Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 20


அனன்யா அவளைப் பார்த்ததும் வீட்டுக்குள் அழைத்து உட்காரச் சொன்னாள்.

உத்ரா, “உங்க பெரியப்பா எங்க? நான் அவர தான் பாக்கனும்” என்றாள் மிடுக்காக.

“ப்ளீஸ் உட்காருங்க. பெரியப்பா வர்ற நேரம் தான்.”

வற்புறுத்தவும் வீராப்பாகவே சென்று உட்கார்ந்தவளை அனன்யா தீனமான குரலில் விசாரித்தாள்.

“ஆமா என்ன விசயமா நீங்க எங்க பெரியப்பாவ பாக்க வந்திருக்கீங்க?”

அவளின் அப்பாவி போன்ற நடிப்பில் வெகுண்டெழுந்தாள் உத்ரா.

“ச்சே! எப்படில்லாம் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற நீ? உன் பெரியப்பா எங்க டிடெக்டிவ் ஏஜென்சி மேல கேஸ் போட்டது உனக்குத் தெரியாது? இந்த விசயத்த நியூஸ் பேப்பர் வரைக்கும் கொண்டுபோய் எங்க‌ ஏஜென்சி ரெப்யூடேசன கெடுத்தது உனக்கு தெரியாது? அதுவும் பத்தாம ஆளனுப்பி எங்க ஆஃபிஸையே‌ அடிச்சு சுக்கு நூறாக்கியிருக்காரு உன் பெரிய்ய்ய்ய்ய அப்பா. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போற நீ?”

உத்ராவின் குற்றச்சாட்டில் திருதிருவென விழித்தாள் அனன்யா.

“உன் பெரியப்பா இவ்ளோ பண்ணும்போதும் தப்பு எங்க மேல இல்ல, உம்மேல தான்னு சொல்லத் தோணலைல உனக்கு? சரியான அழுத்தக்காரி தான் நீ. நாங்கூட உன் அழகப் பாத்து ஏமாந்து போயிட்டேன், ஹைலோ எஃபக்ட் பத்தி படிச்சும்.

என்ன பாக்குற? இப்பவும் இத விக்கி சொல்லல. நானா தான் கண்டுபிடிச்சேன். உனக்காக இவ்ளோ பண்ற விக்கி உன் பெரியப்பா கிட்டப் பேசி உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா மட்டும் செத்தாலும் நடக்காதுங்கறான். அப்படின்னா என்ன அர்த்தம்? அவன் கேரக்டர் ரிபோர்ட்ட மாத்திக் குடுக்க வேண்டிய அவசியம் இல்லைனு அர்த்தம். அவன் அத மாத்தலைனா யார் மாத்தியிருப்பா? அவன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்ற நீ‌ தான் மாத்தியிருப்ப. நான் சொல்றது சரியா?” என்று கேட்கவும், கன்னங்கள் கண்ணீரில் நனைய‌ அசையாமல் நின்றிருந்தாள் அனன்யா.

உத்ரா அவளை விடுவதாய் இல்லை.

“உனக்கும் விக்கிக்கும் அப்படி என்ன தான் மனஸ்தாபம்?” என்று குடைந்தாள்.

வேறுவழியின்றி தனது கடந்து காலத்தை கட்டவிழ்த்தாள் அனன்யா.

***********

அவள் விக்கியை சந்தித்த அந்த முதல் நாள் காலை பரபரப்பாக இருந்தது.

“அம்மா லஞ்ச் பேக் பண்ணிட்டீங்களா?” என்றாள் தலையை துவட்டியபடியே.

“ம், பண்ணியாச்சு குட்டிமா.”

பதிலளித்தபடியே அவளறைக்குள் நுழைந்தவர்‌ ஒப்பனை மேசையின் இழுப்பறையைத் திறந்து மயிர் உலர்த்துவானை எடுத்தார்.

அவள் கையிலிருந்த துண்டை வாங்கி நாற்காலியின் மேல் போட்டவர் செடிக்கு பூவாளியால் தண்ணீர் பீய்ச்சுவது போல் முடிக்கற்றைகளுக்கிடையில் வெப்பக்காற்றை பீய்ச்சினார்.

அவரிடையை கட்டிக்கொண்டு கிளம்ப மனமில்லாமல் கிடந்தவளை, “ம்! சீக்கிரம் குட்டிமா! இப்படியா பாத்டவல கட்டிட்டு நிப்ப? லைலக் கலர் சுடி அயர்ன் பண்ணி வச்சிருக்கேன் பாரு. போய் சீக்கிரம் போடு!” என்று அதட்டினார்.

தன் பிடியை தளர்த்தாமல்‌ சோம்பலாக, “வேலைக்குப் போகவே பிடிக்கலம்மா” என்றாள்.

“சரி தான், முதல் நாளே இப்படி சொன்னா எப்படி?”

“புதுசு புதுசா ஆளுங்க இருப்பாங்கம்மா. வேல கத்துக்கற வர எல்லார்கிட்டயும் பேசி தான ஆகனும்?”

“சென்னை, பெங்களூர்னு பெரிய பெரிய ஊர்கள்ல இருக்குற சாஃப்ட்வேர் கம்பெனிஸ்க்கு அப்ளை பண்ணச் சொன்னா, படிப்பு முடிஞ்சதும் ஒரு வருசம் வீட்லயே‌‌ டேரா போட்டுட்ட. உங்கள விட்டு போக மாட்டேம்மானும் ஒரே அடம். சரி மதுரைலயே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிய சூஸ் பண்ணுனு சொன்னதுக்கு‌ம் வேண்டாவெறுப்பா இன்டெர்வீவ் அட்டென்ட் பண்ணிட்டு வந்த.

இப்ப கடவுள் புண்ணியமா அடுத்த‌ தெருவுல உனக்கு வேல கெடச்சிருக்கு. இதுக்கும் இப்படி அலுத்துக்கிட்டா எப்படிடா குட்டிமா? ஸ்டார்ட்டிங்ல அப்படி தான்டா இருக்கும். போகப்போக எல்லாம் பழகிரும். என் தங்கம்ல? அம்மா போய் பிரேக்ஃபஸ்ட் எடுத்து வைக்கிறேன். நீ நல்லப் புள்ளையா ட்ரெஸ் மாத்திட்டு வா.”

தன் வலுவைக் கொடுத்து தூக்கி நிற்க வைத்தவரை அவள் கட்டிப்பிடித்து விடுவிக்க, சிட்டாய் சமையலறைக்குப் பறந்தார். புடவையை இடையில் செருகியபடி ஓடுபவரை ஆதுரமாகப் பார்த்தாள் அனன்யா.

