Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update தொடுக்காத பூச்சரமே கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
Hi friends,
அனைவரும் சித்திரை திரு நாள் நல் வாழ்த்துக்கள்..இன்றிலிருந்து
தொடுக்காத பூச்சரமே ! தினமும் ஒரு யூடி வரும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
Hi friends, அனைவரும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள் 💐 இன்றைய நன்நாளில் தொடுக்காத பூச்சரமே! கதை ரீரன் செய்துள்ளேன்.முதல் அத்தியாயம் பதிந்துள்ளேன்..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...

தொடுக்காத பூச்சரமே!



அத்தியாயம் 1



உயிர் வரை ஊடுருவிச் செல்லும் மார்கழி மாதக் குளிரில், தன் போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தன் நித்திரையை தொடர்ந்தாள் நிறையாழி.

தாய் செந்தழையோ, சமையலறையிலிருந்து, “நிறை காலேஜ்க்கு நேரமாகுது எழுந்துருடீ.. அடுத்த வீட்டுக்குப் போகப் போற பொண்ணுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? எல்லாம் உன் அப்பா கொடுக்கும் செல்லம்..” என்று புலம்பிக் கொண்டிருந்த மனைவியிடம் மெதுவாக வந்து நின்றார் ஆடலரசு.

“செந்தி அவள் சரியான நேரத்திற்கு கிளம்பிக் கொள்வாள், நீ ஏன் காலையிலேயே இப்படி டென்ஷனாகிறாய். அவளை குறை கூறுவதே உன் வேலை.." என்று மனைவியைக் கடிந்து கொண்டவரிடம்,

"ஆமாம் அவளை ஏதாவது சொன்னால் உங்களுக்கு பொறுக்காதே! பெரியவளையும் பாருங்க.. மார்கழி மாசம் தொடங்கியதிலிருந்து நேரமாக எழுந்து அழகாக கோலம் போட்டு, குளித்து கோயிலுக்கும் போய்ட்டு வந்துட்டாள். இவளானால் இன்னும் படுக்கையை விட்டே எழவில்லை.." என்று குற்றப் பத்திரிக்கை வாசித்த மனைவியிடம்,

"செந்தி அவரவருக்கென்று தேவை வரும் போது, நல்லபடியாக நடந்து கொள்வார்கள். விடு.." என்ற கணவனை என்ன சொல்வதென்று தெரியாமல்..

"அப்பாவும், பொண்ணும் என்னமோ செய்யுங்க.. கடைசியில் என் தலை தான் உருளும். பெண்ணை வளர்த்து வச்சிருக்கும் லட்சணத்தைப் பார்ன்னு... எல்லாம் என் தலையெழுத்து.." என்று நொந்து கொண்டு பேசிய மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் அமைதியாக நின்றார்.

ஆடலரசு, செந்தழை தம்பதிகளுக்கு இரு மகள்கள். பெரியவள் பனிநிலவு.. இளையவள் நிறையாழி..

ஆடலரசு மாவட்ட தலைமை நூலகத்தில் நூலகராக பணியாற்றுகிறார்.. வரும் வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்பவர். தாங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர அவருக்கு பெரிதாக சொத்து பத்தென்று ஒன்றும் இல்லை.

ஆனால், தன் பெண்களை தன்னால் முடிந்தளவு நன்றாக படிக்க வைத்திருந்தார். பனிநிலவு எம்.எஸி ஜுவாலஜி முடித்திருந்தாள். நிறையாழி எம்.ஏ.தமிழ் லிட்ரேச்சர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

ஆடலரசுக்கு பணி ஓய்வு பெற இன்னும் சில வருடங்களே இருந்தது. தான் பணி ஓய்வு பெறும் முன் பனிநிலவுக்காவது திருமணத்தை முடித்து விட வேண்டுமென நினைத்தவர், பெரியவளுக்கு தீவிரமாக வரன் பார்க்க தொடங்கினார்.

ஆடலரசு எதிர்பார்த்தது போலவே ஒரு நல்ல வரன் அமைந்திருந்தது. மாப்பிள்ளை சேத்தன் ஒரு வெட்னரி டாக்டர். ஒரே பையன். தோற்றத்திலும் குறை சொல்லும்படி எதுவும் இல்லை.

பொருளாதார ரீதியாக அவர்கள் இவர்களை விட சற்று அதிகம் தான்.. ஆனாலும் அவர்கள் குடும்பத்துக்கு இவர்களை மிகவும் பிடித்து விட்டது.

அதுமட்டுமின்றி பனிநிலவுக்கும், சேத்தனுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட்டதால், இரு குடும்பமும் முழுமனதுடன் திருமணத்தை விரைவாக வைத்துக் கொள்ள முடிவு செய்து அந்த மாத கடைசியிலேயே ஒரு நல்ல முகூர்த்த நாளை முடிவு செய்தார்கள்.

இன்னும் பத்து நாளில் திருமணம். திருமண வேலைகள் அவருக்கு தலைக்கு மேல் இருந்தது.

ஆனால், ஆடலரசை ஒரு வேலையும் செய்யவிடாமல், அவரின் தங்கை மகன் உதியனம்பி, அத்தனை வேலைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்.

உதியனம்பி ஆடலரசின் தங்கை தாழ்குழலியின் ஒரே மகன். பத்தாவது வரை தான் படித்து இருக்கிறான். சின்னதாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறான்.

உதியனம்பியின் தந்தை செங்குன்றன். நம்பியின் சிறுவயதிலேயே ஒரு விபத்தில் இறந்துவிட்டார். தாய் தாழ்குழலியும் அதிகம் படிக்கவில்லை.

ஆடலரசு தான், தன் குடும்பத்துடன், தன் தங்கை குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார்.

தாழ்குழலியோ அண்ணன் தந்து உதவினாலும், அண்ணனை அதிகம் தொந்தரவு செய்யாமல் தனக்கு தெரிந்த தையல் தொழிலைக் கொண்டு அக்கம், பக்கம் துணி தைத்துக் கொடுத்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார்.

உதியனம்பி நன்றாக படிக்கும் பையன் தான். ஆனால் தாயின் நிலை புரிந்து, தன் படிப்பை விட்டுவிட்டு பத்தாவது முடித்தவுடன் இருசக்கர பழுதுபார்க்கும் கடைக்கு வேலைக்குச் சென்றான்.

இரண்டு வருடம் கண்ணும், கருத்துமாக தொழிலைக் கற்றுக் கொண்டு, தனக்கென சிறியதாக ஒரு கடையை ஆரம்பித்து தன்னைப் போலவே கஷ்டத்திலிருந்த சங்குமணியை உதவிக்கு வைத்துக் கொண்டு, கடையை சிறப்பாக நடத்தி வருகிறான்.

உதியனம்பி தன் மாமா ஆடலரசு தன்னை படிக்கவைப்பதாக வற்புறுத்தியும் கேட்காமல் படிப்பை பாதியிலேயே விட்டான்.

தாழ்குழலி தான் அதற்கு முக்கிய காரணம். அவருக்கு இருதயம் பலவீனமாக இருக்கிறதென்று தெரிந்த பின்னர், தான் படிக்க வேண்டுமென்ற ஆசையை கைவிட்டான்.

தாழ்குழலிக்கு வைத்தியத்திற்கே நிறைய செலவானது. மேலும்.. மேலும், தன் மாமாவை தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்தான்.

தாயையும் துணி தைப்பதை விடுத்து ஓய்வெடுக்க வைத்தான்.

ஆடலரசு, உதியனம்பி எத்தனை மறுத்தாலும் தன்னால் முடிந்த உதவியை தன் தங்கை குடும்பத்துக்கு இன்று வரை செய்து கொண்டு தான் இருந்தார்.

தன் மகள்களை நன்றாக படிக்க வைத்துவிட்டோம், ஆனால் தன் மருமகனை படிக்க வைக்க முடியவில்லையே! என்ற வருத்தம் அவர் மனதை நெருஞ்சி முள்ளாக இப்போதும் குத்திக் கொண்டே தான் இருக்கிறது.

ஆடலரசுக்கு தன் முகம் பார்த்தே! தன் கஷ்டங்களைப் புரிந்து நடக்கும் தன் தங்கை மகன் உதியனம்பி என்றால் உயிர்.

அதுவும் யாருக்குமே வரவே கூடாத கஷ்டத்தில், நிலைகுழைந்து தான் திக்கு தெரியாமல் தவித்த போது கடவுளாக! அவன் தான் யாருமே செய்ய தயங்கும் உதவியை செய்ய துணிந்தான்.

அவர் வேண்டாமென்று எத்தனையோ சொல்லியும், அம்மாவும், மகனும் பிடிவாதமாக தன்னையும், மனைவி செந்தழையையும் சம்மதிக்கவும் வைத்தார்கள்.

உதியனம்பிக்கும் மாமாவென்றால் உயிர். அவருக்காக எதுவும் செய்வான். தன் சிறுவயதிலேயே தந்தையை இழந்து நின்றவனுக்கு தந்தையாக, தோழனாக அவர் தான் இன்று வரை அவனை அணைத்துக் கொண்டார்.

மாமா மட்டுமின்றி சிறுவயதிலிருந்தே அவரின் செல்ல மகள் நிறையாழிதான் அவனின் உலகம். ஆனால், அவளோ! இவனை சிறிதும் மதிக்க மாட்டாள்.

உதியனம்பி படிக்கவில்லை என்பதும், அவனின் தொழிலுமே அவள் மனதில் இவனை இளக்காரமாக நினைக்க வைத்தது.

என்னதான் அத்தை மகனை மதிக்காவிட்டாலும், தன் அத்தை தாழ்குழலி மீது நிறையாழி உயிராக இருந்தாள்.

சிறுவயதிலிருந்தே தன் குறும்புத்தனத்தை ரசிப்பதும், தன் தாயின் கோவத்திலிருந்து தன்னை எப்போதும் காப்பதும் அத்தை என்பதாலோ! இல்லை தன் மீது எல்லையில்லா அன்பை பொழிவதாலோ! அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமோ! எதுவென்று அவளுக்கே தெரியாது?

ஆனால், அத்தை மகனை வெறுத்தாலும், அத்தை மீது அன்பாக இருந்தாள்.

தன் தந்தை சொன்னது போல், நிறையாழி சரியான நேரத்திற்கு தயாராகி வந்து நின்றவள், தன் தாயிடம், "செந்தி டார்லிங் எதற்கு காலையிலேயே சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தாய்..?" என்றாள்.

செந்தழையோ, மகளின் வார்த்தையில் கோபத்துடன், செய்து கொண்டிருந்த வேலையை விட்டு, மகள் புறம் திரும்பியவர், மகளின் குறும்புப் பார்வையிலும், கள்ளம் கபடமற்ற சிரிப்பிலும் தன்னை மறந்து நின்றார்.

மகளோ சிலையாக நின்ற தாயிடம், "அம்மா பசிக்குது, டிபன் ரெடியா?" என்றாள்.

மகளின் பசிக்குது என்ற வார்த்தையில் நடப்புக்கு வந்தவர், தட்டில் இட்லியையும் சாம்பாரையும் ஊற்றிக் கொடுத்தார்.

நிறையோ தாயிடம் தட்டை வாங்கிக் கொண்டே‌, "உன் இட்லிக்கும், சாம்பாருக்கும் நான் அடிமை.. இப்போது தான் புரிகிறது. அப்பா ஏன்? செந்தி.. செந்தின்னு உன் பின்னே சுற்றுகிறாருன்னு.." என்று கூறிக் கொண்டே, சமையல் மேடை மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்த படி உண்ணத் தொடங்கினாள்.

செந்தழையோ, "ஏண்டி டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுன்னு எத்தனை முறை சொன்னாலும், உன் மண்டையில் ஏறுதா? வாய்யை மட்டும் கேளு ஒரு ஊருக்கு நீளும்‌.." என்று மகளை கடிந்துக் கொண்டே தான் பாதியில் விட்ட வேலையைத் தொடர்ந்தார்.

நிறையோ தாய் கடிந்ததை பொருட்படுத்தாமல் இட்லியை வாயில் திணித்துக் கொண்டே, "செந்தி இங்கே உட்கார்ந்து சாப்பிட்டால் தான்.. உன்னை சைட் அடித்துட்டே சாப்பிட முடியும்.." என்று தன்னை முறைத்த தாயைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள்.

மகளின் செயலில் எப்போதும் போல் மயங்கிய செந்தழை "போக்ரி உன்னை திருத்த முடியுமா?" என்றார்.

அப்போது சமையலறைக்குள், தாயுடன் தங்கை வாயாடுவதைப் பார்த்து ரசித்தபடியே நுழைந்த பனிநிலவு, "ஏம்மா காலையிலேயே அவளிடம் வாக்குவாதம்! அவள் எப்போதும் அப்படித்தானே விடுங்கள்.." என்றவுடன்.

"வாங்க கல்யாணப் பெண்ணே! எல்லாம் உன்னால் தான்.. உன்னை யாரு நேரமா எழுந்து கோவிலுக்குப் போகச் சொன்னது.. கல்யாணப் பெண்ணா லட்சணமா கனவில் மாம்ஸ்சோட டூயட் பாடுவதை விட்டு என்னை திட்டு வாங்க வைப்பதே உன் வேலை.." என்ற தங்கையை செல்லமாக முறைத்தாள் பனிநிலவு.

செந்தழையோ, "நிறை அவளாவது பெண்பிள்ளையா! லட்சணமா இருக்கா.. அவளைப் பார்த்து கத்துக்கோன்னு சொன்னா.. நீ அவளை குறை சொல்கிறாயா?" என்ற தாயிடம்..

"எப்போதும் என்னையே குறை சொல்லுங்கள்.. கடவுளே பேசாமல் நீ என்னை செவிடா படைத்திருக்கலாம்.. இந்த பேச்சை எல்லாம் கேட்காமலே இருந்திருப்பேன்.." என்ற மகளை வெட்டவா? குத்தவா என்று பார்த்து வைத்தார் செந்தழை.

பனிநிலவோ தங்கையின் குறும்பு பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிய படி தாய்க்கு உதவியாக காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது "அத்தை.." என்று ஹாலிலிருந்து சத்தம் கேட்கவும்,

"செந்தி போ.. போ.. நம்பியார் வந்தாச்சு போல.. உன் காபியை குடிக்காமல் அவனால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.." என்றவளிடம்..

செந்தழை கோபமாக.. "நிறை நீ என்ன அட்டகாசம் செய்தாலும், நான் பொறுத்து கொள்வேன், ஆனால் நம்பியை ஏதாவது சொன்னால் பல்லை தட்டிவிடுவேன், ஞாபகம் வைச்சுக்கோ.. அந்த பையன் மட்டும் இல்லையென்றால் உன் அப்பா தான் திண்டாடுவார்.. பனியின் திருமண வேலை அத்தனையும் ஒத்தை ஆளாக அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கான்.." என்ற தாயை முறைத்துக் கொண்டே..

"ஆமாம், அது தான் புருசனும், பொண்டாட்டியும் அவனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்களே.." என்றவுடன்,

"நிறை என் கோபத்தை அதிகப்படுத்தாமல், வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டு விட்டு காலேஜ்க்கு போகும் வழியைப் பார்.." என்றார்.

நிறையோ, "வாயை மூடிக் கொண்டு எப்படி சாப்பிடுவதாம்.." என்றவுடன்,

"அத்தை எனக்கும் அதே சந்தேகம் தான்! வாயை மூடிக் கொண்டு எப்படி சாப்பிடுவது, பேசாமல் நீங்களே ஊட்டிவிட்டால் அவள் சாப்பிட மட்டும் வாயைத் திறப்பாள். வேறு பிரச்சனையே வராது. நீங்களும் அடிக்கடி டென்ஷன் ஆக வேண்டாம்..” என்று கூறிக் கொண்டே, சமையலறைக்குள் வந்த உதியனம்பி கண்குளிர நிறையாழி சமையல் மேடையில் அமர்ந்திருக்கும் அழகை ரசித்தான்.

அவளோ, அவனை கண்களாலேயே பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள்.

செந்தழையோ, "வாப்பா நம்பி.." என்று வரவேற்றவர், "அவள் உருப்படியாக செய்யும் வேலை அது ஒன்று தான்! நான் ஊட்டிவிட்டால் அப்புறம் அதையும் செய்ய மாட்டாள்." என்றவுடன்,

நிறையாழிக்கு அவன் முன் தன்னை செந்தழை பேசியது மேலும் கோபத்தை தூண்டவும், வேகமாக தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை அப்படியே பட்டென்று வைத்து விட்டு, சமையல் மேடையிலிருந்து கீழே குதித்தவள், "எனக்கு டிபனே வேண்டாம் போங்க.." என்று கையை கழுவிக் கொண்டு கோபமாக சமையலறையை விட்டு நகர்ந்தாள்.

உதியனம்பியோ, அவள் செல்வதை கை நீட்டி தடுத்த படியே, "நிறை நமக்கு என்ன கோபமிருந்தாலும் அதை சாப்பாட்டு மேலே காட்டக் கூடாது. இந்த உணவு கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?" என்றான்.

நிறையாழியோ, "எனக்கு தெரிந்தவரை போதும், நீங்கள் வந்த வேலையை பாருங்க.. என் விசயத்தில் தலையிடாதீங்க.." என்றவுடன்,

செந்தழையோ, "நிறை உனக்கு மரியாதையாக பேசத் தெரியாதா? அவர் சொன்னதில் என்ன தப்பு.. ஒழுங்கா தம்பியிடம் மன்னிப்புக் கேள்.." என்று கோபமாக கத்தினார்.

உதியனம்பியோ, "அத்தை நீங்க ஏன் இவ்வளவு கோபப்படறீங்க, அவள் என்னிடம் தானே இப்படி பேச முடியும். விடுங்கள்.." என்றான்.

அவளோ, அவனுக்கு மட்டும் கேட்கும் படி, "படித்திருந்தால் தானே மேனர்ஸ் தெரியும், பட்டிக்காடு.." என்று முனங்கிக் கொண்டே சென்றாள்.

அவளின் வார்த்தைகள் அவனைக் கூறு போட்டது.. கண்களில் வலியுடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
தொடரும்..
அடுத்த யூடி நாளை..தினமும் யூடி உண்டு மக்களே..தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 2



உதியனம்பி ஒரு நிமிடம் நிறையின் வார்த்தையால் வலியை உணர்ந்தாலும், அடுத்த நொடி சரியாகி விட்டான். அவளின் கோபம் கூட அவனுக்கு பிடித்தமான ஒன்று தான்.



நிறையாழியோ, அவனை மனதிற்குள் வசைப்பாடிக் கொண்டே, கல்லூரிக்குத் தயாராகி வேகமாக பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றாள்.



நிறை சென்ற பின் உதியனம்பியோ, அமைதியாக அமர்ந்து செந்தழை தந்த காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது பனிநிலவு அவன் அருகில் மெதுவாக வந்து நின்றவள்..



"நம்பி, நிறை லஞ்சு பாக்ஸ்சை எடுக்காமல் போய்விட்டாள்.. இன்னும் பஸ் ஏறியிருக்க மாட்டாள்.. நீங்க கொஞ்சம் கொடுக்க முடியுமா?.." என்று கேட்டவளிடம்..



"கொடுங்க நான் கொடுத்து விடுகிறேன்.." என்று குடித்துக் கொண்டிருந்த காபி டம்ளரை, பாதி காபியுடன் செந்தழையிடம் கொடுத்து விட்டு, டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு வேகமாக நகர்ந்தவனைப் பார்த்த பனிநிலவு, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.



பனிநிலவுக்கு எப்போதும் உதியனம்பியை பிடிக்கும்.. தங்கள் குடும்பத்து மேல் அவன் வைத்திருக்கும் பாசம் அவளை பிரமிக்கச் செய்யும்.



தங்கை அவனை என்ன பேசினாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவன் நடந்து கொள்வது அவளை வியக்கச்செய்தது. அதுவே அவளுக்கு அவன் மீது அன்பையும் வளர்த்தது.

செந்தழையோ, பாதி காபியைக் குடிக்காமல் தன்னிடம் டம்ளரை தந்து விட்டு ஓடும் உதியனம்பியை, "நம்பி மீதி காபியைக் குடித்து விட்டுப் போப்பா. பஸ் வர இன்னும் நேரமிருக்கிறது.. அப்படியே பஸ் போனாலும், ஒரு நாள் பட்டினி கிடந்தால் தான், அவளுக்கு பொறுப்பு வரும்.." என்றவரிடம்..



