அத்தியாயம் -4
வருடம் 1998
தூங்கா நகரம். மீனாட்சி அம்மாள் தன் மலர்க்கண்களால் காக்கும் மதுரை. கோவிலின் நாற்புரமும் மக்கள் போவதும் வருவதுமென்று சுறுசுறுப்பாக நாள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ஒரு பெற்றோர் இரு ஆண் குழந்தைகளுடன் வெளியில் வந்தனர்.
அம்மா ஐந்து வயது நிரம்பிய பெரியவனை கைகளில் பிடித்திருந்தார். அப்பா மூன்று வயது நிரம்பிய சிறியவனை தன் தோள்களில் பிடித்திருந்தார். நால்வரும் காரில் ஏறினர். திருமலை நாயக்கர் மஹாலுக்கு செல்லும் வழியில் வண்டியை தந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். பெரிய பையன் முன்புறம் தந்தைக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனது அம்மா தம்பியை கையில் பிடித்தவாறு காரின் பின்சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தார்.
அம்மாவுடன் பேசியபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கடையில் ஒரு மரப்பாச்சி பொம்மையைப் பார்த்துவிட்டு அது வேண்டுமென கைக்காட்டியது. உடனே தாயனாவள் ,” என்னங்க வண்டிய நிறுத்துங்க. குழந்தைக்கு பொம்மை வாங்கனும்.”
“இங்க காரை நிறுத்த முடியாது நித்யா , நீ வேணா செல்லக்குட்டியோட இங்க இறங்கி வாங்கிட்டு இரு. நான் காரை நிறுத்திட்டு வரேன்.” தனது செல்ல சின்னமகனின் மழலை மொழி மற்றும் மனைவியின் வார்த்தை இரண்டுக்கும் உருகிவிடுவார் அவர்.
பெரியவன் “அப்பா நானும் அம்மாகூட போறேன்.” என்று கூறி இறங்கிகொண்டான். ஐந்து வயது எனினும் அவனுக்கு தனது வயதைவிட பொறுப்புணர்ச்சி அதிகம். இவர்களை இறக்கிவிட்டு காரைப் பார்க் செய்ய அவர் கிளம்பிவிட்டார்.
வண்ணங்கள் குழந்தைகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிடும் வல்லமை வாய்ந்தவை. கடைகளில் இருந்த விதவிதமான பொருட்கள் அண்ணன் தம்பி இருவரையும் ஈர்த்துவிட்டன.
மூவரும் பொருட்களைப் பார்க்கத் தொடங்கினர். பிளாஸ்டிக் பொம்மைகள் விதவிதமாக இருந்தன. பெரியவன் கடையின் மேலடுக்கில் அடுக்கி வைக்கிப்பட்டிருந்த கார் பொம்மையக் கண்டவுடன் அதை நோக்கி நகர்ந்தான். அம்மாவும் சின்ன பையனுக்கு மரப்பாச்சி பொம்மையை கையில் கொடுத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார். கடையில் ஒரு நாலைந்து பேர் பொருள் வாங்கிக் கொண்டிருந்தனர்.
பெரியவன் கார் பொம்மையை எடுக்க முயற்ச்சிக்க கைதவறி வேறு சில பொருட்களின் மீது பட்டுவிட பொம்மைகள் அவன் தலைமீதும் கால்மீதும் விழுந்துவிட்டது.
பெரிய அடி எதுவும் இல்லைதான். ஆனால் “அம்மா “ என்று கத்திவிட்டான். பொருட்கள் கீழே விழுந்ததால் சிறிய பையனை பதட்டத்தில் இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு பெரிய பையனைப் பார்க்கக் குனிந்தார்.
“ஓன்னு இல்லைடா தேவ். எழுந்துரு.”
தேவ்க்கு கண்களில் கண்ணீர் தளும்பியது. தேம்பியவன் “அம்மா..அம்மா.. “ என்று கூறினான். அதற்குள் கடையில் இருந்தவர்களும் கூடிவிட்டனர். கடைக்காரரும் வந்தார்.