பின்னே மகளுக்கான ஒவ்வொரு வேலையையும் சுணங்காமல் செய்பவர் அல்லவா அவர்! திருமணமான மூன்று வருடங்களிலேயே கணவர் சாலை விபத்தொன்றில் இறந்துபோக, தன் வாழ்க்கைக்கான பிடிப்பாய் தனது இரண்டு வயது மகளைப் பற்றிக்கொண்டார். பெற்றோர் இருவரும் தன் சகோதரனுடன் அமெரிக்காவில் தங்கிவிட, அவர்கள் அழைத்தும் அங்கு செல்ல மனமின்றி கைம்பெண் இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளியில் கிடைத்த ஆசிரியப்பணியை ஏற்றுக்கொண்டார்.

பள்ளியில் பிள்ளைகளிடம் கறார் கங்கா என்று பெயர் பெற்றிருந்தாலும் தன் மகளிடம் மட்டும் கனிவு கங்கா. அவளன்றி ஓரணுவும் அசையாது அவரிடம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ஒரு கட்டத்தில் அவள் மீதான அன்பை அவள் மீது அவர் செலுத்தும் ஆதிக்கம் வென்றுவிடும் போலிருந்தது.

அவள் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பழக வேண்டும் என்று அனைத்தையும் அவரே தீர்மானிப்பவராகிப் போனார்.

ஒட்டுண்ணியாக இருக்கும் அனன்யாவிற்கும் அது ஒரு வகையில் உபகாரமாகவே இருந்தது. அவள் தனது உற்றத்தோழியாக தனது அன்னையையே கருதினாள். அன்றாடம் தன் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள். தனக்காகவே வாழும் தன் அன்னையின் மனம் புண்படாமல் பார்த்துக்கொள்வதும் அவள் குறிக்கோள்களில் ஒன்று.

அன்றையநாள் தனக்காக தன் அன்னை தேர்வு செய்திருக்கும் உடையை அணிந்துகொண்டு அவள் வரவேற்பறைக்கு வந்தபோது, சொன்னபடி தட்டில் மூன்று இட்லிகளை போட்டு சட்னியோடு பிசைந்து கொண்டிருந்தார் கங்கா.

மகள் சாப்பாட்டு மேசை வந்ததும் அலைபேசியில் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கிவிட, ஒவ்வொரு உருண்டையாக அவள் வாயில் ஊட்டிவிட்டார். அவரை பொறுத்தவரை அவள் இன்னும் அந்த இரண்டு வயது குழந்தையே. மகள் கடைசி வாய் வேண்டாமென்று அடம்பிடிக்க, வம்படியாய் அவள் வாய்க்குள் திணித்தார்.

ஒரு வழியாய் தாயின்‌‌ சீராட்டலுடன் அவரின் ஸ்கூட்டியிலேயே நிறுவனத்தை அடைந்தவளுக்கு அந்த பத்துமாடி கண்ணாடி கட்டிடத்தைக் கண்டதும் வயிற்றுக்குள் பயப்பந்து சுழன்றது. ஏனெனில், அதன் பிரம்மாண்டம் அப்படி!

அவள் வரவேற்பில் நின்றிருந்த பெண்ணிடம் தனது அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை காண்பிக்க,‌ சிறிது நேரத்திலேயே டை கட்டிய ஆண்மகன் ஒருவன் வந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

செல்லும் போது, “ஹாய்! நான்‌ தான் உங்க டீம் லீட் அஸ்வின். கால் மீ ஆஷ். ஜிஎம் நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு ஒன் வீக் முன்னாடியே சொல்லியிருந்தாங்க. உங்க ரெஸ்யூம் கோத்ரூ பண்ணேன். நீங்க பி.இ கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் தானே முடிச்சிருக்கீங்க? ஓவர் படிப்பாளி. நீங்க என்கிட்ட தான் டெயிலி மார்னிங் ரிபோர்ட் பண்ண வேண்டியிருக்கும். நீங்க இன்னைக்கு எதுல வந்தீங்க?” என்றவன் பேசிக்கொண்டேப் போக,

சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தவள் அவன் பார்வை தன் மேல் விழவும், “அம்மாவோட ஸ்கூட்டில” என்றாள் தனக்கே கேட்காத வண்ணம்.

வாயசைவில் புரிந்து கொண்டவன், “ஓ! வாக்கிங் டிஸ்டன்ஸ் தான் இல்ல? மறந்துட்டேன்.” என்றதை‌ கவனிக்காதது போல் மௌனம் சாதித்தாள்.

அதற்கு மேல் அவனும் வளவளக்கவில்லை.

“ஃபர்ஸ்ட் நம்ம விக்கியப் பாத்துரலாம்.” என்று சொல்லிக்கொண்டே அவன் அறை ஒன்றினுள் நுழைந்தான்.

‘யாரந்த‌ விக்கி?’ என யோசித்தவள் அது தங்கள் முதலாளி தான் என்றறிந்தபோது திடுக்கிட்டாள்.​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
கதவை தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்களை‌ கண்டதும், “வாங்க ஆஷ், வாங்க அனி” என்று சம்பிரதாயமாய் வரவேற்றான் விக்கி.

மேசையின் மீதிருந்த பெயர்ப்பலகையில் ‘வி.விக்கிரமப் பூபதி, சிஇஓ ஆஃப் விக்டரி டெக் சொலூஷன்ஸ்’ என்றிருக்க, மனதிற்குள் வாசித்தவள், “குட்மார்னிங் சார்” என்று சல்யூட் அடித்தாள்.

அதில் தனது புருவங்களை உயர்த்தியவன், “இந்த சார் மோரெல்லாம் இங்க வேணாம். கால் மீ விக்கி. ஆஷ் சொல்லியிருப்பாரே அவர் தான் உங்க டீம் லீட்னு? இனி உங்க ரெஸ்பான்சிபிலிட்டீஸ் பத்தியும் சொல்லுவாரு. க்ளியரா கேட்டுக்கங்க அண்ட் முடிஞ்சளவு நம்ம கம்பெனிக்கு உங்க பெஸ்ட்ட குடுங்க. குட் லக் ஆன் யுவர் ஃபர்ஸ்ட் டே!” என்று வாழ்த்தினான்.

அவ்வறையில் விக்கிக்கு எதிரிலமர்ந்து நடந்ததனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் அவள் வெளியேறியதும், “சரியான பட்டிக்காடா இருக்கால்ல?” என்றான் கேலியாக.

விக்கி‌ அதனை மறுத்து, “புதுசுல்ல ரொம்ப கூச்சப்படுறா. எல்லார்கூடயும் பழகிட்டா சரியாகிருவா” என்றான் அவளின் குணமறியாமல்.

அன்று மாலை அனன்யா தன் அன்னையிடம் அலுவலகமும், சகஊழியர்களும் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று சொல்ல, எதற்கும் அனைவரிடமும் சற்று கவனமாகவே பழகும்படி அறிவுறுத்தினார் தாய்.

