அத்தியாயம் - 6
ப்ரியமுடன் விஜய்
அன்னம்மாள் கூறியதுப் போல, பொன்னுத்தாயும் அவளும் சேர்ந்து மெட்ராஸிலிருக்கும் கபீர் பாயைப் சந்திக்கச் சென்றனர்.
தன் மகள் அமராவதியை, மெட்ராஸில் இருக்கும் தன் சொந்தத்தின் வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் கபீர் பாயின் இருப்பிடத்திற்குச் சென்றனர். அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு கபீர் பாயின் அறைக்குச் சென்றனர் அன்னம்மாளும், பொன்னுத்தாயும்.
"வணக்கம் பாய்..." என்று பாயிடம் நமஸ்கரித்த அன்னம்மாள், அவரிடம்... "பாய், இது என் தோழி... பேரு பொன்னுத்தாயி..." என்று தட்டுத் தடுமாறி கூறவும் பொன்னுத்தாயும் பாயைப் பார்த்து நமஸ்கரிக்க...
"இவங்கள எனக்கு தெரியும் அன்னம்மா." என்று கபீர் பாய் ஒரு மெல்லிய புன்னகையோடு கூறியவர், "ரெண்டுப் பேரும் உக்காருங்க. என்ன விசயமா வந்திருக்கீங்க?" என்று அவர் வினவவும் அந்த இரு பெண்மார்களும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, பின் அன்னம்மாளே அவர்கள் அங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறினாள்.
"பாய், நேத்து பொன்னு வீட்டுல அந்த கருப்பு உருவம் அவளோட அப்பா உருவத்துல வந்து அவள் மகள் அமராவதிய கொண்டுப் போக பார்த்துச்சு. நீங்க சொன்னதுப்போல வெள்ளப்பூண்டு மாலைய அவள் கழுத்துல போட்டு இப்போதைக்கு தப்பிக்க வச்சுட்டேன். ஆனால், இது தீர்வு இல்லைனு எனக்கும் பொன்னுக்கும் தோணுது. முதல்ல இந்த மாதிரி எங்களுக்கு நடக்க காரணம் என்ன? எதனால எங்களுக்கு இப்படிலாம் நடக்குது? இன்னும் எத்தன நாளுக்கு தான் நாங்க அந்த கருப்பு உருவத்த கண்டு ஓடுவோம்? இதுக்கு நிரந்தர தீர்வே இல்லையா? இப்போவாச்சும் எங்களுக்கு என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கணும் பாய்." என்று தங்கள் பிள்ளைகள் மூவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பயத்தில் அன்னம்மாள் பேசிமுடிக்கவும், ஒரு நிமிடம் அவரை ஆழமாகப் பார்த்த கபீர் பாய் பொன்னம்மாளையும் ஒரு முறை பார்க்க, அவளது முகத்திலும் பயம் குடிக்கொண்டிருப்பதைக் கவனித்தவர்,
"இப்போ என்ன அவசரம் அன்னம்? அதுக்குனு காலம் நேரம்லாம் வர வேணாமா? அந்த பெண் மிருதன, கருப்பு உருவம்னு சொல்லாதீங்க முதல்ல. அது பேய்யா இருந்தா, நீங்க அத கருப்பு உருவம்னு கூப்பிடலாம். ஆனால், அது இன்னும் உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஒரு மிருதன். மிருதன்னா என்னனு தெரியுமா? மிருகமும் மனுசனும் சேர்ந்த கலவை தான் மிருதன். அந்த பெண் மிருதன் ஏன் உங்கள துறத்துனுங்கற காரணம், உங்களுக்கு தெரியணும்... அவ்வளவு தானே? அதுக்கான காலம் வரட்டும். பொறுமையா இருங்க." என்று கபீர் பாய் கூறிய அடுத்த நொடியில், பதறிய பொன்னுத்தாய்..
