Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 17


உத்ராவின் இந்த எதிர்வினை தான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்பதால்‌ தானும் பதிலுக்கு முறைத்துப் பார்த்தான் விக்கி.

“உனக்கென்ன பைத்தியமா?” என்று இருவரும் ஒருவரையொருவர் ஏக காலத்தில் கேட்டுக்கொள்ள,

“உஷ்!” என்று இருவரையும் பானுமதியை கண்களால் சுட்டிக்காட்டி எச்சரித்தார் மருத்துவர்.

கோபமாக அவளை தள்ளிவிட்டு அவ்வறையிலிருந்து வெளியேறினான் விக்கி.

தடுமாறி நின்றவள் அவனின் பின்னேயே தானும் வெளியேறினாள். நடந்தவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவருக்கும், செவிலியருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து தோள்களைக் குலுக்க, அசைவு தெரிந்தது பானுமதியிடம்.

அதை முதலில் கவனித்த மருத்துவர் அவரிடம் சென்று அவரின் பெயரைச் சொல்லி அழைத்தார். செவிலியரும் பானுமதியின் காதருகே குனிந்து அவரை எழும்படி கத்தினார். கண்களைப் பிரித்த பானுமதி ஒன்றும் புரியாமல் விழிக்க, அவரிடம் சம்பிரதாயமாக சில கேள்விகளைக் கேட்டார் மருத்துவர். அவரின் பதில்களனைத்தும் தனக்கு திருப்திகரமாக இருந்ததும் செவிலியரிடம் அவருக்கு செய்ய வேண்டிய சில சிகிச்சைமுறைகளை பட்டியலிட்டுவிட்டு, மருத்துவமனையின் முதல்வரை சந்திக்கச் சென்றார்.

திடீரென பதட்டமாகச் சென்ற மருத்துவரை கண்டதும் ஒன்றும் புரியாமல் தங்களுக்குள் பேசியபடி இருந்தனர் உத்ராவும், கவினும்.

அதன்பின் மருத்துவ நிபுணர்கள் சிலர் அவ்வறைக்குள் செல்வதும் வெளியேறுவதுமாக இருக்க, வெளியே நின்றிருந்தவர்களின் நெஞ்சமோ தடதடத்தது. இப்படியே சில நிமிடங்கள் பயத்தில் கழிந்ததும் தான் அவர்களை நோக்கி வந்தார் தலைமை மருத்துவர்.

“உங்கம்மா பெரிய ஆபத்துலயிருந்து மீண்டு வந்திருக்காங்கன்னு தான் சொல்லனும். அவங்க பல்ஸ் ரேட் இப்ப நார்மல் மோடுக்கு திரும்பியிருக்கு. உங்க பிரார்த்தன வீண் போகல.” என்றார் உற்சாகமாக.

அதைக்கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். மருத்துவராலும் அதை உணர முடிந்தது.

“அப்பறம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்களுக்கு நினைவு திரும்பியிருக்கதால இன்னும் கொஞ்சம் டெஸ்ட்ஸ் அண்ட் ஸ்கேன்ஸ் எல்லாம் எடுக்க வேண்டியிருக்கு. அதுக்கப்பறம் நீங்கப்போய் அவங்களப்‌ பாக்கலாம்.” என்றதும், பானுமதியின் பிள்ளைகள் கொண்ட நிம்மதிக்கு அளவே கிடையாது.

ஆனால், அந்த சந்தோசத்தை கொண்டாடவிடாமல் வேறொரு குண்டைத் தூக்கிப்போட்டார் வெளியே எட்டிப் பார்த்த செவிலியர்.

“யம்மா! உங்க அம்மா கண்ணு முழிச்சதும் எங்க என் பொண்ணு, எங்க என் மாப்பிளைனு கேட்டாங்க. அவங்க நான் சொன்னத கேட்டு தான் கண்ணு முழிச்சிருக்காங்க போலம்மா. நீ வேற அந்தப்பையன் கட்டின தாலிய அத்துப் போட்டுட்ட. இப்ப உன் அம்மாவுக்கு நடந்ததெல்லாம் தெரிஞ்சதுனா அவங்க நெலம இன்னும் மோசமாகிருமேம்மா. நீ பேசாம உன் அம்மாகிட்ட உனக்கு கல்யாணம் ஆன மாதிரியே நடந்துக்கோ.” என்றதும், தன் நெஞ்சைப் பிடித்தாள் உத்ரா.

இது என்ன‌ புது சிக்கல் என்று அவள் அரண்டு‌போய் நின்றிருக்க, கவினும் கவிலயாவும் அவர் சொல்வது புரியாமல் செவிலியரை தூண்டித் துருவினார்கள். அவர் பானுமதியின் அறைக்குள் சற்றுமுன் நடந்ததனைத்தையும் புட்டுபுட்டு வைத்தார்.

கவின் உத்ராவை பரிதாபமாக பார்த்து வைக்க, கவிலயாவோ அழுதே விட்டாள். விக்கியை‌ உள்ளூற ஒருதலையாக காதலித்தவளால் இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

உத்ராவோ ஒன்று போய் ஒன்றாக தன்னை நோக்கி‌ வரும் பிரச்சனைகளைக் கண்டு பாவம் துவண்டு போனாள். அவளின் நிலையை‌ நன்றாக உணர்ந்தவனாக அவளுக்கு உறுதுணையாக நின்றான் கவின். தன் பங்காக ஆலோசனையும் வழங்கினான்‌.

“அக்கா கடவுள் புண்ணியத்துல இப்ப‌ தான் அம்மா நமக்கு கெடச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நடந்ததெல்லாம் சொல்லி மறுபடியும் அவங்கள கஷ்டப்படுத்த வேணாம் க்கா. அவங்க ஒடம்பு சரியானதும் மெதுவா பேசி புரிய வைக்கலாம். ப்ளீஸ்க்கா!” என்றான்.

கவிலயா இன்னும் அழுதுகொண்டே இருக்க, “ஏய் லயா! நீயும் அக்காக்கிட்ட கொஞ்சம் சொல்லுடி” என்றான்‌ அதட்டலாக.

அவள் தன்‌ கண்களை துடைத்துக்கொண்டே, “ஆமாக்கா அம்மாகிட்ட இப்போதைக்கு நாம இது பத்தி சொல்ல வேணாம். அவங்க ஒடம்பு சரியானதும் சொல்லிக்கலாம்.” என்றாள் தேம்பலாக.

சிறியவள் அமிகாவோ ஒன்றும் புரியாமல் அனைவரின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை தேற்றிக்கொண்ட உத்ரா ஒரு முடிவுடன் தன் உள்ளங்கையில் தான் சுருட்டி வைத்திருந்த தாலியை எடுத்து தானே தன் கழுத்தில் கட்டிக்கொண்டாள்.

பின் கவினிடம், “அந்த ஏமாத்துக்காரனுக்கு போன் போட்டு வரச்சொல்லுடா” என்றாள்.

“இப்பவேக்கா” என்று அலைபேசியில் நடந்ததைக் கூறி விக்கியை அழைத்தான்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர்களின் முன் நின்றிருந்தான் விக்கி.

‘இவன் இன்னும் வீட்டுக்குப் போகலையா?’ என்று சந்தேகப்பார்வை பார்த்தவள் அவன் தன் தாலியையேப் பார்ப்பதை கண்டு பல்லைக் கடித்தாள்.