அதற்கு காரணமில்லாமலும் இல்லை. நாற்பத்தியெட்டு வயதாகும் தன்னிடமே தினமொரு முறை தன் மேலுள்ள காதலை ஏதாவதொரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டு தானே இருக்கிறார் ஐம்பத்தியேழு வயதாகும் தலைமையாசிரியர் தணிகாச்சலம். அப்படியிருக்க காதல் மொட்டவிழும் பருவத்திலிருக்கும் தன் மகளை மட்டும் இந்த ஆண் சமூகம் விட்டுவைக்குமா என்ற பரிதவிப்பு தான்.

அனன்யாவின் அதிருஷ்டம் முதலிரண்டு‌ வாரங்களில் எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை. மூன்றாம் வாரம் தான் ஆரம்பித்தது சிக்கல்.

முக்கியமான கலந்துரையாடல் நடக்கும் நாளன்று அவளின் டீம் லீட் அஸ்வின் ஃப்ளூ காய்ச்சலால் விடுமுறை எடுத்திருக்க, அவன் அனுப்பிய பிபிடியை அவளையே அனைவரின் முன்பும் விளக்கச் சொன்னான் விக்கி. அவள் ஆங்கில வழியில் கல்வி பயின்றவள் என்பதால் மற்றவர்களும் ஆர்வமாய் பார்த்தனர்.

வெள்ளைத்திரையின் அருகில் சென்றவள் குளிரிலும் வியர்த்தாள். அனைவரின் பார்வையும் தன் மேல் விழுந்ததில் பதற்றப்பட்டாள்.

“ம்! கமான் அனி”

அவ்வளவு‌ தான் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்.

அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் தெளித்த நீரில் கண்களை திறந்தவளை வறுத்தெடுத்துவிட்டான்‌ விக்கி. பெருத்த அவமானமாகியது அவளுக்கு.

அன்று மாலை வீட்டிற்கு வந்ததும் தன் அன்னையிடம் நடந்ததனைத்தையும் சொல்லி கண்ணீரால் அவர் மடியை நனைத்தாள்.

அவளின் தலைமுடியை கோதிவிட்டவர், “சரியான முசுடா இருப்பான் போலயே உன் பாஸு? இன்னும் ஒரு மாசம் உன்னால அங்க தாக்குப் பிடிக்க முடியுதா பாரு. இல்லன்னா‌ வேலைய நம்ம ரிசைன் பண்ணிடலாம் குட்டிமா.”
என்று தன் ஆறுதல் வார்த்தைகளால் தேற்றினார்.

ஏனோ அவளின் மனம் சமாதானம் அடைய மறுத்தது. ஏற்கனவே அங்கு வாரமிருமுறை ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ், கம்யூனிகேசன்‌ ஸ்கில் டெவலப்பிங் கிளாஸ், பாடி லாங்குவேஜ் டெவலப்பிங்‌‌ கிளாஸ் என்று தொடர்ந்து நடக்குமென்றாலும் அவன் திட்டியதில் ரோசப்பட்டு‌‌ தனியாக பணம் கட்டி தினம் இரவு எட்டு மணிக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டாள். சவால் போல் இரண்டு மாத காலத்தில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு அதே செமினார்‌ அறையில்‌ அவள் பேசியபோது அனைவரின் வாயிலும் ஈ போகாத குறை தான்.

அன்றைக்கு எந்தளவிற்கு அவளை கழுவி ஊற்றினானோ அதற்கு இரு மடங்காகப் பாராட்டினான் விக்கி. அவளை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் செயல்பட வேண்டும் என்று புகழ்பாட, வானத்தில் பறந்தாள் அனன்யா.

ஆனால், அடுத்து வந்த ஒரு வாடிக்கையாளர் கலந்துரையாடலில் மீண்டும் அவன் திட்டும்படி நடந்துகொண்டாள்.

அனைவரும் அவளின் கண்டிப்பால் அனன்யா என்றே அழைத்து‌ வர, விக்கி மட்டும் அவளை ‘அனி அனி’ என்று ஏலம் போட்டது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

அந்த முக்கிய நிகழ்வின்போது அவன் தன்னை அனி என்று விளித்து விளக்கம் கேட்க, “டோன்ட் கால் மீ அனி சார். கால் மீ அனன்யா” என்று சிடுசிடுத்துவிட்டாள்.

அப்போதைக்கு எதுவும் கூறாமல் அழுத்தமாக ஒரு பார்வை மட்டுமே பார்த்தவன், கலந்துரையாடல் முடிந்து திரை அணைந்ததும் அவளை உண்டுயில்லை என்றாக்கிவிட்டான்.

“வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் இடியட்? ம்? ஆஃபிஸ்லயும் யார் கூடயும் ஜெல்லாக மாட்டிக்கிற? அப்படி கூப்பிடாதீங்க, இங்க வர‌ச் சொல்லாதீங்க, அதுல சேரச் சொல்லாதீங்கன்னு ஓவரா ரூல்ஸ் போடுற. இங்க நீ பாஸா? இல்ல நானா? எனக்கு உன் பேர அனன்யா வெங்கடாச்சலம்னு நீளமா கூப்பிட‌ வராதுனு நெனைக்கிறியா?

நம்ம கிளையண்ட்ஸ் ஒன்னும் செல்லூர்ல இல்ல. ஸ்விஸ்ல இருக்கான்.‌ உன்ன அனன்யானு கூப்பிடச் சொன்னா அன்னியாரேன்னு கூப்பிடுவான். மீட்டிங்ஹால்ல உக்காந்து எல்லாரும் சிரிக்க வேண்டியது தான். கொஞ்சமாவது காமன் சென்ஸோட நடந்துக்கோங்க மிஸ் அனன்யா‌ வெங்கடாச்சலம்” என்றவன்‌ கடைசியாக அவள் பெயரை இழுத்துச் சொல்ல, பேயறைந்தது போல் நின்றாள்.

அவளை காப்பாற்றவென்றே சரியாக அலைபேசியில் அவனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.

“யூ கேன் கோ நவ்!” என்றவன் மற்றவர்களையும் சைகையால் வெளியேறச் சொன்னான்.

நடைபிணமாக வெளியேறினாள்.

சிறிது நேரத்திலேயே அவளிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டதற்காக வருத்தப்பட்டவன் மாலையில் அஸ்வினை அழைத்து அவளைப் பற்றி விசாரித்தான். அவன் அவள் தலைவலியென்று அனுமதி கேட்டு முன்பே வீட்டிற்கு சென்றுவிட்டதாகச் சொல்ல, மனம் கனத்தது.

வீட்டிலோ முடிந்தளவு விக்கியைத் திட்டித் தீர்த்த கங்கா, “வேலைய விட்டு நின்னுடுறியா குட்டிமா?” என்றார்.

மறுப்பாக தலையசைத்தவள், “போனவாரம் தானம்மா பெரியப்பா நான் இந்த வேலைல ஒரு மாசம் கூட தாக்குப் பிடிக்க மாட்டேன்னு நெனச்சதா சொன்னாரு? அவர் கணக்கு பொய்யானதுக்குக் கூட பெருமப்பட்டாரு. இப்பப்போய் நான் வேலைய விட்டா நல்லாருக்காதும்மா” என்றாள் சோகமாக.

