Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 12


மாப்பிள்ளையோடு சேர்த்து மொத்தம் பத்து நபர்கள் வந்திருந்தார்கள்.

தங்கள் உறவினர்கள் யாரையும் இந்த நிகழ்விற்கு அழைக்க வேண்டாம் என்று பானுமதியிடம் உறுதியாக சொல்லிவிட்டாள் உத்ரா. தங்களின் குடும்பத்திற்கு எவ்வகையிலும் துணைநில்லாதவர்களை அவள் துளியும் மதிப்பதாயில்லை. பானுமதியும் அவளின் முடிவிலிருந்து அவளை மாற்ற முடியாது என்று அவ்வாசையை கைவிட்டார்.

ஆனால், பத்திரிக்கை வைக்கும்போது ஒருவர் விடாமல் வைக்கவேண்டும் என்று மட்டும் பிரயாசை.

இந்த இடைப்பட்ட நாட்களில் உதய்கிருஷ்ணாவும், உத்ராவும் வாட்சப்பில் குட் மார்னிங், குட் நைட் சொல்லும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள்.

உதய்கிருஷ்ணா தன் அக்காவின் தேர்வில் ராமர் பச்சையில் பருத்திச்சட்டை, பீஜ் நிற பேண்ட், கறுப்பு நிற லெதர் பெல்ட், டையடித்து ஸ்மூத்தனிங் செய்த ஹேர் என்று புதுப்பொலிவுடன் காணப்பட்டான். அவனைப் பார்த்ததும் அதிகப்படியாய் சிவந்த உத்ரா சம்பிரதாயமாய் கைகளைக் கூப்பினாள்.

திடீரென கூட்டத்தில் ஒளிந்திருந்த பிரகாஷ் அவள் கண்ணில் பட, பீதியடைந்தாள். விக்கி அதை இனம் கண்டதும் பயப்பட வேண்டாமென அவளிடம் கண்களை மூடித் திறந்தான்.‌

ஆனால், அவள் மனமோ பிரகாஷ் அவளையும் உதய்கிருஷ்ணாவையும் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி ‘ஜோடி பொருத்தம் சூப்பர்’ என்றபோது‌ தான் இயல்புநிலைக்கு திரும்பியது.

பிரகாஷ் முதல்முறை அவளை பூங்காவில் பார்த்தபோது அவள் அழகில்லை அப்படி இப்படியென்றுவிட்டு இன்று அவளையே நிச்சயம் செய்ய வந்திருப்பதற்காக‌ உதய்கிருஷ்ணாவை அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக கேலி செய்து கொண்டிருந்தான்.

இந்த இடைவெளியில் கவிலயா அனைவருக்கும் இனிப்பு காரம் பரிமாற, ரஞ்சனி தாங்கள் கொண்டுவந்த மோதிரத்தை உதய்கிருஷ்ணாவிடம் கொடுத்து உத்ராவுக்கு அணிவிக்கச் சொன்னாள்.

அவனும் படபடப்புடன் நின்றிருந்தவளை நெருங்கி, மிருதுவாக அவள் மோதிரவிரலைப் பிடித்து காதலுடன் கணையாளியை அணிவித்து விட்டான்.

அடுத்த மாதமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரின் ஒப்புதலுடனும் முகூர்த்தத்தேதி குறிக்கப்பட, பிரேமவிலாஸின் இனிப்பும் காரமும் தொண்டைகளுக்குள் இதமாக இறங்கின.

ரஞ்சனி உத்ராவை உதய்கிருஷ்ணாவிற்கு அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார வைத்ததும் வளைத்து வளைத்து புகைப்படமெடுத்தாள் ரஞ்சனியின் மகள் மேகா.

அவள், “டேய் மாமா! நீ கொஞ்சம் சிரிச்சா தான் என்ன?” என்று அவனை மரியாதையின்றி பேசிவிட்டு சட்டென்று, “சாரி அத்த. சாரிடா மாமா” என்று சொல்லி மீண்டும் நாக்கை கடித்தாள்.

“இல்ல உன் இஷ்டப்படியே அவர கூப்பிடு.” என்று அனுமதியளித்து‌ உதய்கிருஷ்ணாவின் நன்மதிப்பை பெற்றாள் உத்ரா.

அவளிடம் விக்கி தான் தேடித்தேடி வாங்கி வந்திருந்த பரிசுப்பெட்டியை கொடுக்க, கவிலயா அதனையும் தன் அலைபேசியில் காணொளியாக பதிவு செய்தாள். ஆர்வம் தாங்காமல் உத்ரா அங்கேயே அதை பிரித்துப் பார்க்க, வெள்ளியில்‌ செய்த புத்தர் சிலையொன்று உள்ளே இருந்தது.

“கல்யாணத்துக்கு அப்பறம் உதய்கிருஷ்ணா உயிர் வாழனும்னா புத்தர் தான் அவர் குலதெய்வமா இருக்கனும். அதான்‌ அவர் வழிபட வசதியா இப்பவே‌‌ புத்தர் செலய கிஃப்ட் பண்ணேன்.” என்றவன் தீவிரமாக விளக்க, சபையில் சிரிப்பலை பரவியது.

உத்ரா மட்டும் அவனுக்கு ஒழுங்கு காட்டினாள்.

அவ்வேளை வேணி தன் பங்காக, “உத்ரா ரொம்ப தங்கமானப்பொண்ணு தம்பி. அவள மாதிரி ஒரு புத்திசாலிய நீங்க பாக்கவே முடியாது. உத்ரா, அடக்கம் இந்த ரெண்டு வார்த்தையையும் நீங்க தனியா பிரிச்சிப் பாக்கவே முடியாது. அவ செய்ற வேலைல ஒரு கொறையக்கூட உங்களால கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு நேர்த்தி. அவ உங்க வீட்டு மருமகளா வர்றது நீங்க செஞ்ச பாக்கியம்.” என்று உதய்கிருஷ்ணாவிடம் புகழ, வாயைப் பிளந்தார் பானுமதி.

