகிறதோ, தெரியவில்லை!" என்று ஒரு நாளெல்லாம் எனக்கு மண்டகப்படி செய்து கொண்டி ருந்தாள்! வெறும் வாயை மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்ததுபோல் ஆயிற்று.

வளைகாப்புக் கலியாணத்துக்குப் பிறகு நான் இங்கே வந்ததிலிருந்து என்னுடைய நிலைமை முன்னைவிட ரொம்ப மோசமாயிருக்கிறதடி, சீதா! நான் என்னவென்று சொல்வேன்? ஒரு விஷயத்தைக் கேள்! எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் தாமோதரன்பிள்ளை என்று ஒருவர் இருக்கிறார் அவரும் வக்கீல்தான். என் மாமனாரும் அவரும் வெகு காலம் ரொம்ப சிநேகிதமாயிருந்தார்களாம். தாமோதரம்பிள்ளையின் மகனுக்கு அமரநாத் என்று பெயர். அமரநாத்துக்கும் இவருக்கும் ரொம்ப சிநேகிதம் . நம்ம சூரியா இங்கே படித்தபோது மூன்று பேரும் சேர்ந்தாற்போலேயே இருப்பார்களாம். அமரநாத்துக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னால் கலியாணம் நடந்தது. பெண், திருநெல்வேலிப் பெண்; அவளுடைய தகப்பனார் டிபுடி கலெக்டராம். நம் இரண்டு பேரையும்விட அதிகமாகப் படித்தவள். படித்திருக்கிறோம் என்ற கர்வம் கொஞ்சம் கூடக் கிடையாது. அவளுடைய கலியாணத்தின் போதே எனக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வருஷத்துக்கு முன்னால் அவள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அவள் எனக்கு சிநேகிதியானாள். உன்னைப் போன்ற பிராண சிநேகிதியில்லாவிட்டாலும் பேச்சுத் துணைக்குச் சௌகரியமாயிருந்தது. வெளியில் எங்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த எனக்கு, சித்ராவின் சிநேகிதம் ஆறுதலா யிருந்தது. தினசரி நானாவது அவள் வீட்டுக்குப் போவேன் அல்லது அவளாவது எங்கள் வீட்டுக்கு வருவாள். இம்மாதிரி நாங்கள் சிநேகமானது எங்கள் அகத்துக்காரர்களுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது.

சீதா! அதெல்லாம் இப்போது பழங்கதையாகப் போய் விட்டது. இப்போது நாங்கள் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதில்லை. ஒருவரை யொருவர் பார்ப்பதுமில்லை; பேசுவதுமில்லை காரணம் என்ன தெரியுமா? நான் ராஜம்பேட்டைக்குப் போயிருந்தபோது இந்த ஊரில் முனிசிபாலிடி எலெக்ஷன் வந்ததாம். அந்த எலெக்ஷனில் எதிர் வீட்டுத் தாமோதரன்பிள்ளை நின்றாராம். என் மாமனாருடைய இன்னொரு சிநேகிதரான ராஜாராம்அய்யர் என்பவரும் நின்றாராம். என் மாமனார் ராஜாராமய்யருக்காக வேலை செய்தாராம். ஏதோ ஒரு கூட்டத்தில் தாமோதரன்பிள்ளையை 'வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிறவன்' என்று சொன்னாராம். அதற்காகத் தாமோதரன்பிள்ளை இவரைப் 'பாப்பாரப் புத்தியைக் காட்டி விட்டான்!' என்று திட்டிவிட்டாராம். இதிலிருந்து சண்டை முற்றிவிட்டது. இப்போது இரண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தையுமில்லை; போக்குவரத்துமில்லை. முப்பது வருஷமாகச் சிநேகிதர்களாக இருந்தவர்கள் இப்போது 'குத்து வெட்டு' என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். அடியே! சீதா! வயதானால் புத்தி கெட்டுப் போய் விடுமோடி! முனிசிபாலிடி என்றால், குப்பைத் தொட்டி கூட்டுகிற சமாசாரமாம்! தோட்டிகளை வைத்துத் தெருக் கூட்டும் வேலையைச் சரியாய்ச் செய்வதற்குதான் முனிசிபாலிடியாம்! சம்பளம் கிடையாதாம்! இந்தக் குப்பை கூட்டுகிற பதவிக்காக இப்படி இவர்கள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா என்று ஆச்சரியமாயிருக்கிறது. இதன் காரணமாக எனக்கு இங்கே கிடைத்திருந்த ஒரு சிநேகிதியையும் இழந்துவிட்டேன். சற்று நேரம் எதிர் வீட்டுக்கு போய்ப் பேசிக் கொண்டிருப்பதும் போய்விட்டது. வீடு அசல் சிறைச்சாலை ஆகிவிட்டது.

என்னுடைய கதை இருக்கட்டும், சீதா! நீ ரஜினிபூருக்குப் போனது பற்றிச் சுருக்கமாக எழுதியிருந்தாய். ஏரியில் விழுந்து ஆபத்தில்லாமல் எழுந்ததாக எழுதியிருந்தாய். ஏதோ தமாஷ் என்று நானும் எண்ணினேன். ஆனால் சூரியா எழுதியிருந்த கடிதத்திலிருந்து உண்மை தெரிந்தது. பெரிய கண்டத்திலிருந்து நீ தப்பிப் பிழைத்தாயாமே? அதென்னடி, உன் அகத்துக்காரர் படகிலேயே இருந்து விட்டார்; யாரோ தாரிணி என்று ஒருத்தியாம், அவளும் உங்களோடு படகில் வந்தாளாம். அவள்தான் ஏரியில் குதித்து உன்னைக் காப்பாற்றினாளாமே? அவள் மட்டும் இருந்திராவிட்டால் உன்னுடைய கதி என்ன ஆகியிருக்கும்? என்னுடைய கதிதான் என்ன ஆகியிருக்கும்? ஏதோ ஒரு சமயம் எனக்கு நல்ல காலம் பிறக்கும். உன்னோடு கொஞ்ச நாள் தங்கியிருக்கலாம், டில்லி - ஆக்ரா எல்லாம் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீ இப்படியெல்லாம் உன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்வது நன்றாயில்லை. உன் அகத்துக்காரரை நான் எபோதாவது பார்க்க நேர்ந்தால், அவரை நன்றாகத் திட்டுவது என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆண் பிள்ளைக்கு நீந்தத் தெரிய வேண்டாமா? நீந்தத் தெரியாவிட்டாலும் அப்படியா பார்த்துக் கொண்டு படகிலேயே உட்கார்ந்திருப்பது! இவரிடம் நேற்றுச் சொன்னபோது ரொம்பவும் வருத்தப்பட்டார். உன் அகத்துக்காரர் பேரில் கோபமும் பட்டார். "அவனும் ஒரு ஆண் பிள்ளையா?" என்றும் கேட்டு விட்டார். இவர் பேரில் எனக்கு எவ்வளவோ குறை இருக்கிறது. ஆனாலும் அந்த மாதிரி ஆபத்தான நிலைமையில் இவர் சும்மாயிருந்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

சென்ற வருஷம் இந்த ஊர்க் காவேரி வெள்ளத்தில் ஒரு சிறு பெண் முழுகிச் செத்துப் போக இருந்தாளாம். இவர் தைரியமாகக் காவேரியில் குதித்து நீந்திப் போய் அவளைக் கரை சேர்த்து உயிர் பிழைக்கச் செய்தாராம். இது விஷயத்தைப்பற்றி இந்தத் தேவபட்டணம் முழுவதும் சென்ற வருஷத்தில் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். உன்னுடைய அகத்துக்காரர் அப்படி நடந்து கொண்டதைப் பற்றி எனக்கு உண்மையாகவே கோபமாயிருக்கிறது, சீதா! சூரியாவைக் கூட நான் நன்றாகத் திட்டிக் கடிதம் எழுதியிருக்கிறேன். உங்களோடு ஆக்ராவுக்கு வந்தவன் ரஜினிபூருக்கு வராமல் எதற்காகத் திரும்பி வரவேண்டும்? அப்படி என்ன தலை போகிற காரியம் அவனுக்கு? இனிமேல் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றும், உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறேன். சீதா! நீயும் அவனைக் கொஞ்சம் கவனித்துக்கொள். சூரியாவை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. ஊரை விட்டு, நாட்டை விட்டு, வீடு வாசலை விட்டு, டில்லிப் பட்டணத்துக்குப் போய், நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். ஒரு அதிசயத்தைக் கேள்! என்னிடம் ஏதாவது பணம் இருந்தால் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அல்லது என் கணவரிடம் கேட்டு வாங்கியாவது அனுப்பும்படி எழுதியிருக்கிறான். பணம் வேண்டும் என்று வீட்டுக்கு எழுதவும் மாட்டானாம்; அப்பா பணம் அனுப்பினால் பெற்றுக் கொள்ளவும் மாட்டானாம். இந்த மாதிரிப் பிள்ளை எங்கேயாவது உண்டா? கொஞ்சம் சூரியாவை எனக்காகப் பார்த்துக் கொள்.

குழந்தை வஸந்தி நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வருகிறாள் என்று நம்புகிறேன். சமர்த்தாகப் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறாளா? வஸந்தி பிள்ளைக் குழந்தையாகப் பிறந்திருந்து எனக்குப் பிறப்பது பெண்ணாக இருக்கக்கூடாதா என்று அடிக்கடி எனக்குத் தோன்றுகிறது. எதற்காக என்று சொல்ல வேண்டுமா? புதிரை நீயே அவிழ்த்துக் கொள். இப்படிக்கு, உன் பிராணசகி லலிதா. மேற்கண்ட கடிதத்தைச் சீதா படித்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தாள் இரவு மணி 8.30 ஆகியிருந்தது. இன்னும் அவர் ஏன் வரவில்லை? தானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருக்கிற நாளாகப் பார்த்துத்தானா அவரும் வழக்கத்தைவிட நேரம் கழித்து வீட்டுக்கு வரவேண்டும்? ஆம்; அன்று சீதாவும் குழந்தையும் தன்னந்தனியாக அந்தப் புதுடில்லி வீட்டில் இருந்தார்கள். இதன் காரணம் என்னவென்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதினேழாம் அத்தியாயம்

"லலிதா! பயமாயிருக்கிறது....!"

ஜூன் மாத ஆரம்பத்தில் புதுடில்லியில் வெப்பநிலை 110 டிகிரிக்கு வந்திருந்தது. பகலில் வெளியில் கிளம்பியவர்கள் சுண்ணாம்புக் காளவாயில் தங்களைப் போட்டு விட்டதுபோல் தவித்தார்கள். இரவில் வீட்டில் இருந்தவர்கள் செங்கல் சூளையில் போட்டவர்களைப்போல் வெந்தார்கள். பகலிலும் சரி, இரவிலும் சரி, காற்று அடித்தால் நெருப்பாக அடித்தது. எந்தப் பொருளைத் தொட்டாலும் தணலைப்போல் சுட்டது. விளாமிச்ச வேர் தட்டிகளில் விடப்பட்ட ஜலம் கீழே சொட்டும்போது வெந்நீராக மாறிச் சொட்டியது!" புதுடில்லியில் வீற்றிருந்து இந்திய தேசத்தின் மீது செங்கோல் செலுத்தி வந்த வைஸ்ராய்ப் பிரபுவும், அதிகார வர்க்கக் கணங்களில் பெரும்பாலோரும் மூளைக் கொதிப்புக்கு அஞ்சிச் சிம்லா மலையுச்சிக்குப் போய்விட்டார்கள். சௌந்தரராகவனும் சீதாவுங்கூடச் சிம்லாவுக்குப் போவதாக இருந்தது. காமாட்சியம்மாள் தனக்கு மலைவாசம் ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டி ருந்தாள். இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து அவளுடைய தமையன் குமாரிக்குக் கலியாணம் என்று கடிதம் வந்தது. ஊருக்குப் போய் ஒரு மாதத்துக்குள் வருவதாகச் சொல்லி விட்டுக் காமாட்சி அம்மாள் போய் விட்டாள். ஆனால் எதிர்பாராத ஏதோ முக்கியமான வேலை வந்து விட்டபடியால் ராகவன் அந்த வருஷம் சிம்லாவுக்குப் போக முடியவில்லை. "நீ மட்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா? எத்தனையோ ஸ்திரீகள் தனியாகப் போகிறார்கள்; பயம் ஒன்றுமில்லை" என்று ராகவன் சொன்னான். "அதெல்லாம் முடியாது! நீங்கள் வராமல் எனக்கு மட்டும் தனியாக மலைவாசம் என்ன வந்தது? போக மாட்டேன்!" என்று சீதா கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.


ராகவனும் சீதாவும் மலைவாசம் வேண்டாமென்று டில்லியில் இருந்துவிடத் தயாராயிருந்தாலும், அவர்கள் வீட்டு வேலைக்காரன் அப்படியிருக்கச் சம்மதிக்கவில்லை. அவன் நேபாள தேசத்திலிருந்து வந்தவன். "இந்த உஷ்ணத்தை என்னால் சகிக்க முடியாது!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தவன், ஒரு நாள் திடீரென்று சொல்லிக் கொள்ளாமலேயே நடையைக் கட்டிவிட்டான். வீட்டு வேலைக்காரிக்குக் கூட அன்றைக்கு என்னமோ பைத்தியம் பிடித்துவிட்டது. "மூன்று நாள் லீவு வேண்டும்" என்று எஜமானியைக் கேட்டாள். "முடியாது" என்று சீதா சொன்னாள். "அப்படியானால் உங்கள் வேலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். ஆகவேதான் சீதா குழந்தையுடன் அன்று மாலை வீட்டில் தனியாக இருந்தாள். எட்டு மணி வரையில் வஸந்தி, "அப்பா எப்ப வதுவா?" என்று கேட்டுக் கொண்டிருந்து விட்டுத் தூங்கிப் போய் விட்டாள். குழந்தை தூங்கிய பிறகு சீதா தனிமையை அதிகமாக உணரத் தொடங்கினாள். அன்றைக்கு ராகவன் ஆபீசுக்குக் கிளம்பியபோது, "இன்றைக்கு எப்படியாவது சூரியா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவனை அழைத்துக்கொண்டு வந்து சேருகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போனான். அதனாலேதான் இன்னும் வரவில்லையோ என்னமோ? சூரியாவைத் தேடிக் கொண்டிருக்கிறாரோ, என்னமோ? சூரியா மட்டும் இன்றைக்கு வரட்டும்; அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்! லலிதாவுக்கு என்னவெல்லாம் எழுதியிருக்கிறான்? ரஜினிபூர் ஏரி சம்பவத்தைப் பற்றி இவன் எதற்காக எழுத வேண்டும்? அப்படியே இவன் எழுதினாலும் அவள் வேறே தன் அகத்துக்காரரிடம் சொல்லியிருக்கிறாள்! அவர்கள் எல்லாரும் இவரைப் பற்றித்தான் என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்....

என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அந்தப் பட்டிக்காட்டு ஜன்மங்கள் என்ன நினைத்துக் கொண்டால் இங்கே யாருக்கு என்ன? இருந்தாலும் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கலாம். பார்க்கப் போனால் அவளைத் தவிர நமக்குத்தான் யாரிருக்கிறார்கள்! தாரிணியின் சிநேகிதத்தைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தோமே? டில்லிக்கு வந்த பிறகு அவள் ஒரு தடவையாவது வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. லலிதாவாயிருந்தால் இப்படியிருப்பாளா? எப்படியும் பழைய சிநேகிதத்துக்கு இணையாகாது. புது சிநேகிதமெல்லாம் ரயில் சிநேகிதம் மாதிரிதான். இந்த முடிவுக்கு வந்த சீதா லலிதாவுக்குப் பதில் எழுதத் தொடங்கினாள். "என் உயிருக்குயிரான லலிதா! உன்னுடைய விவரமான கடிதம் கிடைத்தது, ரொம்பவும் சந்தோஷம் அடைந்தேன். தேவபட்டிணத்தில் நடந்த குப்பைத்தொட்டி எலெக்ஷனைப் பற்றி எழுதியிருந்தது ரொம்ப வேடிக்கையாயிருந்தது. அதனால் உன்னுடைய சிநேகிதியை நீ இழந்துவிட்டதையும் கவனித்தேன். உனக்கு நன்றாக வேணும், லலிதா! நான் ஒருத்தி உன் பிராண சிநேகிதி இருக்கும்போது வேறொரு சிநேகிதம் நீ எவ்வாறு செய்து கொள்ளலாம்? ஆகையினால்தான் கடவுள் உன்னை இந்த விதமாகத் தண்டித்திருக்கிறார்.


ஆனால் நானும் இங்கே சில புதிய சிநேகிதங்கள் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ரஜினிபுரத்துத் திவான் குமாரிகளைப் பற்றி முன் கடிதத்தில் எழுதியிருக்கிறேன் அல்லவா? அவர்கள் மூன்று வாரத்துக்கு முன்னால் இங்கே வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கும் வந்தார்கள். எல்லோருமாக வைஸ்ராய் அரண்மனையில் நடந்த 'கார்டன் பார்ட்டி'க்குப் போயிருந்தோம். அம்மம்மா! அதைப்பற்றி நான் என்னவென்று சொல்வது? அரபிக் கதைகளில் நாம் படித்திருக்கும் அற்புதக் காட்சிகளையும் சினிமாக்களில் பார்த்திருக்கும் அதிசயக் காட்சிகளையும் மிஞ்சிவிட்டது. வைஸ்ராய் தோட்டத்தின் அழகைச் சொல்வேனா? அங்கேயிருந்த புஷ்பச் செடிகளையும் அலங்கார விருட்சங்களையும் வர்ணிப்பேனா? மரங்களுக்குள்ளேயும் செடிக்களுக் குள்ளேயும் மறைத்துக் கண் கூசாதபடி விளக்குப் போட்டிருந்த அதிசயத்தைச் சொல்வேனா? அங்கே வந்திருந்த சீமான்களையும் சீமாட்டிகளையும் அவர்களுடைய அலங்கார உடைகளையும் ஆபரணங்களையும் வர்ணிப்பேனா? லலிதா! வெள்ளைக்கார ஸ்திரீகள் பளபளவென்று ஜொலித்த கறுப்பு உடைகளை அணிந்து வந்திருந்தார்கள். நம்முடைய நாட்டு ஸ்திரீகள் பலர் நம்முடைய நாட்டு வழக்கப்படி பல வர்ணச் சேலைகளை உடுத்திக்கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு புடவையும் ஒவ்வொரு மோஸ்தர். அவர்கள் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களும் அப்படியே, எல்லாம் ஒரே ஜொலிப்புத்தான் எனக்குத் திக்பிரமை யாயிருந்தது. ஆனால் திவானுடைய பெண்கள் பாமாவும் தாமாவும் இந்த மாதிரி 'பார்ட்டி'களுக்குப் பல தடவை போய்ப் பழக்கப்பட்டவர்களாதலால் அவர்களுக்குச் சகஜமாயிருந்தது. அஙகே வந்திருந்தவர்களில் அநேகம்பேரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது.


என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு நம்மைப் புதிதாக அறிமுகப்படுத்தியதும் அவர்கள் உடனே, 'ஹவ் டு யூ டு' என்று கேட்கும் அழகு ஒன்றே போதும்! லலிதா, வெள்ளைக்காரர்களைப் பற்றி அவர்கள் அப்படி, இப்படி என்று ஓயாமல் தூஷித்துக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோசனம்? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. முக்கியமாக, ஒருவருக்கொருவர் மரியாதையாக எப்படி நடந்து கொள்வது என்பதை வெள்ளைக் காரர்களிடமிருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவப்பட்டணம் தேர்தலைப் பற்றி நீ எழுதியிருந்தாயே? இங்கிலீஷ்காரர்களின் தேசத்திலுந்தான் தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்துவிட்டால், ஜயித்தவர்களைத் தோற்றவர்கள் தான் முதல் முதலில் பாராட்டுவார்களாம். நம்முடைய ஊரில் தேர்தலில் எதிர்க் கட்சியில் இருந்து விட்டால் அப்புறம் ஜன்ம சத்துருக்களைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்ன மூடத்தனம்! நவநாகரிகத்தின் அலங்காரங்களைப் பற்றிக் குறை சொல்லி உனக்கு முன்னே எழுதியிருந்தேன் அல்லவா? அந்த விஷயத்தில் கூட என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். வைஸ்ராய் மாளிகையில் நடந்த பார்ட்டியில் பார்த்தபோதுதான், 'லிப் - ஸ்டிக்' போட்டுக் கொள்வதிலும் ஒரு அழகு இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. இவர் கூட அடிக்கடி 'ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போலச் செய்ய வேண்டும்' என்ற இங்கிலீஷ் பழமொழியை எடுத்துச் சொல்வார். நானும் புதுடில்லியில் இருக்கும்போது புதுடில்லிக்காரர்களைப் போலத் தான் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். நம்முடைய பட்டிக்காட்டு வழக்கந்தான் சரியான வழக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் யார் கேட்பார்கள்? நீ தான் சொல்லேன்! நம்முடைய பாட்டிகள் முகத்தில் ஒரு வீசை மஞ்சளை அரைத்துப் பூசிக் கொண்டிருந்தார்கள்.