"அத்தை காலையிலும் என்னால் அவள் சரியாக சாப்பிடவில்லை, அவள் பசி தாங்க மாட்டாள்! காபி எங்கே போகுது, நாளைக்கு கூட வந்து நான் குடித்துக் கொள்கிறேன்.." என்று கூறியபடி ஓடியவனை, என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தபடி நின்றார் செந்தழை.

பனிநிலவோ, அச்சோ நம்பி காபியைக் குடித்து முடிக்கவில்லையா? அதற்குள் நாம் டிபன் பாக்ஸை கொடுத்து விட்டோமே! என்று வருந்தினாள்..



செந்தழையோ, "பனி உனக்கு நம்பியைப் பற்றி தெரியாதா? அவன் காபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்திருக்க கூடாதா?" என்று புலம்பினார்.

பனியோ, "சாரிம்மா நான் குடித்திருப்பாருன்னு நினைச்சேன்.." என்ற பெரிய மகளிடம்,

"சரி விடு. உன்னைச் சொல்லி என்ன செய்ய.." என்றபடி தான் விட்ட வேலையைத் தொடர்ந்தார்.



நூலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த ஆடலரசோ, வீட்டிற்கு வந்த மருமகன் தன்னைக் கூடப் பார்க்காமல்! எங்கு இப்படி தலை தெறிக்க ஓடறான் என்று நினைத்தபடி, செந்தழையிடம் சென்று கேட்டார்.



மனைவி சொன்னதைக் கேட்டதும், ஆடலரசுக்கு மகளின் மீது சிறு கோபம் வந்தது. 'மனைவி சொல்வது போல் நிறைக்கு எப்போது தான் பொறுப்பு வருமோ?' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.



உதியனம்பி வெகு வேகமாக தன் வண்டியில் பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றான்.



நிறையாழியோ, தன் தோழி பூவணியிடம் தன் மனக்குமறலை எல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.



"ஏண்டி நிறை இன்று என்னை விட்டுட்டே வந்துட்டே. ." என்ற பூவணியிடம்..



"சாரி டீ வணி, எல்லாம் அந்த நம்பியாரால் வந்தது. அவனால் இன்று அம்மாவிடம் நல்லா திட்டு வாங்கினேன். அந்த டென்ஷனில் உன்னை மறந்துட்டே வந்துட்டேன்.." என்றாள்.



பூவணியின் வீடும் நிறை வீட்டிற்கு அருகில் தான்.. இருவருமே சிறு வயதிலிருந்தே இணை பிரியா தோழிகள். ஒன்றாகவே பள்ளி சென்றவர்கள், கல்லூரியிலும் ஒரே பிரிவை எடுத்து படிக்கிறார்கள்.



"அப்படி என்ன டீ செய்தாங்க நம்பி அண்ணா!?"

"ம்ஹூம்.. என்னை டென்ஷனாக்கவே காலங்காத்தாலே வீட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கறான்.."



"ஏண்டீ அவர் வீட்டுக்கு வந்தா, நீ ஏன் டென்ஷன் ஆகறே..?"



"எனக்கு அவனைப் பார்த்தாலே, ஏனோ... மனதிற்குள் பயமா இருக்கு!"



"நிறை எதுக்குடி பயம்?

அவர் என்ன சிங்கமா? புலியா?"



"தெரியலை டீ.. ஆனால், என் மனசுக்குள் அவன் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருந்துட்டே இருக்கு.." என்றவளிடம்,



"நிறை அவரை நீ விரும்புறீயா?.."



"லூஸா டீ நீ! நான் போய் அவனை விரும்புவேனா? அப்படியெல்லாம் இல்லை.. எதுக்கு கேட்கிறே..?"



"எனக்கு என்னமோ உன்னை அறியாமலே நீ அவரை விரும்புறீயோன்னு தோனுது. அதனால் தான் அவரைப் பார்த்தாலே டென்ஷன் ஆகறே.."



"பைத்தியம் மாதிரி உளராதே.. நான் அவனை விரும்புற அளவுக்கு அப்படி என்ன டீ அவனிடம் இருக்கு.."



"ஏன்? என்ன இல்லை.. தங்கமான குணம், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், பெரியவர்களை மதிக்கும் பண்பு, நேர்மை, கடினமான உழைப்பாளி. இது மட்டும் இல்லை பார்ப்போரை கவர்ந்திழுக்கும் தோற்றம். இத்தனையும் இருக்கு.. இது போதாதா?" என்றவளிடம்..



"எத்தனை இருந்தாலும் படிப்பு இல்லையே?"



"ஓகே நீ சொல்வது போல் படிப்பு முக்கியம் தான். ஆனால் அந்த படிப்பு எதற்கு?



"இது என்னடி கேள்வி. படிப்பு தான் நம் அறிவை, சிந்தனையை, செயலை, எண்ணத்தை விசாலமாக்கும்.."



"கரெக்ட்.. ஆனால் நம்பி அண்ணாவிடம் இது எல்லாமே அதிகமாக இருக்கு. அது உனக்கே தெரியும். அதை ஒத்துக்கத்தான் உனக்கு மனசில்லை.. உன் மனக்கண்ணை நன்றாக திறந்துப் பார்.. அது உனக்கே புரியும்.." என்றவளிடம்..



"சரி இருந்துட்டு போகட்டும். அதற்கு என்ன?"

"நிறை, உனக்கு எங்கே அவரை நாம் விரும்பிடுவோமோன்னு மனதிற்குள் பயம். அது தான் அவரை நீ அவாய்ட் செய்யறே.." என்ற பூவணியை முறைத்தபடி..





"இச்சே.. அதற்கெல்லாம் சான்ஸே இல்லை.. நீ உன் கற்பனையை கொஞ்சம் மூட்டைக் கட்டி வை.." என்றாள்.



"நிறை இந்த காலத்தில் நம்பியண்ணா மாதிரி ஒரு நல்லவரைப் பார்ப்பதே கஷ்டம்.” என்றவளிடம்..



"அந்த நம்பியார் உலகமகா நல்லவராகவே இருந்துட்டு போகட்டும், அதற்கு இப்ப என்ன செய்யனும்கிற .."



"உன்னை ஒன்றும் செய்ய சொல்லலை.. அட்லீஸ்ட் அவரை அவன், இவன்னு பேசறதையாவது நிறுத்து. அவர் உன்னை விடப் பெரியவர்.. ஆளுக்குத் தான் மரியாதை கொடுக்கலை.. வயசுக்காவது மரியாதை கொடு ப்ளீஸ்.." என்றவளிடம்..



"வணி இன்னைக்கு உனக்கு என்னடீ ஆச்சு.. நீயும் என்னைப் படுத்தறே.."



"எனக்கு ஒன்னும் ஆகலை.. அவர் மேல் உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ நார்மலா இரு அது போதும்.." என்றவளிடம்.



"சரி. சரி.. விடுடீ அவன் பேச்சே நமக்கு வேண்டாம்.." என்ற நிறையிடம்,



"நீ அவன்னு சொல்றதை மட்டும் நிறுத்தமாட்டே. அப்படித் தானே.." என்று சலித்துக் கொள்ளத் தான் அவளால் முடிந்தது.



பூவணியோ, நிறை எப்படியாவது நம்பியைப் புரிந்து கொண்டால் போதுமென்று தான் நினைத்தாள். அவளுக்கு, நம்பியை நிறையாழி மணந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும் மனதிற்குள் இருந்தது.



சிறுவயதிலிருந்தே உதியனம்பியை பூவணிக்கு தெரியும். அவன் நிறை மேல் வைத்திருக்கும் பாசமும், நிறை என்ன சொன்னாலும் பொறுத்துப் போகும் அவனின் குணமும், நம்பி மீது அவளுக்கு மிகுந்த அன்பை உண்டாக்கியது.



அவள் மனதிற்குள், தனக்கு இப்படியொரு அண்ணன் இல்லையே, என்று எத்தனையோ நாள் ஏங்கியிருக்கிறாள்.



பூவணி தன் மனதிற்குள் இருவரைப் பற்றியும் யோசித்துக் கொண்டே சாலையைப் பார்த்தவள், சிறு வியப்புடன் "நிறை அங்கே பாரு.." என்று சாலையின் எதிர்திசையைக் காட்டினாள்.



நிறையோ, பூவணி காட்டிய திசையை ஆர்வமாக பார்த்தாள். அங்கே உதியனம்பி தன் பைக்கை ஸ்டேண்டு போட்டு நிறுத்திக் கொண்டிருந்தான்.

நிறையோ, 'இவன் இங்கு என்ன செய்கிறான்..' என்று மனதிற்குள் நினைத்தாள்.

உதியனம்பியோ, வண்டியை நிறுத்தி விட்டு சாலையைக் கடந்து நேராக நிறையாழியிடம் வந்தவன், அவள் கைகளில் அவள் மறந்து வந்த டிபன் பாக்ஸை கொடுத்தான்.



நிறையாழிக்கு அப்போது தான், டிபன் பாக்ஸை தான் வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது. அவள் எதுவுமே‌ பேசாமல் அவனிடம் டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டாள்.



அவனோ, "நிறை என்ன கோபமிருந்தாலும், சாப்பாட்டு மேல் இனி கோபத்தைக் காட்டாதே.." என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் பூவணியிடம் ஒரு தலையசைப்புடன் திரும்பிச் சென்றான்.



நிறையோ, மனதிற்குள் 'உன்னால் தான் நான் கோபமே படுகிறேன்..' என்று நினைத்தவள், அவனையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.



பூவணியோ, "நிறை நீ பசி தாங்கமாட்டேன்னு நம்பி அண்ணா கரெக்ட்டா டிபன் பாக்ஸை கொண்டு வந்துட்டார் பார். நீ தான் எப்போதும் அவரைத் திட்டிக் கொண்டே இருக்கிறாய்..



அட்லீஸ்ட் ஒரு தேங்க்ஸ்சாவது சொல்லியிருக்கலாம்.." என்றவளிடம்,



"அம்மா தாயே! போதும் உன் அண்ணன் புராணம். கொஞ்ச நேரம் நீ வாயை மூடுகிறாயா? என்னைக் கடுப்பாக்காதே.." என்றவுடன் பூவணி கப்பென்று வாயை மூடிக்கொண்டாள். இதற்கு மேல் ஏதாவது சொன்னால் அவள் இன்னும் டென்ஷன் ஆகிடுவாளென்று.



உதியனம்பியோ, நிறையாழி பஸ் ஏறிப் போகும் வரை கிளம்பாமல், தன் வண்டியின் மீது கையைக் கட்டிய படி சாய்ந்து நின்று கொண்டான்.



நிறையாழிக்கோ, அதுவே எரிச்சலாக இருந்தது.. 'பெரிய ஹீரோன்னு நெனப்பு' என்று மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தாள்.



பூவணிக்கோ, அவனின் ஒவ்வொரு செயலும் அவன் மீது மிகுந்த மதிப்பை அவள் மனதில் உருவாக்கியது.



உதியனம்பிக்கோ, நிறை தன்னிடம் எவ்வளவு வெறுப்பு காட்டினாலும், அவனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.. அவனால் அவளை எப்போதும், எதற்காகவும் வெறுக்க முடியாது.



நிறையாழி சென்றதும், உதியனம்பி நேராக தன் கடைக்குச் சென்றான்.



அங்கு, சங்குமணியிடம் சில வேலைகளை ஒப்படைத்து விட்டு, அவனுக்கு கல்யாண வேலையைப் பார்க்க செல்ல வேண்டியிருந்தது, கல்யாண நாள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.

உதியனம்பி கடைக்கருகில் சென்று வண்டியை நிறுத்தியவுடனேயே, மணி சிரித்தபடியே, "நம்பியண்ணா காலை டூயூட்டி முடிஞ்சுச்சா..?" என்றான்.





உதியனம்பி என்ன வேலையிருந்தாலும், தினமும் காலையில் நிறை கல்லூரி போகும் போதும், மாலை கல்லூரியிலிருந்து வரும் போது எப்படியாவது அவளைப் பார்க்கச் செல்வான். பாதி நாள் நிறைக்கு தெரியாமலேயே, தள்ளி நின்று அவளைப் பார்த்து வருவான். அதை குறிப்பிட்டுத்தான் மணி இப்போது கேட்டான்.



நம்பியோ, "டேய் வர.. வர, உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சு.."



"போங்கண்ணா.. நீங்க தான் நிறை அக்கா பின்னாடியே சுத்தறீங்க! ஆனா, அந்தக்கா உங்களைக் கண்டுக்கவே மாட்டீங்குது.."



"மணி பேசாம உன் வேலையைப் பாரு. எனக்கு அவளை தினமும் பார்க்கனும்! அதனால் போறேன். அவ்வளவு தான்.." என்றான்.



"அண்ணா பொய் சொல்லாதீங்க.. நீங்க நிறையக்காவை எவ்வளவு காதலிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்.. அந்த அக்காகிட்ட உங்க காதலை சீக்கிரம் சொல்லிருங்கண்ணா.. நீங்க மனசுக்குள்ளையே வைத்துட்டு இருந்தீங்கன்னா, அப்புறம் அந்தக்கா வேறு யாரையாவது கல்யாணம் செய்துட்டுப் போய்ட்டா நீங்க தாங்குவீங்களா..?" என்ற மணியை திகைத்துப் பார்த்தவன்..



"மணி, எனக்கு இதுக்கு பதில் சொல்லத் தெரியலை.. அவளை கல்யாணம் செய்துக்கனும்னு எனக்கு பேராசை‌ தான். ஆனால் அது நடக்குமான்னு தெரியலை.. நான் சொல்லி அவள் மறுத்து விட்டாள் என்னால் தாங்க முடியாது.." என்றவனை பாவமாக பார்த்தான் மணி.



உதியனம்பியைப் பற்றி மணிக்கு நன்றாக தெரியும். அவன் கூடயிருந்த இத்தனை வருடங்களில், அவன் எதற்கும் ஆசைப்பட்டு பார்த்ததில்லை..

நம்பியின் குணமும், கடின உழைப்பும் மணியை பிரமிக்க வைக்கும். அது மட்டுமின்றி அவனின் இரக்க குணத்தை நினைத்தாலும் அவனுக்கு வியப்பாக இருக்கும்.



நம்பி மட்டும் இல்லையென்றால் தன் குடும்பம் இன்று நடுத்தெருவில் தான் நின்று இருக்கும்.



தன்னைக் கூட அவன் வேலையாள் போல் என்றுமே நினைத்ததே இல்லை.. உடன்பிறவா சகோதரனாகத் தான் பார்க்கிறான். அந்த உரிமையில் தான் மணியாலும் இந்தளவு பேச முடிகிறது.



உதியனம்பியும், மணியை தன் உடன்பிறவா சகோதரனாகத் தான் நினைத்தான். அதனால் தான் அவனை வேலையாள் போல் நடத்தாமல் தன்னிடம் சுதந்திரமாக பேச அனுமதித்திருந்தான்..



மணி தன்னையே யோசனையாக பார்த்ததைக் கண்டு, "மணி நான் அவளை உண்மையா நேசிக்கிறேன். அதை அவளிடம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.. என் அன்பு உண்மையாக இருந்தால் அதுவே எங்களை சேர்த்து வைக்கும்.." என்றவன் தொடர்ந்து..



"நமக்கு பிடிச்சவங்க நம்ம கூடவே இருக்கனும்ன்னு அவசியமில்லை.. எங்கிருந்தாலும் நல்லா இருந்தா போதும். அப்படி ஒரு வேளை அவள் வேறு யாரையாவது கல்யாணம் செய்துக்கிற சூழல் அமைந்தால் கூட, அவ சந்தோசமாக வாழ்ந்தா போதும். அவ நெனைப்பிலேயே நான் காலம் பூரா வாழ்ந்துடுவேன்.." என்றவனை அதிர்ந்துப் பார்த்தான் மணி.



இது என்ன மாதிரி அன்பு. இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா? தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு நினைத்துக் காதலிப்பவள் மீது அமிலம் வீசும் மனிதர்கள் மத்தியில், இப்படியும் ஒருவரா! என்று வியந்தான்.



'தன் அண்ணன் ஆசைப்படுவதை நிறைவேற்றிக் கொடு கடவுளே!' என்று மனதிற்குள் மனதார வேண்டிக் கொண்டான்.

அவனால் செய்ய முடிந்தது அது ஒன்று தான்.



உதியனம்பி அன்று வீடு திரும்ப இரவு வெகு நேரம் ஆகிடுச்சு.. ‘அம்மா தனக்காக காத்திருப்பார்களே’ என்று நினைத்தபடி வண்டியை வேகமாக வீட்டை நோக்கிச் செலுத்தினான்.



அவன் நினைத்தது போலவே, தாழ்குழலி வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.



மகனைப் பார்த்ததும் அவரின் முகம் பூ போல் மலர்ந்தது. வாடிப்போய் வந்த மகனை மலர்ந்த முகத்தோடு வரவேற்றவர்..

"ஏம்ப்பா இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது. ரொம்ப வேலையாப்பா.."

என்றவரின் அருகில் வந்து அமர்ந்தவன், அப்படியே அவரின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.



உதியனம்பிக்கு இது ஒரு பழக்கம், அதிக வேலையோ, அல்லது மனம் சரியில்லையென்றாலோ, தாயின் மடியில் சிறு குழந்தை போல் தலை வைத்து படுத்துக் கொள்வான். அன்றும் அதுபோல் படுத்துக் கொண்டான்.



தாயின் கனிவான தலை வருடலும், உதிம்மா என்ற அழைப்பும், அவனுக்கு எல்லையில்லா நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும்..



தாழ்குழலிக்கும் மகனின் இந்த செயல் மிகவும் பிடித்தமான ஒன்று.. மகன் எத்தனை பெரியவனாலும் அவருக்கு இன்னும் சிறுபிள்ளை போல் தான் தோன்றும்.



தாழ்குழலி மகனின் தலையை மென்மையாக வருடிய படியே, "கல்யாண வேலையெல்லாம் எப்படி போகிறது உதிம்மா.. மாமா பாவம் பா.. நீ தான் அவருக்கு மூத்த பிள்ளை போல், கல்யாணம் முடியும் வரை கொஞ்சம் மாமாவுக்கு உதவியாக இருக்கனும்.." என்றவரிடம்,



"அம்மா அதை நீங்க எனக்கு சொல்லனுமா? அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க.. நீங்க சாப்பிடீங்களா? மாத்திரை எல்லாம் கரெக்ட்டா சாப்படீங்க தானே.." என்ற மகனிடம்..



"அதெல்லாம் நான் சரியாக சாப்பிட்டுத் தான் இருக்கிறேன். நீ குளித்துட்டு வா சாப்பிடலாம்.." என்றவரிடம்,



"ம்மா ஒரு பத்து நிமிஷம் இப்படியே படுத்துக்கிறேன்.." என்றவன் கண்களை மூடி சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தான்.



அவன் மனமோ, அன்று காலை மணியுடன் நடந்த உரையாடலை அசைபோட்டது. ‘மணி சொல்வது போல் நிறையாழி வேறு யாரையாவது திருமணம் செய்தால் தன்னால் உண்மையாலுமே தாங்க முடியுமா?’ என்று எண்ணினான்.



‘நாமும் ஒழுங்காக படித்திருந்தால், அவளிடம் உரிமையாக நம்மை திருமணம் செய்து கொள்ளச் சொல்லிக் கேட்டிருக்கலாம்’, என்று நினைத்து கலங்கினான்.



தாழ்குழலியோ, மகனின் முகமாற்றத்தைக் கண்டவர், "உதிம்மா என்னச்சுப்பா?.. உன் முகமே சரியில்லையே.." என்றவுடன்..



வேகமாக எழுந்து அமர்ந்தவன், "அப்படியெல்லாம் எதுவும் இல்லை அதிக களைப்பு தான்.. நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க.. நான் போய் குளித்துட்டு வரேன்.." என்று அவன் அறைக்குச் சென்றான்.



உதியனம்பியின் வீடு, மூன்றே அறைகள் கொண்ட சின்ன வீடு தான்.. ஒரு வரவேற்பறை, சின்னதாக சமையல் அறை.. குளியலறையுடன் சேர்ந்த படுக்கையறை..



தாயும், மகனுக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.