உத்ராவுமே ஆச்சரியமாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் சந்தேகமாக‌ விக்கியைப் பார்த்தபோது, “நீயும் உதயும் ஏதாவது தனியா பேசனும்னா போய் பேசிட்டு வாங்களேன்.” என்றான்.

பெரியவர்களும் விக்கி கூறியதை ஆமோதிக்க, இருவரும் ஒரு சேர இருக்கையைவிட்டு எழுந்தனர். கவினின் அறையை ஒட்டிய பால்கனியில் நின்றிருக்கும்போது சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா. அவள் கண்களோ அவனை புகைப்படமெடுத்துத் தள்ளின.

அவன் தன்புறம் திரும்பியபோது புகைப்படக்கருவியை தாழ்த்தியவள், “பிரகாஷ்கிட்ட என்ன சொல்லி இங்க கூட்டிட்டு வந்தீங்க?” என்றாள்.

“என்ன சொல்லனுமோ அத மட்டும் சொன்னேன்.” விளையாடினான்.

“அதான் என்ன?”

“சொல்லியே ஆகனுமா? நீயும் நானும் தூரத்து சொந்தக்காரங்கனும், நான் உன்ன லவ் பண்றேனும் சொன்னேன்.”

அவ்வளவு தான்! அவள் மொத்தமாக அவனில் வீழ்ந்தாள். ஏனோ மறுபடியும் அவனை அதை சொல்ல வைக்க வேண்டும் போலிருந்தது, அதுவும் விக்கியின் முன்னால். அவன் தானே யார் அவளை விரும்புவார்கள் என்று கேட்டது!

“நீ கொழந்த பத்தி என்ன பிளான் பண்ணிருக்க உத்ரா? எனக்கு இப்பவே முப்பத்தஞ்சு வயசாகுது. சோ, ரொம்பத் தள்ளிப் போட வேணாம். உனக்குமே முப்பதாகுதுல்ல?”

வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை. ஈர விரல்ரேகையை உணர மறுக்கும் அலைபேசித் திரையை போல் தடுமாறினாள்.

அவள் பதிலேதும் சொல்லாமல் நிற்பது கண்டு அவளது வலக்கையைப் பற்றி மென்முத்தம் பதித்தான் மாப்பிள்ளை. அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவளை உள்பக்கமாகச் சுவற்றில் சாய்த்து கன்னங்களை பதம் பார்த்தான். கிறங்கி நின்றவளிடமிருந்து வந்த கலவையான நறுமணம் அவனை இன்னும் முன்னேறச் சொன்னதோ? அவளின் கன்னங்களைப் பற்றி உதட்டில் ஆழ முத்தமிட்டான்.

நொடி நேரத்தில் நிகழ்ந்துவிட்ட முத்தச் சம்பவத்தில் ஒரு பரவசநிலையை அடைந்தது அவளது உடல். உடன் ஒரு பயஅலையும் ஓடி அடங்கியது.

அவள் சுதாரித்து அக்கம் பக்கம் பார்க்க, “புடிக்கலையா?” என்று கிசுகிசுத்தவனின் கரங்கள் இடையில் பதிந்தன.

இல்லையென்று மறுப்பாக தலையாட்டியவள் அவனை தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள். வந்த வேகத்தில் விக்கியையும் இடித்துவிட்டாள்.

அவன் அவள் தோள்களைப் பற்றி பதட்டமாக என்னவென்று கேட்க, “ஒன்னுமில்ல” என்று வெட்கமாகச் சொல்லியபடியே வரவேற்பறைக்குச் சென்றாள். ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயித்தவள் போன்ற மனநிலை.

விக்கி அவள் காதலின் மூன்றாம் நிலையை வெற்றிகரமாகக் கடந்ததை வேடிக்கையாகப் பார்த்தான்.

அவளைத் தொடர்ந்து உதய்கிருஷ்ணாவும் வரவேற்பறைக்கு வந்தபோது அவனிடம் ரஞ்சனி நைச்சியமாகப் பேசினாள்.

“ஏற்கனவே அந்த நந்தகோபன் உன்ன ட்ரக் அடிக்ட்டுனு முத்திர குத்திட்டுப் போயிருக்கான். அத இவங்களும் உண்ம தான்னு நெனச்சிரக் கூடாதுல்ல? அதான் பேருக்கு‌ சும்மா நாப்பது பவுன் கேக்குறோம் உதய். நாங்க ஒன்னும் எங்களுக்காக இத கேக்கலப்பா. உனக்கொரு கெட்டப் பேர் வந்துரக் கூடாதுன்னு தான் முன்னெச்சரிக்கையா இருக்கோம்.” என்றதும்‌, அதை அமைதியாக ஆமோதித்தான்.

பானுமதி தன்னால் இயன்றதை செய்வதாக வாக்குறுதி தந்தார்.

உத்ராவுக்கு உதய்கிருஷ்ணா தன் அக்காவை எப்போதுமே கண்மூடித்தனமாக ஆதரிப்பது கண்டு ஆத்திரமாக வந்தது. ஆனாலும், பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
எல்லாம் நல்லபடியாய் முடிந்து அனைவரும் கிளம்பிய பின், உடை மாற்ற கழிவறை சென்றாள். ஆனால், திரும்பி வந்தவளின் முகம் அரண்டுபோய் இருந்தது. காரணம், இருபத்தெட்டாவது நாள் ரத்தசரித்திரம் இருபத்தொன்றாம் நாளிலேயே நிகழ்ந்திருந்தது.

அவன் முத்தம் கொடுத்த பயம் தான் இதற்கு காரணமா என்றவள் மூளை யோசிக்க, தன் உடலும் மனமும் ஒரு முத்தத்தைக்கூட தாங்க முடியாத வண்ணமா உள்ளன என்று அவஸ்தை கொண்டாள்.

காரில் தங்கள் வீட்டிற்கு திரும்பும்போது விக்கியின் மேல் ஒரு துண்டு காகிதத்தை தூக்கியெறிந்தார் வேணி.

“நீ எழுதித் தந்ததையெல்லாம் சரியா ஒப்பிச்சேனாடா?” -அபிப்ராயம் கேட்டார்.