அப்படிச் செய்து கொள்ள நமக்கு இப்போதெல்லாம் பிடிக்கிறதா!.... சூரியா உனக்கு என்னவெல்லாமோ எழுதியிருக்கிறான் என்று தோன்றுகிறது அதையெல்லாம் நீ நம்ப வேண்டாம். சூரியா இங்கே வந்தால் அவனைச் சண்டை பிடிக்கலாம் என்று இருக்கிறேன். அவன் பார்க்காத விஷயத்தைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக் கொண்டு எதற்காக எழுதுகிறான்? அவனுக்கு யார் சொல்லியிருக்கக்கூடும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை, தாரிணி என்கிறவளைப்பற்றி எழுதியிருந்தானே, அவள்தான் ஏதாவது சொன்னாளோ, என்னமோ? அப்புறம் யோசித்துப் பார்க்க பார்க்க, அவள் பேரில் எனக்குச் சந்தேகம் உதிக்கிறது. அவள் விஷயம் எல்லாமே மர்மமாயிருக்கிறது. டில்லிக்கு வந்த பிறகு ஒரு தடவை கூட அவள் என்னை வந்து பார்க்கவில்லை. அதற்குப் பதிலாகச் சூரியாவைப் பார்த்துப் பொய்யும் புளுகும் சொல்லி வைத்திருக்கிறாள். நான் ஏரித் தண்ணீரில் விழுந்து முழுகும்போது என் அகத்துக்காரர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? அது சுத்தப்பொய். அந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேலே ஆழம் இல்லை என்று படகுக்காரன் சொன்னானாம். அதனாலேதான் இவர் கவலையின்றிப் படகிலிருந்தபடியே என்னை எடுத்து விடலாம் என்று இருந்தார். அதற்குள்ளே இந்தத் தாரிணி என்கிறவள் தனக்கு நீந்தத் தெரிகிற பெருமையைக் காட்டுவதற்காகத் தண்ணீரில் குதித்து விட்டாள். என்ன இருந்தாலும் புருஷர்கள் செய்ய வேண்டிய காரியத்தை ஸ்திரீகள் செய்தால் அவ்வளவு நன்றாயில்லைத்தான்! இந்த மாதிரி முந்திரிக் கொட்டை ஜன்மங்களும் உலகத்தில் இருக்கின்றன என்ன செய்யலாம்.


நான் ஜலத்தில் மூழ்கி மூர்ச்சை போட்டு விட்டேன் என்பது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் அலை பாதி; பயம் பாதி. அலை மோதித் தலைக்கு மேலே போனபோது முழுகிப் போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டு விட்டேன். லலிதா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி பயமாயிருக்கிறதடி! காரணமில்லாமலே திடீர் திடீர் என்று பயம் உண்டாகிறது. ஏதாவது வியாதிதானோ என்னமோ தெரியவில்லை. ராஜம்பேட்டைப் பட்டிக்காட்டிலே யென்றால், 'சங்காதோஷம்' என்றும், 'பேய் பிசாசு' என்றும் ஏதாவது கதை கட்டி விடுவார்கள். பாட்டிமார்கள் 'பில்லி சூனியம்' என்றும், 'ஏவல் வினை' என்றும் கதை கட்டி விடுவார்கள். அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையினால்தான் ஏதாவது வியாதியாயிருக்குமோ என்று பயப்படுகிறேன்.... இப்போது கூட பார்! திடீரென்று என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது! கை நடுங்குகிறது... ஜன்னலுக்கு வெளியே செடிகளின் சலசலப்புச் சத்தம் கேட்டால் எதற்காக நான் பயப்பட வேண்டும்?... வீட்டில் ஒருவரும் இல்லாவிட்டால் தான் என்ன? அடுத்த பங்களாவில் ஜனங்கள் இருக்கிறார்கள். ஒரு கூப்பாடு போட்டால் உடனே வந்து விடுவார்கள்.... அப்படியிருக்க, என்னுடைய பயத்துக்குக் கொஞ்சம் கூடக் காரணமேயில்லை!..." இந்த இடத்தில் சீதா கடிதத்தை நிறுத்தினாள். பயத்துக்குக் காரணமே இல்லை என்பது உண்மைதானா? லவலேசமும் காற்று அடிக்கவில்லையே? காற்றே இல்லாதபோது செடிகள் எப்படிச் சலசலக்கும்? ஜன்னல் வழியாகப் பார்க்கக்கூடாது என்ற மனத்தின் உறுதியை மீறி அவளுடைய கண்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தன.

பார்த்த நேரம் ஒரு வினாடிதான். உடனே கண்கள் இந்தப் பக்கம் திரும்பின வெளியே பார்த்த அந்த ஒரு வினாடி நேரத்தில் செடிகளின் மறைவில் ஒரு முக்காடு அணிந்த உருவம் போவது போலக் காணப்பட்டது. அது வெறும் பிரமையா? அல்லது உண்மையா? பிரமையோ, உண்மையோ, சீதாவின் நாக்கு பயத்தினால் தொண்டைக்குள்ளே போய்விட்டது போலத் தோன்றியது. கூச்சல் போட விரும்பினாள் ஆனால் சத்தம் வெளியில் வரவில்லை. கால்களும் கைகளும் நடுங்கின. பற்கள் ஒரு நிமிஷம் கிட்டிப் போயிருந்தன. அடுத்த நிமிஷம் கடகடவென்று அடித்துக் கொண்டன. பயப்பிராந்தி நீங்கிப் பழைய நிலைமை அடைவதற்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. சீ இதென்ன பைத்தியக்காரத்தனம்! இது என்ன வீண் பயம்? இவ்விதம் எண்ணி லலிதாவுக்கு எழுதிய கடிதத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மறுபடியும் எழுத முயன்றாள். ஆனால் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை. விஷயம் ஒன்றும் மனதிற்கு வரவில்லை. அதற்குப்பதிலாக, "வாசற் கதவையும் கொல்லைக் கதவையும் தாளிட்டோமா?" என்ற எண்ணம் தோன்றியது. வேலைக்காரி கோபித்துக் கொண்டு போனவள் ஒருவேளை பங்களாவில் கொல்லைக் கதவை கூடத் தாள் போட்டிருக்கமாட்டாள். ஆனால் ஒரு நாளும் இல்லாத பயம் இன்றைக்கு மட்டும் என்ன வந்தது? பயம் ஒன்றும் இல்லாவிட்டாலும் வாசற் கதவையும் கொல்லைக் கதவையும் தாளிட்டு வைப்பதே நல்லது. அதனால் கெடுதல் ஒன்றும் இல்லையல்லவா?...


இவ்வாறு முடிவு செய்து சீதா தைரியமாக எழுந்து சென்று வாசற்பக்கம் வந்தாள். சந்தடியே இல்லாதிருந்த சாலையின் இரு புறமும் உற்றுப் பார்த்தாள். கார் ஒன்றும் வரக் காணோம். கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். கொல்லைக் கதவையும் பார்த்து, ஒருவேளை திறந்திருந்தால் தாளிட்டு விட வேண்டியதுதான். இப்படி நினைத்துக் கொல்லைப் பக்கம் அடிஎடுத்து வைத்தபோது ஆ! அது என்ன சத்தம்? துப்பாக்கிச் சத்தம் இல்லை; இடி இடிக்கும் சத்தம் இல்லை; புலி உறுமும் சத்தம் இல்லை; பாம்பு சீறும் சத்தமும் இல்லை; குழாயிலிருந்து ஜலம் விழும் சர்வ சாதாரணமான சத்தம் தான்! அந்தச் சத்தம் ஸ்நான அறையி லிருந்து வந்து கொண்டிருந்தது! மறுபடியும் சீதாவின் நாக்கு அவளுடைய தொண்டைக்குள்ளே மடங்கிச் சென்று அடைத்துக் கொண்டது. அவளுடைய கால்கள் மேலே ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாமல் நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றன. தனக்குத் தெரியாமல் வீட்டுக்குள் யாரோ புகுந்து கொல்லைப்புறத்து ஸ்நானஅறைக்குள் சென்றிருக்க வேண்டும்; தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பதினெட்டாம் அத்தியாயம்

"யார் அங்கே?"

சீதாவுக்குத் திடீரென்று தைரியம் பிறந்தது. சீ! குழாயிலிருந்து தண்ணீர் விழுந்தால் அதற்காகப் பயப்படுவதா? ஒருவேளை தானே குழாயைத் திறந்துவிட்டு மறதியாக மூடாமல் வந்திருக்கலாம். ஆபீஸ் அறையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது அதைக் கவனியாமல் இருந்திருக்கலாம். இப்போது ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்ததும் சத்தம் கேட்கிறது. இந்தச் சின்ன விஷயத் துக்கு இவ்வளவு பயமா? சீதா தன்னுடைய அசட்டுத்தனத்தை நினைத்துத் தானே புன்னகை புரிந்து கொண்டாள். குழாயை நிறுத்திவிட்டுக் கொல்லைப்புறக் கதவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு நடந்தாள். நாலடி வைப்பதற்குள்ளே குழாய்த் தண்ணீரின் ஓசை நின்றது. அப்போது திடீரென்று ஏற்பட்ட நிசப்தம் சீதாவை முன்னைக் காட்டிலும் பன்மடங்கு பயங்கரத்தில் ஆழ்த்திற்று. குழாயிலிருந்து தண்ணீர் விழும் ஓசை நின்றது என்றால், அதன் பொருள் என்ன? திறந்திருந்த குழாயை யாரோ திருகி மூடியிருக்க வேண்டும்! மூடியது யார்? ஜன்னல் வழியாகப் பார்த்தபோது செடிகளுக்குள்ளே புகுந்து சென்ற முக்காடிட்ட உருவம் சீதாவுக்கு நினைவு வந்தது. யாரோ கொல்லைப்புறமாக வந்து வீட்டுக்குள் நுழைந்து ஸ்தான அறைக்குள்ளே புகுந்திருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?

"யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக இப்படிப் பயப்படுகிறோம்?" என்று எண்ணிச் சீதா மறுபடியும் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை வீட்டு வேலைக்காரிக்குப் புத்தி வந்து திரும்பி வந்தாலும் வந்திருக்கலாம். வாசல் வழியாக வர வெட்கப்பட்டுக் கொண்டு கொல்லைப்புறமாக வந்திருக்கலாம். ஆம்; அப்படித்தான் இருக்கவேண்டும்! இதற்காகவா இவ்வளவு பயப்பட்டோம்! நின்றிருந்த குழாய் மறுபடியும் தண்ணீரைக் கொட்ட ஆரம்பித்தது. சந்தேகத்தையும் கலக்கத்தையும் அதற்கு மேல் சீதாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாராயிருந்தாலும் சரி போய்ப் பார்த்தே தீருவது என உறுதி கொண்டாள். தடுமாறிய கால்களைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஸ்நான அறைக்குப் பக்கமாக வந்து சேர்ந்தாள்; கதவு சாத்தியிருந்தது. ஆனால் உட்புறம் தாளிடவில்லை என்று தெரிந்தது. நடுங்கிய கையினால் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளே குழாய்ச் சத்தம் மறுபடியும் நின்றது. அந்த நிசப்தத்தில் சீதா, "யார் அங்கே?" என்று கேட்டாள், கேட்டவள் சீதா தான்; ஆனால் அவளுக்கே அந்தக் குரல் தன்னுடைய தாகத் தெரியவில்லை! ஸ்நான அறைக்கு உள்ளே காலடிச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கேட்ட காலடி சத்தத்துக்கும் ஒன்பது தடவை சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்டது.

ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து,; கதவு உட்பக்கமிருந்து திறந்து கொண்டது. திறந்த வாசற்படியருகில் ஒரு உருவம் நின்றது! அது தன் கையில் ஒரு கத்தி வைத்துக் கொண்டிருந்தது. இது என்ன பேயா, பிசாசா? அல்லது மனித ஜன்மந்தானா? இதன் முகத்தில் உள்ளவை கண்களா? அல்லது ஜொலிக்கும் கொள்ளிகளா? அல்லது சிகப்பு வர்ண எலெக்ட்ரிக் பல்புகளா? இந்த உருவத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? எங்கே எங்கே? எப்போது? ஐயோ! இது என்ன? தலையை ஏன் இப்படிச் சுற்றுகிறது. ஒன்றும் புரியவில்லையே! மூளை குழம்புகிறது என்பது இது தானோ? இங்கே வந்து நாம் நின்று எத்தனை நேரம் ஆயிற்று? இந்த உருவத்தைப் பார்க்கத் தொடங்கி எத்தனை நேரம் ஆயிற்று? ஒரு வருஷம் இருக்குமோ? ஆயிரம் வருஷம் இருக்குமோ? இந்த உருவம் ஏன் இப்படியே நின்று கொண்டிருக்கிறது? ஏன் தன்னுடைய கொள்ளிக் கண்களால் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது? ஐயோ! மயக்கமாய் வருகிறதே! இல்லை; மயக்கம் வரவில்லை அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது. கண்ணும் நன்றாய்த் தெரிகிறது. அதோ அந்த உருவம் புன்னகை புரிகிறதே! பேய் பிசாசு புன்னகை புரியுமா? அதோ வாயைத் திறந்து பேசுகிறதே! "சீதா! நான் யார் என்று தெரிகிறதா? ஞாபகம் வருகிறதா?" இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சீதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது, சீ! இவள் பேயுமில்லை; பிசாசுமில்லை பம்பாயில் தன் தாயார் படுத்த படுக்கையாயிருந்த சமயம் மர்மமாக வந்து ரத்தின மாலையும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்துவிட்டுப் போன ஸ்திரீதான் இவள்! மனப்பிராந்தியினால் எப்படி யெல்லாமோ தோன்றிவிட்டது.

இவளை மறுபடி எங்கோ பார்த்தோமே? அது எங்கே?... இதோ ஞாபகம் வருகிறது இரண்டு மாதத்துக்கு முன்னால் இந்தச் சாலை திரும்பும் முடுக்கில் மரத்தின் பின்னால் கையில் கத்தியுடன் இவள் நின்றதைப் பார்த்தோம். யாரிடமோ இவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே? ஆம்; தாரிணியிடம் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி இவளுடைய வளர்ப்பு மகள் இவள் பெயர் ரஸியாபேகம். "சீதா! ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்? என்னைத் தெரிகிறதா, இல்லையா?" சீதா மிக முயன்று வாயைத் திறந்து இரகசியம் பேசும் குரலில், "தெரிகிறது!" என்றாள். "தெரிகிறது! நான் யார்?" சீதா சிறிது யோசித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த இரத்தின மாலையைத் தொட்டு, "இதைக் கொடுத்தவள்!" என்றாள். "நீ நல்ல பெண்; ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய். வீட்டில் நீ மட்டும் தனியே இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று அந்த ஸ்திரீ கேட்டாள். இந்தக் கேள்வி சீதாவின் காதில் விழவில்லை. ஏனெனில் அவளுடைய கண்ணும் கவனமும் அதற்குள் வேறொரு பொருளிடத்தில் சென்று விட்டன. அந்த ஸ்திரீயின் இடுப்பிலிருந்து தொங்கிய கைக்குட்டைதான் அந்தப் பொருள். அந்த வெள்ளைக் கைக்குட்டையில் ஒரு பாதி செக்கச் செவேலென்று இருந்தது. அதைச் சீதா பார்த்து மிரள விழித்துக் கொண்டே, "ஐயோ! இரத்தம், இரத்தம்!" என்று அலறினாள். திடீரென்று அவளுக்கு எப்படியோ விம்மலும் அழுகையும் கலந்து வந்தன. ரஸியாபேகம் இரண்டு அடி எடுத்து முன்னால் வைத்துச் சீதாவை நெருங்கி வந்தாள். அவளுடைய ஒரு தோளைப் பிடித்து "இதோ பார், சீதா! நீ சமர்த்தாயிருப்பாய் என்று நினைத்தேன். எல்லாப் பெண்களையும் போல் மூடத்தனமாய்த் தானிருக்கிறாய். நீ அழுது கூச்சல் போட்டு, இப்படி ஏதாவது பண்ணினாயோ, என்ன செய்வேன் தெரியுமா?

சற்று முன்னால் சாலையில் ஒரு பைத்தியம் பிடித்த நாயை இந்தக் கத்தியினால் குத்திக் கொன்றேன். அது மாதிரி உன்னையும் கொன்றுவிடுவேன்!" என்றாள். சீதாவின் விம்மல் உடனே நின்றது இன்னமும் அந்தக் கைக்குட்டையைப் பார்த்துக் கொண்டு, "அது நாயின் இரத்தமா?" என்றாள். "ஆமாம்; உன்னை இது ரொம்பப் பயப்படுத்துகிறது போலிருக்கிறது! கொஞ்சம் இரு! குழாயில் அலம்பிக் கொண்டு வருகிறேன்." இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ குழாயடிக்குப் போய்த் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கைக்குட்டையை நனைத்துக் கசக்கினாள் ஆனால் கறை போகிற வழியாயில்லை. "இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்த வேண்டியதுதான்!" என்று சொல்லிக் கீழே எறிந்துவிட்டுத் திரும்பி வந்தாள். சீதாவின் மனது இதற்குள் வேலை செய்து கொண்டே இருந்தது. இவள் நாயைக் கொன்றதாகச் சொன்னது உண்மைதானா? நாயைக் கொன்றிருந்தால், எதற்காகக் கொல்லைப்புறமாக வந்தாள்? நாம் இங்கே இருப்பது தெரிந்து வந்தாளா? தற்செயலாக வந்தாளா? திடீரென்று அவர் இப்போது வந்து விட்டால் என்ன செய்வது?...அதற்குள் இவளை எப்படியாவது நல்ல வார்த்தைச் சொல்லிப் போகச் சொல்லிவிட வேண்டும்! இல்லாவிட்டால் என்ன ஆகுமோ? கடவுளே! எதற்காக இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்? வேறு எங்கேயாவது போயிருக்கக் கூடாதா? அதற்குள் அந்த ஸ்திரீ சீதாவை நெருங்கி வந்து, "வீட்டில் நீ மட்டும் தனியாக இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று மறுபடியும் கேட்டாள். "இப்போது தனியாகத்தான் இருக்கிறேன் ஆனால் அவர் சீக்கிரத்தில் வந்துவிடுவார். சாயங்காலமே வந்திருக்க வேண்டும் எதனாலோ இன்று இன்னும் வரவில்லை." "ஊர்லே எந்தப் பெண் பிள்ளையைச் சுற்றிக்கொண்டு அலைகிறானோ? யார் கண்டது? அயோக்கியன்!"

இந்த வார்த்தைகள் சீதாவின் இருதயத்தை ஊசியால் குத்துவதுபோல தைத்தன. பயங்கரமான பல சந்தேகங்கள் உதித்தன. "என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள். "அசடே! எனக்கு உன் புருஷனைப்பற்றி என்னமாய்த் தெரியும்? புருஷர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று என் எண்ணம். அதனால் பொதுப்படையாகச் சொன்னேனே தவிர உன்னுடைய புருஷர்களைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லவில்லை. உன் அபிப்பிராயம் என்ன? உன் புருஷன் எப்படி?" "எப்படி என்றால் நான் என்னத்தைச் சொல்வது? மொத்தத்தில் நல்லவர்தான் ஆனால் கொஞ்சம் முன்கோபக்காரர். இந்த நிலையில் உங்களைப் பார்த்தால் ஏதாவது தொந்தரவாய் முடியலாம். அவர் வருவதற்குள் நீங்கள்..." என்று சீதா தயங்கினாள். "நீ சொல்வது எனக்குத் தெரிகிறது. உன் புருஷன் வருவதற்குள் நான் போய்விட்டால் நல்லது என்கிறாய். அப்படித்தானே? நல்ல புண்ணியவதி நீ! எனக்கு ஒருவேளை சாப்பாடு போடக்கூட உனக்கு மனதில்லை!" "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள்; என் கலியாணத்துக்கு நீங்கள் செய்த உதவியைப் பற்றி எத்தனையோ தடவை எண்ணிப்பார்த்துக்கொண்டி ருக்கிறேன். ஒருவேளை சாப்பாடுதானா பெரிது? அவர் வந்துவிட்டால் யார், இன்னார் என்று தெரிவிக்கும்படி நேருமே என்று யோசித்தேன் பேஷாகச் சாப்பிட்டு விட்டுப் போங்கள்."

"சீதா! எனக்குச் சாப்பாடு வேண்டாம். எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் எனது மனது குளிர்ந்து வயிறும் நிறைந்திருக்கிறது. ஆனால் இன்று ராத்திரி நான் எங்கேயும் போக முடியாது. உடம்பு களைப்பாயிருக்கிறது, நன்றாகத் தூங்கிப் பல நாளாயிற்று. இன்று ராத்திரி இங்கே படுத்துத் தூங்கிவிட்டுத்தான் போக வேண்டும். யார், இன்னார் என்று உன் புருஷனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நான் இருப்பதே தெரிய வேண்டியதில்லை. இந்த வீட்டு மாடியில் அறை இருக்கிறதா?" "அதுதானே இல்லை? இந்தப் புது டில்லியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளெல்லாம் மாடியில்லாத வீடுகள்!" அந்த ஸ்திரீ சுற்று முற்றும் பார்த்தாள். ஸ்நான அறைக்கு எதிர்ப்புறம் இருந்த அறையைச் சுட்டிக்காட்டி, "அந்த அறையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள். "விறகு, கரி, தட்டுமுட்டுச் சாமான்கள்" என்றாள் சீதா. அறையை அந்த ஸ்திரீ திறந்து பார்த்துவிட்டு, "சரி இதில் நான் படுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கும் தெரிய வேண்டாம்; வெளிக் கதவை நீ பூட்டிக்கொண்டு விடு!" என்றாள். "இதில் எப்படிப் படுத்துக் கொள்வீர்கள்? காற்றே வராதே? சாமான்களைக் கன்னாபின்னாவென்று போட்டிருக்கிறதே!" "பாதகமில்லை, சீதா! இதைக் காட்டிலும் எவ்வளவோ கேவலமான இடங்களில் நான் இருந்திருக்கிறேன்."