தான் நினைத்தது போலவே நடந்தது கண்டு மகிழ்ச்சியடைந்த விக்கி, நீ சொல்வதை கேட்டு நான் தாலி கட்டாமல் போயிருந்தால் உன் அம்மாவுக்கு என்னவாகியிருக்கும்? என்று பார்வையால் உத்ராவுக்கு குட்டு வைக்கவும் தவறவில்லை.

பானுமதியின் உடல்நிலையே தற்போது முக்கியம் என்பது அவனுக்கும் தெரியுமாகையால் தற்சமயம் அவர்களோடு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தான். நேரம் சென்று கொண்டேயிருந்தது. மூன்று மணிநேர காத்திருப்புக்குப் பின் பானுமதியை பார்க்க அனுமதித்தார் மருத்துவர். ஐவரும் ஒருசேர உள்ளே சென்றார்கள். சோர்வாக படுத்திருந்த பானுமதி அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றார்.

“இப்படி எங்கள பயமுறுத்திட்டீங்களே?” என்று உத்ரா‌ வேதனையோடு கூறினாள்.

“பாட்டி எனக்கு இங்க இருக்கவே புடிக்கல. வா வீட்டுக்குப் போலாம்.” என்று சிணுங்கினாள் அமிகா.

அயர்வாக அனைவரின் முகத்தையும் ஆராய்ந்த பானுமதியின் கண்கள் உத்ராவிடம் மட்டும் கூடுதலாக அவளின் கழுத்தையும் சேர்த்து ஆராய்ந்தன. மனநிறைவில் அவரின் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. மறுபுறம் கவிலயாவின் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அதைக் கவனித்த செவிலியர், “அச்சோ! பாருங்கம்மா உங்க சின்னப்பொண்ண. அவளுக்கு உங்க மேல எவ்ளோ பாசம் இருந்தா இப்படி நீங்க எழுந்திருச்சி உக்காந்த பின்னாடியும் பழச நெனச்சி இந்த அழுக அழுவா?” என்று உச்சுக்கொட்டவும், பானுமதியை தவிர உண்மை தெரிந்த மற்ற மூவரும் கமுக்கமாக நின்றார்கள்.

கவிலயாவை அருகில் வரச்சொல்லி அவள் நெற்றியில் முத்தம் பதித்தார் பானுமதி.

அவள் கையிலிருந்த அமிகாவோ, “எனக்கு பாட்டி?” என்றாள்.

சிரித்துக்கொண்டே அவளின் நெற்றியிலும் முத்தம் பதித்தார்.

அதனைத் தொடர்ந்த மூன்று நாட்களை மருத்துவமனையிலேயே கழித்த பானுமதி நான்காம் நாள் வீடு திரும்பினார். அதன் பின் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை விக்கி.

அவனைப் பற்றி பானுமதி தொடர்ந்து கேட்டு நச்சரிக்க, பால்கனி சென்று யாருக்கும் தெரியாமல் அவனுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டாள் உத்ரா.

எடுத்ததுமே, “நீ எங்க வீட்டுக்கு வா.” என்றாள்.

“சாரி, நான் வேலைல கொஞ்சம் பிஸியா இருக்கேன்.” -பந்தா காட்டினான்.

“நீ அங்க என்னத்த கழட்டிட்டு இருந்தாலும் சரி. அத அப்படியே போட்டுட்டு மரியாதையா இங்க வா” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.

அதற்கு மேல் அலட்டிக்கொள்ளாமல் அவர்களின் வீட்டிற்கு வந்தான். வந்தவனை பலமாக கவனித்தார் பானுமதி.

“ஜூஸ் குடிங்க மாப்பிள. உதி ஸ்வீட்ஸ் எடுத்துக் குடும்மா. கவின் நீ லயா கூடப்போய் லஞ்சுக்கு நான்வெஜ் எடுத்துட்டு வாப்பா. எல்லா வெரைட்டியும் இருக்கனும். இந்தா இந்த ஏடிஎம் கார்ட கொண்டு போ.” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

போகும்போது ஏக்கமாக விக்கியை பார்த்துக்கொண்டே சென்றாள் கவிலயா.

அதைக் கவனித்த உத்ராவோ, “இவ வேற” என்று எரிச்சலடைந்தாள்.

பானுமதி விக்கியின் புறம் திரும்பியவர் முக்கியமான கேள்வியினைக் கேட்டார்.

“அப்பறம் உதிய எப்ப உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம்னு இருக்கீங்க மாப்பிள?”

வாயில் வைத்த பழச்சாறு புரையேறியது அவனுக்கு.​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உத்ரா முந்திக்கொண்டு பதிலளித்தாள்.

“ம்மா இப்ப அதுக்கென்ன அவசரம்? இப்ப தான் நீங்க வீட்டுக்கே வந்துருக்கீங்க. கவினும் லயாவும் உங்கள நெனச்சு ரொம்ப பயந்துப்போய் இருக்காங்க. இப்பப்போய் பொறுப்பையெல்லாம் அவங்கக்கிட்ட ஒப்படைச்சுட்டுப்போனா பாவம் தெணறிப் போயிருவாங்க. ஒரு ரெண்டு மாசம் போகட்டும்மா. அதுக்கப்பறம் இதுபத்திலாம் பேசிக்கலாம்.” என்றாள்.

விக்கியும், “ஆமா அன்ட்டி, அம்மாக்கிட்டயும் நான் இது பத்தி இன்னும் பேசல. அவங்களுக்கு புரிய வச்ச பின்னாடி தான் உத்ராவ என்னால கூட்டிட்டுப் போக முடியும்” என்று விளக்கினான்.

வேணி என்றதும் அடங்கிப்போனார் பானுமதி.

“ஹூம்! ஊரு மெச்ச உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கனும்னு ஆசப்பட்டேன் உதி. அது என்னன்னா யாருக்கும் தெரியாம நாலு சுவத்துக்குள்ள நடந்துப்போச்சு.” என்று பெருமூச்செறிந்தார்.

உத்ரா அங்கு உட்கார்ந்திருக்க பிடிக்காமல் தனதறைக்குச் சென்றாள். அவனும் உத்ராவிடம் பேச வேண்டி அவளை பின்தொடர்ந்தான். அவன் உள்ளே வந்ததும் கதவை தாழ் போட, உறுத்து விழித்தாள்.

அதைக்கண்டு பல்லைக் கடித்தவன், “உத்ரா நான் சொல்ல வர்றத முழுசாக் கேளு. கோவப்படாத. மொதல்ல கத்தாத.” என்ற முன்னெச்சரிக்கைகளுடன் தன் வாதத்தை தொடங்கினான்.

அவள் சலனமின்றி அமர்ந்திருந்தாள்.

“நம்ம டிடெக்டிவ் ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான் அந்த நண்டுவாயன். அதான் அந்த நந்தகோபன்.” என்க,‌ அப்போதும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

“எனக்கு என் டிடெக்டிவ் ஏஜென்சி வேணும். என் அப்பா ஞாபகார்த்தமா இருக்க ஒரே ஸ்தாபனம் அதான். அத நான் இழுத்து மூட விடமாட்டேன்.” என்று நரம்பு புடைக்கச் சொன்னான்.