“எங்க? நடுவுல ஒரு வாக்கியத்த விட்டுட்டீங்களே. உத்ரா மாதிரி ஒரு பொண்ணு தன் வயித்துல பொறக்க பானுமதி என்ன தவம் செஞ்சாங்களோனு எழுதி தந்தேனே. அத சொல்லாம விட்டுட்டீங்க.” என்று குறைபட்டான்.

“ம்க்கும்! இதுக்கே உத்ராவும் அவ அம்மாவும் திருதிருன்னு முழிச்சாளுங்க. நான் இத வேற சொல்லியிருந்தேன்? எனக்கு மண்டைல ஏதோ அடிப்பட்டுருக்கதா நெனச்சு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணிருப்பாளுங்க. ஏன்டா அவ சந்தோசத்துக்கு ஏன்டா நீ இப்படி கெடந்து மண்றாடுற?”

“ஆரம்பிச்சிட்டீங்களா? இப்ப நான் காரோட்டவா? இல்ல எறங்கி எங்கயாவது ஓடவா?”

“இல்ல இல்ல காரையே ஓட்டு.”

அவர் இறங்கி வந்தாலும் அவன் முகம் என்னவோ உர்ரென்றே இருந்தது.

மறுபுறம் கவிலயா அன்றைய நிகழ்வில் எடுக்கப்பட்ட காணொளிகளையெல்லாம் வாய்ஸ் ஓவருடன் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் பதிவேற்றிக் கொண்டிருந்தாள்.

‘இன்ஃப்ளூயன்சர்’ என்ற பதவியை தக்க வைக்க அவள் இதுபோல் தினமும் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால் அந்த காணொளிகளை பதிவேற்றியிருக்க மாட்டாளோ என்னவோ?

அன்றிரவு நிச்சயம் நல்லபடியாக முடிந்த மகிழ்ச்சியில் பானுமதி உத்ராவுக்கு திருஷ்டி கழிக்க, காய்ச்சல் வந்தவள் போல் படுத்திருந்தவள், “இதெல்லாம் எதுக்கும்மா இப்ப?” என்று சலித்தபடியே எழுந்து உட்கார்ந்தாள்.

அப்போது அலைபேசியின் செறுமலில் அதை நோக்கி குனிந்தாள். வாட்சப் கை தூக்கியது.

“நீ என் வீட்டுக்கு வர வெயிட் பண்ணிட்டிருக்கேன்.” என்று ஆசையோடு அனுப்பியிருந்தான் உதய்கிருஷ்ணா.

அவனுக்கு பறக்கும் முத்த ஸ்மைலி ஒன்றை அனுப்பிவிட்டு அவள்‌ தூங்க ஆயத்தமாக, அது தெரியாமல் தொடர்ந்து அவன் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான்.

***********

மறுநாள் அவள் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு வந்த போது, “நான் அனுப்பின நம்பரோட கால் டீடைல்ஸ் எல்லாம் சென்ட் பண்ணிட்டீங்களா? ஓகே! ஓகே! பேலன்ஸ் அமௌன்ட் இப்பவே நான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுறேன்.” என்று தன் தொழிற்நுட்ப குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தான் விக்கி.

உத்ராவை கண்டதும் புருவங்களை உயர்த்தி, “வாங்க புதுப்பொண்ணு! இப்ப தான் இங்க வர வழி தெரிஞ்சதா?” என்று கேலிப்பேசினான்.

அவன் நெற்றியில் கை வைத்து சோதித்தவள், “விக்கி உனக்கு ஒடம்பு எதுவும் முடியாம இல்லையே?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“ஏன்?” என்றவன் தன்னை ஆராய,

“பின்ன? உனக்கு தான் வேலைப் பாக்கவே பிடிக்காதே. ஏர்லி மார்னிங்கே இங்க வந்து உக்கார்ந்திருக்க? ஒருவேள குடிச்சிருக்கியா நீ?” என்று அவன் அருகில் வந்து வாசனைப் பிடித்தாள்.

அப்படி எந்த துர்நாற்றமும் வீசவில்லை.

“சில்லி கேர்ள்!” என்று அவள் தலையில் பேனாவால் தட்டியவன், “அப்பறம் உதி, நேத்து அவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு. இன்னைக்கென்னனா ஆஃபிஸ் வந்திருக்க? நேத்து ஃபுல்லா உதய்கிருஷ்ணாவ நெனச்சு தூக்கம் வராம புரண்டு நாலு கிலோ எளச்சிருப்பியே நீ?” என்று கிண்டலடிக்க,

“அப்படியெல்லாம் இல்ல. நேத்து தான் நான் நல்லா தூங்கினேன். பாவம் அவர் தான் அங்க தூங்கல போல. நைட் ரெண்டு மணி வர எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்காரு.” என்று அனுதாபப்பட்டாள்.

தன் தலையிலடித்துக்கொண்ட விக்கி, “ஊர்ல அவ்ளோ பொண்ணுங்க இருந்தும் சரியான டியூப்லைட் உன்னப்போய் கல்யாணம் பண்ண இருக்கான் பாரு அந்த உதய்கிருஷ்ணா? அவன சொல்லனும்.” என்று அலுத்துக்கொண்டான்.

“ஏன்டா? நான் என்ன பண்ணேன்?”

“நீ ஒன்னுமே பண்ணமாட்டேங்குறியே. அது தான் பிரச்சன. அதாவது ரொமான்ஸ் பண்ணு உதி. ரொமான்ஸ்”

“ரொமான்ஸா? எனக்கு அதெல்லாம் தெரியாது போ! வேல வெட்டி இல்லாதவங்க பண்றதெல்லாம் என்ன பண்ண சொல்லாத.”

“ஹே! நீ இப்படியெல்லாம் இருந்தா, அந்த உதய்கிருஷ்ணாவுக்கு எப்படி உன் மேல ஆச வரும் சொல்லு? ஐ மீன் அந்த உதய்கிருஷ்ணாவுக்கு எப்படி உன்னப் பத்தி முழுசா தெரியும்னு கேட்டேன்? நாளைக்கே அனன்யா மேட்டர் தெரிஞ்சாலும் அவன் உன்ன நம்ப வேண்டாம் சொல்லு?” எனவும், சோகம் குடிகொண்டது அவள் முகத்தில்.