தாழ்குழலியோ, வரவேற்பறையிலேயே தனக்காக ஒரு கட்டில் போட்டு இருந்தார். எப்போதும் அது தான் அவரின் இருப்பிடம்.. நம்பி படுக்கையறை உபயோகித்துக் கொள்வான்.



உதியனம்பி குளித்து வந்ததும், தாழ்குழலி அவனுக்கு டிபன் எடுத்து வைத்தார்.. அவனோ, அமைதியாக சாப்பிட்டு விட்டு சென்று படுத்தான்.



அடுத்த நாள் காலை விடியல் அவனுக்கு மிக அழகாக விடிந்தது. நிறையாழியின் இனிமையான குரலைக் கேட்டபடியே கண்களைத் திறந்தான்..



தொடரும்..

அடுத்த அத்தியாயம் நாளை காலை..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
அத்தியாயம் 3

கதிரவன் தன் செங்கதிர்களை பூமியில் படறவிட்டு, நெடு நேரமாகியிருந்த பொழுதும், உதியனம்பி அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட களைப்பால் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் செவிகளில், மனதிற்கினியவளின் சிரிப்பு சத்தம்! அவனின் உயிர்வரை ஊடுருவிச் சென்று, அவனின் நித்திரையைக் கலைத்தது.

மெல்ல சிரமத்துடன் இமைகளைத் திறந்தவனுக்கு இது கனவா? நனவா? என்றே ஒரு நிமிடம் புரியவில்லை..

நிறையாழி எப்படி இந்த நேரத்தில், தன் வீட்டிலென்று நம்ப‌ முடியாமல் குழம்பினான்.

உடனே படுக்கையிலிருந்து எழுந்து, மகிழ்ச்சியுடன் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

நிறையாழியோ, வழக்கம் போல அத்தை வீட்டின் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து, தாழ்குழலி கொடுத்த காபியை ரசித்து, ருசித்து குடித்துக் கொண்டே வாயாடிக் கொண்டிருந்தாள்.

"அத்தை உங்க காபிக்கு இணை வேறு எதுவுமே இல்லை. இதற்காகவே தினமும் இங்க வரனும் போல இருக்கு. ஆனால் இத்தனை நல்ல காபியை விட்டு எப்படிதான் தினமும் உங்க மகன் செந்தி காப்பியை குடிக்கிறாரோ.." என்றாள்.

"அண்ணி காபிக்கென்ன? அவர்களும் நன்றாகத் தான் காபி வைப்பார்கள்.." என்ற தாழ்குழலியிடம்..

"ம்ஹூம் உலகத்திலேயே, நீங்களும், உங்க மகனும் தான், செந்தி தரும் காலுநீர் தண்ணியை காபின்னு சொல்வதோடு, ரசித்து... ருசித்து குடிப்பீங்க.." என்றபடி நிமிர்ந்தவள், வாயை மூடாமல் அப்படியே திரு திருவென்று விழித்தாள்.

அங்கே, தூக்க கலக்கத்துடன், சமையலறை கதவில் கைகளை கட்டிக் கொண்டு, சாய்ந்தபடி உதியனம்பி அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

தாழ்குழலியோ, மருமகளின் பேச்சு சத்தம் திடீரென்று நின்றவுடன், தன் கை வேலையை விட்டுவிட்டு, மருமகள் புறம் திரும்பியவர், வாயைத் திறந்தபடி திருட்டு முழி முழிப்பதைக் கண்டு, என்னவென்று மருமகள் பார்த்த திசையைப் பார்த்தார்.

அங்கே மகனைக் கண்டவர் புன்னகையுடன், "உதிம்மா எழுந்துட்டீயா.. காபி கலந்து தரவா?" என்று கேட்டார்.

மகனோ பார்வையை நிறையாழி மீது வைத்தபடியே, தலையை மட்டும் ஆட்டினான்.

அதற்குள் வெளியில் காய்காரர் சத்தம் கேட்டவுடன், தாழ்குழலி, "இருப்பா காய் வாங்கிட்டு வந்த பின் காப்பி கலந்து தரேன்.." என்றபடி காய் வாங்கச் சென்றார்.

தாழ்குழலி நகர்ந்த பின், உதியனம்பி தன்னையே விழி எடுக்காமல், பார்த்துக் கொண்டிருந்த நிறையாழியின் புறம், ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்தான்.

நிறையாழிக்கோ, அப்போது தான் உறக்கத்திலிருந்து விழித்த அவனின் கலைந்த தோற்றமும், அவன் பார்வையும், தன் புறம் அவன் நெருங்குவதையும் கண்டு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.

அவனோ, அவள் அருகில் சென்று, அவளின் இருபுறம் தன் கைகளை சமையல் மேடையில் அரணாக ஊன்றி, அவளை தன் கைகளுக்குள் சிறை செய்தான்.

நிறையாழியோ, என்றுமில்லாமல் இன்று அவன் செய்கையில் விதிர் விதித்துப் போனாள்.

உதியனம்பிக்கே இன்று தன் செயல் புதியது‌ என்று புரிந்தாலும், அது புத்திக்கு உறைத்தாலும், மனதிற்குப் புரியவில்லை. அவன் ஓர் இனம் புரியா மயக்க நிலையிலிருந்தான்.

மெல்ல நிறையாழியின் காதருகில் குனிந்து, "காலையிலேயே இப்படி ஒரு தரிசனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.." என்றவன், அவளின் காதுகளில் கதை பேசிய ஜிமிக்கையை சுண்டி விட்டான்.

அவளோ, அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.

உதியனம்பி, அவளின் அதிர்ந்த பார்வையை ரசித்தபடியே, "எதுக்கு இப்படி ஆளை முழுங்கிற மாதிரி பார்க்கிறே அழகி.." என்றவன், தாழ்குழலி வரும் ஓசை கேட்டு, அவளின் நெற்றியில் செல்லமாக முட்டிவிட்டு நகர்ந்தான்.

நிறையாழியோ, அவனின் செயலில் உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள்.

தாழ்குழலியோ, உதிம்மா நீ போய் பல்துலகிட்டு வா, நான் காபி கலந்து தருகிறேன்.." என்றவுடன்..

உதியனம்பியோ, பிரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தவளை, ஒரு பார்வை பார்த்து விட்டு, மனதிற்குள் சிரித்தபடியே நகர்ந்தான்.

உதியனம்பி சென்ற பின்னும் நிறையாழி அப்படியே தான் இருந்தாள்.

தாழ்குழலியோ, மருமகளின் நிலையை அறியாமல் மகனுக்கு காபி கலந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் முகம் கழுவி, பல்துலக்கி விட்டு வந்த மகனிடம் காபியைக் கொடுத்தார்.

உதியனம்பியோ, தாய் கொடுத்த காபியை வாங்கி பருகிய படியே, நிறையாழியைப் பார்த்துக் கொண்டே, "அம்மா இன்னைக்கு என்ன காலையிலேயே அதிசயமா நம்ம வீட்டு பக்கம் வசந்தம் வீசுது.." என்றான்.

தாழ்குழலியும், மகனின் குறும்பைப் புரிந்துக் கொண்டு, "உதிம்மா இன்னைக்கு உன் மாமா, அத்தைக்கு கல்யாண நாள் நீ மறந்துட்டீயா, அது தான் நிறை கேசரி எடுத்துட்டு வந்துருக்கா.." என்றவரிடம்..

"ஓ! மறந்தே போய்ட்டேன் மா.. மேடமுக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையா?" என்றான். தாயிடம் பேசினாலும் விழிகள் நிறையாழியின் மீது தான் இருந்தது.

நிறையோ, இன்னும் அசையாமல் தான் அமர்ந்து இருந்தாள்.

தாழ்குழலியோ, "இன்னைக்கு இரண்டாம் சனிக்கிழமையாம், அது தான் நிறைக்கு லீவு.." என்றார்.

அவனோ, “ஓ! அப்படியா? ஏன் மேடம் பேசமாட்டாங்களா?” என்று நிறையை வம்புக்கிழுத்தான்.

நிறையோ, அவனைப் பார்ப்பதைத் தவிர்த்த படியே, "அத்தை, நான் வீட்டுக்குப் போறேன். கொஞ்சம் வேலை இருக்கு.." என்றாள்.

நிறைக்கு, அவனின் செயலும், பார்வையும் அவள் மனதிற்குள் ஒரு பிரளையத்தையே ஏற்படுத்தியது.

தாழ்குழலியோ, "நிறை டிபன் சாப்பிட்டு போம்மா, உனக்கு பிடிக்கும்ன்னு ரவா லட்டு செய்ய ரவை எடுத்து வைத்திருக்கேன், சாப்பிட்டு விட்டு வீட்டுக்கும் கொஞ்சம் எடுத்துட்டு போ தங்கம்.." என்றார்.

நிறையோ, "அத்தை இன்று வேண்டாம்.. இன்னொரு நாள் செய்து கொடுங்க.." என்றாள்.

தாழ்குழலியோ, இன்னைக்கு அண்ணன், அண்ணிக்கு கல்யாண நாள் வேறு.. நீ அரைமணி நேரம் இருடா.. செய்து கொடுக்கிறேன். டிபன் சாப்பிட்டு விட்டு, கையோடு வாங்கிட்டுப் போ.." என்றார்.

"அத்தை எழுத நிறையா இருக்கு.. நான் போகனும்.." என்றாள்.

தாழ்குழலியோ, என்றுமில்லாமல் இன்று அடம்பிடிக்கும் மருமகளை வியப்பாகப் பார்த்தார்.

இவர்கள் பேச்சை கேட்ட படி அமைதியாக காபி குடித்துக் கொண்டிருந்த நம்பியோ, "அம்மா நீங்க செய்யுங்க.. நான் கடைக்குப் போகும் போது நிறையை வீட்டில் விட்டுவிட்டு, அத்தை மாமாவையும் பார்த்துட்டு கொடுத்து விடுகிறேன்.." என்றான்.

நிறையாழிக்கோ, அவன் அப்படி சொன்னதும், மனதிற்குள் படபடப்பாகிருச்சு. 'அச்சோ இவனுடன் வண்டியில் போவதா? சத்தியமா நம்மால் முடியாது. அவன் அருகில் வந்தாலே, என்னமோ ஆகுது..' என்று நினைத்தாள்.

தாழ்குழலியோ, மகன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுடன், ‌"சரிப்பா, நீ குளித்து விட்டு வாப்பா.. நான் சீக்கிரம் செய்யறேன்" என்றார்.

நிறையாழியோ, என்ன சொல்லி அத்தையை தடுப்பது என்று புரியாமல் குழம்பி தவித்தாள்.

தாழ்குழலியோ, மகன் சென்றதும், அவன் வருவதற்குள் செய்யவேண்டுமே என்று அவசரமாக அடுப்பை பற்ற வைத்தவர்..

ரவா லட்டு செய்வதற்காக வானலியில் நெய்யை ஊற்றி, ரவையைப் போட்டு வறுத்தவர், ரவைக்கு ஏற்ற சர்க்கரையை அதனுடன் சரிவிகிதத்தில் கலந்து, ஏலக்காய் பொடியையும் தூவி, திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டிவிட்டு, காய்ச்சிய பாலையும் சிறிது, சிறிதாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு ஊற்றினார்.

மிதமான சூட்டில், எலுமிச்சையளவு உருண்டை பிடித்து, டிபன் பாக்ஸில் போட்டு எடுத்து வைத்தார்.

நிறையோ, இதை எல்லாம் பார்த்தபடி அமைதியாகயிருந்தாள். அவள் மனமோ சைத்தானின் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.

உதியனம்பி குளித்து, அன்று மிக அழகாக, கம்பீரமாக தயாராகி வந்தான். கருநீலச்சட்டையும், ஆஃப் வொய்ட் பேண்டும் அணிந்திருந்தான். அவன் நிறத்திற்கு அந்த உடை மிக எடுப்பாக இருந்தது.

உதியனம்பி எப்போதுமே ஏனோ, தானோவென்று உடை அணிய மாட்டான். கடைக்கு கூட நேர்த்தியாகத் தான் அணிந்து செல்வான்..

கடையில் வேலை செய்வதற்கென்று சில உடைகள் வைத்திருந்தான். அதுவும் கூட நல்லதாகத் தான் இருக்கும்..

உதியனம்பி, நிறையாழியைப் பார்த்த சந்தோஷத்தில் அன்று‌ இன்னும் பார்த்து.. பார்த்து ஆடையைத் தேர்வு செய்து உடுத்தியிருந்தான்.

தாழ்குழலியோ, நம்பி வந்ததும், அவனுக்கும், நிறைக்கும் டிபன் கொடுத்தார்.

நிறையோ, வழக்கம் போல சமையல் மேடையிலேயே அமர்ந்து, குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டாள்.

உதியனம்பியோ, வரவேற்பறையிலிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்தபடியே உண்டு முடித்தான்.

தாழ்குழலியோ, இருவரும் உண்டு முடித்த பின்னர் இனிப்பை கொடுத்து.. நம்பியுடன், நிறையை கட்டாயப்படுத்தி வண்டியில் அனுப்பி வைத்தார்.

தன் அண்ணன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தாலும், நிறை‌யாழி நடந்தே போறேன்னு, சொன்னதைக் கேட்காமல் மகனுடன் அனுப்பி வைத்தார்.

நிறையோ, தன் அத்தையின் வற்புறுத்தலை தவிர்க்க முடியாமல், நம்பியின் பைக்கில் இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

நம்பியோ, இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருந்தான். முதன்முதலாக தன் மனதிற்கு பிடித்தவள், தன் வண்டியில் அமர்ந்தது அவனுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது.

நிறையோ, அத்தையின் தலை மறைந்ததும், நம்பியிடம், "கொஞ்சம் வண்டியை நிறுத்திறீர்களா..?" என்றாள்.

உதியனம்பியோ, "எதற்கு ?" என்றான்.

"அத்தை கட்டாயப்படுத்தியதால் தான், வண்டியில் ஏறினேன்.. நான் நடந்தே போய்க்கிறேன்.."

"உன்னைப் பாதியில் இறக்கிவிட நான் வண்டியில் ஏற்றவில்லை.. பேசாமல் வா. நானும் எப்படியும் அத்தை, மாமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்து தான் ஆகனும்.."

"நீங்க இப்போ வண்டியை நிறுத்தலைன்னா... நான் குதித்து விடுவேன்.." என்றவளிடம்..

"ஓகே குதித்து கையை, காலை உடைத்துக்கோ.." என்றவன் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

நிறையோ, அவனை எதுவும் செய்ய முடியாமல் மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

உதியனம்பியோ, சந்தோஷத்தில் ஒரு பாட்டை ஹம் செய்தபடி, காற்றுக்குப் பறந்த தன் கேசத்தை வலது கையால் சரி செய்தபடியே ஓட்டினான்.

நிறையோ, அவனின் செயல்களைப் பார்த்து, முகம் சிவக்க கோபத்துடன் அமர்ந்திருந்தாள். அவனோ, அவளின் கோபத்தை வண்டியின் கண்ணாடி வழியாக கண்டவன், மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

உதியனம்பிக்கோ, கோபத்தில் சிவந்திருந்த அவளின் கன்னங்களை பிடித்துக் கிள்ள வேண்டும் போல் ஆசையாக இருந்தது. தன் ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

நிறையாழி ‌மீது நம்பி உயிரையே வைத்திருந்தாலும், அவளிடம் எப்போதுமே சரிக்கு சரி வம்பளப்பதை விட்டதில்லை.

நிறையோ, எப்படா வீடு வரும் என்று நினைத்தாள். வீடு வந்ததும், நம்பி வண்டியை நிறுத்துவதற்குள், வண்டியிலிருந்து வேகமாக குதித்து ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினாள்.

நம்பியோ, அவளின் ஓட்டத்தைப் பார்த்தபடியே வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, தாய் கொடுத்த இனிப்பை எடுத்துக் கொண்டு அவனும் உள்ளே சென்றான்.

ஆடலரசும், செந்தழையும் வழக்கம் போல அவனை வரவேற்று உபசரித்தனர். நம்பியும் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினான்.

நம்பி அங்கிருந்து கிளம்பும் வரை.. நிறை தன் அறையிலிருந்து வெளியில் வரவேயில்லை.

உதியனம்பியோ, அன்று முழுவதும் உற்சாகத்துடனே வலம் வந்தான்.

நிறையோ, எதிலும் மனம் ஒட்டாமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.

நிறையுடன் அசைன்மெண்ட் எழுவதற்காக வந்த பூவணியிடம் நம்பி செய்த அலப்பறைகளைக் கொட்டித் தீர்த்தாள்.

பூவணியோ, "நிறை நிஜமாவா! நம்பியண்ணா இப்படி எல்லாம் செய்தாரா? என்னால் நம்பவே முடியலை.. அண்ணா செம சுமார்ட் தானே!" என்றவளை முறைத்தாள் நிறையாழி.

பூவணியோ, அவள் முறைப்பதைப் பார்த்து, "உனக்கு யாரையும் புகழ்ந்தாலே பிடிக்காதே..." என்று கூறிக் கொண்டே வந்த வேலையை பார்த்தாள்.

மறுநாள் காலையிலேயே நம்பிக்கு செந்தழை போன் செய்தார்.

"நம்பி இன்னைக்கு கொஞ்சம் வெளியில் போக வேண்டும்.. நீ கடைக்கு லீவு விட்டுட்டு அம்மாவைக் கூட்டிட்டு வர முடியுமா?” என்றார்.

"ஓ! அப்படியா, நான் மணியைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வரேன் அத்தை எவ்வளவு நேரமாகும்.." என்றவனிடம்,

"சாயங்காலம் ஆகிடும் பா.. கொஞ்சம் டிரஸ், நகை எல்லாம் எடுக்க வேண்டும்.. மாமாவுக்கு இன்று ஏதோ இன்ஃபெக்ஷன் வேலை இருக்காமா.. முடிந்தால் தான் அவர்‌ வர முடியுமாம்.." என்றவரிடம்,

"ஒன்னும் பிரச்சனையில்லை அத்தை, நான் அம்மாவைக் கூட்டிட்டு வந்துடறேன்.." என்றவன் அழைப்பை துண்டித்தான்.

தாழ்குழலியையும் அழைத்துக் கொண்டு சொன்னபடி உதியனம்பி தன் மாமா வீட்டிற்குச் சென்றான். அங்கு நிறை உள்பட எல்லோரும் தயாராக இருந்தனர்.

வாடகை காரில் கடைவீதி சென்றார்கள். அங்கு முதலில் பனிநிலவுக்கு திருமணத்திற்கும் சில நகைகளை எடுத்தனர். அத்துடன் அடுத்த வாரம் வரும் பொங்கல் திருநாளுக்கும் அனைவருக்கும் புத்தாடை எடுத்தனர்.

பின் பனிநிலவின் திருமணத்திற்காக தாழ்குழலி மறுத்தும் அவருக்கும், செந்தழைக்கும் ஒரே மாதிரியாக ஒரு பட்டுபுடவை எடுத்தார்கள்.

கடைசியாக நிறைக்கும் பட்டுபுடவை பார்த்தார்கள்.. அதுவரை அமைதியாகயிருந்த உதியனம்பி, புடவை பார்த்துக் கொண்டிருந்த நிறையின் அருகில் வந்து நின்றான்.

நிறையோ மும்மரமாக பட்டுப்புடவை பார்த்துக் கொண்டிருந்தாள். நம்பியோ அவள் எடுக்கும் சேலையை எல்லாம் இது நல்லாலை, அது நல்லாலை என்றவன், ஒரு புடவையை எடுத்து இந்த கலர் உனக்கு அழகாக இருக்கும் என்று அவள் கையில் கொடுத்தான்.

நிறையோ, அதை தூக்கிப் போட்டவள்.. உதியனம்பிக்கு மட்டும் கேட்குமாறு, பல்லைக் கடித்தபடி "நான் உங்களை கேட்கலை, அத்தை இருக்கிறாங்கன்னு பார்க்கிறேன். இல்லைன்னா நடப்பதே வேறு.. உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க.." என்றாள்.

