1
தை திருநாள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ விளங்கும் பொங்கல் திருநாளை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு நாளும் மறப்பதில்லை. என்ன! சில வேறுபாடுகளுடன். ஆனால் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல். மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கும் எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்கும் பொங்கலுக்கும் ருசி வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்த பொங்கல் பொங்கி வரும் வேளையில் நம் மனதில் பொங்கி வழியும் இன்பம் என்றும் மாறுவதில்லை. நாம் இந்த இயற்கைக்கு எத்தனை கேடு விளைவித்தாலும் நம்மை இன்னமும் கைவிட்டு விடாத இயற்கைக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விழாவான தை பொங்கலை இன்னமும் தமிழர்கள் கைவிடவில்லை.
இப்படிப்பட்ட திருநாளை பெரியவர்களை விட சிறியவர்களே அதிக ஆவலோடு எதிர்பார்த்தனர். புத்தாடைகளுக்கும், கரும்புக்கும் மயங்காத சிறுவர்கள் உண்டோ. ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் நிலைமைக்கேற்ப ஒரு பெரிய பட்டியலே போடப்பட்டது. இருக்கிறவர்கள் தாராளமாகவும் இல்லாதவர்கள் குழந்தைகளின் மனம் நோகாமல் இருக்க நூறு இருநூறு கடன் வாங்கியும் செலவு செய்வார்கள். என்ன செய்வது தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை அல்லவா பொங்கல், உழவர்களின் திருநாள்.
பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே என்ற நிலையில் தி.நகரின் அத்தனை கடைகளும் நிரம்பி வழிந்தன. நெருக்கடியில் உயிர் இழப்பு ஏற்படுவது தான் பரிதாபமான விஷயம். இருப்பினும் கூட்டத்திற்கு குறைவில்லைதான். முக்கியமாக ஜவுளிக்கடைகளும், அதன் ஊழியர்களும் விழிபிதுங்க நின்றனர். அப்பப்பா எத்தனைக் கூட்டம், ஒரு இடத்தில் நிற்ககூட முடியாது போல் அத்தனை மக்கள். திருவிழாக் கூட்டமே தோற்றது. கோவிலுக்குப் போகிறார்களோ இல்லையோ, புடவை எடுக்க நிச்சயம் கிளம்புகிறார்கள். அன்று ஒரு நாளேனும் டிவி தொடர்களை பெரிய மனது வந்து தியாகம் செய்கிறார்களே. அதுவே பெரிய காரியம்தான். இருப்பினும் ஒரு மனம் துணியில் இருந்தாலும் மற்றொரு மனம் சீரியலில் இருந்தது. இவனை அவன் கெடுத்தானா? யார் அழுகிறார்கள். யார் அழ வைக்கிறார்கள். இதில் தான் மனம் உழன்று கொண்டிருந்தது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்து வழிந்த கடைகளில் ஒன்றுதான் ‘செல்வா அண்ட்கோ டெக்ஸ்டைல்ஸ்’
அது ஒரு நாலு மாடி கட்டிடம், முதல் தளத்தில் சுடிதாரும், இரண்டாம் தளத்தில் புடவையும், மூன்றாம் தளத்தில் குழந்தைகளுக்கான ரெடிமேடும், நான்காம் தளத்தில் பேன்சி பொருட்களும், தரை தளத்தில் மேட்சிங் பிளவுஸ் சகிதமான நல்ல கட்டிட அமைப்புடன் பிரம்மாண்டமாக விளங்கியது. முழு குளுகுளு வசதியுடன் குளிராகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிதமாக இயங்கியது.
நெற்றியில் துளிர்த்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்தவாறு கடையினுள் நுழைந்தாள் ஓவியா. மனதில் கலவையாய் பல சிந்தனைகள். வருடத்தில் ஒரு முறைத்தான் பிரியாவுக்கு துணி எடுக்கிறோம். அதுவும் நல்லதாக எடுக்கணும். அவளின் ஆசைப்படியே கத்திரிப்பூ கலரில் ஒரு சுடிதார் கிடைக்கணும். இப்படி மனதால் கணக்கு போட்டப்படி சுடிதார் பகுதிக்கு வந்தாள் ஓவியா. அங்கும் ஒரே இடிதடிதான், நிற்க இடமில்லை. ஒரு பெரியவர் உள்ளே நுழைய முடியாமல் நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஓவியா,
‘என்ன தாத்தா வாங்கப் போறீங்க?’ என்றாள் முகமலர்ந்த புன்னகையை உதிர்த்து.
‘என் பேத்திக்கு ஒரு சுடிதார் வாங்கலாம்னு பார்த்தா இந்த கூட்டத்துல நுழைய முடியலைம்மா’ என்றார் பரிதாபமாக.
‘அப்படியா....! சரி தாத்தா நீங்க அந்தச் சேர்ல உட்காருங்க. இங்க கொஞ்சம் ஃப்ரீயா ஆனதும் கூப்பிடுறேன்!’ என்றாள் மென்மையாக.
அதற்காகவே காத்திருந்தவர் போல, ஓடிச்சென்று அமர்ந்து உடலை தளர்த்திக் கொண்டார்.
‘தாத்தா... தாத்தா இங்க வாங்களேன், வந்து சுடிதார் பாருங்களேன்’ என்றபடி ஓவியா குரல் கொடுத்தாள்.
பெரியவர் சில சுடிதார்களைப் பார்த்தார். அதில் ஒரு சுடிதார் பிடித்துப் போக, அதை பிரித்துப் பார்க்க முனைந்தவுடனே, ‘ யோவ்... அப்படியே பாருய்யா, எதுக்கு பிரிச்சுப் பார்க்கிற இப்படி, அப்படி பிரிச்சு பாத்துட்டு, ஒன்னும் வாங்காம போயிடுவீங்க, நாங்க உட்கார்ந்து மடிக்கனுமா?’ என்று சீறினான் அந்தப் பணியாளன், மிரண்டு போனார் பெரியவர்.
‘ஹலோ, என்ன ரொம்ப பேசுறீங்க, துணி வாங்கணும்னா பிரிச்சு பார்க்காம எப்படி வாங்குவது’ என்று வாதாடினாள் ஓவியா.
‘அதான் பார்க்கறீங்கள்ள, உள்ள மட்டும் வேற துணியா மாறப்போகுது, எல்லாம் ஒன்னுதான்மா’ என்றான் விடாது.
இது சரிப்படாது என்று எண்ணிய ஓவியா, சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு மூலையில் ‘மேனேஜர்’ என்ற பலகையை பார்த்தவள் அதனை நோக்கி விரைந்து சென்றாள்.
கதவை நெருங்கியவளை பியூன் தடுத்தான். அதைப் பொருட்படுத்தாது உள்ளே சென்றாள்.
‘எக்ஸ்கியுஸ் மீ சார்’ என்றாள் அழகான ஆங்கிலத்தில்.
‘எஸ்’ என்று சூழல் நாற்காலியில் அவளை நோக்கியவனைப் பார்த்து அதிர்ந்தாள்.
‘இவனா....? இவனா..’
மேனேஜர் என்றதும் அறுபதுகளில் ஒருவரைத்தான் அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அங்கு இருபத்தி ஐந்து அல்லது முப்பதுக்குள் ஒருவன், அதுவும் அவள் வாழ்வின் எதிரி என்று நினைத்திருந்த அவனேதான், சிறிதும் குழப்பமில்லை.
‘எஸ்’ என்றான் மீண்டும்.
இவனிடம் ஏன் தடுமாற வேண்டும் என்று எண்ணியவள். அவனது நேர் பார்வையை எதிர்கொண்டு பேசினாள்.
‘உங்க பணியாளர்களைப் பற்றிய ஒரு கம்ப்ளைண்டோட வந்திருக்கேன் சார்’
அவள் பேசுவது புரிந்ததும் புருவம் முடிச்சிட அவளை நன்றாக ஊன்றி பார்த்தான்.
‘அப்படியா.... உட்கார்ந்து பேசலாமே’ என்றான் எதிரிலிருந்த இருக்கையைக் காட்டி.
‘தேங்க்யூ’ என்றபடி அமர்ந்தாள்.
‘இப்ப சொல்லுங்க, என்ன பிராப்ளம்?’
‘அதோ அந்தப் பெரியவரைத் தெரியுதா? அந்த பெஞ்சில் உட்கார்ந்திருக்காரே’ என்றாள் விரலை அந்தப் பெரியவர் பக்கம் நீட்டி, கண்ணாடிக் கூண்டு என்பதால் நன்றாகவே பார்க்க முடிந்தது.
‘ஆமாம்.... சொல்லுங்க’
‘அந்த பெரியவர் தன் பேத்திக்கு ஒரு சுடிதார் மெட்டீரியல் வாங்க ஆசையா வந்திருக்காரு ஆனா உங்க ஊழியர் சரியா. டீரீட் பண்ணலை’
‘அவர் எடுக்கணும்னு ஆசைப்பட்ட துணியை பிரிச்சு பார்க்க விடலை. கேட்டா, நீங்க பிரிச்சு போட்டுடுவீங்க. நாங்க மடிக்கனுமான்னு கேட்கிறாரு. அதுக்கு தானே சார். நீங்க சம்பளம் கொடுக்குறீங்க, பணம் போட்டு துணி வாங்கிறது நாங்க. நாங்க போடுற பணத்துக்கு ஏத்த மாதிரி துணியைத் தானே எதிர்பார்ப்போம். அதனால தான் பிரிச்சு காட்ட சொல்றோம். சப்போஸ் ஒரு டேமேஜ் இருந்ததுன்னா, வீட்டுக்கு போய் பார்த்துட்டு, ரெண்டாவது தடவை இங்க வந்து மாத்திக்கிட்டு, நிக்கிறதா எங்க வேளை. அதுவும் அந்தப் பெரியவரை அலைய விடறது நியாயமா இருக்குமா?’ என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
‘ஓகே மிஸ் ஓவியா, கூல் டவுன் எந்த செக்ஷன்ல பாத்திங்கன்னு சொல்லுங்க. நான் அங்க இருக்கிறவங்களை கூப்பிட்டு விசாரிக்கிறேன்’
‘உங்களுக்கு அவ்வளவு சிரமம் வேண்டாம், பேரு மிஸ்டர் பாண்டியன் ஐ.டி. கார்ட்ல பார்த்தேன். காட்டன் சுடிதார் மெட்டீரியல்ஸ் செக்ஷன்’
‘குட், புள்ளி விபரம் எல்லாம் தர்றீங்க, ஐ அப்பிரிஷியேட் யுவர் ஷார்ப்னஸ்’
‘தேங்க்யூ... பட் ஐ டோன்ட் வான்ட் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்’ என்றவளை வியப்புடன் நோக்கினான். முகஸ்துதிக்கு மயங்காத பெண்ணா? தன்னிச்சையாக விரல்கள் இண்டர்காமிற்கு சென்று.
‘ராஜு தாத்தா, நம்ம பாண்டியனை, என்னோட கேபினுக்கு உடனே அனுப்புங்க; என்றான்.
சில வினாடிகள் அங்கு அமைதி நிலவியது.
பதறிய மனதுடன் பாண்டியன் உள்ளே வந்தான்.
‘குட்மார்னிங் சார்’ என்றான் பவ்யமாக.
‘இவங்க சொல்றது எல்லாம் நிஜமா பாண்டியா?’ என்றான் சற்று அதிர்வான குரலில்.
‘என்ன.. சார்?’.. என்றான் திணறியவாறு.
‘நீ.. அந்த பெரியவரை ஹார்ஷா டீல் பண்ணியாமே?’ என்றான் பெரியவரைக் காட்டி.
‘’சார்.. அது... வந்து, இருந்த டென்ஷன்ல தெரியாமச் சொல்லிட்டேன் சார். சார் சார், வெரி வெரி சாரி சார்’
‘உன் சாரியை இங்க சொல்லாத, இந்த மேடம்கிட்ட சொல்லு’ என்றான் ஓவியாவைக் காட்டி.
‘சாரி மேடம், வெரி சாரி’
‘என்கிட்டயும் நீங்க கேட்க வேண்டாம் மிஸ்டர் பாண்டியன். அந்தப் பெரியவர் கிட்ட கேளுங்க போதும்’ என்றது தான் தாமதம் உடனே கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி அந்தப் பெரியவரை நெருங்கினான். அவரை சமாதானப்படுத்த முயன்றான்.
அதற்குள் ஓவியா, ‘என்னோட கோரிக்கையை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி மிஸ்டர்...’ என்று தெரியாதவளைப் போல் இழுத்தாள்.
‘செல்வா’ என்றான் கம்பீரமாக.
‘ஓகே செல்வா தேங்க்ஸ் பார் யுவர் இம்மிடியட் ஆக்சன்’ என்றபடி எழுந்தாள் ஓவியா.
‘இது என்னோட கடமை. ஆனால் நான் உங்ககிட்ட இன்னொன்னும் சொல்லனும்னு ஆசைப்படறேன் மிஸ் ஓவியா’
கதவருகில் சென்றவள் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.
‘எல்லா இடத்துலயும் வேலை செய்றவங்க ரோபர்ட் இல்லை. மனிதர்கள்னு நீங்க புரிஞ்சிக்கனும். அவங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். எல்லா சராசரி மனுஷனுக்கும், குடும்பத்திலயும் சரி, வேலையிலையும் சரி நிறைய டென்ஷன் இருக்கத்தான் செய்யும். நீங்க இப்போ கம்ப்ளைன்ட் பண்ணீங்களே அவன் குடும்பம் எந்த நிலையில் இருக்கு தெரியுமா. மூணு தங்கச்சி, விதவை அம்மா, என்ஜினியரீங் படிக்கிற தம்பி, உயிரைக் கொடுத்து உழைக்கிறான். ஒரு நிமிஷம் கூட அவன் தூங்குவதில்லை தெரியுமா. அதான் ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டான். அதுக்காக அவன் செய்றது சரின்னு சொல்ல வரலை. எத்தனைத்தான் நாம ஒளிச்சி வெச்சாலும் சில சமயம் இப்படித்தான். தானா வெடிச்சி வெளியேவரும். அதுக்கு யார் பலியாகிறாங்கன்னு யோசிக்க தோணாது. சோ அவன் சார்பில் நான் உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனி இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துகிறேன் சாரி பார் த இன்கன்வீனியன்ஸ்’ என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஏதோ கோப்புக்குள் தன் கவனத்தை திருப்பினான்.
கதவருகில் சென்று விட்ட ஓவியா வேறு ஏதும் சொல்லத் தோன்றாமல் வெளியே வந்தாள்.
வெளியே நின்றிருந்த பாண்டியன் பாதித் திறந்த கதவு வழியே அத்தனையும் கேட்டபடி நின்றான். இவள் வெளியே சென்றதுதான் தாமதம். உடனே உள்ளே ஓடி வந்து செல்வாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
‘சாரி சார், தெரியாம செய்துட்டேன். இனிமே இது மாதிரி சத்தியமா நடக்காது. என் மேலே எவ்வளவு பாசம் வெச்சிருகீங்க. நான் பண்ணின தப்புக்கு. நீங்க சாரி கேட்டீங்களே. நீங்கதான் சார் தெய்வம்’ என்று புலம்பிய பாண்டியனை தூக்கி நிறுத்தி சமாதானம் செய்தான் செல்வா.
‘இதோ பாரு பாண்டியா எனக்கு ஊழியர்களும் முக்கியம், வாடிக்கையாளர்களும் முக்கியம். அதான் ரெண்டு பேருக்கும் சமமா பேசினேன் என்று மொழிந்து விட்டு தன் கோப்புக்குள் புகுந்தான்.
சட்டென்று ஏதோ தோன்ற தன அறையில் உள்ள கண்ணாடிச் சுவர் வழியாகக் கீழே பார்த்தான். ஓவியா தன் ஸ்கூட்டியில் பறந்தாள். அவளை பார்த்த படியே சிந்தனையை ஓட்டினான். ‘இவளை எங்கோ பார்த்தது போல் இருக்கே.. எங்கே’ அவளைப் பார்த்த சில நொடிகளிலேயே. அவளது தைரியம், சுறுசுறுப்பு, துடுக்குத்தனம் என்று அத்தனையும் கவனித்தான். பெண்களின் தைரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செல்வாவுக்கு ஓவியாவை பிடித்திருந்தது. அவள் நினைவுகளை ஓரம் தள்ளிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தான்.
ஸ்கூட்டி சைதாப்பேட்டை ரோட்டில் வேகமாக சென்றது. ஓவியாவின் மனதைப் போலவே நினைவுகள் செல்வாவையே சுற்றி சுற்றி வந்தது. ச்சே.. எந்த கொலைகாரனைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அவனை பார்த்து விட்டேனே. மூன்று வருடங்கள் ஆகிவிட்டது அந்தச் சமபவம் நடந்து. ஆனால் என் கோபம் துளியும் குறையவில்லை. மறக்கக் கூடிய செயலா அது. இவனால் என் குடும்பமே தலைகீழ் ஆகிவிட்டது.
இவன் எங்கே சென்னை வந்தான். இவனால்தானே நாங்கள் திருச்சியை விட்டு இங்கு வந்தோம். சொந்த பந்தம், சொந்த வீடு எல்லாவற்றையும் விட்டு இப்படி அனாதைகளாய் நிற்பது இவனால் தானே. எப்படிப்பட்ட ஒரு அநீதி எனக்கு செய்துவிட்டு முகத்தில் ஒரு சிறு மாறுதல் கூட காட்டாமல், எதுவுமே செய்யாதவன் போல் பேசுகிறான், நான் ஏன் தடுமாறினேன். தப்பு செய்தவன் சாதாரணமாக இருக்க எனக்கு மட்டும் ஏன் தடுமாற்றம் வந்தது. இது என்ன என் மனம் அவனையே நினைக்கிறது. ச்சே.. மறந்துவிடவேண்டும்... என்று மனம் நினைக்க. அவள் ஸ்கூட்டி தன்னிச்சையாக ஒரு கோவிலின் முன் நின்றது. மனசாந்திக்காக அந்தக் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழுந்து நடந்தாள். இவள் செல்வாவை மறக்க நினைக்க, கடவுளின் நினைப்பு வேறாக இருந்தது