“எல்லாத்துக்கும் காரணம் நீதான்டா.” என்று அவனை பார்வை எனும் குத்தூசியால் துளைத்தாள்.

மேலும், அவன் சொல்வதில் உள்ள நியாயமும் அவளுக்கு புரியாமல் இல்லை. ஆதலால், அனன்யா பற்றிய விசயத்தை ஆறப்போடாமல் உடனே உதய்கிருஷ்ணாவிடம் பேசி தெளிவு படுத்திவிட வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்தாள். அப்போது தான் அவன் அனுப்பிய செய்தியும் அவள் கரங்களுக்கு வந்து சேர்ந்தது.

“இன்னைக்கு ஈவ்னிங் ஆறரை மணிக்கு தெப்பக்குளம் போலாமா?” என்றிருந்தான்.

மற்ற நேரமானால் யோசித்திருப்பாள் உத்ரா. ஆனால், தற்போதைய கவலையில் உடனே சரியென்று பதிலனுப்பினாள்.

உத்ரா அலைபேசியில் மூழ்கியிருப்பது கண்டு, “என்ன உதி ஸ்வீட்‌ நத்திங்ஸா?” என்று விக்கி அதை எட்டிப் பார்க்க,

அதனை மறைத்தவள், “பைதவே நான் எதுக்கு இங்க வந்தேன்னா என் ரிசைக்னேஷன் லெட்டரக் குடுக்கத்தான்.” என்றொரு உறையை நீட்டினாள்.

அதுவரை விக்கியின் உதட்டிலிருந்த புன்னகை அக்கடிதத்தை வாசித்ததும் ராஜினாமா பெற்றது.



கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 12 பற்றிய உங்கள் விமர்சனப்பொரிகளை கீழே உள்ள கருத்துக்கடலில் தூவவும் ப்ரெண்ட்ஸ். அவற்றை ஆசையுடன் அணுகும் மீனாய் நான்.

கருத்துத் திரி,
கருத்துக்கடல்
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 13


உத்ராவின் முடிவு தனக்கு கடினமாய் இருந்தாலும் விக்கி அவள் மனதை மாற்ற முயலவில்லை. அது நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமம் என்று கைவிட்டான்.

ஆனால் மெதுவாக, “சாப்பாட்டுக்கு என்ன செய்யுறதா உத்தேசம்?” என்றான் உண்மையான அக்கறையுடன்.

அவள் கண்கள் மின்ன பதிலளித்தாள்.

“உனக்கு தெரியாதுல்ல விக்கி? கவினுக்கு வேல கெடச்சிருக்கு. அதுவும் நாங்க எதிர்பார்க்காத நல்ல சம்பளத்துல. மதுரைக்குள்ள அவனுக்கு இப்படியொரு வாய்ப்பு கெடைக்கும்னு நாங்க நெனைக்கவேயில்ல தெரியுமா? மாட்டுத்தாவணில ஏதோ லாக்டெக்னு ஒரு பெரிய ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் சர்வீஸ் கம்பெனி இருக்கு போல. அதுல தான் சாருக்கும் அசிஸ்டன்ட் கம்ப்யூட்டர் மெக்கானிக்கா போஸ்ட்டிங். கூடிய சீக்கிரமே எனக்கும் ஒரு நல்ல வேலை கெடச்சிரும்.” என்று நம்பிக்கை தெரிவித்தாள்.

“பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கைக்குலுக்கினான் விக்கி.

அவள் அங்கிருந்து கிளம்பும்போது, “ஈவ்னிங் உதய் என்ன தெப்பக்குளம் வரச்சொல்லிருக்காரு. நான் அனன்யா மேட்டர் பத்தி அவர்கிட்ட பேசலாம்னு இருக்கேன்.” என்று அறிவிப்பாகச் சொன்னாள்.

இவளைப் போல் ஒரு பைத்தியக்காரி ஊரில் இருக்கமாட்டாள் என்று மனதுள் கழுவி ஊற்றியவன், “கண்டிப்பா உதய்கிருஷ்ணாகிட்ட அது பத்தி பேசித்தான் ஆகனுமா?” என்றான்.

அவள் ஆமென்றபடியே வெளியேறினாள்.

அடுத்த சில கணங்களில் அவனின் நண்பன் மகேஷ், “ஈவ்னிங் என் வீட்டுக்கு வர்றியாடா? ஐபில் மேட்ச் பாக்கலாம்.” என்றுபோது பரிசீலனை செய்யாமலேயே அதனை நிராகரித்தான்.

காரணம் கேட்டவனிடம், “நான் உத்ராக்கூட பானிபூரி சாப்பிட தெப்பக்குளம் வரைக்கும் போறேன்டா. ஸோ, மேட்ச்ச நெக்ஸ்ட் டைம் பாக்கலாம்.” என்று உல்லாசமாகக் கூறினான்.

அன்று மாலை பிடிவாதமாக எங்கும் நகரமாட்டேனென்று தன் வீட்டில் வந்து‌ உட்கார்ந்திருந்தவனை உத்ரா கொலைவெறியோடு பார்த்தாள். அவனோ அதை புறந்தள்ளியவனாக அவளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

உத்ரா ரப்பர் பேண்டில்‌ தன் முடியை அடக்கிக்கொண்டே, “ஏன் கொரங்கே சிரிக்குற?” என்றாள்.

“ஆமா நீ டேட்டிங் போறியா? இல்ல ஸ்டண்ட் எதாவது செய்யப்போறியா?” என்றவன் சீண்டவும், தன் தொளதொள சட்டையையும், ஜீன்ஸையும் ஒருமுறை ஆராய்ந்தவள்,

“எல்லாரும் உன் அனன்யா மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்த்தா எப்படிப்பா?” என்றுவிட்டு‌ சட்டென்று தன் நாக்கை கடித்தாள்.