இதைக் கேட்ட சீதாவின் மனம் இளகிற்று அந்த ஸ்திரீயின் வரலாறு எப்படியிருக்கும் என்று தான் கற்பனை செய்து கொண்டதெல்லாம் நினைவு வந்தது. வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டங்களை அனுபவித்தவள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கஷ்டங்கள் அவளுக்கு ரஜினிபூர் ராஜாவினால் நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் அவை என்ன மாதிரிக் கஷ்டங்கள்? அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசையுண்டாயிற்று. அதற்கு இப்போது அவகாசம் இல்லை. எந்த நிமிஷத்திலும் தன் கணவர் திரும்பி வந்து விடலாம். வந்தால் பைத்தியக் காரியைப்போல் தோன்றும் இவளைக் கட்டாயம் விரட்டி அடித்து விடுவார். "இதோ ஒரு ஜமக்காளமும் தலையணையுமாவது கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சீதா விடுவிடு என்று உள்ளே போனாள். ஜமக்காளமும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இத்தனை நேரமும் அவளுடைய உள் மனது "எதையோ மறந்துவிட்டோம் முக்கியமான விஷயம் அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அது இப்போது நினைவு வந்தது. மறந்து போய் நினைவு வந்த விஷயம் தாரிணியின் கோரிக்கைதான்.

ஜமக்காளத்தையும் தலையணையையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, "நிச்சயமாகச் சாப்பாடு வேண்டாமா? பூரியும் சப்பாத்தியும் இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறேனே; நீங்கள் சாவகாசமாகப் பசித்தபோது சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றாள் சீதா. "வேண்டாம், வேண்டாம் இன்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமைதானே?" "ஆமாம்". "செவ்வாய் இரவு நான் சாப்பிடும் வழக்கம் இல்லை அப்படி விரதம். இன்றைக்கு நிச்சயமாய்ச் சாப்பிடமாட்டேன். இனிமேல் நீ போய் உன் காரியத்தைப் பார். உன் புருஷன் தினம் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பான்?" "சாதாரணமாய் ஏழு மணிக்குத்தான்; நான் ஆறு மணிக்கே விழித்துக் கொண்டு விடுவேன்." "அப்படியானால் நீ எழுந்ததும் வந்து கதவைத் திறந்து விட்டுவிடு." "நான் வருவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த அறைக்கு இன்னொரு கதவு இருக்கிறது, அது கொல்லைப்புறம் திறக்கும். இராத்திரி தாள் போட்டுக்கொள்ளுங்கள். காலையில் இஷ்டமானபோது எழுந்து போகலாம்." "ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; உனக்கு எத்தனை குழந்தை?" "ஒரே ஒரு குழந்தைத்தான்! வயது மூன்று ஆகப்போகிறது. வசந்தி என்று பெயர்; இப்போதுதான் கால் மணிக்கு முன்னால் தூங்கினாள்."

"வசந்தி சௌக்கியமாயிருக்கட்டும்; புருஷர்களின் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கட்டும்." "நீங்கள் ரொம்பக் கஷ்டப்பட் டிருப்பீர்கள் போலிருக்கிறது." "அதைப்பற்றிச் சொல்ல இப்போது நேரமில்லை நீ போய் உன் காரியத்தைப் பார்!" "உங்களிடம் ஒரு விஷயம் கேட்கவேண்டும்." "சீக்கிரம் கேள்; ரொம்ப அலுப்பாயிருக்கிறது." "உங்கள் பெயர் என்ன?" "என் பெயர் எதுவாயிருந்தால் என்ன இப்போது?" "நீங்கள் சொல்லா விட்டால் எனக்குத் தெரியாதா?" "தெரிந்தால் சொல்லேன்." "ரஸியா பேகம்!" வியப்புடனும் கோபத்துடனும் அந்த ஸ்திரீ சீதாவைப் பார்த்து "உனக்கு யார் சொன்னது?" என்று கேட்டாள். "அதை அப்புறம் சொல்கிறேன் உங்கள் பெயர் ரஸியாபேகமா, இல்லையா?" என்றாள் சீதா. "உண்டு இல்லை, இரண்டும்; என்னுடைய பெயர் ரமாமணி. ஒரு காரியத்துக்காகச் சில காலம் ரஸியாபேகம் என்று மாறு பெயர் வைத்துக் கொண்டேன். அதை யாரோ உனக்குச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லியது யாராக இருக்கும்? ஒருவேளை அந்த அசட்டுப் பிராமணர்தானா?"

எந்த அசட்டுப் பிராமணரைக் குறிப்பிடுகிறாள் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. சட்டென்று, "வேறு யாரும் இல்லை உங்கள் குமாரி தாரிணிதான் சொன்னாள்" என்றாள். சீதா எதிர்பார்த்தது போலவே அவள் பதில் அந்த ஸ்திரீயைத் தூக்கிவாரிப் போட்டது. சற்று நேரம் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு, "நிஜமாகவா? தாரிணியா சொன்னாள்?" என்று கேட்டாள். "ஆமாம்; தாரிணிதான்." "அவளை எங்கே பார்த்தாய்? எப்போது?" "கொஞ்ச நாளைக்கு முன்பு ஆக்ராவுக்கு போயிருந்தோம் அப்போது சந்தித்தோம்." "அப்புறம்?" "ஆக்ராவிலிருந்து ரஜினிபூருக்குச் சென்றோம்.." அந்த ஸ்திரீயின் உள்ளத்தில் ஏதேனும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தால், அதை அவள் முகம் சற்றும் காட்டவில்லை. மரத்தினால் செய்த முகம்போல் ஆகிவிட்டது. சீதா மேலும் சொன்னாள்; "ரஜினிபூரில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். தாரிணியை அவளுடைய தாய் தகப்பன் யார் என்று கேட்டேன். அப்போது தன்னை வளர்த்தவள் என்பதாக உங்களைப் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னதிலிருந்தும் எனக்குத் தெரிந்ததைக் கொண்டும் நீங்களாய்த்தானிருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்." "நீயும் தாரிணியும் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்களா?" என்று ரமாமணி என்கிற ரஸியாபேகம் கேட்டாள்.

"சிநேகமாகாமல் எப்படியிருக்க முடியும்? படகிலிருந்து நான் ஏரியில் விழுந்து விட்டேன். தாரிணிதான் உடனே தண்ணீரில் குதித்து நீந்தி வந்து என்னைக் காப்பாற்றினாள்." ரஸியாபேகத்தின் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது. "என் மகளே மகள்!" என்று குதூகலமாகக் கூறினாள். "மகளிடம் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே? ஆனால் சந்தித்து வருஷக் கணக்கு ஆயிற்றாமே? உங்களைக் கண்டால் உடனே தனக்குத் தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறாள்." "தாரிணி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா?" "இந்த ஊரிலேதான் இருப்பதாகச் சொன்னாள், விலாசம் கூடத் தந்திருக்கிறாள். நாளைக் காலையில் சொல்லி அனுப்பட்டுமா? நீங்கள் இங்கேயே நாளைக்கும் இருந்து தாரிணியைப் பார்த்து விட்டுப் போகலாமே? என் அகத்துக்காரரிடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டால் போகிறது!" ரஸியாபேகம் ஜமக்காளத்தையும் தலையணையையும் கீழே போட்டுவிட்டு, "சீதா! எங்கே! என் கை மேலே உன் கையை வை!" என்று அதட்டும் குரலில் கூறினாள். சீதா அவ்விதமே செய்தாள்.

"நான் இன்று இரவு இங்கு வந்ததைப்பற்றி தாரிணியிடமாவது உன் புருஷனிடமாவது நீ சொல்லவே கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே கூடாது. அப்படி என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதுபோல் உன்னை இந்த நிமிஷமே கொன்று போட்டுவிடுவேன்" என்று கூறி ரஸியாபேகம் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் எடுத்துத் தூக்கிக் காட்டினாள். சற்று முன்னால் சிறிது அமைதியடைந்திருந்த அவளுடைய முகத்தில் மறுபடியும் கொலை வெறி கூத்தாடியது. சீதா மிரண்டு போய் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தாள். இந்த வெறி பிடித்த ஸ்திரீயிடம் எதற்காக இவ்வளவு பேச்சுக் கொடுத்தோம் என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் வாசலில் 'பாம்' 'பாம்' என்று மோட்டாரின் சத்தம் கேட்டது. அது அந்த வீட்டு மோட்டார்க் குழலின் சத்தந்தான். "அவர் வந்துவிட்டார்; நீங்கள் சீக்கிரம் அறைக்கு உள்ளே போங்கள்!" என்றாள் சீதா. "ஜாக்கிரதை! ஞாபக மறதியாகக் கூட என்னைப்பற்றிப் பேச்சு எடுக்காதே!" என்று சொல்லிக் கொண்டே ரஸியாபேகம் சாமான் அறைக்குள்ளே பிரவேசித்தாள். சீதா அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுப் பெருமூச்சு விட்டாள். பிறகு வாசற் கதவைத் திறக்க விரைந்து சென்றாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
பத்தொன்பதாம் அத்தியாயம்

"ஹலோ போலீஸ்!"

வாசற்கதவைத் திறந்ததும் சீதாவுக்கு மேலும் அதிசயமும் திகைப்பும் உண்டாகும் காட்சி தென்பட்டது. வாசலருகில் அவர்கள் வீட்டு கார் வந்து நின்றது. அதன் முன் சீட்டில் மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினார்கள். இறங்கியவர்கள் சௌந்தரராகவனும் தாரிணியும் சூரியாவும். இந்த மூன்று பேரும் முன் ஸீட்டில் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்து வந்திருக்கிறார்கள் என்னும் விஷயம் சீதாவின் மனத்திரையில் புகைப்படத்தைப் போல் பதிந்தது. உடனே, காரின் பின் பகுதிக்குச் சீதாவின் கவனம் சென்றது. அதில் ஏதோ ஒரு நீள வாட்டமான மூட்டை கிடந்தது அது மூட்டைதானா? அல்லது...? ஏற்கனவே கலக்கமடைந்திருந்த சீதாவின் உள்ளம் பதைபதைத்தது; உடம்பு நடுங்கிற்று. வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்கிற கடமை சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் வாசற்படியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகங்களை வீதி விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் சீதா பார்த்தாள். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எதற்காக முகங்களை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எதையோ பறிகொடுத்தவர்களைப் போல்.. இல்லை, இழவு வீட்டுக்கு வருகிறவர்களைப் போல் வருகிறார்களே! ஏன்? "கொஞ்சம் நகர்ந்து வழி விடு! ஏன் வாசற்படியில் நிற்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே ராகவன் முதலில் வந்தான். அவனுடைய குரல் சீதாவுக்கு விசித்திரமாகத் தொனித்தது. அது வழக்கமான கோபக் குரல் இல்லை; அருவருப்பும் அவசரமும் கலந்த குரல். வரும்போதே எதற்காக எரிந்து விழுந்து கொண்டு வருகிறார்?

சீதா சற்று ஒதுங்கி நின்றாள்; அடுத்தாற்போல் தாரிணி வந்தாள், அவளிடம் ஏதாவது பேசி வரவேற்க வேண்டும் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றம் வரவேற்புச் சொல்வதற்கு உகந்ததாக இல்லை. மேலும் தாரிணி சம்பந்தமான இரண்டு எண்ணங்கள் சீதாவின் மனதில் அலை மோதிக் கொண்டு கிடந்தன. ஒன்று அவளுடைய தாயார் அல்லது வளர்ப்புத் தாயார் அந்த வீட்டின் பின்பக்கத்து அறையொன்றில் அப்போது இருக்கிறாள் என்பது. இரண்டாவது எண்ணம், காரின் முன் பகுதியில் ராகவனுக்கும் சூரியாவுக்கும் மத்தியில் வெட்கமில்லாமல் உட்கார்ந்து கொண்டு தாரிணி வந்தாள் என்பது. இத்தகைய மனோ நிலையில் தாரிணியை என்ன சொல்லி வரவேற்பது என்று சீதா யோசிப்பதற்குள் தாரிணி அவளைத் தாண்டி விரைவாக உள்ளே போய்விட்டாள். அப்புறம் சூரியா வந்தான் சீதாவுக்கு அவனிடம் பேசுவதில் தடங்கல் ஒன்றும் இருக்கவில்லை. "அம்மாஞ்சி! இது என்ன எல்லோரும் எங்கேயிருந்து வருகிறீர்கள்? எதற்காக இப்படி முகத்தைப் பயங்கரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதோ கொலை செய்துவிட்டு வருகிறவர்களைப் போல் வருகிறீர்களே?" என்றாள். கொலை என்ற வார்த்தையைக் கேட்டதும் சூரியா திடுக்கிட்டுச் சீதாவை ஏறிட்டுப் பார்த்தான். அடங்கிய குரலில், "ஒரு பயங்கரமான விஷயம், அத்தங்கா! முதலில் உள்ளே போவோம். பிறகு எல்லாம் சாவகாசமாகச் சொல்லுகிறேன்" என்றான்.

மறுபடியும், "நாங்கள்தான் இப்படி வந்திருக்கிறோம் என்றால் உன்னுடைய முகம் ஏன் இப்படியிருக்கிறது? உனக்கு உடம்பு ஒன்றுமில்லையே?" என்று கேட்டான். "எனக்கா? உடம்பு ஒன்றுமில்லை ஆனால் மனதுதான் சரியாயில்லை. இவர் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் இத்தனை நேரம் கழித்துத் திரும்பி வந்தால் என்ன செய்கிறது? சூரியா! இத்தனை நாளாக நீ ஏன் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை...? இந்த மனுஷியை எங்கே கண்டுபிடித்தீர்கள்?" "தாரிணியைக் கேட்கிறாயா, சீதா! அவள் என்னைப் பார்ப்பதற்காக என் அறைக்கு வந்திருந்தாள். அந்தச் சமயம் ராகவனும் வந்தார், தாரிணி உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். மூன்று பேருமாகப் புறப்பட்டு வந்தோம்." "மூன்று பேரும் வந்த இலட்சணத்தைத்தான் பார்த்தேனே! இவளுக்கு, தான் பெண்ணாய் பிறந்தவள் என்பதே நினைவிராது போலிருக்கிறது?" என்றாள் சீதா. சூரியா வியப்புடன் சீதாவைப் பார்த்தான். "அத்தங்கா! ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. உள்ளே வா, சாவகாசமாகச் சொல்லுகிறேன்!" என்றான்.

சீதாவும் சூரியாவும் 'டிராயிங் ரூம்' என்று வழங்கிய வீட்டின் பிரதான அறைக்குச் சென்றபோது, அங்கே ராகவன் டெலிபோனுக்குப் பக்கத்தில் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கொண்டு நின்றான். தாரிணி ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அவளுடன் ஏதாவது பேசலாம் என்று நினைப்பதற்குள், "சீதா! குழந்தை என்ன செய்கிறாள்? தூங்கிப் போய்விட்டாளா?" என்று ராகவன் பதட்டத்துடன் கேட்டான். இந்தச் சமயத்தில் ஆபீஸ் அறைக்குள்ளிருந்து, "அப்பா! அப்பா" என்று குழந்தையின் குரல் கேட்டது. "இத்தனை நேரம் தூங்கிக் கொண்டிருந்தாள். உங்கள் குரலைக் கேட்டு விழித்திருக்கிறாள். தூக்கத்திலே கூட அப்பா ஞாபகந்தான் குழந்தைக்கு!" என்றாள் சீதா. "சரி, சரி! உன் பெருமையை அப்புறம் அடித்துக்கொள்ளலாம். உடனே போய் அவளை மறுபடியும் தூங்கப் பண்ணு, அப்பா இதோ வந்து விடுவார் என்று சொல்லு. அவள் இப்போது இங்கே வரக்கூடாது தெரிகிறதா? போ, சீக்கிரம்!" ராகவனுடைய குரலிலிருந்தும் பதட்டத்திலிருந்தும் ஏதோ ரொம்ப முக்கியமான விஷயந்தான் என்று சீதா அறிந்தாள்; அவனுடைய சொற்படி ஆபீஸ் அறைக்குள் சென்றாள். "அப்பா வந்துத்தாரா, அம்மா!" என்று வஸந்தி கேட்டாள்.

"வந்துட்டார், வஸந்தி! உன் பக்கத்திலேதான் வந்து படுத்துக்கொள்வார் நீ தூங்கு!" என்று சீதா குழந்தையின் முதுகைத் தட்டினாள். "அப்பா கோவமா வந்திருக்காரா, அம்மா!" என்று குழந்தை கேட்டாள். அவ்வளவு மனக் குழப்பத்துக்கிடையிலும் வஸந்தியின் கேள்வி சீதாவுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. "அதெல்லாம் ஒன்றுமில்லை, வஸந்தி! இன்னும் யாரோ வந்திருக்கிறார்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீ பாட்டுக்கு நிம்மதியாகத் தூங்கு!" என்றாள். ஒரு நிமிஷத்துக்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டாள். சீதா திரும்ப முன் அறைக்கு வந்தாள். ஒருவேளை மூன்று பேரும் சாப்பிடாமல் வந்திருப்பார்களோ, என்னமோ, எல்லாருக்கும் எப்படி சாப்பாடு தயாரிப்பது? இந்தச் சமயம் பார்த்து வேலைக்காரன், வேலைக்காரி இரண்டு பேரும் போய் விட்டார்களே? என்று எண்ணமிட்டுக் கொண்டு வந்தாள். அப்போது ராகவன் டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தான். "ஹலோ! போலீஸ் ஸ்டேஷன்? அங்கே யார்? நான் பி.எல்.எஸ். ராகவன் பேசுகிறது. இவ்விடத்தில் ஒரு 'ஆக்ஸிடெண்ட்' இல்லை, கார் ஆக்ஸிடெண்ட் இல்லை ஒருவேளை கொலையாக இருக்கலாம் என்று.... ஆமாம், 'மர்டர்' என்று சந்தேகமாயிருக்கிறது... உடனே யாரையாவது அனுப்பவேணும்... தாங்க்ஸ்!" டிராயிங் ரூம் வாசற்படியில் நின்றபடி சீதா இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

டெலிபோன் பேச்சு முடிந்ததும் அறைக்குள் வந்தாள். யாரும் அவளிடம் எதுவும் பேசுகிற வழியாகக் காணவில்லை. ஒருவரும் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை. கனவிலே நடக்கிறவளைப்போல் நடந்து போய்த் தாரிணியின் பக்கத்தில் உட்கார்ந்தாள். தாரிணியின் தாயார் அந்த வீட்டின் பின்கட்டில் அப்போது இருப்பது, அவள் கையில் கத்தியுடன் வந்தது, இரத்தம் தோய்ந்த கைக்குட்டையை அலம்பியது எல்லாம் அவளுக்கு நினைவு வந்தன. ஏதாவது பேசாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போலத் தோன்றியது. "அக்கா! இது என்ன சமாசாரம்? எதற்காகப் போலீஸைக் கூப்பிடுகிறார்?" என்று சீதா கேட்டது கீச்சுக் குரலில் 'கிறீச்' என்று ஒலித்தது. அப்போதும் தாரிணி ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் பிரமை பிடித்தவள் போலக் காணப்பட்டாள். ராகவன் குறுக்கிட்டு, "சீதா! சற்று நேரம் வாயை மூடிக் கொண்டிரு! எல்லாம் தானே தெரியும். இந்தச் சமயம் 'ஹிஸ்டீரியா; வரவழைத்துக் கொள்ளாதே! அப்படி ஏதாவது ரகளை செய்தாயோ, நானே இன்றைக்கு ஒரு கொலை செய்தாலும் செய்து விடுவேன்!" என்று கூறினான், சீதா நடுநடுங்கினாள். ராகவன் சூரியாவைப் பார்த்து, "வா! சூரியா! நாம் வாசலில் போய் நிற்போம்! போலீஸ்காரர்கள் வந்துவிடுவார்கள்!" என்றான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபதாம் அத்தியாயம்

பாரம் நீங்கிற்று

புருஷர்கள் இருவரும் வெளியேறியவுடனே சீதா தாரிணியின் அருகில் வந்து, "அக்கா! இது என்ன! இவர் டெலிபோனில் என்னவெல்லாமோ பயங்கரமாகப் பேசினாரே? என்ன விஷயம்? எதற்குப் போலீஸைக் கூப்பிட்டார்?" என்று கேட்டாள். "ஆம் பயங்கரமான விஷயந்தான்!" என்றாள் தாரிணி. "என்ன பயங்கரமான விஷயம்? சீக்கிரம் சொல்லுங்களேன்!" "அதை என்னத்துக்குக் கேட்கிறாய், சீதா? நீ தெரிந்து கொள்ளாமலிருப்பதே நல்லது, உனக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது!" "அவரைப் போலவே நீங்களும் பேசுகிறீர்களே? எனக்கு ஏன் தெரியக்கூடாது? உங்களுக்கெல்லாம் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்தால் என்ன? நீங்கள் மறைக்கப் பார்ப்பதினாலேதான் எனக்கு மனக்கலக்கம் அதிகமாகிறது" என்றாள் சீதா. "நீ சொல்வது சரி உனக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதான். நான் சொல்லாவிடில் உனக்குத் தெரியாமலே இருந்துவிடுமா? ஆனால் அதைப்பற்றிச் சொல்வதற்கு எனக்கு அருவருப்பாயிருக்கிறது அதனால்தான் தயங்கினேன்." "அப்படியானால் வேண்டாம்! அவர் உள்ளே வரட்டும் அவரிடமே கேட்டுக் கொள்கிறேன்." "வேண்டாம் நானே சொல்லி விடுகிறேன். நாங்கள் மூன்று பேரும் வந்து கொண்டிருந்தோம். வழியில் உங்கள் வீட்டுக்கு வரும் இந்தச் சாலை பிரியும் முடுக்கில்..."