அவனோ, “என் வேலையைத் தான் பார்க்கிறேன்.. நீ புடவையை எடு.." என்று கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

நிறையோ, அவன் எதை வேண்டாமென்று சொன்னானோ, அந்த மெரூன் கலர் சேலையை எடுத்தவள், அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவனோ, அவளைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான். அந்த சிரிப்பின் அர்த்தம் நிறைக்கு அப்போது புரியவில்லை.
தொடரும்..
அடுத்த யூடி நாளை.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
அத்தியாயம் 4



தமிழரின் பண்பாட்டு விழாவான தைத்திருநாளாம்! பொங்கலன்று, ஆடலரசு குடும்பம் விடிய காலையே! எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து, வாசலில் வண்ணகோலமிட்டு, அங்கே மூன்று கல் அடுப்பு வைத்து, மஞ்சள்‌ கொத்து கட்டிய மண்பானையில், சர்க்கரை பொங்கல் வைத்தனர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பெரியோர் வாக்குக்கு ஏற்பதை முதல்நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வழக்கம் போல தன் அத்தைக்கு பொங்கலையும், தங்கள் வீட்டு பலகாரத்தையும் கொடுத்து வர நிறையாழி சென்றாள்.

அத்தை வீட்டைத் தொட்டதுமே, வாசலிலிருந்தே, "அத்தை.. அத்தை.." என்று அழைத்தபடியே சென்றாள்.

தாழ்குழலியோ, மருமகளை மகிழ்ச்சியோடு, "நிறை வாடாம்மா.. " என்று வரவேற்றவர், "பொங்கலெல்லாம் வைத்து சாமி கும்பிட்டாச்சா..?" என்றவரிடம்,

"அதெல்லாம் நேரமாவே வெச்சாச்சு அத்தே.. அம்மா பொங்கலையும், பலகாரத்தையும் உங்களுக்கு கொடுத்து வரச் சொன்னாங்க.."

"ஏம்மா.. உதி அங்கு வந்தா.. கொடுத்து இருக்கலாமே! வயசுப்பிள்ளை உன்னை இந்த அண்ணி எப்பப் பாரு அனுப்புறாங்களே.." என்று அங்கலாய்த்தவரிடம்..

"அத்தை அதனாலென்னா? நான் தான் உங்களையும் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்.. அப்புறம் அதை விட ஒரு பெரிய விஷயம் என்ன தெரியுமா?" என்ற மருமகளை புரியாமல் பார்த்தவரிடம்..

"அங்கிருந்தா வேலை செய்யனும், இல்லைன்னா செந்தி என்னைத் திட்டித் திட்டியே கொன்னுடுவாங்க.. அது தான் நானே கொடுத்துட்டு வரேன்னு, தப்பிச்சு ஓடிவந்துட்டேன்.." என்று கண் சிமிட்டியவளைப் பார்த்து.. "போக்கிரி.." என்று செல்லமாக அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார்.

நிறையோ, வீட்டையே சுத்தி.. சுத்தி பார்த்துட்டே.. தாழ்குழலியுடன் உள்ளே சென்றவள், தயங்கி.. தயங்கி, "அத்தே வீட்டில் யாரும் இல்லையா..?" என்றாள்.

தாழ்குழலியோ, "யாரை கேட்குறே.. ஓ! உதியா? அதை ஏன் மா கேட்குறே.. காலையிலே பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும், அவசரமாக சாப்பிட்டவன், வெளியில் போய்ட்டு வரேன்னு போனான். போனைக் கூட எடுக்காமல் போய்ட்டான் மா.. இன்னும் வரலை.." என்று புலம்பினார்.

"ஓ! அப்படியா.." என்றவள் மனதிற்குள் 'நம்பியார்‌ வீட்டில் இல்லையா? அப்போ கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்..' என்று நினைத்தாள்.

சிறிது நேரம் தாழ்குழலியுடன் பேசிட்டு இருந்தாள். தாழ்குழலியோ, மருமகளிடம் பேசினாலும், அவரின் கண்கள் வாசலையே பார்த்துட்டு இருந்தது.

நிறையும் அதைக் கவனித்து விட்டு, "அத்தை ஏன்? ஒருமாதிரி இருக்கீங்க.." என்றவளிடம்..

"உதியை வேறு இன்னும் காணோம்மா.. அதுதான் ஏனோ ஒரு மாதிரி மனசுக்குள் கொஞ்சம் பயமா இருக்கும்மா.."

"அத்தே அவர் என்ன சின்னப்பையனா! வந்துருவார்.. நீங்க பயப்படாதீங்க.." என்றவளிடம்,

"என்னன்னு தெரியலைம்மா.. ஒரு போன் வந்துச்சு, அதிலிருந்து அவன் முகமே சரியில்லை. நான் கேட்டதற்கும் ஒன்னுமில்லைம்மா என்றானே தவிர, எதுவும் சொல்லலை. மனசு கஷ்டமா இருக்கு.." என்று கலங்கியவரிடம் நிறையோ, என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள்.

"அத்தே ஏதாவது ரொம்ப முக்கியமான விசயமா இருந்திருந்தால், அவர் கண்டிப்பா சொல்லியிருப்பார், நீங்க வருத்தப்படாதீங்க.." என்றவள்,

மனதிற்குள், 'இந்த நம்பியாருக்கு அறிவே இல்லை. எங்க போறேன்னு சொல்லிட்டு போயிருந்தா.. அத்தை கவலைப்படாமல் இருந்திருப்பாங்க தானே..' என்று கருவிக்கொண்டிருந்தாள்.

தாழ்குழலியோ, "அவன் எப்போதும் எந்த கஷ்டத்தையும் வெளியில் காட்டமாட்டான் மா.. அதுவும் எனக்கு உடம்பு முடியாமல் போனதிலிருந்தே, அவன் கவலைகளை என்னிடம் சொல்வதே இல்லைம்மா.." என்றார் வருத்ததுடன்.

"அத்தை ப்ளீஸ்... நீங்க வருத்தப்படாதீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்லை.. எந்த பிரச்சனையும் இருக்காது. அவர் வந்துடுவார்.." என்று தாழ்குழலியைத் தேற்றினாள்.

நிறையாழியோ, செந்தழைக்கும் போன் செய்து, தான் வருவதற்கு தாமதமாகும்.. என்று தெரிவித்தவள், உதியனம்பி வரும் வரை அங்கேயே இருந்தாள்.

உதியனம்பியோ, மாலை இருட்டின பின்பு தான் வீட்டுக்கு வந்தான். வந்தவன் முகமே பொலிவிழந்து, வாடி வதங்கியிருந்தது.

நிறையை அந்த நேரத்தில் அங்கு பார்த்தவனுக்கு வியப்பாக இருந்தது. ஆனால், எதையும் காட்டிக்காமல் தன் அறைக்குச் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

தாழ்குழலியோ, மகனைக் கண்டதும் எதுவும் கேட்காமல் அவனுக்கு உணவை எடுத்து வைத்தார். அவருக்கு மகனின் முகமே காட்டிக் கொடுத்தது. மதியம் எதுவும் உண்டிருக்க மாட்டனென்று..

உதியனம்பியும், அமைதியாக தாய் கொடுத்த உணவை உண்டு முடித்தான். தாழ்குழலியோ, அவன் உண்டு முடிக்கும் வரை அருகிலேயே அமர்ந்து பரிமாறினார்.

நிறையாழியும், அவன் முகத்தைப் பார்த்தே கண்டு கொண்டாள். அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறானென்று..

தாழ்குழலியோ, மகன் உண்டு முடித்ததும், "ஏம்பா இத்தனை நேரம்! எங்கே போனாய்.. போனையும் வேறு வைத்துட்டே போய்டே.. ஏதாவது பிரச்சனையா.. உன் முகமே சரியில்லையே.." என்று அடுக்கடுக்கா கேள்வி கேட்டவரிடம்..

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைம்மா.. ஒரு அவசர வேலை! அது தான் வர தாமதமாகிவிட்டது.. நீங்க எதையும் போட்டு மனசில் குழப்பிக்காதீங்க.." என்றவனிடம்..

"ஆமாம், நீ எப்ப தான் என்னிடம் சொல்லியிருக்கே.." என்று வருந்தியவரிடம்..

"அம்மா, உங்ககிட்ட சொல்லாமல் நான் யாருகிட்ட சொல்லப் போறேன்.. நீங்க மனசை அமைதியாக வைச்சுக்கோங்க.. அது தான் உங்க உடம்புக்கு நல்லது.." என்றான்.

அவரோ, "எப்ப பாரு இதையே சொல்லி என் வாயை அடை.." என்றவர் மகன் உண்ட பாத்திரங்களைச் சுத்தம் செய்தார்.

நிறையோ, தாயும் மகனும் பேசுவதைக் கவனித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். உதியின் முகமே சொன்னது அவன் எதையோ மறைக்கிறானென்று..

தாழ்குழலியோ, நிறையையும் சாப்பிட வைத்து தான் அனுப்பி வைத்தார். இந்த முறை தாழ்குழலி சொன்னவுடன் நிறை எந்த எதிர்ப்பையும் காட்டாமலேயே உதியனம்பியுடன் அமைதியாக வண்டியில் சென்றாள்.

உதியனம்பியோ, நிறை பேசாமல் தன் வண்டியில் ஏறியது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. அவளின் அமைதியும் வியப்பளித்தது.

நிறையாழியோ மனதிற்குள், ‘கேட்கலாமா? வேண்டாமா?’ என்ற யோசனையுடனேயே இருந்தாள். அத்தையின் கலங்கிய முகம் அவளின் கண்முன்னே வந்து போனது.

இனி ஒரு முறை தன் அத்தை இப்படி கலங்கக் கூடாது, என்று எண்ணியவள்.. ஒருவாறு தன் தைரியத்தைக் கூட்டிக் கொண்டு, "வெளியில் போகும் போது உங்களால் சொல்லிட்டு போக முடியாதா? அத்தை எப்படி கலங்கிவிட்டார்கள் தெரியுமா?" என்றாள்.

அவனோ, ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அம்மாவுக்காக என்றாலும், நிறையாழியா! தன்னிடம் இவ்வளவு உரிமையுடன் கேள்வி கேட்கிறாள் என்று நினைத்தவன்..

"கொஞ்சம் அவசர வேலை அது தான்.." என்றான் தயக்கத்துடன்.

"என்ன அவசர வேலை என்றாலும், அத்தையிடம் சொல்லிட்டு போவது தானே.. போனையும் வேறு வைத்துட்டு போய் இருக்கீங்க.." என்றாள் கோபத்துடன்.

"இனிமேல் இதுபோல் நடக்காது நிறை.. சாரி.." என்றவனுக்கு, காலையிலிருந்து அவன் பட்ட மனவேதனைக்கு! அவள் உரிமையாய் தன்னை கேள்வி கேட்டது, அவனின் மனக் காயத்திற்கு மருந்தாக இருந்தது.

"என்னிடம் சாரி கேட்டு என்ன பயன்.. அத்தையின் உடல்நலம் பற்றி நன்கு தெரிந்திருந்தும், நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது தான், எனக்கு எரிச்சலாக வருது.." என்றாள்.

அவனோ, “ஓகே.. ஓகே.. நான் ஏதோ டென்ஷனில் சொல்லாமல் போய்ட்டேன். இனி கவனமாக நடந்து கொள்கிறேன்.." என்றவன் அவனின் வழக்கமான குறும்பு தலை தூக்க..

"நீ எப்போதும் என் கூடவேயிருந்து என்னை இப்படி கேள்வி கேட்டால், நான் ரொம்ப பொறுப்பா நடந்துக்குவேன்.." என்றான் சிரிப்புடன்.

நிறையோ, "நீங்க பொறுப்பா இருந்தா எனக்கென்ன? இல்லைன்னா எனக்கென்ன? எக்கேடோ கெட்டு ஒழிங்க.." என்றாள் அடங்காத கோபத்துடன்.

நிறையின் வார்த்தை உதியனம்பியை நோகடித்தது. அதன் பிறகு அவன் எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை ஓட்டினான்.

நிறைக்கோ அவனின் மெளனமே! தான் பேசியது அவனைக் கஷ்டப்படுத்தி விட்டது என்று புரிந்தது. அவள் மனம் சுட்டது.

வீடு வந்ததும்! அன்று போல் இல்லாமல் மெதுவாக இறங்கியவள், உள்ளே போகாமல்.. அவன் வண்டியை நிறுத்தி பூட்டும் வரை பொறுமையாக நின்றாள்.

அவனோ, அவள் வீட்டிற்குள் போகாமல் நிற்பதைக் கண்டு யோசனையாக அவள் முகத்தைப் பார்த்தான்.

அவளோ, தயங்கி.. தயங்கி.. "வந்து சாரி.. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா.. நீங்க நார்மலா இல்லை. உங்க குரலே சரியில்லை.." என்றாள்.

அவனோ, அவளை வியந்துப் பார்த்தவன், "அப்படியெல்லாம் எதுவுமில்லை.." என்றான்.

அவளோ, "அத்தையிடம் போல் என்னிடமும் மறைக்காதீங்க.. சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்.." என்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே போனவளை, உதியனம்பி அவளின் கைகளைப் பிடித்து தடுத்தான்.

"நிறை நீ கேட்டதே எனக்கு மகிழ்ச்சி தான்.. ஆனால் நீ நினைக்கும் அளவு எதுவும் பெரிதில்லை.. உன்னிடம் போய் நான் மறைப்பேனா.." என்று மென்மையாக கூறினான்.

அவளோ, "ம்ம்.." என்றவள் அவனின் பிடியிலிருந்த தன் கைகளை மெல்ல உருவ முயற்சித்தாள்.

அவனோ, அவள் முயற்சியை தடுத்தவன், அவளின் கைவிரல்களை தன்‌உள்ளங்கையில் வைத்து மென்மையாக அழுத்தினான். "நிறை உண்மையாலுமே நீ கவலைப்படும் படி எந்த பிரச்சனையும் இல்லை.. என்னை நம்பு.." என்றவன் தன்னையும் அறியாமல் குனிந்து அவள் கைகளில் பட்டும் படாமல் மென்மையாக தன் இதழ்களைப் பதித்தான்.

நிறையோ, அவனின் செயலில் விதிர்விதிர்த்து போனாள். சட்டென்று தன் கைகளை உருவிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.

உதியனம்பிக்கோ, அப்போது தான் தன் செயல் புரிந்தது. 'அச்சோ போச்சுடா தன் அவசரபுத்தியால் எல்லாம் கெட்டது.. இன்று தான் அவள் இவ்வளவு பேசியிருக்கிறாள். இனி சுத்தமாக தன்னை வெறுத்து விடுவாள்' என்று அவன் மனம் புலம்பியது.

அப்படி ஒரு காரியம் செய்வதற்கு, நிறையின் அன்பான பேச்சும், அருகாமையும் தான் அவனை நிலைகுழைய வைத்துவிட்டது.

அவனுக்கு தலைபோகும் பிரச்சனை தான்.. ஆனால் அதைச் சொல்லி தாயையும், தன் மனம் கவர்ந்தவளையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று எண்ணித் தான், அனைத்தையும் மறைத்தான்.

ஆனால் அவனின் மனக்கவலைக்கு மருந்தாக அவளின் அக்கறையான பேச்சு அவன் புத்தியை மழுங்கடித்து.. இப்படி ஒரு செயலைச் செய்ய தூண்டிவிட்டது.

உதியனம்பியும் தயக்கத்துடனேயே மாமா வீட்டிற்குள் சென்றான்.

ஆடலரசும், செந்தழையும் வழக்கம் போலவே அவனை வரவேற்று உபசரித்தனர்.

உதியனம்பி வீட்டிலிருக்கும் வரை நிறை அவள் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை.

உதியனம்பிக்கோ, தான் செய்த செயல் அவன் மனதைச் சுட்டது. அதிக நேரம் அங்கே இருக்க முடியாமல் கிளம்பிவிட்டான். இன்னும் சிறிது நேரமிருந்தால் அவனின் அன்பு மாமா எளிதாக அவன் கவலைகளைக் கண்டு கொள்வார். இந்த சூழலில் அவரிடம் சொல்லி அவரை கலங்க வைக்க வேண்டாமென்று நினைத்தான்.

நிறையோ, தன் அறையில் உதியனம்பி இதழ் பதித்த தன் கைகளை அழுந்த சோப்பு போட்டு கழுவிக் கொண்டிருந்தாள்.

மனமோ, அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது. "எவ்வளவு தைரியமிருந்தால் அவன் இப்படி ஒரு காரியம் செய்வான்.. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்காங்க.. பாவம் ஏதோ பிரச்சனை என்று கேட்கப் போனால், என்ன செய்கிறான் பார் ராட்சசன்.. எப்படா இப்படி செய்யலாம்ன்னு காத்திருந்தான் போல.. ஒரு நாள் வசமா மாட்டுவான் தானே! அப்போ வைத்துக் கொள்கிறேன். அத்தைக்காக பார்த்தால் ரொம்ப ஓவரா போறான்.." என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் என்ன கழுவியும் அவன் இதழ் பதித்த இடத்திலிருந்த குறுகுறுப்பு மட்டும் அப்படியே இருந்தது. அந்த உணர்வை அவளால் தாங்க முடியாமல் தவித்தாள்.

உதியனம்பியோ, ஒருத்தி தன்னை கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பது தெரியாமல்.. தன் அறையில் சாளரத்தின் வழியாக நிலவின் அழகைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவன் மனமோ, நிறையையே சுற்றி.. சுற்றி வந்தது.

அவள் தனக்கு கிடைப்பாளா? என்று அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் அவள் தன் வாழ்வில் வந்தால் அதை விட ஒரு பெரிய மகிழ்ச்சி! இந்த உலகில் அவனுக்கில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

அவளின் கைகளின் மென்மை.. இன்னும் அவன் இதழ்களை விட்டு போகவில்லை.. மெல்ல தன் இதழ்களை வருடியவன்.. மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அவளையே நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்தவனுக்கு, மனம் அவளின் நினைவில் இனிப்பாய் இனித்தது.



தொடரும்..

Hi friends
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய யூடியை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
அத்தியாயம் 5



பொழுது புலராத இளங்காலை நேரம்! ஊரின் நடுநயமாக வீற்றிருந்த அந்த பெரிய மண்டபம், விழாக் கோலம் பூண்டிருந்தது.

திருமண மண்டப நுழைவாயிலின் இருபுறம், வாழைமரமும்! தோரணமாக, தென்னம்பாளையும் கட்டப்பட்டிருந்தது. அவை காற்றில் ஊஞ்சல் ஆடும் பொழுது! திருமணத்திற்கு வருவோரை தலை அசைத்து வரவேற்பது போல் அழகாக இருந்தது.

மண்டபத்திற்குள் நாதஸ்வர ஓசை செவிகளை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. மணவறையில் மாப்பிள்ளை சேத்தன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அருகில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன், பச்சை நிறத்தில் பட்டுஉடுத்தி பனிநிலவு பொன் சிலையாக அமர்ந்திருந்தாள்.

ஆடலரசும், செந்தழையும்.. சொல்ல முடியாத மனநிலையில் மேடையில் நின்றிருந்தார்கள்.

இத்தனை நாள்! தாங்கள் சீரும் சிறப்புமாக வளர்த்த மகள்! இன்று முதல் இன்னொருவரின் வீட்டுக்கு வாழப் போவதை நினைத்து மகிழ்ந்தாலும், ஏனோ ஒரு வெறுமை அவர்கள் மனதைப் பிசைந்தது.

பெண்பிள்ளைகளை பெற்றால் மட்டும் ஏன் இந்த பிரிவோ? என்ற கேள்வி மனதைக் குடைந்தாலும், மகள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமே! என்ற பரிதவிப்பும் அவர்கள் கண்களில் தெரிந்தது.

தாழ்குழலியோ, மண்டபத்தில் ஓர் ஓரமாக அமர்ந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் மனமோ! தன் அண்ணன், அண்ணியின் மனநிலையை நினைத்து கலங்கியது.

உதியனம்பியோ, நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த மெரூன் சட்டையும், பட்டு வேட்டியும் அவனுக்கு மிக நேர்த்தியாக பொருந்தியிருந்தது! காண்போரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் வலம் வந்தான்.

அவனின் கண்களோ, அடிக்கடி மெரூன் பட்டுடுத்தி தேவதையாக ஜொலித்த தன் உயிரானவளின் அழகை ரசித்தது!

நிறையாழியோ, உதியனம்பி அன்று துணிக்கடையில் வேண்டாமென்று சொன்ன அந்த பட்டுப் புடவையைத் தான் உடுத்தியிருந்தாள்.

உதியனம்பியோ, மனதிற்குள் அவன் ஆசைப்பட்ட மாதிரியே நடந்ததை நினைத்து சிரித்துக் கொண்டான்.