பொங்கிய கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றவன், “நான் கீழ என் கார்ல வெயிட் பண்றேன். நீ வா!” என்றுவிட்டு வாகன நிறுத்துமிடம் சென்றான்.

கவிலயாவிற்கோ உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல் இருந்தது. ‘யாரந்த அனன்யா?’ என்ற கேள்வி வேறு அவள் மூளையைப்போட்டு குடைந்தது.

உத்ரா கிளம்பியிருப்பதை பார்த்ததும் அவள் எங்கு செல்கிறாள் என்று விசாரித்த அமிகா தானும் அவளுடன் வருவதாக அடம்பிடிக்க, அந்த வாய்ப்பை கெட்டியாகப் பற்றிக்கொண்டாள் கவிலயா.

விக்கியை ஏமாற்றிவிட்டு தன் ஸ்கூட்டியில் மாயமாக நினைத்த உத்ரா இறுதியில் வேறுவழியின்றி அமிகாவையும் கவிலயாவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.

ஆனால், தெப்பக்குளத்தில் தான் அமர்ந்திருக்கும் இடத்தின் அடையாளத்தை கூறி காத்திருந்த உதய்கிருஷ்ணாவுக்கு தான் உத்ராவின் இந்த ரசிகப்படை ஏமாற்றத்தை அளித்தது. சற்று அசௌகரியமாக உணர்ந்தான்.

ஒரு சில நலன் விசாரிப்புகளுக்குப் பின் உத்ரா, “நானும் அவரும் தெப்பக்குளத்த சுத்தி ஒரு வாக் போயிட்டு வர்றோம். நீங்க இங்க ஸ்னாக்ஸ் சாப்ட்டுட்டு உக்கார்ந்திருங்க.” என்று தெளிவாக உதய்கிருஷ்ணாவோடு நழுவிவிட்டாள்.

விக்கி தொலைவில் செல்பவளை கண்கொட்டாமல் பார்த்தான்.

அன்று வாரநாள் என்பதாலோ என்னவோ கூட்டம் அவ்வளவாய் இல்லை. நடைபாதையில் எலிகள் ஒன்றிரண்டு பரபரப்பாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தது கூட வேடிக்கையாக இருந்தது.

உதய்கிருஷ்ணா சிறிது தூரம் சென்றதுமே தன் தயக்கம் விடுத்தான்.

“நேத்து மிட் நைட்ல நான் மெசேஜ் அனுப்புனது சரியில்ல தான். ஆக்சுவலி நான் இப்படியெல்லாம் கெடையாது உத்ரா. ஒரு உறவ காப்பாத்திக்க இப்படி தொடர்ந்து மெசேஜ் அனுப்புறது, போன் பேசறதெல்லாம் எனக்கு சுத்தமா வராது. ஆனா, அனன்யா விசயத்துல நான் ரொம்பப் பட்டுட்டேன். ஒருவேள எங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருந்திருந்தா நான் ட்ரக் அடிக்ட் இல்லைனு சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கெடச்சிருக்குமோன்னு சின்ன உறுத்தல். அதான் உன் விசயத்துல ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன் போல?” எனவும், முகம் வெளிறிப்போனாள் உத்ரா.

“உண்மைய சொல்லனும்னா ஒரு கல்யாணம் நின்னதுலயே நான் ரொம்ப அசிங்கப்பட்டுட்டேன் உத்ரா. இப்ப என் மனசுப்பூரா இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனுமேனு தான் ஓடிக்கிட்டிருக்கு. என் லைஃப்ல எனக்கு எல்லாமே லேட்டா தான் அமைஞ்சிருக்கு. வேலை, வீடுனு எல்லாம் பெரிய பெரிய தடங்கலுக்கப்பறம் தான் கெடச்சிருக்கு. இப்ப நீயும்.” என்று சொல்ல, அவனை பாவமாகப் பார்த்தாள்.

திடீரென காற்றில் மிதந்து வந்த அவித்த வேர்க்கடலையின் வாசம் அவளுக்கு பேச்சை திசைதிருப்ப உதவியது.

“வேர்க்கடல சாப்டலாமா?” என்றாள்.

“இங்கயா? வேண்டாமே” கடந்து சென்றான்.

நொடியில் அவள் முகம் வாடிப்போனது.

அச்சமயம் அவர்களை நெருங்கிய பூக்காரப்பெண், “பூ வேணுமாம்மா?” என்று கேட்க, அவன் தனக்கு பூ வாங்கித் தருவான் என்று ஆவல் கொண்டாள்.

அதையும், “வேண்டாங்க” என்று எளிதாக கடந்து விட்டான்.

ஏனோ அவளின் மனம் மட்டும் அங்கேயே நின்றது.

விக்கியாவது அவள் உடையை கேலி செய்தான். ஆனால், உதய்கிருஷ்ணா அவளை சற்றும் கவனித்த மாதிரி தெரியவில்லை.

அவளே, “உங்களுக்கு கேஷுவல்ஸ் விட டி-சர்ட்ஸ் நல்லாருக்கு” என்று சொல்லியும் பதில் மரியாதை செய்யவில்லை.

நான் மட்டும் ஏன் இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறேன் என்று தன்னையே கடிந்தாள்.

அச்சமயம் அவன் பிரகாஷைப் பற்றிய பேச்சை எடுத்தான்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
“அது வந்து பிரகாஷுக்கும் என்னை மாதிரியே கிட்டத்தட்ட முடியுற மாதிரி வந்த அலைன்ஸ் ஒன்னு தட்டிப் போயிருச்சின்னு ரொம்ப வருத்தம். அதுக்கு ஒருவேள நீ குடுத்த கேரக்டர் ரிபோர்ட் தான் காரணமோன்னு எனக்கு சின்ன டவுட். அது உண்மையா உத்ரா? அவன்கிட்ட நான் நீ இன்ன வேலைப் பாக்கறன்னு இன்னும் சொல்லல.” எனவும்,

தயக்கமாகப் பார்த்தவள், “நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா சொல்றேன். அவருக்கு நான் குடுத்த கேரக்டர் ரிபோர்ட்னால‌ தான் கல்யாணம் நின்னுப் போச்சு. இதுல தப்பு எதுவும் எங்க மேல இல்ல. உங்களுக்குப் புரியுதுல்ல?” என்றதும், தன் அதிருப்தியை மறைக்க சிரமப்பட்டான்.