அவருக்கும் அவள் சொல்வது சரி என்றுபட்டதும் அவள் போக்கில்விட்டார். ஆனால், தான் இதுவரை பார்த்திராத விக்கியின் மீது மட்டும் தீரா வஞ்சம் கொண்டார்.


கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஃபிளாஸ்பேக் இன்றிலிருந்து ஆரம்பம் ப்ரெண்ட்ஸ்🙂 கங்காவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ப்ரெண்ட்ஸ்?
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் இருபது பற்றிய உங்கள் விமர்சனங்களை இந்நாவலுக்கான கருத்துத்திரியில் தெரிவிக்கவும்.

ஆயிரம் நிலவே வா!
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 21


கங்காவின் தன் மீதான மனத்தாங்கலை அறியாமல் அனன்யாவிடம் மன்னிப்பு கேட்கும் வழியை யோசித்தபடி இருந்தான் விக்கி.

அதற்கு இயேசு கிறிஸ்துவே உதவியது விந்தை. அலுவலகத்தில்
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாய் குலுக்குச்சீட்டு தட்டி ‘சீக்ரெட் சான்டா’ விளையாட திட்டம் தயாராக, மகேஷிடம் தான் அனன்யாவிற்கு சீக்ரெட் சான்டாவாகும் வாய்ப்பை வேண்டினான்.

காரணம் புரிந்த மகேஷ் அவன் விரும்பியபடியே அந்த வாய்ப்பை அமைத்துத் தந்தான்.

யூபிஎஸ்-இல் பொறுத்தப்படும் செக் சாஃப்ட்வேரின் மூலம் ஒருவர் கணினியில் எந்தெந்த தளத்திற்குச் செல்கிறார், அவர் தேடும் தலைப்புகள் யாவையென்று அனைத்தையும் கண்காணிக்க முடியுமென்பதால், எளிதாக அவளின் சமீபத்திய தேடல் எதுவென்று கண்டறிந்து அவளுக்கான பரிசைத் தயாரித்தான் விக்கி.

அனன்யாவோ அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் யாரிடமும் கேட்கக்கூட தயங்கி அவனுக்காக பரிசு பொருள் வாங்க தன் அன்னையை அழைத்துக்கொண்டு பல்பொருள் அங்காடிக்குச் சென்றாள்.

அவள் யாரோ ஒருவனுக்காக‌ அதுவும் அவளை கடிந்துகொண்ட ஒருவனுக்காக யோசித்து யோசித்து பரிசு தேடுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை கங்காவுக்கு.

“சும்மா இந்த காஃபிகப் வாங்கிட்டுப் போய் குடும்மா” என்று சொல்ல, அதை சரியான யோசனையென்று நம்பி இருநூறு ரூபாய் பீங்கா‌ன் கோப்பையை அவனுக்கு பரிசளித்தாள்.

ஆனால், விக்கி அவளுக்காக கறுப்பு கிரிஸ்டலில் செய்த டைட்டன் ராகா வாட்ச் ஒன்றும், அவள் வெகுநாள் தேடி வாங்காமல் விட்ட வெர்சாசே பெர்ஃப்யூம் பாட்டீல்‌ ஒன்றும் பரிசளித்தான். அவளுக்கு அது ஆச்சரியமாகவும், அதே சமயம் குற்றவுணர்வாகவும் இருந்தது.

வீட்டிற்கு வந்து தன் அன்னையிடம் ஆதங்கப்பட்டாள். அவர் அதற்கு அலட்டிக்கொள்ளவில்லை.

“அவன் எதுக்கு உனக்கு இந்த மாதிரி காஸ்ட்லி கிஃப்ட்டெல்லாம் தரனும்? உனக்குப் பிடிச்சதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்னா ஆள் வச்சி உன்ன கண்காணிக்கிறானா? அவன் கேரக்டர் எப்படி குட்டிமா? பொண்ணுங்கக்கிட்ட எப்படி பழகுறான்? எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு.” என்று அறிவுறுத்தினார்.

அவன் பார்வையில் இதுவரை ஒரு கல்மிஷமும் அறிந்திராத அனன்யா தனது அன்னையின் பயம் வீண் என்றே கருதினாள். ஆனால், தன் அன்னையின் ஆலோசனைக்கு மாறாய் சிந்திப்பதுக்கூட அவளுக்கு அநியாயமாகத் தான் பட்டது.

ஒரு விடுமுறை நாளில் அவள் தன் அன்னையுடன் கோவிலுக்குச் செல்லவிருந்த சமயத்தில் அந்த வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக்கொள்ளும்போது‌ அதன் மிருதுவான நறுமணத்தில் சொக்கி நின்றாள்.

அந்நேரம் பார்த்து அவளின் அறைக்குள் வந்த கங்கா அவளின் கையிலிருந்த பாட்டீலைப் பார்த்ததும் காற்றில் பரவிய விஷமாக அதைக் கருதி, “அய்யோ! என்ன ஸ்மெல் குட்டிமா இது? எனக்கு தலவலியே வந்துரும் போலயிருக்கு” என்று தலையைப் பிடித்துக் கொண்டார்.

பதறி அவள் அருகில் வர, “அந்த பெர்ஃப்யூம் பாட்டீல குப்பைல போடு மொதல்ல.” என்று சொன்னதும், அவரின் ஒவ்வாமையை உண்மையென்று நம்பி யோசிக்காமல் அதை குப்பைத்தொட்டிக்குள் வீசினாள்.

அதற்கு மறுநாள் அவளின் கைக்கடிகாரத்தின் டயல் சுக்கு நூறாக நொறுங்கியிருந்தது. கேட்டதற்கு கை தவறி விழுந்து விட்டதாகப் பொய் சொன்னார்.‌‌

இவ்வாறு கங்கா விக்கியை விரோதியாக நினைக்க, வில்லன் வேலையைச் செய்ததோ வேறொருவன். ஷ்யாம்! அனன்யாவின் புதிய‌ டீம் லீட்.

அனன்யாவுடன் பேசிய முதல் நாளிலிருந்தே அவளை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்தவன் அவள் வீட்டில் ஆண் துணை இல்லையென்பதை கண்டுகொண்டதும், இரட்டை அர்த்த வார்த்தைகளை பிரயோகிக்கத் தொடங்கினான்.

எங்கே இதனை தனது அன்னையிடம் சொன்னால் அவர் அடுத்த கணமே தன்னை வேலையை விட்டு நின்றுவிட சொல்லும் அபாயமிருப்பதால் பல்லைக் கடித்து பொறுத்தாள்.

அவளின் டீம்மேட் ப்ரீத்தி ஒருமுறை, “இந்த ஷ்யாம் பார்வையே சரியில்லைல?” என்றதும், தனக்கு அவன் கொடுக்கும் தொந்தரவுகளையெல்லாம் பட்டியலிட்டாள்.