தாரிணி மறுபடியும் தயங்கினாள் அவள் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று. "அக்கா! நீங்கள் ரொம்ப தைரியசாலியாயிற்றே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்." "ஆம்! சீதா எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. இதற்கு முன்னால் நான் இப்படிப் பயப்பட்ட தேயில்லை. பீஹார் பூகம்பத்தின்போது எவ்வளவோ சொல்ல முடியாத பயங்கரங்களையெல்லாம் பார்த்தேன். அப்போது கூட நான் பயப்படவில்லை. இன்றைக்கு... இதோ பார்! என் கை எப்படி நடுங்குகிறது?" அப்போதுதான் தாரிணியின் கைகளை உற்றுப் பார்த்த சீதா, "ஐயோ! இரத்தம் போலிருக்கிறதே!" என்று பீதி நிறைந்த குரலில் கூறினாள். "சத்தம் போடாதே!... ஆமாம்; இரத்தந்தான். பின்னே என்ன நினைத்தாய்? விரலில் 'க்யூடெக்ஸ்' பூசிக்கொண்டிருப்பதாக நினைத்தாயா? உனக்கு அந்த மாதிரி நாகரிகமெல்லாம் இப்போது பழக்கமாகி வருகிறதென்று கேள்விப்பட்டேன்..." "யார் சொன்னார்கள்." "யார் சொன்னால் என்ன? தாமாவும் பாமாவும் சொன்னார்கள். அதற்கு என்ன இப்போது! அவர்களையாவது உன்னையாவது நான் குறை சொல்லப் பாவதில்லை." "ரொம்ப வந்தனம் இன்றைக்கு நடந்ததைச் சொல்லுங்கள். மூன்று பேரும் காரில் வந்து கொண்டிருந்தீர்கள் அப்புறம்?" அப்புறம் நடந்ததைத் தாரிணி தட்டுத் தடுமாறிச் சொல்லி முடித்தாள் அதன் விவரமாவது:

மூன்று பேரும் காரில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வீடு இருந்த சாலையின் திருப்பத்தில் ராகவன் திடீரென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். தாரிணியும் சூரியாவும் ஒரே சமயத்தில் 'என்ன? என்ன?" என்று கேட்டார்கள். ராகவன் பதில் சொல்லாமல் வண்டியிலிருந்து இறங்கினான். மற்ற இருவரும் இறங்கினார்கள். சாலையில் வண்டியை வழிமறித்துக் கொண்டு ஏதோ கிடந்தது. கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்த்ததும் அது ஒரு மனிதனுடைய உடல் என்று தெரிய வந்தது. "யாரோ குடித்துவிட்டுச் சாலையில் விழுந்து கிடக்கிறான் சனியன் பிடித்தவன்!" என்றான் ராகவன். வண்டி மோதி அவனைத் தள்ளியிருக்கலாம் என்ற எண்ணம் தாரிணியின் மனதில் உதித்தது. பேச்சின் சுவாரஸ்யத்தில் சாலையில் குறுக்கே போனவனைக் கவனியாமல் ராகவன் காரை விட்டிருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். சூரியாவுக்கும் அதே சந்தேகம் தோன்றியது. "வண்டி மோதித் தள்ளிவிட்டதோ, என்னமோ?" என்று பயந்துகொண்டே சொன்னான் சூரியா. "நான்ஸென்ஸ், வண்டி மோதவும் இல்லை, ஒன்றுமில்லை" என்று ராகவன் கண்டிப்பாகக் கூறினான்.

மோதித் தள்ளியிராவிட்டாலும் ஒருவேளை படுத்திருந்தவன் மேல் ஏறியிருக்கலாமல்லவா? சமீபத்தில் போய்ப் பார்க்கலாம்" என்றான் சூரியா. "ஆமாம், பார்க்கத்தான் வேண்டும்" என்று தாரிணியும் சொன்னாள். "பேசாமல் வண்டியை ஒதுக்கி ஓட்டிக்கொண்டு போய் விடலாம் வண்டியில் ஏறுங்கள்!" என்றான் ராகவன். சூரியாவும் தாரிணியும் அதைக் கேட்காமல் விழுந்து கிடந்தவனின் கிட்டப் போய்ப் பார்த்தார்கள். உடுத்தியிருந்த உடுப்பிலிருந்து யாரோ பெரிய மனுஷன் என்று தோன்றியது. சூரியா மூக்கில் விரலை வைத்துப் பார்த்து விட்டு, "மூச்சு வருகிறது! உயிர் இருக்கிறது" என்றான். மோட்டாரின் முன் சக்கரம் அந்த மனிதனைத் தொட்டுக் கொண்டிருப்பதைத் தாரிணி கவனித்தாள். மோட்டார் மோதித்தான் அந்த மனுஷன் மூர்ச்சையடைந்து கிடக்கிறான் என்று உறுதியாக நம்பினான். "வண்டியில் ஏறுங்கள்; நாம் போகலாம்!" என்றான் ராகவன். தாரிணி, "நன்றாயிருக்கிறது! நடு ரோட்டில் ஒரு மனிதனை மோதித் தள்ளிவிட்டு நாம்பாட்டுக்குப் போய்விடுகிறதா? காரில் ஏற்றிக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டும்" என்றாள். சூரியாவும் அதை ஆமோதித்தான். "அப்படியானால் பரோபகாரிகளான நீங்களே தூக்கிக் காரின் பின் ஸீட்டில் போடுங்கள் என்னால் முடியாது" என்று ராகவன் சொன்னான்.

"பேஷாக நானே தூக்குகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தாரிணி தலைப்புறம் பிடித்துத் தூக்கினாள்; சூரியா இடுப்பைப் பிடித்துத் தூக்கினான். தூக்கும்போது தாரிணி அந்த மனிதனுடைய கழுத்தின் அடியில் ஒரு கையைக் கொடுத்தாள் அந்தக் கை ஈரமாயிற்று. தரையிலிருந்து தூக்கியதும், விழுந்து கிடந்தவனுடைய தலைக்குக் கீழே இரத்தம் குட்டையாகத் தேங்கியிருந்தது தெரிந்தது. அப்படியும் தாரிணியின் மன உறுதி குன்றவில்லை. கை நடுக்கத்தைச் சமாளித்துக்கொண்டாள். இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள். தரையில் இரத்தம் தேங்கி நின்றதை ராகவன் பார்த்துவிட்டு, "இது என்ன ஆபத்து?" என்றான். "எல்லாம் நம்மால் வந்த ஆபத்துதானே? ஆஸ்பத்திரிக்கு வண்டியை விடுங்கள்" என்றாள் தாரிணி. "ரொம்ப சரி; சீக்கிரம் ஏறித்தொலையுங்கள்!" என்றான் ராகவன். இரண்டு பேரும் அவசரமாக முன் ஸீட்டில் ஏறிக் கொண்டார்கள். ராகவன் வண்டியை ஓட்டத் தொடங்கியதும், "நீங்கள் இரண்டு பேரும் சுத்த முட்டாள்கள். உங்களை நான் தேடி வந்ததே தப்பு" என்றான். "ஆமாம்; தப்புத்தான்! உங்களை யார் வரச்சொன்னது?" என்று தாரிணி கேட்டாள். "அதன் பலன் கை மேல் கிடைத்துவிட்டது. என்னைக் கொலைக் கேஸில் மாட்டி வைத்து விட்டீர்கள். இந்த வண்டி அந்த மனிதன் மீது படவேயில்லை. அப்படிப் பட்டிருந்தால் அந்த மாதிரி இரத்தம் தேங்கியிராது.

யாரோ அவனைக் குத்திப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அனாவசியமாக இதில் என்னை மாட்டி வைத்து விட்டீர்கள். என்னை மாத்திரம் என்ன? உங்களைக் கூடத்தான்!" இப்படி ராகவன் சொன்னதைக் கேட்டதும் அதில் உண்மையிருக்க வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றிவிட்டது. தானும் சூரியாவும் செய்தது பிசகுதானோ என்று ஐயம் உண்டாயிற்று. அப்போது சூரியா, "மாப்பிள்ளை? நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தால், நமக்கு என்ன பயம்? நம் பேரில் இந்தக் கொலைக் குற்றத்தைச் சாட்ட முடியாதல்லவா?" என்றான். "அது வேறே வேணுமா? கொலைக் கேஸில் சாட்சியாக இழுக்கப்படுவது போதாதா? பத்திரிகைகளிலே நம் பெயர்கள் அடிபடுவது போதாதா?" என்றான் ராகவன். "போனது போகட்டும்; இப்போது என்ன செய்யலாம்? அதைப்பற்றி யோசியுங்கள்?" என்று தாரிணி சமாதானமாகப் பேசினாள். "எனக்கு யோசிக்கும் சக்தியேயில்லை, நீங்கள்தானே யோசனை சொல்லுங்கள்! வண்டியை எங்கே விடட்டும்?" என்றான் ராகவன். "ஆஸ்பத்திரிக்கு நேரே போகலாம்; அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்" என்றான் சூரியா. அதைத் தாரிணி ஆமோதித்தாள். "இரண்டு இடத்துக்கும் சேர்ந்தாற்போல் போக முடியாதல்லவா?

முதலில் எந்த இடத்துக்குப் போவது?" என்று ராகவன் கேட்டான். இதற்குப் பதில் சொல்ல அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பேரும் மௌனம் சாதித்தார்கள். "எனக்குக் கை நடுங்குகிறது இனிமேல் வண்டி ஓட்டினால் எங்கேயாவது மரத்தில் மோதிவிடுவேன். நேரே வீட்டுக்கு வண்டியை விடுகிறேன். அங்கிருந்து டெலிபோனில் பேசிக் கொள்ளலாம்" என்றான் ராகவன். தாரிணிக்கு உடனே சீதாவின் நினைவு உண்டாயிற்று. இந்த விஷயத்தையெல்லாம் அவள் அறிந்தால் எத்தனை மனக் குழப்பம் அடைவாள்? ஏற்கெனவே அவளுக்குக் கொஞ்சம் 'ஹிஸ்டீரியா' உண்டு. இதனால் அதிகமாகிவிட்டால் என்ன செய்கிறது? ஆகையால் ராகவனிடம் வீட்டுக்கு ஓட்ட வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள நினைத்தாள். அதற்குள்ளே கார் நின்றுவிட்டது. அதாவது ராகவன் வீட்டு வாசலுக்கு வண்டி வந்தாகிவிட்டது. மேற்கூறிய விவரத்தை அடங்காத ஆவலுடனும் கவலையுடனும் பயங்கர உணர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்த சீதா, "அக்கா! இது என்ன விபரீதம்? இவருக்கு ஏதாவது அபாயம் நேருமோ? ஒருவேளை போலீஸார் இவரை அரெஸ்டு செய்து விடுவார்களோ?" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். "பயப்படாதே, சீதா! அப்படி ஒன்றும் நேர்ந்து விடாது. இந்தப் புது டில்லி போலீஸ்காரர்கள் கூட அவ்வளவு மூடத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள்! மேலும், உன் கணவர் பெரிய உத்தியோகஸ்தர்; செல்வாக்கு அதிகம் உள்ளவர். அவரை யாரும் கைது செய்ய முடியாது. ஒருவேளை வாக்குமூலம் கொடுப்பதற்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வரும்படி நேரிடலாம் மற்றபடி ஒன்றும் நேராது" என்றாள் தாரிணி.

இதைக் கேட்டதும் சீதாவின் மனதிலிருந்த பெரும் பாரம் நீங்கிற்று. வேறு விஷயங்களைப்பற்றிச் சிந்திக்க முடிந்தது. அந்த நேரத்தில் அதே வீட்டுக் கொல்லைப்புறத்துத் தட்டுமுட்டு சாமான் அறையில் தாரிணியின் தாயார் இருந்தாள் என்பது பளிச்சென்று நினைவுக்கு வந்தது. ஆனால் அதைப் பற்றி தாரிணியிடம் சொல்ல முடியாதபடி தன் வாயைக் கட்டிப் போட்டி ருக்கிறாளே அந்த ரஸியாபேகம்? அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறலாமா! ரஸியாபேகம் இரத்தம் தோய்ந்த கத்தியைக் குழாயில் அலம்பிய காட்சி சீதாவின் கண் முன்னால் வந்தது. அவளுக்கும் இப்போது தாரிணி விவரித்த சம்பவத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? ஏன் இருக்கக்கூடாது? அப்படியானால் தான் இருக்க இடங்கொடுத்து மறைத்து வைத்திருப்பது ஒரு கொலைகாரியையா? தான் செய்தது சரியா? இது தன் கணவருக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்? சீதாவுக்குச் சட்டென்று காரின் பின் ஸீட்டில் தான் பார்த்த மூட்டை போன்ற வஸ்து ஞாபகம் வந்தது. "அக்கா! காரில் மூட்டை மாதிரி ஒன்று கிடந்ததே? அது...? என்று தயங்கினாள். "ஆமாம், சீதா! அது மூட்டையில்லை; சாலையிலிருந்து நாங்கள் எடுத்துப் போட்ட மனிதன்! ஆனால் அதைப் பற்றியே ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? வேறு விஷயம் ஏதாவது பேசலாம்!" என்றாள் தாரிணி.

மூன்று பேரும் காரின் முன்ஸீட்டில் உட்கார்ந்து வந்த காரணம் இப்போது சீதாவுக்குப் புலப்பட்டது. அதிலிருந்து வேறு விஷயத்துக்கு மனம் பாய்ந்தது. "அக்கா! நீங்கள் மூன்று பேரும் இன்றைக்கு எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள். "சூரியாவின் அறைக்கு நான் போயிருந்தேன். சூரியாவைத் தேடிக்கொண்டு உன் கணவரும் வந்து சேர்ந்தார். எல்லோருமாக உன்னைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று" என்றாள் தாரிணி. "சூரியாவைப் பார்க்கப் பாயிருந் தீர்களா? என்னைப் பார்க்க ஒருதடவை கூட வரவில்லையே? என்னை அடியோடு மறந்து விட்டீர்களா?" "மறக்கவில்லை, சீதா! வரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் உன் கணவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்று பயமாயிருந்தது; சூரியாவுக்கும் அதுதான் தயக்கம்." இதைக் கேட்டபோது சீதாவுக்கு எரிச்சலாயிருந்தது. இவர்கள் இரண்டு பேரும் இப்போது ஒன்றாய்ப் போய் விட்டார்கள் போலிருக்கிறது; நாம்தான் தனியாகப் போய் விட்டோம்! சூரியாவுக்கு நம்மைக் காட்டிலும் இவளிடத்தில் என்ன சிநேகம் வந்தது?

இப்படி நினைத்துச் சீதா, "இவரிடம் எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? உங்களைக் கடித்து விழுங்கி விடுவாரா? இவர்தான் எப்போதும் உங்கள் தியானமாயிருக்கிறாரே? சூரியாவுக்கு இவ்வளவு வஞ்சனை உண்டு என்று இதுவரையில் எனக்குத் தெரியாது!" என்றாள். தாரிணி சீதாவை சிறிது உற்றுப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படிச் சொல்கிறாய்? உன் அம்மாஞ்சியைப் போல் சூதுவாது இல்லாத சாதுவை நான் பார்த்ததேயில்லை!" என்றாள். "ஆமாம்! சூரியா சாதுவாகத்தான் இருந்தான். கொஞ்ச நாளாகச் சூதுவாது வந்திருக்கிறது. ஆக்ராவிலிருந்து திரும்பியதற்குப் பிறகு நீங்கள் இன்றைக்குத்தான் அவனை முதல் தடவை பார்த்தீர்களா?" "இல்லை, சீதா! திரும்பி வந்தவுடனேயே சூரியாவை நான் போய்ப் பார்த்தேன். என்னை நெற்றியில் காயப்படுத்தியது பற்றி அவர் வருத்தப்பட்டுக் கடிதம் எழுதியிருந்தார் அல்லவா? அதற்குச் சமாதானம் சொல்லலாம் என்று போனேன்" என்றாள் தாரிணி. "அப்படித்தான் நினைத்தேன்" என்றாள் சீதா. "எப்படி நினைத்தாய்?" "நீங்கள் சூரியாவைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். பார்த்தது மட்டுமல்ல; ரஜினிபூரில் நடந்தது பற்றியும் அவனிடம் சொல்லியிருக்கிறீர்கள்.

அவன் எங்கள் ஊருக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். அக்கா! நீங்கள் ரொம்பப் படித்தவர்; எல்லாம் தெரிந்தவர். இருந்தாலும் இவரைப் பற்றிச் சூரியாவிடம் நீங்கள் அவ்வளவு கேவலமாகச் சொல்லியிருக்கக் கூடாது" என்றாள் சீதா. "ஐயோ! இது என்ன வீண் பழி? நான் என்ன உன் புருஷனைப் பற்றிக் கேவலமாகச் சொன்னேன்?" "நான் ஏரியில் மூழ்கிக் கொண்டிருந்தபோது அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு படகிலேயே இருந்தார் என்று சொன்னீர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல வேண்டும்?" தாரிணி சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, "ஆமாம் அப்படி நான் சொன்னது மெய் தான். புருஷர்களுடைய சுயநலத்தைப்பற்றி எங்களுக்குள் விவாதம் நடந்தது. அப்போது ரஜினிபூரில் நடந்ததுப்பற்றிச் சொன்னேன். அது உண்மைதானே, சீதா! உண்மையை எதற்காக மறைக்க வேண்டும்?" என்றாள். சீதா சிறிது வேகமான குரலில், "என்னுடைய கொள்கை அதுவல்ல. உண்மையாயிருந்தாலும் ஒருவருடைய குற்றத்தை ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. மூடி மறைத்துக் கொண்டுதான் போகவேண்டும்! இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கையே நடத்த முடியாது!" என்று சொன்னாள்.

தாரிணி மிக்க வியப்புடன் சீதாவைப் பார்த்தாள். படிப்பும் உலக அனுபவமும் அதிகம் இல்லாத இந்தச் சிறு பெண் அவ்வளவு முக்கிய விஷயத்தை எப்படிக் கண்டுபிடித்துச் சொன்னாள் என்று தாரிணிக்கு அதிசயமாயிருந்தது. அதோடு, ஒருவேளை உள் அர்த்தம் வைத்துப் பேசுகிறாளோ என்று ஐயமும் உண்டாயிற்று. ஏதாவது சமாதானமாகப் பதில் சொல்லவேண்டும் என்று தாரிணி எண்ணுவதற்குள், வாசலில் 'தட், தட், தட்' என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. "போலீஸார் வந்துவிட்டார்கள்" என்றாள் தாரிணி. இருவரும் மற்ற விஷயங்களை எல்லாம் மறந்து, வாசலில் என்ன நடக்கப் போகிறதோ என்று கவலையுடன் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்தொன்றாம் அத்தியாயம்

ரஜினிபூர் பைத்தியக்காரி

போலீஸார் வந்த பிறகு சற்று நேரம் வாசலிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். சில நிமிஷங்களுக்கெல்லாம் ராகவனும் ஒரு போலீஸ் உத்தியோகஸ்தரும் உள்ளே வந்தார்கள். ராகவன் தாரிணியைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பெண்மணிதான் " என்று சொன்னான். "முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது, ரொம்பவும் பயந்து போயிருக்கிறார். பயப்படக் காரணம் இல்லையென்று நான் சொல்லவில்லை. இருந்தாலும்.. கையிலே இரத்தக் கறையைக் கூட இன்னும் கழுவவில்லை போலிருக்கிறதே!" என்று போலீஸ் அதிகாரி கூறினார். "கழுவலாமோ, கூடாதோ என்று சந்தேகமாயிருந்தது. நீங்கள் வருவதற்குத்தான் காத்திருந்தேன்" என்றாள் தாரிணி. "குரல் எப்படி நடுங்குகிறது பார்த்தீர்களா? இந்தப் பெண்மணியை உத்தேசித்துத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரே கார் ஓட்டிக்கொண்டு வரவில்லை. எப்படியாவது இவருடைய பெயரைச் சம்பந்தப்படுத்தாமல் இருந்தால் நல்லது." "என்னால் முடிந்த வரையில் பார்க்கிறேன். இவருடைய விலாசம் தெரியுமல்லவா? ஒருவேளை இவருடைய சாட்சியம் அவசியம் தேவையாயிருந்தால்...?" "தேவையாயிருந்தால், எப்போது சொன்னாலும் நானே அழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது." "பார்க்கலாம்! நீ ஒன்றும் பயப்படாதே, அம்மா! போய்க் கைகளைச் சுத்தமாய் அலம்பிக்கொள். இந்த மாதிரிக் காரியங்களில் ஸ்திரீகள் தலையிடவே கூடாது. இது உனக்கு ஒரு பாடமாயிருக்கட்டும் இந்தச் சம்பவத்தைப்பற்றி யாரிடமும் பேசாதே! உனக்குத் தெரியும் என்பதாகவே காட்டிக் கொள்ளாதே!"