"அந்த காலம் இன்னைக்கு வந்ததா நினச்சுக்கோங்க பாயி... என்னால இதுக்குமேல தாங்க முடியாது. நேத்து, அந்த பெண் மிருதன், ஆறு மாசம் முன்னாடி செத்துப்போன என்னோட அப்பா உருவத்துல வந்து, என் பிள்ளைய இழுத்துட்டுப்போக வந்துருச்சு. அப்போ மட்டும் அன்னம்மா வரலைனா, என்ன ஆகிருக்கும்னே தெரில பாயி. தயவு கூர்ந்து இதுக்கு மூலக்காரணம் என்ன? எதனால இந்த பெண் மிருதன் எங்கள இப்படி பாடாப்படுத்துது? நாங்க அதுக்கு என்ன செஞ்சோம்? ஏன் எங்கள துரத்திட்டே இருக்கு? இதுக்கு ஒரு முடிவே இல்லையா? உங்க்கிட்ட கெஞ்சி கேக்குறேன் பாயி. என்னைய காப்பாத்த முடியலனாலும் பரவாயில்ல. என் மகள் அமரவாதியவாச்சும் காப்பாத்தியாகணும்..." என்று பேசிய பொன்னம்மாளின் குரலிலும் முகத்திலும் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்த கபீர் பாய்,
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி தனக்கு பின்னாளிருந்த ஒரு துணி போன்ற ஒன்றை எடுத்து அதனை அவருக்கு முன் விரித்தார். அதனில் ஏதோ அரேபி வார்த்தைகள் இருந்தன. அதன் முன்பு ஆறு சோவிகளை உருட்டினார். அதனைக் கண்டு விரல்விட்டு எண்ணியவர், ஒரு வினாடி கண்களை இறுக்க மூடியவர்... விறுவிறுவென்று உள்ளே ஒரு அறைக்குள் விரைந்தார்.
அவ்வறையிலிருந்து வெளிவந்தவர், கையில் இரண்டு ஓலைச்சுவடிகள் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு, அன்னம்மாள் பொன்னுத்தாய் முன்னே அமர்ந்தவர் அந்த இரு ஓலைச்சுவடிகளையும் படித்து முடித்தார்.
பின் தன் மடியில் இடக்கையை ஊன்றி, முகத்தில் கலக்கத்துடன் அமர்ந்தவரை கவலையுடன் பார்த்த அந்த இரு பெண்களும்...
"என்ன ஆச்சு பாயி...? ஏன் கலக்கமா இருக்கீங்க?" என்று ஒருசேர கேட்க...
"உங்க ரெண்டு பேரோட கணவன்மாருங்க ராணுவத்துல இருக்காங்கல?" என்று கபீர் பாய் கேட்டதற்கு, ஆமாம் என்பதுப் போல் இருவரும் தலையசைக்க... கபீர் பாய் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
"நான் சொல்லப் போற விசயத்த, மனச திடப்படுத்திக்கிட்டு கேளுங்க. இல்ல, நீங்க பதறுவீங்கனா, நான் சொல்ல மாட்டேன். பரிகாரம் மட்டும் சொல்லிட்டு விட்டுருவேன்." என்று அவர் கூறவும், அன்னம்மாள்...
"என்னனாலும் சொல்லுங்க பாய். நாங்க கேட்டுப்போம். பதறமாட்டோம்." என்று கூறவும், ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டவர்...
"உங்க கணவர்மாருங்க... அதான் அன்னமோட புருசன் நாகப்பன்னும். அப்பறம் பொன்னுத்தாயி, உங்க புருசன் சாமிவேலும் கல்யாணத்துக்கு முன்னாடி, விடுமுறை நாட்கள்ல கொண்டாட உங்க கிராமத்துக்கு வந்திருக்காங்க..." என்று கபீர் பாய் அவ்விருவரின் கணவன்மார்களின் கடந்த காலத்தைப் பற்றி கூறியதாவது...
அன்னம்மாளின் கணவனாகிய நாகப்பனும், பொன்னுத்தாயின் கணவனான சாமிவேலும் காஷ்மீரில் இராணுவ பணியை முடித்துவிட்டு, விடுமுறை நாட்களைக் கழிக்க அவர்களின் கிராமத்திற்கு வந்தடைந்தனர்.
********************************
பைம்பொழில்... நிறைய வளங்கள் கொண்ட ஒரு அழகிய கிராமம். அக்கிராமத்தில் தான் நாகப்பன்னும், சாமிவேலும் பிறந்து வளர்ந்தனர். இருவருக்குமே ஒரே நேரத்தில் இராணுவத்தில் சேர்ந்து பணிப்புரிந்தனர். இருவரும் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க பைம்பொழிலுக்கு வருவர்.