உதியனம்பிக்கு நிறையாழியைப் பற்றி நன்றாக தெரியும்.. தான் வேண்டாமென்று சொன்னால்! அதைத் தான் அவள் எடுப்பால் என்று நினைத்தான். அதனாலேயே தனக்கு மிகவும் பிடித்த அந்த புடவையை வேண்டாமென்று சொன்னான்.

நிறையாழியும் அவன் கூற்றைப் பொய்யாக்காமல்! அவன் வேண்டாமென்றதையே தேர்ந்தெடுத்தாள்.

உதியனம்பியோ, அவள் உடை எடுத்த பின்னரே, அவளின் உடைக்குப் பொருத்தமாக! அதே நிறத்தில் தனக்கும் சட்டை எடுத்தான்.

அவன் எண்ணியபடியே! இன்று இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்தே மண்டபத்தை வலம் வந்தனர்.

நிறையாழிக்கும் உடை விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் சந்தேகம் எட்டிப் பார்த்தது. 'தான் நினைத்ததுப் போல் மட்டுமிருந்தால்! அந்த நம்பியாரை இன்று உண்டு இல்லைன்னு பண்ணலை நான் நிறையாழி இல்லை..' என்று மனதிற்குள் சபதமிட்டுக் கொண்டாள்.

அவளின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல்! தன் அருகிலிருந்த பூவணி, "நிறை என்ன நீயும் அண்ணாவும் ஒரே கலரில் டிரஸ் போட்டிருக்கீங்க.. செம சூப்பராக இருக்கு.. அண்ணா வேறு உன்னையே ரசித்து.. ரசித்து பார்க்கிறார்.." என்றவள் நிறையின் கோப முகத்தைக் கண்டு கப்பென்று வாய் மூடினாள்.

குறித்த நேரத்தில் தமிழ் முறைப்படி இனிதே திருமணம் நடைபெற்றது. சேத்தன், பனிநிலவை பெரியோர்களின் ஆசியுடன் தன் மனைவியாக மங்களநாண் பூண்டு ஏற்றுக் கொண்டான்.

மணமக்களின் பெற்றோர்களோ! தம் மக்கள் உலகிலுள்ள அத்தனை இன்பத்துடன் பெரு வாழ்வு! வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்தினார்கள்.

நிறைக்கோ, தன் உடன்பிறந்தவளின் திருமணத்தில் மகிழ்ந்தாலும், இனி தன் அக்கா தன்னுடன் இருக்க மாட்டாளே! என்ற எண்ணம் மனதை வலிக்க வைத்தது.

அவளின் கண்கலங்குவதைக் கண்ட பூவணி, "நிறை இது தாண்டி எதார்த்தம். அதை ஏற்றுத் தான் ஆகனும்.. வருத்தப்படாதே.." என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

மணமேடையில் மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. இளவட்டங்கள் எல்லாம் அங்கே கூடி அந்த இடத்தையே ரணகளம் செய்து கொண்டிருந்தார்கள்.

உதியனம்பி, நிறையாழி, பூவணி எல்லோருமே மேடையில் தான் இருந்தார்கள்.

சேத்தன் எளிதாக பனிநிலவின் கழுத்தில் மாலையை போட்டுவிட்டான். ஆனால் பனிநிலவால் சேத்தன் கழுத்தில் மாலையிட முடியவில்லை.

உதியனம்பி தான் அதற்கு காரணம். சேத்தனை தன்னால் முடிந்தவரை உயரமாக தூக்கிக் கொண்டிருந்தான். பனிநிலவால் அந்த உயரத்திற்கு எட்டி மாலையிட முடியவில்லை.

நிறையோ, தன் அக்கா தடுமாறுவதைக் கண்டவள், உதியனம்பியை முறைத்தபடியே சேத்தனிடம், "மாமா அக்காவிடம் நீங்க தோத்தால் தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். ஃப்ளீஸ் மாமா பாவம் அக்கா.. கொஞ்சம் தலையைக் குனியுங்க.." என்றாள்.

சேத்தனோ, தூக்கி வைத்திருக்கும் உதியனம்பியை திரும்பி பார்த்தான். ஆனால், அவனோ! அசையாமல் அப்படியே நின்றான். சேத்தன் என்ன செய்வதென்று தெரியாமல் பாவமாக நிறையைப் பார்த்தான்.

பூவணியோ, நிறையின் காதுகளில், "நிறை நீ உன் மாமாவிடம் கேட்பதற்குப் பதிலாக, நம்பி அண்ணாவிடம் இப்படிக் கேளு அடுத்த நொடி நடப்பதைப் பாரேன்.." என்றாள்.

நிறையோ, அவளை முறைத்தாலும், அடுத்த நொடி பூவணி சொன்னதைச் செய்யலாமா? என்று யோசித்தாள்.

உடனே உதியனம்பியிடம், "உதி மாமா ஃப்ளீஸ் எனக்காக.." என்று அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே மனதை மயக்கும் குரலில் கேட்டாள்.

உதியனம்பியோ, ஒரு நொடி நிறை தன்னை மாமா என்று அழைத்ததில் திகைத்தாலும், அடுத்த நொடி சேத்தனை வெகுவேகமாக கீழே இறக்கினான்.

நிறையோ, தான் சொன்ன அடுத்த நொடி சேத்தனை கீழே இறக்கிவிட்டதைக் கண்டு அதிர்ந்தாள். தன் வார்த்தைக்கு அவன் மதிப்பளித்ததை நினைத்து ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாள்.. தன்னை எவ்வளவு உயர்வாக நினைக்கிறான் என்று நினைக்கையில் மனதில் இனம் புரியா உணர்வொன்று அவளை ஆட்கொண்டது.

பூவணியோ, தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை, லேசாக இடித்து, "நிறை நான் சொன்னேன் அல்லவா? நீ சொன்னவுடன் அண்ணா எப்படி கேட்டாரென்று பார்த்தாயா?" என்று கூறியதைக் கேட்டுக் கொண்டே நம்பியைப் பார்த்தாள்.

அவனோ, இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் வழிந்த காதலில் பாவையவள் திக்குமுக்காடிப் போனாள்.

சடங்குகள் எல்லாம் முடிந்தவுடன் மணமக்கள் திருமணத்திற்கு வந்தவர்களுடன் போட்டோ எடுப்பதில் மும்மரமானர்கள்.

குடும்பப் படம் எடுக்கும் பொழுது, ஆடலரசு தன் தங்கை குடும்பத்தையும் தங்களுடனே நிறுத்திக் கொண்டார்.

உதியனம்பியோ, யாருடைய கவனத்தையும் கவராமல் நிறையின் அருகில் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டான்.

நிறையோ, குழப்பத்துடனேயே வலம் வந்தாள். உதியனம்பி நினைப்பது போல், நடப்பதற்கு என்றுமே வாய்ப்பில்லை என்று நினைத்தாள்.

தன் நினைவிலேயே சுழன்று கொண்டிருந்தவளை, செந்தழை அழைத்து ஸ்டோர் ரூமில் சில பொருட்களை எடுத்து வரச் சொன்னார்.

நிறையோ, துணைக்கு பூவணியைத் தேடினாள். அவளை எங்குமே காணவில்லை. சரி.. தானே எடுத்துவரலாம் என்று சென்றாள், அங்கு உதியனம்பி இருப்பதை அறியாமல்..

உதியனம்பியோ, வெகு மும்மரமாக மீதியான பொருட்களை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான்.

நிறையாழி வந்ததை முதலில் அவன் கவனிக்கவில்லை.

நிறையாழியோ, அவனை அங்கு கண்டதும் ஒரு நொடி திகைத்து நின்றாள். மனதிற்குள் இன்று இவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று எண்ணினாள்.

உதியனம்பியோ, தன் அருகில் நிழலாடுவதை கண்டு நிமிர்ந்தவன், நிறையை அங்கு கண்டு வியந்தான்.

நிறையோ தன்னை வியப்பாக பார்த்தவனிடம் தன் தாய் கேட்ட பொருட்களை எடுத்துத் தரச் சொன்னாள்.

அவனோ, அவளிடம் வம்பு வளர்க்கும் பொருட்டு, "அப்போது போல் இப்போதும் என்னை மாமான்னு சொல்லு எடுத்து தரேன்.." என்றான்.

அவளோ, "அதுல்லாம் முடியாது.. அப்போது என் அக்காவுக்காகத் தான் சொன்னேன்.." என்று கூறியவள் திரும்பிச் செல்ல முயன்றாள்.

அவனோ, சட்டென்று அவளின் கைபிடித்து தடுத்து, "சரி.. சரி.. வெய்ட் பண்ணு எடுத்து தரேன்.." என்றவன் அவள் சொன்னப் பொருட்களைத் தேடினான்.

நிறையோ, யோசனையுடன் தன் மனதில் அரித்த சந்தேகத்தைக் கேட்டே விட்டாள். "நீங்க ஏன் என் சேலை கலரிலே சட்டை போட்டு இருக்கீங்க..?" என்றாள்.

அவனோ, தேடுவதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்தவன், "நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறே.. இப்ப‌ச் சொல் ஆமாம் நீ ஏன் என் சட்டைக் கலரில் புடவை கட்டியிருக்கே..?"

"பேச்சை மாத்தாதீங்க, நான் தான் முதலில் கேட்டேன். பதில் சொல்லுங்க.." என்றாள்.

அவனோ, பதிலே பேசாமல் நிற்கவும், "ஓ! அது தான் நான் இந்தப் புடவையை எடுத்தவுடன் நக்கலாக சிரித்தீங்களா! உங்களுக்கு எவ்வளவு தைரியம்! வேண்டுமென்றே உங்களுக்கு பிடித்த டிரஸை என்னை எடுக்க வைத்தீங்க.." என்று முகம் சிவக்க நின்றவளிடம்..

"இது என்னடா வம்பா போச்சு.. நீயா ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு எங்கிட்ட வேணும்ன்னு சண்டை போடாதே.."

"நான் ஒன்னும் வேணும்ன்னு சண்டை போடலை.. உண்மை அது தான்! அது உங்களுக்கே, நல்லாத் தெரியும்.." என்றவளிடம்..

"அச்சோ! நீ இவ்வளவு புத்திசாலியாக இருந்தால் நான் என்னமா செய்யட்டும்‌.. வருங்காலத்தில் என்பாடு திண்டாட்டம் தான் போல.. இருந்தாலும் என் குழந்தைகளுக்கும் இந்த அறிவு இருக்கும்னு நினைக்கும் போது எனக்கு ரொம்பவே‌ சந்தோஷமா இருக்கு.." என்றான் உதட்டோரம் சன்ன சிரிப்புடன்.

நிறைக்கோ, அவன் சொல்வது முதலில் புரியவில்லை.. புரிந்தவுடன் அவனை எரித்து விடுவது போல் பார்த்தவள், "நீங்க நினைப்பது கனவிலும் நடக்காது.. தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக்காதீங்க.." என்றாள் கோபமாக.

அவனோ, "நடக்குமா? நடக்காதோ? அதை காலம் முடிவு செய்யட்டும். அப்போது அதை பாரத்துக்கலாம். இந்தா, நீ கேட்டது.." என்று அவள் கேட்ட பொருட்களை அவளின் கைகளில் திணித்தான்.

அவளோ, கோபத்துடன் "உங்களுக்கு நல்ல முறையில் சொன்னால் புரியாதா? வீணா கஷ்டப்படுவீங்கன்னு சொன்னா.." என்றவளின் பேச்சு அப்படியே பாதியில் நின்றது.

உதியனம்பியோ, அவளின் அருகில் நெருங்கி நின்று, அவளின் கண்களைப் பார்த்தவாறு, "நீ என் மேல் நேசமில்லாத மாதிரி எப்படி நடித்தாலும், உன் கண்கள் உன் மனதை என்னிடம் அப்படியே காட்டிக் கொடுத்து விடுகிறது." என்றான்.

அவளோ, "அப்படியெல்லாம் இல்லை.. நீங்களே ஏதோ நினைச்சுட்டு உளராதீங்க.." என்றவளின் வாயில் கைவைத்து அவள் பேசுவதைத் தடை செய்தவன்,

"ப்ளீஸ் என் நல்ல மூடை கெடுக்காதே.. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. என் அன்பு உண்மையாக இருந்தால் நான் நினைத்தது நடக்கும்.." என்றவன், அவன் தொடுகையில் உறைந்து நின்றிருந்தவளின் இதழ் வடிவங்களை மென்மையாக ஒரு முறை வருடியவன், அடுத்த வினாடி அங்கிருந்து சென்றிருந்தான்.

நிறையோ, சில நிமிடங்கள் சிலையாக நின்றிருந்தவள், அருகில் கேட்ட தன் தாயின் அழைப்பில் தான் நிகழ்வுக்கு வந்தாள்.

உதியனம்பியை அதன் பிறகு அவள் பார்க்கவே இல்லை.. அவனுக்கு வேலை தலைக்கு மேல் இருந்தது. மணமக்கள் வீடு சென்ற பின், மண்டபத்தின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு இரவு தான் வீட்டிற்குச் சென்றான்.

ஓய்ந்துப் போய் வீடு வந்த மகனை வழக்கம் போல் மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் தாழ்குழலி.

உதியனம்பியோ, எப்போதும் போல் தாயின் மடியில் தலை சாய்ந்தான்.. தாழ்குழலியோ, மகனின் தலையை மென்மையாக வருடியபடியே, "உதிம்மா வேலை எல்லாம் முடிந்ததா? ரொம்ப களைப்பா இருக்காப்பா? சாப்டியா?" என்றவரிடம்..

"அத்தை வீட்டிலேயே சாப்ட்டேன் மா.. கொஞ்சம் இன்னைக்கு வேலை அதிகம்.. அது தான் டையர்டா இருக்குமா.."

"அதுமட்டுமா உதிம்மா! வீட்டு ஓனரை நான் கல்யாணத்தில் பார்த்தேன்.. நீ எங்கிட்ட என்ன மறைச்சாலும் எனக்கு தெரியாம போகுமா? நீ அதையே நினைச்சு வருந்தாதேப்பா... எல்லாம் சரியாகும். உன் மனக்கவலை தான் உன்னை இந்தளவு களைக்க வைத்திருக்கு.." என்றவரை திகைத்துப் பார்த்தான்.

அவனின் மனதில் தாய் வருந்துவாரே! என்று தானே அந்த விஷயத்தை தன் அன்னையிடம் மறைத்தான்.. ஆனால் அவருக்கு தெரிந்து விட்டதே! என்று கலங்கினான்.

மகனின் திகைத்த பார்வையை எதிர் நோக்கிய படியே, "உதிம்மா நீ மனதைப் போட்டு குழப்பிக்காதே! மாமாவுக்கு இது தெரியாமல் பார்த்துக்கோப்பா. ஏற்கனவே அவருக்கு கல்யாண செலவும் ரொம்ப அதிகமா ஆகியிருக்கும் போல.. இதுவும் தெரிந்தால் தாங்க மாட்டார்.." என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே..

"அம்மாவும் மகனும் இப்படி என்னை நன்றிக்கடன் பட வைக்கிறீங்களே! நான் என்ன செய்வேன்.." என்ற குரலில் தூக்கி வாரிப்போட இருவரும் திரும்பினார்கள்.

அங்கே ஆடலரசு குற்றம் சாட்டும் பார்வையுடன் ஓய்ந்துப் போய் நின்றிருந்தார்.

தொடரும்..

Hi friends,
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் நாளை காலை..
இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்


 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 6

ஆடலரசை கண்டவுடன் இருவரும் ஒரு நொடி கலங்கிவிட்டனர். அதுவும் அவரை இன்று இந்த நேரத்தில் எதிர்பார்க்கவே இல்லை.
உதியனம்பி சட்டென்று சுதாரித்து எழுந்தவன்.. "வாங்க மாமா.." என்றவன், தன் மாமாவிற்கு அமர்வதற்கு நாற்காலியை எடுத்துப் போட்டான்.

தாழ்குழலியும், "வாங்கண்ணா.." என்று வரவேற்றவர், அவருக்கு குடிக்க நீர் எடுத்து வந்து கொடுத்தார்.

ஆடலரசோ, தங்கை கொடுத்த நீரை அருந்தி.. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

உதியனம்பியோ, ஆடலரசு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் வரை அமைதியாக இருந்தவன், "மாமா ஏதாவது அவசரமென்றால் எனக்கு ஒரு போன் செய்து இருக்கலாமே! இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா?" என்றான்.

தாழ்குழலியும், "உதி சொல்றமாதிரி ஒரு போன் செய்திருக்கலாமே அண்ணா.. உங்களுக்கு எத்தனை வேலை! அத்தனையும் பார்த்துட்டு ஓய்வு எடுக்காமல் இந்த நேரத்தில் இங்கு தனியா வந்திருக்கீங்க.." என்று புலம்பியவரிடம்..

"நான் அப்படி உங்களுக்கு என்னம்மா செய்துட்டேன்.. அம்மாவும் மகனும் என்னை இப்படி தாங்குறீங்க! எனக்கு குற்றவுணர்வில் மனசு கிடந்து தவிக்குத்தம்மா.."

"அண்ணா என்ன வார்த்தை சொல்றீங்க.. நீங்க என்ன தப்பு செய்தீங்க குற்றவுணர்வு வருவதற்கு.. ஏன்? அண்ணா! என்னாச்சு, பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க.."

"போதும்மா என்னால் முடியலை.. எல்லாம் எனக்கு தெரியும் வீட்டு ஓனர் என்னிடம் சொல்லிட்டார்.." என்றவுடன் தாயும் மகனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆடலரசோ, அவர்களின் திகைத்த பார்வையை வருத்தத்துடன் கண்டவர், "நான் செய்த ஒரு தவறால் இன்று நீங்கள் இப்படி நடுத்தெருவில் நிற்கிறீங்களே.." என்று கண்கலங்கியவரை கண்ட உதியனம்பி ஓடிவந்து அவரின் காலடியில் அமர்ந்தவன்..

"மாமா அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. என்ன இது! நீங்க குழந்தை மாதிரி கண்கலங்கிட்டு.. எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க.." என்றான்.

ஆடலரசோ, "தன் காலடியில் அமர்ந்திருந்தவனின் தலையை வருத்தத்துடன் தடவியவர், உன்னை மாதிரி ஒரு மருமகன் கிடைக்க நான் என்ன தவம் செய்தானோ தெரியலை.. உன் உழைப்பை உறிஞ்சும் அட்டையாய் நான் இருக்கேனே.." என்று வருந்தியவரிடம்..

"ஏன் மாமா இன்று இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க..? இனிமேல் எப்போதும் இது போல் பேசாதீங்க.. என்னால் தாங்க முடியாது.." என்று அவரின் மடியில் முகம் புதைத்தான்.
தாழ்குழலியோ, "இன்னைக்கு என்னாச்சுண்ணா இந்த மாதிரி எங்களை பிரித்து பார்த்து பேசறீங்க.." என்று கலங்கினார்.

ஆடலரசோ, தன் மடியில் முகம் புதைத்திருந்த மருமகனின் தலையை வருடியபடியே, "என்னை என்னச் செய்ய சொல்றமா.. வீட்டை ஓனர் வேறு ஒருவருக்கு வித்துட்டேன்னு சொல்றார்.. அதுவும் வீட்டை வாங்கியவர் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லுறாங்கன்னு கேள்விப்பட்டதிலிருந்து என் நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு.." என்றார்.


உதியனம்பியோ தலையை நிமிர்த்தி, "மாமா அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க வருத்தப்படாதீங்க .." என்றவுடன்..

அவரோ, "எப்படி நம்பி இவ்வளவு ஈஸியா சொல்றே.. என் முட்டாள்தனத்தால் உங்களுக்கு எத்தனை கஷ்டம்.. என் நண்பனென்று நான் அவனை நம்பி போட்ட ஜாமீன் கையெழுத்தால் வந்த வினை.." என்று தவித்தவரிடம்..


"மாமா நீங்க என்ன வேணும்னா செய்தீங்க..? விடுங்க பழசை இப்ப எதற்கு பேசிட்டு.." என்றவனிடம்..
"நீ இப்போ கஷ்டப்படும் போது நான் எப்படிப்பா அதை நினைக்காமல் இருக்க முடியும். பத்து லட்சம் என்பது சாதாரணமா? அவன் இப்படி கடன் வாங்கிட்டு ஓடுவான்னு நினைக்கலையே.." என்று புலம்பினார்.