கேட்டதும் உடனே அதை விக்கியிடம் தெரிவிக்குமாறு கூறினாள் ப்ரீத்தி.

அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அங்கு வேலை பார்ப்பவன் ஷ்யாம். அவன் பிளேட்டை திருப்பி தன்னை குற்றவாளியாக்கிவிடுவானோ என்கிற பயம், விஷயம் பரவி தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்கிற முன்னெச்சரிக்கை என எல்லாம் சேர்ந்து அவளை எதுவும் செய்யவிடாமல் முடக்கிப்போட்டன.

ஆனால், நாளுக்கு நாள் ஷ்யாமின் அத்துமீறல் அதிகமாகியது. இரவு பத்து மணிக்கு மேல் வாட்சப்பில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தை அனுப்பி அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று சோதிப்பது, காலையில் அதையே பேசுபொருளாக்கி அவளிடம் கடலை வறுப்பது, அவள் அனுப்பும் மின்னஞ்சலில் திருத்தம் சொல்வது போல் பக்கத்தில் வந்து விசைப்பலகைக்கு பதில் அவள் விரல்களை தொடுவது போன்ற சில்லறைத்தனங்களை செய்து கொண்டிருந்தான்.

அவனிடம் அவள் மாட்டிக்கொண்டு அல்லாடுவதைப் பார்த்து தானே அவளுக்கு உதவும் விதமாய் விக்கியிடம் சென்று விசயத்தைக் கூறினாள் ப்ரீத்தி.

விக்கி உடனே அனன்யாவை தனதறைக்கு வர உத்தரவிட்டான்.

என்னவோ ஏதோவென்று பதறி அவள் வந்தபோது அங்கிருந்த மகேஷ் பொறுமையாக இவ்விசயத்தை கையாளும்படி கெஞ்சிக் கொண்டிருந்தான். நிறுவனம் ஆரம்பித்த புதிதில் அவனின் பரிந்துரையில் தான் ஷ்யாமை வேலைக்கு எடுத்திருந்தான் விக்கி.

அரண்டுபோய் நின்றவளிடம், “ப்ரீத்தி என்ன உனக்கு பி.ஏவா? நீயா வந்து உனக்கு இன்ன பிரச்சனனு சொன்னா நான் உன்ன கடிச்சி வச்சிருவேனா? உன்கிட்ட சொல்லி சொல்லி நான் டயர்டாகிட்டேன். உன் பிரச்சனைய நீதான் பேஸ் பண்ணனும் அனி. எப்பவும் அடுத்தவங்களே உனக்கு ஊட்டி விடனும், ட்ரெஸ் மாத்தி விடனும்னு நெனைக்கக்கூடாது. ஆமா உண்மையாவே ஷ்யாம் உனக்கு தொந்தரவு குடுக்கறாரா? இல்ல உன் தனிப்பட்ட வெஞ்சன்ஸ்ல அப்படி சொல்றியா?” என்றதும், அவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது.

“நீங்க இப்படியெல்லாம் சந்தேகப்படுவீங்கனு தெரிஞ்சு தான் நான் உங்கக்கிட்ட சொல்ல பயந்தேன்.” என்றாள்.

“ஹே! இரு இரு. நீ சொன்னதும் கண்ண மூடிட்டு எந்த முடிவுக்கும் வந்திர முடியாதுல்ல? அந்த ஆளு குடும்பஸ்தன் வேற. இந்த விசயம் வெளிய கசிஞ்சாலும், நான் விசாரிக்காம நடவடிக்கை எடுத்துட்டேன்னு நாலு பேர் சொல்லிரக் கூடாதுல்ல? அதான் கேக்குறேன்” எனவும், சற்று சமாதானமடைந்தவளாய் ப்ரீத்தியிடம் கூறியதை அவனிடமும் கூறினாள்.

நன்கு யோசித்த விக்கி, “ஷ்யாமுக்கு கடைசியா ஒரு வாய்ப்பு குடுக்கலாம்னு இருக்கேன். இது‌ மொத தடவனால இந்த மொற வார்னிங் மட்டும். கண்ண உருட்டாத. உன்ன வேற டீமுக்கு மாத்தி விட்டுடுறேன்” என்றதும், நன்றியுணர்வோடு பார்த்தாள்.

அவனறையிலிருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக ப்ரீத்திக்கு நன்றி கூறினாள். நண்பர்கள் இல்லா வாழ்வு பூ இல்லா தொட்டிச்செடி போன்றது என்பதை பரிபூரணமாக உணர்ந்தாள்.

ஷ்யாம் அவளிடம் வந்து மன்னிப்பு கேட்கவில்லையானாலும் அவளிருக்கும் பக்கமே திரும்பவில்லை. அவளுக்கு அதுவே திருப்தியாயிருந்தது.

அவனின் கெட்டநேரம் இந்த விசயம் வெளியே கசிந்து அவனைப் பற்றி மேலும் இரண்டு பெண்கள் புகார் தெரிவித்தனர். மகேஷ் கெஞ்சியதையும் மீறி ஷ்யாமை வேலையை விட்டு நீக்கினான் விக்கி. அதில் மகேஷின் கோபம் அதிகமானது.

முதலில் தன்னை பங்குதாரர் போல் பாவித்த விக்கி தற்போது காரியம் முடிந்ததும் பணியாளனாக நடத்துவதாக உணர்ந்தான். ஆனாலும், அதை அவன்‌ சட்டையைப் பிடித்து கேட்கமுடியாத அளவிற்கு அவனின் வாழ்நாள் லட்சியம் தடைபோட்டது.

அன்றைய நாளிற்கு பின் தன் நட்பு வட்டத்தினை பெருக்கிக்கொண்ட அனன்யா, அவள் காஃபி‌ மிஷின் பக்கம் செல்லும்போது யாராவது ஒரு கப் கேட்டால் கொண்டு வந்து‌‌ கொடுக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தாள்.

அவளின் இந்த மனவிசாலத்தை விக்கி எப்போது அறிந்து கொண்டான் என்றால் பொங்கல் கொண்டாட்டத்தின் போது தான்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அக்கொண்டாட்டத்திற்கு அனைவரும் பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட, தன் அன்னையிடம் கெஞ்சிக் கூத்தாடினாள்.

கங்காவுக்கு அவளின் இந்த சேலை அனத்தல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சேலை எவ்வளவு சிறுபெண்ணையும் பெரியமனுஷியாக அல்லவா ஆக்கிவிடும்! அந்த பயம் அவருக்கு. ஆனால், இறுதியில் மகளின் பிடிவாதமே வென்றது.