அவ்வாறு ஒருமுறை அவர்களது விடுமுறையை கழிக்க அக்கிராமத்திற்கு வந்தனர். இருவரும் ஒன்றாக அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபொழுது, கண்ணுக்கெட்டிய தொலைவில் அழகிய இளம்பெண் ஆற்றங்கரையில், தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்தாள். முதலில் அவளைக் கண்டது என்னவோ சாமிவேல் தான்.
"டேய் நாகு..!! அந்த பொண்ண பார்த்தியா? என்ன அழகா இருக்கா!! வர்றீயா? அவள்கிட்ட போய் பேச்சு கொடுப்போ" என்று சாமிவேல் ஜொள்ள...
"நீ வேணும்னா அவகிட்ட பேசி விளக்கமாத்து பூச வாங்கிட்டு வா. நான் அதுக்குலாம் தயாரா இல்ல." என்று கூறிவிட்டு தன் பிறந்தவீட்டை நோக்கி விரைந்தான்.
ஆனால் சாமிவேலோ, அந்த வாலிபஸ்திரியிடம் பேச்சு கொடுக்க மெல்ல மெல்ல நடந்தான். அவளை நெருங்கியவுடன்,
"ம்ம்... வணக்கம்..." என்றவனின் வார்த்தைகள் டைப் அடித்தது. அந்த பெண்ணும் பதிலுக்கு ஒரு மிரண்ட பார்வை ஒன்றை பார்த்துவிட்டு, கையில் தண்ணீர் குடத்துடன் தன் அடிகளில் வேகம் கொடுத்து நடக்கலானாள்.
அதனைக் கண்டவனோ,
"என்னங்க...! ஒரு நிமிசம் நில்லுங்க ப்ளீஸ்..." என்று கூறவும் நடையை நிறுத்தி, அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள். அவளுக்கு முன் இரண்டே அடி முன்னர், ஒரு மரம் வெட்டி சாய்க்கப்பட்டது.
அது சாயப்போவதைக் கண்டு தான் அவன் தன்னை நிற்க கூறியிருக்கிறான் என்று எண்ணிய அப்பேதை மனமோ சாமிவேலை கண்களில் ஈர்ப்புடன் பார்த்தது.
இராணுவத்தில் பணிபுரிந்ததால் கட்டுகோப்பாக பராமரிக்கப்பட்ட தேகம்... அடிக்கும் காற்றில் கலையும் கேஷம்... ஆறடி உயரமென ஆண்மை ததும்பி தன் முன் நின்ற சாமிவேலை ரசித்துப்பார்த்தாள் அப்பெண்.
அவள் தன்னை ரசிப்பதை உணர்ந்த சாமிவேலின் உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது. வார்த்தை எதுவும் பேசாமல் மெல்ல அவளருகில் சென்றவன்,
"ஏய் பெண்ணே! உன் மயில்விழிக் கண்ணால் என்னைக் கண்டு என் மனதை ஏன் சுண்டியிழுக்கிறாய்? வாலிப வயதில் இருக்கும் ஓர் அர்ப மானிடன் நான் பாவமில்லையா? இப்படி பார்வையால் என்னை உருக்கும் தருவாயில், உன் செவ்விதழ் மலர்ந்து, உன் அழகிய நாமத்தை கூறி எனக்கு மோக்ஷம் தரமாட்டாயா?" என்று சாமிவேல் செந்தமிழில் அவளிடம் அவன் கேட்ட விதத்தில், அந்த பெண் சொக்கித் தான் போனாள்.
அதைவிட அவனின் நெருக்கம் அவளது பெண்மையை பாடாய் படுத்தியது. கன்னம் சிவக்க, அவனிடமிருந்து விலகியவள்,
"பேருலாம் சொல்லமாட்டேனே!" என்று கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாய் நடந்தாள்.
"ஹேய்..! உன் பேரு மட்டும் சொல்லேன்... ப்ளீஸ்" என்று அவன் கெஞ்ச...
"கெஞ்ச வேணா... ஒரு குறிப்பு தர்றேன். அத வச்சு என் பேர கண்டுபிடிங்க." என்று அவள் கூறவும்,
"சரி... கொடு" என்று சிரித்தபடி சாமிவேல் கூறினான்.
"என்னோட கண்ணப் பார்த்து நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க இப்போ. அதான் என் பேரு. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோங்க." என்றுக்கூறி விட்டு அவள் சென்றுவிட்டாள்.
'அவள் கண்ணப்பார்த்து அப்படி நான் என்ன சொன்னேன்?' என்று அவன் யோசிக்க... சட்டென அவன் தலைக்கு மேல் மின் பல்பு எரிந்தது.
"மயில்விழி..." என்று அவன் உதடு மெதுவாய் உச்சரிக்க, கண்களில் காதல் மின்னியது.
அன்று தொடங்கிய இருவரது பழக்கம், அவனது விடுமுறை நாள் முடியும்வரைத் தொடர்ந்தது. அடிக்கடி இருவரும், அதே ஆற்றங்கரை ஓரத்தில் சந்தித்து பேசினர். மெல்ல அது காதலாக மாறியது.
மயில்விழியோ, சாமிவேலை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினாள். அதோடு, சாமிவேல் - நாகப்பன்னின் விடுமுறையும் முடிவிற்கு வந்தது. அவர்கள் மீண்டும் ஊருக்குச் செல்ல இரண்டே நாட்கள் இருந்த நிலையில் சாமிவேல் மயில்விழியிடம் தனியே சந்தித்துப் பேசினான்.
மறுநாள் தனியே காட்டுப் பகுதிக்கு வந்து சந்திக்குமாறு சாமிவேல் கூறவும், இதற்கு அடுத்து அவனை என்று சந்திப்போமோ என்ற ஏக்கம் அவளை வாட்டியதால் அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
சாமிவேல் கூறிய நேரத்திற்கு மயில்விழி அன்று அந்த காட்டுப் பகுதியில் நிற்க... சாமிவேல் அங்கு வந்தான். அவனைக் கண்டதும் அவன் பிரிவை எண்ணி கண்ணீர் துளி அவள் கண்ணில் மெல்ல எட்டிப்பார்த்தது. அவளை சமாதனம் படுத்தியவன், அவளைக் கட்டியணைத்தான்.
அவளும் அவன் கட்டுக்குள் புகுந்தவள், சாமிவேலின் மார்பில் முகம் புதைத்தாள். அவளது பூமுகத்தை பூக்குவியலை அள்ளுவது போல் மெல்ல ஏந்தியவன், அவளது செவ்விதழை நோக்கி குனிய... அவனிடமிருந்து விலகியவள்,
"இதெல்லாம் இப்போ வேணாங்க..." என்று தலைக்குனிந்து மயில்விழி கூற, அவளது கையை பிடித்தவன் கெஞ்சும் தொணியில்...
"ப்ளீஸ்... ப்ளீஸ்... இன்னைக்கு மட்டும். ப்ளீஸ்.... நாளைக்கு நான் ஊருக்கு போயிருவேன். அப்பறம் எப்போ வருவேன்னே தெரியாது." என்று சாமிவேல் கெஞ்சினான்.
அவன் கெஞ்சுவதைக் கேட்டும் மயில்விழி முடியாது என்றபடி இடவலமாக தன் தலையை ஆட்டியவாறு, அவனிடமிருந்து தள்ளி, பின்னோக்கி நடந்துக்கொண்டிருக்க... யார் மீதோ மோதி நின்றாள் அவள். திடுக்கிட்டவள், பின் திரும்பி யார் மீது மோதினோம் என்ற யோசனையில் பார்க்க... அங்கே நாகப்பன் சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான்.
"என்ன மயிலு நீ? என் நண்பன இப்படி கெஞ்ச விடுறியே! என்ன அவன் பெருசா கேட்டுட்டான்? ஒரு முத்தம் தானே? கொடுத்துட்டு போயேன்." என்றவன் மயில்விழியை தலை முதல் கால் வரை தன் நாடியை தடவியப்படி, கீழுதட்டைக் கட்டித்தவாறு, ஒரு மார்க்கமாக பார்த்தான் நாகப்பன்.
அவனது பார்வையின் கொடூரத்தை கண்டுக்கொண்ட மயிவிழியோ, தன் தாவணி முந்தானைக் கொண்டு, தன் தோள்பட்டையை மூடிக்கொண்டு சாமிவேலிடம் ஒண்டியவள்,
"யாருங்க இது? ஆளும் சரியில்ல... அவர் பார்வையும் சரியில்ல... பேச்சும் ஒரு மார்க்கமா இருக்கு?" என்றபடி சாமிவேலின் முகத்தை அவள் நோக்க... அவன் பார்வை அதைவிட கொடூரமாக இருந்தது.
அதனைக் கண்டவள் சற்று மிரட்சியோடு பின்னோக்கி நடந்தவள் வேகமாக அவர்களிருவரிடமிருந்து தப்பித்து ஓடத் தொடங்கினாள். அவளை துறத்திக்கொண்டு வந்த சாமிவேல், குறுக்கு பாதை வழியாகப் போய் அவளது வழியை மறித்தான்.
அதிர்ந்து நின்ற மயில்விழி, பின்னாடி ஓட எத்தனிக்க... அங்கே நாகப்பன் காமப்பார்வையோடு நின்றுக்கொண்டிருந்தான்.
இருவரும் அவளை நெருங்க, சாமிவேலைப் பார்த்தவள்...
"உங்கள எவ்வளவு நம்பினேன்? இப்படி.... ச்சி...!" என்று கண்களில் ஏமாற்றக் கண்ணீர் வழிய கேட்டாள்.
அதற்கு அவனோ,
"என்ன செய்ய..? வருசம் முழுக்க காடு மலைனு இந்த நாட்டுக்காக நாங்க பெண்கள் வாசம் கூடப் படாம வாழுறோம். அப்படி காஞ்சு ஏங்கிப் போயிருந்த எங்க கண்ணுக்கு, அறுசுவை விருந்து மாதிரி இந்த ஊருக்கு வந்த முதல் நாளே நீ பட்ட. அப்பவே உன்னைய ஆசைத்தீர அனுபவிக்கணும்னு தோணுச்சு. ஆனால், நீ தமிழ் பொண்ணாச்சே! தொடக்கூடாது பண்ணக்கூடாதுனு சொல்லுவ. அதுமட்டுமில்லாம கிராமத்து பொண்ணு வேற... வந்த அன்னைக்கே நாங்க இப்படி பண்ணிருந்தா, நீ ஊர கூட்டிருப்ப. அதான் காதலிக்குற மாதிரி நான் நடிச்சு, உன்னையவும் என்னோட காதல் வலையில விழவச்சு, உன் நம்பிக்கைய சம்பாதிச்சேன். ஆனாலும் இன்னைக்கு நீ ஒத்துழைக்க மாட்டேங்குறீயே...!" என்றவன், தன் கை முஷ்டியை இன்னொரு கையில் குத்தினான்.
"ச்சீ... கருமம். இப்படி பேச உனக்கு வெக்கமா இல்ல? பார்க்குற பொண்ணுட்டலாம் இப்படி தான் நடந்துப்பியா? உனக்கு அம்மா, அக்கா தங்கச்சி இல்ல?" என்று கோபத்தின் உச்சிக்கு சென்ற மயில்விழி பொறிந்துத்தள்ள...
"ச்சு ச்சு ச்சு... அப்படிலாம் பேசக்கூடாது. அக்கா தங்கச்சி அம்மாலாம் வேற மா. நீ........ வேற மா........" என்ற சாமிவேலின் குரல் ஒரு மார்க்கமாக ஒலிக்க, தன் முகத்தை சுளித்தாள்.
"இங்க பாரு மயிலு. ஒழுங்கா எங்க ரெண்டுப் பேருக்கும் ஒத்துழச்சனா, சேதாரம் கம்மியா இருக்கும். இல்லைனா, கீரல் காயம்னு ரொம்ப கஷ்டப்படுவ..." என்ற நாகப்பன், அவள் தோற்பட்டையில் கைவைக்க... அதனை தட்டிவிட்டவள்,
"என்னைய அசிங்கமான நோக்கத்தோட தொட நினைக்காதீங்க டா. நான் பெண் டா. நெருப்பு...!! சுட்டு பஸ்மாக்கிடுவேன் டா எச்சநாய்களா." என்று கண்கள் சிவக்க அவள் கூறியதைக் கேட்டு இருவரும் சிரித்தனர்.
"சரி... அதையும் பார்த்துடுறோம்..." என்ற சாமிவேல், அவளது தாவணியை உருவ... அவனது கன்னத்தை அறைந்தாள் மயில்விழி.
"என்னடி...! தாவணிய உருவியும் வெக்கமே இல்லாம நின்னு எங்கள அடிக்குற?" என்று பற்கள் நறநறக்க பேசிய நாகப்பன், அவளது தலைமுடியை பிடித்து இழுக்க, சாமிவேலோ தன் சட்டையை கழட்டிவிட்டு அவளது கைகள் இரண்டையும் கட்டி கீழே தள்ளினான்.
காடே அலறும்படி அப்பேதைப் பெண்ணின் குரல் கேட்டது. இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், சாமிவேலும் நாகப்பன்னும் அவரவர் உடையை உடுத்திகொண்டு கீழே படுத்திருந்த மயில்விழியை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்.
"ஹ... என்னமோ சொன்னீயே! பெண்ணாம்....!!! நெருப்பாம்...!! தொட்டா பஸ்ப்பம் ஆகிருவோமாம்...!! எங்க? ஒன்னும்மாகல எங்களுக்கு? நல்லா தானே இருக்கோம்..? வந்துட்டா பைத்தியம் மாதிரி பேசிட்டு. பெரிய கண்ணகி இவ. இவள தொட்டா நாங்க பஸ்பமாக..." என்று சாமிவேல் ஏளனமாகக் கூறினான்.
அதைக் கேட்டு, நாகப்பன்னும் நக்கலாக சிரிக்க... ஆவேசமாக எழுந்தாள் மயில்விழி.
"அடேய் மிருதன்களா..!! ஒரு பொண்ண தன்னந்தனியே மோதக் கூட துப்பில்லாம ரெண்டு பேரா வந்த கீழ்தரமான ஜென்மகள் டா நீங்கள்லாம். மிருகம் கூட அதோட இரைய ஒத்தையா வந்து தான் டா வேட்டையாடும். நீங்கள்லாம் மனுச ஜாதியே இல்லாதவனுங்க. என்னையவா டா கிண்டலா பேசுறீங்க? என்னைய இன்னைக்கு நீங்க இப்படி பண்ணதுக்கு உங்கள் பரம்பரையவே அளர விடுறேன் டா...ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தியும் இன்னைக்கு செத்துருவோமோ, நாளைக்கு செத்துருவோமோ னு ஒவ்வொரு நொடியும் கலங்கடிக்க விடப்போறேன். உன் பரம்பரையே ஒன்னுமில்லாம ஆக்கிக்காட்டுவேன். அப்போ ஒரு நாள் அதுலாம் செஞ்சது நான்னு தெரிய வரும் டா உங்களுக்கு. என்னோட கால்ல நாய் மாதிரி விழுவீங்க, உங்க உயிர எடுத்தாச்சும் உங்க குடும்பத்த விட்டுற சொல்லி. அப்போவும் நான் அடங்க மாட்டேன் டா. உங்க ரெண்டு பேர போல ஒரு பொண்ண சீரழிக்குற எல்லா மிருதன்களுக்கும் உங்க நிலைமை ஒரு பாடமா அமையும் டா...!!!" என்று அவள் ஆங்காரமாக கூற..
அதனைப் பொருட்படுத்தாமல் சாமிவேலும், நாகப்பன்னும் கிண்டலாக சிரித்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
****************************
இந்நிகழ்வை ஒருவரி விடாமல் கபீர் பாய், அன்னம்மாளிடமும் பொன்னுத்தாயிடமும் கூறிமுடித்தார்.
"அன்னைக்கு உங்க கணவன்மாருங்க அந்த பொண்ணு மயில்விழி பேச்ச பெருசா எடுத்துக்கல. ஆனால், அவள் அடுத்த நாளே ஊரு ஒதுக்குப்புறத்துல வாழ்ந்துட்டு இருக்குற அகோரிகள்ல போய் சந்திச்சா. அகோரிகள் கிட்ட அவளுக்கு நடந்த அநீதிய ஒன்னுவிடாம சொல்லவும், அவங்க அவள சிஷ்யையா ஏத்துகிட்டாங்க. அவங்க பல அதர்வன மாய மந்திரங்கள், மாய தந்திரங்கள்னு அகோரிக்களுக்கு மட்டும் தெரிந்த பல வித்தைகள்ல கத்துகிட்டாள்.
அழகே உருவா இருந்த மயில்விழி, அகோரிகள் கூட வாழ்ந்த்துனால, தோற்றத்திலும், மந்திர தந்திர வித்தைகளிலும் முழுதா அகோரியா மாறினாள். அவள் கத்துகிட்ட அதர்வன மாய வித்தைகள்ல உபயோகிச்சு, சாவே இல்லாத வரமும் பெற்றாள். அவளுக்கு துஷ்ட சக்திகளும் துணை இருக்கு. அதை வச்சு தான் பில்லி சூனியம், பேய், கருப்பு உருவம்னு எல்லாத்தையும் ஏவிவிட்டு உங்கள் குடும்பத்த கஷ்ட்டபடுத்துறாள். இது இதோட நிக்காது. உங்கள் பொண்ணு, அவள் மகன், அந்த மகனோட பேரன்னு யாரையும் விட மாட்டாள். உங்கள் குடும்பத்த அழிக்கவும் மாட்டாள். வாழவும் விடமாட்டாள். வாழவிட்டு நோகடிப்பாள்." என்று கபீர் பாய் கூறிமுடிக்க,
அன்னம்மாளும் பொன்னுத்தாயும் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருந்தனர்.
சில வினாடிகளுக்கு அங்கு காற்றின் சப்தத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
அந்த நிசப்தமான சூழ்நிலையை முதலில் கலைத்தது என்னவோ அன்னம்மாள் தான்.
"பாய்..! இந்த விசயத்த கேட்டு என் மனசு ரொம்ப வலிக்குது. எந்த ஒரு பொண்ணுக்கும் அந்த மயில்விழிக்கு ஏற்பட்ட மாதிரி நிலைமை ஏற்படக்கூடாது. அவளோட அந்த துயரமான நிலைக்கு காரணமா, எங்களோட கணவன்மாருங்களே இருப்பாங்கனு நாங்க ரெண்டு பேருமே நினச்சுப் பார்க்கல." என்று கூறியவளின் குரல் அழுகையில் நடுங்கியது.
அன்னம்மாளோ, ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவளாய்... "பாயி! நான் ஒன்னு கேட்கலாமா?" என்றவளின் குரலில் ஓர் வெறுமைத் தெரிந்தது.
"ம்ம்... கேளுங்க ம்மா." என்ற கபீர் பாயின் வார்த்தைக்கு பதிலளிக்கும் விதமாக அன்னம்மாள் பேச ஆரம்பித்தார்.
"அந்த மயில்விழி பொண்ணுக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம்...." என்றவள், ஒரு நெடிய பெருமூச்சுவிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள். "ம்ம்ம்ம்ம்.... அந்த பொண்ணுக்கு நடந்த அக்கிரமத்துக்கு என்ன பரிகாரம் பண்ணாலும் ஈடாகாது. எங்கள் பிள்ளைகள்ல மட்டுமாச்சும் காப்பாத்த முடியுமா? எங்கள் புருசன்மாருங்கள்ல சேர்த்து, எங்கள் நாலு பேரோட உசுர கூட அந்த பொண்ணு என்னனாலும் பண்ணட்டும். ஆனால் எங்க குழந்தைகள்ல மட்டுமாச்சும் அந்த பொண்ணு கஷ்டபடுத்தாம இருக்கணும்னு ஒரு தாயா என் மனம் கேக்குது பாயி. இதுக்கு ஏதாவது வழியிருக்கா பாயி?" என்ற அன்னமாளின் வார்த்தையில் கபீர் பாய் பொன்னுதாயி முதற்கொண்டு திடுக்கிட்டு அவளை நோக்கினர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் ...
Thread 'மிருதனின் அசுரம் - Comments'
https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/