நான்கு வருடங்களுக்கு முன்.. தன்னுடன் படித்த நண்பர் ஒருவரின் அவசர தேவைக்காக, ஃபைனான்ஸ் ஒன்றில் பத்து லட்சம் கடன் வாங்கியதுக்கு ஆடலரசு தான் ஜாமீன் கையெழுத்து போட்டார்.


நண்பரோ, இரண்டு மாதம் ஒழுங்காக பணம் கட்டியவர், அப்புறம் கட்ட முடியாமல் குடும்பத்துடன் தலைமறைவாகிட்டார்.. அந்த கடனை, ஜாமீன் போட்ட ஆடலரசை கட்டச் சொல்லி, ஃபைனான்ஸ்காரர் மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆடலரசுக்கோ, என்ன செய்வதென்றே தெரியவில்லை.. பெண்கள் இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஃபைனான்ஸியர் காவல்துறையிடம் சென்றால், இவர் வேலைக்கே ஆபத்து.. இவரோ.. திக்கு தெரியாமல் கதிகலங்கி நின்றார்.


எந்த வழியும் தெரியாமல் கடனை அடைக்க, தன் வீட்டை விற்பதற்கு விலை பேசினார். இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட தாழ்குழலியும், உதியனம்பியும் பெண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு நாளை எங்கு போவீர்கள்.. வாடகை வீடெல்லாம் சரிவராது.. என்று வற்புறுத்தி அவர் வீட்டை விற்பதை தடுத்தார்கள்.


ஆடலரசு கட்டவேண்டிய பணத்திற்கு, தாயும், மகனும் தாங்கள் குடியிருந்த வீட்டை அவர் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் விற்றனர்.


பதினைந்து லட்சத்திற்கு மேல் பெறுமானம் உள்ள வீட்டை, வந்த விலைக்கு விற்று, பத்துலட்சத்தை அப்படியே கொண்டுவந்து கடனை அடைக்க ஆடலரசிடம் கொடுத்தார்கள்.


ஆடலரசும், செந்தழையும் எத்தனையோ மறுத்து பேசியும்.. அம்மாவும் மகனும் கேட்கவே இல்லை. தங்களின் ஒரே சொத்தை விற்று அவரின் மானத்தை காப்பாற்றினார்கள்.


உதியனம்பியோ, தங்கள் வீட்டை வாங்கியவரிடமே, அதே வீட்டில் தாங்கள் வாடகைக்கு இருப்பதற்கு சம்மதம் வாங்கியிருந்தான்.
இத்தனை நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் ஓடியது. இப்போது அந்த ஓனருக்கு ஏதோ அவசரமென்று, வேறு ஒருவருக்கு வீட்டை விற்றுவிட்டார். புது ஓனர் இப்போது வீட்டைக் காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்.



உதியனம்பிக்கே, இந்த விசயம் ஒரு வாரம் முன்பு தான் தெரியும். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. சென்ற மாதம் வீட்டு ஓனர் யாரோ ஒருவருடன் வீட்டை வந்து பார்த்ததாக தாழ்குழலி மகனிடம் சொன்னார். ஆனால் உதியனம்பி அப்போது அதை பெரிதாக நினைக்கவில்லை.
தன் தகப்பனின் நினைவாக! தன் அன்னை கருதும் இந்த வீட்டை விட்டு போக அவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை.

எப்படியாவது புது ஓனருடன் பேசி.. இங்கேயே இருக்க சம்மதம் வாங்க வேண்டும்.. அதுவரை தன் தாயுக்கும், மாமனுக்கும் இது தெரியக் கூடாது என்று எண்ணினான்.


ஆனால், இன்று அவன் நினைத்தது நடக்கவில்லை. ‌இருவருக்குமே அது தெரிந்து விட்டது. அவன் மனதில் ஏதோ பெரிய பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் பாரமாக இருந்தது.


ஆடலரசோ, "நம்பி கொஞ்சம் எழுந்திருப்பா.." என்றவர், தானும் எழுந்து கொண்டு, "நம்பி தயவுசெய்து இதை வாங்கிக்கோப்பா.." என்று தன் கையிலிருந்த துணிப்பையை மருமகனிடம் கொடுத்தார்.


உதியனம்பியோ, அதை வாங்காமல் தன் மாமனை புரியாமல் பார்த்தான்.
அவரோ, "நம்பி இதில் மூன்று லட்சம் இருக்கு.. இதை இப்போது வீட்டை வாங்கியவரிடம் கொடுத்து.. வீட்டை ஒத்திகைக்கு இரண்டு வருடத்திற்கு எழுதிக் கொள்ளப்பா.. அதற்குள் எப்படியாவது இந்த வீட்டை திரும்ப வாங்கி விடலாம்.." என்றவரை தாயும், மகனும் புரியாமல் பார்த்தனர்.



ஆடலரசோ, "நான் இப்போது வீட்டை வாங்கியவரிடம் பேசிவிட்டேன்.. அவர் ஒத்திகைக்கு சம்மதித்து விட்டார்.." என்றவரிடம்,


உதியனம்பியோ, "மாமா இப்போது இவ்வளவு பணம் உங்களுக்கு ஏது? அதுவும் பனி கல்யாணமும் இன்று தானே முடிந்து இருக்கு.. அதற்கே நிறைய செலவு வேறு.." என்றவனிடம்..



"நம்பி ஒரு லட்சம் மொய்பணம்ப்பா.. மீதி இரண்டு லட்சம் கல்யாண செலவுக்காக.. எதற்கும் இருக்கட்டுமென்று லோன் போட்டு எடுத்து வைத்திருந்த பணம்.." என்றார்.


உதியனம்பியோ, "மாமா என்ன காரியம் செய்றீங்க, இன்னும் பனிக்கு வீட்டுக்கு தேவையான சாமானம் வாங்கித் தரணும், அதுமட்டுமில்லாமல் சமையல்காரருக்கும் பணம் தரணும் முதலில் அதை எல்லாம் சரி பண்ணுங்க.." என்றான்.


ஆடலரசோ தாழ்குழலியைப் பார்த்தார். அவரோ மகன் சொல்வதை ஆமோதிப்பது போல் நின்றிருந்தார்.
ஆடலரசோ பிடிவாதமாக, "அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ முதலில் இதை வாங்கி நான் சொல்வதை நாளைக்கே செய்யப்பா.. ஓனர் மனம் மாறுவதற்குள் ஒத்திகைக்கு எழுதி விட வேண்டும்.." என்றார்.


உதியனம்பியோ அவர் தந்ததை வாங்காமல் அசையாமல் நின்றிருந்தான்.
ஆடலரசோ, தன் பொறுமையை கைவிட்டவர், "நம்பி நீ என் மீது கொஞ்சமாவது மரியாதை வைத்திருந்தால் நான் சொல்வதைக் கேளு.." என்றவுடன்..


"மாமா இந்த பணம் இப்போது உங்களுக்குத் தான் அவசியம்‌.. நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்.."
"நீ மட்டும் இப்போது இதை வாங்கவில்லையென்றால் நான் குற்றவுணர்வில் செத்து விடுவேன்.." என்றார் மிகுந்த வருத்தத்துடன்.


அவர் சொல்லியதைக் கேட்டு திகைத்துப்போய், "மாமா‌.." என்று உதியனம்பியும், "அண்ணா .." என்று தாய்குழலியும் கத்திவிட்டார்கள்.


"மாமா தயவுசெய்து இனிமேல் இந்த மாதிரி பேசாதீங்க.. நான் பணத்தை வாங்கிக்கிறேன். எதற்கும் அத்தையிடம் ஒரு வார்த்தை கேளுங்க.."
"உன் அத்தை தான் முதலில் இந்த பணத்தைக் கொடுத்துட்டு வாங்கன்னு என்னை அனுப்பி வைத்தாள்.." என்றார்.


தயங்கி நின்ற மருமகனை இழுத்து அணைத்துக் கொண்டவர், "நான் நிலை தெரியாமல் தவித்த போது, நான் கேட்காமலேயே குலசாமியாட்டம் நீ என் மானத்தைக் காப்பாத்தினாயே, உனக்கொரு கஷ்டம்ன்னா இந்த மாமனால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?" என்று நா தழு..தழுக்க சொன்னவரை இன்னும் ஆதரவாக கண்கலங்க அணைத்துக் கொண்டான் உதியனம்பி.
தாழ்குழலியோ, கண்களில் நீர் வடிய அவர்களின் பாசப்போராட்டத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
உதியனம்பியோ, அவர் கொடுத்த பணத்தில் இரண்டு லட்சத்தை மட்டும் வாங்கிக் கொண்டு மீதி ஒரு லட்சத்தை திருப்பிக் கொடுத்தான்.
அவர் புரியாமல் பார்க்க.. "மாமா இதில் பனிக்கு அவள் புகுந்த வீட்டிற்கு போகும் போது தேவையான சாமான்களை வாங்கிக் கொடுங்க.. நான் மீதியை ஏற்பாடு செய்துக்கிறேன்.." என்றவனை என்ன சொல்வதென்றே தெரியாமல் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தாயுமானவர்.


தாழ்குழலியோ, தன் மகன் தன் அண்ணனின் நிலை அறிந்து நடந்து கொள்வதை நினைத்து மகிழ்ந்தார்.


ஆடலரசும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை.. உதியனம்பி இந்தளவு ஒத்துக்கொண்டதே பெரிது என்று நினைத்தவர் அவனுடனேயே வீடு சென்றார்.
அடுத்த நாள் தன் மாமன் சொன்னதைப் போலவே உதியனம்பி, ஒத்திகைக்கு தாங்கள் குடியிருந்த வீட்டை எழுதிக் கொண்டான்.


நாட்கள் தெளிந்த நீரோடையாக நகர்ந்தது. சேத்தனும், பனிநிலவும் தங்கள் வாழ்க்கையை அழகாக தொடங்கினார்கள்.


சேத்தன் மருமகன் போல் இல்லாமல், இன்னொரு மகனாகவே இருந்தான். நிறையாழியை தன் உடன்பிறவா சகோதரியாகவே நினைத்தான்.


நிறையாழியின் குறும்புத்தனமும், பேச்சும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தனக்கு தங்கை இல்லையென்ற குறை தீர்க்க வந்த பெண்ணாகவே அவளைக் கருதினான்.


நிறையாழியோ, தனது முதுகலைப் படிப்பை முடித்தவள், அடுத்து எம்.பில் படிப்பில் அடம்பிடித்து சேர்ந்தாள்.


உதியனம்பியோ, வழக்கம் போல மாமன் வீட்டிற்கு வந்து போய்க்கொண்டு தான் இருந்தான். ஆனால், நிறையோ சுத்தமாக அவனை மதிக்காமலே சுற்றிக் கொண்டிருந்தாள்.


சேத்தனுக்கும், உதியனம்பிக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது.
உதியனம்பியின் அறிவையும், உழைப்பையும் கண்டு சேத்தன் பல முறை வியந்துள்ளான். இன்னும் படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருப்பான் என்று நினைப்பான்.. அதை நம்பியிடமும் தயங்காமல் சொல்லுவான்.


ஆனால் நம்பியோ, சேத்தன் சொல்லும் பொழுதெல்லாம் மென் சிரிப்புடன் அதை கடந்துவிடுவான்.


நிறை என்ன தான் நம்பியை உதாசீனப்படுத்தினாலும், தன் அத்தையை கவனித்துக் கொள்வதில் மட்டும் குறையே வைக்க மாட்டாள்.. அவர் ரெகுலர் செக்கப் தேதியை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதுடன், முடிந்தால் தானும் கூட சென்று வருவாள்.
உதியனம்பியோ, நிறை எப்படி நடந்து கொண்டாலும் அதைக் கண்டு கொள்ளாமல், அவள் கல்லூரிக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் அவளை பின் தொடர்ந்தான்.
நிறையும், உதியனம்பி பின் தொடர்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஆனால், அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் இவளை அவனுடன் சேர்த்து வைத்து பேசி கேலி செய்யவும், நிறைக்கு அது மிகுந்த அவமானமாக இருந்தது.
அன்று இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தவள், கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது உதியனம்பிக்காக காத்திருந்தாள். ஆனால் அன்று அவன் ஏனோ வரவில்லை.


நிறையோ, அவனுக்காக காத்திருந்தவள் அவன் வராததால் நேராக உதியனம்பியின் கடைக்குச் சென்றாள்..


ஆனால் அங்கு நம்பி இல்லை.. சங்குமணி தான் இருந்தான். உதியனம்பிக்கு காய்ச்சல் என்று கட்டாயப்படுத்தி அவனை ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்.

நிறை கடைக்கு வந்ததை ஆச்சரியமாக பார்த்த சங்குமணி, "என்ன அக்கா கடைக்கு வந்திருக்கே! ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.

நிறையோ, "உன் அண்ணன் இல்லையா..?” என்றவளிடம்..

"அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை.. மதியம் நான் தான் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.."

"ஓ!.." என்றவள், 'மனதிற்குள் இன்று அந்த நம்பியார் தப்பிச்சுட்டான்..' என்று நினைத்தாள்.

சங்குமணியோ, "என்ன விசயம்க்கா.. ஒரு நாள் கூட அண்ணாவைப் பார்க்காமல் இருக்க முடியலையா?" என்றவனை கோபமாக பார்த்தவள்..

"நான் செம டென்ஷன்ல வந்தேன்.. உங்க அண்ணன் மட்டும் இப்ப இருந்திருந்தா! நடப்பதே வேறு.. அவருகிட்ட சொல்லி வை. இனி என் பின்னாடி வரவேண்டாம்ன்னு.. அப்படி வந்தா நான் மனுசியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."


"இப்ப மட்டும் நீ மனுசியாவா இருக்கே?" என்றவனை கொலைவெறியில் பார்த்தவள்..

"டேய் சங்கு பேசாம ஓடிடு.. இல்லைன்னா உனக்கு சங்கூதிடுவேன்.." என்றவளிடம்.

"ஏக்கா எப்ப பாரு சங்கு.. சங்குங்கிற, என் பேரு சங்குமணி. மணின்னு கூப்பிடலாம் தானே.."


"உன் இஷ்டத்திற்கு அப்படியெல்லாம் கூப்பிட முடியாது. உன் அண்ணனையே நான் நம்பியார்ன்னு தான் கூப்பிடுவேன் பெருசா சொல்ல வந்துட்டான்.."

"ம்ஹும் மத்தவங்ககிட்டத் தானே அப்படி சொல்றே.. எங்கே உனக்கு தைரியம் இருந்தா எங்க அண்ணகிட்ட நம்பியார்ன்னு சொல்லேன் பார்ப்போம்.."

"டேய் என்ன என்னால முடியாதுன்னு நினைக்கிறாயா? வரச்சொல் உங்கண்ணனே.. அந்த நம்பியாரை நான் சொல்றேனா? இல்லையான்னு பாரு.."

"அவரை நீ எப்படியோ ஆசையா கூப்பிட்டுக்கோ.. ஆனா அண்ணே பாவம் கா. உனக்காக டெய்லியும் வேலை வெட்டி உட்டுப்புட்டு உன் பின்னாடி வருது. அது மனசை நோகடிக்காதே அக்கா.."

"டேய் நானா என் பின்னாடி வரச் சொன்னேன். என் மானத்தை வாங்கவே உன் அண்ணே என் பின்னாடி வரான்.. என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி எனக்கு அவமானமா இருக்கு.."

"என்ன செய்ய எனக்குந்தான் அவமானமா இருக்கு, ஊர் உலகத்திலே வேறு பொண்ணா இல்லை. போயும்.. போய் உன் பின்னாடி சுத்துதேன்னு.."

"டேய் என்ன லொள்ளா.. என்னை வெறுப்பேத்தாமே.. மரியாதையா நான் சொன்னதை உங்க லொண்ணகிட்ட சொல்லிடு புரியுதா? இல்லைன்னா உனக்கு சங்கு தான் ஞாபகம் வச்சுக்கோ.." என்றாள்.

மணியோ, அவள் சொன்னதைப் பொருட்படுத்தாமல், "ஏக்கா அண்ணாக்கு என்ன குறைச்சல்.. ஏன் அண்ணாவை உனக்கு பிடிக்கலை .."

"அதை எல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது போடா.."

"நல்லவங்களுக்கு காலமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.." என்று வாய்க்குள் முனங்கியவனிடம்..

"எனக்கு எந்த நல்லவனும் வேண்டாம்.." என்று அவளும் முனங்கியபடியே கோபமாக வீடு நோக்கிச் சென்றாள்..

அடுத்த நாள் அவள் கல்லூரிக்குச் செல்லும் போது உதியனம்பி அவள் முன் வந்து நின்றான்.

அவளோ யோசனையாக அவனைப் பார்த்தாள்.
உதியனம்பியோ, அவளின் யோசனையான முகத்தைப் பார்த்துக் கொண்டே, "என்ன விசயம் நிறை, என்னைத் தேடிட்டு கடைக்கெல்லாம் வந்திருக்கே.. ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

சங்கு மணியோ, நிறை தேடி வந்ததை மட்டும் தான் சொல்லியிருந்தான். உதியனம்பி வருந்துவான் என்று நினைத்து, அவள் சொன்னதைச் சொல்லாமல் விட்டு விட்டான்.

நிறையோ, ஆமாம் ஒரு பிரச்சனை தான்.. இப்போ எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு .. ஈவினிங் வாங்க பேசிக்கலாம்.." என்றாள்.

உதியனம்பியோ, மாலை அவள் தன் மனதை சுக்குநூறாக நொறுக்கப் போவதை அறியாமல், தன்னுடன் பேச வரச் சொன்னதை நினைத்து மகிழ்ச்சியுடன் சென்றான்.
தொடரும்..
Hi friends,
தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் நாளை..இன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 7


உதியனம்பி எப்போது மாலை நேரம் வருமென்று காத்திருந்தான். அவன் மனமோ சலசலக்கும் அருவியைப் போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

அவனின் மனதிற்கினியவள், "உங்களுடன் இன்று பேசனும் மாலை வாங்க.." என்று கூறியதிலிருந்தே அவன் ஒரு நிலையில் இல்லை.. பதினாறு வயது விடலைப் பையன் போல் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தான்.





சங்கு மணி கூட அவனின் நிலை கண்டு ஆச்சரியப்பட்டான்.. தன் அன்பு அண்ணன் எப்போதும் இதுபோல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.



சரியாக நிறையாழி வரும் நேரத்திற்கு உதியனம்பி மிக நேர்த்தியாக தயாராகி சென்று, பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தான்.





நிறையின் வருகைக்காக அவனின் கண்கள் வழி மீது விழி வைத்துக் காத்திருந்தது.

நிறையோ சரியான நேரத்திற்கு வந்தாள். அவளின் கண்களும் அவனையே தேடியது!

நிறை தன்னைத் தேடுவதைக் கண்டு மனதில் மகிழ்ச்சியுடன் உதியனம்பி அவள் முன்பு சென்று நின்றான்.

நம்பியைக் கண்டதும் நிறையாழி மனதில் நிம்மதியுடன், "வாங்க அங்கே பக்கத்திலிருக்கும் பூங்காவிற்குப் போய் பேசலாம்.." என்று கூறியபடியே, பூங்காவை நோக்கி சென்றாள்.

உதியனம்பியும் அமைதியாக அவள் பின் சென்றான்.





பூங்காவில் இருவரும் காலியாகயிருந்த சிமிண்ட் நாற்காலியைத் தேடி அமர்ந்தார்கள்.





இருவரும் சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. அங்கு விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

நிறையோ மனதிற்குள் எப்படி சொல்வது‌ என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.





உதியனம்பியோ, அவளை யோசனையாக பார்த்தபடியே, "நிறை ஏதோ சொல்ல வேண்டுமென்றாயே.." என்று பேச்சைத் தொடங்கினான்.





நிறையோ, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு ஒரு நொடி திகைத்தாள்.



தான் சொல்ல வந்ததை எப்படி சொல்வது என்று ஒரு வினாடி குழம்பினாள். அடுத்த வினாடி தன் குழப்பத்தை தூக்கி எறிந்தவள்,

"நீங்க நினைப்பது என்றும் நடக்காது. தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக்காதீங்க.." என்றாள்.



"நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு தெரியுமா?"





"ஏன் தெரியாது!? நன்றாகத் தெரியும்.. நீங்கள் என் பின்னாடி சுத்துவதிலிருந்தே அது தெரியாமல் போகுமா?"



"சரி அதிலென்ன தவறு.." என்று கேட்டவன், தன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படியே அவளையே பார்த்தான்.





"இங்கே பாருங்க எனக்கும், உங்களுக்கும் சுத்தமாக ஒத்துவராது.."





"அது தான் ஏன்? என்று கேட்கிறேன்.."



"உங்களுக்கு நல்லபடியா சொன்னா புரியாதா? நான் இரண்டு டிகிரி முடித்து இருக்கேன்.. இப்போது எம்.பில் படிக்கிறேன்.. நீங்க வெறும் பத்தாவது .."





"படிப்பு தான் உனக்கு பிரச்சனையா?"

"படிப்பு மட்டுமில்லை.. நீங்க ஒரு மெக்கானிக்.. உங்க தொழிலும் எனக்கு பிடிக்கலை.."





"என்னை பிடித்து இருக்கா?" என்றான்.





அவளோ பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்.





"நிறை நான் கேட்டதற்கு பதில் சொல்லு.."



"பிடிக்கல.." என்று நிறை சட்டென்று சொன்னாள்.



உதியனம்பியோ, ஒரு நிமிடம் அவளின் பதிலில் கலங்கினாலும், "நிறை பொய் சொல்லாமல் என் கண்களைப் பார்த்து சொல்லு.."





"பிடிக்கல.. பிடிக்கல.. எத்தனை முறைதான் சொல்வது.. ஒரு மெக்கானிக் எனக்கு கணவனா? என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலை.."



"ஏன்? அந்த தொழிலுக்கு என்ன குறைச்சல்.. நான் உழைத்து தானே பிழைக்கிறேன்.."





"நான் குறைச்சல் என்று சொன்னேனா? எனக்கு கணவரா வருபவர், எப்படி இருக்க வேண்டுமென்று எனக்கும் சில எதிர்பார்ப்பு இருக்கு. அதைத் தான் சொன்னேன்.."





"ஏன்? அந்த எதிர்பார்ப்பு என்னிடம் பூர்த்தியாகவில்லையா?" என்றான் ஏக்கத்துடன்!





"இல்லவே இல்லை.. என்னால் உங்களை கணவனாக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. நீங்க என் பின்னால் சுத்துவதைப் பார்த்து.. என் ஃப்ரெண்ட்ஸ் நம் இருவரையும் இணைந்து கேலி செய்கிறார்கள். அதைக் கூட என்னால் பொறுக்க முடியாமல் தான் உங்களிடம் பேச வந்தேன்.."







"நிறை உன் எதிர்பார்ப்பு என்னவென்று எனக்கு தெரியலை.. ஆனால் உனக்கு என் படிப்பும், தொழிலும் பிரச்சனை என்றால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.."

என்றவன், ஒரு நிமிடம் கண்களை இறுக மூடித் திறந்தவன் தொடர்ந்து..



"எனக்கும் படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைய இருந்தது. குடும்ப சூழல் அதற்கு ஒத்துவரவில்லை. என் படிப்புக்கு இந்த மெக்கானிக் தொழில் தான் குடும்ப கஷ்டத்தைப் போக்க அப்போது உதவியது.



திருடாமல், பொய் பேசாமல், நேர்மையாக மற்றவர்களை பாதிக்காமல் செய்யும் எந்த தொழிலுமே என்னைப் பொறுத்தவரை உயர்ந்தது தான்.." என்றான்.





அவளோ எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தாள்.





"நிறை வாழ்க்கையில் படிப்பு முக்கியம் தான். ஆனால் அதைவிட, ஒழுக்கமும், நற்பண்பும், நேர்மையும் மிக முக்கியம். அது என்னிடம் இருக்கிறது என்பது உனக்கே தெரியும். படிப்பும், தொழிலையும் தவிர வேறு ஏதாவது குறை என்னிடம் இருந்தால் சொல். அதை நான் மாற்றிக் கொள்கிறேன்.."





"உங்களிடம் குறை கண்டுபிடிக்குமளவு நான் பெரிய ஆள் இல்லை.. உங்கள் மீது எனக்கு நேசம் வரவில்லை. புரிந்து கொள்ளுங்கள். காதல் தானாக வரவேண்டும். அது கட்டாயப்படுத்தி வரக்கூடாது. இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை.."





"கண்டிப்பா காதல் கட்டாயப்படுத்தி வரக் கூடாது தான். ஆனால் படிப்பையும், தொழிலையும் வைத்து நீ என்னை நிராகரிப்பதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.."





"உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்வது. என் எதிர்பார்ப்புக்கு நீங்க இல்லை. எந்த நிலையிலும் உங்கள் மீது எனக்கு காதல் வராது. ப்ளீஸ் இனி என் பின்னாடி சுத்தாதீங்க. அது எனக்கு அவமானமாக இருக்கு. நீங்க விரும்பும் அளவு நான் தரம் குறைந்து போகவில்லை.." என்றாள் தான் என்ன பேசுகிறோம் என்று உணராமலேயே..







உதியனம்பியோ, அவளின் வார்த்தைகளைக் கேட்டு உறைந்துப் போனான்.



அவளோ, தன் அருகிலிருப்பவன் சுக்கு நூறாக நொருங்கி இருப்பதை அறியாமல், மேலும் விஷத்தைக் கக்கினாள்.





"இதுவே கடைசியாக இருக்கட்டும். கொஞ்சமாவது உங்களுக்கு ரோஷம் இருந்தால் இனி என் முகத்தில் முழிக்காதீர்கள். என்னிடம் பேசாதீர்கள். உங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் வழியைப் பாருங்கள்.. இனி பேச எதுவுமில்லை.. நான் வருகிறேன்.." என்று கூறியவள், அவனை திரும்பி கூட பார்க்காமல் சென்றாள்.







தனக்கு திருமணம் அவனோடு தான் விதி கணித்திருக்கிறது! என்று அறியாமல் வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டு சென்றிருந்தாள்.





உதியனம்பியோ, தன்னுள் ஏதோ ஒன்று செத்துக் கொண்டிருப்பதைப் உணராமல் இடிந்து போய் அமர்ந்திருந்தான்.





எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது. அவன் மனம் அழுது கொண்டிருப்பதைப் போல் வானமும் அன்று பொத்துக் கொண்டு அழுது தீர்த்தது.





எப்படி நினைவு வந்து வீடு வந்தானோ! அவனே அறியவில்லை.





தாழ்குழலியோ, மகன் வழக்கமாக வரும் நேரத்தைக் கடந்தும் இன்னும் வரவில்லையே! மழை வேறு இப்படி கொட்டி தீர்க்கிறதே! மகன் பத்திரமாக வீடு வந்து சேரனும் என்று மனதிற்குள் கடவுளிடம் வேண்டியபடியே வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.







அவர் வேண்டுதல் கடவுளின் காதுகளுக்கு சென்றது போல்! உதியனம்பி மழையில் முழுதும் நனைந்தபடி வீடு வந்தான்.





தாழ்குழலியோ, மகன் வந்திருந்த நிலையைக் கண்டு திகைத்தவர், உடனே ஒரு துண்டை எடுத்து வந்து மகனின் தலையைத் துடைத்தபடியே, "என்னப்பா சின்னப்பிள்ளையாட்டம் இப்படி மழையில் நனைஞ்சுட்டு வந்திருக்கே.." என்று கடிந்து கொண்டார்.







அவனோ, தலை துடைத்து கொண்டிருந்த தாயின் கைகளைப் பிடித்து தடுத்த படியே, அம்மா நான் கொஞ்ச நேரம் உங்க மடியிலே படுத்துக்கட்டுமா?" என்றான்.





தாழ்குழலியோ, மகனின் சோர்ந்த முகத்தைக் கண்டவர், "சரிப்பா.. நீ முதலில் இந்த ஈரத் துணியை மாத்திட்டு வா.." என்றார்.





அவனும் தாய் சொல்லைத் தட்டாமல் உடையை மாற்றிவந்தவன், தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.





தாழ்குழலியோ, மகனின் ஈரத் தலையை துடைத்து படியே அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் தன் மடியில் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்தவர், பதறிப் போய் மகனின் முகத்தை நிமிர்த்தி பார்த்தார்.





மகனின் கண்களில் கண்ணீரைக் கண்டு அதிர்ந்தவர், "உதிம்மா என்னாச்சுப்பா..?" என்று துடித்துப் போய் கேட்டார்.





நம்பியோ தாயின் கேள்விக்கு பதில் கூறாமல்.. தன் கவலையின் புகழிடமாக மீண்டும் தாயின் மடியையே நாடினான்.





தாழ்குழலியோ, மகனின் நிலைகண்டு மனதிற்குள் கலங்கித் தவித்தார். தன் கணவர் நிராதரவாக தங்களை விட்டுச் சென்ற போது கூட கலங்காதவன்! வயதுக்கு மீறிய சுமைகளைச் சுமந்து தன் குடும்பத்தைத் தலை நிமிரச் செய்தவன், இன்று சிறுபிள்ளைப் போல் கண்ணீர் விடுவதைக் கண்டு தாயுள்ளம் பரிதவித்தது.





தன் தவிப்பை புறந்தள்ளிவிட்டு, மகன் தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பணத்தை புரட்ட முடியாமல் தான் தவிக்கிறானோ‌? என்று நினைத்து, "உதிம்மா எது நமக்கு கிடைக்கனும்னு இருக்கோ அது நிச்சயம் கிடைக்கும்.. ஒன்று நம் கைநழுவி போகுதென்றால் அதை விட நல்லதாக வேறொன்று நமக்கு கிடைக்கும். நீ எதற்கும் கவலைப்படாதேப்பா.. " என்று பெருமூச்சு விட்டார்.







நம்பியோ அமைதியாகவே படுத்திருந்தான். மகனின் அமைதியைக் கண்டு வருந்திய தாழ்குழலி,

"உதிம்மா எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும்.. பிரச்சனையைக் கண்டு கலங்கினால் அது நமக்கு பூதாகரமாகத் தான் தெரியும்.. எது வந்தாலும் பார்த்துக்கலாமென்று நினை! எளிதாக அதை கடந்து விடலாம்.” என்றார்.





மகனோ! மெளனத்தையே தத்து எடுத்திருந்தான்.

தாழ்குழலியோ, மகனின் நிலை கண்டு கலங்கியவர் மனதிற்குள், 'எந்த பிரச்சனையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மகன் இன்று ஏன் இப்படி இருக்கிறான்..?' என்று நினைத்தார்.





மகனின் கேசத்தை மென்மையாக வருடியபடியே. "உதிம்மா எது நடந்தாலும் அதை நல்லதுக்குன்னே நினைச்சுக்கோ.. எது நமக்கு விதிச்சுருக்கோ அது நிச்சயம் நம்மை வந்து சேரும். நீ எதையும் மனதிற்குள் போட்டு கலங்காதே!” என்று மகனின் மனதைப் படித்தவர் போல் ஆறுதல் சொன்னார்.





நம்பியோ, தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டே, "ஏம்மா அப்பா நம்மை இப்படி நிர்கதியா விட்டுப் போனார்? அப்பா இருந்திருந்தா, என்னை நல்லா படிக்க வச்சிருப்பார் தானே! நானும் நல்லா படித்திருப்பேன்.." என்ற மகனின் வார்த்தைகள் அவரை நிலைகுலையச் செய்தது.





மகன் என்றும் கேட்டிடாத கேள்வியைக் கேட்டதிலேயே மகனின் மனதைப் படித்தவர்,

"உதி ஏப்பா? இன்று இப்படி எல்லாம் பேசுறே.. உனக்கு என்னப்பா குறைச்சல்..?"





"ம்மா நானும் நல்லா படித்திருந்தா எல்லாருக்கும் என்னைப் பிடித்து இருக்கும் தானே!" என்று குழந்தை போல் கேட்ட மகனை ஒன்றும் புரியாமல் பார்த்தவர்,





"யாருக்கு என் மகனைப் பிடிக்கலை. உன்னைப் போய் பிடிக்கலைன்னு யாரால் சொல்ல முடியும். அப்படி சொன்னால் அவர்களுக்கு கண் இல்லைன்னு தான் சொல்லனும்.."





"ஆமாம் உங்களுக்கு எப்போதும் உங்க மகன் தான் ஒசத்தி!"



"ஆமாம் என் மகன் எனக்கு ஒசத்தி தான்.. உனக்கு என்னடாம்மா கொறைச்சல்.. சும்மா ராஜாவாட்ட இருக்கே.. கை நிறைய சம்பாதிக்கிறே. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இதுக்கு மேலே என்ன வேணும்.."





"ம் ! படிப்பு வேணும்.."



"படிப்பு என்ன படிப்பு ! மெத்த படிச்சவங்களே என் மகனிடம் அறிவு பிச்சை வாங்கணும்.."





"போதும்மா உங்க மகனின் பெருமை.. படிப்பில்லைன்னா யாரும் நம்மளை மதிக்க மாட்டாங்க.."





"அப்படி உன் குணத்திற்கு கொடுக்காத மதிப்பு! உன் படிப்புக்குத் தான் கொடுப்பாங்கன்னா! அப்படிப் பட்டவங்க சவகாசமே உனக்கு வேண்டாம்.." என்ற தாயை திகைத்துப் போய் பார்த்தான் உதியனம்பி.





தன்னை திகைத்துப் பார்த்த மகனிடம், "உதிம்மா உன்னை உனக்காக பிடித்தவர்கள் உன்னிடம் குறை காண மாட்டார்கள். மற்றவர்களுக்காக படிக்கவில்லை என்று கவலைப்படாதே.. உனக்குப் படிப்பு இப்போதும் அவசியமென்றால், ஏதோ கரஸ்ன்னு சொல்றாங்களே! அதில் கூட சேர்ந்து படி.. எங்க காலத்தில் தான் நினைத்த போது படிக்க முடியாது. அதற்கான வசதிகள் இல்லை.. ஆனால் இப்போது அப்படி இல்லையே! எத்தனை வயசு வரை வேண்டுமானாலும் படிக்கலாமே.." என்ற தாயை வியந்துப் பார்த்தான் உதியனம்பி.





தாய் சொன்ன விசயத்தை நாம் இதுவரை யோசித்ததே இல்லையே! ‘எனக்கு ஏன் இத்தனை நாள் இது தோன்றவில்லை?’ என்று நினைத்தான்.





தாழ்குழலியோ, "படிப்பு தான் உன் பிரச்சனை என்றால் தாராளமாக நீ இப்ப கூட படிப்பா.. பெருமைக்குப் படிப்பதை விட அவசியத்திற்கும், தேவைக்கும் படிக்கணும். உன் லட்சியம் என்னன்னு எனக்கு தெரியும். கண்டதை நினைத்து வருந்தாமல் உன் கவனத்தை அந்த லட்சியத்தை நிறைவேற்ற போராடு! அதற்கு தேவையான படிப்பை கற்றுக் கொள்.." என்ற தாயை ஆச்சரியமாக பார்த்தான்.





மகனின் வியந்த பார்வையைக் கண்டு சிரித்தபடியே, "என் மகனை நான் பக்குவப்பட்ட பெரிய மனிதனாக நினைத்திருந்தேன். ஆனால் நீ இன்னும் சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறாயே! வளர்ந்த குழந்தை!” என்று செல்லமாக மகனை கொஞ்சினார்.





நம்பியோ மனக்குழப்பத்துடனேயே எழுந்து அமர்ந்தான்.





தாழ்குழலியோ, மகனின் தெளிவில்லாத முகத்தைக் கண்டு, "உதி உன்னைப் படிக்கவில்லை என்று யாராவது அவமானப்படுத்தினால் அவர்கள் முன் உழைப்பால் உயர்ந்து காட்டணுமே தவிர இப்படி சோர்ந்துப் போகக் கூடாது. நீ என் உயிர் டா. உனக்காகத் தான் நான் என் மூச்சைப் பிடித்து வைத்திருக்கிறேன்.. உன் முகம் வாடினால் என்னால் தாங்க முடியாதுப்பா.. நீ நல்லா இருக்கனும்.. என் மகன் எதற்காகவும் இனி கண்கலங்க கூடாது.." என்றவரின் விழிகளிலும் நீர் பெருகியது.





அத்தனை நேரம் தன் கவலையிலேயே உழன்றவன், தாயின் கண்களில் நீரைக் கண்டதும் துடித்துப் போனவன், "ம்மா நீங்க வருந்தாதீர்கள். இனி நான் எதற்கும் கலங்க மாட்டேன். உங்களை விட எனக்கு எதுவும் முக்கியமில்லை.." என்று தாய்க்கு சொல்வதைப் போல் தனக்கும் சொல்லிக் கொண்டான்.





மகனின் வார்த்தைகள் அந்த தாயை ஆனந்தப்படுத்தியது.



மகனின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளியபடியே, "எத்தனையோ பிரச்சனையின் போது உன் தைரியத்தையும், பக்குவமான அணுகு முறையையும் கண்டு நான் பிரமித்து இருக்கிறேன்.. அப்படிப்பட்ட நீ இன்று இப்படி கலங்குவது என் நெஞ்சை வலிக்க செய்கிறது.." என்றவுடன்,





"சாரிம்மா.. இனிமேல் இப்படி நடக்காது. ஏதோ ஒரு குழப்பத்தில் புத்தி தடுமாறிட்டேன்.. இனி இப்படி நடந்து கொள்ளமாட்டேன்.." என்றான்.





"சரிப்பா இனி என் பையன் எதற்கும் வருந்தக் கூடாது.. உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் இப்போது சாப்பிடலாமா? அம்மாவுக்கு பசிக்குது.." என்றவரிடம்,



"ம்மா இன்னும் நீங்க சாப்பிடலையா? இத்தனை நேரம் சாப்பிடாமலா இருப்பீங்க.. நீங்க மாத்திரை போடனும். எனக்காக காத்திருக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.." என்று கடிந்து கொண்ட மகனுக்கு,

புன்னகையுடனே சாப்பாட்டை எடுத்து வைத்தார் தாழ்குழலி.





உதியனம்பியோ, தாயுடன் சாப்பிட்டுவிட்டு தன் அறையில் வந்து படுத்தவனுக்கு, உறக்கம் தான் வரவில்லை.





நிறையின் வார்த்தைகள் அவன் மனதை இன்னும் வதைத்துக் கொண்டே தான் இருந்தது.





ஆனால், இப்போது அவன் மனம் தெளிந்திருந்தது. அந்த தெளிவு அவனை சில முடிவுகள் எடுக்க தூண்டியது. தன்னை வேண்டாமென்று ஒதுக்கியவள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி தலைதூக்கியது.





இனிமேல் அவள் சொன்னது போல் அவள் முன் செல்லக் கூடாது. அவள் முகத்திலும் விழிக்க வேண்டாம். தன் தாய் சொன்னது போல் தன் லட்சியத்தை அடைய முழுமனதுடன் பாடுபட வேண்டும் என்று எண்ணினான்.







தன் தாயை நினைத்தவனுக்கு மனதிற்குள் பெருமையாக இருந்தது. தான் வீடு வரும் போது இருந்த மனநிலைக்கும் இப்போது இருக்கும் மனநிலைக்கும் எத்தனை வித்தியாசம்.



‘தன் மனக்கவலையை பனிப்போல் விலக வைத்துட்டாரே!’ என்று வியந்தான்.





நிறையோ தான் நினைத்ததை உதியனம்பியிடம் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியில் இருந்தாள்.





விதி தனக்கு வைத்திருக்கும் சோதனையை அறியாமல்! தான் இன்று வேண்டாம் என்று ‌தூக்கி எறிந்தவனின் அன்புக்காக ஒரு நாள் ஏங்கி தவிக்க போகிறோம் என்று‌ உணராமல் நிம்மதியாக உறங்கினாள்.


தொடரும்..

Hi friends ,
அடுத்த அத்தியாயம் நாளை காலை.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
412
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே !
அத்தியாயம் 8

நாட்கள் தெளிந்த நீரோடையாக அழகாக நகர்ந்து கொண்டிருந்தது. உதியனம்பி தன் உழைப்பால் தாங்கள் குடியிருக்கும் வீட்டை தன் தாயின் பெயருக்கு வாங்கியிருந்தான்.