இவ்விதம் தாரிணியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போலீஸ் அதிகாரி ராகவனைப் பார்த்து, "நாம் போகலாம் வாருங்கள்! இப்போதே ஒருவேளை, 'டூலேட்' ஆகிப் போயிருக்கலாம்!" என்று சொன்னார். "சீதா! நான் போய் வருகிறேன் தாரிணி இன்றைக்கு இங்கேயே இருக்கட்டும்!" என்றான். போலீஸ் உத்தியோகஸ்தர் தாரிணியிடம் பேசியதும் சீதாவுக்கு அரை குறையாகத்தான் புரிந்தது. தாரிணியை மட்டும் காப்பாற்றிவிட்டுத் தன்னுடைய கணவன் ஏதோ ஆபத்துக்கு உட்படப் போவதாக அவளுக்குத் தோன்றியது. "எங்கே போகப் போகிறீர்கள்? நானும் உங்களுடன் வருகிறேன்!" என்று நடுங்கிய குரலில் கூறினாள். போலீஸ் உத்தியோகஸ்தர் இதற்குள் அவளுடைய பயத்துக்குக் காரணத்தைத் தெரிந்து கொண்டார். "இவர்தான் உங்கள் மனைவியா...? பயப்பட வேண்டாம் அம்மா! உன் புருஷனைக் கைது செய்து கொண்டு போகவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு வாக்குமூலம் எழுதி வைக்க வேண்டும் அவ்வளவுதான். அரை மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவார்!" என்றார். அது உண்மைதானா என்று அறிந்துகொள்ள வேண்டிச் சீதா ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவன் சிறிது முக மலர்ச்சியுடனேயே, "ஆமாம், சீதா! எனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. நானும் சூரியாவும் அரை மணியில் திரும்பி வந்து விடுவோம். தாரிணி! சீதாவிடம் எல்லாம் சொல்லிவிடு. அவள் வீண் பீதி அடைந்திருக்கிறாள்!" என்று சொல்லிப் போலீஸ் அதிகாரியைத் தொடர்ந்தான்.

சில நிமிஷத்துக்கெல்லாம் வாசலிலிருந்து மோட்டாரும் மோட்டார் சைக்கிளும் புறப்பட்டுச் சென்றன. சீதா வாசற் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்தாள். "இனிமேல் நான் இந்தக் காரில் ஏறவே மாட்டேன். என் குழந்தையையும் ஏறவிடமாட்டேன். காரை உடனே விற்றுவிட்டு வேறு வாங்க வேண்டியதுதான்" என்றாள். "ஆமாம்; இந்தக் காரில் என்னை ஏறச் சொன்னால் கூட இனிமேல் ஏறமாட்டேன். நீ இவ்வளவு தைரியமாயிருப்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள் தாரிணி. "என் மாமியார் இந்தச் சமயம் இங்கே இருந்திருந்தால் ஒரே ரகளையாகப் போயிருக்கும். அவருக்கு வேறே வைத்தியம் செய்யும்படி ஆகியிருக்கும். நல்லவேளையாகக் குழந்தை வஸந்தியும் தூங்கிப் போய்விட்டாள்." "சீதா! உன் குழந்தையைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது. முதலில் கைகளைக் கழுவிக் கொள்கிறேன். கை அலம்புவது மட்டும் என்ன? ஸ்நானமே செய்தாலும் நல்லது தான். குழாய்த் தண்ணீரில் ஸ்நானம் செய்தால் மட்டும் போதாது. கங்கைக்குப் போய் ஸ்நானம் செய்ய வேண்டும்!" என்று சொன்னாள். "இப்போதைக்குக் குழாயில் ஸ்நானம் செய்து வையுங்கள். கங்கா ஸ்நானம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்று சீதா சொல்லி, வீட்டின் முன்புறத்தில் இருந்த ஸ்நான அறைக்கு அழைத்துச் சென்றாள். வீட்டின் பின்பக்கம் போவதற்கே அவளுக்குத் தைரியம் வரவில்லை.

ராகவனும் சூரியாவும் திரும்பி வந்தபோது சீதாவும் தாரிணியும் சமையலறையில் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களுக்கு இந்தக் காட்சி மிகவும் சந்தோஷம் அளித்தது. "பசியே இல்லை" என்று அவர்கள் சத்தியம் செய்துவிட்டு, "நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ரொட்டி தயாரித்திருப்பதால் கொஞ்சம் சாப்பிடுகிறோம்" என்றார்கள். தாரிணி குளித்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களும் குளித்து வரச் சென்றார்கள். சூரியா கொல்லைப் பக்கத்து ஸ்நான அறைக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்தான். "அத்தங்கா, ஸ்நான அறைக்கு எதிரே ஒரு அறை பூட்டிக் கிடக்கிறதே? அதில் என்ன இருக்கிறது? ஏதோ சத்தம் கேட்டது?" என்றான். சீதா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, "பெருச்சாளி ஓடியிருக்கும்" என்றாள். "இல்லை; உள்ளேயிருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது" என்றான் சூரியா. "ஒருவேளை பூனை பிராண்டியிருக்கும்" என்றாள் சீதா. "தாரிணி! ஸ்நான அறையில் உங்கள் கைக்குட்டையைப் போட்டுவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது, ஒரே இரத்தக் கறையாயிருந்தது! அதை நான் நன்றாக அலம்பி உலர்த்தினேன்?" என்று சொன்னான் சூரியா. "இல்லையே! நான் போடவில்லையே!" என்று சொல்லித் தாரிணி சீதாவின் முகத்தைப் பார்த்தாள். சீதாவும் தாரிணியின் முகத்தைப் பார்த்தாள். "ஞாபக மறதியாய்ச் சொல்கிறீர்கள்?" என்றான் சூரியா. சீதா பேச்சை மாற்ற விரும்பி, "இந்தக் காரை விற்றுவிட வேண்டும்; தெரியுமா? இனிமேல் நான் இந்தக் காரில் ஏற மாட்டேன்" என்றாள். "நான் அப்போதே தீர்மானித்துவிட்டேன். நாளைக்கு முதல் காரியம் காரை விற்கப் போகிறேன்.. இரண்டாவது, ரிவால்வர் லைசென்ஸ் வாங்கப் போகிறேன். காலம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது! சாலையோடு போகிறவனைக் குத்திக் கொல்வது என்றால்?...அதுவும் இந்தப் புது டில்லியில்?" என்றான் ராகவன்.

பிறகு எல்லோரும் வட்டமான மேஜையைச் சுற்றிச் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். "சீதா! உன் அம்மாஞ்சி இருக்கிறானே? அவன் மகா தைரியசாலி. காரிலே இருந்தபோது அவனுக்குக் கைகால் நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே இறங்கியதும் பேச்சுப் பிரமாதம்!" என்றான் ராகவன். "நான் பயப்பட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் உங்களைப்போல் தெருவில் ஒருவன் மரண காயம் பட்டுக் கிடக்கும்போது 'நமக்கென்ன' என்று போகமாட்டேன்?" என்றான் சூரியா. "போதும், போதும், இந்தப் பேச்சு! வேறு ஏதாவது பேசுங்கள்!" என்றாள் சீதா. "வேறு என்ன பேசுவது? நீதான் பேசேன்!" என்றான் ராகவன். "இவர்கள் இரண்டு பேரும் இத்தனை நாளாக ஏன் நம்முடைய வீட்டை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்று கேளுங்கள்." "எனக்கு ரொம்ப வேலை இருந்தது அத்தங்கா! மன்னித்துக் கொள்! இனிமேல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளைக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால்...?" "நீ வருவதில் எனக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் சூரியா! நொண்டிச் சாக்குச் சொல்கிறாயா?" "அப்படிக் கேளுங்கள் நன்றாய்! சூரியா! நீ வருவதில் மாப்பிள்ளைக்கு எதற்காக ஆட்சேபம்? வேலையாம் வேலை! இந்த அக்காவைப் பார்க்கப் போவதற்கு மட்டும் வேலை ஒழிந்ததோ?"

"அத்தங்கா! இவரும் நானும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகையால் வேலை நிமித்தமாகவே நாங்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது." "அது என்ன கட்சியோ காட்சியோ எனக்குத் தெரியாது. நீங்கள் இரண்டு பேரும் இனிமேலாவது இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். "நான் வந்திருப்பேன், சீதா! உண்மைக் காரணத்தை இப்போது சொல்லி விடுகிறேன். உன் மாமியாருக்குப் பயந்து கொண்டுதான் வரவில்லை?" என்று தாரிணி கூறினாள். "என் மாமியாரைக் கண்டு, எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? நானே பயப்படுவதில்லையே? அவரைப் பற்றிச் சூரியா ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லியிருக்கிறான் போலிருக்கிறது! என் மாமியாரைப் போன்ற நல்ல மாமியாரே இந்தப் பூவுலகத்திலேயே காண முடியாது. பெற்ற பெண்ணுக்கு மேலாக என்னிடம் பிரியமாயிருக்கிறார்!" அந்தச் சமயம் சீதாவிடம் ராகவனுடைய அன்பு பூரணமடைந்தது. அன்பு மட்டுமா நன்றியுங்கூடத்தான். 'இப்போது என்ன சொல்கிறாய்?' என்ற பாவனையாகத் தாரிணியை ராகவன் பார்த்தான்; தாரிணியும் ராகவனைப் பார்த்தாள். அவர்கள் கண்களின் மூலமாகப் பேசிக்கொண்டதைச் சீதா கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அந்த நயன பாஷையின் பொருள் அவளுக்கு விளங்கியிராது. சாப்பிட்டு முடிந்து எல்லோரும் முன் அறைக்கு வந்ததற்கும் டெலிபோன் மணி அடித்ததற்கும் சரியாயிருந்தது. ராகவன் ரிஸீவரை எடுத்துக்கொண்டு பேசினான்.

"ஓகோ? உயிர் போய்விட்டதா? அடடா...'கத்திக் காயத்தினால் மரணம்' என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாரா! ரொம்ப சரி! யார்? வினாயகராவ் மதோங்கரா...உலகத்துக்கு ஒரு நஷ்டமுமில்லை!... ஆனாலும் கொலை, கொலைதானே? யாராயிருக்கும்? ஏதாவது ஊகம்.... ரஜினிபூர் பைத்தியக்காரியா?... கேள்விப்பட்டதில்லையே?... சரி சரி நான் பார்த்துக் கொள்கிறேன், ரொம்ப வந்தனம்!" டெலிபோன் ரிஸீவரை ராகவன் வைத்ததும் ஏககாலத்தில் மூன்று பேரும் "என்ன, என்ன?" என்று பரபரப்புடன் கேட்டார்கள். "அந்த விஷயமாகத்தான் சீதா பேசவே கூடாது என்கிறாளே?" "பரவாயில்லை; சொல்லுங்கள் சாப்பிடும்போது அந்தப் பேச்சு வேண்டாம் என்று சொன்னேன்" என்றாள் சீதா. "அப்படியானால் கேட்டுக்கொள் ஆஸ்பத்திரியில் நாங்கள் கொண்டு போய்விட்ட அரைமணிக்குள் உயிர் போய்விட்டதாம், கத்திக்குத்தினால் சாவு என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாராம். கொலையுண்டு செத்துப் போனவனின் பெயர் விநாயகராவ் மதோங்கர். ரஜினிபூரில், பழைய ரஜினிபூர் மகாராஜாவின் துர்மந்திரி என்று சொன்னேனே, அவன்தான். கொஞ்ச நாளாக இந்த ஊரில் இருந்தானாம். கிளப்பில் ரொம்பப் பேருக்கு அவனைத் தெரியுமாம்; குடித்துவிட்டு ரகளை செய்வானாம். ரஜினிபூர் பைத்தியக்காரி என்று பெயர் பெற்ற ஸ்திரீ அவனைச் சில நாளாக அடிக்கடி தொடர்ந்து போய் கொண்டிருந்தாளாம். போலீஸில் கூட மதோங்கர் புகார் செய்திருந்தானாம்.

ஏற்கெனவே ரஜினிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சித்தவளாம். இவனைக் கொன்றவளும் அவளாய்த்தான் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறதாம். போதுமா? எத்தனையோ துப்பறியும் கதைகள் படித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இந்த உண்மைச் சம்பவம் தோற்கடித்து விடுகிறதா, இல்லையா? ஏன் எல்லோரும் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள்? சீதா, உனக்கு துப்பறியும் கதைகள் ரொம்பப் பிடிக்குமோ?" ரஜினிபூர் பைத்தியக்காரி என்றதும் சீதாவும் தாரிணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு பேருடைய பார்வையும் பயங்கரத்தையும் பரிதாபத்தையும் வெளியிட்டன. சீதாவைக் கூப்பிட்டு ராகவன் குறிப்பாகக் கேட்டதும், "இந்த மாதிரி விஷயமெல்லாம் கதையோடு இருந்தால் நன்றாயிருக்கும்! உண்மையில் நடக்கக் கூடாது!" என்றாள். "எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? ரஜினிபூர் பைத்தியக்காரியைப் போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும். அப்போதுதான் நம் நாட்டுச் சுதேச ராஜாக்களுக்கும் அவர்களுடைய துர்மந்திரிகளுக்கும் புத்தி வரும்!" என்றான் சூரியா. "சுதேச ராஜாக்களிடம் உனக்கு என்னடா அப்பா, அவ்வளவு கோபம்?" என்றான் ராகவன்.

அவர்களுக்குள் விவாதம் நடந்தபோது சீதாவின் மனமெல்லாம் கொல்லைப்புறத்துப் பூட்டிய அறையிலே இருந்தது. 'ரஜினிபூர் பைத்தியக்காரி' என்பவள் அந்த வீட்டிலேயே அப்போது இருக்கிறாள்! தான் அதை அங்குள்ளவர்கள் யாரிடமாவது சொல்ல வேண்டுமோ? சொன்னால் என்ன விபரீதம் வருமோ? சொல்லாவிட்டால் என்ன விபரீதம் நேருமோ? தாரிணியின் சொந்தத் தாயாரோ அல்லது வளர்ப்புத் தாயாரோ அவள்! தன் தாயார் கொலைகாரி என்பது தாரிணிக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? ஒருவேளை தெரிந்தேயிருக்குமோ? அவளைப் பார்த்துத் தன் பெற்றோர்கள் யார் என்பதைத் தாரிணி தெரிந்து கொள்ள விரும்பினாள் அல்லவா? அதற்கு இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்குமா? தாரிணியின் தாயார், உண்மையில் அந்தப் பைத்தியக்காரிதான்! இப்படிப்பட்ட காரியம் செய்ய உத்தேசித்திருந்தபடியினால் தாரிணியின் மனம் நோகாமலிருக்கும் பொருட்டு வளர்ப்புத் தாயார் என்று பொய் சொல்லி யிருப்பாள்.... சட்டென்று இன்னொரு விஷயம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அந்தப் பைத்தியக்காரி தன்னிடமும் தன் தாயாரிடமும் எதற்காக அவ்வளவு அபிமானம் காட்டினாள்? எதற்காகத் தனக்கு ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்தாள்? இதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை சீதாவின் மனதில் மற்ற எல்லா எண்ணங்களையும் அடக்கிக் கொண்டு மேலெழுந்தது. அதோடு அந்தக் கொலைகாரி அளித்த ரத்தின மாலையை இனிமேல் அணிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணமும் உதித்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்திரண்டாம் அத்தியாயம்

கதவு திறந்தது!

நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது சீதா 'ஒன்று இரண்டு, மூன்று' என்று எண்ணி வந்தாள். பன்னிரண்டு அடித்ததும், "சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது; அது வரையில் தூங்காமலிருக்க வேண்டும்!" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அப்படியொன்றும் தூங்கிப் போய் விடுவோம் என்கிற பயம் கிடையாது அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பிறகு அவ்வளவு சுலபமாகத் தூக்கம் வந்து விடுமா என்ன? வராதுதான். அன்றிரவு தூங்கினால் பயங்கரமான சொப்பனங்கள் காணுவோமோ, என்னவோ? இராத்திரி பூராவும் தூங்காமல் இருந்து விட்டாலும் நல்லதுதான். ஆனால் அது மாதிரியே மற்றவர்களும் தூங்காமலிருந்தால் என்னத்தைச் செய்வது? அவர்களுக்கும் தூக்கம் வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். அடுத்த அறையில் படுத்திருக்கும் இவரும் அம்மாஞ்சியும் இன்னும் ஏதோ பேசுகிறார்கள். பன்னிரண்டு மணிக்கு மேலே பேச்சு என்ன வந்தது? பேசாமல் தூங்கக் கூடாதோ?... இதோ பக்கத்தில் படுத்திருக்கும் தாரிணியும் தூக்கம் வராமல் படுக்கையில் புரளுகிறாள்.

நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. இப்படியெல்லாம் கதைகளில் நடக்கும் என்று படித்திருக்கிறோம். உண்மை யிலேயே நடக்குமென்று யார் நினைத்தார்கள்! மகள் இங்கே படுத்திருப்பது தெரியாமல், தாயார் கொல்லைப்புறத்து அறையில் படுத்திருக்கிறாள். தாயார் இதே வீட்டில் இருப்பது தெரியாமல் மகள் தூங்குகிறாள். ஒருவேளை தெரிந்து விட்டால்?... அதுவும் தாயார் கையில் இரத்தக் கரையுள்ள கத்தியுடன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்று மகளுக்குத் தெரிந்தால்? இதெல்லாம் தனக்கு தெரிந்திருக்கும்போது சொல்லாமல் வைத்திருப்பது சரியா? ஆனால் எப்படிச் சொல்ல முடியும்? தன்னுடைய புருஷன் மட்டும் தனியாக இருந்தாலும் சொல்லலாம். மற்ற இருவர் இருக்கும்போது எப்படிச் சொல்வது? அவள் தான் கொலைகாரி என்பது என்ன நிச்சயம்? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் இருக்கலாமல்லவா? பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதாக அவள் சொன்னது ஏன் உண்மையாயிருக்கக்கூடாது?... ஆனால் எதற்காக அப்படி இரகசியமாக அவள் வந்திருக்க வேண்டும்? தன்னை எப்படி பயப்படுத்திவிட்டாள்?...

அடாடா! லலிதாவுக்கு எழுதிய கடிதத்தை ஆபீஸ் அறை மேஜை மேலேயே வைத்திருக்கிறோமே? எடுத்து வைக்க மறந்து விட்டோமே? அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்தால் இவர்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய கடிதங் களையோ, எனக்கு வரும் கடிதங்களையோ இவர் பார்ப்பதேயில்லை! எவ்வளவு உயர்ந்த குணம்? தவறிக் கண்ணிலே பட்டிருந் தாலும், 'லலிதா' என்ற பெயரைப் பார்த்ததும் மேலே படிக்க மாட்டார். அதை நினைத்தால் வேடிக்கையாகத்தானிருக்கிறது. இவரை லலிதா கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டில் இப்போது குடித்தனம் பண்ண வேண்டியது. அவள் இருக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு என்ன செய்யலாம்? அவரவர்களுக்குக் கடவுள் விதித்திருக்கிறபடிதானே நடக்கும்...? இதென்ன? கண்ணை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறதே? தூங்கக் கூடாது; இன்றைக்குத் தூங்கக் கூடாது... 'டிணிங்', 'டிணிங்' இரண்டு மணி அடித்ததைக் கேட்டுச் சீதா விழித்துக் கொண்டாள். கடவுளே! தூங்கிப் போய் விட்டோம் போலிருக்கிறதே! இரண்டு மணி தான் ஆயிற்றா? சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைச் சீதா பார்த்தாள். இரவு நேரத்துக்கென்று போட்டிருந்த மிக மங்கலான சிவப்பு பல்பின் வெளிச்சத்தில் கடிகாரம் இரண்டு மணி காட்டுவது தெரிந்தது.

இவ்வளவுதானே? இப்போது கூட அந்த அறைக்குப் போகலாம் ஆனால் தடபுடல் செய்யக்கூடாது. சத்தமில்லாமல் எழுந்திருக்க வேண்டும். அடுத்த அறையில் புருஷர்களும் இந்த அறையில் தாரிணியும் நன்றாகத் தூங்குகிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன சத்தம்? கதவு திறக்கிற சத்தம் போலிருக்கிறதே! இந்த நேரத்தில் எந்தக் கதவு திறக்கிறது? ஒருவேளை... இல்லை, இல்லை; அடுத்த வீட்டுக் கதவாயிருக்கும்; அல்லது சத்தம் கேட்டதே வெறும் பிரமையாயிருக்கும். இருந்தாலும் சற்றுப் பொறுத்து எழுந்திருக்கலாம், மறுபடியும் தூங்கிவிட கூடாது. இதோ தாரிணி படுக்கையில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு நன்றாய்த் தூங்குகிறாள். தூங்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டியது. ஐயோ! இது என்ன? அதோ அந்த நிலைக்கண்ணாடியில் மங்கலாகத் தெரியும் உருவம்! பயங்கரமாயிருக்கிறதே? முகத்திலே தாடி! தலையிலே துருக்கிக் குல்லா! கண்களில் நெருப்புத் தணல்... சீதாவின் உடம்பில் ஒரு நிமிஷம் இரத்த ஓட்டம் அடியோடு நின்று போயிற்று. கை கால் வெலவெலத்து அசைவற்றுப் போயின. ஆகா! இந்த உருவத்தை இப்போது காணவில்லை! ஏதோ ஒரு கை மட்டும் இருட்டிலிருந்து தனியாக வெளிப்பட்டு அந்த உருவத்தைத் தொட்டு அழைத்துக் கொண்டு போன மாதிரி தோன்றியது. எப்படியோ, அந்த உருவம் போய்விட்டது! சீச்சீ! எல்லாம் வெறும் பிரமை!

சீதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு எதிர்ச் சுவரில் பதிந்திருந்த நிலைக்கண்ணாடி யிலே பார்த்தாள். திரும்பி, திறந்த ஜன்னலையும் பார்த்தாள்; ஒன்றுமேயில்லை வெறும் பிரமைதான்! அடுத்த அறையில் சத்தமேயில்லை நன்றாகத் தூங்குகிறார்கள். தாரிணியும் தூங்குகிறாள் இதுதான் சமயம், ரஸியாபேகத்தைப் பார்ப்பதற்கு. அவளுக்கு எச்சரிக்கை செய்து விட வேண்டியது அவசியம். பொழுது விடிந்த பிறகு அவள் இங்கே இருக்கக் கூடாது. தலையணையின் அடியில் சீதா, கையை விட்டுத் துழாவி அங்கேயிருந்த சாவியை எடுத்துக்கொண்டாள் சிறிது கூடச் சத்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்தாள். எதிர்ப்பக்கச் சுவரில் ஒரு கதவு இருந்தது. அந்த வழியாகச் சென்றாள் இவரும் சூரியாவும் படுத்திருக்கும் அறை இருக்கிறது. வலது பக்கம் இருந்த வாசற்படி வழியாகப் போனால் சாப்பாட்டு அறைக்குள் போய் அங்கிருந்து கொல்லைப் பக்கம் போகலாம் யாருக்கும் தெரியாது... வலது பக்கத்துச் சுவரண்டை சென்று அங்கிருந்த கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். ஜாக்கிரதைக்கு ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள். தாரிணி தூங்கிக் கொண்டுதானிருக்கிறாள் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று.

தன்னுடைய காலடிச் சத்தம் தன் காதுக்குக் கூடக் கேளாதபடி சீதா மெள்ள மெள்ள அடி எடுத்து வைத்து நடந்து போனாள். கடைசியாக அந்தத் தட்டுமுட்டுச் சாமான் அறை வந்ததும் இருட்டில் கையினால் தடவிப் பூட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். சாவியைப் பூட்டுக்குள் செலுத்தப் பார்த்தாள். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இது என்ன சங்கடம்? விளக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போட்டால் என்ன? இங்கே யார் வரப் போகிறார்கள்? வெளிச்சம் கொஞ்சம் இருந்தால்தான் நல்லது. இருட்டில் திடீரென்று கதவு திறந்ததும், அந்த ஸ்திரீ.. ரஜினிபூர் பைத்தியக்காரி... அலறிக்கொண்டு எழுந்தால்? அவள் கையில் கத்திவேறே இருக்கிறது! கையினால் தேடி மின்சார விளக்கின் ஸ்விச் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விளக்கைப் போட்டாள்... அது என்ன சத்தம்? யாரோ நடக்கும் காலடிச் சத்தம் மாதிரி கேட்டதே!.. ஒருவேளை அந்த ஸ்திரீ அறையின் உள்ளே எழுந்து நடமாடுகிறாள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்; அவளைத் தொட்டு எழுப்ப வேண்டிய அவசியமில்லை. இருட்டில் பூட்டைத் திறக்கச் செய்த முயற்சியில் தான் செய்த தவறு சீதாவுக்குத் தெரிந்தது. பூட்டின் முன் பக்கத்தில் சாவியைப் போடுவதற்குப் பதிலாகப் பின்புறத்தில் போட முயன்றிருக்கிறாள். அது எப்படித் திறக்கும்? அதை நினைத்த போது சீதாவுக்குச் சிரிப்புக் கூட வந்தது.

இதோ பூட்டுத் திறந்தது! கதவும் திறந்தது! சீதா மெதுவாக உள்ளே ஒரு காலை வைத்து எட்டிப் பார்த்தாள். இது என்ன! அறைக்குள்ளே யாரும் இல்லையே! ஒருவரும் நடமாடவில்லையே! ஒரு சத்தமும் கேட்கவில்லையே! இன்னொரு காலையும் உள்ளே வைத்து நாலுபுறமும் நன்றாகப் பார்த்தாள் அறை காலியாக இருந்தது. இது என்ன விந்தை! முன்னிரவில் நடந்ததெல்லாம் உண்மையில் கனவில் நடந்ததோ? அந்த ஸ்திரீ ஸ்நான அறைக்குள் இருந்தது, அப்புறம் இந்த அறைக்குள் சென்றது. வெளிப்பக்கம் கதவைப் பூட்டச் சொன்னது எல்லாம் தன்னுடைய மனப்பிராந்தியா? இல்லவே இல்லை, எல்லாம் உண்மையாக நடந்தவைதான். பின்னே, அந்த ஸ்திரீ எப்படி அங்கிருந்து மாயமாய் மறைந்து போனாள்? அப்போது அந்த அறையிலிருந்து பின் பக்கம் திறந்த கதவு சீதாவின் கண்ணில் பட்டது. அந்தக் கதவின் தாழ்ப்பாள் அகற்றப்பட்டிருந்தது; சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் வெளியே போயிருக்கிறாள். போலீஸ்காரர்கள் வந்து தடபுடல் செய்தது ரஸியாபேகத்தின் காதில் பட்டிருக்க வேண்டும். சந்தடி அடங்கியதும் புறப்பட்டிருக்கிறாள். தான் தெரிந்து கொள்ள விரும்பியதை அவளிடம் தெரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது! ஆயினும் பாதகமில்லை. எப்படியாவது அவள் அந்த வீட்டிலிருந்து பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாளே, அதுவே போதும்! இனிமேல் இங்கு எப்படிப்போனாலும் சரிதான், அதையெல்லாம் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகவேண்டும். இவரும் குழந்தை வஸந்தியும் நன்றாயிருந்து, வாழ்க்கை நிம்மதியாக நடந்தால், அதுவே போதும். இன்றைக்கு அனுபவித்தது போன்ற பயங்கரங்கள் இனிமேல் வேண்டவே வேண்டாம்.

இப்படி எண்ணிக்கொண்டே சீதா அறைக்கு வெளியில் வந்து முன்போலக் கதவைப் பூட்டத் தொடங்கினாள். திடீரென்று ஓர் உணர்ச்சி... தான் செய்யும் காரியத்தை இரண்டு கண்கள் உற்றுப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சாப்பாட்டு அறையின் வாசற்படியண்டை தாரிணி நின்று கொண்டிருந்தாள். காரணமில்லாத பீதியுடன் சீதா சிறிது நேரம் தாரிணியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையிலே இருந்த சாவியினால் பூட்டைப் பூட்டுவதற்குக் கூடச் சக்தி இல்லாமல் நின்றாள். இதைப் பார்த்த தாரிணி புன்னகை பூத்த முகத்துடன் அவள் அருகில் நெருங்கி வந்து, "சீதா எதற்காகப் பயப்படுகிறாய்? நீ யாரைப் பார்ப்பதற்காக வந்தாயோ, அவளைப் பார்க்கத்தான் நானும் வந்தேன். அவள் விஷயத்தில் உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமான சிரத்தை இருக்கக் கூடியது இயற்கை அல்லவா?" என்றாள். வியப்பினால் விரிந்த கண்களினால் சீதா தாரிணியைப் பார்த்து, "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள். "ஊகித்துத்தான் தெரிந்து கொண்டேன், சீதா! உன்னுடைய நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் எல்லாம் என் மனதில் ஒருவாறு சந்தேகத்தை உண்டாக்கின. ஸ்நான அறையில் என்னுடைய கைக்குட்டை இருந்ததாகச் சூரியா சொன்னதும் சந்தேகம் உறுதிப்பட்டது. அப்புறம்..." என்று தாரிணி தயங்கினாள். "அப்புறம் என்ன, அக்கா?"

"செய்யக்கூடாத ஒரு காரியம் செய்தேன், சீதா! அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்காக உன் கணவருடைய ஆபீஸ் அறைக்குள் போயிருந்தேனல்லவா? அப்போது மேஜையில் நீ பாதி எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில் பட்டது. என்னை அறியாத ஒரு ஆவலினால் அதைப் படித்தேன்; அந்தக் கடிதத்தின் கடைசியில்..." "அக்கா! இதுதானா உங்களுக்குத் தெரிந்த இலட்சணம்? பிறத்தியார் கடிதத்தைப் படிக்கலாமா? இவர் கூட என் கடிதங்களைப் படிக்கிற தில்லையே?" "அதற்காகத் தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, சீதா!" என்று இரக்கமான குரலில் கூறினாள் தாரிணி. "போனால் போகட்டும், நான் எழுந்து வந்தது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தூங்கவில்லையா?" "எனக்கு எப்படித் தூக்கம் வரும், சீதா! இவ்வளவு பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கும் போது? நீ என்னைத் தூங்கப் பண்ணுவதில் அதிக சிரத்தை காட்டினாய். நான் தூங்கிய பிறகு ஏதோ நீ செய்யப் போகிறாய் என்று எதிர்பார்த்தேன். ஆகையால் தூங்குகிறதுபோலப் பாசாங்கு செய்தேன். நீயே தூங்கிப் போய்விட்டதாகத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கடிகாரம் மணி இரண்டு அடித்து உன்னை எழுப்பி விட்டது.

நீ எழுந்து சாவியை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்து வந்தாய். நானும் பின்னால் உனக்குத் தெரியாதபடி வந்தேன். சட்டென்று நீ விளக்குப் போட்டதும் ஒருவேளை என்னைப் பார்த்து விடுவாயோ என்று பயந்து போனேன். ஆனால் நீ பார்க்கவில்லை கதவைத் திறந்து கொண்டு அந்த அறைக்குள் போனாய். யாரையோ தேடி ஏமாற்றமடைந்தாய் ஆனால் நான் ஏமாற்றமடையவில்லை..." "நீங்கள் ஏன் ஏமாற்றமடையவில்லை? இங்கே ஒருவரும் இல்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" "மணி இரண்டு அடித்து உன்னை எழுப்புவதற்குச் சற்று முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ போனதைப் பார்த்தேன்! சீதா இந்த அறையில் இருந்தது ஒருவரா, இருவரா?" "ஒருவர்தான்! நீங்கள் ரஸியாபேகம் என்று சொன்னீர்களே, இந்த அம்மாள்தான் இங்கே இருந்தாள். ஒருவரா, இரண்டு பேரா என்று எதற்காகக் கேட்டீர்கள்?" "இரண்டு பேர் போனதை நான் பார்த்தேன், சீதா! வேறு ஒருவர் வந்து ரஸியாபேகத்தை அழைத்துப் போயிருக்க வேண்டும்." சீதாவுக்குத் தான் நிலைக்கண்ணாடியில் கண்ட காட்சி நினைவுக்கு வந்ததும் பரபரப்புடன், "அக்கா! அந்த இன்னொருவர் யார்?" என்று கேட்டாள். "எனக்குத் தெரியாது தாடியும் துருக்கிக் குல்லாவும் செக்கச் செவந்த கண்களும் உள்ள முகம் ஒன்றைப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கும்போது எங்கேயோ, எப்போதோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது" என்றாள் தாரிணி. "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்று சீதா கூறினாள். "உனக்கும் தோன்றுகிறதா? நீ பார்த்தாயா, என்ன?"

"மணி இரண்டு அடித்துக் கண்ணை விழித்ததும், எதிரில் நிலைக்கண்ணாடியில் ஒரு முகம் தோன்றியது உடனே அது மறைந்து விட்டது. ஒருவேளை மனப்பிராந்தியாயிருக்கலாம் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதிலிருந்து அது நிஜ முகம் என்று ஏற்படுகிறது." "அம்மா மட்டும் போவதைப் பார்த்திருந்தால், என்னால் பொறுக்க முடிந்திராது! 'அம்மா!' என்று கத்தியிருப்பேன்? பின்னோடு இன்னொருவரும் இருந்தபடியால், பேசாதிருந்தேன்." "அந்த ஸ்திரீ உண்மையில் உங்கள் தாயார்தானா? என்னால் நம்பவே முடியவில்லையே!... நாம் எதற்காக இங்கேயே நின்று கொண்டு பேசவேண்டும்? குழந்தை விழித்துக் கொண்டு அழுதாலும் அழுவாள். புருஷர்கள் விழித்துக்கொண்டால் நமக்கு என்னமோ நேர்ந்துவிட்டது என்று காபரா அடைவார்கள். உள்ளே போய்ப்படுத்துக் கொண் டே பேசலாம். எனக்கு இனிமேல் தூக்கமே வராது. உங்களைப் பற்றிய எல்லா விவரமும் சொல்லிவிட வேண்டும்!" என்றாள் சீதா.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

தாரிணியின் கதை

இருவரும் அவரவர்களுடைய படுக்கையில் உட்கார்ந்திருந்தார்கள். தாரிணி கேட்டுக் கொண்டபடி அன்று முன்னிரவில் நடந்ததையெல்லாம் சீதா தனக்குத் தெரிந்த வரையில் சொல்லியாகி விட்டது. இப்போது தாரிணியின் முறை வந்திருந்தது. தாரிணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னதாவது:- பழைய காலத்துக் கதைகளில் தங்களுடைய கதைகளைத் தாங்களே சொல்லும் கதாநாயகிகள், 'நான் பிறந்த கதையைச் சொல்லவா? வளர்ந்த கதையைச் சொல்லவா?' என்று ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் பிறந்த கதையை நான் சொல்ல முடியாது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் ரஸியாபேகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடைசியாக, அவளைக் கண்டுபிடித்து விட்டதாக எண்ணிய சமயத்தில் கை நழுவிப் போய் விட்டாள் அதுவும் நல்லதுதான். இப்பேர்ப்பட்ட பயங்கரச் சம்பவம் நடந்திருக்கும் சமயத்தில் நான் என்ன கேட்க முடியும்! அவள்தான் என்னத்தைச் சொல்ல முடியும்!" "அவள் உண்மையில் முஸ்லிம் ஸ்திரீதானா? அக்கா! அவளுடைய உண்மைப் பெயர் ரஸியாபேகம்தானா?" என்று சீதா கேட்டாள்.

"இல்லை அந்த விஷயத்தை அப்புறம் சொல்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவளைத்தான் என்னுடைய தாயார் என்று நினைத்திருந்தேன். உலகத்திலேயே எந்தத் தாயாரும் அவ்வளவு அன்பாக மகளை வளர்த்திருக்க முடியாது. அப்படி என்னை உயிருக்குயிராக எண்ணிப் பாதுகாத்து வந்தாள். ஆனால் உலகத்திலுள்ள பெண்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய சிறு பிராயத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது. என்னுடைய தாயார் உலகத்திலேயே மற்ற ஸ்திரீகளைப் போல் புருஷருடன் வாழ்ந்து குடித்தனம் செய்யவில்லை. யாருக்கோ பயந்து கொண்டு மறைந்து ஒளிந்து வாழ்வதாகத் தெரிந்தது. அடிக்கடி என் தாயாரைப் பார்க்க ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அவரை நான் 'அப்பா' என்று கூப்பிடுவது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது, தானாக வந்ததா அல்லது யாராவது சொல்லிக் கொடுத்து வந்ததா என்று எனக்குத் தெரியாது. என் நினைவு தெரிந்தது முதல் அவரை 'அப்பா' என்றே நான் அழைத்து வந்தேன். அவரும் அம்மாவும் சில சமயம் ஒருவருக்கொருவர் ரொம்பப் பிரியமாயிருப்பார்கள். சில சமயம் புலி கரடிகளைப் போலச் சண்டை போட்டுக் கொள்வார்கள். அவர்கள் உலகத்தில் எல்லாரையும் போலக் கலியாணம் செய்து கொண்ட கணவனும் மனைவியும் அல்ல என்று எனக்குத் தெரிந்திருந்தது.

ஆனாலும் அவர் தான் என்னுடைய தகப்பனார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு பேரும் அடிக்கடி சண்டையிட்ட போதிலும் ஒரு விஷயத்தில் ரொம்பவும் ஒற்றுமையாயிருந்தார்கள். அதாவது என்னிடம் பிரியமாயிருக்கும் விஷயத்தில் தான். நான் ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்று சொல்லிவிட்டால் போதும், உடனே அது வந்து சேர்ந்துவிடும். எனக்கு ஏதாவது கொஞ்சம் உடம்பு சரிப்படாவிட்டால் போதும். இரண்டு பேரும் எனக்காக உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள். என்னை வளர்ப்பதற்கும் படிக்க வைப்பதற்கும் கூசாமல் பணம் செலவு செய்தார்கள். இத்தனைக்கும் அவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கவில்லை. நான் சிறுமியாயிருந்த போது என் தாயாரிடம் விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏராளமாக இருந்தன. அவை எப்படி வந்தன என்று எனக்குத் தெரியாது; கேட்கவும் எனக்கு மனம் வராது. அந்த நகைகளையெல்லாம் என் தாயார் ஒவ்வொன்றாக என் தகப்பனாரிடம் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்வாள். சில சமயம் அப்பாவும் பணம் கொண்டு வருவார். அதை வாங்கிக் கொள்ள முடியாது என்று அம்மா பிடிவாதம் பிடிப்பாள். ஏனெனில் அப்பாவுக்கு வருமானம் அதிகம் இல்லை என்றும் அவர் காப்பாற்ற வேறொரு குடும்பம் இருந்ததென்றும் அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. சில சமயம் அம்மாவுக்குத் தெரியாமல் அப்பா எனக்குத் துணிமணி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். தெரிந்த பிறகு அம்மா அவரைச் சண்டை பிடிப்பாள்.

இந்த விதமாக என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. கான்வெண்ட் பள்ளிக்கூடத்தில் படித்தபோது நிருபமா என்ற பெண் எனக்குச் சிநேகிதி ஆனாள். என்னுடைய பிறப்பு வளர்ப்பைக் குறித்து நினைத்து நான் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போதெல்லாம் நிருபமாவின் சிநேகந்தான் எனக்கு ஒருவாறு உற்சாகம் ஊட்டி வந்தது...." "ஆக்ராவில் பார்த்தோமே, அவர்தானே? எனக்கு அவரை ரொம்பவும் பிடித்திருந்தது. சிநேகம் என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்?" என்று குறுக்கிட்டுச் சொன்னாள் சீதா. "ஆம், அவள்தான்! எங்கள் இருவருக்கும் ஒரே வயது. எங்களுக்கும் வயதாக ஆக வருங்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தோம். ஒருவருக்கொருவர் அந்தரங்கத்தை வெளியிட்டுக் கொண்டோம். இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்வதில்லையென்றும் தேச சேவைக்கே எங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்வது என்றும் தீர்மானம் செய்தோம். ஆனால் நிருபமா அந்தத் தீர்மானத்திலிருந்து மாறிவிட்டாள். சீதா! நீதான் பார்த்தாயே? அவளை அவ்வளவு இலட்சணமானவள் என்று உலகத்தார் சொல்ல மாட்டார்கள். இதை நிருபமா உணர்ந்திருந்தபடியால் தனக்குக் கலியாணமே வேண்டாமென்று சொல்லி வந்தாள். ஆனால் வெளி அழகை மட்டும் பாராமல் அகத்தின் அழகைத் தெரிந்து பாராட்டக் கூடிய ஒருவர் வந்து சேர்ந்தார். அவரை நிருபமா கலியாணம் செய்துகொண்டு இப்போது சந்தோஷமாயிருக்கிறாள் அவள் பாக்கியசாலி."

தாரிணியின் கண்களில் அப்போது கண்ணீர் துளிர்த்ததைச் சீதா பார்த்தாள் அவளுடைய மனம் கனிந்தது. "அக்கா! நிருபமாவைப் போல் நீங்களும் ஒரு நாள் பாக்கியசாலியாவீர்கள்" என்றாள். "அவளுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு, சீதா! என்னுடைய குறை என்னுடைய பிறப்பைப் பற்றியது. தாயாரும் தகப்பனாரும் இன்னார் என்று தெரியாத என்னைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டிய புருஷன் இந்த நாட்டில் எங்கே இருக்கிறான்? அப்படி ஒருவன் இருந்து சம்மதித்தாலும், அவனுடைய பந்துக்கள் சம்மதிக்க வேண்டும்? நம்முடைய தேசத்தில் கலியாணம் நடப்பது பந்துக்களின் சம்மதத்தைப் பொறுத்தல்லவா இருக்கிறது? அது போகட்டும், எனக்குக் கலியாணத்தில் இஷ்டம் இல்லை. இப்போது மில்லை; எப்போதும் இருக்கவில்லை. தேச சேவையில் உண்மையாகவே ஆர்வம் இருந்தது. பம்பாய் உப்பு சத்தியாக்கிரஹ இயக்கம் நடந்தபோது நிருபமாவும் நானும் அதிலே சேர்ந்தோம். எங்களுடைய சிறு பிராயத்தை முன்னிட்டு எங்களைச் சிறைக்கு அனுப்பவில்லை. நகரத்துக்கு வெளியே பல தடவை கொண்டு விட்டார்கள். ஒவ்வொரு தடவையும் நானும் நிருபமாவும் சேர்ந்தே இருந்தபடியால் எங்களுக்குப் பெரிய தமாஷாயிருந்தது. அந்த இயக்கம் முடிவடைந்ததும் கராச்சி காங்கிரஸுக்குப் போனோம்..."

இவ்விடத்தில் தாரிணி நிறுத்தி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு மேலே கூறினாள்:- "பிறகு இந்தப் புண்ணிய பாரத பூமியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காஷ்மீரம் முதல் சென்னை வரையில், கராச்சியிலிருந்து கல்கத்தா வரையில் ஊர் ஊராகச் சென்று பார்த்தோம். பிற்பாடு பீஹார் பூகம்பத்தைப் பற்றிய பயங்கரச் செய்திகள் வந்து இந்தத் தேசத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டன. பம்பாயிலிருந்து பூகம்ப சேவை செய்வதற்குப் புறப்பட்ட தொண்டர் படையில் நானும் நிருபமாவும் சேர்ந்து சென்றோம். பூகம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் இருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. நிருபமா வேணிப்பிரஸாதைச் சந்தித்தாள்; சில காலத்துக்குப் பிறகு அவரைத் தன் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டாள்!" என்று தாரிணி நிறுத்தினாள். "அக்கா! மேலே சொல்லுங்கள் முக்கியமான இடத்தில் கதையை நிறுத்தி விட்டீர்களே! நிருபமா தேவியின் வாழ்க்கையில் திருமணம் நிகழ்ந்தது; உங்களுடைய வாழ்க்கையில் என்ன முக்கிய சம்பவம் நடந்தது?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள்.

"நிருபமாவுக்கு மணம் நிகழ்ந்தது; எனக்கு மரணம் நிகழ்ந்தது! ஏதோ பிதற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சீதா! எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் செத்துப் போனவள் ஆனேன். அப்படி எல்லோரும் என்னை அடியோடு மறந்துவிட வேண்டுமென விரும்பினேன். ஆகையால், நான் இறந்துவிட்டதாக என்னுடன் சேவை செய்தவர்கள் நம்பும்படி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். இதற்குக் காரணம் நீ பத்திரிகையில் எந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு என் தாயார் பேரில் சந்தேகப்பட்டாயோ, அதே செய்திதான். என் தாயார் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள் என்கிற செய்தி அப்படி என் மனதைக் குழப்பி விட்டது. இந்த உலகத்திலேயே என்னுடைய பூரண அன்புக்கு உரியவளாயிருந்தவள் என் தாயார்தான். என் தகப்பனார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனே, அவர் பேரில் எனக்கு எப்போதும் அவ்வளவு பிரியம் ஏற்பட்டதில்லை. ஆனால் தாயார் மீது உயிருக்குயிரான நேசம் நான் வைத்திருந்தேன். அவளுடைய நடத்தையைப் பற்றி எவ்வளவு குறைகள் மனதில் தோன்றினாலும் அவ்வளவையும் மீறி அவள் மீதுள்ள பிரியம் மேலோங்கி நின்றது. சில வருஷமாக அடிக்கடி அவளைப் பிரிந்து நான் நாடு சுற்றிய போதிலும் அவள் மீது எனக்கிருந்த பாசம் சிறிதும் குன்றவில்லை. அவளுக்கு இந்த அபகீர்த்தி இந்தக் கஷ்டம், நேர்ந்ததை என்னால் சகிக்க முடியவில்லை.

ஒரு மகாராஜாவை அவள் கொல்ல முயற்சித்தது ஏன் என்பதை எண்ணிப் பார்த்தபோது என்னவெல்லாமோ உருப்படியில்லாத சந்தேகங்கள் தோன்றின. அப்படிப்பட்ட நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் என் தகப்பனாரைச் சந்தித்தேன். அதுவரையில் என்னுடைய தகப்பனார் என்று நினைத்துக் கொண்டிருந்த மனிதரைத்தான். அவர் எனக்கு ஆறுதலாக இருக்கட்டுமென்று சில செய்திகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று என்ன தெரியுமா? அதுவரையில் என்னுடைய தாயார் என்று நான் நினைத்திருந்தவள், உண்மையில் என் தாயார் அல்ல என்றுதான். இது எனக்கு ஆறுதல் அளிப்பதற்குப் பதிலாகச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. இருள் நிறைந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது; அதுவும் இப்போது அணைந்து போய்விட்டது. அவள் என் தாயார் இல்லையென்றால் இவரும் என் தகப்பனார் இல்லை. பின் நான் யாருடைய மகள்? என் தாய் யார்? தகப்பன் யார்? சீதா! என் வளர்ப்புத் தாய் அவ்வப்போது ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருந்த சில வார்த்தைகளுக்கு இப்போது பொருள் நன்றாகத் தெரிந்தது. அதிலிருந்து யாரோ ஒரு சுதேச சமஸ்தான ராஜாவின் மகள் நான் என்ற சந்தேகம் உதித்தது. என் வளர்ப்புத் தாய் அடிக்கடி ஜாகை மாற்றிக் கொண்டிருந்தது, ரமாமணி என்ற பெயரை மாற்றி ரஸியாபேகம் என்று வைத்துக் கொண்டது இதற்கெல்லாம் ஒருவாறு காரணம் தெரிந்தது.

என் வளர்ப்புத் தந்தை இன்னொரு விஷயமும் சொன்னார். என் தாயார் 'ரஸியாபேகம்' என்று வைத்துக்கொண்டதுடன், 'நான் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்துவிடப் போகிறேன். அப்போதுதான் ஆண் மக்களுடைய தொல்லையில்லாமல் தைரியமாக வாழ முடியும்!' என்று சொல்லிக் கொண்டிருப்பாள். கொலை செய்ய முயன்றதற்குச் சில நாளைக்கு முன்னால் உண்மையாகவே அவள் முஸ்லிம் மதத்திலே சேர்ந்து விட்டதாக என் வளர்ப்புத் தந்தை தெரிவித்தார். இதனாலெல்லாம் நான் அடைந்த மன வேதனையை என் வளர்ப்புத் தந்தை தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு வேறொரு முக்கியமான காரியம் இருந்தது. எனக்குத் தைரியம் சொல்லிவிட்டு, தன்னை மறுபடியும் சந்திப்பதற்கு இடமும் தேதியும் குறிப்பிட்டுவிட்டு அவர் போனார். ஆனால் அவரை நான் விடுதலை அடையும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தேதியில் சிறை வாசலுக்குப் போனேன். ஆனால் அன்று எந்த ஸ்திரீயும் விடுதலை அடையவில்லை. விசாரித்ததில், சிறைக்குள்ளேயும் ரஸீயாபேகம் யாரையோ குத்திக் கொல்ல முயற்சித்ததாகவும், அவளைப் பைத்தியம் என்று சந்தேகித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு மாற்றிவிட்டதாகவும் தெரிந்தது. பைத்தியக்கார ஆஸ்பத்திரியை விசாரித்துக் கொண்டு அங்கே போனேன். அங்கே பைத்தியம் தெளிந்து அவள் விடுதலையாகிப் போய்விட்டதாகத் தெரிந்தது. அன்று முதல் ரஸியாபேகத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். சீதா! அதற்காகவேதான் ரஜினிபூருக்கு நான் வந்தேன்.

'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ டில்லியில் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாக அங்கே கேள்விப்பட்டேன். அதன் பேரில் டில்லியிலும் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியாக அவளைச் சந்தித்திருக்கக்கூடிய தினத்தில் இம்மாதிரி பயங்கர சம்பவம் நடந்துவிட்டது!..." அந்த அறையில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சீதா, "ரஸியாபேகம் உண்மையில் பைத்தியம் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?" என்று கேட்டாள். "எனக்கு எப்படித் தெரியும், சீதா! நான் அவளைப் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல் ஆயிற்று. ஒருவேளை அவள் பைத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். அவளுடைய மனதில் ஏதோ ஒரு பெரிய துவேஷம் குடிகொண்டிருந்தது மட்டும் எனக்குத் தெரியும். துவேஷம் முற்றினால் வெறி, அப்புறம் பைத்தியந்தானே? பைத்தியம் என்று ஏற்பட்டால் ஒரு வகையில் நல்லதுதான். போலீஸாரிடம் அவள் அகப்பட்டால் இன்று நடந்த சம்பவத்துக்காகத் தூக்கு போடமாட்டார்கள். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள்!" இதைக் கேட்ட சீதா அன்றைய தினம் எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம் என்று எண்ணிக்கொண்டாள். வெறியும் பைத்தியமும் ஒருவேளை தன் பேரிலும் திரும்பியிருக் கலாமல்லவா? அதிலும் இராத்திரி இரண்டு மணிக்குத் தனியாகச் சென்று அறையைத் திறந்தபோது அவள் திடுக்கிட்டிருந்தால்? கடவுள் தன்னைக் காப்பாற்றினார் குழந்தை வஸந்தி செய்த அதிர்ஷ்டந்தான்!

சற்றுப் பொறுத்து சீதா, "இன்னும் ஒரே ஒரு கேள்வி, அக்கா நான் அணிந்திருந்த ரத்தின மாலையைப் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? அதை ரஸியாபேகம் எனக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்?" என்றாள். "ஆமாம்; அதை உறுதிப் படுத்திக் கொள்ளத்தான் கேட்டேன். என்னை வளர்த்த தாயார் ஒவ்வொன்றாகப் பல நகைகளை விற்ற பிறகு கடைசியாக மிஞ்சியிருந்த நகை அதுதான்." "அந்த ரத்தின மாலையையும் அதோடு இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் அவள் எதற்காக எனக்குக் கொடுத்தாள்?" "என்னை ஏன் கேட்கிறாய் சீதா? என் வாயினால் சொல்ல வேண்டுமா; நீயே ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் தாரிணி. சீதாவின் உள்ளம் அதை ஊகித்துத் தெரிந்து கொண்டுதானிருந்தது. இப்போது ஊகம் ஊர்ஜிதமாயிற்று; தாரிணி நினைவு வந்த நாளிலிருந்து 'அப்பா' என்று அழைத்துக் கொண்டிருந்த மனிதர் சீதாவின் தந்தையாக இருக்கவேண்டும். தன்னுடைய குழந்தைப் பிராயத்தில் வீட்டில் தரித்திரம் பிடுங்கித் தின்றதன் காரணமும் தன் தாயார் அடிக்கடி சோகக் கடலில் மூழ்கியிருந்த காரணமும் அதுவேதான்.

அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகவே அந்த ஸ்திரீ மர்மமாக வந்து இரத்தின மாலையை கொடுத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். தன்னுடைய கலியாணத்துக்கு முன்னால் தன் தகப்பனார் டில்லிக்குப் போயிருந்த விஷயம் சீதாவுக்கு நினைவு வந்தது. தாரிணியைப் பார்க்கத்தான் அவர் போயிருக்க வேண்டும். இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ? தான் பார்த்துப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. தாரிணியும் அவரைப் பார்க்கவில்லை. அவர் உயிரோடிருக்கிறாரோ என்னமோ? இருந்தால் பெற்ற மகளை ஒரு தடவையாவது வந்து பாராமலா இருப்பார். இப்படியெல்லாம் யோசித்துவிட்டுச் சீதா, "அக்கா! எது எப்படியிருந்தாலும் சரிதான்; எப்போதும் நீங்கள் எனக்குத் தமக்கையாகவே இருக்க வேண்டும்!" என்றாள். கடிகாரத்தில் மணி நாலு அடித்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து நான்காம் அத்தியாயம்

நல்ல மாமியார்

திடீரென்று ஒருநாள் தாமாவும் பாமாவும் சீதாவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடைய வரவு சீதாவுக்கு மிக்க குதூகலம் அளித்தது.பேச்சும் சிரிப்பும் பரிகாசமுமாக வீடு ஒரே கலகலப்பாயிருந்தது. யோக க்ஷேமங்களை விசாரித்துக் குழந்தை வஸந்தியை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சிய பிறகு, "மிஸ்டர் ராகவன் எங்கே? அவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணத்தான் முக்கியமாக நாங்கள் இன்றைக்கு வந்தோம்!" என்றாள் பாமா. "என் மாமியார் இன்றைக்கு ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வருவதற்கு இவர் இரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார்!" என்று சொன்னாள் சீதா. "ஐயோ! மாமியார் வருகிறாளா? எனக்குப் பயமா யிருகிறதே!" என்றாள் பாமா. "உனக்குத் தெரியுமா, சீதா? கலியாணம் பண்ணிக் கொண்டால் மாமியார் வந்து சேர்வாளே என்ற பயத்தினால் தான் நாங்கள் இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்ளவில்லை!" என்று தாமா சொல்லிவிட்டு 'ஹஹ்ஹஹ்ஹா!' என்று சிரித்தாள், பாமாவும் கூடச் சிரித்தாள்.

சீதாவும் கொஞ்சம் சிரித்துவிட்டு, "ஆனால் எனக்கு வந்திருக்கும் மாமியார் அப்படிப்பட்டவர் இல்லை! ரொம்ப நல்ல மனுஷி, அவரிடம் எனக்குப் பயமில்லை!" என்றாள். "உன்னைக் கண்டு உன்னுடைய மாமியார்தான் பயப்படுகிற வழக்கமோ?" என்று பாமா சொல்லிவிட்டு 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று நகைத்தாள். "அதுவும் கிடையாது!" என்று சீதா சொல்லிவிட்டு, "ஏன், பாமா! இங்கிலீஷ்காரர் களுக்குள்ளே நாட்டுப் பெண்கள் மாமியாருக்குப் பயப்பட மாட்டார்களாமே? மாப்பிள்ளைகள் தான் மாமியார்களைக் கண்டு பயப்படுகிற வழக்கமாமே?" என்று கேட்டாள். "அதெல்லாம் ஹாஸ்ய ஆசிரியர்கள் பரிகாசமாக எழுதுகிற விஷயம். நகைச்சுவை இல்லாத நம்முடைய ஊர்க்காரர்கள் அதை உண்மை என்று எண்ணிக் கொண்டு இங்கிலீஷ் நாகரிகத்தைக் கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள்!" என்றாள் தாமா. "இவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணவேண்டும் என்கிறீர்களே! எதற்காக?" என்று சீதா கேட்டாள்.

"ராகவன் சீமைக்குப் போய்ட்டு வந்தவரானபடியால்தான், அவருக்கு அப்பேர்ப்பட்ட தைரியம் வந்தது. நம் ஊர்க்காரர் களாயிருந்தால், தெருவிலே யாராவது விழுந்து கிடந்தால் 'நமக்கென்னத்திற்கு வம்பு?' என்று ஒதுங்கிப்போய் விடுவார்கள். ராகவன் சீமைக்குப் போனவரான படியால் சாலையில் குத்துப்பட்டுக் கிடந்தவனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய்ப் போலீஸிலும் தெரியப்படுத்தினார். இந்த மாதிரி கடமை உணர்ச்சியுடன் உன் கணவர் காரியம் செய்தது பற்றி எங்கள் தகப்பனார் ரொம்பப் பாராட்டினார், சீதா! இதை உன்னுடைய கணவரிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் முக்கியமாக வந்தோம்!" என்றாள் பாமா. அன்றிரவு உண்மையில் நடந்தது என்ன என்பது சீதாவுக்கு நன்றாக நினைவில் இருந்தது. சீமைக்குப் போய் வந்த தன் கணவர், "நமக்கென்னத்திற்கு வம்பு? வண்டியை ஒதுக்கிவிட்டுக் கொண்டு போய்விடலாம்!" என்று சொன்னார். சூரியாவும் தாரிணியுந்தான் குத்துப்பட்ட உடலைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து ராகவன், "உங்களுடைய பிடிவாதத்தினாலேதான் இந்தத் தொந்தரவெல்லாம் வந்தது!" என்று இரண்டு மூன்று தடவை சொன்னது சீதாவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. ஆனாலும் சீதா அந்த விஷயத்தை இப்போது உடைத்துச் சொல்ல விரும்பவில்லை. தன் கணவனுக்குத் தாமாவும் பாமாவும் அளித்த கௌரவத்தை நான் ஏன் மறுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு சும்மா இருந்தாள்.

பிறகு ஏதோ நினைவு வந்து கேட்பவளைப்போல், "பாவம்! செத்துப்போன மனிதன் உங்கள் ஊர்க்காரனாமே? அது வாஸ்தவமா?" என்றாள். "ஆமாம்; அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எங்களூர் என்றால் ரஜினிபூர், ஆனால் அவனுக்காகப் 'பாவம்' என்று இரக்கப்பட வேண்டியதில்லை; ரொம்பப் பொல்லாத மனிதன். பழைய ராஜா இருந்தபோது இவனுடைய அக்கிரமங்களைச் சகிக்க முடியாதாம். எங்கள் அப்பா திவானாக வந்த பிறகு கொஞ்சம் பயந்து கொண்டு சும்மாயிருந்தான். முக்கால்வாசி டில்லியிலேதான் இருப்பான். இங்கே என்ன வத்தி வைத்துக் கொண்டிருக்கிறானோ, யார் குடியைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறானோ என்று அப்பா வுக்குக் கூடக் கவலையாகத்தான் இருந்தது. அவன் செத்துப் போனது உலகத்துக்குப் பெரிய நஷ்டமில்லைதான் ஆனாலும் சட்டம் சட்டமல்லவா? அவனைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் அப்பா ரொம்பப் பிரயத்தனம் செய்து இந்த ஊர்ப் போலீஸ் காரர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். டில்லியில் போலீஸ் சுத்த ஊழல் என்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?"

சீதாவுக்கு ரஜினிபூர் திவான் மீது கோபமாய் வந்தது. அவர் எதற்காக இந்த விஷயத்தில் சிரத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது. "அப்படியானால் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க வில்லையா!" என்று கேட்டாள். "எங்கே கண்டுபிடிக்கப் போகிறார்கள்? மூன்று வருஷம் தேடிவிட்டுக் கடைசியில் 'கொலையே நடைபெறவில்லை' என்று சொல்லி விடுவார்கள்! இந்தப் புது டில்லிப் போலீசாரின் இலட்சணம் அப்படி !" என்றாள் தாமா. சீதா தன் மனதிற்குள் 'அப்படியே நடந்துவிட்டால் நல்லது' என்று நினைத்துக் கொண்டாள். ஒரு கொலைகாரி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிரத்தையை நினைக்க அவளுக்கே வியப்பாயிருந்தது. "ஒருவர் பேரிலும் சந்தேகங்கூட இல்லையா?" என்றாள். "யாரோ 'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ, அந்த மதோங்கரைச் சில நாளாகத் தொடர்ந்து கொண்டிருந்தாளாம். அவளாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக் கிறார்கள். ஆனால் அப்படியிராது என்று எனக்குத் தோன்றுகிறது. பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி அவ்வளவு துணிச்சலான குற்றத்தைச் செய்ய முடியுமா?" என்றாள் பாமா. இதற்குத் தாமா, "ஏன் முடியாது? ஏன் துணிச்சல் வராது? ஸ்திரீகளுக்குள்ளே எத்தனையோ ராட்சஸிகள் இருக்கிறார்கள், இராமாயணத்திலே சொல்லியிருக்கிறதே? மேலும் இந்த மதோங்கர் என்கிறவன் என்ன அக்கிரமம் பண்ணினானோ, அவன் பேரில் இவளுக்கு என்னவிதமான கோபமோ, அது யாருக்குத் தெரியும்?" என்றாள்.

இந்த சமயத்தில் டெலிபோன் மணி கிணுகிணுவென்று அடித்தது. சீதா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்து, "யார்?" என்று கேட்டாள். பேசியது சூரியா; தானும் தாரிணியும் சீதாவின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான். "சந்தோஷம்! உன்னைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று உடனே புறப்பட்டு வா!" என்றாள் சீதா. பிறகு, வரப்போவது யார் என்பதைத் தாமா - பாமாவிடம் சொன்னாள். அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். "உன் அகத்துக்காரரைத்தான் பார்க்க முடியவில்லை. தாரிணியை யாவது பார்த்துவிட்டுப் போகிறோம்!" என்றார்கள் பாமாவும் தாமாவும். "அவரும் வருகிற சமயந்தான்; அநேகமாக அரைமணிக் குள்ளே வந்துவிடுவார். நீங்கள் இருந்து அவரையும் பார்த்து விட்டுப் போகலாம்!" என்றாள் சீதா. சீதாவுக்குச் சூரியாவைப் பார்க்க விருப்பமாயிருந்தது; தாரிணியைப் பார்க்கவும் ஆசையாயிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. இதுவிஷயமாக ராகவன் புகார் கூறியது சீதாவின் மனதில் பதிந்திருந்தது. "சூரியாவும் தாரிணியும் அடிக்கடிஒன்றாய்ச் சேர்ந்து போகிறார்களாம்; பகிரங்கமாக ஊர் சுற்றுகிறார்களாம் கொஞ்சம் கூட நன்றாயில்லை. சூரியாவுக்கு ஏன் இப்படிப் புத்தி போக வேண்டும்? அவன் தாயார் தகப்பனாருக்குத் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்?" என்று ராகவன்சொல்லியிருந்தான்.

அது பிசகான காரியம் என்றுதான் சீதாவுக்கும் தோன்றியது. ஆனால் ராகவன் சூரியாவின் பேரில் பழியைப் போட்டான். சீதாவோ தன் மனத்திற்குள் தாரிணியைக் குறை கூறினாள். "சூரியா கிராமத்திலிருந்து வந்த அறியாப் பையன்; அவனை உலக அனுபவமுள்ள தாரிணிதான் கெடுத்துக் கொண்டிருக்கிறாள்" என்று எண்ணினாள். சூரியாவைத் தனியாகச் சந்திக்கும்போது 'தாரிணியின் வலையில் விழ வேண்டாம்!' என்று எச்சரிக்கை செய்யவும் உத்தேசித்திருந்தாள். தாரிணியின் விஷயத்தில் சீதாவின் மனோபாவம் இரண்டு விதமாக இருந்தது. அவளை நேருக்குநேர் சந்திக்கும் போதெல்லாம் தன்னை மீறிய அன்பும் அபிமானமும் அவள் பேரில் ஏற்பட்டது. அவள் தன்னுடைய தமக்கை அதாவது மாற்றாந்தாயின் மகள் என்பதாக ஏற்பட்டிருந்தால் அவளுக்குச் சந்தோஷமாகவே இருந்திருக்கும். அவ்விதம் இல்லாமற் போயிற்றே என்று சீதாவுக்கு ஏமாற்றமாயிருந்தது. ஆனால் தாரிணி இல்லாத சமயத்திலோ, அவள் பேரில் அகாரணமாகக் கோபம் வந்தது. குழந்தை வயதில் தன்னுடைய வீட்டில் குடிகொண்டிருந்த வறுமைக்கும் தன்னுடைய தாயார் துயரத்திற்கும் அகால மரணத்துக்கும் கூட அவளே காரணம் என்று தோன்றியது. அப்புறம் தன்னுடைய கணவரை ஏற்கெனவே தெரிந்தவளாயும் அவருடன் கூச்சமின்றிப் பழகக் கூடியவளாயும் இருக்கிறாள்.