வெண்முத்துக்களால் பின்னப்பட்ட ரவிக்கை, வெள்ளி‌யிழைப் புள்ளிகள் கொண்ட பேபி பிங்க் புடவை‌ என்று அசத்தலாக வந்தவளின் அழகை இன்னும் மெருகூட்டியது அவளின் வழக்கமான குட்டி டைமண்ட் டாலர் செயின். தலையில் மட்டும் எப்போதும் போல் நேர்வகிடெடுத்து பத்து‌ பின்னல். இந்த அலங்காரத்திற்கு ஒரு சரம் மல்லிகைப்பூ வைத்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால், சாமிப்படங்களுக்குத் தவிர்த்து வேறதற்கும் அவர்கள் வீட்டில் பூ வாங்கும் பழக்கமில்லை.

தான் பூ வைப்பது தன் அன்னையை காயப்படுத்திவிடுமோ என்று தானும் பூ வைக்க விரும்பியதில்லை அனன்யா. ஏன் கையில் கலகலவென்று கண்ணாடி வளையல்கள் அணிய, ஜல்ஜல்லென்று கொலுசுகள் அணிய என்று ஒவ்வொன்றிற்கும்‌ சங்கடப்பட்டாள்.

சிறுவயது முதலே தனக்காக அவள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து துறப்பதைக் கண்டு பெருமிதப்பட்டார் கங்கா. ஆனால், காலம் எப்போதும் ஒரேயிடத்தில் நிற்பதில்லையே.

கங்கா என்ன தான் படித்தப் பெண்ணாக இருந்தாலும் இன்னும் சில பிற்போக்குத் தனங்களிலிருந்து வெளிவரவில்லை. ஒரு கைம்பெண் வெள்ளை நிற புடவையை தான் உடுத்த வேண்டும் என்ற கணக்கில் எப்போதும் சாயம் போன நிறத்திலான புடவையையே தேர்ந்தெடுப்பார். கழுத்திற்கு சங்கிலி, முகத்திற்கு பவுடர், நெற்றிக்கு பொட்டு, கைக்கு வளையல் என்று எதுவும் கிடையாது. நீண்ட கூந்தலை‌க் கூட பின்னியதோடு விட்டுவிடுவார். இளம் வயதிலேயே கணவனை இழந்ததால் பிறரது கண்ணிற்கு உறுத்தாத வண்ணம் வாழப் பழகிக்கொண்டார்.

ஆனால், மகளுக்காக அவர் தேர்வு செய்யும் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கதாக இருக்கும். இன்றும் அப்படி தான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே அவளைப் பார்த்து பார்த்து அலங்கரித்தார்.

அனன்யா அலுவலகம் வந்தபோது அவர்களின் வரிசையை வண்ணத்தாள் தோரணம் கொண்டு அலங்கரித்த ப்ரீத்தி, “உனக்கு இந்த சேரி நல்லாயிருக்குயா. எங்க வாங்கின?” என்று கேட்க,

“அய்யோ! இது அம்மா எடுத்ததுப்பா. எங்க வாங்கினாங்கன்னு தெரியாது.” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“உங்க அம்மா செலக்சன் சூப்பர்.” என்றவள் மூன்று விரல்களை காண்பிக்க,

“எனக்குனு அம்மா செலக்ட் பண்ற‌ எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கும்.” என்று முகம் பூரிக்கச் சொன்னாள்.

அப்போது தான் அவளின் பின்னால் வந்து நின்றான் விக்கி.

அவனைப் பார்த்ததும் ப்ரீத்தி, “குட்மார்னிங் விக்கி” என்க,

சட்டென்று திரும்பி தானும், “குட்மார்னிங் சார்” என்றாள்.

அவனை வேஷ்டி சட்டையில் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை அவளுக்கு. முதலாளியாக இருந்தாலும் இங்கு வேலைபார்க்கும் ஊழியர்களில் ஒருவனாகவே தன்னை முன்னிலைப்படுத்தும் விக்கியின் தன்னடக்கம் வெகுவாக கவர்ந்தது அவளை.

அவனோ அவளின் அழகில் மொத்தமாக வீழ்ந்தான். மலைச்சிட்டானின்‌ றெக்கையை வெட்டி ஒட்டியது போல் இரண்டு கருத்த இமைகள், வெள்ளைச் சிப்பிக்குள் கருப்பு முத்துபோல் அழகிய கண்மணிகள், லிப் டேட்டூ செய்தது போன்ற சிவந்த இதழ்கள், கடிக்கத் தூண்டும் மக்ரூன் மூக்கு, மாராப்பிற்குள் சுவாசத்திற்கு போராடும் பூச்செண்டுகள், இடையில் தெரியும் மென்மையான மாவிளக்கு.. எது தான் கவரவில்லை அவனை.

“உனக்குன்னு உங்கம்மா செலக்ட் பண்ற‌ எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கும்னா உனக்குன்னு ஒரு டேஸ்ட்டே கெடையாதா?” என்றான் தீவிரமாக.

அவனின் கேள்வியில் பேந்த பேந்த விழித்தவளை மகேஷ் வந்து காப்பாற்றினான்.

அவன், “அர்ஜென்டா மெயில் ஒன்னு அனுப்பனும்னு சொல்லிட்டு இங்க என்னடா பண்ற? ஓ! இதான் அழகுல மெய் மறந்து நிக்கிறதா?” என்று கிண்டல் செய்ததும்,

“ஆமா இவங்க என் அழகுல மெய் மறந்து வழிய மறச்சிட்டு நின்னாங்க. அதான் தள்ளி நில்லுங்கனு சொல்லிட்டு இருந்தேன். இல்ல அனி?” என்று அவளிடமே கேட்க,

“இல்ல, ஆமா” என்று உளறிக் கொட்டினாள்.

நண்பர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர, பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவளிடம். ஏனோ கன்னங்களிரண்டும் சூடாகியது போல் பிரம்மை.

அதன்பின் மற்றவர்களுடன் சேர்ந்து அவள் செய்த சமத்துவப் பொங்கலையும் சாப்பிட்ட விக்கி கண்களால் அவளை மெச்சினான்.

ஏனோ அவன் தனக்கு வழங்கும் ஒவ்வொரு அறிவுரைகளையும், பாராட்டுதல்களையும் தன் அன்னையிடம் ஒருமுறைக்கு மும்முறையாய் சொல்லி மகிழ்ந்தாள். அப்போது மகள் முகத்தில் ஒருபிடி அதிகமாய் டாலடித்த பிரகாசத்தைக் கண்டு பயப்பட ஆரம்பித்தார் கங்கா.

அது புரிந்து அவளும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள். ஆனால், அவனைப் பற்றிய விசயங்களை தன் அன்னையிடம் சொல்லாமல் விடுவதும்கூட குற்றவுணர்வைத் தந்தது.

அவள் வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்கள் ஓடிய நிலையில் ஒருநாள் தனக்கு உடம்பு சரியில்லையென்று பொய் சொல்லி தன் அன்னையுடன் விடாமுயற்சி படத்திற்குச் சென்றிருந்தாள்.