“தேவ் கண்ணா…ஒன்னும் இல்லைடா. அம்மா பாத்துக்கரேன்.” கடைக்காரரை நோக்கியவர் “அண்ணே இந்த பொருளுக்கும் சேர்த்தி எவ்ளோ ஆச்சுனு சொல்லுங்க.”
“ஆறுநூறு ஆச்சும்மா.”
“இந்தாங்க அண்ணா. எல்லாத்தையும் பேக் பன்னி கூடுங்க.” அவரிடம் கூறிவிட்டு தேவ்விடம் திரும்பி “அங்கிள்டா சாரி கேளு தேவ்.” என்று கூறினார். தேவ்வும் கண்களைத் துடைத்தபடியே அன்னை கூறியபடியே செய்தான்.
இப்போதுதான் அன்னைக்கு இளையமகன் அருகில் காணவில்லை எனத் தேடினார்.
“அரசா… யாழரசா எங்க இருக்க?” குழந்தையை கூப்பிட்டபடியே கடையில் சுற்றி முற்றித் தேடினார். பையனைக் காணவில்லை. தேவ்வும் தம்பியைத் தேடினான்.
இருவரும் வெளியே வந்தனர். பாலகனைக் காணாத பதட்டத்தில் வியர்த்து வழிய ஆரம்பித்தது. உடம்பில் நடுக்கம் உண்டானது. அதே நேரத்தில் தந்தையும் வந்து சேர்ந்தார். தன் கணவனைக் கண்டதும் “என்னங்க அரசக் காணோங்க..என்னங்க பன்னறது?...”
இப்படி தன் மனைவி கண்களின் நீருடன் புலம்பவும் , இது செயலில் இறங்க வேண்டிய சமயம் என்பதை உணர்ந்தவர், “நீங்க இரண்டு பேரும் இங்கயே இருங்க. நான் தேடிட்டு வரேன். பெரியவன பார்த்துக்கோ.”
அவர் உயிர்ப்புதல்வனைத் தேட ஆயத்தமாக தாய்க்கு தாங்க இயலவில்லை.
“நானும் தேடறேன். “ தாயும் மகனும் அவரைத் தொடர்ந்தனர். இவர்களின் கதறலுக்கு காரணமாவன் வேகமாக ஒரு பஞ்சுமிட்டாய் வண்டியின் பின் கைகளை நீட்டியவாறே ஓடிக்கொண்டிருந்தான்.
பெற்றவர்களும் “இந்த வழியில் ஒரு குழந்தை பச்சை சட்டை போட்டுட்டு போனதப் பார்த்தீங்களா?” வழியெங்கும் மக்களை விசாரித்தபடியே சென்றனர்.
ஒருவர் மட்டும் குழந்தை சென்ற திசையைக் காண்பித்தார். உடனே தன் புதல்வனைக் கண்டுபிடித்து விடலாம். தன் புதல்வனை எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை ஒளியுடன் ஓடினர்.
அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. குழந்தையைக் கண்டுபிடித்தனர். ஆனால் உயிர் மட்டும் இல்லை. குழந்தையை அவர்கள் பார்க்கும் போது ஒரு காரின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் கண்முன்னே இரத்தவெள்ளத்தில் உயிரையும் விட்டிருந்தது. சில நேரங்களில் ஒருவரின் கவனக்குறைவு பலருக்கு பேரிடராய் மாறிவிடும். தேவ்வின் தம்பி விஷயத்தில் யாரையும் பழி சுமத்த முடியாது.
தேவனின் மனதில் இந்நிகழ்வு இன்றும் பசுமையாக பதிந்திருந்தது. அந்த டைரியில் யாழரசி இவன் உள்ளத்திலிருந்த ஆழமான காயத்தைக் கீறி கண்ணீர் வரவைத்திருந்தாள். உடல் காயத்தால் ரத்தம் வரும். உள்ளத்தின் காயத்தின் வெளிப்பாடு கண்ணீர்தானே.
‘ எப்படியோ இந்த பொண்ணு தப்பிச்சாளே …சரி டைரிய படிப்போம்.’ தன்னைத் தேற்றிக் கொண்டு டைரியின் மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.
நானும் பள்ளிக்கூடம் போறேன்:
என்ற தலைப்பில் ஆரம்பித்திருந்தது.