இப்போதோ சூரியாவை அடியோடு பைத்தியமாக அடித்திருக்கிறாள். இந்தியப் பெண் குலத்தின் பண்புக்குத் தகுந்த நடவடிக்கைகளா இவை? தாரிணியை நினைக்கும்போது, தாமாவும் பாமாவும் எவ்வளவு நல்லவர்கள்? அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியிருந்தாலும், அதனால் என்ன? அவர்களுடைய நடத்தை எவ்வளவு மேலானது? ஒரு கொள்கையை உத்தேசித்து அவர்கள் இன்னும் கலியாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களே? அது எவ்வளவு மேலான காரியம்? நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, இந்தச் சகோதரிகளின் நடை உடை பாவனைகள் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் இவர்களுடன் நன்றாக சிநேகம் செய்து கொண்டு அதிகமாகப் பழகி இவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். வைஸ்ராய் மாளிகைத் தோட்டத்தில் நடந்த 'பார்ட்டி'யில் இவர்கள் எவ்வளவு சகஜமாக எல்லாருடனும் பேசிப் பழகினார்கள்? அப்படிப் பழகுவதற்குத் தானும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு என்னமோ இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். ஆனால் கணவருக்குப் பிடிக்கிற காரியங்களே தனக்கும் பிடிக்குமாறு செய்து கொள்ளவேண்டும் அல்லவா? இப்படித்தானே தன் மாமியார் கூட அடிக்கடி போதனை செய்து கொண்டு வருகிறார்? தாமாவும் பாமாவும் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் மிகவும் சௌகரியமாயிருக்கும்....

இத்தகைய மனோநிலையை அடைந்திருந்த சீதா, தாமாவையும் பாமாவையும் பார்த்து, "நீங்கள் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். எனக்கு இங்கே சிநேகிதமேயில்லை பொழுது போவது கஷ்டமாயிருக்கிறது!" என்று சொன்னாள். "ஒருவேளை சீக்கிரம் இந்த ஊருக்கு வந்தாலும் வந்து விடுவோம் சீதா! அப்பாவுக்கு இந்திய சர்க்காரில் பெரிய உத்தியோகம் ஆகும் போலிருக்கிறது! அழைப்பு வந்துவிட்டது. அப்பாதான் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கிறார்!" என்றாள் பாமா. "உனக்குச் சிநேகிதத்துக்கு என்ன குறைவு, சீதா! தாரிணி தான் இருக்கிறாளே!" என்றாள் தாமா. "தாரிணி சிநேகமாயிருப்பதும் ஒன்றுதான்; சிநேகிதம் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். அவள் வந்தால் ஏதாவது சோஷலிஷம், காங்கிரஸ், புரட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு அதெல்லாம் பிடிப்பதேயில்லை" என்றாள் சீதா. "அப்படியா சொல்கிறாய்? உனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி விஷயத்தில் கிறுக்கு உண்டு என்றல்லவா நினைத்தேன்?" "கிடையவே கிடையாது எனக்குக் காந்தி மகாத்மாவிடம் கொஞ்சம் பக்தி உண்டு. அவரை யாராவது குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது. என் அகத்துக்காரர் காந்தியைப்பற்றிக் குறை சொன்னால் கூட அவருடன் சண்டை பிடிப்பேன்!" என்றாள் சீதா.

"காந்தி பெரிய மாகான்தான்; சந்தேகமேயில்லை. ஆனால் அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் சுத்த மோசம். அவர் சொல்கிறபடி எல்லாரும் கேட்டால் இந்தியா இரண்டாயிரம் வருஷம் பின்னால் போய்விடும்!" என்றாள் தாமா. "ரயில், மோட்டார், எலக்டிரிக் விளக்கு இதெல்லாம் இல்லாமல் இனிமேல் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா?" என்றாள் பாமா. "அடடா! அன்றைக்கு வைஸ்ராய்த் தோட்டப் பார்ட்டிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனீர்களே அங்கே செடிகளுக்குள்ளே விளக்குப் போட்டிருந்தது எவ்வளவு அழகாயிருந்தது! 'இதுதான் கந்தர்வ லோகமோ' என்று எனக்குத் தோன்றிவிட்டது!" "நீ பார்த்த பார்ட்டி என்ன பிரமாதம், சீதா! அடடா! வில்லிங்டன் வைஸ்ராயாக இருந்தபோது நீ பார்த்திருக்க வேண்டும். அப்போது வைஸ்ராய் மாளிகையில் பார்ட்டி என்றால், 'கந்தர்வ லோகமா?' என்று சந்தேகப்பட வேண்டியிராது! நிஜமான கந்தர்வ லோகமாகவே இருக்கும். இந்தக் காளை மாட்டு வைஸ்ராய் வந்த பிறகு, முன்மாதிரி அவ்வளவு ஜோர் இல்லை. பார்ட்டிகளும் அடிக்கடி நடப்பதில்லை. லார்ட் லின்லித்கோவுக்குக் 'காளை மாட்டு வைஸ்ராய்' என்பதாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதே அது உனக்குத் தெரியுமா, இல்லையா?" என்று தாமா கேட்டாள்.

"தெரியாமல் என்ன? எல்லாருந்தான் அதைப்பற்றிப் பரிகாசம் செய்கிறார்களே?" என்றாள் சீதா. "வர வரக் காலம் கெட்டுப் போய்விட்டது. சீமையில் காளை மாடு வளர்க்கிறவர்கள், பன்றி மந்தை வளர்க்கிறவர்கள் எல்லாரையும் பிடித்து இந்தியாவுக்குக் கவர்னர்களாகவும், வைஸ்ராய்களாகவும் அனுப்பி விடுகிறார்கள்" என்று பாமா சொல்வதற்குள் தாமா குறுக்கிட்டு, "இப்போதாவது இந்த மட்டில் இருக்கிறது. இங்கிலாந்தில் லேபர் கவர்ன்மெண்ட் வந்து விட்டால் ரயில்வே போர்ட்டர்களையும் தபால் பியூன்களையும் பிடித்துக் கவர்னர்களாக அனுப்பி விடுவார்கள். அவர்களுக்கு நம்முடைய தேசத்து மகாராஜாக்களும் நவாப்புகளும் சலாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்!" என்றாள். அதற்குப் பாமா, 'சீமையிலிருந்து போர்ட்டர்களும் தபால் பியூன்களும் வருவது என்ன? நம் தேசத்துக் காங்கிரஸ்காரர்களும் சோஷலிஸ்டுகளும் சொல்கிறபடி நடந்தால் நம் ஊர் ரெயில்வே போர்ட்டர்களும் தபால் பியூன்களுமே கவர்னர்களாக வந்து விடுவார்கள்! எது உனக்குத் தேவலை' சீதா?" என்று கேட்டாள். சீதாவுக்கு ராஜம்பேட்டைக் கிராமமும், ராஜம்பேட்டைத் தபால் சாவடியும் நினைவுக்கு வந்தன! தபால்காரன் பாலகிருஷ்ணன் கவர்னர் வேலைக்கு வந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று தனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டு சிரித்தாள்.

இந்திய தேசத்தில் சர்க்காரும், சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் இப்போது நடக்கிறபடியே நடப்பதுதான் நல்லது என்று தோன்றியது. இந்தச் சமயத்தில் சூரியாவும் தாரிணியும் உள்ளே வந்தார்கள். தாமாவும் பாமாவும், "ஹலோ! மை டியர்!" என்று தாரிணியைக் கட்டிக்கொண்டும் கையைப் பிடித்துக் குலுக்கியும் முகமன் கூறினார்கள். சீதா சூரியாவைக் கொஞ்சம் தனியாக அழைத்துப் போய், "அம்மாஞ்சி! உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாரிணியிடம் உனக்கு என்ன இவ்வளவு சிநேகம்? உன் அப்பா அம்மா கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்? வீணாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே! நான் பார்த்து உனக்கு நல்ல பெண்ணாகக் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து வைக்கிறேன்?" என்றாள். சூரியா புன்னகையுடன், "நல்ல பெண் எங்கே பார்த்து வைத்திருக்கிறாய்! இவர்கள் இரண்டு பேரில் ஒருவரையா?" என்று கேட்டு, பாமா தாமா இருந்த பக்கம் பார்த்தான். "சீச்சீ! இவர்கள் இரண்டு பேருக்கும் உன்னைவிட அதிக வயதிருக்கும். இவர்களுடைய நவநாகரிகத்துக்கும் உன் அம்மாவின் கர்நாடகத்துக்கும் ஒரு நிமிஷங்கூடப் பொருந்தாது, வேறு நல்ல இடம் பார்க்கலாம். நீ மட்டும் தாரிணியின் வலையில் விழாமல் இரு!" என்றாள் சீதா.

"அத்தங்கா! இந்த மாதிரியெல்லாம் பேச யாரிடம் கற்றுக் கொண்டாய்? தாரிணியைப் பார்த்து உன் மனதில் களங்கம் எதுவும் வேண்டாம்! நான் தான் முன்னமே சொன்னேனே? நாங்கள் இரண்டு பேரும் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது. இரண்டு பேரும் சீக்கிரத்தில் லாகூருக்குப் போவதாகக் கூட உத்தேசித்திருக்கிறோம்..." இதற்குள் தாமா, "சீதா! அம்மாஞ்சியுடன் என்ன இரகசியம் பேசுகிறாய்? எங்களுக்கு அவரை 'இண்ட்ரட்யூஸ்' பண்ணக் கூடாது என்ற எண்ணமா? நாங்கள் அவரைக் கடித்து விழுங்கி விடமாட்டோம். இங்கே அழைத்துக்கொண்டு வா!" என்று கீச்சுக் குரலில் கத்தினாள். இதைக் கேட்ட சீதாவும் சூரியாவும் மற்றவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்

"சுட்டு விடுவேன்!"

சூரியாவைத் தாமாவுக்கும் பாமாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தவுடனே, "நாங்கள் வந்தபோது ஏதோ மகாராஜாக்களையும் கவர்னர்களையும் போர்ட்டர்களையும் பியூன்களையும் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்ததே! அது என்ன விஷயம்?" என்று சூரியா கேட்டான். சீதா விஷயத்தை சொன்னாள்; "அப்படியெல்லாம் ஒருநாள் வரத்தான் போகிறது. ரயில்வே போர்ட்டர் கவர்னர் ஆவார். தொழிற்சாலை மேஸ்திரி கவர்னர் ஜெனரல் ஆவார். தபால்காரர் பிரதம மந்திரியாவார். இதற்கெல்லாம் நாம் தயாராயிருக்க வேண்டும். இங்கிலீஷ் படித்தவர்களும் பெரிய மனிதர்களுமே எப்போதும் பெரிய உத்தியோகங்களில் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்று ஜெர்மனியைக் கண்டு உலகமே நடுங்கும்படி செய்திருக்கும் ஹிட்லர் யார்? சுவருக்குச் சுண்ணாம்பு வர்ணம் பூசிக் கொண்டிருந்தவன். ஜெர்மனியில் ஆயிரம் வருஷமாக அரசு புரிந்து வந்த ஆளும் இனத்தார் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ருஷியா தேசத்தின் விஷயம் என்ன...?" என்று சூரியா பேசிக் கொண்டே போனான். "அடே அப்பா! இவர் என்ன நெருப்புக் கக்கும் சோஷலிஸ்ட் போல் இருக்கிறதே!" என்றாள் பாமா.

"ஆமாம்; அம்மாஞ்சி பெரிய தீவிரவாதி; கிராமத்திலுள்ள நில விஷயத்தில் குடியானவர்கள் கட்சி பேசி, அப்பாவுடனும் அண்ணாவுடனும் சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டான்! பொதுக் கூட்டங்களில் பிரமாத ஆவேசத்துடன் பேசுவானாம்! ஆனால் நான் இதுவரையில் கேட்டதில்லை" என்றாள் சீதா. "என்னை நெருப்பைக் கக்கும் சோஷலிஸ்ட் என்றுதானே சொன்னீர்கள்? அது உண்மைதான். எங்கள் கட்சி மூட்டும் நெருப்பு இந்தியா தேசத்திலுள்ள மகாராஜாக்கள், திவான்கள், ஜமீன்தார்கள், ஜாகீர்தார்கள், ஏழைப் பாட்டாளிகளைப் பிழிந்தெடுத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் முதலாளிகள் எல்லோரையும் கொளுத்திப் பொசுக்கிக் கூண்டோடு கைலாசம் அனுப்பி வைக்கப் போகிறது, கொஞ்ச நாளில் பாருங்கள்!" என்றான் சூரியா. "மகாராஜாக்களும் ஜமீன்தார்களும் போனால் போகட்டும்! பாவம், ஏழைத் திவான்களைச் சும்மா விட்டு விடுங்கள் பிழைத்துப் போகட்டும்!" என்று பரிகாசக் குரலில் கூறினாள் பாமா. "இவ்வளவெல்லாம் பேசுகிறீர்களே? உங்களுடைய எரிமலை கக்கும் நெருப்பினால் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கங்கூட எரிந்து போய்விடுமா?" என்று பாமா கேட்டாள். "பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒருநாள் அழியத்தான் போகிறது. இப்போதைக்கு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் 'அஸ்பெஸ்டாஸ்' கவசம் போட்டுத் தப்பித்துக் கொண்டு வருகிறது. ஆனால் இது வெகு காலம் நிற்காது. கூடிய சீக்கிரத்தில் இந்தியா அதிகார வர்க்கத்துக்கும் காலம் வரும்!" என்றான் சூரியா.

"அது என்ன 'அஸ்பெஸ்டாஸ்' கவசம்? இதுவரையில் நான் கேட்டதில்லையே?" என்றாள் சீதா. "அஸ்பெஸ்டாஸ் என்று ஒரு புதிய செயற்கைப் பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை நெருப்பு எரிக்காது; நெருப்பே பிடிக்காது, பிரிட்டிஷார் அத்தகைய அஸ்பெஸ்டாஸ் கவசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? அது தான் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வேற்றுமை. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்துத்தான் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள்." "அந்தப் பிளவு எப்படி நீங்கும்?" என்று தாமா கேட்டாள். "பிளவு நீங்குவதற்கு வழி பொருளாதாரப் புரட்சி தான். ஏழைகளில் இந்து ஏழை என்றும் முஸ்லிம் ஏழை என்றும் கிடையாது பாட்டாளிகளிலும் அப்படியே. இந்த விஷயத்தை இரண்டு சமூகங்களையும் சேர்ந்த ஏழைகளுக்கும் பாட்டாளிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டால், அவர்கள் விழித்துக் கொண்டு விடுவார்கள். பதவிப் பித்துக்கொண்ட அரசியல்வாதிகளும் பிரிட்டிஷ் இராஜ தந்திரிகளும் தங்களை உபயோகித்துக் கொள்ள இடங்கொடுக்க மாட்டார்கள்" என்றான் சூரியா.

பெரியவர்களுடைய பேச்சையெல்லாம் விஷயம் புரியாவிட்டாலும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்த வஸந்தி, "அப்பா வந்துத்தா! அப்பா வந்துத்தா! பாத்தியை அச்சிண்டு வந்துத்தா!" என்று சொல்லிக் குதித்துக் கொண்டே வாசற்பக்கம் ஓடினாள். சீதா, "ஆமாம்; இவர்தான் வந்துவிட்டார் போலிருக்கிறது. நீங்கள் சற்றுப் பேசிக் கொண்டிருங்கள் நான் போய் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வாசற்பக்கம் விரைந்து சென்றாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டின் முகப்புத் தாழ்வாரத்தில் நின்றாள். வண்டி வந்து வீட்டு வாசலில் நின்றது. தாயார் இறங்குவதற்கு முன்னாலே ராகவன் அவசரமாக இறங்கி வந்தான். முகப்புத் தாழ்வாரத்தில் நின்ற சீதாவை நெருங்கி, "சீதா! ஊருக்கு எதற்காக அப்படிக் கடிதம் எழுதினாய்! ஒருநாளைக்கு உன்னை நன்றாய் அறைந்துவிடப் போகிறேன். திமிர் அதிகமாகிவிட்டது! தடிக் கழுதை!" என்று சீறும் குரலில் கூறினான். "ஐயோ! இது என்ன? நான் ஒன்றும் எழுதவில்லையே" என்றாள் சீதா. பொங்கி வந்த அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டாள். இவ்வளவு கோபமாகவும் ஆபாசமாகவும் ராகவன் சீதாவைத் திட்டியது இதுதான் முதல் தடவை. "நீ எழுதவில்லையா? பொய் சொல்லாதே? ரஜினிபூர் ஏரியில் உன்னை நான் படகிலிருந்து பிடித்துத் தள்ளிவிட்டதாகக் கடிதம் எழுதவில்லையா உன் சிநேகிதி லலிதாவுக்கு?..." சீதாவுக்கு உண்மை புலனாயிற்று; சூரியா லலிதாவுக்கு எழுதிய விஷயம் எப்படி இவர் காதுக்கு எட்டியிருக்கிறது.

யாரோ தன் மாமியாரிடம் ஊரில் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். ரயிலிலிருந்து இறங்கியதும் இறங்காததுமாக மாமியார் அதை இவரிடம் சொல்லி இருக்கிறார்! முதல் முதலாக, சீதாவுக்கு அப்போதுதான் தன் மாமியார் மீது கோபம் உண்டாயிற்று. "ஏன் பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? எழுதினாயா? இல்லையா?" என்றான் ராகவன். ஒரு கணநேரம் சீதா யோசனை செய்தாள். தான் எழுதவில்லை என்றும் தாரிணி கூறியதைக் கேட்டுச் சூரியா எழுதினான் என்றும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் சூரியா மீது இவருக்கு அசாத்தியக் கோபம் வரும். அதைக் காட்டிலும் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவதே நல்லது. "நான் அப்படி யெல்லாம் ஒன்றும் எழுதவில்லை..." என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்தாள். "அப்படி எழுதவில்லை... இப்படி எழுதினாயாக்கும்! உன்னுடைய துஷ்டத்தனம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. ஒருநாளைக்கு உன்னை நிஜமாகவே ஏரியில் பிடித்துத் தள்ளி விடுகிறேன் பார்." "வேண்டாம்! வேண்டாம்! இரைந்து பேசாதீர்கள்! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். குழந்தை என்னமோ ஏதோ என்று திக்பிரமை அடைந்திருக்கிறாள். உள்ளே யார் யாரோ வந்திருக்கிறார்கள்?" என்றாள் சீதா. ராகவனுக்குச் சட்டென்று புத்தி தெளிந்தது "உள்ளே யார் வந்திருக்கிறார்கள்?" என்று கேட்டான்.

"தாரிணி வந்திருக்கிறாள்.." "ஓஹோ!" என்றான் ராகவன் உடனே அவன் முகத்தில் மாறுதல் காணப்பட்டது. "தாமாவும் பாமாவும் வந்திருக்கிறார்கள்...." "அந்தச் சனியன்களும் வந்திருக்கிறார்களா?... அது தான் இவ்வளவு கொம்மளம் போலிருக்கிறது! வந்திருப்பவர்கள் அவ்வளவுதானா? இன்னும் யாராவது உண்டா?" என்று ராகவன் கேட்டான். "சூரியாவும் வந்திருக்கிறான்..." "அந்த ராஸ்கல் இங்கு எதற்காக வந்தான்? ஒருநாளைக்கு அவனை ரிவால்வரால் சுட்டுக் கொன்று விடப் போகிறேன்!" என்று முணுமுணுத் தான் ராகவன். சீதா அடைந்த மன வேதனைக்கு அளவேயில்லை. திடீரென்று இத்தகைய ராட்சஸ சுபாவம் இவருக்கு எங்கே இருந்து வந்தது என்று திகைத்தாள். இந்தச் சமயத்தில் காரிலிருந்து சாவகாசமாக இறங்கிய வேலைக்காரன் சாமான்களை யெல்லாம் எடுத்து விட்டானா என்று பார்த்த பிறகு, வீட்டுப் படி ஏறிவந்த காமாட்சி அம்மாள், "ராகவா; இது என்ன? நான் வந்ததும் வராததுமாய் நீங்கள் சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்? உங்களுடைய சண்டையைப் பார்த்து விட்டு நான் திரும்பிப் போய் விட வேண்டுமென்ற எண்ணமா? அதெல்லாம் நான் போக மாட்டேன் என் பேத்தியை விட்டுவிட்டு, வஸந்தி! இங்கே வா, அம்மா!" என்றாள். அப்பா - அம்மா சண்டையைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்த வஸந்தி பாட்டியிடம் தாவிச் சென்றாள்.
 

Latest posts

New Threads

Top Bottom