அவள் நேரம் விக்கியும் மகேஷும் அதே திரையரங்கிற்கு வந்திருந்தார்கள். இடைவேளையின் போது பாப்கார்ன் வாங்கும் இடத்தில் தான் அவளை கவனித்தான். ஆனால், அவள் கவனிக்கவில்லை.

மீண்டும் படம் ஆரம்பித்ததும் அவள் உட்கார்ந்திருக்கும் இடத்தையே உற்று பார்த்தான். முதல் நாள் காட்சி என்பதால் திரையரங்கில் சரியான கூட்டம். ஆனால், அவள் பக்கத்திலும் சரி, அவளின் அன்னையின் பக்கத்திலும் சரி, யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. அவற்றையும் அவர்கள் தான் முன்பதிவு செய்திருந்தார்கள். அது கங்காவின் முன்னெச்சரிக்கைகளில் ஒன்று.

இடைவேளைக்குப் பிறகு விக்கி படத்தைவிட்டு அவளையே அடிக்கடி பார்ப்பது கண்டு தெள்ளத்தெளிவாகியது மகேஷிற்கு, நண்பன் காதல்வலையில் விழுந்துவிட்டான் என்று.

மறுநாள் அவள் வேலை விசயமாக தன்னறைக்கு வந்தபோது, “விடாமுயற்சி படம் நல்லாயிருந்ததா?” என்றவன் கேட்க, அசடு வழிந்தாள்.

“உங்கம்மாவப் பாத்தேன். தூங்கி வழிஞ்சிட்டு இருந்தாங்க”

“ஆமா சார், அம்மாவுக்கு இந்த மாதிரி படம்லாம் புடிக்காது. நாந்தான் வற்புறுத்தி கூட்டிட்டு வந்தேன்.”

“வேலை‌யெல்லாம் செட்டாகிருச்சா? தடுக்கி விழுந்தா தாங்கிப் பிடிக்க ஃப்ரெண்ட்ஸெல்லாம் கெடச்சிட்டாங்க போல?” எனவும்,

அவன் கேலியில் வெட்கப்பட்டவள், “வேலையெல்லாம் ஓகே தான் சார். பட் ஃப்ரெண்ட்ஸ்… கான்ஃபிடன்ட்டா சொல்ல முடியல. மேனுஃபாக்சரிங் டிஃபக்ட்.” என்று இலகுவாகி சிரித்தாள்.

“சரி தான்” என தானும் இணைந்து சிரித்தவன் திடீரென, “என் பேரு விக்கி” என்றான்.

அவள் புரியாமல் விழித்தாள், “தெரியுமே” என.

“அப்பறம் ஏன் என் பேர் உன் வாய்க்குள்ள இருந்து வர அடம்புடிக்குது?”

அவன் சொல்ல வருவது புரிந்து தயங்கினாள்.

“கால் மீ விக்கி. ப்ளீஸ் ஒன் டைம்”

மாட்டேன் என்று குனிந்தபடியே தலையாட்டினாள்.

“ஏன்?” என்றவன் ஆர்வமாக வினவ,

“என் அம்மாவுக்கு அவங்க மருமகன நான் பேர் சொல்லி கூப்பிடுறது புடிக்காது” என்று அவன் மேல் தனக்கு ஏற்பட்டுள்ள காதலை வெட்கத்தைவிட்டு சொல்லிவிட்டாள்.

சாதாரணமாக எந்தவொரு பெண்ணிற்கும் இருக்கும் தயக்கத்தை உடைத்து அவளே தன் காதலை வெளிப்படுத்தியது விக்கிக்கு கனவுபோல் இருந்தது.

இருப்பினும், “எனக்கு என் பொண்டாட்டி என்ன பேர் சொல்லித்தான் கூப்டனும்” என்று பிடிவாதம் செய்தான்.

வேறு வழியின்றி மீண்டும் தன் வெட்கத்தை வாடகைக்கு விட்டு அவனை, “விபூ” என்றழைத்ததோடு சிட்டாகப் பறந்தாள்.

“அட! விக்கிரமப் பூபதி விக்கியாகி விபூவாகிட்டேனா?” வாய்விட்டு சிரித்தான்.

தன்னால் சிரிக்கும் நண்பனை கண்ணாடிக் கதவின் வழியே பார்த்த மகேஷ் பொறாமையுடன், “உன் கெட்டநேரம் நெருங்கிருச்சி விக்கி” என்று நகத்தைக் கடித்தான்.

அது உண்மையோ என்னவோ அன்று தான் விக்கியின் வீட்டில் அவனுக்கு பெரிய அதிர்ச்சியொன்று காத்திருந்தது.


கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 22


அனன்யா விக்கியிடம் எவ்வாறு தன் காதலை வெளிப்படுத்தினாள் என்பதை கேட்டுக் கொண்டிருந்த உத்ரா, திடீரென அவ்வீட்டிற்குள் நந்தகோபன் நுழைவதைப் பார்த்ததும் அனன்யாவை சுதாரிக்கச் செய்தாள்.

உள்ளே வந்தவர், “அனும்மா பெரியப்பாக்கு கொஞ்சம் அந்த கெட்டில்ல சுடுதண்ணி போட்டு எடுத்துட்டு வாம்மா. இந்த‌ மாத்தரைய போடனும்” என்றபோது உத்ரா அவரைப்‌ பார்த்து வழிசலாக புன்னகைத்தாள்.

“ஆமா நீ‌ எதுக்கும்மா இங்க நிக்கிற? உங்கள கோர்ட்டுல தான நான் பாக்கறதா‌ சொன்னேன்?” என்று புரிந்தும் புரியாதது போல் நடித்தார்.

“சார் எங்களுக்கு கோர்ட்டுக்கு அலையல்லாம் நேரமில்ல. உங்களுக்கு என்ன வேணும்னு நேரடியா என்கிட்டயே சொல்லிருங்க. இந்த விசயத்த இங்கயே பேசி முடிச்சிரலாம்.” என்று தீர்மானமாகச் சொன்னாள்.

“ம், இப்ப தான் புத்திசாலித்தனமா யோசிச்சிருக்கீங்க. இத முன்னாடியே செஞ்சிருந்தா நான் நியூஸ்பேப்பர்காரனுக்கு விசயத்த கசிய விட்டிருக்க மாட்டேன்ல? எனக்கு பெருசா ஒன்னும் ஆசை இல்லம்மா. ஒரு அஞ்சு லட்சம் நஷ்ட ஈடா கொடுத்தீங்கன்னா போதும். இந்த விசயத்த இப்படியே விட்டுடுறேன்.” என்றார் கைத்தேர்ந்த வியாபாரியாய்.