ஹே பெக்கி , உனக்குத் தெரியுமா? நான் சின்ன வயசிலே படிக்கட்டுல தவறி விழுந்து தாடையில் காயமாகிடும். இப்ப வரைக்கும் நான் எங்காவது அடிக்கடி விழுவேன். அப்புறம் டிசைன் டிசைனா இரண்டு நாளுக்கு திட்டு வாங்குவேன். ஹா..ஹா இது எல்லாம் யாழு வாழ்க்கையில் சாதாரணம். நல்லா விளையாடுவேன். இப்ப வரைக்கும் எனக்கு மொபைல்ல இருக்க கேம்ஸ் விளையாட வாராது. எனக்கு ரியல் கேம்ஸ்தான் பிடிக்கும். வியர்வைத் துளி சிந்த , கருக்கும் வெயில், புழுதி பறக்க மண்ணுல விளையாடற மாதிரி இருக்குமா? அந்த சுகம் கிடைக்குமா?
இப்படி விளையாட்டு , பொதிகை டிவி , ஐஸ்கீரிம் ஜோரா போயிட்டு இருந்த வாழ்க்கையில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் வந்துச்சு. ஐந்து வயதுக்கும் மேலாகிவிட்டதால் என்னை அங்கான்வாடிக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கே சென்று நாள் ஹை டெசிபலில் நான் பாடிய பாட்டில் என் அப்புச்சி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.
அதற்குப் பிறகு நடந்தது அதை விட சிறப்பான சம்பவம். அம்மாய் அவுனி நாரில் அடி வெளுத்து விட்டார். ( அதை இன்னும் ஞாபகம் வைத்து இன்னும் நான் பேசுவது வேற விஷயம்.) இப்படியே இருந்தால் நான் படிக்க மாட்டேன் என்று அம்மா அப்பா வீட்டிற்கு பெட்டி படுக்கையை கட்டி அனுப்பிவிட்டனர். அம்மாவுக்கு கொஞ்சம் அப்போது பயப்படுவேன். அதெல்லாம் ஒரு எட்டு வயசு வரைக்கும்தான். நான் கொங்குப் பகுதி என்பதால் பேச்சில் மரியாதை எப்பவும் இருக்கும். எங்கள் பகுதியில் சில உயர்சாதிகள் உண்டு. அவர்கள் வீட்டில் சில பழக்க வழக்கங்கள் உண்டு. பேச்சில் மரியாதை இருப்பது அவசியம். பெற்றவர்களிடம் மிக மரியாதையாக பேச வேண்டும்.
ஆனால் நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு என் குடும்ப ஆட்களிடம் செல்லமாக பேசுவதுதான் வழக்கம். நம்ம ஆளுங்ககிட்ட பார்மலா பேசிட்டு இருக்கறது. இன்பார்மலா பேசுனாதான் உரிமையா இருக்கற மாதிரி இருக்கு. அதே சமயம் நான் என் வயசில் இருந்த சிலர் வீட்டில் காவிரி ஆறு மாதிரி சுவைக்க சுவைக்க பேசிவிட்டு , வெளியில் நொய்யலுக்கு நாந்தான் போட்டி என்று பேசுவர்களையும் பார்த்திருக்கேன்.
சரி கதைக்கு மறுபடியும் வருவோம். என் பெற்றோர் அப்போது உடுமலை பேட்டைக்கு அருகில் இருந்தனர். அங்கே உள்ள கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்க என்னோட சொந்தக்காரக் குழந்தைகளும் படித்தனர். பால்வாடிக்கு போகாமல் அடம்பிடித்த நானேதான் பிற்காலத்தில் விடுமுறை கூட எடுக்காமல் பள்ளிக்கு சென்றேன்.
“எழுத்தறிவிப்பவன் இறைவன்” அப்படினு சொல்வாங்க. ஆனால் எனக்கெல்லாம் தேன்மொழி டீச்சரும் , சங்கீதா அக்காவும்தான். அ..ஆ ..ஏபிசிடி சொல்லிக் கொடுத்து எழுத பயிற்சி கொடுத்தவர்கள் அவர்கள். பள்ளி படிப்பு , கல்லூரி படிப்பு, யூபிஸ்சி கோச்சிங்க் இப்படி நிறைய இடங்களில் ஆசிரியர்களை பார்த்திருக்கேன். எனக்கு யூ.ஜி முடிக்கற வரைக்கும் யாரையும் குறை பேச வராது. அதே மாதிரிதான் ஆசிரியர்கள் பற்றி என்னுடன் இருப்பவர்கள் எவ்வாறு தவறாகப் பேசினாலும் நான் பேச மாட்டேன். ஒரு ஆசிரியர் குணங்கெட்டவராக இருந்தால் தவிர ஆசிரியர் பற்றிப் பேச நமக்கு உரிமை இல்லை.
அப்புறம் எனக்கு இருக்கும் இன்னொரு குணம் எந்த தவறாக நிகழ்வு நடந்தாலும் , அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதுதான் பொதுவாக என்னை ஆசிரியர்கள் பற்றித் தவறாக பேசத் தூண்டியதில்லை.
இந்த வரிகளைப் படித்தவுடன் ‘வாவ்..’ என்று மனதில் நினைத்த தேவின் இரு புருவங்களும் உயர்ந்தது. மேலும் படிப்பதைத் தொடர்ந்தான்.
நான் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தேன். வீட்டில் பொழுது போகாமல் என் தம்பியும் வருவான். எனக்கு ஜீலியஸ் சீசர் மாதத்தில் பிறந்தநாள் வரும். என் தம்பி நான் பிறந்தநாளுக்கு புதுத்துணி அணிந்து பள்ளி வந்தால் அவனும் வருவான். ஆசிரியர் “எதுக்கு புதுடிரஸ் போட்டிருக்கனு? “ கேட்டதுக்கு என் தொம்பி “எங்க அக்காவுக்கு பிறந்தநாள்” பதில் கூறினான். டீச்சர் சிரிச்சுட்டே போயிட்டாங்க.
என் தம்பி என்னை ஒரே ஒரு முறைதான் அக்கா என்று அழைத்திருக்கான். எப்பவும் என் பெயரைச் சுருக்கிதான் அழைப்பான். நானும் கண்டுகொள்ள மாட்டேன்.
எனக்கு தோழிகளும் உண்டு. பெக்கி எனக்கு இப்ப வரைக்கும் சரியா பொய் சொல்ல வராது. ஸ்கூலுக்கு ஒரு டைம் உடம்பு சரியில்லைனு குளிக்காமல் போயிட்டேன். அந்த நாளுதான் பார்த்து சார் எல்லோர்கிட்டேயும் குளிச்சுட்டு வந்தீங்களா? , நகம் வெட்டிட்டு வரது இப்படி எல்லாத்தையும் செக் பன்னாரு. நான் வசமா சிக்கிட்டேன். அப்பவும் ஒரு பக்கம் மனசு “பொய் சொல்லு யாழ்னு” சொல்லுச்சு. ஆனா வாய்ல பொய் வரவே இல்லை. குளிக்காமல் வந்த விஷயத்தைக் கூறிவிட்டேன். ஆறு வயதில் என்னால் பொய் கூட சொல்ல முடியவில்லை.
இவ்வாறு டைரியில் இருப்பவள் புலம்பிக் கொண்டிருக்க தேவ்வினால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வாட் இந்த பொண்ணுனால பொய் கூட சொல்ல முடியலனா எப்படி வாழ்க்கையில் பிரச்சினைகளில் இருந்து தப்பிச்சுருப்பா? இந்த உலகத்தில் நமக்கு ஒரு முகமூடி கண்டீப்பா வேணும். அது நம்மள கெட்ட நோக்கத்தோட நெருங்க நினைக்கிற ஆட்களிடமிருந்து தப்பிக்க வைக்கும். அதிலும் குறிப்பா பெண்கள் பல இடங்களில் நடிக்க வேண்டியிருக்கும். ‘ இப்படி சிரிப்பில் தொடங்கி அவளுக்காக அக்கரையில் அவன் எண்ணம் சென்றது.
இப்படி நினைத்தவன் சில மணி நேரங்களுக்குப் பிறகு அவள் எழுதியிருக்கும் விஷயத்தால் அதிரப் போகிறான்.
தேடி அலைவான்....
For Comments