“அவனுக்கு கொகைன் எடுத்துக்குற பழக்கம் இருக்குன்னு லேசா சொல்லிருக்கான். அப்பப்ப ரெப்ரஷ்மெண்டுக்கு ஸ்மோக் பண்ணுவான். ட்ரிப் போறப்பல்லாம் கம்பல்சரியா டிரிங்ஸ் எடுத்துப்பான். மத்தபடி ரொம்ப நல்ல டைப். சரி நீங்களும் தான் என்ன பண்ணுவீங்க? பெரும்பாலும் இந்த மாதிரி விசயங்கள்லலாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் கெடையாது உத்ரா. ஸோ, தலையிட மாட்டேன்.

என் மச்சான் கூட மட்டும் மன்த்லி ட்வைஸ் பாருக்கு போவேன். அதுவும் அவர அளவா குடிக்க வச்சி நேரமே வீட்டுக்கு அழைச்சிட்டு வரத்தான். இல்லைனா ஃப்ரெண்ட்ஸ் கூட குடிக்கப்போய் இருபதாயிரம் முப்பதாயிரம்னு ஒரே நாள்ல செலவு பண்ணிட்டு வந்துருவாரு. உனக்கு புரியுதில்ல? நம்ம யாருக்காவது அட்வைஸ் சொல்றோம்னு கெளம்பினா அன்னையோட நம்ம ஃப்ரெண்ட்ஷிப் கட்” என்றவன் விரல்களை கத்தரியாக்கி காட்டவும், புரிந்தது போல் தலையாட்டினாள்.

“ஆமா கேக்கனும்னு நெனச்சேன். நீ எப்படி இந்த ஃபீல்டுக்குள்ள வந்த?”

“அது ஒரு பெரிய கத.”

அவன் புரியாமல் பார்க்க, அவளே விளக்கினாள்.

“என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அரேஞ்ச் மேரேஜ். கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா வீட்டுப்பக்கம் யாருக்கும் அப்பா ஒரு மொடாக்குடிகாரர்னு தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் அத பெருசா எடுத்திருக்க மாட்டாங்க தான். கல்யாணமான புதுசுல கொஞ்சம் அடங்கியிருந்தவரு அம்மா டெலிவரிக்கு ஆச்சி வீட்டுக்குப் போனதும் மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு. பலன்! வீட்டுல ஒரு பொருளையும் விட்டு வைக்கிறதில்ல. என் அம்மாவோட நிம்மதி இப்படி கொஞ்சம் கொஞ்சமா அழிய ஆரம்பிச்சி ஒருநாள் மொத்தமா போயிருச்சி. என் அம்மாவோட தாம்பத்திய வாழ்க்க வெறும் ஏழு வருசம் தான் உதய்.

அதுக்கப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டு தான் அம்மா எங்கள படிக்க வச்சாங்க. என் அக்கா நந்திதா, என் அம்மாவுக்கு கஷ்டம் வைக்காம அவளே ஓடிப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா. அவளும் அவ புருசனும் மேட் ஃபார் ஈச் அதர் கபுளா வாழ்ந்தாங்க, வெறும் ரெண்டே வருசம்!

ஒரு மனுசனுக்கு சந்தேகம் வரக்கூடாது உதய். வந்தாலும் அவ புருசன் மாதிரி பொண்டாட்டி தூங்கிட்டிருக்கும்போது அவ மூஞ்சில ஆசிட்ட ஊத்தி கொல்ற அளவுக்கு வரக்கூடாது. இதுல கொடும என்னன்னா அவந்தான் வேற ஒரு பொண்ணோட அஃப்பேர்ல இருந்தான்.‌ ஒரே ஒரு சந்தோசமான விசயம், அந்த ராட்சசன் இப்ப ஜெயில்ல கெடக்கான், ஆயுள் தண்டன கைதியா. கடவுள் புண்ணியத்துல அமிகாவோட கஸ்டடியும் எங்களுக்கே கெடச்சிருச்சி. இப்ப அந்த ராட்சசனோட அண்ணனுக்கு கொழந்த இல்லைன்னதும் அமிகா கஸ்டடிய வாங்கப் பாக்கறாங்க. அதயும் ஒரு கை பாத்திடுற முடிவுல தான் நான் இருக்கேன்.

அப்பறம் நந்திதா கேஸ்ல எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது விக்கியோட அப்பா, டிடெக்டிவ் வாசன் சார் தான். அவர் ரொம்ப ரொம்ப நல்லவர் உதய். எங்க வீட்டு பூஜ ரூம்ல அவர் போட்டோவையும் வச்சி தெனம் கும்புடுறோம். விக்கியோட அம்மாவும் ஒரு வகைல நல்லவங்க தான். ஆனா முன் கோபி. இந்த வேலைல சேர்ந்த நாள் முதலா வர்ற ஒவ்வொரு கேஸையும் நான் என் அம்மா கேஸாவும், என் அக்கா கேஸாவும் தான் பாக்குறேன் உதய். மொத்தமா இல்லாட்டியும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரோட வாழ்க்கையையாவது‌‌‌ காப்பாத்த முடியுதேனு ஒரு சின்ன திருப்தி.”

அவனுக்கு இந்த உத்ரா மிகவும் புதிதாகத் தெரிந்தாள்.

“உன் வேலைக்கு பின்னாடி இப்படியொரு காரணம் இருக்கும்னு நான் நெனச்சிக்கூட பாக்கல உத்ரா. மொதல்ல மத்தவங்க பிரைவஸில தலையிடுற இந்த வேல எதுக்குனு தான் நான் கேட்க நெனச்சேன். பட் யூ ஆர் கிரேட்!”