அதுமட்டுமின்றி தன் மாமா தன்னிடம் போக்கியத்திற்காக கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுத்து, அவரை கட்டாயப் படுத்தி வாங்க வைத்திருந்தான்.



உழைப்பு மட்டுமே அவன் மூச்சானது.. தன் கனவை நனவாக்க போராடிக் கொண்டிருந்தான்.

உதியனம்பி நிறையைப் பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.



நம்பி தன் மாமா வீட்டிற்குப் போனாலும், நிறை இல்லாத நேரமாக சென்று வந்தான். நிறையும் தன் படிப்பை முடித்துவிட்டு இப்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறாள்.



உதியனம்பியோ, மாலை நேரம் ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங் கல்வியைப் பற்றி படிக்கிறான்.



ஆம், அவன் நல்ல மனதிற்கு அவன் ஆசைப்பட்டது நடக்கிறது.

உதியனம்பி தான் படிக்கவில்லையேன்னு! தன் தாயிடம் என்று வருத்தபட்டனோ, அன்றே தாழ்குழலி தன் நிம்மதியை இழந்தார்.



மகனின் வருத்தத்தை தாங்க முடியாத தாழ்குழலி, தன் அண்ணனிடம் மகனின் ஏக்கத்தைப் பற்றி சொல்லி புலம்பினார்.



ஆடலரசோ, தங்கை சொன்னதைக் கேட்டு வருந்தியவர், மருமகனின் கவலையைப் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்த படியே இருந்தார்.

சரியாக அப்போது பனிநிலவும், தன் கணவன் சேத்தனுடன், தன் தாய் தந்தையைப் பார்க்க அந்த வாரம் வந்திருந்தாள்.



எப்போதும் கலகலப்பாக இருக்கும் தன் மாமனாரின் யோசனையான முகம் அன்று சேத்தனை குழப்பியது.



அன்று இரவு உணவு முடிந்தபின், உறங்க செல்லும் முன் தன் மாமனாரிடம் சேத்தன் பேசினான்.



ஆடலரசும் தன் மனச்சுமையை யாரிடமாவது இறக்கிவைக்க நினைத்தவர், தன் பெரிய மருமகனிடம் தன் கவலையைச் சொன்னார்.



சேத்தனோ மாமனார் சொன்னதைப் பொறுமையாக கேட்டவன், யோசனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.



சிறிது நேரம் கழித்து, "மாமா நான் வேண்டுமானால் நம்பியுடன் பேசி பார்க்கட்டுமா?" என்று கேட்டான்.



"தாராளமாக பேசிப் பாருங்கள்.. நிச்சயமாக உங்களிடம் பேசினால் அவன் மனச்சுமையாவது குறையும்.." என்றார் ஆடலரசு.



சேத்தன் தாமதிக்காமல் அடுத்த நாளே உதியனம்பியை தனியாக சந்தித்துப் பேசினான்.

ஏற்கனவே இருவருக்கும் ஒரு நல்ல தோழமை உறவு இருந்ததால், எந்த பிரச்சனையும் இல்லாமல் நம்பி தன் மனதை அரித்த கவலைகளையெல்லாம் சேத்தனிடம் கொட்டித் தீர்த்தான்.

சேத்தனோ, நம்பி நிறை மீது வைத்திருக்கும் காதலைக் கண்டு பிரமித்தான்.



அதுமட்டுமின்றி நம்பியின் ஆசையையும், லட்சியத்தையும் கேட்டு வியந்துப் போனான். என்ன மாதிரி மனிதன் இவன்!

எத்தனை அறிவும், ஆற்றலும் நிறைந்தவனாக இருக்கிறான்.. இவனின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் எத்தனை பேருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எண்ணினான்.



உதியனம்பிக்கும் தன் மனப்பாரத்தை இறக்கி வைக்க சேத்தன் தேவைப்பட்டான்.



சேத்தனோ, நம்பியின் கனவை நனவாக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டவன், நம்பியிடம் ஆறுதலாக பேசினான்.

"நம்பி நீ கவலைப்படாதே! உனக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும். கூடிய விரைவில் நிறையும் உன்னை புரிந்து கொள்வாள்.." என்று நம்பியின் மனதை உணர்ந்து சொன்னான்.



நம்பியோ, சேத்தன் சொன்னதைக் கேட்டு வெற்று சிரிப்பை உதிர்த்தான்.



சேத்தனோ, அவனின் தோள்களை ஆறுதலாக தட்டிக் கொடுத்த படியே, "இந்த அண்ணனிடம் சொல்லிவிட்டாய் தானே! இனி நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்பு! நான் விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் உன்னை சந்திக்கிறேன்.." என்று‌ கூறிச் சென்றான்.



உதியனம்பியோ, தன் மனக்கவலைக்கு ஒரு தீர்வு கிடைக்குமென்று அப்போதும் நினைக்கவில்லை.



ஆனால், அடுத்த நாள் சேத்தன் சொன்னது போலவே, ஒரு சிறந்த யோசனையுடன் வந்தான்.



"நம்பி நான் இப்போது சொல்வதை நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை.. தப்பா நினைக்காதே.." என்று பீடிகையுடன் ஆரம்பித்தான்.



"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க அண்ணா! உங்களைப் போய் நான் எதற்கு தப்பா நினைக்க போறேன்.."



"நம்பி என் ப்ரெண்டோட அப்பா இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்.. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் தான் இருக்கிறார். அவரிடம் உன்னைப் பற்றியும், உன் லட்சியம் பற்றியும் பேசினேன்.." என்று பேச்சை நிறுத்திவிட்டு நம்பியைப் பார்த்தான்.



நம்பிக்கோ, அவனின் பார்வையின் பொருள் புரியவில்லை.



சேத்தன் தன்னை புரியாமல் பார்த்த நம்பியிடம், "உன் லட்சியம் நிறைவேறவும், நீ படிக்கவில்லையே என்ற உன் ஏக்கம் தீரவும் அவர் ஒரு யோசனை சொன்னார்.." என்றவனை ஆர்வமாக பார்த்தான் நம்பி.



"நம்பி நீ மாலை நேரம் அவர் வீட்டுக்குச் சென்று ஆட்டோ மொபைல் படிப்பை பற்றி அறிந்து கொள்ளலாம்.. நீ ஏற்கனவே பத்தாவது வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்திருப்பதால் உன்னால் அந்தப் பாடத்தை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.. நீ நல்லா படிப்பாய் என்று மாமாவும் சொல்லியிருக்கார். உன் லட்சியத்தை அடையவும் அது உனக்கு பேருதவியாக இருக்கும்.." என்றான்.



நம்பியோ எதுவும் பேசாமல் யோசனையுடன் அவனே, மேலே சொல்லட்டும் என்று மெளனமாக இருந்தான்.



சேத்தனோ, அவனிடம் மீண்டும் தொடர்ந்து, "இதில் ஒரே ஒரு மிகப் பெரிய மைனஸ் என்னவென்றால், நீ இன்ஜினியரிங் படிப்பைப் பற்றி நன்கு கற்றுக் கொள்ளலாம். ஆனால் நீ கற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் மட்டும் கிடைக்காது.." என்றான்.



உதியனம்பியோ, "சான்றிதழ் இல்லாமல் என்ன படித்து என்ன ப்ரயோஜனம்.. இனி நான் இன்ஜினியரிங் படிப்பைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்.. " என்று சலிப்புடன் சொன்னவனிடம்,



"நம்பி அப்படி சொல்லாதே! மனம் தளரவிடாதே! அந்த படிப்பு நீ ஆசைப்பட்ட விஷயத்தைச் செய்து முடிக்க மிக உதவியாக இருக்கும்..



ஆட்டோமொபைல் பற்றிய அனுபவத்தை வைத்தே, நீ உன் வெற்றி பாதையில் பாதி தூரம் கடந்துவிட்டாய். இன்னும் அதை பற்றிய கல்வியறிவும் இருந்தால் உன் நோக்கத்தை எளிதாக அடைந்து விடலாம்.. அது மட்டுமின்றி நீ படிக்கவில்லையே என்ற உன் மனக்கவலையும் தீர்ந்துவிடும்.."



"அண்ணா இது நடைமுறைக்கு ஒத்துவராது. கேட்பவர்கள் சிரிப்பார்கள். படித்ததற்கான சான்றிதழ் இல்லாமல் படித்து என்ன ப்ரயோஜனம்.. படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இனி படித்து என்ன பயன். இந்த வயதில் போய் படிக்க முடியுமா? சொல்வதற்கு எளிதாகத் தான் இருக்கும். ஆனால் நடைமுறைக்கு சாத்தியப்படுமா?" என்று கேட்டவனிடம்,



"நம்பி படிப்பதற்கு வயது என்றும் தடையில்லை. ஆர்வமிருந்தால் போதும். எந்த துறை பற்றிய அறிவும் வீணாகாது.

அதுமட்டுமின்றி நீ அந்த துறையில் தான் வேலை பார்க்கிறாய். அனுபவ அறிவுடன் கல்வியறிவும் சேர்ந்தால் உன்னால் எளிதாக சாதிக்க முடியும். அதை பற்றிய தெளிவு கிடைக்கும். அந்த தெளிவு உன்னை உச்சத்துக்குக் கொண்டு செல்லும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் யென்று பயந்து பயந்து வாழ்ந்தால், நமக்கு பிடித்த மாதிரி எப்போது தான் வாழ்வது! லட்சியவாதிகள் எல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாததைத் தான் சாதிக்கிறார்கள்.."



"அண்ணா நீங்க சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனாலும் என் மனம் ஏனோ குழப்பமாகவே இருக்கு.."



"நம்பி இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை.. நான் அவரிடம் பேசிவிட்டேன்.. நீ நாளையிலிருந்து அவர் வீட்டுக்கு போறே.. படிக்கிறே! ஓகே.." என்று தன் கட்டைவிரலை உயர்த்தி அவனிடம் காட்டினான்.



"ஓகே அண்ணா! நீங்க இவ்வளவு தூரம் சொல்வதால் போகிறேன்.."



"குட்.. ம் ம்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேன். நீ படித்து முடிக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம்..

உனக்கு தேவையான அனைத்து உதவியும் நான் செய்றேன்.. அதுமட்டுமில்லாமல் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்சும் ஜாயின் செய்து, நீ ஒரு டிகிரி சான்றிதலும் வாங்க நான் ஏற்பாடு செய்யறேன்.." என்றவனை வியந்துப் பார்த்தான் உதியனம்பி.



தன்னை ஆச்சரியமாக பார்த்த நம்பியை இழுத்து ஆரத்தழுவிக் கொண்ட சேத்தன். "நீ என் உடன்பிறவா சகோதரன் டா.. என்னமோ உன்னைப் பார்த்த முதல் நாளிலிருந்தே உன்னை வேறாக என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.." என்றவனை உதியனம்பியும் அன்புடன் தழுவிக் கொண்டான்.



அதன் பிறகு எல்லாமே வேகமாகவும், சுமூகமாகவும் நடந்தது.



சேத்தன் மூலமாக விஷயத்தை கேள்விப்பட்ட ஆடலரசும், மகிழ்ந்து போனார். தன் மருமகனை படிக்க வைக்க முடியவில்லையே என்ற அவரது குற்றவுணர்வும் மறைந்தது.



உதியனம்பியும் சேத்தன் சொன்னதைக் கேட்டு இந்த ஒரு வருடமாக மாலை சங்குமணியிடம் கடையை ஒப்படைத்து விட்டு படிக்க சென்று வருகிறான்.



சேத்தன் சொன்னது போல் ஆட்டோமொபைல் கல்வியைப் பற்றிய அறிவு அவன் கனவுக்கும், முயற்சிக்கும் பேருதவியாக இருந்தது.



நம்பியின் ஆர்வத்தையும், அறிவையும் கண்டு பேராசிரியரே வியந்து போனார்.



சேத்தனிடம்.. "இந்த மாதிரி ஒருவனை நான் பார்ப்பது இதுவே முதல்முறை.. இவன் மட்டும் சரியான நேரத்தில் படித்து இருந்தால் இன்னேரம் எங்கேயோ போய் இருப்பான்.." என்று மனதார பாராட்டியிருந்தார்.



உதியனம்பியோ, நான்கு வருடத்தில் கற்க கூடிய கல்வியை அவனின் ஆர்வத்தால் இரண்டே வருடத்தில் கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தான்.



நிறையின் ஞாபகமும், அவளின் வார்த்தைகளும் அவனை வதைத்தாலும்.. அதை ஒதுக்கி விட்டு தன் வேலையில் தன்னை புகுத்திக் கொள்ள பழகிக் கொண்டான்.



நிறையோ, தான் சொன்ன பிறகு நம்பி தன்னை தொந்தரவு செய்யவில்லையே! என்று மகிழ்ந்தாலும், ஏனோ அவளுள் ஒரு வெறுமை குடிகொண்டது.



அதற்கான காரணத்தைத் தான் அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.



உதியனம்பி அன்று தன் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு இரவு ஓய்ந்து போய் வீடு வந்தவனை தாழ்குழலியின் வாடிய முகமே வரவேற்றது.



தாயின் வாடிய முகம் உதியனம்பியின் மனதை பிசைந்தது.



வேகமாக சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன், தாயின் அருகில் வந்தமர்ந்து என்னவென்று விசாரித்தான்.



"நீ முதலில் சாப்பிடுப்பா.. அப்புறம் சொல்றேன்.." என்றவர் மகனுக்கு உணவை எடுத்து வைத்தார்.



நம்பியும் தாய் சொல்லைத் தட்டாமல், உண்டு முடித்து விட்டு தாயின் அருகில் வந்து அமர்ந்தவன், கேள்வியாக தாயைப் பார்த்தான்.



மகனின் பார்வையைப் புரிந்து கொண்டவர், "உதிம்மா நான் இன்னைக்கு ஏதேச்சையா மாமா வீட்டிற்குப் போனேன்.." என்றவர் அங்கு நடந்ததை சுருக்கமாக மகனிடம் கண்களில் கண்ணீருடன் சொன்னார்.



உதியனம்பியோ தாய் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன், "அம்மா.. இது.. இது, எல்லாருக்கும் தெரியுமா?"



தாழ்குழலியோ, மகன் கேட்க வருவதைப் புரிந்து கொண்டவர், "இல்லை.." என்று தலையை மட்டும் ஆட்டினார்.



தாய் சொன்னதைக் கேட்ட உதியனம்பியோ, நிம்மதி பெருமூச்சு விட்டான்.



தாழ்குழலியோ, மகனிடம் "ஏன் தான் நம் குடும்பத்துக்கு இப்படியெல்லாம் நடக்குதோ! மாமாவையும், அத்தையையும் என்னால் கண்ணில் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு ஆறுதலும், ஒரு உறுதியும் கொடுத்து வந்திருக்கிறேன்‌.." என்றவர் மகனின் முகத்தை யோசனையாக பார்த்தார்.



மகனோ தாயே சொல்லட்டும் என்று மெளனம் காத்தான்.



தாழ்குழலியோ, தன் அண்ணனுக்கு தான் கொடுத்து வந்த வாக்கை மகனிடம் சொன்னவர், "நீ இதற்கு சம்மதிப்பாயா? என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் என் சொல்லை மீறமாட்டாய்‌ என்ற‌ உறுதியில் வாக்களித்து விட்டேன்.. உனக்கு சம்மதம்‌ தானே?"



"அம்மா நான் என்று உங்கள் பேச்சை மீறியிருக்கேன்.. உங்க இஷ்டம்.." என்றவன் எழுந்து தன் அறைக்கு‌ச் செல்ல முற்பட்டான்.



தாழ்குழலியோ, மகனின் கையைப் பிடித்து இழுத்து தன்‌ அருகில் அமர்த்திக் கொண்டவர், "எல்லாருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய கனவு இருக்கும். ஆனால் நான் எடுத்த இந்த முடிவு உனக்கு கஷ்டமாக இருந்தால் என்னை மன்னித்துவிடுப்பா..” ‌என்று வருந்தியவரிடம்.



"அம்மா என்ன பேச்சு இது.. எனக்கென்று தனியாக எந்த கனவும் இல்லை. உங்கள் விருப்பம் தான் என் விருப்பம். இனிமேல் இது போல் பேசாதீர்கள்.." என்று‌ கோபமாகச் சொன்னான்.



"சரிப்பா இனி அப்படி பேசவில்லை.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீ உன் மனதைப் போட்டு குழப்பிக்காதே.. போய் நிம்மதியாக தூங்கு.." என்றவரிடம் தலையை ஆட்டி விட்டு வந்து தன் அறையில் படுத்தவனுக்கு தூக்கம் தான் எட்டா கனியானது.



தன் தாய் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.. விதி ஏன் தன் வாழ்க்கையில் இப்படி விளையாடுகிறது? என்று கலங்கித் தவித்தான்.



எது நடந்தாலும் மாமாவுக்கும், தன் அன்னைக்கும் எந்த கவலையையும் தராமல், நிம்மதியை மட்டுமே தான் தரவேண்டும்! என்று எண்ணினான். இதைப் பற்றி சேத்தன் அண்ணாவிடம் நாளை பேச வேண்டுமென்று மனதிற்குள் முடிவு செய்தான்.



அடுத்த நாள் பொழுது விடிந்ததும், அவசரமாக கிளம்பி சேத்தனைப் பார்க்க மருத்துவமனை சென்றான்.



சேத்தனோ, மருத்துவமனையில் காலில் அடிப்பட்டு வந்திருந்த ஒரு நாய் குட்டிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தான்.



சேத்தன் தன் வேலையை முடித்து வரும் வரை காத்திருப்போர் இருக்கையில் நம்பி அமைதியாக அமர்ந்திருந்தான்.



தன் சிகிச்சையை முடித்து விட்டு நாய்குட்டியின் உரிமையாளரிடம் பேசிய படியே அறையிலிருந்து வெளியே வந்த சேத்தன், அங்கே நம்பியை கண்டதும் ஆச்சரியத்துடன் அவனிடம் வந்தான்.



நம்பியும் சேத்தனை கண்டதும் எழுந்து அவன் அருகில் வேகமாக சென்றவன், "அண்ணா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?" என்று பதற்றமாக கேட்டான்.



சேத்தனும் அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரிந்து கொண்டவன், நம்பியின் கைகளை ஆறுதலாக பிடித்த படி, "ஆமாம்.." என்று‌ பெருமூச்சு விட்டபடி சொன்னான்.



நம்பியோ, "இது எப்படி அண்ணா சாத்தியம்.." என்று கேட்டவனிடம்,

சேத்தன் அவனுக்கு புரியும்படி விளக்கிச் சொன்னான்.



சேத்தன் சொன்னதைக் கேட்டவனுக்கு கண்களில் நீர் தேங்கியது.



சேத்தனுக்கும் அவனின் நிலை கண்டு மனம் கலங்கியது. நம்பியின் ஆசையை அறிந்திருந்தவனுக்கு அவனின் வேதனை புரிந்தது.



நிலை கொள்ளாமல் தவித்த உதியனம்பியிடம், "நம்பி நீ மனதை தளரவிடாதே, உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.." என்று ஆறுதல் சொன்னான்.



நேற்று தாழ்குழலி தன் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்த போது சேத்தனும் அங்கு தான் இருந்தான்.. நம்பியின் மனதிலிருக்கும் ஆசையும்‌ அவனறிந்த ஒன்றே.



உதியனம்பியோ, சேத்தனின் ஆறுதலான வார்த்தையைக் கேட்டு கண்ணுக்கு எட்டாத சிரிப்பை உதிர்த்தவன், அவனிடம் தலை அசைப்புடன் விடை பெற்றுக் கொண்டு தன் கடையை நோக்கிச் சென்றான்.



அவனின் மனமோ, அடை மழை போல் அழுது கொண்டிருந்தது. தான் ஒரு நொடி கூட யாரையும் மனம் நோக பேசியதும் இல்லை, சபித்ததும் இல்லையே.. ஏன்‌ இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு, தன் மனம் கவர்ந்தவளின் முகம் கண் முன்னே வந்து சென்றது. தான் கேள்விப்பட்ட விஷயம் மட்டும் பொய்யாக இருக்க கூடாதா? என்று கலங்கி தவித்தவனுக்கு‌ வாழ்க்கை மீதிருந்த பிடிப்பே போய்விட்டது.



விதியின் விளையாட்டை யார் அறிவார்?



தொடரும்..

Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

New Threads

Top Bottom