அவனை கண்டுகொள்ளாதவள் போல் தன் போனை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள் உத்ரா. அவனுக்கோ கோபம் வந்து விட்டது.

“உன்கிட்ட தான்‌ நான் பேசிட்டிருக்கேன்.” என்று வெடித்தான்.

“எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நீ எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்க? நான் என் வேலைய ரிசைன் பண்ணிட்டத மறந்துட்டியா நீ?” -திருப்பிக்கேட்டாள் மிதப்பாக.

அவனின் கோபம் எல்லையைக் கடந்தது.

“உங்கம்மா இப்ப சந்தோசமா உலாவுறாங்கன்னா அதுக்கு காரணம் நான் கட்டின இந்தத் தாலி தான். கொஞ்சமாவது நன்றியுணர்வோட நடந்துக்கோ.” என்றான்.

“எங்கம்மா கோமாவுக்கு போனதுக்கு காரணமும் நீ தான். அதுக்கு ஏதாவது நான் நன்றி சொல்லனுமா? இன்னும் ஒரு மாசம் தான். எப்படியாவது நான் நடந்ததெல்லாம் அவங்கக்கிட்ட சொல்லிருவேன். அதுக்கப்பறம் நீ இங்க வர வேண்டிய தேவையே இருக்காது.” என்றாள் கறாராய்.

தன் நெற்றியை தடவியவன், “இதப்பாரு உதி! உன் கால்ல வேணா விழுறேன். தயவுசெஞ்சு நந்தகோபன் கிட்டப்போய் எனக்காகப் பேசு” என்று சற்று இறங்கி வந்தான்.

“இல்ல எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல விக்கி. நீ‌ நேரா அந்த நந்தகோபன் கிட்டயேப்போய் அவர் கால்ல விழ வேண்டியது‌ தான? உன் பிரச்சனையும் ஈசியா முடிஞ்சிடும். ஏன் உன் கால்ல பட்ட அடிக்கு நீ முகத்துல மருந்து பூசிட்டு நிக்கிற?” என்று விளங்காமல் கேட்டாள்.

அவன் முகத்தை சுளித்தான்.

“எனக்கு அவ‌ மூஞ்சிலயும், அவ‌ பெரியப்பா மூஞ்சிலயும் முழிக்கப் பிடிக்கல.”

“அடேங்கப்பா! நீ சொன்னத கேட்டதும் உச்சி குளுந்து உனக்கு பாராட்டு விழா எடுக்க நான் ஒன்னும் உன் ஒரிஜினல் பொண்டாட்டி இல்ல விக்கி. உன் கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது போய் சொல்லு.”

“நீ என்ன நம்பவே மாட்டியா உதி? உனக்கு என் மேல நல்ல எண்ணமே கெடையாதா? ச்சே! நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருக்கக்கூட தகுதி இல்லாதவங்க. ஃப்ரெண்ட்ஸ்னா ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சி வச்சிருப்பாங்க. இங்க அப்படியா இருக்கு? எப்படா என்ன வார்த்தையால முள்வேலிப் போட்டு சுத்தி நெறிக்கலாம்னே காத்திருக்க நீ. ஆனா, உனக்கும் எனக்கும் ஒரே ஒரு விசயத்துல மட்டும் நல்லா ஒத்துப்போகும். நான் என் அம்மா பேச்சக் கேட்க மாட்டேன். நீ உன் அம்மா பேச்சக் கேட்க மாட்ட.” என்று சலிப்பாக சொன்னான்.

“உன் இந்த நடிப்பையெல்லாம் என் அம்மாக்கிட்ட வச்சிக்க விக்கி. என்கிட்ட உன் பருப்பு ஒன்னு கூட வேகாது. நான் உண்டு என் வேல உண்டுன்னு தானடா இருந்தேன்? ஏன்டா உதய்கிருஷ்ணாவ என் வாழ்க்கைக்குள்ள கொண்டு‌ வந்த? என்னையும் உன்ன மாதிரியே லவ் ஃபெயிலியர் கேஸ் ஆக்கிட்டல்லடா? இப்ப உனக்கு திருப்தியா? நான் எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. அதான்‌ சுயநலவாதி, தியாகத்தலைவின்னு என்ன உசுப்பிவிட்டு இப்படி‌ லூசு மாதிரி புலம்ப வச்சிட்ட. எனக்கு வலிக்குதுடா. ரொம்ப வலிக்குது.” என்று கலங்கிய கண்களை இமைகளைத் தட்டி சரிசெய்தாள்.

அவனுக்கு அவள் மேல் கோபம் தான் வந்தது. தன்னை தலை முதல் கால் வரை நஞ்சாக எண்ணுபவளை ஒரு அறை கூட விடலாம் என்று தான் நினைத்தான். ஆனால், வாசனின் வளர்ப்பு அவனை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை.

“ஆமா சொந்தமா யோசிக்கத் தெரியாத, எதுக்கெடுத்தாலும் அக்கா பின்னாடி ஒளிஞ்சிக்கற ஒரு ஒட்டுப்புல்லுக்கா‌ நீ இவ்ளோ ஃபீல் பண்ற? அவன கல்யாணம் பண்ணாமப் போனது நீ செஞ்ச அதிர்ஷ்டம்னு நெனச்சிக்கோ.” என்றவன் சொல்லி முடிக்கும் முன் அவனின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டாள்.

ரோசமாக அவன் கதவின் தாழ்ப்பாளை நீக்கியபோது அவர்கள் வீட்டின் அழைப்புமணிக்கு மூக்கு வியர்த்தது.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 17 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள பள்ளியில் சேருங்கள் ப்ரெண்ட்ஸ்.
பி.கு: எனக்கு மும்மொழி ஆகாது. இருமொழியே போதும்.

கருத்துத்திரி,

கருத்துப்பள்ளி
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂❤️
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 18


விக்கியுட‌ன் சேர்ந்து தானும் வெளியே வந்த உத்ரா‌ வாசல்கதவை திறந்தபோது தபால்காரர் நின்றிருந்தார். அவர் தந்த உறையை கையெழுத்திட்டு வாங்கியவள் உள்ளே திறந்துப் பார்க்க, எதிர்தரப்பு வழக்கறிஞர் அனுப்பிய அறிவிப்பொன்று இருந்தது.

அதைக்கண்ட விக்கி ‘ஆஃபிஸுக்கு நோட்டீஸ் அனுப்புறதுல ஒரு நியாயம் இருக்கு. இவளுக்கு எதுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான் அந்த வெந்தகோபன்?’ என்று யோசித்துக் கொண்டிருக்க, முழுவதுமாக வாசித்து முடித்த உத்ராவின் முகமோ ரணக்கொடூரமாய் மாறியது.

“எங்க வீட்டுக்கு எவனும் செய்வின கிய்வின வச்சிருக்கானா தெரியல.” என்று விக்கியைப் பார்த்து புலம்பியவள், குளிக்கச் சென்றிருந்த பானுமதி வந்திருந்தது யார் என்று விசாரிக்கவும்‌, அந்த உறையை நீட்டினாள்.

“அந்த நிகிலோட குடும்பம் தாம்மா. நந்திதா செத்தப்ப அந்த நிகில கேஸ்லயிருந்து தப்பிக்க வைக்க நந்திதாவ ஒழுக்கம் கெட்டவனு முத்திர குத்துனானுங்க. இப்ப மட்டும் ஏன் அவ பெத்தப்பொண்ணு மேல உரிம கொண்டாடுறானுங்களோ தெரியல.” என்று தன் தாயிடம் புலம்பித் தவித்தாள்.

பானுமதியும் பதிலுக்கு ஆவேசப்பட்டார்.

“நந்திதா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னப்ப மட்டும் வேற ஜாதிப்பொண்ணுன்னு ஒதுக்கி வச்சாங்க. இப்ப மட்டும் அவங்க ஜாதித்தீட்டு எங்கப்போச்சாம்? என் பொண்ணு அவனால சித்ரவதப்பட்டுட்டு இருந்தப்பக்கூட இவங்கக்கிட்ட நியாயம் கேட்டு போக முடியல. இப்ப என்னவோ‌ திடீர் பாசம் பேத்தி மேல. ஏற்கனவே இருந்த நெலத்தையும், நகையையும் அடகு வச்சி தான் நந்திதா கேஸையே நடத்தினோம். இப்ப இந்தக்கேஸ எப்படிமா சமாளிக்கப்போறோம்?” என்று கவலைகொண்டார்.

அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி, “டோன்ட் வொர்ரி ஆன்ட்டி! அமிகா கஸ்டடி அவங்க கைக்கு நிச்சயம் போகாது. அதுக்கு நான் கியாரண்டி” என்று அவர் வயிற்றில் பாலை வார்த்தான்.

ஆனால், உத்ரா அவனை நம்பிக்கையின்றிப் பார்த்தாள். இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் மேற்கொண்டு அவன் புதிய பிரச்சனை ஒன்றை கொண்டு வராமல் இருப்பதே அவன் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி தான் என்று சலிப்பாக நினைத்தவள், மறு விநாடியே அவனால் தான் தன் அன்னையை சமாளிக்க முடியும் என்ற யோசனையில் அமைதி காத்தாள்.

பானுமதிக்கு நம்பிக்கையளித்துவிட்டு ஏற்கனவே நந்திதா வழக்கை கையாண்ட வழக்கறிஞர் குருமூர்த்தியின் வீட்டிற்கு உத்ராவும், விக்கியும்‌ கிளம்பினார்கள். நடந்தவற்றை அவரிடம் கூறி மேற்கொண்டு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர். அனைத்தையும் வாங்கி வாசித்தவர் சில நிமிட ஆராய்ச்சிகளுக்குப் பின் அலைபேசியில் தன் நண்பர் குழாமிடம் சில தகவல்களைப் பெற்றார்.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராக, “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைலம்மா?” என்றார்.

அவள் தயக்கமாக என்ன சொல்வதென்ற யோசனையில் இருக்க, “ஆகிடுச்சு அன்க்கிள். இப்ப ரீசண்டா தான் நாங்க ரெண்டுபேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஆனா இன்னும் அத லீகலைஸ் பண்ணல.” என்றான் விக்கி, அவர் அந்தக் கேள்வியை கேட்கிறார் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையில்.

அதைக் கேட்ட உடனே அவர் முகம் பிரகாசமானது.

“கொஞ்சம் சிக்கலா இருக்குமோன்னு நெனச்சேன். ஆனா‌ சுலபமா முடியக்கூடியதா மாத்திடுச்சி உங்க கல்யாண நியூஸ். அந்த நிகிலோட குடும்பமோ பெரிய எடம். சாதாரணமானா உத்ரா குடும்பத்தால அமிகா பொறுப்ப ஏத்துக்கற அளவுக்கு பொருளாதார வசதி கெடையாது.

அது மட்டும் இல்லாம ஒரு கொழந்தைக்கு தாயோட அன்பும், தந்தையோட அரவணைப்பும் தேவ. உத்ரா இந்தக் கேஸ்ல ஜெயிக்கனும்னா மொதல்ல அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கனும். இப்ப அந்த ரெண்டு சிக்கலும் நீ அவ வாழ்க்கைக்குள்ள வந்துட்டதால சுலபமா தீர்ந்துருச்சி விக்கி. இப்ப உடனே நீங்க ரெண்டுபேரும் உங்க கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணனும். சீக்கிரம் அதுக்கான வேலைய ஆரம்பிங்க.” என்றார்.

சரியென்ற விக்கி மேற்கொண்டு வழக்கு பற்றி தனக்கு எழுந்த சந்தேகங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க, உத்ராவோ கைகளைப் பிசைந்தபடி இருந்தாள்.

அங்கிருந்து இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தபோது பானுமதி ஆசையாக அவர்களுக்கு சமைத்து வைத்திருந்த சாப்பாடு ஆறிப்போயிருந்தது.

இருவரும் தேமேயென்று உணவை விழுங்கினார்கள்.

எப்போதும் வேண்டியதை கேட்டுக்கேட்டு வாங்கி சாப்பிடும் விக்கி இன்று அளவோடு சாப்பிட்டது கண்டு சற்று ஏமாற்றம் தான் பானுமதிக்கு. அதற்கு காரணமாய் கவிலயா தலை குனிந்தபடி பரிமாறிக் கொண்டிருப்பதை சுட்டினார்.

“அது வேணுமா மச்சான், இது வேணுமா மச்சான்னு கேட்டு கேட்டு அவங்களுக்கு பரிமாறு லயா. சும்மா சாப்பாட்டையே வேடிக்கப் பாத்துட்டு நிக்காத.” என்று அதட்டினார்.

கோபத்தில் அழுதுகொண்டே தனதறைக்கு சென்றுவிட்டாள் அவள். இப்ப நான் என்ன சொல்லிட்டேன் என்று விழித்தார் தாய்.

சாப்பிட்டு முடித்தவர்கள் சோபாவிற்கு மாறி வழக்கறிஞர் குருமூர்த்தி கூறியதைக் கூற, பொறுமையுடன் அனைத்தையும் கேட்டிருந்த பானுமதி, கடவுள் தான் விக்கியை உத்ராவுடன் சேர்த்திருப்பதாக நம்பினார்.

உதய்கிருஷ்ணாவை உத்ரா திருமணம் செய்திருந்தால் நிச்சயம் அவர்களால் இவ்வளவு செலவு செய்து வழக்கை நடத்தமுடியாது என்ற எண்ணம் எழ, அது சுயநலமாய் தோன்றினாலும் அதை மறுக்க முடியவில்லை அவரால்.

இரவாகி விட்டதால் விக்கி அங்கிருந்து கிளம்புவதாகக் கூற, பானுமதிக்கு அவனை அங்கிருந்து அனுப்ப மனமேயில்லை.

“நீங்க இன்னைக்கு பேசாம இங்கயே தங்குங்களேன் மாப்பிள?” என்றார்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அவன் மறுப்பு தெரிவிப்பதற்குள் உத்ரா முந்தினாள்.

“என்னம்மா சொல்றீங்க நீங்க? அப்படிலாம் அவன இங்க அடிக்கடி தங்க வைக்க முடியாது. பாக்கறவங்க என்ன நெனப்பாங்க? ஃபர்ஸ்ட் எனக்கு கல்யாணம் ஆன விசயம் ஊரு ஒலகத்துக்கு‌ தெரியட்டும். அப்பறம் அவன இங்க தங்க வைக்கிறது பத்தி யோசிக்கலாம்” என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

“அது இருக்கட்டும்! நீ என்ன மாப்பிளைய மரியாதை இல்லாம அவன் இவன்னு சொல்லிட்டு இருக்க? அவருக்கும் உனக்கும் ஒரே வயசுன்னாலும் அவர் இப்ப உன் கழுத்துல தாலி கட்டுன மாப்பிள. அதுக்கான மரியாதைய நீ அவருக்கு குடுத்து தான் ஆகனும் உதி. நீ இப்படி புத்தியில்லாத பொண்ணா இருந்தா நாளைக்கு என் வளர்ப்ப தான் கொற சொல்லுவாங்க.” என்று புத்திமதி கூறினார்.

உத்ராவோ தன் தலையிலடித்துக்கொள்ளாத குறையாக அவர் கூறுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அறைக்குள்ளிருந்த கவிலயாவுக்கும் தன் அன்னைக்கு உடம்பில் குறைபாடு வந்ததற்கு பதிலாக வாயில் குறைபாடு வந்திருக்கலாம் என்று தோன்றியது.

அனைத்தையும் பரமானந்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்த விக்கி, “நான் இங்க தங்குறது அவ்வளவு சரியா இருக்காது ஆன்ட்டி. கல்யாணம் தான் திடுதிப்புனு நடந்துப் போச்சி. மத்ததெல்லாம் கால நேரம் பாத்து தான நடத்தனும்?” என்றான் உத்ராவைப் பார்த்து கண் சிமிட்டியபடி.

ஆனாலும் முழுமனதாக ஒப்புக்கொள்ளவில்லை பானுமதி.

“ஆன்ட்டி உத்ரா என் கூட இல்லைனாலும் எப்பவும் அவள ஞாபகப்படுத்துற மாதிரி அவளோட பெர்ஃப்யூம் பாட்டீல நான் என் கூடவே எடுத்துட்டு போறேன்.” எனவும், அப்பேச்சு பானுமதியின் தலையில் ஒரு கூடைப் பூவைக் கொட்டியது.

“உத்ரா எடுத்துட்டு வந்து குடும்மா” என்றார் பூரிப்பாக.

மெத்தையில் குப்புற படுத்திருந்த கவிலயாவின் முகம் வெளியே உள்ளவர்களின் பேச்சைக்கேட்டு சிறுத்துப்போனது. அவள் மனதில் தான் அவளுக்கானவன் இல்லை என்பதை புரிய வைக்கவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டான் விக்கி. ஒரு பந்தில் இரண்டு ரன்னாக பானுமதியையும் திருப்தி படுத்தியாகிவிட்டது.

“அற வாங்கியும் அடங்க மாட்டேங்குறானே” என்று சலித்தபடியே‌ தனது அறைக்கு சென்று வந்தவள் அவன் கையில் அட்டைப்பெட்டி ஒன்றை அழுத்தி வைத்தாள்.

அவன் அனைவருக்கும் விடைகூறி கிளம்பும்போது, “கார்பார்க்கிங் வர கூடப் போயிட்டு வாம்மா” என்று அவனுடன் உத்ராவை அனுப்பி வைத்தார் பானுமதி.

கீழே காரிருக்கும் இடம் வந்ததும், “நாளைக்கு நந்தகோபனப் பாத்து பேசப்போறியா இல்லையா உதி? அந்த ஆள் வெவகாரமா ஏதாவது பண்றதுக்குள்ள நாம அவர தடுத்தாகனும்” என்றான்.

ஏளனமாகப் பார்த்தவள், “அமிகா கேஸ்ல எனக்கு ஹெல்ப் பண்ணி காரியம் சாதிக்கலாம்னு பாக்குறியா விக்கி? நான் மொதல்ல சொன்ன பதில் தான் இப்பவும்.” என்றாள் கறாராய்.

கோபத்தில் கொதித்தவன், “மனுஷன் ஒரு பச்சோந்தினு அடிக்கடி நிரூபிச்சிடுற நீ” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியபடியே காரை கிளப்பினான்.

உத்ரா களைத்தவளாக தனதறைக்கு திரும்ப, சாப்பிடாமல் படுத்துக்கொண்ட கவிலயா‌ பற்றி புகார் தெரிவித்தார் பானுமதி.

“இன்னைக்கு இந்த குட்டிக்கு என்னாச்சின்னே தெரியல உதி? எந்த வேல சொன்னாலும் மூஞ்சத் தூக்கி வச்சிட்டே செய்யுறா. எதுக்குடி உர்ருன்னே இருக்கன்னா எதுக்கோ இருக்கேன் போங்கங்குறா. இவ செய்யுறதெதுவும் சரியில்லமா. நானும் ஹாஸ்பிடல்லருந்து வந்தது மொதலா கவனிச்சிட்டு தான் இருக்கேன். அம்முவ நான் திட்டினாலே கோபப்படுறவ, நேத்து ஒரு சின்ன விசயத்துக்காக கன்னம் செவக்கற வர கிள்ளியிருக்கா. இவ என்ன தான் இவ மனசுல நெனச்சிட்டு இருக்கா ஒன்னும் தெரியல.” என்று விசனப்பட்டார்.

உத்ரா உடனே பதட்டமானாள்.

“ம்மா நீங்க ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க? அவ ரீசண்ட் வீடியோஸ் எதுக்கும் யூடியூப்ல சரியா வீவ்ஸ் போயிருக்காது. அதான் மைண்ட் அப்செட்டா இருப்பா. நான் அவக்கிட்ட என்ன ஏதுன்னு விசாரிக்குறேன். நீங்க இந்த விசயத்த பெரிசு படுத்தாம கொஞ்சம் காமா இருங்க.” என்று படுக்கையறை நுழைந்து கதவை தாழிட்டாள்.

தலை வழியே கம்பளியை போர்த்தியிருந்த கவிலயா லேசாக அதனை விலக்கினாள். அவளருகில் வந்து உட்கார்ந்த உத்ரா எதுவும் பேசவில்லை, அவளே பேசட்டுமென்று.

சிறிது நேரம் பொறுத்திருந்த கவிலயா‌ அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், “சாரிக்கா, நான் இப்படியாகும்னு நெனைக்கவே இல்ல. என்னால தான உன் கல்யாணம் நின்னுப்போய் அம்மாவுக்கு அப்படியாச்சு?” என்று உத்ராவின் தோளில் தலை சாய்த்து விம்மினாள்.

நடந்ததை வைத்து கவின் அவளை ஏதாவது‌ சொல்லியிருப்பான் என்று சரியாக ஊகித்தவள், “ச்சே! அது நடக்கனும்னு இருந்திருக்கு. அதுக்குப்போய்...” என்றாள் ஆறுதலாக.

“இல்லக்கா நான் அப்லோட் பண்ணின வீடியோனால தான் உன் கல்யாணம் நின்னு போச்சின்னு கவின் என் யூடியூப் சானல டெலீட் பண்ண சொல்லிட்டான். இனிமே வீடியோஸ் எதுவும் அப்லோட் பண்ணக்கூடாதாம். நான் என் சானல்ல புதுசா ப்ரவுனி, ட்ரீம் கேக் எல்லாம் செஞ்சி சேல் பண்ணலாம்னு இருந்தேன் க்கா. ட்ரையல் கூடப் பாத்தேன். எங்கக்கா இங்கயிருந்த சுகர் சிரப் பாட்டீல்?”

“அது… அதவிடு. இங்கப்பாரு கவின்கிட்ட நான் பேசிக்கறேன். இனிமே நீ உன் வேலைய ரெகுலரா செய்யுற ஓகேவா? ஒரு விசயத்துல நமக்கு நல்லது நடக்கும் போது எப்படி ஏத்துப்போமோ அதே மாதிரி கெட்டது நடக்கும் போதும் அத தைரியமா ஃபேஸ் பண்ணனும். உன் சானல் எவ்வளவு ரீச் ஆகியிருந்தா நமக்கு யாருன்னே தெரியாத ஒருத்தர் வரைக்கும் போயி பிரச்சன சரியா வீடு தேடி வந்திருக்கும்?”

“அக்கா” சிணுங்கினாள் தங்கை.

“ம்! பீ பாசிட்டிவ் லயா. எங்க ஸ்மைல் பண்ணு.” என்று அவளின் கன்னங்களை இழுத்தாள்.

கவிலயா லேசாக சிரிக்கவும் உத்ரா எழுந்து போய் கதவை திறக்க முயல, “ஒரு நிமிசம் க்கா” என்று தடுத்தாள்.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் பதினெட்டு பற்றிய உங்கள் கருத்துக்களை அலுங்காமல் குலுங்காமல் கீழேயுள்ள கருத்துப்பெட்டியில் சேர்க்கவும் ப்ரெண்ட்ஸ்🙂

கருத்துப்பெட்டி
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 19


தன்னை வெளியே செல்ல விடாமல் தடுத்தவளை உத்ரா புரியாமல் பார்த்தாள்.

அவளோ தனது துணிகளுக்கு அடியிலிருந்து ரெசின் ஆர்ட் ஒன்றை எடுத்து வந்தாள்.

இது என்ன என்று உத்ரா கேட்கும் முன்னே, “இது நான் விக்கி அவங்களுக்காக கஸ்டமைஸ் பண்ணி வாங்கினதுக்கா. உன் கல்யாணம் முடிஞ்சதும் அவங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா‌, விதி வேற மாதிரி ஆகிருச்சி. நீ ரொம்ப லக்கிக்கா. இனி இது என்கிட்ட இருக்குறது சரியா இருக்காது. அதான் உன் முன்னாடியே குப்பைல போடலாம்னு வெளிய எடுத்தேன்.” என்றவளை திகைத்துப்போய் பார்த்தாள் உத்ரா.

இவள் தன்‌ காதலை அவனிடம் வெளிப்படுத்தியிராத போது எப்படி விக்கி இவள் தன்னை விரும்புவதாக சரியாகச் சொன்னான் என்று துணுக்குற்றாள். அப்போது மருத்துவமனையில் அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வந்தன. தன் தம்பி தங்கையை தன்னைவிட அவன் புரிந்து வைத்திருப்பது இன்னும் அவமானமாக இருந்தது அவளுக்கு.

தன் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல், “அந்த விக்கி நம்ம அப்பா மாதிரியே ஒரு குடிகாரன் லயா. நந்திதா புருசன் மாதிரி இவனும் ஒரு ரெட் ஃப்ளாக்கா இல்லையானு அவன பிரேக்கப் பண்ணின அனன்யாகிட்ட தான் நாம கேக்கனும். நீ எடுத்த முடிவு ரொம்பத் தப்பு” என்று பிடிவாதம் செய்தாள்.

“நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே ஒரு வகைல ஹெல்ப் பண்ணிருக்காங்க விக்கி. நீ ஏன் அவங்கள மனசார உன் ஹஸ்பண்டா ஏத்துக்கக்கூடாதுக்கா?”

“பாவம் பாத்து உதவி செய்றவங்க நன்றி கடனையெல்லாம் கல்யாணம் செஞ்சு அடைக்கிறது நல்ல விசயம் கெடையாது லயா.”

“ஹுக்கும்! ஆனா ஒன்னு, இனிமே நம்ம வீட்ல தியாகச் செம்மல் பட்டம் உனக்கு கெடயாதுக்கா. விக்கிய உனக்கு விட்டுக் குடுத்ததுக்காக எனக்கு தான்.” என்றாள் குறும்பாக.

“போடி வாலு! அப்பறம் நாம பேசினது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேணாம் லயா. இப்ப தான் அவங்க உடம்பு தேறிட்டு வர்றாங்க.” என்று அறிவுறுத்தினாள்.

“ம், ஆனா நீ தான் விக்கிய உன் புடவைய திருட வந்தவர் மாதிரியே கிட்ட விடாம அம்மாக்கிட்ட மாட்டிக்கப் போற.“ என்று எச்சரித்தாள்.

உத்ரா, “அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ போய் மொதல்ல சாப்டு” என்று விரட்டினாள்.

கதவை திறந்து வெளியே சென்ற கவிலயா தானாகவே பரிமாறிக்கொண்டு சாப்பிட, முகம் கனிந்தது பானுமதிக்கு.

மறுநாள் காலை செய்தித்தாள்களில் எல்லாம் ‘சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி’ தனது வாடிக்கையாளரை ஏமாற்றியதாக துண்டு செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

உத்ராவின் வீட்டில் எப்போதும் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கமுடையவன் கவின். முன்பு போட்டித்தேர்வில் பொதுஅறிவு பகுதிக்காக செய்தித்தாள்களை புரட்டியவன் அதே பழக்கத்தில் இன்றும் புரட்ட, அவனது கவனத்தைப் பெற்றது அந்த துண்டுசெய்தி. அதைப் பார்த்ததுமே அவன் உத்ராவின் அறைக்குள் ஓடினான்.

அங்கு புதிய வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.

கவின் கூறிய செய்தியைக் கேட்டவுடனே விக்கியின் எண்ணிற்கு அழைத்து இதைப் பற்றி கேட்க முயன்றாள். ஆனால், அவன் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை. அவள் அனுப்பிய தகவலுக்குக் கூட வாட்சப்பில் நீல சரி விழவில்லை.

வேலையை ராஜினாமா செய்துவிட்டப் பிறகும், சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சிக்காக அவள் உள்ளம் பதறியபடி இருந்தது. அந்த யோசனையில் நேர்காணல் செல்லும் எண்ணத்தையே கைவிட்டாள்.

அப்போது தான் விக்கியின் தாய் வேணியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவளை அலைபேசியிலேயே வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் வேணி. ஒரு கட்டத்தில் அவரை சமாளிக்க முடியாமல் போக இணைப்பை துண்டித்துவிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால், அவள் அதைச் செய்யும் முன் அவர் விக்கியை பற்றி விசாரித்தார்.

“எங்கப்போய் தொலைஞ்சான் அவன்? போன் பண்ணினா எடுக்க மாட்டேங்குறான்? எனக்கு நீயும் அவனும் என்ன பண்ணுவீங்களோ தெரியாது. இந்த பிரச்சனையெல்லாம் முடிச்சு டிடெக்டிவ் ஏஜென்சிய வாசன் ஒப்படைச்ச மாதிரியே என் கையில ஒப்படைக்கனும். இல்ல என் இன்னொரு முகத்த பாப்பீங்க?” என்று கடுத்தக்குரலில் மிரட்டினார்.

அவரிடம் பூனை போல் பம்மி, “ஓகே மேடம், ஓகே மேடம்” என்றே உருப்போட்டவள்,

அவர் அழைப்பை துண்டித்ததும், “நான் வேலைய ராஜினாமா பண்ணிட்டத இன்னும் இந்த அம்மாக்கிட்ட அவன் சொல்லித் தொலைக்கலையா? என்னப் போட்டு இந்தக் காச்சு காச்சுது” என்று எரிச்சலாக முனகினாள்.

மீண்டும் விக்கியின் அந்தரங்க எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் அவன் ஏற்கவில்லை.

அவள் அவனை கடிந்து கொண்டிருந்த அதே நேரத்தில் தன் நண்பன் மகேஷைப் பார்க்க தனது மென்பொருள் நிறுவனத்திற்குச்
சென்று கொண்டிருந்தான் விக்கி. சாதாரணமாக அல்லாமல் எப்போதும் எப்படி தன்னை தன் ஊழியர்கள் முன்பு அடையாளப்படுத்திக் கொள்வானோ அப்படியே சென்றிருந்தான்.

சாம்பல் வண்ண ப்ளேசர், வெள்ளை வண்ண உள்சட்டை, கறுப்பில் பேண்ட், கழுத்து டை, மினுமினுக்கும் சப்பாத்துகள், திருத்திய மீசை தாடி, ரோலக்ஸ் வாட்ச், கண்களில் கூலிங் கிளாஸ் என்று வந்தவனைப் பார்த்து அனைவரும் வியப்புடனும் புன்னகையுடனும் வணக்கம் வைத்தார்கள்.

தங்களின் பழைய முதலாளி கிடைத்துவிட்ட ஆனந்தத்துடன் சுறுசுறுப்பாக வேலையைச் செய்தார்கள்.

அவன் நேரே தன்னுடைய அறைக்கு செல்ல, அங்கு அவனது நாற்காலியில் அவனது நண்பன் மகேஷ் வீற்றிருந்தான்.

அவன் விக்கியைப் பார்த்ததும் வாயைப் பிளக்க, “எனக்கு என் ஷீட்டுல உக்கார்ந்து தான் பழக்கம்” என்று மிடுக்காகக் கூறினான்.

மகேஷ் எழுந்து வந்து விக்கியை கட்டிப் பிடித்தவன், “இந்த நாளுக்காகத் தான்டா நான் காத்திருந்தேன். ஆனா இப்ப இல்லாம இன்னும் கொஞ்சம் முன்னாடியே நீ வந்திருக்கனும். எல்லாம் கைமீறிப் போன பின்னாடி வந்திருக்க” என்று வருத்தப்பட்டான்.

அவனை சலனமின்றி பார்த்தவன், “நான் கம்பெனி விசயமா உன்கிட்ட பேச வரல மகி. எனக்கு இப்ப வேற ஒரு விசயம் உன்கிட்ட பேச வேண்டியிருக்கு. கொஞ்சம் இந்த சேர்ல வந்து உக்காரு” என்று அழுத்தமாகச் சொன்னான்.

அவன் என்ன சொல்லப்போகிறான் என்கிற எதிர்பார்ப்பில் அவனுக்கு முன்னால் கிடந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தான் மகேஷ்.

தனது டையை சற்று தளர்த்தியவன், “எதுக்காக நீ அனன்யாவ மறுபடியும் என் லைஃப்ல கொண்டு வர நெனைக்கிற?” என்று பொட்டிலடித்தாற்போல் தன் முதல் கேள்வியைக் கேட்டான்.

மகேஷோ இந்த நேரடித் தாக்குதலை சற்றும் எதிர்பாராதவன் ஆதலால், “ஹே! நீ என்னடா சொல்ற?” என்றான் பதட்டமாக.

அவன் கேள்விக்கு விளக்கமாக தன் மேலாடைக்குள்ளிருந்து அறிக்கை ஒன்றை எடுத்து நீட்டினான் விக்கி. மகேஷ் கடந்த இரண்டு மாத காலமாக யார் யாருடன் எப்போது அலைபேசித் தொடர்பில் இருந்தான் என்பது பற்றிய தரவுகள் அது.

அதில் குறிப்பாக அனன்யாவுடன் அவன் பேசிய அழைப்புகளை மட்டும் வட்டமிட்டு சுட்டிக் காட்டியிருந்தான். அதைப் பார்த்ததும் மகேஷின் முகம் வெளிறிப்போனது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
“அது வந்து… அது வந்து…” என்று மென்று விழுங்கியவனை அங்கிருந்த மேசையில் குத்தி மிரளச் செய்தான் விக்கி.

“எங்கள நீ சேர்த்து வைக்க நெனைக்கிறது கடல் தண்ணிய முழுசா குடிக்க நெனைக்கிறதுக்கு‌ சமம். இதுல நான் உங்கிட்ட புதுசா சொல்ல ஒன்னுமில்ல.”

“விக்கி நீ‌‌ அவள இன்னும் மறக்க முடியாம தவிக்கிறடா. அதான்‌‌ உண்ம. சும்மா எங்களுக்காக அவள மறந்த மாதிரி நடிக்காத. இப்ப அவ மனசுலயும் நீதான் இருக்க.”

விரக்தியாக சிரித்தான் விக்கி.

“அதான் எனக்கு இப்ப பிரச்சனையே. அவ அவளோட கல்யாணத்த நிப்பாட்டுறதா நெனச்சு எங்க டிடெக்டிவ் ஏஜென்சிய சிக்கல்ல மாட்டிவிட்டுட்டா.”

“என்னடா சொல்ற?” என்று மகேஷ் அதிர்ச்சி காட்டியபோது அவ‌னின் அலைபேசி ஒலியெழுப்பி இருவரின் கவனத்தையும் பெற்றது.

அதை கையிலெடுத்துப் பார்த்தவன், “வேணி மேடம்டா. அவங்களுக்கு நீ இங்க வந்துருக்கது தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்றதும்,

“அட்டன் பண்ணாத” என்று கட்டளையிடும் தொனியில் சொன்னான் விக்கி.

மகேஷ் காரணம் புரியாமல் விழிக்க‌, அங்கிருந்து புறப்பட்டான்.

உண்மையில் அவன் வந்து சென்றதை பூகம்பம் போல் தான் உணர்ந்தான் மகேஷ். இவ்வளவு நாள் அவன் இங்கு வர மாட்டான், காதல் தோல்வியில் குடித்தே செத்தொழிந்து விடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தவன் திடீரென அவன் வந்ததும் விதிர்த்துப்போனான்.

எப்படியாவது அவனது வாழ்வில் மறுபடியும் ஒரு புயல் வீசச் செய்ய வேண்டும் என்று தான் அனன்யாவிடம் இன்னும் விக்கி அவளை விரும்புவதாக பொய் சொல்லி ஆசைக்காட்டியதே.

ஆனால், தற்போது விக்கி அவளால் மனதளவில் பாதிக்காதது கண்டு உக்கிரமடைந்தான். எப்படியாவது அந்த மென்பொருள் நிறுவனத்தை விக்கியிடமிருந்து கைப்பற்றத் துடித்தவன் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கலானான்.

விக்கியை தொடர்புகொள்ள முயன்ற உத்ரா அது முடியாமல் போகவும் அவனை சந்திக்க சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சிக்கேச் சென்றாள்.