அவளை நினைத்து பெருமைபட்டான்.‌‌ ‌ஆனால், தன் வேலையை அவன் குறை கூறியது பிடிக்காமல், தான் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டதைக்கூட மறந்து உக்கிரமாக வாதாடினாள்.

“பிரைவஸியா? ஆமா எந்தக் காலத்துல நீங்க இருக்கீங்க உதய்? இன்ஸ்டா, ஃபேஸ்புக், வாட்ஸப், யூடியூப், டிக்டாக்னு‌ இயல்பு வாழ்க்கையெல்லாம் பொதுவெளிக்கு வந்தப்புறமுமா நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? தெனந்தெனம்‌‌ லைக், ஷேரிங்காக தங்களோட டேட்டாவ வித்துட்டு இருக்காங்க மக்கள். அதுலயும் செலப்ரிட்டியா இருந்தா பாத்ரூம் கூட விதிவிலக்கில்ல. இப்ப இருக்கற தலமொற பிரைவஸினு சொல்லிட்டு லிவிங்டூகெதர்ல பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி கூட கூத்தடிப்பாங்க. கே(gay), லெஸ்பியன்னா என்னங்கிற புரிதலே இல்லாம‌‌ தகாத உறவு வச்சிப்பாங்க. கடைசில எந்தவொரு‌ வெளிப்படைத்தன்மையும் இல்லாம தன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கறவங்கள ஏமாத்தி தானும் ஏமாந்து போவாங்க. இவங்கள இப்படியே விட்டுற சொல்றீங்களா? எந்தவொரு உறவும் உண்மத்தன்ம இல்லைனா அடிபட்டுப் போயிரும் உதய்.”

உடனே, அவளிடம் சரணடைந்தாற் போல் தன் இரு கைகளையும் உயர்த்தினான் அவன். அவள் பக்கென்று சிரித்துவிட, தனக்கு முளைத்த இன்னொரு சந்தேகத்தையும் கேட்டான்.

“உண்மையாவே விக்கிக்கு இந்த ஜாப் மேல அவ்ளோ லவ்வா உத்ரா?”

அவன் கேள்வியில் மென்று விழுங்கியவள் அவன் தன்னையே நோக்குவதை கண்டு, “லவ் தான். ஆனா ஜாப் மேல இல்ல. அவங்க அப்பா மேல.” என்று உண்மையைத் தொடர்ந்தாள்.

“அவன் ஐ.டி ஃபீல்டுல இருந்தப்ப அவனுக்கு ஒரு லவ் ஃபெயிலியர் ஆகிருக்கு. அதோட அவன் அந்தப் பக்கமே தல வச்சுப் படுக்கல. அந்த டிப்ரசன்ல எதுலயும் பிடிப்பில்லாம சுத்திட்டு இருந்தவன வாசன் சார் தான் வற்புறுத்தி தன்னோட டிடெக்டிவ் ஏஜென்சிய பாத்துக்கச் சொன்னாரு. அவனும் ப்ளட் கேன்சரோட லாஸ்ட் ஸ்டேஜ்ல இருந்த தன் அப்பாவுக்காக சும்மா ஆஃபிஸ்ல வந்து உட்கார ஆரம்பிச்சான். உண்மைய சொல்லனும்னா இப்ப வர அவன் தன் நேரத்த வெட்டியா தான் செலவழிச்சிட்டிருக்கான்.” என்று புகார் போல் சொன்னாள்.

மறுபுறம் உத்ரா பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த விக்கிக்கு நரம்புகளனைத்தும் புடைத்தன.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 13 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள பேழையில் அடுக்கவும் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
கருத்துப் பேழை
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் ‌14 சற்று சிறியது என்பதால் அதையும் இன்றே பதிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 14


மதுரையின் முக்கியமான இடங்களில் ஒன்றான தெப்பக்குளத்திற்கு வந்துவிட்டு பானிபூரி சாப்பிடவில்லை என்றால் தோஷம் உண்டாகிவிடாதா?

அமிகாவின் பிடிவாதத்தில் அவளை தூக்கிக்கொண்டு முதலில் பானிபூரி கடைக்குச் சென்றான் விக்கி. கவிலயாவும் வேறு வழியின்றி அவர்களை பின் தொடர்ந்தாள்.

பெரிய சைஸ் மலர்க்கொத்து வடிவில் அடுக்கப்பட்டிருந்த பானிபூரிகளை பார்க்கவே அவ்வளவு அழகாயிருந்தது. தொண்ணை ஒன்றில் கடைக்காரர் ஒவ்வொரு பூரியாக உடைத்து, உள்ளே மசாலா வைத்து, பானியை கோரிக்கொடுக்க, சப்புக் கொட்டிக்கொண்டே சாப்பிட்டாள் அமிகா.

அதன்பின், அருகிலிருந்த‌ கடையில் இரண்டு தட்டுவடைகளுக்கு நடுவில் துருவிய காரட், பீட்ரூட் வைத்து பச்சைநிற சட்னி தடவி, சாட் மசாலா தூவித் தர,‌ சுவைத்துச் சாப்பிட்டார்கள் மூவரும்.

அடுத்து சூடான பனங்கிழங்கு, பொடி போட்ட கீரைவடை, துவர்க்காத தென்னங்குருத்து, பருப்பு போலி, நண்டு சூப் என்று அங்கிருந்த ஸ்டால்களை‌ எல்லாம் ஒரு வலம் வந்தார்கள்.

முதலில் எதுவும் வேண்டாம் என்று முறுக்கிக்கொண்ட கவிலயா, பின் இறங்கி வந்து அனைத்தையும் சக்கைபோடு போட்டாள். உடன் அலைபேசியில் காணொளியாக பதிவும் செய்தாள். அமிகாவுக்கோ கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் விக்கியை ரொம்ப பிடித்துப்போய் விட்டது.

உணவு வேட்டைக்குப்பின் அவள் ட்ரெம்ப்லிங்கில் ஏறி குதித்துக் கொண்டிருக்க, அவளை கண்காணித்துக்கொண்டே‌ தன் மனதை அரித்த அந்தக் கேள்வியை விக்கியிடம் கேட்டாள் கவிலயா.

“விக்கி அனன்யாங்கறது யாரு?”

அமிகாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென்று உணர்ச்சியற்றுப் போனது.

“அனன்யாவா? யாரு?” என்று பதிலுக்கு கேட்டான் எதுவும் தெரியாதவன் போல.

“வீட்ல வச்சு அக்கா சொன்னாளே?” ஞாபகப்படுத்தினாள்.

அவளை என்ன சொல்லி சமாளிக்கவென்று அவன் யோசித்தபோது, “விபூ” என்று அருகில் ஒரு பெண்குரல் கேட்டது.

திரும்பியவனின் கண்களோ நிலைகுத்தி நின்ற‌ன.

ஜர்தோசி வேலைப்பாடு உள்ள கறுநீல‌ நிற டாப்ஸ், வெள்ளை‌ வண்ண பலாசோ பேண்ட் மற்றும் துப்பட்டா அணிந்து திகட்டாத‌ அழகுடன் நின்றிருந்த அனன்யா அவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் இந்தத் திடீர் பிரசன்‌னம் அவனை‌ கலவரப்படுத்தியது. அலுவலகம் என்றால் கத்தி வெளியே போ எனலாம். அத்தனை பேர் சூழ்ந்திருக்க, அங்கு என்ன செய்ய முடியும் அவளை?

அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், “நான் உங்கக்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றாள் திண்ணமாக.

“இல்ல, எனக்கு பேச விருப்பமில்ல.” மறுத்தான் விக்கி.

“ப்ளீஸ் விபூ” கெஞ்சினாள்.

“என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டியா நீ?”

“வெறும் அஞ்சே அஞ்சு நிமிஷம் தான்.”

பரிதாப‌மாக முகத்தை வைத்தாள்.

கவிலயாவோ ஒன்றும் விளங்காமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். அனன்யாவின் அபரிமிதமான அழகு வேறு அவள் கண்களை உறுத்தியது.

விக்கி வேறு வழியில்லாமல் கவிலயாவிடம், “கொஞ்ச நேரத்துல வந்திர்றேன்.” என்று, அனன்யா பின்தொடர சற்று கூட்டம் இல்லாத இடமான முக்தீஸ்வரர் கோவில் வளாகம் நோக்கிச் சென்றான்.

கவிலயாவின் நிலையோ இன்னும் மோசமானது. வந்தவள் யாரென்று தெரியாமல் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

கோவில் வளாகத்தில் சுற்றி வளைக்காமல், “என்ன?” என்று நேரே விசயத்திற்கு வந்தான்.

“என் கல்யாணம் நின்னுடுச்சி”

“அதுக்கு?”

“நான் பண்ண தப்ப மன்னிச்சு என்ன ஏத்துக்கவே மாட்டீங்களா விபூ?”

“வாய்ப்பே இல்ல.” நறுக்கு தெறித்தது அவன் பதிலில்.

“என்ன செஞ்சா நான் பழைய அனியாக முடியும்?”

“நான் மறுஜென்மம் எடுத்தா.”

முகத்திலறைந்தாற்போல் சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டான்.

கண்களில் கோர்த்த நீரை துடைத்துக்கொண்டே வெளியே தெப்பக்குள‌த்திண்டில் வந்து உட்கார்ந்தவளுக்கு கடந்த காலத்தை நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. கைக்குட்டை கொண்டு கண்களை துடைத்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

அப்போது பார்த்து ஜோடியாக நடந்து வந்த உதய்கிருஷ்ணாவும் உத்ராவும் அவள் கண்ணில் விழுந்தார்கள். அது தெரியாமல் உதய்கிருஷ்ணாவிடம் அவன் அக்காவைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள் உத்ரா.

“உங்க அக்கா, மச்சான் எப்படி உதய்?”

“ம்? ஜோவியல் தான். அக்கா கொஞ்சம் எதாயிருந்தாலும் ஒடச்சுப் பேசிருவா. அவளுக்கு மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு வெளில ஒன்னு பேசத் தெரியாது. அது சில சமயம் நம்மள சங்கடத்துலக்கூட கொண்டுபோய் விட்டுரும். ஆனா, யோசிச்சுப் பாத்தா அவ பேசினது தான் கரெக்ட்டா இருக்கும். அதான் அவ முடிவுல யாரும் தலையிடுறது இல்ல.

அப்பறம் எங்க மச்சான், அவர் மேல ரொம்ப மரியாத எனக்கு. அக்காவ விட அவர் எடுக்குற முடிவுகள்ல இன்னும் ஸ்ட்ராங்கான நம்பிக்கை உண்டு. அவர் மட்டும் அக்கா ஜுவல்ஸ எனக்கு அடகு வச்சு பணம் குடுக்கலைனா நான் இந்த‌‌ ஜென்மத்துல வீடு வாங்கியிருக்க முடியாது. அவங்க ரெண்டு பேரும் எனக்கு இன்னொரு அப்பா அம்மா மாதிரி. அப்பறம் மேகா எனக்கு பொறக்காதப் பொண்ணு” என்று உருகி நின்றான்.

அவனுக்கு எப்படி, எதற்கும் ஒரு அளவுண்டு. யார் என்ன‌ சொன்னாலும் எது நல்லது? எது கெட்டது? என்று பிரித்து பார்த்து அறிய வேண்டும்; தனக்கு வேண்டியவர் சொல்வதையே எப்போதும் வேதவாக்காக எடுக்கக்கூடாது என்று உணர்த்துவது என்றவள் யோசித்துக் கொண்டிருக்க, தெப்பக்குளத்திண்டிலிருந்து இறங்கி நின்றாள் அனன்யா.

அவளைப் பார்த்ததும் இணையர் இருவரும் திகைத்து நின்றனர். ஒரு கணம் தான். மறுகணமே, உத்ராவின் கையைப் பற்றிக்கொண்டு வேகமாக அவளை கடந்து சென்றான் உதய்கிருஷ்ணா. அனன்யாவின் வாயிலோ ஈ போகாத குறை.​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom