Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மகளதிகாரம்

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

நான் இனிதா மோகன், இது என் முதல் சிறுகதை.. மூன்று நாவல் எழுதியுள்ளேன் ..ஆனால் இது தான் என் முதல் சிறுகதை. இந்த தளத்தில் நான் பதியும் முதல் கதை, இந்த தளத்தின் வாசகர்களுகளுக்கு நான் புதியவள்.. எனக்கும் தொடர்ந்து உங்கள் ஆதர்வை தந்து என்னை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. இந்த கதை தந்தைக்கும் , மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் கதை.. நிச்சயமாக இந்த தந்தையும், மகளும் அவர்களின் பாசத்தால் உங்களை மென்மையாக வருடி செல்வார்கள்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. என் முதல் முயிற்சி எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும் உங்களில் ஓருத்தியாய் காத்திருக்கிறேன்..

நன்றி..

அன்புடன்..

இனிதா மோகன்
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
மகளதிகாரம்



கதிரவன் மெல்ல மெல்ல தன்னை மேகத்திற்குள் மறைத்துக் கொண்டிருந்த அந்த அந்தி சாயும் நேரத்தில்.. ஆகாயம் தன் உடல் முழுவதும் மஞ்சளும்,ஆரஞ்சும் கலந்த வண்ணத்தைக் போர்வையாக போர்த்தி இருந்தது.அதை பார்ப்பதற்கு கண்கள் இரண்டும் போதாது.. இயற்கை.. இயற்கை தான்.. எத்தனை அழகு! கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது..



கதிரவனின் உதயம் மட்டும் அழகு இல்லை..மறைவு கூட அழகு தான் நாளைய விடியலுக்கு தயாராகும் மிளிர்வான அழகு ..




பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் அந்த அழகை ரசிக்கும் மனநிலை கொஞ்சம் கூட இல்லாமல் தளர்ந்த நடையுடன் அந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருந்த பூங்காவில் போடப்பட்டு இருந்த சிமிண்ட் இருக்கையில் தன் அத்தனை சக்தியும் வடிந்தது போல் ஓய்ந்து அமர்ந்தார் பாவலன்..



மனம்மெல்லாம் உயிர் போகும் வலி அவருக்கு, அந்த இருக்கையில் தலையை பின்னோக்கி சாய்த்துக் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்..




சிறிது நேரம் அப்படியே சாய்ந்து இருந்தவரின் காதுகளில் “அப்பா..” என்ற அழைப்பு அவரின் சப்தநாடியையும் உலுக்கியது..சட்டென்று இமைதிறந்து பார்த்தவரின் கண்களில் ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையை அழைத்துக் கொண்டு ஓடியது அவர் கண்களில் பட்டது..அந்த குழந்தையையும் ,தகப்பனையும் சிறிது நேரம் ஆசையாக இமை தட்டாது பார்த்தவர் சிறு பெருமூச்சுடன் கண்களை மீண்டும் மூடிக் கொண்டு சாய்ந்தவரின் ஞாபகங்கள் பின்னோக்கி சென்றது..



பாவலன் அப்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் அது..அந்த சமயத்தில் அவருக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை..



குடி,சிகுரெட் புகைப்பது,சீட்டாடுவது ,தேவை இல்லாமல் வம்பு சண்டைக்கு போவது என்று உலகத்தில் உள்ள தீய பழக்கங்களை எல்லாம் கற்று வைத்திருந்தார்..



பாவலன் ஓன்றும் வசதி வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை..ஒரு சாதாரண தொடக்க பள்ளி ஆசிரியரின் மகன் தான்..படிப்பு ஓரளவுக்கு வந்தாலும் தகாத சேர்க்கையால் கெட்டு குட்டி சுவராக இருந்தார்..




அவர் தந்தை தனசேகரனும் அவரை திருத்த எத்தனையோ முயற்சி செய்து பார்த்தார். ஆனால் மகன் திருந்தியபாடில்லை..ஊருக்குள் ரவுடி என்ற பெயரையும் வாங்கி வைத்து இருந்தார்..



நாட்கள் இப்படியே கழிய கல்லூரி படிப்பை முடித்தவர். தனசேகரன் மேல் படிப்பு படிக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் அதை கேட்காமல் தான் சொந்த தொழில் செய்யப் போவதாக தந்தையிடம் அடம்பிடித்து முதலீட்டுக்குப் பணம் வாங்கி சின்னதாக துணிக்கடை வைத்தார்..

ஆனால் தொழில் ஆரம்பிக்க இருந்த வேகம் தொழிலை கவனிப்பதில் இல்லாததால் அவர் மிகப்பெரிய நட்டத்தை அடைந்தார்..



முதலில் இருந்த குடிப்பழக்கம் இதை காரணம் காட்டி இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை..தனசேகரனுக்கு தன் கண்முன்னே தன் மகன் கெட்டு சீரழிவதை பார்க்க சகிக்கவில்லை..சதா மகனுடைய கவலையே அவரை புழுவாக அரித்தது..




இந்தநிலையில் தான் அவருடைய மனைவி செந்தாமரை கணவனிடம் ஒரு யோசனையை சொன்னார்..



மகனுக்கு விரைவாக திருமணத்தை முடித்தால், குடும்பமானால் திருந்தி விடுவான் என்று ஆலோசனை சொன்னார்..தனசேகரனுக்கும் அதுவே சரியென்று படவும் உடனே பெண் தேடும் படலத்தில் இறங்கினார்..



ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை..ஊருக்குள்ளும் ,உறவுக்குள்ளும் மகன் வாங்கி வைத்து இருந்த கெட்ட பெயரும்,தீயபழக்கமும் அவனுக்கு பெண் தர யோசிக்க வைத்தது..



தனசேகரன் மகனுக்கு பெண் தேடி ஓய்ந்து போனார்..முடிவில் செந்தாமரையின் தூரத்து உறவில் சிறு வயதிலேயே தாய்,தகப்பனை இழந்து பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த நறுமுகையை பார்த்து மகனுக்கு பேசிமுடித்தனர்..



நறுமுகை அதிகம் படிக்கவில்லை .பத்தாவது தான் படித்து இருந்தாள்..குடும்ப பாங்கான தோற்றம்.தனசேகரன், செந்தாமரைக்கு அவளை பார்த்தவுடனே பிடித்துவிட்டது.இனி நிச்சயமாக மகன் திருந்திவிடுவான் என்று நம்பிக்கையுடன்பாவலன்,நறுமுகை திருமணத்தை முடித்தனர்..



திருமணம் முடிந்து மாதங்கள் உருண்டோடியது, ஆனால் மகன் திருந்திய பாடில்லை.நறுமுகையுடன் நல்லபடியாக வாழ்ந்தாலும் தன் தீயபழக்கத்தை மட்டும் விடவில்லை.. அதை பார்த்த தனசேகரன் தம்பதியினர் இன்னும் நொந்து போனார்கள்..




ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வை மகனை நம்பி கெடுத்து விட்டோமா? என்று வருந்தினார்கள்..மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய நிலமையாக இருந்தது அவர்கள் நிலை..



நாட்கள் நகர நறுமுகை தாய்மை அடைந்தாள்.. தனசேகரன் தம்பதியினர் ஆனந்தம் அடைந்தனர்..இனியாவது நல்லது நடக்கட்டும் என்று நினைத்தனர்..ஆனால் அபபோதும் பாவலனிடம் எந்த மாற்றமும் இல்லை..



நாட்கள் நகர நறுமுகைக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தனர்.. செந்தாமரை தாய்யில்லாத நறுமுகைக்கு தாயாக இருந்து தனக்கு மகளில்லாத குறையையும் தீர்த்துக் கொண்டார்..



நறுமுகைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவமாகலாம் என்ற நிறைமாத நேரத்தில் தனசேகரன், செந்தாமரைக்கு நெருங்கிய உறவில் ஒரு துக்கம் நிகழ்ந்து இறப்பு செய்தி வரவும்..அதற்கு போக வேண்டிய கட்டாயத்தால் இரவு சென்று காலையில் நேரமாக வந்துவிடலாம் என்று இறப்புக்கு சென்றனர்..



அவர்கள் சென்று சிறிது நேரத்திலேயே நறுமுகைக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து பிரசவவலி வந்துவிட்டது..



நல்லவேளை அந்த நேரத்தில் பாவலன் வீட்டில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்..




நறுமுகை உயிர் போகும் வலியில் போராடி ஒரு வழியாக தங்கள் பெண்ணரசியை பெற்றெடுத்தாள்..



பாவலனோ நறுமுகை வலியில் துடிப்பதை பார்த்தவருக்கு மனதின் ஓரத்தில் முதல் முறையாக வலியை உணர்ந்தார்..



யாருக்காகவும் வருந்தாதவர்,தன் சுயநலத்திலேயே ஊறியவர் முதல் முதலாக நறுமுகை வலியில் துடிப்பதை பார்த்தவருக்கு மனதில் சிறிது சலனம் வந்தது...



குழந்தை பிறந்தவுடன் அழகாக வெண்துண்டில் வைத்து சுற்றி இவரிடம் நீட்டினார்கள்..கைகள் நடுங்க தன் பெண்ணரசியை வாங்கியவர் குழந்தையின் அழகில் பிரமித்து நின்றார்..



தாயின் கருவறையில் இருந்து அப்போது தான் வெளியில் வந்து வெளி உலகத்தை காணும் அந்த பிஞ்சு..தன் கண்களை சுருக்கி சுருக்கி பார்த்தது..



அதன் அழகில் மயங்கிய பாவலன் இமை தட்டாது,விழி எடுக்காது தன் கைகளில் பஞ்சு பொதியாய்..மலரின் மென்மையுடன் இருந்த மகளை ஆசையாக ரசித்து பார்த்தார்..



உலகத்தில் உள்ள அத்தனை அழகையும் தன்னுள் பொதிந்து வைத்திருந்த அந்த அழகு தேவதையின் மென்மையில் மயங்கியவர், அதன் பட்டு கன்னத்தில் தன் அன்பு முத்தத்தை பதித்தவர்.தன் செல்ல மகளின் கன்னத்துடன் தன் கன்னத்தை வைத்து அழுத்தினார்..



அப்போது குழந்தையோ வீர் என்ற அழுகையுடன் முகத்தை சூழித்தது..



குழந்தையின் அழுகையில் சட்டென்று பதறியவருக்கு அப்போது தான் புரிந்தது.‌ தன் தாடி தான்.. தன் மகளின் பட்டு கன்னத்தில் பட்டு வலிக்க செய்தது என்று..



தன் பிஞ்சு பாதங்களால் தன் தகப்பனை ஒரு உதை வைத்து விட்டு தன் அழுகையை நிறுத்தியது அவரின் பெண்ணரசி..அந்த உதையே பாவலனுக்கு எதையோ சொல்லாமல் சொல்லியது..



குழந்தையுடன் மனைவி இருந்த அறைக்குள் சென்றவர்..அரை மயக்கத்தில் இருந்த மனைவியை பார்ததவருக்கு அவளின் பிரசவவலி கண்முன்னே வந்து சென்றது.மெல்ல அவளின் தலைமுடியை ஒதுக்கிய படியே.”நறுமுகை இப்போது எப்படி இருக்கும்மா..” என்று கண்களில் கனிவு பொங்க கேட்டார்..



நறுமுகைக்கோ அரைமயக்கத்திலும் என்றுமில்லாத கணவனின் கனிவான பேச்சு மனதை வருடியது..



குழந்தையை மெதுவாக மனைவியிடம் படுக்க வைத்தவர் சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு வெளியில் சென்றார்..



நறுமுகையோ தன் அருகில் அழகோவியமாக படுக்க வைத்திருந்த தன் மகளின் அழகை விழி எடுக்காது பார்த்தபடியே பூவை விட மென்மையாக இருந்த குழந்தையின் கைகளை மென்மையாக வருடியபடியே படுத்து இருந்தாள்..



தனசேகரனும்,செந்தாமரையும் விசயம் கேள்விப்பட்டு ஓடோடி வந்தவர்கள் தங்கள் பேத்தியை பார்த்து பூரித்து போனார்கள்..



நறுமுகையின் நலம் விசாரித்தவர்கள் அவளது தேவையை கவனித்துக் கொண்டே குழந்தையை ரசித்துக் கொண்டு இருந்தனர்..



வெளியில் சென்று திரும்பிய பாவலனை பார்த்து நறுமுகை உட்பட அனைவரும் வியந்து போனார்கள்..



வியக்காமல் என்ன செய்வார்கள் எத்தனை முறை சொல்லியும் கேட்காத மகன் இன்று தான் தன் தாடியை எடுத்து இருந்தான்..அவனின் செயல் யாருக்கும் புரியவில்லை..



நறுமுகைக்குமே அதிர்ச்சி தான் திருமணம் முடிந்ததிலிருந்து அவளும் தாடியை எடுக்க சொல்லி எத்தனையோ முறை சொல்லியும் கேட்காத கணவன் இன்று தாடியை எடுத்திருப்பது வியப்பாக இருந்தது..



பாவலனோ வியந்து போய் பார்த்த மூவரிடமும் மென்மையாக சிரித்தபடி "தாடி என் மகளுக்கு பிடிக்கவில்லை அது தான் எடுத்து விட்டேன்..” என்று கூறியவரை திகைத்து போய் பார்த்தார்கள்..



தனசேகரனுக்கும்,செந்தாமரைக்கும் மனதில் மெல்ல நம்பிக்கை துளிர்விட்டது..இனி தன் மகன் திருந்திவிடுவான் என்று..அவனே திருந்தாவிட்டாலும் தங்கள் பேத்தி திருத்தி விடுவாள் என்ற எண்ணம் வேரூன்றியது..



நாட்கள் நகர குழந்தைக்கு ஒரு மாதம் முடிந்த நிலையில் அதற்கு பெயர் வைக்க முடிவுச்செய்து , நல்ல நாள் பார்த்து சின்னதாக ஒரு விழாவை மிக நெருங்கியவர்களை மட்டும் அழைத்து நடத்தினார்கள்..



பாவலன் தன் செல்ல மகளுக்கு மகிழினி என்று பெயர் சூட்டினார்..(மகிழினி என்றால் மகிழ்ச்சியை தருபவள் என்று பொருள்..)தன் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை அள்ளித்தர வந்த தேவதையாக நினைத்து இந்த பெயரை சூட்டினார்..



தனசேகரன் தம்பதிக்கும்,நறுமுகைக்கும் மகிழினி பிறந்த இந்த ஒரு மாதத்தில் பாவலனிடம் ஏற்பட்ட மாற்றம் பெரும் நிம்மதியையும் ,மகிழ்ச்சியையும் தந்தது..



நாட்கள் உருண்டோட மகிழினி தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தாள்..பாவலனோ மகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து பார்த்து மகிழ்ந்தார்..குடிப்பதை கூட குறைத்திருந்தார்.



ஒருநாள் நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தவர், பழைய நண்பர்களை எல்லாம் சந்தித்தவர் அவர்களின் வற்புறுத்தலில் நன்றாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்..



மகிழினியோ தந்தையை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் தந்தையிடம் தத்தி..தத்தி நடந்து அவரின் கால்களை பிடித்தாள்.



மகள் தன்னிடம் நடந்து வரும் அழகை கண்டவர் தன் கால்களை பிடித்தவுடன் ஆசையாக தூக்கியவர் எப்பொழுதும் போல் மகிழினியின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டார்..



மகிழினியோ தந்தையிடமிருந்து வந்த வாடையில் அவர் மீதே வாந்தி எடுத்து விட்டாள்..அப்போது தான் குழந்தை சாப்பிட்டிருந்தாள்...



பாவலனோ குழந்தையின் செயலில் அதிர்ந்தவர், தன்னை நினைத்தே வெட்கியபடி, அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த நறுமுகையிடம் குழந்தையை கொடுத்து விட்டு தங்கள் அறைக்கு வந்தவர், நேராக குளியல் அறைக்கு சென்று தலையில் நீரை கவிழ்த்தவர் தன் குடிபழக்கத்தையும் அன்றோடு விட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்தார்.. கொஞ்சம் அது கடினம் என்றாலும் தன் மகளுக்காக தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தார்..



மகிழினியும் மெல்ல வளரத் தொடங்கினாள் ..



பாவலனும் கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்..துணிக்கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் அவர் தொழில் தொடங்க தனசேகரன் அனுமதிக்கவில்லை..



அவரின் பென்ஷன் பணமும்..சொந்த ஊரில் அவருக்கு இருந்த நிலத்தை குத்தகைக்கு விட்டதில் வந்த வருமானத்திலும் தான் குடும்பத்தை நடத்தி வந்தார்..அது போக அவருடைய ரீட்டையர்மெண்டு பணத்தையும்,சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தயும் வங்கியில் டெபாசிட் செய்திருந்தார், அதன் மூலமும் ஒரு கனிசமான தொகை வட்டியாக வந்தது.



பாவலன் கணக்காளர் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.தனசேகரன் தான் இந்த வேலையை தன் நண்பரின் உதவியுடன் வாங்கித் தந்தார்..பாவலனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் திருமணத்திற்கு பிறகு வேறு வழி இல்லாமல் சென்றார்..



அன்றும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியவர் ஒரு சிக்னலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய படி காத்திருந்தார்..அப்போது ஒரு நான்கு வயது பெண் குழந்தை பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது..



பாவலனிடமும் வந்து அந்த குழந்தை காசு கேட்டது, அதை பார்த்த பாவலன் ஒரு நிமிடம் திகைத்து போனவர்.. தன் கையில் இருந்த சில்லரையை குழந்தையின் தட்டில் போட்டு விட்டு, சிக்னல் மாறியவுடன் வண்டியை ஓட்டிய படியே வந்தவரின் மனம் முழுவதும் சிக்னலில் பார்த்த குழந்தையின் நினைவே ஆக்கரமித்தது..



எத்தனையோ முறை இந்த மாதிரி காட்சிகளை பார்த்து இருந்தாலும் அப்போதுதெல்லாம் பாதிக்காதது இப்போது மனதை பாதித்தது..



வீட்டிற்கு வந்தவர் எப்போதும் போல் மகிழினியை தூக்கி கொஞ்சியவர்..அப்போது தான் திக்கி ..திக்கி பேச ஆரம்பித்து இருந்த மகளின் கோர்வையற்ற வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்தார்..



மகளின் மழலை மொழி அவரை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது.



அன்று இரவு அவருக்கு சரியான தூக்கமே இல்லாமல் விழித்தே இருந்தார்..



சிக்னலில் பார்த்த குழந்தையையும்,தன் குழந்தையையும் இணைத்து குழம்பியவர் விடிய விடிய யோசித்து ஒரு முடிவு எடுத்த பின்னர் தான் உறங்கினார்..



பாவலன் தான் எடுத்த முடிவை செயலாற்ற காலை உணவை உண்டு கொண்டு இருந்த தந்தையின் அருகில் சென்று அமர்ந்தவர், தான் கேட்க வந்ததை தயங்கியபடியே கேட்டார்..



“அப்பா நான் மீண்டும் துணிக்கடையே வைக்கலாம் என்று நினைக்கிறேன்..” என்ற மகனின் பேச்சை கேட்ட தனசேகரன் சாப்பிடுவதை நிறுத்தியபடியே மகனை அதிர்ச்சியாக பார்த்தார்..



மனதிற்குள்ளோ வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதா? இப்போது தான் திருந்திவருகிறான் என்று நினைத்தால் அந்த எண்ணத்தில் மண்ணள்ளி போடுவது போல் சொல்கிறானே என்று வருந்திய படியே மகனை பார்த்தார்.



பாவலனோ தந்தையின் திகைத்த தோற்றத்தை பார்த்து ஊகித்தவர் “அப்பா நான் இந்த முறை நன்றாக செய்வேன்,என் மகளை நல்ல பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்க வேண்டும்.அதற்கு என் தற்போதைய வருமானம் போதாது.. அதனால் தான் தொழில் செய்ய விரும்புகிறேன்..இந்த முறை நிச்சயமாக நான் ஜெயிப்பேன்..” என்று கண்களில் வெறியுடனும்,நம்பிக்கையுடனும் பேசிய மகனை பார்த்து வியந்து தான் போனார்..அதை விட மகன் தொழில் தொடங்க சொன்ன காரணம் அவரை சிந்திக்க வைத்தது..



அடுத்த ஒரு வாரத்தில் தன் வங்கிகணக்கில் வைத்திருந்த பணத்தையும்,தன் நண்பர் ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி கொடுத்தும் மகனுக்கு தொழில் தொடங்க உதவினார்..



‘மகிழினி ஆடை உலகம்’ என்று கடைக்கு தன் மகளின் பெயரை வைத்தே தொடங்கியவர், வெற்றிகரமாக தொழிலை நடத்த துவங்கினார்..தனசேகரனும் மகன் இல்லாத சமயம் கடையை பார்த்துக் கொண்டார்..



நாட்கள் நகர மகன் சொன்னதை போலவே சாதித்து காட்டினார்..தொழிலில் புது..புது உத்திகளை புகுத்தி வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் செயலாற்றினார்..



பாவலனின் கடின உழைப்பும்,விடாமுயற்சியும் மற்றொரு கிளையை ஆரம்பிக்கும் அளவு உயர்ந்தது..



தனசேகரனே மகனின் திறமைகளை கண்டு வியந்து தான் போனார்.. வெளியில்வாங்கிய கடன்களை அடைத்தவர்,தன் தந்தை கொடுத்து உதவிய பணத்தையும் அவர் பெயரிலேயே வங்கியில் டெபாசிட்டும் செய்தார்..



மகழினிக்கு பள்ளி செல்லும்வயதானதும் மிகப் பெரிய பள்ளியில் சேர்த்தார்.



மகிழினியும் நல்ல பிள்ளையாக பள்ளி சென்று வந்தாள்..மகழினி மிகுந்த புத்தி கூர்மையுடைய குழந்தை, அந்த சிறுவயதிலேயே எதையும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அறிவுடன் இருந்தாள்.படிப்பிலும் சுட்டியாக இருந்தாள்..நாட்கள் அழகாக சென்றது..



எல்லாம் நன்றாக போய்க் கொண்டு இருந்த போதும் பாவலனின் புகை பழக்கம் மட்டும் தொடர்ந்தது..அதில் அனைவருக்கும் மிகுந்த வருத்தமே.சட்டென்று பாவலனால் அதை மட்டும் விடமுடியவில்லை..



அவரின் புகைபிடிக்கும் பழக்கமும் முடிவுக்கு வந்தது ஒரு நாள்.. தான் புகைபிடித்தால் மகளின் அருகில் வரேவே மாட்டார் எப்போதும்..



அன்று ஞாயிற்றுக்கிழமை அதனால் கடை விடுமுறை என்பதால் வீட்டில் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தார் மகளை மடியில் அமர்த்திக் கொண்டு..



அப்போது தொலைக்காட்சியில் வந்த ஒரு விளம்பரம் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு,கேன்சர் வரும்..என்ற விளம்பரம் ஓடிக் கொண்டு இருந்தது..



தந்தையின் மடியில் அமர்ந்திருந்த மகிழினி.. அதை பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தந்தை புறம் திரும்பி “அப்பா நீங்கள் இனிமேல் புகை பிடிக்காதீர்கள் எங்கள் மிஸ் கூட சொன்னார்கள்.. புகை பிடித்தால் உடல் நலத்திற்கு கேடு, செத்து விடுவார்கள் என்று நீங்கள் என்னை விட்டு போய்விட்டால் நானும் செத்துவிடுவேன்..” என்று கூறிய மகளின் வார்த்தைகள் அவனை தீயாக சுட்டது..



கண்களில் நீர் கோர்க்க மகளை இறுக அணைத்துக் கொண்டவர் “இல்லை கண்ணம்மா இனி அப்பா புகைபிடிக்காவே மாட்டேன்..” என்று கூறினார்..



இவர்களின் பேச்சை கேட்ட தனசேகரன், செந்தாமரை,நறுமுகையும் மகிழ்ந்தனர்..



தங்களால் முடியாததை இந்த சின்ன குழந்தை செய்துவிட்டதே என்று பிரமித்தனர்..இதற்கு அப்போது மகிழினிக்கு வெறும் ஏழு வயது தான்..



அதன் பிறகு பாவலன் புகைப்பதை அடியோடு நிறுத்த முயற்சித்தார்.. இத்தனை வருட பழக்கத்தை ஓரே நாளில் நிறுத்த முடியாததால் கவுன்சிலிங் சென்று நிறுத்துவதற்கான சிகிச்சை எடுத்து அந்த பழக்கத்தை அறவே நிறுத்தினார்..



பாவலனின் உலகமே மகள் மகிழினியானாள் ..மகளும் தந்தைக்கு சலைத்தவள் இல்லை என்று நிரூபித்தாள்..அவளுடைய எல்லாவற்றிற்கும் அப்பா தான் வேண்டும்.. பள்ளி விட்டு வந்தால் தனது பள்ளிப்பாடங்களை முடித்து விட்டு சிறிது நேரம் பாட்டி தாத்தாவுடன் பொழுதை கழிப்பவள் இரவு தந்தை வந்தவுடன் தான் உணவு உண்பாள்..பள்ளியில் நடந்த அத்தனை கதையையும் தந்தையிடம் சொன்னால் தான் அவளுக்கு தூக்கமே வரும்..



பாவலனோ மகள் கண்களில் அபிநயத்துடன் கதைசொல்வதை ஆசையாக கேட்பார்..அவரின் உயிர்நாடியே மகள் தான்..



அதுவும் ஞாயிற்றுகிழமை வந்தால் இவர்கள் இருவரும் அடிக்கும் கொட்டம் தாங்க முடியாது.. மகளுக்கு இணையாக இவரும் சேர்ந்து விளையாடுவது கண்கொள்ள காட்சியாக இருந்தது..அன்றும் ஞாயிற்றுக்கிழமை.. காலை உணவை முடித்தவுடன் தந்தையிடம் வந்தவள் “அப்பா நாம் நர்சரி போகலாமா..?” என்ற மகளை கேள்வியாக பார்த்தார் பாவலன்..



மகளோ தந்தைக்கு புரியும் படி “அப்பா நம் வீட்டை சுற்றி எத்தனை இடம் இருக்கிறது, நாம் ஏன் அதில் நிறைய செடிகள் நடக்கூடாது..பள்ளியில் மிஸ் சொன்னார்கள் மரம் வளர்த்தால் தான் மழை வருமாம்.. வீட்டிற்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என்று சொன்னார்கள்..நம் வீட்டில் தான் இத்தனை இடம் இருக்கிறதே நாம் நிறைய வளர்க்கலாம்..அப்புறம் இன்னொன்றும் சொன்னார்கள் மழை நீரை சேமிக்க வீட்டில் மழை நீர் தொட்டி கட்ட வேண்டுமாம், அப்போது தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றார்.நம் வீட்டில் மழை நீர் தொட்டி இருக்கிறதாப்பா..இல்லை என்றால் சீக்கிரம் கட்டுங்கள்..” என்று கூறிய பத்து வயது மகளை பிரமிப்புடன் பார்த்தார்..



நல்ல விசயங்கள் எவ்வளவு எளிதாக குழந்தைகளின் மனதில் பதிகிறது என்று நினைத்தவர் மகளின் பட்டு கன்னங்களை செல்லமாக பிடித்து ஆட்டியபடி “என் இளவரசி சொன்னால் அதற்கு மறுபேச்சு ஏது..” என்றவர் மகள் சொன்னதை அன்றே செயல் படுத்த தொடங்கினார்..



வீட்டில் மட்டும் இல்லாமல் அவர்கள் தெருவிலும் சாலையோரத்தில் காலியாக இருந்த இடத்தில் அவன் செலவில் மரக்கன்றுகளை வாங்கி நட்டார்.. மகளும் அவளுடைய நண்பர்களும் அதை பரமாரிக்க ஆரம்பித்தனர்..



மகளிடம் இருந்து நிறைய நல்ல விசயங்களை‌அவரும் கற்றுக்கொண்டார்..