அவன்‌ அவனது‌ வீம்பை கைவிட்டு அனன்யாவுடன் சேர வேண்டும் என்பது தான் அவளின் விருப்பமாக இருந்தது. அதற்காகத்தானே பழி முழுவதையும் அவள் ஏற்றுக்கொண்டாள். அவன் அனன்யாவுடன் சேராமல் போனால் அவள்பட்ட இன்னல்களுக்கெல்லாம் அர்த்தமில்லாமல் அல்லவா போய்விடும்? ஆகவே அவனை நந்தகோபனை சந்திக்க வைக்க முயற்சி எடுத்தாள்.

அவள் அந்த யோசனையுடனே தனது முன்னாள் அலுவலகத்தை நெருங்கியபோது அந்த இடத்தை சுற்றிலும் கூட்டம் கூடி நின்றது.

உள்ளே நுழைந்து பார்த்தபோது அலுவலகம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வேகமாக அங்கு விசாரணை நடத்திக்கொண்டிருந்த காவலதிகாரியிடம் சென்று விசாரித்தாள்.

அவரோ, “வாங்கம்மா. நீங்க தான் இந்த டிடெக்டிவ் ஏஜென்சி ஓனரா?” என்று வினவியதுடன்,

“உள்ள வந்து பாருங்கம்மா. ஒரு பொருளக்கூட விட்டு வைக்கல வந்தவனுங்க. ஏதோ வேணும்னே திட்டம்போட்டு செஞ்ச மாதிரி இருக்கு. நல்லவேள நீங்களோ உங்க வேலையாட்களோ யாரும் அந்த சமயம் இல்ல. இல்லனா அவனுங்க அடிச்சி நொறுக்கியிருக்கிற வேகத்துக்கு இந்த எடமே ரத்தக்காடாகிருக்கும்” எனவும், நெஞ்சுக்கூடு உலர்ந்து போனது உத்ராவுக்கு.

“வந்தவங்க யாரு சார்? அவங்க மோட்டிவ் தான் என்ன?” என்று ஆற்றமாட்டாமல் கேட்டாள்.

“அதாம்மா நாங்களும் விசாரிச்சிக்கிட்டிருக்கோம். வெளிய டீக்கட வச்சிருக்கவர கேட்டப்ப மொத்தம் மூனு பேர் வந்ததா சொல்றாரு. மொகத்த மாஸ்க் வச்சு மறச்சிருந்தாங்களாம். முழுசா இல்லனாலும் அவங்க எல்லாரோட மொகமும் உங்க ஆஃபிஸ்ல இருக்க ஏதாவது ஒரு சிசிடிவிலயாவது கண்டிப்பா ரெகார்ட் ஆகியிருக்கும். ஸோ, அவங்களப் பிடிக்கிறதுல சிக்கல் பெருசா இருக்காது. டோன்ட் வொரி. அப்பறம் உங்களுக்கு யார் மேலயாவது‌ சந்தேகம் இருக்காம்மா?” எனவும், இல்லையென்று தலையாட்டியவள் அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில் அவருடன் காவல்நிலையம் வரை சென்று புகார் எழுதிக் கொடுத்தாள்.

எல்லாம் முடித்து அவள் தன் வீட்டிற்கு சோர்வாக வந்து சேர்ந்தபோது விக்கி அவளின் வருகைக்காக அவர்கள் வீட்டு சோபாவில் காத்திருந்தான்.

வேகமாக அவனிடம் சென்றவள் அவன் கையைப் பற்றி தனதறைக்கு இழுத்துச் சென்றாள். பானுமதியும் கவிலயாவும் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தார்கள்.

அறைக்குள் வந்ததும் கதவை தாழ் போட்டவள், “உனக்கெல்லாம் எதுக்கு போனு? எடுத்து குப்பைல போடு மொதல்ல? எத்தன தடவ உனக்கு நான் கால் பண்றது? இன்னைக்கு ஆஃபிஸ்ல என்னாச்சு தெரியுமா? ஒரு பொருள் விடாம அடிச்சு துவம்சம் பண்ணி வச்சிருக்காங்க. யாரோ மூனு பேர் திட்டம் போட்டு வந்து இப்படியெல்லாம் பண்ணிருக்காங்களாம். இத உன்கிட்ட சொல்லலாம்னா நீ போன எடுத்த பாடில்ல.

இன்னைக்கு எங்கப்போய் தொலைஞ்ச நீ? ஆனா உனக்கு இன்னைக்கு நல்ல நேரம்டா. அதான் அவனுங்க கண்ணுல சிக்காமப் போயிட்ட. சிக்கியிருந்த நீ உயிர் பொழைக்கிறதே கஷ்டமாப் போயிருக்கும்.” என்று படபடவென பொரிந்தாள்.

அவள் இவ்வளவு சொல்லியும் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் விக்கி.

“ஹே! உன்கிட்ட தான் நான் பேசிட்டிருக்கேன். ஏதாவது பதில் சொல்லு?” என்று எரிச்சலாய் வினவினாள்.

அவன் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாகச் சொன்னான்.

“அடிச்சு ஒடச்சது என்னோட ஆஃபிஸ. கேஸ் போட்டிருக்கது என்னோட ஆஃபிஸ் மேல. நியூஸ் பேப்பர்ல தப்பா வந்தது என்னோட ஆஃபிஸ் பத்தி. உன்ன பொறுத்த வர ஐ டிசர்வ்ட் திஸ் ஆல். ஆனா நீ எதுக்கு இப்ப கெடந்து லபோதிபோன்னு குதிக்கிற?” என்று புரியாமல் கேட்டான்.

அவன் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் தன் நெஞ்சைத் தைக்க, “அதான எனக்கென்ன வந்தது இப்ப? நீ கெட்டவன். அதனால தான் உனக்கு கெட்டதா நடக்குது. நான் ஏன் இப்படி கெடந்து அடிச்சிக்கறேன்? ஆனா… ஆனா… என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியலையே.” என்றவளின் குரல் உடைந்தது.

“கடைசியா எது நடக்கனுமோ அது நல்லாவே நடந்துருச்சி. இனி ஆகப்போறது ஒன்னுமில்ல. நீ போய் சாப்ட்டு நிம்மதியா தூங்கு உதி. நாளைக்கு ஆபிஸுக்கு எந்த கம்பெனி பூட்டு போட்டா நல்லாருக்கும்னு டிஸ்கஸ் பண்ணலாம். நீ எதிர்பாத்ததும் அதான?”

“இப்பக்கூட நீ தப்பு உன் மேல இல்ல, அந்த அனன்யா மேல தான்னு சொல்ல மாட்டிக்கிறப் பாரு? போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு நான் நேரா இங்க வரல விக்கி. நந்தகோபன் வீட்டுக்குப் போயிட்டு தான் வரேன்.” என்று அவனை அதிர்ச்சியில் உறையச் செய்தாள்.

காவல்நிலையத்தில் புகார் எழுதிக் கொடுத்த கையோடு தன்‌ உளவாளிக்குழுவிடம் முகவரி விசாரித்து நந்தகோபனை சந்திக்க அவரின் வீட்டிற்கேச் சென்றாள் உத்ரா. அங்கோ அவருக்கு பதில் அனன்யாவை சந்திக்க நேர்ந்தது.



கலைடாஸ்கோப் திரும்பும்…​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 19 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கருத்துத்திரியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ்.

கருத்துப்பெட்டி
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom