பூனையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ கீழே சென்றுவிட்டான்.
அவன் இதுபோல் வந்து சென்றது எல்லாம் ஷ்ரதாவுக்கு தெரியாது. அவன் மேலே வராமலேயே இருந்தது அவளை அவன் புறக்கணிப்பதாகவே அவளை நம்ப வைத்தது.
இந்த நினைப்பிலேயே இருந்தவள் மாலையில் தன்னிடம் சிக்காமல் போனவனை, இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குள் வந்ததும் கிடுக்குப் பிடியாக பிடித்துக் கொண்டாள். அதாவது அவள் அவ்வாறு எண்ணிக் கொண்டாள்.
"அந்த வித்யா சொன்னது உண்மையா?"
"என்ன சொன்னா?"
"நீங்க அவளை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னாளே!.."
"ஓ!"
"என்ன ஓ?.. அது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க?"
"நீ உண்மைன்னு நினைச்சா உண்மை.. பொய்யின்னு நினைச்சா பொய்.."
"இப்படி சொல்லி நழுவலாம்னு பார்க்கறீங்களா?.. நீங்க ரெண்டாவது கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்டா உங்களை எங்கப்பா சும்மா விட மாட்டாங்க.."
"என்ன செய்வாரு? அவரு ரெண்டு கொம்பை வச்சி என்னை முட்டிருவாரா?"
"ப்ச், ஆமா அந்த வித்யா ஏன் உங்க போட்டோவை அவ ரூம் ஃபுல்லா ஒட்டி வச்சிருக்கா?"
"அவளுக்கு பிடிச்சிருக்கு ஒட்டி வச்சிருக்கா.. உனக்கும் பிடிச்சா ஒட்டி வையேன்"
"நீங்க அவளை…" என்று துவங்கியவளின் பேச்சு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டதும் நின்றுவிட்டது.
பயத்தில் மெத்தையில் விழுந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள் ஷ்ரதா. சிறிது நேரத்திலேயே உறக்கம் எனும் ஊசி அவளது இமைகளை தைக்க, அடித்துப் போட்டது போல் அசந்துத் தூங்கினாள்.
அவ்வேளையில் நீலாம்பரி இசைக்க வேண்டிய அவள் மூளைக்குள் படையப்பா நீலாம்பரி போல் வித்யா பிரசன்னமாகினாள். அவளிடம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.
"வித்யா, ஒருத்தனுக்கு ஒருத்தி தான் நம்ம கலாச்சாரம், புரிஞ்சிக்கோ.."
"பிடிச்சவனோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!.."
"என் வாழ்க்கையையும் கொஞ்சம் யோசிச்சிப் பாரேன் வித்யா"
"அதையெல்லாம் யோசிச்சா நான் எப்படி சுகப்பட முடியும்?"
"ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு நீ சந்தோசமா வாழ்ந்திட முடியும்னு நினைக்கிறியா?"
"என் மனசு சொல்றதை கேட்காம நடந்தா தான் என்னால சந்தோசமா வாழ முடியாதுன்னு நினைக்கிறேன்.."
ஏதோ இன்கா நாகரீகம் போன்ற ஒரு மலைப்பிரதேசமான இடத்தில் ஷ்ரதாவின் மடியில் வீசி மயங்கிக் கிடக்க, இவ்வாறு எதிரில் சூனியக்காரி போல் உடையணிந்து எதிர் விவாதம் புரிந்துக் கொண்டிருந்தாள் வித்யா.
"இவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் வித்யா.. இவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல"
"எனக்கு மட்டும்.. உண்மையை சொல்லு! உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இவர் அப்படி என்ன சுகத்தை கண்டுட்டாரு?.. ஏன் இப்படி இவரை எனக்குத் தரமாட்டேன்னு அடம்பிடிக்கிற?.. நம்ம காதலிக்கிறவங்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறது தான் உண்மையான காதல்.. நீ அதை மொத புரிஞ்சிக்கோ.."
"இல்ல! இல்ல! இவரை உனக்கு விட்டுத் தர முடியாது!.."
வீசியின் முகத்தை தன் மார்போடு அழுத்திப் பிடித்துக் கொண்டாள் ஷ்ரதா.
"அடிமைகளே! இவர்களை பிரியுங்கள்!" என்று உத்தரவிட்டாள் வித்யா.
எங்கிருந்தோ பறந்து வந்த கோரப் பல் அரக்கிகள் இருவர், ஷ்ரதாவை வீசியிடமிருந்து பலாத்காரமாய் பிடித்திழுத்துப் போட்டனர்.
வித்யா வீசியை ஆசையோடு நெருங்கி அவன் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்த முடிகளை பொறாமையுடன் விலக்கி, மென்மையாய் ஆசையாய் ஆதூரமாய் முத்தமிட்டாள்.
அவள் முகத்தில் அன்பு ததும்பியது.
பின், அவனது முடிகளை கோதிவிட்டுக் கொண்டே வாத்சல்யம் பொங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்து அவனது கன்னத்தையும் வாஞ்சையோடு தடவிக் கொடுத்து, அவனை தன் நெஞ்சில் சாய்த்தாள்.
ஷ்ரதாவிற்கு அவற்றைக் கண்டு பற்றிக்கொண்டு வந்தது. முகத்தில் அசூயைக் காட்டினாள்.
பாய்ந்து அவர்களை பிரிக்கப் போனவளை ஈட்டிகளை எக்ஸ் வடிவில் போட்டு தடுத்து நிறுத்தினார்கள் அந்த குட்டைப்பாவாடை அரக்கிகள்.
ஷ்ரதா அவர்களிடம் வலுவாய் போராடினாள். அவர்களை ஆக்ரோஷமாய் பிடித்துத் தள்ளினாள்.
ஆச்சர்யம்! அரக்கிகள் இருவரும் எதிரெதிர் திசைகளில் போய் சுருண்டு விழுந்தனர்.
அவள் அவர்களை சமாளித்துவிட்டு வந்து பார்த்தபோது தனது இறக்கைகளை சடசடவென விரித்து வீசியை காததூரமாய் தூக்கிச் சென்றிருந்தாள் வித்யா.
"வருண் அத்தான்" என்று அந்தவிடத்திலேயே கைநீட்டி மடங்கி அழுதாள் ஷ்ரதா.
விண்ணிலிருந்து விடைபெற்ற மழைத்துளி அவள் கண்ணிலிருந்து விடைபெற்ற துளியோடு கலந்த போது உலகே சூன்யமானது போல் உணர்ந்தாள் ஷ்ரதா.
அவள் மார்பின் கொதிப்பு அடங்கவில்லை. சுவாசம் ஏறியேறி இறங்கியது. ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிர்த்து கசகசத்தது. பட்டென்று விழித்துப் பார்த்தாள்.
அனைத்தும் கனவு என்று தெளிய அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது. தெளிந்த நேரம் அவள் மனதில் திடீர் பாரம் வந்தும் உட்கார்ந்தது.
கண்முன் தெரிந்த இருள் உலகை அவளின் கெட்ட சொப்பணங்கள் வண்ணமயமாக்கின. வீசியும் வித்யாவும் ஆலிங்கன நிலையில் இருப்பது போல் விதவிதமாய் காட்சி தோன்றி அவளை இம்சித்தன. கண்ணை மூடிக் கொண்டாலும் அதேக் கொடுமை. ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அவளின் விழி விளிம்புகளிலிருந்து வெளிநடப்பு செய்தன கண்ணீர் துளிகள்.
ஷ்ரதா மெத்தையில் அருகில் தடவிப் பார்த்தாள். அவன் அகப்பட்டான். அவள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. புரண்டு அவனை கட்டிக் கொண்டாள். திம்மென்ற அவன் நெஞ்சில் முத்தமிட்டாள். எக்கி அவன் நாடியில் முத்தமிட்டாள். அடுத்து அவன் கழுத்தில் என ஊர்ந்த உதடு மீண்டும் அவன் நெஞ்சில் வந்தே அடைக்கலமாகியது.
அவள் அமைதியடைந்த அடுத்த கணம், தான் எதிர்வினையாற்ற துவங்கினான் வீசி.
முதல் கட்டமாய் அவள் இடையில் கரங்களை கோர்த்து இறுக்கிக் கொண்டான். அவள் நீரில் நீந்தும் சாரை போல் அவன் நெஞ்சிலிருந்து தலையை தூக்கிப் பார்த்தாள். அவ்வளவு தான். திடீர் புரளல். அவன் மேலே. அவள் கீழே. அழுத்தமாய் அவள் அதரத்தில் ஒரு முத்தம்.
அவன் முத்தமிட்டு நிமிர்ந்த இடைவெளியில் ஒரு தடய நிபுணரை ஆராயவிட்டிருந்தால் நிச்சயம் அவன் உதட்டு ரேகையை அவளிதழில் கண்டுபிடித்திருப்பார். அந்தளவிற்கு அவன் முத்த யுத்தத்தை நிகழ்த்தி முடித்திருந்தான்.
'இந்த இருட்டிலும் எப்படி கண்டுபிடித்தார் இதழ்களை?' ஷ்ரதாவினுள் பிரதானமாய் முளைத்த கேள்வி இது.
தன்னைப் பற்றிய அவனது அனுமானங்கள் அனைத்தும் எப்போதும் சரியாகவே இருப்பதை எண்ணி ஆச்சரியமடைந்தாள் அவள்.
சரியாக அவள் அதரத்திலிருந்து முத்த யாத்திரை புறப்பட்ட அவன் இதழ்கள் கீழே
இ
ற
ங்
கி
அவளுக்குள் பூகம்பத்தை உண்டாக்கின.
திடீரென உண்டான படபடப்பும், நாணமும், பயமும் அவன் அத்துமீறலை அவளைத் தடுக்கச் செய்தன. அந்த பலவீனமான எதிர்ப்பை அவன் அனாயசமாக சமாளித்தான்.
பாம்பு, புற்றை சொந்தம் கொண்டாடும் போது பாவம் கரையான்கள் என்ன செய்யக்கூடும்!
பூவில் தேனீக்கள் நுகரும் திறனாலே மகரந்தங்களைத் தேடி திரிவது போல் அவனாலும் தனக்கு வேண்டியவற்றை நுகர்ந்து திரிந்தே கண்டுபிடிக்க முடிந்தது.
அவ்வப்போது கிளம்பிய காமப் பெருமூச்சுகள்... அந்த இருளின் அமைதியை பதம் பார்த்துக்கொண்டே இருந்தன.
அவ்வப்போது சிணுங்கல்களின் முத்துக்களை உருட்டி விட்டபடி... அவனை உச்சத்திற்கு இழுத்துக் கொண்டே இருந்தாள் ஷ்ரதா. அவனும் அவள் உடல்மொழிக்கேற்ப இயங்கிக் கொண்டிருந்தான்.
அவள் கைகள் அவன் முதுகில் பரவிய சமயம் ஏகப்பட்ட தழும்புகளை நலம் விசாரித்தன. அதில் சில திடுக்கிடல்களும் அவளுக்குள் உருவாகின. ஆனால், எப்படியென்று கேட்கத் துணியவில்லை அவள்.
பதியும்படி முத்தமிட்டு, பற்களால் கோலமிட்டு, பற்றிப் பரவி என அவனின் சேட்டையால் அந்த இரவு புனிதமாகிக்கொண்டேப் போனது.
காலையில் கண்விழித்த இருவருக்குமே எல்லையற்ற வேறோர் உலகம் பயணித்த களைப்பு காணாமல் தான் போயிருந்தது.
ஷ்ரதா கண்ணாடிப் பார்த்தே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். தற்போது அவள் இருக்கும் உற்சாகத்தில் நாம் வித்யாவை நினைவு கூர்ந்தால் கூட வித்யாவா? யாரது? என்று அவள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எப்போதும் அவனுக்கு காபி கொண்டு போகும்போது முகத்தை இஞ்சி தின்றாற் போலவே வைத்திருப்பவள் இன்று ரோஜாப்பூவாய் சிவந்த கன்னங்களுடன் செல்வதைப் பார்த்து அபிராமியே குழம்பித்தான் போனார்.
ஆர்வமாக எப்படியோ அறை வரை வந்துவிட்டாலும் உடற்பயிற்சி கூடத்திற்குள் செல்ல மட்டும் அப்படியொரு பயம், வெட்கம், பதட்டம்.
ஐந்து நிமிடங்கள் நகத்தைக் கடித்தபடியே நின்றிருந்தவள், "முருகா! தைரியம் கொடு!" என்று வேண்டிக்கொண்டே மன்னிக்கவும் மிரட்டிக்கொண்டே உள்ளேப்போனாள்.
அன்று போலவே இன்றும் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி. அவன் பனியன் முழுவதும் வியர்த்திருந்தது.
ஷ்ரதாவிற்கு அவன் முதுகைப் பார்த்ததுமே அந்த தழும்புகள் ஞாபகம் வந்தன.
அதைப்பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடியே நின்றிருந்தாள்.
திடீரென ட்ரெட்மில்லை நிறுத்தி திரும்பியவன், அவளைப் பார்த்ததும், "எப்போ வந்த?.. வந்தா கூப்பிட மாட்டியா?" என்று கேட்டுக்கொண்டே காபி கப்பை வாங்கினான்.
அவள் அவனிடம் சூதானமாகக் கேட்டாள். "உங்க முதுகுல எப்படிங்க இவ்வளவு தழும்பு வந்தது?"
காபியை ஒரு மிடறு அருந்தியிருந்தவன், பட்டென்று குடித்துக் கொண்டிருந்த காபியை அவள் முகத்தை நோக்கி ஊற்றினான்.
அது அவள் முகத்தை சமீபிப்பதற்கு முன்னமே ஷ்ரதா தலையை சாய்த்து திருப்பி விட்டாள்.
விக்ரம் லேண்டர் போல் மைக்ரோ செகண்டில் குறிக்கோள் தவறியது காபி.
உண்மையில் இந்த திடீர் தாக்குதலில் விதிர்த்துப் போனாள் ஷ்ரதா.
காபி அபிஷேகத்திலிருந்து தப்பித்து மீண்டவள் வீசியை பார்த்தபோது அவன் கண்கள் வெம்மை பூத்து மின்காந்த கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருந்தன. அதில் அவள் கால்கள் செயலிழந்து, உடல் நடுங்கியது.
அவன் சொற்களும் ஒரு அதட்டலுடன் வெளி வந்தது. "காபி ஏன் ஆறிப் போயிருக்கு?.. சூடா கொண்டு வரத் தெரியாது.. போ! சூடா இன்னொரு காபி கொண்டு வா!" என்றபடியே திரும்பி நின்றான்.
அவள் உள்ளம் சொல்லவொண்ணா வேதனையில் பரிதவித்தது. அவன் காபியை ஊற்றியது கூட அவளுக்கு பெரிதாக படவில்லை. அவனின் இந்த திடீர் திடீர் ஆவேசத்திற்கு தான் காரணம் தெரியாமல் தலையே வெடிப்பது போல் இருந்தது.
"ம்ம்! போ! ஏன் இன்னமும் இங்கயே நிற்கிற?.."
அவனுக்கு தான் அவளை ஏதேனும் பேசி விடுவோமோ என்று பயமாக இருந்தது.
"போறேன்.. ஆனா, நீங்க இன்னும் அந்த தழும்புக்கான காரணத்தை சொல்லலையே?"
"அது எப்படி வந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்யப்போற?.. போ! இன்னொரு காபி எடுத்துட்டு வா!"
அவனின் பேச்சை மீறுவது பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் உண்மை தெரிய வேண்டி அங்கேயே நின்றாள் ஷ்ரதா.
"என்ன பயம் விட்டுப் போச்சா?.."
"உங்களை பார்த்து நான் ஏன் பயப்படணும்?.. நீங்க என்ன பீஸ்ட்டா? இல்ல நான் தான் பியூட்டியா?.."
"ஷ்ரதா என் கோபத்தை தூண்டாம மரியாதையா இங்கயிருந்து போயிடு.."
"உங்களுக்கு கோபம் எங்க அப்பா உங்களை வற்புறுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதோ, இல்ல உங்கக்காவை எங்க அண்ணா அடிச்சதோ இல்ல.. வேற ஏதோ.. அதை நீங்க சொல்ல மறுக்குறீங்க.. இல்ல மறைக்கிறீங்க"
"உனக்கு என்ன மனசில பெரிய சிஐடின்னு நினைப்பா?"
"உங்களுக்கு அந்த ராஜ மாணிக்கத்தோட சொத்து மேல ஒரு கண்ணு.. வித்யாவை கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் பெரிய நிலைமைக்கு போயிருந்திருக்கலாமேன்னு ஒரு ஏக்கம்.. அதெல்லாம் கை நழுவி போன ஆதங்கத்துல தான் இப்படி என் மேலயும் என் குடும்பத்து மேலயும் எரிஞ்சு விழறீங்க.."
டப்பென தெறித்து நொறுங்கியது அந்த செராமிக் கப்பும் சாசரும்.
டக்கென இரண்டு எட்டு பின்னால் நகர்ந்துப் போனாள் ஷ்ரதா.
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
யாருக்கெல்லாம் டைம் மெஷினில் பயணிக்க விருப்பம் ப்ரெண்ட்ஸ்?
இங்கு சகாப்தம் குழுவினர் வழங்கும் டைம் மெஷின் (கருத்துத்திரி) மூலமாக நீங்கள் ஷ்ரதாவின் எதிர்காலத்தை அறியலாம்.
ஆம், அடுத்த அத்தியாயத்தைப் பற்றி இரண்டு வரி கூறியுள்ளேன் ப்ரெண்ட்ஸ்.
இந்த டைம் மெஷின் பயணம் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.
கருத்துத்திரி,
டைம் மெஷின்