மகிழினியின் திறமைகளை ஊக்குவிக்கும்‌ விதமாக அவளுக்கு நடனமும்,பாட்டும்,தற்காப்புகலையும்‌ கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்..



மகளுக்கு சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் இவர் துடித்து போய்விடுவார் மகளின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்வார்..



நறுமுகையோ அதை சிரித்தபடி “அவளை நான் பெற்றேனா? நீங்கள் பெற்றீர்களா? என்று எனக்கு சந்தேகம் வருகிறது..” என்று கேலி செய்வாள்..



ஒரு நாள் மகிழினியும் பெரிய பெண்ணாகினாள்.. குடும்பமே எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தது..ஆனால் அதன் பிறகு மகளிடம் சிறு மாற்றம் ஏற்பட்டது. அதை பாவலனால் தாங்க முடியவில்லை..தன்னிடம் ஒரு விலகலுடனே இருந்த மகளை கண்டு வருந்தியவர் ஒரு நாள் பொறுக்க முடியாமல் மகளை அழைத்து கேட்டே விட்டார்..



அதற்கு மகள் தந்த பதிலை கேட்டு அடங்காத கோபம் கொண்டவர் மனைவியை “நறுமுகை ..நறுமுகை என்று வீடே அதிரும் படி கத்தியவர் தலை தெறிக்க ஓடிவந்த மனைவியை கண்களில் அனல் பறக்க பார்த்தவர் “பிள்ளையிடம் என்னடி சொல்லி இருக்கிறாய்‌‌ ..” என்றார்.



அவளோ எதுவும் புரியாமல் திகைத்து நிற்க.அதை பார்த்தவர் என்னிடம்‌ இனி விலகி இருக்கனும் என்று சொன்னாயா..?” என்று அவள் அருகில் வந்து அவள் தோள்களை பற்றி குலுக்கியவர் அவளின் முகத்தை பார்த்தபடியே..”அவளை நீ உன் வயிற்றில் சுமந்து பெற்றால் நான் அவளை என் நெஞ்சில் சுமக்கிறேன்..என் உயிர் உள்ளவரை சுமப்பேன் பெண்பிள்ளைகள் தந்தைக்கு இன்னொரு தாய்.. அப்படிப்பட்ட குழந்தையின் மனதில் எதற்கு தேவை இல்லாததை சொல்லி நஞ்சை விதைக்கிறாய்..என்னை மனிதானக்கியதே என் பிள்ளை தானடி, இன்னொரு முறை எங்களுக்கு நடுவில் நீவந்தால் நான் மனிதானாகவே இருக்க மாட்டேன்..” என்றவர். மகளை அள்ளி அணைத்தவர் “நான் உன் அப்பா டா..நீ எவ்வளவு பெரியவள் ஆனாலும் எனக்கு குழந்தை தான்..” என்றார்.



நறுமுகையோ கணவனின் செயலில் உறைந்து போய் சிலையாக நின்றாள்..



அந்த நிகழ்வுக்கு பிறகு தந்தை மகள் இடையே நறுமுகை வருவதை நிறுத்திக் கொண்டாள்..



அதன் பிறகு அவர்கள் அன்பு பிணைப்பு இன்னும் அதிகமாகியது..மகிழினி எட்டாவது படிக்கும் பொழுது ஒரு நாள் தன் தந்தையிடம் வந்தவள் “அப்பா நீங்கள் பெரியாரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..” என்று கேட்டாள்..மகளின் கேள்வி புரியாமல் பார்த்தவர் “ஏன்டா அவர் ஒரு நாத்திகர்,கடவுள் எதிர்ப்பாளர் சாதி,மதங்களை ஒழிக்க போராடினார்..” என்று சொன்னார்..



மகளோ “அது மட்டும் இல்லையப்பா..பெண் விடுதலைக்காக போராடியவர்,கடவுளை வெறுக்கவில்லை..கடவுளின் பெயரை சொல்லிக் கொண்டு நடக்கும் மூடநம்பிக்கையை ஓழிக்கத்தான் கடவுளே இல்லை என்றார்..அவர் மட்டும் இல்லை என்றால் பெண்களின் நிலை என்ன ஆகியிருக்கும்.. பெண் கல்வியை வலியுறுத்தி அடுப்படியிலிருந்த பெண்களின் கைகளில் புத்தகத்தை கொடுத்தவர்..அவரின் பேச்சு வேண்டுமானால் கரடுமுரடாக இருந்திருக்கலாம், ஆனால் பெண் விடுதலைக்காக போராடிய மாமனிதர்..உண்மையில் அவர் பெரியார் தான்.. எங்கள் மிஸ் இன்று அவரை பற்றித்தான் சொல்லி கொடுத்தார்கள் அதை கேட்டதிலிருந்து அவர் மேல் தனிமதிப்பு வந்துவிட்டதுப்பா..நிச்சயமாக அவரில்லை என்றால் இது நடந்து இருக்குமா என்றே தெரியவில்லை ..”என்று கூறிய மகளை விழி எடுக்காது பார்த்து வியந்து போனவர், மகளின் தலையை வருடிய படியே “ஆமாண்டா என் தங்கமே..” என்று மகளை உச்சி முகர்ந்தார்.



தெளிந்த நீரோடையாக நாட்கள் நகர மகிழினி பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவள் பாவலனை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள்..



பாவலனோ அவளை மருத்துவ படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார்.. மகளும் அதற்கு தகுந்தாற் போல் மதிப்பெண் எடுத்து இருந்தாள்..ஆனால் மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார்.



பதினொன்றாம் வகுப்பில் சேர மருத்துவபடிப்புக்கு தேவையான அறிவியல் பாடப்பிரிவை எடுக்கச் சொன்னால்.. மகளோ அவர் ஆசையில் மண்ணைதூவியவள், அவள் எடுக்க நினைத்த பாடப்பிரிவை சொன்னதை கேட்டு திகைத்து தான் போனார்..



அப்பா நான் சிறப்பு தமிழ் தான் எடுத்து படிப்பேன் என்றாள் ..



பாவலனோ “அது எதற்கு கண்ணம்மா அதை படித்து என்ன செய்ய முடியும்..”என்று கேட்டவரிடம்..



“அப்பா தாய்மொழியில் கல்வி கற்றால் தான் சிந்தனையும், அறிவும் விரிவடையும்,சொற் களஞ்சியம் பெருகும்,எளிதாக புரியும்.. அதனால் தான் ஜப்பானியர்கள் தங்கள் கல்வியை தாய்மொழியில் கற்கிறார்கள்..என்னைத் தான் நீங்கள் ஆங்கில வழியில் சேர்த்து படிக்க வைத்து விட்டீர்கள்.. ஏதோ தாத்தா தமிழ் சொல்லிக் கொடுத்தால் என்னால் ஓரளவு பிழை இல்லாமல் எழுத படிக்க முடிகிறது.. நான் தமிழ்மொழியில் எம்.பில் (M.Phil)படிக்க வேண்டும் அதனால் நான் சிறப்பு தமிழ் எடுத்து படிக்கிறேன்..” என்று உறுதியாக பேசிய மகளை கண்டு வியந்தவர் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்தவர் வழக்கம் போலவே மகளின் ஆசைக்கு தலை ஆட்டினார்..



சொன்னதை போல் அதே பாடப்பிரிவை எடுத்து படித்தவள் பள்ளி இறுதி ஆண்டில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள்..



கல்லுாரியில் விருப்ப பாடமாக பி.ஏ தமிழ் எடுத்து படித்தாள்..



மகளை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்‌கொண்டார் பாவலன்.



மகிழினி பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது ஒரு நிகழ்வு நடந்தது.. மகிழினியுடை நெருங்கிய தோழி பொன்மணியை ஒரு தலையாக அவர்களுடன் படிக்கும் மாணவன் நீலன் காதலித்து வந்தான்..



பொன்மணி அவன் காதலை ஏற்க முடியாது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் அவள் பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தான்..



ஒரு நாள் பொன்மணி அவனிடம் கோபமாக தன்பின்னால் சுற்ற வேண்டாமென்று கடுமையாக எச்சரித்தாள்..அதன் பிறகு ஒரு வாரம் அமைதியாக சென்ற சமயத்தில்.. மாலை கல்லூரி முடிந்து பேருந்து நிலையம் சென்றவள் முகத்தில் ஏசீட் ஊற்றிவிட்டான் நீலன்.



இதில் பொன்மணியின் பாதி முகம் சிதைந்து வலியில் துடித்தவளை மகிழினி தான் மருத்துவமனையில் சேர்த்தவள்..நீலன் மேல் காவல்துறையில் புகாரும் பதிந்து நடவடிக்கை எடுக்க வைத்தாள்..



பாவலனோ மகிழினிக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தவர் மகளிடம் புகாரை திரும்ப்பெறச் சொல்லி போராடினார்.. ஆனால் மகளோ “அப்பா எல்லாரும் இப்படி பிரச்சனைக்கு பயந்து ஓதுங்கினாள் தவறு செய்பவருக்கு எப்படி தண்டனை கிடைக்கும். இந்த மாதிரி மிக கொடுமையான செயல்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தால் தான் நாளை இது போல் யாரும் செய்ய மாட்டார்கள் . ஒரு பெண்ணுக்கு காதலை நிரகாரிக்க கூட உரிமை இல்லையா..? எல்லாரையும் பிடிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்..காதலை ஏற்பதும் , ஏற்காமல் நிராகரிப்பதும் அவர்.. அவர் விருப்பம்.. அதற்கு இப்படி ஒரு இழிவான செயலையா செய்வது.. உண்மையாக காதலித்து இருந்தால் இப்படி செய்ய மனம் வருமா..? நாளைக்கு இதே நிலமை எனக்கு வராது என்று என்ன நிச்சயம் அப்பொழுதும் நீங்கள் இப்படித்தான் இருப்பீர்களா..?என்று கேட்ட மகளை அதிர்ச்சியாக பார்த்தார் பாவலன்.



மகழினி கூறியதை கேட்ட பாவலனுக்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது.. மகள் சொல்வதில் உள்ள நியாம் புரிந்தது. மகளின் துணிச்சலை கண்டு பிரமித்தவர் நீலனுக்கு தண்டனை வாங்கி தர தன்னால் முடிந்த உதவியை செய்தவர் மகளுடன் சேர்ந்து சிறை தண்டனை வாங்கி கொடுத்த பின்னர் தான் ஓய்ந்தார்..



பொன்மணி குணமாகி வரும் வரை அவளுக்கு ஆறுதலாக இருந்து அவள் மனதில் தன்நம்பிக்கையை விதைத்து அவளை புது மனுசியாக்கினார்கள் தந்தையும் ,மகளும்..



மகிழினி மூன்றாம் ஆண்டு படிப்பை முடித்தவுடன் பாவலன் மகிழினியை மேல் படிப்பு படிக்க சேர்த்து விட்டவர் மகிழினி கல்லூரி போய் வர ஒரு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்தார்..



மகிழினி அதுவரை பேருந்தில் தான் கல்லூரிக்கு போய் வந்தாள்.. வீட்டில் கார் இருந்தாலும் தோழிகளுடன் பேருந்தில் தான் வருவேன் என்று அடம்பிடித்து சென்று வந்தாள்..



ஒரு நாள் தன் தோழியின் அக்கா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு சென்றவள்.. விழா முடிந்து விடு வந்தவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீட்டிற்குள் வந்தாள்..



பாவலன் அப்பொழுது தான் கடையில் இருந்து வீட்டிற்கு வந்தவர் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தார்.. மகளை காணவில்லையே என்று வழி மீது விழி வைத்து காத்திருந்தார்..



மகிழினி முகத்தை பார்த்தவுடனே ஏதோ சரியில்லை என்று புரிந்தது.. அமைதியாக அருகே வந்து அமர்ந்த மகளிடம் “என்னடா முகம் சோர்வாக இருக்கிறதே ஏதோ சரியில்லை போல..” என்று கேட்டவரிடம்..



“அப்பா இன்று நான் பெயர் சூட்டும் விழாவிற்கு சென்றேனே அங்கு குழந்தைக்கு என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? லோச்சன் என்று எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லையப்பா எத்தனை அழகான அர்த்தம் உள்ள தமிழ் பெயர்கள் இருக்கிறது ஆனால் ஏன் தான் இப்படி நாகரீகம் என்று லோச்சன், சொல்யூசன்னு பெயர் வைக்கிறார்களோ..?” என்று தன் ஆதங்கத்தை தந்தையிடம் கொட்டியவள்.. சட்டென்று “நல்ல வேளை நீங்கள் எனக்கு அழகான தமிழ் பெயர் வைத்து இருக்கிறீர்கள்.. நம் வீட்டில் உள்ள அனைவர் பெயருமே தமிழ்ப்பெயர் தான் அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான் ..”என்று கூறிய மகளை தோளோடு அணைத்துக் கொண்டவர் ..



“கண்ணம்மா பெயர் வைப்பது அவரவர் விருப்பம் . அதற்காக நீ ஏன்டா இவ்வளவு ஆதங்கப் படுகிறாய்..என்ன செய்வது வருங்கால தலமுறையில் அழகான நல்ல தமிழ் பெயர்களை இனி காண்பது அரிதாகிவிடும்..” என்று மகளிடம் தன் ஆதங்கத்தையும் சொல்லியவர் “விடு கண்ணம்மா உன் குழந்தைகளுக்கு அழகான அர்த்தம்முள்ள பெயரை வைத்துக் கொள்ளலாம்..” என்று கேலி பேசிய தந்தையிடம் “போங்கப்பா..” என்று நாணத்துடன் கூறிய படி அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்..



 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
பாவலனோ மகளின் ஓவ்வொரு செயலிலும், எண்ணத்திலும் இருக்கும் சமூக அக்கறையை கண்டு வியந்து தான் போனார்..



நாட்கள் நகர அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் புயலடித்தது.. ஒரு நாள் திடீரென்று பாவலன் கடையில் மயங்கி விழுந்தார்..அவரை கடை ஊழியர்கள் அருகிலிருந்த மருத்துவ மனையில் அவசர பிரிவில் சேர்த்தனர்..



குடும்பமே பதறியடித்து சென்று பார்த்த பொழுது அவரது இருதய ரத்தக் குழாயில் சிறு அடைப்பு உள்ளதாகவும் அதற்கு ஸ்டென்ட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்த, உடனே அவருக்கு சிகிச்சை நடந்தது..



மகிழினியோ தந்தை மயங்கி விழுந்ததை கேள்விபட்டதிலிருந்து அழுது கொண்டே இருந்தாள்.. அவளுக்கு விபரம் தெரிந்ததிலிருந்து ஒரு நாள் கூட அவர் உடல்நிலை குன்றி பார்த்ததில்லை.. தந்தையை இந்த நிலையில் பார்த்தவள் துடி துடித்துப் போனவள் ஓவ்வொரு விநாடியும் மனதிற்குள் கடவுளிடம் தந்தையை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள் …



நறுமுகைக்கோ கணவனை காண்பதா, இல்லை சதா கண்களில் நீர்வடிய தன்நிலை மறந்து அமர்ந்திருந்த மகளை காண்பதா என்று தவித்து போனார்..



பாவலனுக்கு சிகுச்சை முடிந்து அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விழித்தபிறகு மகிழினி அவரை விட்டு இம்மியளவும் நகராமல் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.. மகள் என்பவள் தகப்பனுக்கு இன்னொரு தாய் என்று நிரூபித்தாள்..



அன்றிலிருந்து தந்தைக்கு இன்னொரு தாயானாள்.. அவருக்கு மாத்திரை ,மருந்து எடுத்து தருவது, அவருக்கு பக்குவமாக உணவு தருவது என்று அவள் நேரத்தை தந்தைக்காகவே ஓதுக்கினாள்..



பாவலனோ முதலிலேயே மகள் மேல் உயிராக இருப்பார்.. இப்பொழுது அவர் மூச்சே மகளானாள்..



அதுமட்டுமின்றி முதல் போல் தந்தையிடம் எதற்கும் வாதாடுவதோ, கோப்படுவதையோ அறவே நிறுத்திவிட்டாள்.. அவருக்கு மனது வருத்தமடைய கூடிய எந்த செயலையும் செய்யாமல் மிகுந்த கவனத்துடன் நடந்து கொண்டாள்.



நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் எதுவும் பேசாமல் அவரின் தோள்களில் சாய்ந்து கொள்வதே அவளுடை வேலையாக இருந்தது..



அந்த ,மாதிரி நேரங்களில் தந்தை, மகள் இருவரின் மனதிலும் எல்லையில்லா நிம்மதி கிடைத்தது.. பேசும் வார்த்தைகளை விட பேசா மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தமுண்டு. குடும்பமே இவர்களின் இந்த செயலை கண்டு ஒரு புறம் நிம்மதி அடைந்தாலும், ஒரு புறம் கவலை பட்டார்கள்..



மகிழினி திருமணம் புரிந்து சென்றுவிட்டாள் பாவலரின் நிலையையும், மகிழினியின் நிலையும் நினைத்து தான் கவலைபட்டார்கள்..எப்படி இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருப்பார்கள் என்று நினைத்து கலங்கினார்கள்..



மகிழினி தனது மேல்படிப்பை முடித்து விட்டு அடுத்து எம் .பில் (M.Phil) படிக்க வேண்டும் என்று விரும்பினாள்.. ஆனால் நறுமுகையும், செந்தாமரையும் அவளுக்கு திருமணத்தை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்..



பாவலனுக்கோ அப்பொழுது தான் நெற்றியில் அடித்தை போல் ஒரு உண்மை உறைத்தது .. அது மகள் திருமணம் முடிந்து அடுத்த வீட்டிற்கு சென்று விடுவாள் என்பது.. அவரால் எப்படி தன் மகளை பிரிந்து இருக்க முடியும், அதுவும் மகளின் அன்பை வேறொருவருடன் பங்கு கொள்ள முடியுமா என்று மனம் வலிக்க வருந்தியவர்..



அன்று இரவு தன் மனைவி நறுமுகை இடம் புலம்பி தவித்தார்..நறுமுகையோ தன் கணவனின் நிலையை உணர்ந்து அவருக்கு பக்குவமாக ஆறுதல் கூறினாள்..



பாவலனோ “நான் வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து என் பெண்னை என்னுடனே வைத்துக் கொள்வேன்..” என்று கூறியவரிடம்.



நறுமுகையோ “சரி அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது எதற்கு அந்த பேச்சு..” என்று அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேச்சை மாற்றினார்..



பாவலன் மகள் விரும்பிய படிப்பை படிக்கவைத்தார்.. தன் குடும்பத்தாரிடம் போராடி மகள் விருப்பத்தை நிறைவேற்றினார்.. அதில் ஒரு சுயநலமும் இருந்தது.. மகள் படிப்பு முடியும் வரை வீட்டில் யாரும் மகிழினிக்கு திருமண பேச்சை எடுக்க மாட்டார்கள்.. இன்னும் கொஞ்ச நாள் மகளுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்..



மகளும் படிப்பில் முழு கவனத்தையும் வைத்து நன்றாக படித்தாள்..நாட்கள் தெளிந்த நீரோடையாக நகர ஓரு நாள் அவரை தேடி முகில்வதனன் என்று ஓருவர் உங்களை காண வந்துள்ளார் என்று கடை ஊழியர் அலுவலக அறைக்கு வந்து சொன்னதை கேட்டு யாராக இருக்கும் என்று குழம்பிய படியே வரச்சொன்னார்..



பாவலன் யோசனையுடனே அமர்ந்து இருக்கும் பொழுது கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்த வாலிபனை பார்த்து மிகவும் குழம்பித்தான் போனார்..



முகில் வதனன் முகத்தில் குழப்பத்துடன் தன்னை பார்த்த பாவலனிடம் வணக்கம் சொன்னவன் தன்னை பற்றி அறிமுகப்டுத்திக் கொண்டான்..



“என் பெயர் முகில்வதனன்.நான் தமிழில் பி.எச்.டி முடித்து விட்டு செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரிகிறேன் . உங்கள் மகள் மகிழினியை எனக்கு கொஞ்ச நாட்களாக தெரியும். அவளை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மகிழினியை திருமணம் புரிய விரும்புகிறேன்.. இந்த விசயத்தை நான் முதலில் மகிழினியிடம் தான் கூறினேன். ஆனால் அவள் ஓத்துக் கொள்ளவில்லை.. என் அப்பா யாரை சொல்கிறாரோ அவரைத் தான் நான் திருமணம் புரிந்து கொள்வேன் .. என்னை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கிய அவருக்கு தெரியும் எனக்கு எப்படி பட்டவரை திருமணம் புரிந்து வைப்பது என்று அதனால் அவரின் விருப்பம் தான் என் விருப்பம். என்று கூறிவிட்டாள்.. அதனால் தான் நான் உங்களிடமே நேரடியாக கேட்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் நான் ஓரே பையன்.. அப்பா தொல்காப்பியன் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்,அம்மா அறிவுக்கொடி இல்லத்தரசி..” என்று தன்னை பற்றியும் , தன் குடும்பத்தை பற்றியும் , தான் வந்த காரணத்தையும் அழுத்தமாகவும், கம்பீரமாகவும் சொல்லி முடித்தான்..



பாவலனோ அவன் சொன்னதை எல்லாம் கேட்டு திகைத்தாலும், எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவனை அமரச் சொன்னவர்..அவனை தலை முதல் கால் வரை யோசனையாக பார்த்தார்..



தன் மகள் சொன்னதை கேட்டவருக்கு மகளை நினைத்து தந்தையாக கர்வம் கொண்டார்.. மகளை நினைத்து பெருமையும் அடைந்தார்..



முகில்வதனை வேண்டாம் என்று சொல்லும் அளவு எந்த காரணமும் அவருக்கு தெரியவில்லை.. கொஞ்சம் கூட பயமில்லாமல் ,கம்பீரமாக தன்னிடம் வந்து பெண்கேட்ட அவனை அவருக்கு பிடித்து தான் இருந்தது.. அதுவும் பார்ப்பதற்கும் அழகாக , வசீகரமாக. நிமிர்வுடன் இருந்தான்..



தன் மகள் மகிழினிக்கு ஏற்ற துணைவனாக இருப்பான் என்பதில் ஐயமில்லாமல் இருந்தது..ஜோடி பொருத்தமும் நன்றாக தான் இருக்கும் என்று மனதில் நினைத்தவர், இருந்தாலும் முகில்வதனனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் தீரவிசாரித்து விட்டே முடிவெடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர்..



முகில்வதனனிடம் ஒரு வாரம் அவகாசம் கேட்டார்.. அதன் பிறகு தன் முடிவை சொல்வதாக அவனுடைய அலைபேசி எண்களை வாங்கி வைத்து கொண்டு அனுப்பினார்.



அன்று இரவு தன் தோள்களில் சாய்ந்து அமர்ந்து இருந்த மகளிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்..



“கண்ணம்மா உனக்கு முகில்வதன்னை தெரியுமா..?” என்று கேட்டவரிடம் சட்டென்று தலையை நிமிர்த்தி தந்தையை பார்த்தவள் “ஏன் அப்பா அவர் நான் ஆராய்ச்சி செய்யும் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.. படிப்பு விசயமாக அவரிடம் நான் சில சந்தேகங்களை கேட்க போவேன் அப்படித்தான் அவரை எனக்கு பழக்கம்..கொஞ்ச நாட்கள் முன் அவர் ஒரு முறை என்னிடம் என்னை திருமணம் புரிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்.. நான் மறுத்துவிட்டேன் .என் அப்பா யாரை சொல்கிறாரோ அவரை தான் மணந்து கொள்வேன் என்று கூறிவிட்டேன் ..”என்றவளிடம்..



“ஏன் கண்ணம்மா அப்படி கூறினாய், உனக்கு விருப்பம் இருந்தால் அப்பா மறுக்கவா போகிறேன்..” என்ற பாவலனிடம்..



நீங்கள் மறுக்கமாட்டீர்கள், எப்பொழுதும் என் ஆசைக்கு தான் மதிப்பு கொடுப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும், ஆனால் என்னை நன்றாக வளர்த்த உங்களுக்குத் தான் எனக்கான துணையை தேர்ந்தெடுப்பதற்கான முதல் உரிமை இருக்கிறது.எனக்கு எல்லாம் நீங்கள் தான்.. உங்கள் விருப்பம் தான் என் விருப்பம்..” என்ற மகளை தோளோடு அணைத்துக் கொண்டவர் கண்களில் பெருமை பொங்க உச்சி முகர்ந்தார்..



அடுத்து வந்த நாட்களில் நண்பர் ஒருவரின் உதவியுடன் முகில்வதனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் தெளிவாக விசாரித்து அறிந்து கொண்டவருக்கு முழு திருப்தியாக இருந்தது..



மகிழினியிடம் தன் விருப்பத்தை சொன்னவர், அவளுக்கு முகில்வதனனை திருமணம் புரிய சம்மதமா என்று கேட்டார்..



மகிழினியோ “அப்பா எனக்கு திருமணம்மெல்லாம் வேண்டாம்ப்பா, நான் எப்பொழுதும் உங்களுடனே இருந்து கொள்கிறேன், உங்களை பிரிந்து என்னால் இருக்க முடியாது..” என்று கூறிய மகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தார்..



அன்று இரவு மனைவி நறுமுகை இடம் முகில்வதனனை பற்றி சொன்னவர் அத்துடன் தன் ஆசையையும் மனைவிடம் சொன்னார் , “முகில்வதனனை வீட்டு மாப்பிள்ளையாக இருக்க சொல்லப் போகிறேன்..” என்றவரிடம்..



நறுமுகையோ “எனக்கு அவர் வீட்டு மாப்பிள்ளையாக இருப்பதில் விருப்பமில்லை,அவர் வீட்டிலும் ஓரே பையன்..அவருடைய அம்மா , அப்பாவை பார்ப்பது அவர் கடமையல்லவா, நீங்கள் உங்கள் மகளை வளர்த்தது போல் தானே அவரையும் வளர்த்து இருப்பார்கள், அப்புறம் எந்த பெண்ணும் தன் கணவராக வருபவர் தன் காலில் தான் நிற்கனும், மாமனார் வீட்டில் வந்திருந்தால் அது அவளுக்கு பெருமை இல்லை என்று தான் நினைப்பாள்..” என்ற மனைவியை திகைத்துப் போய் பார்த்தவர்..



“ அப்படி என்றால் நான் என் மகளை பிரிந்து தான் ஆகனும்மென்று முடிவெடுத்து விட்டாயா..?” என்று ஆதங்கத்துடன் கேட்ட கணவரிடம்..



நறுமுகையோ “அய்யோ அது அப்படி இல்லைங்கோ, பெண் பிள்ளையை பெற்றால் என்றாவது ஒரு நாள் பெற்றவர்களை பிரிந்து தான் ஆகனும். அது நம் பெண்ணுக்கு மட்டும் விதிவிலக்கா? அது காலத்தின் கட்டாயம்.. அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி அந்த பிரிவை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் .. இப்பொழுது தொலைபேசி இருக்கிறது தினமும் பேசிக் கொள்ளலாம், நினைத்தால் சென்று பார்த்து வரலாம்..” என்று பலதையும் கூறி கணவரை ஆறுதல் படுத்தினாள் நறுமுகை..



பாவலனுக்கு மனைவி என்ன கூறினாலும் மனம் ஓப்பவில்லை.. மகளை பிரிவதை நினைத்தால் அவருக்கு உயிர் போகும் வலியாகயிருந்தது..



ஆனால் அதற்காக மகளை திருமணம் முடிக்காமல் வைத்துக் கொள்ள முடியுமா? என்று நினைத்தவர், மனதை கல்லாக்கிக் கொண்டு திருமண வேலையை ஆரம்பித்தார்.



முகில்வதனன் பெற்றோருக்கும் மகிழினியையும், அவர்கள் குடும்பத்தையும் மிகவும் பிடித்து விட்டது உடனே திருமணத்திற்கு நாள் பார்த்தார்கள்.. மகிழினியின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் என்று முடிவு செய்தனர்..



நாட்கள் நகர மகிழினியின் படிப்பு முடிந்த கையோடு குறித்த நாளில் ஊரே மெச்சும் படி மகள் திருமணத்தை முடித்தார்.ஆனால் அவர் அதற்கு மகிழினியை சம்மதிக்க வைக்கத்தான் குடும்பமே படாத பாடு படவேண்டி இருந்தது..



திருமணத்தன்று பாவலன் முகத்திலும்,மகிழினி முகத்திலும் அத்தனை கவலைகள் அப்பி இருந்தது.. நறுமுகைக்கும், செந்தாமரைக்கும் இருவரையும் நினைத்து மனதில் பயப்பந்து உருண்டது..



மகழினி கணவன் வீடு செல்லும் பொழுது தந்தையையும், மகளையும் எப்படி சமாளிப்பது என்று தனசேகரன் உட்பட குடும்பமே அந்த நிகழ்வை நினைத்து கலங்கிய படியே இருந்தனர்..



மகிழினி புகுந்தவீடு செல்ல வேண்டிய நேரமும் வந்தது.. பாவலன் அந்த நேரத்தை எதிர்நோக்க முடியாமல் தவித்து போனார்.. உயிர் போகும் வலியை உணர்ந்தார்..கண்களில் நீர் கோர்க்க அவர் நின்ற நிலையை யாராலும் பார்க்க முடியவில்லை..



மகிழினிக்கோ தந்தையின் நிலையை பார்த்ததும் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த துக்கம் பிறீட “அப்பா..” என்று கதறியபடி முகில்வதனனின் கைகளை உதறிவிட்டு ஓடிசென்று அவரின் நெஞ்சில் சாய்ந்து கதறித்துடித்தாள்..



அந்த காட்சி கல் நெஞ்சையும் கரைந்து உருகச் செய்தது.. பாவலனும் தன் மனஉறுதியை கைவிட்டவர் மகளின் அப்பா என்ற கதறலில் சர்வநாடியும் ஓடுங்க “கண்ணம்மா..” என்று துடித்தார்..



தந்தை, மகள் உறவு என்பது எல்லையில்லாத உறவல்லவா! தந்தை கருவில் வேண்டுமானால் சும்மாகமல் இருக்கலாம் ,ஆனால் மகளை ஒவ்வொரு நொடியும் நெஞ்சில் சுமந்தவர் அல்லவா!



பெண் பிள்ளையை பெற்ற தந்தைகளுக்குத் தான் தெரியும் அந்த மரணவலி.. தன் தோளிலும், நெஞ்சிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை ஒரே நாளில் வேறு ஓருவருக்கு சொந்தமாக்கி கொடுப்பது எத்தனை வேதனையென்று..



முகில்வதனனுக்கு அவர்களின் இந்த பாசம் பிரமிப்பாகயிருந்தது..மெல்ல அவர்களிடம் சென்று மகிழியின் தோள்களை பற்றி தன் புறம் திருப்பியவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு பாவலனிடம் “உங்கள் மகளை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்..” என்று உறுதியளித்தவன் அவளை தோளோடு அணைத்த படியே காரை நோக்கி சென்றான்..



மகிழினியோ திரும்பி.. திரும்பி தன் தந்தையை பார்த்தபடியே சென்றாள்.. பாவலனும் போகும் மகளையே விழி இமைக்காமல் பார்த்தார்.. இருவரின் கண்களிலும் அத்தனை வலி தெரிந்தது.. அங்கு வார்த்தைகள் ஊமையாகின, விழிகளோ ஆயிரம் மெளன மொழி பேசியது..



திருமண மண்டபத்தில் இருந்து வீடு வந்த பாவலன் யாரிடமும் ஓரு வார்த்தை பேசவில்லை, மனம் முழுவதும் மகளின் ஞாபங்களை சுமந்து கொண்டு மகளின் படத்தை எடுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டார்..



அவரின் மனவேதனைக்கு மகளின் படம் மட்டுமே மருந்தாக இருந்தது..அனைவரும் அவரின் வேதனையை கண்டு மனதில் வருந்தியபடி அமைதியாக இருந்தனர்..



நேரம் கடக்க அவரின் அலைபேசி அவரின் தவநிலையை கலைத்தது.. யாரோ என்று எரிச்சலுடன் பார்த்தவர், அழைத்தது மகள் என்று தெரிந்ததும் ஆசையாக அதை உயிர்பித்தவர் அவருடை அத்தனை பாசத்தையும், ஏக்கத்தையும் தேக்கி ஒற்றை வார்த்தையில் “கண்ணம்மா..” என்றழைத்தார்..



மகளோ அந்தபக்கம் “அப்பா..” என்றாள். உயிர் உருகும் ஓசையில், பாவலன் மகளின் அழைப்பில் தன்னை மறந்திருந்தவரை மகளின் வார்த்தை நடப்புக்கு கொண்டு வந்தது..



“அப்பா சாப்பிட்டீர்களா? சாப்பிட்டவுடன் சரியாக மாத்திரை போட்டு கொள்ள வேண்டும்.. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் நான் இல்லை என்ற தைரியத்தில் அதிக நேரம் டீவி பார்க்க கூடாது,அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள்..”என்றவளுக்கு குரல் கம்ம “அப்பா ஐ மிஸ் யூப்பா..” என்றவுடன்..



பாவலனும் தாங்கமுடியாமல் “கண்ணம்மா நானும் தானடா,நீ சாப்பிட்டீயா , உடம்பை பார்த்துக் கொள்ளடா, அடிக்கடி அப்பாவை பார்க்க வாடா..” என்றவருக்கு வார்த்தை தளுதளுத்தது..



மகிழினியோ “சரி நேரமாக தூங்குகள்.. நான் காலை அழைக்கிறேன்..” என்று அழைப்பை துண்டித்தாள்..



அன்றிலிருந்து தினமும் பத்துமுறையாவது தந்தைக்கு அழைத்து பேசுவாள்.. முகிழ்வதனனும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு பாவலனை பார்க்க வருவார்கள்..



நாட்கள் நகர மகிழினி தாய்மை அடைந்தாள்.. அதை கேட்டு பாவலன் உட்பட குடும்பமே மகிழ்ந்தது.. ஏழு மாதம் பிறந்ததும் மகிழினிக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தனர்.



அந்த மாதம் மகிழினி மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் பொழுது பாவலனும் அவர்களுடன் சென்றார்.



மகிழினியை பாரிசோதித்த மருத்துவர் தாயும்,சேயும் நலம் என்றார்.. முகில்வதனனோ மருத்துவரிடம் “சுகபிரசவம் ஆகிவிடும் தானே..” என்று கேட்டான்..



மருத்துவரோ உடனே “நிச்சயமாக சுகபிரசவம் தான் ஆகும்..” என்று கூறுகையில் பாவலன் சட்டென்று “என் மகள் எப்படி வலி தாங்குவாள் நீங்கள் சீசேரியன் செய்து விடுங்கள்..” என்றார்..அவர் கண்முன்னே நறுமுகை பிரசவ வலியில் துடித்தது வந்துச் சென்றது..



பாவலர் கூறியதை கேட்டு மருத்துவர் உட்பட அனைவருமே திகைத்தனர்..மகிழினி தான் “அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்ப்பா..” என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.



நாட்கள் நகர மகிழினிக்கு பிரசவ நேரம் நெருங்கி வலியும் வந்தது .. மகிழினியை விட பாவலன் தான் துடித்துப் போனார்.. மருத்துவரிடம் சீசேரியன் செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தினார்..ஆனால் மருத்துவரோஅது தேவையில்லை என்று மறுத்துவிட்டார்..



செந்தாமரை பேத்திக்கு தைரியம் சொன்னார்..பாவலனை பார்க்கும் பொழுது எல்லாம் தன் வலியை பொறுத்துக் கொண்டு மகிழினி தந்தைக்கு ஆறுதல் சொன்னாள்.. “எனக்கு ஓன்றும் இல்லையப்பா நீங்கள் தைரியமாக இருங்கள்..” என்றாள்.



நறுமுகை கூட மகள் வலியை பொறுப்பதைப் பார்த்து பிரமித்தார்..ஒரு வழியாக தங்கள் இளவரசியை பெற்றெடுத்தாள் மகிழினி..



தங்க தாமரையாக மின்னிய குழந்தையை பார்த்து குடும்பமே பூரித்து போனது..அரை மயக்கத்தில் இருந்த மகளை பார்த்து பாவலன் உச்சிமுகர்ந்தார்..



முகில்வதனனோ கண்களில் காதல் பொங்க தன் மனைவியின் கைகளை பிடித்து தன் அன்பை பறிமாறியவன் மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..



பாவலன் மருந்து வாங்க வெளியில் சென்ற சமயம் செந்தாமரை பேத்தியிடம் “எப்படி செல்லம்மா வலியை அப்படி பொறுத்துக் கொண்டாய்..” என்று கேட்டதற்கு “நான் அழுதால் அப்பா தாங்க மாட்டாரே பாட்டி,அது தான் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டேன்..” என்ற பேத்தியை அதிர்ந்து போய் பார்த்தார் செந்தாமரை..இது என்ன மாதிரி பாசம் என்று வியந்து தான் போனார்..



அதே நேரம் மாத்திரையை வாங்கிக் கொண்டு உள்ளே வந்த பாவலரும் மகள் சொன்னதைக் கேட்டு திகைத்து தான் போனார்.. மகள் தன் மீது வைத்து இருக்கும் இந்த பாசத்திற்கு ஈடு இணையே இல்லை என்று நினைத்தார்..



செந்தாமரையும், நறுமுகையும் மகிழினியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள்.. ஒரு மாதம் ஆன பிறகு குழந்தைக்கு “வளர்தமிழ் ..” என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்..



நாட்கள் வருடங்களாக உருண்டோட இப்போது பேத்திக்கு மூன்று வயதானது..மகளைப் போலவே பேத்தியும் பாவலனிடம் உயிராக இருந்தாள்..



மகிழினி கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வந்தாள்.. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தையை பார்க்க மகளுடன் ஓடி வந்துவிடுவாள்..



அப்படித்தான் அன்றும் வந்த மகளின் முகமே சரியில்லை.. மகளிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை..”வேலை அதிகம் அப்பா..” என்றாள்..



பாவலனோ “ஏன் கண்ணம்மா நீ வேலைக்கு போகனும் கம்பீரமாக நம் கடையில் வந்து முதலாளி வேலை பார்க்க வேண்டியது தானே..” என்று வாஞ்சையுடன் சொன்ன தந்தையிடம் “இந்த பணி எனக்கு மனசுக்கு மிக பிடித்து இருக்கிறது..” என்றவள்.



சலுகையாக தந்தையின் தோள்களில் சாய்ந்தபடியே “அப்பா நான் இல்லை என்றாலும் என் மகளை நீங்கள் தான் என்னை போலவே வளர்க்க வேண்டும்..” என்று கூறிய மகளை அதிர்ச்சியாக பார்த்த தந்தையிடம்..”நான் வெளியூர் சென்றால்..” என்று பேச்சை மாற்றினாள் மகிழினி..



பாவலனுக்கு மகள் சென்ற பின்னும் அவள் சொன்ன வார்த்தை மனதை பிசைந்து கொண்டே இருந்தது..



அன்று நள்ளிரவில் முகில்வதனனிடமிருந்து தொலைபேசியில் வந்த செய்தியை கேட்டு குடும்பமே துடித்துப் போய்விட்டது.. மகிழினியை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறது என்ற செய்திதான் ..



குடும்பமே விரைந்து மருத்துமனைக்கு சென்றது.. முகில்வதனனோ கண்களில் ஓளியெல்லாம் வற்றி ஓய்ந்து போய் குழந்தையுடன் நின்று இருந்தான்..



அவனிடம் விசாரித்த பொழுது தான் தெரிந்தது.. “மகிழினிக்கு தலையில் கட்டியென்றும் அதை உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென்றும் .. மகிழினிக்கு இது ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் .. தன்னிடம் கூட கூறாமல் மறைத்துவிட்டாள்.. இன்று இரவில் வலி தாங்காமல் மயங்கி சரிந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது.. இப்பொழுது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. நமக்கு தெரிந்தால் தாங்க மாட்டோம் என்று மறைத்து விட்டாள்..”என்று முகிழ்வதனன் சொன்னதை கேட்டு அனைவரும் துடிதுடித்துப் போனார்கள்..



பாவலனோ உறைந்து போய் நின்றார்..மகள் தன்னிடம் இன்று சொன்னதற்கு காரணம் புரிந்தது.. மகளுக்கு அறுவைசிகிச்சை நடந்து கொண்டு இருந்த பொழுது அவரோ உலகில் உள்ள அத்தனை தெய்வத்திடமும் மகளுக்காக மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தார்..



அறுவை சிகிச்சை முடிந்து வந்த மருத்தவர் மகிழினி கண்விழித்தால் தான் எதையும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டார்..



மகளோ தனக்காக இத்தனை பேர் துடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் இரண்டு நாட்களாக கண்களை திறக்காமல் இருந்தாள்..



மகளின் நிலையைவிட பாவலனின் நிலைதான் அனைவரையும் பயம் கொள்ளச் செய்தது..யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் பச்சை தண்ணீரும் அருந்தாமல் நடைபிணமாக இருந்தவரை பார்க்க முடியவில்லை..



பாவலன் மனமெல்லாம் உயிர் போகும் வலியில் தன் பழைய நினைவுகளில் கண்களில் நீர்வடிய விழிமூடி மூழ்கி இருந்தவரை “அப்பா அப்பா..” என்று மகளின் குரல் அழைப்பதை போல் இருக்கவும்.. தன் பழைய ஞாபங்களிலிருந்து திடுக்கிட்டு விழித்தவருக்கு மனதில் பயம் வந்தது.. என் மகளை என்னை விட்டு எங்கும் போக விடமாட்டேன் என்று நினைத்தவர் மகள் இருந்த அறைக்கு வேகமாக சென்றார்..



மகிழினி அருகில் நாற்காலியில் அமர்ந்து இருந்த முகில்வதனன் பாவலனை பார்த்ததும் எழுந்து அவருக்கு இருக்கையை தந்து விட்டு சுவரோரமாக சென்று நின்று கொண்டான்..



மாமனாரின் வேதனையை கண்கூட கண்டவனால் தன் வலியையும் தாங்க முடியவில்லை..



பாவலன் மகளின் அருகில் அமர்ந்து மெல்ல மகளின் கைகளை பிடித்து தன் கண்களில் ஓற்றிக் கொண்டவர் “கண்ணம்மா விழித்துக் கொள்ளடா.போதும் அப்பாவை சோதித்தது, எனக்கு நீ வேண்டுமடா, என்னை அதிகாரம் செய்ய, என்னுடன் விளையாட,என்னுடன் சண்டையிட நீ வேண்டுமடா எனக்கு.. என்னை மனிதனாக்கியவள் நீ தான் கண்ணம்மா , நீ என் தேவதை டா, என் உயிரே நீ தானடா, நீயில்லாமல் நான் எப்படி இருப்பேன், என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தவள் நீதானே, என் மூச்சே நீதானேம்மா ..நீயில்லை என்றால் நான் இல்லை ..நானும் உன்னுடனே வந்துவிடுவேன் ..”என்று கரைந்தவரின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் மகிழினியின் கைகளில் பட்டு தெரித்தது..



இதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற முகில்வதனனின் கருவிழிகள் அசையாமல் ஒருநொடி நின்றது..மகிழினியின் மூடிய விழிகளுக்குள் ஒரு நொடி கருமணிகள் ஆடியது..அடுத்த நொடி அது பொய்யோ என்பதை போல் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது..



மீண்டும் கருவிழிகள் அசைந்தது.. மகிழினி மெல்ல கண்களை திறந்தவள் தன் கைகளை பற்றி இருந்த தந்தையை பார்த்துபடியே வறண்டு போய் இருந்த இதழ்களை கஷ்டபட்டு பிரித்தவள் “ப்பா..அப்பா..” என்று அழைத்தாள்..



பாவலனோ தூக்கிவாரிப் போட நிமிர்ந்து பார்த்தவர், மகள் விழித்து விட்டதை பார்த்து எல்லையில்லா மகிழ்வுடன் கண்களில் நீர் வடிய “கண்ணம்மா..” என்று எழுந்தவர் . மகளின் தலைமீது தலை சாய்த்து “கண்ணம்மா அப்பாகிட்ட திரும்பி வந்துட்டாயா .. அப்பாவை துடிக்கவைத்து நடைபிணமாக்கிவிட்டாயேடா..” என்று கூறியபடி நெகிழ்ந்தார்..



மகளோ “அப்பாவிடம் தாடி குத்துப்பா..” என்றாளே.. அதை கேட்டவர் பழைய நினைவில் கணக்ளில் நீர் வடிய சிரித்தார்..



முகில்வதனோ நம்ப முடியாத பிரமிப்பில் இருந்தான்.. இது என்ன வகையான பாசம்.. சினிமாவையே மிஞ்சிவிட்டதே, மருத்துவத்தால் முடியாததை பாசத்தால் முடித்துக் காட்டிவிட்டாரே.. தந்தை,மகள் பாசத்திற்கு ஈடு இணையும் இல்லை, எல்லையும் இல்லை என்று நினைத்தவனுக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது..



தந்தை மகளுக்கு தனிமை கொடுத்து வெளியில் வந்தவன் மாமியாரிடம் விசயத்தை சொல்லிவிட்டு மாமியார் மடியில் தூங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அறைக்கு வந்தவனிடம் தனக்கும் மகள் இருக்கிறாள் என்ற கர்வம் அவன் முகத்தில் தெரிந்தது..



நறுமுகையும் மகளிடம் சென்று நலம் விசாரித்து உச்சி முகர்ந்தவளுக்கு மகளை விட கணவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு நிம்மதியாகயிருந்தது..



முகில்வதனோ மனைவியிடம் வந்தவன் மகளை தோள்களில் போட்டுக் கொண்டே மனைவியை பார்த்து கண்களில் காதல் பொங்க கண்களாலேயே நலம் விசாரித்தவன் அவளின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டான்... அவர்களுக்கு அங்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை மெளனமே ஆயிரம் மொழி பேசியது..



தந்தை , மகள் பாசத்தை பார்த்தவனுக்கு தானும் மகளை பெற்றதுக்காக பெருமையாகவும் , மகிழ்ச்சியாகவும் உணர்ந்தான்.



மகளதிகாரம் முடிவது இல்லை.. அது ஒரு தொடர்கதை..



திருக்குறள்

(அதிகாரம் 7 குறள் 65)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பொருள்

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும், அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.

மகள்களை பெற்ற தந்தைகளுக்கு இந்த சிறுகதை சமர்ப்பணம்..

சுபம்…
 

New Threads

Top Bottom