நிதானமாக யோசித்து பெருமூச்சு விட்ட உத்ரா, “நியூஸ் பேப்பர் வர விசயம் லீக்காகி எங்க ஏஜென்சி பேரே நாறிப்போய் கெடக்கு சார். பத்தாததுக்கு ஆள் வச்சு வேற ஆஃபிஸ அடிச்சு நொறுக்கியிருக்கீங்க. போலீஸ்ல உங்களப் பத்தி ஒரு வார்த்த விடாம இங்க வந்து நிக்குறேன். நீங்க என்னன்னா பகுமானம் பண்றீங்க. என்ன சார் நியாயம் இது?” என்று ஆற்றாமையாகக் கேட்டதும், அவர் பதட்டமானார்.

“என்ன உங்க ஆஃபிஸ நான் அடிச்சி நொறுக்குனேனா? நீ என்னம்மா எல்லா கணக்கையும் எம்பேர்ல எழுதுற?” என்று அந்த பாதகத்தை தான் செய்யவில்லை என்றார்.

பிறகு யார் செய்திருப்பார்கள் என்று யோசித்தவள், “அப்படினாலும் அஞ்சு லட்சம் ஜாஸ்தி சார். நியூஸ் பேப்பர் விசயத்துல நாங்க ரொம்ப பாதிக்கப்பட்டுட்டோம். ஸோ, ஒரு லட்சத்துல முடிச்சிக்கலாம்.” என்றாள் விடாப்பிடியாக.

“ம்மா ஒரு லட்சம்லாம் ரொம்பக் கம்மிம்மா” என்றவர் பாவமாய் சொல்ல,

“சரி உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். ஒன்ற லட்சத்துல முடிச்சிக்கலாம். ஃபைனல்! நாளைக்கே நியூஸ் பேப்பர்காரனுக்கு இந்தப் பணத்த குடுத்து பெரிய காலமா ஒதுக்கச் சொல்லுங்க. அதுல நீங்க சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி மேல சுமத்துனது எல்லாமே பொய் குற்றச்சாட்டுனும், எங்க மேல உங்களுக்குள்ள தனிப்பட்ட பகையினால தான் அப்படி அவதூறு பரப்புனீங்கன்னும் மனதார மன்னிப்பு கேட்டுருங்க. இன்னைக்கு நைட் பாதி அமௌண்ட் உங்க அக்கவுண்டுக்கு வந்துரும். மீதி நீங்க வழக்க வாபஸ் வாங்கின பின்னாடி செட்டில் பண்ணிடுறோம்.” எனவும்,

வாயெல்லாம் பல்லாக, “டீ, காபி எதுவும் குடிக்கிறியாம்மா?” என்றார்.

“வேண்டாம் சார்” என்றவள் வெறுப்பாக வாய்க்குள் எதையோ முனகிக்கொண்டே அவ்விடம் விட்டு கிளம்பினாள்.

அவள் வெளியே வந்து தன் ஸ்கூட்டியை நிமிர்த்தியபோது, “எங்க பெரியப்பாக்கிட்ட என்ன மாட்டிவிடாததுக்கு தாங்க்ஸ்” என்றாள் அனன்யா.

அவளை திரும்பியும் பாராமல் ஹெல்மட் மாட்டுவதிலேயே குறியாய் இருந்த உத்ரா, “நீ தான்க்ஸ் சொல்ல வேண்டியது எனக்கில்ல, விக்கிக்கு. அவன் எவ்வளவு தான் உன்ன வெறுக்கறதா சொன்னாலும், எந்த எடத்துலயும் நீ பண்ணின தப்ப வெளிக்காட்டிக்கவே இல்ல. அப்படினா அவன் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல நீ இன்னும் இருக்கன்னு தான அர்த்தம்? இவ்வளவு நாள் பொறுத்துட்டு இப்ப நான் வெகுண்டேன்னா, விக்கி வாழ்க்கையும் உன் வாழ்க்கையும் ஒன்னா ஒட்டாமலே போயிரும்.” என்றவள் வறண்ட குரலில் சொல்ல,

“ரொம்ப தான்க்ஸ் உத்ரா. ரொம்ப ரொம்ப தான்க்ஸ்” என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தாள் அனன்யா.

அவளின் முகத்தை திரும்பிப் பார்த்த உத்ராவுக்கு‌ இரவு‌ விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தில் வெள்ளிக்கம்பிகள் முளைத்திருப்பதாய் தோன்ற, முகத்தில் கனிவை கொண்டு வந்தவளாய் ஸ்கூட்டியை இயக்கினாள்.

தற்போது நந்தகோபன் வீட்டில் நடந்ததனைத்தையும் விக்கியிடம் சொல்லிய உத்ரா அவன் முகத்தையே குற்றம்சாட்டும் பாவனையில் பார்த்தாள். அவர்கள் கதை தனக்கு தெரியுமென்ற மிடுக்கும் கலந்திருந்தது அதில்.

“சொல்லுடா அவ பண்ணின தப்ப எதுக்கு நீ பண்ணினதா சொன்ன? அவ பழிய நீ ஏத்துக்கிட்டு என்ன முட்டாளாக்கி இருக்கல்ல? உனக்கும் அவளுக்கும் நடந்த ரகளைல கடைசியா பாதிக்கப்பட்டது நானும், உதயும் தான்டா. இதுக்கு நீ என்னடா பதில் சொல்லப்போற? அந்த அனன்யா மேல எனக்கு லவ்வே‌ கெடையாது. அவள நான் முழுசா வெறுக்குறேனு ரீல் சுத்தப்போறியா?” என்று அவனின் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கினாள்.

“அவளும் நானும் சேரனுங்கற இன்டென்சன் தான் தெரியுது உன் கேள்வியில? உனக்கு இப்ப நான் என்ன சொன்னாலும் மண்டைல‌ ஏறாது.” என்றவாறே அவளின் கைகளை எடுத்துவிட்டான் விக்கி.

“இப்ப நான் உன் வைஃப். என்கிட்ட நீ வெளக்கித்தான் ஆகனும்”

நீ‌ பைத்தியம் போல் புலம்பிக்கொண்டிரு‌ என அவளை மதியாமல் கதவை திறந்து வெளியேறினான்.

கவின் வேலைக்குச் சென்று வீடு திரும்பியவன் சோர்வாக தன் சாக்ஸுகளை கழற்றிக் கொண்டிருந்தான். அருகில் பானுமதி சுவாரசியமாக நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

விக்கி நேரே சோபாவில் சென்று உட்கார, அவன்புறம் திரும்பிய பானுமதி, “எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சா மாப்பிள? நான் போன்ல கேட்டப்ப உத்ரா கவலப்படுற மாதிரி ஒன்னுமில்ல. சின்ன பிரச்சன தான் சமாளிச்சிடலாம்னு சொன்னா. உண்மையாவே பெருசா‌ எந்த பிரச்சனையும் இல்லைல?” என்று கவலையாகக் கேட்கவும்,

தன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த உத்ராவின் தலையிலடித்து, “சத்தியமா இல்ல” என்று சிரித்தான்.

வேகமாக அவனை நெருங்கிய கவின், “நீங்க எங்கிட்ட கூட சொல்லாம மறச்சிட்டீங்கல்ல?” என்றான்.​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom